Wednesday, September 2, 2026

பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்



தமிழ்ப் போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாருக்கு அவரின் தமிழ்ப் பணிகளுக்காகவும் தமிழ்ப் புலமைக்காகவும் வழங்கப் பெற்ற விருதுகளும் பட்டங்களும் நூற்றுக்கு மேற்பட்டன.

இந்த அளவிற்கு வேறு எந்த அறிஞரும் சிறப்பிக்கப் பெறவில்லை.

அவரைப் பற்றிய 1.) இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர் 2.) குறள்நெறி பரப்பும் கொள்கை வீரர், 3.)  குறள்நெறிக் காவலர், 4.)  குறள்நெறிச் செம்மல் முதலிய பட்டங்கள் பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் புலமையையும் திருக்குறள் பணிகளையும் தெரிவிப்பன.

குறள்நெறி அறிஞர் பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகளைப் பின்வரும் வகைப்பாட்டில் காணலாம்.

அ.) திருக்குறள் பரப்பியலாக்கப் பணிகள்

ஆ.) திருக்குறள் ஆய்வியலாக்கப் பணிகள்

இ.) திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்

ஈ.) யாரும் செய்யாத திருக்குறள் சாதனைகள்

அ.) திருக்குறள் பரப்பியலாக்கப் பணிகள்

இலக்குவனார் பள்ளிப் பருவத்திலேயே திருக்குறளில் ஈடுபாடு காட்டி அனைத்துத் திருக்குறள்களையும் மனப்பாடம் செய்து விட்டார்.

பள்ளி நிகழ்ச்சிகளில் பேசும் பொழுது திருக்குறளையும் மேற்கோளாகக் காட்டிப் பேசினார்.

மாலை நேரங்களில் அல்லது விடுமுறை நாள்களில் ஊரார் கூடியிருக்கும் இடத்தில் திருக்குறளைப் பற்றிப் பேசிப் பரப்பினார்.

ஊர்ப்பெரியவர்கள் “நம்மூர்ச் சிறுவன் அழகாகப் பேசுகிறானே! கேட்டு ஊக்கப்படுத்துவோம்” என்று ஆர்வமுடன் கேட்டு மகிழ்ந்தனர்.

இவரது பேச்சைக் கேட்டும் இவருக்குக் கிடைத்த பாராட்டுகளைப் பார்த்தும் பிற மாணா்கருக்கும் திருக்குறள் மீது ஆர்வம் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாகக் கல்லூரி மாணாக்கனாகப் புலவர் பட்டம் பயிலும் பொழுது நண்பர்கள் மூவரைச் சேர்த்துக் கொண்டு அக்கம் பக்க ஊர்களுக்கெல்லாம் சென்று திருக்குறளைப் பரப்பினார்.

உடன் தொல்காப்பியம் சங்க இலக்கியச் சிறப்புகளையும் பரப்பினார்.

திருக்குறள் பற்றிய வினாக்கள், புதிர்கள், போட்டிகள், திருக்குறள் நூல் பரிசாக அளித்தல் மூலம் மாணவர்களிடம் திருக்குறள்பால் நாட்டத்தை உண்டாக்கினார்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பணியில் சேர்ந்த பின்னும் விடுமுறைதோறும் கால அட்டவணை போட்டு ஊர் தோறும் சென்று திருக்குறளைப் பரப்பினார்.

உடன் தமிழின் சிறப்பு தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதலான தமிழ் இலக்கியச் சிறப்பு, தமிழர் தமிழறிந்த தமிழராய் வாழவேண்டியதன் இன்றியமையாமை முதலியவற்றையும் பேசித் தமிழ் உணர்வையும் மொழியறிவையும் இலக்கிய அறிவையும் ஊட்டினார்.

தாம் பணியாற்றிய கல்வியகங்களில் எல்லாம் திருவள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் ஆண்டுதோறும் விழாக்களை நடத்தி மாணாக்கர்களுக்குத் தமிழ் உணர்வை உண்டாக்கினார்.

தாம் பணியாற்றிய கல்லூரிகளில் ஆண்டுதோறும்‌ “முத்திறப்‌ பொருளின்‌ மும்மை நெறியில்‌ மக்கள்‌ சென்று மாண்புறு வாழ்வின்‌ இன்பம்‌ துய்த்திட இன்னெறி காட்டிய வாழ்வியல்‌ வல்லுநர்‌ வள்ளுவர்‌ திருநாள்‌” (‘துரத்தப்பட்டேன்’) நடத்தினார்.

