Tuesday, April 21, 2026

சட்டச் சொற்கள் விளக்கம் 1047-1050: இலக்குவனார் திருவள்ளுவன்

      22 April 2026      



(சட்டச் சொற்கள் விளக்கம் 1043-1046 தொடர்ச்சி)

1047. Appreciationஆராய்தல்‌;
பாராட்டுதல்‌;
மதிப்பிடுதல்‌;
விளங்கிக்‌ கொள்ளுதல்

சட்டத்தில் மதிப்பீடு என்பது நீதிமன்றங்கள் முறையீட்டின் போது வழங்கப்பட்ட ஆதாரத்தை மதிப்பீடு செய்து ஆராய்ந்து பார்க்கும் செயல்முறையைக் குறிக்கும்.

இது நீதித்துறை எடுத்துரைப்பு, முழு நம்பகம், நிகழ்தகவு விதி, நீதித்துறை தவறாக செயல்படுவதைத் தடுத்தல் முதலியவற்றை உள்ளடக்கியது.
1048. Appreciation of evidenceசான்றின்‌ மதிப்பீடு

சட்டத்தில் சான்றின் அல்லது ஆதாரத்தின் மதிப்பீடு என்பது நீதிமன்றங்கள்.

சட்டநடவடிக்கைகளின் போது அளிக்கப்பட்ட ஆதாரத்தின் ஏற்கத்தக்க தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து மதிப்பீடு செய்யும் செயல்முறையைக் குறிக்கும்.
1049. Apprehend  அச்சத்தோடு எதிர்பார்
தளையிடு
கைது செய்
புரிந்துகொள்  

பெரும்பாலும் குற்ற வழக்குகளில், சட்ட அதிகாரத்தினால் ஒருவரைப் பிடித்தல் அல்லது தளையிடுதல் என்பதைக் குறிக்கிறது.  இது குற்றவாளியைக் கையோடு பிடிப்பதைக் குறிக்கும்.

இது பெரும்பாலும் காவல் அறிக்கைகளிலும், தளையாணைகளிலும் பதிவு செய்யப்படுகிறது.
1050. Apprentice  தொழில் பயிலுநர்

விற்பனை மேம்பாட்டு பணியாளர்கள் (சேவை நிபந்தனைகள்) விதிகள், 1976, பிரிவு 2.ஈ. [The Sales Promotion Employees (Conditions Of Service) Rules, 1976,Sec. 2(d)] பணியாளர்களுள் தொழில் பயிலுநர்களும் அடக்கம் எனக் குறிக்கிறது. (S. 2(d) SPE(CS)A, 1976)

Monday, April 20, 2026

குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுணையே- இலக்குவனார் திருவள்ளுவன்

      21 April 2026      



(குறட் கடலிற் சில துளிகள் 43: தூய மனத்தவர்க்கு அவர்க்குப் பின்பும் புகழ் நிலைத்து நிற்கும் – தொடர்ச்சி)

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௭ – 457)

மன்னுயிர்க்கு ஆக்கம் தருவது நல்ல மனநிலையே! எல்லா வகையான புகழையும் தருவது நல்லினத்தின் துணையே!

பதவுரை:

மனநலம்=மனத் தூய்மை, மனத்தது நன்மை; மன்னுயிர்க்கு= நிலைபெற்ற உயிர்க்கு; ஆக்கம்=பெருக்கம், செல்வம், சொத்து, உயர்வு, ஆற்றல்; இனம்=குலம், சுற்றம், துணையாகச் சேரும் கூட்டம், சேர்க்கை; நலம்=சிறப்பு; நன்மை; எல்லா-அனைத்து; புகழும்-புகழையும்; தரும்=கொடுக்கும்.

“நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும், இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்” என்கிறார் பரிமேலழகர்.

அறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர், “மாந்தருக்கு மனநன்மை ஒரு செல்வமாம்” என்கிறார்.

அறிஞர் கா சுப்பிரமணியம், “மக்கள் உள்ளத்தின் சிறப்பு அவர்களுக்கு மேன்மேல் உயர்ச்சியைத் தரும். அவர்கள் சேரும் இனத்தினுடைய சிறப்பு அவர்களுக்கு எல்லாப் புகழையுந் தரும்” என்கிறார்.

“மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாவதுபோல, இன நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும்” என்கிறார் உரையாசிரியர் மணக்குடவர்.

