Saturday, September 10, 2016

சேரனின் கூற்றும் தவறு! மழுப்பலும் தவறு! – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பு-சேரனின்தவறு- மன்னிப்போம்- இல.திருவள்ளுவன் ;thalaippu_seranthavaru_mannippoam_ila.thiruvalluvan

சேரனின் கூற்றும் தவறு! மழுப்பலும் தவறு!

இருப்பினும் மன்னிப்போம்!

  இயக்குநர், நடிகர், படஆக்குநர் என்ற முறையில் சேரன் மக்களால் நேசிக்கப்பெறும் கலைஞர்; தம் படங்களுக்கு மூன்று தேசிய விருதுகள் பெற்றவர் என்ற முறையில் அரசாலும் போற்றப்படுபவர்; ஈழத்தமிழர் நலன் சார்ந்த உரை யாற்றி உலகெங்கும் பரவியுள்ள ஈழத்தமிழர்களின் பரிவிற்கும் பாத்திரமானவர்.
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். (திருவள்ளுவர், திருக்குறள் 104)
 நமக்குப் பிறர் செய்யும் உதவி மிகச்சிறிய தினை  அளவாக இருப்பினும் அதனை நாம் மிகப்பெரிய பனை அளவாகக் கொள்ள வேண்டும். பயன்பெறுவோர்தாம் பிறரது சிறு உதவியையும் பேரளவாகக் கருதி  மதிக்க வேண்டும். ஆனால், பலரும்  தாம் செய்யும்  சிறிய உதவியைக்கூடப் பிறருக்கு மிகப்பெருமளவு உதவி செய்ததாக எண்ணிக் கொள்கின்றனர். கைம்மாறு எதிர்பார்க்காமல் செய்யப்படவேண்டியவையே உதவிகள். ஆனால், தாம் செய்யும் தினை அளவு உதவிக்கு, உதவி செய்யப்பட்டோர் தம் வாணாள் முழுவதும் நன்றிக்கடனாற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர். அதே நேரம் இத்தகையோர் பிறர் தங்களுக்குச் செய்யும் பேருதவிகளைக்கூட ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. உலக இயற்கை இதுதான்.
  இதற்குத் தானும் விதிவிலக்கல்ல எனச் சேரன் நடந்து கொண்டார்; “யாகாவாராயினும் நா காக்க (திருவள்ளுவர், திருக்குறள் 127)   என்பதையும் மறந்து விட்டார்.
  கன்னா பின்னா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சேரன் தனக்கான மன அழுத்தங்களுக்கான காரணங்களை அறிந்து அவற்றைக்  களையாமல் அறிவு தடுமாறிப் பேசியுள்ளார்.
  “தமிழ், தமிழன் என்று நாம் சொல்கின்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுகிறது. ஆனா அந்தத் தமிழன்தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கொண்டுள்ளான் என்று அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த மாதிரி திருட்டுத்தனமாகப் படத்தை இணையத்தளங்களில் வெளியிடுகிறவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று சொல்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்காக நாம்-திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்துப் போராடி இருக்கிறோம். எங்களுடைய பலவற்றை இழந்துவிட்டுப் போய் அவர்களுக்காகப் போராடி இருக்கிறோம் ஆனால் அதைச் சார்ந்த சிலர்தான் இதைச் செய்கிறார்கள் என்று  கேள்விப்படுகிறபோது, ஏனடா இவர்களுக்காக இதைப் பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது”  என்பனதாம் அவர் உதிர்த்த முத்துகள்.
  அப்படியாயின், இராசீவுகாந்தியைக் கொன்றவர்கள் ஈழத்தமிழர்கள் எனச்சொல்லி ஈழத்தமிழினத்தையே கருவறுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் துணை நிற்கும் மத்திய அரசிற்கும் தன்னை ஈழத்தமிழ் உணர்வாளனாகக் காட்டிக் கொள்ளும் சேரனுக்கும் என்ன வேறுபாடு?
 சிலர்  செய்யும் தவறுகளுக்காக ஈழத்தமிழினத்தையே குற்றம் சொல்லும்சேரன், திரைப்படம் வெளியாகும் முன்னரே, பாடல், படக்காட்சிகள், முன்னோட்டக் காட்சிகள் முதலானவை  வெளியாவதற்கும் இவர்கள்தாம் காரணம் என்கிறாரா?
  உலகச்சந்தையில் தமிழ்த்திரைப்படடம் தலைநிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் ஈழத்தமிழர்கள்தாமே! புலம்பெயர் ஈழத்தமிழர்களால்தான் படைத்திருட்டு நடக்கின்றது என்றால், படங்களை அயல்நாடுகளில் முதலில் வெளியிடுவதேன்? தமிழ்நாட்டில் வெளியிட்ட சில நாள் கழிந்தபின்னர் அங்கு வெளியிடலாமே! அப்படிச் செய்தால் பண அறுவடை சிறப்பாக இராதே!
