Saturday, May 23, 2026

குடந்தை வை.மு.கும்பலிங்கன் எழுதிய சொல்லாய்வுகள் – நூலாய்வு: 1. இலக்குவனார் திருவள்ளுவன்

      24 May 2026      



சொல்லாய்வுச் செம்மல் வை.மு.கும்பலிங்கன், குகன் எனச் சுருக்கப் பெயரையும் இறைவன் என்ற புனைபெயரையும் உடையவர். 13 ஆண்டுகள் துணைஆசிரியராகவும் 25 ஆண்டுகள் தலைமையாசிரியராகவும் பணியாற்றிக் கல்விப்பணி யாற்றியவர். தமிழ்நெறிக் காவலர், சேவைச் செம்மல், கண்ணியச் செம்மல், சொல்லாய்வுச் செம்மல், கொள்கைவேள், புலவர்மாமணி, கவிமாமணி, எழுத்துச் சிற்பி, பகுத்தறிவுப் பைந்தமிழ்ச் சுடர், செஞ்சொற் செல்வர, இலக்கணக் குரிசில் முதலிய பட்டங்கள் இவரின் பணிச்சிறப்பிற்காக வழங்கப்பட்டவை.

இறையன்பராக இருந்து நூறாயிரம் ‘சிவாயநம’ எழுதியவர் பெரியாரின் பாதையில் திரும்பிச் சென்றார். பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில் நடைபோட்டதுடன் ‘பெரியார் வாழ்க(தமிழ் வாழ்க, இந்தி ஒழிக)’ என்று தம் குறிப்பேட்டில் எழுதினார்.

இவரின் முதல் கவிதையே “பெரியார் வாழ்க” என்பதுதான். இஃது அப்போது தி.மு.க. தீவிர ஏடாக இருந்த நாத்திகம் இதழில் வந்தது. திராவிட இயக்க இதழான விடுதலை, பகுத்தறிவு, தமிழரசு, பெரியாரியம், மாணவமணி, தமிழ் சூரன், வெற்றி முரசு, முதலியவற்றிலும் எழுதி வந்தார். மேலும், தமிழிய-திராவிடப் பொதுநிலை இதழ்களான தமிழ் இலெமூரியா, அன்புப்பாலம், எழுகதிர், மீண்டும் கவிக்கொண்டல், கண்ணியம், கனிமொழி, குயில், ஏழைதாசன், தாழம்பூ, சமுதாயமுரசு, கிறித்துவர் குரல், மாந்தன், வாழ்வியல் முன்னேற்றம், ஆத்திமாலை, கதம்பம், தினமணி முதலியவற்றிலும் தொடர்ந்து எழுதியுள்ளார். இலங்கை இதழ்களான வீரகேசரி, சுதந்திரன், தீப்பொறி ஆகியவற்றிலும் இவரின் எழுத்தோவியங்கள் வந்துள்ளன. இப்போதும் இதழ்களில் எழுதி வருகிறார்.

இந்நூலுக்கான அணிந்துரையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“ஆசிரியர் தோழர் வை.மு.கும்பலிங்கன் அவர்கள், பகுத்தறிவாளர், விடுதலை உட்பட பல ஏடுகளிலும் கட்டுரைகள் எழுதி வரக்கூடியவர். அவரிடம் மொழி ஆய்வும் மொய்த்துள்ளது என்பதை இந்த நூலின் வழி அறிய முடிகிறது. … தோழர் வை.மு.கும்பலிங்கனின் இந்த நூல் முதலாவதாக ஏடுகள் இதழ்கள் நடத்துவதற்குப் பெரும் துணைவன் என்றே சொல்ல வேண்டும்.” என்கிறார்.

மதிப்புரையில் தமிழ்த்தேசியத் தலைவர் பழ.நெடுமாறன்,

“தமிழைப் பிழையில்லாமல் எப்படி எழுத வேண்டும் என்பதை நன்கு விளக்கும் இந்நூலை மாணவர்கள் மட்டுமல்ல எழுத்தாளர்களும் இதழாசிரியர்களும் படித்துப் புரிந்து கொண்டால், எழுத்தாக்கங்களும் இதழ்களும் பிழையற்ற தமிழில் வெளிவரும்.” என்கிறார்.

உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அணிந்துரையில்,

“சொல்லின் மூலமான வேரின் வழி நின்றல்ல – சொல்லில் மறைந்துள்ள பொருளின் துணை கொண்டு தன் சொல்லாய்வினைக் கும்பலிங்கனார் நிகழ்த்துகிறார்….. இன்றமிழ்ச்சொல் காணல் மட்டுமின்றி – சொற்புணர்ச்சிப் பிழை களைதல், நேரிய சொற்பயன்பாடு கூறல் ஆகியனவும் இடம் பெற்றுள்ளமை இந்நூலின் சிறப்பாகும்.” என்கிறார்.

