Wednesday, March 4, 2026

இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 3 கல்விக்கடமை : இலக்குவனார் திருவள்ளுவன்

      05 March 2026      கரமுதல



(இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 2 – தொடர்ச்சி)

 கல்விக்கடமை முழுவதும் அரசின் பொறுப்பு என்றானால் கல்வி நிலையம் யார் நடத்தினாலும்  வணிகமாய் இல்லாமல், மக்களுக்குப் பயனளிக்கும் வகையில்தான் இருக்கும். இருப்பினும் இன்றைய சூழலில் மக்களின் நாட்டம் தனியார் கல்வி நிலையங்கள் மீதே உள்ளது. தனியார் கல்வி நிலையங்கள் மிகப்பெரிய கட்டடங்களுடனும் ஏந்துகளுடனும் இருப்பதைப் பார்த்து அரண்டு போகக்கூடாது. இவ்வசதிகள் கல்வி நிலையம் நடத்துநர்களின் சொந்தச் செல்வத்தில் உருவானவையா? இல்லையே! பொதுமக்களின் செல்வத்தால் – படிக்க வருபவர்களின் செல்வத்தால் உருவாகின்றவைதாமே!

“ கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

என்பது கற்கையின் சிறப்பை உணர்த்தும். ஆனால்பிச்சை எடுக்காமல்கடன் வாங்காமல்இடர்ப்படாமல் கல்வி பெறும் நிலையை உருவாக்க வேண்டியது – பொருள்நிலைசாதிசமய வேறுபாடின்றி அனைவருக்கும் கட்டணச்சுமையில்லாக் கல்வி அளிக்க வேண்டியது – அரசின் கடமையாகும். எனவேகல்வி நிலையங்களை அரசே நடத்துவதே முறையாகும். ஆனால்இப்பொழுது தனியார் நடத்தும் கல்வி நிலையங்கள் பல உள்ளன. எனவேஇவற்றைக் கருத்தில் கொண்டு அரசு பின்வரும் முறையில்  கல்வி நிலையங்கள் நடத்த வகை செய்ய வேண்டும்.

  1. தனிப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்டவர்களின் அமைப்பு எவ்வகைக் கட்டணத்தையும் மாணாக்கர்களிடம் இருந்து பெறாமல் அரசு வகுத்துள்ளவாறான வாய்ப்பு வசதிகளைக் கல்வி நிலையங்களில் அளித்துஅரசு வரையறுக்கும் ஊதியங்களை ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் வழங்கி அனைத்துத் தரப்பாருக்கும் கல்வி அளிக்க முன் வந்தால் இப்போதைய கல்வி நிலையங்கள் உரியர்களிடம் தொடரலாம். மாறாகப் படிக்க வரும் மாணாக்கர்களிடம் அல்லது பெற்றோர்களிடம் நன்கொடை திரட்டி நடத்தப்படுவதாயின் அந்நிலையங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும். இதனால் கல்வியை வணிகமாக நடத்துநர் கல்வித்துறையை விட்டு அகல்வர்.
  2. சொந்தப் பொறுப்பில் நடத்த இயலாத கல்வி நிலையங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
  3. புதிய கல்வி நிலையங்கள் யாவும் அரசின் கல்வி நிலையங்களாக அமைதல் வேண்டும்.
  4. கல்வி நிலையங்களை அரசு உடைமையாக்கும் பொழுது அவற்றை நடத்துநர்க்கு அவர்களின் தனிப்பட்ட பங்கின் அடிப்படையில் இழப்பீடு தந்தால் போதுமானது. மொத்த செல்வ மதிப்பின் அடிப்படையில் வழங்கத் தேவையில்லை. அவையாவும் மக்களிடம் பெறப்பட்ட செல்வத்தில் உருவானவையேஇந்நிலை தனியார் பல்கலைக் கழகங்களுக்கும் பொருந்தும். கூரை அறையில் கல்வி நிலையத்தைத் தொடங்குபவர்கள் பன்மாடி அடுக்க வளாகங்களை எழுப்புகின்றார்கள் எனில் மக்கள் பணத்தினால்தான். எனவேஇலவயக் கல்வி அளிக்காத எந்நிறுவனமாயினும் அரசே அதை ஏற்று நடத்த வேண்டும்.
  5.  கல்வியைக் கட்டணமின்றி அளித்தாலும் இலவயமாகப் பெற விரும்பாதவர்களுக்காக, ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆகும் செலவிற்கேற்ப கட்டணத்தை வரையறுத்து விரும்புபவர்கள் உரிய கட்டணத் தொகையையோ, இதை விடக் குறைவாக, ஓர் அடையாளமாகச் சிறு தொகையையோ, அதைவிடக் கூடுதலாகக் கொடுக்க முடிந்தோர் அக்கூடுதல் தொகையையோ   செலுத்த வாய்ப்பு வழங்கலாம். இதனைக் கல்விக்கூடங்களில் செலுத்தச் சொன்னால், படிப்போரிடையே வேறுபாடு எழும் வாய்ப்பு நேரலாம். எனவே, தனியாகக் கல்விவளர்ச்சி நிதியம் ஏற்படுத்தி இவ்வாறு பொருள் சேர்க்கலாம். எனவே, கட்டணமில்லாக் கல்வியும் இருக்கும். கல்வி வளர்ச்சிக்கான விருப்ப நிதியையும் பெற்று, இலவயம் விரும்பாதவர்களுக்கு மனநிறைவும் அளிக்கலாம்.

