Thursday, May 28, 2026

 

அளவுக்குமீறிக் கொள்ளாதே! – சங்கப்புலவர்கள்பொன்னுரை  35: இலக்குவனார் திருவள்ளுவன்



(சங்கப் புலவர்கள் பொன்னுரை 34. ஒப்பிட இயலா அளவு நல்லாட்சி புரிக! – தொடர்ச்சி)

மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப்
பொன்னுங் கொள்ளார் மன்னர்”

நற்றிணை – 226. 1-3; பாலை

ஆசிரியர்: கணி புன்குன்றனார். கணியன் பூங்குன்றார் என்று சிலர் கூறினாலும் பலர் அதனை மறுக்கின்றனர்.

மரம்=மருந்து மரம்; சா=சாகும்படி, அழியும் படி; மருந்தும்=மரத்திலுள்ள மருத்துவப்பயன்தரும் இலை காய் முதலியன; உரம்=மன வலிமை; சா=அழியும்படி; செய்யார்=மேற்கொள்ளார்; உயர்தவம்=கடுமையான தவம்;

வளம்=நாட்டு வளமை; கெட=கெடுமாறு, குறையுமாறு, அழியுமாறு; பொன்னும்=வரியாகச் செல்வத்தை; கொள்ளார்=எடுத்துக்கொள்ள மாட்டார்; மன்னர்=ஆள்வோர்.

இவ்வுலக மக்கள் மரம் பட்டுப்போகும்படி அதன்பாலுள்ள மருத்துவப் பயன்தரும், இலை, பூ, காய், கனி, பட்டை, வேர் முதலிய அனைத்துப் பொருள்களையும் முழுமையாகப் பறித்துக்கொள்ள மாட்டார்கள்.

அதேபோல் தம் வலிமை முழுமையும் குன்றுமாறு தவம் மேற்கொள்ள மாட்டார்கள்.

அரசர் நாட்டு மக்கள் செல்வமெல்லாம் குறையும் வண்ணமோ அழியும் வண்ணமோ அவர்களிடமிருந்து வரித் தொகைகளைப் பெறமாட்டார்.

மருத்துவப் பயனுக்காக மரத்திலுள்ள இலை முதலியவற்றை எடுத்துக் கொள்வோர் மேலும் மேலும் தேவைப்படும் என்று அனைத்தையும் முற்றிலுமாக எடுத்துக்கொள்ள மாட்டார்.

அவ்வாறு கொள்வதால் மரம் அழிந்து மேற்கொண்டு யாரும் பயன் பெற இயலாமல் போய்விடும்.

தங்களின் மன வலிமையும் உடல் வலிமையும் கெடுமாறு கடுந்தவம் மேற்கொண்டால், அழிவே ஏற்படும்.

நாட்டு மக்களிடம் வரியை அளவோடுதான் பெற வேண்டும். அவ்வாறு இல்லாமல் வரி கொடுக்கிறார்கள் என்பதாலும் மக்களிடம் செல்வம் இருக்கிறது என்பதாலும் அளவு கடந்த வரியைக் கொள்ள மாட்டார்.

பயன்கிடைக்கும் என்பதற்காக ஒரு சேர முற்றுமாக எதையும் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும் பொன் முட்டையிடும் வாத்து கதை மூலம் நாம் இதைத்தானே அறிகிறோம்.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சல்லவா?

இப்பாடலில் வரும் உவமைகள் மூலம் தலைவி, தன் தலைவன், தன்னுடன் வாழாமல் பொருளீட்டச் செல்வது முறைதானா எனக் கேட்கிறாள். அவர் பிரிந்தால் தன் உயிரும் பிரியும் அன்றோ எனக் கேட்கிறாள்.

எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலில் (எண்-184) அளவாக வரி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியிருப்பார்.

மக்களிடம் அளவு கடந்து வரி பெறுவது வழிப்பறிக் கள்வன் கையில் வேல் வைத்துக் கொண்டு கைப்பொருள்களைக் கேட்பது போன்றது என்கிறார் திருவள்ளுவர்.

என்னும் திருக்குறளே அது.

வரியாயினும் வேறு பயன்பொருள் எதுவாயினும்

என்னும் சங்கப் புலவர்கள் பொன்னுரைக்கிணங்க நாமும் நடப்போம்.