தொல்காப்பியர்‌ திருநாள்‌, திருவள்ளுவர்‌ திருநாள்‌, இளங்கோவடிகள்‌ திருதாள்‌, ஒளவையார்‌ திருநாள்‌, தமிழ்‌ மறுமலர்ச்சி நாள்‌ என்று மொத்தம் ஐந்து விழாக்கள்‌ நடத்தினார்.

விழாக்கள் மூலம் தமிழ்ப் புலவர்கள் சிறப்பையும் தமிழின் சிறப்பையும் உணர்த்தியதுடன் தனித்தமிழ்ப் பற்றையும் விதைத்தார்.

இவ்விழாக்கள் மூலமும் திருக்குறள் கருத்துகளைப் பரப்பினார். இவ்விழாக்கள் தொடரவும் நிலையான ஏற்பாட்டை  உருவாக்கினார்‌.

பாடலாயினும் கட்டுரையாயினும் தம் படைப்புகளில் திருக்குறளை முழுமையாக அல்லது குறள் தொடராகப் பயன்படுத்தியே எழுதுவார்.

“இன்னாமை இன்பம்‌ எனக்‌ கொளின்‌ ஆகும்‌ தன்‌ ஒன்னார்‌ விழையும்‌ சிறப்பு எனும்‌ தமிழ் மறையின்‌ இன்மொழிக்கேற்ப எவரும்‌ போற்றும்‌ இனிய தலைவராய்‌ ‌நேரு விளங்கினார்‌” எனத் திருக்குறளை மேற்கோளாக்கி நேருவின் பண்பினை வெளிப்படுத்துகிறார்.

சொலல்வல்லர்‌; சோர்விலர்‌; அஞ்சார்‌; சொல்லுறு

கலைகள்‌ போற்றும்‌ காவலர்‌; கட்டுரை வன்மையர்‌; பகைவரும்‌ நண்பராய்ப்‌ பண்புடன்‌ பொருந்த

அமைதி நாடிய அரசியல்‌ அறிஞர்‌;

உள்ளத்‌ தூய்மையர்‌; உணர்ச்சிப்‌ பெருக்கினர்‌;

என்று

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.   (திருக்குறள், ௬௱௪௰௭ – 647)

என வரும் திருக்குறளில் இருந்து தொடரைக் கையாண்டுள்ளார்.

புரவலர் அண்ணல் சுப்பிரமணியனார் அவர்களைத் தலைவராகவும் பேரா.சி. இலக்குவனாரைச் செயலராகவும் கொண்ட திருவள்ளுவர் கழகம் என்னும் அமைப்பை நிறுவினார்.

அண்ணலாரால் வள்ளுவர் பதிப்பகம் நிறுவப்பட்டுப் பேராசிரியரின் திருக்குறள் நூல்களும் பிற நூல்களும் வெளியிடப்பட்டன.

திருக்குறள் கழகம் மூலம் இலக்குவனார் வாரந்தோறும் திருக்குறள் சொற்பொழிவுகள் நடத்தினார்; மக்களிடையே இதற்குப் பெரிதும் வரவேற்பு இருந்தது.

தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி, இது குறித்துப் பாராட்டி ‘விடுதலை’ நாளிதழில்  செய்தி வெளியிட்டிருந்தார்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் 8-30 மணிக்குத் தொடங்கி முறையாகக் குறள்வகுப்பு நடைபெற்று வருகின்றது.

நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெரியோர்களும் வந்து கேட்கின்றார்கள், மாலையில் 6-30 மணிக்குத் தொடங்கிச் சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது.

ஒலிபெருக்கி அமைக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் ஆங்காங்கு இருந்து சொற்பொழிவைக் கேட்கின்றனர்.

குறளிடத்தில் மக்களுக்கு ஆர்வம் உண்டாகி ஞாயிற்றுக்கிழமை வருவதை எதிர்பார்த்திருக்கின்றனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக ஞாயிறு தவறாமல் ஒலிபெருக்கியுடன் சொற்பொழிவுகள் ஆற்றியமை முற்றிலும் புதுமையாகும்.

