Wednesday, February 25, 2026

இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 2 : இலக்குவனார் திருவள்ளுவன்



(இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 1 : தொடர்ச்சி)

இதற்கிணங்க  மேற்குறித்த இருபது தலைப்புகளையும்  – ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு உள்ளவற்றை – இணைத்துப் பின்வரும் தலைப்புகளி்ல் காணலாம்.

  1. கல்வி
  2. ஆட்சிமொழிபயிற்றுமொழிஒன்றியத் தொடர்பு மொழி
  3. குழந்தைத் தொழிலாளர் நலவாழ்வு
  4. ஊழல்விலையேற்றம்இலவயப் பொருள்கள்
  5. இட ஒதுக்கீடுவேலையில்லாத் திண்டாட்டம்
  6. சாதி வெறிதீண்டாமை
  7. பண்பாட்டுச் சீரழிவுமணமுறிவு
  8. அரசியல் கட்சிகள்தேர்தல்முறைஆட்சிமுறை

கல்வி

  தமிழ்வழிக்கல்வியும் இல்லை; தமிழ்மொழிக் கல்வியும்  முதன்மை நிலையில் இல்லை என்பதே தமிழ்நாட்டின் துன்பமாகும். ஆங்கிலவழிக்கல்வியின் துன்பத்துடன் இந்தி, சமசுகிருதம் முதலான மொழிகளை முதன்மொழியாகப்படிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுத் தமிழ் கற்பிக்க வாய்ப்பில்லா பல கல்விக்கூடங்கள் இருப்பது மிகப்பெரும் அவலமாகும். இப்பள்ளிக்கூடங்களில் தமிழ் பயில விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்பளிக்கப்படாமல், தமிழைக் கற்றுத் தராமல் இருப்பதால் இப்பள்ளிகளைச் சுற்றி உள்ள பகுதியைச் சார்ந்தவர்களும்  இப்பள்ளிகளி்ல் சேர்ந்தால் பெருமை எனக் கருதுபவர்களும் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளிகளில் சேர்த்துத் தமிழ் அறியாத் தலைமுறைகளை உருவாக்கி வருகின்றனர். தமிழால் ஆட்சிக்கு வந்தவர்களும் தமிழின் நிலையைஉணர்ந்தும் உணராமல், தலைமை நிலைக்கு வரவேண்டிய தாய்மொழியைத் தாய்நாட்டிலிருந்தே துரத்தும் நிலைக்கு உடன்பட்டுள்ளனர். மக்களுக்கும் தமிழ்த்தேசிய உணர்வின்மையால் கல்வி பற்றிய அடிப்படை உணர்வினை இழந்து அயல் மொழிகளுக்கு அடிமைப்பட்டு உள்ளனர். எனவே, தமிழ்மொழிக்கல்வியையும்தமிழ்வழிக்கல்வியின் தேவையையும் உணராமல் உள்ளனர். தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் இருக்க வேண்டுமாயின் அடிப்படை நிலையில் இருந்து உச்ச நிலை வரை அனைத்து இடங்களிலும் தமிழே கல்வி மொழியாக இருத்தல் வேண்டும்.

  கல்வியைப்பற்றிக் காணும் நாம் கல்வி தரும் நிலையங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் பார்க்க வேண்டும். 29/09/12 அன்று ‘கல்வி அரசு பள்ளி வழியா? தனியார் பள்ளி வழியா?’ என்ற தலைப்பில் உரை நிகழ்ந்துள்ளது. எனவே, இது குறித்தும் காண வேண்டும்.

  கல்வி என்பது அடிப்படை உரிமையாகும். அரசுகளின் முதல் கடமையே அனைவருக்கும் கல்வியளித்தலே. எனவேதான் பாரதியார்,

இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல், இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்ஆலயம் பதினாயிரம் நாட்டல்

பின்னருள்ள தருமங்கள் யாவும்பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்

அன்ன யாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்

என ஏழைக்கு எழுத்தறிவித்தலைச் சிறந்த செயலாகக் கூறினார்.

    கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்

    கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம். (பாண்டியன்பரிசு இயல் 56)என்னும் பாரதிதாசன் வாக்கிற்கு இணங்க யாருக்குத் தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும். அனைவருக்கும்  கல்வி நல்கா  ஆட்சியாளருக்காசெயல்படுத்தா அதிகாரிகளுக்காகல்விச்சூழலை உருவாக்காத செல்வர்களுக்காஎன எண்ணிச் செயல்பட்டால் அனைவருக்கும் தரமான கல்வி கிட்டும்.

  அரசே அனைத்துக் கல்விக் கூடங்களையும் நடத்திட இயலுமா?  தனியாரிடம் ஒப்படைக்கலாமா? கல்வி முழுவதும் தனியாரிடம் இருக்க வேண்டுமா? முழுமையும் அரசின் பொறுப்பில் இருக்கவேண்டுமா? இரு தரப்பாரிடமும் இருக்க வேண்டுமா? என்பனவெல்லாம் ஆய்விற்குரியனவாக உள்ளன.

   “கல்வி அரசு பள்ளி வழியாதனியார் பள்ளி வழியா?” என எண்ணுவதைவிடக்கல்வி எவ் வழியில் இருக்க வேண்டும் என எண்ணுவதே சிறப்பாகும். தனியார் பள்ளி என்பன பணம் பறிக்கும் இயந்திரங்களாகத்தான் செயல்படுகின்றன. எனவேஅதனை ஒரு வழியாக எண்ணக்கூடாது. அப்படியானால் அரசு பள்ளி வழிதான் ஏற்றதா என எண்ணக்கூடாது. தனியார் பள்ளிகள் செழிப்புடன் செயல்படுகின்றன. அரசு பள்ளிகள் ஏழ்மை நிலையில் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு வினா எழுப்பப்பட்டிருக்கலாம். பள்ளி என்று மட்டும் பார்க்காமல் தனியார் பொறியியல் கல்லூரிகள்தனியார் மருத்துவக் கல்லூரிகள் முதலானவற்றையும் கருத்தில் கொண்டு மழலைக் கல்வி முதல் ஆய்வுநிலைக் கல்வி வரை,  கல்வி அரசு வழியாதனியார் வழி முறையாஎன எண்ணிப் பார்க்கலாம்.

 நாட்டு மக்களுக்குக் கல்வியளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். அரசு தனக்குரிய கடனைத் தனிப்பட்டவரிடம் ஒப்படைத்துள்ளது. கல்வி றிலையங்களைத் தோற்றுவிப்பவர்களில் பலர் மக்களுக்குக் கல்வியறிவையூட்ட வேண்டுமென்ற உயர் நோக்கினைக் கொண்டுள்ளனர் என்று கூற இயலாது. விரைவில் மிகு உழைப்பின்றிப் பொருள் ஈட்டுவதற்குத் துணையாக கல்வி நிலையங்களைத் தோற்றுவித்து நடத்தலை மேற்கொள்கின்றனர்.

  அதனால்தான் மாணவர் நலனையோ, ஆசிரியர் வசதியையோ, கல்வி முன்னேற்றத்தையோ கருதிப் பாராது கல்விக்கூடங்களை நடத்துகின்றனர். அருள்நோக்குடன் அனைவர்க்கும் கல்வியளிக்க வேண்டிய நிலையங்கள் பொளீட்டும் வாணிக நிலையங்களாக மாறியுள்ளன. அமர்வதற்கு ஏற்ற இருக்கைகள் இல்லாதனவும், வகுப்பறைகட்குரிய தடுப்புகள் இல்லாதனவும், ஆசிரியர்க்குத் திங்கள் கணக்கில் ஊதியம் அளிக்காதனவும் ஆய கல்விக் கூடங்கள் பல உள. இக்கல்விக் கூடங்களைத் தொடங்கியுள்ளோர் இவற்றைத் தொடங்குவதற்கு முன் பெற்றிருந்த பொருள் நிலையும் தொடங்கிச் சில ஆண்டுகளில் பெற்றிருக்கும் பொருள் நிலையும் கணக்கெடுப்பின் பள்ளிக்கூடங்கள் எவ்வாறு வாணிக நிலையங்களாகப் பொருள் ஈட்டும் கூடங்களாகப் பயன்படுகின்றன என்பது தெள்ளிதிற் புலனாகும். ஆட்சியாளர்க்கு இவ்வவலநிலை தெரியாது என்று கூறுதல் பொருந்தாது. அறிந்தும் அறியாதவர் போல் இருக்கின்றனர் என்றுதான் கருத வேண்டியுள்ளது.

