Wednesday, February 18, 2026

இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 1 : இலக்குவனார் திருவள்ளுவன்



  “இன்றைய மன்பதைச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்”என்னும் பொதுப்பொருண்மையில் 22 தலைப்புகளில் இதுவரை உரையாற்றி உள்ளனர். இன்றைய மன்பதையை ஆட்டிப்படைக்கும் சிக்கல்களைத் தேர்ந்தெடுத்துக் கவிஞர் செவ்வியன்  தொடர் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். கவிஞர் செவ்வியன் இப்பொழிவுகளில் இடம் பெற்ற தலைப்புகளில் முன்னரே உரை ஆற்றியுள்ளார் அல்லது எழுதி உள்ளார். எனவே, தாமே முழுமையாகப் பேசக்கூடிய கருத்தாழம் உள்ளவராக இருப்பினும் பிறரது கருத்துகளையும் அறியச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இப்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார் எனக் கருதுகிறேன். நிறைவுரை ஆற்ற என்னை அழைத்த கவிஞர் செவ்வியன் அவர்களுக்கும் அன்றில் இறைஎழிலன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கவிஞர் செவ்வியன் தெரிவு செய்துள்ள இச்சிக்கல்களை ஆராய்ந்து தீர்த்தாலே நாடு நலம் பெறும் மக்கள் வளம் பெறுவர்.

  முதலில் அனைவரின் பேச்சுகளையும் அறிந்து அதற்கேற்ப என் கருத்துகளைப் பதியலாம் என எண்ணியிருந்தேன். அக்கருத்துகொண்டிருந்த கவிஞர் செவ்வியன், பின்னர் இவ்வாறு உரைகளின் அடிப்படையில் உரையாற்றும் பொழுது வெட்டியும் ஒட்டியும் அமைவதாக நிறைவுரை அமையுமேன்றி, என்னுடைய கருத்துகளை அறிய  வாய்ப்பிருக்காது; ஆதலின்  தலைப்புகளின் அடிப்படையிலான என் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டினார். ஆதலின், அதற்கிணங்க இத் தொடர்  சொற்பொழிவில் ஆற்றிய உரைகளின் தலைப்புகள் பற்றிய என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.தமிழ்ப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பல்வேறு இதழ்கள் நடத்தி அவற்றின் வழியே தமிழ்ப்பணிகள்ஆற்றியவர்.  இன்றைய தலைப்புகள் குறித்து  அருடைய கருத்துகள் இன்றும் பொருந்துவனவாக அமையும் வகையில் நாட்டில் மாற்றம் ஏற்படாமல் உள்ளது. அவற்றில் சிலவற்றையும் நான் இடையிடையே படித்துக் காட்ட உள்ளேன்.

  இத் தொடர் சொற்பொழிவுகளில் இடம் பெற்ற தலைப்புகள் வருமாறு : –

பொதுத்தலைப்பு: இன்றையச் சமூகச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்

1. (01.09.2012)  தொடக்க விழா

2. (08.09.2012) ஆசிரியர் – நிருவாகம் – பெற்றோர் – மாணவர் உறவுகள்

 3.(15.09.2012) தமிழகத்தில் ஆட்சிமொழியும் பயிற்று மொழியும் ஒன்றியத்தோடு தொடர்புடைய மொழி

4. (22/09/12) இந்திய ஒன்றியமும் மாநிலத் தன்னாட்சியும்

5. (29/09/12) கல்வி அரசு பள்ளி வழியாதனியார் பள்ளி வழியா?

6. (06.10.12) குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு ஏன்எந்த வழியில்?

7. (13/10/12) கல்வி அருகமைப் பள்ளி மூலம்சமச்சீர்க்கல்வி ஏன்எவ்வாறு?

8. (20/10/12) பொதுநல்வாழ்வு – அரசின் போக்கும் மக்களின் கடமையும்

9.(27/10/12) ஊழலும் கையூட்டும் : அரசின் கட்சிகள்அரசு ஊழியர்கள்,பொதுமக்கள்

10.(03/11/12) விலை ஏற்றமும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புப் போராட்டமும்

11. (10.11.12)  இலவயங்கள் – விலையில்லாப் பொருள்கள் – பண்பாடு – ஒழுக்கம- முயற்சி ஆகியவற்றின் அழிவு -அரசியல் கட்சிகள் எதிர்த்துப்போராடாதது

12. (17.11.12) இட ஒதுக்கீடும் சலுகைகளும் சாதி மத அடிப்படையிலாபொருளியல் அடிப்படையிலா?

