Monday, February 2, 2026

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05: இலக்குவனார் திருவள்ளுவன்

      03 February 2026      கரமுதல



(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 04: தொடர்ச்சி)

இந்நூற்பா மட்டுமல்ல, மற்றொரு நூற்பா மூலம் தமிழர் உலகிலேயே முதன்முறையாகத் திருமணப் பதிவு முறையைப் பின்பற்றி உள்ளனர் என்பதையும் நாம் அறியலாம். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார்.

  திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1791இலும்   உருசியப் புரட்சியினால் உருசியாவில் 1917இலும் திருமணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் திருமணப் பதிவைக் கட்டாயமாக்கினாலும் பல நாடுகளில் அதற்கென எச்சட்டமும் இல்லாமல் இருந்தது. 1964இல் ஐ.நா. இதற்கெனக் கூட்டிய மாநாட்டில் எல்லா நாடுகளும் திருமணப் பதிவினைக் கட்டாயமாக்க வேண்டும் என அறிவுறுத்தியது. அப்பொழுதும் பல நாடுகள் நடைமுறைப் படுத்தாமல் 1979இல் மீண்டும் ஐ.நா. கூடித் திருமணப் பதிவைக் கட்டாயமாக்குமாறு அறிவுறுத்தியது.

  ஆனால், தமிழ்நாட்டில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமணத்தைப் பதிவு செய்யும் நடைமுறை இருந்துள்ளது. வாழ்வியல் அறிஞர் தொல்காப்பியர் திருமண முறையைக்

கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே                     (நூற்பா 1088)

என்கிறார்.

(கிழவன் – உரியோன். தலைவன். கிழத்தி – உரியோள், தலைவி.)

  (தலைவன் தலைவியைக் கொள்ளுவதற்குரிய முறைமைப்படி கொடுப்பதற்குரியவர் கொடுப்பக் கரணத்துடன் பெற்றுக் கொள்வதாகும்.) கரணம் என்பது எழுதிப் பதிவு செய்வதைக் குறிப்பது எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் குறிப்பிடுகிறார். இப்பொழுது திருமணத்தை உறுதி செய்யும் வெற்றிலை பாக்கு மாற்றும் நிகழ்ச்சியை மணவோலை எழுதுதல் என்பர். இவ்வாறு எழுதி உறுதிப்படுத்தும் பழக்கமே பதிவு முறையாக மாறிற்று என்கிறார் அவர். தலைவனும் தலைவியும் இணைந்து வாழும் பொழுது பொய்யும் வழுவும் தோன்றி ஒருவரை மற்றொருவர் கைவிட்டுச் செல்லும் நிலையும் சில நேரங்களில் நிகழ்ந்துள்ளது. அதனைத் தடுப்பதற்குத்தான் ஊரறி நன்மணமாக அமைய வேண்டும் என்பதற்காகத் திருமணப் பதிவு முறை தோன்றியது என்பதையும் தொல்காப்பியர் விளக்குகிறார்.

  சிற்றூர் ஆட்சி அலுவலர் (V.A.O.) என இப்போது அழைக்கப்படுவோர் பணியாற்றும் முன்னர் நம் நாட்டில் கடந்த நூற்றாண்டு வரை இப்பணியை ஆற்றி வந்தவர்களைக் கரணம் என்பர். ஊர்க்கணக்கு எழுதும் கணக்குப்பிள்ளைகளாகப் பணியாற்றியோர் அனைவரும் கரணம் என அழைக்கப்படுவதில் இருந்தே முறையாக எழுதி வைப்பதைக் குறிப்பதே கரணம் எனலாம். ஆகவே இன்னாருக்கு இன்னார் வாழ்க்கைத் துணை என எழுதிப் பதியும் முறை கரணம் எனப்பட்டது எனலாம் என்பதைப் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்கியுள்ளார். வாழ்வியல் அறிஞர் தொல்காப்பியர் ‘என்ப’ எனக் குறிப்பதால் அவருக்கு முன்பே இவ்வாறு திருமணத்தைப் பதியும் முறை இருந்திருக்கிறது எனலாம்.

