(குறட் கடலில் சில துளிகள் 47: நல்லினத்துடன் சேர்க! – தொடர்ச்சி)
குறட் கடலில் சில துளிகள் 48
ஆவது, அழிவது, விளைவதை ஆய்ந்து செய்க!
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். (திருக்குறள், ௪௱௬௰௧ – 461)
ஒரு செயலைத் தொடங்கும் முன் அதனால் ஏற்படும் அழிவுகளையும் ஆகக் கூடியவற்றையும் மொத்தத்தில் ஏற்படும் ஆதாயத்தையும் ஆராய்ந்து முடிவெடுத்துச் செய்க.
பதவுரை
அழிவதூஉம்=அழிவதும், கெடுவதும்; ஆவதூஉம்=ஆகக்கூடியதும், உண்டாகுவதும்; ஆகி=உண்டாகி, ஆய்; வழிபயக்கும்=தரும், அதன் வழியாக உண்டாதல், பின்வரும்; ஊதியமும்=நன்மையும், ஆதாயமும், வருவாயும், பயனும்; சூழ்ந்து செயல்=ஆராய்ந்து செய்க.
வழிபயக்கும் ஊதியம்=எதிர்காலப் பயன்
வழிபயக்கும் என்ற தொடர் பின்வரும் என்ற பொருளையும். ஊதியம் என்ற சொல் ஆதாயம் அதாவது பயன் என்ற பொருளையும் குறிப்பன.
வழிபயக்கும் ஊதியம் என்பது எதிர்காலப் பயன் என்ற பொருள் தரும்.
உரையாசிரியர் பரிதி இத்தொடர்க்கு “தொன்றுதொட்டு மரபுவழி வரும் ஊதியம் அஃதாவது தலைமுறை தலைமுறையாக வரும் ஊதியம்” என உரைக்கிறார். உரையாசிரியர் பரிப்பெருமாள் “வழிபயக்கும் ஊதியமாவது முன்பு நன்றாகத் தோன்றிப் பின்பு தீது ஆகாத வினை” என்கிறார். “தீது ஆகாத வினை” என்கிறார் உரையாசிரியர் பரிமேலழகர். பொருள் அல்லது பயன் என்று சொல்லாமல் வினையாகவே கூறுகிறார். எனவே, வழிபயக்கும் ஊதியம் என்பது பொருளாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை; முயற்சியால் உண்டாகும் நற்பெயரும் வெற்றியும் ஊதியமாகக் கருதப்படும்.
ஒரு செயல் வெற்றிகரமாக முடிந்தது என்றால் அதன் பயன் நன்மையாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. தீமையும் வரலாம். எனவே, ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். வழிபயக்கும் ஊதியம் என்பதற்கு நீண்ட கால ஆதாயம் என்று சொல்வது சிறப்பாக இருக்கும் என்பர் திருக்குறள் விளக்குநர்.
‘அழிவதூஉம்’ ‘ஆவதூஉம்’ இன்னிசை யளபெடைகள்.
ஒரு செயலால் நிகழும் இழப்பு, ஆக்கம், ஆதாயம் ஆகியவற்றைச் செலவு, வரவு, ஆதாயம்(இலாபம்) ஆகியவைபோல் கருதிப் பார்க்கின்றனர். ‘ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது அல்லவா? எனவேதான் நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
ஆவதூஉம் ஆகி என்பதற்குத் தேவநேயப் பாவாணர், மு.வ. முதலான பலரும் அழிந்த பின் ஆவதையும் எனப் பொதுவில் கூறுகின்றனர். எனினும் படிப்போர்க்குத் தெளிவில்லாமல் உள்ளது. அழிந்தால்தான் அதனால் வரும் ஆவதைப் பார்க்க வேண்டுமா? வினையால் வரும் கேடு, நன்மை எனத் தனித்னியே ஆராய்ந்து பார்க்கலாம் அல்லவா? அழிவையும் ஆகிவருவதையும் தனித்தனியே நோக்குவதே எளிதாக உள்ளது.