ச.மெ.மீனாட்சிசுந்தரம், பதிப்புரையில்,

“தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய அவர், ஒரு புலவருக்கும் பேராசிரியருக்கும் மேம்பட்ட அளவில் சொல்லாய்வுச் செய்திகளைத் தொடர்ந்து பல இதழ்களில் எழுதி வருகிறார் என்பது ஒரு வியப்பான செய்தியாகும்; செயற்பாடும் ஆகும். நாம் நம் அன்றாடவாழ்வில் பல சொற்களைப் பேசியும் எழுதியும் பயன்படுத்தி வருகிறோம். நாம் அவற்றைப் பொருள் புரியாமலும் காரணம் தெரியாமலும் பேசி  வருகிறோம் என்பதுதான் பேருண்மை. எனினும் நூலாசிரியர் நாம் அன்றாடம் பேசிப் பயன்படுத்தி வரும் ஒவ்வொரு சொல்லுக்கும் காரண காரியத்தோடு தரும் விளக்கம் அருமையாகவும் எளிமையாகவும் இருக்கிறது.இதன் பொருள் அறிய அறிஞர் துணை தேவையில்லை. அவர் விளக்கும் பாங்கும் எழுதிச் சொல்லும்,எழுதிச் செல்லும் பாங்கும் மிக மிக எளிமையாக உள்ளது.” என்கிறார்.

மீண்டும் கவிக்கொண்டல், சமுதாய முரசு, விடுதலை-ஞாயிறு மலர், மூவேந்தர் முரசு, குயில், தாழம்பூ, வண்ணப்பூங்கா, ஆத்திமாலை, மார்த்தாண்டம் மாலை, எழுகதிர், கிறித்தவர் குரல், கனிமொழி, ஏழைதாசன், தமிழ் இலெமூரியா, தெய்வத்தமிழ்த்தேன், மாந்தன், வெற்றி முரசு முதலிய பல இதழ்களில் வந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

Friday, May 22, 2026

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 5 : இலக்குவனார் திருவள்ளுவன்



(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 : தொடர்ச்சி)

21.02.1940 அன்று கட்டாய இந்தி நீக்கப்பட்ட செய்தி குறித்து 17 ஆவது கட்டுரை தெரிவிக்கிறது.

21.02.1940 அன்று கட்டாய இந்தி நீக்கப்பட்டது. அப்போதைய மாகாண ஆளுநர் சான் எருசுகின் பிரபு இதனை அறிவித்தார். இரண்டாம் உலகப்போர்ச் சூழலில் உள்ளூர்ச் சிக்கலில் மாட்டிக்காெள்ள வேண்டா என்ற எண்ணத்தில் இவ்வாணை பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் ஆசிரியர்.

அன்றே இது குறுஞ்செய்தியாக விடுதலை இதழில் வெளிவந்ததை எடுத்துரைத்துள்ளார். அத்துடன் மறுநாள் விடுதலையில் இது குறித்து வந்த செய்திக்கட்டுரையையும் அளித்துள்ளார். ஆச்சாரியார் அழைத்து வந்த ‘கட்டாய இந்தி கட்டி விட்டது மூட்டை’ என்னும் தலைப்பில் வந்திருந்தது. அதில், 

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

சத்தியாக்கிரக சூரர்கள் என்று சொல்லப்படும் காங்கிரசார் பலப்பல சத்தியாக்கிரகங்கள் செய்து தோல்விமேல் தோல்வியே கண்டனர்.

ஆனால், தமிழர் தொடுத்தபோராட்டம் வெற்றியைத் தந்தது.

ஏன்? தமிழரின் தனிச்சிறப்பு அதுதான்!தமிழர் எக்காரியத்திலும் துணிந்து இறங்கினால், கட்டுப்பாடாகக் கிளர்ச்சியை நடத்தினால், தலைவரின் ஆணையின்படி நடந்து தளராது உழைத்தால்,

வெற்றி கிடைப்பது நிச்சயம்! நிச்சயம்!

இவ்வாறு மேலும் வெற்றிப்பெருமிதமாக கட்டுரை அமைந்துள்ளது.

நாளிட்ட இதழில் வந்திருந்தது. அதனையும் வெளியிட்டுள்ளார். இவ்வறிக்கையில் தீவிரக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கும் பொருளுதவி தந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார். போராட்டங்களைக் குறைத்தும் திரித்தும் மறைத்தும் வஞ்சக(விசம)த்தனமாகவும் நடந்து கொண்ட கூலிகளையும் இதழ்களையும் வென்றெடுத்த தமிழ் உணர்வைப் பாராட்டியிருந்தார். ஆரம்பம் முதல் பெரியதொரு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படும்படி உதவி செய்து வந்ததாக மெயில் பத்திரிகையைப் பாராட்டியுமிருந்தார்.

