Thursday, January 14, 2021

உலகெங்கும் பொங்கல் திருவிழா! – இலக்குவனார் திருவள்ளுவன்

     15 January 2021      No Comment




உலகெங்கும் பொங்கல் திருவிழா! 

தமிழர் திருநாள் என நாம் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். பொங்கல் திருவிழா கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி கூறும் விழா. உழைப்பாளிகளை மகிழ்விக்கும் விழா. அறுவடைத் திருநாளான இவ்விழா உலகெங்கும் பல நாடுகளில் பல்வேறு நாள்களில் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்கா, கனடா,  ஆகிய நாடுகளில் நன்றி தெரிவிக்கும் விழா அட்டோபர் – நவம்பரில் கொண்டாடப்படுகிறது. பிரிட்டனில் செட்டம்பர் முழுநிலவு நாளை ஒட்டிய ஞாயிற்றுக்கிழமை அன்று அறுவடை விழா கொண்டாடப்படுகிறது.

இலையுதிர் இடைக்காலத் திருவிழா அல்லது இடை-இலையுதிர்காலக் கொண்டாட்டம் (Mid-Autumn Festival) என்பது சீனா, வியத்துநாம், தைவான் ஆகிய நாடுகளில் அவர்களது நாட்காட்டியின்படியான எட்டாம் மாதம் முழுநிலவன்று கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகும்.

எபிரேயர்களின் நாட்காட்டியின்படி 7 ஆம் மாதம் – செட்டம்பரின் கடைசி முதல் அட்டோபர் கடைசி வரை – கூடாரத் திருவிழா (Sukkot)/ குடில்கள் விழா (Feast of Tabernacle) எனக் கொண்டாடப்படும் விழாவை அறுவடை விழா என்றே அழைக்கின்றனர்.

மலேசியாவில் உள்ள சரவாக்கு (Sarawak) மாநிலத்திலும் இந்தோநேசியாவில் உள்ள மேற்கு கலிமந்தன் மாகாணத்திலும் (West Kalimantan) உள்ள தயாகர் (Dayak) மக்களால் கொண்டாடப்படும் தயாகர் கயவாய் (Gawai Dayak) விழா மே 31, சூன் 1 ஆகிய நாள்கள் கொண்டாடப்படுகின்றன. இதனை அறுவடைக்கான நன்றியறிவிப்பு விழா என்கின்றனர்.

மலேசியாவில் உள்ள சபா மாநிலத்தில் (state of Sabah) மேத் திங்கள் நடைபெறும் காமடன் (Kaamatan) அல்லது பெசுட்டா காமடன் (Pesta Kaamatan) என்பது அறுவடைத் திருவிழாவாகும்.

கடையவன் விழா (Kadayawan Festival) என்பது பிலிப்பைன்சில் உள்ள தாவோ (Davao) மாநிலத்தில் கொண்டாடப்படும் அறுவடைக்காக இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகும்.

மியான்மியரில் இயோமி (Zomi) மக்களால் கொண்டாடப்படும் கெளதோ (Khuado) விழா என்பது அட்டோபரில் நடைபெறும் அறுவடைத் திருவிழாவாகும். மேப்பூக்கள் விழா (Flores de Mayo) என்பது மேத்திங்கள் பிலிப்பைனில் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகும்.

மெகிரெகன் (Mehregān) அல்லது மித்திரா (Mithra) திருவிழா என்பது பெருசியர்களின் அறுவடைத் திருவிழாவாகும். மெஃகர் திங்களில் (Mehr month) மெஃகர் நாளில் (Mehr day) நடைபெறும் அறுவடையை ஒட்டி இவ்விழா கொண்டாடப்படுகிறது. நடைமுறை ஆண்டில் இது 196ஆவது நாளாக அமைகிறது.

நைசீரியாவிலும் மேற்கு ஆப்பிரிக்காவிலும் வாழும் பழங்குடி மக்கள் இயரபா (Yaraba) அல்லது இயொருபா (Yoruba) எனப்படுகின்றனர். இவர்களின் மொழியில் அறுவடை என்பது இக்கோர் (Ikore) எனப்படுகிறது. அறுவடை நாளை இக்கோர் விழா எனக் கொண்டாடுகின்றனர்.

கானாவில் உள்ள மக்களால் மேத்திங்கள் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழா ஓமோவோ (Homowo) எனப்படுகிறது. கா (Ga) மொழியில் Homo  என்றால் பசி என்றும் wo என்றால் துரத்து என்றும் பொருள். அறுவடையின் பயன் பசியை விரட்டுவதுதானே!

முன்பு சுவாசிலாந்து (Swaziland) என அழைக்கப்பெற்ற எசுவாத்தினி (Eswatini) நாட்டினர் கோடைக்காலத்தில் கதிரவனைப் போற்றிக் கொண்டாடும் முதல் விளைச்சல் விழா இனக்குவாலா (Incwala) எனப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்காவில், குறிப்பாக நைசீரியாவிலும் கானாவிலும், ஈபோ (Igbo) மக்களால் ஆகத்துத் தொடக்கத்தில் கொண்டாடப்படுவது புது இனிப்புருளை விழா (New Yam Festival). யாம் என்பதை இனிப்பு உருளைக்கிழங்கு எனலாம். அறுவடையின் முடிவையும் அடுத்த பயிரிடலுக்குத் தொடக்கத்தையும் சிறப்பிக்கும் வகையில் இந்த  இனிப்புருளை விழா கொண்டாடப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள பழங்குடி இனங்களுள் ஒன்றாகிய இயூலு (Zulu) மக்களால் திசம்பரில் கொண்டாடப்படுவது அறுவடைத் திருவிழாவாகிய சுரைக்காய் விழாவாகும் (உம்கோசி வோக்குவேசுவமா – Umkhosi Wokweshwama). இப்பொழுது இதனை உம்கோசி ஓசெல்வா (Umkhosi Woselwa) என்கின்றனர். முதலில் விளைந்த கனியை இறைவனுக்குப் படைப்பது இதன் சிறப்பியல்பாகும்.

கொரியாவில் சூசெயோக்கு (Chuseok) என அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். அங்காவி (hangawi) எனவும் இதனை அழைக்கின்றனர். வட கொரியாவிலும் தென் கொரியாவிலும் இதனை 3 நாள் விடுமுறை அளித்துச் சிறப்பு விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

தங்கமயேங்கு (Dongmaeng) என்பது கொரியாவில் கூதிர்ப்பருவத்தில் கொண்டாடப்படும் உழவர்களின் பழமையான நன்றி அறிவிப்பு விழாவாகும். நீநமே சாய் (Niiname-sai) அல்லது சிஞ்சோ சாய் (Shinjō-sai) / நீநமேனொ மத்தூரி (Niiname-no-Matsuri) என்று அழைக்கப்படுவது சப்பானியர்கள் கொண்டாடும் அறுவடையின் பொழுதான நன்றி அறிவிப்பு விழா.

முன்பு 11 ஆவது மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்பட்ட இந்த விழா இப்பொழுது நவம்பர் 23 என வரையறுக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. இது தேசிய விடுமுறை நாளாகும்.

