Friday, May 15, 2026

குறட் கடலில் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

      16 May 2026      



(குறட் கடலிற் சில துளிகள் 45: இன நலமே பாதுகாப்பு! – தொடர்ச்சி)

மனநலத்தி னாகு மறுமைமற் றஃது     

மினநலத்தி னேமாப் புடைத்து (திருக்குறள், ௪௱௫௰௯ – 459)

[ மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்

இனநலத்தின் ஏமாப் புடைத்து. ]

மனநலத்தால் மறுமை உண்டாகும். அதுவும் இன நலத்தால் சிறப்படையும்.

பதவுரை:

    மன நலத்தின்=உள்ளத்தின் சிறப்பால்; ஆகும்=உண்டாகும்; மறுமை=மறுமுறை அடையும் நல்வாய்ப்பு; மற்று=மீண்டும்; அஃதும்= அங்ஙனம் ஆவதும்; இனநலத்தின்-சூழ்ந்திருக்கும் இனத்தின் சிறப்பால், ஏமாப்பு=வலிமை; உடைத்து=உடையது ஆகும்.

ஏமாப்பு=சிறப்பு; அரணாதல்;  வலிமையாதல்; பாதுகாப்பு; இறுமாப்பு; ஏமம் + ஆப்பு – “ஆப்பு” சொல்லாக்க ஈறு.

மறு முறை பிறப்பதை மறுமை என்றனர். மறுமை என்றதற்கு மணக்குடவர் மறுமைப்பயன் என்றும் காலிங்கர் மறுமை என்றும்  பரிதி மறுசென்மம் என்றும் பரிமேலழகரும் பின் வந்தவர்களும் இச்சொல்லுக்கு ‘மறுமை இன்பம்’ என்றும்  பொருள் உரைத்துள்ளனர். செல்வம் என்று பொருள் கொண்டும் உரைத்துள்ளனர். இறந்தபின் அடையும் வீட்டின்பம் என்றே பலரது விளக்கங்களும் அமைந்துள்ளன. பேரா.முனைவர் சி.இலக்குவனார், அரசியலில் உள்ள இக் குறட்பாவிற்கு அங்ஙனம் பொருள் கூறுவது ஏற்புடைத்தாகத் தெரியவில்லை என்கிறார்.

மறுபிறப்பில் நம்பிக்கையில்லாத இன்றைய உரையாசிரியர்களில் சிலர், மறுமை என்ற சொல்லுக்கு “ஒருவன் இறந்த பிறகு அவன் பெயர் இங்கு நிலவுதல்” என்றும் “மறைந்த பின்னர் உண்டாகும் புகழ்” என்றும் “மறுமையெனும் மக்கள்” என்றும் “ஒரு நிலையினின்று மேல் செல்லும் மறு நிலை” என்றும் “பின்வரும் சந்ததி” என்றும் பொருள் கூறியுள்ளனர்.

“மறுமை-மீண்டும் அப்பதவியில் அமரும் தன்மை” என்கிறார் பேரா.முனைவர் சி.இலக்குவனார். “அரசியல் பதவிகளில் மீண்டும் மீண்டும் அமர்ந்து தொண்டாற்றும் நிலைமை எல்லார்க்கும் கிட்டுவது அன்று. ஒரு முறை ஆண்ட பின்னர் மறுமுறை மக்களால் அமர்த்தப்பட வேண்டுமாயின், சிறந்த நற்பண்பு உடையராய் இருத்தல் வேண்டும். அங்ஙனம் அமர்ந்தாலும், நல்லறிஞர் புடைசூழ இருந்தால் எவரானும் அகற்ற முடியாத வலிமை பெற்றோராய் இருக்கலாம். இல்லையேல் சுற்றியிருப்போரே பொறாமை காரணமாகப் பதவியினின்றும் அகற்றுவதற்குரிய வழிகள் தேடுவர்.” (இலக்குவம் : வள்ளுவர் வகுத்த அரசியல்: பக்கம் 746) என விளக்கம் தருகிறார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்.

பேரா.சி.இலக்குவனார் கருத்தை அடியொற்றி மீண்டும் பெறும் பதவி வாய்ப்பு மட்டுமல்லாமல் எல்லாவகை நன்மைகளையும் மீளப் பெறுவதைக் குறிக்கும் வகையில் பொதுவாக “மீண்டும் கிடைக்கும் நல்வாய்ப்பு” எனப் பொதுவாக விளக்கியுள்ளேன்.

மறுபிறவியில் அடையும் இன்பம் என்றால், மறு பிறவி உள்ளதா? மறுபிறவி மனிதப்பிறவிதானா? என்றெல்லாம் வினாக்கள் வரும். இப்பிறவிக்கான எதிர்விளைவு அடுத்த பிறவியில் நிகழ்வதால் இப்பிறவியில் என்ன பயன்? அந்தந்தப் பிறவியில் உள்ள செயல்களுக்கான நன்மை தீமைகள்  அந்தந்தந்தப் பிறவியிலேயே அமையும் என்றால்தான் வாழும் பிறவியிலேயே நன்மை கிடைக்க வேண்டும் என்றும் தீமை கிடைக்கக் கூடாது என்றும் தீச்செயல்களை விலக்குவர்; நற்செயல்கள் புரிவர்.

