Friday, April 24, 2020

கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு! இவரும் தவறு! – இலக்குவனார் திருவள்ளுவன்


கருத்துக் கதிர் 1.20

அவரும் தவறு! இவரும் தவறு!

மகுடைத் தொற்றுத் தடுப்பு தொடர்பாக  அனைத்துக்கட்சிக்கூட்டத்தைக் காணுரை மூலமாக நடத்த வேண்டும்  என எதிர்க்கட்சித்தலைவர் மு.க.தாலின் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார். பிற எதிர்க்கட்சியினரும் அவ்வாறுதான் வேண்டிவருகின்றனர். ஆனால் முதல்வர் தேவையில்லை என மறுத்து வருகிறார். அதற்காக அவரும் பிற அமைச்சர்களும் லும் காரணங்கள் சரியில்லை.
எதிர்க்கட்சித்தலைவர் ஆட்சியில் இருந்தவர். சட்டமன்ற உறுப்பினர், மாநகரத் தலைவர், அமைச்சர், துணை முதல்வர்,  எனப் பல பொறுப்புகளை வகித்தவர். இப்பொழுதும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையிலும் மக்கள் சார்பாளராகச் செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சியினரிடமும் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசு முடிவெடுத்துச் செயல்படுத்தலாம். ஆனால், மக்களின் குறைகளை எதிர்க்கட்சியினர் மூலமும் அறிந்து குறைகளைவதிலும் சிறப்பாகச் செயல்படுவதிலும் என்ன தவறு? மாற்றுக்கட்சித் தலைவர்களுக்கு எதிராகவே அரசியல் நடத்தும் போக்கில் இருந்து மாறுபட்டு எதிர்க்கட்சியினரையும் அரவணைத்துச் செல்லும்போக்கைப் பல நேரங்களில் வெளியிட்டுள்ளார். அவ்வாறிருக்க மக்கள் நலன் கருதி, எதிர்க்கட்சியினரைக் கலந்து பேசமறுப்பது தவறுதான்.
ஆட்சிப்பொறுப்பில் உள்ள முதல்வருக்கு அதிகாரிகளையும் தொடர்புடைய வல்லுநர்களையும் சந்தித்துப் பேசுவது கடமைதான். அதைப்பொதுக்கூட்டம் போல் கருதி எதிர்ப்பதும் எதிர்த்து வீணுரை பேசுவதும் தவறு. முதல்வர் எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டாவிட்டாலும் எதிர்க்கட்சித்தலைவர் தம் தோழமைக்கட்சித் தலைவர்களைக் கூட்டினார். ஆனால் அதன் பயன் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. இருப்பினும் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு அரசைக் கேள்வி கேட்பதைக் குறைத்து விட்டு மக்கள் அரசைக் கேள்விகேட்கும் வண்ணம் மாற்ற வேண்டும். மகுடைத் தொற்று மேலும் பரவாமல் தடுக்கவும் தொற்றுக்கு ஆளானவர்களை விரைவில் மீட்கவும் நிறைவான நல்வாழ்விற்கும் ஒல்லும் வகை தொண்டாற்றிட வேண்டும்.
மகுடைத்தொற்றுக்கு(கொரானாவிற்கு) எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் என நாளும் பொழுதும் சொல்லும் அரசு தானே முன்னெடுத்துக்காட்டாக இருக்க வேண்டாவா? எனவே, பிறரை – அதுவும் ஆட்சிப்பட்டறிவு உள்ள எதிர்க்கட்சித் தலைவரையும் மக்களுக்காகக் குரல் கொடுத்துவரும் தலைவர்களையும் – சந்திப்பதை இழுக்காக எண்ணாமல் தேவைக்கேற்பவும் சூழலுக்கேற்பவும் அவர்களைக் கலந்து பேசி இணைந்து பணியாற்றினால் அவருக்குப் பெருமைதான் என்று உணர்ந்து செயல்பட வேண்டும்.
தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், பிறரின் இடித்துரைகள் கசப்பாக, ஏற்றகத்தக்கனவாக இல்லை என்றாலும் பொறுத்துக் கொள்ளும் பண்புடையவர்களாக இருக்க வேண்டும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. (திருவள்ளுவர், திருக்குறள் 389)
இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, February 19, 2020

தமிழ்ப்புறக்கணிப்பைத் தவிர்ப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

தமிழ்ப்புறக்கணிப்பைத் தவிர்ப்போம்!

இந்தியத் திருநாட்டின் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது. என்றாலும் நமக்குரிய உரிமைகளை இழந்துதான் நாம் வாழ்கிறோம். இந்தியர் என்ற அடையாளம் தமிழர் என்ற அடையாளத்தைக் காக்கத்தான் இருக்க வேண்டுமே தவிர அழிப்பதற்கு இருக்கக் கூடாது. ஆனால், எல்லா நிலைகளிலும் எல்லா இடங்களிலும் தமிழர் என்ற அடையாளத்தை இழந்து வாழும் வகையி்ல்தான் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது.
தமிழ் மாநிலம் அமைக்கப்பட்ட பொழுதே நில உரிமைகளை இழந்துதானே ஏற்றுக் கொண்டோம். அதன் தொடர்ச்சியாக நாம் உரிமைகளை இழப்பதும் தொடர் வரலாறாகத்தானே உள்ளது. உரிமைகளைக் காக்க வேண்டிய அரசுகள் உரிமைகளைப் பறிக்கும் பொழுது நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
தமிழ்நாட்டின் தலைநகரின் பெயரைத் தமிழில் சென்னை என அழைக்க 1996இல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாணை பிறப்பிக்கவே 50 ஆண்டுகள் ஆகி விட்டன. எனினும் இன்னும் பலர் சென்னை என்றே அழைப்பதில்லை. பல்கலைக்கழகம், உயர்நீதிமன்றம், மருத்துவமனை முதலான அரசு நிறுவனங்களை அல்லது அரசின் துறைகளைக் கூட நம்மால் சென்னை எனச் சேர்த்துக் குறிப்பிட இயலவில்லை.   பிற நாடுகள் அல்லது நகரங்கள் பெயர் மாற்றம் நடக்கும் பொழுது உடனே அவை நடைமுறைக்கு வந்துவிடுகின்றன. ஆனால், தமிழர்கள் பிற நாட்டின் பெயர்கள் மாறின எனில் அவ்வாறே புதிய பெயரில் அழைப்பர். பம்பாய், மும்பை என மாறியதும் மும்பை என்று அழைக்ககும் நம்மவர்களே சென்னையைச் சென்னை என்று அழைப்பதில்லை. (மெட்ராசு என்று திரைப்படமும் வந்துள்ளது. தமிழில் இல்லாப் பெயர் தாங்கி வரும் படங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும்.) அரசாணையையும் மீறி நம் தலைநகரின் பெயரைத் தமிழில் குறிப்பிடாமல் இருக்கும் துணிவு உள்ளவர்கள் இருக்கும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்கையில் தமிழர் எனப் பெருமைபட என்ன இருக்கிறது?
  மத்திய அரசில் தமிழ்நாடும் உள்ளது எனில் தமிழ்மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. நீதிமன்றங்களும் மண்ணின் மக்களான தமிழர்களின் உணர்வை மதித்துத்தான் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால், நடப்பதென்ன? உயர் நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க மத்திய அரசு தடை. தமிழர்கள் தமிழர்களுக்காகக் கட்டிய தமிழ்க்கடவுள்களின் கோயில்களில் தமிழ்வழிபாட்டிற்கு உள்ள தடையை நீக்க மத்திய அரசு முயல்வது இல்லை. 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனையில் அல்லல் பட்டு வரும் அப்பாவித் தமிழர்களை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் சொன்னாலும் மத்திய அரசு அதற்கு முட்டுக்கட்டை.
பிற மாநில மக்கள்போல் நம் மாநில உயர் நீதி மன்றத்தை நாம் மாநிலத்தின் பெயரில் ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என்று அழைக்கும் உரிமையில்லை. மாநிலத் தலைநகர் பெயரில்தானே உயர்நீதி மன்றம் உள்ளது. அதையாவது நம்மால் ‘சென்னை உயர்நீதிமன்றம்’ என்று அழைக்க இயலுமா? தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருப்பினும் அதற்கான உரிமை நமக்கு இல்லையே!
  தமிழக மீனவர்கள் சிங்களப் படைகளால் ஒழிக்கப்படுவதும் அவர்கள் படகுகள் அழிக்கப்படுவதும் தொடர்ந்தாலும் அதற்குக் காரணமானவர்களை  வரவேற்றுக் குலவுகிறார்களே ஒழிய, மத்திய அரசினர் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. கேரளச் செவிலியர்கள் தாக்கப்படும் முன்பே பேரிடர் வரும் என்று கடத்தல் நாடகம் போட்டு மீட்டு வரும் மத்திய அரசு, தமிழ் ஈழத்தில் கொத்துக் குண்டுகளாலும் ஏவுகணைகளாலும் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு உதவியாக இருந்ததுடன் கொலைகாரக் கூட்டாளிகளுடன் கைகோத்துக் கொண்டு தொடர்ந்து தமிழர்நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. இந்தியராக எண்ணினால் இணையுரிமை கொடு! இல்லையேல் தனியுரிமை கொடு! எனக் கேட்டு மத்திய அரசைக் கட்டாயப்படுத்த வேண்டும்.
 மத்திய அரசின் தொலைபேசிகளிலும் அதன் அறிவுறுத்த்லுக்கு இணங்கத் தனியார் நிறுவனங்களின் தொலைபேசிகளிலும் வணக்கம் ஒலிக்காது; நமசுகாரம்தான் நச்சரிக்கும். பண எடுப்பு மையங்களில் ஆங்கிலமும் இந்தியும் உள்ளன. ஆனால் பலவற்றில் தமிழைக் காணோம்!
  வங்கியின் படிவங்கள் தமிழைப் புறக்கணிக்கின்றன. நாம் அவ்வங்கிகளைப் புறக்கணிப்பதில்லை!

  அங்கன்வாடி முதலான பெயர்களைச் சூட்டிக் கொண்டு தமிழை நாமே வெளியேற்றிக் கொண்டுள்ளோம். மத்திய அரசின் துறைகளின் பெயர்களும் திட்டங்களின் பெயர்களும் முழக்கங்களும் இந்தி மயமாக்கப்பட்ட சமக்கிருதத்தில்தான் உள்ளனவே தவிர, தமிழுக்கு அங்கு இடமில்லை. மாநில உரிமைகளில் குறுக்கிட்டுக் கல்வித்துறையை எடுத்துக் கொண்டு, மத்திய அரசு, இந்தியையும் சமக்கிருதத்தையும் திணிப்பதையே அன்றாடகப்பணியாகச் செயல்படுத்தி வருகிறது.
  தமிழகக்காவல்துறை ஆங்கிலேயர்க்குச் செயல்படுவதுபோல் அறிவிப்புகள், வழிகாட்டும் குறிப்புகள், சாலைக் குறிப்புகள் யாவற்றிலும் தமிழ் இல்லை. தமிழன்னைக்குக் காவல் தேவையில்லை என விட்டுவிட்டார்கள் போலும்!
  தொடர்வண்டி அறிவிப்புகளில் தமிழ் இல்லை. எச்சரிக்கை, அபாய அறிவிப்பு என்றெல்லாம் தமிழ்நாட்டில் இந்தியிலும் மலையாளத்திலும் காண முடியும். ஆனால், தமிழர்கள் எக்கேடு கெட்டால் என்ன? அவர்களுக்கு எதற்கு எச்சரிக்கை என்று தமிழில் தருவதில்லை!
  மின்னேணி முதலான அனைத்து அவசர உதவி அறிவிப்பு இருக்கும் இடங்களில் எல்லாம் தமிழைக் காணமுடியாது. தமிழர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்று விட்டுவிட்டார்களா? இப்படியாவது தமிழர் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என எண்ணுகிறார்களா? எனத் தெரியவில்லை.
  உணவகங்களில் உணவுப் பெயர்கள் தமிழில் இல்லை! உணவு நிரலும் தமிழில் இல்லை! தமிழையா   சாப்பிடப் போகிறார்கள்! தருவதை வயிற்றில் திணித்துக் கொண்டு ஓடட்டும் என எண்ணுகிறார்களோ!
  தங்கும் விடுதிகளான உறைவகங்களில் அறைகளின் பெயர்கள் தமிழில் இல்லை. கட்டண விவரங்கள், வசதி வாய்ப்புகள் தமிழில் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்கள் பணத்தில் வாழ்ந்து கொண்டு தமிழர்களி்ன் மொழியான தமிழைப் புறக்கணிக்க இவர்களுக்கு எவ்வாறு துணிவு வந்தது? தமிழர்கள் வாய்ப்பேச்சு வீரர்கள். முரண்டுபிடிக்கும் பொழுது மெதுவாகத்தட்டினாலே வீழ்ந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை போலும்! நமக்குள்ள உரிமைகளைக்கூடக் கேட்க முடியாமல் வாய் மூடி இருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?
 உறைவகங்களில் தங்குவதற்கான பதிவில் தமிழ் இல்லை. உணவகங்களில் நாம்தான் பணம் கொடுக்கிறோம். ஆனால் திருமணம் முதலான விழா அல்லது நிகழ்வுக் குறிப்புகளை அவர்கள் தமிழில் எழுத மாட்டார்களாம்! என்ன கொடுமை இது!
தமிழர்கள் அடிமைகள் என்றால் சாமான்யன்முதல் அனைவரும்தானே.
   அரசாணைகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் மதிக்காத பொழுது மக்கள் எங்ஙனம் மதிப்பார்கள்? சான்றுக்கு ஒன்று! ஊர்திகளில் தமிழில் பதிவு எழுத்துகளைக் குறிக்கும் அரசாணையை அமைச்சர்களோ தலைமைச் செயலக அதிகாரிகளோ துறைத்தலைவர்களோ மதிக்காத பொழுது வேறு யார்தான் மதிப்பார்கள்!
  தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் படிக்கவும் பணியாற்றவும் வாய்ப்பு உள்ளபோது யாருக்கும் உதவாத தமிழ் என்று அனைவரும் புறக்கணிக்கத்தானே செய்வார்கள்! இப்படி எல்லாம் இயன்ற வரை தமிழை எல்லா இடங்களில் இருந்தும் துரத்தி விட்டு யாரோ சிலர் “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” என முழங்கினால் போதுமா? தமிழ்நாட்டில் தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்படுவதில் என்ன இருக்கிறது?
தமிழர்க்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தும் பொழுது, எதிர்த்துக் குரல் கொடுத்து அடங்கிப்போகத்தான் நமக்கு உரிமையே தவிர, அதனைத் தடுப்பதற்கு உரிமை இல்லை.
நாம் செலுத்தும் வரி வருவாயில் இருந்து இந்தி, சமக்கிருதத்தை  வளர்ப்பதற்குத்தான் ஆதரவாக இருக்க முடியுமே தவிர, நம் தாய்மொழிப் புறக்கணிப்பைத் தடுக்க இயலாது.
மத்தியில் யார் ஆட்சியில்  இருந்தாலும், தமிழக்கட்சிகள் அதில் இடம் பெற்றாலும், மத்திய அரசிற்குக் கை கட்டி வாய்பொத்தி ஒடுங்கித்தான் இருக்க முடியுமே தவிர, உரிமைக் குரல் கொடுக்க முடியாது.
நம் அடிமை நிலைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சுருக்கமாகச் சொல்வதானால், இந்தியா ஒன்றிய ஆட்சியாக இருந்தாலும் தேசிய இனங்கள் ஒடுக்கப்படுகின்றன. அதனால் தமிழரும் அடிமைகளாக வாழ்கிறோம். உரிமை வாழ்வு வாழும் தமிழரே உண்மையான இந்தியராகத் திகழ முடியும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். போராட்டமும் வாதாட்டமும் இன்றி நாமும் பிற தேசிய இனங்களும் உரிமையுடன் வாழ வகை செய்ய வேண்டும்.

இந்தியராகத் திகழத் தமிழராய் வாழ்வோம்!

  • இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, January 25, 2020

சடங்காகிப்போன வீர வணக்க நாள்! – இலக்குவனார் திருவள்ளுவன்



சடங்காகிப்போன வீர வணக்க நாள் 


தாய்மொழியாம் தமிழ் மொழியின் உரிமை காக்கத் தீயுண்டும் நஞ்சுண்டும் சிறைப்பட்டும் உயிர்நீத்த மாமறவர்களின் நினைவைப் போற்ற சனவரி 25 அன்று வீர வணக்க நாள் நிகழ்த்துகிறோம். தமிழகக் கட்சிகள் மாவட்டந்தோறும் இதனை நிகழ்த்தத் தவறுவதில்லை. ஆனால், மொழி உரிமைக்காகப் பாடுபட்டவர்களையும் உயிரை இழந்து பாரினை நீங்கியவர்களையும் போற்றும் நாம், நாளும் மொழி உரிமை இழந்து நலிவதில் இருந்து மீள எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவ்வப்பொழுது இந்தி எதிர்ப்பு வீரர்கள் போல் கூக்ககுரலிடுவது தவிர அன்னைத்தமிழை அழிவிலிருந்து காக்க எந்தச் சிறுதுரும்பையும் எடுத்துப் போடுவதில்லை. ஒவ்வோர் இடத்திலிருந்தும் தமிழ் நீக்கப்படுவதற்கு உடன்பட்டும் அல்லது அதை அறிந்தும் எங்கும் தமிழ் எனப் போலி எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறோம்.
பிரதான் மந்திரி சுரக்சா பீம யோசனா, சீவன்சோதி பீம யோசனா, சன்தன் யோசனா, கிராம் சதக்கு யோசனா, பசல் பீம யோசனா, கிரிசி சிஞ்சை யோசனா, கிரிசி விகாசு யோகனா, அவாசு யோசனா எனத் திட்டங்களுக்கு இந்திப்பெயர்கள் சூட்டி அவையே நாடு முழுவதும் விளம்பரப் படுத்தப்படுகின்றன.
வானொலி, தொலைக்காட்சிகளில் இந்தி விளம்பரங்களே பெருகிக் கொண்டுள்ளன. விளம்பரங்களின்  நோக்கம் இந்தித்திணிப்பாகத்தான் உள்ளது. வானொலி நிகழ்ச்சிகளிலும் இந்தி ஒலிபரப்பு நேரங்கள் கூடிக் கொண்டுள்ளன. இந்தி வருவதால் அங்கிருந்த தமிழ் அகற்றப்படுகிறது; அங்கு வரவேண்டிய தமிழ் விரட்டப்படுகின்றது என்பதை உணராமல் இந்நிகழ்வுகளுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டுள்ளோம்.
மத்திய அரசின் அலுவலகங்களிலும் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் முதலான மத்திய அரசு சார் நிறுவனங்களிலும் தனியார் மருத்துவமனைகள், விடுதிகள் முதலான இடங்களிலும் ‘வணக்கம்’  மூட்டைக்கட்டி வைக்கப்பட்டுள்ளது. ‘நமசுதே’ அல்லது நமசுகார் குடி கொண்டுள்ளன.
தமிழ் நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் தனியார் அலுவலகங்களிலும் இந்தியில் எழுதத் தெரிந்தால்தான் வேலை இந்தியில் தட்டச்சிட அல்லது கணிப்பொறியில் கணியச்சிடத் தெரிந்தால்தான் வேலை என்று வேலை வாய்ப்புகளில் இந்திக்கு வரவேற்புப்பா பாடிக்கொண்டு தமிழ் விரட்டப்பட்டுக் கொண்டுள்ளது.
தமிழ் முதலான தேசிய மொழிகள் பல இந்தியாவில் இருப்பினும் இந்தி மட்டுமே தேசிய மொழியாக விளம்பரப்படுத்தப்பட்டு பிற மொழிகள் விரட்டப்பட்டுக் கொண்டுள்ளன. நாமும் சேர்ந்து தமிழை விரட்டிக் கொண்டுள்ளோம்.
இந்தி திணிக்கப்படவில்லை என்றும் இந்தி கட்டாயமாக்கப்படவில்லை என்றும் கூறிக்கொண்டே இந்திக்கல்வி தவிர்க்க இயலாததாக மாற்றப்படுகிறது. விருப்பப்பாடம் என்ற பெயரில் அதுமட்டுமே பாடம் என்று நிலை நாட்டப்படுகிறது.
தமிழின் பெருமையைக் கூறி நம்மை மகிழ்ச்சி மாயையில் ஆட்படுத்திவிட்டுத் தமிழுக்கான தடங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. நாட்டுமொழியாக மட்டுமல்லாமல் வீட்டு மொழியாகவும் இந்தி இருக்கவேண்டும் என  மத்திய ஆட்சியாளர்கள் அறைகூவிக்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து இந்தியை அப்புறப்படுத்த ஆழமான திட்டம் எதுவும்  இந்தி எதிர்ப்புப் போலி வீரர்களிடம் இல்லை.  தமிழை எல்லா இடங்களிலும் வீற்றிருக்கச் செய்யும் செம்மையான திட்டம் எதுவும் தமிழ்க்காப்புப் போலி வீரர்களிடம் இல்லை.
தமிழக ஆட்சியாளர்களிடம் தமிழ்நாட்டில் தமிழ்தான் கல்வி மொழி, தமிழே அலுவல் மொழி, தமிழ்மட்டுமே வழிபாட்டு மொழி, தமிழ் ஒன்றே இசையாக முழங்கும் என்று சொல்வதற்கும் செய்வதற்கும் துணிவு இல்லை.
திரைப்படப் பெயர்களில் கூடத் தமிழ் காணவில்லை. இதைக்கண்டும் தமிழக மக்கள் நாணவில்லை. தமிழ்ப்பெயர் சூட்டப்பட்டவன் தமிழன் என்ற நிலை மாறி, மறந்தும் தமிழ்ப்பெயர் சூட்டாதவனே தமிழன் என்ற நிலை நாளும் பெருகி வருகிறது.
தொடரிகள், கப்பல்கள், வானூர்திகள், ஏவுகணைகள் முதலான எவற்றின் பெயராயினும் இந்திவயமாக்கப்பட்ட சமசுகிருதப் பெயர்கள்தாம். மூத்த மொழியாம் தமிழுக்கு இடமில்லை. இதுகுறித்து நமக்குச் சிறுதுளி அளவேனும் வருத்தமும் இல்லை!
பெயரில் என்ன இருக்கிறது என்று எண்ணாமல் பெயரில்தான் வரலாறு, பண்பாடு, உரிமை எல்லாம் இருக்கின்றன என்பதை உணரவேண்டும். தமிழ்ப்பெயர் சூட்டப்படாத எப்பொருளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்ற நிலைப்பாட்டை நாம் உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டிலாவது தமிழ் காக்கப்படும்.
1965இல் “தமிழ் உரிமைப் பெருநடைப் பயணம் மேற் கொள்ள உள்ள பேராசிரியர் சி.இலக்குவனார் கைது செய்யப்பட இருக்கிறார் என்னும் செய்தி நண்பர் ஒருவர் மூலம் புலவர்மணி இரா.இளங்குமரன் அறிய வந்தார். இதனை அவர் தெரிவித்த பொழுது தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், தமிழ் மொழிக்காகச் சிலரேனும் பலியாக வேண்டும். அவர்களில் நான்  முதல் ஆளாக இருக்கிறேன் என்று வழக்கமான புன்முறுவலுடன் மொழிந்தார்.” (செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார், பக்கம் 79) அத்தகைய நெஞ்சுரம் படைத்த, மாணாக்கர்களையும் தமிழ் அன்பர்களையும் வழி நடத்தக்கூடிய தமிழ்ப்பேராசிரியர் ஒருவரும் இன்று இலரே அத்தகையோரை உருவாக்க வேண்டியது வீர வணக்கம் கொண்டாடுவோர் கடமையல்லவா?
அன்னைத்தமிழ் அனைவருக்கும்உரியதே அன்றி  ஒரு தரப்பாருக்கு மட்டும் உரியதல்ல! தமிழ் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் அமைப்பினர் அந்தக் குரல் பொதுமக்களிடமிருந்து எழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். ஒட்டு மொத்தத் தமிழினமும் தமிழுக்காகக் குரல் கொடுத்தால்தான் அது நிறைவேறினால்தான் நாம் தமிழ் மொழிக்காவலர்களுக்காக உண்மையில் வீர வணக்கம் செலுத்தியவர்கள் ஆவோம்.
மொழிப்போரில் உயிர் நீத்தவர்கள், உடலூறு நேர்ந்தவர்கள், துயரங்களைச் சந்தித்தவர்கள் உழைத்தவர்கள் முதலானோர் வழியில் செல்லாமல், நாமே மொழி அழிப்பிற்குத் துணை நிற்கின்றோம். அப்படியானால், மொழிப்போர் ஈகியருக்கான வீர வணக்க நாள் என்பது வெற்றுச்சடங்குதானே!
வீர வணக்க நாள் கொண்டாடுநரே! அன்று ஒருநாளாவது இந்தி எதிர்ப்புப் போரில் களப்பலியானவர்கள் குடும்பத்தினரை, மரபு வழியினரைச் சந்தித்துச் சிறப்பியுங்கள். அவர்களுக்குத் தேவையான கல்வி, வேலைவாய்ப்பு முதலியவற்றை அளியுங்கள். அவர்கள் யாரையும் சாராமல் தலைநிமிர்ந்து வாழும் வகையில் உதவுங்கள்!
தமிழ்க்காப்புச் செயல்களில் கட்சி, மதம், அமைப்பு முதலிய எவ்வேறுபாடின்றியும் அனைவரும் ஈடுபட வேண்டும். தமிழர் வாழும் நிலப்பகுதிகளில் எல்லாம் மத்திய அரசு இந்தித்திணிப்பை நிறுத்திவிட்டுத் தமிழ் கற்பிக்கவும் வளர்க்கவும் வகை செய்ய வேண்டும்.
தமிழ் நாட்டிலும் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையேயும் அயல்மொழிகளின் திண்பிற்குச்சிறிதும் இடம் இல்லாச் சூழலை உருவாக்க வேண்டும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது பேச்சு என்பதை தாண்டிச் செயலாக்கப்பட வேண்டும். தமிழுக்குரிய தலைமைநிலையைத் தந்து உண்மையான வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.
மொழிப்போர் ஈகியர்களே! உங்கள் கனவுகளை நனவாக்குவோம்!
பாருள்ளளவும் பைந்தமிழும் இருக்கும். பைந்தமிழ் உள்ளளவும் உங்கள் புகழும் நிலைத்து நிற்கும். உங்கள் எண்ணங்களும் நினைவுகளும் எங்களை என்றென்றும் வழி நடத்தட்டும்!
வீர வணக்கத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல தை 11, 2051 / 25.01.2020

Thursday, January 16, 2020

தமிழர் திருநாளே பொங்கல் திருநாள்..! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

தமிழர் திருநாளே பொங்கல் திருநாள்..! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

தமிழர் திருநாளே பொங்கல் திருநாள்!

பொங்கல் கொண்டாட்டம் குறித்த தொன்மையான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் பொங்கல் தொடர்பான குறிப்புகளைக் காணலாம். தைப் பொங்கலன்று ஆற்றில் குளித்து மகிழ்வதைத் தைந்நீராடல் என்பர். கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பெற்ற பரிபாடல் இலக்கியத்தில் நன்னாகனார் இசையில் ஆசிரியன் நல்லந்துவனார் எழுதிய பாடலில் தைந்நீராடல் குறிக்கப் பெறுகிறது.
தாய் அருகா நின்று தவ தைந்  நீராடுதல் – பரிபாடல் 11/91
நீ தக்காய் தைந் நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரிபாடல் 11/115
இன்ன பண்பின் நின் தைந் நீராடல் – பரிபாடல் 11/134
தைந்நீராடுவதை உவமை போல் கபிலர், கலித்தொகையில்(59)
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?
எனக் கேட்கிறார்.
ஆண்டின் இறுதி நாளான மார்கழித் திங்கள் இறுதி நாளன்று – பொங்கலுக்கு முதல் நாள் – கொண்டாடுவது போகி. புதியனவற்றை வரவேற்பதற்காகப் பழையனவற்றைப் போக்கும் நாள் ‘போக்கி.  ‘போக்கி’ என்பதே சுருங்கிப் போகியாயிற்று. பழைய பொருள்களை மட்டுமல், பழைய கசப்பான எண்ணங்களையும் பகை உணர்வுகளையும் எறிவதற்கான நாள் இது.
தை முதல் நாள் கொண்டாடுவதே தைப்பொங்கல். இதனை மணப்பொங்கல் என்பர். மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபடுவதைக் காண்கிறோம். இவ்வாறான பல்வேறு நாள் பொங்கலுடன் வேறுபடுத்திச் சிறப்பிக்க இவ்வாறு கூறுகின்றனர். நாட்டின் சில பகுதிகளில் முப்போகமும் சில பகுதிகளில் இருபோகமும் இருக்கும். ஆனால், எல்லாப்பகுதிகளிலும் ஒரு போகம் இருக்கும். அதன் அறுவடைதான் தையில் நடைபெறுகிறது. எனவேதான் தைத்திங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இடையில் ஏற்பட்ட பொருள் பற்றாக்குறை தொடர்பான இன்னல்கள் நீங்கி மகிழ்வு தொடங்கும் காலம் என்பதால் மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர். எனவேதான் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்கின்றனர். இதற்குச் சமயப் பரப்புரையாளர்கள் – அறுவடைக்குப்பின்னர் வயலில் நடக்க வழி பிறக்கும் எனத் – தரும் விளக்கம் சரியில்லை.
 மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் காண்பொங்கல் அல்லது காணும் பொங்கல். ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் உசாவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வர். பணியாளர்கள் தங்கள் முதலாளிகளைச் சந்தித்துப் பரிசுகள் பெறுவர். சிலர் இதனைத் தவறாகக் கன்றுப்  பொங்கல் என்கின்றனர். மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவதால் தனியாகக் கன்றுப் பொங்கல் எனக் கொண்டாடும் தேவை இல்லை அல்லவா?
 மாட்டுப்பொங்கல் மறுநாளன்று – காணும் பொங்கல் நாளில் – கன்னிப்பொங்கல் / கன்னிமார்பொங்கல் / கனுப் பொங்கல் / பூப்பொங்கல் என என வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுவர். இதனைத் தை முதல் நாளன்று பொங்கலின் பொழுதும் சில பகுதிகளில் கொண்டாடுவர் அல்லது மறுநாளோ தைத்திங்களில் பிறிதொருநாள் விளையாடியோ கொண்டாடுவர். சிறுமியர் குப்பி எரு எனப்படும் எருவைக்கொண்டு பொங்கல் சமைத்து விளையாடுவதால் இதனைக் குப்பிப் பொங்கல் / கொப்பிப்பொங்கல் / குப்பிராட்டிப்பொங்கல் என்றும் கூறுவர். மணல் வீடுகட்டி அல்லது பொம்மை வீட்டில் சிறுமியர் பொங்கல் வைப்பதால் சிறுவீட்டுப்பொங்கல்  எனவும் சொல்வர்.
 சலவையாளர்கள் துணி துவைக்கும் துறைகளில் நடத்தும் பொங்கலைத் துறைப்பொங்கல் என்கின்றனர். திருமணமான நான்காம் நாள் தாய்மாமன் செலவில் மணமகளுக்கு மட்டும் ஊர்வலம் நடத்திப் பொங்கல் இடுவதைத் தோழிப் பொங்கல் என்கின்றனர்.
மாட்டுச்சந்தையில் இடும் பொங்கலைப் பட்டிப்பொங்கல் என்கின்றனர். பொங்கலன்று மிகுதியாகப் பொங்கினால் மங்கல அறிகுறியாக எண்ணி நிறைப்பொங்கல் என்பர். சிற்றூர்த் தேவதைக்கு ஊரார் இடும் பொங்கல் பெரும்பொங்கல் எனப்படும்.
பொங்கலன்று பெற்றோர் பெண்ணுக்குத் தரும் பரிசும் பெரியோர்க்குச் செலுத்தும் காணிக்கையும் பொங்கல் வரிசை எனப்படுகிறது.
 சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கல் ஏதும் மதச் சார்புடையதா?
 இசுலாம் மதம் தோன்றும் முன்னரே, அதற்கு முன்பிருந்த கிறித்துவ மதம் தோன்றும் முன்னரே கொண்டாடப்படுவது பொங்கல் விழா. எனவே, இந்த மதங்களைச் சார்ந்தது அல்ல அது.
அப்படியானால் இந்து மதவிழா என்று சொல்லலாமா?
இறை நெறியும் மத நெறியும் ஒன்றல்ல. எனவேதான், இறையன்பர் அருட்திரு இராமலிங்க வள்ளலார்,
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
என்றார்.
தமிழர்களின் இறைநெறி என்பது இயற்கை சார்ந்தது.
 இந்து மதம் என்ற ஒன்று உருவாகும் முன்னர் இருந்தே சிறந்திருக்கும் இயற்கை சார்ந்த பொங்கல் விழாவை எங்ஙனம் இந்துமதப்பண்டிகை எனக் கூற இயலும்?
பரந்து இருக்கும் கடலோரம் வாழும் மக்கள் பரதவர் எனப்பட்டனர். பெரும்பகுதி கடலால் சூழ்ந்த நம் நாடு பரதக் கண்டம் எனப்பட்டது.  ஆங்கிலேயர் வந்த பின் வந்த பெயரே இந்தியா என்பது. அதுபோல் நம் நாட்டில் இருந்த சமயங்களைச் சேர்த்து இந்து மதம் என்றனர். அவ்வாறு சொல்லும் பொழுது பெரும்பகுதி ஆரியக் கருத்துகளும் ஆரியக் கதைகளும் திணிக்கப்பட்டன. அவ்வாறு திணிக்கப்பட்ட ஆரியம் மக்களை நான்கு வகையாகப் பிரித்தது. அதில் உழுபவன் சூத்திரன் எனப்பட்டுக் கடை நிலையில் வைக்கப்பட்டான். அவன் உயர்வுகளும் சிறப்புகளும் மறுக்கப்பட்டன. இவற்றுக்குக் காரணமான ஆரிய வேதங்கள் பயிர்த்தொழிலையும் பயிர்த்தொழிலாளர்களையும் இழிவு படுத்துவன. ஆனால், தமிழர்களின் பொங்கல் விழா என்பது உழுதொழிலையும் உழவர்களையும் போற்றும் பெருநெறி விழா. அவ்வாறிருக்க இதனை இந்து மத விழா என்பது எப்படிச் சரியாகும்?
 “பிராமணர், சத்திரியர் உழவுத் தொழில் செய்யலாகாது… … பூமியையும் பூமியில் வாழும் சிற்றுயிர்களையும் கலப்பை, மண்வெட்டியால் கொல்ல நேர்கிறது” என்கிறது மநு (11.52) இதையேதான் வேளாண்மை முதலிய கடமைகளில் இம்சை முதலான குறைகள் காணப்படுகின்றன எனக் கீதையும் கூறுகிறது. வேள்வியில் உயிர்களைக் கொல்பவர்கள்தாம் இங்ஙனம் கூறுகிறார்கள்.
இவ்வாறு உழுதொழிலை இழிவாகவும் அத்  தொழிலைச் செய்பவனைச் சூத்திரன் எனக் கூறி இழிவானவனாகவும் ஆரிய நூல்கள் கூறுகின்றன. அத்தகைய இழிவானவன் பெயரில் அவர்கள் விழா எடுப்பார்களா? ஆனால், தமிழர்கள் உழவையும் உழவர்களையும் உயர்வாக மதித்தார்கள். எனவேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர், “உழந்தும் உழவே தலை”, “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என உழவே தலைமையான தொழில் என்றார். உழவர்களைத் தொழுதே மற்றவர்கள் செல்கின்றனர் என்றார்.
 இவ்வாறு உழவர்களை மதிக்கும் தமிழ் மக்கள் உழவர் திருநாள் என்று கொண்டாடுகின்றனர். உழவை மதிக்கும் தமிழின விழாவை உழவை மதிக்காத இந்து மத விழாவாக எங்ஙனம்  கூற முடியும்? மதத்தோற்றங்களுக்கு முன்பிருந்தே கொண்டாடப்படும் இன விழாவே பொங்கல் விழா என்பதை உணர வேண்டும்.
கடந்த நூற்றாண்டில், தேசியக் கட்சிகளில் இருந்த தமிழ் உணர்வாளர்களாலும் திராவிட உணர்வாளர்கள், தமிழ் உணர்வாளர்களாலும்  பொங்கல் விழா கொண்டாடுவது ஓர் எழுச்சியாக மாறியது. சமய வேறுபாடின்றி அனைத்துத் தரப்பாரும் பொங்கல் விழாவைக் கொண்டாடினர். தனித்தனிக் குடும்ப விழாவாக இலலாமல், மன்பதை விழாவாகத் தமிழ் அமைப்பினரும் பிற அமைப்பினரும் கொண்டாடத் தொடங்கினர். அதற்கு முன்பு சிற்றூர்களில் சல்லிக்கட்டு, காணும் பொங்கல் போன்றவற்றால் ஊர் விழாவாக இருந்த பொங்கல் விழா நகர விழாவாகவும் மாறியது.   எல்லாச் சமயத்தவராலும் தமிழின விழாவாகக் கொண்டாடப்பட்டுச் சிறப்பெய்திய பொங்கல் விழா மெல்ல மெல்ல இந்துக்கள் தவிர  பிற சமயத்தவரால் கடவுள் நம்பிக்கை அடிப்படையில் புறக்கணிக்கப்படலாயிற்று. இந்துக் கடவுளுக்குப் படைத்த பொங்கலைத் தாங்கள் உண்பதா என்றும் ஒரே இறை வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட நாம் பிற சமயக் கடவுளுக்குப் படைத்த பொங்கலை ஏற்பதா என்றும் எண்ணத் தொடங்கி விட்டனர்.
இலக்கிய அமைப்புகள் மூலம் தமிழ்த்தொண்டாற்றிவரும் பிற சமயத்தவர், சிறப்பாகப் பொங்கல் விழாவை உணர்வுடன்தான் கொண்டாடுகின்றனர். கட்சி அமைப்பினர் கொண்டாடும் பொதுவிழாவாகிய தமிழர் திருநாளிலும் சமய வேறுபாடின்றிக் கலந்து கொள்கின்றனர். ஆனால், குடும்பம் என்று வரும் பொழுது வேறு நிலை எடுக்கின்றனர். இந்துக் கோயில்களில் பொங்கலை முன்னிட்டு வழிபாடுகளும் சிறப்புப் பூசைகளும் நடை பெற்று வருகின்றன. இதனால் இந்து விழாவாக இப்பொழுது கருதப்படும் நிலை வந்து விட்டது.
 மணிமேகலையில் 10 மதவாதிகள் பற்றிய குறிப்பு வருகிறது. அதில் இந்து மதம் இல்லை. இந்து மதம் என்பதே பிற்காலத்திய  கூட்டாக்கம்தான். இந்து மதம் இல்லாக் காலத்திலிருந்தே தமிழர் விழாவாக இருந்து வரும் பொங்கல் விழாவை மத விழாவாகக் கருதுவது தவறு என்பதை அனைவரும் உணர வேண்டும். தாங்கள் தமிழர்கள் என்பதை மறவாது தமிழ் நாட்டவரும் உலகத் தமிழர்களும் தமிழர் திருநாளைக் கொண்டாட வேண்டும்.
எனவே, இந்து என்ற பெயர் சூட்டலுக்கு உள்ளானவர்களும் பிற சமயம் சார்ந்த தமிழ் நாட்டினரும் பொங்கல்  விழாவை இனவிழாவாகவும் பொது விழாவாகவும் பண்பாட்டு ஒற்றுமைக்கும் சமய நல்லிணத்திற்கும் ஏற்ற விழாவாகவும் கருதிச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 17.01.2020

Tuesday, January 7, 2020

திருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

 திருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும்
பழமொழிகள் சில மூலப் பொருள்களிலிருந்து விலகி இன்றைக்குத் தனியான தவறான பொருள்களில் வழக்கத்தில் உள்ளன. அவற்றுள் ஒரு பழமொழியே “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” என்பது. இதனைப் பேச்சு வழக்கில் “ஆத்துல போட்டாலும் அளந்து போடு” என்றும் பெருவாரியாகக் கூறுகின்றனர். உண்மையில் இது பழ மொழி அல்ல. திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றின் சிதைந்த வடிவமே ஆகும். அதனைப் பார்ப்போம்.
முதலில் நாம் பழமொழிக்கான விளக்கங்களைக் காண்போம்.
“இந்தப் பழமொழி நாம் வாழ்வில் கைக்கொள்ள வேண்டிய நல்ல கருத்தொன்றை வலியுறுத்துகிறது. நாம் எதைச் செய்தாலும் அளவறிந்து செய்ய வேண்டும். சிக்கனமாக இருக்க வேண்டும். வீண் செலவு செய்யக்கூடாது என்ற பொருளினை இப் பழமொழி கூறுகிறது என்பர்.” இவ்வாறு அவினாசி குழந்தைகள் உலகம் வலைப்பூவில் < https://avinashikidsworld.blogspot.com/ > தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, “மேலும்  இதில், மற்றொன்று வேறு வகையானது. ஆற்றில் கொண்டுபோய் விட்ட பிறகும் கூட நம் மனம் சும்மா இராது. இவ்வளவு பொருட்கள் தேவையில்லாமல் இவ்வளவு காலம் நம்மிடம் ஏன் இருந்தன? என்ற எண்ணம் ஏற்படும். இவற்றின் விளைவு தான் என்ன? நாம் எதைச் செய்தாலும் நிதானித்து, ஆர அமரச் சிந்தித்து, கணக்கிட்டுச் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இப் பழமொழி நமக்குக் கற்பிக்கிறது. தேவையற்ற பொருள்களைக் கழிக்கும் போது கூட, சிந்தித்துத்தான் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவாக, இதில் பின் வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
“இப் பழமொழிக்குத் தற்காலத்தில் புதியதோர் கருத்தும் கூறப்படுகிறது. ஆற்றில் போடுவது என்பதே தவறு. இதில் அளந்து போட்டால் என்ன? அளக்காமல் போட்டால் என்ன? எதுவும் நேர்ந்து விடாது. எனவே நம்முன்னோர் இப் பழமொழியை முற்கூறிய கருத்தில் கூறவில்லை. அகத்தில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பதே இதன் உண்மையான வடிவமாதல் வேண்டும். அகத்தில் (வயிற்றுக்கு) போட்டாலும் (சாப்பிட்டாலும்) அளந்து போட வேண்டும் (சரியான அளவு சாப்பிட வேண்டும்). அளவுக்கு அதிகமாக உண்ணுதல் கூடாது. அளவுக்கு அதிகமாக (அளந்து உண்ணாமல்) உண்பதே பல வித நோய்கள் தோன்றுவதற்குக் காரணமாயமைகின்றதெனக் கூறப்படுகிறது. ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழியும் அளந்துண்ண வேண்டியதன் அவசியத்தையே வலியுறுத்துகின்றது எனலாம். சுருங்கக் கூறின் எச்செயலைச் செய்யும் போதும் நிதானித்து, கணக்கிட்டுச் செய்யும் பழக்கம் நமக்கு ஏற்பட வேண்டும் என்பதையே இப் பழமொழி வலியுறுத்துகிறது எனலாம்.”
மனதோடு மனதாய் < http://manthodumanathai.blogspot.com/2008/08/blog-post.html  > என்னும் வலைப்பூவில்
“. . . .  அவாள்கள் பாசையில் ஆத்துல – வீட்டுல இதன் படி வீட்டுக்கே — குடும்பத்துக்கே – செலவு செய்தாலும் கணக்கிட்டுச் செய்ய வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்வருமாறு, நாகராச சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ என்கிற அமாவாசை என்னும் முகநூல் பக்கத்தில் < https://www.facebook.com/NakarajacolanMamlaEnkiraAmavacai/posts/461153967321913/ >  17.08.2013 இல் பதியப்பட்ட ஒன்று, பெண்மை வலைப்பூவில் , https://www.penmai.com/ > 12.08.2015 இல் பகிரப்பட்டது.(மூலப்பதிவு வேறாக இருக்கும்.)
“. . . .  இந்தப் பழமொழியில் நம் உடல் நலம் குறித்த இரகசியம் அடங்கி உள்ளது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? பழமொழியின் உண்மையான பொருள். “அகத்தில் போட்டாலும் அளந்து போடு…” இது, காலப்போக்கில் “ஆத்தில் போட்டாலும் அளந்து போடு” என்றானது. அதை நம் மக்கள் அழகு தமிழில் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” என்று எழுதினார்கள்.
‘அகம்’ என்பது நம் உடலைத் தான் குறிக்கிறது. நம் உடலுக்குள் நாம் போடும் உணவைக் கூட அளந்து தான் போட வேண்டும் என்பதைத் தான் இந்த பழமொழி நமக்கு உணர்த்துகிறது.
“அகத்தில் போட்டாலும் அளந்து போடு…!”  இவ்வாறு பழமொழியின் உண்மை வடிவமாக வேறொன்றைக் கூறுகிறது.
“ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு; குப்பையிலே போட்டாலும் குறிப்பேட்டில் பதிந்து போடு.”  இப்படியும் ஒரு விளக்கம் உள்ளது.
வலைத்தமிழ் பக்கத்திலும் தமிழ்இலக்கியம் வலைப்பூவிலும் இடம் பெற்ற மற்றொரு கருத்து; மேற்கூறியவாறான இரண்டையும் மறுத்துப் பின்வருமாறு விளக்குகின்றன.
“இப்பழமொழியில் வரும் ‘ஆத்துல’ என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ்வடிவம் ‘அகத்தில்’ என்பதாகும். அகம் என்ற சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டெனினும் இப்பழமொழியில் வரும் பொருள் ‘மனம் அல்லது நினைவு’ என்பதாகும். அகத்தில் போடுதல் என்பது நினைவில் வைத்தலாகும். ‘அளந்து’ என்ற சொல்லில் எழுத்துப் பிழை உள்ளது. இது ‘அறிந்து’ என்று வரவேண்டும். இவையே இப்பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும். தொடர்ந்து இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுப் பின்வருமாறு முடிகிறது.
“இப்பழமொழியின் திரிபு வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அகத்தில் -> அகத்தில -> அகத்துல -> ஆத்துல
சரியான பழமொழி: அகத்தில் போட்டாலும் அறிந்து போடவேண்டும்.”
தமிழ்ச்சுரபி வலைப்பூ,  மருவிய பழமொழிகள் < http://lifeoftamil.com/transformed-proverbs-1/   முதலான சிலவற்றில் இதன் இறுதி விளக்கம் மட்டும் எடுத்தாளப்பட்டுள்ளது.
பொதுவாகத் தொன்மைக் கதைப்பொழிவு ஆற்றுவோர் நல்ல தமிழ்ப் பழமொழிகளையும் கருத்துகளையும் அறிவார்ந்து சொல்வதாகக் கருதித் தப்பும் தவறுமாக விளக்குவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளார்கள். புரியாத கருத்துகளாயின் மேலும் சிறப்பாகத் தவறாக விளக்குவார்கள். இப்பொழுது இணையத்தளம் கையில் சிக்கிவிட்டதால் தடி எடுத்தவன் தண்டல்காரனாக ஆளாளுக்குத் தம் விருப்பம்போல் எழுதுவோர் பெருகி விட்டனர். எனவேதான், இப்பழமொழி குறித்தும் வெவ்வேறான தவறான விளக்கங்கள்.
இவை தவறு என்றால் எது சரி என்கிறீர்களா? இப்பழமொழி அமையக்காரணமாக இருந்த திருக்குறள்தான்!
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி
(திருவள்ளுவர், திருக்குறள், 477)
இக்குறள்தான் மக்கள் வழக்கில் தவறாக இடம் பெற்றுப் பழமொழியாக மாறிவிட்டது.
 மணக்குடவர், “பொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க; பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி அதுவாதலால்.” என்கிறார். பரிமேலழகர். “ஆற்றின் அளவு அறிந்து ஈக – ஈயும் நெறியாலே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக, அது பொருள்போற்றி வழங்கும் நெறி – அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம்” என விளக்குகிறார்.
காலிங்கர், “பொருள் வரலாற்றினது சிறுமை பெருமை அளவு அறிந்து அதற்குத் தக்காங்கு அரசர் யாவர்க்கும் ஈந்து ஒழுக;” என்கிறார். பரிதி. “ஏற்பவர் தமக்கு உதவுவாரா மாட்டாரா என் அறிந்து கொடுக்க” என உரைத்தார். பரிப்பெருமாளும் காலிங்கரும் ‘வருவாய் அளவறிந்து ஈந்து ஒழுகுக’ என்று பொருள் கூறினர். தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், “தனக்குப் பொருள் வரும் வழியினை அறிந்து அதற்கு ஏற்பக் கொடுத்தல் வேண்டும். அங்ஙனம்  கொடுத்தலே பொருளைக் காத்துக் கொண்டு கொடுத்து வாழும் நெறியாகும்” என்கிறார்.
தமிழ் மக்கள் கொடை மடம் மிக்கவர்கள். முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னன் போல், மயிலுக்குப் போர்வை அணிவித்த பேகன் மன்னன்போல் கொடுக்க எண்ணும் பொழுது அறச்சிந்தனையில் மட்டும் கருத்து செலுத்திப், பொருள் இருப்பு குறித்துக் கவலைப்படுவதில்லை. யாருக்கு, எதற்குக் கொடுக்கிறோம் என்றும் பொருட்படுத்துவதில்லை. ஆள்வோர் இவ்வாறு இருந்தால் அஃது அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்கள் ஆளும் நாட்டிற்கும் தீதாகும். எனவேதான் இக்குறளைத் திருவள்ளுவர் எழுதினார்.
திருவள்ளுவர் பொருள் வரும் வழி அறிந்து அதற்கேற்பக் கொடுப்பதை வரையறுத்துக் கொள்ளுமாறு தெரிவிப்பதாக அனைவரும் தெரிவித்துள்ளனர்.  யாருக்கு, எதற்குக்கொடுக்க வேண்டும் என ஆய்ந்தறிந்து அதற்கேற்பவும் கொடுக்குமாறு வலியுறுத்துகிறார். பொருத்தமில்லாதவர்க்கு, உண்மைத் தேவையில்லாதவர்க்கு, வேண்டப்படும் அளவிற்கு மிகையாக, வாரி வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்குவது வழங்கப்படுபவர்க்கும் நன்றன்று. ஆதலின் கொடுக்க வேண்டிய அளவை உணர்ந்து வழங்க வேண்டும் என்கிறார்.
சரி. இதற்கும் பழமொழிக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? பொறுங்கள். பார்ப்போம்.
ஆறு என்பதற்கு, வழி, வழிவகை, அறம், பயன், இயல்பு எனப் பல பொருள்கள் உள்ளன. எல்லாப் பொருள்களும் இக்குறளில் பொருந்துகின்றன. கொடுக்கும் வழியை, வழிவகையை, அறத்தின் தன்மையை, பயனை, இயல்பை அறிந்து தக்கவர்க்குத் தக்க அளவில் வழங்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
எனவே, பொருள் வரும் வழியையும் இருக்கும் அளவையும் உணர்ந்து கொடுக்க வேண்டிய வழிவகையையும் உணர்ந்து கொடுக்க வேண்டும் என்னும் நிதி மேலாண்மையை விளக்கும் குறளில் ‘ஆறு’ என்பதை நீரோடும் ஆறாகப் பிற்காலத்தில் தவறாகப் புரிந்து கொண்டனர். எனவே, ஆற்றில் அளவோடு போடவேண்டும் எனப் பொருத்தமில்லாக் கருத்தை உருவாக்கிக் கொண்டனர். எனவே, ‘போட்டாலும்’ என்பதைச் சேர்த்து ஆற்றில் போட்டாலும் என்று தொடங்கி ‘அளவறிந்து ஈக’ என்பதன் பொருளாக ‘அளந்து கொடு’ என்று சொல்லாமல், முன்சொல்லிற்கு ஏற்ப ‘அளந்து போடு’ என்று சொல்லி விட்டனர்.
“ஆற்றின் அளவறிந்து கொடு!” என்னும் பொருளே திரிந்து வழங்குவதை உணர்வோம்! திருக்குறளைப் போற்றுவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
செருமனியில் திருவள்ளுவர் விழா & ஐரோப்பிய தமிழர்கள் நாள்
சிறப்பு மலர், திசம்பர் 04, 2019. பக்கங்கள் 62-64

Followers

Blog Archive