 பயிற்சிப் பள்ளிக்கூடங்கள் பெரும் பொருளீட்டும் நிலையங்களாகப் பயன்படுத்தப்படுதல் நாடு அறிந்த ஒன்றாகும். ஆதலின் அதனையும் தனியாரிடமிருந்து எடுத்து அரசே நடத்துதல் வேண்டும்.

இவற்றுக்கு அரசே பொருட்கொடை நல்கி இவற்றை ஏற்று நடத்துவதனால் மிகு பொருட்செலவு ஏற்படாது. மக்களாட்சி மாண்புறவும் நல்ல குடிமக்கள் தோன்றவும் துணை புரியவல்லது. கல்வியாய் இருத்தலின் கல்விக்குச் செலவிடுவதைப் பற்றிக் கவலை கொள்ளல் நல்லரசுக்கு ஏற்றதன்று.

இன்று கலைக் கூடங்களில் பல கொலைக் கூடங்களாகவே உள்ளன; நற்கல்வி, உயர்பண்பு, நேர்மை, உடல்நலம், உளநலம் முதலியன வளர்க்கப்படாமல் அழிக்கப்படும் நிலையங்களாகவே உள்ளன எனின் மறுத்துரைப்பது எளிதன்று. ஆதலின் ஆட்சியாளர் கல்வித்துறையில் தனிநோக்குச் செலுத்தி உயர்கல்வியை மக்கட்கு அளிக்கும் தொண்டில் செம்மை பெற வேண்டுகின்றோம்.{குறள் நெறி மலர் : 1 இதழ் 7 தி.வ.ஆண்டு 1995 சித்திரை (15.4.1964)]

Tuesday, February 24, 2026

நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! – இலக்குவனார் திருவள்ளுவன்

      25 February 2026      கரமுதல



(நாலடி நல்கும் நன்னெறி 24: நிலையான பயன் தரும் அறம் செய்க!: தொடர்ச்சி)

சமயங்கள் வெவ்வேறு: ஆயினும் அவை உணர்த்தும் நெறி ஒன்றே!

ஆவே றுருவின வாயினும் ஆபயந்த

பால்வே றுருவின அல்லவாம்; – பால்போல்

ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்

உருவு பலகொளல் ஈங்கு.

நாலடியார் பாடல் 118

கருத்து:

பசுக்கள் வெவ்வேறு வண்ணங்களை உடையனவாக இருந்தாலும் அவை தரும் பாலின் நிறம் வெண்மைதான். அதுபோல், சமயங்கள் வெவ்வேறு வகையில் இருந்தாலும் அவை அறிவுறுத்தும் அறநெறி ஒன்றே!

பதவுரை:

ஆ = பசுக்கள்; வேறு உருவின = நிறத்தாலும் வடிவத்தாலும் வெவ்வேறு உருவங்களைக்; ஆயினும்=கொண்டிருப்பினும்; ஆ பயந்த பால் = பசுக்கள் தரும் பாலும் பால் மூலம் பெறும் தயிர், நெய் முதலிய பாற் பொருள்களும்; வேறு உருவின= வெவ்வேறு வண்ணங்களை; அல்லவாம் = உடையன அல்லவாம்; அறநெறி = அறத்தின் வழி; பால்போல்=பால் போன்று;ஒருதன்மைத் தாகும்= ஒத்ததன்மையுடையனவாகும்; ஆபோல் = பசுக்கள் போல் ; உருவு பலகொளல் ஈங்கு=பல வேடங்களையுடைய சமயங்களும் இங்கு

