Saturday, May 2, 2026

மொழிப்போர் வரலாறு அறிவோம்! -13 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 1 : இலக்குவனார் திருவள்ளுவன்



(மொழிப்போர் வரலாறு அறிவோம்! -12 : தமிழ்க்காப்பிற்காகவே இந்தியை எதிர்த்தனர் : தொடர்ச்சி)

இந்தி எதிர்ப்புப்போராட்டங்களை அறியும் நாம் அது வந்த வழியான அரசியல் யாப்பு நிலைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவை குறித்துச் சுருக்கமாகப் பார்ப்போம்.

அரசமைப்பு அவைக்கான முதல் கோரிக்கை தன்னாட்சிக்கட்சியால் (Swaraj Party) 03.05.1934 அன்று எழுப்பப்பட்டது. இது வெள்ளைத்தாள் முன்மொழிவுகளை மறுத்தது. இஃது இந்திய அரசு சட்டம் 1935 இல் இணைக்கப்பட்டது.

அரசு செயலர் பிரடெரிக்கு பெத்திக்கு இலாரன்சு(Frederick Pethick Lawrence),    வயவர் இசுதான்போர்டு கிரிப்புசு(Sir Stanfford Cripps),   ஏ.வி. அலெக்குசாண்டர்(A.V. Alexander) ஆகிய இரண்டு அமைச்சர்கள், அடங்கிய அமைச்சுத்தூதுக் குழு வகுத்தளித்த திட்டம்; அமைச்சுத்  தூதுத்திட்டம், 1946 என்று அழைக்கப்படும் இதுவே இந்திய அரசியல் யாப்பு அவையை உருவாக்கியது. இவ்வவை, இந்திய விடுதலைச் சட்டம் 1947, பிரிவு 8இன் கீழ் ஏற்கப்பெற்றது.

இத்திட்டத்தின் கீழ், 1946ஆம் ஆண்டு மாகாணச்சட்ட அவைகளின் உறுப்பினர்கள், மாற்றத்தக்க ஒற்றை வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூடுதலாகத், தன்னரசு இளவரசர்களை அரசியல் யாப்பவையில் சேர்க்கப் பேச்சும் நடந்தது. யாப்பு அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் பெரும்பான்மையர் ஆண் இந்துக்கள். என்ற போதும்,  எல்லா முதன்மை மதக் குழுக்களிலிருந்தும் ஒவ்வொரு குழுவிலிருந்தும் குறைந்தது இருவர் வீதம் 15 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

80% அவை உறுப்பினர்கள் பேராயக்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் கட்சிக்குள்ளேயே வேற்றுமை இருந்தது. இதன் காரணமாக யாப்பு அவையில் சமவுடைமை, தாராளமயம், பழமைவாதம் கருத்துகளின் சார்பு இருந்தது. நாடாளுமன்ற மைய அவையாக இப்போது அழைக்கப்படுகின்ற அரசியல் யாப்பு அவையில் முதன்முறையாக 09.12.1946 அன்று அரசியல்யாப்புக் குழு கூடியது. பதிவேட்டில் கையொப்பமிட்டுச்,  சான்றாவணம் அளித்த 207 உறுப்பினர்கள் வருகைபுரிந்திருந்தனர்.

திசம்பர் 1947 இல் யாப்பு அவையில் 299 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களுள் 229பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், 12 பேர் மாகாண அரசர்கள்/இளவரசர்கள், 70 பேர் தன்னாட்சி அரசுகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்டவர்கள். இம்மன்றத்தில் மொழிகள் குறித்த காரசார விவாதம் நடைபெற்றது.

இந்திய அரசியல் யாப்பு 26.01.1950 இல் நடைமுறைக்கு வந்தது.

இஃது ஏற்றுக் கொள்ளப்பட்ட நேரத்தில், யாப்பு 22 பகுதிகளையும் 396 கூறுகளையும் 8 அட்டவணைகளையும்  145,000 சொற்களையும் கொண்டிருந்தது. உலகிலேயே இது மிக நீண்ட யாப்பாகும்.

யாப்பிலுள்ள ஒவ்வொரு கூறும் யாப்பு அவை உறுப்பினர்களால் 11 அமர்வுகளில் 167 நாள்களில் 2 ஆண்டுகள் 11 திங்களில் விவாதிக்கப்பட்டதாகும்.