13. ( 24.11.12) வேலையில்லாத் திண்டாட்டம் உண்மையா?  பொய்யாஉண்மையெனில் தீ்ர்வு என்ன?

14. (01.12.12)  சாதி வெறியும் தீண்டாமை ஒழிப்பும் – பெரியாரின் பங்கு – இவை ஒழியக் காரணங்கள் எவைதீர்வு எவ்வாறு?

15. (08.12.12) உற்பத்தி: பொதுத்துறை – கூட்டுறவுத் தறை – தனியார் துறை- உற்பத்தித் தேவையை நிறைவு செய்யவா?  ஆதாயம்(இலாபம்) ஈடடவாஆதாயம் எனில் ஆதாய விழுக்காட்டை வரையறுப்பது யார்?

16. (15.12.12) இயற்கை வளங்கள் கொள்ளை – காரணம் யார்அரசாதனியார்களா?

17. (22.12.12) முனைப்புவாதமும்(தீவிரவாதமும்) வன்முறையும் ஏன்எப்போதுதீர்வுக்கு என்ன வழி?

18. (29.12.12) பண்பாட்டுச் சீரழிவுக்குப் பொறுப்பு :திரைப்படம் – சின்னதிரை – விளம்பரம் – தணிக்கைத் துறை – பெற்றோர் மரபுவழிப் பண்பாட்டைக் காப்பாற்றுதவற்கான போராட்ட வடிவம் என்ன?

19. (05.01.2013)  இன்றைய  குமுகாய அமைப்பில் மண முறிவுகள் – குடும்பச் சீரழிவுகள் – காரணம் என்னதீர்வு என்ன?

20. 12.01.13 அரசியல் கட்சிகள் – சாதியக்கட்சிகள் – மதக்கட்சிகள் ஆகியவற்றின் பெருக்கம் வளர்ச்சியின் அறிகுறியாசீரழிவா?  இந்தியக் கூட்டரசில் எத்தனைக்கட்சிகள் இருக்க வேண்டும்மாநிலக் கட்சிகள் தேவைதானா?

21. 19.01.13  ஆட்சி நிருவாகமும் தேர்தல்முறையும் : அழிவுக்குக் காரணம் அரசியல் கட்சிகளாஅரசுப் பணியாளர்களாவாக்காளர்களா?

22. (26.01.2013) நிறைவு விழா

  தொடக்கமாக நான் ஒரு கருத்தைத் தெரிவிக்க விழைகிறேன்.

 மொழிப்போர் ஈகியருக்கான வீர வணக்க நாள்நடைமுறைக்கிணங்க நேற்று (சனவரி 25)  நிகழ்த்தப்பட்டாலும் உண்மையில் இன்றுதான் வீர வணக்க நாள். முதலில் துக்க நாளாக அறிவிக்கப்பட்டதும் சனவரி 26ஆம் நாளைத்தான். இன்றுதான் இந்தி எதிர்ப்புப் போரில் உயிரிழந்தவர்களுக்கு,  ஈகியருக்கு வணக்கம் செலுத்த வேண்டிய நாள்.  வரலாற்றில் துக்கநாளாக அறிவிக்கப்பட்ட இந்த நாளில் தொடர்பொழிவின் நிறைவு நிகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால்தொடர் பொழிவுகளில் இந்தி எதிர்ப்புப் போரைப்பற்றியோ தமிழ்க்காப்புப்போர் பற்றியோ ஒரு பொழிவும்  அமைக்காதது வியப்பாய் இருக்கிறது. மன்பதைக்குத் தேவையான சிக்கல்கள்பற்றி நன்கு ஆராய்ந்து தலைப்புகள் தந்த,  மொழிப்போர் குறித்து நூல் எழுதிய கவிஞர் செவ்வியன் அவர்கள் ஏன் இதை விட்டு விட்டார்  என்று தெரியவில்லை. இருப்பினும்,  ஆட்சி மொழிபயிற்றுமொழிஒன்றிய மொழி குறித்தும் கல்வி குறித்தும் தலைப்புகள் உள்ளமையால் அவை பற்றிய தலைப்புகளில் இந்தி முதன்மை குறித்தும் தமிழ்க்காப்பு குறித்தும் காணலாம்.