துருக்குமெனித்தானில் நவம்பர் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் அசில் தாய் (Hasyl toýy), இசுரேலில் கவ்வெளட்டு (Shavuot), சியார்சியாவில் அலெவெரதோபா (Alaverdoba), இரத்துவெளி (Rtveli), பெலரெசு குடியரசில் (Republic of Belarus) பெகாச்சு (Bagach), சுவிட்சர்லாந்தில் பிரான்சு பேசுவோரிடையே பேனிக்கோன் (Bénichon), நெதர்லாந்தில் நவம்பர் முதல் புதன்கிழமை, பயிருக்கும் உழைப்பிற்கும் நன்றி தெரிவிக்கும் விழா (தனக்கடகு ஊர் இயீவாசு என் அருபெயிடு-Dankdag voor Gewas en Arbeid)  என அறுவடை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

மேலும், போலந்து, உக்கிரெயின், உருசியா, செருமனி, ஆத்திரியா, உருதென்பச்சு (Urdenbach), அல்பேனியா, ஐசுலாந்து, ஐக்கிய இங்கிலாந்து எனப் பல நாடுகளிலும் அறுவடை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

இவ்வாறு உலகெங்கும் அறுவடைத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காரணம் என்னவாக இருக்கும்? உலகம் நிலப்பெயர்வுகளுக்கும் கடல்கோளுக்கும் முன்னர் ஒன்றாகத்தான் இருந்துள்ளது. அதன் பின்னர்தான் இயற்கை அழிவுகளால் சிதறிப்போனது. அவ்வாறு ஒன்றாக இருந்த தொன்மக்கள் கொண்டாடிய அறுவடை விழா, சிதறிய பின்னரும் எச்சமாக அந்தந்த நிலப்பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர் தாய் நிலமான இந்தியத் துணைக்கண்டத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதுபோல் தமிழர் நிலமான இலங்கையிலும் ஈழத்திலும் தமிழர்கள் வாழும் மலேசியா, சிங்கப்பூர், மொரிசியசு, இரீயூனியன், கனடா, ஆத்திரேலியா, முதலிய பல நாடுகளிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தமிழர்களின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடடுக்கூறுகளில் நெருங்கிய தொடர்புடைய இந்தோநேசியா, சப்பான், சீனா, கொரியா, முதலான ஆசிய நாடுகளிலும் பொங்கல் வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

சுரபி (அச்சயதிருதி அல்லது அகுதி அல்லது அகு தீசு எனப்படும்) விழா சித்திரைத் திங்களில் வட மாநிலங்களில் – குறிப்பாக – குசராத்து, மகாராட்டிரம், மத்தியபிரதேசம், இராசசுதான், கோவா, கொங்கன் ஆகிய மாநிலங்களில் இந்துக்களாலும் சமணர்களாலும் கொண்டாடப்படுகிறது.

உலோகரி (Lohri) பஞ்சாபு, தை 13 அன்று அரியானாவில் கொண்டாடப்படும் (கோதுமை) அறுவடைத் திருவிழா.

மாக பிகு (போகலி பிகு /Magh Bihu or Bhogali Bihu) தை 14, 15-இல் அசாமில் கொண்டாடப்படும் நெல் அறுவடைத் திருவிழா. தை மாதம் அசாம் நாட்காட்டியில் மாக (Magh) எனப்படுகிறது. எனவே, இதுவும் தைத்திங்கள் விழாதான்.

நெளகாய் (Nuakhai) அல்லது நெளகாய் பரபு (Nuakhai Parab) அல்லது நெளகாய் பெடகட்டு (Nuakhai Bhetghat) என்பது அசாமில் கொண்டாடப்படும் வேளாண் திருவிழாவாகும். அசாம் நாட்காட்டியின் படியான பத்தரபடா/பத்திரபா (Bhadrapada/Bhadraba) மாதங்களில் அஃதாவது ஆகத்து-செட்டம்பரில் நடைபெறும் விழாவாகும்.

வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக மணிப்பூர் மாநிலத்திலும் குக்கி-சின்-மிசோ (Kuki-Chin-Mizo) குழுவினரிடையேயும் நவம்பர் முதல் நாளன்று கொண்டாடப்படும் அறுவடை விழாவே குடு (Kut) விழாவாகும்.

கருநாடகாவிலும் கேரளாவிலும் உள்ள துளுவ மக்கள் கொண்டாடும் அறுவடை விழா தீபொலி  பரபா (Deepoli Parba).  அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள அபதனி (Apatanis) மக்களால் சூலை 4 முதல் 7 வரை கொண்டாடப்படும் அறுவடை விழா திரி (Dree) எனப்படுகிறது.

மகாராட்டிரா, கருநாடகா, கோவா மாநிலங்களில் உள்ள மராத்தி மக்களால் சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படுவது குடி படவா என்னும் வேளாண் விழா. இப்பொழுது இதைத் தீபாவளிபோல் கொண்டாடுகின்றனர்.

வங்காளத்தில் நபன்னா (Nabanna), கேரளாவில் ஓணம், ஆந்திரம், தெலுங்கானா, கருநாடகாவில் உகாதி, கேரளா, கருநாடகாவில் விசு, மும்பையில் அகெரா (Agera – நன்றி கூறும் ஞாயிற்று விழா), கா பொம்பலாங்கு நாங்கிரீம் (Ka Pomblang Nongkrem) ஆகியன, மேகாலயாவிலும் அசாமிலும் வங்கலா (Wangala), அரியானா, பஞ்சாபில் பசந்து பஞ்சமி (Basant Panchami), இலடாக்கு (Ladakh), இயன்சுகார் (Zanskar), கார்கில் (Kargil) ஆகிய பகுதிளில் இலடாக்கு அறுவடை விழா, பஞ்சாபு, அரியானாவில் பைசாக்கி (Baisakhi) என இந்தியாவெங்கும் அரியானா அறுவடைத் திருவிழா வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன.

முந்தைய நாவலந்தீவாகிய இன்றைய இந்தியாவில் முன்னர் தமிழ் மக்களே பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்தமையால் அறுவடை விழா  இந்நிலப்பகுதி எங்கும் உள்ளது.  எனினும் காலப்போக்கில் அந்நதந்த மாநில அறுவடைக் காலத்திற்கேற்ப அறுவடை விழா  நாள் மாறியுள்ளது. எனவே, பொங்கலின் தாய்நிலம் தமிழ் நிலம் எனலாம்.

இலக்குவனார் திருவள்ளுவன்

தாய் மின்னிதழ் 15.01.2021 10 : 55காலை

 


ShareTweet

Tuesday, November 17, 2020

அரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்! – இலக்குவனார் திருவள்ளுவன்

  அகரமுதல


அரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்!

திருக்குறள் எந்நாட்டவர்க்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய சிறப்பு மிக்கது. எனினும் திருக்குறளுக்கு உரை எழுதுவோர்கள் அல்லது விளக்கம் தருபவர்கள் முன்னோர் தெரிவித்து வழி வழியே வந்த விளக்கங்களையே தத்தம் நடைகளில் விளக்குகின்றனர்.

மாறுபட்ட கருத்தாக இருப்பின் மாறுபட்டு உரை தந்த முன்னோர் வழி வந்த கருத்தாகத்தான் பெரும்பாலும் இருக்கும். அங்கும் இங்குமாக மாறுபட்டு அமைவன சிலவே.

ஆனால் திருக்குறள் அறிஞர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அறிவியல் நோக்கிலும் இக்காலச் சூழலுக்கேற்பவும் திருக்குறட்பாக்களுக்கு விளக்கம் தந்துள்ளார்.

அவற்றில் ஒன்றையே இங்கே பார்க்கப் போகிறோம். திருக்குறளின் பெருமைக்கும் அதை உணர்த்தும் இலக்குவனாரின் உரை அருமைக்கும் ஒரு சான்றாக இஃது அமையும்.

திருவள்ளுவர் வழங்கியுள்ள அனைத்துக் குறட்பாக்களும் அனைவரும் பின்பற்றப்பட வேண்டியனவே என்றாலும் சில குறட்பாக்கள் சில துறையினருக்கும் சில குறட்பாக்கள் சில மாந்தருக்கும் மிகவும் இன்றியமையாதனவாக இருக்கும்.

