Friday, July 11, 2025

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 18 : உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்



(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17 : பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! – தொடர்ச்சி)

 “யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே”
               புறநானூறு 214 : 4-5

பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
சொற்பொருள்: பூழ் = சிறு பறவை; காடை (ஒருவகைப் பறவை)

“உயர்ந்த இலக்கு வெற்றியைத் தரும், தாழ்ந்த இலக்கு தோல்வியைத் தழுவும். முடியுமா முடியாதா என ஐயப்பட்டு முயலாமல் வாழ்பவர் நெஞ்சில் துணிவற்ற கோழைகள்” என்கிறார் கோப்பெருஞ்சோழன்.

மிகப்பெரும் விலங்காகிய யானையை வேட்டையாடச் சென்றவன் அதில் வெற்றி காணலாம். குறும்பூழ் என்னும் சிறிய காடைப் பறவையை வேட்டையாடச் சென்றவன் அதனைப் பெறாமல் வெறுங்கையுடன் திரும்பவும் செய்யலாம்.

உயர்வான எண்ணம்தானே நம்மை உயரச் செய்யும் என்கிறார்.

திருவள்ளுவர்,

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (திருக்குறள், ௭௱௭௰௨ – 772)

என உயர்ந்த இலக்கே சிறந்தது என்று கூறுகிறார்.

இப்பாடல் உருவானதன் வரலாற்றுக் குறிப்பை நாம் காண வேண்டும்.

நல்லியல்புகள் நிறைந்த கோப்பெருஞ்சோழனுக்கு எதிராக அவரது பிள்ளைகள் இருவருமே மண்ணாசை காரணமாக எதிர்த்துப் போரிட முற்பட்டனர்.

இதனால் மனம் குமைந்த கோப்பெருஞ்சோழ வேந்தர் எதிர்த்துப் போரில் இறங்கினார்.

அவர் கோப்பெருஞ்சோழனை நோக்கி, “உனக்கு எதிராகப் போர் தொடுக்க வருபவர் உன் பகைவர் அல்லர். உன் மக்களே. உனக்குப்பின் அரசாட்சிக்கு உரியவர் இவர்களே!

நீ வென்ற பின்னர் இந்நாட்டை யாருக்கு அளிப்பாய்? ஒருவேளை நீ போரில் தோற்கும் நிலை வந்தால் உனக்கது பெரும்பழியைத் தருமல்லவா? ஆதலின் போரை விடுத்து நற்பணிகளில் நாட்டம் செலுத்துவாயாக!” என அறிவுரை வழங்கினார்.

இதனால் போரைத் துறந்தான் கோப்பெருஞ்சோழன். எனினும் தன் பிள்ளைகளே தனக்கு எதிராகப் போர் தொடுக்க முனைந்ததால் வெறுப்புற்று வடக்கிருந்து உயிர் துறக்கும் முடிவிற்கு வந்தான்.

வடக்கிருத்தல் என்பது யாதேனும் ஒரு காரணம் பற்றி உயிர் துறக்கத் துணிந்தோர் தூய்மையான தனி இடத்தில் வடக்கு நோக்கி இருந்து, உணவு முதலியன துறந்து, உயிர் விடுவதாகும்.

சோழவேந்தன் வடக்கிருந்த பொழுது உடனிருந்த சிலர், இதனால் என்ன நன்மை எனப் பேசத் தொடங்கினர்.

இதற்குக் கோப்பெருஞ்சோழன், “நல்வினைகள் செய்வதால் விண்ணுலகம் சென்று இன்பம் நுகரலாம். பிறவாமை அடையலாம்.

அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும் வளர்ந்து கொண்டே வரும் உயர்ந்த இமயத்தில் பறக்கும் கொடிபோல் அனைவரும் அறியும் வண்ணம் புகழ்ப்பேறு பெறலாம்” என்றார்.

“உயர்ந்ததை நோக்கமாகக் கொள்ளுங்கள்! நல்லதே நடக்கும்!” என நம்பிக்கை கொள்ளச் சொல்கிறார்.

