Saturday, May 30, 2026

மொழிப்போர் வரலாறு அறிவோம்! -14 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 2 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(மொழிப்போர் வரலாறு அறிவோம்! -13 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 1 : தொடர்ச்சி)

 இந்தி, தேசியமொழியாவதைத் தென்னிந்தியாவைச் சேர்ந்த திருவள்ளூர் தட்டை கிருட்டிணமாச்சாரி(T.T.K.), கம்மிடிடாலா துருகாபாய்(Gammiḍidala Durgabāi Deshmukh), தி.அ. இராமலிங்கம்(செட்டியார்) (T. A. Ramalingam Chettiar),  கொகினேனி இரங்க நாயகுலு(N. G. Ranga), நரசிம்ம கோபாலசாமி (ஐயங்கார்) (N. Gopalaswami Ayyangar)(சம்மு காசுமீர் அரசின் தலைமை யமைச்சராக 1937 – 1943 ஆம் ஆண்டுகளில் பணியாற்றியவர்.) (அனைவரும் சென்னை மாகாணம்), சி.வ.கிருட்டிணமூர்த்தி (இராவு)(S.V. Krishnamoorthy Rao) (மைசூர்) ஆகியோர் எதிர்த்தனர். இவர்கள் ஆங்கிலத்தையே அரசு மொழியாக நீட்டிக்கச் செய்ய வேண்டுமென்று வாதிட்டனர்.

அப்போது அரசியல் யாப்பு வரையறைக் குழு(Constituent Assembly of India) உறுப்பினர் தி.த.கிருட்டிணமாச்சாரி அவற்றின் சாரமாக  “எனது அருமை உத்திரப்பிரதேசத்து உடன்பிறப்புகள் இந்தி-ஏகாதிபத்தியத்தை இங்கே கசையடிப்பதன் மூலம் எங்களுக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை. நாடு முழு இந்தியாவாக இருக்க வேண்டுமா அல்லது இந்தி-இந்தியாவாக இருக்க வேண்டுமா என்பது உத்திரப்பிரதேசத்து நண்பர்களின் தேர்வைப் பொறுத்தது” எனப் பேசினார்.

இந்தி ஆட்சி மொழியாக ஆக வேண்டும் என வற்புறுத்தப்பட்டால் “இன்னொரு நாட்டுப் பிரிவினை தவிர்க்க முடியாததாகி விடும்’’ எனத் தி.த.கிருட்டிணமாச்சாரி (T.T.K.) போன்றவர்கள் 1948-ஆம் ஆண்டிலேயே அரசமைப்பு அவையில்  வாதிட்டனர்,