அரசியலமைப்பை எழுத வேண்டிய மொழி, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்குரிய மொழி, புதிய குடியரசுக்கான ‘தேசியமொழி’ போன்ற செய்திகள் மிகவும் அனல்பறக்க விவாதிக்கப்பட்டன.

இந்தி பேசும் மாநிலங்களின் உறுப்பினர்களான அல்கு இராய் (சாத்திரி), ஆர்.வி. துலேகர், பாலகிருட்டிண (சருமா), புருசோத்தம் தாசு தாண்டன் (ஐக்கிய மாகாணம்), பாபுநாத்து குகா (பீகார்), அரி வினாயக்கு படசுகர் (மும்பை), சேத்து கோவிந்து தாசு (மத்திய மாகாணம்) ஆகியோர் ஒரு பக்கம் பல இந்தி ஆதரவு சட்ட வரைவுகளைக் கொண்டுவந்து இந்தியை மட்டுமே தேசிய மொழியாகத் தேர்வு செய்ய வாதாடினர்.

 10.12.1946 அன்று துலேகர் “இந்துத்தானி அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள். இந்தியாவின் அரசியலமைப்பை முடிவு செய்கின்ற இந்த மன்றத்தில் இருந்துகொண்டு இந்துத்தானி அறியாதவர்கள் உறுப்பினராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள்; அவர்கள் விலகிக் கொள்ளலாம்” என்று முழங்கினார்.

Friday, May 1, 2026

குறட் கடலிற் சில துளிகள் 45: இன நலமே பாதுகாப்பு! – இலக்குவனார் திருவள்ளுவன்



(குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுணையே- தொடர்ச்சி)

மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து

(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௮ – 458)

மனம் நன்னலமாக இருப்பினும் சான்றோர்க்கு இனநலமே பாதுகாப்பானது.

பதவுரை:

மன-மனத்தின்; நலம்-நன்மை; நன்கு-மிகுதியும்; உடையர்-உ்டையவர்கள்; ஆயினும்-ஆனாலும்; சான்றோர்க்கு-அறிவு, ஒழுக்கம் முதலியவற்றில் சிறந்து விளங்கும் பண்பாளர்க்கு; இனநலம்-இனத்தின் நன்மை; ஏமாப்பு-வலிமை, பாதுகாவல்; உடைத்து-உடையது.

கருத்துரைகள்

மன நலம் இருப்பினும் சிற்றினம் சேராமல் நல்லினத்துடன் சேர்ந்து வாழ்தலே பாதுகாப்பு உடையது என்கிறார் திருவள்ளுவர்.

மணக்குடவர் உரை: 

மன நன்மை மிக வுடையராயினும் இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து.

இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான் இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது.

 பரிமேலழகர் உரை:

மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்; சான்றோர்க்கு  இனநன்மை அதற்கு வலியாதலையுடைத்து

முந்தைய நல்வினையால் மனநலம் உடையவராக இருப்பதாகப் பரிமேலழகர் கூறுவதுபோல் சிலரும் அவர் வழியில் இவ்வாறே கூறுகின்றனர்.

உள்ளத் தூய்மை மிகக் கொண்டவரே ஆனாலும், சான்றோர்க்கு அவரைச் சேர்ந்தவர்களும் நல்லவர்களாக இருப்பது மன வலிமை கெடாது காக்கும்.

சான்றோர்கள் உறுதியான மனவளம் கொண்டவர்கள். அவர்களும் சிற்றினத்துடன் சேர்க்கை கொண்டால், அவர் மனம் தளர்ச்சி யடைந்து உள்ளத்தை மாசுபடுத்தி விடும். நல்ல இனத்தாருடனனான பழக்கம் அத்தகைய தளர்ச்சிக்கு வழி வகுக்காமல் பாதுகாப்பாக இருக்கும்.

சான்றோர்க்கே இனநலம் பாதுகாப்பாக இருக்கும் என்றால் பிறருக்கு மிகுதியும் இனநலம் தேவை என்பதை உணரலாம்.


