Wednesday, May 6, 2026

தமிழை முன்னிலைப்படுத்தும் விசய்! – இலக்குவனார் திருவள்ளுவன்



நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வாகைசூடி அருந்திறல் புரிந்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விசய்.

அவருக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அகரமுதல மின்னிதழ் சார்பாகவும் தமிழ்க் காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பர்களால் தளபதி என அழைக்கப்பெறும் விசய், கட்சி தொடங்கிய ஈராண்டுகள் இரு திங்களிலேயே ஆட்சிக் கட்டிலில் ஏறும் அருவினை புரிந்துள்ளார்.

பெரும்பாலும் புதிய வேட்பாளர்களையே நிற்க வைத்து, வெற்றி கண்டுள்ளார். பண வலிமை, சாதி வலிமை முதலியவற்றை முறியடித்து வாகை சூடியுள்ளார்.

தமிழ்நாடு முழுமையும் பரப்புரை மேற்கொள்ளாமை, முதன்மைச் சிக்கல்கள் குறித்து வாய் திறவாமை முதலான குறைகளை அவர்மீது சுமத்தினர். இருந்தும் அமைதியாக அதனைப் புறந்தள்ளி விட்டார்.

இதனால் அவரது ஆதரவு குறையும் என்று தேர்தல் ஆர்வலர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தன்னம்பிகையை மட்டும் கைக்கொண்டு தன்பாணியில் செயற்பட்டார்; தன்னம்பிக்கை அவருக்கு வெற்றி மாலை சூட்டியுள்ளது.

த.வெ.க. தேர்தல் அறிக்கை திருக்குறளில் உள்ள அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக விசய் குறிப்பிட்டார்.

திருக்குறள் அடியான “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை முழக்கமாக வைத்துள்ள அவர் தமிழ் நலன் சார்ந்தே செயற்படுவார் என எதிர்பார்க்கலாம்.

கொள்கைப் பாடல், கொடிப் பாடல், உறுதிமொழி என எதுவாக இருந்தாலும் தமிழ் உணர்வைத்தான் மையமாக வைத்துள்ளார்.

கட்சிப்பெயரில் திராவிடத்தை இல்லாமல் ஆக்கித் தமிழகத்தை முதன்மைப்படுத்தியது உண்மையிலேயே தமிழ் முனைப்பு நோக்கத்தால்தான் என உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் குமுகாய நீதி போன்றவற்றில் ஆரியத்திற்கு எதிரான திராவிடமே தேவை என்பதைத் தீண்டாமை, பகுத்தறிவு தொடர்பான தீர்மானங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழி, வழிபாட்டு மொழி என்பது உறுதி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க, உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்;

தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சிக் கல்வி வரை கற்கலாம் என்பதும், தமிழ்வழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் உறுதி செய்யப்படும்;

உலகத் தொடர்பிற்காக ஆங்கிலத்தை இரண்டாவதாக ஏற்கும் தமிழ்நாட்டின் மீது மூன்றாவது மொழியாக இந்தியையும் சமற்கிருதத்தையும் திணிக்கும் ஒன்றிய பா.ச.க. அரசின் சூழ்ச்சியைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் ஏற்காது; எனவும் அறிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் சிக்கலுக்குப் பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு எல்லாவகையிலும் தமிழ்மொழி, தமிழ் இன, தமிழ்நலச் சிந்தனையே த.வெ.கழகத்தின் வெளிப்பாடாக உள்ளது.

இவற்றைச் சிறப்பாகச் செயற்படுத்த வேண்டும். தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டவற்றைத் தொய்வின்றி மக்கள் பயனுறும் வண்ணம் செயற்பட வேண்டும். 

தமிழுக்குச் செய்யவேண்டியவை பல உள்ளன. தமிழ் தொடர்பான எந்த அமைப்பைத் தோற்றுவித்தாலும் தமிழர் அல்லாதவரை அமர்த்துவது அல்லது தமிழுணர்வற்றவர் பொறுப்பில் ஒப்படைப்பது அல்லது தமிழறிவில்லாதவருக்கு வாய்ப்பளிப்பது என்பதே அரசின் கொள்கையாக இருந்துள்ளது. இதனை மாற்ற வேண்டும்.