மெயில் இதழ் பற்றிய குறிப்பையும் ஆசிரியர் தந்துள்ளார். அது வருமாறு:

மெயில்இதழ் சென்னையிலிருந்து வெளிவந்த மாலைப்பத்திரிகையாகும். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின்போது அதன் தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆல்பிரடு ஆர்தர் ஃகேயில்சு என்ற ஆங்கிலேயர். 1912 ஆம் ஆண்டு சென்னைக்குப் பிழைப்பு தேடி இங்கிலாந்திலிருந்து வந்த ஃகேயில்சு சென்னைவாசியாகி மாகாணத்தின் அரசியல் நன்கு தெரிந்தவராக இருந்துள்ளார். மெயிலில் வெளியான போராட்டப் புகைப்படங்கள் விடுதலையில் எடுத்தாளப்பட்டுள்ளன. நடந்து வந்த போராட்டங்களுக்கு உண்மைத் தன்மையையும் அதன் பயனாக மக்கள் நம்பிக்கையையும் இந்த புகைப்படங்கள் கட்டாயம் கொண்டு வந்தன எனலாம். 1978 ஆம் ஆண்டே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக முத்துசாமி ஐயர் நியமிக்கப்பட்டதை ஒரு திராவிடச் செய்தியாளர் என்ற பெயரில் விமரித்த மெயில் இதழ், “தன்னைக் கடவுளுக்கு ஒப்பாகக் கருதுபவனும் மற்றவர்களை மிலேச்சர்கள் எனவும் கருதும் பார்ப்பனன், மக்களைச் சரிசமமாக நடத்தி நீதியைப் பேணத் தகுதியற்றவன்” என எழுதியது.

1868ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை வெளிவந்த இச்செய்தித்தாள் குறித்து இன்றைய தலைமுறையினர் அறிய உதவும் செய்தியாகும் இது.

கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்ட வெற்றி குறித்த செய்தியையும் கட்டுரையையும் படிக்கும் பொழுது ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ், தமிழர் நலன்களுக்கு எதிரான செயல்களுக்கு எதிரான போராட்டங்களில் போலி வெற்றிக்கே நம் தமிழர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர். போலி வெற்றி என்பதும் தோல்விக்கு ஒப்பானதே என்பதை நாம் உணர்வது எப்பொழுதோ?

இந்தியைத் தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில் இருந்து அகற்றினால் மகிழலாம். ஆனால், விருப்பப்பாடம் என்ற போர்வையில் இன்று வரை இந்தி கட்டாயமாகத்தான் உள்ளது. இந்தியை நுழைய விடமாட்டோம் என அறைகூவும் இன்றைய தி.மு.க.வின் தலைவரும் இதுவரை ஆட்சியில் இருந்தவருமான மு.க.தாலின் மகள் பள்ளியிலேயே இந்தி உள்ளது. மாநிலத் தன்னாட்சியை வலியுறுத்தும் கட்சியினர் நடத்தும் பள்ளிகளிலேயே ஒன்றிய அரசு சார் இந்திக்கல்விக்கு இடம் தருவானேன்? இந்தி எதிர்ப்பில் வெற்றி காண்பதாகக் கூறும் அவலத்தை நாம் புரிந்து கொண்டால்தான் விருப்பப்பாடம் என்று கட்டாயமாக இந்தியை நுழைத்துக் கொண்டிருக்கும் ஒன்றிய , மாநில அரசுகளுக்கு எதிராக உண்மையாகப் போராடி வெற்றி காண்போம்.

Wednesday, May 20, 2026

கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 2 : இலக்குவனார் திருவள்ளுவன்



(கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 1 : தொடர்ச்சி)

தென்னிந்தியா – இலங்கை கலைக் களஞ்சியத்தில் இடம் பெற்ற இராமச்சந்திரனார் குறித்த ஆங்கிலக் கட்டுரையை அளித்துள்ளார். இதுபோல் இராமச்சந்திரனாரின் இளைய மகன் இராமச்சந்திரன் எழுதிய மற்றோர் ஆங்கிலக் கட்டுரையையும்  ‘சாதனையாளர் சரிதை’ என்னும் ஐந்தாவது கட்டுரையில் அளித்துள்ளார்.

இராமச்சந்திரனாரின் முதல் முழக்கம 1916 இல் எழுதப்பெற்றது. அது வருமாறு

ஏ தாழ்ந்ததமிழகமே!

என்று நீ சமூக நீதி பெறுவாய்?