அரசியலாளர்களுக்குப் பொருட்பால் முழுமையும் வழிகாட்டியாக அமைகின்றது. அவற்றுள் அரசியல் பிரிவில் உள்ள 25 அதிகாரங்களும் அமைச்சியல் பிரிவில் உள்ள 10 அதிகாரங்களும் மிகவும் கருத்துடன் அறிந்து அரசியலில் ஈடுபட்டுள்ளோரும் ஆட்சியாளரும் அறிந்து பின்பற்றப்படவேண்டியவை.

வெற்றியும் தோல்வியும் நிறைந்த அரசியல் உலகில் அரசியலாளர்கள் வழிகாட்டியாகக் கொள்ளவேண்டிய ஒரு திருக்குறட்பாவைப் பேரா.சி.இலக்குவனார் வலியுறுத்துகிறார்.

இடுக்கண் அழியாமை அதிகாரத்தில் உள்ள திருக்குறள் அது.

இடுக்கணழியாமை என்பது முயற்சியில் பொருளிழப்பு, மெய் வருத்தம், தோல்வி போன்ற துன்பங்கள் வந்த பொழுது, அதற்கு மனங்கலங்காமையைக் குறிக்கும் என அறிஞர்கள் விளக்குகின்றனர். இவ்வதிகாரத்தின் 6 ஆவது குறள்; மொத்தத்தில் 626 ஆவது குறள் வருமாறு:

அற்றேம் என்று அல்லற் படுபவோபெற்றேம்என்று
ஓம்புதல் தேற்றா தவர்.

இக்குறட்பாவிற்கு அறிஞர் சிலர் தரும் விளக்கங்கள் வருமாறு…

மணக்குடவர் உரை: பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார், அதனைப் பெற்றோமென்று போற்றி வைத்தலை நன்றென்று தெளியாதவர். இது பொருட்கேட்டினால் வருந்துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.

பரிமேலழகர் உரை: அற்றேம் என்று அல்லற்படுபவோ – வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ; பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர் – செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார்?

மு.வரதராசன் விளக்கம்: செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.

பாவாணர் உரை: பெற்றேம் என்று ஒம்புதல் தேற்றாதவர் – செல்வக் காலத்தில் யாம் இது பெற்றேமென்று மகிழ்ந்து கையழுத்தங் கொண்டு அதைக் காத்துக் கொள்ளுதலை அறியாதார்; அற்றேம் என்று அல்லல் படுபவோ – வறுமைக் காலத்தில் யாம் செல்வத்தை யிழந்தேமென்று துயரப்படுவரோ ? படார்.

சாலமன் பாப்பையா விளக்கம்: பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?.

வ.சுப.மாணிக்கம் உரை: செல்வம் வந்தபோது பற்றற்று இருப்பவர் போனபோது துயரப் படுவாரோ?

கலைஞர் உரை: இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமேயென்று மகிழ்ந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும்போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?

சிவயோகி சிவக்குமார் விளக்கம்: விலகிவிட்டது என்று வேதனைப்படலாமா ? பெற்றதைக் கொண்டு சரியாக வாழாதவர்.

இடுக்கண் அழியாமை என்னும் பொழுது தோல்வித் துன்பத்தையும் குறிப்பிட்டிருப்பினும் அனைவரும் பொருட்செல்வம் குறித்தே கூறுகின்றனர். இருப்பினும் சிவயோகியார் உரை பொதுவாக இருந்தாலும் செல்வம் என்பது உட்பொருளாக உள்ளது எனலாம்.

ஆனால் திருக்குறள் அறிஞர் பேரா.சி.இலக்குவனார் அனைவரிடமிருந்தும் மாறுபட்டுக் காலத்திற்குத் தேவையான விளக்கம் அளிக்கிறார். அவரது விளக்கம் வருமாறு:

பெற்றேம்-என்று அரசியல் பதவிகளை அடைந்து விட்டோம் என்று கருதி, ஓம்புதல்-அவற்றைத் தம்மினின்றும் நீங்காமல் காத்தலை, தேற்றாதவர் – தெளிந்து அறியாதவர், அற்றேம் என்று – அவை தம்மைவிட்டு நீங்கிய காலத்தில் இழந்து விட்டோம் என்று, அல்லல்படுபவோ – துன்பப்படுவார்களோ? துன்பப்பட்டார்.

அரசியல் பதவிகளைப் பெற்றுப் பணியாற்றுங்கால் உண்டாகும் இடர்ப்பாடுகளை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று முதல் ஒன்பது குறட்பாக்களிலும் கூறி, அப்பதவிகளை இழந்த ஞான்று உண்டாகும் உளத்துயரை மாற்றுவதற்கு வழி இக்கடைசிக் குறட்பாவில் கூறுகின்றார்.

பதவிக் காலத்தில் உண்டாகும் இடையூறுகளை, பதவி பெற்றுள்ள மகிழ்ச்சியாலும், பதவியால் பெற்றுள்ள செல்வாக்கினாலும், மக்கட்குத் தொண்டாற்று கின்றோமே என்ற உணர்ச்சியின்பத்தானும், மாற்றுதல் எளிது. பெற்ற பதவிகளை இழக்கும் காலத்தில் உண்டாகும் துன்பத்தை வெல்லுதல் எல்லோராலும் முடியாது. அரசியல் பதவிகளைப் பெறுவதிலும் அவற்றைக் காப்பதிலுமே அரசியல் தலைவர்கள் கருத்தைச் செலுத்திக் காலங்கழிக்கின்றனர்.

அவர்கள் பதவிகளைப் பெறுங்காலத்தில் பெரு மகிழ்வும், அவற்றை இழக்குங்காலத்தில் பெருந்துன்பமும் அடைகின்றனர். பதவிகள் மக்கட்குத் தொண்டாற்ற வாய்ப்பளிக்கும் நிலைகளே என்று கருதித் தொண்டாற்றுபவர்கள், அப்பதவிகளில் என்றும் இருக்க வேண்டுமென்று விரும்பமாட்டார்கள். பதவிகள் தம்மை அகன்ற காலத்து வருந்தமாட்டார்கள்.

அரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் இக்குறட்பாவை என்றும் உள்ளத்தில் பொறித்து வைத்துக் கொள்வார்களாக!

உயர் பதவிகள் கிட்டிய காலத்தில் உள்ளம் மகிழாதும் உயர் பதவிகளை விட்ட காலத்தில் உள்ளம் வருந்தாதும் இருத்தலே உணமைத் தொண்டர் இயல்பு.

(இலக்குவம் : வள்ளுவர் வகுத்த அரசியல்: பக்கம் 734)

அரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய குறளாக இதனை விளக்குகிறார். வந்துபோகும் செல்வச் சூழலில் இருக்க வேண்டிய மன உறுதியை அனைவரும் விளக்குகின்றனர்.

ஆனால் பேரா.சி.இலக்குவனாரோ பதவி வரும் பொழுதும் போகும் பொழுதும் இருக்க வேண்டிய மனநிலையை விளக்குகிறார்.

பதவிகளைப் பெறுவதையும் நிலையாகப் பதவிகளில் இருப்பதையும் இலக்காகக்கொண்டு அரசியல் தலைவர்கள் செயல்படுகின்றனர். தொண்டாற்றுவதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டால் துன்புறும் சூழல் வராது என்கிறார் பேரா.சி.இலக்குவனார். அவர் தந்துள்ள விளக்கத்திற்கு மேல் கூறுவதற்கு ஒன்றும் இல்லை.