உள்ளத் தூய்மையைப் பேணிக்கொண்டால் அதுவே நிலைபெற்ற உயிர்க்கு உயர்வாம்; நல்லோர்களுடனான சேர்க்கையால் புகழ் எல்லாம் வந்தடையும்.

இனச்சிறப்பினால் நற்பெயர் கிடைக்கிறது. இதன்வழி எல்லா வகைப் புகழும் கிடைக்கும்.  சிறுமைக் குணம் உடையவர்கள் சேர்க்கையை நீக்கி நற்பண்புடையவர்களுடன் பழகினால் புகழ் தானே வந்தடையும்.

எல்லாப் புகழும் எனக் கூறுவதன் காரணம், எல்லா வகையான புகழும் கிடைக்கும் என்பதே. அஃதாவது நாம் ஆற்றும் நற்செயல்களால் கிடைக்கும் புகழ், நாம் வகிக்கும் பதவியால் வரும் புகழ், நமது அரசியல் நிலைப்பாட்டால் வரும் புகழ், நம் கல்வியால் வரும் புகழ், கொடையால் கிடைக்கும் புகழ்,ஈகையால் எய்தும் புகழ் எனப் பலவைகயிலும் நமக்கு வரக்கூடிய எல்லா வகைப் புகழையும் நாம் பெறலாம் என்பதை வலியுறுத்தவே

இனநலம் பேணும் போராளிகள் தங்கள் மக்களால் போற்றப்படுகிறார்கள். மனநலமும் இனநலமும் நம்மிடையே இல்லாத காரணத்தால்தான் நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் உயிரிழக்கவும் உறுப்புகளை இழக்கவும் குடும்பத்தினரை இழக்கவும் உடைமைகளை இழக்கவும் நிலத்தைப் பறிகொடுக்கவும் காரணமாக இருந்து விட்டோம்.

எனவே, நமக்கு நல்லன விளையவேண்டு மென்றால், ஆக்கம் கிடைக்க வேண்டுமென்றால், செல்வம் சேர வேண்டுமென்றால், நல்ல மனத்துடன் திகழ வேண்டும். நன்மனம் இல்லையேல் எதிரான விளைவுகள்தான் நம்மைச் சேரும். அஃதாவது, செல்வம் சேராது, ஆக்கம் ஒட்டாது, நல்லன நிகழா. மனத்தைத் தூய்மையாக வைத்திருப்பதற்கு நல்ல மனம் கொண்டவர்களுடன்தான் நட்பு வைத்திருக்க வேண்டும், உறவு கொள்ள வேண்டும், சேர்க்கை இருக்க வேண்டும். அவ்வாறு நற்சேர்க்கை இருந்தால்தான் நன்மை எய்தலாம், செல்வத்தில் செழிக்கலாம், உயர்வு அடையலாம், புகழுடன் வாழலாம்.

எனவே, ஆக்கத்தையும் புகழையும் எய்த

மனநலமும் இனநலமும் கொள்வோம்

Sunday, April 19, 2026

இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் நிறைவுரை 6 கல்வியகங்கள் தொண்டு நிறுவனங்களாகச் செயற்படுக!

      20 April 2026      



(இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 5: கல்வி முறையை மாற்றுக!: தொடர்ச்சி)

  கல்வியகங்கள் வணிக நிறுவனங்களாக இல்லாமல் தொண்டு நிறுவனங்களாகச் செயல்படும் பொழுதுதான் இவர்களிடையே நல்லுறவு அமையும்; கல்வியிலும் மாணாக்கர்கள் சிறப்பர். ஆசிரியர்கள் பருவத்தேர்வு முடிவுகளின் பொழுது மட்டும் பெற்றோரை அழைக்காமல், சுழற்சி முறையில் தொடக்கக் காலத்திலிருந்தே பெற்றோரை வரவழைத்து மாணாக்கர் கல்விநிலை குறித்துக் கலந்து பேசி அதற்கேற்ப இரு தரப்பாரும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மாணாக்கரின் வீட்டுச் சூழல் புரிந்தால்தான் அவர்களை எவ்வாறு வழி நடத்தலாம் என ஆசிரியர்களுக்குத் தெளிவு பிறக்கும்.  கல்வியகங்களில் தங்கள் பிள்ளைகளின் உண்மையான நிலை என்ன எனப்  பெற்றோர் அறிந்தால்தான் அவர்களை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்ற தெளிவு அவர்களுக்குப் பிறக்கும். மாணாக்கர்களின் திறமைக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற துறைகளிலும் விளையாட்டு, கலைகளிலும் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இதற்குப் பெற்றோர் – ஆசிரியர் – மாணாக்கர்  சந்திப்பு உதவும்.

  மாணவர்களின் படிப்பார்வம்கற்கும்திறன்புரிதல் உணர்வுதன்னம்பிக்கைஉயர்வு அல்லது தாழ்வு மனப்பான்மைவிளையாட்டில் உள்ள ஈடுபாடுகலையார்வம்மந்த நிலைதேர்வு குறித்த அச்சம்தற்கொலை மனப்பாங்கு முதலானவை  பற்றி ஆசிரியர்கள் தொடக்கத்திலேயே பெற்றோர்களிடம் பேசி மாணாக்கர்கள் சிறப்பாகத் திகழ உரிய தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மதிப்பெண் பெறும் இயந்திரமாக மட்டும் மாணாக்கர்களை உருவாக்கும் நோக்கத்தில் பெற்றோர்களிடம் பேசுவதில் பயனில்லை. கல்விக்கூடங்களில் மனவளப் பயிற்சி அளிக்கும் வகையில் பாடத்திட்டம் இருப்பின்மாணாக்கர் சிறப்பர்ஆசிரியர் – பெற்றோர்  –மாணாக்கர் உறவு சீராக அமையும். கற்றலின் இடையே நிற்கும் போக்கும் நின்றுவிடும்.

 கல்வியகங்கள் அழைக்கும் பொழுது பெற்றோர்கள் செல்வதற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அப்பொழுதுதான் தவறாமல் பெற்றோர் இத்தகைய கூட்டங்களுக்குச் செல்வர். அன்றாட வருவாயைமட்டுமே நம்பி உள்ள பெற்றோர் வருவாய் இழப்பு ஏற்படாத வகையில்பள்ளிக்கு வரக்கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும். இதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 ஆசிரியர்பெற்றோர்மாணாக்கர் உறவு குறித்துப் பார்க்கும் பொழுது ஆசிரியர்களுக்கும் மேல் அலுவலர்கள் அல்லது பள்ளி நடத்துநருக்கும் உள்ள உறவு முறை குறித்தும் காண வேண்டும்.

  மாணாக்கர்களை அடக்கி  ஒடுக்கும் ஆசிரியர்கள்கூட அவர்களின் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வரிடம் அடிமைபோல்தான் நடந்து கொள்வர். அஞ்சும் இயல்புடைய ஆசிரியர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டா. தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் தாளாளர் அல்லது கல்வியகத்தை நடத்துநர் அல்லது தாளாண் குழுவின் (நிருவாகத்தின்)அடிமையாக ஒத்துழைத்துப்  போகாவிட்டால் பணிப்பாதுகாப்பில்லை என்ற நிலை.  இதுதான் தனியார் கல்வியகங்களின் சூழல். அரசின் கல்வியகங்களிலும் ஏறத்தாழ இதே போன்ற நிலைதான். ஒத்துப் போகாத அடிமைத்தனத்துடன் வாழும் ஆசிரியர்கள் எவ்வாறு தன்மானமுள்ள தலைமுறையினரை உருவாக்குவர் என்று தெரியவில்லை.

  நல்ல மதிப்பெண்களில் கருத்து செலுத்தினாலும் வேறு வகைப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கே முதன்மை அளிக்கும் போக்கே நிலவுகிறது. இதனால்நல்ல ஆசிரியர்கள் புறந்தள்ளப்படுகின்றனர்.  எனவேஆசிரியர்களின் சமநிலையில் கருத்து செலுத்த வேண்டும். பள்ளிகளின் கடமைகல்வியறிவும் தன்னம்பிக்கையும் ஆற்றலும் மிக்க தலைமுறையினரை உருவாக்குவதுதான். ஆனால்மதிப்பெண் பெறும் மனப்பாட இயந்திரமாக இளந்தலைமுறையினரை உருவாக்குவதே பெருங்கடமை எனக் கல்வியகங்கள் செயல்படுகின்றன. பெற்றோர்களும் மனித இயந்திரங்களை உருவாக்கும் கல்வியகங்களையே சிறந்த  கல்வியகங்கள் என எண்ணுகின்றனர். இயல்பாகச் சிந்தித்து உணரும் வகையில் பாடத்திட்டங்களை அமைத்துஎழுச்சியும் தன்னார்வமும் மிக்க  தலைமுறையினரை உருவாக்கும் அறிவுக்கூடமாகக் கல்வியகங்கள் அமைய வேண்டும்.

  கல்வியுடன் தொடர்புடைய பயிற்றுமொழியை ஆட்சி மொழியுடன் இணைத்து அடுத்துப் பார்ப்போம். ஏனெனில் ஆட்சிமொழியாக இல்லாத மொழியைப் பயிற்று மொழியாக ஏற்க மக்கள் தயங்குவர்.

Friday, April 17, 2026

சட்டச் சொற்கள் விளக்கம் 1043-1046: இலக்குவனார் திருவள்ளுவன்

      18 April 2026      


(சட்டச் சொற்கள் விளக்கம் 1041-1042: தொடர்ச்சி)

1043. Axiomஏற்புடைமை சான்று தேவையில்லாமல்  மெய்யாக அறியப்படும்  வெள்ளிடையுண்மை; பரவலாக ஏற்றுக் கொள்ளப் படுவது. ஏற்புடைமை அடிப்படை யிலேயே வாதங்கள் எழுவதால் அடிப்படைக் கோட்பாடு எனக் கொள்ளப்படுகிறது.   சட்டம் சார்ந்த வாதத்திற்கான அடிப்படைத் தளமாகவும் செயல்படுகிறது.  சான்றாக, ஒப்பந்தச் சட்டத்தில்,  ஒப்பந்தத்திற்கு இரு தரப்பின் ஒப்புமை தேவை என்பது அடிப்படைக் கோட்பாடாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
1044. Axiomatic    வெளிப்படையாகத் தெரிந்த மூதுரையார்ந்த தானே தெளிவான, ஐயத்திற்கு இடமில்லாத(சந்தேகமில்லாத), மறுக்க முடியாத, புரிந்து கொள்ளப்பட்ட, கொடுக்கப்பட்ட, அறிந்தேற்பு பெற்ற, உறுதியான, திருத்தத் தேவையில்லாத அடிப்படைக் கருத்தாகும். இவை சட்ட ஏரணங்களில் (legal reasoning)அடிப்படைக் கூறுகளாகச் செயற்படுகின்றன. காண்க  Axiom-ஏற்புடைமை
1045. Axionமறுக்கொணா உண்மை பெச்சி-குயின் கோட்பாடு(Roberto Peccei and Helen Quinn in 1977) என்பதன் அடிப்படைக் கூறு ஆகும். இவ்வாறு தொழில் நுட்பம் சார்ந்த விளக்கமே பெரிதாகக் கையாளப்படுகிறது. ஆனால், சட்டத்துறையில் ஒரு சான்று அல்லது வாதம் வேறு எவ்வகை ஆதாரமும் தேவையின்றி மறுக்க இயலாத மெய்மையாக உள்ளதைக் குறிக்கிறது.
1046. Ayacut         ஆயக்கட்டு “ஆயக்கட்டு” (Ayacut) என்பது,  நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ்ப் பாசன வசதி பெற உரிமையுள்ள நிலங்களைக் குறிக்கிறது. குறிப்பாக, 1908-ஆம் ஆண்டின் சென்னை பண்ணை நிலச் சட்டத்தின் பிரிவு 136அ-இல் இது வரையறுக்கப்பட்டுள்ளது; இப்பிரிவின்படி, ஒரு நீர்ப்பாசனத் திட்டத்தின் ஆயக்கட்டு என்பது, அந்தத் திட்டத்தின் கீழ்ப் பாசனம் பெறும் அனைத்து நிலங்களையும் உள்ளடக்கியதாகும்.

Wednesday, April 15, 2026

நாலடி நல்கும் நன்னெறி 26: வறுமையிலும் உதவுக! – இலக்குவனார்திருவள்ளுவன்

      16 April 2026      கரமுதல



(நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! – தொடர்ச்சி)

உறுபுனல் தந்துலகூட்டி அறுமிடத்தும்
கல்லூற்றுழியூறும் ஆறேபோல்; – செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற்பாலவை.

பொருளுரை:

மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் மிகுதியான நீரை உலகமக்களுக்குக் கொடுத்து  உண்பிக்கும் ஆறு. கோடைக்காலத்தில் நீரற்றுபோனாலும்   ஊற்றுக்குழியைத் தோண்டுவோருக்கு, நீர்சுரந்து உதவிசெய்யும். இத்தகைய ஆற்றைப்போலப், பெரியோர் தம்செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து உதவுவர். அவர்கள் வறுமை நேரிட்டாலும்  தம்மால் இயலும் அளவு பிறர்க்கு உதவி செய்வர். வறுமையிலும் பிறருக்குத்தரும் பெருமையை நாம் கொள்வோம்.