ஏ வீழ்ச்சியுற்ற தமிழகமே!

என்று நீ சமநீதி பெறுவாய்?

ஏ ஒடுக்கப்பட்ட தமிழகமே!

என்று நீ  இனவுணர்வு கொள்வாய்?

திராவிட இயக்க மாநாடுகளில் இராமச்சந்திரனார் கொண்டு வந்த ஒவ்வொரு தீர்மானமும் சீத்திருத்த நோக்கம் கொணடவை. பள்ளிகளில் சாதி வேறுபாடற்ற கட்டாயக் கல்வி அனைவருக்கும் வழங்கப்பெற வேண்டும் பாடப்புத்தகங்களில் மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பெற்றுப் பகுத்தறிவு  புகட்டப்பட வேண்டும் என்பவை முதன்மையானவை. இவை ‘திராவிடத் தீர்மானங்கள்’ என்னும் எட்டாவது கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

‘இராமச்சந்திரனார் பேசுகிறார்’ என்னும் ஒன்பதாவது கட்டுரையில் அவரதின் பேச்சகளைக் குறிப்பிட்டு அவற்றின் மூலம் அவரது கோட்பாடுகளை விளக்கியுள்ளார்.

‘எப்படித் தோன்றினார் இராமச்சந்திரனார்’ என்னும் பத்தாவது கட்டுரையில் 1913 இல் சட்டக் கல்லூரியல் பயின்ற பொழுதே சீர்திருத்தப்பாதையில்   பயணித்து தென்னிந்திய நல உரிமைச்சங்கப் பணிகளில் ஈடுபட்டுப் பல்வேறு மாநாடுகளில் பங்கேற்றமையைக் குறிப்பிட்டுள்ளார்.

‘மாவீரர் கண்ட மாநாடுகள்’ என்னும் பதினோராம் கட்டுரையில் மேலும் அவர் பங்கேற்ற மாநாடுகளின் சிறப்புகளை விளக்கியுள்ளார்.

‘கொள்கை அரசர் ஆண்டகுடியரசு’ என்னும் பன்னிரண்டாம் கட்டுரையில் இவரின் அரசியல சுவடுகளைக் குடியரசு இதழ் பதிந்துள்ளவற்றை விளக்கியுள்ளார்.

‘வகுப்புரிமை பற்றி வ.உ.சிதம்பரனார்’ பேசியதைப் பதின்மூன்றாம் கட்டுரையாக அளித்துள்ளார்.

‘சிவகங்கைச் சூரியனின் தொலைநோக்குப் பார்வை’யைப் பதினான்காம் கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.

‘தலைமுறைத் தலைவர்கள்’ எனப் பெரியார், இராமச்சந்தினார் அறிஞர் அண்ணாவைக் குறிப்பது பதினைந்தாம் கட்டுரை.

‘பெரியாரின் உறவினர்’ என்னும் பதினாறாம் கட்டுரையில் இராமச்சந்திரனாரைப் பெரியார் போற்றுவதைக் குறிப்பிடுகிறார்.

“தோழர் இராமச்சந்திரன் நல்ல வாக்கு விசாலமுள்ள வக்கீலாகவும் தகுந்த வரும்படியும் மேலும் மேலும் பெரிய நிலைக்கு வரக்கூடிய செளகரியமும் இருந்தும் அவற்றை இலட்சியம் செய்யாமல், இயக்கத்திலேயே கவலை கொண்டு மற்றவற்றை அலட்சியம் செய்து வந்த உண்மைச் சுயமரியாதை வீரரும் ஆவார்” என்று எழுதியுள்ளார்.

கடமை உருவாக்கிய உறவு நாகம்மையார் நட்பு

முதுமை உருவாக்கிய உறவு மணியம்மையார் நட்பு

காலம் உருவாக்கிய உறவு இரசாசி நட்பு

கொள்கை உருவாக்கிய உறவு இராமச்சந்திரனர் நட்பு

என இக்கட்டுரையை முடிக்கிறார்.

1929 ஆம் ஆண்டு நடைபெற்ற தன்மதிப்பு மாநாட்டிலும் தன்மதிப்பு மாநாட்டிலும் அதற்கு முன்னரே நடைபெற்ற பல பொதுக்கூட்டங்களிலும் தந்தை பெரியாரை இராமச்சந்தினார் பெளத்தர் என்று அடைமொழி இட்டு அழைத்து வந்தார்.

இருபதாம் நூற்றாண்டு பெளத்தர்

நமது பெளத்தர்

தீர்க்கதரிசி பெளத்தர்

பெளத்தர்

எனப் பலமுறை பல வகைகளிலும் அழைத்து வந்துள்ளார்.

