Sunday, April 19, 2026

இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் நிறைவுரை 6 கல்வியகங்கள் தொண்டு நிறுவனங்களாகச் செயற்படுக!

      20 April 2026      



(இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 5: கல்வி முறையை மாற்றுக!: தொடர்ச்சி)

  கல்வியகங்கள் வணிக நிறுவனங்களாக இல்லாமல் தொண்டு நிறுவனங்களாகச் செயல்படும் பொழுதுதான் இவர்களிடையே நல்லுறவு அமையும்; கல்வியிலும் மாணாக்கர்கள் சிறப்பர். ஆசிரியர்கள் பருவத்தேர்வு முடிவுகளின் பொழுது மட்டும் பெற்றோரை அழைக்காமல், சுழற்சி முறையில் தொடக்கக் காலத்திலிருந்தே பெற்றோரை வரவழைத்து மாணாக்கர் கல்விநிலை குறித்துக் கலந்து பேசி அதற்கேற்ப இரு தரப்பாரும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மாணாக்கரின் வீட்டுச் சூழல் புரிந்தால்தான் அவர்களை எவ்வாறு வழி நடத்தலாம் என ஆசிரியர்களுக்குத் தெளிவு பிறக்கும்.  கல்வியகங்களில் தங்கள் பிள்ளைகளின் உண்மையான நிலை என்ன எனப்  பெற்றோர் அறிந்தால்தான் அவர்களை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்ற தெளிவு அவர்களுக்குப் பிறக்கும். மாணாக்கர்களின் திறமைக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற துறைகளிலும் விளையாட்டு, கலைகளிலும் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இதற்குப் பெற்றோர் – ஆசிரியர் – மாணாக்கர்  சந்திப்பு உதவும்.

  மாணவர்களின் படிப்பார்வம்கற்கும்திறன்புரிதல் உணர்வுதன்னம்பிக்கைஉயர்வு அல்லது தாழ்வு மனப்பான்மைவிளையாட்டில் உள்ள ஈடுபாடுகலையார்வம்மந்த நிலைதேர்வு குறித்த அச்சம்தற்கொலை மனப்பாங்கு முதலானவை  பற்றி ஆசிரியர்கள் தொடக்கத்திலேயே பெற்றோர்களிடம் பேசி மாணாக்கர்கள் சிறப்பாகத் திகழ உரிய தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மதிப்பெண் பெறும் இயந்திரமாக மட்டும் மாணாக்கர்களை உருவாக்கும் நோக்கத்தில் பெற்றோர்களிடம் பேசுவதில் பயனில்லை. கல்விக்கூடங்களில் மனவளப் பயிற்சி அளிக்கும் வகையில் பாடத்திட்டம் இருப்பின்மாணாக்கர் சிறப்பர்ஆசிரியர் – பெற்றோர்  –மாணாக்கர் உறவு சீராக அமையும். கற்றலின் இடையே நிற்கும் போக்கும் நின்றுவிடும்.

 கல்வியகங்கள் அழைக்கும் பொழுது பெற்றோர்கள் செல்வதற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அப்பொழுதுதான் தவறாமல் பெற்றோர் இத்தகைய கூட்டங்களுக்குச் செல்வர். அன்றாட வருவாயைமட்டுமே நம்பி உள்ள பெற்றோர் வருவாய் இழப்பு ஏற்படாத வகையில்பள்ளிக்கு வரக்கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும். இதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 ஆசிரியர்பெற்றோர்மாணாக்கர் உறவு குறித்துப் பார்க்கும் பொழுது ஆசிரியர்களுக்கும் மேல் அலுவலர்கள் அல்லது பள்ளி நடத்துநருக்கும் உள்ள உறவு முறை குறித்தும் காண வேண்டும்.

  மாணாக்கர்களை அடக்கி  ஒடுக்கும் ஆசிரியர்கள்கூட அவர்களின் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வரிடம் அடிமைபோல்தான் நடந்து கொள்வர். அஞ்சும் இயல்புடைய ஆசிரியர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டா. தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் தாளாளர் அல்லது கல்வியகத்தை நடத்துநர் அல்லது தாளாண் குழுவின் (நிருவாகத்தின்)அடிமையாக ஒத்துழைத்துப்  போகாவிட்டால் பணிப்பாதுகாப்பில்லை என்ற நிலை.  இதுதான் தனியார் கல்வியகங்களின் சூழல். அரசின் கல்வியகங்களிலும் ஏறத்தாழ இதே போன்ற நிலைதான். ஒத்துப் போகாத அடிமைத்தனத்துடன் வாழும் ஆசிரியர்கள் எவ்வாறு தன்மானமுள்ள தலைமுறையினரை உருவாக்குவர் என்று தெரியவில்லை.