இக்குறளை இலக்காகக் கொண்டு அரசியலில் ஈடுபடுவோர் செயல்பட்டால் ஊழலில் ஈடுபட வாய்ப்பில்லை.

– இலக்குவனார் திருவள்ளுவன்

(நவம்பர் 17, தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரின் 111 ஆவது பிறந்த நாள்)

தாய் மின்னிதழ் நாள்  17.11.2020

Sunday, November 8, 2020

அடிப்படை அறிவற்றவரா கே.எசு.அழகிரி? – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல


அடிப்படை அறிவற்றவரா கே.எசு.அழகிரி?

பேராயக்(காங்.)கட்சியின் தமிழகத் தலைவரான கே.எசு.அழகிரி அடிப்படை அறிவற்றவரா எனக் கேட்டால், கட்சியை நடத்துவதற்குரிய, திட்டமிடுவதற்குரிய நல்லறிவு படைத்தவர் என்றுதான் சொல்ல வேண்டும்.  ஆனால் அவருடைய பேராயக்(காங்.)கட்சிக்குரிய இலக்கணத்தின் படி கட்சியின் இந்தியத்தலைமைக்கு அடிமையாகக் காட்டிக் கொள்வதற்குரிய கருத்துகளை வெளியிடுவதில் வல்லவராக உள்ளார். மறந்தும் தமிழ், தமிழர் நலன்களில் அவர் கட்சி மேற்கொள்ளவேண்டியநடவடிக்கைகள் குறித்து மேலிடத்தில் தெரிவிக்க மாட்டார்.

இராசீவு காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்ட எழுவரையும் விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் சட்டமன்றத் தீர்மானம் முதலான பல நடிவடிக்கைகளையும் எடுத்துள்ளார். பா.ச.க.வின் அடிமை என ஊடகத்தினரால் சொல்லப்பட்டாலும் இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அவர் வழியில் எழுவர் விடுதலைக்கு முயன்று வருகிறார். ஈராண்டாக விடுதலைக்கான கோப்பினை உறங்க வைத்துக் கொண்டிருக்கும்  ஆளுநருக்கு நேரிலும் மடல் வழியிலும் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

எழுவரையும் விடுதலை செய்ய வாய்ப்பு வந்த பொழுது அப்போதைய மத்திய ஆட்சியின் கட்டுப்பாட்டினால் மேனாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அந்த நல் வாய்ப்பைத் தவற விட்டார். அதன் கெடுதிதான் இன்று வரை நீடித்துக் கொண்டுள்ளது. ஆனால், அவர் தலைவராக இந்த தி.மு.க.வின் இந்நாள் தலைவர் மு.க.தாலின் அன்றைய கருத்தை உடும்புப் பிடியாகப் பற்றிக் கொண்டிருக்கவில்லை. எந்தச் சூழலில் அப்படிச் சொன்னார் என்றும் ஆராய்ந்து கொண்டிருக்கவில்லை. எதிர்க்கட்சித்தலைவரின் கடமையைச் செய்யும் வகையில் எழுவர் விடுதலைக்குக் குரல் கொடுத்து வருகிார.

அது மட்டுமல்ல. ஆளுநருக்கு இது குறித்து மடலும் அனுப்பியுள்ளார்.  அதில், “அரசியல் சட்டப் பதவிகளில் இருப்போர் உரிய காலவரம்பிற்குள், தங்களது கடமையை ஆற்றிட வேண்டும் என்பது சட்டத்தில் வழக்கமான நடைமுறை.மாநில அரசின் பரிந்துரையை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடிவு எடுக்காமல்- தங்கள் அலுவலகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது – சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் ஆட்சி நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே தமிழக அமைச்சரவையின் 9.9.2018–ஆம் நாளிட்ட பரிந்துரையைப் பரிவுடன் ஏற்று ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையைக் குறைத்து – உடனடியாக அவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆளுங்கட்சியின் உண்மைக்குக் குரலுக்குச் சார்பாகவே மாந்த நேய அடிப்படையில் மடல் அனுப்பியுள்ளார். இதுதான் தலைவனுக்குரிய அழகு.

ஆனால் கே.எசு.அழகிரி, தமிழ்நாட்டின் முதன்மைக்கட்சி ஒன்றின் தலைவர் என்ற முறையில் தான் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றாததுடன் அதற்கு எதிராகவும் வேண்டுமென்றே அறிக்கை விட்டுள்ளார். அதில், “7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல.”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை உறுப்பினராகவும் இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ஒருவர் இவ்வாறு கூறுவது வியப்பாக உள்ளது. சட்டம் இயற்றும் பொறுப்பில் இருந்த ஒருவருக்கு அடிப்படைச் சட்ட அறிவு கூட இல்லாமல் இருக்குமா? என்று எண்ணத் தோன்றுகிறது. வேண்டுமென்றே தவறான நச்சுக்கருத்துகளை மக்களிடம் திணிக்க முயலுகிறார் என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.

நீதி மன்றத்திற்குத் தண்டிக்கும் அதிகாரம்மட்டும்தான் உள்ளது. ஒரு வழக்கில், நீதிமன்றம் தண்டித்த பின்னர் அதற்கு வேலையில்லை. மேல் முறையீட்டு நீதி மன்றம் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது மாற்றலாம். ஆனால், தண்டனை வழங்கிய நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது. ஆனால், தண்டிக்கப்பட்டவர்களை மன்னிக்கும் அதிகாரம் சிறைத்துறைக்கு இருக்கிறது. இந்தியாவில் குற்ற வழக்குமுறைச் சட்டம் 432. 433 ஆகியவற்றின் கீழ் இவை செயல்படுகின்றன. தண்டனைக் குறைப்புப் பிரிவு (remission section) மூலம் அதற்குரிய விதிகளைப் பின்பற்றி அரசின் ஒப்புதலுடன் அவர்கள் தண்டனைவாசிகளை மன்னித்து விடுதலை செய்யலாம். உலகெங்குமே இதுதான் நடைமுறை. இதனைப் பின்பற்றச்சொன்னால் இல்லாததும் பொல்லாததுமான அறிக்கை விடுகிறார்.

எனினும், மத்தியஅரசு சட்டங்களின் கீழ்த் தண்டனை பெற்றவர்களின் தண்டனைக் குறைப்பு விவரத்தை மத்திய அரசிற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஆனால், அப்பொழுதும் மத்திய அரசிற்கு மறுக்கும் உரிமை யில்லை. தன் கருத்தினைத் தெரிவிக்கலாம் அவ்வளவுதான். இதை ஏற்பதும் மறுப்பதும் மாநில அரசிற்குரியது. இந்த நடைமுறையைப் பின்பற்றியே மேனாள் முதல்வர் செயலலிதா 2015 இல் செயற்பட்டார்.

எனவேதான், மேனாள் முதல்வர் செயலலிதா,

“மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-இல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திரராசா என்கிற சாந்தன்,  சிரீகரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, இராபர்ட்டு பயசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என அறிவித்தார்.

பிற நாடுகளில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற மாநிலங்களில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் இதுவரை  தண்டனைக்குறைப்பு முறையில்  ஆயிரக்கணக்கான தண்டனைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

உண்மையான நீதிமுறையும் சட்ட முறையும் இவ்வாறு இருக்க கே.எசு.அழகிரியும் அவர் கட்சியினரும் எதிர்ப்பது  அரசின் சட்ட நடைமுறைகளில் குறுக்கிடுவதாகும்.எனவே, இவர்மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“சட்டத்தின் முன் யாவரும் சமம்” என்பது குற்றவாளிகள் கண்ணோட்டத்தில் மட்டுமல்ல. பாதிக்கப்பட்டவர்களின் கண்ணோட்டத்திலும்தான். பாதிக்கப்பட்டடவர்களில் செல்வமும் செல்வாக்கும் உள்ளவருக்கு ஒரு நீதி. ஒன்றுமில்லாதவருக்கு வேறொரு நீதி என்பது சட்டமல்ல.