  கல்வி பற்றிப் பார்த்த நாம்கல்விக்கூடங்கள் பரவலாக இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியது குறித்தும் காண வேண்டும்.

  13/10/12 அன்று அருகமைப் பள்ளி குறித்தும் சமச்சீர்க்கல்வி குறித்தும் சொற்பொழிவு நிகழ்ந்துள்ளது. எனவேஅருகமைப்பள்ளி குறித்தும் ஒரே வகுப்பிற்கு வெவ்வேறு பாடமுறை இருப்பதால் சமச்சீர்க்கல்வி குறித்தும் காண்போம்.

  சமச்சீர்க்கல்வி இருந்தால்தான் அருகமைப்பள்ளி என்பது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும்.

  கல்விமுறையில் பாடத்திட்டம் ஒரே வகையாக இருப்பது மட்டுமல்ல சமச்சீர்க்கல்வி. கல்வித்தரம்கல்வி நிலையங்களின் தரம் முதலியனவும் ஒரே வகையாக நன்முறையில் இருக்க வேண்டும். இக்கல்வி நிலையம் உயர்ந்ததுஅக்கல்வி நிலையம் தாழ்ந்தது என்று வேறுபாடில்லாமல்எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஒரே வகையான வாய்ப்பு நலனும்  சிறப்பும் தரமும் இருக்க வேண்டும். எக்கல்விநிலையமாயினும் அதில் சேர்ந்து படிக்கலாம் என்ற நிலை வரவேண்டும். இத்தகைய சமச்சீர்க்கல்வியும் தொலைவில் கிடைப்பதாக இருக்கக்கூடாது. எனவேதான் அருகமைப்பள்ளியாக இருக்க வேண்டும். அருகமைப்பள்ளி இன்மையால் மாணாக்கர்கள் போக்குவரத்து நேர்ச்சிகளாலும் வழியிடை இடர்ப்பாடுகளாலும் தீங்கிற்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.  எடுத்துக்காட்டிற்குச் சொல்வதானால்அண்மையில் புனிதா என்னும் மாணாக்கியர் பள்ளி செல்லும் வழியில் கற்பழித்துக்  கொல்லப்பட்ட அவலத்தைக் கூறலாம். அருகமைப்பள்ளியில் அம்மாணாக்கியர் சேரும் நிலை இருந்திருந்தால்இத்துயரம் நேர்ந்திருக்காது அல்லவா?

