Wednesday, April 15, 2026

நாலடி நல்கும் நன்னெறி 26: வறுமையிலும் உதவுக! – இலக்குவனார்திருவள்ளுவன்

      16 April 2026      கரமுதல



(நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! – தொடர்ச்சி)

உறுபுனல் தந்துலகூட்டி அறுமிடத்தும்
கல்லூற்றுழியூறும் ஆறேபோல்; – செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற்பாலவை.

பொருளுரை:

மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் மிகுதியான நீரை உலகமக்களுக்குக் கொடுத்து  உண்பிக்கும் ஆறு. கோடைக்காலத்தில் நீரற்றுபோனாலும்   ஊற்றுக்குழியைத் தோண்டுவோருக்கு, நீர்சுரந்து உதவிசெய்யும். இத்தகைய ஆற்றைப்போலப், பெரியோர் தம்செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து உதவுவர். அவர்கள் வறுமை நேரிட்டாலும்  தம்மால் இயலும் அளவு பிறர்க்கு உதவி செய்வர். வறுமையிலும் பிறருக்குத்தரும் பெருமையை நாம் கொள்வோம்.

பதவுரை

 உறுபுனல்= (மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும்) மிகுதியான நீர்; தந்து= கொடுத்து; உலகூட்டி  = உலகினருக்கு ஊட்டி, அஃதாவது உண்பித்து; அறுமிடத்தும்= வறண்டு நீர் அற்ற காலத்திலும்;  கல்லூற்றுழி= தோண்டும் ஊற்றினிலே; ஊறும்= நீர் சுரக்கும், அஃதாவது நீரைச் சுரந்து சிலருக்கேனும் உதவுகின்ற; ஆறே போல்= ஆற்றைப்போல்; செல்வம்= பெரியோர்த ம்மிடம் உள்ள பொருளை; பலர்க்கு ஆற்றி=பலருக்கும் கொடுத்து உதவி; கெட்டு உலந்தக் கண்ணும்= நிலைமை கெட்டுப் பொருள் இல்லாது ஒழிந்த பின்னும்; சிலர்க்காற்றி=இயன்ற வரையில் சிலருக்கேனும் உதவி; செயற்பாலவை= செய்யக் கூடியவற்றை;செய்வர்=செய்வார்கள்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும் வாய்எல்லாஞ் செயல்.   (திருக்குறள், ௩௰௩- 33)

என்கிறார் திருவள்ளுவர்.

முடியக்கூடிய இடங்களில் எல்லாம் அறச்செயல் புரிய வேண்டும். முடியாதபோதும் வாய்ப்புள்ள வழியில் எல்லாம் அறச்செயல் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது இக்குறள். பணம் கொடுப்பது மட்டும்தான் அறவினைஅல்ல.  பிறருக்குத் துன்பம் நேரும்பொழுது அதைத் துடைக்கிற எல்லாச் செயலும் அறம்தான். பிறருக்கு உதவி தேவைப்படும்பொழுது நம்மால் முடியக்கூடிய வழிகளில் உதவ வேண்டும்.

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் வேந்தர்    

தமக்கென முயலா நோன்தாள்,

பிறர்க்கென முயலுநர் உண்மையானே.

என்கிறார்.

உலகம் எதனால் இயங்குகிறது என வினா தொடுத்து, பிறருக்கு உதவுவதற்காக முயலும் பெரும்பண்பினராலேயே உலகம் இயங்குகிறது என்கிறார். இவர்கள் தாம்வாழவேண்டும் என்பதற்காக முயற்சி மேற்கொள்பவர்கள் அல்லர். பிறர் வாழவேண்டும் என்பதற்காக முயற்சி மேற்கொள்பவர்கள்.

ஒளவையாரும் இதனையே கூறுகிறார்.

“ஆற்றுப்பெருக்கற்றடிசுடு மந்நாளு மவ்வாறு

ஊற்றுப்பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு

நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார்ஆனாலும்

இல்லை யெனமாட்டார் இசைந்து”(நல்வழி பாடல்: 9)

என்கிறார் அவர்.

