Monday, February 9, 2026

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 06: இலக்குவனார் திருவள்ளுவன்



(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05: தொடர்ச்சி)

06

  “தமிழினத் தொன்மையையும் தனித்தன்மையையும் நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள் தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல் மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கண நூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும்கூட இதற்கு நிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்கு முன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இலக்கண இலக்கிய வளம் மிக்கதாய்த் தமிழ் இருந்துவந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே நற்சான்றாய்த் திகழ்கிறது.“எனச் செம்மொழி முனைவர் க. இராமசாமி (சென்னை வானொலி நிலையம் நடத்திய இலக்குவனார் நூற்றாண்டு விழா – கருத்தரங்க உரை) தொல்காப்பியத்தின் சிறப்பை விளக்குகிறார். தமிழர்க்காக – தமிழ் மரபுகள் அடிப்படையில் – தமிழ்மரபுகள் காக்கப்பட – தமிழ் முந்துநூல்கள் கண்டு தமிழில் – தமிழரால் எழுதப்பெற்ற தொல்காப்பியத்தை ஆரிய வழி வந்ததாகக் கூறுவோரும் உளர்! அத்தகையோரை உச்சத்தில் ஏற்றிக் கொண்டாடும் நாம் தமிழர் எனப்பெருமைப்பட என்ன இருக்கிறது?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது தமிழர் பண்பாடு.

சாதி இரண்டொழிய வேறில்லை’ என்பது தமிழர் நடைமுறை.

  சாதி என்பதே தமிழ்ச்சொல்லல்ல என்பதிலிருந்தே சாதிப்பகுப்புமுறை தமிழர்க்குரியதல் என்பது நன்கு தெளிவாகிறது. ஆனால், நால் வருண வேறுபாட்டைப் புகுத்திய ஆரியர்கள், அதற்கேற்ப தொல்காப்பியத்தில் இடைச்செருகலைப் புகுத்தி, சாதிப்பகுப்புமுறை தொல்காப்பியர் காலத்தில் இருந்ததாகத் தவறாகவும், இதன் அடிப்படையில் தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ளியும் தொடர்ந்து இனப்பழிப்பைச் செய்து வருகின்றனர்.

  “மரம், செடி, கொடி முதலிய நிற்பன பற்றிய சொற்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன முதலிய இயங்குவன பற்றிய சொற்கள் யாவும் புலவர் தெரிந்திருத்தல் வேண்டும். மக்களைப்பற்றியும் அவர்களைச் சார்ந்தவற்றைப்பற்றியும் பிற இயல்களில் விளக்கப்பட்டுள்ளன. அங்ஙனமிருந்தும், விலங்குகளைப்பற்றியும் மரங்களைப்பற்றியும் கூறுமிடத்தில் எவ்விதத் தொடர்புமின்றி வருண வேறுபாடுகளைக் குறிக்கும் செய்திகள் கூறப்படுகின்றன. இங்ஙனம் கூறும் பதினைந்து நூற்பாக்களும் (மரபியல் 71 முதல் 85 முடிய) பின்னுள்ளோரால் இடையில் நுழைக்கப்பட்டனவே என்பதில் ஐயமே இன்று. “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்ற நூற்பாவும், “வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல் என மொழிப பிறவகை நிகழ்ச்சி” என்ற நூற்பாவும் குன்றின் விளக்கெனத் தெற்றெனப் புலப்படுத்தி நிற்கின்றன.” என்கிறார் தொல்காப்பிய அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார்(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 249).