அரசியல் யாப்பு அவையில் இருந்த பேராயக் கட்சியின் உறுப்பினர்கள், 1949 செட்டம்பரில் தனியே நடத்திய கூட்டத்தில் ஆட்சி மொழி வாக்கெடுப்பை நடத்தினர். வாக்கெடுப்பில் இந்திக்கு ஆதரவாக 77 வாக்குகளும், ஆங்கிலத்திற்கு ஆதரவாக 77 வாக்குகளும் கிடைத்தன. அப்போது அந்தக் கூட்டத்தின் தலைவராக இருந்த பட்டாபி சீதாராமய்யர் இந்திக்கு ஆதரவாகத் தனது வாக்கை அளித்தார். இதனால் ஒரு வாக்கு வேறுபாட்டில் இந்தி மொழி வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு இந்தி மொழியை, அதனைப் பேசாத பிற மாநிலங்களில் திணிப்பதற்குப் பேராயக்கட்சி பெரிதும் முயன்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் விரும்பாத பொழுதும் இந்தித் திணிப்பு விரைவுபடுத்தப்பட்டது. எனினும்  இந்தி பேசாத மாநிலங்களுக்கு அதனைக் கற்றுக்கொள்ள 15 ஆண்டு கால வாய்ப்பு அளிப்பது என்றும், 1965 முதல் இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே -15.08.1947இற்கு முன்பே -1946ம் ஆண்டிலேயே அரசியல் அமைப்பவை அமைக்கப்பட்டுவிட்டது. இந்த அரசியல் அமைப்பவையில் அல்லது அரசியல் யாப்பவையில் –  உறுப்பினர்களாக யாரைத் தேர்ந்தெடுத்து இருந்தார்கள்? 1935ம் ஆண்டு பிரித்தானியஆட்சி, இந்தியர்களுக்காக  ஓர் அரசியல் திட்டத்தை உருவாக்கி, அதனடிப்படையில் தேர்தல்களை நடத்தியது. அந்தத் தேர்தலில் அனைத்துனக் குடிமக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்படவில்லை. சொத்து-கல்வி அடிப்படையிலேயே வாக்குரிமை வழங்கப் பெற்றது. இதனால் நூற்றுக்கு 14 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டதே நாடாளுமன்றம். இதுவே  அரசியல் அமைப்பவையாக மாற்றப்பட்டது. உண்மையில் இந்தியா விடுதலை பெற்ற பின்னரே எவ்வகை பாகுபாடுமின்றி அனைவராலும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தினரைக் கொண்டே அரசியல் யாப்பவை(அமைப்பவை) உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவே உண்மையான மக்களாட்சியின் கருத்தாக அமைந்திருக்கும். அடிமை நாட்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமைப்பவை எங்ஙனம் உரிமை நாட்டினருக்கு ஏற்றதாகச் செயற்பட்டிருக்க முடியும்?

இந்த அவையில் பெரும்பான்மை எண்ணிக்கையில் பேராயக்(காங்கிரசு) கட்சியினர் இடம் பெற்றிருந்தனர். அரசியல் அமைப்பவை அரசியல் சட்டப் பிரிவுகளை உருவாக்கும் வரைவுக்குழுத் தலைவர் பதவியை அறிஞர் அம்பேத்துகருக்கு வழங்கியது. அந்தக் குழுவில் முகம்மது சாதுல்லா, கே.எம். முன்சி, அல்லாடி கிருட்டிணசாமி(ஐயர்), டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அம்பேத்துகர், முகம்மது சாதுல்லா என்ற இசுலாமியர் ஆகிய இருவர் தவிர, வரைவுக் குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்கள் அனைவரும் பிராம்மணர்கள். பிற்படுத்தப்பட்ட பிரிவினர் எவரும் அரசியல் வரைவுக் குழுவில் இடம் பெறவில்லை. (இருப்பினும் பிராமணரான திருவள்ளூர் தட்டை கிருட்டிணமாச்சாரி(T.T.K.). இந்திக்கு எதிராகவே குரல் கொடுத்தார்.)இதனால் அம்பேத்துகர் தமது முற்போக்குச் சிந்தனை வழியில் வரைவுகளை உருவாக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அரசியல் சட்டத்தை உருவாக்க 13 குழுக்கள் அமைக்கப்பட்டன; அதில் வரைவுக் குழுவிற்கு மட்டுமே அம்பேத்துகர் தலைவர்; வரைவுக்குழு முதலான 10 குழுக்களில் இடம்பெற்றவர் கே.எம்.முன்சி  எனும் பிராம்மணர். (சாதி அடிப்படையிலேயே குழுவினர் அமர்த்தப்பட்டதால் சாதியைக் குறிப்பிட வேண்டிய நிலை வந்துள்ளது.)