மு.க.தாலின் ஆட்சியும் நிறைகளும் குறைகளும் கொண்டதுதான்.

(திருக்குறள், ௫௱௪ – 504) என்கிறார் திருவள்ளுவர்.

அவ்வாறு பார்த்தால் மக்கள் பாராட்டும்படிதான் ஆட்சி நடத்தினார். எனினும் அரசிற்கு நெருக்கமாகவும் மக்களுக்குத் தொலைவாகவும் உள்ள அதிகாரிகளால் மக்கள் ஆளுங்கட்சியிடமிருந்து விலகினர்.

செயலில் மந்தம் போன்றவற்றால் மக்களுக்கு ஆட்சியாளர் மீது வெறுப்பும் வரலாயிற்று. பொதுவாக ஒருவர் தி.மு.க. ஆதரவாளராக இருந்தால் அவர் குடும்பத்தினரும் அவ்வாறுதான் இருப்பர்.

ஆனால், இப்போது  உதயசூரியனை ஆதரிப்பவர் உதயசூரியனுக்கு வாக்களித்தாலும் அவர் குடும்பத்தினர் ஊதலுக்கு வாக்கு பதியும் நிலை ஏற்பட்டது.

எனவேதான், தி.மு.க. தோல்வியுறும் என்று கருதியவர்களும் அதிர்ச்சியாகும் வகையில் பெரும் தோல்வியைக் கண்டது.

தமிழ்நாட்டு நலனுக்கு எதிரான பா.ச.க. வரக்கூடாது எனத் தி.மு.க. கருதியவாறே பாசக மாபெரும் தோல்வியடைந்து ஒரே ஒரு தொகுதியில்மட்டும் வெற்றி பெற்றது.

ஆனால் முதல்வர் மு.க.தாலினே வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலை வந்து விட்டது. பெருந்தலைவர்களுக் கெல்லாம் தோல்வியையும் பரிசாக அளிப்பது மக்கள் வழக்கம் என்பதால் அவர் இதனை இயல்பாக எடுத்துக் கொண்டு தம் பணியைத் தொடர்வது பாராட்டிற்குரியது.

இப்பொழுது நாம் த.வெ.க. ஆட்சியமைப்பது குறித்தும் பார்க்க வேண்டும்.

த.வெ.க.விற்கு 108 ச.ம.உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அதன் தலைவர் தாம் வென்ற இரு தொகுதிகளில் ஒன்றிலிருந்து பதவி விலகும் பொழுது ஆட்சியமைப்பதற்குத் தேவையான எண்ணிக்கை 11 ஆகிவிடும்.

இப்பொழுது பேராயக் கட்சி (காங்கிரசு) ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது. காரணம் என்னவாக இருந்தபோதிலும் பா.ச.க. படுகுழியில் த.வெ.க.விழாமல் காக்கும் அரணாக இதை எண்ண வேண்டும்.

இதேபோல் தி.மு.க.வின் பிற தோழமைக் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க, தி.மு.க. கூட்டணித் தலைவர் தாலின் இசைய வேண்டும். இல்லையேல், போதிய எண்ணிக்கை இல்லை எனச் சொல்லிக் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழி வகுத்து விட்டுப் பின்னர் ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லி நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் நடத்தலாம் எனப் பாசக திட்டமிடலாம்.

எப்பொழுதும் திராவிடக் கட்சிதான் தமிழ்நாட்டை ஆளும் என தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சித் தலைவர்களும் சொல்லி வந்துள்ளனர்.

எனவே, இவ்விரு கட்சிகளுமே இணைந்து ஆட்சியை அமைக்கலாம். இதற்கு எதிராக யார் என்ன கூறினாலும் பொருட்படுத்தாமல் பாசகவிடமிருந்து தமிழ்நாட்டைக் காக்க இம்முடிவிற்கு வருவது நல்லது எனத் தெரிவிக்கின்றோம்.