பதவுரை

 உறுபுனல்= (மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும்) மிகுதியான நீர்; தந்து= கொடுத்து; உலகூட்டி  = உலகினருக்கு ஊட்டி, அஃதாவது உண்பித்து; அறுமிடத்தும்= வறண்டு நீர் அற்ற காலத்திலும்;  கல்லூற்றுழி= தோண்டும் ஊற்றினிலே; ஊறும்= நீர் சுரக்கும், அஃதாவது நீரைச் சுரந்து சிலருக்கேனும் உதவுகின்ற; ஆறே போல்= ஆற்றைப்போல்; செல்வம்= பெரியோர்த ம்மிடம் உள்ள பொருளை; பலர்க்கு ஆற்றி=பலருக்கும் கொடுத்து உதவி; கெட்டு உலந்தக் கண்ணும்= நிலைமை கெட்டுப் பொருள் இல்லாது ஒழிந்த பின்னும்; சிலர்க்காற்றி=இயன்ற வரையில் சிலருக்கேனும் உதவி; செயற்பாலவை= செய்யக் கூடியவற்றை;செய்வர்=செய்வார்கள்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும் வாய்எல்லாஞ் செயல்.   (திருக்குறள், ௩௰௩- 33)

என்கிறார் திருவள்ளுவர்.

முடியக்கூடிய இடங்களில் எல்லாம் அறச்செயல் புரிய வேண்டும். முடியாதபோதும் வாய்ப்புள்ள வழியில் எல்லாம் அறச்செயல் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது இக்குறள். பணம் கொடுப்பது மட்டும்தான் அறவினைஅல்ல.  பிறருக்குத் துன்பம் நேரும்பொழுது அதைத் துடைக்கிற எல்லாச் செயலும் அறம்தான். பிறருக்கு உதவி தேவைப்படும்பொழுது நம்மால் முடியக்கூடிய வழிகளில் உதவ வேண்டும்.

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் வேந்தர்    

தமக்கென முயலா நோன்தாள்,

பிறர்க்கென முயலுநர் உண்மையானே.

என்கிறார்.

உலகம் எதனால் இயங்குகிறது என வினா தொடுத்து, பிறருக்கு உதவுவதற்காக முயலும் பெரும்பண்பினராலேயே உலகம் இயங்குகிறது என்கிறார். இவர்கள் தாம்வாழவேண்டும் என்பதற்காக முயற்சி மேற்கொள்பவர்கள் அல்லர். பிறர் வாழவேண்டும் என்பதற்காக முயற்சி மேற்கொள்பவர்கள்.

ஒளவையாரும் இதனையே கூறுகிறார்.

“ஆற்றுப்பெருக்கற்றடிசுடு மந்நாளு மவ்வாறு

ஊற்றுப்பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு

நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார்ஆனாலும்

இல்லை யெனமாட்டார் இசைந்து”(நல்வழி பாடல்: 9)

என்கிறார் அவர்.

ஆற்றில் நீர்ப்பெருக்கின்றி வற்றிப் போனாலும் உலகுக்கு ஊட்ட ஊற்றின்மூலம் நீரைவழங்கும். அதைப்போல் நற்குடிப்பிறந்தோர் வறுமையுற்றாலும் தம்மை நாடிவருவோருக்கு இல்லை என்று சொல்லமாட்டார்கள்.

உயர்நிலை தாழ்நிலை என எந்நிலைவந்தாலும் தங்கடமைகளைச் செய்தலே பெரியோர் இயல்பாகும். சிறியோர்  தம் செல்வப்பெருக்கில் இருந்தாலும்கூடப் பிறருக்கு உதவுதல் அரிதாகும். அவ்வாறு நாம் இருத்தல் கூடாது. 

இவ்வாறு கொடைக்கடனை என்றும் மறவாது போற்றும் பெரியோர்போல் வாழவேண்டும் என நாலடி நவில்கிறது. ஆதலின் நம்மிடம் செல்வம் இருந்தாலும் இல்லாமல் வறுமை உற்றாலும் இயன்றவரைபிறருக்கு உதவ வேண்டும்.

Followers

Blog Archive