  “நூல்களைப் பற்றியும் அவற்றின் வகை பற்றியும் செய்யுளியலில் ஆசிரியர் கூறுகின்றார். கூற வேண்டுவனவற்றை ஆங்கே கூறாமல் மரபியலில் கூறத் தலைப்பட்டதன் பொருத்தம் விளங்கவில்லை. உலகியல் மரபினையும் செய்யுளியல் மரபினையும் இங்கு விளக்குகின்றார் என உரையாசிரியர்கள் உள்ளதற்கு அமைதி கூறும் வகையில் உரைத்துள்ளனரேனும் நுணுகி ஆராய்வார்க்கு உண்மை வெளிப்படுதலில் தவறாது. சூத்திரம் என்ற சொல்லும் உத்தி என்ற சொல்லும் தாம் இடையில் புகுத்தப்பட்ட தன்மையை எளிதே புலப்படுத்துகின்றன. ஆதலின் நூறு முதல் நூற்றுப் பன்னிரண்டு முடிய உள்ள நூற்பாக்கள் ஆசிரியருடையனவல்ல என்பது அங்கை நெல்லிக் கனிபோல் விளங்குகின்றது.

  நூற்பாவின் இறுதியில் நூலின் புறனடையாக உரைக்கப்பட்டிருப்பது ஏனைய புறனடைகளோடு ஒப்பிடுமிடத்துத்தான் பின் வந்த பேதைப் புலவன் படைப்பெனப் பேசா நிற்கின்றது.” என்றும் இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியரான பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்குகிறார். (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 250).

இவற்றை எல்லாம் அறிந்தும் தமிழினத்தை இழிவுபடுத்தும் வகையில் நால்வருணப்பாகுபாடும் வேறுபாடும் தமிழர்கள் ஏற்றுக் கொண்ட முறை எனக் கூறுவோர் ஏற்றமுடன் வாழ்கையில் நாம் தமிழர் எனப்பெருமைப்பட என்ன இருக்கிறது?

(தொடரும்)

Sunday, February 8, 2026

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு : இலக்குவனார் திருவள்ளுவன் 1ஃ

 

ஃஃஃ   அகரமுதல  இலக்குவனார் திருவள்ளுவன்  08.02.2026

1



இன்றைய நூலாய்விற்குரிய 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் என்னும் நூலின் ஆசிரியர் இலக்குவனார் மொழிப்போர் நூற்கலைஞர் நிவேதிதா உலூயிசு, எழுத்தாளராக மட்டுமல்லாமல், ஆய்வாளர்,பெண்ணிய வரலாற்றாளர், குமுகச்செய்றபாட்டாளர் ஆவார்.எனவே, இவரது நூல்கள் பலவும் அறியப்படாமல் உள்ள அறிய வேண்டிய செய்திகளை அறியச்செய்யும் வகையில் உள்ளன.

 

முதல் பெண்கள், ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை, சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை, வடசென்னை – வரலாறும் வாழ்வியலும், அறியப்படாத கிறித்தவம் (இரண்டு பகுதிகள்), பெயரற்றவர்களின் குரல் முதலிய நூல்கள் இவரது ஆய்வுப் புலமையை வெளிப்படுத்துவன. அவ்வாறுதான் இந்நூலும் அமைந்துள்ளது. 

இவரின் ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை என்ற நூல்  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு  தமிழ்ப் பேராயம் வழங்கும்  போப்பு மொழிபெயர்ப்பு விருதைப் பெற்றுள்ளது.

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இயல் இசை அருங்காட்சியகக் கண்காட்சியை வடிவமைத்துத் தந்தார். இவரின் மரபு நடைகள், ஊர்தி உலாக்கள் சென்னையின் பண்பாட்டையும் வரலாற்றையும் மக்களிடம் அறிமுகப்படுத்த உதவுகின்றன. 2023 ஆம் ஆண்டு கோத்தே பயிலகத்துடன்  இணைந்து வண்ணாரப்பேட்டை மரபு நடையை வடிவமைத்து நடத்தினார். பூந்தமல்லி, இராயபுரம், காசிமேடு முதலிய பகுதிகளில் மரபு நடை நடத்தியுள்ளார்.

இலாட்லி தேசிய விருது (2024), இலாட்லி வட்டார விருது (2021), தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் வழங்கும் தோழர் கே.முத்தையா விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, இலக்குவனார் மொழிப்போர் நூற்கலைஞர் விருது ஆகிய  விருதுகள் இவரின் படைப்பாற்றலுக்குச் சான்று பகர்கின்றன.