Wednesday, May 27, 2026

குறட் கடலில் சில துளிகள் 47: நல்லினத்துடன்சேர்க! – இலக்குவனார் திருவள்ளுவன்



(குறட் கடலில் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! – தொடர்ச்சி)

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉம் இல்.   (௪௱௬௰ – 460)

உலகில் நல்லினம்போல் துணையாய் அமைவது வேறில்லை; தீயினம்போல் துன்பம் தருவது யாதுமில்லை.

நல்=நல்ல; இனத்தின்=சேர்க்கையைவிட; ஊங்கு=மேற்பட்ட; துணை=துணை; இல்லை=இல்லை; தீ=தீய; இனத்தின்- சேர்க்கையைவிட; அல்லல்=துயர்; படுப்பதூஉம்=உண்டாக்குவதும்/ தருவதும்; இல்=இல்லை.

‘ஊங்கு’ என்ற சொல்லுக்கு மிக்க, மேலாயிருப்பதொரு, சிறந்ததாகிய, சிறந்த, மேலான, மிகுந்தது, போல, மேம்பாடு என்றவாறு பல பொருள்கள் உள்ளன.

படுப்பதூஉம் – இன்னிசையளபெடை

நம்முடனான சேர்க்கை நல்லதாய் இருப்பின் அதுவே சிறந்த துணை என்கின்றனர். சேர்க்கை கெட்டதாக இருப்பின் அதைவிட வேறு கேடு எதுவும் இல்லை.

நல்லினம் நம்மை நல்ல பாதையில் அழைத்துச் செல்லும்; அறிவின் பாதையில் இட்டுச் செல்லும்; தீயவற்றை விலக்க வழி காட்டும்; துன்பம் வராமல் காக்கும்; நாம் கேட்காமலேயே நமக்குத் துணையாக இருக்கும்.

தீ யினமோ இதற்கு நேர்மாறான விளைவுகளை உருவாக்கும்; தீய பாதையில் செல்ல வைக்கும்; அறியாமையின் பக்கம் அழைத்துச் செல்லும்; நல்லனவற்றை விலக்கி வைத்துவிடும்; இன்பம் வருவதற்குத் தடையாக இருக்கும்; கூடவே இருந்து பகையாக இருக்கும்.

நல்ல எண்ணம் கொண்ட மனிதன் வழிமாறி தீய கூட்டத்துடன் சேர்ந்தால் துன்பம்தான் விளையும். ஆதலின் இச்சேர்க்கை பகைவருடன் கூட்டு வைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும். தீய சேர்க்கை அறிவிலிருந்து விலக்கி அறியாமை பக்கம் அழைத்துச் செல்வதால் பகையாகிறது. எனவே, தீய சேர்க்கை கேடு நிறைந்த வாழ்க்கையைத் தருகிறது.

ஆனால் நல்ல கூட்டத்துடன் சேர்ந்தால் முள் நிறைந்த பாதையைக்கூட மலர் நிறைந்த பாதையாக மாற்றி விடும். தீயன எவை, நல்லன எவை என வழிகாட்டி நல்ல பாதையில் நடைபோடச் செய்யும். வாழ்க்கைப் பாதையைச் செப்பனிடச் செய்து, நன்மை நிறைந்த வாழ்க்கையைத் தரும். எனவேதான் நல்லினத்தைத் துணை எனவும் தீயினத்தைப் பகை எனவும் திருவள்ளுவர் கூறுகிறார்.

 “கூடா நட்பு கேடாய் முடியும்” என்னும் ஆன்றோர் வாக்கும் தீய சேர்க்கையின் தீமையைக் கூறும்.

திருவள்ளுவரும் உடன்பாட்டு முறையில் ‘பெரியாரைத் துணைக் கோடல்’  என அதிகாரம் தந்ததுடன் ‘கூடா நட்பு’ என்றும் ‘சிற்றினம் சேராமை’ என்றும் தனித்தனியே ஈரதிகாரங்களைத் தந்துள்ளார். நல்ல சேர்க்கையை அடையாளம் காணவே ‘நட்பாராய்தல்’ என்றும் அதிகாரம் தந்துள்ளார்.

பலமுறையும் ஆராய்ந்து மேற்கொள்ளாத நட்பு தீயதாக அமையின் அது சாகும்வரை துன்பத்தைத் தருவதாக அமையும்.