(தொடரும்)

Tuesday, February 17, 2026

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 2 : இலக்குவனார் திருவள்ளுவன்

      18 February 2026      கரமுதல



(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 1 : தொடர்ச்சி)

இந்தி எதிர்ப்பு, பெரியார், தன்னாட்சி வருமாயின் தன்மொழியும் வேண்டாவோ, தமிழ்நாடு தமிழருக்கே ஆகிய நான்கு அம்மானைப்பாடல்களுடன் நூலைத் தொடங்கியுள்ளார். முதல் கட்டுரையான அறிமுகத்தில் இவற்றைக் காணலாம்.

வீட்டுச் சிறையில் இருந்த பெண்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டக்களத்தில் இறங்கிச் சிறை புகுந்ததை இந்நூல் கூறுகிறது. உலகெங்கும் வாக்குரிமை,  அதிகாரம், சம ஊதியம் தொடர்பில் ஏற்பட்ட பெண்கள் எழுச்சியையும் தமிழ் நாட்டில் மொழி காக்க எழுந்த பெண்கள் எழுச்சியையும் விளக்குவதைக் குறிப்பிட்டுள்ளார்.

 பள்ளிகளில் கட்டாய இந்திப்பாடம் 21.04.1938 ஆம் நாளிட்ட அரசாணை மூலம் புகுத்தப்பட்டது. அதற்கு முன்பே 24.08.1937 இல் தஞ்சையில்  முதல் இந்தி எதிர்ப்புக் குரல் எழுந்ததைக் குறிப்பிடுகிறார்.

இக்கட்டுரை இந்நூலின் செய்திகளின் சுருக்கமாக இடம் பெற்றுள்ளது.

போராட்டக் களத்தில் பெண்கள் பங்கேற்பு குறித்து இரண்டாவது கட்டுரை  விளக்குகிறது.

முதன்முறையாகக் கைதாகிச் சிறை சென்றவர் பெரியார் ஈ.வெ.இராமசாமியின் தங்கை சா.இரா.கண்ணம்மாள் என்பதைக் குறிப்பிடுகிறார். 24.10.1937 இல் இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும் என்று தலையங்கம் எழுதியதால் பெரியாரும் பதிப்பாளர் என்ற முறையில் தங்கை கண்ணம்மாவும் தண்டிக்கப் பெற்றுள்ளனர். இவர், புரட்சி, குடியரசு ஆகிய இதழ்களின் பதிப்பாசிரியராக இருந்தார்.

பேராயம்பட்டுத் தோழர் டி.இரங்கம்மாள், 28.01.1938 ஆம் நாளிட்ட ‘புரட்சி’ இதழில், “திருவண்ணாமலை இரகசியம்- பார்ப்பனர்களின் கொண்டாட்டமும் பாமரர்களின் திண்டாட்டமும்” என்னும் கட்டுரையில் திருவண்ணாமலை தீபத்தின்பொழுது பெண்கள்படும் இன்னல்களைப் பட்டியலிட்டுத் தந்துள்ளார். பெண்கள் பொதுவெளிக்கு வருவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்தே பெரியார் இயக்கம் நடத்தும் கூட்டங்கள், மாநாடுகளில் பெண்களுக்கென்று தனியிடம் ஒதுக்கப்பட்டது. பல மாநாடுகளில் பெண்களின் தலைமையுரை, தொடக்கவுரை, மாநாட்டுத்திறப்புரை, எழுச்சியுரை முதலியவை  இடம் பெற்றமையை இக்கட்டுரையில் விளக்குகிறார். நீலாம்பிகை அம்மையார், காந்தி பெண்களின் நிலையை உணராமையைக் குறிப்பிட்டுச் சாடியுள்ளமையை எடுத்துரைக்கிறார்(புரட்சி 04.02.1938).