  சமச்சீர்க்கல்வியுடனான அருகமைப்பள்ளிகள் இருந்தால்இட மாற்றங்களால் ஏற்படும் இன்னல்கள் நேரா. எப்பள்ளியாக இருந்தாலும் ஒரே வகை பாட முறை என்பதால் எப்பள்ளியிலும் இடமாற்றத்தின் பொழுது இடையிலும்கூட சேர்க்கலாம். பெற்றோர் இடமாற்றத்தால் பிள்ளைகள் ஓரிடம் பெற்றோர் ஓரிடம் என்னும் இடர் நிலை ஏற்படாது. அதனால் ஏற்படும் துன்பங்களும் பெற்றோர்களுக்கு ஏற்படாது.

Monday, March 2, 2026

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 09: ஒன்றியஅரசை வழிக்குக் கொணரும் திறமை நம்மிடம் இல்லை: இலக்குவனார் திருவள்ளுவன்

      03 March 2026      கரமுதல



(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 08: தொடர்ச்சி)

  தமிழக மீனவர்கள் சிங்களப் படைகளால் ஒழிக்கப்படுவதும் அவர்கள் படகுகள் அழிக்கப்படுவதும் தொடர்ந்தாலும் கொலைகாரனைத்தான் வரவேற்றுக் குலவுகிறார்களே ஒழிய, ஒன்றிய அரசினர் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. கேரளச் செவிலியர்கள் தாக்கப்படும் முன்பே பேரிடர் வரும் என்று கடத்தல் நாடகம்போட்டு மீட்டு வரும் ஒன்றிய அரசு, தமிழ் ஈழத்தில் கொத்துக் குண்டுகளாலும் ஏவுகணைகளாலும் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு உதவியாக இருந்ததுடன் கொலைகாரக் கூட்டாளிகளுடன் கைகோத்துக் கொண்டு தொடர்ந்து தமிழர்நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. இந்தியராக எண்ணினால் இணையுரிமை கொடு! இல்லையேல் தனியுரிமை கொடு! எனக் கேட்டு ஒன்றியஅரசை வழிக்குக் கொணரும் திறமைகூட நம்மிடம் இல்லை.

எங்கும் தமிழ் இல்லை! எதிலும் தமிழ் இல்லை!

  தொலைபேசி முதலான ஒன்றிய அரசு தொலைபேசிகளில் வணக்கம் ஒலிக்காது; நமசுகாரம்தான் நச்சரிக்கும்.

  பண எடுப்பு மையங்களில் ஆங்கிலமும் இந்தியும் உள்ளன. ஆனால் பலவற்றில் தமிழைக் காணோம்!

  வங்கியின் படிவங்கள் தமிழைப் புறக்கணிக்கின்றன. நாம் அவ்வங்கிகளைப் புறக்கணிப்பதில்லை!

  அங்கன்வாடி முதலான பெயர்களைச் சூட்டிக் கொண்டு தமிழை நாமே வெளியேற்றிக் கொண்டுள்ளோம்.

  தமிழகக்காவல்துறை ஆங்கிலேயர்க்குச் செயல்படுவதுபோல் அறிவிப்புகள், வழிகாட்டும் குறிப்புகள் யாவற்றிலும் தமிழ் இல்லை. தமிழன்னைக்குக் காவல் தேவையில்லை என விட்டுவிட்டார்கள் போலும்!

  தொடர்வண்டி அறிவிப்புகளில் தமிழ் இல்லை. எச்சரிக்கை, அபாய அறிவிப்பு என்றெல்லாம் தமிழ்நாட்டில் இந்தியிலும் மலையாளத்திலும் காண முடியும். ஆனால், தமிழர்கள் எக்கேடு கெட்டால் என்ன? அவர்களுக்கு எதற்கு எச்சரிக்கை என்று தமிழில் தருவதில்லை!

  மின்னேணி முதலான அனைத்து அவசர உதவி அறிவிப்பு இருக்கும் இடங்களில் எல்லாம் தமிழைக் காணமுடியாது. தமிழர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்று விட்டுவிட்டார்ளா? இப்படியாவது தமிழர் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என எண்ணுகிறார்களா? எனத் தெரியவில்லை.

