Thursday, April 23, 2026

நாலடி நல்கும் நன்னெறி 27: அறநெறி அறியுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

      24 April 2026      கரமுதல



(நாலடி நல்கும் நன்னெறி 26: வறுமையிலும் உதவுக! – தொடர்ச்சி)

அறிமி னறநெறி யஞ்சுமின் கூற்றம்

பொறுமின் பிறர்கடுஞ்சொற் போற்றுமின் வஞ்சம்

வெறுமின் வினைதீயார் கேண்மையெஞ் ஞான்றும்

பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.

[அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம்

பொறுமின் பிறர் கடு சொல் போற்றுமின் வஞ்சம்

வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும்

பெறுமின் பெரியார் வாய் சொல்.]

நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 172

அறம் = அறத்தின்; நெறி = வழியை; அறிமின் = அறியுங்கள்; கூற்றம் = கூற்றுவனுக்கு/இயமனுக்கு/எமனுக்கு; அஞ்சுமின் = அஞ்சுங்கள் ;பிறர் = அயலாருடைய; கடு சொல் = கொடுமையான சொற்களை; பொறுமின்=பொறுத்துக் கொள்ளுங்கள்; வஞ்சம்=வஞ்சகத்தை; போற்றுமின்=வராமல் போற்றுங்கள்; வினை=தீவினை புரியும்; தீயார் =கொடியவர்;கேண்மை=நட்பை;வெறுமின்=வெறுத்துக் கைவிடுங்கள்; எஞ்ஞான்றும்=எந்நாளும்; பெரியார்=பெரியோர்கள்; வாய் சொல்=வாயினால் கூறும் சொற்களை, அறிவுரையை; பெறுமின்= பெறுங்கள்.

அறவழி அறியுங்கள்; இயமனுக்கு அஞ்சுங்கள்; கொடுஞ் சொற்களைப் பொறுங்கள்; வஞ்சனை வாராது காத்துக் கொள்ளுங்கள்; தீயவர் நட்பைக் கை விடுங்கள்; பெரியோர் அறிவுரையைப் பெறுங்கள்.

அறவழி அறியுங்கள் என்றால் அறவழியை அறிந்து அதன் வழியில் செல்லுங்கள் எனப் பொருள். அறநெறி வாழ்வை வலியுறுத்தி, ‘அறன் வலியுறுத்தல்’ என்னும் ஓர் அதிகாரத்தையே திருக்குறளில் திருவள்ளுவர் வைத்துள்ளார். நாலடியாரிலும் ‘அறன் வலியுறுத்தல்’ என்னும் ஓர் அதிகாரம் உள்ளது.

எமனுக்கு அஞ்சுங்கள் என்றால், எமன் எப்பொழுது வேண்டுமானாலும் அழைத்துக்கொள்வான். வாழ்வு நிலையற்றது. நிலையாமை என்று ஓர் அதிகாரத்தையே திருவள்ளுவர் வைத்துள்ளார். வாணாள் முடிவதற்குள் அறப்பணி ஆற்ற வேண்டும்.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.(திருக்குறள், ௩௰௮ – 38)

என்று அறம்தவறிய நாள் என்றுமில்லாதவாறு நாளும் அறமாற்றுமாறு கூறுகிறார் திருவள்ளுவர்.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.   (திருக்குறள், ௩௰௬ – 36)

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் உடனே அறமாற்றுவதுதான் நமக்குத் துணையாக இருக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்.   (திருக்குறள், ௩௱௩௰௫ – 335)

நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டு விக்கல் மேலெழுந்து வரும் முன்னர் நல்வினைகள் செய்யப்பட வேண்டும் என்றும் திருவள்ளுவர் கூறுகிறார். எனவே, எமனுக்கு அஞ்சி, அவன் வருவதற்குள் நாளும் ஆற்ற வேண்டிய அறச்செயல்கள் குறித்துத்தான் நாலடியாரும் கூறுகிறது.

கடுஞ்சொற்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டியதையும் பிற இலக்கியங்களும் கூறுகின்றன.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம். (திருக்குறள், ௩௰௫ – 35)

என்று கடுஞ்சொல் சொல்லாதிருப்பதை அறமாகத் திருவள்ளுவர் கூறுகிறார்.

வெருவந்த செய்யாமை அதிகாரத்தில் கடுஞ்சொற்களைப் பேசுபவரைக் கடிந்து உரைக்கிறார் திருவள்ளுவர். எனவேதான், அவர்

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொல் நோற்பாரின் பின்.   (திருக்குறள், ௱௬௰ – 160)

என்று திருவள்ளுவர் கடுஞ்சொல் சொல்லாமையைச் சிறந்த நோன்பாகக் கூறுகிறார்.

என்றும் கடுஞ்சொல் உரையார்“(ஆசாரக்கோவை 93)

என என்றும் கடுஞ்சொல் சொல்லக்கூடாது என்கிறார் புலவர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்.

வஞ்சகம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டியது குறித்து அடுத்துப் பார்ப்போம்.

வஞ்ச மனத்தவனின் பொய்நடத்தைக்கு எதிராகத் திருவள்ளுவர்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.   (திருக்குறள், ௨௱௭௰௧ – 271)

என்கிறார்.

“வஞ்சகம் பேசுபவன்] தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.” “அவனை நம்பாதே” (நீதிமொழிகள் 26:24, 25.) என விவிலியம் எச்சரிக்கிறது.

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டா (உலக நீதி) என்கிறார் உலகநாதர்

வஞ்சகத்தாருக்கு அழிவு உறுதி என்பதற்காக மாக்கவி பாரதியார்,

படித்தவன் சூதும் வாதும் செய்தால்

போவான், போவான்; ஐயோ என்று போவான்!

என்கிறார்.

வஞ்சம் என்னும் சொல் மோசடி, கபடம், போலி, கள்ளத்தனம், வஞ்சித்தல், பித்தலாட்டம்,  ஏமாற்றுதல், சதி, பொய்வேடம், வஞ்சனை எனப் பல பொருள்களில் பயன்பாட்டில் உள்ளது. எனவே, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் வஞ்சகம் ஆகும். வஞ்சகம் பேசுவோரிடம் நட்போ உறவோ கூடாது என்பதற்காக வள்ளலார் இராமலிங்க அடிகள்,

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

என்கிறார்.

தீவினையாளர் தொடர்பை அறுக்க வேண்டியது குறித்தும் பார்ப்போம்.

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு.   (திருக்குறள், ௨௱௧ – 201)

எனத் திருவள்ளுவர் தீவினை புரிய அஞ்ச வேண்டும் என்கிறார். தீவினை அச்சம் என ஓர் அதிகார்தையே தீவினைக்கு எதிராக வைத்துள்ளார் திருவள்ளுவர். தீவினைக்குஅஞ்ச வேண்டுமெனில் தீவினை புரிவோரோடு தொடர்பு கொள்ளக் கூடாது அல்லவா?

பெரியார் அறிவுரையைப் பின்பற்ற வேண்டியது குறித்தும் கூறுகிறார்.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.   (திருக்குறள், ௪௱௰௫ – 415)

எனத் திருவள்ளுவர், பெரியோரின் வாய்ச்சொல்லைத் துணையாகக் கொள்ள வேண்டும் என்கிறார்.

பெரியாரைத் துணைக்கோடல் என ஓர் அதிகாரம் மூலம் பெரியாரின் துணையை வலியுறுத்திக் கூறுகிறார்.

நாலடியார் இப்பாடலில் கூறும் ஆறு அறிவுரைகளையும் நாம் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

Wednesday, April 22, 2026

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் - நூலாய்வு 3 : இலக்குவனார் திருவள்ளுவன்

      23 April 2026      கரமுதல



(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 2 : தொடர்ச்சி)

இந்தி எதிர்ப்பு நிதிக்கு இசுலாமியப்பெண்களும் நிதி வழங்கியமை, மே்டையைச் சரிசமமாகப் பகிர்ந்த பெண்கள், பெண்கள் திரளாகப் பங்கேற்ற ‘தமிழ்நாடு தமிழருக்கே’ ஊர்வலம், எல்லா வடிவத்திலும் எல்லா இடத்திலும் பெண்களின் இந்தி எதிர்ப்பு, முதலியவைபற்றியும் இக்கட்டுரையில் விவரித்துள்ளார்.

இக்காலத்தில் பெண்கள் ஒதுக்கீட்டில் இடம் பெற்ற பெண்களின் பின்னால் ஒளிந்து கொண்டு ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால், அப்பொழுது பெண்களே இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளனர் என்பதை நாம் இக்கட்டுரை மூலம் அறிந்து கொள்ளலாம்.

நிகழ்ச்சிகள் தொடர்பான துண்டறிக்கைகள், செய்திகள், அறிவிப்புகள், பெண் தலைவர்கள் படங்கள், பெண் போராளிகள் படங்கள், தொடர்பான கருத்துப் படங்கள் எனப் பலவற்றையும் நூலாசிரியர் தொகுத்து அளித்துள்ளார்

தலைவர் நீலாம்பிகை அம்மையார் என்பது ஆறாவது கட்டுரை.

தம் தந்தையார் மறைமலையடிகளால் தனித்தமிழ்ப்பக்கம் ஈர்க்கப்பட்ட நீலாம்பிகை அம்மையார், வாணாள் முழுவதும் அதில் நிலையாக இருந்தார் எனவேதான் இந்தி எதிர்ப்புப்போராட்டங்களில் தனித்தமிழ் மணமும் கமழக் காணலாம். “முன்னமே நாம் பிற மொழிச்சேர்க்கைக்கு இடம் கொடுத்து விட்டோம்.இனிமேலாயினும் பிறமொழிச் சேர்க்கைக்கு இடம் கொடாமல் நம்மையும் நம் அருமைத் தமிழையும் பாதுகாத்துக் கொள்வோமாக” என மாநாட்டில் பேசிய நீலாம்பிகை அம்மையார் அதன் மூலம் தமிழ்ப்பெண்களுக்குத் தமிழுணர்வு ஊட்டினார் என்பதை விளக்குகிறார்.

ஏழாவது கட்டுரையில், பெரியாருக்குப் ‘பெரியார்’ பட்டம் சூட்டியது குறித்து விவரிக்கிறார். இந்தி எதிர்ப்பு என்பது பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, தனித்தமிழ் எழுச்சி முதலியவற்றையும் அடிப்படையாகக் கொண்டதே என்பதை இக்கட்டுரை மூலம் தெளிவுபடுத்துகிறார்.

மாநாட்டு நிகழ்ச்சிகளை எட்டாவது கட்டுரை விளக்குகிறது. மாநாடு தொடர்பான தலைவர்கள் குதிரை வண்டியில் வைத்து அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான பெண்கள் தமிழ்க்கொடிகளை ஏந்தி, தமிழ் வாழ்க, தமிழ்நாடு தமிழருக்கே இந்தி வீழ்க, தமிழ்ப்பெண்கள் வாழ்க, தமிழர் வாழ்க என முழக்கமிட்டு வந்துள்ளனர். தமிழ்ப்பெண்கள் தமிழ் வாழ்த்துப்பாடி வந்துள்ளனர் என விளக்குகிறார். மாநாட்டில் 5000 பேருக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். அன்றைக்குப் பெண்களிடம் இருந்த தமிழ் எழுச்சி எங்கே போய்விட்டது என்றுதான் தெரியவில்லை.

ஒன்பதாவது கட்டுரையில் அன்னை மீனாம்பாள், மரு.தருமாம்பாள், பண்டிதை நாராயணி, பார்தவி யம்மையார் உரைகள் ஆகியன தரப்பட்டுள்ளன. அத்தகைய தமிழுணர்வு மிக்க, தமிழ் எழுச்சி ஊட்டக்கூடிய பெண் தலைவர்களை இன்று காணவில்லை. 

வரவேற்புக்குழுத் தலைவர் வ.பா.தாமரைக்கண்ணியம்மையார் என்பது ஒன்பதாவது கட்டுரை. மிகச் சிறப்பான சொற்பொழிவாற்றியுள்ளார் தாமரைக் கண்ணி அம்மையார். இவ்வுரையில் கொச்சைப்பேச்சு நடையில் எழுத்தாளர்கள் எழுதுவது குறித்தும் பின்வருமாறு கண்டித்துள்ளார்:

‘’தமிழ்எழுத்தாளர் என்று தன்னை அழைத்துக் கொண்டு அரைகுறைத்தமிழில் எழுதுபவர்களைக் கடுமையாகத் தன் உரையில் தாமரைக்கண்ணி சாடுகிறார். குறிப்பாகப் பார்ப்பன மொழியைப் பயன்படுத்துபவர்களை விமரிசனம் செய்கிறார்.  என்ன சார்வாள், எங்கே போறையள், ரொம்ப, பஞ்சாமிர்தமாக, தொபுக்கடீரென்று, தூம்தடாகா, கப்சா, காதல் கச்சேரி, காலட்சேபம், லேடீச கிளப்,- போதுமா? இன்னும் வேண்டுமா? சிலர், சிவ சிவா போதும் போதும் என்கிறீர்கள். சரி. நிறுத்திவிட்டேன். இப்படித் தமிழன்னையைப் பையப் பையச் சாகடிக்கும் இந்த எழுத்தாளர்கள்தான் உயிருள்ள தமிழ்நடை எழுதுபவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இத்தமிழ்நடையைத் தமிழ்நாட்டில் மட்டும் நடத்தினால் போதாது என்று கருதி, உலகமெங்கும் பரப்புவதற்காக  இவர்களுக்கு அகில இந்திய வானொலியில் (ரேடியோவில்) பேசுவதற்கு அடிக்கடி இடம் கொடுக்கப்படுகிறது. இதற்கு மாறாக, வாழ்நாள் முழுவதும் தமிழ் பயின்று இலக்கண இலக்கிய வர்புகளுக்குட்பட்டுச் செந்தமிழ்நடை எழுதும் அறிஞர்கள் பத்தாம்பசலிக்காரர்கள் என்று பரிகசிக்கப்படுகிறார்கள். இவர்கள் தமிழ்க்கொலை செய்பவர்களாம். எப்படியிருக்கிறது சங்கதி? இதற்கு விமோசனம் இல்லையா? என்று நான் கேட்கிறேன். இந்த நிலைமையில் இந்த இந்திச் சனியன் வேறு வந்து புகுந்தது. …” என்று பேசியதை நமக்குத் தந்துள்ளார்.

மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!: சங்கப் புலவர்கள் பொன்னுரை – 32 – இலக்குவனார் திருவள்ளுவன்


(தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே! – தொடர்ச்சி)

 “சினனே காமம் கழிகண் ணோட்டம்

அச்சம் பொய்ச்சொல் வுடைமை

தெறல்கடு மையொடு பிறவும்இவ் வுலகத்(து)

அறம்தெரி திகிரிக்கு வழியடை யாகும்”  

பதிற்றுப்பத்து 22, அடிகள் 1- 4 (பாடலின் மொத்த அடிகள் 38)

பெயர் – கயிறுகுறு முகவை (14)

துறை – வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு

தூக்கு – செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்

வண்ணம் – ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்

சினன்=அளவு கடந்த சினம்; காமம்=அளவுகடந்த காமம்; கழிகண் ணோட்டம்=மிகுதியான கண்ணோட்டம்; அச்சம்=பேரச்சம்; பொய்ச்சொல்=பொய்ச் சொல்; அன்புமிகு=மிகுதியான அன்பு; உடைமை=உடைத்தாயிருத்தல்; தெறல் கடுமை=கடுமையாகத் தண்டித்தல்;

பிறவும்=இவையும் இவை போன்ற பிறவும்; இவ்வுலகத்(து)=இவ்வுலகத்தில்; அறம் தெரி=அறம் நிலைபெறுவதற்காகப் பிறப்பிக்கும்; திகிரி=அரசாணை; வழியடை யாகும்=தடைக் கல்லாகும்.

இவ்வுலகத்தில், அற வழி ஆட்சி புரிவதற்குரிய அரசரின் ஆணைகள் செயற்பாட்டிற்கு அளவு கடந்த சினமும், அளவுகடந்த காமமும், மிக்க கண்ணோட்டமும், பேரச்சமும், பொய் பேசுதலும், மிகுதியான அன்பு கொண்டிருத்தலும், குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டித்தலும், இவை போன்ற பிறவும் தடைக் கற்களாக நிற்பனவாகும்.

எனவே, இத் தீமைகளை நீக்கி ஆட்சி செய்க என்கிறார் புலவர்.

உலகியலில் உருள்வது அறநெறிச் சக்கரம். சினம், காமம், அளவுகடந்த இரக்கக் குணம், அச்சம், பொய் பேசுதல், அளவு கடந்த அன்பைக் கொட்டுதல், பிறர் வாழ்வை அழித்தல், பிறரிடம் கடுமையாக நடந்துகொள்ளுதல் முதலானவையும் இவற்றைப் போன்ற பிறவும் இயல்பாக உருளும் அறச் சக்கரத்தைத் தடுத்து நிறுத்தும் தடைக்கற்கள் ஆகும்.

அரசன் ஆட்சியை ஆணைச் சக்கரம் என்பதால் அறநெறியைச் சக்கரமாகக் குறிப்பிடுகின்றனர்.

சக்கரம் உருளத்தானே செய்யும். எனவே, அறச்சக்கரம் உருள்வதற்கு அளவு கடந்த செயற்பாடுகளையும் பண்புகளையும் தடைக்கற்களாகக் கூறுகின்றனர்.

எனவே, அறநெறிச்செயல்களின் இயக்கத்திற்கு இவை தடை எனப் புரிந்துகொள்ளவேண்டும்.

“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” என்பது பழமொழி. அமிழ்து என்பது நம்மைச் சாகாமல் இருக்கச் செய்வது என்பர். அதுவே அளவு கடக்கும் பொழுது சாகவைக்கும் நஞ்சாகும் என்றால் பிறவெல்லாம் எம்மாத்திரம்!

உணவு, செயற்பாடுகள், அன்பு காட்டுதல் முதலிய பண்புகள், இரக்கம் காட்டுதல் முதலிய கண்ணோட்டங்கள், தவறுகளுக்கும் குற்றங்களுக்குமான தண்டனைகள் என யாவுமே ஓர் அளவிற்குத்தான் இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் அவற்றை மேற்கொள்வோருக்கு எதிராக மாறும்.

மிகுதி என்னும் பொருளிலான கழி என்னும் சொல்லைக் கண்ணோட்டடத்திற்கு மட்டுமல்லாமல் சினம், காமம் முதலிய பண்புகளுக்கும் சேர்த்துப் பொருள் காண வேண்டும்.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்.

(திருக்குறள், ௩௱௫ – 305) என்கிறார் திருவள்ளுவர்.

“கழி சினம் காத்தல், கடன்”  என்கிறார் புலவர் காரியாசான் (சிறுபஞ்சமூலம்-பாடல் 75).

“ஆறுவது சினம்” என்கிறார் ஒளவையார் (ஆத்தி சூடி.2).

அஃதாவது தணிக்கப்பட வேண்டியது சினம். சினம் வருவது இயற்கைதான். ஆனால் அது அளவு கடக்கக் கூடாது.

காமம் என்பது நிறைவான அன்பைக் குறிப்பது.

“கமம் நிறைந்து இயலும்”  என்கிறார் தொல்காப்பியர் (தொல்காப்பியம் 2-8-58).

“கமஞ்சூல் மாமழை” என்கிறார் புலவர் நக்கீரர் (திருமுருகாற்றுப்படை அடி 7).

நிறைவைக் குறிக்கும் கமம் என்னும் சொல்லில் இருந்து நிறைவான அன்பைக் குறிக்கும் “காமம்” பிறந்தது.

பாலின்ப உணர்வுதான் தலைமுறைகள் தழைக்க அடிப்படையாக இருப்பது. ஆனால், அதுவே மிகுதியானால் உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடு. அளவு மிகுந்து வெறியானால் தீங்கும் விளைவிக்கும்.

கண்ணோட்டத்தால்தான் உலகம் இயங்குவதாகத் திருவள்ளுவர் கூறுகிறார். அவரே செயற்பாட்டிற்கு ஊறு நேராத வகையில் கண்ணோட்டம் இருக்க வேண்டும் என்கிறார்.

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்திவ் வுலகு.

(திருக்குறள், ௫௱௭௰௮ – 578) என்று சொல்கிறார் அவர்.

கண்ணோட்டம் மிகுந்தால் நீதி நடுநிலையாய் அமையாது. அதனால் அப்போது செய்வன யாவும் தீமைகளையே விளைவிக்கும்.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

(திருக்குறள், ௪௱௨௰௮ – 428) என்கிறார் திருவள்ளுவர்.

அச்சம் மிகும் பொழுது பலவித இடையூறுகள், தீங்குகள் ஏற்படும். வெருளிநோயும் (Phobia) வரும். எனவே, அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச வேண்டிய நாம் அளவுகடந்து அச்சம் கொள்ளக் கூடாது.