இராமாயணம், பாரதம் போன்ற புராண நூல்களைத்தான் இதுவரை தொடர்ச்சியாகக் காலட்சேபம் செய்து வந்துள்ளமை அறிவோம்.

ஒரு நீதிநூலைத் தொடர்ச்சியாகச் சொல்லுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கேட்பதும் என்றால் எங்கும் காணாத புதுமை என்றுதான் கூறுதல் வேண்டும்.”

‘குறள்நெறி’ என்னும்‌ பெயரில்‌ தனிச்சுற்று இதழையும் நடத்தினார்.

“குறள்நெறி ஓங்கின்‌ குடியரசு உயரும்‌” என்று குறள்நெறியை உயர்த்தும் முழக்கத்தைப் பரப்பினார்.

இம் முழக்கத்தை தமது குறள்நெறி இதழின்‌ முகப்புப்‌ பக்கத்தில்‌ இடம்‌ பெறச்‌ செய்து வந்தார்‌.

சில பாடல்களிலும் இம்முழக்கம் இடம் பெறச் செய்தார். சான்றாகப் பொங்கல்‌ வாழ்த்துப்‌ பாடலில் இடம் பெற்றதைப் பார்ப்போம்.

‘குறள்நெறி’ ஓங்கி குடியர சுயர்ந்து

பசியும்‌ பிணியும்‌ பகையும்‌ நீங்கி

வசியும்‌ வளனும்‌ சுரந்து வாழியர்‌

வையகம்‌ வாழ்க; வான்தமிழ்‌ வெல்க;

இசைப் பாடல்களை இயற்றினார். நிகழ்ச்சி மேடைகளிலும் இப்பாடல்கள் இடம் பெற்றன. திருக்குறளை இசைப்பாடல் மூலம் பரப்பியதற்குச்சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போம்.

“கற்றதனால்‌ பயன்‌ என்ன – கலைபல நற்றமிழ்ச்‌ செல்வர்காள்‌ (கற்ற) இடைநிலை பெற்ற கல்வியின்‌ பயன்‌ பேரிறைவன்‌ தாளை உற்றவர்‌ அன்புடன்‌ உறுதியாய்த்‌ தொழுவதே (கற்ற) இறுதிநிலை இருவினை இடும்பைகள்‌ என்றுமே அடையா கருவினில்‌ வருவதும்‌, கவலையும்‌ இலையாம்‌ இருநில மிசைதனில்‌ என்றுமே வாழ்வாம்‌ அருள்மிகு இறைவனை அன்புடன்‌ தொழாவிடில்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.   (திருக்குறள் ௨ – 2)

என்னும் திருக்குறளை இசைப்பாடல் மூலம் மக்களிடையே கொண்டு சென்றார்.

(தொடரும்…)

  • இலக்குவனார் திருவள்ளுவன்

03.09.2026 – தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனாரின் 53 ஆவது நினைவாண்டு

  • தாய் மின்னிதழ் 02.09.26

Sunday, August 30, 2026

தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே!

சட்டமன்றத்தில் மாண்பமை ச.ம.உறுப்பினர் சிந்து தனி(த் தொகுதி) என்னும் சொல் குறித்துப் பேசியுள்ளார்.

reservation என்னும் சொல்லிற்குத் தனி எனப் பொருள் இல்லை என்றும் பேசியுள்ளார்.

அச்சொல்லிற்குப் பொதுவாக ஒதுக்கீடு, பதிவு எனப் பொருள்கள் உள்ளன.

எனினும் தனி ஒதுக்கீடு என்று அகராதிகள் குறிப்பதைக் காணலாம்.

நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் பட்டியலின (SC), பழங்குடியின (ST) மக்கள் தங்களின் சார்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பிற இனப் போட்டியாளர்கள் இன்றித் தங்கள் இனத்தவரே போட்டியிட வேண்டும் என்பதற்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளே தனித் தொகுதிகள்.

தனித் தொகுதி என்று சொல்லாமல் சிறப்புத் தொகுதி, உரிமைத் தொகுதி எனச் சொல்ல வேண்டும் என்றும் அவ்வுறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தனி என்னும் சொல்லுக்குச் சிறப்பு என்றும் உரிமை என்றும் ஒப்பற்ற என்றும் பொருள்கள் உண்டு.