 கடந்த நூற்றாண்டில்கூடச் சில நாடுகள் திருமணப் பதிவை மேற்கொள்ளாதபொழுது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருமணப் பதிவு முறையைத் தமிழர்கள் பின்பற்றி உள்ளனர் என்னும்பொழுது பைந்தமிழர் பதிவு அறிவியலையும் பாங்குடன் அறிந்திருந்தனர் என்று சொல்லிப் பெருமை கொள்ளலாம் அல்லவா? ஆனால், நம் வரலாறு அறியாமல் பூனையைப் பார்த்துத்தான் புலி பாய்ச்சலைக் கற்றுக் கொள்கிறது என்பதுபோல் பண்பாடுஅறியா ஆரியர் வந்துதான் தமிழருக்குத் திருமண முறையைக் கற்றுத் தந்தார்கள் என்போர் உயர் பதவிகளில் இருக்கும் பொழுது நாம் தமிழர் எனப் பெருமைப்படுவதில் என்ன இருக்கிறது?

(தொடரும்)

Sunday, February 1, 2026

சட்டச் சொற்கள் விளக்கம் 1031-1035 : இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ         02 February 2026      கரமுதல



(சட்டச் சொற்கள் விளக்கம் 1026-1030 : தொடர்ச்சி)

1031. Avert தடு விலக்கு  திசை திருப்பு; தவிர்த்தல் இன்னாத ஒன்றைத் தடு. விலக்கு அல்லது தடைசெய். ஒன்றிலிருந்து விலகுவது என்னும் பொருள் கொண்ட இலத்தீன் சொல்லில் இருந்து avert சொல் உருவானது. கடைசி நிமைய ஒப்பந்தத்தால் பெரும் சண்டை தவிர்க்கப்பட்டது போன்ற நேர்வுகளில் இச்சொல் கையாளப்படுகிறது.
1032. Aviation       வான் பயணம் வான்பயணவியல் வான் பறப்பியல் வானூர்திப்போக்குவரத்து வான் போக்குவரத்துச் சட்டம் என்பது விமானம், விமானப் பயணம், தொடர்புடைய சட்டம், தொடர்பான வணிகச் செயற்பாடுகளைப் பற்றிய வான்வழிப்பயணச் சட்டம் உள்ளது. இலத்தீன் சொல்லான  பறவை என்னும் பொருளில் உள்ள avis என்பதிலிருந்து  ஃபிரெஞ்சுச் சொல்லான  aviation உருவானது. இதிலிருந்து ஆங்கிலம் எடுத்துக் கொண்டது.
1033. Avocation   துணைத்தொழில் துணைத்தொழில் என்பது ஒருவர் வழக்கமாக ஈடுபடும் ஒரு செயற்பாடு, ஓய்வுநேர விருப்பார்வத் தொழில் அல்லது சிறிய ஈடுபாட்டைக் குறிக்கிறது, ஆனால் அது அவர்களின் முதன்மைத் தொழில், வணிகம் அல்லது செய் தொழிலிலிருந்து (profession)  வேறுபட்டது. பொதுவாக ஓய்வு நேரச் செயற்பாட்டைக் குறிக்கும்.
1034. Avoidவிலக்கு தவிர் சட்டமுறையான சூழலில், தவிர்ப்பு அல்லது தவிர்த்தல் என்பது ஓர் ஒப்பந்தம்,  அல்லது சட்டமுறையான கடமையை வெறுமனே விலக்கி வைப்பதை விட, முறையான, சட்டமுறையாக நீக்குதல், விலக்கி வைத்தல் அல்லது செல்லாததாக்குவதைக் குறிக்கிறது.
 1035.Avoidance of doubt      ஐயம்தவிர்ப்பதற்காக   ஐயத்தைத் தவிர்ப்பதற்காக" (FAOD- For the avoidance of doubt) என்பது ஒப்பந்தங்கள்,  சட்டங்களில் முந்தைய பிரிவின் குறிப்பிட்ட விளக்கத்தை தெளிவுபடுத்த, வலியுறுத்த அல்லது உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு சட்டமுறையிலான சொற்றொடராகும். இ ஃது எந்தத் தெளிவின்மையும் இல்லை என்பதை உறுதி செய்கிறது. ஏற்கெனவே உள்ள பொருளை மாற்றுவதற்கு மாற்றாக, உட்கிடையான பொருளை வெளிப்படையாகச் சொல்வதன் மூலம  எதிர்காலப் பூசல்களைத் தடுக்க இஃது ஒரு முன்னெச்சரிக்கை நடிவடிக்கையாகச் செயற் படுகிறது.