நல்லினத்தைத் துணையாகக் கொண்டால் தீமையிலிருந்து காக்கவும் அழிவு வராமல் தடுக்கவும் நற்பயன் விளைவிக்கவும் பாதுகாவலாக இருக்கும். எனவே, நாம் இன நலனில் கருத்து செலுத்த வேண்டும். பல நாட்டுப் போராளிகளும் இனநலத்துடன் செயற்பட்டமையால்தான் மக்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டு, அந்நாட்டு விடுதலைக்கு வழிவகுத்தனர். ஈழத்திலும் விடுதலைப்புலிகளும் இன நலத்துடன் செயற்பட்டமையால்தான் அந்நாட்டு மக்களுக்கு எழுச்சி ஏற்படுத்தி இனப்படுகொலைகள் நிகழும்  வரை – வாணாள் வரையும் நல்லாட்சியும் புரிந்தனர்; தம் நாட்டவர்க்குப் பாதுகாப்பாகவும் இருந்தனர். ஆனால்,  இனநலமற்றவர் ஊடுருவலாலும் தமிழ்நாட்டு மக்கள் இனநலனில் கருத்து செலுத்தாததாலும் நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலையாயினர். கைகளில் விழுந்த விடுதலைக்கனி பறிக்கப்பட்டு இறந்தவர்கள் தவிர இருப்பவர்களும் உறுப்புகள் இழந்தும் உடைமைகள் இழந்தும் இன்னலில் சிக்குண்டுள்ளனர். உலகெங்கும் உள்ள தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க நாம் இனநலம் பேணுவோரைத் துணையாகக் கொள்ளவேண்டும். இவ்வாறு பல நாடுகளிலும் இனநலமுடையாரைச் சார்ந்திருப்போர் பாதுகாப்பாக உள்ளனர். அவ்வாறில்லாதார் பாதுகாப்பு இழந்து துயருறுகின்றனர்.

எனவே தூய மனமுடையவராக இருப்பினும் இன நலத்தைப் பாதுகாப்பாகக் கொள்வோம்!

Thursday, April 30, 2026

நாலடி நல்கும் நன்னெறி 28: பெரியோரைப் பிணித்துக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்



(நாலடி நல்கும் நன்னெறி 27: அறநெறி அறியுங்கள்! – தொடர்ச்சி)

அடைந்தார்ப் பிரிவு மரும்பிணியுங் கேடு

முடங்குடம்பு கொண்டார்க் குறலாற் – றொடங்கிப்

பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை

யுறப்புணர்க வம்மாவென் னெஞ்சு.

– நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 173

[அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் – தொடங்கிப்
பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரை
உறப் புணர்க அம்மாஎன் நெஞ்சு.]

கருத்துரை:

அன்பானவர்களைப் பிரிதலும் தீர்க்க இயலா நோயும் கேடுகளும் உடம்பிற்கு வருவதால் பிறப்பு, துன்பம் தரக்கூடியது என்பதை உணரும் பெரியோரைப் பற்றிக் கொள்க.

பதவுரை:

அடைந்தார் = அடைந்தவரை; அஃதாவது அன்பால் தன்னுடன் இணைந்திருப்பவர்கள்; பிரிவும்=அஃதாவது  இயற்கையாகவும் செயற்கையாகவும் தம்மைச்  சார்ந்தவர்களான பெற்றோர், வாழ்க்கைத் துணைவர்கள், உடன்பிறப்புகள், பேரன்மார், பேத்திமார், தாத்தாமார், பாட்டிமார் முதலான குடும்பத்தினர், நண்பர்கள், காதலர்கள், உறவினர்கள் முதலியோரைப் பிரிந்து நிற்றலும்; அரும்=அரிய(மருந்தால் தீர்க்க முடியாத); பிணியும்=கொடுமையான நோயும்; கேடும்=அழிவு, இழப்பு, வறுமை, தொல்லை, தீமை, பிற வகைத் துன்பங்கள் ஆகிய கேடுகளும்; உடங்கு= உடன்; உடம்பு= உடம்பை; கொண்டார்க்கு= உடையவர்களுக்கு; உறலால்= வருவதால்; தொடங்கி = தொடக்கம் முதல்; பிறப்பு=பிறப்பு என்பது; இன்னாது= துன்பம் தருவது;  என்று= என்று; உணரும்=உணரக்கூடிய; பேரறிவினாரை=பேரறிவுசால் பெரியோர்களை; உறப்பு ணர்க=நெருக்கமாய் உணர்க; அம்மாஎன் நெஞ்சு=(அம்மா என்பது அசைச்சொல்.) என் நெஞ்சே!