அதன் காரணமாகவே இந்திய அரசியல் சட்டத்தை எரிக்கும் நிலை வருமானால், அதை எரிப்பதில் முதல் ஆளாக நான் இருப்பேன் என்று அம்பேத்துகர் அறிவித்தார் . (“I Dare say that if anybody comes forward to burn the constitution of india, I will be the first person to burn it (மாநிலங்களவை விவாதங்கள் 2-9-1953)

1946ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அரசியல் வரையறைக்குழு உருவாக்கிய அரசியல் சட்டம் 26.11.1949இல் அரசியல் அமைப்பவையின்  ஒப்புதலைப் பெற்றது. அரசியல் வரையறை அவையின் தலைவர் இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவராக இருந்த இராசேந்திரபிரசாத்து. 26.01.1950ஆம்நாளில் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் சார்பாளர்களால் உருவாக்கப்படாத இந்தச் சட்டத்தில் சாதிப் பாதுகாப்பு அடிப்படை உரிமையாக்கப்பட்டதை எதிர்த்த பெரியார் ஈ.வெ.இராமசாமி அந்த அரசியல் சட்டப் பகுதிகளைத் தீ வைத்து எரிக்கும் போராட்டத்தை 1957ம் ஆண்டு நடத்தினார். அதற்கு அவர் தேர்வு செய்த நாள் அரசியல் அமைப்பவை இச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்த நவம்பர் 26ஆம் நாள் ஆகும்.

தேர்ந்தெடுக்கப்படாத மக்கள் சார்பாளரகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம் அதன் முகப்புரையில் “இந்திய மக்களாகிய நாம் நமது அரசியலமைப்பு அவையில் இந்த அரசமைப்பை இயற்றி, ஏற்று அதனை நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்’’ என்று அறிவிக்கிறது. இவ்வாறு, இந்திய மக்கள் ஏற்போடு இந்தச் சட்டம் செய்யப்பட்டதாக உண்மைக்கு மாறான கருத்தைப் பதிவு செய்திருக்கிறது;  நாடு விடுதலை பெற்ற பிறகும்கூட இந்த ‘ அரசியல் சட்டத்துக்கு’ மக்களிடம் பொதுவாக்கெடுப்பு ஏதும் நடத்தப் படவில்லை;

இதுவே -அரசியல் சட்டம் உருவாகிய சுருக்கமான இவ்வரலாற்றுப் பின்னணியுடன் நாம் மொழித்திணிப்பு குறித்த கருத்துகளையும் பார்க்க வேண்டும்.

 சட்ட அறிஞர் கு.ச.ஆனந்தன் எழுதிய ‘மலர்க மாநில சுயாட்சி’ நூலில் இது குறித்து விரிவாகக் கணலாம்.

Thursday, May 28, 2026

 

அளவுக்குமீறிக் கொள்ளாதே! – சங்கப்புலவர்கள்பொன்னுரை  35: இலக்குவனார் திருவள்ளுவன்



(சங்கப் புலவர்கள் பொன்னுரை 34. ஒப்பிட இயலா அளவு நல்லாட்சி புரிக! – தொடர்ச்சி)

மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப்
பொன்னுங் கொள்ளார் மன்னர்”

நற்றிணை – 226. 1-3; பாலை

ஆசிரியர்: கணி புன்குன்றனார். கணியன் பூங்குன்றார் என்று சிலர் கூறினாலும் பலர் அதனை மறுக்கின்றனர்.

மரம்=மருந்து மரம்; சா=சாகும்படி, அழியும் படி; மருந்தும்=மரத்திலுள்ள மருத்துவப்பயன்தரும் இலை காய் முதலியன; உரம்=மன வலிமை; சா=அழியும்படி; செய்யார்=மேற்கொள்ளார்; உயர்தவம்=கடுமையான தவம்;

வளம்=நாட்டு வளமை; கெட=கெடுமாறு, குறையுமாறு, அழியுமாறு; பொன்னும்=வரியாகச் செல்வத்தை; கொள்ளார்=எடுத்துக்கொள்ள மாட்டார்; மன்னர்=ஆள்வோர்.

இவ்வுலக மக்கள் மரம் பட்டுப்போகும்படி அதன்பாலுள்ள மருத்துவப் பயன்தரும், இலை, பூ, காய், கனி, பட்டை, வேர் முதலிய அனைத்துப் பொருள்களையும் முழுமையாகப் பறித்துக்கொள்ள மாட்டார்கள்.