Saturday, January 31, 2026

மொழிப்போர் வரலாறு அறிவோம்! -12 : தமிழ்க்காப்பிற்காகவே இந்தியை எதிர்த்தனர் : இலக்குவனார் திருவள்ளுவன்



(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-11 : மொழிப்போரில் மகளிர் பங்களிப்பு – 2 : தொடரச்சி)

மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு  குறித்து, அதிலும் குறிப்பாக மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் குறித்து முந்தைய இதழ்களில் பார்த்தோம். 13.11.1938ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாடு குறித்த செய்தியையும் பார்த்தோம்.

இம் மாநாட்டில் மீனாம்பாள் சிவராசு தமிழ்மொழி,  தமிழ்ப் பண்பாட்டுக்காக மன உறுதியோடு போராட முன்வர வேண்டும் என்று பெண்களை வேண்டினார். இதுவே தமிழ் உணர்வுடன் தமிழுக்காக, உயிருக்கும் மேலாகத் தமிழைப் போற்றும் தமிழ் மக்கள் நலனுக்காக நடைபெற்ற போராட்டங்கள் என்பதை மெய்ப்பிக்கிறது.

அதற்குச் சான்றாக, இம் மாநாட்டின் பொழுது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம். பெரும்பான்மையான தீர்மானங்கள், தமிழ் மொழி சார்ந்தவையே ஆகும். தீர்மானங்கள் 100 ஆண்டுகளை எட்டும் பொழுதும் தீர்மானங்களாகவே உள்ள அவலம்தான் உள்ளது. மொழிப்போரில் துன்பங்களைத் துய்த்தும் சிறைப்பட்டும் மடிந்தும் போன பெண் போராளிகளின் ஈகங்களால் ஒரு பயனும் இல்லாமல் போகிறது.

ஆந்திரத் தலைநகராகச் சென்னையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையைகட கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது பெண்களின் தமிழுணர்விற்கு அடையாளம்.

சென்னை நகர வீதிகளுக்குத் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். ஆனால், சென்னையில் மட்டுமல்ல, பிற மாவட்டங்களிலும் தமிழ்ப்பெயர் இல்லாத தெருக்களைக் காணலாம்.

     ‘பீச்’, ‘ஃபோர்ட்டு’, ‘பார்க்’ என பெயரிடப்பட்டுள்ள தொடரி(இரயில்)நிலையங்களின் பெயர்களைத் தமிழில் மாற்ற வேண்டும் என்பது ஒரு தீர்மானம். 30 ஆண்டுகளுக்குப் பின்னர்த் தி.மு.க. ஆட்சி வந்த பின்னரே சில நிலையங்களின் பெயர்கள் தமிழிலும் குறிக்கப்பெற்றன. அவ்வாறு குறித்தாலும் ஆங்கிலப்பெயரே இந்தியில் குறிக்கப்பட்டுள்ளன. அஃதாவது கோட்டை எனத் தமிழில் இருந்தாலும் இந்தியில் ஃபோர்ட் என்பதே எழுதப்பட்டிருக்கும். என்றாலும் சில நிலையங்களில் மட்டும் விதி விலக்காகக் கடற்கரை என்பது இந்தியிலும கடற்கரை என்றே எழுதப்பெற்றுள்ளது போல் தமிழ்ப் பெயரே இந்தி எழுத்துகளில் எழுதப்பெற்றிருக்கும்.

நாணயங்களில் அவற்றின் மதிப்பைத் தமிழில் குறிக்க வேண்டும் என்னும் தீர்மானம் இன்னும் கனவாகவே உள்ளது.

மறுமணத்திற்கும் சாதிப்பாகுபாடுகளை ஒழித்துச் சாதியில்லா மன்பதை உருவாகக் கலப்புத் திருமணத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும் தீர்மானங்களும் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் இன்றைக்கும் கலப்புத் திருமணம் செய்வோர் சாதி வெறியர்களால் கொல்லப்படும் அநீதிதானே நாளும் அரங்கேறிக் கொண்டுள்ளது.

தமிழ்க்காப்பிற்காகத்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களே நடத்தப் பெற்றன. எனவே, பெண்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றதுடன் தமிழ் நலன் சார்ந்த முழக்கங்களை எழுப்பினர்; தொடர்பான தீர்மானங்களையும் நிறைவேற்றினர்.

மணவினைச் சடங்குகளையும் ஆடம்பரச் செலவுகளையும் விலக்கி வைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துத் தீர்மானம் இயற்றியுள்ளனர்.  ஆனால் நம்மை ஆதிக்கம் செய்ய முயலும் அயலவர் மொழியாகிய சமற்கிருதத்தில் மணவினைச் சடங்குகளையும் பிற சடங்குகளையும் செய்யும் போக்கே இன்றைக்கும் நிலவுகிறது. குடும்ப நிகழ்வுகளில் ஆடம்பரச் செலவுகளையும் மேற்கொண்டுதான் வருகின்றனர்.

ஒரு தீர்மானத்தின் மூலம் தமிழ் மாகாணத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று வேண்டியுள்ளனர்.

அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்ப்பாடம் என்பதை 2015-2016 ஆம் கல்வியாண்டிலிருந்துதான் அறிமுகப்படுத்தினர். அதுவும் ஒவ்வோர் ஆண்டாக ஒவ்வொரு வகுப்பாகத் தமிழ்மொழியை அறிமுகம் செய்தனர். அதுவரை தமிழ் இல்லாத இழிநிலை இருந்தது இதனால் துடைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் படைப்பள்ளி (சைனிக்குபள்ளி), இந்திய நிறுனச் செயலர்கள் பயிலகம்(icsi), மத்தியப்பள்ளிகள் (கேந்திரிய வித்தியாலயா) முதலியவற்றில் தமிழ் அண்மைக் காலங்களில் அறிமுகப்படுத்தாலும் அது ஏமாற்று வேலையே. சான்றாக மத்தியப் பள்ளிகளில் தமிழ் என்பது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு  வரை விருப்பப்பாடமாக இருக்கும். என்றாலும் 15 மாணாக்கர்கள் படிக்க முன்வந்தால்தான் தமிழ் மொழி ஒரு பாடமாக இருக்கும். தமிழாசிரியப் பணியிடங்கள் பகுதிநேரப் பணியிடங்களே. இவற்றின் மூலம் தமிழ் மொழி ஒரு பாடமாக உள்ளதாகக் கூறுவது ஏமாற்று வேலை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உரிமைகளுக்காகவும் கொள்கைகளுக்காகவும் அடக்கு முறைக்கும் ஒடுக்கு முறைக்கும் எதிராகவும் மக்கள் போராடும் பொழுது அவற்றைக் கொச்சைப்படுத்தி இழிவாகச் சொல்வதே ஆள்வோர் வழக்கமாக உள்ளது. அதுபோல், பெண்கள் தமிழ்க்காப்பு உணர்வில் சிறை சென்ற பொழுது, முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியாரே “குழந்தைகளுக்குப் பால் வாங்கக் காசில்லாமல் இந்தப் பெண்கள் போராட்டம் நடத்திக் குழந்தைகளோடு சிறைக்கு வருகின்றனர்” எனக் குறைகூறினார்.

பெண்களும் திரள் திரளாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘1938  முதல் மொழிப்போரில் பெண்கள்’ என்னும் நூலில் நூலாசிரியர் நிவேதிதா (உ)லூயிசு விவரித்திருப்பார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டுக் களப்பலி யான,  சிறைத்தண்டனை பெற்ற வீரப் பெண்களுக்கு நம் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்.

Thursday, January 29, 2026

குறட் கடலிற் சில துளிகள் 40 : பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ         29 January 2026      அகரமுதல



(குறட் கடலிற் சில துளிகள் 39 : தொடர்ச்சி)

பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க!