தமிழ்நாட்டு மொழிப்போர் வரலாறுகள் இன்றைய தலைமுறையினர் ஓரளவுகூட அறியப்படாத நிலையில் உள்ளன. அதுவும் மொழிப்போரில் பெண்கள் முனைப்புடன் ஈடுபட்டமை வெளிவராத நிலையிலேயே உள்ளன. அவற்றை எல்லாம், அன்றைய இதழ்கள், அழைப்பிதழ்கள் முதலியவற்றின் மூலம் நமக்குச் சிறப்பாக எடுத்துத் தந்துள்ளார். இந்நூலை மாணாக்கர்களுக்குத் துணைப்பாட நூலாக வைக்கலாம். இந்நூலின் கட்டுரைகளைப் பாட நூல்களில் சேர்க்கலாம்.

மொழிப்போரால் ஆட்சிக்கு வந்த அரசுகள் மொழிப்போரை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தத் தவறி விட்டன. இனியாவது வகுப்புகள் தோறும் மொழிப்போர் வரலாறுகளும் மொழிப்போராளிகள் வரலாறும் பாடங்களாக வைக்கப்பட வேண்டும்.

இனி, 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூல் குறித்துப் பார்ப்போம்.

 

இந்நூல் மொத்தம் 18 கட்டுரைகளை உடையது. அவை பின்வருமாறு

 

1. அறிமுகம்

2. போர்க்களத்தில் பெண்கள்

3. காந்தியைக் கேள்வி கேடட நீலாவதி அம்மையார்

4. போராட்டத்துக்கு உரமிட்ட தலைவர்கள்

5. 1938 பெண்கள் மாநாடு முதல் அறிவிப்பு

6. தலைவர் நீலாம்பிகை அம்மையார்

7. பெரியாருக்குப் பெரியார் எனப் பெயர் சூட்ட வேண்டும் - தியாகராய நகர் மாதர் முன்னேற்றக் கழகம், அன்னை தருமாம்பாள் ..

8. மாநாட்டு நிகழ்ச்சிகள்

9. அன்னை மீனாம்பாள், டாக்டர் தருமாம்பாள், பண்டிதை நாராயணி, பார்வதியம்மையார் உரைகள்

10. வ,பா.தாமரைக்கண்ணி அம்மையார் - வரவேற்புக்குழுத் தலைவர்

11. நிறைவேறிய மாநாட்டுத் தீர்மானங்கள்

12. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் முறையாகப் பெண்கள் கைது

13. எண்மர் கைது

14. பெரியார் மீது நடவடிக்கை

15. பெண்கள் கைதை ஒட்டிய பிற போராட்டங்கள், கைதான பெண்கள் சிறுகச் சிறுக விடுதலை

16. வேலூர் முதலாவது சென்னை மாநிலத் தமிழ்ப் பெண்கள் மாநாடு

17. கட்டாய இந்தி எதிர்ப்பு

18. பின்னுரை

 

நூலின் முன்னுரையில் நூலாசிரியர் நிவேதிதா உலூயிசு, அன்று பெரியார் என்ன செய்தார்? தமிழ்நாட்டை மொழிப்போருக்கு அவர் எப்படித் தயார் செய்தார் என அறிந்து கொள்வதிலும் அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்வதிலும் நம் முனைப்பைக் காட்ட வேண்டிய காலம் இது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பல நிறைகள் கொண்ட தலைவர்களிடமும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவ்வாறே பெரியாரிடமும் சில குறைகள் உள்ளன. ஆனால், பெரியாரை இழித்துப் பேசியும், அவருக்குரிய பெருமைகள் எல்லாம் உண்மையானவை யல்ல எனப் பழித்துக் கூறியும் அவரை ஏமாற்றுக்காரர் போல் விவரிததும் எழுதியும் பேசியும் வருவோர் உள்ளனர். அவர்கள் இந்நூலைப் படித்துப் பார்த்தால் பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களின் அரிய பணிகள் நன்கு புலனாகும். ஆனால், அது மட்டும்தான் இந்நூலின் நோக்கமல்ல. இந்நூலின் முதன்மை நோக்கமே 1938 மொழிப்போரில் ஈடுபட்ட பெண்களின் பங்களிப்பு வெளிப்படாமையை வெளிப்படச்செய்வதே ஆகும். அதனை ஆசிரியர் செவ்வனே செய்துள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