ஆற்றில் நீர்ப்பெருக்கின்றி வற்றிப் போனாலும் உலகுக்கு ஊட்ட ஊற்றின்மூலம் நீரைவழங்கும். அதைப்போல் நற்குடிப்பிறந்தோர் வறுமையுற்றாலும் தம்மை நாடிவருவோருக்கு இல்லை என்று சொல்லமாட்டார்கள்.

உயர்நிலை தாழ்நிலை என எந்நிலைவந்தாலும் தங்கடமைகளைச் செய்தலே பெரியோர் இயல்பாகும். சிறியோர்  தம் செல்வப்பெருக்கில் இருந்தாலும்கூடப் பிறருக்கு உதவுதல் அரிதாகும். அவ்வாறு நாம் இருத்தல் கூடாது. 

இவ்வாறு கொடைக்கடனை என்றும் மறவாது போற்றும் பெரியோர்போல் வாழவேண்டும் என நாலடி நவில்கிறது. ஆதலின் நம்மிடம் செல்வம் இருந்தாலும் இல்லாமல் வறுமை உற்றாலும் இயன்றவரைபிறருக்கு உதவ வேண்டும்.

Monday, April 13, 2026

குறட் கடலிற் சில துளிகள் 43: தூய மனத்தவர்க்கு அவர்க்குப் பின்பும் புகழ் நிலைத்து நிற்கும் – இலக்குவனார் திருவள்ளுவன்

      14 April 2026      கரமுதல



(குறட் கடலிற் சில துளிகள் 42: மனம், செயல் ஆகியவற்றின் தூய்மை இனத்தூய்மையாலே வரும்.- தொடர்ச்சி)

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு

இல்லைநன் றாகா வினை.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௬ – 456)

மனத்தூய்மை உடையவர்க்கு அவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியன நல்லவையாய் அமையும். தூய இனம் உடையவர்க்கு நன்மை விளைவிக்காத செயல் எதுவுமில்லை.

பதவுரை: மனம்-உள்ளம்; தூயார்க்கு-தூய்மையுடையவர்க்கு; எச்சம்- புகழ்; நன்றாகும்-நன்மையுடையதாகும்; இனம்-குழு; தூயார்க்கு-தூய்மையுடையவர்க்கு; இல்லை-இல்லை; நன்று-நன்மையுடையது; ஆகா-ஆகாத; வினை-செயல்.

எச்சம் என்பதற்கு மணக்குடவர் “பின்பு நிற்கும் காணம் முதலான பொருள்கள்” என்கிறார். காணம் என்னும் சொல்லுக்குக் கொள்ளு, செக்கு,  பழைய நிறுத்தலளவை ஒன்றின் பெயர், பொன், பொருள், பாகம் எனப் பொருள்கள். மணக்குடவர் பொன், பொருள் முதலியவற்றைக் கூறுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  

பரிப்பெருமாள் மக்கள் முதலான பொருள்கள் என்றும்  பரிதி புதல்வர் என்றும் காலிங்கர் மக்கட்பேறு முதலிய என்றும் பரிமேலழகர்  மக்கட்பேறு என்றும் கூறுகின்றனர்.

இவர்கள் வழியில் இன்றைய ஆசிரியர்களில் பலரும் பின்வழி என்றும் மக்கட்பேறு என்றும் நன்மக்கட் பேறு என்றும் எச்சத்திற்குப் பொருள் காண்கின்றனர்.

ஆனால், இவை பொருந்தா. திருமணமாகாதவர்க்கும் அல்லது திருமணமாகிக் குழந்தைப் பேறு பெறாதவர்களுக்கும் இவ்வாறான குறட்பொருள் பொருந்தாதே!

எச்சம் என்றால் என்ன?  எஞ்சி நிற்பது. அஃதாவது ஒருவர் மறைவிற்குப் அவர் விட்டுச் செல்வது. ‘மிச்சம்’ ‘விட்டிருப்பது என்றும் கூறுவர். ஒருவர் ஈட்டிய பொன், உடைமைகள், பிள்ளைகள், புகழ், நற்பெயர், நற்செயல்களின் அடையாளங்கள். முதலியனவே எச்சமாகின்றது. ஒருவர் கல்விக்கூடம், மருத்துவமனை, நீர்நிலைகள், திருமண மண்டபங்கள் முதலியவற்றைக் கட்டித்தந்திருந்தால் அவருக்குப் பின்னும் அவை மக்கட்குப் பயன்பட்டு அவரின் நற்பெயர்களைப் பறைசாற்றும். இவையே எச்சமாகும்.