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.   (திருக்குறள், ௭௱௯௰௨ – 792)

என்கிறார் திருவள்ளுவர்.

கூடா நட்பு குறித்து நாலடியாரும் விளக்கியுள்ளது.

“ஏமாந்துபோகாதீர்கள்; ‘கெட்ட தோழமை நல்ல ஒழுக்கத்தைக் கெடுக்கும்'” (1 கொரிந்தியர் 15:33) என்கிறது விவிலியம்.

இவ்வாறு உலக நூல்கள் பலவும் கூடா நட்பை அதன் தீமை கருதி விலக்கவே கூறுகின்றன.

எனவே,

துணையாய் அமையும் நல்லினத்துடன் சேர்க!

தீமை விளைவிக்கும் தீயினத்தை விலக்குக!


Monday, May 25, 2026

 

முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய்க்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!- இலக்குவனார் திருவள்ளுவன்



தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றியைப் பொறுக்க மாட்டாதவர்கள் மக்கள் ஆதரவில் வெற்றி பெற்றதாக் கூறவில்லை; பொய்மையில் பிறந்த வெற்றி என்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை விரும்புபவர்கள் அதற்காகச் சொல்லப்படும் காரணங்களில் ஈடுபாடு காட்டவில்லை. மக்கள் ஆதரவால் மக்கள் நட்சத்திரம் வெற்றி பெற்று மக்கள் முதல்வர் ஆனதாக மகிழ்கின்றனர்.

த.வெ.க.வின் வெற்றியை விரும்பாதவர்கள், தாங்கள் விரும்பிய கட்சியின் தோல்வியால் அதிர்ச்சியடைந்தவர்கள், தாங்கள் ஆட்சியில் செய்த தவறுகளை உணராதவர்கள் திரைப்படமாயையால்தான் ஆட்சியில் அமர்ந்ததாகக் கூறி வருகிறார்கள். கூறி வருவது மட்டுமில்லை. அவ்வாறு எண்ணித் தங்களையே ஏமாற்றிக் கொண்டுள்ளார்கள். த.வெ.க.வெற்றிக்கான காரணங்களில் திரைப்பட மாயையும் ஒன்று. ஆனால், அது மட்டுமே காரணமில்லை. வெற்றி தோல்வி இயற்கை என்பதை உணர்ந்து தோல்வியை மக்கள் முன்னிலையில் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருந்தாலும் அவர்களின் உள்ளம் அதனை ஏற்கவில்லை. உண்மையை உணர்ந்து கொள்ளா இச்சூழல் அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லாது.

இந்நேர்வில் முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய் அமைதி காப்பதும் நன்றே. அவருக்குத் தங்கள் பக்கம் இருக்கும் குறைகளும் தவறுகளும் தெரியும். அதே நேரம் தாங்கள் சொன்ன வாக்குறுதிகளும் தாங்கள் நிறைவேற்றிவரும் திட்டங்களும் என்னென்ன என்றும் அறிவார்.

பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கும் அரசில் பங்களித்துள்ளமையை கட்சிச்சார்பின்றி அனைவரும் பாராட்டத்தான் செய்கின்றனர். மக்கள் நலச் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டி வரும் முதல்வருக்குப் பாராட்டுகள்.

முதல்வருக்கு என்றென்றும் பாராட்டு மாலைகள் குவியவும் உலக அளவில் நிலையான புகழ் பெறவும் தமிழுக்கும் தமிழர்க்கும் செய்ய வேண்டிய நிலையான செயல்கள் பல உள்ளன. அவற்றுள் சிலவற்றை விரைந்து நிறவேற்ற வேண்டுகிறோம்.