  உணவகங்களில் உணவுப் பெயர்கள் தமிழில் இல்லை! உணவு நிரலும் தமிழில் இல்லை! தமிழையா   சாப்பிடப்போகிறார்கள்! தருவதை வயிற்றில் திணித்துக் கொண்டு ஓடட்டும் என எண்ணுகிறார்களோ!

  தங்கும் விடுதிகளான உறைவகங்களில் அறைகளின் பெயர்கள் தமிழில் இல்லை. கட்டண விவரங்கள், வசதி வாய்ப்புகள் தமிழில் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்கள் பணத்தில் வாழ்ந்து கொண்டு தமிழர்களி்ன் மொழியான தமிழைப் புறக்கணிக்க இவர்களுக்கு எவ்வாறு துணிவு வந்தது? தமிழர்கள் வாய்ப்பேச்சு வீரர்கள். முரண்டுபிடிக்கும் பொழுது மெதுவாகத்தட்டினாலே வீழ்ந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை போலும்! நமக்குள்ள உரிமைகளைக்கூடக் கேட்க முடியாமல் வாய் மூடி இருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?

 உறைவகங்களில் தங்குவதற்கான பதிவில் தமிழ் இல்லை. உணவகங்களில் நாம்தான் பணம் கொடுக்கிறோம். ஆனால் திருமணம் முதலான விழா அல்லது நிகழ்வுக் குறிப்புகளை அவர்கள் தமிழில் எழுத மாட்டார்களாம்! என்ன கொடுமை இது!

  கடைகளில் தரும் விலைச்சீட்டுகளில் தமிழ் இல்லை.

தமிழ் நல அரசாணைகளைப் பின்பற்றாத மேலோர்

 அரசாணைகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் மதிக்காத பொழுது மக்கள் எங்ஙனம் மதிப்பார்கள்? சான்றுக்கு ஒன்று! ஊர்திகளில் தமிழில் பதிவு எழுத்துகளைக் குறிக்கும் அரசாணையை அமைச்சர்களோ தலைமைச் செயலக அதிகாரிகளோ துறைத்தலைவர்களோ மதிக்காத பொழுது வேறு யார்தான் மதிப்பார்கள்! கணக்குக் காட்ட ஓர் அரசாணை அவ்வளவுதான்! இப்படித்தான் தமிழ்நாட்டில் தமிழ் முழுமையான ஆட்சி மொழியாக இல்லை.

தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கும் நாம்

  தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் படிக்கவும் பணியாற்றவும் வாய்ப்பு உள்ளபோது யாருக்கும் உதவாத தமிழ் என்று அனைவரும் புறக்கணிக்கத்தானே செய்வார்கள்! இப்படி எல்லாம் இயன்ற வரை தமிழை எல்லா இடங்களில் இருந்தும் துரத்தி விட்டு யாரோ சிலர் எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என முழங்கினால் போதுமா? தமிழ்நாட்டில் தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்படுவதில் என்ன இருக்கிறது.

குறைத்தே காட்டப்படும் தமிழ் மக்களின் எண்ணிக்கை

தமிழர்களாக இருந்தும் தமிழ் தெரியாதவர் உள்ளதால், தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைத்தே காட்டப்படுகின்றது; தமிழ் மக்கள் எண்ணிக்கையையும் கணக்கெடுப்பில் புறக்கணிப்பதாலும் உலகில் தமிழ் மக்களின் எண்ணிக்கையும் குறைத்தே காட்டப்படுகின்றது.  இது பற்றிய அறிவும் நமக்கு இல்லை.  எடுத்துக்காட்டாகச் சில பார்ப்போம். ஒரு காலத்தில் முழுமையும் தமிழ்நாடாக/ தமிழ்த்தீவாக இருந்த இலங்கை பின்னர் மெல்ல மெல்லச் சிங்களப் பகுதியாக மாறி இப்போது பெரும்பான்மை சிங்களப் பகுதியாக மாறிவிட்டது. இருப்பினும் குறைவாக மாறிய தமிழ் மக்களின் எண்ணிக்கையும் முழுமையாகக் காட்டப்படவில்லை.  விக்கிபீடியாவில், ‘தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் தலைப்பில்’ இலங்கையிலும் ஈழத்திலும் உள்ள கொழும்பு, யாழ்ப்பாணம் முதலான நகரங்களே குறிக்கப்பெறவில்லை. எனவே, தமிழர் எண்ணிக்கை குறைவாகத்தானே காட்டப்படுகின்றது.