சமயங்கள் கொள்கையினால், வழி பாட்டு முறைகளினால், சடங்குகளால், நோன்பு முறைகளால், நூல்களால், வெவ்வேறாக உள்ளன. ஆனால் அவை உணர்த்தும் அடிப்படை அறநெறி ஒன்றுதான். இவ்வுண்மையையே பசுக்கள் பல வண்ணமாக இருந்தாலும் அவைதரும் பாலின் நிறம் ஒன்றுதான் எனக் கூறி உணர்த்துகிறார் பாடலாசிரியர்.

இப்பாடல் சமயப்பொறைக்கு வழி காட்டுகிறது. வெவ்வேறு சமயத்தவர் தத்தம் சமயமே உயர்ந்தது என்றோ தங்கள் சமயம் கூறும் படைப்புக் கடவுளை உயர்ந்ததாகவோ கூறக்கூடாது. வழிபாட்டு முறைகளினாலும்  நடைமுறைகளாலும்  ஒவ்வொரு சமயமும் வெவ்வேறு வகையாகத் தோன்றலாம். சமயக் கடவுள்களின் தோற்றங்களும் வெவ்வேறு நிலையாக இருக்கலாம். ஆனால், அவை உணர்த்தும் அடிப்படை நெறி ஒன்றே. அவ்வாறிருக்கும் பொழுது ஒவ்வொருவரும் தத்தம் சமயமே உயர்ந்தது என்று சொல்லாட, போராட வேண்டிய தேவை என்ன?  எனவே, சமயங்களின் அடிப்படை ஒருமை உணர்வைப் புரிந்து கொண்டு சமயப்பொறையுடன் வாழ வேண்டும் என நாலடியார்ப் பாடல் உணர்த்துகிறது எனலாம்.

நாடெங்கும் சமயச்சண்டைகள் தலைவிரித்தாடுகின்றன. அவற்றை நிறுத்துவதற்கு இப்பாடலைப் பொருளுடன் விளக்கி உணர்த்தலாம். சமயப் பொறையே நமக்குத் தேவை. சமயக்கருத்துகளில் உள்ள வேண்டாதனவற்றை விலக்கி உட்கருத்தான அறநெறியை உணர்ந்து போற்றுவோம்!

Monday, February 23, 2026

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 08: வீட்டிலும் ஏட்டிலும் தமிழைத் தொலைக்கும் நாம் : இலக்குவனார் திருவள்ளுவன்

      24 February 2026      கரமுதல



(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07: தொடர்ச்சி)

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 08

வீட்டிலும் ஏட்டிலும் தமிழைத் தொலைக்கும் நாம்

    எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ என்பது நடைமுறையில் இருக்க வேண்டும். அதற்குத், “தமிழை என்றும் உளதாகச் செய்வதற்கு அதனை மக்களுக்குப் பயன்படும் மொழியாக ஆக்குதல் வேண்டும். பயன்படு மொழியாகுங்கால் வீட்டிலும், ஊரிலும், நகரத்திலும், நாட்டிலும், உலகத்திலும் அதனை விரும்பிக் கற்குமாறு செய்தல் வேண்டும்”. என்கிறார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 284). ஆனால், இன்றைய நிலை என்ன? “தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை” என எத்தனைப் பாவேந்தர்கள் அவலக்குரல் எழுப்பினாலும் மாற்றிக் கொள்ளாத மாந்தர்களாக நாம் இருக்கின்றோம். வீட்டிலும் ஏட்டிலும் தமிழைத் தொலைக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?

இலக்கணத்தை அழித்து வருகின்றனரே!

  ஆற்றுக்குக்கரை போல் இலக்கியத்திற்கு இலக்கணம் தேவை. ஆனால், இன்றைக்கு இலக்கணத்தை அழித்து இலக்கியத்தையும் அழித்து வருகின்றனர்.

  “இன்று தமிழ் நாட்டில் எழுத்தாளர்களும் புலவர்களும் பெருகி வருகின்றனர். மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் எனத் தம்மை அழைத்துக்கொண்டு சிலர் கட்டுரைகள் எழுதுகின்றனர்; பாடல்கள் இயற்றுகின்றனர். அவர்கள் தமிழிலக்கண மரபை அறியாமலும தமிழிலக்கிய மரபைப் புறக்கணித்தும் கருத்துச் செறிவின்றி நடையழகு இன்றி எழுதிக் குவிக்க முற்படுகின்றனர்.   முன்னோர் எழுதிய இலக்கண இலக்கியங்களைக் கற்றாலன்றி நடையழகும் பொருட் செறிவும் பெறுதல் இயலாது.”(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 282) என்கின்றார் இலக்கணச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார். காலந்தோறும் இயல்பாக இலக்கண மரபில் மாற்றம் ஏற்படுவது இயற்கை. ஆனால், இலக்கணமே தேவையில்லை எனத் தப்பும் தவறுமாக எழுதிக் கொண்டு அதனையே புது இலக்கியமாகக் கூறிவருவோர் பெருகி வருகின்றனர்.

  இலக்கணங்கள் ஒலி வடிவ எழுத்துகளில் உரு வடிவங்கள் குறித்தும் கூறியுள்ளன. “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என்கிறது நன்னூல். அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வந்த இலக்கண விளக்கமும் இவ்வாறே கூறுகின்றது. ஆனால், தமிழ் வரிவத்தைச் சிதைப்பதையே நோக்கமாகக் கொண்டு சிலர் வாழ்ந்து வருகின்றனர். உரோமன் எழுத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தேவாரம் படிப்பதற்கேற்ப வரிவடிவம் அமைய வேண்டும் என்று புதுப்புது வரிவடிவங்களைக் கற்பித்தும் கிரந்த எழுத்துகளுக்கு வாழ்வு தந்து கொண்டும் உள்ளனர். தமிழின் வாழ்விற்குத் தடையாக உள்ளவர்கள் தளர்ச்சியின்றி வாழ்கையில் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?

தலைநகரின் பெயரைத் தமிழில் குறிப்பிடாமல் துணிவு உள்ளவர்கள் உளரே!

  தமிழ்நாட்டின் தலைநகரின் பெயரைத் தமிழில் சென்னை என அழைக்க 1996இல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாணை பிறப்பிக்கவே 50 ஆண்டுகள் ஆகி விட்டன. எனினும் இன்னும் பலர் சென்னை என்றே அழைப்பதில்லை. பல்கலைக்கழகம், உயர்நீதிமன்றம், மருத்துவமனை முதலான அரசு நிறுவனங்களை அல்லது அரசின் துறைகளைக் கூட நம்மால் சென்னை எனக் குறிப்பிட இயலவில்லை.   பிற நாடுகள் அல்லது நகரங்கள் பெயர் மாற்றம் நடக்கும் பொழுது உடனே அவை நடைமுறைக்கு வந்துவிடுகின்றன. ஆனால், தமிழர்கள் பிற நாட்டின் பெயர்கள் மாறின எனில் அவ்வாறே புதிய பெயரில் அழைப்பர். பம்பாய் மும்பை என மாறியதும் மும்பை என்று அழைக்கும் நம்மவர்களே சென்னையைச் சென்னை என்று அழைப்பதில்லை. மெட்ராசு என்று திரைப்படமும் வந்துள்ளது. தமிழ்ப்பெயர் சூட்டிய படங்கள் இப்பொழுது வருகின்றன. பெரும்பாலும் அவை நல்ல படங்களாகவே இருக்கின்றன. தமிழ்ப் பெயர் சூட்டிய படங்கள், தமிழ்ப் பண்பாட்டை எதிரொலிக்கும் படங்கள் நன்றாக இல்லாவிட்டாலும்கூட நாம் பார்த்து ஊக்கப்படுத்த வேண்டும். அதே நேரம் தமிழில் இல்லாப் பெயர் தாங்கி வரும் படங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும். அரசாணையையும் மீறி நம் தலைநகரின் பெயரைத் தமிழில் குறிப்பிடாமல் இருக்கும் துணிவு உள்ளவர்கள் இருக்கும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்கையில் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?

நீதி மன்றங்களில் தமிழ், தமிழர் நலன் புறக்கணிப்பு

  ஒன்றிய அரசில் தமிழ்நாடும் உள்ளது எனில் தமிழ்மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. நீதிமன்றங்களும் மண்ணின் மக்களான தமிழர்களின் உணர்வை மதித்துத்தான் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால், நடப்பதென்ன? உயர் நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க ஒன்றிய அரசு தடை. தமிழர்கள் தமிழர்களுக்காகக் கட்டிய தமிழ்க்கடவுள்களின் கோயில்களில் தமிழ்வழிபாட்டிற்கு உள்ள தடையை நீக்க ஒன்றிய அரசு முயல்வது இல்லை. ஒருவேளை உச்ச நீதிமன்றம் சொன்னாலும் ஒன்றிய அரசு அதற்கு முட்டுக்கட்டை போடும். தமிழ்க்கல்வி, தமிழ் வழிபாடு, தமிழ்ப்பூசாரி எனத் தமிழ் நலம் சார்ந்த தமிழ்நாட்டரசின் ஆணை எதுவாக இருந்தாலும் அதனைத் தடுப்பதையே கடமையாகக் கொண்ட நீதிபதிகளும் உள்ளனர். மக்களுக்காகத்தான் நீதி என்பதை மறந்து இல்லாத – தமிழர்க்கு உரியது அல்லாத – சடங்கு, சாத்திரங்களின் அடிப்படையில் நீதிமன்றம் தயக்கமின்றி தமிழறத்தை அழிக்கப் பார்க்கின்றனர்.

Thursday, February 19, 2026

சட்டச் சொற்கள் விளக்கம் 1036-1040 : இலக்குவனார் திருவள்ளுவன்

      20 February 2026      கரமுதல



(சட்டச் சொற்கள் விளக்கம் 1031-1035 : தொடர்ச்சி)

1036. Avyavaharika        அறநெறியற்ற 
Avyavaharika debts – அறநெறியற்ற கடன்கள் – மது, சூதாட்டம், பிற ஒழுக்கக் கேடான செயல்களால் ஏற்படும் கடன்கள் – இந்துச் சட்டத்தில் குறிக்கப்பெறுகிறது.
1037. Award         தீர்வம்
தீர்வளிப்பு
தீர்ப்பு வழங்கு

 award  என்றால் பொதுவாக நாம் விருது என்றும் சில நேரங்களில் பரிசு என்றும் கருதுகிறோம். ஆனால், வழங்கல் என்னும் பொருள் உண்டு. எனவே, சட்டத்துறையில் வழங்கப் பெறும் தீர்ப்பினைக் குறிக்கிறது.

தீர்வு எனவும் பொருள்படும்.
 

இரு தரப்பை இசைவிக்கும் தீர்ப்பாளரின் முடிவையும் குறிக்கும்.
 

தொழிலாளர் நீதிமன்றம், தொழில்துறை தீர்ப்பாயம் அல்லது தேசிய தீர்ப்பாயம் அல்லது நடுவர் தீர்ப்புகள் உட்பட தொடர்புடைய மாநிலச் சட்டங்களால் எந்தவொரு தொழில்துறை தகராறு அல்லது தொடர்புடைய கருத்து வேறுபாட்டிற்கான அல்லது சட்ட ஐயப்பாடு தொடர்பான இடைக்கால அல்லது இறுதித் தீர்வத்தைக் குறிக்கிறது.
 

1965 ஆம் ஆண்டு மீதூதியச் சட்டம், பிரிவு பிரிவு 2(7) “தீர்வம்” என்ற சொல்லை வரையறுக்கிறது.
 பொது பொறுப்பு காப்பீட்டு சட்டம், 1

991 பிரிவு 7 தீர்வம் குறித்துத் தெரிவிக்கிறது.
 தொழில்துறை தகராறுகள் சட்டம், 1947 இலிலும் தீர்வம் குறிக்கப் பெற்றுள்ளது. 