அதேபோல் தம் வலிமை முழுமையும் குன்றுமாறு தவம் மேற்கொள்ள மாட்டார்கள்.

அரசர் நாட்டு மக்கள் செல்வமெல்லாம் குறையும் வண்ணமோ அழியும் வண்ணமோ அவர்களிடமிருந்து வரித் தொகைகளைப் பெறமாட்டார்.

மருத்துவப் பயனுக்காக மரத்திலுள்ள இலை முதலியவற்றை எடுத்துக் கொள்வோர் மேலும் மேலும் தேவைப்படும் என்று அனைத்தையும் முற்றிலுமாக எடுத்துக்கொள்ள மாட்டார்.

அவ்வாறு கொள்வதால் மரம் அழிந்து மேற்கொண்டு யாரும் பயன் பெற இயலாமல் போய்விடும்.

தங்களின் மன வலிமையும் உடல் வலிமையும் கெடுமாறு கடுந்தவம் மேற்கொண்டால், அழிவே ஏற்படும்.

நாட்டு மக்களிடம் வரியை அளவோடுதான் பெற வேண்டும். அவ்வாறு இல்லாமல் வரி கொடுக்கிறார்கள் என்பதாலும் மக்களிடம் செல்வம் இருக்கிறது என்பதாலும் அளவு கடந்த வரியைக் கொள்ள மாட்டார்.

பயன்கிடைக்கும் என்பதற்காக ஒரு சேர முற்றுமாக எதையும் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும் பொன் முட்டையிடும் வாத்து கதை மூலம் நாம் இதைத்தானே அறிகிறோம்.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சல்லவா?

இப்பாடலில் வரும் உவமைகள் மூலம் தலைவி, தன் தலைவன், தன்னுடன் வாழாமல் பொருளீட்டச் செல்வது முறைதானா எனக் கேட்கிறாள். அவர் பிரிந்தால் தன் உயிரும் பிரியும் அன்றோ எனக் கேட்கிறாள்.

எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலில் (எண்-184) அளவாக வரி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியிருப்பார்.

மக்களிடம் அளவு கடந்து வரி பெறுவது வழிப்பறிக் கள்வன் கையில் வேல் வைத்துக் கொண்டு கைப்பொருள்களைக் கேட்பது போன்றது என்கிறார் திருவள்ளுவர்.

என்னும் திருக்குறளே அது.

வரியாயினும் வேறு பயன்பொருள் எதுவாயினும்

என்னும் சங்கப் புலவர்கள் பொன்னுரைக்கிணங்க நாமும் நடப்போம்.

Wednesday, May 27, 2026

குறட் கடலில் சில துளிகள் 47: நல்லினத்துடன்சேர்க! – இலக்குவனார் திருவள்ளுவன்



(குறட் கடலில் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! – தொடர்ச்சி)

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉம் இல்.   (௪௱௬௰ – 460)

உலகில் நல்லினம்போல் துணையாய் அமைவது வேறில்லை; தீயினம்போல் துன்பம் தருவது யாதுமில்லை.

நல்=நல்ல; இனத்தின்=சேர்க்கையைவிட; ஊங்கு=மேற்பட்ட; துணை=துணை; இல்லை=இல்லை; தீ=தீய; இனத்தின்- சேர்க்கையைவிட; அல்லல்=துயர்; படுப்பதூஉம்=உண்டாக்குவதும்/ தருவதும்; இல்=இல்லை.

‘ஊங்கு’ என்ற சொல்லுக்கு மிக்க, மேலாயிருப்பதொரு, சிறந்ததாகிய, சிறந்த, மேலான, மிகுந்தது, போல, மேம்பாடு என்றவாறு பல பொருள்கள் உள்ளன.