எனவே, கொல்லப்பட்டவர் முன்னாள் தலைமையமைச்சராக இருந்த இராசீவு காந்தி என்பதற்காகத் தண்டனைவாசிகளுக்கு எதிராக நீதியை வளைப்பதும் குற்றமாகும்.

குற்றம் புரிந்தவர்களுக்கே முன்விடுதலை என்பது சட்டப்படியான செயலாக உள்ளபொழுது குற்றவாளிகளாகச் சிக்க வைக்கப்பட்டவர்களிடம் மனிதநேயமும் அறவுணர்வும் கொண்டு செய்படவேண்டுமல்லவா? 

காவல்துறை அதிகாரிகளும் நீதித்துறையினருமே இவர்களுக்குப் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட சான்றாவணங்களின்படித் தண்டனை வழங்கப்பட்டதாகப் பொதுவெளிகளில் தெரிவித்துள்ளனர்.  அப்பொழுதே விடுதலை செய்து இழப்பீடு கொடுக்க வேண்டியவர்களை இன்னும் அடைத்து வைத்திருப்பது கொடுமையல்லவா?

நீதிக்குக் குரல் கொடுப்பவரின் கட்சியின் வண்டவாளம் என்ன? கட்சித் தலைவர்களுக்காகக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குப் பதவிகள் வழங்குவதுதானே!

போலநாத்து பாண்டே(Bholanath Pandey), தேவேந்திர பாண்டே (Devendra Pandey) ஆகிய இருவரையும் பேராயக்(காங்.)கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கியது. தேவேந்திரர் உத்தரப்பிரதேசக் காங்கிரசுக் கட்சியின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். போலாநாத்து இந்திய இளைஞர் காங்கிரசுக் கட்சியின்  பொதுச்செயலராகவும் இந்தியத் தேசியக் காங்கிரசுக் கட்சியின் செயலராகவும் நியமிக்கப்பட்டார். இவர், தொடர்ந்து ஆறுமுறை (1991,1996, 1999, 2004, 2009, 2014) சலேம்பூர்(Salempur) நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராகவும் ஆக்கப்பட்டார். அப்படி என்ன இவர்கள் நாட்டு மக்களுக்காக நாட்டிற்காகப் பாடுபட்டார்கள் என்கிறீர்களா?

நெருக்கடிநிலைத் துன்பங்களை வழங்கியதற்காகக் கைது செய்யப்பட்ட இந்திரா காந்தியை விடுதலை செய்யவும் அவர் மகன் சஞ்சய் காந்திக்கு எதிரான அனைத்துக் குற்ற வழக்குகளையும் திரும்பப் பெறவும் வலியுறுத்தி 126 பயணிகள் இருந்த விமானத்தைக் கடத்தினார்கள். இதற்குத்தான் இந்தப் பரிசுகள்.

இந்திராகாந்தி கொல்லப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்;; துன்புறுத்தப்பட்டனர்; அவர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டன;  நூற்றுக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். ஆனால் குற்றவாளிகளை ஒன்றும் செய்யவில்லை. பெயரளவிற்குச் சிலர் மீது வழக்குகள் போடப்பட்டன. அவர்களில் ஒருவரான சஞ்சன் குமார்(Sajjan Kumar) என்பவருக்கு. நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற ஊரக மேம்பாட்டுக் குழு உறுப்பினர்  முதலான பரிசுகள் வழங்கப்பெற்றன.(எனினும் பின்னர் அவர் தண்டனை பெற்றார்.)

மூத்த தலைவர் கமல்நாதனுக்கு (Kamal Nath) 1985, 1989, 1991,1998,1999, 2004, 2009  ஆம் ஆண்டகளில் மக்களவை உறுப்பினர்,1991 – 1995 இல்  சுற்றுச்சூழல் வனங்களுக்கான (தனிப் பொறுப்பு) மத்திய இணை அமைச்சர் பதவி; 1995 – 1996 இல்  நெசவுத்தொழில்களுக்கான (தனிப் பொறுப்பு) மத்திய இணை அமைச்சர் பதவி; 2001 – 2004 வரை, காங்கிரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி; மே 23, 2004 இல் இருந்து வணிகம் & தொழில்துறையின் மத்திய அமைச்சர் பதவி;  2009 இல் சாலைப் போக்குவரத்து –  நெடுச்சாலைகள் துறை மத்திய அமைச்சர் பதவி; 2018 இல் மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் பதவி எனத் தொடர் பரிசுகள் வழங்கப் பெற்றன.

எதற்காக இத்தனைப்பரிசுகள்? சீக்கியர் படுகொலைகளை விசாரித்த நானாவதி ஆணையத்தால்  குற்றம் சாட்டப்பட்டவர்களில் இவர் முதன்மையானவர். அந்தத் தகுதிக்காகத்தான் இத்தனைப் பதவிப் பரிசுகள்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். கொலைகாரர்களுக்கும் கற்பழித்தவர்களுக்கும் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் பயணிகள் விமானத்தைக் கடத்தியவர்களுக்கும் கட்சித்தலைவர்களுக்காகக் குற்றம் இ்ழைததவர்கள்  என்பதால் குற்ற வழக்கின்றியும் குற்ற வழக்குகளில் சிக்கினாலும் விடுவித்தும் பதவிகள் வழங்கும் கட்சியின் மாநிலத் தலைவர் இப்பொழுது அப்பாவி எழுவர்பற்றித் தவறான கருத்துகள் தெரிவிப்பதற்கு வெட்கப்படவில்லையே!

எனவே, தமிழக அரசு சட்டமுறையான செயலைத் திரித்துக் கூறி அரசுப்பணிக்கு இடையூறாக இருக்கும் கே.எசு.அழகிரி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு மருத்துவக்கல்வியில் 7.5 விழுக்காடு உள் ஓதுக்கீடு வழங்கியும் வேறு சில நடவடிக்கைகள் மூலமும் திறம்பட முதல்வர் செயல்படுகிறார். புரட்சித்தலைவி வழிச் செயல்படும் இலட்சியத்தலைவர் எடப்பாடியார் என அன்பர்கள் போற்றும் வண்ணம் திகழ்கிறார். எனவே, உள் ஒதுக்கீட்டு ஆணை போன்று எழுவர் விடுதலைக்கும் உடன் ஆணை வழங்க வேண்டுகிறோம்.

மனித நேயமற்ற தமிழகம் என்ற பெயர் வராமல் காத்திட விடுதலை ஆணை பிறப்பிப்பார் என எதிர்நோக்குகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல 

Thursday, November 5, 2020

போலிப் பெரியாரியவாதி குட்பூவிற்குச் சில வினாக்கள்: இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல


போலிப் பெரியாரியவாதி

குட்பூவிற்குச் சில வினாக்கள்

 

பெண்களை இழிவுபடுத்துவதில் மனுநூலுக்கு இணை மனுநூல்தான். அதில் உள்ள அத்தகைய கருத்தை முனைவர் தொல்.திருமாவளவன் கடந்த திங்கள் பெரியார் வலைக்காட்சியில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். அவர் இல்லாத ஒன்றைக் கூறவில்லை. முன்னரே திராவிட இயக்க இதழ்களிலும் குமுக வலைத்தளங்களிலும் மட்டுமல்லாமல் நடுநிலை எழுத்தாளர்களாலும் அறிஞர்களாலும் பன்முறை கூறப்பட்ட செய்திதான்.