மூன்றாம் கட்டுரையில் நீலாவதி அம்மையார் காந்தியடிகளிடம் கேட்ட கேள்விகள் குறித்து எழுதியுள்ளார். காந்தியடிகளின் மதவாதப்போக்கிற்கு எதிராகக் கேள்விகள் கேட்ட அவர், அவரது அறிவுரையால் தேசத்தொண்டிலும் அடி எடுத்து வைத்தார். குமுக நீதிக்கும் தன்மதிப்பிற்கும் சான்றாக நீலாம்பிகை அம்மையார் விளங்கியதை இக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.

போராட்டத்துக்கு உரமிட்ட தலைவர்களை நான்காம் கட்டுரையில் விளக்குகிறார். தமிழர் கழகம் அமைப்பின் தொடக்க விழாவில்(04.09.1938) தலைமையுரையாற்றிய மீனாம்பாள் சிவராசு, பெரியாராலும் அண்ணாவாலும் பாராட்டப்பெற்ற ‘அன்னை’ இதழின் ஆசிரியர் சத்தியவாணிமுத்து, 01.09.1938 இல் நடைபெற்ற மாதர் சங்கப் பொதுக் கூட்டத்தில் பண்டிதை நாராயணி அம்மையார் அமிழ் பாதை ஊர்தி(டிராம்), பேருந்து முதலியவற்றில் ஆங்கிலத்தில் பெயர்ப்பலகைகள் இருப்பதைத் தமிழுக்கு மாற்ற வேண்டும் என்னும் தீர்மானம், 03.09.1938 அன்று தோழர் பார்வதி அம்மையார் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட இந்தி எதிர்ப்பு ஊர்வலம், 09.09.1938 அன்று சென்னை புதுவண்ணாரப் பேட்டையில் நடைபெற்ற தோழர் மீனாம்பாள் சிவராசு தலைமையிலான பெரும் இந்திஎதிர்ப்புப் போராட்டம் முதலிய பல போராட்டங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

1938 பெண்கள் மாநாடு முதல் அறிவிப்பு குறித்து ஐந்தாம் கட்டுரை விளக்குகிறது.

இவ்வறிவிப்பின் மூலம் இதுவரை சலசாட்சி, சரசுவதி, புட்பவதி ஆகிய பெண் தலைவர்களின் பெயர்கள், தாமரைக்கண்ணம்மையார், கலைமகளம்மையார், மலர் முகத்தம்மையார் எனத் தனித்தமிழ்ப் பெயர்களாக மாறியமையைச் சுட்டிக் காட்டுகிறார்.

பெண்கள் மாநாட்டுக்குத் திருவரங்க நீலாம்பிகை அம்மையாரைத் தலைவராக்கியது தமிழ் இயக்க மக்களை ஒரு குடையின் கீழ் ஒன்று திரட்ட உதவும் என வீரத்தமிழன்னை தருமாம்பாள் கணக்கிட்டது மிகச் சரியானது என்கிறார். எனவேதான் இந்தி எதிரப்பு என்பது வெறும் இந்தி எதிர்ப்பாக மட்டுமல்லாமல் தனித்தமிழ்க்காப்பாகவும் சிறந்து விளங்கியது.

தோழர் பார்வதியம்மாள் மூவேந்தர் கொடியின் தொன்மை, சிறப்பு ஆகியவற்றை விளக்கி, தமிழ் மக்கள் தமிழ்க்கொடியை ஏற்ற வேண்டிய இன்றையமையாமையையும் வலியுறுத்தி, தமிழ்க்கொடியை ஏற்றி வைத்தார். தமிழர் இயக்கம் வகுப்புவாதமற்றது என்பதை இராசகோபாலாச்சாரி புரிந்துகொள்ள வேண்டும் என்றவர், தமிழர்கட்கு, தமிழ்நாட்டிற்கு வெற்றி வெற்றி என்று வலுத்த கைதட்டுதலுக்கிடையே தமிழ்க்கொடியை ஏற்றியுள்ளார்.

சிலர் திரு.வி.க.விற்கு எதிராகக் குரல் எழுப்பியதையும் அதற்கு அவர் தக்கவிடையிறுத்ததையும் பதிந்துள்ளார்.  பெண்கள் மாநாட்டிற்காகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்தமையை விளக்கி இதன் சிறப்பான ஒழுங்கு முறையைப் பாராட்டியுள்ளார்.