இப்போக்கு எவ்வாறு இருப்பினும் குறைந்த காலத்தில் நிறைந்த வெற்றி பெற்றுள்ள த.வெ.க.தலைவர் விசய்க்குப் பாராடடுகளையும் ஆட்சியமைக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday, May 5, 2026

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33: பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன்



(மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!: சங்கப் புலவர்கள் பொன்னுரை – 32  – தொடர்ச்சி)

***

தீது=தீமைகள்; சேண்=தொலைவில்; இகந்து=ஒதுக்கி (தீமைகளை இல்லாமல் ஆக்கி); நன்று=நன்மைகளை; மிகப் புரிந்து=மிகுதியாகச் செய்து;

கடலும் கானமும்=கடல் சார்ந்த இடங்களும் (நெய்தல்), காடு சார்ந்த இடங்களும் (முல்லை/குறிஞ்சி); பலபயம் உதவப்=(மீன், முத்து, விறகு, தேன் போன்ற) பல்வேறு பயன்களைத் தந்து உதவ;

பிறர் பிறர் நலியாது=பிறரை வருத்தவோ, துன்புறுத்தவோ செய்யாமல்; வேற்றுப்பொருள்=மற்றவரின் பொருளுக்கு; வெஃகாது=ஆசைப் படாமல்;

மை இல்=குற்றமற்ற; அறிவினர்=அறிவுடையவர்கள் / தூய அறிஞர்கள்; செவ்விதின்=நல்வழியில்;நேர்மையாக; நடந்து=நடந்து கொண்டு; தம்=தங்களின்;

அமர்துணைப்=அன்பிற்குரிய வாழ்க்கைத் துணையை; பிரியாது=பிரியாமல்; பாத்து=பகுத்து; உண்டு=உண்டு; மூத்த=முதுமையுற்ற; யாக்கையொடு=உடலோடு;

பிணி இன்று=நோய் இன்றி: கழிய = வாணாள் கடந்து செல்லும் வகையில் உயிர் வாழ்க.

தீமைகளெல்லாவற்றையும் நம்மை நெருங்காதபடிக்கு நீக்கி, நன்மையான வற்றையே மிகுதியாக ஆற்றி, நெய்தல், முல்லை, குறிஞ்சி, நிலப்பகுதிகளில் இருந்து கிடைக்கும் மீன், முத்து, விறகு, தேன் போன்ற பல்வேறு பயன்களைத் தந்து உதவ,

நாட்டு மக்கள் எல்லாரும் பிறரை வருத்தாமலும், பிறருக்கு உரித்தான பொருளைத் தாம் விரும்பாமலும் குற்றமல்லாத தூய அறிவுடைய வராகச் செவ்வையாக நடப்பவர்களாய்த், தம்பால் அன்பு செய்து வாழ்கின்ற துணைவரைப் பிரியாமல்,

தம்மை நாடி வந்தோருக்குத் தம்மிடமுள்ளதைப் பகுத்து உண்டு, முதுமை பெற்ற யாக்கையும் நோயும் இல்லாதவராய்த் தம் வாழ்நாளைக் கழித்திடுக.

பல்யானைச் செல்கெழு குட்டுவனின் முன்னோர் அறநெறி பிழையாது ஆட்சிச் சக்கரம் தடையின்றி உருளும் வகையில் ஊழி ஊழியாக நல்லாட்சி புரிந்துவந்தனர்.

அவர்களின் ஆட்சியில் தீமைகள் விலக்கப்பட்டன. நல்லனவற்றை மிகுதியாக ஆற்றினர்.

கடல் வளமும், மலைக் காட்டு வளமும் உறுதுணையாக உதவ நல்லாட்சி புரிந்தனர்.

நாட்டில் யாரும் எவரையும் துன்புறுத்தாவண்ணம் பார்த்துக்கொண்டனர். மக்களும் மாற்றாரின் பொருளை விரும்பாமல் வாழ்ந்தனர்.

குற்றமற்ற அறிவுடையவர்களாய் நல்வழி பிறழாமல் வாழ்ந்து வந்தனர். தம் மீது விருப்பம் கொண்டவர்களைப் பிரியாமல் அவர்களுக்கு உறுதுணையாக வாழ்ந்து வந்தனர்.