“விறப்பு முறப்பும் வெறிப்புஞ் செறிவே” என்கிறார் தொல்காப்பியர்(தொல்காப்பியம், சொல்லதிகாரம்,  347); செறிவு என்பது இங்கே நெருக்கத்தைக் குறிக்கிறது. உற = சிக்கென, புணர்க=பிணிப்பதாக என உறப்புணர்க என்பதற்கு விளக்கமளிப்போரும் உள்ளனர்.

நெருக்கமாய் உணர்ந்தால்தானே பற்றிக் கொள்ள இயலும். எனவே, எல்லாம் சரிதான்.

பிறவியைத் துன்பம் நிறைந்ததாக இறையன்பர்கள் கூறுகின்றனர். பிறவியைப் பெருங்கடலை நீந்துவது போன்ற துன்பமானது என்றே அவர்கள் கூறுகின்றனர். எனவேதான் திருவள்ளுவரும் ‘பிறவிப் பெருங்கடல்’ என்கின்றார்.

இன்னல் தரும் பிறவித் துன்பத்திலிருந்து விடுபட ஆன்றோரைத் துணையாகக் கொள்ளச் சொல்கிறது இப்பாடல்.

Wednesday, April 29, 2026

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 : இலக்குவனார் திருவள்ளுவன்



(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 3 : தொடர்ச்சி)

ஈ.வெ.இரா.உரை, நிறைவேறிய மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்தது 11ஆம் கட்டுரை.

இநதி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல்முறையாகப் பெண்கள் கைது என்பது குறித்து 12 ஆம் கட்டுரை கூறுகிறது.

எண்மர் கைது குறித்தது 13 ஆம் கட்டுரை. நவம்பர் 14 அன்று ஐந்து பெண்கள் கைதானதற்குப் பிறகு நவம்பர் 21 அன்று எட்டுத்தாய்மார்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப் பட்டனர்.

பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை நிரப்பிக் கொண்டிருந்தனர். இதற்குக் காரணமான பெரியார் மீது நடவடிக்கை என்பது குறித்தது 14 ஆம் கட்டுரை.

பெண்கள் கைதைஒட்டிய பிற போராட்டங்கள் கைதான பெண்கள் சிறுகச் சிறுக விடுதலை என்பன குறித்துப் பதினைந்தாம் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

 புதுவை சிவம் கைதான பெண்களுக்குப் பாராட்டு வழங்கிய பாடலுடன் கட்டுரை தொடங்குகிறது. தமிழர்  நலங்காக்கத் தன்மதிப்பு காக்க சிறை சென்றதாகப் பாராட்டியுள்ளார். சென்றது சிறைச்சாலைக்கு அல்ல தீமையெல்லாம் வீழ்த்த அறச்சாலைதான் ஏகியதாகக் குறிப்பிடுகிறார் கவிஞர்.

தமிழ்நாட்டின் முதல் ஒடுக்கப்பட்ட இனப் பெண் போராளி மேரி செளந்தரியம்மாள் வேண்டுகோளை முதலில் தந்துள்ளார். பெண்கள் கைதுகளை எதிர்த்துத் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கண்டன ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் தகவல்களை நமக்கு அளித்துள்ளார். சிறைசென்ற தாய்மார்களின் படங்களையும் தந்துள்ளார். இந்தி எதிர்ப்பில் முதன்முதலில் கைதான பெண்கள் விடுதலையான செய்தியையும் தந்துள்ளார். திசம்பர் 23, ஞாயிற்றுக்கிழமையை இந்தி எதிர்ப்பு நாளாகக் கொண்டாட வேண்டிய அறிவிப்பு, அவ்வாறு தமிழ்நாடு முழுவதும் நிகழ்த்திய நிகழ்வுகளையும் அளித்துள்ளார்.