தை 25, 2057 / 07.02.2026 அன்று தமிழ்க்காப்புக் கழகத்தின் ஆளுமையர் உரையின் பொழுது ஆற்றிய நூலுரை

Friday, February 6, 2026

இந்தி நுழைவை எந்நாளும் தடுப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்


    இந்தி நுழை
    வை எந்நாளும் தடுப்போம்!

    இந்தியை அல்ல, இந்தித்திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்” என நம்மைத் தலைவர்கள் ஏமாற்றுகிறார்கள். நாமும் “ஆமாம், ஆமாம்” என்று சொல்லி இந்தித் திணிப்பிற்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களின் மாநிலங்களில் இந்திப் பயன்பாட்டை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்கு அப்பால் பிற மக்களின் மீது, நம் மக்களின் மீது இந்தியை நுழைப்பதே திணிப்பதுதான்.

    பள்ளிகளில் இளமழலை(L.K.G.) வகுப்பிலிருந்தே இந்தி திணிக்கப்பட்டுக் கற்பிக்கப்படுகிறது. கேட்டால் விருப்பப் பாடம் என்கிறார்கள். விருப்பப்பாடம் என்றால் வேறு மொழிகளும் விருப்பப்பாடப் பட்டியலில் இருக்கிறதா என்றால் இல்லை. விருப்பப்பாடம் என்றால் யார் விருப்பத்தில் கற்பிக்கப்படுகிறது? படிப்பவர்கள் விருப்பத்திலா? இல்லை! படிப்பவர்களின் பெற்றோர்கள் விருப்பத்திலா? இல்லவே இல்லை! அவ்வாறென்றால் இந்தியைத் திணிப்பதாகக் கூறும் தமிழ்நாட்டின் அரசு யார் விருப்பம் என்று கூறி இந்தியைத் திணிக்கிறது? இந்தித்திணிப்பை எதிர்ப்பதாகக் கூறும் கட்சிகள் அனைத்தும்  வாய்மூடி அமைதியாக இருப்பது ஏன்? இந்தியைத் திணிப்பதை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே மெல்ல மெல்ல-அல்ல, அல்ல விரைவாக இந்தியை நாடு முழுவதும் பரப்பிக் கொண்டிருப்பது ஏன்? பள்ளிகளில் இருந்து இந்தியை அடியோடு நீக்கும் துணிவு அரசிற்கு உள்ளதா? அதனை ஒப்புக்கொள்ளும் தமிழ்க்காப்புணர்வு பிற கட்சிகளுக்கு உள்ளதா?

      அரசு என்றால் இன்றைய அரசு மட்டும் அல்ல. இந்தியை எதிர்த்து ஆட்சிக்கு வந்த எல்லா அரசுகளையும்தான் குறிப்பிடுகிறோம். பல நல்ல  திட்டங்களைச் செயற்படுத்தும் அரசு, இந்தி நுழைவு ஒழிப்பையும் ஒரு திட்டமாகக் கொண்டு செயலாற்றினால் என்ன? எவ்வகை விருப்பத் தெரிவுமின்றி இந்தியை வல்லடியாகப் படிக்கச் சொல்வதை நிறுத்தினால்தான் என்ன?

    இந்தி எதிர்ப்பால் ஆட்சிக்கு வந்தவர்கள் குடும்பத்தினர் கோடியில் புரள்கின்றனர். ஆனால் இந்தி எதிர்ப்பில் உயிரிழந்தவர்கள், தண்டனை பெற்றவர்கள், துன்புற்றவர்கள் குடும்பத்தினர், அவர்கள் வழி வந்தோர் தெருக்கோடியில் அல்லலுறும் நிலையில் இருப்பது ஏன்?