தாம் பெற்ற உணவுப் பொருள்களைப் பிறருக்குப் பகுத்துத் தந்து உண்டு மகிழ்ந்தனர்.

இதனால் முதிர்ந்த யாக்கையோடு பிணி இன்றி ஊழி ஊழியாக வாழ்ந்தனர்.

இவ்வாறு புலவர், பல்யானைச் செல்கெழு குட்டுவனின் முன்னோரின் செம்மையான ஆட்சித்திறம் குறித்துக் கூறுகிறார்.

இவ்வாறு நெடுங்காலம் ஆட்சி செலுத்திய, அறிவும் ஆற்றலுமுடைய பேரரசர்களின் வழித்தோன்றல் எனப் புலவர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு பேரரசர்களின் சிறப்பைக் கூறுவதன் மூலம் மக்களும் தீமை புரியாமல் நன்மை ஆற்றி, பகுத்துண்டு, நோயின்றி நெடுங்காலம் வாழ வேண்டும் என வலியுறுத்துகிறார்.

தமிழ் நெறியை வழி வழி வந்த புலவர்கள் வழியில் பாரதியாரும்,

என்கிறார்.

(திருவள்ளுவர், ௨௱௨௰௭ – 227)

குறள் மூலம் திருவள்ளுவர், பகுத்து உண்பவனைப் பசிப்பிணி தீண்டலரிது என்கிறார்.

(திருக்குறள், ௩௱௨௰௨ – 322)

என்னும் குறள் மூலம் திருவள்ளுவர் பகுத்துண்ணுதல் நூலோர் அறமாகச் சொல்வனவற்றுள் எல்லாம் தலைசிறந்த அறம் என்கிறார்.

வள்ளலார் முருகக் கடவுளிடம், “நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்” என வேண்டுகிறார்.

இப்பாடலில் சங்கப்புலவர் பாலைக் கௌதமனார் கூறிய பொன்னுரைகள் காலந்தோறும் வழி வழியே போற்றப்படுகின்றன என்பதை உணரலாம்.

நாமும்,

தாய், 05.05.2026   

Saturday, May 2, 2026

மொழிப்போர் வரலாறு அறிவோம்! -13 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 1 : இலக்குவனார் திருவள்ளுவன்



(மொழிப்போர் வரலாறு அறிவோம்! -12 : தமிழ்க்காப்பிற்காகவே இந்தியை எதிர்த்தனர் : தொடர்ச்சி)

இந்தி எதிர்ப்புப்போராட்டங்களை அறியும் நாம் அது வந்த வழியான அரசியல் யாப்பு நிலைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவை குறித்துச் சுருக்கமாகப் பார்ப்போம்.

அரசமைப்பு அவைக்கான முதல் கோரிக்கை தன்னாட்சிக்கட்சியால் (Swaraj Party) 03.05.1934 அன்று எழுப்பப்பட்டது. இது வெள்ளைத்தாள் முன்மொழிவுகளை மறுத்தது. இஃது இந்திய அரசு சட்டம் 1935 இல் இணைக்கப்பட்டது.

அரசு செயலர் பிரடெரிக்கு பெத்திக்கு இலாரன்சு(Frederick Pethick Lawrence),    வயவர் இசுதான்போர்டு கிரிப்புசு(Sir Stanfford Cripps),   ஏ.வி. அலெக்குசாண்டர்(A.V. Alexander) ஆகிய இரண்டு அமைச்சர்கள், அடங்கிய அமைச்சுத்தூதுக் குழு வகுத்தளித்த திட்டம்; அமைச்சுத்  தூதுத்திட்டம், 1946 என்று அழைக்கப்படும் இதுவே இந்திய அரசியல் யாப்பு அவையை உருவாக்கியது. இவ்வவை, இந்திய விடுதலைச் சட்டம் 1947, பிரிவு 8இன் கீழ் ஏற்கப்பெற்றது.