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

இன்னான் எனப்படுஞ் சொல்

 (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௩ – 453)

மாந்தர்க்கு அறிவு மனத்தினால் உண்டாகும். தான் சேர்ந்த இனத்தினால் இனியன் அல்லது இனியனல்லன் என்று பிறரால் சிறப்பிக்கப்படும் அல்லது பழிக்கப்படும் சொல் உண்டாகும்.

பதவுரை: மனத்தான் – மனத்தைப் பொறுத்து> மனம் காரணமாக; ஆம்-ஆகும்; மாந்தர்க்கு-மக்களுக்கு; உணர்ச்சி-அறிவு/உணர்வு; இனத்தான்-சேரும் இனத்தால்; ஆம்-ஆகும்; இன்னான்-இத்தகையவன்; எனப்படும்-என்று சொல்லப்படும்; சொல்- நிறை மதிப்பான அல்லது குறைமதிப்பான சொல்.

மக்களுக்கு இயற்கையறிவு அவர்களின் மனத்தால் ஏற்படும், இத்தகையவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், அவன் சேரும் இனத்தால் ஏற்படும்.

மனத்தின் தன்மைக்கேற்ப இயற்கை யறிவு அமைகிறது. ஆனால் நல்லவர்களுடன் சேர்ந்திருப்பவனை நல்லவன் என்றும் வஞ்சகர்களுடன் சேர்ந்திருப்பவனை வஞ்சகன் என்றும் மதிப்பிட்டுச் சொல்வர். 

வானிலிருந்து விழும் மழை நீர் அது விழும் நிலத்தின் மண்ணின் தன்மைக்கேற்ப நன்னீர் என்றும் உவர் நீர் என்றும் மாறிவிடுகிறது. மண்ணின் நிறத்திற்கேற்பவும் மழைநீர் நிறம் பெற்று, சிவப்பு அல்லது கருப்பு அலலது சாம்பல் அல்லது பிற நிறம பெற்று விடுகிறது. ஒருவன் இயல்பாக நல்லவனாக இருந்தாலும் சேர்க்கைக்கேற்ப நல்லவனாகவும் தீயவனாகவும் மாறி விடுகிறான். ஒருவனின் உயர்விற்கும் தாழ்விற்கும் காரணமாக அமைவது சேர்ந்துள்ள இனத்தால்தான். எனவேதான், சேரும் இனத்தால்தான் இத்தகையவள் என்று சொல்லப்படும் சொல் பிறரால் சொல்லப்டுகிறது.

கூடாநட்பின் தீமையை உணர்த்தவே திருக்குறளிலும் நாலடியாரிலும் தனி அதிகாரங்களே உள்ளன. “கூடா நட்பு கேடாய் முடியும்” என்பதால் கூடா நட்பு கொள்ளக்கூடாது. ஒரு வேளை கூடாநட்பு ஏற்பட்டாலும் அதனைக் கைவிட வேண்டும். சேரும் இனமே பிறரை மதிப்பிடச் செய்யும்!-

மனத்தால் அமைவது அறிவு! இனத்தால் வருவது பழிச்சொல்! பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க!

Wednesday, January 28, 2026

நாலடி நல்கும் நன்னெறி 23: பனைபோல் உயர்தன்மையுடையாரிடம் நட்பு கொள்க!: இலக்குவனார் திருவள்ளுவன்



(நாலடி நல்கும் நன்னெறி 22. அறிவில்லாதவனிடம் எதையும் சொல்லாதே! : தொடர்ச்சி)

கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர்; – தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு.

கருத்து: முதல், இடை, கடைநிலையில் உள்ள நட்பை உணர்ந்து பனைமரம்போன்று. தொடர்ந்து உதவாவிடினும் நட்புத்தன்மை குறையாதவரிடமே நட்பு கொள்ளல் வேண்டும்.