    சேரன், திரையிலிருந்து மனை (சி டு எச்) என்னும் திரைப்படங்களை வீட்டிலிருந்து பார்க்கும் வகையில் படப்பேழை வழங்கும் நிறுவனம் நடத்துகிறார். அவர் மகள் நிவேதா பிரியதர்சினியும் காணொளிப் பேழை வழங்கும் நிறுவனம் நடத்துகிறார். வைப்புத்தொகையைத் திரும்ப அளிக்காச்சூழலில் இவர் தந்த காசோலை திரும்பி வந்த வழக்கில் தருமபுரிமாவட்ட வழங்குநர் பிரசன்னா வழக்கு தொடுத்துள்ளார். அழைப்பாணைகளை மதிக்காமல் உரிய நாள்களில் நீதிமன்றம் செல்லாததால் இவர் மகள் கைதுசெய்யப்பட்டார். மகளின் காதல் சிக்கலால் மனம் கலங்கியிருந்த சேரன். இந்நேர்வுகளில் நீதிமன்றம் சென்றது முதலான மானக்கேட்டுச் சிக்கல்களால் தடுமாறியுள்ளார் என்றே  அவர்பால் அன்பு உள்ளவர்கள் கூறுகின்றனர். ஆனால்,  “பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா (திருவள்ளுவர், திருக்குறள் 417) அரும் பண்புடையவராக அல்லவா சேரன் விளங்க வேண்டும்? அவருக்குக் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் சிலர் குற்றம் இழைத்திருப்பினும் அதனை இனத்திற்கே பொதுவாகக் கருதிக் குற்றம் சொல்லக்கூடாதல்லவா? பின்னர் சமாளிப்பதாகக் கூறிய உளறலில் அங்குள்ள 200 அல்லது 300 ஈழத்தமிழர் குடும்பங்கள்தம் மீது அன்பு  கொண்டு உள்ளதாகவும் தன்னைப்பற்றித் தவறாகக் கருதவில்லை என்றும் சொல்லியுள்ளார். தான்  சொல்லும் குற்றச்சாட்டு தன் மீது அன்பு செலுத்தும் அக்குடும்பத்தினர் மீதும்தான் என்பதை உணரவில்லையே! அவர் கூறக்கூடிய திரைத்திருட்டாளர்களைப்பற்றிய விவரங்களை அவர்களிடமே கூறித் தடுக்கச் செய்திருக்கலாமே! ஏதோ சில கூட்டங்களில் உணர்வு பொங்க ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப்பேசிவிட்டால் அவர்களைப்பற்றி என்னவெல்லாமும் கூறலாம் என உரிமை படைத்தவராகக் கருதுகிறாரே!
   உயிர் ஈகம் செய்த செங்கொடி முதலானவர்களின் கால்தூசுக்கு  ஈழ ஆதரவுப்பேச்சு இணையாகுமா?
  இனப்படுகொலையில் தப்பியவர்களுக்குச் செயற்கை உறுப்புகள் அளித்தும், கல்வியுதவி அளித்தும் பிற வகையில் அறக்கொடை வழங்கியும் தொண்டாற்றுகிறார்களே, பலர்! அவர்களெல்லாம் இப்படித்தான் எண்ணுகின்றனரா?
  உற்றார் உறவுகளை, உறுப்புகளை, உடைமைகளை, தாய்மண்ணை இழந்து அல்லறும் ஈழத்தமிழர்களுக்கு இப்பேச்சால் சிறிதளவேனும் பயன் விளைந்திருக்குமா? இவ்வாறு பேசும் நமக்கும் தெரியும் அடிமைகளான நம் பேச்சால் எந்தப் பயனும் விளையாதுஎன்று. எனினும் அரசுகளின் கவனங்களைக் கவர்கிறோம் என ஓர் ஆறுதல்! நட்டாற்றில் தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இதனால் எப்பயனும் விளையாது என்று தெரியும். எனினும்,  நம் பின்னால் தமிழ் உறவுகள் நிற்கிறார்கள் என்று தேறுதல்!
   சேரன், தம் மகளின் காதல் சிக்கலால் மனம்குலைந்தபொழுது பொய்க்காதல் குறித்துத் திரைப்படம் எடுப்பதாகக் கூறினார். இனிமேல் எடுக்கலாம். அவ்வாறு எதுவும் ஈழத்தமிழர் உரிமை யிழந்து அல்லறுவது குறித்தோ இங்கே அவர்கள் முகாம்களில் தாங்கும் இன்னல்கள் குறித்தோ எதுவும்  திரைப்படம் எடுத்து, அல்லது நூல் படைத்து மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கினாரா? ஒன்றுமில்லையே!
  ஈழத்தமிழர்களுக்காக மக்களை ஒன்று திரட்டிப்பெரும்போராட்டம் நடத்துவதாகக் கூறினாரே! அப்படி எதுவும் நடத்தினாரா? திரைப்படமாயையில் சிக்கியுள்ள  தமிழர்களுக்கு அவர்கள் வழியில் திரைப்படக் கலைஞர்களை ஒருங்கிணைத்து  மத்திய மாநில அரசுகளை ஈழத்தமிழர்நலன்பால் திருப்பியிருக்கலாமே!
 மனப்பூர்வமாகவோ விளம்பரப்புகழுக்காகவோ உணர்ச்சிபொங்கப்பேசினால் பேச்சுக்குரியோர் தமக்குக் கடமைப்பட்டவர் என எண்ணும் போக்கு சரிதானா?
  இத்தகைய எண்ணங்களுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களும் ஒரு காரணம். அவர்கள் உண்மையாகப் பாராட்டப்பட வேண்டியவர்களை அழைக்க மாட்டார்கள். விளம்பரப்புகழுடையவர்களையும் ஆரவாரப் பேச்சினரையும் அழைத்துச் சிறப்பிப்பார்கள்.