“இன நலம் ஏமாப்புடைத்து” என்பதற்கு மணக்குடவர், அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து என்கிறார்.

இனச்சுற்றம் மனநலத்தால் பெறும் சிறப்பை, நாம் பயனை மறுமுறை அடைவதற்குப் பாதுகாப்பாக விளங்கும். எனவே, மன நலத்தின் சிறப்பு இன நலத்தால் வலிமை பெறுகிறது எனலாம்.

உள்ளத்தின் சிறப்பால் இன நலத்தின் பாதுகாப்புடன் மீள் நன்மையை நாம் அடைவோம்!

Thursday, May 14, 2026

ஆட்சி செய்வது துன்பம் தருவதே! – இளங்கோ அடிகள்



ஆள்வோர் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதாக எண்ணுவோம். ஆனால் செங்கோலாட்சி புரிபவர்களுக்கு ஆட்சி செய்வது துன்பம் தருவதே  இதனையே தேசியப்புலவர் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறுகிறார். அது குறித்த பாடலடிகள் வருமாறு

மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்

பிழையுயிர் எய்திற் பெரும்பே ரச்சம்

குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி

மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்

துன்ப மல்லது தொழுதக வில்

சிலப்பதிகாரம் 2.காட்சிக்காதை, அடிகள் 100-104

பதவுரை:

மழை வளம்=மழையாகிய வளம்; கரப்பின்= பெய்யாது மறைந்தால்;  வான் பேர்= மிகப் பெரிய; அச்சம்= அச்சம் உண்டாம்; பிழை உயிர் எய்தில்=எதனாலும் உயிரினங்களுக்குத் துன்பம் வந்தால்; பெரும்பேர் அச்சம்=மிகப் பெரிய அச்சமுண்டாம்; குடிபுரவுண்டும்=குடிகளைக் காத்தலை மேற்கொண்டும்; கொடுங் கோல் அஞ்சி= கொடுங்கோலுக்கு அஞ்சி; மன்பதை காக்கும்=மக்கட் கூட்டத்தினைப் பேணிக் காக்கும்; நன் குடிப் பிறத்தல்= நல்ல குடியில் உதித்தல், துன்பம் அல்லது=துன்பந் தருவதல்லது; தொழுதகவு இல் =போற்றத்தக்கதன்று.

கருத்துரை:

மழைவளம் பெய்யாது போனால் ஆட்சியாளரையே மக்கள் குறைகூறுவர். அதனால் பெரும் அச்சம் வரும். கொடுங்கோல் ஆட்சியால் மக்கள் துன்பமுறாத வண்ணம் அவர்களைப் பேணிக்காக்கும் நல்ல குடியில் பிறத்தல் இன்பம் தருவதன்று; போற்றத்தக்கதுமன்று; துன்பம் தருவதே!

இதையேதான்,

மாரி   பொய்ப்பினும்,   வாரி   குன்றினும்,

இயற்கை   யல்லன   செயற்கையில்   தோன்றினும்,

காவலர்ப்   பழிக்குமிக்   கண்ணகன்   ஞாலம்;

(புறநானூறு 35, அடிகள் 28-30)

என்கிறார் புலவர் வெள்ளைக்குடி நாகனார்

அரிய மருந்து போன்ற நல்லாட்சி தருவது அரிதானதா? அல்லது எளிதானதா? எனச் சேக்கிழார் பெரிய புராணத்தில்  மனுநீதிச் சோழன் குறித்த பாடலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

அருமந்த அரசாட்சி அரிதோ? மற்று எளிதோ?

அஃதாவது நல்லாட்சி தருதல் எளியதன்று அரியதே என்கிறார்.

ஆள்வோர் மக்களிடம் வரி முதலானவற்றைப் பெறுவதால் அவர்கள் முதலாளிகளாகவும் ஆள்வோர் ஏவலராகவும் ஆகின்றனர். எனவே, ஏவலராகிய ஆள்வோர் மக்கட்பணி செய்ய வேண்டும்.

இப்பொழுதும் பெருமழை செய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் மழைபெய்யாமல் வறட்சி ஏற்பட்டுப் பஞ்சம் உண்டானாலும் ஆட்சியாளரைத்தான் மக்கள் குறைகூறி ஏசுவர்.

எனவே, இயற்கையாலும் செயற்கையாலும் மக்களுக்குத் துன்பம் வராத வகையிலும் அவ்வாறு துன்பம் வந்தால் அவற்றைத் துடைத்தழிக்கும் பணியிலும் ஆள்வோர் ஈடுபட வேண்டும். ஆள்வோர் எவ்வளவுதான் நன்மைகள் புரிந்தாலும் இறுதியில் தீமை ஏதும் புரிந்தார்கள் எனில், அத் தீமையைத்தான் எண்ணுவர். அதனால் ஆள்வோரை இகழ்ந்து பேசுவர். எனவே, ஆட்சிபுரிதல் துன்பம் தருவதே என்பதை உணர்ந்து நிறைகுறைகளை ஆய்ந்து மக்கள் ஆள்வோரை மதித்திடவேண்டும்.