பதவுரை : கடையாயார் = கடைநிலையினர்;  நட்பில் = தோழமை உணர்வில்;  கமுகனையர் = கமுகு மரம்போன்ற தன்மையர்;  ஏனை = பிறர்;  இடையாயார் = இடைப்பட்ட நிலையினர்; தெங்கின் = தென்னைமரம் போன்ற;  அனையர் = தன்மையர்; தலையாயார் = முதன்மை நிலையினர்;  எண்ணரும் = எண்ணிப் பார்க்க இயலாத மதிப்பு மிக்க; பெண்ணை = பனைமரம்; போன்று = போன்ற;  இட்டஞான்று = விதையிட்ட பொழுது; இட்டதே= நீரிட்டதே போதும் எனக் கருதும்;   தொன்மை = பழைமைப் பண்புகள்; உடையார் = உடையவர்கள்;  தொடர்பு = நட்பு .

பாக்குமரம் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சினால் மட்டுமே பயன்தரும். அதுபோல், தொடர்ந்து உதவினால் மட்டுமே உதவுபவர் கடைப்பட்ட நண்பர்.

தென்னைமரத்திற்கு இடையிடையே  தண்ணீர் பாய்ச்சினாலும் பயன்தரும். அதுபோன்று உதவம் பொழுது மட்டும் நட்புத்தன்மையைக் கொள்பவர் இடைப்பட்ட நிலை நட்பினர்.

ஊன்றியபோது மட்டும் நீரூற்றிப் பின்னர் தண்ணீர் பாய்ச்சாமல் வளர்ந்து பயன்தருவது பனைமரம். பனைமரம் போன்ற தன்மையர் தலையாய நண்பர்.

அஃதாவது தொடர்ந்து உதவினால்தான் பயன்தரும் கமுகு மரம்போன்றவர் கீழோர். இடையிடையே கவனித்தால்தான் பயன்தரும் தென்னை மரம். இதுபோன்ற தன்மையர் இடைப்பட்டோர். விதையிட்டபொழுது மட்டும் தண்ணீர் ஊற்றினாலும் எப்போதும் பயன்தருவது பனை மரம். இத்தகைய தன்மையர் உயர்ந்த நட்பினர். கமுகிற்கும் தென்னைக்கும் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தி விட்டால் அவற்றின் பயன்கெடும். பனைமரம் அத்தன்மையதல்லை. விதையிட்ட பொழுது நீர் ஊற்றிப் பின்னர் கவனிக்காமல் விட்டாலும் பயன் தரும் சிறப்பிற்குரியது. எனவே, தொடர்ந்து உதவாவிட்டாலும் நட்புணர்வுடன் இருப்போரிடம் மட்டுமே நட்பு கொள்ள வேண்டும். நாமும் பனைமரம் போன்ற தன்மையராய் விளங்குதல் வேண்டும்.

பனை மரத்திற்கு விதை ஊன்றியபின் அல்லது பிறகு நீரூற்றல் முதலிய எதுவும செய்யாமையின்,  ‘இட்ட ஞான்றிட்டதே’ எனக் கூறப்பட்டது.

தொன்மை யுடையார் என்பதே பழைமை எனத் திருவள்ளுவரால் ஓர அதிகாரம்(எண் 81) வைக்கப்பெற்று உரைக்கபபட்டுள்ளது.

நாம் பனைமரம்போன்ற தலையாய தன்மையராய் நட்பு உணர்வுடன் திகழ்வோம்! அத்தகையோர் தொடர்பையே கைக்கொள்வோம்!

Monday, January 26, 2026

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 04: இலக்குவனார் திருவள்ளுவன்



(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 03 : தொடர்ச்சி)

பணமி ருந்தார் என்ப தற்காய்ப்

பணிந்தி டாத மேன்மையும்

பயமுறுத்தல் என்ப தற்கே

பயந்திடாத பான்மையும்

குணமி ருந்தார் யாவ ரேனும்

போற்று கின்ற கொள்கையும்

குற்ற முள்ளோர் யாரென் றாலும்

இடித்துக் கூறும் தீரமும்

இனமி ருந்தார் ஏழை யென்று

கைவி டாத ஏற்றமும்

இழிகு லத்தார் என்று சொல்லி

இகழ்த்தி டாமல் எவரையும்

மணமி குந்தே இனிமை மண்டும்

தமிழ்மொ ழியால் ஓதிநீ

மாநி லத்தில் எவருங் கண்டு

மகிழு மாறு சேவைசெய்.”வதே தமிழரின் பண்புகள்

என நாமக்கல்லார் விளக்கியது ஏட்டளவில் நின்றுவிட்டதே!

   குறுக்குவழியில் செல்வம் குவிக்கும் அரசியலாளர்களிடமும் அதிகாரிகளிடமும் அடிபணிந்து கிடப்பதே வாழ்வின் இலக்கு என்பதே இன்றைய போக்காக மாறிவிட்டதே! சாதி துறந்து காதலால் ஒன்றிணைவோர் உயிர்கள் பறிக்கப்படும் அவலம் ஓங்கும் பொழுது நாம் பெருமைப்பட எதுவும் உள்ளதா?

   உலகின் பல இடங்களில் மக்களினம் தோன்றாத பொழுதே பண்பாடு, நாகரிகம், கலை, இலக்கியம் முதலானவற்றில் தலைசிறந்து விளங்கியவர்கள் நம் முன்னைத் தமிழர்கள். ஆனால், அவர்களுக்குத் திருமண முறையை ஆரியர்கள்தாம் கற்றுத் தந்தனராம்! எந்த ஆரியர்கள்? கடவுள் பிறப்புக் கதைகளிலும் கடவுள் வாழ்வியல் முறைகளிலும் ஒழுக்கக்கேடுகள் தவிர வேறு கற்பிக்காத பண்பாடற்ற கதைகளின் உரிமையாளர்களான ஆரியர்கள்! தமிழர்களைப் பார்த்துத் தங்கள் எழுத்து முறையை அமைத்துக் கொண்ட ஆரியர்கள்! இதில் கொடுமை என்னவென்றால் தமிழ்மரபுகளைக் காப்பதற்காக நூல் எழுதிய தொல்காப்பியரின் தொல்காப்பிய நூற்பா ஒன்றையே தவறாக விளக்கி அவர்களுக்கு வலு சேர்க்க முயல்வதுதான்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப                                                                      (நூற்பா 1091)

என்கிறார் தொல்காப்பியர்.

   ‘ஐயர்’ என்பது தமிழில் தலைவரைக் குறிக்கும். வீரனொருவன் தன் தலைவர் முன்னால் யாரும் நின்று போரிட இயலாது என்பதைக் குறிக்கும்பொழுது,

 என் ஐ முன் நில்லன்முன் தெவ்விர்                            (குறள் 771)

என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். ஐ, ஐயன், ஐயர் என்பன தலைவரைக் குறிக்கும் சொற்களாகும். காதலித்து மணம் முடிப்பதாக உறுதி கூறியவர்கள் அதற்கு மாறாக நடந்துகொண்டு திருமணம் செய்துகொள்ளாமல் போனதால் அல்லது திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்க்கைத்துணையை விட்டு நீங்கியமையால், தலைவர்கள் திருமணப் பதிவு முறையை நடைமுறைப்படுத்தி ஒழுங்கு செய்துள்ளனர். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் முதலான அறிஞர்கள் நன்கு விளக்கியுள்ளனர். இருப்பினும் அதை மறைத்து, வேண்டுமென்றே ஆரியர் வந்த பின் தான் திருமண முறை தமிழ் நாட்டிற்கு வந்ததாகத் தவறாகக் குறிப்பிடுவோர் செல்வாக்குடன் உள்ள பொழுது நாம் தமிழர் எனப் பெருமைப்படுவதில் என்ன இருக்கிறது?

(தொடரும்)

Sunday, January 18, 2026

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 03: இலக்குவனார் திருவள்ளுவன்

      19 January 2026      கரமுத



(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02 தொடர்ச்சி)

தமிழின் பழைய மரபுகள் அழிந்துதமிழ் அழிந்து போகாமல் காக்கவே தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்.” என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். ஆனால், இன்றைக்கு நாம் தமிழ் மரபுகளை அழித்துக் கொண்டு அழிவுப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறோம்.

  “தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம். தொல்காப்பியத்தால் மொழி நிலை – இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும். . . . தமிழ் மக்கள் வரலாறு அறிவதற்குத் தமிழ் மொழியும் இலக்கியமும் பெருந்துணையாக உள்ளன. பண்டைத் தமிழ் மக்கள் வரலாற்றை அறிவதற்கு இவையன்றிப் பிற சான்றுகளை நாம் பெற்றோம் இல்லை. எனவே தமிழக வரலாற்றின் முதற்பகுதியே இந்நூல் எனக்கொள்ளுதல் தகும்.” (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம் 285) என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். அதனால்தான் தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரும் தொல்காப்பியத்தைக் கற்க வேண்டும் என்கிறார் அவர். இந்திய வரலாறு எழுதுபவர்கள் தொல்காப்பியத்தைப்படித்து விட்டு எழுத வேண்டும் என்று கூறுகிறார் அவர். பேராசிரியர் சி.இலக்குவனாரின் தொல்காப்பியப் பரப்புரைப் பணியாலும் ஆராய்ச்சிப்பணியாலும் இன்றைக்குப் பலர் தொல்காப்பிய ஆர்வலர்களாக உள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது.   அதே நேரம் தமிழின் பெருமையை இழித்தும் பழித்தும் சொல்வோரும் உள்ளனர். அவர்களுள் ஒருவர் ‘தொல்காப்பியத்தின் சிறப்புகள் என நாம் தவறாக விளக்குகிறோம்’ என்கிறார்

  தாவரங்களுக்கும் உயிர் உண்டு என 1902 ஆம் ஆண்டில் அறிஞர் சகதீசு சந்திரபோசு(1858-1937) தம்முடைய ‘உயிருள்ளன – உயிரல்லனவற்றின் எதிரிவினைகள்’ (The Reaction of Living and Non-living) என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை மூலம் தெரிவித்தார். உலகமே இதற்கென அவரைக் கொண்டாடுகின்றது. ஆனால், நம் தமிழர்கள் இதனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்துள்ளனர் என்பதை நாம் உலகிற்கு உணர்த்தத் தவறிவிட்டோம். தமிழறிஞர்கள்,

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அவற்றோடு நாவே

மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே

ஆறறி வதுவே அவற்றோடு மனமே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே .

எனத் தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் பயிரினமும் உயிரினமே எனக் கூறியுள்ளதை இக்காலத்தவர்க்கு உணர்த்தி வருகின்றனர்.

  இதற்கு அவர் எழுதுகிறார். தொல்காப்பியர் ஒன்றும் கண்டுபிடிக்க வில்லையாம். இது பெரிய அறிவியல் தத்துவம் இல்லையாம். இப்படி எல்லாம் இருக்கின்றன என மேம்போக்காக எடுத்துச் சொல்லும் செய்திதானாம். தொல்காப்பியர் தாம் கண்டறிந்ததாக ஒன்றும் கூறவில்லை. “நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினர்” என்று தம் முன்னோர்கள் நெறிப்படுத்திய உண்மை என்றுதான் கூறுகின்றார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியருக்கு முன்பிருந்த தமிழ் அறிவியலாளர்கள் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதுடன் ஓரறிவு உயரி, இரண்டறிவு உயிர், மூன்றறிவு உயிர், நான்கறிவு உயிர், ஐந்தறிவு உயிர், ஆறறிவு உயிர் என வகைப்பாடுகளையும் விளக்கி உள்ளனர். இவற்றைத்தான் தொல்காப்பியரும்

புல்லும்மரனும் ஓரறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

(பொருளதிகாரம் – மரபியல் – நூற்பா:28) என அடுக்கடுக்காக விளக்கி யுள்ளார்.

  தமிழால் பிழைக்கும் அந்த நண்பருக்கு இது வெறும் செய்தி என்றால் எதற்கு அறிஞர் செகதீசு சந்திரபோசை உலகம் பாராட்ட வேண்டும்? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் அறிந்த அறிவியல் உண்மை என்பதைச் சொல்ல வேண்டியவர் மட்டந்தட்டிக் கூறுகிறார் எனில் அவரைப் போன்றவர்களின் செல்வாக்கை வீழ்த்தாமல் நாம் வாளாவிருந்து பயன் என்ன?

Followers

Blog Archive