அடுத்த பதினாறாவது கட்டுரையில் வேலூர் பெண்கள் முதலாவது சென்னை மாநிலத் தமிழ்ப்பெண்கள் மாநாடு குறித்த விவரங்களை விளக்கியுள்ளார்.   பண்டிதை நாராயணி அம்மாள் தலைமையுரையில்   இந்தித் திணிப்பு, இந்தியால் ஒற்றுமை உண்டாகுமா?, இனி செய்ய வேண்டுவன, நமக்கு முதலில், இரண்டாவதாக, மூன்றாவதாக, நான்காவதாக, ஐந்தாவதாக, ஆறாவதாக இருக்க வேண்டியன குறித்துத் தெரிவித்தனவற்றை எடுத்துரைத்துள்ளார். தோழர் பச்சம்மாள் வரவேற்புரையையும்    சிறைசென்ற பெண்களுக்கு வழங்கிய பாராட்டையும் தெரிவித்துள்ளார். மாநாட்டு நடவடிக்கையையும் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய தாமரைக்கண்ணி அம்மையானர் உரையையும் தந்துள்ளார். இந்தி எதிர்ப்பு என்னும் பன்முறைப் போரின் ஒரு பகுதியான தாழ்த்தப்பட்டவர் மாநாடு குறித்தும் நமக்குத் தந்துள்ளார்.   

Friday, April 24, 2026

சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055: இலக்குவனார் திருவள்ளுவன்

      25 April 2026      



(சட்டச் சொற்கள் விளக்கம் 1047-1050: தொடர்ச்சி)

1051. Apprentice at lawபயிற்சி வழக்குரைஞர்

வழக்குமுறைப் பயிலுநர்  

 பயிற்சிச் சட்டம், 1961  இந்தியாவில் பயிற்சிப் பருவத்தைக் ஒழுங்குபடுத்துகிறது. இதில் பணிப்பயிலுநர்களுக்கும் பணியாளர்களுக்கும் உள்ள உரிமைகள், கடமைகள், பாதுகாப்புகள் வரையறுக்கப்படுகின்றன. இச்சட்டம் மைய அரசால் அறிவிக்கப்பட்ட, இசைவளிக்கப்பட்ட அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும். இது வேண்டப்படும் சிறப்புப் பணிப்பயிற்சித் திட்டங்களுக்கு இசைவை வழங்குகிறது.
1052. Apprenticeship     பயிற்சிப் பருவம்

பணிப்பயிற்சி

தொழிற்  பயிற்சிநிலை

மீன்பிடித்தல், கைவினை, தையல், ஊர்திப் பழுது, எந்திரப் பணி முதலான பணிகளில் புதியதாகச் சேரும் பொழுது அவற்றில் தகுதி பெறுவதற்காக அளிக்கப்படும் பயிற்சிக்கான காலம்.  

ஒரு பதவியில்  சேர்ந்ததும் அதற்குரிய  தகுதிபெற்று அதன் தகுதி நிலையை அறிய உதவும் பயிற்சிக்காலமே தகுதிகாண் பருவம்(Probation Period). ஒரு குறிப்பிட்ட தொழில் அல்லது கைவினையில் தேர்ச்சி பெறுவதற்காக அளிக்கப்படும் பயிற்சியே தொழிற்பயிற்சி.

தகுதிகாண் பருவம் என்பது சில திங்களில் இருந்து ஈராண்டு வரை இருக்கலாம். ஆனால் தொழிற்பயிற்சி என்பது ஈராண்டிற்கும் மேல் இருக்கலாம்.
1053. Approbate and reprobateஏற்றலும் மறுத்தலும்

ஏற்கவும்‌ மறுக்கவும்‌  

ஏற்றலும் மறுத்தலும் கோட்பாடு சட்ட ஆவணத்தின் பயன்மைகளை ஏற்பதிலிருந்து ஒரு தரப்பாரைத் தடுப்பது ஆகும். அதே நேரம், சட்டக் கோரல்களில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் இதன் சுமையை மறுப்பதாகும்.  

ஏற்கவும் மறுக்கவும் என்பது சட்டக் கோட்பாடு ஆகும். இதன்படி ஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றை ஏற்கவும் மறுக்கவும் முடியாது. “ஒருவரால் இன்மாவை(cake) தின்று தீர்க்கவும் அப்படியே வைத்திருக்கவும் முடியாது” என்னும் தொடர் இதற்கான விளக்கமாகும்.

quod approbo non reprobo என்னும் இதன் இலத்தீன் தொடரின் பொருள் நான் எதை ஏற்கிறேனோ அதை மறுக்க முடியாது என்பதாகும்.

ஒரு தரப்பு சட்டஆவணத்தை முதலில் ஏற்றுவிட்டுப் பின்னர் மறுக்கலாம் என்ற எண்ணப்போக்குக் கொள்ளக் கூடாது என்பதற்காக இது சொல்லப்படுகிறது. இது வணிமாற்றத்தின் (transaction) மூலம் ஆதாயம் காணும் தரப்பு, அதனுடன் தொடர்புடைய கடப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது.
1054. Approbation  ஒப்புதல்

ஏற்பு

ஒரு தரப்பு தரும் ஆவணத்தை மறு தரப்பார் ஏற்றுக் கொள்ளல் அல்லது நீதித்துறை ஒப்புக் கொள்ளுதல் என்பதை இது குறிக்கிறது.

‘Approbation’ ஒப்புதல் என்னும் பொருளைத் தரும் பிரெஞ்சு இலத்தீன் சொல்லாகும்.
1055. Appropriate  தக்க

பொருத்தமான

தனதாக்கு

உரிய ஒதுக்கு

ஒதுக்கியளி


பணியாட்சித் தீர்ப்பாயச் சட்டம் 1985(THE ADMINISTRATIVE TRIBUNALS ACT, 1985) கூறு 36, விதிகளை உருவாக்குவதற்கான அதிகாரம் உடைய உரிய அரசு(Power of the appropriate Government to make rules) குறித்துக் கூறுகிறது.

Thursday, April 23, 2026

நாலடி நல்கும் நன்னெறி 27: அறநெறி அறியுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

      24 April 2026      கரமுதல



(நாலடி நல்கும் நன்னெறி 26: வறுமையிலும் உதவுக! – தொடர்ச்சி)

அறிமி னறநெறி யஞ்சுமின் கூற்றம்

பொறுமின் பிறர்கடுஞ்சொற் போற்றுமின் வஞ்சம்

வெறுமின் வினைதீயார் கேண்மையெஞ் ஞான்றும்

பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.

[அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம்

பொறுமின் பிறர் கடு சொல் போற்றுமின் வஞ்சம்

வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும்

பெறுமின் பெரியார் வாய் சொல்.]

நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 172

அறம் = அறத்தின்; நெறி = வழியை; அறிமின் = அறியுங்கள்; கூற்றம் = கூற்றுவனுக்கு/இயமனுக்கு/எமனுக்கு; அஞ்சுமின் = அஞ்சுங்கள் ;பிறர் = அயலாருடைய; கடு சொல் = கொடுமையான சொற்களை; பொறுமின்=பொறுத்துக் கொள்ளுங்கள்; வஞ்சம்=வஞ்சகத்தை; போற்றுமின்=வராமல் போற்றுங்கள்; வினை=தீவினை புரியும்; தீயார் =கொடியவர்;கேண்மை=நட்பை;வெறுமின்=வெறுத்துக் கைவிடுங்கள்; எஞ்ஞான்றும்=எந்நாளும்; பெரியார்=பெரியோர்கள்; வாய் சொல்=வாயினால் கூறும் சொற்களை, அறிவுரையை; பெறுமின்= பெறுங்கள்.

அறவழி அறியுங்கள்; இயமனுக்கு அஞ்சுங்கள்; கொடுஞ் சொற்களைப் பொறுங்கள்; வஞ்சனை வாராது காத்துக் கொள்ளுங்கள்; தீயவர் நட்பைக் கை விடுங்கள்; பெரியோர் அறிவுரையைப் பெறுங்கள்.

அறவழி அறியுங்கள் என்றால் அறவழியை அறிந்து அதன் வழியில் செல்லுங்கள் எனப் பொருள். அறநெறி வாழ்வை வலியுறுத்தி, ‘அறன் வலியுறுத்தல்’ என்னும் ஓர் அதிகாரத்தையே திருக்குறளில் திருவள்ளுவர் வைத்துள்ளார். நாலடியாரிலும் ‘அறன் வலியுறுத்தல்’ என்னும் ஓர் அதிகாரம் உள்ளது.

எமனுக்கு அஞ்சுங்கள் என்றால், எமன் எப்பொழுது வேண்டுமானாலும் அழைத்துக்கொள்வான். வாழ்வு நிலையற்றது. நிலையாமை என்று ஓர் அதிகாரத்தையே திருவள்ளுவர் வைத்துள்ளார். வாணாள் முடிவதற்குள் அறப்பணி ஆற்ற வேண்டும்.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.(திருக்குறள், ௩௰௮ – 38)

என்று அறம்தவறிய நாள் என்றுமில்லாதவாறு நாளும் அறமாற்றுமாறு கூறுகிறார் திருவள்ளுவர்.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.   (திருக்குறள், ௩௰௬ – 36)

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் உடனே அறமாற்றுவதுதான் நமக்குத் துணையாக இருக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்.   (திருக்குறள், ௩௱௩௰௫ – 335)

நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டு விக்கல் மேலெழுந்து வரும் முன்னர் நல்வினைகள் செய்யப்பட வேண்டும் என்றும் திருவள்ளுவர் கூறுகிறார். எனவே, எமனுக்கு அஞ்சி, அவன் வருவதற்குள் நாளும் ஆற்ற வேண்டிய அறச்செயல்கள் குறித்துத்தான் நாலடியாரும் கூறுகிறது.