    1930 இல் மொழிப்போராட்டம் தொடங்கி நூறாண்டு நெருங்க உள்ளது. 1965 மொழிப்போர் நிகழ்ந்து 60 ஆணடு ஆகிறது. ஆனால் இன்றும் நாளும் இந்தித் திணிப்புகள் உள்ளன. அலைபேசி வழியாக இந்தித் திணிப்பு! முழக்கங்கள் வாயிலாக இந்தித் திணிப்பு! திட்டங்களின் பெயர்கள் வாயிலாக இந்தித் திணிப்பு! பெயர்கள் வாயிலாக இந்தித் திணிப்பு! திரைப்படங்கள் வாயிலாக இந்தித் திணிப்பு! தொலைக்காட்சிகள் வாயிலாக இந்தித் திணிப்பு! என எங்கும் எதிலும் இந்தித் திணிப்பு அரங்கேறிக் கொண்டுள்ளது. ஆனாலும் இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் என நாளும் வெற்று முழக்கம்!

    எப்பொழுது, தமிழ்நாட்டில் நுழைந்துள்ள, மேலும் நுழையப் பார்க்கிற இந்தியை அடியோடு எதிர்க்கிறோம் என முழங்கி அதனைச் செயற்படுத்துகிறார்களோ, அப்போதுதான் இந்தித் திணிப்பு நிற்கும்; மக்களும் பயனடைவார்கள்.

     மாநில உரிமைக்குக் குரல் கொடுத்து வரும் அரசு, நவோதயா பள்ளிகள் வாயிலாகவும் மத்திய அரசு கல்விவாரியப்பள்ளிகள் வாயிலாகவும் படைத்துறைப் பள்ளிகள் வாயிலாகவும் பிற கல்விநிலையங்கள் வாயிலாகவும் இந்தித்திணிப்பை அடியோடு நிறுத்த வேண்டும். அதற்கு முன்னோடியாக முதலில் தமிழ்நாட்டரசின் பள்ளிகளின் வாயிலாகவும் இந்தித் திணிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்

     ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளிலும் ஒன்றிய அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நிறுவனங்களிலும் ஒன்றியம் சார் துறைகளிலும் இந்தி அடிப்படைத் தகுதியாக உள்ளது. இதனால் தமிழர்களுக்கும் இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிறருக்கும் வேலை உரிமை மறுக்கப்படுகிறது. எனவே, இதனை மாற்ற வேண்டும். அதற்கு ஒன்றிய அரசின் அலுவல் மொழியாகத் தமிழும் ஆக்கப்பட வேண்டும்.

    இந்தியைத் தேசியமொழியாகவும் பெரும்பான்மையர் பேசும் மொழியாகவும் தகவல் திரிப்பு செய்வோரைத் தண்டனைக்குரியவர்களாக அறிவிக்க வேண்டும். அத்தகையோருக்குத் தண்டனை வழங்கத் தவறக் கூடாது.

    வாய்ச்சொல்லில் வீரராக இல்லாமல், மக்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்லறிஞர்களாகத் திகழ, நமக்குத் தேவை தாய்மொழிவழிக் கல்வியே! எனவே, எல்லா நிலைகளிலும தாய்மொழியாம் தமிழ் வழிக்கல்வியே திகழ வகை செய்ய வேண்டும்.

    ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மட்டுமே மொழிப்பாடமாக இருக்க வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கிலம் கற்றுத்தரப்பட வேண்டும். .பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் பிற மொழிக்கல்வியில் தொடக்கநிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண்களைத் தொடக்கதிலிருந்து தமிழைப் படிக்கும் பாடத்திட்டத்திற்கு இணையாகக் கருதக் கூடாது. பன்னிரண்டாம் வகுப்புவரை யாவரும் தமிழைக் கற்றே ஆக வேண்டும்  பிற மொழிக் கல்வியைக் கற்றால் கூடுதல் கல்வியாகத்தான் கருதவேண்டும். இவ்வாறு நடைமுறைப்படுத்தினால்தான் பள்ளிகளில் இருந்து இந்தியை ஒழிக்க முடியும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டில் இந்தித்திணிப்பைத் தடுக்க முடியும்.