குறிப்பிட்ட இனத்தவருக்கு சார்பு உரிமையளிக்க வேண்டும் என்பதற்காகத் தனியாக ஒதுக்குவதால் தனித் தொகுதி எனப்படுகிறது.

அவ்வாறில்லாவிட்டால், பிற இனத்தவர் பெரும்பான்மை உள்ள தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழப்பர் எனக் கருதியே இந்த உரிமை தரப்பட்டுள்ளது.

இதனால், அவர்களுக்கு உரிமையான தொகுதி என்னும் பொருளும் தனித் தொகுதி என்பதற்கு உண்டு.

தனித்திறமை – ஒப்பற்ற திறமை, தனிப்பெருமை – ஒப்பற்ற பெருமை என்பதே வழக்கம்.

வள்ளலார் இராமலிங்க அடிகளார் திருவருட்பா நான்காம் திருமுறையில்


“தனி நடிப்பா தத்தா”

என ஒப்பற்ற கூத்தையுடைய பரதத்தையுடைய அத்தனே என்கிறார்.

சேக்கிழார், “ஒப்பற்ற தன்னுடைய பெருமையைப் பெற்ற புதல்வியாகிய புனிதவதிக்குச் செல்வம் மிகுதியாகப் பெற்று” எனக் குறிப்பிடும் வகையில்

“தனிப்
பெருமகட்குத் திருமலியும்”

என்கிறார் பெரிய புராணத்தில் காரைக்காலம்மையார் புராணப் பகுதியில்.

“தனிப் பெருமகட்குத் திருமலியும் செல்வன்”

என நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழி கூறுகிறது.

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதியில் அதிவீரராம பாண்டியர்

“மண்தனிஞா லத்தெளிய
மானுடரோ வழுத்துவார்!”


எனக் குறிப்பிடுகிறார்.

இதன் மூலம் மண்ணாலான ஒப்பில்லாத நிலவுலகத்துள்ள எளிய மக்கட் பிறப்பினர் அவன் திருவடிப் புகழைப் பேசுதற்கு உரியரோ என்கிறார்.

தனி என்றால் சிறப்பு என்னும் பொருளைக் குறிக்கும் பல சொற்கள் உள்ளன. சான்றுக்குச் சில சொற்களைப் பார்ப்போம்.

தனி அலுவலர்/
தனி அதிகாரி    – Special officer
தனி அமர்வு     – special session
தனி அறிக்கை  – special report
தனி ஆயம்      – special bench
தனி நடுவர் மன்றம்  – Special Magistrate Court
தனி நிதி        –  special fund
தனி நீதிபதி    –   Special judge
தனி நோக்கம்  –   special purpose
தனி வழக்கு    –   special case
தனி விதி       –  Special Rule
தனிக் குழு     –   special committee
தனிக் கூட்டம்  –  special meeting
தனிச் சூழல்கள் – special circumstances
தனிச் செயலர்  – Special Secretary
தனித் தீர்மானம் – special resolution
தனித் தேர்வு    – special test
தனிப் பெரும்பான்மை  – special majority

எனவே, சிறப்புத் தொகுதி என்றும் உரிமைத் தொகுதி என்றும் ஒப்பற்ற தொகுதி என்றும் பொருள் தரும் தனித்தொகுதி என்னும் பெயரை நீக்க வேண்டா;

இத்தகைய சிறப்பான பொருள்கள் உடைய தனி என்னும் சொல்லில் தாழ்த்தப்பட்ட உணர்வைப் புகுத்த வேண்டா.

ஆனால், தேர்தலின் பொழுது மட்டும் அவ்வாறு குறிப்பிட்டுவிட்டுப் பிற நேரங்களில் அவ்வாறு குறிப்பிடாமல் இருக்கலாம்.

தனித் தொகுதி என்று சொல்லப்படுவதை மாற்ற வேண்டும் எனப் பெரும்பான்மைத் தனித் தொகுதி உறுப்பினர்கள் கருதினால் மாண்புமிகு பேரவைத் தலைவர் அறிவித்ததுபோல் மாண்புமிகு முதல்வரைக் கலந்து பேசி முடிவெடுக்கட்டும்.

