Saturday, May 9, 2026

கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு: 1. இலக்குவனார் திருவள்ளுவன்



இன்றைய ஆய்விற்குரிய நூல், ‘சிவகங்கை இராமச்சந்திரனார்‘ என்பதாகும். கொடைக்கானல் காந்தியால் எழுதப் பெற்றது இந்நூல்.

இந்நூல் வரலாற்றின் வாயில், அரசியல் வரலாறு, தலைவர்களின் தலைவர், கொள்கை குணம் கோட்பாடு என்னும் 4 பிரிவுகளில் மொத்தம் 43 தலைப்புகளில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் எழுவரின் அணிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.

முதல் கட்டுரையான சூரியவனத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிவகங்கைஇராமச்சந்திரனார் பற்றிய கருத்தினக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது கட்டுரை தலைமுறை வரலாறு; மூன்றாவது கட்டுரை வரலாற்றின் வரலாறு; நான்காம் கட்டுரை வணக்கத்திற்குரிய வாயில் காப்போன்; ஐந்தாவது கட்டுரை சாதனையாளர் சரிதை

ஆறாவது கட்டுரை ஆறு சிலேட்டுகள்  ஆறு சேலைகள்; ஏழாவது கட்டுரை மருமகளின் மறுபார்வையில்; எட்டாவது கட்டுரை திராவிடத் தீர்மானங்கள்; ஒன்பதாம் கட்டுரை இராமச்சந்திரனார் பேசுகிறார்; பத்தாவது கட்டுரை எப்படித் தோன்றினார் இராமச்சந்திரனார்;

பதினொன்றாவது கட்டுரை மாவீரர் கண்ட மாநாடுகள்; பன்னிரண்டாம் கட்டுரை கொள்கை அரசர் கணட குடியரசு; பதின்மூன்றாவது கட்டுரை வகுப்புரிமை பற்றி வ.உ.சியார்; பதினான்காவது கட்டுரை சிவகங்கைச் சூரியனின் தொலைநோக்கு; பதினைந்தாம் கட்டுரை தலைமுறைத் தலைவர்கள்;

பதினாறாம் கட்டுரை பெரியாரின் உறவினர்; பதினேழாம் கட்டுரை புத்தரும் புனிதரும்; பதினெட்டாம் கட்டுரை அண்ணாவின் வைர விழுது; பத்தொன்பதாம் கட்டுரை கலைஞர் போற்றிய இனக்காவலர்; இருபதாம் கட்டுரை இராமச்சந்திரன் முதல் இராமச்சந்திரன் வரை;

21 ஆவது  கட்டுரை புரட்சித்தலைவியின் புகழுரை; 22 ஆவது  கட்டுரை  பேராசிரியர் போற்றுகிறார்; 23 ஆவது  கட்டுரை  மதுரை முத்துவின் மனத்தலைவர்; 24 ஆவது  கட்டுரை  தளபதிகளின் தலைவர்; 25  ஆவது  கட்டுரை அன்பிலின் அன்பிற்குரியவர்; 26 ஆவது  கட்டுரை  நாவலர் போற்றிய நல்லவர்; 27 ஆவது  கட்டுரை  இலட்சியம் முழங்கியது; 28 ஆவது  கட்டுரை  புதையலில் பூத்தது; 29  ஆவது  கட்டுரை சீவாவின் சீவன்; 30  ஆவது  கட்டுரை அறிஞர்கள் பேசுகிறார்கள்

; 31  ஆவது  கட்டுரை  இராமச்சந்திரன் மகன் இராமச்சந்திரன்; 32 ஆவது  கட்டுரை   தாழ்த்தப்பட முடியாத தன்மான வீரர்; 33 ஆவது  கட்டுரை  பதவிகளா? போராட்டங்களா?; 34 ஆவது  கட்டுரை  தமிழும் இராமச்சந்தினாரும்; 35  ஆவது  கட்டுரை இராமச்சந்திரனார் இறந்திருக்க வேண்டுமா?;