    இவ்வாறு எங்கெல்லாம் இந்திப் பயன்பாடு இருக்கிறதோ அங்கெல்லாம் இந்திப் பயன்பாட்டை நிறுத்துவதுடன்  அது நுழையும் வாயிலையும் அடைக்க வேண்டும். இந்தி நமக்குப் பகை என்பதை உணர்த்தும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இந்தியும் பிறமொழிகளை ஈர்த்து உருவாக்கப்பட்ட புனைவு இந்தியும்  பேசப்படும் மாநிலங்கள் எட்டு மட்டுமே. பிற மொழிகளைத் தாய்மொழியாக உள்ள மாநிலங்கள், ஒன்றியங்கள் மொத்த எண்ணிக்கை 36 பிற மொழி மாநிலங்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவாகப் பேசப்படும் இந்திக்காகப் பிறமொழி அனைத்திற்கும் செலவழிக்கும் தொகையைவிடப் பன்மடங்கு செலவழிக்கும் அநீதியைத் துடைக்க வேண்டும்.

      அதே போல் பத்தாயிரம் அளவில் பேசப்படும் சமற்கிருத மொழிக்குப் பல ஆயிரம கோடி செலவழிப்பதையும் நிறுத்த வேண்டும்.

    இத்தொகைகளெல்லாம் பிற மொழிகளுக்கு மொழி பேசுநர் எண்ணிக்கை அடிப்படையிலும் மொழியின் வளத்தின் அடிப்படையிலும் பிரித்து ஒதுக்க வேண்டும்.

    தமழ்நாட்டிலுள்ள இந்திப்பரப்புரை அவையை– இந்திப்பிரச்சார சபையை — இழுத்து மூட வேண்டும்.

    இவ்வாறெல்லாம் செய்தால்தான் இந்தித்திணிப்பு என்பது இல்லாமல் போகும்.

    எனவே, அரசும் கட்சிகளும் அமைப்புகளும் மக்களும் தங்களால் இயன்ற வகைகளில் எல்லாம் இந்தி நுழைவைத் தடுக்க வேண்டும். இந்தியை எதிர்த்து உயிர் நித்தவர்களையும் சிறைப்பட்டவர்களையும் வதைப்படடவர்களையும் நாம் மதிக்கிறோம் என்றால் இந்தியைத் தடுத்திடுவோம்!.தமிழ்மொழியை வளர்த்திடுவோம்!

    இந்தி எதிர்த்திட வாரீர் — நம்

    இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்!  – பாவேந்தர் பாரதிதாசன்



    Thursday, February 5, 2026

    ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக! – – இலக்குவனார்திருவள்ளுவன்

         06 February 2026      கரமுதல



    சங்கப் புலவர்கள் பொன்னுரை – 29

    ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக!

    காவல்,

    குழவி கொள் பவரின், ஓம்புமதி!

    காத்தற்குரிய நாட்டைக், குழந்தையைத் தாய் காப்பதுபோல் காத்திடுவாயாக!

     – நரிவெரூஉத்தலையார்

      புறநானூறு 5, அடிகள் 6-7

      திணை: பாடாண் திணை

      துறை:செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.

    சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட பொழுது, நரிவெரூஉத் தலையார் பாடியது.

    முழுப்பாடல்:

    எருமை அன்ன கருங்கல் இடை தோறு,

    ஆனிற் பரக்கும் யானைய, முன்பின்,

    கானக நாடனை!நீயோ, பெரும!

    நீயோர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்;

    அருளும் அன்பும் நீக்கி நீங்கா

    நிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,

    குழவி கொள் பவரின், ஓம்புமதி!

    அளிதோ தானே; அது பெறல்அருங் குரைத்தே.