ஆனால், தனி என்னும் சொல்லுக்குத் தவறான பொருள் கொண்டு அதனை நீக்க வேண்டா.

கலைச்சொல் வல்லுநர் இலக்குவனார் திருவள்ளுவன்

  • தாய் மின்னிதழ் 31.08.2026

Sunday, June 21, 2026

திருக்குறள் பாதையில் முதல்வர் ச.சோ.விசய் – இலக்குவனார் திருவள்ளுவன்

      22 June 2026      



தமிழக முதல்வர் தமக்கு அறிமுகமானவர்களையே பொறுப்புகளில் அமர்த்துவதாகக் குறையாகக் கூறி வருகின்றனர். அண்மையில் முதல்வர், திரைப்படக் கல்லூரித் தலைவராக ஒளிப்பதிவாளர் மனோசு பரமஃகம்சா என்பவரை அமர்த்தியுள்ளார். இதற்குத் தம் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவரைத் தலைவராக அமர்த்தியுள்ளார்; நண்பரை அமர்த்தியுள்ளார் என்றெல்லாம் குறை கூறுகின்றனர். வேறு எதுவும் பழிச்சொல் கூற வழியில்லை என்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர் என நன்கு தெரிகிறது.

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும்.   (திருக்குறள், ௨௱௬௰௪ – 264)

என்கிறார் திருவள்ளுவர்.

உவந்தாரை ஆக்கல் என்பதற்கு.

தம்மை விரும்பும் அன்புடையவரை உயர்த்துதல்,

தமக்கு அன்புடைய நண்பர்களை வாழ வைத்து உயர்த்துதல்,

நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதல்,

நட்பினால் மகிழும் நண்பர்கு உதவுதல்

எனவாறு பொருள் தருகின்றனர் அறிஞர் பெருமக்கள். ஆக நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்பதே திருவள்ளுவர் அருள் வாக்கு. பாகுபாடு காட்டக் கூடாத தவ வலிமை உடையவர்களே நண்பரா இல்லையா எனப் பார்த்து நண்பருக்கு உதவ வேண்டும் என்றால் பிறர் இவ்வாறு செய்தல் இன்றியமையாதது அலலவா?

அவ்வாறாயின் திருக்குறள் வழியில் நண்பர்களுக்கு வாய்ப்பளிததல் சிறப்பல்லவா?

விழையார் விழையப் படுப பழையார்கண்

பண்பின் தலைப்பிரியா தார்.   (திருக்குறள், ௮௱௰ – 810)

என்றும் திருவள்ளுவர் கூறுகிறார்.

இக்குறள் மூலம், பழமையான நண்பர்களிடத்திலும், சற்றும் விலகாமல் நடந்து கொள்ளும் பண்புடன் இருக்க வலியுறுத்துகிறார். அஃதாவது தான் உயர்ந்த நிலைக்குச் செல்லும் பொழுது பழைய நண்பர்களை விலக்காமல் சேர்த்து அணைத்துச் செல்ல வேண்டும் என்கிறார்.

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.   (திருக்குறள், ௭௱௮௰௧ – 781)

என்றும் திருவள்ளுவர் வினவி விளக்குகிறார்.

நட்பைப் போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருஞ் செயல் எதுவுமே இல்லை; நட்பைப் போலச் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பும் எதுவுமில்லை என்கிறார். இவ்வாறு கூறி இத்தகைய காவலாய்த் திகழும் சிறப்பு மிக்க நட்பைப் போற்ற வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

பணியை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்குத் திருவள்ளுவர்,

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.   (திருக்குறள், ௫௱௰௭ – 517)

எனக் கட்டளையிடுகிறார்.

ஒரு செயலை, ஒருவன் இன்ன காரணத்தால் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அச் செயலை அவனிடமே ஒப்படைத்துச் செய்யச் சொல்ல வேண்டும் என இதன் வழிக் கூறுகிறார்.

அவ்வாறு ஆராயும் பொழுது தொழில் தெரிந்த நண்பர்களுடன் கலந்து செய்தால் முடியாதது என ஒன்றுமில்லை என்கிறார். அதற்கான குறள்

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்.   (திருக்குறள், ௪௱௬௰௨ – 462)

என்பதாகும்.