குறள்நெறி அறிஞர் பேரா.முனைவர் சி.இலக்குவனார், ஆவதூஉம்=செய்து முடித்தால் உண்டாகக் கூடிய பயன் என்கிறார். இதுவே ஏற்கத்தக்கதாக உள்ளது. அழிந்த பின் ஆவது என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வருமாறும் விளக்கம் தருகிறார்.
“ஒரு வினையைச் செய்யத் தொடங்குங்கால், அழிவன பலவாக இருக்கலாம். அழிவிலிருந்துதான் ஆக்கம் தோன்றும். பொருளைச் செலவழித்துத்தான் ஆக்கம் தோன்றும். பொருளைச் செலவழித்துத்தான் பொருளைப் பெருக்குதல் வேண்டும். செலவு என்ன வரவு என்ன என்று ஆராய்ந்து பார்த்துச் செலவினும் வரவு மிகுதியாக இருந்தால்தான் ஒரு வினையைத் தொடங்குதல் வேண்டும். வரவும் மேன்மேலும் தொடர்ந்து பெருகக் கூடியதாய் இருத்தல் வேண்டும். அங்ஙனமின்றி வரவினும் செலவு மிக்கிருந்தாலும் வரவும் செலவும் ஒத்திருந்தாலும் ஒருவினையைத் தொடங்கி முடிப்பதால் பயனில்லை என்பதாம். (பேரா.சி.இலக்குவனார், வள்ளுவர் வகுத்த அரசியல், இலக்குவம், பக்கம் 775)
ஒரு செயலைத் தொடங்கும் முன்னர், அதற்கான முயற்சியில் இறங்கும் முன்னர், அச்செயலை நிறைவேற்றினால் ஏற்படக்கூடிய அழிவுகளைக் கருதிப் பார்க்க வேண்டும். அடுத்து, அவ்வழிவிற்குப்பின் ஏற்படக் கூடிய வேறு விளைவுகளையும் பார்க்க வேண்டும். பின்னர், அச்செயல் நிறைவேறினால், ஏற்படக்கூடிய ஆதாயங்களைக் கணக்கிட வேண்டும். மேற்கொள்ளும் செயலால் கிடைக்கும் தொடர் பயனையும் ஆராய்ந்து காண வேண்டும். உடனடியாகக் கிடைக்கக்கூடிய பயனை விட அதன் பின் தொடர்ந்து வரும் பயன் மிகுதியாக இருக்கலாம். அல்லது குறைவாகவும் இருக்கலாம். எனினும் செயலால் கிடைக்கக்கூடிய மொத்த பயனையும் ஆராய வேண்டும். இவ்வாறு ஒரு செயலால் ஏற்படக் கூடிய தீய விளைவு, பயன், தொடர் பயன் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றுள் மிகை நாடி அதற்கேற்பச் செயலைத் தொடங்குவதா இல்லையா என்று முடிவெடுக்க வேண்டும்.
சூழ்ந்து என்றால் சூழ இருத்தல் என்று மட்டும் பொருளில்லை. ஆராய்தல் என்றும் பொருள். பிறருடன் கலந்து பேசி முடிவெடுத்தல் என்றும் பொருள்.
“நின்னொடுசூழ்வறோழி” (கபிலர், கலித்தொகை 54.18)
நானாக முடிவெடுக்காமல் உன்னிடம் ஆராய்ந்து பேசி முடிவெடுப்பேன் தோழி என்கிறார் தலைவி.
என்னொடும்சூழாது (பெருஞ்சித்திரனார், புறநானூறு 163.5)
“என்னிடம் கலந்து பேசாமல் அஃதாவது என்னை எதுவும் கேட்காமல் எல்லார்க்கும் வழங்குவாயாக” என்கிறார் புலவர்.
சூழ்ந்து செயல் என்றால் ஆராய்ந்து செய்தல் என்றே பொருளாகும். இப்பொழுது சூழ்ச்சி என்றால் தீய செயலுக்குத் திட்டமிடல் என்று பொருளாகும்.
குறள் வழியில் செயலின் அல்லது தொழிலின் தீய விளைவு, நல்ல விளைவு ஆகியவற்றை ஆராய்ந்து நிறைவில் பயன்தரும் செயலையே தொடங்குவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்