    பதவுரை:

    எருமை – எருமை மாடுகள், அன்ன – போன்ற, கருங்கல் – கரிய கற்கள், இடைதோறும் – இடங்கள் எல்லாம், ஆனின் – மாடுகளைப் போல், பரக்கும் – பரவியிருக்கும், யானைய – யானைகள் உடைய,

    முன்பின் – வலிமையான, கானக – காடுகளை அகத்தே கொண்ட, நாடனை – நாட்டினை உடையவனாய், நீயோ – நீ தான், பெரும – பெருமகனே, நீயோர் ஆகலின் – நீ இவ்வாறு இருப்பதால், நின் – உனக்கு, ஒன்று – ஒன்று மொழிவல் – சொல்கிறேன்,

    அருளும் – நெஞ்சில் அருள் உள்ளமும், அன்பும் – அன்பு உணர்வும், நீக்கி – விலக்கி, நீங்கா – நீங்காத, நிரயம் – நரகம், கொள்பவரொடு – இடமாகக் கொள்பவரோடு, ஒன்றாது – சேராமல்,

    காவல் – காக்கும் நாட்டை, காவல் – காக்கப்படும் நாட்டிற்கு, குழவி – குழந்தை, கொள்பவரின் – வளர்ப்பவர்களைப் போல், ஓம்புமதி – பாதுகாப்பாயாக!

    அளிதோ தானே – அளிக்கத் தக்கது அக்காவல் தானே – தான், அது பெறல் – அத்தகைய காக்கும் வாய்ப்பைப் பெறுவது, அருங்குரைத்தே – அரியது ஆகும்.

    *முன்பின் என்றால், முந்தியும் பிந்தியும் எனப் பொருள் உள்ளதை யாவரும் அறிவர். ஆனால், வலிமை என்றும் பொருள் உண்டு. அப்பொருளிலேயே இங்கே பயன்படுத்தப்பெற்றுள்ளது.*

    பொருளுரை:

    எருமைகள் போன்ற தோற்றத்தையுடைய கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடம் எங்கும் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே!

    நீ இவ்வாறு வளமும், சிறப்பும் பெற்றவனாக இருப்பதால் உனக்கு ஒன்று சொல்கிறேன். கேட்பாயாக!

    அருளும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு வாழும் தீயவரோடு சேராமல், உன் நாட்டை, குழந்தையை வளர்ப்பவர்கள் அக்குழந்தையைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாயாக.

    அத்தகைய நாட்டுக் காவலே அளிக்கத்தக்கதாகும். அவ்வாறான சிறந்த காக்கும் வாய்ப்பைப் பெறுவது அரியதாகும்.

    நாட்டை எவ்வாறு காக்க வேண்டும் எனப் புலவர் நரிவெரூஉத்தலையார் ஆள்வோர்க்குத் தக்க அறிவுரை வழங்கியுள்ளார்.

    நாட்டை மட்டுமல்ல, கட்சி, நிறுவனம், அமைப்பு என எதுவாக இருந்தாலும் அதனைப் பேணும் பொறுப்பில் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரை இது.

    ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக!

    – இலக்குவனார் திருவள்ளுவன்

    தாய், பிப்பிரவரி 05.02.2026

    Monday, February 2, 2026

    தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05: இலக்குவனார் திருவள்ளுவன்

          03 February 2026      கரமுதல



    (தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 04: தொடர்ச்சி)

    இந்நூற்பா மட்டுமல்ல, மற்றொரு நூற்பா மூலம் தமிழர் உலகிலேயே முதன்முறையாகத் திருமணப் பதிவு முறையைப் பின்பற்றி உள்ளனர் என்பதையும் நாம் அறியலாம். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார்.

      திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1791இலும்   உருசியப் புரட்சியினால் உருசியாவில் 1917இலும் திருமணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் திருமணப் பதிவைக் கட்டாயமாக்கினாலும் பல நாடுகளில் அதற்கென எச்சட்டமும் இல்லாமல் இருந்தது. 1964இல் ஐ.நா. இதற்கெனக் கூட்டிய மாநாட்டில் எல்லா நாடுகளும் திருமணப் பதிவினைக் கட்டாயமாக்க வேண்டும் என அறிவுறுத்தியது. அப்பொழுதும் பல நாடுகள் நடைமுறைப் படுத்தாமல் 1979இல் மீண்டும் ஐ.நா. கூடித் திருமணப் பதிவைக் கட்டாயமாக்குமாறு அறிவுறுத்தியது.