நமக்கு அறிமுகமில்லாதவரிடம் எப்படிச் செயலை ஒப்படைக்க முடியும்? நமக்குத் தெரிந்த நண்பர்கள் என்றால் எதையும் எளிதில் கலந்து பேசி முடிக்கலாம் அல்லவா?

எனவே, திரைத்துறையில் இருந்து முதல்வர் ச.சோ.விசய் தனக்கு நட்பாய் உள்ளதனால் நன்கு அறியப்பட்டவரிடம் ஒரு செயலை ஒப்படைப்பதுதானே முறையாகும். ஆகவே, திருக்குறட் பாதையில் நடைபோடும் முதல்வர் ச.சோ.விசய் பாராட்டப்பட வேண்டும் அல்லவா? அவ்வாறில்லாமல் பழிப்பானேன்?

திரைப்பட மாணாக்கர் சேர்க்கைக்கான தேர்வுக்குழுவில் பெண் உறுப்பினர் யாருமில்லை என்றும் ஓர் அங்கலாய்ப்பு. இவ்வாறு புலம்புவோரின் ஆட்சியிலும் இருந்திருக்கின்றது இதே நிலை. சட்டமன்றத்தில் 13 பெண் உறுப்பினர்களை இடம் பெறச்செய்தவர்; அமைச்சரவையில் பெண்கள் நால்வருக்கு வாய்ப்பளிததவர்; பெண்களைப் புறக்கணிப்பார் என்று எப்படி எண்ண முடியும்?

முதல்வர் நாளும் திரைப்படக்காரர்களையே சந்திக்கிறார் என்றும் நாளும் அழுகுரல் எழுப்பப்படுகிறது. ஒருவர் உயர் பொறுப்பிற்கு வந்தார் என்றால் அதுவரை அவர் பணியாற்றிய இடத்தில் உடன் இருந்தவர்கள் மகிழ்ந்து வாழ்த்துவது இயற்கைதானே! அவ்வாறு உயர்நிலைக்கு வந்தவர் மருத்துவராயின், மருத்துவர் முதலான மருத்துவத்துறையினர், வழக்குரைஞராயின், வழக்குரைஞர், நீதிபதி முதலிய சட்டத்துறையினர், அதிகாரியாயின், அதிகாரிகள், பணியாளர்கள் எனச் சந்திப்பது நடைமுறைதானே! அவ்வாறு சந்தித்து மகிழ்ச்சி தெரிவிக்க வருபவர்களைச் சந்திக்க மறுத்தால் அது பண்பாகுமா? முதல்வர் ச. சோ.விசய் திரைப்படத்துறையில் இருந்து வந்தவர். அவ்வாறாயின் நடிகர், நடிகைகள், திரை நுட்பக் கலைஞர்கள்,பட உருவாக்குநர், பட வெளியீட்டாளர், பிற திரைத் துறையினர் எனப் பணித்தோழர்கள்(colleagues) வருவது இயற்கைதானே! ஏதேனும் பழி சொல்ல வேண்டும் என்பதற்காகக் குற்றமாகக் கூறினால் என்னென்பது? இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தாலின், துணைமுதல்வரான பொழுது இப்படித்தானே சாரைசாரையாகத் திரைத்துறையினர் அவரை வந்து பார்த்தனர். நடைமுறை அறிவுமின்றி, தான் வந்த பாதையையும் மறந்து குறை கூறுவதை இனியேனும் உரியவர்கள் நிறுத்தவேண்டும்.

குறை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். தட்டியும் கேளுங்கள். நல்லன செய்தால் தட்டிக் கொடுங்கள். மனமில்லையேல் அமைதி காத்திடுங்கள். அல்லன களையவும் நல்லன தொடரவும் வழிகாட்டுங்கள்!

மக்கள் நட்சத்திரமாக இருந்து மக்கள் முதல்வராக உயர்ந்துள்ள

வினைத்திறன்மிகு ச.சோ.விசய்க்குப்

பிறந்த நாள் பெருமங்கல வாழ்த்துகள்!

நிலைத்த ஆட்சி நல்கி நிலைபுகழ் பெறுக!



