Wednesday, May 20, 2026

கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 2 : இலக்குவனார் திருவள்ளுவன்



(கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 1 : தொடர்ச்சி)

தென்னிந்தியா – இலங்கை கலைக் களஞ்சியத்தில் இடம் பெற்ற இராமச்சந்திரனார் குறித்த ஆங்கிலக் கட்டுரையை அளித்துள்ளார். இதுபோல் இராமச்சந்திரனாரின் இளைய மகன் இராமச்சந்திரன் எழுதிய மற்றோர் ஆங்கிலக் கட்டுரையையும்  ‘சாதனையாளர் சரிதை’ என்னும் ஐந்தாவது கட்டுரையில் அளித்துள்ளார்.

இராமச்சந்திரனாரின் முதல் முழக்கம 1916 இல் எழுதப்பெற்றது. அது வருமாறு

ஏ தாழ்ந்ததமிழகமே!

என்று நீ சமூக நீதி பெறுவாய்?

ஏ வீழ்ச்சியுற்ற தமிழகமே!

என்று நீ சமநீதி பெறுவாய்?

ஏ ஒடுக்கப்பட்ட தமிழகமே!

என்று நீ  இனவுணர்வு கொள்வாய்?

திராவிட இயக்க மாநாடுகளில் இராமச்சந்திரனார் கொண்டு வந்த ஒவ்வொரு தீர்மானமும் சீத்திருத்த நோக்கம் கொணடவை. பள்ளிகளில் சாதி வேறுபாடற்ற கட்டாயக் கல்வி அனைவருக்கும் வழங்கப்பெற வேண்டும் பாடப்புத்தகங்களில் மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பெற்றுப் பகுத்தறிவு  புகட்டப்பட வேண்டும் என்பவை முதன்மையானவை. இவை ‘திராவிடத் தீர்மானங்கள்’ என்னும் எட்டாவது கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

‘இராமச்சந்திரனார் பேசுகிறார்’ என்னும் ஒன்பதாவது கட்டுரையில் அவரதின் பேச்சகளைக் குறிப்பிட்டு அவற்றின் மூலம் அவரது கோட்பாடுகளை விளக்கியுள்ளார்.

‘எப்படித் தோன்றினார் இராமச்சந்திரனார்’ என்னும் பத்தாவது கட்டுரையில் 1913 இல் சட்டக் கல்லூரியல் பயின்ற பொழுதே சீர்திருத்தப்பாதையில்   பயணித்து தென்னிந்திய நல உரிமைச்சங்கப் பணிகளில் ஈடுபட்டுப் பல்வேறு மாநாடுகளில் பங்கேற்றமையைக் குறிப்பிட்டுள்ளார்.

‘மாவீரர் கண்ட மாநாடுகள்’ என்னும் பதினோராம் கட்டுரையில் மேலும் அவர் பங்கேற்ற மாநாடுகளின் சிறப்புகளை விளக்கியுள்ளார்.

‘கொள்கை அரசர் ஆண்டகுடியரசு’ என்னும் பன்னிரண்டாம் கட்டுரையில் இவரின் அரசியல சுவடுகளைக் குடியரசு இதழ் பதிந்துள்ளவற்றை விளக்கியுள்ளார்.

‘வகுப்புரிமை பற்றி வ.உ.சிதம்பரனார்’ பேசியதைப் பதின்மூன்றாம் கட்டுரையாக அளித்துள்ளார்.

‘சிவகங்கைச் சூரியனின் தொலைநோக்குப் பார்வை’யைப் பதினான்காம் கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.

‘தலைமுறைத் தலைவர்கள்’ எனப் பெரியார், இராமச்சந்தினார் அறிஞர் அண்ணாவைக் குறிப்பது பதினைந்தாம் கட்டுரை.

‘பெரியாரின் உறவினர்’ என்னும் பதினாறாம் கட்டுரையில் இராமச்சந்திரனாரைப் பெரியார் போற்றுவதைக் குறிப்பிடுகிறார்.

“தோழர் இராமச்சந்திரன் நல்ல வாக்கு விசாலமுள்ள வக்கீலாகவும் தகுந்த வரும்படியும் மேலும் மேலும் பெரிய நிலைக்கு வரக்கூடிய செளகரியமும் இருந்தும் அவற்றை இலட்சியம் செய்யாமல், இயக்கத்திலேயே கவலை கொண்டு மற்றவற்றை அலட்சியம் செய்து வந்த உண்மைச் சுயமரியாதை வீரரும் ஆவார்” என்று எழுதியுள்ளார்.

கடமை உருவாக்கிய உறவு நாகம்மையார் நட்பு

முதுமை உருவாக்கிய உறவு மணியம்மையார் நட்பு

காலம் உருவாக்கிய உறவு இரசாசி நட்பு

கொள்கை உருவாக்கிய உறவு இராமச்சந்திரனர் நட்பு

என இக்கட்டுரையை முடிக்கிறார்.

1929 ஆம் ஆண்டு நடைபெற்ற தன்மதிப்பு மாநாட்டிலும் தன்மதிப்பு மாநாட்டிலும் அதற்கு முன்னரே நடைபெற்ற பல பொதுக்கூட்டங்களிலும் தந்தை பெரியாரை இராமச்சந்தினார் பெளத்தர் என்று அடைமொழி இட்டு அழைத்து வந்தார்.

இருபதாம் நூற்றாண்டு பெளத்தர்

நமது பெளத்தர்

தீர்க்கதரிசி பெளத்தர்

பெளத்தர்

எனப் பலமுறை பல வகைகளிலும் அழைத்து வந்துள்ளார்.

இதனைப்  ‘புத்தரும் புனிதரும்’ என்னும் பதினேழாம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாவின் வைரவிழுது‘ என்னும் பதினெட்டாம் கட்டுரையில் இராமச்சந்திரனார் மீது அண்ணா வைத்திருந்த மதிப்பைக் குறிப்பிட்டுள்ளார். 28.02.1984 இல் சிவகங்கையில் இராமச்சந்தினார் பெயரில் பூங்கா ஒன்றை அண்ணா திறந்து வைத்தார். அப்போது ஆற்றிய உரையில் முத்தாய்ப்பாக அண்ணா கூறியதை நிறைவு செய்து இக்கட்டுரையை முடித்துள்ளார். அவ்வுரை வருமாறு

‘சுயமரியாதைத் தீபம் ஏந்தும் படையின் தளபதி’  என்று தொண்டர்கள் சொன்னதாகவும் ‘இனமானக் காவலர்’ என்று திராவிட இனம் சொல்வதாகவும் ‘அறிவுப் பூகம்பம்’ என்று திராவிடன் நாளேட்டின் ஆசிரியர் செ.எசு.கண்ணப்பன் சொன்னதாகவும் ‘மூட நம்பிக்கையை அழிக்க வந்த பீரங்கி’ என்று பட்டுக்கோட்டை அழகிரி சொன்னதாகவும் ‘சுயமரியாதைக் களஞ்சியம்’ என்று பூவாலூர் பொன்னம்பலனார் சொன்னதாகவும் ‘எனக்கு ஊக்கமளித்த வழிகாட்டி’ என ஆர்.வி.சாமிநாதன் சொன்னதாகவும் ‘என்னை உயர்த்திய தலைவர்’  என்று வி.வி.இராமசாமி சொன்னதாகவும் ‘என்னைப் பொதுவுடைமை வாதியாக உருவாக்கிய செம்மல்’ எனத் தோழர் சீவா சொன்னதாகவும் ‘கருப்பு மெழுகுவர்த்தி’ என்று கைவல்ய சாமியார் சொன்னதாகவும் ‘சுயமரியாதைச் சிங்கம்’ என்று குத்தூசி குருசாமி சொன்னதாகவும் சமூகநீதிச் சிற்பி என்று ஈரோடு ஐயாமுத்து சொன்னதாகவும் ‘பெண்கள் விடுதலைக்காகக் கொட்டும் முரசு’ என்று மரு.முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் சொன்னதாகவும் ‘ஈரோட்டின் பகுத்தறிவுப் பதிப்பகம்’ என்று இலக்கியவாதிகள் சொன்னதாகவும் ‘சுயமரியாதையில் தீட்டப்பட்ட வைரம்’ என்று எழுத்தாளர்கள் சொன்னதாகவும் ‘என் பூணூலை விலைபேசிய பகுத்தறிவு வாதி’ என்று மதுரை காங்கிரசு தலைவர் வைத்தியநாத ஐயர் சொன்னதாகவும் அண்ணா சொல்லி முடித்தார்கள்.

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 34: ஒப்பிட இயலா அளவு நல்லாட்சி புரிக! : இலக்குவனார் திருவள்ளுவன்



(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33: பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! – தொடர்ச்சி)

சங்கப் புலவர்கள் பொன்னுரை

உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்

பிறர்க்குநீ வாயின் அல்லது நினக்குப்

பிறர் உவமம் ஆகா! …

பாடற் தலைப்பு: நிறம்திகழ் பாசிழை

பதிற்றுப்பத்து 73 ; 21 அடி கொண்ட பாடலில் முதல் 3 அடிகள்

பாடிய புலவர் – அரிசில் கிழார்

பாடப்பட்ட சேரன் – பெருஞ்சேரல் இரும்பொறை

கி.மு. காலத்துப் பாடல்

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு;
வண்ணம்: ஒழுகுவண்ணம்;
தூக்கு: செந்தூக்கு.

அறிவுள்ளோர் நினைத்தாலும் அறிவில்லாதார் நினைத்தாலும் பிறருடன் உன்னை ஒப்பிட்டுச் சொல்ல இயலுமே தவிர, உனக்கு உவமமாக யாரும் ஆக மாட்டார்.

உரவோர்=அறிவாளர்; எண்ணினும்=நினைத்தாலும்; மடவோர்=அறிவு மடம்பட்டோர்; எண்ணினும்=நினைத்தாலும்; வாயின்=உவமமாகப் பொருந்துதல்; அல்லது=அல்லாது; உவமம்=உவமாக; ஆகா=ஆக மாட்டார்.

பெருஞ்சேரல் இரும்பொறையின் வெற்றிப் பெருமிதத்தையும் பண்பு நலனையும் கூறும் இப்பாடல் தொடக்கத்தில் அதன் காரணமாக பிறரால் ஒப்பிட இயலா அளவிற்குப் பெருமை உடையவன் எனத் தெரிவிக்கிறார்.

இதன் மூலம் நாமும் பிறரால் ஒப்பிட இயலா அளவிற்குச் சிறப்பாக வாழ வேண்டும் என்கிறார்.

அறிவில் சிறந்தவன், அன்பில் சிறந்தவன், பண்பில் உயர்ந்தவன், ஆற்றலில் சிறந்தவன், வீரத்தில் சிறந்தவன், கொடையில் உயர்ந்தவன், ஆட்சித் திறனில் மேம்பட்டவன் எனப் பலவகைகளிலும் பிறருக்கு இணையில்லாமலும் அவனைப் போன்று இவன் உள்ளான் என உவமமாகப் பிறரை இவருடன் ஒப்பிட்டுக் கூற இயலாமலும் சிறப்பான நிலையில் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.

நாட்டை ஆள்வோருக்கு மட்டுமான அறிவுரை அல்ல இது. அனைவருக்குமான அறிவுரையே இது.

ஓர் அமைப்பைச் செயற்படுத்துபவன், ஒரு நிறுவனத்தை இயக்குபவன், கல்வியகத்தை வழிநடத்திச் செல்பவன், வணிகத்தில் ஈடுபடுபவன், பொதுமக்களுக்காக எதையும் தாங்கிச் செல்பவன்,

ஊராட்சி, நகராட்சி, உள்ளாட்சி முதலான அமைப்புகளைத் தலைமை தாங்கி நடத்துபவன், குடும்பத் தலைவன் என எந்த நோக்கில் பார்த்தாலும் தனக்கு உவமை இல்லாதவனாக அல்லது இல்லாதவளாக இருக்க வேண்டும்.

“உள்ளத்தனையது உயர்வு” என்கிறார் திருவள்ளுவர்.

நாம் சிறந்து விளங்க உயர்வான எண்ணம் வேண்டும்; சிறப்பான இலக்கு வேண்டும்; அதை அடைவதற்கான நல்ல முயற்சி வேண்டும்; வெற்றி கண்டு மயங்காமையும் தோல்வி கண்டு கலங்காமையும் வேண்டும்.

இவ்வாறு திகழ்ந்து எண்ணிய எண்ணியாங்கு எய்தினால் உலகில் ஒப்பிட யாருமின்றி உயர்ந்து வாழலாம். ஆளுமையில் சிறந்து விளங்கி நல்லாட்சி புரியலாம்.

நாம் இவ்வாறு திகழ ஆட்சியும் நல்லாட்சியாக இருக்க வேண்டுமல்லவா? எனவே,

ஆள்வோர் நல்லாட்சி புரிக!

– இலக்குவனார் திருவள்ளுவன்

தாய், 20.05.2026

Saturday, May 16, 2026

நாலடி நல்கும் நன்னெறி 29: தீயன விலக நல்லோரைச் சார்க! – இலக்குவனார்திருவள்ளுவன்

      17 May 2026      



(நாலடி நல்கும் நன்னெறி 28: பெரியோரைப் பிணித்துக் கொள்க!  – தொடர்ச்சி)

அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி

நெறியல்ல செய்தொழுகி யவ்வு – நெறியறிந்த

நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்

புற்பனிப் பற்றுவிட் டாங்கு.

[அறியா பருவத்து அடங்காரோடு ஒன்றி

நெறி அல்ல செய்து ஒழுகிய(வ்)வும் – நெறி அறிந்த

நல் சார்வு சாரக் கெடுமே

புல் பனி பற்று விட்டு ஆங்கு.]

⁠ அறியாப் பருவத்தில் அடக்கம் இல்லாதவரோடு சேர்ந்து நெறியற்றவற்றைச்  செய்தலால் வரும் பாவங்களும், நல்லவர்களைச் சார்ந்து ஒழுகலால், புல்லின்மேல் படிந்த பனிநீர் வெயிலினால் அதனை விட்டு நீங்குதல் போல மறையும்.

அறியா=அறியாத; பருவத்து=பருவத்தில்; அடங்காரோடு= அடங்காத வர்களோடு; ஒன்றி=சேர்ந்து; நெறி அல்ல= நெறியல்லாதவற்றை; செய்து=செய்வதால் வரும்;ஒழுகியவ்வும்=ஒழுகியனவும்> ஒழுகுவதால் வரும் தீவினைப் பயன்களும்; நெறி அறிந்த= நன்னெறி அறிந்த; நல் சார்வு=நல்லோர் சார்பை; சாரக் கெடுமே=சார்ந்து இருத்தலால் மறையும்; புல்=புல்லின் மேலுள்ள; பனி=பனித்துளி; பற்று= புல்மேல் தங்கியிருத்தலில் இருந்து; விட்டு ஆங்கு=நீங்கி விடுதல் போன்று.

நல்லன, தீயன யாவை என அறியாப் பருவத்தில், பெரியோர்க்கு அடங்காதவர்களுடன் சேர்ந்து நன்னெறியற்றவற்றைச் செய்வதால் தீய பயன்கள் ஏற்படும். எனவே, தீயோருடன் சேர்ந்து தீயன புரிதல் கூடாது. 

அறியாப் பருவத்தில் கூடா நட்பை மேற்கொண்டாலும் விவரம் அறிந்ததும் நன்னெறி ஒழுகும் சான்றோருடன் பழகி அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்.

தீயவர் என்றறிந்தே ஒருவருடன் நட்பு கொள்ளக்கூடாது. ஆனால், நல்லவர் என எண்ணி ஒருவருடன் பழகத் தொடங்கியதும் அவர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுநராக இருக்கிறார் என அறிய வந்தால், அவர் இரண்டகம் செய்பவராக அறிய வந்தால், அவர் தன்னை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார் என அறிய வந்தால், அவர் தன்னை ஏமாற்றப் போகிறார் எனத் தெரிய வந்தால், அவரின் உண்மை முகம் தெரிய வந்தால், உடன் அவரை விட்டுவிலக வேண்டும். அப்பொழுது ஒழுக்கமுடையவர் வாய்ச்சொல்லே ஊன்று கோலாகும் என்பதை உணர வேண்டும். அத்தகைய ஒழுக்கமான நல்லோர் நட்பை நாட வேண்டும். நல்லோரிடம் நட்பு பாராட்டினால், புல்மேல் உள்ள பனித்துளி கதிரவன் ஒளியால், நீங்கி மறைவதுபோல் செய்த தீவினைகளின் தீய பயன்களும் அகலும்.

தீயவர் சேர்க்கையால் தீயனவே விளையும். அவ்வாறு அறிந்தும் அறியாமலும் தீயவர்களுடன் சேர்ந்தாலும் உண்மையை உணர்ந்தபின்னர், நல்லோரிடம் சேர வேண்டும். அச்சேர்க்கையால் தீயன அழிந்து நல்லனவே விளையும் என்பதையே புலவர் கூறியுள்ளார்.

எனவே, தீயவர்களுடன் சேர்ந்து தீயவற்றைச் செய்தவர்கள் திருந்தி வாழப் புலவர் வழிவகை கூறுகிறார்.

“புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை” என நாலடியார் 29 ஆவது பாடலிலும் புல்மேல் பனித்துளி உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.   (திருக்குறள், ௭௱௮௰௭ – 787)

என்கிறார் திருவள்ளுவர்.

அழிவு வரும்பொழுது, அழிவினால் வந்த தீமைகளிலிருந்து நீக்கி, நல் வழியில் நடக்கச் செய்து, உடனிருப்பதுதான் நட்பாகும் என்கிறார் அவர். நட்பைக் குறிப்பிடும் இக்குறள் நல்லோர் இயல்பையும் எடுத்துரைக்கிறது. நாலடியார், இவ்வாறு தீமைகளிலிருந்து விலக்கி நல்வழியில் நடக்கச் செய்வோரைச் சார்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தீயோருடன் சேரற்க! சேர்ந்தபின் அதன் தீமையைப் புரிந்து கொண்டால் தீய விளைவுகளிலிருந்து விலக நல்லோருடன் சேர்க!

Friday, May 15, 2026

குறட் கடலில் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

      16 May 2026      



(குறட் கடலிற் சில துளிகள் 45: இன நலமே பாதுகாப்பு! – தொடர்ச்சி)

மனநலத்தி னாகு மறுமைமற் றஃது     

மினநலத்தி னேமாப் புடைத்து (திருக்குறள், ௪௱௫௰௯ – 459)

[ மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்

இனநலத்தின் ஏமாப் புடைத்து. ]

மனநலத்தால் மறுமை உண்டாகும். அதுவும் இன நலத்தால் சிறப்படையும்.

பதவுரை:

    மன நலத்தின்=உள்ளத்தின் சிறப்பால்; ஆகும்=உண்டாகும்; மறுமை=மறுமுறை அடையும் நல்வாய்ப்பு; மற்று=மீண்டும்; அஃதும்= அங்ஙனம் ஆவதும்; இனநலத்தின்-சூழ்ந்திருக்கும் இனத்தின் சிறப்பால், ஏமாப்பு=வலிமை; உடைத்து=உடையது ஆகும்.

ஏமாப்பு=சிறப்பு; அரணாதல்;  வலிமையாதல்; பாதுகாப்பு; இறுமாப்பு; ஏமம் + ஆப்பு – “ஆப்பு” சொல்லாக்க ஈறு.

மறு முறை பிறப்பதை மறுமை என்றனர். மறுமை என்றதற்கு மணக்குடவர் மறுமைப்பயன் என்றும் காலிங்கர் மறுமை என்றும்  பரிதி மறுசென்மம் என்றும் பரிமேலழகரும் பின் வந்தவர்களும் இச்சொல்லுக்கு ‘மறுமை இன்பம்’ என்றும்  பொருள் உரைத்துள்ளனர். செல்வம் என்று பொருள் கொண்டும் உரைத்துள்ளனர். இறந்தபின் அடையும் வீட்டின்பம் என்றே பலரது விளக்கங்களும் அமைந்துள்ளன. பேரா.முனைவர் சி.இலக்குவனார், அரசியலில் உள்ள இக் குறட்பாவிற்கு அங்ஙனம் பொருள் கூறுவது ஏற்புடைத்தாகத் தெரியவில்லை என்கிறார்.

மறுபிறப்பில் நம்பிக்கையில்லாத இன்றைய உரையாசிரியர்களில் சிலர், மறுமை என்ற சொல்லுக்கு “ஒருவன் இறந்த பிறகு அவன் பெயர் இங்கு நிலவுதல்” என்றும் “மறைந்த பின்னர் உண்டாகும் புகழ்” என்றும் “மறுமையெனும் மக்கள்” என்றும் “ஒரு நிலையினின்று மேல் செல்லும் மறு நிலை” என்றும் “பின்வரும் சந்ததி” என்றும் பொருள் கூறியுள்ளனர்.

“மறுமை-மீண்டும் அப்பதவியில் அமரும் தன்மை” என்கிறார் பேரா.முனைவர் சி.இலக்குவனார். “அரசியல் பதவிகளில் மீண்டும் மீண்டும் அமர்ந்து தொண்டாற்றும் நிலைமை எல்லார்க்கும் கிட்டுவது அன்று. ஒரு முறை ஆண்ட பின்னர் மறுமுறை மக்களால் அமர்த்தப்பட வேண்டுமாயின், சிறந்த நற்பண்பு உடையராய் இருத்தல் வேண்டும். அங்ஙனம் அமர்ந்தாலும், நல்லறிஞர் புடைசூழ இருந்தால் எவரானும் அகற்ற முடியாத வலிமை பெற்றோராய் இருக்கலாம். இல்லையேல் சுற்றியிருப்போரே பொறாமை காரணமாகப் பதவியினின்றும் அகற்றுவதற்குரிய வழிகள் தேடுவர்.” (இலக்குவம் : வள்ளுவர் வகுத்த அரசியல்: பக்கம் 746) என விளக்கம் தருகிறார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்.

பேரா.சி.இலக்குவனார் கருத்தை அடியொற்றி மீண்டும் பெறும் பதவி வாய்ப்பு மட்டுமல்லாமல் எல்லாவகை நன்மைகளையும் மீளப் பெறுவதைக் குறிக்கும் வகையில் பொதுவாக “மீண்டும் கிடைக்கும் நல்வாய்ப்பு” எனப் பொதுவாக விளக்கியுள்ளேன்.

மறுபிறவியில் அடையும் இன்பம் என்றால், மறு பிறவி உள்ளதா? மறுபிறவி மனிதப்பிறவிதானா? என்றெல்லாம் வினாக்கள் வரும். இப்பிறவிக்கான எதிர்விளைவு அடுத்த பிறவியில் நிகழ்வதால் இப்பிறவியில் என்ன பயன்? அந்தந்தப் பிறவியில் உள்ள செயல்களுக்கான நன்மை தீமைகள்  அந்தந்தந்தப் பிறவியிலேயே அமையும் என்றால்தான் வாழும் பிறவியிலேயே நன்மை கிடைக்க வேண்டும் என்றும் தீமை கிடைக்கக் கூடாது என்றும் தீச்செயல்களை விலக்குவர்; நற்செயல்கள் புரிவர்.

“இன நலம் ஏமாப்புடைத்து” என்பதற்கு மணக்குடவர், அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து என்கிறார்.

இனச்சுற்றம் மனநலத்தால் பெறும் சிறப்பை, நாம் பயனை மறுமுறை அடைவதற்குப் பாதுகாப்பாக விளங்கும். எனவே, மன நலத்தின் சிறப்பு இன நலத்தால் வலிமை பெறுகிறது எனலாம்.

உள்ளத்தின் சிறப்பால் இன நலத்தின் பாதுகாப்புடன் மீள் நன்மையை நாம் அடைவோம்!

Thursday, May 14, 2026

ஆட்சி செய்வது துன்பம் தருவதே! – இளங்கோ அடிகள்



ஆள்வோர் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதாக எண்ணுவோம். ஆனால் செங்கோலாட்சி புரிபவர்களுக்கு ஆட்சி செய்வது துன்பம் தருவதே  இதனையே தேசியப்புலவர் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறுகிறார். அது குறித்த பாடலடிகள் வருமாறு

மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்

பிழையுயிர் எய்திற் பெரும்பே ரச்சம்

குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி

மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்

துன்ப மல்லது தொழுதக வில்

சிலப்பதிகாரம் 2.காட்சிக்காதை, அடிகள் 100-104

பதவுரை:

மழை வளம்=மழையாகிய வளம்; கரப்பின்= பெய்யாது மறைந்தால்;  வான் பேர்= மிகப் பெரிய; அச்சம்= அச்சம் உண்டாம்; பிழை உயிர் எய்தில்=எதனாலும் உயிரினங்களுக்குத் துன்பம் வந்தால்; பெரும்பேர் அச்சம்=மிகப் பெரிய அச்சமுண்டாம்; குடிபுரவுண்டும்=குடிகளைக் காத்தலை மேற்கொண்டும்; கொடுங் கோல் அஞ்சி= கொடுங்கோலுக்கு அஞ்சி; மன்பதை காக்கும்=மக்கட் கூட்டத்தினைப் பேணிக் காக்கும்; நன் குடிப் பிறத்தல்= நல்ல குடியில் உதித்தல், துன்பம் அல்லது=துன்பந் தருவதல்லது; தொழுதகவு இல் =போற்றத்தக்கதன்று.

கருத்துரை:

மழைவளம் பெய்யாது போனால் ஆட்சியாளரையே மக்கள் குறைகூறுவர். அதனால் பெரும் அச்சம் வரும். கொடுங்கோல் ஆட்சியால் மக்கள் துன்பமுறாத வண்ணம் அவர்களைப் பேணிக்காக்கும் நல்ல குடியில் பிறத்தல் இன்பம் தருவதன்று; போற்றத்தக்கதுமன்று; துன்பம் தருவதே!

இதையேதான்,

மாரி   பொய்ப்பினும்,   வாரி   குன்றினும்,

இயற்கை   யல்லன   செயற்கையில்   தோன்றினும்,

காவலர்ப்   பழிக்குமிக்   கண்ணகன்   ஞாலம்;

(புறநானூறு 35, அடிகள் 28-30)

என்கிறார் புலவர் வெள்ளைக்குடி நாகனார்

அரிய மருந்து போன்ற நல்லாட்சி தருவது அரிதானதா? அல்லது எளிதானதா? எனச் சேக்கிழார் பெரிய புராணத்தில்  மனுநீதிச் சோழன் குறித்த பாடலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

அருமந்த அரசாட்சி அரிதோ? மற்று எளிதோ?

அஃதாவது நல்லாட்சி தருதல் எளியதன்று அரியதே என்கிறார்.

ஆள்வோர் மக்களிடம் வரி முதலானவற்றைப் பெறுவதால் அவர்கள் முதலாளிகளாகவும் ஆள்வோர் ஏவலராகவும் ஆகின்றனர். எனவே, ஏவலராகிய ஆள்வோர் மக்கட்பணி செய்ய வேண்டும்.

இப்பொழுதும் பெருமழை செய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் மழைபெய்யாமல் வறட்சி ஏற்பட்டுப் பஞ்சம் உண்டானாலும் ஆட்சியாளரைத்தான் மக்கள் குறைகூறி ஏசுவர்.

எனவே, இயற்கையாலும் செயற்கையாலும் மக்களுக்குத் துன்பம் வராத வகையிலும் அவ்வாறு துன்பம் வந்தால் அவற்றைத் துடைத்தழிக்கும் பணியிலும் ஆள்வோர் ஈடுபட வேண்டும். ஆள்வோர் எவ்வளவுதான் நன்மைகள் புரிந்தாலும் இறுதியில் தீமை ஏதும் புரிந்தார்கள் எனில், அத் தீமையைத்தான் எண்ணுவர். அதனால் ஆள்வோரை இகழ்ந்து பேசுவர். எனவே, ஆட்சிபுரிதல் துன்பம் தருவதே என்பதை உணர்ந்து நிறைகுறைகளை ஆய்ந்து மக்கள் ஆள்வோரை மதித்திடவேண்டும்.

ஆள்வோரும் மக்களுக்கு நன்மைகள்தான்புரிகின்றோம் என அலட்சியமாக இருந்து விடாமல், பழிவரும் செயல்களில் ஈடுபடாமல் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

Wednesday, May 13, 2026

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர் முறை தேவை – இலக்குவனார் திருவள்ளுவன்



தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும்  மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே. எனவே, இது முழுமையான மக்கள் மன்றமாக உள்ளது.

தற்போது, இந்திய மக்களவையில் (Lok Sabha) நியமன உறுப்பினர்கள் யாரும் இல்லை. 104-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2019-இன் மூலம், ஆங்கிலோ-இந்தியன் சமூகத்தினரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கும் முறை 2020 சனவரி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

மக்களவையில் நியமன உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும், மாநிலங்களவையில் (Rajya Sabha) கலை, இலக்கியம், அறிவியல்,  குமுகத் தொண்டு போன்ற துறைகளில் சிறந்த பன்னிருவரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கும் முறை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமேலவை 1921 முதல் செயற்பட்டு வந்தது.   நவம்பர் 1, 1986-இல் அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் ம.கோ.இரா.(M.G.R.)வால் கலைக்கப்பட்டு, மேலவை முறை நீக்கப்பட்டது. எல்லா மாநிலங்களிலும மேலவை இருந்த நிலைமாறி, இப்பொழுது ஆந்திரப்பிரதேசம், பீகார், கருநாடகா, மகாராட்டிரம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில்மட்டும்தான் மேலவை உள்ளது.

மேலவையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது கீழவையில் உணர்ச்சிகரமாக எடுக்கப்படும் முடிவுகளை அமைதியாக ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க மேலவை துணை புரியும் என்பர். அரசியல் கட்சிகளின் உணர்ச்சிப்பூர்வமான முடிவுகள் அல்லது அவசரச் சட்டங்களுக்கு எதிராக, மேலவை ஒரு பாதுகாப்புத் திரையாகச்     செயற்பட்டு, சட்டங்களை மறு ஆய்வு செய்ய வழிவகுக்கிறது. கீழவையில் அரசியல் காரணங்களுக்காக விவாதங்கள் தடைப்பட்டாலும், மேலவையில் ஆழமான, அரசியல் சார்பற்ற விவாதங்கள் நடத்த வழி வகுக்கப்படலாம்.

சூடான பானத்தைக் குவளையும் தட்டும் கொண்டு அருந்தும் பொழுது குவளையில் சூடாக இருக்கும் பானம் தட்டில் ஊற்றப்பட்டு குடிக்கும் பக்குவத்திற்குச் சூடு தணிந்த  நிலையில் இருக்கும். இதுபோன்ற செயற்பாடுதான் மேலவையின் செயற்பாடு என்று அருமையாகப் பேரறிஞர் அண்ணா கூறுவார். அஃதாவது கீழவையைக் குவளை என்றும் மேலவையைத் தட்டு(Cup and saucer)  என்றும் ஒப்பிட்டுக் குறிப்பார்.

ஆனால், அத்தகைய செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். தேர்தல் அரசியலை எதிர்நோக்க இயலாத அறிஞர்கள், வல்லுநர்கள்,  கல்வியாளர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், கலை, இலக்கியம், குமுகப்பணிகளில் சிறந்தவர்கள், தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல், மேலவை உறுப்பினர் (MLC) ஆகப் பங்கேற்கும் வாய்ப்பு நின்று விட்டது. என்றாலும் அவ்வப்பொழுது மேலவையை மீள அறிமுகப்படுத்துவது குறித்து விவாதங்கள் எழுவது வழக்கமாக உள்ளது.

மேலவைக்கான வாய்ப்பு இல்லாத நேர்வில் இத்தகையோருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சட்ட மன்ற உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் 234 உறுப்பினர்கள் உள்ள்னர். இதில் ஏறத்தாழ  10 விழுக்காட்டிற்கு ஒப்பாக 25 நியமன உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இதன் மூலமாக இத்தகையோர் சட்ட மன்றத்திற்குள் வந்து பங்களிக்க முடியும்.

மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படும் எனலாம். மாநிலங்களவைக்கு ஒன்றிய அரசு பரிந்துரைப்வர்களைத்தான் குடியரசுத் தலைவர் நியமிப்பார்.  இங்கு மாநில அரசின் பரிந்துரையை ஏற்காமல் ஒன்றிய அரசின் முகவராகச் செயற்படும் ஆளுநர் மாநில அரசின் பரிந்துரைகளைப் புறக்கணிக்கும் வாய்ப்பே மிகுதியாக உள்ளது. எனவே, நியமன உறுப்பினர் முறை அறிமுகப்படுத்தப்படும்பொழுது அதற்கான அதிகாரத்தை முதல்வருக்கு வழங்க வேண்டும்.

மாநிலத் தகவல் ஆணையரை எதிர்க்கட்சித்தலைவரை உறுப்பினராகக் கொண்ட முதல்வர் தலைமையிலான குழு முடிவு செய்து ஆளுநருக்குப் பரிந்துரைக்கும். அதுபோல் இங்கும் ஒரு குழுவை அமர்த்தலாம். ஆனால், முதல்வருக்கே நியமன அதிகாரம் அளிப்பின் சட்டப்பேரவை முன்னவர், எதிர்க்கட்சித்தலைவர்,  மாநில அமைச்சர் ஒருவர் அடங்கிய குழு முதல்வருக்குப் பரிந்துரைக்க வேண்டும். பரிந்துரைக்கப்படுபவர்கள் தமிழுணர்வும் தமிழ்நாட்டுணர்வும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஆதலின், சட்டப்பேரவையில் நியமன உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கான தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் நிறைவேற்றி உரியவாறு தொடர் நடவடிக்கை எடுத்து ஆவன செய்ய வேண்டும்.

ஆங்கிலோ இந்தியர் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை யெனில் அவர்களில் ஒருவரை நியமிக்கும் முறை தமிழ்நாட்டில் இருந்தது. ஆனால், இந்திய அரசியல் யாப்பின் 104 ஆவது திருத்தச் சட்டம் (2020) நடைமுறைக்கு வந்ததும் இந்தியா முழுவதும் இந்நியமன முறை நீக்கப்பட்டதால் தமிழ்நாட்டிலும் நீக்கப்பட்டது. ஆனால் அஃது இட ஒதுக்கீடு முறையில் மேற்கொள்ளப்பட்டது. எனவே, இந்நியமன முறைக்கு அரசியல் யாப்பில் திருத்தம் தேவையில்லை.

அறிவுரை கூறின் ஏற்கத்தக்கவராக மாண்புமிகு முதல்வர் ச.சோ.வி்சய் உள்ளமையால் அவரும் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் சா.கி்.தே.(J.C.D.) பிரபாகரும் விரைந்து நடவடிக்கை எடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.

வல்லுநர்கள் பங்களிப்பில் சட்டப்பேரசை மிளிரட்டும்!

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்.  

(திருவள்ளுவர், திருக்குறள் ௪௱௪௰௧ – 441)

Followers

Blog Archive