Thursday, February 19, 2026

சட்டச் சொற்கள் விளக்கம் 1036-1040 : இலக்குவனார் திருவள்ளுவன்

      20 February 2026      கரமுதல



(சட்டச் சொற்கள் விளக்கம் 1031-1035 : தொடர்ச்சி)

1036. Avyavaharika        அறநெறியற்ற 
Avyavaharika debts – அறநெறியற்ற கடன்கள் – மது, சூதாட்டம், பிற ஒழுக்கக் கேடான செயல்களால் ஏற்படும் கடன்கள் – இந்துச் சட்டத்தில் குறிக்கப்பெறுகிறது.
1037. Award         தீர்வம்
தீர்வளிப்பு
தீர்ப்பு வழங்கு

 award  என்றால் பொதுவாக நாம் விருது என்றும் சில நேரங்களில் பரிசு என்றும் கருதுகிறோம். ஆனால், வழங்கல் என்னும் பொருள் உண்டு. எனவே, சட்டத்துறையில் வழங்கப் பெறும் தீர்ப்பினைக் குறிக்கிறது.

தீர்வு எனவும் பொருள்படும்.
 

இரு தரப்பை இசைவிக்கும் தீர்ப்பாளரின் முடிவையும் குறிக்கும்.
 

தொழிலாளர் நீதிமன்றம், தொழில்துறை தீர்ப்பாயம் அல்லது தேசிய தீர்ப்பாயம் அல்லது நடுவர் தீர்ப்புகள் உட்பட தொடர்புடைய மாநிலச் சட்டங்களால் எந்தவொரு தொழில்துறை தகராறு அல்லது தொடர்புடைய கருத்து வேறுபாட்டிற்கான அல்லது சட்ட ஐயப்பாடு தொடர்பான இடைக்கால அல்லது இறுதித் தீர்வத்தைக் குறிக்கிறது.
 

1965 ஆம் ஆண்டு மீதூதியச் சட்டம், பிரிவு பிரிவு 2(7) “தீர்வம்” என்ற சொல்லை வரையறுக்கிறது.
 பொது பொறுப்பு காப்பீட்டு சட்டம், 1

991 பிரிவு 7 தீர்வம் குறித்துத் தெரிவிக்கிறது.
 தொழில்துறை தகராறுகள் சட்டம், 1947 இலிலும் தீர்வம் குறிக்கப் பெற்றுள்ளது. 

தீர்வம்(Award) என்பதுடன் தீர்ப்பு(judgement) தீர்ப்பாணை(decree) ஆகியன பற்றியும் அறிந்து கொள்க.
1038. Award method      தீர்வு முறை

 தீர்வு முறை என்பது கொள்முதல் செய்பவர்

ஏலங்களை மதிப்பிடுவதற்கும், வெளிப்படைத் தன்மைக்கும் நயன்மையை(நியாயத்தை) உறுதி செய்வதற்கும் ஒப்பந்ததாரரைத் தேர்ந்தெடுப்பதற்கும் பயன்படுத்தும் முறையான நடைமுறையாகும்

. முதன்மை முறைகளில் குறைந்த விலை, அதிகத் தகுதி வாய்ந்தவர் அல்லது சிறந்த மதிப்பின் அடிப்படையில் வழங்குதல் ஆகியவை அடங்கும்.

இந்தச் செயல்முறை பொதுவாகத் தேவைகளை அடையாளம் காண்பது, ஒப்பந்தப்புள்ளி வழங்குதல், மதிப்பீடு செய்தல் , ஒப்பந்தக் கையொப்பம் ஆகியவற்றைப் பின்பற்றுகிறது.
1039. Award of compensation  இழப்பீடு வழங்குதல் 

நேர்ச்சி(விபத்து)களால் உயிரிழப்பு, உறுப்பிழப்பு, காயம், கை கால் முறிவு, ஊர்திகளுக்குச் சேதங்கள், முறையற்ற செயல்களால்  ஏற்படுத்தப்படும் பணி இழப்பு முதலிய பல்வேறு கரணங்களால் பாதிப்புற்றவருக்கு பாதிப்புகளுக்கு ஈடாக வழங்கப்படும் தொகையே இழப்பீட்டுத் தொகையாகும்.
 

