தாய், பங்குனி 30,2057/ஏப்பிரல் 13, 2026
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 31
தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே!
‘கண்டவர் இல்’ என, உலகத்துள் உணராதார்,
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை.
நல்லந்துவனார், கலித்தொகை : 125 : 1-4
நெய்தற் கலி
இப்பாடல் 24 அடிகளையுடையது. முதல் 4 அடிகள் மட்டும் இங்கே தரப்பட்டுள்ளன.
பதவுரை:
கண்டவர் இல்=பார்த்தவர் இல்லை; உலகத்துள்=உலகத்தில் உள்ளவர்கள்; உணராதார்=அறியாவிட்டாலும்; தங்காது=தொடர்புடையவர்களிடம் மட்டும் தங்கியிராமல்;
தகைவு இன்றித்=தடையின்றி; தாம் செய்யும் = தாம் ஆற்றும்; வினைகளுள்=செயல்களுள்;
நெஞ்சு=மனம்; அறிந்த=அறியும்; கொடியவை=கொடிய செயல்களை; மறைப்பினும்=மறைத்தாலும்; அறிபவர்=அறிந்தவர் இல்லை என எண்ணாதே;
நெஞ்சத்துக் குறுகிய=மனம் மட்டும் அறிந்ததற்கு; கரி=சான்று; இல்லை = தேவையில்லை.
கருத்து:
தாம் செய்யும் தீவினைச் செயல்களை உலகத்தில் யாரும் அறியார் என எண்ணித் தீங்கு செய்யாதே. அவற்றை உன் மனமறியும். ஆகவே, மனச்சான்றின்படி தீவினை புரியாமல் வாழ்வாயாக!
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
(திருக்குறள், ௨௱௯௰௩ – 293)
என்கிறார் திருவள்ளுவர்.
தன்னைத்தன் நெஞ்சங் கரியாகத் தானடங்கின்
பின்னைத்தான் எய்தா நலனில்லை.
என்கிறார் முனைப்பாடியார் (அறநெறிச்சாரம் 141.1-2)
தன் செயல்களுக்குத் தன் மனத்தினையே சான்றாக வைத்து ஒருவன் அடக்கமாக இருந்து வாழ்ந்து வருவானாயின், பின்னர் அவனால் அடைய முடியாத இன்பம் எவ்வுலகத்திலும் இல்லை என்று பொருள்.
இவ்வாறு பிறரும் நெஞ்சறிய தீவினை புரியாதே என்கின்றனர்.
தீய செயல்களைச் செய்தால் அதன் விளைவு யாருக்கு எதிராகத் தீவினை செய்தார்களோ அத்தகைய பாதிக்கப்பட்டவர்களுக்கும் தீயன உண்டாக்கும்.
அதே நேரம், தீ வினை புரிவோருக்கும் தீயனவே விளையும். தீயோர் தீயவற்றை எவ்வளவு கமுக்கமாகச் செய்தாலும் உலகத்தினரால் அறியப்படும்.
அதனால் உலக மக்களின் பழிக்கு ஆளாவர். ஒருவேளை யாரும் அவற்றை அறியாமல் இருக்கலாம்.
ஆனால், அந்தச் சூழலிலும் தீவினை புரிந்தோரின் உள்ளத்தை அது சுடும்.
சேக்சுபியரின் மேக்குபெத்து (மேக்குபெத்தின் துயரங்கள் / The Tragedy of Macbeth) நாடகத்தில் மேக்குபெத்து (Macbeth), தன் மனைவியின் தூண்டுதலால் அரசர் தன்கன் (King Duncan)-ஐக் கொன்று விடுகிறான்.
திருவாட்டி மேக்குபெத்து தன் கையில் உள்ள குருதிக் கறையைக் கொஞ்சம் தண்ணீரால் கழுவிடலாம் என்பார்.
ஆனால் பின்னர் குற்ற உணர்வால் கையில் குருதி வாடை இருப்பதாகக் கற்பனையாக எண்ணிக் கொண்டு அடிக்கடி கை கழுவுவார்.
“குருதி வாடை இன்னும் இருக்கிறது.. அரபு நாடுகளில் உள்ள அத்தனை நறுமண நெய்களைக் கொண்டு கை கழுவினாலும் இந்தச் சிறிய கை மணக்காது” (Here’s the smell of the blood still. All the perfumes of Arabia will not sweeten this little hand.) என்பார்.
(இந்நாடகத்தின் மொழி ஆக்க நூல் ஒன்றில் முதலில் கழுவக் கொஞ்சம் தண்ணீர் போதும் என்றதால், அனைத்துக் கடல் நீரைக் கொண்டு கழுவினாலும் கறை போகாது என வரும்.)
செய்யும் தீவினைக்கு மனமே சான்றாய் அமைந்து துன்பம் தரும் என்பதற்கு இந்நாடகக் காட்சியே எடுத்துக் காட்டாகும்.
எனவே, மனச்சான்றுக்கு அஞ்சித் தீவினை புரியாமல் இருக்க வேண்டும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்