இத்திட்டத்தின் கீழ், 1946ஆம் ஆண்டு மாகாணச்சட்ட அவைகளின் உறுப்பினர்கள், மாற்றத்தக்க ஒற்றை வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூடுதலாகத், தன்னரசு இளவரசர்களை அரசியல் யாப்பவையில் சேர்க்கப் பேச்சும் நடந்தது. யாப்பு அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் பெரும்பான்மையர் ஆண் இந்துக்கள். என்ற போதும்,  எல்லா முதன்மை மதக் குழுக்களிலிருந்தும் ஒவ்வொரு குழுவிலிருந்தும் குறைந்தது இருவர் வீதம் 15 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

80% அவை உறுப்பினர்கள் பேராயக்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் கட்சிக்குள்ளேயே வேற்றுமை இருந்தது. இதன் காரணமாக யாப்பு அவையில் சமவுடைமை, தாராளமயம், பழமைவாதம் கருத்துகளின் சார்பு இருந்தது. நாடாளுமன்ற மைய அவையாக இப்போது அழைக்கப்படுகின்ற அரசியல் யாப்பு அவையில் முதன்முறையாக 09.12.1946 அன்று அரசியல்யாப்புக் குழு கூடியது. பதிவேட்டில் கையொப்பமிட்டுச்,  சான்றாவணம் அளித்த 207 உறுப்பினர்கள் வருகைபுரிந்திருந்தனர்.

திசம்பர் 1947 இல் யாப்பு அவையில் 299 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களுள் 229பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், 12 பேர் மாகாண அரசர்கள்/இளவரசர்கள், 70 பேர் தன்னாட்சி அரசுகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்டவர்கள். இம்மன்றத்தில் மொழிகள் குறித்த காரசார விவாதம் நடைபெற்றது.

இந்திய அரசியல் யாப்பு 26.01.1950 இல் நடைமுறைக்கு வந்தது.

இஃது ஏற்றுக் கொள்ளப்பட்ட நேரத்தில், யாப்பு 22 பகுதிகளையும் 396 கூறுகளையும் 8 அட்டவணைகளையும்  145,000 சொற்களையும் கொண்டிருந்தது. உலகிலேயே இது மிக நீண்ட யாப்பாகும்.

யாப்பிலுள்ள ஒவ்வொரு கூறும் யாப்பு அவை உறுப்பினர்களால் 11 அமர்வுகளில் 167 நாள்களில் 2 ஆண்டுகள் 11 திங்களில் விவாதிக்கப்பட்டதாகும்.

அரசியலமைப்பை எழுத வேண்டிய மொழி, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்குரிய மொழி, புதிய குடியரசுக்கான ‘தேசியமொழி’ போன்ற செய்திகள் மிகவும் அனல்பறக்க விவாதிக்கப்பட்டன.

இந்தி பேசும் மாநிலங்களின் உறுப்பினர்களான அல்கு இராய் (சாத்திரி), ஆர்.வி. துலேகர், பாலகிருட்டிண (சருமா), புருசோத்தம் தாசு தாண்டன் (ஐக்கிய மாகாணம்), பாபுநாத்து குகா (பீகார்), அரி வினாயக்கு படசுகர் (மும்பை), சேத்து கோவிந்து தாசு (மத்திய மாகாணம்) ஆகியோர் ஒரு பக்கம் பல இந்தி ஆதரவு சட்ட வரைவுகளைக் கொண்டுவந்து இந்தியை மட்டுமே தேசிய மொழியாகத் தேர்வு செய்ய வாதாடினர்.

 10.12.1946 அன்று துலேகர் “இந்துத்தானி அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள். இந்தியாவின் அரசியலமைப்பை முடிவு செய்கின்ற இந்த மன்றத்தில் இருந்துகொண்டு இந்துத்தானி அறியாதவர்கள் உறுப்பினராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள்; அவர்கள் விலகிக் கொள்ளலாம்” என்று முழங்கினார்.

Friday, May 1, 2026

குறட் கடலிற் சில துளிகள் 45: இன நலமே பாதுகாப்பு! – இலக்குவனார் திருவள்ளுவன்



(குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுணையே- தொடர்ச்சி)

மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து

(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௮ – 458)

மனம் நன்னலமாக இருப்பினும் சான்றோர்க்கு இனநலமே பாதுகாப்பானது.