பாதிப்பில் மருத்துவச் செலவுகள், எதிர்கால வருவாய் இழப்பு முதலியவை அடங்கும்.
1040. Awarding damagesசேதஈடு வழங்கல்

 உரிமை வழக்கில் உரிமை கோருநருக்கு முறையீடடாளர் அல்லது வழக்காடி சேதத்திற்கு ஈடாகத் தரும் தொகை

வழங்கல்.
 damage என்பது  அழிவு/ சிதைவு/ சேதம்/ஊறுபாடு எனப்பொருளாகும்.

 damages என்பது இழப்பீட்டைக் குறிக்கும். 
compensation-இழப்பீடு என்பதற்கும்  damages என்பதற்கும் வேறுபாடு காட்ட சேதஈடு எனலாம்.
ஏதம் என்பதிலிருந்து உருவான சேதம் என்னும் சொல்லும் தமிழே.
 

குற்றவாளிகள் நன்னடத்தைச் சட்டம் 1958 பிரிவு 5(3) [S. 5(3) POA, 1958] இழப்பீடு வழங்குதலைக் குறிக்கிறது.

கொடுத்ததைத் திரும்பக் கேட்காதே! – இலக்குவனார் திருவள்ளுவன், தாய் இதழ்

      19 February 2026      கரமுதல



****

இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய

கொடுத்தவை தாவென் சொல்லினும்

இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே.

        – சாத்தனார், குறுந்தொகை 349, அடிகள் 5-7

தலைவி கூற்று

திணை: நெய்தல்

கொடைத்தன்மை குறித்த பண்பாட்டை உணர்த்துவது இப்பாடல் வரிகள்.

பொருள்:

தாம் அடைந்த வறுமைத் துன்பத்துக்கு அஞ்சி, நம்மிடம் இரப்பவர்க்கு அவர் விரும்பிய பொருளையும் அவருக்குத் தேவையானவற்றையும் கொடுத்து, அதன்பின், அவர்களுக்குக் கொடுத்தவற்றைத் திருப்பித் தருமாறு சொல்லுதலைக் காட்டிலும், நமது இனிய உயிரை இழத்தல், துன்பமுடையதாகுமோ? ஆகாது. (எனவே, கொடுத்ததை மீண்டும் தருமாறு கேட்கக் கூடாது.)

பதவுரை:

இடுக்கண் அஞ்சி=தமக்கு நேர்ந்த துன்பத்தினால் வருந்தி; இரந்தோர் வேண்டிய=இரந்தவர் கேட்டவற்றை; கொடுத்தவை=கொடுத்து, அதன் பின் அவற்றை; தாவென்=எனக்குத் திரும்பவும் தா என்று சொல்லினும்=சொல்வதைவிட; இன்னா தோ=துன்பம் தருவதோ நம் இன்னுயிர் இழப்பே=நம இனிய உயிரை இழப்பது. ( இல்லை)

“கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை” என்பது பழமொழி. நாம் கடனானவோ, இரவலாகவோ, அன்பாகவோ ஒருவருக்குக் கொடுத்ததை மீண்டும் கேட்கும் பொழுது பகை உண்டாவதைக் குறிக்கிறது.

“கடன் அன்பை முறிக்கும்” என்றும் சொல்வர். இதையே, “வாங்கும்போது இனிப்பு; கொடுக்கும்போது கசப்பு” என்றும் சொல்வர்.

ஒரு பொருளை வாங்கும்போது வாங்குபவர் மகிழ்ச்சியாகக் கருதுகிறார். அவரிடம் அதைத் திருப்பிக் கேட்கும் பொழுது கசப்புணர்வு கொள்கிறார்.