இனவியல்: மொழிகளின் உலகம்(Ethnologue: Languages of the World)  என்பது மொழிகள் விவரம் பற்றிய பதிப்பாகும்; இவ்வுலக ஆவணத்தில், ‘மொழிகள்’ என்னும் பிரிவில் ‘தமிழ்’ என்னும் தலைப்பில் தமிழ் பேசப்படும் நாடுகளில் ஒன்றாகப் பருமா அல்லது மியன்மா குறிக்கப் பெறவில்லை. ஏறத்தாழ 25 நூறாயிரம் தமிழர்கள் வாழ்ந்த இந்த நாட்டில் இப்போது 20 நூறாயிரத்திற்குக் குறையாமல் உள்ளனர். எனினும் உலகப் புள்ளிவிவர ஆவணத்தில் இது குறிக்கப் பெறவில்லை. இவ்வாறு உலக மக்கள் கணக்கெடுப்பில் தமிழர்கள் எண்ணிக்கை குறைவாகவே காட்டப்படுகிறது.

Wednesday, February 25, 2026

இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 2 : இலக்குவனார் திருவள்ளுவன்



(இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 1 : தொடர்ச்சி)

இதற்கிணங்க  மேற்குறித்த இருபது தலைப்புகளையும்  – ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு உள்ளவற்றை – இணைத்துப் பின்வரும் தலைப்புகளி்ல் காணலாம்.

  1. கல்வி
  2. ஆட்சிமொழிபயிற்றுமொழிஒன்றியத் தொடர்பு மொழி
  3. குழந்தைத் தொழிலாளர் நலவாழ்வு
  4. ஊழல்விலையேற்றம்இலவயப் பொருள்கள்
  5. இட ஒதுக்கீடுவேலையில்லாத் திண்டாட்டம்
  6. சாதி வெறிதீண்டாமை
  7. பண்பாட்டுச் சீரழிவுமணமுறிவு
  8. அரசியல் கட்சிகள்தேர்தல்முறைஆட்சிமுறை

கல்வி

  தமிழ்வழிக்கல்வியும் இல்லை; தமிழ்மொழிக் கல்வியும்  முதன்மை நிலையில் இல்லை என்பதே தமிழ்நாட்டின் துன்பமாகும். ஆங்கிலவழிக்கல்வியின் துன்பத்துடன் இந்தி, சமசுகிருதம் முதலான மொழிகளை முதன்மொழியாகப்படிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுத் தமிழ் கற்பிக்க வாய்ப்பில்லா பல கல்விக்கூடங்கள் இருப்பது மிகப்பெரும் அவலமாகும். இப்பள்ளிக்கூடங்களில் தமிழ் பயில விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்பளிக்கப்படாமல், தமிழைக் கற்றுத் தராமல் இருப்பதால் இப்பள்ளிகளைச் சுற்றி உள்ள பகுதியைச் சார்ந்தவர்களும்  இப்பள்ளிகளி்ல் சேர்ந்தால் பெருமை எனக் கருதுபவர்களும் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளிகளில் சேர்த்துத் தமிழ் அறியாத் தலைமுறைகளை உருவாக்கி வருகின்றனர். தமிழால் ஆட்சிக்கு வந்தவர்களும் தமிழின் நிலையைஉணர்ந்தும் உணராமல், தலைமை நிலைக்கு வரவேண்டிய தாய்மொழியைத் தாய்நாட்டிலிருந்தே துரத்தும் நிலைக்கு உடன்பட்டுள்ளனர். மக்களுக்கும் தமிழ்த்தேசிய உணர்வின்மையால் கல்வி பற்றிய அடிப்படை உணர்வினை இழந்து அயல் மொழிகளுக்கு அடிமைப்பட்டு உள்ளனர். எனவே, தமிழ்மொழிக்கல்வியையும்தமிழ்வழிக்கல்வியின் தேவையையும் உணராமல் உள்ளனர். தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் இருக்க வேண்டுமாயின் அடிப்படை நிலையில் இருந்து உச்ச நிலை வரை அனைத்து இடங்களிலும் தமிழே கல்வி மொழியாக இருத்தல் வேண்டும்.

  கல்வியைப்பற்றிக் காணும் நாம் கல்வி தரும் நிலையங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் பார்க்க வேண்டும். 29/09/12 அன்று ‘கல்வி அரசு பள்ளி வழியா? தனியார் பள்ளி வழியா?’ என்ற தலைப்பில் உரை நிகழ்ந்துள்ளது. எனவே, இது குறித்தும் காண வேண்டும்.

  கல்வி என்பது அடிப்படை உரிமையாகும். அரசுகளின் முதல் கடமையே அனைவருக்கும் கல்வியளித்தலே. எனவேதான் பாரதியார்,

இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல், இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்ஆலயம் பதினாயிரம் நாட்டல்

பின்னருள்ள தருமங்கள் யாவும்பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்

அன்ன யாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்

என ஏழைக்கு எழுத்தறிவித்தலைச் சிறந்த செயலாகக் கூறினார்.

    கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்

    கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம். (பாண்டியன்பரிசு இயல் 56)என்னும் பாரதிதாசன் வாக்கிற்கு இணங்க யாருக்குத் தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும். அனைவருக்கும்  கல்வி நல்கா  ஆட்சியாளருக்காசெயல்படுத்தா அதிகாரிகளுக்காகல்விச்சூழலை உருவாக்காத செல்வர்களுக்காஎன எண்ணிச் செயல்பட்டால் அனைவருக்கும் தரமான கல்வி கிட்டும்.

  அரசே அனைத்துக் கல்விக் கூடங்களையும் நடத்திட இயலுமா?  தனியாரிடம் ஒப்படைக்கலாமா? கல்வி முழுவதும் தனியாரிடம் இருக்க வேண்டுமா? முழுமையும் அரசின் பொறுப்பில் இருக்கவேண்டுமா? இரு தரப்பாரிடமும் இருக்க வேண்டுமா? என்பனவெல்லாம் ஆய்விற்குரியனவாக உள்ளன.

   “கல்வி அரசு பள்ளி வழியாதனியார் பள்ளி வழியா?” என எண்ணுவதைவிடக்கல்வி எவ் வழியில் இருக்க வேண்டும் என எண்ணுவதே சிறப்பாகும். தனியார் பள்ளி என்பன பணம் பறிக்கும் இயந்திரங்களாகத்தான் செயல்படுகின்றன. எனவேஅதனை ஒரு வழியாக எண்ணக்கூடாது. அப்படியானால் அரசு பள்ளி வழிதான் ஏற்றதா என எண்ணக்கூடாது. தனியார் பள்ளிகள் செழிப்புடன் செயல்படுகின்றன. அரசு பள்ளிகள் ஏழ்மை நிலையில் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு வினா எழுப்பப்பட்டிருக்கலாம். பள்ளி என்று மட்டும் பார்க்காமல் தனியார் பொறியியல் கல்லூரிகள்தனியார் மருத்துவக் கல்லூரிகள் முதலானவற்றையும் கருத்தில் கொண்டு மழலைக் கல்வி முதல் ஆய்வுநிலைக் கல்வி வரை,  கல்வி அரசு வழியாதனியார் வழி முறையாஎன எண்ணிப் பார்க்கலாம்.