Sunday, June 14, 2026

மொழிப்போர் வரலாறு அறிவோம்! -15 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 3 : இலக்குவனார் திருவள்ளுவன்

      14 June 2026      



(மொழிப்போர் வரலாறு அறிவோம்! -14 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 2 : தொடர்ச்சி)

மொழிப்போர் என்னும் பொழுது இந்தித்திணிப்பிற்கு எதிரான நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் மட்டும் பார்த்தால் போதாது. இதற்குக் காரணமான இந்தித் திணிப்புச் சூழல்களையும் நாம் பார்க்க வேண்டும். எனவே, முந்தைய கட்டுரை தொடர்பில் சில செய்திகளைப் பார்ப்போம். இவை முந்தைய கட்டுரையிலேயே இடம் பெற வேண்டியவைதாம். எனினும் இடம் இன்மை கருதி , அதன் தொடர்ச்சியாக இப்போது பார்ப்போம்.

இந்திய அரசமைப்பு அவையில், கட்சிக் கட்டுப்பாட்டினைக் கடந்து நின்ற ஒரு சிக்கல், ஆட்சி மொழிச் சிக்கலாகும்.  பேராயக் கட்சி சார்ந்த இந்தி வெறியர்களுக்கும் தென்னகத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையில், ஆட்சி மொழியைப் பற்றி தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தன.

இந்தித் தீவிரவாதிகளில் இரு பிரிவினர் இருந்தனர். பெரும்பான்மையர் இந்திதான் வேண்டுமென்றனர். சிறுபான்மையர் இந்துத்தானிதான் வேண்டுமென்றனர். இந்தியாவின் ஆட்சிமொழி இந்தியா? இந்துத்தானியா என்ற கருத்து மோதல்கள் இருந்தன.

அரசமைப்பு அவையில், தொடக்கத்திலிருந்து இறுதி வரை இந்தி பற்றி தருக்கம் வரும் போதெல்லாம் உறுப்பினர்கள் உணர்ச்சிப் பிழம்பாகிக் கொதித்து எழுந்தனர்.  எனவே, அரசியலமைப்பு அவை எவ்வகையில் நடைபெற வேண்டும் என்பது பற்றிய “அவை நடைமுறை விதிகளைத்”( Rules of Procedure) தொகுப்பதற்காக ஒரு தனிக் குழு நியமிக்கப்பட்டது.

இவ்வவையின் உறுப்பினர் இந்தி வெறியர் இர.வி.துலேகர்(இரகுநாத் விநாயக்கு துலேகர்-Raghunath Vinayak Dhulekar:1891-1980), “அந்தக் குழு, இந்துத்தானியாலேயே அவை விதிகளை எழுத வேண்டும்.’’ என்ற ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார். அரசியல் அமைப்பவைத் தலைவர், துலேகரை இந்தியில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுமாறு பணித்தார். அதற்குத் துலேகர் மறுமொழியாக,“இந்துத்தானியைத் தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள்; அவர்கள் அரசமைப்பு அவை உறுப்பினராக இருக்கவும் தகுதியற்றவர்கள்” என வாதாடினர்.

“திருத்தம் முறையற்றது” எனத் தீர்ப்பைக் கூறி, மேற்கொண்டு அதைப் பொறுத்த விவாதங்களை நடத்தக்கூடாது என்றும் தலைவர் ஆணை யிட்டார். பின்னர் அரசியலமைப்பவையில் “நடைமுறை விதிகளைப் பற்றிய அறிக்கை” விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. அப்போது மறுபடியும் இந்திச் சிக்கல்  தலை நீட்டியது.

“அரசமைப்பவையின் நடவடிக்கைகள் இந்துத்தானியிலோ ஆங்கிலத்திலோ இருக்கலாம்; அந்த இருமொழிகளும் தெரியாதவர்கள் அவர்தம் தாய்மொழியிலேயே பேசுவதற்குத் தலைவர் அனுமதிக்கலாம். அரசமைப்பு அவையின் அதிகாரப்பூர்வமான ஏடுகள், குறிப்புகள், ஆணைகள் முழுவதும் இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இருக்கலாம்.” என நடைமுறை விதிக்குழுவின் அறிக்கை பரிந்துரை செய்திருந்தது.