முற்றிலும் உரிமையாக இல்லாமல் கடனாவோ, இரவலாகவோ கொடுத்தைத் தன் தேவை கருதி மீண்டும் தருமாறு கேட்டால், அவ்வாறு தருவதே தம் கடமை என அறிந்தும் கசப்புணர்வு கொள்வோர் மிகுதியாக உள்ளனர்.

இவையெல்லாம் இயல்பான வாழ்வில் ஏற்படும் நடைமுறைகள். ஆனால், இப்பாடல் பண்பாட்டின் சிறப்பைக் குறிக்கிறது.

வறுமையினால் ஒருவர் வந்து கேட்கும் பொழுது அல்லது துன்பம் வந்த பொழுது அதனைப் போக்க உதவ, வேண்டியதை அன்புள்ளத்துடன் கொடுத்து அவர் துன்பத்தைப் போக்குவது சிறப்பாகும்.

பிறருக்கு உதவுவதன் மூலம் தன் கொடைத்தன்மையை வெளிப்படுத்தி விட்டுப் பின்னர் அவருடன் ஏற்பட்ட முரண்பாட்டினாலோ தன் தேவை கருதியோ “கொடுத்ததை மீளக் கேட்பதை விட உயிரை இழப்பது துன்பமானது இல்லை அல்லவா” எனக் கேட்கிறார் புலவர்.

இறப்பது என்பது துன்பமானது. அத்துன்பமும் கொடுத்ததை மீளக் கேட்கும் துன்பத்தினும் மிகுதியானது இல்லை அல்லவா?

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை. (திருக்குறள், ௨௱௩௰ – 230)

என்று திருவள்ளுவரும் சாதலைவிடத் துன்பமானது வேறு இல்லை என்கிறார்.

எனினும் அத்துன்பமானது ஒருவர் கேட்கும் பொழுது கேட்டதைக் கொடுக்க முடியாமல் போகும்போது அதுவும் இனியதே என்கிறார்.

கொடுத்ததைத் திருப்பிக் கேட்பதும் ஈகை இயலாமையைக் குறிப்பதே!

எனவேதான் சங்கப் புலவர் சாத்தனார், “கொடுத்ததைத் திருப்பிக் கேட்பதைவிட இறப்பது மேல்” என்கிறார்.

நாமும் யாருக்கும் எதையும் கொடுத்தபின் திரும்பக் கேட்காமல் இருப்போம்!

தாய், 19.02.26

Wednesday, February 18, 2026

இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 1 : இலக்குவனார் திருவள்ளுவன்



  “இன்றைய மன்பதைச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்”என்னும் பொதுப்பொருண்மையில் 22 தலைப்புகளில் இதுவரை உரையாற்றி உள்ளனர். இன்றைய மன்பதையை ஆட்டிப்படைக்கும் சிக்கல்களைத் தேர்ந்தெடுத்துக் கவிஞர் செவ்வியன்  தொடர் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். கவிஞர் செவ்வியன் இப்பொழிவுகளில் இடம் பெற்ற தலைப்புகளில் முன்னரே உரை ஆற்றியுள்ளார் அல்லது எழுதி உள்ளார். எனவே, தாமே முழுமையாகப் பேசக்கூடிய கருத்தாழம் உள்ளவராக இருப்பினும் பிறரது கருத்துகளையும் அறியச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இப்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார் எனக் கருதுகிறேன். நிறைவுரை ஆற்ற என்னை அழைத்த கவிஞர் செவ்வியன் அவர்களுக்கும் அன்றில் இறைஎழிலன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கவிஞர் செவ்வியன் தெரிவு செய்துள்ள இச்சிக்கல்களை ஆராய்ந்து தீர்த்தாலே நாடு நலம் பெறும் மக்கள் வளம் பெறுவர்.