36   குடிகளும் அழுதனர் குடியரசும் அழுதது; 37 ஆவது  கட்டுரை   ஒரு சிந்தனையாளரின் மாணவர்கள்; 38 ஆவது  கட்டுரை  ஒரு நூற்றாண்டை மட்டும் ஓரங்கட்டலாமா?; 39 ஆவது  கட்டுரை   நினைவு இல்லம் வேண்டும்; 40  ஆவது  கட்டுரை மனித நேய உயரம் தொட்டவர்;

41 ஆவது  கட்டுரை  இராமச்சந்திரனார் எனும் போராளி; 42 ஆவது  கட்டுரை   ஏன் எழுதினேன்?; 43 ஆவது  கட்டுரை  இராமச்சந்திரனார் மரபு;

2005 இல் முதற்பதிப்பாக வெளிந்துள்ள  இந்நூலில், கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், ஆசிரியர் கி.வீரமணி, வைகோ, காவல்துறைத்தலைவர் தி.இராதாகிருடடிணன், வழக்குரைஞர் இரா.நீதிச்செல்வன், வழக்குரைஞர் இந்திரசித்து ஆகியோரின் அணிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.

இந்நூலில் ஆங்காங்கே சிவகங்கை இராமச்சந்தினாரின் கருத்துகளையும் பிறர் அவரைப்பற்றிக் கூறிய கருத்துகளையும் தந்துள்ளார். முதல் கட்டுரையான சூரிய வனத்தில் பேரறிஞர் அண்ணா இவர்பற்றிக் கூறியதைப் பின்வருமாறு தந்துள்ளார்.

“தோழர் இராமச்சந்திரன் எனது வலது கரம். என்று தந்தை பெரியாரும் சுயமரியாதைத் தீபம் ஏந்தும் படையின் தளபதி எனத் தொண்டர்களும் இவரைப்போற்றி வந்தனர்.”

மாமன்னரின் வழி முறையினரான பெரிய கருப்பன் அவர்களின் புதல்வர் மானங்காத்த சுப்பிரமணியன். சிவகங்கை அரசில் காப்பாளராகப் பணியாற்றி வந்த இவர், ஒரு சமயம் அரசன் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றிருந்த போது அரண்மனைக் காவலுக்கு யாருமில்லாத நிலை இருந்தது. அப்போது, பகைவர்கள் தாக்க வந்தனர். சுப்பிரமணியம் ஒற்றை ஆளாக இருந்து அனைவரையும விரட்டி அடித்தார் அதனால் மானங்காத்த சுப்பிரமணியம் என்ற அழைக்கப் பெற்றார்.  அரசரும் இவருக்கு ஆத்திக்காடு தெக்கூரைச் சுற்றியுள்ள நிலத்தில் நான்கில் ஒரு பகுதியைப் பரிசாக அளித்தார்.

ஒரு சமயம் இவர் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, புலி ஒன்று இவரைத் தா்கியது. அதனால் குடல் சரிந்து விழுந்தார்.இருந்தும் மனநிலை தளராமல்,ஒரு கையால் குடலை வயிற்றில் தள்ளிக் கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் வேலெடுத்துப் புல்யைக் குத்திக் கொன்றார். இப்பெரு வீரத்தால் இவரைப் புலி குத்திய சுப்பிரமணியம் என்று அனைவரும் அழைத்தனர். அவரின் வழித்தோன்றலே இராமச்சந்திரன்.

சிவகங்கைச் சூரியன், சிவகங்கைச் சிங்கம், சுயமரியாதைச் சிங்கம், சுயமரியாதைச் சுடரொளி, சேர்வையார் என்று பலவாறாக மக்களால் அழைக்கப்பெறுபவர் இராமச்சந்திரனார் என ‘வரலாற்றின் வரலாறு’ என்னும் மூன்றாவது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் இவர் ஆற்றிய தலைமையுரையை வழங்கியுள்ளார். ‘வணக்கத்திற்குரிய வாயில் காப்போன்’ என்னும் நான்காம் கட்டுரையில் இவரின் சிறப்புகள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

இராமநாதபுரத் தேவத்தானக் குழுவின் தலைவராக இருந்த இவர் 08.08.1930 அன்று நடைபெற்ற கூட்டத்தில்,

அனைவருக்கும் ஆலய நுழைவுரிமை

தேவதாசிகளால் மேற்கொள்ளப்படும் அனைத்து ஊழியங்களையும் நிறுத்துதுல்

குளம், பள்ளி, சாலை ஆகியவற்றில் சாதியின் பெயரால்  தடை செய்யாமை

முதலிய தீர்மானங்களை நிறை வேற்றிச் செயற்படுத்தினார்.

அப்பொழுது. ஒதுக்கப்பட்ட நாடார் குலத்தைச் சேர்ந்த சு.ஆ.முத்துநாடார் என்பவரை உறுப்பினராக்கப் பரிந்துரைத்தார். ஆனால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இன்மையால் இயலாது போயிற்று. உடன் விருதுநர் பெ.சி.சிதம்பர நாடார் என்பவரை உறுப்பினராக்கினார். இவ்வாறு ஒடுக்கப்பட்டவர்களையும் ஒதுக்கப்பட்டவர்களையும் கோயிலுக்குள் உரிமையுடன் நுழையச் செய்த செபருமைக்குரி்யவர் இராமச்சந்திரனார் என்பதை விளக்கியுள்ளார்.

Thursday, May 7, 2026

சட்டச் சொற்கள் விளக்கம் 1056-1060: இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055 தொடர்ச்சி)

1056. Appropriate allocation     உரிய ஒதுக்கீடு
உரியவாறு ஒதுக்கீடு செய்தல்


சட்டப்பணிகள் ஆளாண்மைச் சட்டம்1987, பிரிவு 4இல்(S. 4(c) LSAA,1987 – Section 4 in The Legal Services Authorities Act, 1987) தம் முடிவிற்கேற்ப நிதிகளைப் பயன்படுத்தவும் மாநில அதிகாரர்களுக்கும் மாவட்ட அதிகாரர்களுக்கும் உரியவாறு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

authority என்பது அதிகாரம் உள்ள அமைப்பு. அதிகாரி என்றும் குறிப்பிடுவர். அதிகாரம் உள்ள ஆளை அதிகாரன் என்று முன்னர்க் குறிப்பிட்டுள்ளனர். அதிகாரம் உள்ளவர்களைக் குறிப்பதாயின் அதிகாரர்கள் எனலாம். அதிகாரம் உள்ள ஆளுமை அமைப்பைக் குறிப்பதாயின் ஆளாண்மை எனலாம்.
1057. Appropriate authorityஉரிய ஆளாண்மை
உரிய அதிகார அமைப்பு
உரிய அதிகாரி


உரிய அதிகாரன் ஊர், நகரம், அல்லது நாட்டின் ஆளுகைக் குழுவே தக்க ஆளாண்மையாகும்.  
விதிமீறல் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அதிகாரம் மிக்க அமைப்பு இதன் தொடர்பில் தக்க ஆளாண்மையாகும்.
காண்க: Appropriate
1058. Appropriate case   பொருத்தமான வழக்கு
உரிய நேர்வு
தக்க நேர்வு
உகந்த நேர்வு  

வாதுரையின் பொழுது முன் நிகழ்வைக் குறிப்பதாயின் பொருத்தமான வழக்கையே குறிப்பிட வேண்டும். தொடர்பில்லாத வழக்கைக் குறிப்பின் நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

காண்க: Appropriate
1059. Appropriate forum  தக்க அமைப்பு
உரிய அமைப்பு
உகந்த அமைப்பு


அதிகாரம் செலுத்துவதற்குரிய அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குரிய அல்லது நிதியைப் பயன்படுத்துவதற்குரிய அல்லது வழக்கைத் தொடுப்பதற்குரிய அல்லது வழக்கை எதிர்கொள்வதற்குரிய தக்க அமைப்பு.
1060. Appropriate government   உரிய அரசு

ஒரு நாட்டை அல்லது மாநிலத்தை ஆளுவதற்கு முறைப்படியான அதிகாரம் படைத்த அரசு.

மரணத்தண்டனையைச் செயற்படுத்துவதற்கு அல்லது மரணத்தண்டனைய மன்னித்துக் குற்றவாளியின் தண்டனையைக் குறைப்பதற்கு அல்லது நீக்கி விடுதலை செய்வதற்கு அல்லது பிற தண்டனைகளை மாற்றுவதற்கு அல்லது நீக்குவதற்கு அதிகாரம் உள்ள அரசு

Wednesday, May 6, 2026

தமிழை முன்னிலைப்படுத்தும் விசய்! – இலக்குவனார் திருவள்ளுவன்



நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வாகைசூடி அருந்திறல் புரிந்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விசய்.

அவருக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அகரமுதல மின்னிதழ் சார்பாகவும் தமிழ்க் காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பர்களால் தளபதி என அழைக்கப்பெறும் விசய், கட்சி தொடங்கிய ஈராண்டுகள் இரு திங்களிலேயே ஆட்சிக் கட்டிலில் ஏறும் அருவினை புரிந்துள்ளார்.

பெரும்பாலும் புதிய வேட்பாளர்களையே நிற்க வைத்து, வெற்றி கண்டுள்ளார். பண வலிமை, சாதி வலிமை முதலியவற்றை முறியடித்து வாகை சூடியுள்ளார்.

தமிழ்நாடு முழுமையும் பரப்புரை மேற்கொள்ளாமை, முதன்மைச் சிக்கல்கள் குறித்து வாய் திறவாமை முதலான குறைகளை அவர்மீது சுமத்தினர். இருந்தும் அமைதியாக அதனைப் புறந்தள்ளி விட்டார்.

இதனால் அவரது ஆதரவு குறையும் என்று தேர்தல் ஆர்வலர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தன்னம்பிகையை மட்டும் கைக்கொண்டு தன்பாணியில் செயற்பட்டார்; தன்னம்பிக்கை அவருக்கு வெற்றி மாலை சூட்டியுள்ளது.

த.வெ.க. தேர்தல் அறிக்கை திருக்குறளில் உள்ள அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக விசய் குறிப்பிட்டார்.

திருக்குறள் அடியான “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை முழக்கமாக வைத்துள்ள அவர் தமிழ் நலன் சார்ந்தே செயற்படுவார் என எதிர்பார்க்கலாம்.

கொள்கைப் பாடல், கொடிப் பாடல், உறுதிமொழி என எதுவாக இருந்தாலும் தமிழ் உணர்வைத்தான் மையமாக வைத்துள்ளார்.

கட்சிப்பெயரில் திராவிடத்தை இல்லாமல் ஆக்கித் தமிழகத்தை முதன்மைப்படுத்தியது உண்மையிலேயே தமிழ் முனைப்பு நோக்கத்தால்தான் என உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் குமுகாய நீதி போன்றவற்றில் ஆரியத்திற்கு எதிரான திராவிடமே தேவை என்பதைத் தீண்டாமை, பகுத்தறிவு தொடர்பான தீர்மானங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழி, வழிபாட்டு மொழி என்பது உறுதி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க, உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்;

தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சிக் கல்வி வரை கற்கலாம் என்பதும், தமிழ்வழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் உறுதி செய்யப்படும்;

உலகத் தொடர்பிற்காக ஆங்கிலத்தை இரண்டாவதாக ஏற்கும் தமிழ்நாட்டின் மீது மூன்றாவது மொழியாக இந்தியையும் சமற்கிருதத்தையும் திணிக்கும் ஒன்றிய பா.ச.க. அரசின் சூழ்ச்சியைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் ஏற்காது; எனவும் அறிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் சிக்கலுக்குப் பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு எல்லாவகையிலும் தமிழ்மொழி, தமிழ் இன, தமிழ்நலச் சிந்தனையே த.வெ.கழகத்தின் வெளிப்பாடாக உள்ளது.

இவற்றைச் சிறப்பாகச் செயற்படுத்த வேண்டும். தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டவற்றைத் தொய்வின்றி மக்கள் பயனுறும் வண்ணம் செயற்பட வேண்டும். 

தமிழுக்குச் செய்யவேண்டியவை பல உள்ளன. தமிழ் தொடர்பான எந்த அமைப்பைத் தோற்றுவித்தாலும் தமிழர் அல்லாதவரை அமர்த்துவது அல்லது தமிழுணர்வற்றவர் பொறுப்பில் ஒப்படைப்பது அல்லது தமிழறிவில்லாதவருக்கு வாய்ப்பளிப்பது என்பதே அரசின் கொள்கையாக இருந்துள்ளது. இதனை மாற்ற வேண்டும்.

மு.க.தாலின் ஆட்சியும் நிறைகளும் குறைகளும் கொண்டதுதான்.

(திருக்குறள், ௫௱௪ – 504) என்கிறார் திருவள்ளுவர்.

அவ்வாறு பார்த்தால் மக்கள் பாராட்டும்படிதான் ஆட்சி நடத்தினார். எனினும் அரசிற்கு நெருக்கமாகவும் மக்களுக்குத் தொலைவாகவும் உள்ள அதிகாரிகளால் மக்கள் ஆளுங்கட்சியிடமிருந்து விலகினர்.

செயலில் மந்தம் போன்றவற்றால் மக்களுக்கு ஆட்சியாளர் மீது வெறுப்பும் வரலாயிற்று. பொதுவாக ஒருவர் தி.மு.க. ஆதரவாளராக இருந்தால் அவர் குடும்பத்தினரும் அவ்வாறுதான் இருப்பர்.

ஆனால், இப்போது  உதயசூரியனை ஆதரிப்பவர் உதயசூரியனுக்கு வாக்களித்தாலும் அவர் குடும்பத்தினர் ஊதலுக்கு வாக்கு பதியும் நிலை ஏற்பட்டது.

எனவேதான், தி.மு.க. தோல்வியுறும் என்று கருதியவர்களும் அதிர்ச்சியாகும் வகையில் பெரும் தோல்வியைக் கண்டது.

தமிழ்நாட்டு நலனுக்கு எதிரான பா.ச.க. வரக்கூடாது எனத் தி.மு.க. கருதியவாறே பாசக மாபெரும் தோல்வியடைந்து ஒரே ஒரு தொகுதியில்மட்டும் வெற்றி பெற்றது.

ஆனால் முதல்வர் மு.க.தாலினே வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலை வந்து விட்டது. பெருந்தலைவர்களுக் கெல்லாம் தோல்வியையும் பரிசாக அளிப்பது மக்கள் வழக்கம் என்பதால் அவர் இதனை இயல்பாக எடுத்துக் கொண்டு தம் பணியைத் தொடர்வது பாராட்டிற்குரியது.

இப்பொழுது நாம் த.வெ.க. ஆட்சியமைப்பது குறித்தும் பார்க்க வேண்டும்.

த.வெ.க.விற்கு 108 ச.ம.உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அதன் தலைவர் தாம் வென்ற இரு தொகுதிகளில் ஒன்றிலிருந்து பதவி விலகும் பொழுது ஆட்சியமைப்பதற்குத் தேவையான எண்ணிக்கை 11 ஆகிவிடும்.

இப்பொழுது பேராயக் கட்சி (காங்கிரசு) ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது. காரணம் என்னவாக இருந்தபோதிலும் பா.ச.க. படுகுழியில் த.வெ.க.விழாமல் காக்கும் அரணாக இதை எண்ண வேண்டும்.

இதேபோல் தி.மு.க.வின் பிற தோழமைக் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க, தி.மு.க. கூட்டணித் தலைவர் தாலின் இசைய வேண்டும். இல்லையேல், போதிய எண்ணிக்கை இல்லை எனச் சொல்லிக் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழி வகுத்து விட்டுப் பின்னர் ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லி நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் நடத்தலாம் எனப் பாசக திட்டமிடலாம்.

எப்பொழுதும் திராவிடக் கட்சிதான் தமிழ்நாட்டை ஆளும் என தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சித் தலைவர்களும் சொல்லி வந்துள்ளனர்.

எனவே, இவ்விரு கட்சிகளுமே இணைந்து ஆட்சியை அமைக்கலாம். இதற்கு எதிராக யார் என்ன கூறினாலும் பொருட்படுத்தாமல் பாசகவிடமிருந்து தமிழ்நாட்டைக் காக்க இம்முடிவிற்கு வருவது நல்லது எனத் தெரிவிக்கின்றோம்.

இப்போக்கு எவ்வாறு இருப்பினும் குறைந்த காலத்தில் நிறைந்த வெற்றி பெற்றுள்ள த.வெ.க.தலைவர் விசய்க்குப் பாராடடுகளையும் ஆட்சியமைக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday, May 5, 2026

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33: பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன்



(மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!: சங்கப் புலவர்கள் பொன்னுரை – 32  – தொடர்ச்சி)

***

தீது=தீமைகள்; சேண்=தொலைவில்; இகந்து=ஒதுக்கி (தீமைகளை இல்லாமல் ஆக்கி); நன்று=நன்மைகளை; மிகப் புரிந்து=மிகுதியாகச் செய்து;

கடலும் கானமும்=கடல் சார்ந்த இடங்களும் (நெய்தல்), காடு சார்ந்த இடங்களும் (முல்லை/குறிஞ்சி); பலபயம் உதவப்=(மீன், முத்து, விறகு, தேன் போன்ற) பல்வேறு பயன்களைத் தந்து உதவ;

பிறர் பிறர் நலியாது=பிறரை வருத்தவோ, துன்புறுத்தவோ செய்யாமல்; வேற்றுப்பொருள்=மற்றவரின் பொருளுக்கு; வெஃகாது=ஆசைப் படாமல்;

மை இல்=குற்றமற்ற; அறிவினர்=அறிவுடையவர்கள் / தூய அறிஞர்கள்; செவ்விதின்=நல்வழியில்;நேர்மையாக; நடந்து=நடந்து கொண்டு; தம்=தங்களின்;

அமர்துணைப்=அன்பிற்குரிய வாழ்க்கைத் துணையை; பிரியாது=பிரியாமல்; பாத்து=பகுத்து; உண்டு=உண்டு; மூத்த=முதுமையுற்ற; யாக்கையொடு=உடலோடு;

பிணி இன்று=நோய் இன்றி: கழிய = வாணாள் கடந்து செல்லும் வகையில் உயிர் வாழ்க.

தீமைகளெல்லாவற்றையும் நம்மை நெருங்காதபடிக்கு நீக்கி, நன்மையான வற்றையே மிகுதியாக ஆற்றி, நெய்தல், முல்லை, குறிஞ்சி, நிலப்பகுதிகளில் இருந்து கிடைக்கும் மீன், முத்து, விறகு, தேன் போன்ற பல்வேறு பயன்களைத் தந்து உதவ,

நாட்டு மக்கள் எல்லாரும் பிறரை வருத்தாமலும், பிறருக்கு உரித்தான பொருளைத் தாம் விரும்பாமலும் குற்றமல்லாத தூய அறிவுடைய வராகச் செவ்வையாக நடப்பவர்களாய்த், தம்பால் அன்பு செய்து வாழ்கின்ற துணைவரைப் பிரியாமல்,

தம்மை நாடி வந்தோருக்குத் தம்மிடமுள்ளதைப் பகுத்து உண்டு, முதுமை பெற்ற யாக்கையும் நோயும் இல்லாதவராய்த் தம் வாழ்நாளைக் கழித்திடுக.

பல்யானைச் செல்கெழு குட்டுவனின் முன்னோர் அறநெறி பிழையாது ஆட்சிச் சக்கரம் தடையின்றி உருளும் வகையில் ஊழி ஊழியாக நல்லாட்சி புரிந்துவந்தனர்.

அவர்களின் ஆட்சியில் தீமைகள் விலக்கப்பட்டன. நல்லனவற்றை மிகுதியாக ஆற்றினர்.

கடல் வளமும், மலைக் காட்டு வளமும் உறுதுணையாக உதவ நல்லாட்சி புரிந்தனர்.

நாட்டில் யாரும் எவரையும் துன்புறுத்தாவண்ணம் பார்த்துக்கொண்டனர். மக்களும் மாற்றாரின் பொருளை விரும்பாமல் வாழ்ந்தனர்.

குற்றமற்ற அறிவுடையவர்களாய் நல்வழி பிறழாமல் வாழ்ந்து வந்தனர். தம் மீது விருப்பம் கொண்டவர்களைப் பிரியாமல் அவர்களுக்கு உறுதுணையாக வாழ்ந்து வந்தனர்.

தாம் பெற்ற உணவுப் பொருள்களைப் பிறருக்குப் பகுத்துத் தந்து உண்டு மகிழ்ந்தனர்.

இதனால் முதிர்ந்த யாக்கையோடு பிணி இன்றி ஊழி ஊழியாக வாழ்ந்தனர்.

இவ்வாறு புலவர், பல்யானைச் செல்கெழு குட்டுவனின் முன்னோரின் செம்மையான ஆட்சித்திறம் குறித்துக் கூறுகிறார்.

இவ்வாறு நெடுங்காலம் ஆட்சி செலுத்திய, அறிவும் ஆற்றலுமுடைய பேரரசர்களின் வழித்தோன்றல் எனப் புலவர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு பேரரசர்களின் சிறப்பைக் கூறுவதன் மூலம் மக்களும் தீமை புரியாமல் நன்மை ஆற்றி, பகுத்துண்டு, நோயின்றி நெடுங்காலம் வாழ வேண்டும் என வலியுறுத்துகிறார்.

தமிழ் நெறியை வழி வழி வந்த புலவர்கள் வழியில் பாரதியாரும்,

என்கிறார்.

(திருவள்ளுவர், ௨௱௨௰௭ – 227)

குறள் மூலம் திருவள்ளுவர், பகுத்து உண்பவனைப் பசிப்பிணி தீண்டலரிது என்கிறார்.

(திருக்குறள், ௩௱௨௰௨ – 322)

என்னும் குறள் மூலம் திருவள்ளுவர் பகுத்துண்ணுதல் நூலோர் அறமாகச் சொல்வனவற்றுள் எல்லாம் தலைசிறந்த அறம் என்கிறார்.

வள்ளலார் முருகக் கடவுளிடம், “நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்” என வேண்டுகிறார்.

இப்பாடலில் சங்கப்புலவர் பாலைக் கௌதமனார் கூறிய பொன்னுரைகள் காலந்தோறும் வழி வழியே போற்றப்படுகின்றன என்பதை உணரலாம்.

நாமும்,

தாய், 05.05.2026   

Followers

Blog Archive