கடுஞ்சொற்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டியதையும் பிற இலக்கியங்களும் கூறுகின்றன.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம். (திருக்குறள், ௩௰௫ – 35)

என்று கடுஞ்சொல் சொல்லாதிருப்பதை அறமாகத் திருவள்ளுவர் கூறுகிறார்.

வெருவந்த செய்யாமை அதிகாரத்தில் கடுஞ்சொற்களைப் பேசுபவரைக் கடிந்து உரைக்கிறார் திருவள்ளுவர். எனவேதான், அவர்

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொல் நோற்பாரின் பின்.   (திருக்குறள், ௱௬௰ – 160)

என்று திருவள்ளுவர் கடுஞ்சொல் சொல்லாமையைச் சிறந்த நோன்பாகக் கூறுகிறார்.

என்றும் கடுஞ்சொல் உரையார்“(ஆசாரக்கோவை 93)

என என்றும் கடுஞ்சொல் சொல்லக்கூடாது என்கிறார் புலவர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்.

வஞ்சகம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டியது குறித்து அடுத்துப் பார்ப்போம்.

வஞ்ச மனத்தவனின் பொய்நடத்தைக்கு எதிராகத் திருவள்ளுவர்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.   (திருக்குறள், ௨௱௭௰௧ – 271)

என்கிறார்.

“வஞ்சகம் பேசுபவன்] தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.” “அவனை நம்பாதே” (நீதிமொழிகள் 26:24, 25.) என விவிலியம் எச்சரிக்கிறது.

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டா (உலக நீதி) என்கிறார் உலகநாதர்

வஞ்சகத்தாருக்கு அழிவு உறுதி என்பதற்காக மாக்கவி பாரதியார்,

படித்தவன் சூதும் வாதும் செய்தால்

போவான், போவான்; ஐயோ என்று போவான்!

என்கிறார்.

வஞ்சம் என்னும் சொல் மோசடி, கபடம், போலி, கள்ளத்தனம், வஞ்சித்தல், பித்தலாட்டம்,  ஏமாற்றுதல், சதி, பொய்வேடம், வஞ்சனை எனப் பல பொருள்களில் பயன்பாட்டில் உள்ளது. எனவே, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் வஞ்சகம் ஆகும். வஞ்சகம் பேசுவோரிடம் நட்போ உறவோ கூடாது என்பதற்காக வள்ளலார் இராமலிங்க அடிகள்,

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

என்கிறார்.

தீவினையாளர் தொடர்பை அறுக்க வேண்டியது குறித்தும் பார்ப்போம்.

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு.   (திருக்குறள், ௨௱௧ – 201)

எனத் திருவள்ளுவர் தீவினை புரிய அஞ்ச வேண்டும் என்கிறார். தீவினை அச்சம் என ஓர் அதிகார்தையே தீவினைக்கு எதிராக வைத்துள்ளார் திருவள்ளுவர். தீவினைக்குஅஞ்ச வேண்டுமெனில் தீவினை புரிவோரோடு தொடர்பு கொள்ளக் கூடாது அல்லவா?

பெரியார் அறிவுரையைப் பின்பற்ற வேண்டியது குறித்தும் கூறுகிறார்.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.   (திருக்குறள், ௪௱௰௫ – 415)

எனத் திருவள்ளுவர், பெரியோரின் வாய்ச்சொல்லைத் துணையாகக் கொள்ள வேண்டும் என்கிறார்.

பெரியாரைத் துணைக்கோடல் என ஓர் அதிகாரம் மூலம் பெரியாரின் துணையை வலியுறுத்திக் கூறுகிறார்.

நாலடியார் இப்பாடலில் கூறும் ஆறு அறிவுரைகளையும் நாம் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

Followers

Blog Archive