மற்றோர் இந்தி  வெறியரான சேத்து கோவிந்ததாசு, (Seth Govind Das:16.10.1896 –  18.06.1974) அரசமைப்பு அவையின் நடவடிக்கைகள் இந்துத்தானியில்தான் இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்திலோ உருது மொழியிலோ நடைபெறலாகாது எனவும், இந்தி தெரியாதவர்கள் மட்டும் ஆங்கிலத்திலேயோ தாய்மொழியிலேயோ பேசலாம் எனவும் கோரும் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

 அந்தத் திருத்தத்தை முன்மொழிந்து அவர் உரையாற்றும் போது, “காந்தியினுடைய 25 ஆண்டுகால முயற்சிக்குப் பின்னரும் கூடத் தென்னகத்தைச் சார்ந்தவர்கள் இந்துத்தானியைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தால், அஃது அவர்கள் குற்றம்தான் என்பதை நான் தென்னகத்தைச் சார்ந்தவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

சென்னையைச் சார்ந்த சிலருக்கு இந்துத்தானி தெரியாத காரணத்தினால், விடுதலை பெற்ற இந்தியாவிற்குரிய ஓர் அரசமைப்பை உருவாக்குவதற்குக் கூடியிருக்கும் இறைமை பொருந்திய அரசமைப்பு அவையில் ஆங்கிலம்தான் கோலாச்சுவது என்று சொன்னால், அது எங்கள் பொறுமையைச் சோதிக்கிறது.” எனக் குறிப்பிட்டு,  இந்தி பேசா மக்களைக் குற்றவாளிகள்போல் இடித்துரைத்தார். மேலும் அவர் இந்துத்தானி குறித்து உரையாற்றினாலும் தனி இந்திக்காகவே வாதுரைத்தார்.

வரைவு அரசமைப்புச் சட்டத்தின் (Draft Constitution) மீது பொது விவாதம் நடைபெறும் போது , இந்திச் சிக்கல் முழுத் தீவிரத்துடன் மீண்டும் தலையெடுத்தது. உணர்ச்சி கொப்பளிக்கும் பல விவாதங்கள் நடைபெற்றன. சேத்து கோவிந்த தாசும், அவர் குழுவைச் சார்ந்த சில இந்தி ஆதரவாளர்களும், “ தேவநாகிரி எழுத்தைக் கொண்ட இந்திதான், நாட்டினுடைய ஆட்சி மொழியாக அரசியல் அமைப்பில் இடம் பெற வேண்டும்; ஆனால் இடைக்கால ஏற்பாடாக ஆங்கிலமும் தொடரலாம்“ என்றார்கள்.

 இன்னொரு சாரார், “தேவநாகிரி, உருது எழுத்து வடிவத்தில் உள்ள இந்துத்தானியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்’’ என்றார்கள். அப்போது இந்திமொழி பேசாத பகுதியைச் சார்ந்தவர்கள், தாங்கள் இந்திக்கு எதிரிகள் அல்லர் என்றும், இந்திமொழி தெரியாத பல கோடி மக்களின் மேல் ஆட்சி மொழி என்ற பெயரால் ஒரே ஒரு மொழியைத் திணிப்பது நாட்டிற்குக் கேடு விளைவிக்கும் என்றும்  அடக்கத்தோடும் பணிவு முறையிலும் எடுத்தியம்பினர்.

தமிழகத்தைச் சேர்ந்த, சந்தானம் அவர்களும் தென்னகத்தின் பல உறுப்பினர்களுமாக 43 பேர்கள் எதிர்த் திருத்தத்தில் கையொப்பமிட்டு அரசமைப்பு அவையில் கொண்டு வந்தனர்.   இந்தி ஆட்சிமொழி என்பதை ஏற்றுக் கொண்டவர்களில் ஒரு சாரார், ஆட்சி மொழித் தகுதியுடன் ஆங்கிலம்  பயன்படுத்தப்பட வேண்டும் என்றனர். ஆங்கிலத்தை எத்தனைக் காலம் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் சிக்கல் எழுந்தது. முன்னாள் உள்துறையமைச்சர். கோவிந்த வல்லபபந்து (Govind Ballabh Pant)(30.08.1887-07.03.1961)  ஆங்கிலத்தை அகற்றுவதற்கு உண்டான கால அளவை வரையறுக்கும்  உரிமையை இந்தி மொழி பேசாத மக்களுக்கே விட்டுவிடலாம் எனக் கூறினார்.

Followers

Blog Archive