  முதலில் அனைவரின் பேச்சுகளையும் அறிந்து அதற்கேற்ப என் கருத்துகளைப் பதியலாம் என எண்ணியிருந்தேன். அக்கருத்துகொண்டிருந்த கவிஞர் செவ்வியன், பின்னர் இவ்வாறு உரைகளின் அடிப்படையில் உரையாற்றும் பொழுது வெட்டியும் ஒட்டியும் அமைவதாக நிறைவுரை அமையுமேன்றி, என்னுடைய கருத்துகளை அறிய  வாய்ப்பிருக்காது; ஆதலின்  தலைப்புகளின் அடிப்படையிலான என் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டினார். ஆதலின், அதற்கிணங்க இத் தொடர்  சொற்பொழிவில் ஆற்றிய உரைகளின் தலைப்புகள் பற்றிய என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.தமிழ்ப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பல்வேறு இதழ்கள் நடத்தி அவற்றின் வழியே தமிழ்ப்பணிகள்ஆற்றியவர்.  இன்றைய தலைப்புகள் குறித்து  அருடைய கருத்துகள் இன்றும் பொருந்துவனவாக அமையும் வகையில் நாட்டில் மாற்றம் ஏற்படாமல் உள்ளது. அவற்றில் சிலவற்றையும் நான் இடையிடையே படித்துக் காட்ட உள்ளேன்.

  இத் தொடர் சொற்பொழிவுகளில் இடம் பெற்ற தலைப்புகள் வருமாறு : –

பொதுத்தலைப்பு: இன்றையச் சமூகச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்

1. (01.09.2012)  தொடக்க விழா

2. (08.09.2012) ஆசிரியர் – நிருவாகம் – பெற்றோர் – மாணவர் உறவுகள்

 3.(15.09.2012) தமிழகத்தில் ஆட்சிமொழியும் பயிற்று மொழியும் ஒன்றியத்தோடு தொடர்புடைய மொழி

4. (22/09/12) இந்திய ஒன்றியமும் மாநிலத் தன்னாட்சியும்

5. (29/09/12) கல்வி அரசு பள்ளி வழியாதனியார் பள்ளி வழியா?

6. (06.10.12) குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு ஏன்எந்த வழியில்?

7. (13/10/12) கல்வி அருகமைப் பள்ளி மூலம்சமச்சீர்க்கல்வி ஏன்எவ்வாறு?

8. (20/10/12) பொதுநல்வாழ்வு – அரசின் போக்கும் மக்களின் கடமையும்

9.(27/10/12) ஊழலும் கையூட்டும் : அரசின் கட்சிகள்அரசு ஊழியர்கள்,பொதுமக்கள்

10.(03/11/12) விலை ஏற்றமும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புப் போராட்டமும்

11. (10.11.12)  இலவயங்கள் – விலையில்லாப் பொருள்கள் – பண்பாடு – ஒழுக்கம- முயற்சி ஆகியவற்றின் அழிவு -அரசியல் கட்சிகள் எதிர்த்துப்போராடாதது

12. (17.11.12) இட ஒதுக்கீடும் சலுகைகளும் சாதி மத அடிப்படையிலாபொருளியல் அடிப்படையிலா?

13. ( 24.11.12) வேலையில்லாத் திண்டாட்டம் உண்மையா?  பொய்யாஉண்மையெனில் தீ்ர்வு என்ன?

14. (01.12.12)  சாதி வெறியும் தீண்டாமை ஒழிப்பும் – பெரியாரின் பங்கு – இவை ஒழியக் காரணங்கள் எவைதீர்வு எவ்வாறு?

15. (08.12.12) உற்பத்தி: பொதுத்துறை – கூட்டுறவுத் தறை – தனியார் துறை- உற்பத்தித் தேவையை நிறைவு செய்யவா?  ஆதாயம்(இலாபம்) ஈடடவாஆதாயம் எனில் ஆதாய விழுக்காட்டை வரையறுப்பது யார்?