ஆள்வோரும் மக்களுக்கு நன்மைகள்தான்புரிகின்றோம் என அலட்சியமாக இருந்து விடாமல், பழிவரும் செயல்களில் ஈடுபடாமல் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

Wednesday, May 13, 2026

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர் முறை தேவை – இலக்குவனார் திருவள்ளுவன்



தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும்  மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே. எனவே, இது முழுமையான மக்கள் மன்றமாக உள்ளது.

தற்போது, இந்திய மக்களவையில் (Lok Sabha) நியமன உறுப்பினர்கள் யாரும் இல்லை. 104-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2019-இன் மூலம், ஆங்கிலோ-இந்தியன் சமூகத்தினரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கும் முறை 2020 சனவரி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

மக்களவையில் நியமன உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும், மாநிலங்களவையில் (Rajya Sabha) கலை, இலக்கியம், அறிவியல்,  குமுகத் தொண்டு போன்ற துறைகளில் சிறந்த பன்னிருவரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கும் முறை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமேலவை 1921 முதல் செயற்பட்டு வந்தது.   நவம்பர் 1, 1986-இல் அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் ம.கோ.இரா.(M.G.R.)வால் கலைக்கப்பட்டு, மேலவை முறை நீக்கப்பட்டது. எல்லா மாநிலங்களிலும மேலவை இருந்த நிலைமாறி, இப்பொழுது ஆந்திரப்பிரதேசம், பீகார், கருநாடகா, மகாராட்டிரம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில்மட்டும்தான் மேலவை உள்ளது.

மேலவையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது கீழவையில் உணர்ச்சிகரமாக எடுக்கப்படும் முடிவுகளை அமைதியாக ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க மேலவை துணை புரியும் என்பர். அரசியல் கட்சிகளின் உணர்ச்சிப்பூர்வமான முடிவுகள் அல்லது அவசரச் சட்டங்களுக்கு எதிராக, மேலவை ஒரு பாதுகாப்புத் திரையாகச்     செயற்பட்டு, சட்டங்களை மறு ஆய்வு செய்ய வழிவகுக்கிறது. கீழவையில் அரசியல் காரணங்களுக்காக விவாதங்கள் தடைப்பட்டாலும், மேலவையில் ஆழமான, அரசியல் சார்பற்ற விவாதங்கள் நடத்த வழி வகுக்கப்படலாம்.

சூடான பானத்தைக் குவளையும் தட்டும் கொண்டு அருந்தும் பொழுது குவளையில் சூடாக இருக்கும் பானம் தட்டில் ஊற்றப்பட்டு குடிக்கும் பக்குவத்திற்குச் சூடு தணிந்த  நிலையில் இருக்கும். இதுபோன்ற செயற்பாடுதான் மேலவையின் செயற்பாடு என்று அருமையாகப் பேரறிஞர் அண்ணா கூறுவார். அஃதாவது கீழவையைக் குவளை என்றும் மேலவையைத் தட்டு(Cup and saucer)  என்றும் ஒப்பிட்டுக் குறிப்பார்.

ஆனால், அத்தகைய செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். தேர்தல் அரசியலை எதிர்நோக்க இயலாத அறிஞர்கள், வல்லுநர்கள்,  கல்வியாளர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், கலை, இலக்கியம், குமுகப்பணிகளில் சிறந்தவர்கள், தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல், மேலவை உறுப்பினர் (MLC) ஆகப் பங்கேற்கும் வாய்ப்பு நின்று விட்டது. என்றாலும் அவ்வப்பொழுது மேலவையை மீள அறிமுகப்படுத்துவது குறித்து விவாதங்கள் எழுவது வழக்கமாக உள்ளது.

மேலவைக்கான வாய்ப்பு இல்லாத நேர்வில் இத்தகையோருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சட்ட மன்ற உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் 234 உறுப்பினர்கள் உள்ள்னர். இதில் ஏறத்தாழ  10 விழுக்காட்டிற்கு ஒப்பாக 25 நியமன உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இதன் மூலமாக இத்தகையோர் சட்ட மன்றத்திற்குள் வந்து பங்களிக்க முடியும்.

மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படும் எனலாம். மாநிலங்களவைக்கு ஒன்றிய அரசு பரிந்துரைப்வர்களைத்தான் குடியரசுத் தலைவர் நியமிப்பார்.  இங்கு மாநில அரசின் பரிந்துரையை ஏற்காமல் ஒன்றிய அரசின் முகவராகச் செயற்படும் ஆளுநர் மாநில அரசின் பரிந்துரைகளைப் புறக்கணிக்கும் வாய்ப்பே மிகுதியாக உள்ளது. எனவே, நியமன உறுப்பினர் முறை அறிமுகப்படுத்தப்படும்பொழுது அதற்கான அதிகாரத்தை முதல்வருக்கு வழங்க வேண்டும்.