படுப்பதூஉம் – இன்னிசையளபெடை

நம்முடனான சேர்க்கை நல்லதாய் இருப்பின் அதுவே சிறந்த துணை என்கின்றனர். சேர்க்கை கெட்டதாக இருப்பின் அதைவிட வேறு கேடு எதுவும் இல்லை.

நல்லினம் நம்மை நல்ல பாதையில் அழைத்துச் செல்லும்; அறிவின் பாதையில் இட்டுச் செல்லும்; தீயவற்றை விலக்க வழி காட்டும்; துன்பம் வராமல் காக்கும்; நாம் கேட்காமலேயே நமக்குத் துணையாக இருக்கும்.

தீ யினமோ இதற்கு நேர்மாறான விளைவுகளை உருவாக்கும்; தீய பாதையில் செல்ல வைக்கும்; அறியாமையின் பக்கம் அழைத்துச் செல்லும்; நல்லனவற்றை விலக்கி வைத்துவிடும்; இன்பம் வருவதற்குத் தடையாக இருக்கும்; கூடவே இருந்து பகையாக இருக்கும்.

நல்ல எண்ணம் கொண்ட மனிதன் வழிமாறி தீய கூட்டத்துடன் சேர்ந்தால் துன்பம்தான் விளையும். ஆதலின் இச்சேர்க்கை பகைவருடன் கூட்டு வைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும். தீய சேர்க்கை அறிவிலிருந்து விலக்கி அறியாமை பக்கம் அழைத்துச் செல்வதால் பகையாகிறது. எனவே, தீய சேர்க்கை கேடு நிறைந்த வாழ்க்கையைத் தருகிறது.

ஆனால் நல்ல கூட்டத்துடன் சேர்ந்தால் முள் நிறைந்த பாதையைக்கூட மலர் நிறைந்த பாதையாக மாற்றி விடும். தீயன எவை, நல்லன எவை என வழிகாட்டி நல்ல பாதையில் நடைபோடச் செய்யும். வாழ்க்கைப் பாதையைச் செப்பனிடச் செய்து, நன்மை நிறைந்த வாழ்க்கையைத் தரும். எனவேதான் நல்லினத்தைத் துணை எனவும் தீயினத்தைப் பகை எனவும் திருவள்ளுவர் கூறுகிறார்.

 “கூடா நட்பு கேடாய் முடியும்” என்னும் ஆன்றோர் வாக்கும் தீய சேர்க்கையின் தீமையைக் கூறும்.

திருவள்ளுவரும் உடன்பாட்டு முறையில் ‘பெரியாரைத் துணைக் கோடல்’  என அதிகாரம் தந்ததுடன் ‘கூடா நட்பு’ என்றும் ‘சிற்றினம் சேராமை’ என்றும் தனித்தனியே ஈரதிகாரங்களைத் தந்துள்ளார். நல்ல சேர்க்கையை அடையாளம் காணவே ‘நட்பாராய்தல்’ என்றும் அதிகாரம் தந்துள்ளார்.

பலமுறையும் ஆராய்ந்து மேற்கொள்ளாத நட்பு தீயதாக அமையின் அது சாகும்வரை துன்பத்தைத் தருவதாக அமையும்.

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.   (திருக்குறள், ௭௱௯௰௨ – 792)

என்கிறார் திருவள்ளுவர்.

கூடா நட்பு குறித்து நாலடியாரும் விளக்கியுள்ளது.

“ஏமாந்துபோகாதீர்கள்; ‘கெட்ட தோழமை நல்ல ஒழுக்கத்தைக் கெடுக்கும்'” (1 கொரிந்தியர் 15:33) என்கிறது விவிலியம்.

இவ்வாறு உலக நூல்கள் பலவும் கூடா நட்பை அதன் தீமை கருதி விலக்கவே கூறுகின்றன.

எனவே,

துணையாய் அமையும் நல்லினத்துடன் சேர்க!

தீமை விளைவிக்கும் தீயினத்தை விலக்குக!


Followers

Blog Archive