இதனைப்  ‘புத்தரும் புனிதரும்’ என்னும் பதினேழாம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாவின் வைரவிழுது‘ என்னும் பதினெட்டாம் கட்டுரையில் இராமச்சந்திரனார் மீது அண்ணா வைத்திருந்த மதிப்பைக் குறிப்பிட்டுள்ளார். 28.02.1984 இல் சிவகங்கையில் இராமச்சந்தினார் பெயரில் பூங்கா ஒன்றை அண்ணா திறந்து வைத்தார். அப்போது ஆற்றிய உரையில் முத்தாய்ப்பாக அண்ணா கூறியதை நிறைவு செய்து இக்கட்டுரையை முடித்துள்ளார். அவ்வுரை வருமாறு

‘சுயமரியாதைத் தீபம் ஏந்தும் படையின் தளபதி’  என்று தொண்டர்கள் சொன்னதாகவும் ‘இனமானக் காவலர்’ என்று திராவிட இனம் சொல்வதாகவும் ‘அறிவுப் பூகம்பம்’ என்று திராவிடன் நாளேட்டின் ஆசிரியர் செ.எசு.கண்ணப்பன் சொன்னதாகவும் ‘மூட நம்பிக்கையை அழிக்க வந்த பீரங்கி’ என்று பட்டுக்கோட்டை அழகிரி சொன்னதாகவும் ‘சுயமரியாதைக் களஞ்சியம்’ என்று பூவாலூர் பொன்னம்பலனார் சொன்னதாகவும் ‘எனக்கு ஊக்கமளித்த வழிகாட்டி’ என ஆர்.வி.சாமிநாதன் சொன்னதாகவும் ‘என்னை உயர்த்திய தலைவர்’  என்று வி.வி.இராமசாமி சொன்னதாகவும் ‘என்னைப் பொதுவுடைமை வாதியாக உருவாக்கிய செம்மல்’ எனத் தோழர் சீவா சொன்னதாகவும் ‘கருப்பு மெழுகுவர்த்தி’ என்று கைவல்ய சாமியார் சொன்னதாகவும் ‘சுயமரியாதைச் சிங்கம்’ என்று குத்தூசி குருசாமி சொன்னதாகவும் சமூகநீதிச் சிற்பி என்று ஈரோடு ஐயாமுத்து சொன்னதாகவும் ‘பெண்கள் விடுதலைக்காகக் கொட்டும் முரசு’ என்று மரு.முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் சொன்னதாகவும் ‘ஈரோட்டின் பகுத்தறிவுப் பதிப்பகம்’ என்று இலக்கியவாதிகள் சொன்னதாகவும் ‘சுயமரியாதையில் தீட்டப்பட்ட வைரம்’ என்று எழுத்தாளர்கள் சொன்னதாகவும் ‘என் பூணூலை விலைபேசிய பகுத்தறிவு வாதி’ என்று மதுரை காங்கிரசு தலைவர் வைத்தியநாத ஐயர் சொன்னதாகவும் அண்ணா சொல்லி முடித்தார்கள்.

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 34: ஒப்பிட இயலா அளவு நல்லாட்சி புரிக! : இலக்குவனார் திருவள்ளுவன்



(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33: பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! – தொடர்ச்சி)

சங்கப் புலவர்கள் பொன்னுரை

உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்

பிறர்க்குநீ வாயின் அல்லது நினக்குப்

பிறர் உவமம் ஆகா! …

பாடற் தலைப்பு: நிறம்திகழ் பாசிழை

பதிற்றுப்பத்து 73 ; 21 அடி கொண்ட பாடலில் முதல் 3 அடிகள்

பாடிய புலவர் – அரிசில் கிழார்

பாடப்பட்ட சேரன் – பெருஞ்சேரல் இரும்பொறை

கி.மு. காலத்துப் பாடல்

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு;
வண்ணம்: ஒழுகுவண்ணம்;
தூக்கு: செந்தூக்கு.

அறிவுள்ளோர் நினைத்தாலும் அறிவில்லாதார் நினைத்தாலும் பிறருடன் உன்னை ஒப்பிட்டுச் சொல்ல இயலுமே தவிர, உனக்கு உவமமாக யாரும் ஆக மாட்டார்.

உரவோர்=அறிவாளர்; எண்ணினும்=நினைத்தாலும்; மடவோர்=அறிவு மடம்பட்டோர்; எண்ணினும்=நினைத்தாலும்; வாயின்=உவமமாகப் பொருந்துதல்; அல்லது=அல்லாது; உவமம்=உவமாக; ஆகா=ஆக மாட்டார்.

பெருஞ்சேரல் இரும்பொறையின் வெற்றிப் பெருமிதத்தையும் பண்பு நலனையும் கூறும் இப்பாடல் தொடக்கத்தில் அதன் காரணமாக பிறரால் ஒப்பிட இயலா அளவிற்குப் பெருமை உடையவன் எனத் தெரிவிக்கிறார்.