  காற்றில் உயரப்பறந்து கோபுரத்தில் ஒட்டிக்கொள்ளும் தாளினால் கோபுரமே அழகாக விளங்குகிறது என  யாரேனும் கூறினால் சிரிக்கமாட்டோமா? ஆனால், விளம்பரக்காற்றில் உயரப் போகிறவர்களை நாம் கொண்டாடுகிறோமே! உண்மைத் தொண்டர்களைப் புறக்கணிக்கின்றோமே!
 எனவே, ஒன்றும் செய்யாதவர்களுக்கும் தாங்கள் மிகப்பெரும் அருவினை ஆற்றியதுபோன்ற எண்ணம் வந்துவிடுகிறது.
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து. (திருவள்ளுவர், திருக்குறள் 220)
பொதுநலனுக்கு நாம் உதவுவதால் நமக்குக் கேடு விளைந்தால்,அக்கேடு தன்னை விற்றாவது பெறும் தகுதிக்குரியதாகும்.
  அதே நேரம், தனக்கு வேறு எதனாலோ  கேடு வருவதைப், பொதுநலனில்  ஈடுபட்டதால் வந்ததாகக் கருதுவது அறியாமையாகும். உண்மையிலேயே சேரன் ஈழத்தமிழர்களுக்கு உதவி, அதனால்  கேடு விளைந்திருந்தது எனில் அது குறித்துப் பெருமையடைய வேண்டும்; தன்னைச் சிறுமைப்படுத்திக் கொள்ளக்கூடாது.
  சேரன், தான் பேசியது தவறு என வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மனமின்றித் தன்னைப் பெருந்தன்மையாளராகக்காட்டிக்கொள்வதாக எண்ணி ஏதேதோ சொல்கிறார். நடுநிலையுடன் சிந்தித்துப்பார்த்து ஈழத்தமிழர்கள் மீது சுமத்திய பெரும்பழிக்கு நாணி உள்ளத்தளவிலாவது வருந்த வேண்டும் அவர். படிப்படியாக உயரும் சிறப்புடைய சேரன் வருந்துவார் என எண்ணி நாமும் மன்னிப்போம்!
-இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, August 30, 2016

தகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பு-தகுதியற்றனவற்றை ஏற்கும் நீதி மன்றம்-இலக்குவனார் திருவள்ளுவன் ;thalaippu_semmozhivazhakku_thakuthiyatrana-thiru

தகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம்

 – செம்மொழி வழக்கில் தீர்ப்பு

தமிழுக்குக்  குரல் கொடுக்கும் காந்தி

தனித்து விடப்படலாமா?


  உலகில் உயர்தனிச்செம்மொழி என்பது தமிழ் மட்டும்தான்! தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பு வழங்கியதுடன் அதற்கு முன்னர், அதிகார ஆணையின்றியே அரசின் சலுகைகளைத் துய்த்து வந்த சமற்கிருதத்திற்கும் செம்மொழித் தகுதியேற்பை இந்திய அரசு அளித்தது.  விழா நிகழ்ச்சிகளில் இனிப்பு வழங்கினால், “எனக்கு எனக்கு” என்று குழந்தைகள் ஆளாளுக்குக் கை நீட்டுவதுபோல் பிற மொழியினர் கை நீட்டியுள்ளனர்.  செம்மொழித் தகுதியேற்பு என்பது சிறுவர் சிறுமியருக்கு இனிப்பு வழங்குவது போல்வதன்று! தகுதியின்அடிப்படையில் வழங்கப்பட வேண்டியது. ஆனால்,  தனித்து இயங்கும் வல்லமை யற்ற கன்னடம், தெலுங்கு, ஒடியா, மலையாள மொழிகளுக்கும் மத்திய அரசுசெம்மொழித் தகுதியேற்பை வழங்கியுள்ளது.
  இந்த முடிவை எதிர்த்து மூத்த வழக்குரைஞர்  ஆர்.காந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  இதனை உசாவிய உயர்நீதிமன்றத் தலைமைநீதிபதி எசு.கே.கவுல்,  நீதிபதி மகாதேவன் ஆகியோரைக்கொண்ட முதல் அமர்வு தீர்ப்பு வழங்கி வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.