  நல்ல மதிப்பெண்களில் கருத்து செலுத்தினாலும் வேறு வகைப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கே முதன்மை அளிக்கும் போக்கே நிலவுகிறது. இதனால்நல்ல ஆசிரியர்கள் புறந்தள்ளப்படுகின்றனர்.  எனவேஆசிரியர்களின் சமநிலையில் கருத்து செலுத்த வேண்டும். பள்ளிகளின் கடமைகல்வியறிவும் தன்னம்பிக்கையும் ஆற்றலும் மிக்க தலைமுறையினரை உருவாக்குவதுதான். ஆனால்மதிப்பெண் பெறும் மனப்பாட இயந்திரமாக இளந்தலைமுறையினரை உருவாக்குவதே பெருங்கடமை எனக் கல்வியகங்கள் செயல்படுகின்றன. பெற்றோர்களும் மனித இயந்திரங்களை உருவாக்கும் கல்வியகங்களையே சிறந்த  கல்வியகங்கள் என எண்ணுகின்றனர். இயல்பாகச் சிந்தித்து உணரும் வகையில் பாடத்திட்டங்களை அமைத்துஎழுச்சியும் தன்னார்வமும் மிக்க  தலைமுறையினரை உருவாக்கும் அறிவுக்கூடமாகக் கல்வியகங்கள் அமைய வேண்டும்.

  கல்வியுடன் தொடர்புடைய பயிற்றுமொழியை ஆட்சி மொழியுடன் இணைத்து அடுத்துப் பார்ப்போம். ஏனெனில் ஆட்சிமொழியாக இல்லாத மொழியைப் பயிற்று மொழியாக ஏற்க மக்கள் தயங்குவர்.

Friday, April 17, 2026

சட்டச் சொற்கள் விளக்கம் 1043-1046: இலக்குவனார் திருவள்ளுவன்

      18 April 2026      


(சட்டச் சொற்கள் விளக்கம் 1041-1042: தொடர்ச்சி)

1043. Axiomஏற்புடைமை சான்று தேவையில்லாமல்  மெய்யாக அறியப்படும்  வெள்ளிடையுண்மை; பரவலாக ஏற்றுக் கொள்ளப் படுவது. ஏற்புடைமை அடிப்படை யிலேயே வாதங்கள் எழுவதால் அடிப்படைக் கோட்பாடு எனக் கொள்ளப்படுகிறது.   சட்டம் சார்ந்த வாதத்திற்கான அடிப்படைத் தளமாகவும் செயல்படுகிறது.  சான்றாக, ஒப்பந்தச் சட்டத்தில்,  ஒப்பந்தத்திற்கு இரு தரப்பின் ஒப்புமை தேவை என்பது அடிப்படைக் கோட்பாடாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
1044. Axiomatic    வெளிப்படையாகத் தெரிந்த மூதுரையார்ந்த தானே தெளிவான, ஐயத்திற்கு இடமில்லாத(சந்தேகமில்லாத), மறுக்க முடியாத, புரிந்து கொள்ளப்பட்ட, கொடுக்கப்பட்ட, அறிந்தேற்பு பெற்ற, உறுதியான, திருத்தத் தேவையில்லாத அடிப்படைக் கருத்தாகும். இவை சட்ட ஏரணங்களில் (legal reasoning)அடிப்படைக் கூறுகளாகச் செயற்படுகின்றன. காண்க  Axiom-ஏற்புடைமை
1045. Axionமறுக்கொணா உண்மை பெச்சி-குயின் கோட்பாடு(Roberto Peccei and Helen Quinn in 1977) என்பதன் அடிப்படைக் கூறு ஆகும். இவ்வாறு தொழில் நுட்பம் சார்ந்த விளக்கமே பெரிதாகக் கையாளப்படுகிறது. ஆனால், சட்டத்துறையில் ஒரு சான்று அல்லது வாதம் வேறு எவ்வகை ஆதாரமும் தேவையின்றி மறுக்க இயலாத மெய்மையாக உள்ளதைக் குறிக்கிறது.
1046. Ayacut         ஆயக்கட்டு “ஆயக்கட்டு” (Ayacut) என்பது,  நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ்ப் பாசன வசதி பெற உரிமையுள்ள நிலங்களைக் குறிக்கிறது. குறிப்பாக, 1908-ஆம் ஆண்டின் சென்னை பண்ணை நிலச் சட்டத்தின் பிரிவு 136அ-இல் இது வரையறுக்கப்பட்டுள்ளது; இப்பிரிவின்படி, ஒரு நீர்ப்பாசனத் திட்டத்தின் ஆயக்கட்டு என்பது, அந்தத் திட்டத்தின் கீழ்ப் பாசனம் பெறும் அனைத்து நிலங்களையும் உள்ளடக்கியதாகும்.