மாநிலத் தகவல் ஆணையரை எதிர்க்கட்சித்தலைவரை உறுப்பினராகக் கொண்ட முதல்வர் தலைமையிலான குழு முடிவு செய்து ஆளுநருக்குப் பரிந்துரைக்கும். அதுபோல் இங்கும் ஒரு குழுவை அமர்த்தலாம். ஆனால், முதல்வருக்கே நியமன அதிகாரம் அளிப்பின் சட்டப்பேரவை முன்னவர், எதிர்க்கட்சித்தலைவர்,  மாநில அமைச்சர் ஒருவர் அடங்கிய குழு முதல்வருக்குப் பரிந்துரைக்க வேண்டும். பரிந்துரைக்கப்படுபவர்கள் தமிழுணர்வும் தமிழ்நாட்டுணர்வும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஆதலின், சட்டப்பேரவையில் நியமன உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கான தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் நிறைவேற்றி உரியவாறு தொடர் நடவடிக்கை எடுத்து ஆவன செய்ய வேண்டும்.

ஆங்கிலோ இந்தியர் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை யெனில் அவர்களில் ஒருவரை நியமிக்கும் முறை தமிழ்நாட்டில் இருந்தது. ஆனால், இந்திய அரசியல் யாப்பின் 104 ஆவது திருத்தச் சட்டம் (2020) நடைமுறைக்கு வந்ததும் இந்தியா முழுவதும் இந்நியமன முறை நீக்கப்பட்டதால் தமிழ்நாட்டிலும் நீக்கப்பட்டது. ஆனால் அஃது இட ஒதுக்கீடு முறையில் மேற்கொள்ளப்பட்டது. எனவே, இந்நியமன முறைக்கு அரசியல் யாப்பில் திருத்தம் தேவையில்லை.

அறிவுரை கூறின் ஏற்கத்தக்கவராக மாண்புமிகு முதல்வர் ச.சோ.வி்சய் உள்ளமையால் அவரும் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் சா.கி்.தே.(J.C.D.) பிரபாகரும் விரைந்து நடவடிக்கை எடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.

வல்லுநர்கள் பங்களிப்பில் சட்டப்பேரசை மிளிரட்டும்!

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்.  

(திருவள்ளுவர், திருக்குறள் ௪௱௪௰௧ – 441)

மலர்ந்துள்ளது திராவிட ஆட்சியின் தொடர்ச்சியே! – இலக்குவனார் திருவள்ளுவன்



தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் அரசிருக்கையில் அமர்ந்துள்ளது. வாழ்த்தி வரவேற்க வேண்டிய மாற்றம் இது. ஆனால், திராவிட மெய்யியத்தை(தத்துவத்தை) விரும்பாதவர்களும் ஆரியப் பித்தர்களும் திராவிடம் வீழ்ந்து விட்டது; 60 ஆண்டுகளாக ஆண்ட திராவிடம் ஒழிந்து விட்டது; 67இற்குப் பிறகு மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் விரட்டப்பட்டன; என்று கூக்குரலிடுகின்றனர்; ஆர்ப்பரிக்கின்றனர்; இனி நம் ஆரிய ஆட்சிதான் என்று கொக்கரிக்கின்றனர். ஆனால், உண்மையில் மலர்ந்துள்ளது திராவிட ஆட்சிகளின் நீட்சியே.

திராவிடம், திராவிடம் என்று உணர்வுடன் வாழ்பவர்கள் யாவரும்  உளமார நினைப்பது தமிழையே!

நம்நாடு தமிழ்நாடு; நாமெல்லாம் தமிழ்மக்கள்;

இன்பம் கோரி

இந்நிலத்தில் வாழ்வதெனில் மூச்சாலே!

அம்மூச்சுந் தமிழே”( பாரதிதாசன், குறிஞ்சித்திட்டு)

என்பதே அவர்களின் உள்ளக்கிடக்கை

சிங்காரவேலனார், அறிஞர் சாமி சிதம்பரனார், பேராசிரியர் சி.இலக்குவனார் முதலிய திராவிட இயக்க அறிஞர்களும் பாவேந்தர் பாரதிதாசன், புலவர் குழந்தை, புலவர் சுரதா முதலிய திராவிட இயக்கப் பாவலர்களும் தமிழன்பர்களே!

தமிழக வெற்றிக் கழகம் குறித்து அறிய அதன் இணையத் தளத்தைப் பார்க்கலாம். கட்சிகளின் இணையத்தளங்களிலேயே சிறப்பான வெளிப்பாடு உள்ள சிறந்த தளமாக இது உள்ளது. அதனைப் பார்த்தாலேயே தமிழக வெற்றிக் கழகம் ஒரு திராவிடக் கட்சியே எனப் புரிந்து கொள்ளலாம்.

கட்சியின் அடிப்படைக் கொள்கை முழக்கமே “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறள் மொழியாகும். இது திராவிட மெய்யியமாகக் கூறப்படுகிறது.