மாற்று மொழியின் வளர்ச்சியிலோ வீழ்ச்சியிலோ வேறொரு மொழியின் வளர்ச்சி இருக்காது. கலை, இலக்கியத்துக்கான பங்களிப்பு, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒரு மொழிக்கான  முதன்மை இருக்கும். அந்தக் குழுவின் முடிவு இந்த நீதிமன்றத்தில்  அளிக்கப்பட்டது. அதைப் பார்க்கும்போது அதில் நீதிமன்றம் தலையிடுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.”  எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
 இது ஒருவகையில் சரி என்றாலும் சூழ்நிலைக்கேற்பத்தான் அமையும்.  ஒரு மொழியின் ஆதிக்கம் பிற மொழிமேல் ஏற்படுமேல் பாதிப்பிற்குள்ளாகும் மொழிஅழிவைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும். சான்றாக இந்தியத்துணைக்க்ணடம் முழுவதும்  கோலோச்சிய தமிழ்மொழி சமற்கிருதத்தின் ஆதிக்கத்தால் சிதைந்து பல்வேறு மொழிகளாக உருவெடுத்துத் தன் ஆட்சிப்பரப்பில் சுருங்கியுள்ளது. ஆங்கிலத்தின் ஆதிக்கத்தால் இந்திய மொழிகள் பலவும்  வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. உலகில் நன்கு வளர்ச்சியடைந்த மொழிகளும் இன்றைக்குக் காணாமல் போனதன் காரணமும் இதுதான்.  தீர்ப்பில் குறிப்பிட்டவாறு பயன்பாட்டின் அடிப்படையில்தான் மொழியின் முதன்மை இருக்கும்  ஆனால், ஒரு மொழி ஆதிக்கம் பிற மொழியின் பயன்பாட்டைக் குறைக்கின்றதே! அல்லது இல்லாமல் ஆக்கிவிடுகின்றதே ! தமிழ்நாட்டில்  சமற்கிருதம், தெலுங்கு, ஆங்கில மொழிகளின் பயன்பாடுகள் தமிழின் பயன்பாட்டை நாளும் குறை்து வருகின்றனவே!  எனவே, தனித்து ஆராயாமல் பொதுவாக இவ்வாறு கூறுவது சரியல்ல. என்றபோதும் இப்போது இதுவல்ல  முதன்மையானது.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். (திருவள்ளுவர், திருக்குறள் 528)
என்பதே பின்பற்றவேண்டிய அறநெறி. அஃதாவது, அரசு பொதுத்தன்மையில்  ஒரே சீராக நோக்காமல் தகுதிக்கேற்ப சிறப்பிக்க வேண்டும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
  அப்படியாயின் செம்மொழி அறிந்தேற்பிற்கு ஒத்த தன்மையில் முடிவெடுக்காமல் தகுதியடிப்படையில்தானே நோக்கவேண்டும். அவ்வாறு நோக்கவில்லை என்றுதான் மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி தமிழ்உலகின் சார்பில் வழக்கு தொடுத்துள்ளார்.
  அவ்வப்பொழுது பிற மொழிகளுக்குச் செம்மொழித்தகுதியேற்பு வழங்கப்பட்ட ஆணைகளுக்கு எதிராக, நீதிப்பேராணை எண்கள் 28334/2008, 18810 / 2008, 27405/2014, 5813 & 5814 / 2015, ஆகியவற்றின் வழக்குகளும் தொடர்பான  பல்வகை முறையீடுகளும் சேர்த்து உசாவப்பட்டு  ஆடி 24, 2047 / ஆக.08, 2016 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  வழக்கு பிற மொழிகளுக்குச் செம்மொழித்தகுதி  கொடுக்கக்கூடாது என்பதல்ல. அரசு வரையறுத்த விதிகளுக்கு மீறான மொழிகளுக்குச் செம்மொழி அறிந்தேற்பு வழங்கக்கூடாது என்பதுதான். இதன்படிப் பிற மொழிகள் அறிந்தேற்பிற்குத் தகுதியற்றவைதாம். எனினும் நேரடியாக அவ்வாறு வழக்கு தொடுக்கவில்லை.
  மத்திய அரசு, சாகித்திய அகாதமி மட்டுமல்லாமல், கருநாடக அரசு,  ஆந்திர அரசு, தெலங்கானா அரசு, கேரள அரசு, ஒரியா அரசு, எனப் பிற அரசுகளும் வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டன. ஒரு மாநில அரசு என்றால், அதன் தலைமைச்செயலர், உள்துறைச்செயலர், கலைபண்பாட்டுத்துறைச் செயலர் எனப்பலர் இணைந்துள்ளனர். தனியர் சிலரும் இணைந்துள்ளனர். எனவே, இவர்கள் சார்பில் பெரும் வழக்குரைஞர் பட்டாளமே வழக்கிற்கு எதிராக அணிவகுத்து நின்றுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் வழக்குரைஞர் காந்தி மட்டும்தனித்து விடப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிலிருந்து யாரும் இவ்வழக்கில்  இணைத்துக்கொள்ளவில்லை. தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் வழக்கில் இணைவது குறித்து வழ.காந்தியுடன் பேசியுள்ளோம். தன்னிடம் விலை பேசுவதாகவும், தன்னை மிரட்டுவதாகவும், ஏதேனும் ஓர் அமைப்பு இதில் இணைந்து கொண்டு  பிறகு அச்சத்தால் விலகினால் நான்றாக இருக்காது என்றும் தெரிவித்தார். எனவே,  அதற்கான வாய்ப்பு இல்லாவிட்டாலும், அவர்கருத்திற்கு மதிப்பளித்து இணையவில்லை. எனினும் பிற மாநில அரசுகள் வழக்கில் இணையும்பொழுது தமிழக அரசு ஏன் தூங்கியது?
  செம்மொழி அறிந்தேற்பிற்குத் தி.மு.க.வும்  பேராயக்கட்சியாகிய காங்கிரசும் பாராட்டப்படவேண்டியவையே! அதே நேரம், காலவறையரைக் குளறுபடிகளுக்குக் காரணமும் இவைதான்! எனவேதான் வழக்கில் அமைதி காத்துள்ளன. “எல்லா மாநிலங்களிலும் எங்கள் கட்சி உள்ளது. எனவே குறிப்பிட்ட மொழிக்குச் சார்பாக அல்லது சில மொழிகளுக்கு எதிராக இருக்கமாட்டோம்” எனப் பேராயக்கட்சி கருதுவது தவறு. நடுவுநிலைமை என்பது உண்மையின் பக்கம் இருப்பதுதான். “உனக்குக்  கேட்டது கிடைத்துவிட்டதே! அடுததவனுக்குக் கிடைத்தால் உனக்கு என்ன” என்பது தி.மு.க. எனவே அதுவும் வழக்கில் இணைத்துக் கொள்ளவில்லை. அதனால்தான்,  பிற மொழிகளுக்குச் சார்பாகப் பலர் இருக்கையில் தமிழின் சார்பாக வழ.காந்தி மட்டும் நிற்கும் அவலம் நேர்ந்துள்ளது.