Wednesday, April 15, 2026

நாலடி நல்கும் நன்னெறி 26: வறுமையிலும் உதவுக! – இலக்குவனார்திருவள்ளுவன்

      16 April 2026      கரமுதல



(நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! – தொடர்ச்சி)

உறுபுனல் தந்துலகூட்டி அறுமிடத்தும்
கல்லூற்றுழியூறும் ஆறேபோல்; – செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற்பாலவை.

பொருளுரை:

மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் மிகுதியான நீரை உலகமக்களுக்குக் கொடுத்து  உண்பிக்கும் ஆறு. கோடைக்காலத்தில் நீரற்றுபோனாலும்   ஊற்றுக்குழியைத் தோண்டுவோருக்கு, நீர்சுரந்து உதவிசெய்யும். இத்தகைய ஆற்றைப்போலப், பெரியோர் தம்செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து உதவுவர். அவர்கள் வறுமை நேரிட்டாலும்  தம்மால் இயலும் அளவு பிறர்க்கு உதவி செய்வர். வறுமையிலும் பிறருக்குத்தரும் பெருமையை நாம் கொள்வோம்.

பதவுரை

 உறுபுனல்= (மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும்) மிகுதியான நீர்; தந்து= கொடுத்து; உலகூட்டி  = உலகினருக்கு ஊட்டி, அஃதாவது உண்பித்து; அறுமிடத்தும்= வறண்டு நீர் அற்ற காலத்திலும்;  கல்லூற்றுழி= தோண்டும் ஊற்றினிலே; ஊறும்= நீர் சுரக்கும், அஃதாவது நீரைச் சுரந்து சிலருக்கேனும் உதவுகின்ற; ஆறே போல்= ஆற்றைப்போல்; செல்வம்= பெரியோர்த ம்மிடம் உள்ள பொருளை; பலர்க்கு ஆற்றி=பலருக்கும் கொடுத்து உதவி; கெட்டு உலந்தக் கண்ணும்= நிலைமை கெட்டுப் பொருள் இல்லாது ஒழிந்த பின்னும்; சிலர்க்காற்றி=இயன்ற வரையில் சிலருக்கேனும் உதவி; செயற்பாலவை= செய்யக் கூடியவற்றை;செய்வர்=செய்வார்கள்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும் வாய்எல்லாஞ் செயல்.   (திருக்குறள், ௩௰௩- 33)

என்கிறார் திருவள்ளுவர்.

முடியக்கூடிய இடங்களில் எல்லாம் அறச்செயல் புரிய வேண்டும். முடியாதபோதும் வாய்ப்புள்ள வழியில் எல்லாம் அறச்செயல் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது இக்குறள். பணம் கொடுப்பது மட்டும்தான் அறவினைஅல்ல.  பிறருக்குத் துன்பம் நேரும்பொழுது அதைத் துடைக்கிற எல்லாச் செயலும் அறம்தான். பிறருக்கு உதவி தேவைப்படும்பொழுது நம்மால் முடியக்கூடிய வழிகளில் உதவ வேண்டும்.

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் வேந்தர்    

தமக்கென முயலா நோன்தாள்,

பிறர்க்கென முயலுநர் உண்மையானே.

என்கிறார்.