பா.ச.கட்சியில் புதியதாகச் சேர்ந்தமையால் விளம்பரம் தேட விரும்பிய நடிகை குட்பூ ஒரு திங்கள் கழித்து வந்த அப்பேச்சைப் பார்த்துப் பொங்கி எழுந்துள்ளார். பெண்களை இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறித் திருமாவிற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாசகவினர் பெண்களுக்கு எதிராகக் கொடுமைகள் இழைத்தபோதும் அவற்றுக்குப் பரிசாகப் பதவிகளை அக்கட்சி வாரி வழங்கிய போதும் அமைதி காத்தவர், விழிப்புணர்வுப் பேச்சிற்காகப் பொங்கிஎழுந்து கண்டனம் தெரிவிப்பதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதும் ஏன்? சான்றுக்கு ஒன்றிரண்டைப் பார்ப்போம்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் பொழுது பாசக வெற்றி பெற்றால் பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் என்று பாசக நாடாளுமன்ற உறுப்பினர்  பருவேசு வெர்மா(Parvesh Verma) எச்சரிக்கை விடுத்தார். இம் மதவெறிப்பேச்சிற்காகப் பொங்கி எழாமல் அக்கட்சியிலேயே ஐக்கியமாகியது ஏன்?

கடந்த இரண்டாண்டுக்கு முன்பு உள்ள புள்ளிவிவரப்படி பெண்களுக்கு எதிரான குற்றம் இழைத்து வழக்கு தொடுக்கப்பட்டவர்களில் 47 பேருக்குப் பாசகவில் 2014-2018 இல், தேர்தலில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. பா.ச.க. தோன்றிய முதல் இதுவரை என்றால் இத்தகையோர் நூற்றுவரைத் தாண்டுவர். பெண்களுக்கு எதிரான குற்றம் இழைத்தவர்களுக்குப் பதவிகளா எனப் பொங்கி எழாமல் அக்கட்சியிலேயே ஐக்கியமாகியது ஏன்?

கடந்த 2018-ஆம் ஆண்டு, சனவரி 10 அன்று சம்மு பகுதியின் கத்துவா நகரில் `பகர்வால்’ என்ற நாடோடிப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த எட்டு அகவைச் சிறுமி காணாமல் போனார். பின்னர் அச்சிறுமி கோயில் பணியாளர் சஞ்சிஇராம் முதலானவர்களால் கூட்டு வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என அறிய வந்தது. பின்னர் இவர்கள் நீதி மன்றத்தால தண்டிக்கப்பட்டுச் சிறையில் உள்ளனர்.

எனினும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபொழுது அவர்களுக்கு ஆதரவாகவும் விடுதலை செய்ய வலியுறுத்தியும்  இந்து ஏக்தா மன்சு(Hindu ekta munch) அமைப்பு பேரணி நடத்தியது. இதில் பா.ச.க. அமைச்சர்கள் சந்திர பிரகாசு கங்கா, இலால் (சிங்கு) ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்களே, சிறுமியைச் சீரழித்துக் கொன்றவர்களுக்காக வாதிடுவதா எனப் பொங்கி எழாமல் அக்கட்சியிலேயே ஐக்கியமாகியது ஏன்?

குல்தீபு சிங்கு செங்கர் (Kuldeep Singh Sengar)  என்பவர், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகக் கூறப்படும் உ.பி.யில் பா.ச.க சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் ச.ம.உ.ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டே வேலை கேட்டு வீட்டிற்கு வந்த 17 அகவைச் சிறுமியை மற்றொருவருடன் சேர்ந்து வன்புணர்வு செய்துள்ளார்.  அப்பெண்ணின் தந்தைமீது பொய்வழக்கு பதியச்செய்து சிறையில் இறக்கும் படிச் செய்துள்ளார். அப்பெண்ணின் வழக்குரைஞரையும் உறவினர் ஒருவரையும் மகிழுந்தில் செல்லும் பொழுது சுமையுந்து ஏற்றிக் கொல்லச் செய்துள்ளார். இதற்காகத் தில்லி நீதிமன்றத்தால் ஆயுட் தண்டனையும் பெற்றுள்ளார் மக்கள் சார்பாளரான தன்னை வேலைக்காக நாடிவந்த சிறுமியைக் கற்பழித்ததுடன் அதற்காகக் காவல் துறையில் முறையிட்ட தந்தை, வாதாடிய வழக்குரைஞர், உதவிய உறவினர் எனப் பலரையும் அழித்தவருக்கு அழித்தவருக்கு எதிராகப் பொங்கி எழாமல் அக்கட்சியிலேயே ஐக்கியமாகியது ஏன்?

பெண்களைப் பழித்துச் சொன்னதாகப் பொங்குபவர் தொலைக்காட்சிகளிலும் திரைக்காட்சிகளிலும் பெண்களை இழிவாகக் காட்டுகிறார்களே! ஏன் பொங்கி எழவில்லை? பெண்கள் என்றால் அன்பின் உருவம், பண்பின் சிகரம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், தொலைக்காட்சித் தொடர்களில் காட்டப்படும் பெண்கள் வஞ்சகர்களாகவும் கூட்டுச் சதியினராகவும் அடுத்தவள் கணவனை அடைய குறுக்கு வழிகளை மேற்கொள் பவர்களாகவும் கணவன் மனைவியரைப் பிரித்து வைப்பவர்களாகவும் தான்  ஆசை கொள்பவனை அடைய  என்ன வேண்டுமானாலும் செய்யும் காமுகியராகவும்தான் உள்ளனர். அடியாட்கள். கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், போதை மருந்து விற்பவர்கள் முதலானவர்களை அறிந்து வைத்து அவர்கள் மூலம் கொடுமை செய்பவர்களாகவும் பாசங்காட்டும் அன்னைபோல் நடித்து வளர்ப்பு மகன் சொத்துகளை அடைய  அவனை அழிக்க  முயல்பவர்களாகவும் அவன் மனைவியாகிய மருமகளைக் கொன்று தனக்கு வேண்டியவளுக்குத் திருமணம் செய்ய முயலும் மோசடிக்காரிகளாகவும்தான் காட்டப்படுகின்றனர். மனுநூல் பெண்களைப்பற்றி என்ன சொல்கிறதோ அப்படித்தான் காட்டப்படுகின்றனர். இவற்றுக்காகப் பொங்கி எழாமல் உண்மையை உரைப்பதற்குப் பொங்கி எழுவது ஏன்?

வெற்று விளம்பர ஆரவாரத்திற்காகத்தானே இல்லாத பெருமையைக் கூறி இருக்கின்ற இழிவைச் சுட்டிக்காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். எனினும் அவரிடம் சிறிது மனச்சான்று ஒட்டிக்கொண்டுள்ளது. எனவேதான், மனுநூலில்  பெண்களைக் கேவலப்படுத்தும் அளவுக்கு ஏதும் இல்லை என்றவர், “மனு நீதி என்று அழைக்கப்படும் மனுசுமிருதி நூலை இப்போது யாரும் பின்பற்றுவதில்லை. அதைப் பற்றி இப்போது யாரும் பேசவும் இல்லை. அப்படி இருக்கும்போது, பழங்காலத்தில் எழுதப்பட்ட அந்த நூலைப் பற்றி இப்போது திருமாவளவன் விமர்சித்துப் பேசுவதற்கு என்ன தேவை வந்தது?” என்றார்.