 நாட்டு மக்களுக்குக் கல்வியளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். அரசு தனக்குரிய கடனைத் தனிப்பட்டவரிடம் ஒப்படைத்துள்ளது. கல்வி றிலையங்களைத் தோற்றுவிப்பவர்களில் பலர் மக்களுக்குக் கல்வியறிவையூட்ட வேண்டுமென்ற உயர் நோக்கினைக் கொண்டுள்ளனர் என்று கூற இயலாது. விரைவில் மிகு உழைப்பின்றிப் பொருள் ஈட்டுவதற்குத் துணையாக கல்வி நிலையங்களைத் தோற்றுவித்து நடத்தலை மேற்கொள்கின்றனர்.

  அதனால்தான் மாணவர் நலனையோ, ஆசிரியர் வசதியையோ, கல்வி முன்னேற்றத்தையோ கருதிப் பாராது கல்விக்கூடங்களை நடத்துகின்றனர். அருள்நோக்குடன் அனைவர்க்கும் கல்வியளிக்க வேண்டிய நிலையங்கள் பொளீட்டும் வாணிக நிலையங்களாக மாறியுள்ளன. அமர்வதற்கு ஏற்ற இருக்கைகள் இல்லாதனவும், வகுப்பறைகட்குரிய தடுப்புகள் இல்லாதனவும், ஆசிரியர்க்குத் திங்கள் கணக்கில் ஊதியம் அளிக்காதனவும் ஆய கல்விக் கூடங்கள் பல உள. இக்கல்விக் கூடங்களைத் தொடங்கியுள்ளோர் இவற்றைத் தொடங்குவதற்கு முன் பெற்றிருந்த பொருள் நிலையும் தொடங்கிச் சில ஆண்டுகளில் பெற்றிருக்கும் பொருள் நிலையும் கணக்கெடுப்பின் பள்ளிக்கூடங்கள் எவ்வாறு வாணிக நிலையங்களாகப் பொருள் ஈட்டும் கூடங்களாகப் பயன்படுகின்றன என்பது தெள்ளிதிற் புலனாகும். ஆட்சியாளர்க்கு இவ்வவலநிலை தெரியாது என்று கூறுதல் பொருந்தாது. அறிந்தும் அறியாதவர் போல் இருக்கின்றனர் என்றுதான் கருத வேண்டியுள்ளது.

 பயிற்சிப் பள்ளிக்கூடங்கள் பெரும் பொருளீட்டும் நிலையங்களாகப் பயன்படுத்தப்படுதல் நாடு அறிந்த ஒன்றாகும். ஆதலின் அதனையும் தனியாரிடமிருந்து எடுத்து அரசே நடத்துதல் வேண்டும்.

இவற்றுக்கு அரசே பொருட்கொடை நல்கி இவற்றை ஏற்று நடத்துவதனால் மிகு பொருட்செலவு ஏற்படாது. மக்களாட்சி மாண்புறவும் நல்ல குடிமக்கள் தோன்றவும் துணை புரியவல்லது. கல்வியாய் இருத்தலின் கல்விக்குச் செலவிடுவதைப் பற்றிக் கவலை கொள்ளல் நல்லரசுக்கு ஏற்றதன்று.

இன்று கலைக் கூடங்களில் பல கொலைக் கூடங்களாகவே உள்ளன; நற்கல்வி, உயர்பண்பு, நேர்மை, உடல்நலம், உளநலம் முதலியன வளர்க்கப்படாமல் அழிக்கப்படும் நிலையங்களாகவே உள்ளன எனின் மறுத்துரைப்பது எளிதன்று. ஆதலின் ஆட்சியாளர் கல்வித்துறையில் தனிநோக்குச் செலுத்தி உயர்கல்வியை மக்கட்கு அளிக்கும் தொண்டில் செம்மை பெற வேண்டுகின்றோம்.{குறள் நெறி மலர் : 1 இதழ் 7 தி.வ.ஆண்டு 1995 சித்திரை (15.4.1964)]

Tuesday, February 24, 2026

நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! – இலக்குவனார் திருவள்ளுவன்

      25 February 2026      கரமுதல



(நாலடி நல்கும் நன்னெறி 24: நிலையான பயன் தரும் அறம் செய்க!: தொடர்ச்சி)

சமயங்கள் வெவ்வேறு: ஆயினும் அவை உணர்த்தும் நெறி ஒன்றே!