இக்கருத்தைத் தெரிவிக்கும் பாடல் வரி

“இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,”
               (புறநானூறு 214 : 11-12)

என்பதாகும்.

இதில் உள்ள அறிவியல் உண்மையை நாம் புரிந்து கொண்டால் பழந்தமிழரின் அறிவியல் வளத்தை உணரலாம்.

உயர்ந்த இமயமலை என்று சொல்லாமல் ‘இமயத்து உச்சி உயர்ந்து வருவதுபோல் உயர்ந்த’ என்கிறார்.

இமயமலை ஆண்டுக்கு 5 கீழயிரைப் பேரடி(மி.மீ.) உயர்கிறது என்பது புவி அறிவியலும் மலையறிவியலும் ஆகும்.

இந்த அறிவியல் உண்மையை அறிந்ததால்தான் மன்னர் இவ்வாறு பாடியுள்ளார். உயரும் அளவு காலத்திற்கேற்ப மாறலாம். ஆனால் உயர்வது உண்மை.

இந்த அறிவியல் உண்மையுடன் கோப்பெருஞ்சோழன் நமக்கு அறிவுறுத்துவது என்ன?

“நற்பயன் கிட்டுமா, கிட்டாதா என ஆராயாமல் உயர்ந்ததையே எண்ணி உயர்ந்ததையே செய்க! அதற்குரிய பயன் தவறாமல் கிடைக்கும்” என்கிறார்.

நாமும் உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்!

Thursday, July 10, 2025

தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

 



(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் தொடர்ச்சி)

 மூலத் திராவிட மொழி என்னும் கதை

தமிழின் தாய்மையையும் முதன்மையும் தொன்மையையும் ஏற்க மனமில்லாத தமிழ்ப்பகைவர்களும் உள்ளனர். அவர்கள் தமிழில் இருந்து பிற மொழிகள் பிறந்த உண்மையை மறுத்துக் கதை அளக்கின்றனர். அதே நேரம், சிலர் தமிழின் தாய்மையை மறுக்கவும் இயலாமல் ஒத்துக்கொள்ளவும் மனமின்றி மூலத் திராவிட மொழி என்னும் கதையை அளக்கின்றனர். “திராவிட மொழிகள் அனைத்தும் ஒரு மொழியிலிருந்து தோன்றியவை. எல்லாத் திராவிட மொழிகளுக்கும் மூலமாக இருந்த மொழியை மூலத் திராவிடம் அல்லது தொல் திராவிடம் எனலாம். அதிலிருந்தே தமிழ், தெலுங்கு முதலான மொழிகள் தோன்றியிருத்தல் வேண்டும்” என்று ஆய்வுரை போன்று பொய்யுரை பரப்புகின்றனர். மூலத் திராவிட மொழி என்றால் மக்கள ஏற்கவில்லையே. எனவே, தொல் தமிழ் மொழி என்றும் மூலத் தமிழ் மொழி என்றும் சொல்லிப் பார்த்தனர். எவ்வாறிருப்பினும் அது தமிழ்தானே என்றதும மீண்டும் மூலத்திராவிடமொழி என்றும் தொல் திராவிடமொழி என்றும் பிதற்றி வருகின்றனர். திராவிடம் என்பதே கற்பிதமாக இருக்கும்பொழுது தொல்திராவிடம் மட்டும் எப்படி உண்மையாக இருக்க முடியும்?

மொழி ஒப்பாய்வு தேவையே!

இந்த மொழியிலிருந்து இந்த மொழி தோன்றியது, இம்மொழி உயர்ந்தது, இந்த மொழி தாழ்ந்தது, இந்த மொழி மூத்தது, அந்த மொழி பிந்தையது என்பன போன்ற கருத்தாடல்கள் தவறு என்பார் உள்ளனர். தங்கள் மொழியை விடப் பிற மொழி உயர்வு என்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் கூற்று இவை. எந்த மொழியையும் இழிவாகவோ தாழ்த்தியோ கூறக்கூடாதுதான். ஆனால், மொழிகளின் சிறப்புகளையும் உயர்வுகளையும் மொழியின் பண்புகளையும் நிறைகுறைகளையும் ஒப்பிடுவது தவறல்ல. மொழிகளின் ஒப்பாய்வும் தேவையானதே. எனவே, தவறான வாதங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், உலகின் உயர்தனிச் செம்மொழியாகத் தமிழ் இருப்பதையும் அதன் சிறப்புகளை ஏற்பதும் தவறல்ல. அவ்வாறு ஒப்பு நோக்கிப் பார்க்கும் பொழுதுதான் தமிழ் உலக மொழிகளின் தாயாகவும் அந்த முறையில் கன்னடத்தின் தாயாகவும் இருக்கிறது என்பதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

பழம் மொழிகள் பத்தின் காலம்

குமரிநாடன்கோரா தளத்தில், மொழி வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையில் உலகின் பழமையான  பத்து மொழிகளின் காலத்தைப் பின்வருமாறு கூறுகிறார்.

10. அரபு மொழிக் காலம்: கிமு 100

9. ஆர்மேனியன் மொழிக் காலம்: கிமு.450

8. சமற்கிருத மொழிக் காலம்: கிமு 600

7. இலத்தீன் மொழிக் காலம் கி.மு 700

6. அராமிக்கு மொழிக் காலம்: கிமு 900

5. எபிரேய மொழிக் காலம்: கிமு.1200

4. சீன மொழிக் காலம்: கி.மு 1250

3. கிரேக்க மொழிக் காலம்: கிமு.1600

2. எகித்து மொழிக் காலம்: கிமு 3300

1. தமிழ் மொழிக் காலம்: கிமு.5000

கன்னடம் பிற்பட்ட மொழியே!

தமிழின் காலத்தை இன்னும் பழமையாகக் கூறுவோரும் உள்ளனர். எவ்வாறிருப்பினும் கன்னட மொழிக்காலம் இப்பட்டியலில் வரவில்லை.. ஏனெனில் கன்னடம் கி.பி.கால மொழியே. எனவே அது தமிழுக்குப் பிற்பட்ட மொழியே. கன்னட மொழியினர் சிலர் கன்னடத்தைத் தமிழின் தாய்மொழியாகக் கூறுவது முற்றிலும் தவறான தகவல் என அறியலாம்.

தென்னிந்திய மொழிக் குடும்பம்

19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தமிழ் மறுமலர்ச்சியின் ஊற்றுக்கண்ணாக அயோத்திதாசப் பண்டிதரால் குறிக்கப் பெற்றவர் பிரான்சிசு வைட்டு எல்லிசன்(Francis White Ellis). இவர்தான் 1816 ஆம் ஆண்டிலேயே தென்னிந்திய மொழிகள் பிற இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டிருப்பதை உணர்ந்து, “தென்னிந்திய மொழிக் குடும்பம்” என்னும் கருத்தாக்கத்தை முதன் முதலில் வெளிப்படுத்தியவர்.

(தொடரும்)

Wednesday, July 9, 2025

நாலடி நல்கும் நன்னெறி 12: நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(நாலடி நல்கும் நன்னெறி :11.  நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்! – தொடர்ச்சி)

அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்

கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்

செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை

நள்ளார் அறிவுடை யார்

நாலடியார்  பொருட்பால் – இன்ப இயல் – நன்றியில் செல்வம் 262

அதிகாரத் தலைப்பு விளக்கம்: “நன்றியில் செல்வம்” என்றால், பிறருக்கு உதவாத, அல்லது பயனில்லாத செல்வம் என்று பொருள்.  ஒருவரிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும், அதை அவர் தானும் துய்க்காமல், பிறருக்கும் பயனளிக்காமல் இருப்பின் அதனால் பயனில்லை. பிறருக்கு உதவாத  செல்வம் எந்தப்  பயனும் தராத வீண் செல்வமே. மருந்து மரம் எலலாவகையாலும் உதவுவதுபோல் செல்வம் எல்லா வகையிலும் பிறருக்குப் பயன்பெறவேண்டும். தனக்கும் பிறருக்கும் பயனற்ற செல்வத்தையே பயனில் செல்வம் என்கின்றனர். பயனில் செல்வமுடையோர் பயனற்ற மக்களாகக் கருதப்படுகின்றனர்.

கள்ளிச் செடியில் சிறு அரும்புகள் அள்ளிக்கொள்வதுபோல் நெஞ்சை அள்ளும் அழகுடன் மிகுதியான பூக்கள் பூத்திருக்கின்றனஎன்றாலும் அவை சூடிக்கொள்வதற்கு ஏற்றவை அல்லஎனவேகள்ளியில் பூத்த மலர்களைப் பறிக்க யாரும் முன் வரமாட்டார்கள்அதேபோல் கீழ் மக்களிடம் செல்வம் எவ்வளவுதான் குவிந்திருந்தாலும் அறிவுடையார் அக்கீழ் மக்களை நாடவோ அச்செல்வத்தை அடையவோ விரும்ப மாட்டார்கள்.

கள்ளிச்செடி பலவகையானதுஎனினும் எல்லாவற்றின் பூக்களும் அழகானவைபூக்கள் அழகாக உள்ளன என்பதற்காக இதனைப் பறிக்க முயன்று கைகளில் முள் குத்திக் கொள்ள மாட்டார்கள்பார்ப்பதற்கு அழகாகப் பூக்கள் இருந்தாலும் இவற்றால் ஏதும் பயனில்லைஎனவேதான்தலையில் சூடிக்கொள்ளவும் மாட்டார்கள்.

நாலடியாருக்கு முன்னரே திருவள்ளுவர் ‘நன்றியில் செல்வம்’ என ஓர் அதிகாரமே திருக்குறளில் வைத்துள்ளார்இதன்படி நன்றியில் செல்வம் உடையவரை அணுகக் கூடாது.

செல்வம் ஒருவரிடம் குவிந்திருக்கிறது என்பதற்காக அவரிடம் எப்பொருளையும் கேட்டுப் பெறலாம் என்று எண்ணக் கூடாதுதீய வழியில் செல்வம் பெற்றதை அறிந்தும் அச்செல்வத்தில் இருந்து பயன்பெற எண்ணுதல் தீமையையே பெறுபவருக்கும் தரும்எனவேதான்நல்லறிவுடையோர் நன்றியில் செல்வத்தை நாடமாட்டார்கள்.

“அள்ளிக்கொள் வன்ன” என்று சொல்வதன் மூலம் வெளிக்கவர்ச்சிக்கு மயங்குவதில் பயனில்லைபுறத்தோற்றத்தில் ஏமாந்து தீய படுகுழியில் வீழ்வதால் எனன பயன்எனவேபுறத்தோற்றத்தில் நல்லறிவுடையோர் மயங்க மாட்டார்கள் என்பதையும் இப்பாடல் உணர்த்துகிறது.

“பணம்படைத்தவரின் சொல்லைக் கேட்டு

அதுக்குத் தாளம் போட்டுபலர்

பல்லிளித்துப் பாடிடுவார் பின் பாட்டு”

என்கிறார் மருதகாசி ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படத்தில்

இவ்வாறு வாழாதவரே நல்வாழ்வு வாழ்வோர் ஆவார்.

‘அந்தமான் காதலி’ திரைப்படத்தில் கண்ணதாசன் பாடல் ஒன்று,

பணம் என்னடா பணம் பணம்

குணம்தானடா நிரந்தரம்

என்கிறதுஇதை உணராமல் குணங்கெட்டவரின் பணத்தை நாடுவது தவறு.

 நாம் நல்ல வழியில்நடந்துவிட்டுப் பொல்லா வழியில் நடப்பவர் செல்வத்தை நாடுவது தவறாகும்அது நாமும் பொல்லா வழியில் நடப்பதற்கு ஒப்பாகும்எனவே,

நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்!

Followers

Blog Archive