“மனுநூல் பிராமணரால் எழுதப்பட்டது என்பதோடு பிராமணர்க்காகப் பிராமணர் நலன் கருதி எழுதப்பட்டது” என்று வெண்டை தானிகெர்             (Wendy Doniger) தம் நீண்ட ஆய்வு முன்னுரையில் எடுத்துரைக் கிறார்(பேரா.ப.மருதநாகயம், ஒப்பியல் வள்ளுவம், பக்.166). மனுநூல், பிராமணர்களைப்பற்றி மட்டுமே உயர்த்திப் பிறரைப் பழித்தும் இழித்தும் சொல்லும்  அறமற்ற நூல்.

எனவே, மனு சாதிக்கொரு நீதி கூறுவதில் வியப்பில்லை. பிற நாட்டு அறிஞர்களும் அறநூல்களுடன் ஒப்பிட்டு மனுவிற்கும் அறத்திற்கும் தொலைவு மிகுதி எனக் கூறியுள்ளனர். ஆனால், உயர்த்தப்படும் சாதியினர்தான் அதைத் தலையில் வைத்து ஆடுகிறார்கள் என்றால் பிறரும் அதைப் போற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படிச் சரியாகும்?

எனினும் இங்கே அதைப்பற்றிப்பாராமல் பெண்களுக்கு எதிராக அந்நூல் கூறியுள்ள சிலவற்றைப்பற்றி மட்டும் பார்ப்போம்.

அறமுறைக்கு எதிரான கருத்துகளையும் பெண்களை இழிவுபடுத்தும் செய்திகளையும் உடையது மனுநூல் என்னும் உண்மையை மறுக்க வழியில்லை. எனவே, எப்பொழுதோ எழுதப்பட்ட நூலைப்பற்றி, இப்பொழுது வழக்கிலில்லாத நூலைப்பற்றிக் கூறுவானேன் என மழுப்புகின்றனர்.

இதுவரை இதனை அறநூலாகவும் அறிவியல் நூலாகவும் போற்றி வந்தவர்கள், இப்பொழுது மனு என்று ஒருவர் இல்லை எனப் பின் வாங்குகின்றனர்.  மனுவின் உண்மை மக்களுக்குப் புரியத் தொடங்குவதால் எடுத்த நிலைப்பாடு. எனினும் வாய்ப்புள்ள பொழுது மீண்டும் முருங்கை மரம் ஏறுவர்.

மேற்கோள் காட்டிய மனு நூல், ஆங்கிலேயர்களால் புகுத்தப்பட்டது; வயவர்.வில்லியம் இயோன்சு என்ற ஆங்கிலேயரால் 1794ஆம் ஆண்டு எழுதப் பட்டது. என்றும் இந்து மதத்திற்கும், அதற்கும், எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சிலர் பொய் விளக்கம் அளிக்கின்றனர். வேதக்காலத்தில் குறிப்பிடப்பட்ட ஆரியத்தை – சங்கக்காலத்தில் குறிக்கப்பெற்ற ஆரியத்தை  ஆங்கிலேயர்களால் புகுத்தப்பட்ட கற்பனை என்போர்தான் இவ்வாறு கூறுகின்றனர்.

ஆரியர்கள் தமிழ்நூல் சிறப்பாக இருந்தாலும் பழித்துக் கூறுவர். அதையும் மீறி அதன் செல்வாக்கு உயர்ந்தது எனில், தாழ்த்தப்பட்டவரால் எழுதப்பட்டது என்பர். இருப்பினும் மக்கள் அந்த நூலைப் பாராட்டிப் பின்பற்றினால் தாழ்த்தப்பட்டவனுக்கும் பிராமணனுக்கும் பிறந்தவரால் எழுதப்பட்டது என்பர். இதையும் மக்கள் புறக்கணித்தால் எழுதியவர் பிராமணன் என்பர். இவ்வாறுதான் திருவள்ளுவர் குறித்தும் கூறினர்.

ஆரியத்தின் நச்சு வெளியே வந்தால் அதை மறைக்கப் பார்ப்பர். அதையும் மீறி வெளிவந்தது என்றால் அதனைக் கற்பனை, வேண்டாதவர்களால் புனையப்பட்டது என்பர்.

ஆரியர்கள் தங்களுக்குச் செல்வாக்கு இருக்கும் பொழுது ஆர்ப்பரிப்புடன் தங்களை வெளிப்படுத்திக் கொள்வர். ஆனால், செல்வாக்கு இல்லாத பொழுது மறுவாய்ப்பிற்காகக் காத்திருந்து அடங்கிக்கிடப்பர். 

பெண்களை இழிவுபடுத்தும் மனுவின் சாத்திரங்கள் மேலும் பின் வருமாறு உள்ளன.

“நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும், மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும்போதும், அவர்கள் கணவரின் காவலை விரும்புவதில்லை.”( மனு, 9 : 15).

“மாதர்க்குப் பிறவியைத் தூய்மையாக்கும் சமக்காரங்கள் மந்திரப்பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளையுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யைப் போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர்.” (மனு, 9 : 18).

“பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் குறப்படுவனவற்றையும் கேட்பீராக!”(மனு 9.19)

“புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்.” (மனு, 2.214)

மனுவில் உள்ளன பொய்,  ஆங்கிலேயர்களின் கற்பனை என்கிறார்களே! அப்படியானால் ஆரியச்சாமியார்கள் அவற்றை ஏன் மேற்கோளாகக் கூற வேண்டும்.

காஞ்சிமடம் ஆரியச் சமயத்தையும் அதன் வருணாசிரமத் தருமத்தையும் காப்பதற்காகவும் பாடுபடுகிறது. கடந்த நூற்றாண்டில் அதன் தலைவராக இருந்த சந்திரேசகர(ஆச்சாரியா)ர், நேரு, பெண்களுக்குச் சொத்துரிமை எனச் சட்டவரைவு கொண்டுவந்த பொழுது அதனைக் கடுமையாக எதிர்த்தார். அப்பொழுது  அவர் இதனை மனுவிற்கு எதிரானது என்றார்.

“பெண்களுக்குச் சொத்தில் பாத்தியம் கொடுக்கப் போறாளாம்; அவாளுக்குச் சொத்துலே பங்கு கொடுத்தால் என்னாகும் தெரியுமா? இட்டப்பட்டவா கூடப் பெண்கள் ஓடிப் போயிடுவா. அபாண்டமா அபச்சாரமா போயிடும். மேலும் இதனால் பெண் தருமமே பாழாயிடும். பெண்களுக்குப் பாத்தியமோ சம்பாத்தியமோ இருக்கக் கூடாதுன்னு மநு சுமிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் பெண்ணிற்கு அழகு.” என்றவர்தான் காஞ்சி மடத்தலைவர் சந்திரசேகரேந்திர சரசுவதி(அக்னிகோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார், இந்து மதம் எங்கே போகிறது?) ஆரியச் சமையத்தலைவரே மனுவில் உள்ளதாகத் தெளிவாகக் கூறி அதனை மீறக்கூடாது என்னும் பொழுது “ஆங்கிலேயர், இல்லாத மனுவின் பெயரில் கூறியுள்ள கற்பனை’ என்பது பெரும் மோசடி அல்லவா?

அவர். பெண்கள் வேலைக்குச் செல்வதை எதிர்த்து, பெண்மையையும் இழந்து கொண்டு தீய ஆசைகளைப்பெருக்கிக் கொண்டு வேலைக்குச் செல்வதாகக் கூறுகிறார். “வீட்டில் அடைபட்டில்லை என்று அலுவலகத்திற்குப் போவதால் எத்தனை தப்புக்களுக்கு இடம் கொடுத்துப் போகிறது?” என அவரே கூறுகிறார்.(தெய்வத்தின் குரல் பாகம் 2).

“மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும், இயற்கையாக உடையவர் ஆதலால் கணவனால் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கின்றார்கள்”(மனு 9.15)

“மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோச முள்ளவர்களென்று அநேக சுருதிகளிலுஞ் சாத்திரங்களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன.”  (மனுநூல்.9.19).

பெண்கள் திருமணத்துக்கு முன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்கிறவர்கள் இவற்றை இயல்பாகக் கருதலாம். ஆனால், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்பவர்களுக்கும் பிறன்மனை விழையாமையைப் போற்றுபவர்களுக்கும் எல்லாப் பெண்களையுமே பரத்தையர் என ஒழுக்கக்கேடராகக் கூறுவது எப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்?

பெண்களுக்கு எதிரானதே மனு என்பதற்குப்பின்வரும் வரிகள் சான்று.

 “மலடியான மனைவியை எட்டு வருடத்திற்கு மேலும், சாப்பிள்ளை பெறுபவளைப் பத்து வருடத்திற்கு மேலும், பெண்ணையே பெறுபவளை பதினொரு வருடத்திற்கு மேலும், தீங்கு சொல்பவளை அப்பொழு தேயும் நீக்கி வேறு விவாகம் செய்து கொள்க. இந்த மனைவியர்களுக்கு மனமகிழ்ச்சிப் பொருள் கொடுக்க வேண்டியதில்லை.”

ஆனால்,இதே நிலையில் உள்ள ஆண்களுக்கு எத்தண்டனையும் இல்லை. (மனு 9.81)

“இப்பொழுது எங்கே இருக்கிறது மனுதருமம்? ஏன் அதைக் கிளப்ப வேண்டும்?” என்று மனு ஆதரவாளர்கள் சொல்வதே மனுவின் தீமைகளை மறைப்பதற்குத்தான்.

காஞ்சி மடத்தலைவர் சுப்பிரமணியன் என்ற செயேந்திரர் “வேலைக்குச் செல்லும் பெண்கள் எல்லாம் பரத்தையர்கள்” – என்று செவ்வி(பேட்டி) அளித்தார்.

நடிகர் ச.வெ.(எசு.வி.)சேகர், பெண்களை இழிவாகச் சொன்னவர்; பெரிய ஆட்களுடன் படுக்காமல் அவர்களால் (ஊடகப் பெண்களால்) செய்தியாளராகவோ செய்தி வாசிப்பவராகவோ ஆகிவிட முடியாது என்றதும் மனுஅவர் மனத்தில் ஆழமாகப்பதிந்துள்ளதுதான்.

பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? “வீட்டிற்கு வேண்டிய பாத்திரம் முதலியவற்றை தேடிப் பெறுவதற்காக பொருளை அவளிடம் கொடுத்தும் அதனைக் காப்பாற்றி வைத்து வேண்டிய போது செலவிடும்படி செய்தும் தட்டு முட்டுச் சாமான்களை சுத்தமாக வைத்துக் கொள்ளச் செய்தும் வீட்டை துப்புரவாக்கி வைத்தல், தேவ பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அடுக்களைப் பொறுப்பு, பாத்திரம் படுக்கை முதலியவற்றைச் சரியாக கவனித்துக் கொள்ளல் போன்ற இன்றியமையாத இல்லத்துக் காரியங்களை மனைவிக்குக் கற்பித்து அவற்றை அவளைக் கொண்டு செய்வித்தல் போன்றவற்றாலும் அவளது மனம் வேறிடம் செல்லாமற் காக்க!”(மனு 9.11).

பெண்கள் வீட்டுக்குள்ளேயே வேலை செய்து குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டவர்கள் என்று உத்தரப் பிரதேச முதல்வர் சொல்கிறார்.

மனு கூறுவதைத்தானே இவர்கள் கூறுகிறார்கள். “மனு பழைமையான நூல், இப்பொழுது அதைப்பற்றிப் பேசுவது ஏன்” என்பது தவறுதானே.

இடைச்செருகல் என்பது ஆரியர்களுக்குக் கைவந்த கலை. தமிழ், பாலி, பிராகிருதம் முதலான மொழி நூல்களில் தங்கள் கருத்துகளை இடைச்செருகலாகப் புகுத்துவர். அதற்கு முன்னதாக அந்நூல்களைத் தங்கள் மொழியில் புத்தாக்கம் போல் எழுதி வைத்துக் கொண்டு சமற்கிருதத்தில் இருந்துதான் பிற மொழிகளுக்குச் சென்றது என்பர். தங்கள் நூல்களின் காலங்களை முன்னுக்குத் தள்ளித் தமிழ் முதலான பிற மொழி நூல்களின் காலங்களைப் பின்னுக்குத் தள்ளுவர். அதேபோல் தமிழ் முதலான மொழிநூல்களின் சிறந்த கருத்துகளைத் தங்கள் நூல்களில் இடைச்செருகல்களாகச் சேர்ப்பர். அவ்வாறு மனுவிலும் தமிழ் அறக்கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும் நூலை முழுமையாகப் படிக்கும் பொழுது அக்கருத்துகள் மனுவின் அடிநாதக் குரலுக்கு எதிராக உள்ளதைப் புரிந்து கொண்டு இடைச்செருகல் என்பதை உணர்த்தி விடும். மனுவிற்கு எதிர்ப்பு வரும் பொழுது இடைச்செருகல்கள் கருத்துகளைக் காட்டி மனு பெண்ணின் காவலர் என்பதுபோல் பொய்யுரை கூறுகின்றனர்.

தன்னை நடுநிலையாளராகவும் துணிவானவராகவும் காட்டிக் கொள்பவர் குட்பூ. எனவே, பெண்களை இழிவாகக் கூறும் மனுவிற்கு எதிராக – மக்களிடையே உயர்வு தாழ்வைக் கற்பித்து ஒரு சாதி நலனுக்காக மட்டும் சாத்திரம் பேசும் மனுவிற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை எனக் கருதினால் பா.ச.க.வை விட்டு வெளியேற வேண்டும். தானே, அமைப்பு ஒன்றைத் தொடங்கிப் பெண்களை இழிவு படுத்துவோருக்கும் சாதி வேற்றுமை பாராட்டுவோருக்கும் அத்தகைய நூல்களுக்கும் எதிராக இயக்கமாகச் செயல்படவேண்டும். அவ்வாறில்லாமல் அமைதி காத்தாலோ மீண்டும் மீண்டும் மனுவிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாலோ,  நடு நிலை தவறும் அவர், தமிழ்நாட்டில் நட்டாற்றில் விடப்படுவார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். என்ன செய்யப் போகிறார் அவர்? உழைக்கும் மக்களின் பக்கம் இருப்பாரா? ஏய்த்துப் பிழைக்கும் மக்களின்பக்கம் இருப்பாரா? பெண்களின் உரிமையை மீட்போர் பக்கம் இருப்பாரா? பெண்களை இழிவுபடுத்துநர் பக்கம் இருப்பாரா?

எனவே, பெண்களைப் பரத்தையராகவும் இழிவாகவும் கூறும் மனுவின் மீது பாயாமல் , அதைத் தடை செய்யக் குரல் கொடுக்காமல் அதை எடுத்துரைப்பவர்கள் மீது பாய்வதில் எந்நீதியும் இல்லை என்பதை உணர வேண்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல : இதழுரை

Followers

Blog Archive