      ஆனால், தமிழ்நாட்டில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமணத்தைப் பதிவு செய்யும் நடைமுறை இருந்துள்ளது. வாழ்வியல் அறிஞர் தொல்காப்பியர் திருமண முறையைக்

    கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

    கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

    கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே                     (நூற்பா 1088)

    என்கிறார்.

    (கிழவன் – உரியோன். தலைவன். கிழத்தி – உரியோள், தலைவி.)

      (தலைவன் தலைவியைக் கொள்ளுவதற்குரிய முறைமைப்படி கொடுப்பதற்குரியவர் கொடுப்பக் கரணத்துடன் பெற்றுக் கொள்வதாகும்.) கரணம் என்பது எழுதிப் பதிவு செய்வதைக் குறிப்பது எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் குறிப்பிடுகிறார். இப்பொழுது திருமணத்தை உறுதி செய்யும் வெற்றிலை பாக்கு மாற்றும் நிகழ்ச்சியை மணவோலை எழுதுதல் என்பர். இவ்வாறு எழுதி உறுதிப்படுத்தும் பழக்கமே பதிவு முறையாக மாறிற்று என்கிறார் அவர். தலைவனும் தலைவியும் இணைந்து வாழும் பொழுது பொய்யும் வழுவும் தோன்றி ஒருவரை மற்றொருவர் கைவிட்டுச் செல்லும் நிலையும் சில நேரங்களில் நிகழ்ந்துள்ளது. அதனைத் தடுப்பதற்குத்தான் ஊரறி நன்மணமாக அமைய வேண்டும் என்பதற்காகத் திருமணப் பதிவு முறை தோன்றியது என்பதையும் தொல்காப்பியர் விளக்குகிறார்.

      சிற்றூர் ஆட்சி அலுவலர் (V.A.O.) என இப்போது அழைக்கப்படுவோர் பணியாற்றும் முன்னர் நம் நாட்டில் கடந்த நூற்றாண்டு வரை இப்பணியை ஆற்றி வந்தவர்களைக் கரணம் என்பர். ஊர்க்கணக்கு எழுதும் கணக்குப்பிள்ளைகளாகப் பணியாற்றியோர் அனைவரும் கரணம் என அழைக்கப்படுவதில் இருந்தே முறையாக எழுதி வைப்பதைக் குறிப்பதே கரணம் எனலாம். ஆகவே இன்னாருக்கு இன்னார் வாழ்க்கைத் துணை என எழுதிப் பதியும் முறை கரணம் எனப்பட்டது எனலாம் என்பதைப் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்கியுள்ளார். வாழ்வியல் அறிஞர் தொல்காப்பியர் ‘என்ப’ எனக் குறிப்பதால் அவருக்கு முன்பே இவ்வாறு திருமணத்தைப் பதியும் முறை இருந்திருக்கிறது எனலாம்.

     கடந்த நூற்றாண்டில்கூடச் சில நாடுகள் திருமணப் பதிவை மேற்கொள்ளாதபொழுது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருமணப் பதிவு முறையைத் தமிழர்கள் பின்பற்றி உள்ளனர் என்னும்பொழுது பைந்தமிழர் பதிவு அறிவியலையும் பாங்குடன் அறிந்திருந்தனர் என்று சொல்லிப் பெருமை கொள்ளலாம் அல்லவா? ஆனால், நம் வரலாறு அறியாமல் பூனையைப் பார்த்துத்தான் புலி பாய்ச்சலைக் கற்றுக் கொள்கிறது என்பதுபோல் பண்பாடுஅறியா ஆரியர் வந்துதான் தமிழருக்குத் திருமண முறையைக் கற்றுத் தந்தார்கள் என்போர் உயர் பதவிகளில் இருக்கும் பொழுது நாம் தமிழர் எனப் பெருமைப்படுவதில் என்ன இருக்கிறது?

    (தொடரும்)

    Followers

    Blog Archive