16. (15.12.12) இயற்கை வளங்கள் கொள்ளை – காரணம் யார்அரசாதனியார்களா?

17. (22.12.12) முனைப்புவாதமும்(தீவிரவாதமும்) வன்முறையும் ஏன்எப்போதுதீர்வுக்கு என்ன வழி?

18. (29.12.12) பண்பாட்டுச் சீரழிவுக்குப் பொறுப்பு :திரைப்படம் – சின்னதிரை – விளம்பரம் – தணிக்கைத் துறை – பெற்றோர் மரபுவழிப் பண்பாட்டைக் காப்பாற்றுதவற்கான போராட்ட வடிவம் என்ன?

19. (05.01.2013)  இன்றைய  குமுகாய அமைப்பில் மண முறிவுகள் – குடும்பச் சீரழிவுகள் – காரணம் என்னதீர்வு என்ன?

20. 12.01.13 அரசியல் கட்சிகள் – சாதியக்கட்சிகள் – மதக்கட்சிகள் ஆகியவற்றின் பெருக்கம் வளர்ச்சியின் அறிகுறியாசீரழிவா?  இந்தியக் கூட்டரசில் எத்தனைக்கட்சிகள் இருக்க வேண்டும்மாநிலக் கட்சிகள் தேவைதானா?

21. 19.01.13  ஆட்சி நிருவாகமும் தேர்தல்முறையும் : அழிவுக்குக் காரணம் அரசியல் கட்சிகளாஅரசுப் பணியாளர்களாவாக்காளர்களா?

22. (26.01.2013) நிறைவு விழா

  தொடக்கமாக நான் ஒரு கருத்தைத் தெரிவிக்க விழைகிறேன்.

 மொழிப்போர் ஈகியருக்கான வீர வணக்க நாள்நடைமுறைக்கிணங்க நேற்று (சனவரி 25)  நிகழ்த்தப்பட்டாலும் உண்மையில் இன்றுதான் வீர வணக்க நாள். முதலில் துக்க நாளாக அறிவிக்கப்பட்டதும் சனவரி 26ஆம் நாளைத்தான். இன்றுதான் இந்தி எதிர்ப்புப் போரில் உயிரிழந்தவர்களுக்கு,  ஈகியருக்கு வணக்கம் செலுத்த வேண்டிய நாள்.  வரலாற்றில் துக்கநாளாக அறிவிக்கப்பட்ட இந்த நாளில் தொடர்பொழிவின் நிறைவு நிகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால்தொடர் பொழிவுகளில் இந்தி எதிர்ப்புப் போரைப்பற்றியோ தமிழ்க்காப்புப்போர் பற்றியோ ஒரு பொழிவும்  அமைக்காதது வியப்பாய் இருக்கிறது. மன்பதைக்குத் தேவையான சிக்கல்கள்பற்றி நன்கு ஆராய்ந்து தலைப்புகள் தந்த,  மொழிப்போர் குறித்து நூல் எழுதிய கவிஞர் செவ்வியன் அவர்கள் ஏன் இதை விட்டு விட்டார்  என்று தெரியவில்லை. இருப்பினும்,  ஆட்சி மொழிபயிற்றுமொழிஒன்றிய மொழி குறித்தும் கல்வி குறித்தும் தலைப்புகள் உள்ளமையால் அவை பற்றிய தலைப்புகளில் இந்தி முதன்மை குறித்தும் தமிழ்க்காப்பு குறித்தும் காணலாம்.

(தொடரும்)

Tuesday, February 17, 2026

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 2 : இலக்குவனார் திருவள்ளுவன்

      18 February 2026      கரமுதல



(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 1 : தொடர்ச்சி)

இந்தி எதிர்ப்பு, பெரியார், தன்னாட்சி வருமாயின் தன்மொழியும் வேண்டாவோ, தமிழ்நாடு தமிழருக்கே ஆகிய நான்கு அம்மானைப்பாடல்களுடன் நூலைத் தொடங்கியுள்ளார். முதல் கட்டுரையான அறிமுகத்தில் இவற்றைக் காணலாம்.

வீட்டுச் சிறையில் இருந்த பெண்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டக்களத்தில் இறங்கிச் சிறை புகுந்ததை இந்நூல் கூறுகிறது. உலகெங்கும் வாக்குரிமை,  அதிகாரம், சம ஊதியம் தொடர்பில் ஏற்பட்ட பெண்கள் எழுச்சியையும் தமிழ் நாட்டில் மொழி காக்க எழுந்த பெண்கள் எழுச்சியையும் விளக்குவதைக் குறிப்பிட்டுள்ளார்.

 பள்ளிகளில் கட்டாய இந்திப்பாடம் 21.04.1938 ஆம் நாளிட்ட அரசாணை மூலம் புகுத்தப்பட்டது. அதற்கு முன்பே 24.08.1937 இல் தஞ்சையில்  முதல் இந்தி எதிர்ப்புக் குரல் எழுந்ததைக் குறிப்பிடுகிறார்.

இக்கட்டுரை இந்நூலின் செய்திகளின் சுருக்கமாக இடம் பெற்றுள்ளது.

போராட்டக் களத்தில் பெண்கள் பங்கேற்பு குறித்து இரண்டாவது கட்டுரை  விளக்குகிறது.

முதன்முறையாகக் கைதாகிச் சிறை சென்றவர் பெரியார் ஈ.வெ.இராமசாமியின் தங்கை சா.இரா.கண்ணம்மாள் என்பதைக் குறிப்பிடுகிறார். 24.10.1937 இல் இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும் என்று தலையங்கம் எழுதியதால் பெரியாரும் பதிப்பாளர் என்ற முறையில் தங்கை கண்ணம்மாவும் தண்டிக்கப் பெற்றுள்ளனர். இவர், புரட்சி, குடியரசு ஆகிய இதழ்களின் பதிப்பாசிரியராக இருந்தார்.

பேராயம்பட்டுத் தோழர் டி.இரங்கம்மாள், 28.01.1938 ஆம் நாளிட்ட ‘புரட்சி’ இதழில், “திருவண்ணாமலை இரகசியம்- பார்ப்பனர்களின் கொண்டாட்டமும் பாமரர்களின் திண்டாட்டமும்” என்னும் கட்டுரையில் திருவண்ணாமலை தீபத்தின்பொழுது பெண்கள்படும் இன்னல்களைப் பட்டியலிட்டுத் தந்துள்ளார். பெண்கள் பொதுவெளிக்கு வருவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்தே பெரியார் இயக்கம் நடத்தும் கூட்டங்கள், மாநாடுகளில் பெண்களுக்கென்று தனியிடம் ஒதுக்கப்பட்டது. பல மாநாடுகளில் பெண்களின் தலைமையுரை, தொடக்கவுரை, மாநாட்டுத்திறப்புரை, எழுச்சியுரை முதலியவை  இடம் பெற்றமையை இக்கட்டுரையில் விளக்குகிறார். நீலாம்பிகை அம்மையார், காந்தி பெண்களின் நிலையை உணராமையைக் குறிப்பிட்டுச் சாடியுள்ளமையை எடுத்துரைக்கிறார்(புரட்சி 04.02.1938).

மூன்றாம் கட்டுரையில் நீலாவதி அம்மையார் காந்தியடிகளிடம் கேட்ட கேள்விகள் குறித்து எழுதியுள்ளார். காந்தியடிகளின் மதவாதப்போக்கிற்கு எதிராகக் கேள்விகள் கேட்ட அவர், அவரது அறிவுரையால் தேசத்தொண்டிலும் அடி எடுத்து வைத்தார். குமுக நீதிக்கும் தன்மதிப்பிற்கும் சான்றாக நீலாம்பிகை அம்மையார் விளங்கியதை இக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.

போராட்டத்துக்கு உரமிட்ட தலைவர்களை நான்காம் கட்டுரையில் விளக்குகிறார். தமிழர் கழகம் அமைப்பின் தொடக்க விழாவில்(04.09.1938) தலைமையுரையாற்றிய மீனாம்பாள் சிவராசு, பெரியாராலும் அண்ணாவாலும் பாராட்டப்பெற்ற ‘அன்னை’ இதழின் ஆசிரியர் சத்தியவாணிமுத்து, 01.09.1938 இல் நடைபெற்ற மாதர் சங்கப் பொதுக் கூட்டத்தில் பண்டிதை நாராயணி அம்மையார் அமிழ் பாதை ஊர்தி(டிராம்), பேருந்து முதலியவற்றில் ஆங்கிலத்தில் பெயர்ப்பலகைகள் இருப்பதைத் தமிழுக்கு மாற்ற வேண்டும் என்னும் தீர்மானம், 03.09.1938 அன்று தோழர் பார்வதி அம்மையார் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட இந்தி எதிர்ப்பு ஊர்வலம், 09.09.1938 அன்று சென்னை புதுவண்ணாரப் பேட்டையில் நடைபெற்ற தோழர் மீனாம்பாள் சிவராசு தலைமையிலான பெரும் இந்திஎதிர்ப்புப் போராட்டம் முதலிய பல போராட்டங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

1938 பெண்கள் மாநாடு முதல் அறிவிப்பு குறித்து ஐந்தாம் கட்டுரை விளக்குகிறது.

இவ்வறிவிப்பின் மூலம் இதுவரை சலசாட்சி, சரசுவதி, புட்பவதி ஆகிய பெண் தலைவர்களின் பெயர்கள், தாமரைக்கண்ணம்மையார், கலைமகளம்மையார், மலர் முகத்தம்மையார் எனத் தனித்தமிழ்ப் பெயர்களாக மாறியமையைச் சுட்டிக் காட்டுகிறார்.

பெண்கள் மாநாட்டுக்குத் திருவரங்க நீலாம்பிகை அம்மையாரைத் தலைவராக்கியது தமிழ் இயக்க மக்களை ஒரு குடையின் கீழ் ஒன்று திரட்ட உதவும் என வீரத்தமிழன்னை தருமாம்பாள் கணக்கிட்டது மிகச் சரியானது என்கிறார். எனவேதான் இந்தி எதிரப்பு என்பது வெறும் இந்தி எதிர்ப்பாக மட்டுமல்லாமல் தனித்தமிழ்க்காப்பாகவும் சிறந்து விளங்கியது.

தோழர் பார்வதியம்மாள் மூவேந்தர் கொடியின் தொன்மை, சிறப்பு ஆகியவற்றை விளக்கி, தமிழ் மக்கள் தமிழ்க்கொடியை ஏற்ற வேண்டிய இன்றையமையாமையையும் வலியுறுத்தி, தமிழ்க்கொடியை ஏற்றி வைத்தார். தமிழர் இயக்கம் வகுப்புவாதமற்றது என்பதை இராசகோபாலாச்சாரி புரிந்துகொள்ள வேண்டும் என்றவர், தமிழர்கட்கு, தமிழ்நாட்டிற்கு வெற்றி வெற்றி என்று வலுத்த கைதட்டுதலுக்கிடையே தமிழ்க்கொடியை ஏற்றியுள்ளார்.

சிலர் திரு.வி.க.விற்கு எதிராகக் குரல் எழுப்பியதையும் அதற்கு அவர் தக்கவிடையிறுத்ததையும் பதிந்துள்ளார்.  பெண்கள் மாநாட்டிற்காகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்தமையை விளக்கி இதன் சிறப்பான ஒழுங்கு முறையைப் பாராட்டியுள்ளார்.

Followers

Blog Archive