  நீதிபதிகளும்  மொழிகளின் சமநிலையைப் பற்றி எண்ணியுள்ளார்களே தவிர,  மொழிகளின் தகுநிலை குறித்து எண்ண வில்லை. தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றம் செல்ல உள்ளார்; இந்த நேரத்தில் மொழிப்பாகுபாடு காட்டியதாகப் பெயர் வரக்கூடாது எனத் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறில்லை என நம்புவோம். ஆனால், எல்லா மொழி வளர்ச்சியையும் சமமாகத்தானே கருத வேண்டும் என எண்ணியுள்ளார்கள். போலியான வரலாற்றுச் செய்திகள் அடிப்படையில் அயல் மொழியான சமற்கிருதத்திற்குப் பிற எல்லா மொழிகளுக்கும் செலவழிப்பதைவிடக் கூடுதலாகச் செலவழிப்பதையும் இலக்கிய வளமையும் பண்பட்ட தன்மையும் இல்லா இந்திக்கு  அளவு கடந்து செலவழிப்பதையும்    பிற மொழிகளுக்கு அநீதி விளைவிக்கும் மொழிப்பாகுபாடாக எண்ணவில்லை.  வரையறை அடிப்படையில் உயர்தனிச்செம்மொழியாக விளங்கும் தமிழுக்குச் செய்யும் சிறப்பைப் பிறமொழிகளுக்கும் வழங்கினால் என்ன எனத் தவறாக எண்ணி விட்டனர். .
  உலகாளவிய ஓட்டப்போட்டிகளில்,  முதலிடத்தில் வந்தவரை  விட அடுத்து வந்தவர்,  ஆயிரத்தில் ஒரு  நொடி குறைந்து வந்தாலும் முதலாமவருக்கு இணையாகமாட்டார் என்பதே உண்மை.  பிற போட்டிகளிலும் இதுதான் நடைமுறை. உலக(ஒலிம்பிக்கு)ப் போட்டி நடைபெற்று முடிந்ததே. அதில், வெற்றி வாய்ப்பை இழ்நதவர்கள் வாகையருக்கு இணையாகத் தங்களையும் கருத வேண்டும் எனக் கோரிக்கை வைக்கக்கூடாது. அவ்வாறு இருக்க இப்போட்டிகளில் பங்கேற்கத் தகுதியில்லாதவர்கள், தங்களுக்கும் வாகையருக்கு இணையான சிறப்புவேண்டு மெனக் கோர இயலுமா?  பைத்தியக்காரத்தனம் எனப் பிறர் எள்ளி நகையாடமாட்டார்களா?
 ஆனால், 1.தொன்மை, 2.முன்மை, 3.எண்மை (எளிமை),4.ஒண்மை (ஒளிமை), 5.இளமை,6.வளமை, 7.தாய்மை, 8.தூய்மை, 9.செம்மை, 10.மும்மை, 11.இனிமை, 12.தனிமை, 13.பெருமை, 14.திருமை, 15.இயன்மை, 16.வியன்மை முதலான பாவாணர் வறையறுத்த பண்புகளும் பிற பண்புகளும் கொண்டு உயர்தனிச்செம்மொழியாக விளங்கும் தமிழுக்கு இணையாகஇவற்றில் ஒன்றுமில்லாத அல்லது ஒன்றோ இரண்டோ உள்ள மொழிகளும் செம்மொழித்தகுதி  கோரியதும் மத்திய அரசு அவ்வாறு அறிந்தேற்பு வழங்கியதும் எவ்வகையில் சரியாகும்?
தென்னாட்டின்கட் சிறந்தொளிரா நின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற் றானாராய்ந்த வழியும், உயர்தனிச் செம்மொழி யேயாம் என்பது நிச்சயம். இவ்வளவுயர்வுஞ் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ் மொழியை உண்ணாட்டுப் புன்மொழிகளோடொருங் கெண்ணுதல் தவிர்க்க வேண்டும் என்று
1903-இல் பரிதிமாற் கலைஞர்தமிழ்மொழியின் வரலாறு’எனும் நூலில்   கூறியது .இன்றைக்கும் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டிய பொன்மொழியாகும்.
  தமிழுக்கான செம்மொழி  அறிந்தேற்பு அறிவிப்பிற்குப்பின் மத்திய அரசின் போக்கை உணர்ந்து, செம்மொழிப்பட்டியல் என எல்லா  மொழிகளையும் சேர்ப்பதுதான் மத்திய  அரசின் நோக்கம்; தமிழுக்குத் தனிச்சிறப்பு அளிக்கக்கூடாது என்பதும் அதன் நோக்கம் எனச் சொல்லி வந்தோம். அதைத்தான் அதன் செயல்பாடுகள் காட்டி வருகின்றன. எந்த ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் நிதியுதவி அளிப்பதற்கு எதிராக நாமில்லை. ஆனால், செம்மொழித்தகுதி என்ற பெயரில் அத்தகுதியற்ற மொழிகளுக்கு வழங்கக்கூடாது என்பதுதான் அறமாகும்.