Monday, February 16, 2026

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07: இலக்குவனார் திருவள்ளுவன்



(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 06: தொடர்ச்சி)

07

தமிழ் இலக்கியங்களில் ‘தமிழ்’ என்னும் சொல்

  ‘திராவிடம்’ என்பது பெரும்பாலும் தமிழ்மொழியையும் தமிழ்இனத்தையும் தமிழ்க்குடும்பத்தையுமே குறிக்கின்றது. ஆனால், திராவிடம் எனத் தனியாக ஒன்று இருப்பதுபோல் சிலர் வேண்டுமென்றே பரப்பிவருகின்றனர். தமிழ் என்பது இலக்கியங்களில் உள்ளதா என்றும் அறிந்தும் அறியாமலும் கேட்கின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்திலேயே தமிழ் என்பது இடம் பெற்றிருக்கிறது.

தமிழென் கிளவியும் அதனோ ரற்றே.

(தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 386 )

             செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்

(தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 398)

             செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

(தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 400)

             தமிழ்கூறு நல்லுலகத்து

(தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம்)

             செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு

(தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம்)

  தமிழ் இலக்கியங்களில் ஆயிரக்கணக்கில் தமிழ் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கில் தமிழ் அடைமொழிகளுடன் குறிக்கப்படுகிறது. அவ்வாறிருக்க, தமிழ் மொழிக்குப் பெயரைப் பிற இனத்தார் அல்லது மொழியார் சூட்டினர் என்பது கேலிக்குரியதல்லோ?

‘திராவிடம்’ தவறு; தமிழ்க்குடும்ப மொழிகள் என்பதே சரி

  “உலகில் ஈராயிரத்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு (2796) வேறுபட்ட மொழிகள் உளவாம். இவற்றை எல்லாம் சில குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். அவை இந்தோ – ஐரோப்பியன், செமிதிக்கு, சீனம், மலேயா, பொலீசியன், சிதியன் எனப்படும். சிதியன் குடும்பத்தில் திராவிட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் திராவிட மொழிகள் என்று கூறப்படுவனவற்றைத் தமிழ்க் குடும்பம் என்று பெயரிட்டுத் தனிக் குடும்பமாகக் கருதுவதே ஏற்புடையதாகும்.” என்கிறார் பழந்தமிழறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார்(பழந்தமிழ் பக்கம் 30).

  திராவிடம் என்று சொல்லாமல் நாம் தமிழ்க்குடும்ப மொழிகள், தமிழ்க்குடும்ப இனம் என்றே சொல்வோம். ஆனால், வேண்டுமென்றே திராவிடம் தமிழைக் குறிக்கின்றது என்பதை மறைத்துவிட்டு, தமிழில் இருந்து பிற மொழிகள் வந்தன என்பதையும் மறைத்து விட்டு, மூலத் திராவிட மொழி என்று ஒன்று இருந்ததாகவும் அதிலிருந்தே தமிழ் முதலான மொழிகள் தோன்றின என்றும் திரிப்போர் உலகில் செல்வாக்குடன் திரிகின்ற பொழுது நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கின்றது?

  தலைசிறந்த மொழியியல் அறிஞர் தொல்காப்பியர். அவர் தமிழ் மரபைக் காக்க அன்றைக்கே நூல் எழுதினார். இன்றைக்கோ மொழியியல் துறையைச் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையர் தமிழின் சிதைவிற்கு வழிவகுத்து வருகின்றனர். பேச்சுவழக்கே மொழியின் உயிர் எனக் கூறிக் கொண்டு, கொச்சை நடைக்கு வாழ்வளித்துச் செந்தமிழை அழித்து வருகின்றனர்.

தமிழ்எழுத்துகளைச் சிதைப்போர் உளரே!