உலகம் எதனால் இயங்குகிறது என வினா தொடுத்து, பிறருக்கு உதவுவதற்காக முயலும் பெரும்பண்பினராலேயே உலகம் இயங்குகிறது என்கிறார். இவர்கள் தாம்வாழவேண்டும் என்பதற்காக முயற்சி மேற்கொள்பவர்கள் அல்லர். பிறர் வாழவேண்டும் என்பதற்காக முயற்சி மேற்கொள்பவர்கள்.

ஒளவையாரும் இதனையே கூறுகிறார்.

“ஆற்றுப்பெருக்கற்றடிசுடு மந்நாளு மவ்வாறு

ஊற்றுப்பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு

நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார்ஆனாலும்

இல்லை யெனமாட்டார் இசைந்து”(நல்வழி பாடல்: 9)

என்கிறார் அவர்.

ஆற்றில் நீர்ப்பெருக்கின்றி வற்றிப் போனாலும் உலகுக்கு ஊட்ட ஊற்றின்மூலம் நீரைவழங்கும். அதைப்போல் நற்குடிப்பிறந்தோர் வறுமையுற்றாலும் தம்மை நாடிவருவோருக்கு இல்லை என்று சொல்லமாட்டார்கள்.

உயர்நிலை தாழ்நிலை என எந்நிலைவந்தாலும் தங்கடமைகளைச் செய்தலே பெரியோர் இயல்பாகும். சிறியோர்  தம் செல்வப்பெருக்கில் இருந்தாலும்கூடப் பிறருக்கு உதவுதல் அரிதாகும். அவ்வாறு நாம் இருத்தல் கூடாது. 

இவ்வாறு கொடைக்கடனை என்றும் மறவாது போற்றும் பெரியோர்போல் வாழவேண்டும் என நாலடி நவில்கிறது. ஆதலின் நம்மிடம் செல்வம் இருந்தாலும் இல்லாமல் வறுமை உற்றாலும் இயன்றவரைபிறருக்கு உதவ வேண்டும்.

Monday, April 13, 2026

குறட் கடலிற் சில துளிகள் 43: தூய மனத்தவர்க்கு அவர்க்குப் பின்பும் புகழ் நிலைத்து நிற்கும் – இலக்குவனார் திருவள்ளுவன்

      14 April 2026      கரமுதல



(குறட் கடலிற் சில துளிகள் 42: மனம், செயல் ஆகியவற்றின் தூய்மை இனத்தூய்மையாலே வரும்.- தொடர்ச்சி)

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு

இல்லைநன் றாகா வினை.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௬ – 456)

மனத்தூய்மை உடையவர்க்கு அவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியன நல்லவையாய் அமையும். தூய இனம் உடையவர்க்கு நன்மை விளைவிக்காத செயல் எதுவுமில்லை.

பதவுரை: மனம்-உள்ளம்; தூயார்க்கு-தூய்மையுடையவர்க்கு; எச்சம்- புகழ்; நன்றாகும்-நன்மையுடையதாகும்; இனம்-குழு; தூயார்க்கு-தூய்மையுடையவர்க்கு; இல்லை-இல்லை; நன்று-நன்மையுடையது; ஆகா-ஆகாத; வினை-செயல்.

எச்சம் என்பதற்கு மணக்குடவர் “பின்பு நிற்கும் காணம் முதலான பொருள்கள்” என்கிறார். காணம் என்னும் சொல்லுக்குக் கொள்ளு, செக்கு,  பழைய நிறுத்தலளவை ஒன்றின் பெயர், பொன், பொருள், பாகம் எனப் பொருள்கள். மணக்குடவர் பொன், பொருள் முதலியவற்றைக் கூறுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  

பரிப்பெருமாள் மக்கள் முதலான பொருள்கள் என்றும்  பரிதி புதல்வர் என்றும் காலிங்கர் மக்கட்பேறு முதலிய என்றும் பரிமேலழகர்  மக்கட்பேறு என்றும் கூறுகின்றனர்.

இவர்கள் வழியில் இன்றைய ஆசிரியர்களில் பலரும் பின்வழி என்றும் மக்கட்பேறு என்றும் நன்மக்கட் பேறு என்றும் எச்சத்திற்குப் பொருள் காண்கின்றனர்.