பதவுரை:

மன-மனத்தின்; நலம்-நன்மை; நன்கு-மிகுதியும்; உடையர்-உ்டையவர்கள்; ஆயினும்-ஆனாலும்; சான்றோர்க்கு-அறிவு, ஒழுக்கம் முதலியவற்றில் சிறந்து விளங்கும் பண்பாளர்க்கு; இனநலம்-இனத்தின் நன்மை; ஏமாப்பு-வலிமை, பாதுகாவல்; உடைத்து-உடையது.

கருத்துரைகள்

மன நலம் இருப்பினும் சிற்றினம் சேராமல் நல்லினத்துடன் சேர்ந்து வாழ்தலே பாதுகாப்பு உடையது என்கிறார் திருவள்ளுவர்.

மணக்குடவர் உரை: 

மன நன்மை மிக வுடையராயினும் இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து.

இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான் இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது.

 பரிமேலழகர் உரை:

மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்; சான்றோர்க்கு  இனநன்மை அதற்கு வலியாதலையுடைத்து

முந்தைய நல்வினையால் மனநலம் உடையவராக இருப்பதாகப் பரிமேலழகர் கூறுவதுபோல் சிலரும் அவர் வழியில் இவ்வாறே கூறுகின்றனர்.

உள்ளத் தூய்மை மிகக் கொண்டவரே ஆனாலும், சான்றோர்க்கு அவரைச் சேர்ந்தவர்களும் நல்லவர்களாக இருப்பது மன வலிமை கெடாது காக்கும்.

சான்றோர்கள் உறுதியான மனவளம் கொண்டவர்கள். அவர்களும் சிற்றினத்துடன் சேர்க்கை கொண்டால், அவர் மனம் தளர்ச்சி யடைந்து உள்ளத்தை மாசுபடுத்தி விடும். நல்ல இனத்தாருடனனான பழக்கம் அத்தகைய தளர்ச்சிக்கு வழி வகுக்காமல் பாதுகாப்பாக இருக்கும்.

சான்றோர்க்கே இனநலம் பாதுகாப்பாக இருக்கும் என்றால் பிறருக்கு மிகுதியும் இனநலம் தேவை என்பதை உணரலாம்.


நல்லினத்தைத் துணையாகக் கொண்டால் தீமையிலிருந்து காக்கவும் அழிவு வராமல் தடுக்கவும் நற்பயன் விளைவிக்கவும் பாதுகாவலாக இருக்கும். எனவே, நாம் இன நலனில் கருத்து செலுத்த வேண்டும். பல நாட்டுப் போராளிகளும் இனநலத்துடன் செயற்பட்டமையால்தான் மக்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டு, அந்நாட்டு விடுதலைக்கு வழிவகுத்தனர். ஈழத்திலும் விடுதலைப்புலிகளும் இன நலத்துடன் செயற்பட்டமையால்தான் அந்நாட்டு மக்களுக்கு எழுச்சி ஏற்படுத்தி இனப்படுகொலைகள் நிகழும்  வரை – வாணாள் வரையும் நல்லாட்சியும் புரிந்தனர்; தம் நாட்டவர்க்குப் பாதுகாப்பாகவும் இருந்தனர். ஆனால்,  இனநலமற்றவர் ஊடுருவலாலும் தமிழ்நாட்டு மக்கள் இனநலனில் கருத்து செலுத்தாததாலும் நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலையாயினர். கைகளில் விழுந்த விடுதலைக்கனி பறிக்கப்பட்டு இறந்தவர்கள் தவிர இருப்பவர்களும் உறுப்புகள் இழந்தும் உடைமைகள் இழந்தும் இன்னலில் சிக்குண்டுள்ளனர். உலகெங்கும் உள்ள தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க நாம் இனநலம் பேணுவோரைத் துணையாகக் கொள்ளவேண்டும். இவ்வாறு பல நாடுகளிலும் இனநலமுடையாரைச் சார்ந்திருப்போர் பாதுகாப்பாக உள்ளனர். அவ்வாறில்லாதார் பாதுகாப்பு இழந்து துயருறுகின்றனர்.