  அவ்வாறு  அனைத்து மொழிகளையும்செம்மொழி எனஅறிவிக்கும் எனில்,  தமிழை உயர்தனிச்செம்மொழியாக அறிவிக்க   வேண்டும்
  தீர்ப்பில் மேல்முறையீடு செய்யலாம் எனக் கூறாமல் உரிய அதிகார மையத்தை அணுகுமாறு தெரிவித்துள்ளனர். என்ற போதும் இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடுசெய்ய வேண்டும்.
   தீர்ப்பில் குறிப்பிட்டவாறு மத்திய அரசிடமும் முறையீடு செய்ய வேண்டும்.
  இதற்கான பொறுப்பைப் பொதுநலவழக்குகளில் ஈடுபட்டு வரும் தமிழார்வலர் வழ.கரூர் இராசேந்திரன் தமிழறிஞர்கள், தமிழமைப்புகள் சார்பில் மேல்முறையீட்டில் ஈடுபடும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும். அவர் தன்னியல்பில் மேல் முறையீடு செய்யாமல்
  1. மூத்த வழ.காந்தி அவர்களிடமும் கலந்து பேச வேண்டும்.
  2. தமிழறிஞர்களிடம் வழக்கிற்குத் தேவையான கருத்துகளைத் திரட்ட வேண்டும்.
  3. தமிழார்வலர்களும் தமிழமைப்புகளும் வழக்குநிதி தருவதற்கு வாய்ப்பாகத் தனிக்கணக்கு தொடங்கித் தெரிவிக்க வேண்டும்.
  4. தீர்ப்பில் குறிப்பிட்டவாறு மத்திய அரசிடமும் முறையீடு செய்ய வேண்டும்.
  .
  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழக்கில் இணைவதில்   நடைமுறைச் சிக்கல் இருக்கும். ஆனால், சாகித்திய அகாதமிக்கும் மத்திய அரசின் உரிய துறைகளுக்கும் செம்மொழித் தகுதி வரையறை குறித்தும் அதற்கிணங்கக் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒரியா (ஒடியா) முதலான மொழிகளுக்கு அறிந்தேற்பு வழங்கியது தவறு என்பது குறித்தும் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
 தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பிற்குப் பெருமை கொண்டாடும் தி.மு.க. அதனை நிலைநாட்டும் வகையில் உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசிடமும் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
  பேராய(காங்கிரசு)க்கட்சியுடன் நீக்கமறப் பிணைப்பு உள்ளதால் அக்கட்சியையும் தனியே மேல்முறையீடு செய்யத் தி.மு.க. ஆற்றுப்படுத்த வேண்டும்.
  செம்மொழி என்றால்  கலைஞரின் சொத்து என எண்ணிப் பாராமுகமாக இராமல் தமிழக அரசும் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
அனைத்து மொழிகளுக்கும்  உதவுக!
தகுதிகளுக்கேற்பச் சிறப்பித்திடுக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை,  அகரமுதல 148, ஆவணி 05, 2047 / ஆக.21, 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo

Saturday, August 27, 2016

முதலில் செவாலியர் விருது பெற்ற தமிழ் நாட்டவர் யார்? – இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-செவாலியர்விருது. முதலில் யார்? - திரு ; thalaippu_chevalier_muthal viruthaalar_thiru

முதலில் செவாலியர் விருது பெற்ற தமிழ் நாட்டவர் யார்?

  கடலை முதலில் பார்க்கும் குழந்தை என் பொம்மையைப்போலவே கடல் நீல நிறமாக உள்ளது எனக் கூறுவதுபோல்தான் நாம்அனைவரும் அவரவர் நிலையிலேயே அனைத்தையும் பார்க்கிறோம். எனவேதான்  ஒரு நிகழ்வோ அருவினையோ நடக்கும் பொழுது முந்தைய வரலாற்றை அறியும் ஆர்வமற்றவர்களாக, ஏதும் முன் நிகழ்வு உள்ளதா எனப் பார்க்கும் தேடுதல் உணர்வு இல்லாதவராக நடந்து கொள்கிறோம். அதுபோன்ற விளைவுதான் சான்றோன்(செவாலியர்) பாராட்டிதழ் பற்றியது. செவாலியர்  பாராட்டிதழ் வழங்குவது என்பது நெப்போலியனால்(Napoléon Bonaparte) 1802ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. பொதுவாக வீரர்களுக்கு அளிக்கப்படும்  பாராட்டிதழாகத்தான் முதலில் அமைத்தனர். எனவேதான் வீரன் என்னும் பொருளில் செவாலியர் என்றனர். விருது என்று குறிக்காமல் பாராட்டிதழ் என்று சொல்வதன் காரணம்  செவாலியர் எனப் பாராட்டித்தரும் சான்றிதழாகத்தான் விருதிதழ் உள்ளது.