ஆனால், இவை பொருந்தா. திருமணமாகாதவர்க்கும் அல்லது திருமணமாகிக் குழந்தைப் பேறு பெறாதவர்களுக்கும் இவ்வாறான குறட்பொருள் பொருந்தாதே!

எச்சம் என்றால் என்ன?  எஞ்சி நிற்பது. அஃதாவது ஒருவர் மறைவிற்குப் அவர் விட்டுச் செல்வது. ‘மிச்சம்’ ‘விட்டிருப்பது என்றும் கூறுவர். ஒருவர் ஈட்டிய பொன், உடைமைகள், பிள்ளைகள், புகழ், நற்பெயர், நற்செயல்களின் அடையாளங்கள். முதலியனவே எச்சமாகின்றது. ஒருவர் கல்விக்கூடம், மருத்துவமனை, நீர்நிலைகள், திருமண மண்டபங்கள் முதலியவற்றைக் கட்டித்தந்திருந்தால் அவருக்குப் பின்னும் அவை மக்கட்குப் பயன்பட்டு அவரின் நற்பெயர்களைப் பறைசாற்றும். இவையே எச்சமாகும்.

தூய மனம் கொண்டவர்கள் பிறருக்கு நற்செயல்கள் புரிவர். அவற்றால் பயனடைந்தவர்கள் அவர்களின் புகழைப் பறைசாற்றுவர். நல்வினைப் பயன் என்பதையும் எச்சமாகத்தான் கருத வேண்டும்.

இனத் தூய்மை உடையவர்கள் நல்ல துணையுடன் இருப்பர். நற்செயல் புரிவோர் நற்றுணையுடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு ஆகாதது என்று எதுவும் இல்லாமல் அவர்களுக்கு நடப்பனவெல்லாம் நல்லனவாகவே இருக்கும்.

இனத் தூய்மை உடையவர்கள் நல்ல துணையுடன் இருப்பர். நற்செயல் புரிவோர் நற்றுணையுடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு ஆகாதது என்று எதுவும் இல்லாமல் அவர்களுக்கு நடப்பனவெல்லாம் நல்லனவாகவே இருக்கும்.

அப்படியானால், இனத்தூய்மை உடையவர்க்குத் தீயன விளையாதா? இடர்கள் ஏற்படாவா? துன்பங்கள் உண்டாகாவா? துயரங்கள் வாராவா? இவை வரலாம். ஆனால் இவற்றால் பாதிப்புகள் ஏற்படா வண்ணம் உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களையும் நட்பு.  எனவே, தூய இனத்தை உடையவர்க்கு இன்னலைக் களையும் நட்பு இருப்பின் எல்லாமே நல்லனவாகும். எனவே, நன்றாகாத வினை எதுவும் இருக்காது.

ஆதலின் மனத்தைத் தூயதாக வைத்திருப்போம்! நல்லினத்துடனே நட்பு பாராட்டுவோம்! நமக்கும் நம்மைச் சார்ந்தவர்க்கும் நல்லனவே நிகழும்!

நாம் ஆற்றும் நல்வினைப் பயன்களின் நல் விளைவுகள் நாம் மறைந்த பின்னரும் எஞ்சி நின்று நம் பெயரை நிலை நிறுத்தும். எனவே, நாமும் நாம் விட்டுச்செல்வதற்குரிய நற்பயன் தரும்  அருஞ்செயல் ஆற்றுவோம்!

தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே!- இலக்குவனார் திருவள்ளுவன்



தாய், பங்குனி 30,2057/ஏப்பிரல் 13, 2026

‘கண்டவர் இல்’ என, உலகத்துள் உணராதார்,
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை.

நல்லந்துவனார், கலித்தொகை : 125 : 1-4

நெய்தற் கலி

இப்பாடல் 24 அடிகளையுடையது. முதல் 4 அடிகள் மட்டும் இங்கே தரப்பட்டுள்ளன.