தூய மனம் கொண்டவர்கள் பிறருக்கு நற்செயல்கள் புரிவர். அவற்றால் பயனடைந்தவர்கள் அவர்களின் புகழைப் பறைசாற்றுவர். நல்வினைப் பயன் என்பதையும் எச்சமாகத்தான் கருத வேண்டும்.

இனத் தூய்மை உடையவர்கள் நல்ல துணையுடன் இருப்பர். நற்செயல் புரிவோர் நற்றுணையுடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு ஆகாதது என்று எதுவும் இல்லாமல் அவர்களுக்கு நடப்பனவெல்லாம் நல்லனவாகவே இருக்கும்.

இனத் தூய்மை உடையவர்கள் நல்ல துணையுடன் இருப்பர். நற்செயல் புரிவோர் நற்றுணையுடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு ஆகாதது என்று எதுவும் இல்லாமல் அவர்களுக்கு நடப்பனவெல்லாம் நல்லனவாகவே இருக்கும்.

அப்படியானால், இனத்தூய்மை உடையவர்க்குத் தீயன விளையாதா? இடர்கள் ஏற்படாவா? துன்பங்கள் உண்டாகாவா? துயரங்கள் வாராவா? இவை வரலாம். ஆனால் இவற்றால் பாதிப்புகள் ஏற்படா வண்ணம் உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களையும் நட்பு.  எனவே, தூய இனத்தை உடையவர்க்கு இன்னலைக் களையும் நட்பு இருப்பின் எல்லாமே நல்லனவாகும். எனவே, நன்றாகாத வினை எதுவும் இருக்காது.

ஆதலின் மனத்தைத் தூயதாக வைத்திருப்போம்! நல்லினத்துடனே நட்பு பாராட்டுவோம்! நமக்கும் நம்மைச் சார்ந்தவர்க்கும் நல்லனவே நிகழும்!

நாம் ஆற்றும் நல்வினைப் பயன்களின் நல் விளைவுகள் நாம் மறைந்த பின்னரும் எஞ்சி நின்று நம் பெயரை நிலை நிறுத்தும். எனவே, நாமும் நாம் விட்டுச்செல்வதற்குரிய நற்பயன் தரும்  அருஞ்செயல் ஆற்றுவோம்!

தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே!- இலக்குவனார் திருவள்ளுவன்



தாய், பங்குனி 30,2057/ஏப்பிரல் 13, 2026

‘கண்டவர் இல்’ என, உலகத்துள் உணராதார்,
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை.

நல்லந்துவனார், கலித்தொகை : 125 : 1-4

நெய்தற் கலி

இப்பாடல் 24 அடிகளையுடையது. முதல் 4 அடிகள் மட்டும் இங்கே தரப்பட்டுள்ளன.

பதவுரை:

கண்டவர் இல்=பார்த்தவர் இல்லை; உலகத்துள்=உலகத்தில் உள்ளவர்கள்; உணராதார்=அறியாவிட்டாலும்; தங்காது=தொடர்புடையவர்களிடம் மட்டும் தங்கியிராமல்;

தகைவு இன்றித்=தடையின்றி; தாம் செய்யும் = தாம் ஆற்றும்; வினைகளுள்=செயல்களுள்;

நெஞ்சு=மனம்; அறிந்த=அறியும்; கொடியவை=கொடிய செயல்களை; மறைப்பினும்=மறைத்தாலும்; அறிபவர்=அறிந்தவர் இல்லை என எண்ணாதே;

நெஞ்சத்துக் குறுகிய=மனம் மட்டும் அறிந்ததற்கு; கரி=சான்று; இல்லை = தேவையில்லை.

கருத்து:

தாம் செய்யும் தீவினைச் செயல்களை உலகத்தில் யாரும் அறியார் என எண்ணித் தீங்கு செய்யாதே. அவற்றை உன் மனமறியும். ஆகவே, மனச்சான்றின்படி தீவினை புரியாமல் வாழ்வாயாக!

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

           (திருக்குறள், ௨௱௯௰௩ – 293)

என்கிறார் திருவள்ளுவர்.

தன்னைத்தன் நெஞ்சங் கரியாகத் தானடங்கின்
பின்னைத்தான் எய்தா நலனில்லை.

என்கிறார் முனைப்பாடியார் (அறநெறிச்சாரம் 141.1-2)

தன் செயல்களுக்குத் தன் மனத்தினையே சான்றாக வைத்து ஒருவன் அடக்கமாக இருந்து வாழ்ந்து வருவானாயின், பின்னர் அவனால் அடைய முடியாத இன்பம் எவ்வுலகத்திலும் இல்லை என்று பொருள்.

இவ்வாறு பிறரும் நெஞ்சறிய தீவினை புரியாதே என்கின்றனர்.

தீய செயல்களைச் செய்தால் அதன் விளைவு யாருக்கு எதிராகத் தீவினை செய்தார்களோ அத்தகைய பாதிக்கப்பட்டவர்களுக்கும் தீயன உண்டாக்கும்.

அதே நேரம், தீ வினை புரிவோருக்கும் தீயனவே விளையும். தீயோர் தீயவற்றை எவ்வளவு கமுக்கமாகச் செய்தாலும் உலகத்தினரால் அறியப்படும்.

அதனால் உலக மக்களின் பழிக்கு ஆளாவர். ஒருவேளை யாரும் அவற்றை அறியாமல் இருக்கலாம்.

ஆனால், அந்தச் சூழலிலும் தீவினை புரிந்தோரின் உள்ளத்தை அது சுடும்.

சேக்சுபியரின் மேக்குபெத்து (மேக்குபெத்தின் துயரங்கள் / The Tragedy of Macbeth) நாடகத்தில் மேக்குபெத்து (Macbeth), தன் மனைவியின் தூண்டுதலால் அரசர் தன்கன் (King Duncan)-ஐக் கொன்று விடுகிறான்.

திருவாட்டி மேக்குபெத்து தன் கையில் உள்ள குருதிக் கறையைக் கொஞ்சம் தண்ணீரால் கழுவிடலாம் என்பார்.

ஆனால் பின்னர் குற்ற உணர்வால் கையில் குருதி வாடை இருப்பதாகக் கற்பனையாக எண்ணிக் கொண்டு அடிக்கடி கை கழுவுவார்.

“குருதி வாடை இன்னும் இருக்கிறது.. அரபு நாடுகளில் உள்ள அத்தனை நறுமண நெய்களைக் கொண்டு கை கழுவினாலும் இந்தச் சிறிய கை மணக்காது” (Here’s the smell of the blood still. All the perfumes of Arabia will not sweeten this little hand.) என்பார்.

(இந்நாடகத்தின் மொழி ஆக்க நூல் ஒன்றில் முதலில் கழுவக் கொஞ்சம் தண்ணீர் போதும் என்றதால், அனைத்துக் கடல் நீரைக் கொண்டு கழுவினாலும் கறை போகாது என வரும்.)

செய்யும் தீவினைக்கு மனமே சான்றாய் அமைந்து துன்பம் தரும் என்பதற்கு இந்நாடகக் காட்சியே எடுத்துக் காட்டாகும்.

எனவே, மனச்சான்றுக்கு அஞ்சித் தீவினை புரியாமல் இருக்க வேண்டும்.


Sunday, April 12, 2026

இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 5: கல்வி முறையை மாற்றுக! : இலக்குவனார் திருவள்ளுவன்

     13 April 2026      அகரமுதல

 



(இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 4 : தமிழ்வழிப் பயில்வோருக்கு முதலுரிமை : தொடர்ச்சி)

தமிழ் வழியில் பயில்பவர்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பின் அவ்வாறு பயில்பவர்கள்தாம் மிகுதியாக இருப்பர் என்பதில் ஐயமில்லை. அறிவு வளர்ச்சிக்காகக் கல்வி என்றில்லாமல் வேலைக்காகப் படிப்பு என்று மாறி விட்ட சூழலில் வேலைவாய்ப்பு இருப்பின் மட்டுமே தமிழ் வழியில் பயில்வர் என்பதை உணர வேண்டும். எனவே இப்போதைய அரசாவது  தமிழில் படித்தவர்களுக்கும் தமிழைப் படித்தவர்களுக்கும் 80%வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்.வேலைப் பாதுகாப்பு இருப்பின் அனைவரும் தமிழ்வழிக்கல்வியையே நாடி வருவர்.

  அரசுப் பள்ளிகளை ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றுவதை நிறுத்தி  விட்டு ஆங்கில வழிப்பள்ளிகளைத் தமிழ் வழிப் பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தொழிற்கல்விகளில் பிற மாநிலத்தவர் மிகுதியாகப் படிக்கின்றனர்.  வெளிநாடுகளுக்குச் சென்று நாம் கற்க வேண்டியதாக இருப்பின்முதலில் அவர்கள் மொழியைக் கற்பித்துவிட்டுப் பின் அம் மொழிவாயிலாகத்தான் கற்பிக்கின்றனர். இத்தகைய நிலை தமிழ்நாட்டிலும் வரவேண்டும். அதற்கு முன்னதாகக் குறைந்தது இங்கே பயிலும் அனைவரும் தமிழ் மொழித் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். 

  மொழி, இனம் பற்றிய வரலாற்றைக் கற்பிப்பது மொழி, இனத் தொன்மை வரலாறு அறியாதவர்களால், பிற்போக்காகத் திரிக்கப்பட்டு அவை மறைக்கப்படுகின்றன. தமிழர்களின் தேசிய மொழி தமிழ் என்ற உண்மை மறைக்கப்படுகிறது. இந்தி எதிர்ப்புப் போரால் ஆட்சிக்கு வந்தவர்கள்கூட, வரலாற்றில் இவை இடம் பெறச் செய்யவில்லை. தமிழின் தொன்மைச்சிறப்பு, உயர்தனிச் செம்மொழிச் சிறப்பு சரியான முறையில் விளக்கப்படுவதில்லை. ஆரியம் போல் உலகவழக்கு அழிந்து ஒழியாச் சீரிளமைத் திறத்தை வியந்து மனோன்மணி சுந்தரனார் பாடிய பாடல் வரிகள் எடுக்கப்பட்டுத்தான் தமிழ்த்தாய் வாழ்த்து  என்று சொல்லப்படுகிறது. இவ்வாறில்லாமல், தமிழின் சிறப்புகள் தமிழ்ப்பாடங்களிலும் தமிழ்நாட்டில் கற்பிக்கப்படும் பிற மொழிப்பாடங்களிலும் இடம் பெற வேண்டும்.தமிழ் மக்களுக்குத் தங்களின் தேசிய மொழியும் தேசிய இனமும் தமிழே என்பதை உணர்த்தும் கல்வி முறையே தேவை. பாரதியார் கூறியதுபோல் தமிழ்நாடு சார்ந்த புவியியல், பயிரியல் முதலான அறிவு உணர்த்தும் பாடங்களே தேவை.

பிற நாடுகளில் மழலைக் கல்வி என்பதே விளையாட்டுடன்தான் தொடங்குகிறது.  ஆனால்நம் நாட்டில் மனப்பாட முறைக்கும் எழுத்து முறைக்கும் முதன்மை கொடுக்கிறோம். பள்ளிக்கூட வகுப்புகளில் விளையாட்டு வகுப்புகள் இருப்பினும்  அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்கும்  வகையிலும் ஆற்றல் உள்ளவர்களை  ஊக்கப்படுத்தும் முறையிலும் இல்லை. பலரின் திறமை வெளிக்கொணரப்படாமையால் அல்லது கவனத்திற்குக் கொண்டு வரப்படாமையால் எண்ணற்ற விளையாட்டு வீரர்களை நாம் விளையாட்டுத்துறையில் இழக்கின்றோம். எனவேநம் கல்விமுறை மாற்றப்பட வேண்டும்.

  இதுபோல் கவின்கலைபிற கலைகளிலும் தொடக்கத்திலிருந்தே  ஈடுபாடு காட்டச் செய்யும் வகையிலும் கல்விமுறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். இசை வளர்ப்பிற்கென தமிழ்நாட்டில் 17 மாவட்ட இசைப்பள்ளிகள் உள்ளன. ஆனால்படைப்பாற்றல் மிக்க இசைக்கலைஞர்களை உருவாக்குவதைவிட மேடைக் கலைஞர்களை உருவாக்கும் முறையில்தான் இவை இயங்குகின்றன. இவற்றில் சேருவதற்கான அடிப்படைக் கல்வித் தகுதி சில துறைகளுக்கு ஏழாம் வகுப்பு எனவும் சில  துறைகளுக்கு   எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்று   நடைமுறையில் உள்ளது. ஆசிரியர் கல்வித் தகுதிகளிலும் சில துறைகளுக்கு எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும் என்ற முறையில் உள்ளது.   இவர்களால் கலைத்திறமையை வெளிப்படுத்த இயலுமே தவிரஇசையியல்கலையியல் வல்லுநர்களாகவோ அதற்கான படைப்பாற்றல் உடையவர்களாகவோ உருவாக இயலாது. இவ்வாறு தனியே இயங்கும் இசைப்பள்ளிகளை உடனடியாக  மூட வேண்டும்.

  மாவட்டந்தோறும் உண்டுறைப்பள்ளிகளைத் தொடங்கி பொதுப் பாடத்திட்டத்துடன் இணைந்த கலைக்கல்விப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இப்பள்ளிகள் எல்லா வசதிகளும்உடையனவாக இருக்க வேண்டும். இதன் மூலம் கலைத்துறை ஒதுக்கப்படாமல் இயல்பான முறையில் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும். இப்பொழுது பாடுநர் இருக்கும் அளவிற்குப்  பாடல் இயற்றும் பாடுநர் இல்லை. கருவியிசைக் கலஞைர்கள் உள்ள அளவிற்கு அத்துறை சார்ந்த இயலறிஞர்கள் இல்லை என்ற குறை இப்போது உள்ளது.  பாட முறைகளை மாற்றி அமைப்பதன் மூலம் இக் குறையைப் போக்க இயலும்.

  கல்வியைப் பற்றிப்  பேசும் பொழுதேகல்வியகங்களுடன் தொடர்புடைய ஆசிரியர் – பெற்றோர் முதலானவர்கள் உறவு குறித்தும் தெரிவிப்பது பொருத்தமாக இருக்கும்.

  அவ்வப்பொழுது பருவத் தேர்வு முடிவுகளுக்கேற்ப ஆசிரியர்கள் பெற்றோரை அழைத்து அறிவுரை கூறும் பள்ளிகளில் ஓரளவு  நல்லுறவு உள்ளது. எனினும் பொதுவாகப் பெரும்பாலான கல்வியகங்களில்மதிப்பெண் எடுக்காவிட்டால் மீண்டும் அதே  வகுப்பில் படிக்க வேண்டும் அல்லது மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்பது போன்ற மிரட்டல்தான் உள்ளது. இவையெல்லாம் மாணாக்கர்களை வழி நடத்தப் பெற்றோர்க்கு உதவுவதற்கு மாற்றாகப்  பள்ளியின் மீது பெற்றோர்க்கு வெறுப்பை ஏற்படுத்துவனவாகவே அமைகின்றன. நிருவாகம் என்பது பணம் பிடுங்கும் இயந்திரமாக இருப்பதால்,  ஆட்சிக்குழுவினருக்கும் பெற்றோர்க்கும் எவ்வகை உறவும் இல்லை.  

Friday, April 10, 2026

சட்டச் சொற்கள் விளக்கம் 1041-1042: இலக்குவனார் திருவள்ளுவன்

      11 April 2026      கரமுதல



(சட்டச் சொற்கள் விளக்கம் 1036-1040 : தொடர்ச்சி)

1041. Awareness  விழிப்புணர்வு

சட்ட விழிப்புணர்வு தனி விழிப்புணர்வுகுமுக விழிப்புணர்வுபண்பாட்டு விழிப்புணர்வுஉணர்வு விழிப்புணர்வுஅமைப்பு விழிப்புணர்வுஉறவு விழிப்புணர்வுகுடிமை விழிப்புணர்வுதொழில்நுட்ப விழிப்புணர்வுநலவாழ்வு விழிப்புணர்வு, மனநல விழிப்புணர்வு மன்பதை விழிப்புணர்வுஊடக விழிப்புணர்வுசுற்றுப்புற விழிப்புணர்வுவரலாற்று விழிப்புணர்வுமுதலீட்டு விழிப்புணர்வுசேமிப்பு விழிப்புணர்வு, அரசியல் விழிப்புணர்வு முதலியவாறாகப் பலவகைப்படும்.

தொடர்பான சிக்கல்கள் வழக்குகளில் இடம் பெறும்பொழுது தொடர்புடைய சொற்கள் சட்டச் சொற்கள் ஆகின்றன.

சட்ட விழிப்புணர்வு (Legal awarness) என்பது பொது மக்களுக்கான சட்டக் கல்வி அல்லது சட்ட நூலறிவு என்றும் அழைக்கப்படுகிறதுசில நேரங்களில் குடிமக்களின் கல்வி எனவும் குறிக்கப் பெறுகிறது.

இது தனியர்களைச் சட்ட அமைப்பில் வலுப்படுத்தும் வகையில் சட்டங்கள்உரிமைகள்சட்ட செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதைக் குறிக்கிறது.

சட்டம்நீதிமன்ற அமைப்புகளுக்குத்  தொடர்புடைய பொதுப் பலன்களையும் திறன்களையும் மேம்படுத்துவதற்காக நோக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளை இது கொண்டுள்ளது. மேலும் அந்தச் செயல்பாடுகளுடன் தொடர்புடைய நடைமுறைபடிப்புத்துறைகளையும்சட்டம் பற்றிய அறிவை  மக்களுக்கு வழங்குவதில் குமுகாய- தொழில்முறை இயக்கத்தையும் குறிக்கிறது.

அமெரிக்கர்சட்ட உரைஞர் சங்கம்(American Bar Association) சட்ட விழிப்புணர்வுஎன்றால் . குறையாய்வுத் தீர்ப்புகள் குறித்த சட்டப் பொருண்மைகள், சட்ட வழிமுறை, வாய்ப்புள்ள சட்ட வளங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தவும் மேம்படுத்தவும் உள்ள வழிகளையும் உத்திகளையும் வெளிப்படுத்தவும் வழிகாட்டுவது என்கிறது.

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், (PHRA) 1993 பொது மக்களுக்கு மனித உரிமைகள் குறித்தும் தொடர்பான சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு தேவை என்பதற்காக இயற்றப்பட்டது.
1042. Axe to grindமறைமுக நோக்கம்   

கூறியதையே திரும்பத் திரும்பக்‌ கூறுதல் என்பது நேர் பொருள். சட்டத் துறையில் மறைநோக்கத்தை – அஃதாவது மறைமுக நோக்கத்தைக் குறிப்பது. மறை நோக்கம் என்றால் தவறாகப் பொருள் கொள்ளலாம் என்பதால் மறைமுக நோக்கம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. எனினும் நாளடைவில் மறை நோக்கம் என்றே பயன்படுத்தலாம்.

இத் தொடர் ஒருவர், தூய பொதுநலத்தின் அடிப்படையில் செயல்படாமல், மாறாக ஒரு குறிப்பிட்ட ஆதாயத்தைப் பெறுவதற்காக அல்லது பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார் என்பதை உணர்த்துகிறது.

தனியரின் நோக்கங்கள் வெளிப்படையானவை அல்ல என்றும், அவை தனிப்பட்ட மனக்குறைகள் அல்லது மறைமுக நலன்களால் உந்தப்பட்டிருக்கலாம் என்றும் இத்தொடர் சுட்டிக்காட்டுகிறது.

Followers

Blog Archive