  பெருந்தகை விருதணி என்பது ஐ வகைப்படும்.  1. சான்றோர் (Chevalier (Knight] 2.  உயர்துறைவர் [Officier (Officer)]  3. கட்டளையர்  [Commandeur (Commander)] 4. பெருந்துறைவர் 5. பெருங்குறுக்கர் [Grand Croix (Grand Cross)]
  செவாலியர் விருதினைத் திருத்தகை விருது என்றுகூடக் கூறலாம். ஆனால், சான்றோர் என்பது கல்வி, ஒழுக்கங்களில் சிறந்தவரைக் குறிப்பதுபோல் சிறந்த வீரரையும் குறிக்கும் சொல். எனவே, படை மக்களுக்குக் கொடுக்கப்படும் விருது பின்னர், பிற குடிமக்களுக்கும் கொடுக்கும் பொதுவான விருதாக மாறியுள்ளதால், இரு தரப்பாரையும் குறிக்கும் சான்றோன் என்பது பொருத்தமாக இருக்கும்.  நாம் என்ன சொன்னாலும் அயல்மொழி மோகத்திலுள்ள நம் மக்களுக்கு அயற்சொல்தான் பிடிக்கும் என்பது அறிந்ததே! தமிழில் சொன்னால்மதிப்பு குறைந்ததாக எண்ணிக் கொள்வா்கள்.
 இருப்பினும் பிரான்சின் சான்றோர் விருது என்னும் பொழுது அவர்கள் விருப்பம் நிறைவேறலாம்.
  சான்றோர் விருது, பிரான்சு நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல்  பிரான்சு நாட்டில் வசிக்கும் அயல்நாட்டவருக்கும் அவர்கள் கலை, இலக்கியம் முதலான துறைகளில் ஆற்றும் பணிகளைப் பாராட்டி வழங்கப்பெறுகிறது. அதுபோல் பிரான்சு நாட்டின் மொழி, கலை முதலானவற்றுடன் தொடர்புடைய அயல்நாட்டிலுள்ளவர்களுக்கும் இவ்விருதுகள் வழங்கப் பெறுகின்றன. 25 ஆண்டுகள் பணிச்சிறப்பு உள்ளவர்களுக்கே இவ்விருது வழங்கப்பெறுகிறது.
 இதுவரை பன்னாட்டளவில் விருது பெற்றோர் ஏறத்தாழ நூறாயிரவர் ஆவர். ஆண்டுதோறும் நானூற்றுவர்களுக்குச் ‘செவாலியர் விருது’ வழங்கிப் பிரான்சு அரசு சிறப்பிக்கிறது. இந்த எண்ணிக்கையைப் பார்க்கும் பொழுது இந்திய அளவில் விருது பெற்றவர் எண்ணிக்கை மிகக் குறைவே. எனினும் இவற்றில் தமிழர்கள்  மிகுதியானவர்கள் இருப்பது மகி்ழ்ச்சியே.
  இம்முறைப் பல்துறைக் கலைஞராக உள்ள நடிகர் கமல்ஃகாசன் சான்றோர் (செவாலியர்) விருது(2016) பெற்றுள்ளார். விடாமுயற்சி, ஊக்கம்,  தேடுதல் வேட்கை, எனப் பலவகையிலும் தன் கலை ஆர்வத்தை வெளிப்படுத்தி உயர் நிலைகளை அடைந்து வரும் கமல்  இந்த விருதிற்குத் தகுதியானவரே! மேலும், பல உயரிய விருதுகைளப் பெற அகரமுதல மின்னிதழ்  பாராட்டுகிறது. சென்னைத் தமிழ் என்ற போர்வையில் மொழிக்கொலை புரிதல் போன்றவற்றை நீக்கித் தமிழ்க்லைக்குத் தொண்டாற்றுமாறும் அகரமுதல மின்னிதழ் வாழ்த்துகிறது.
  இவ்விருது இவருக்கும் முன்னர்ப் பலருக்கும் வழங்கப்பட்டுள்ளன. எனினும் நடிகர் திலகம் சிவாசிகணேசனுக்கு சான்றோர் (செவாலியர்) விருது வழங்கப்பெற்ற பின்னர்தான் மக்களிடையே பெரு வழக்காகத் தெரியவலாயிற்று.  நடிப்புத்துறையில், நடிகர் திலகத்திற்குக் கிடைத்த விருது அவருக்குப் பின்னர்த் தனக்குக் கிடைத்துள்ளது என்ற அளவில் கமலுக்கு மகிழ்ச்சியே.  அவர் மகிழ்ந்து துள்ளும் அளவிற்குப்பெரிய விருதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அயல் நாட்டரசு ஒருவர் உழைப்பை அறிந்து சிறப்பிக்கின்றது என்றால் அது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதுதானே!  எனினும் முகநூல் முதலான  இணையத் தளங்களில் கமலுக்கும் முன்னர்,  ஏன்,  இவ்விருது வாங்கியவர் உள்ளனர் என்ற பதிவுகள் உள்ளமையைக் காணலாம். அவ்வப்பொழுது  சான்றோர் விருது வழங்கப்பட்ட நேர்வுகளில் அவரவர்களைப்பற்றிச் செய்தி யிதழ்களில் குறிப்புரைகள் வரத்தான் செய்துள்ளன. இப்பொழுது ஊடக ஒளி மிகுதியாகப் பாய்ச்சப்படுவதால், கமலைமட்டும் பாராட்டுவதுபோல் தோன்றுகின்றது. கலைஞர்களைப் பற்றியும் பாடத்திட்டங்கள் அமைந்திருப்பின், நாம் சான்றோர் விருது போன்ற விருதுகளையும்  விருதாளர்களையும் அறிந்திருப்போம். அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனதால் கடந்த  காலச் சிறப்பிற்குரியவர்களை அறியாமல் பேசுகின்றோம்.