  “ஒலி எழுத்து முறைகளில் தமிழ் எழுத்து முறையே சாலச் சிறந்ததாக அமைந்துள்ளது. தமிழில் ஒலியைக் குறிக்கும் வரி வடிவங்கள் முப்பத்தொன்றேயாகும். ஆங்கிலத்தில் வரி வடிவங்கள் இருபத்தாறு என்றாலும் ஒரே வரி வடிவம் வெவ்வேறு ஒலிகளைத் தருகின்ற முறையில் சில எழுத்துகள் உள்ளன. தமிழில் அவ்வாறு இன்று. வல்லின எழுத்துகள் மெல்லினச் சேர்க்கையாலும், சார்ந்து வரும் பிற எழுத்துகளினாலும் ஒலிப்பு முறையில் சிறிது வேறுபடக் கண்டாலும் அதனால் பொருள் வேறுபாடு ஏற்படாது. மிகுமுயற்சியின்றி ஒலிப்பதற்குரிய எழுத்து முறையையுடையது தமிழேயாகும்.” என்கிறார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்(பழந்தமிழ், பக்கம் 27).

  உலகில் எழுத்து முறையை முதன் முதல் அமைத்துக் கொண்டவர் தமிழரே என்றும் தமிழரிடமிருந்து சுமேரியர் கற்றுப் பிற இனத்தவர்க்கு அறிவித்தனர் என்றும் ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர். தமிழர்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே செப்பமுள்ள எழுத்து முறையைக் கொண்டிருந்தனர். ஆதலின், எழுத்து முறை தமிழர்களிடமிருந்தே பிற மொழியாளர்க்குச் சென்றுள்ளது என்னும் கூற்றுப் பொருத்தமும் உண்மையும் உடையதாகவே தோன்றுகிறது. என்றும் இலக்கணச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்குகிறார்(பழந்தமிழ் பக்கம் 26).

  “தமிழர்கள் எழுத்து முறையை என்று அமைத்துக் கொண்டனர் என்று எவராலும் வரையறுத்துக் கூற இயலாது. நமக்கு கிடைத்துள்ள நூல்களுள் ‘தொல்காப்பியம்’ தமிழ் எழுத்து முறையை விரிவாக ஒன்பது இயல்களில் ஆராய்கின்றது. இத்தகைய விரிவான ஆராய்ச்சி வேறு எம்மொழியினும் காண்டல் அரிது. ‘எழுத்து’ என்னும் சொல் ஒலி வடிவத்தையும் குறிக்கப் பயன்பட்டுள்ளது. ஆதலின் பேச்சு மொழி தோன்றியவுடனே எழுத்து முறையையும் அமைத்துக்கொண்டனர் என்று எண்ண இடம் தருகின்றது. அன்றியும் தமிழில் வரிவடிவ எழுத்து ஒலி வடிவ எழுத்தையே சுட்டுகின்றது. கருத்தினையோ (idea) பொருளையோ (object) சுட்டுவதின்று.” என்றும் நற்றமிழறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்குகின்றார் (பழந்தமிழ்: பக்கம் 26).

  இத்தகைய ஒலிவடிவச்சிறப்பு மிக்க தமிழ்எழுத்துகளை ஊடகங்கள் வழி சிதைப்பவர்களும் உலவும் பொழுது வாளாவிருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைகொள்ள என்ன இருக்கிறது?

தமிழ்வழிக்கல்வி முழுக் கனவாய் மாறிக்கொண்டுள்ளதே!

தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார். அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் தோன்றும் நிலை ஏற்படவில்லை. தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர். ஆதலின் ஆங்கிலம் அகன்றால் அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும். பிற நாடுகளைப் போன்றே நம்நாடும் எல்லா நிலைகளிலும் நம் மொழியைப் பயன்படுத்துதல் வேண்டும். அப்பொழுதுதான் நம் தமிழ் என்று முள – எதற்கும் பயன்படுமொழியாக இலங்கும்” எனப் பயிற்றுமொழிப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்துகிறார்.(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 284-285) இன்றைக்கு ஆங்கிலவழிப் பள்ளிகள் பெருகிவிட்டன. தமிழ்வழிப்பள்ளிகள் உள்ள அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில வழி புகுந்துவிட்டது. அது தானாகப் புகவில்லை. அரசால் புகுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழே கல்வி மொழி என்பதைச் செயல்படுத்தாத நாம், தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?