இதன் மூலம் நாமும் பிறரால் ஒப்பிட இயலா அளவிற்குச் சிறப்பாக வாழ வேண்டும் என்கிறார்.

அறிவில் சிறந்தவன், அன்பில் சிறந்தவன், பண்பில் உயர்ந்தவன், ஆற்றலில் சிறந்தவன், வீரத்தில் சிறந்தவன், கொடையில் உயர்ந்தவன், ஆட்சித் திறனில் மேம்பட்டவன் எனப் பலவகைகளிலும் பிறருக்கு இணையில்லாமலும் அவனைப் போன்று இவன் உள்ளான் என உவமமாகப் பிறரை இவருடன் ஒப்பிட்டுக் கூற இயலாமலும் சிறப்பான நிலையில் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.

நாட்டை ஆள்வோருக்கு மட்டுமான அறிவுரை அல்ல இது. அனைவருக்குமான அறிவுரையே இது.

ஓர் அமைப்பைச் செயற்படுத்துபவன், ஒரு நிறுவனத்தை இயக்குபவன், கல்வியகத்தை வழிநடத்திச் செல்பவன், வணிகத்தில் ஈடுபடுபவன், பொதுமக்களுக்காக எதையும் தாங்கிச் செல்பவன்,

ஊராட்சி, நகராட்சி, உள்ளாட்சி முதலான அமைப்புகளைத் தலைமை தாங்கி நடத்துபவன், குடும்பத் தலைவன் என எந்த நோக்கில் பார்த்தாலும் தனக்கு உவமை இல்லாதவனாக அல்லது இல்லாதவளாக இருக்க வேண்டும்.

“உள்ளத்தனையது உயர்வு” என்கிறார் திருவள்ளுவர்.

நாம் சிறந்து விளங்க உயர்வான எண்ணம் வேண்டும்; சிறப்பான இலக்கு வேண்டும்; அதை அடைவதற்கான நல்ல முயற்சி வேண்டும்; வெற்றி கண்டு மயங்காமையும் தோல்வி கண்டு கலங்காமையும் வேண்டும்.

இவ்வாறு திகழ்ந்து எண்ணிய எண்ணியாங்கு எய்தினால் உலகில் ஒப்பிட யாருமின்றி உயர்ந்து வாழலாம். ஆளுமையில் சிறந்து விளங்கி நல்லாட்சி புரியலாம்.

நாம் இவ்வாறு திகழ ஆட்சியும் நல்லாட்சியாக இருக்க வேண்டுமல்லவா? எனவே,

ஆள்வோர் நல்லாட்சி புரிக!

– இலக்குவனார் திருவள்ளுவன்

தாய், 20.05.2026

Saturday, May 16, 2026

நாலடி நல்கும் நன்னெறி 29: தீயன விலக நல்லோரைச் சார்க! – இலக்குவனார்திருவள்ளுவன்

      17 May 2026      



(நாலடி நல்கும் நன்னெறி 28: பெரியோரைப் பிணித்துக் கொள்க!  – தொடர்ச்சி)

அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி

நெறியல்ல செய்தொழுகி யவ்வு – நெறியறிந்த

நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்

புற்பனிப் பற்றுவிட் டாங்கு.

[அறியா பருவத்து அடங்காரோடு ஒன்றி

நெறி அல்ல செய்து ஒழுகிய(வ்)வும் – நெறி அறிந்த

நல் சார்வு சாரக் கெடுமே

புல் பனி பற்று விட்டு ஆங்கு.]

⁠ அறியாப் பருவத்தில் அடக்கம் இல்லாதவரோடு சேர்ந்து நெறியற்றவற்றைச்  செய்தலால் வரும் பாவங்களும், நல்லவர்களைச் சார்ந்து ஒழுகலால், புல்லின்மேல் படிந்த பனிநீர் வெயிலினால் அதனை விட்டு நீங்குதல் போல மறையும்.

அறியா=அறியாத; பருவத்து=பருவத்தில்; அடங்காரோடு= அடங்காத வர்களோடு; ஒன்றி=சேர்ந்து; நெறி அல்ல= நெறியல்லாதவற்றை; செய்து=செய்வதால் வரும்;ஒழுகியவ்வும்=ஒழுகியனவும்> ஒழுகுவதால் வரும் தீவினைப் பயன்களும்; நெறி அறிந்த= நன்னெறி அறிந்த; நல் சார்வு=நல்லோர் சார்பை; சாரக் கெடுமே=சார்ந்து இருத்தலால் மறையும்; புல்=புல்லின் மேலுள்ள; பனி=பனித்துளி; பற்று= புல்மேல் தங்கியிருத்தலில் இருந்து; விட்டு ஆங்கு=நீங்கி விடுதல் போன்று.

நல்லன, தீயன யாவை என அறியாப் பருவத்தில், பெரியோர்க்கு அடங்காதவர்களுடன் சேர்ந்து நன்னெறியற்றவற்றைச் செய்வதால் தீய பயன்கள் ஏற்படும். எனவே, தீயோருடன் சேர்ந்து தீயன புரிதல் கூடாது. 

அறியாப் பருவத்தில் கூடா நட்பை மேற்கொண்டாலும் விவரம் அறிந்ததும் நன்னெறி ஒழுகும் சான்றோருடன் பழகி அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்.

தீயவர் என்றறிந்தே ஒருவருடன் நட்பு கொள்ளக்கூடாது. ஆனால், நல்லவர் என எண்ணி ஒருவருடன் பழகத் தொடங்கியதும் அவர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுநராக இருக்கிறார் என அறிய வந்தால், அவர் இரண்டகம் செய்பவராக அறிய வந்தால், அவர் தன்னை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார் என அறிய வந்தால், அவர் தன்னை ஏமாற்றப் போகிறார் எனத் தெரிய வந்தால், அவரின் உண்மை முகம் தெரிய வந்தால், உடன் அவரை விட்டுவிலக வேண்டும். அப்பொழுது ஒழுக்கமுடையவர் வாய்ச்சொல்லே ஊன்று கோலாகும் என்பதை உணர வேண்டும். அத்தகைய ஒழுக்கமான நல்லோர் நட்பை நாட வேண்டும். நல்லோரிடம் நட்பு பாராட்டினால், புல்மேல் உள்ள பனித்துளி கதிரவன் ஒளியால், நீங்கி மறைவதுபோல் செய்த தீவினைகளின் தீய பயன்களும் அகலும்.

தீயவர் சேர்க்கையால் தீயனவே விளையும். அவ்வாறு அறிந்தும் அறியாமலும் தீயவர்களுடன் சேர்ந்தாலும் உண்மையை உணர்ந்தபின்னர், நல்லோரிடம் சேர வேண்டும். அச்சேர்க்கையால் தீயன அழிந்து நல்லனவே விளையும் என்பதையே புலவர் கூறியுள்ளார்.

எனவே, தீயவர்களுடன் சேர்ந்து தீயவற்றைச் செய்தவர்கள் திருந்தி வாழப் புலவர் வழிவகை கூறுகிறார்.

“புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை” என நாலடியார் 29 ஆவது பாடலிலும் புல்மேல் பனித்துளி உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.   (திருக்குறள், ௭௱௮௰௭ – 787)

என்கிறார் திருவள்ளுவர்.

அழிவு வரும்பொழுது, அழிவினால் வந்த தீமைகளிலிருந்து நீக்கி, நல் வழியில் நடக்கச் செய்து, உடனிருப்பதுதான் நட்பாகும் என்கிறார் அவர். நட்பைக் குறிப்பிடும் இக்குறள் நல்லோர் இயல்பையும் எடுத்துரைக்கிறது. நாலடியார், இவ்வாறு தீமைகளிலிருந்து விலக்கி நல்வழியில் நடக்கச் செய்வோரைச் சார்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தீயோருடன் சேரற்க! சேர்ந்தபின் அதன் தீமையைப் புரிந்து கொண்டால் தீய விளைவுகளிலிருந்து விலக நல்லோருடன் சேர்க!

Friday, May 15, 2026

குறட் கடலில் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

      16 May 2026      



(குறட் கடலிற் சில துளிகள் 45: இன நலமே பாதுகாப்பு! – தொடர்ச்சி)

மனநலத்தி னாகு மறுமைமற் றஃது     

மினநலத்தி னேமாப் புடைத்து (திருக்குறள், ௪௱௫௰௯ – 459)

[ மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்

இனநலத்தின் ஏமாப் புடைத்து. ]

மனநலத்தால் மறுமை உண்டாகும். அதுவும் இன நலத்தால் சிறப்படையும்.

பதவுரை:

    மன நலத்தின்=உள்ளத்தின் சிறப்பால்; ஆகும்=உண்டாகும்; மறுமை=மறுமுறை அடையும் நல்வாய்ப்பு; மற்று=மீண்டும்; அஃதும்= அங்ஙனம் ஆவதும்; இனநலத்தின்-சூழ்ந்திருக்கும் இனத்தின் சிறப்பால், ஏமாப்பு=வலிமை; உடைத்து=உடையது ஆகும்.

ஏமாப்பு=சிறப்பு; அரணாதல்;  வலிமையாதல்; பாதுகாப்பு; இறுமாப்பு; ஏமம் + ஆப்பு – “ஆப்பு” சொல்லாக்க ஈறு.

மறு முறை பிறப்பதை மறுமை என்றனர். மறுமை என்றதற்கு மணக்குடவர் மறுமைப்பயன் என்றும் காலிங்கர் மறுமை என்றும்  பரிதி மறுசென்மம் என்றும் பரிமேலழகரும் பின் வந்தவர்களும் இச்சொல்லுக்கு ‘மறுமை இன்பம்’ என்றும்  பொருள் உரைத்துள்ளனர். செல்வம் என்று பொருள் கொண்டும் உரைத்துள்ளனர். இறந்தபின் அடையும் வீட்டின்பம் என்றே பலரது விளக்கங்களும் அமைந்துள்ளன. பேரா.முனைவர் சி.இலக்குவனார், அரசியலில் உள்ள இக் குறட்பாவிற்கு அங்ஙனம் பொருள் கூறுவது ஏற்புடைத்தாகத் தெரியவில்லை என்கிறார்.

மறுபிறப்பில் நம்பிக்கையில்லாத இன்றைய உரையாசிரியர்களில் சிலர், மறுமை என்ற சொல்லுக்கு “ஒருவன் இறந்த பிறகு அவன் பெயர் இங்கு நிலவுதல்” என்றும் “மறைந்த பின்னர் உண்டாகும் புகழ்” என்றும் “மறுமையெனும் மக்கள்” என்றும் “ஒரு நிலையினின்று மேல் செல்லும் மறு நிலை” என்றும் “பின்வரும் சந்ததி” என்றும் பொருள் கூறியுள்ளனர்.

“மறுமை-மீண்டும் அப்பதவியில் அமரும் தன்மை” என்கிறார் பேரா.முனைவர் சி.இலக்குவனார். “அரசியல் பதவிகளில் மீண்டும் மீண்டும் அமர்ந்து தொண்டாற்றும் நிலைமை எல்லார்க்கும் கிட்டுவது அன்று. ஒரு முறை ஆண்ட பின்னர் மறுமுறை மக்களால் அமர்த்தப்பட வேண்டுமாயின், சிறந்த நற்பண்பு உடையராய் இருத்தல் வேண்டும். அங்ஙனம் அமர்ந்தாலும், நல்லறிஞர் புடைசூழ இருந்தால் எவரானும் அகற்ற முடியாத வலிமை பெற்றோராய் இருக்கலாம். இல்லையேல் சுற்றியிருப்போரே பொறாமை காரணமாகப் பதவியினின்றும் அகற்றுவதற்குரிய வழிகள் தேடுவர்.” (இலக்குவம் : வள்ளுவர் வகுத்த அரசியல்: பக்கம் 746) என விளக்கம் தருகிறார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்.

பேரா.சி.இலக்குவனார் கருத்தை அடியொற்றி மீண்டும் பெறும் பதவி வாய்ப்பு மட்டுமல்லாமல் எல்லாவகை நன்மைகளையும் மீளப் பெறுவதைக் குறிக்கும் வகையில் பொதுவாக “மீண்டும் கிடைக்கும் நல்வாய்ப்பு” எனப் பொதுவாக விளக்கியுள்ளேன்.

மறுபிறவியில் அடையும் இன்பம் என்றால், மறு பிறவி உள்ளதா? மறுபிறவி மனிதப்பிறவிதானா? என்றெல்லாம் வினாக்கள் வரும். இப்பிறவிக்கான எதிர்விளைவு அடுத்த பிறவியில் நிகழ்வதால் இப்பிறவியில் என்ன பயன்? அந்தந்தப் பிறவியில் உள்ள செயல்களுக்கான நன்மை தீமைகள்  அந்தந்தந்தப் பிறவியிலேயே அமையும் என்றால்தான் வாழும் பிறவியிலேயே நன்மை கிடைக்க வேண்டும் என்றும் தீமை கிடைக்கக் கூடாது என்றும் தீச்செயல்களை விலக்குவர்; நற்செயல்கள் புரிவர்.

“இன நலம் ஏமாப்புடைத்து” என்பதற்கு மணக்குடவர், அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து என்கிறார்.

இனச்சுற்றம் மனநலத்தால் பெறும் சிறப்பை, நாம் பயனை மறுமுறை அடைவதற்குப் பாதுகாப்பாக விளங்கும். எனவே, மன நலத்தின் சிறப்பு இன நலத்தால் வலிமை பெறுகிறது எனலாம்.

உள்ளத்தின் சிறப்பால் இன நலத்தின் பாதுகாப்புடன் மீள் நன்மையை நாம் அடைவோம்!

Followers

Blog Archive