தீர்வம்(Award) என்பதுடன் தீர்ப்பு(judgement) தீர்ப்பாணை(decree) ஆகியன பற்றியும் அறிந்து கொள்க.
1038. Award method      தீர்வு முறை

 தீர்வு முறை என்பது கொள்முதல் செய்பவர்

ஏலங்களை மதிப்பிடுவதற்கும், வெளிப்படைத் தன்மைக்கும் நயன்மையை(நியாயத்தை) உறுதி செய்வதற்கும் ஒப்பந்ததாரரைத் தேர்ந்தெடுப்பதற்கும் பயன்படுத்தும் முறையான நடைமுறையாகும்

. முதன்மை முறைகளில் குறைந்த விலை, அதிகத் தகுதி வாய்ந்தவர் அல்லது சிறந்த மதிப்பின் அடிப்படையில் வழங்குதல் ஆகியவை அடங்கும்.

இந்தச் செயல்முறை பொதுவாகத் தேவைகளை அடையாளம் காண்பது, ஒப்பந்தப்புள்ளி வழங்குதல், மதிப்பீடு செய்தல் , ஒப்பந்தக் கையொப்பம் ஆகியவற்றைப் பின்பற்றுகிறது.
1039. Award of compensation  இழப்பீடு வழங்குதல் 

நேர்ச்சி(விபத்து)களால் உயிரிழப்பு, உறுப்பிழப்பு, காயம், கை கால் முறிவு, ஊர்திகளுக்குச் சேதங்கள், முறையற்ற செயல்களால்  ஏற்படுத்தப்படும் பணி இழப்பு முதலிய பல்வேறு கரணங்களால் பாதிப்புற்றவருக்கு பாதிப்புகளுக்கு ஈடாக வழங்கப்படும் தொகையே இழப்பீட்டுத் தொகையாகும்.
 

பாதிப்பில் மருத்துவச் செலவுகள், எதிர்கால வருவாய் இழப்பு முதலியவை அடங்கும்.
1040. Awarding damagesசேதஈடு வழங்கல்

 உரிமை வழக்கில் உரிமை கோருநருக்கு முறையீடடாளர் அல்லது வழக்காடி சேதத்திற்கு ஈடாகத் தரும் தொகை

வழங்கல்.
 damage என்பது  அழிவு/ சிதைவு/ சேதம்/ஊறுபாடு எனப்பொருளாகும்.

 damages என்பது இழப்பீட்டைக் குறிக்கும். 
compensation-இழப்பீடு என்பதற்கும்  damages என்பதற்கும் வேறுபாடு காட்ட சேதஈடு எனலாம்.
ஏதம் என்பதிலிருந்து உருவான சேதம் என்னும் சொல்லும் தமிழே.
 

குற்றவாளிகள் நன்னடத்தைச் சட்டம் 1958 பிரிவு 5(3) [S. 5(3) POA, 1958] இழப்பீடு வழங்குதலைக் குறிக்கிறது.

கொடுத்ததைத் திரும்பக் கேட்காதே! – இலக்குவனார் திருவள்ளுவன், தாய் இதழ்

      19 February 2026      கரமுதல



****

இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய

கொடுத்தவை தாவென் சொல்லினும்

இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே.

        – சாத்தனார், குறுந்தொகை 349, அடிகள் 5-7

தலைவி கூற்று

திணை: நெய்தல்

கொடைத்தன்மை குறித்த பண்பாட்டை உணர்த்துவது இப்பாடல் வரிகள்.

பொருள்:

தாம் அடைந்த வறுமைத் துன்பத்துக்கு அஞ்சி, நம்மிடம் இரப்பவர்க்கு அவர் விரும்பிய பொருளையும் அவருக்குத் தேவையானவற்றையும் கொடுத்து, அதன்பின், அவர்களுக்குக் கொடுத்தவற்றைத் திருப்பித் தருமாறு சொல்லுதலைக் காட்டிலும், நமது இனிய உயிரை இழத்தல், துன்பமுடையதாகுமோ? ஆகாது. (எனவே, கொடுத்ததை மீண்டும் தருமாறு கேட்கக் கூடாது.)

பதவுரை:

இடுக்கண் அஞ்சி=தமக்கு நேர்ந்த துன்பத்தினால் வருந்தி; இரந்தோர் வேண்டிய=இரந்தவர் கேட்டவற்றை; கொடுத்தவை=கொடுத்து, அதன் பின் அவற்றை; தாவென்=எனக்குத் திரும்பவும் தா என்று சொல்லினும்=சொல்வதைவிட; இன்னா தோ=துன்பம் தருவதோ நம் இன்னுயிர் இழப்பே=நம இனிய உயிரை இழப்பது. ( இல்லை)

“கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை” என்பது பழமொழி. நாம் கடனானவோ, இரவலாகவோ, அன்பாகவோ ஒருவருக்குக் கொடுத்ததை மீண்டும் கேட்கும் பொழுது பகை உண்டாவதைக் குறிக்கிறது.

“கடன் அன்பை முறிக்கும்” என்றும் சொல்வர். இதையே, “வாங்கும்போது இனிப்பு; கொடுக்கும்போது கசப்பு” என்றும் சொல்வர்.

ஒரு பொருளை வாங்கும்போது வாங்குபவர் மகிழ்ச்சியாகக் கருதுகிறார். அவரிடம் அதைத் திருப்பிக் கேட்கும் பொழுது கசப்புணர்வு கொள்கிறார்.

முற்றிலும் உரிமையாக இல்லாமல் கடனாவோ, இரவலாகவோ கொடுத்தைத் தன் தேவை கருதி மீண்டும் தருமாறு கேட்டால், அவ்வாறு தருவதே தம் கடமை என அறிந்தும் கசப்புணர்வு கொள்வோர் மிகுதியாக உள்ளனர்.

இவையெல்லாம் இயல்பான வாழ்வில் ஏற்படும் நடைமுறைகள். ஆனால், இப்பாடல் பண்பாட்டின் சிறப்பைக் குறிக்கிறது.

வறுமையினால் ஒருவர் வந்து கேட்கும் பொழுது அல்லது துன்பம் வந்த பொழுது அதனைப் போக்க உதவ, வேண்டியதை அன்புள்ளத்துடன் கொடுத்து அவர் துன்பத்தைப் போக்குவது சிறப்பாகும்.

பிறருக்கு உதவுவதன் மூலம் தன் கொடைத்தன்மையை வெளிப்படுத்தி விட்டுப் பின்னர் அவருடன் ஏற்பட்ட முரண்பாட்டினாலோ தன் தேவை கருதியோ “கொடுத்ததை மீளக் கேட்பதை விட உயிரை இழப்பது துன்பமானது இல்லை அல்லவா” எனக் கேட்கிறார் புலவர்.

இறப்பது என்பது துன்பமானது. அத்துன்பமும் கொடுத்ததை மீளக் கேட்கும் துன்பத்தினும் மிகுதியானது இல்லை அல்லவா?

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை. (திருக்குறள், ௨௱௩௰ – 230)

என்று திருவள்ளுவரும் சாதலைவிடத் துன்பமானது வேறு இல்லை என்கிறார்.

எனினும் அத்துன்பமானது ஒருவர் கேட்கும் பொழுது கேட்டதைக் கொடுக்க முடியாமல் போகும்போது அதுவும் இனியதே என்கிறார்.

கொடுத்ததைத் திருப்பிக் கேட்பதும் ஈகை இயலாமையைக் குறிப்பதே!

எனவேதான் சங்கப் புலவர் சாத்தனார், “கொடுத்ததைத் திருப்பிக் கேட்பதைவிட இறப்பது மேல்” என்கிறார்.

நாமும் யாருக்கும் எதையும் கொடுத்தபின் திரும்பக் கேட்காமல் இருப்போம்!

தாய், 19.02.26

Followers

Blog Archive