சமயச்சார்பற்ற குமுக நீதிக் கொள்கைகளே இக்கட்சியின் கொள்கைகள் என அறிவித்துள்ளனர்.

கொள்கைத் தலைவர்களுள் நடுநாயகமாகத் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி செம்மாந்து நிற்கின்றார்.

 குமுகச் சீர்திருத்தம், சாதிய எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண்ணடிமைத்தனம் எதிர்ப்பு,  பகுத்தறிவு சிந்தனை மனப்பான்மை வழி சமத்துவம்-குமுகநீதி மதிப்பீடுகளைப் பரப்புரை செய்து, தமிழகத்தை வழிநடத்திய முதன்மைத் தலைவர் தந்தை பெரியார். எனப் பெரியாருக்கே முதன்மை அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் ஈ.வெ.இரா.வைப் பின்பற்றுவோர் திராவிடக் கட்சியாக இல்லாமல் ஆரியக் கட்சியாகவா இருப்பர்?

த.வெ.கழகம் வலியுறுத்தும் கொள்கைகள் என, மக்கள்நாயகம்(சன நாயகம்), இணையறக் குமுக நீதி(சம தரும சமூக நீதி), ஒரு நாட்டின் மக்களை, அவர்கள் சார்ந்த இனம், மதம், மொழி, சாதி, பாலினம் என்று பிரித்துப் பாகுபடுத்தாமல், சம உரிமைகளை அவர்களுக்கு உறுதிப்படுத்திச் செயற்படுத்துவது, ஆட்சி அதிகாரம், சட்டம், நீதி, அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி மக்களின் அடிப்படை விடுதலை உரிமைகளைப் பறிக்கும் மாநில/ஒன்றிய ஆட்சியாளர்களின் மக்கள் பகைச் செயற்பாடுகளை எதிர்த்து, மக்களுக்கான மக்கள் நாயக உரிமைகளை நிலைநாட்டுவது, போதை இல்லாத் தமிழகம், பகுத்தறிவுச் சிந்தனை மனப்பான்மை  முதலியவற்றை அறிவித்துள்ளனர்.

இவற்றின்  விளக்கங்களும் தெளிவாக உள்ளன.

சமத்துவம்:

சாதி, மதம், இனம், நிறம், மொழி, பொருளாதாரம், வகுப்பு(வருக்கம்),  பாலின சமத்துவத்துடன் கூடிய உரிமை, எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள், எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்குச் சமமானவர்களே.

மதச்சார்பின்மை:

மதச் சார்பற்ற, தனிப்பட்ட மத நம்பிக்கையிலும் தலையீடற்ற, அனைத்து மதத்தவரையும் மதநம்பிக்கை அற்றவரையும் சமமாக பாவிக்கும் அரசு ஆட்சி ப் பணியாண்மை.

மாநிலத் தன்னாட்சி (State Autonomy) உரிமை:

மாநிலத் தன்னாட்சி உரிமையே அந்தந்த மாநில மக்களின் தலையாய உரிமை. மாநிலத் தன்னாட்சிக்கு உட்பட்ட உரிமைகளை மீட்டல்.

இருமொழிக் கொள்கை:

தாய்மொழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை. தமிழே ஆட்சிமொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி. தமிழ்வழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.(05.07.2025)

பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையே எங்கள் தமிழகத்தின் உறுதியான மொழிக் கொள்கை. நம் தமிழக வெற்றிக் கழகமும் அதையே உறுதியாகப் பின்பற்றுகிறது.

அரசியல் தலையீடு அற்ற அடிப்படை உரிமைகளை நிலை நாட்டும் பணியாண்மை(நிர்வாகம்):

அரசுத் துறை, தனியார் துறை என்று எந்தத் துறையிலும் அரசியல் தலையீடு அற்ற ஊழல் அருவருப்பு (இலஞ்ச இலாவண்யம்) அற்ற, பணியாண்மை, மத. இன, மொழி, சாதி பேதமற்ற வகையில் கல்வி, சுநல வாழ்வு, தூய காற்று, தூய குடிநீர் என்பது எல்லாருக்கும் அடிப்படை உரிமை, சுற்றுச் சூழல், இயற்கை வளங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது அரசின் தலையாய கடமை.

தீண்டாமை ஒழிப்பு :

பழைமைவாத பழக்க வழக்கங்களை மறுத்தொழித்தலே தீண்டாமை ஒழிப்பின் முதல் படி.

ஒன்றிய அரசின் மக்கள் எதிர்ப்புக் கொள்கைகளுக்குக் கண்டனம்:

பெரியார், அண்ணா ஆகியோரை அவமதிக்கும் பா.ச.க.வின் பிளவுவாத அரசியலுக்குக் கண்டனம், தொகுதி மறுசீராய்வு – ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்குக் கண்டனம் என ஒன்றிய அரசின் மக்கள் பகைக் கொள்கைகளுக்கான கண்டனம் தெரிவித்துள்ளமை.

இலங்கைத் தமிழர்கள் தன்னுரிமை:

இலங்கைத் தமிழர்கள் தன்னுரிமையுடன் தங்கள் நாட்டிலேயே வாழ்வதற்கும், அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கும் நிலையான தீர்வு காண, ஐ.நா. அவை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உலக மன்பதைக்கு இப்பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கிறது. பொது வாக்கெடுப்பு மட்டுமே இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய ஒரே வழி என்பதை மீண்டும் மீண்டும் தமிழக வெற்றிக் கழகம் தீர்க்கமாக நம்புகிறது.(28.03.25)

திராவிடக் கொள்கை:

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திராவிடக் கொள்கை விளக்க அறிக்கையைத் (Dravidian Manifesto) தஞ்சாவூரில்(23.2.2019) வெளியிட்டுள்ளார். அதன் பிழிவு அல்லது சாராம்சம் வருமாறு

திராவிட இயக்கம் குமுக நீதி, பகுத்தறிவு, தன் மதிப்பு (சுயமரியாதை), சமத்துவம், மாநில உரிமைகளை வலியுறுத்தல், சாதி ஒழிப்பு (Anti-caste), பிறப்பால் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் களைதல், பெண் அதிகார அடைவு(பெண் விடுதலை – Women’s Empowerment), பெண்களுக்குக் கல்வி, சொத்துரிமை. குமுகத்தில்(சமூகத்தில்) சம உரிமை வழங்குதல். மாநில உரிமை / கூட்டாட்சி (State Autonomy), மத்திய அரசுக்கு எதிராக, மாநிலங்களுக்கான அதிகாரம், தன்னாட்சியை வலியுறுத்துதல். மொழி உரிமை, தீண்டாமையை ஒழித்து அழிப்பது முதலியன. இவை யெல்லாம் நாம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், தீர்மானங்கள், கொள்கை விளக்கப்பாடல், கொடிப் பாடல் மூலம் கழகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளாக  வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, அமைந்துள்ளது திராவிட ஆட்சியின் தொடர்ச்சியே! நீட்சியே! எனினும் இதனைத் தமிழிய ஆட்சி என்று சொல்வோம்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.   (திருக்குறள், ௫௱௪ – 504)

என்னும் திருவள்ளுவர் வழியில் எதிர்க்கட்சியினர் செயற்படட்டும்! தமிழ்நல ஆர்வலர்களும் கட்சியினரும் நிறைகளைப் பாராட்டி ஊக்கப்படுத்தி, அதே நேரம் குறை கண்டவிடத்து நீக்குவதற்கான வழிமுறையை எடுத்துரைக்கட்டும். தமிழ்நல ஆட்சியாகச் சிறப்பாகச் செயற்படட்டும்!

Saturday, May 9, 2026

கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு: 1. இலக்குவனார் திருவள்ளுவன்



இன்றைய ஆய்விற்குரிய நூல், ‘சிவகங்கை இராமச்சந்திரனார்‘ என்பதாகும். கொடைக்கானல் காந்தியால் எழுதப் பெற்றது இந்நூல்.

இந்நூல் வரலாற்றின் வாயில், அரசியல் வரலாறு, தலைவர்களின் தலைவர், கொள்கை குணம் கோட்பாடு என்னும் 4 பிரிவுகளில் மொத்தம் 43 தலைப்புகளில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் எழுவரின் அணிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.

முதல் கட்டுரையான சூரியவனத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிவகங்கைஇராமச்சந்திரனார் பற்றிய கருத்தினக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது கட்டுரை தலைமுறை வரலாறு; மூன்றாவது கட்டுரை வரலாற்றின் வரலாறு; நான்காம் கட்டுரை வணக்கத்திற்குரிய வாயில் காப்போன்; ஐந்தாவது கட்டுரை சாதனையாளர் சரிதை

ஆறாவது கட்டுரை ஆறு சிலேட்டுகள்  ஆறு சேலைகள்; ஏழாவது கட்டுரை மருமகளின் மறுபார்வையில்; எட்டாவது கட்டுரை திராவிடத் தீர்மானங்கள்; ஒன்பதாம் கட்டுரை இராமச்சந்திரனார் பேசுகிறார்; பத்தாவது கட்டுரை எப்படித் தோன்றினார் இராமச்சந்திரனார்;

பதினொன்றாவது கட்டுரை மாவீரர் கண்ட மாநாடுகள்; பன்னிரண்டாம் கட்டுரை கொள்கை அரசர் கணட குடியரசு; பதின்மூன்றாவது கட்டுரை வகுப்புரிமை பற்றி வ.உ.சியார்; பதினான்காவது கட்டுரை சிவகங்கைச் சூரியனின் தொலைநோக்கு; பதினைந்தாம் கட்டுரை தலைமுறைத் தலைவர்கள்;

பதினாறாம் கட்டுரை பெரியாரின் உறவினர்; பதினேழாம் கட்டுரை புத்தரும் புனிதரும்; பதினெட்டாம் கட்டுரை அண்ணாவின் வைர விழுது; பத்தொன்பதாம் கட்டுரை கலைஞர் போற்றிய இனக்காவலர்; இருபதாம் கட்டுரை இராமச்சந்திரன் முதல் இராமச்சந்திரன் வரை;