 கமலுக்கு முன்னர்  – சிவாசி கணேசனுக்கும் முன்னர் –  ‘செவாலியர் விருது’ பெற்றவர்கள் எனக் குறிக்கப்படுவன யாவும் சரியான தகவலல்ல. விக்கிபீடியா முதலான தகவல்தளங்களில்கூடச் சரியான தகவலின்மையால் தேடிப்பார்த்துச் சரியான தகவலை அளிப்பது கூட இயலாததாக உள்ளது. சான்றோர்(செவாலியர்) விருதுபற்றிய பிரான்சு நாட்டுத்தளத்திலும்கூட நாம் தேடும் ஆண்டுகளின்   விருதாளர் விவரம் கிடைப்பதில்லை.  எனினும் சான்றோர்(செவாலியர்) விருது பெற்ற முதல் தமிழர் யார் என்பதுபற்றி நாம் பார்ப்போம்.
  இந்தியாவில் இணைவதற்கு முன்னர்ப் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த  பகுதியைச் சேர்ந்தவர்களே முதலில் சான்றோர் விருதுகள் பெற்றவர்கள் ஆவர். மேற்கு வங்காளத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ்இருந்த சந்தன் நகரைச்  சேர்ந்த துர்காசரன் இரக்சித்து (Durga Charan Rakshit) என்பவரே இந்தியாவில் முதலில் 1896) இல் செவாலியர் விருது பெற்றவர் ஆவார். எனினும் 1987இல் வங்காள இயக்குநர் சத்யசித்துரே செவாலியர் விருது பெற்றபின்னர்தான் இது குறித்துக் கலை உலகம் அறியத் தொடங்கியது. இதுபோல் நடிகர்திலகம் சிவாசி கணேசன், 1995 இல் செவாலியர்விருது பெற்ற பின்னர்தான் தமிழ்த்திரை உலகம் பரவலாக அறியத் தொடங்கியது. செவாலியர் சிவாசி கணேசன் சாலை எனச் சாலைக்குப் பெயர் சூட்டும்பொழுதும் சான்றோர் விருதைக் கைவிடவில்லை. இந்த விருதிற்கு மிகுந்த சிறப்பை அளிக்கும் நாம், இவர்களுக்கும் முன்னர் சான்றோர்(செவாலியர்) விருது பெற்றவர்களைப்பற்றி அறிய வேண்டுமல்லவா?
  இப்போது திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தா நல்லூர் ஊரைச் சேர்ந்தவர்  அப்துல் அசீசு (JM Abdul Aziz).  பெரு வணிகரான இவர் வியத்துநாம் சென்று வணிக வல்லமையாளர் ஆனார்.  1932 இல் சான்றோர் விருது பெற்ற இவரே   முதல் சான்றோர் (செவாலியர்) தமிழ் விருதாளர்பேராசிரியர்  மொகமது (1934), மொகம்மது அனீபு (1937), வீரப்பன் வரதராசு (1954), மரு.நல்லாம் வைத்தியநாதன், எம்.எம். உசேன்(1999), பேராசிரியர் மதன கல்யாணி(2011) எனப் புதுவையைச் சேர்ந்த பலரும் செவாலியர் விருதுபெற்றுள்ளனர்.
   மாயவித்தையாளரும் நடிகருமான அலெக்சு (2010), என்.எசு.இராமானுச (தத்தாச்சார்யா)(2012), தமிழ்த் தந்தைக்கும் சீக்கியத்தாய்க்கும்  பிறந்த அஞ்சலி  கோபாலன்(2013) முதலானோர் தமிழ்நாட்டில் கமலுக்கும்  முன்னரே சான்றோர் (செவாலியர்) விருது பெற்றுள்ளனர். தி்ரையுலகினருக்கே நாம் முதன்மை அளிப்பதால் ஊடகங்களும் அவர்களை முதன்மைப்படுத்துகின்றன. இதற்குப் பொறுப்பு ஊடகத்தினரோ கமலோ அல்லர். நாம்தான்.
 திருமதி சிவயோகநாயகி இராமநாதன் (2009), நாகநாதன் வேலுப்பிள்ளை(2011), திருமதி செரீன் சேவியர்(2013)  முதலான ஈழத்தமிழர்களும் சான்றோர்(செவாலியர்)  விருதாளர்கள்தாம்.
  இவர்களைப்பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால், சான்றோர் (செவாலியர்) விருது பெற்ற முதல் தமிழ்நாட்டுத் தமிழரான கலைமாமணி நட்டுவனார், திரைநாட்டிய இயக்குநர் வை.சே.முத்துசாமி(ப்பிள்ளை)பற்றி யாரும் குறிப்பிடவில்லை.
 பிரான்சில் நடைபெற்ற பன்னாட்டு நாட்டிய விழாவில் முதன்மை அளிக்கப்பெற்று அதில்  சான்றோர் (செவாலியர்) விருது பெற்ற முதல் தமிழகத் தமிழர்; நாட்டியக்கலைகளில் புதுமைகள்   அறிமுகப்படுத்தியவர்; 60 திரைப்படங்களுக்கு மேல் நாட்டிய இயக்குநராகவும் திகழ்ந்து புகழ் பெற்றவர் இப்பெருந்தகையே!. அவர்பற்றிய கட்டுரையை அடுத்த இதழில் காணலாம்.
;
இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive