(இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 1 : தொடர்ச்சி)
திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம்
தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள்
பொதுத்தலைப்பு:
இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் – நிறைவுரை 2
சுருக்கத் தலைப்புகள்
இதற்கிணங்க மேற்குறித்த இருபது தலைப்புகளையும் – ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு உள்ளவற்றை – இணைத்துப் பின்வரும் தலைப்புகளி்ல் காணலாம்.
- கல்வி
- ஆட்சிமொழி, பயிற்றுமொழி, ஒன்றியத் தொடர்பு மொழி
- குழந்தைத் தொழிலாளர், நலவாழ்வு
- ஊழல், விலையேற்றம், இலவயப் பொருள்கள்
- இட ஒதுக்கீடு, வேலையில்லாத் திண்டாட்டம்
- சாதி வெறி, தீண்டாமை
- பண்பாட்டுச் சீரழிவு, மணமுறிவு
- அரசியல் கட்சிகள், தேர்தல்முறை, ஆட்சிமுறை
கல்வி
தமிழ்வழிக்கல்வியும் இல்லை; தமிழ்மொழிக் கல்வியும் முதன்மை நிலையில் இல்லை என்பதே தமிழ்நாட்டின் துன்பமாகும். ஆங்கிலவழிக்கல்வியின் துன்பத்துடன் இந்தி, சமசுகிருதம் முதலான மொழிகளை முதன்மொழியாகப்படிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுத் தமிழ் கற்பிக்க வாய்ப்பில்லா பல கல்விக்கூடங்கள் இருப்பது மிகப்பெரும் அவலமாகும். இப்பள்ளிக்கூடங்களில் தமிழ் பயில விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்பளிக்கப்படாமல், தமிழைக் கற்றுத் தராமல் இருப்பதால் இப்பள்ளிகளைச் சுற்றி உள்ள பகுதியைச் சார்ந்தவர்களும் இப்பள்ளிகளி்ல் சேர்ந்தால் பெருமை எனக் கருதுபவர்களும் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளிகளில் சேர்த்துத் தமிழ் அறியாத் தலைமுறைகளை உருவாக்கி வருகின்றனர். தமிழால் ஆட்சிக்கு வந்தவர்களும் தமிழின் நிலையைஉணர்ந்தும் உணராமல், தலைமை நிலைக்கு வரவேண்டிய தாய்மொழியைத் தாய்நாட்டிலிருந்தே துரத்தும் நிலைக்கு உடன்பட்டுள்ளனர். மக்களுக்கும் தமிழ்த்தேசிய உணர்வின்மையால் கல்வி பற்றிய அடிப்படை உணர்வினை இழந்து அயல் மொழிகளுக்கு அடிமைப்பட்டு உள்ளனர். எனவே, தமிழ்மொழிக்கல்வியையும்தமிழ்வழிக்கல்வியின் தேவையையும் உணராமல் உள்ளனர். தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் இருக்க வேண்டுமாயின் அடிப்படை நிலையில் இருந்து உச்ச நிலை வரை அனைத்து இடங்களிலும் தமிழே கல்வி மொழியாக இருத்தல் வேண்டும்.
கல்வியைப்பற்றிக் காணும் நாம் கல்வி தரும் நிலையங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் பார்க்க வேண்டும். 29/09/12 அன்று ‘கல்வி அரசு பள்ளி வழியா? தனியார் பள்ளி வழியா?’ என்ற தலைப்பில் உரை நிகழ்ந்துள்ளது. எனவே, இது குறித்தும் காண வேண்டும்.
கல்வி என்பது அடிப்படை உரிமையாகும். அரசுகளின் முதல் கடமையே அனைவருக்கும் கல்வியளித்தலே. எனவேதான் பாரதியார்,
“இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல், இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்“
என ஏழைக்கு எழுத்தறிவித்தலைச் சிறந்த செயலாகக் கூறினார்.
“கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்
கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்.” (பாண்டியன்பரிசு இயல் 56)என்னும் பாரதிதாசன் வாக்கிற்கு இணங்க யாருக்குத் தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி நல்கா ஆட்சியாளருக்கா? செயல்படுத்தா அதிகாரிகளுக்கா? கல்விச்சூழலை உருவாக்காத செல்வர்களுக்கா? என எண்ணிச் செயல்பட்டால் அனைவருக்கும் தரமான கல்வி கிட்டும்.
அரசே அனைத்துக் கல்விக் கூடங்களையும் நடத்திட இயலுமா? தனியாரிடம் ஒப்படைக்கலாமா? கல்வி முழுவதும் தனியாரிடம் இருக்க வேண்டுமா? முழுமையும் அரசின் பொறுப்பில் இருக்கவேண்டுமா? இரு தரப்பாரிடமும் இருக்க வேண்டுமா? என்பனவெல்லாம் ஆய்விற்குரியனவாக உள்ளன.
“கல்வி அரசு பள்ளி வழியா? தனியார் பள்ளி வழியா?” என எண்ணுவதைவிடக், கல்வி எவ் வழியில் இருக்க வேண்டும் என எண்ணுவதே சிறப்பாகும். தனியார் பள்ளி என்பன பணம் பறிக்கும் இயந்திரங்களாகத்தான் செயல்படுகின்றன. எனவே, அதனை ஒரு வழியாக எண்ணக்கூடாது. அப்படியானால் அரசு பள்ளி வழிதான் ஏற்றதா என எண்ணக்கூடாது. தனியார் பள்ளிகள் செழிப்புடன் செயல்படுகின்றன. அரசு பள்ளிகள் ஏழ்மை நிலையில் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு வினா எழுப்பப்பட்டிருக்கலாம். பள்ளி என்று மட்டும் பார்க்காமல் தனியார் பொறியியல் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் முதலானவற்றையும் கருத்தில் கொண்டு மழலைக் கல்வி முதல் ஆய்வுநிலைக் கல்வி வரை, கல்வி அரசு வழியா? தனியார் வழி முறையா? என எண்ணிப் பார்க்கலாம்.
கல்வி அளிக்க வேண்டியதன் முழுப்பொறுப்பும் அரசையே சாரும் எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் பின்வருமாறு கூறுகிறார்:
நாட்டு மக்களுக்குக் கல்வியளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். அரசு தனக்குரிய கடனைத் தனிப்பட்டவரிடம் ஒப்படைத்துள்ளது. கல்வி றிலையங்களைத் தோற்றுவிப்பவர்களில் பலர் மக்களுக்குக் கல்வியறிவையூட்ட வேண்டுமென்ற உயர் நோக்கினைக் கொண்டுள்ளனர் என்று கூற இயலாது. விரைவில் மிகு உழைப்பின்றிப் பொருள் ஈட்டுவதற்குத் துணையாக கல்வி நிலையங்களைத் தோற்றுவித்து நடத்தலை மேற்கொள்கின்றனர்.
அதனால்தான் மாணவர் நலனையோ, ஆசிரியர் வசதியையோ, கல்வி முன்னேற்றத்தையோ கருதிப் பாராது கல்விக்கூடங்களை நடத்துகின்றனர். அருள்நோக்குடன் அனைவர்க்கும் கல்வியளிக்க வேண்டிய நிலையங்கள் பொளீட்டும் வாணிக நிலையங்களாக மாறியுள்ளன. அமர்வதற்கு ஏற்ற இருக்கைகள் இல்லாதனவும், வகுப்பறைகட்குரிய தடுப்புகள் இல்லாதனவும், ஆசிரியர்க்குத் திங்கள் கணக்கில் ஊதியம் அளிக்காதனவும் ஆய கல்விக் கூடங்கள் பல உள. இக்கல்விக் கூடங்களைத் தொடங்கியுள்ளோர் இவற்றைத் தொடங்குவதற்கு முன் பெற்றிருந்த பொருள் நிலையும் தொடங்கிச் சில ஆண்டுகளில் பெற்றிருக்கும் பொருள் நிலையும் கணக்கெடுப்பின் பள்ளிக்கூடங்கள் எவ்வாறு வாணிக நிலையங்களாகப் பொருள் ஈட்டும் கூடங்களாகப் பயன்படுகின்றன என்பது தெள்ளிதிற் புலனாகும். ஆட்சியாளர்க்கு இவ்வவலநிலை தெரியாது என்று கூறுதல் பொருந்தாது. அறிந்தும் அறியாதவர் போல் இருக்கின்றனர் என்றுதான் கருத வேண்டியுள்ளது.
பயிற்சிப் பள்ளிக்கூடங்கள் பெரும் பொருளீட்டும் நிலையங்களாகப் பயன்படுத்தப்படுதல் நாடு அறிந்த ஒன்றாகும். ஆதலின் அதனையும் தனியாரிடமிருந்து எடுத்து அரசே நடத்துதல் வேண்டும்.
இவற்றுக்கு அரசே பொருட்கொடை நல்கி இவற்றை ஏற்று நடத்துவதனால் மிகு பொருட்செலவு ஏற்படாது. மக்களாட்சி மாண்புறவும் நல்ல குடிமக்கள் தோன்றவும் துணை புரியவல்லது. கல்வியாய் இருத்தலின் கல்விக்குச் செலவிடுவதைப் பற்றிக் கவலை கொள்ளல் நல்லரசுக்கு ஏற்றதன்று.
இன்று கலைக் கூடங்களில் பல கொலைக் கூடங்களாகவே உள்ளன; நற்கல்வி, உயர்பண்பு, நேர்மை, உடல்நலம், உளநலம் முதலியன வளர்க்கப்படாமல் அழிக்கப்படும் நிலையங்களாகவே உள்ளன எனின் மறுத்துரைப்பது எளிதன்று. ஆதலின் ஆட்சியாளர் கல்வித்துறையில் தனிநோக்குச் செலுத்தி உயர்கல்வியை மக்கட்கு அளிக்கும் தொண்டில் செம்மை பெற வேண்டுகின்றோம்.{குறள் நெறி மலர் : 1 இதழ் 7 தி.வ.ஆண்டு 1995 சித்திரை (15.4.1964)]
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்