21 ஆவது  கட்டுரை புரட்சித்தலைவியின் புகழுரை; 22 ஆவது  கட்டுரை  பேராசிரியர் போற்றுகிறார்; 23 ஆவது  கட்டுரை  மதுரை முத்துவின் மனத்தலைவர்; 24 ஆவது  கட்டுரை  தளபதிகளின் தலைவர்; 25  ஆவது  கட்டுரை அன்பிலின் அன்பிற்குரியவர்; 26 ஆவது  கட்டுரை  நாவலர் போற்றிய நல்லவர்; 27 ஆவது  கட்டுரை  இலட்சியம் முழங்கியது; 28 ஆவது  கட்டுரை  புதையலில் பூத்தது; 29  ஆவது  கட்டுரை சீவாவின் சீவன்; 30  ஆவது  கட்டுரை அறிஞர்கள் பேசுகிறார்கள்

; 31  ஆவது  கட்டுரை  இராமச்சந்திரன் மகன் இராமச்சந்திரன்; 32 ஆவது  கட்டுரை   தாழ்த்தப்பட முடியாத தன்மான வீரர்; 33 ஆவது  கட்டுரை  பதவிகளா? போராட்டங்களா?; 34 ஆவது  கட்டுரை  தமிழும் இராமச்சந்தினாரும்; 35  ஆவது  கட்டுரை இராமச்சந்திரனார் இறந்திருக்க வேண்டுமா?;

36   குடிகளும் அழுதனர் குடியரசும் அழுதது; 37 ஆவது  கட்டுரை   ஒரு சிந்தனையாளரின் மாணவர்கள்; 38 ஆவது  கட்டுரை  ஒரு நூற்றாண்டை மட்டும் ஓரங்கட்டலாமா?; 39 ஆவது  கட்டுரை   நினைவு இல்லம் வேண்டும்; 40  ஆவது  கட்டுரை மனித நேய உயரம் தொட்டவர்;

41 ஆவது  கட்டுரை  இராமச்சந்திரனார் எனும் போராளி; 42 ஆவது  கட்டுரை   ஏன் எழுதினேன்?; 43 ஆவது  கட்டுரை  இராமச்சந்திரனார் மரபு;

2005 இல் முதற்பதிப்பாக வெளிந்துள்ள  இந்நூலில், கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், ஆசிரியர் கி.வீரமணி, வைகோ, காவல்துறைத்தலைவர் தி.இராதாகிருடடிணன், வழக்குரைஞர் இரா.நீதிச்செல்வன், வழக்குரைஞர் இந்திரசித்து ஆகியோரின் அணிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.

இந்நூலில் ஆங்காங்கே சிவகங்கை இராமச்சந்தினாரின் கருத்துகளையும் பிறர் அவரைப்பற்றிக் கூறிய கருத்துகளையும் தந்துள்ளார். முதல் கட்டுரையான சூரிய வனத்தில் பேரறிஞர் அண்ணா இவர்பற்றிக் கூறியதைப் பின்வருமாறு தந்துள்ளார்.

“தோழர் இராமச்சந்திரன் எனது வலது கரம். என்று தந்தை பெரியாரும் சுயமரியாதைத் தீபம் ஏந்தும் படையின் தளபதி எனத் தொண்டர்களும் இவரைப்போற்றி வந்தனர்.”

மாமன்னரின் வழி முறையினரான பெரிய கருப்பன் அவர்களின் புதல்வர் மானங்காத்த சுப்பிரமணியன். சிவகங்கை அரசில் காப்பாளராகப் பணியாற்றி வந்த இவர், ஒரு சமயம் அரசன் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றிருந்த போது அரண்மனைக் காவலுக்கு யாருமில்லாத நிலை இருந்தது. அப்போது, பகைவர்கள் தாக்க வந்தனர். சுப்பிரமணியம் ஒற்றை ஆளாக இருந்து அனைவரையும விரட்டி அடித்தார் அதனால் மானங்காத்த சுப்பிரமணியம் என்ற அழைக்கப் பெற்றார்.  அரசரும் இவருக்கு ஆத்திக்காடு தெக்கூரைச் சுற்றியுள்ள நிலத்தில் நான்கில் ஒரு பகுதியைப் பரிசாக அளித்தார்.

ஒரு சமயம் இவர் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, புலி ஒன்று இவரைத் தா்கியது. அதனால் குடல் சரிந்து விழுந்தார்.இருந்தும் மனநிலை தளராமல்,ஒரு கையால் குடலை வயிற்றில் தள்ளிக் கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் வேலெடுத்துப் புல்யைக் குத்திக் கொன்றார். இப்பெரு வீரத்தால் இவரைப் புலி குத்திய சுப்பிரமணியம் என்று அனைவரும் அழைத்தனர். அவரின் வழித்தோன்றலே இராமச்சந்திரன்.