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்

(திருக்குறள், ௨௱௯௰௨ – 292) என்கிறார் திருவள்ளுவர்.

அப்பொய்மையும் அளவு மிகுந்தால் தீமையே விளைவிக்கும்.

உறவில் பொய் மிகுந்தால் பகை ஏற்படும்; நட்பில் பொய் மிகுந்தால் பிரிவு ஏற்படும்; தொழிலிலும் வணிகத்திலும் பொய் மிகுந்தால் பிளவு ஏற்படும்; இழப்பு ஏற்படும்.

இவ்வாறு எதுவாக இருந்தாலும் மிகுதியான பொய் என்பது தீமையே விளைவிக்கும். (இப்படிச் சொல்வதால் அளவான பொய் இருக்கலாமா என எண்ணக் கூடாது.)

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம். (௫௱௬௰௭ – 567)

என்று மிகுதியான தண்டனை வல்லமையைத் தேய்க்கும் அரம் என்கிறார் திருவள்ளுவர்.

மிகுந்த சினம், அளவுகடந்த காமம், மிகுதியான கண்ணோட்டம், அச்சம், பொய், மிகுதியான தண்டனை முதலிய யாவும் அரசருக்கு மட்டுமல்ல, அறநெறியில் வாழ விரும்பும் யாருக்கும் தடைக்கற்களாகும்.

எனவே, யாராயினும் எதிலும் வரம்பு மீறாமல் பேசவேண்டும், வரம்பு மீறாமல் செயற்படவேண்டும்.

மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்! என்பதை உணர்ந்து அதற்கேற்ப வாழ்வோம்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்! – Thaaii Magazine

Tuesday, April 21, 2026

சட்டச் சொற்கள் விளக்கம் 1047-1050: இலக்குவனார் திருவள்ளுவன்

      22 April 2026      



(சட்டச் சொற்கள் விளக்கம் 1043-1046 தொடர்ச்சி)

1047. Appreciationஆராய்தல்‌;
பாராட்டுதல்‌;
மதிப்பிடுதல்‌;
விளங்கிக்‌ கொள்ளுதல்

சட்டத்தில் மதிப்பீடு என்பது நீதிமன்றங்கள் முறையீட்டின் போது வழங்கப்பட்ட ஆதாரத்தை மதிப்பீடு செய்து ஆராய்ந்து பார்க்கும் செயல்முறையைக் குறிக்கும்.

இது நீதித்துறை எடுத்துரைப்பு, முழு நம்பகம், நிகழ்தகவு விதி, நீதித்துறை தவறாக செயல்படுவதைத் தடுத்தல் முதலியவற்றை உள்ளடக்கியது.
1048. Appreciation of evidenceசான்றின்‌ மதிப்பீடு

சட்டத்தில் சான்றின் அல்லது ஆதாரத்தின் மதிப்பீடு என்பது நீதிமன்றங்கள்.

சட்டநடவடிக்கைகளின் போது அளிக்கப்பட்ட ஆதாரத்தின் ஏற்கத்தக்க தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து மதிப்பீடு செய்யும் செயல்முறையைக் குறிக்கும்.
1049. Apprehend  அச்சத்தோடு எதிர்பார்
தளையிடு
கைது செய்
புரிந்துகொள்  

பெரும்பாலும் குற்ற வழக்குகளில், சட்ட அதிகாரத்தினால் ஒருவரைப் பிடித்தல் அல்லது தளையிடுதல் என்பதைக் குறிக்கிறது.  இது குற்றவாளியைக் கையோடு பிடிப்பதைக் குறிக்கும்.

இது பெரும்பாலும் காவல் அறிக்கைகளிலும், தளையாணைகளிலும் பதிவு செய்யப்படுகிறது.
1050. Apprentice  தொழில் பயிலுநர்

விற்பனை மேம்பாட்டு பணியாளர்கள் (சேவை நிபந்தனைகள்) விதிகள், 1976, பிரிவு 2.ஈ. [The Sales Promotion Employees (Conditions Of Service) Rules, 1976,Sec. 2(d)] பணியாளர்களுள் தொழில் பயிலுநர்களும் அடக்கம் எனக் குறிக்கிறது. (S. 2(d) SPE(CS)A, 1976)

Followers

Blog Archive