கட்சி வலியுறுத்தும் கொள்கைகளில் ஒன்றாக இருமொழிக் கொள்கை குறிக்கப்பெற்றுள்ளது. தேர்தல் அறிக்கையிலும் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இருமொழியில் ஒன்றான ஆங்கிலம் உலகத்திற்கான இணைப்பு மொழியாகத்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சி மாறினாலும் ஆங்கில ஆட்சி மாறவில்லை என்பதே நடைமுறையாக உள்ளது. தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ள அனைத்து மாறுதல் ஆணைகளும் ஆங்கிலமாகத்தான் உள்ளன. தமிழுக்கு இடமில்லா நிலையே தொடர்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்வதை அரசு கொள்கையாகக் கடைப்பிடித்து வருகிறது. இதனைக் காரணம் காட்டியே இடமாற்றங்கள் அளிக்கின்றனர். ஆனால் இதனைத் தலைமைச்செயலகத்தில் கடைப்பிடிக்காமையால் பணிச்சுணக்கம், விதி மீறல்கள், இவற்றால் பணியாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாதல், இவற்றால், அரசிற்கு எதிரான வழக்குகள் குவிதல் போன்ற பலவும் நேர்கின்றன. எனவே, முதற்கட்டமாகப் பணியாளர் மேலாண்மைத் துறை, நிதித்துறை, பொதுத்துறைகளில் பணியாற்றும் அனைவரையும் உடனடியாக மாற்றுதல் வேண்டும். புதிய செயலர்கள் வந்தாலும் இத்துறைகளில் முன்னரே பணியாற்றுவோர் அவர்களையும் திசை திருப்பிவிடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்களுள் நல்லவர்களும் வல்லவர்களும் உள்ளனர். எனினும் செல்லாக்காசினர். எனவேதான் தீமைகள் தொடர்கின்றன. பிற துறைகளில் உள்ள அதிகாரிகள், பணியாளர்களையும் உடன் மாற்ற வேண்டும். பணியிடமாற்றங்கள் மேற்கொள்ளும் பொழுது தமிழ் வளர்ச்சித்துறையில் தமிழில் பட்டம் பெற்றவர்களையே மாற்றி அமர்த்த வேண்டும்.

தமிழ் ஆட்சி மொழித்திட்டத்தைச் செயற்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே ஆணைகள் உள்ளன. அவற்றை மீண்டும் மீண்டும் அறிவிப்பதால் பயனில்லை. எனவே, முதன்முறையாக ஆங்கில ஆணைகளுக்குக் காரணமான உதவிப்பிரிவு அலுவலரில் இருந்து செயலர் வரை உள்ள அனைத்து அலுவர்களுக்கும் குறைந்தது ஓராண்டேனும் ஊதிய உயர்வு நிறுத்த வேண்டும். இவ்வாறு தண்டனை பிறப்பித்தால்தான் பிறருக்கும் தண்டனை மீதான அச்சம் வரும். எனவே, உடனடியாகத் தமிழாட்சிமொழித் திட்டத்தைச் செயற்படுத்தாதவர்கள் மீது நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியேனும் ஆங்கிலக் காதலர்கள் திருந்த வேண்டும். ஆங்கில ஆட்சியை நிலை நிறுத்தியதால் ஆட்சியை முந்தைய ஆள்வோர் இழந்தனர். அவ்வாறில்லாமல் தமிழாட்சியை நிலை நிறுத்துக.

எல்லா இடங்களிலும் தமிழுக்கும் தமிழாய்ந்த தமிழர்க்கும் முதன்மை தர வேண்டும்.

தமிழ்க்கல்வியகங்களுக்கும் தமிழ்த்துறைகளுக்கும் தமிழ் இருக்கைகளுக்கும் தர வேண்டிய நல்கைகள் தரப்படாமல் உள்ளன. அவற்றை நிலுவையின்றி வழங்கித் தொடர்ந்து நல்கை வழங்கப்படவும் ஆவன செய்ய வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த்துறை தொடங்க வேண்டும்.

உலகப் பல்கலைக்கழகங்கள் மூலமாக அந்தந்த நாட்டு மொழிகள் மூலமாகத் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் வாயிலாக அஞ்சல்வழி மூலமாகப் பிற மொழிகள் வாயிலாகத் தமிழ் கற்பிக்க வேண்டும்

இன்னும் பல வேண்டுகோள்கள் உள்ளன. அவ்வப்பொழுது தெரிவிக்கலாம். எனினும் தமிழ்மொழிக்குத் தலைமை யளிப்பதற்கு முதலிடம் தர வேண்டும்.

மக்கள் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ள முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய்க்குப் பாராட்டுகள். தமிழ் நலச்செயற்பாடுகளே தலையாய பணிகள் எனக் காெண்டு செயற்படுமாறும் வேண்டுகிறோம்.

Followers

Blog Archive