பதவுரை:

கண்டவர் இல்=பார்த்தவர் இல்லை; உலகத்துள்=உலகத்தில் உள்ளவர்கள்; உணராதார்=அறியாவிட்டாலும்; தங்காது=தொடர்புடையவர்களிடம் மட்டும் தங்கியிராமல்;

தகைவு இன்றித்=தடையின்றி; தாம் செய்யும் = தாம் ஆற்றும்; வினைகளுள்=செயல்களுள்;

நெஞ்சு=மனம்; அறிந்த=அறியும்; கொடியவை=கொடிய செயல்களை; மறைப்பினும்=மறைத்தாலும்; அறிபவர்=அறிந்தவர் இல்லை என எண்ணாதே;

நெஞ்சத்துக் குறுகிய=மனம் மட்டும் அறிந்ததற்கு; கரி=சான்று; இல்லை = தேவையில்லை.

கருத்து:

தாம் செய்யும் தீவினைச் செயல்களை உலகத்தில் யாரும் அறியார் என எண்ணித் தீங்கு செய்யாதே. அவற்றை உன் மனமறியும். ஆகவே, மனச்சான்றின்படி தீவினை புரியாமல் வாழ்வாயாக!

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

           (திருக்குறள், ௨௱௯௰௩ – 293)

என்கிறார் திருவள்ளுவர்.

தன்னைத்தன் நெஞ்சங் கரியாகத் தானடங்கின்
பின்னைத்தான் எய்தா நலனில்லை.

என்கிறார் முனைப்பாடியார் (அறநெறிச்சாரம் 141.1-2)

தன் செயல்களுக்குத் தன் மனத்தினையே சான்றாக வைத்து ஒருவன் அடக்கமாக இருந்து வாழ்ந்து வருவானாயின், பின்னர் அவனால் அடைய முடியாத இன்பம் எவ்வுலகத்திலும் இல்லை என்று பொருள்.

இவ்வாறு பிறரும் நெஞ்சறிய தீவினை புரியாதே என்கின்றனர்.

தீய செயல்களைச் செய்தால் அதன் விளைவு யாருக்கு எதிராகத் தீவினை செய்தார்களோ அத்தகைய பாதிக்கப்பட்டவர்களுக்கும் தீயன உண்டாக்கும்.

அதே நேரம், தீ வினை புரிவோருக்கும் தீயனவே விளையும். தீயோர் தீயவற்றை எவ்வளவு கமுக்கமாகச் செய்தாலும் உலகத்தினரால் அறியப்படும்.

அதனால் உலக மக்களின் பழிக்கு ஆளாவர். ஒருவேளை யாரும் அவற்றை அறியாமல் இருக்கலாம்.

ஆனால், அந்தச் சூழலிலும் தீவினை புரிந்தோரின் உள்ளத்தை அது சுடும்.

சேக்சுபியரின் மேக்குபெத்து (மேக்குபெத்தின் துயரங்கள் / The Tragedy of Macbeth) நாடகத்தில் மேக்குபெத்து (Macbeth), தன் மனைவியின் தூண்டுதலால் அரசர் தன்கன் (King Duncan)-ஐக் கொன்று விடுகிறான்.

திருவாட்டி மேக்குபெத்து தன் கையில் உள்ள குருதிக் கறையைக் கொஞ்சம் தண்ணீரால் கழுவிடலாம் என்பார்.

ஆனால் பின்னர் குற்ற உணர்வால் கையில் குருதி வாடை இருப்பதாகக் கற்பனையாக எண்ணிக் கொண்டு அடிக்கடி கை கழுவுவார்.

“குருதி வாடை இன்னும் இருக்கிறது.. அரபு நாடுகளில் உள்ள அத்தனை நறுமண நெய்களைக் கொண்டு கை கழுவினாலும் இந்தச் சிறிய கை மணக்காது” (Here’s the smell of the blood still. All the perfumes of Arabia will not sweeten this little hand.) என்பார்.

(இந்நாடகத்தின் மொழி ஆக்க நூல் ஒன்றில் முதலில் கழுவக் கொஞ்சம் தண்ணீர் போதும் என்றதால், அனைத்துக் கடல் நீரைக் கொண்டு கழுவினாலும் கறை போகாது என வரும்.)

செய்யும் தீவினைக்கு மனமே சான்றாய் அமைந்து துன்பம் தரும் என்பதற்கு இந்நாடகக் காட்சியே எடுத்துக் காட்டாகும்.

எனவே, மனச்சான்றுக்கு அஞ்சித் தீவினை புரியாமல் இருக்க வேண்டும்.


Followers

Blog Archive