எனவே தூய மனமுடையவராக இருப்பினும் இன நலத்தைப் பாதுகாப்பாகக் கொள்வோம்!

Thursday, April 30, 2026

நாலடி நல்கும் நன்னெறி 28: பெரியோரைப் பிணித்துக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்



(நாலடி நல்கும் நன்னெறி 27: அறநெறி அறியுங்கள்! – தொடர்ச்சி)

அடைந்தார்ப் பிரிவு மரும்பிணியுங் கேடு

முடங்குடம்பு கொண்டார்க் குறலாற் – றொடங்கிப்

பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை

யுறப்புணர்க வம்மாவென் னெஞ்சு.

– நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 173

[அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் – தொடங்கிப்
பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரை
உறப் புணர்க அம்மாஎன் நெஞ்சு.]

கருத்துரை:

அன்பானவர்களைப் பிரிதலும் தீர்க்க இயலா நோயும் கேடுகளும் உடம்பிற்கு வருவதால் பிறப்பு, துன்பம் தரக்கூடியது என்பதை உணரும் பெரியோரைப் பற்றிக் கொள்க.

பதவுரை:

அடைந்தார் = அடைந்தவரை; அஃதாவது அன்பால் தன்னுடன் இணைந்திருப்பவர்கள்; பிரிவும்=அஃதாவது  இயற்கையாகவும் செயற்கையாகவும் தம்மைச்  சார்ந்தவர்களான பெற்றோர், வாழ்க்கைத் துணைவர்கள், உடன்பிறப்புகள், பேரன்மார், பேத்திமார், தாத்தாமார், பாட்டிமார் முதலான குடும்பத்தினர், நண்பர்கள், காதலர்கள், உறவினர்கள் முதலியோரைப் பிரிந்து நிற்றலும்; அரும்=அரிய(மருந்தால் தீர்க்க முடியாத); பிணியும்=கொடுமையான நோயும்; கேடும்=அழிவு, இழப்பு, வறுமை, தொல்லை, தீமை, பிற வகைத் துன்பங்கள் ஆகிய கேடுகளும்; உடங்கு= உடன்; உடம்பு= உடம்பை; கொண்டார்க்கு= உடையவர்களுக்கு; உறலால்= வருவதால்; தொடங்கி = தொடக்கம் முதல்; பிறப்பு=பிறப்பு என்பது; இன்னாது= துன்பம் தருவது;  என்று= என்று; உணரும்=உணரக்கூடிய; பேரறிவினாரை=பேரறிவுசால் பெரியோர்களை; உறப்பு ணர்க=நெருக்கமாய் உணர்க; அம்மாஎன் நெஞ்சு=(அம்மா என்பது அசைச்சொல்.) என் நெஞ்சே!

“விறப்பு முறப்பும் வெறிப்புஞ் செறிவே” என்கிறார் தொல்காப்பியர்(தொல்காப்பியம், சொல்லதிகாரம்,  347); செறிவு என்பது இங்கே நெருக்கத்தைக் குறிக்கிறது. உற = சிக்கென, புணர்க=பிணிப்பதாக என உறப்புணர்க என்பதற்கு விளக்கமளிப்போரும் உள்ளனர்.

நெருக்கமாய் உணர்ந்தால்தானே பற்றிக் கொள்ள இயலும். எனவே, எல்லாம் சரிதான்.

பிறவியைத் துன்பம் நிறைந்ததாக இறையன்பர்கள் கூறுகின்றனர். பிறவியைப் பெருங்கடலை நீந்துவது போன்ற துன்பமானது என்றே அவர்கள் கூறுகின்றனர். எனவேதான் திருவள்ளுவரும் ‘பிறவிப் பெருங்கடல்’ என்கின்றார்.

இன்னல் தரும் பிறவித் துன்பத்திலிருந்து விடுபட ஆன்றோரைத் துணையாகக் கொள்ளச் சொல்கிறது இப்பாடல்.

Followers

Blog Archive