ஆவே றுருவின வாயினும் ஆபயந்த

பால்வே றுருவின அல்லவாம்; – பால்போல்

ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்

உருவு பலகொளல் ஈங்கு.

நாலடியார் பாடல் 118

கருத்து:

பசுக்கள் வெவ்வேறு வண்ணங்களை உடையனவாக இருந்தாலும் அவை தரும் பாலின் நிறம் வெண்மைதான். அதுபோல், சமயங்கள் வெவ்வேறு வகையில் இருந்தாலும் அவை அறிவுறுத்தும் அறநெறி ஒன்றே!

பதவுரை:

ஆ = பசுக்கள்; வேறு உருவின = நிறத்தாலும் வடிவத்தாலும் வெவ்வேறு உருவங்களைக்; ஆயினும்=கொண்டிருப்பினும்; ஆ பயந்த பால் = பசுக்கள் தரும் பாலும் பால் மூலம் பெறும் தயிர், நெய் முதலிய பாற் பொருள்களும்; வேறு உருவின= வெவ்வேறு வண்ணங்களை; அல்லவாம் = உடையன அல்லவாம்; அறநெறி = அறத்தின் வழி; பால்போல்=பால் போன்று;ஒருதன்மைத் தாகும்= ஒத்ததன்மையுடையனவாகும்; ஆபோல் = பசுக்கள் போல் ; உருவு பலகொளல் ஈங்கு=பல வேடங்களையுடைய சமயங்களும் இங்கு

சமயங்கள் கொள்கையினால், வழி பாட்டு முறைகளினால், சடங்குகளால், நோன்பு முறைகளால், நூல்களால், வெவ்வேறாக உள்ளன. ஆனால் அவை உணர்த்தும் அடிப்படை அறநெறி ஒன்றுதான். இவ்வுண்மையையே பசுக்கள் பல வண்ணமாக இருந்தாலும் அவைதரும் பாலின் நிறம் ஒன்றுதான் எனக் கூறி உணர்த்துகிறார் பாடலாசிரியர்.

இப்பாடல் சமயப்பொறைக்கு வழி காட்டுகிறது. வெவ்வேறு சமயத்தவர் தத்தம் சமயமே உயர்ந்தது என்றோ தங்கள் சமயம் கூறும் படைப்புக் கடவுளை உயர்ந்ததாகவோ கூறக்கூடாது. வழிபாட்டு முறைகளினாலும்  நடைமுறைகளாலும்  ஒவ்வொரு சமயமும் வெவ்வேறு வகையாகத் தோன்றலாம். சமயக் கடவுள்களின் தோற்றங்களும் வெவ்வேறு நிலையாக இருக்கலாம். ஆனால், அவை உணர்த்தும் அடிப்படை நெறி ஒன்றே. அவ்வாறிருக்கும் பொழுது ஒவ்வொருவரும் தத்தம் சமயமே உயர்ந்தது என்று சொல்லாட, போராட வேண்டிய தேவை என்ன?  எனவே, சமயங்களின் அடிப்படை ஒருமை உணர்வைப் புரிந்து கொண்டு சமயப்பொறையுடன் வாழ வேண்டும் என நாலடியார்ப் பாடல் உணர்த்துகிறது எனலாம்.

நாடெங்கும் சமயச்சண்டைகள் தலைவிரித்தாடுகின்றன. அவற்றை நிறுத்துவதற்கு இப்பாடலைப் பொருளுடன் விளக்கி உணர்த்தலாம். சமயப் பொறையே நமக்குத் தேவை. சமயக்கருத்துகளில் உள்ள வேண்டாதனவற்றை விலக்கி உட்கருத்தான அறநெறியை உணர்ந்து போற்றுவோம்!

Followers

Blog Archive