சிவகங்கைச் சூரியன், சிவகங்கைச் சிங்கம், சுயமரியாதைச் சிங்கம், சுயமரியாதைச் சுடரொளி, சேர்வையார் என்று பலவாறாக மக்களால் அழைக்கப்பெறுபவர் இராமச்சந்திரனார் என ‘வரலாற்றின் வரலாறு’ என்னும் மூன்றாவது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் இவர் ஆற்றிய தலைமையுரையை வழங்கியுள்ளார். ‘வணக்கத்திற்குரிய வாயில் காப்போன்’ என்னும் நான்காம் கட்டுரையில் இவரின் சிறப்புகள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

இராமநாதபுரத் தேவத்தானக் குழுவின் தலைவராக இருந்த இவர் 08.08.1930 அன்று நடைபெற்ற கூட்டத்தில்,

அனைவருக்கும் ஆலய நுழைவுரிமை

தேவதாசிகளால் மேற்கொள்ளப்படும் அனைத்து ஊழியங்களையும் நிறுத்துதுல்

குளம், பள்ளி, சாலை ஆகியவற்றில் சாதியின் பெயரால்  தடை செய்யாமை

முதலிய தீர்மானங்களை நிறை வேற்றிச் செயற்படுத்தினார்.

அப்பொழுது. ஒதுக்கப்பட்ட நாடார் குலத்தைச் சேர்ந்த சு.ஆ.முத்துநாடார் என்பவரை உறுப்பினராக்கப் பரிந்துரைத்தார். ஆனால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இன்மையால் இயலாது போயிற்று. உடன் விருதுநர் பெ.சி.சிதம்பர நாடார் என்பவரை உறுப்பினராக்கினார். இவ்வாறு ஒடுக்கப்பட்டவர்களையும் ஒதுக்கப்பட்டவர்களையும் கோயிலுக்குள் உரிமையுடன் நுழையச் செய்த செபருமைக்குரி்யவர் இராமச்சந்திரனார் என்பதை விளக்கியுள்ளார்.

Thursday, May 7, 2026

சட்டச் சொற்கள் விளக்கம் 1056-1060: இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055 தொடர்ச்சி)

1056. Appropriate allocation     உரிய ஒதுக்கீடு
உரியவாறு ஒதுக்கீடு செய்தல்


சட்டப்பணிகள் ஆளாண்மைச் சட்டம்1987, பிரிவு 4இல்(S. 4(c) LSAA,1987 – Section 4 in The Legal Services Authorities Act, 1987) தம் முடிவிற்கேற்ப நிதிகளைப் பயன்படுத்தவும் மாநில அதிகாரர்களுக்கும் மாவட்ட அதிகாரர்களுக்கும் உரியவாறு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

authority என்பது அதிகாரம் உள்ள அமைப்பு. அதிகாரி என்றும் குறிப்பிடுவர். அதிகாரம் உள்ள ஆளை அதிகாரன் என்று முன்னர்க் குறிப்பிட்டுள்ளனர். அதிகாரம் உள்ளவர்களைக் குறிப்பதாயின் அதிகாரர்கள் எனலாம். அதிகாரம் உள்ள ஆளுமை அமைப்பைக் குறிப்பதாயின் ஆளாண்மை எனலாம்.
1057. Appropriate authorityஉரிய ஆளாண்மை
உரிய அதிகார அமைப்பு
உரிய அதிகாரி


உரிய அதிகாரன் ஊர், நகரம், அல்லது நாட்டின் ஆளுகைக் குழுவே தக்க ஆளாண்மையாகும்.  
விதிமீறல் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அதிகாரம் மிக்க அமைப்பு இதன் தொடர்பில் தக்க ஆளாண்மையாகும்.
காண்க: Appropriate
1058. Appropriate case   பொருத்தமான வழக்கு
உரிய நேர்வு
தக்க நேர்வு
உகந்த நேர்வு  

வாதுரையின் பொழுது முன் நிகழ்வைக் குறிப்பதாயின் பொருத்தமான வழக்கையே குறிப்பிட வேண்டும். தொடர்பில்லாத வழக்கைக் குறிப்பின் நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

காண்க: Appropriate
1059. Appropriate forum  தக்க அமைப்பு
உரிய அமைப்பு
உகந்த அமைப்பு


அதிகாரம் செலுத்துவதற்குரிய அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குரிய அல்லது நிதியைப் பயன்படுத்துவதற்குரிய அல்லது வழக்கைத் தொடுப்பதற்குரிய அல்லது வழக்கை எதிர்கொள்வதற்குரிய தக்க அமைப்பு.
1060. Appropriate government   உரிய அரசு

ஒரு நாட்டை அல்லது மாநிலத்தை ஆளுவதற்கு முறைப்படியான அதிகாரம் படைத்த அரசு.

மரணத்தண்டனையைச் செயற்படுத்துவதற்கு அல்லது மரணத்தண்டனைய மன்னித்துக் குற்றவாளியின் தண்டனையைக் குறைப்பதற்கு அல்லது நீக்கி விடுதலை செய்வதற்கு அல்லது பிற தண்டனைகளை மாற்றுவதற்கு அல்லது நீக்குவதற்கு அதிகாரம் உள்ள அரசு

Followers

Blog Archive