Saturday, February 14, 2026

நாலடி நல்கும் நன்னெறி 24: நிலையான பயன் தரும் அறம் செய்க!: இலக்குவனார் திருவள்ளுவன்



(நாலடி நல்கும் நன்னெறி 23: பனைபோல் உயர்தன்மையுடையாரிடம் நட்பு கொள்க!: தொடர்ச்சி)

என்ன செய்தாலும் நிலையான வாழ்க்கை கிட்டாது. ஆதலின் நிலையான பயன் தரும் அறம் செய்க!

மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் – ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.

நாலடியார் 40

கருத்து:

ஈனச்செயலான பிச்சையை மேற்கொண்டேனும் உயிர் வாழலாம் என்னும் நிலை இருந்தால் நிலையான வாழ்விற்காக அதனை மேற்கொள்ளலாம். (ஆனால், உடம்பு நிலையானதில்லை. ஆதலின் நிலையான அறச்செயல் செய்வோமாக!)

பதவுரை:

மான அருங் கலம்=மானம் என்னும் மதிப்பு மிக்க அணிகலனை;  நீக்கி=நீக்கிவிட்டு; இரவு என்னும்=பிச்சை எடுத்தல் என்று சொல்கின்ற;    ஈன=ஈனத்தனமான; இளிவினால்=இழி செயலைச் செய்தாலும் கூட;   வாழ்வேன்மன்=உயிர் வாழ்வேனா; ஈனத்தால்=இழிவான செயல்களால்; ஊட்டியக் கண்ணும்=உணவு வகைகளை உண்பிக்கச் செய்தும்;  உறுதி சேர்ந்து=உறுதிபடச் செய்து; இவ் உடம்பு=இந்த உடல் ;   நீட்டித்து நிற்கும்=அழிவின்றி நிலைத்து நிற்கும்; எனின்=என்றால்;

நிலையாமையைக் கூறுவது போல் தோன்றினாலும் இப்பாடல் அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில்தான் வருகிறது. எனவே, அறச்செயல்களை வலியுறுத்துவதற்காக நிலையிலா வாழ்வில் நிலைத்த பயன்தரும் அறச்செயல் செய்ய இப்பாடல் வலியுறுத்துகிறது.

நிலையாமை குறித்துக் காலந்தோறும் பல பாடல்கள் வந்துள்ளன. திரைப்படப் பாடல்களும் பல உள்ளன.

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

வாழும் மனித சாதி

என்னும் ஆபாவாணன் பாடலும் (ஊமை விழிகள்-1986) அவற்றில் ஒன்றாகும்.

வாழ்வு நிலைக்கும் என்ற கனவில் நிலையான அறச்செயல்களைச் செய்யத் தவறக்கூடாது என்பதே ஆன்றோர் கருத்தாகும்.

‘இரவச்சம்’ எனத் திருவள்ளவர் இரத்தலின் கொடுமை குறித்து ஓர் அதிகாரமே படைத்துள்ளார்.

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்

வன்மையின் வன்பாட்ட தில். (திருக்குறள் 1063)

என வறுமைக் கொடுமையைப்  பிறரிடம்  இரந்து   போக்கிக்  கொள்ளலாம் என்று கருதக்கூடிய கொடுமையைப்போல் வேறொரு கொடுமை  எதுவும் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

நற்செயல்கள்தான் செய்ய வேண்டும். ஆனால் எப்படியாவது நிலையான வாழ்வு பெற வேண்டும் எனச் சிலர் எண்ணலாம். எனவேதான், இழிவான இரத்தலைச் செய்தாவது நிலையான வாழ்வு பெறலாமா என்ற எண்ணம் கொள்வோருக்காக இப்பாடல் அறிவுரை கூறுகிறது.

உயிர் நிலைக்கும் என்றால் இரத்தலைப் போன்ற இழிவான கொடுமையான செயல்களைச் செய்யலாம். ஆனால், என்ன செய்தாலும் வாழ்வு நிலைப்பதில்லை. எனவே, நில்லா உலகில் நிலையான அறச்செயல் செய்ய வேண்டும் என நாலடியார் வலியுறுத்துகிறது.

என்ன செய்தாலும் நிலையான வாழ்க்கை கிட்டாது. ஆதலின் நிலையான பயன் தரும் அறம் செய்க!

 இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive