Friday, February 6, 2026

இந்தி நுழைவை எந்நாளும் தடுப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்


    இந்தி நுழை
    வை எந்நாளும் தடுப்போம்!

    இந்தியை அல்ல, இந்தித்திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்” என நம்மைத் தலைவர்கள் ஏமாற்றுகிறார்கள். நாமும் “ஆமாம், ஆமாம்” என்று சொல்லி இந்தித் திணிப்பிற்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களின் மாநிலங்களில் இந்திப் பயன்பாட்டை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்கு அப்பால் பிற மக்களின் மீது, நம் மக்களின் மீது இந்தியை நுழைப்பதே திணிப்பதுதான்.

    பள்ளிகளில் இளமழலை(L.K.G.) வகுப்பிலிருந்தே இந்தி திணிக்கப்பட்டுக் கற்பிக்கப்படுகிறது. கேட்டால் விருப்பப் பாடம் என்கிறார்கள். விருப்பப்பாடம் என்றால் வேறு மொழிகளும் விருப்பப்பாடப் பட்டியலில் இருக்கிறதா என்றால் இல்லை. விருப்பப்பாடம் என்றால் யார் விருப்பத்தில் கற்பிக்கப்படுகிறது? படிப்பவர்கள் விருப்பத்திலா? இல்லை! படிப்பவர்களின் பெற்றோர்கள் விருப்பத்திலா? இல்லவே இல்லை! அவ்வாறென்றால் இந்தியைத் திணிப்பதாகக் கூறும் தமிழ்நாட்டின் அரசு யார் விருப்பம் என்று கூறி இந்தியைத் திணிக்கிறது? இந்தித்திணிப்பை எதிர்ப்பதாகக் கூறும் கட்சிகள் அனைத்தும்  வாய்மூடி அமைதியாக இருப்பது ஏன்? இந்தியைத் திணிப்பதை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே மெல்ல மெல்ல-அல்ல, அல்ல விரைவாக இந்தியை நாடு முழுவதும் பரப்பிக் கொண்டிருப்பது ஏன்? பள்ளிகளில் இருந்து இந்தியை அடியோடு நீக்கும் துணிவு அரசிற்கு உள்ளதா? அதனை ஒப்புக்கொள்ளும் தமிழ்க்காப்புணர்வு பிற கட்சிகளுக்கு உள்ளதா?

      அரசு என்றால் இன்றைய அரசு மட்டும் அல்ல. இந்தியை எதிர்த்து ஆட்சிக்கு வந்த எல்லா அரசுகளையும்தான் குறிப்பிடுகிறோம். பல நல்ல  திட்டங்களைச் செயற்படுத்தும் அரசு, இந்தி நுழைவு ஒழிப்பையும் ஒரு திட்டமாகக் கொண்டு செயலாற்றினால் என்ன? எவ்வகை விருப்பத் தெரிவுமின்றி இந்தியை வல்லடியாகப் படிக்கச் சொல்வதை நிறுத்தினால்தான் என்ன?

    இந்தி எதிர்ப்பால் ஆட்சிக்கு வந்தவர்கள் குடும்பத்தினர் கோடியில் புரள்கின்றனர். ஆனால் இந்தி எதிர்ப்பில் உயிரிழந்தவர்கள், தண்டனை பெற்றவர்கள், துன்புற்றவர்கள் குடும்பத்தினர், அவர்கள் வழி வந்தோர் தெருக்கோடியில் அல்லலுறும் நிலையில் இருப்பது ஏன்?

    1930 இல் மொழிப்போராட்டம் தொடங்கி நூறாண்டு நெருங்க உள்ளது. 1965 மொழிப்போர் நிகழ்ந்து 60 ஆணடு ஆகிறது. ஆனால் இன்றும் நாளும் இந்தித் திணிப்புகள் உள்ளன. அலைபேசி வழியாக இந்தித் திணிப்பு! முழக்கங்கள் வாயிலாக இந்தித் திணிப்பு! திட்டங்களின் பெயர்கள் வாயிலாக இந்தித் திணிப்பு! பெயர்கள் வாயிலாக இந்தித் திணிப்பு! திரைப்படங்கள் வாயிலாக இந்தித் திணிப்பு! தொலைக்காட்சிகள் வாயிலாக இந்தித் திணிப்பு! என எங்கும் எதிலும் இந்தித் திணிப்பு அரங்கேறிக் கொண்டுள்ளது. ஆனாலும் இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் என நாளும் வெற்று முழக்கம்!

    எப்பொழுது, தமிழ்நாட்டில் நுழைந்துள்ள, மேலும் நுழையப் பார்க்கிற இந்தியை அடியோடு எதிர்க்கிறோம் என முழங்கி அதனைச் செயற்படுத்துகிறார்களோ, அப்போதுதான் இந்தித் திணிப்பு நிற்கும்; மக்களும் பயனடைவார்கள்.

     மாநில உரிமைக்குக் குரல் கொடுத்து வரும் அரசு, நவோதயா பள்ளிகள் வாயிலாகவும் மத்திய அரசு கல்விவாரியப்பள்ளிகள் வாயிலாகவும் படைத்துறைப் பள்ளிகள் வாயிலாகவும் பிற கல்விநிலையங்கள் வாயிலாகவும் இந்தித்திணிப்பை அடியோடு நிறுத்த வேண்டும். அதற்கு முன்னோடியாக முதலில் தமிழ்நாட்டரசின் பள்ளிகளின் வாயிலாகவும் இந்தித் திணிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்

     ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளிலும் ஒன்றிய அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நிறுவனங்களிலும் ஒன்றியம் சார் துறைகளிலும் இந்தி அடிப்படைத் தகுதியாக உள்ளது. இதனால் தமிழர்களுக்கும் இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிறருக்கும் வேலை உரிமை மறுக்கப்படுகிறது. எனவே, இதனை மாற்ற வேண்டும். அதற்கு ஒன்றிய அரசின் அலுவல் மொழியாகத் தமிழும் ஆக்கப்பட வேண்டும்.

    இந்தியைத் தேசியமொழியாகவும் பெரும்பான்மையர் பேசும் மொழியாகவும் தகவல் திரிப்பு செய்வோரைத் தண்டனைக்குரியவர்களாக அறிவிக்க வேண்டும். அத்தகையோருக்குத் தண்டனை வழங்கத் தவறக் கூடாது.

    வாய்ச்சொல்லில் வீரராக இல்லாமல், மக்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்லறிஞர்களாகத் திகழ, நமக்குத் தேவை தாய்மொழிவழிக் கல்வியே! எனவே, எல்லா நிலைகளிலும தாய்மொழியாம் தமிழ் வழிக்கல்வியே திகழ வகை செய்ய வேண்டும்.

    ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மட்டுமே மொழிப்பாடமாக இருக்க வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கிலம் கற்றுத்தரப்பட வேண்டும். .பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் பிற மொழிக்கல்வியில் தொடக்கநிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண்களைத் தொடக்கதிலிருந்து தமிழைப் படிக்கும் பாடத்திட்டத்திற்கு இணையாகக் கருதக் கூடாது. பன்னிரண்டாம் வகுப்புவரை யாவரும் தமிழைக் கற்றே ஆக வேண்டும்  பிற மொழிக் கல்வியைக் கற்றால் கூடுதல் கல்வியாகத்தான் கருதவேண்டும். இவ்வாறு நடைமுறைப்படுத்தினால்தான் பள்ளிகளில் இருந்து இந்தியை ஒழிக்க முடியும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டில் இந்தித்திணிப்பைத் தடுக்க முடியும்.

    இவ்வாறு எங்கெல்லாம் இந்திப் பயன்பாடு இருக்கிறதோ அங்கெல்லாம் இந்திப் பயன்பாட்டை நிறுத்துவதுடன்  அது நுழையும் வாயிலையும் அடைக்க வேண்டும். இந்தி நமக்குப் பகை என்பதை உணர்த்தும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இந்தியும் பிறமொழிகளை ஈர்த்து உருவாக்கப்பட்ட புனைவு இந்தியும்  பேசப்படும் மாநிலங்கள் எட்டு மட்டுமே. பிற மொழிகளைத் தாய்மொழியாக உள்ள மாநிலங்கள், ஒன்றியங்கள் மொத்த எண்ணிக்கை 36 பிற மொழி மாநிலங்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவாகப் பேசப்படும் இந்திக்காகப் பிறமொழி அனைத்திற்கும் செலவழிக்கும் தொகையைவிடப் பன்மடங்கு செலவழிக்கும் அநீதியைத் துடைக்க வேண்டும்.

      அதே போல் பத்தாயிரம் அளவில் பேசப்படும் சமற்கிருத மொழிக்குப் பல ஆயிரம கோடி செலவழிப்பதையும் நிறுத்த வேண்டும்.

    இத்தொகைகளெல்லாம் பிற மொழிகளுக்கு மொழி பேசுநர் எண்ணிக்கை அடிப்படையிலும் மொழியின் வளத்தின் அடிப்படையிலும் பிரித்து ஒதுக்க வேண்டும்.

    தமழ்நாட்டிலுள்ள இந்திப்பரப்புரை அவையை– இந்திப்பிரச்சார சபையை — இழுத்து மூட வேண்டும்.

    இவ்வாறெல்லாம் செய்தால்தான் இந்தித்திணிப்பு என்பது இல்லாமல் போகும்.

    எனவே, அரசும் கட்சிகளும் அமைப்புகளும் மக்களும் தங்களால் இயன்ற வகைகளில் எல்லாம் இந்தி நுழைவைத் தடுக்க வேண்டும். இந்தியை எதிர்த்து உயிர் நித்தவர்களையும் சிறைப்பட்டவர்களையும் வதைப்படடவர்களையும் நாம் மதிக்கிறோம் என்றால் இந்தியைத் தடுத்திடுவோம்!.தமிழ்மொழியை வளர்த்திடுவோம்!

    இந்தி எதிர்த்திட வாரீர் — நம்

    இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்!  – பாவேந்தர் பாரதிதாசன்



    Thursday, February 5, 2026

    ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக! – – இலக்குவனார்திருவள்ளுவன்

         06 February 2026      கரமுதல



    சங்கப் புலவர்கள் பொன்னுரை – 29

    ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக!

    காவல்,

    குழவி கொள் பவரின், ஓம்புமதி!

    காத்தற்குரிய நாட்டைக், குழந்தையைத் தாய் காப்பதுபோல் காத்திடுவாயாக!

     – நரிவெரூஉத்தலையார்

      புறநானூறு 5, அடிகள் 6-7

      திணை: பாடாண் திணை

      துறை:செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.

    சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட பொழுது, நரிவெரூஉத் தலையார் பாடியது.

    முழுப்பாடல்:

    எருமை அன்ன கருங்கல் இடை தோறு,

    ஆனிற் பரக்கும் யானைய, முன்பின்,

    கானக நாடனை!நீயோ, பெரும!

    நீயோர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்;

    அருளும் அன்பும் நீக்கி நீங்கா

    நிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,

    குழவி கொள் பவரின், ஓம்புமதி!

    அளிதோ தானே; அது பெறல்அருங் குரைத்தே.

    பதவுரை:

    எருமை – எருமை மாடுகள், அன்ன – போன்ற, கருங்கல் – கரிய கற்கள், இடைதோறும் – இடங்கள் எல்லாம், ஆனின் – மாடுகளைப் போல், பரக்கும் – பரவியிருக்கும், யானைய – யானைகள் உடைய,

    முன்பின் – வலிமையான, கானக – காடுகளை அகத்தே கொண்ட, நாடனை – நாட்டினை உடையவனாய், நீயோ – நீ தான், பெரும – பெருமகனே, நீயோர் ஆகலின் – நீ இவ்வாறு இருப்பதால், நின் – உனக்கு, ஒன்று – ஒன்று மொழிவல் – சொல்கிறேன்,

    அருளும் – நெஞ்சில் அருள் உள்ளமும், அன்பும் – அன்பு உணர்வும், நீக்கி – விலக்கி, நீங்கா – நீங்காத, நிரயம் – நரகம், கொள்பவரொடு – இடமாகக் கொள்பவரோடு, ஒன்றாது – சேராமல்,

    காவல் – காக்கும் நாட்டை, காவல் – காக்கப்படும் நாட்டிற்கு, குழவி – குழந்தை, கொள்பவரின் – வளர்ப்பவர்களைப் போல், ஓம்புமதி – பாதுகாப்பாயாக!

    அளிதோ தானே – அளிக்கத் தக்கது அக்காவல் தானே – தான், அது பெறல் – அத்தகைய காக்கும் வாய்ப்பைப் பெறுவது, அருங்குரைத்தே – அரியது ஆகும்.

    *முன்பின் என்றால், முந்தியும் பிந்தியும் எனப் பொருள் உள்ளதை யாவரும் அறிவர். ஆனால், வலிமை என்றும் பொருள் உண்டு. அப்பொருளிலேயே இங்கே பயன்படுத்தப்பெற்றுள்ளது.*

    பொருளுரை:

    எருமைகள் போன்ற தோற்றத்தையுடைய கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடம் எங்கும் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே!

    நீ இவ்வாறு வளமும், சிறப்பும் பெற்றவனாக இருப்பதால் உனக்கு ஒன்று சொல்கிறேன். கேட்பாயாக!

    அருளும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு வாழும் தீயவரோடு சேராமல், உன் நாட்டை, குழந்தையை வளர்ப்பவர்கள் அக்குழந்தையைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாயாக.

    அத்தகைய நாட்டுக் காவலே அளிக்கத்தக்கதாகும். அவ்வாறான சிறந்த காக்கும் வாய்ப்பைப் பெறுவது அரியதாகும்.

    நாட்டை எவ்வாறு காக்க வேண்டும் எனப் புலவர் நரிவெரூஉத்தலையார் ஆள்வோர்க்குத் தக்க அறிவுரை வழங்கியுள்ளார்.

    நாட்டை மட்டுமல்ல, கட்சி, நிறுவனம், அமைப்பு என எதுவாக இருந்தாலும் அதனைப் பேணும் பொறுப்பில் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரை இது.

    ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக!

    – இலக்குவனார் திருவள்ளுவன்

    தாய், பிப்பிரவரி 05.02.2026

    Monday, February 2, 2026

    தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05: இலக்குவனார் திருவள்ளுவன்

          03 February 2026      கரமுதல



    (தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 04: தொடர்ச்சி)

    இந்நூற்பா மட்டுமல்ல, மற்றொரு நூற்பா மூலம் தமிழர் உலகிலேயே முதன்முறையாகத் திருமணப் பதிவு முறையைப் பின்பற்றி உள்ளனர் என்பதையும் நாம் அறியலாம். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார்.

      திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1791இலும்   உருசியப் புரட்சியினால் உருசியாவில் 1917இலும் திருமணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் திருமணப் பதிவைக் கட்டாயமாக்கினாலும் பல நாடுகளில் அதற்கென எச்சட்டமும் இல்லாமல் இருந்தது. 1964இல் ஐ.நா. இதற்கெனக் கூட்டிய மாநாட்டில் எல்லா நாடுகளும் திருமணப் பதிவினைக் கட்டாயமாக்க வேண்டும் என அறிவுறுத்தியது. அப்பொழுதும் பல நாடுகள் நடைமுறைப் படுத்தாமல் 1979இல் மீண்டும் ஐ.நா. கூடித் திருமணப் பதிவைக் கட்டாயமாக்குமாறு அறிவுறுத்தியது.

      ஆனால், தமிழ்நாட்டில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமணத்தைப் பதிவு செய்யும் நடைமுறை இருந்துள்ளது. வாழ்வியல் அறிஞர் தொல்காப்பியர் திருமண முறையைக்

    கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

    கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

    கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே                     (நூற்பா 1088)

    என்கிறார்.

    (கிழவன் – உரியோன். தலைவன். கிழத்தி – உரியோள், தலைவி.)

      (தலைவன் தலைவியைக் கொள்ளுவதற்குரிய முறைமைப்படி கொடுப்பதற்குரியவர் கொடுப்பக் கரணத்துடன் பெற்றுக் கொள்வதாகும்.) கரணம் என்பது எழுதிப் பதிவு செய்வதைக் குறிப்பது எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் குறிப்பிடுகிறார். இப்பொழுது திருமணத்தை உறுதி செய்யும் வெற்றிலை பாக்கு மாற்றும் நிகழ்ச்சியை மணவோலை எழுதுதல் என்பர். இவ்வாறு எழுதி உறுதிப்படுத்தும் பழக்கமே பதிவு முறையாக மாறிற்று என்கிறார் அவர். தலைவனும் தலைவியும் இணைந்து வாழும் பொழுது பொய்யும் வழுவும் தோன்றி ஒருவரை மற்றொருவர் கைவிட்டுச் செல்லும் நிலையும் சில நேரங்களில் நிகழ்ந்துள்ளது. அதனைத் தடுப்பதற்குத்தான் ஊரறி நன்மணமாக அமைய வேண்டும் என்பதற்காகத் திருமணப் பதிவு முறை தோன்றியது என்பதையும் தொல்காப்பியர் விளக்குகிறார்.

      சிற்றூர் ஆட்சி அலுவலர் (V.A.O.) என இப்போது அழைக்கப்படுவோர் பணியாற்றும் முன்னர் நம் நாட்டில் கடந்த நூற்றாண்டு வரை இப்பணியை ஆற்றி வந்தவர்களைக் கரணம் என்பர். ஊர்க்கணக்கு எழுதும் கணக்குப்பிள்ளைகளாகப் பணியாற்றியோர் அனைவரும் கரணம் என அழைக்கப்படுவதில் இருந்தே முறையாக எழுதி வைப்பதைக் குறிப்பதே கரணம் எனலாம். ஆகவே இன்னாருக்கு இன்னார் வாழ்க்கைத் துணை என எழுதிப் பதியும் முறை கரணம் எனப்பட்டது எனலாம் என்பதைப் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்கியுள்ளார். வாழ்வியல் அறிஞர் தொல்காப்பியர் ‘என்ப’ எனக் குறிப்பதால் அவருக்கு முன்பே இவ்வாறு திருமணத்தைப் பதியும் முறை இருந்திருக்கிறது எனலாம்.

     கடந்த நூற்றாண்டில்கூடச் சில நாடுகள் திருமணப் பதிவை மேற்கொள்ளாதபொழுது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருமணப் பதிவு முறையைத் தமிழர்கள் பின்பற்றி உள்ளனர் என்னும்பொழுது பைந்தமிழர் பதிவு அறிவியலையும் பாங்குடன் அறிந்திருந்தனர் என்று சொல்லிப் பெருமை கொள்ளலாம் அல்லவா? ஆனால், நம் வரலாறு அறியாமல் பூனையைப் பார்த்துத்தான் புலி பாய்ச்சலைக் கற்றுக் கொள்கிறது என்பதுபோல் பண்பாடுஅறியா ஆரியர் வந்துதான் தமிழருக்குத் திருமண முறையைக் கற்றுத் தந்தார்கள் என்போர் உயர் பதவிகளில் இருக்கும் பொழுது நாம் தமிழர் எனப் பெருமைப்படுவதில் என்ன இருக்கிறது?

    (தொடரும்)

    Sunday, February 1, 2026

    சட்டச் சொற்கள் விளக்கம் 1031-1035 : இலக்குவனார் திருவள்ளுவன்

     ஃஃஃ         02 February 2026      கரமுதல



    (சட்டச் சொற்கள் விளக்கம் 1026-1030 : தொடர்ச்சி)

    1031. Avert தடு விலக்கு  திசை திருப்பு; தவிர்த்தல் இன்னாத ஒன்றைத் தடு. விலக்கு அல்லது தடைசெய். ஒன்றிலிருந்து விலகுவது என்னும் பொருள் கொண்ட இலத்தீன் சொல்லில் இருந்து avert சொல் உருவானது. கடைசி நிமைய ஒப்பந்தத்தால் பெரும் சண்டை தவிர்க்கப்பட்டது போன்ற நேர்வுகளில் இச்சொல் கையாளப்படுகிறது.
    1032. Aviation       வான் பயணம் வான்பயணவியல் வான் பறப்பியல் வானூர்திப்போக்குவரத்து வான் போக்குவரத்துச் சட்டம் என்பது விமானம், விமானப் பயணம், தொடர்புடைய சட்டம், தொடர்பான வணிகச் செயற்பாடுகளைப் பற்றிய வான்வழிப்பயணச் சட்டம் உள்ளது. இலத்தீன் சொல்லான  பறவை என்னும் பொருளில் உள்ள avis என்பதிலிருந்து  ஃபிரெஞ்சுச் சொல்லான  aviation உருவானது. இதிலிருந்து ஆங்கிலம் எடுத்துக் கொண்டது.
    1033. Avocation   துணைத்தொழில் துணைத்தொழில் என்பது ஒருவர் வழக்கமாக ஈடுபடும் ஒரு செயற்பாடு, ஓய்வுநேர விருப்பார்வத் தொழில் அல்லது சிறிய ஈடுபாட்டைக் குறிக்கிறது, ஆனால் அது அவர்களின் முதன்மைத் தொழில், வணிகம் அல்லது செய் தொழிலிலிருந்து (profession)  வேறுபட்டது. பொதுவாக ஓய்வு நேரச் செயற்பாட்டைக் குறிக்கும்.
    1034. Avoidவிலக்கு தவிர் சட்டமுறையான சூழலில், தவிர்ப்பு அல்லது தவிர்த்தல் என்பது ஓர் ஒப்பந்தம்,  அல்லது சட்டமுறையான கடமையை வெறுமனே விலக்கி வைப்பதை விட, முறையான, சட்டமுறையாக நீக்குதல், விலக்கி வைத்தல் அல்லது செல்லாததாக்குவதைக் குறிக்கிறது.
     1035.Avoidance of doubt      ஐயம்தவிர்ப்பதற்காக   ஐயத்தைத் தவிர்ப்பதற்காக" (FAOD- For the avoidance of doubt) என்பது ஒப்பந்தங்கள்,  சட்டங்களில் முந்தைய பிரிவின் குறிப்பிட்ட விளக்கத்தை தெளிவுபடுத்த, வலியுறுத்த அல்லது உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு சட்டமுறையிலான சொற்றொடராகும். இ ஃது எந்தத் தெளிவின்மையும் இல்லை என்பதை உறுதி செய்கிறது. ஏற்கெனவே உள்ள பொருளை மாற்றுவதற்கு மாற்றாக, உட்கிடையான பொருளை வெளிப்படையாகச் சொல்வதன் மூலம  எதிர்காலப் பூசல்களைத் தடுக்க இஃது ஒரு முன்னெச்சரிக்கை நடிவடிக்கையாகச் செயற் படுகிறது.

    Saturday, January 31, 2026

    மொழிப்போர் வரலாறு அறிவோம்! -12 : தமிழ்க்காப்பிற்காகவே இந்தியை எதிர்த்தனர் : இலக்குவனார் திருவள்ளுவன்



    (மொழிப்போர் வரலாறு அறிவோம்!-11 : மொழிப்போரில் மகளிர் பங்களிப்பு – 2 : தொடரச்சி)

    மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு  குறித்து, அதிலும் குறிப்பாக மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் குறித்து முந்தைய இதழ்களில் பார்த்தோம். 13.11.1938ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாடு குறித்த செய்தியையும் பார்த்தோம்.

    இம் மாநாட்டில் மீனாம்பாள் சிவராசு தமிழ்மொழி,  தமிழ்ப் பண்பாட்டுக்காக மன உறுதியோடு போராட முன்வர வேண்டும் என்று பெண்களை வேண்டினார். இதுவே தமிழ் உணர்வுடன் தமிழுக்காக, உயிருக்கும் மேலாகத் தமிழைப் போற்றும் தமிழ் மக்கள் நலனுக்காக நடைபெற்ற போராட்டங்கள் என்பதை மெய்ப்பிக்கிறது.

    அதற்குச் சான்றாக, இம் மாநாட்டின் பொழுது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம். பெரும்பான்மையான தீர்மானங்கள், தமிழ் மொழி சார்ந்தவையே ஆகும். தீர்மானங்கள் 100 ஆண்டுகளை எட்டும் பொழுதும் தீர்மானங்களாகவே உள்ள அவலம்தான் உள்ளது. மொழிப்போரில் துன்பங்களைத் துய்த்தும் சிறைப்பட்டும் மடிந்தும் போன பெண் போராளிகளின் ஈகங்களால் ஒரு பயனும் இல்லாமல் போகிறது.

    ஆந்திரத் தலைநகராகச் சென்னையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையைகட கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது பெண்களின் தமிழுணர்விற்கு அடையாளம்.

    சென்னை நகர வீதிகளுக்குத் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். ஆனால், சென்னையில் மட்டுமல்ல, பிற மாவட்டங்களிலும் தமிழ்ப்பெயர் இல்லாத தெருக்களைக் காணலாம்.

         ‘பீச்’, ‘ஃபோர்ட்டு’, ‘பார்க்’ என பெயரிடப்பட்டுள்ள தொடரி(இரயில்)நிலையங்களின் பெயர்களைத் தமிழில் மாற்ற வேண்டும் என்பது ஒரு தீர்மானம். 30 ஆண்டுகளுக்குப் பின்னர்த் தி.மு.க. ஆட்சி வந்த பின்னரே சில நிலையங்களின் பெயர்கள் தமிழிலும் குறிக்கப்பெற்றன. அவ்வாறு குறித்தாலும் ஆங்கிலப்பெயரே இந்தியில் குறிக்கப்பட்டுள்ளன. அஃதாவது கோட்டை எனத் தமிழில் இருந்தாலும் இந்தியில் ஃபோர்ட் என்பதே எழுதப்பட்டிருக்கும். என்றாலும் சில நிலையங்களில் மட்டும் விதி விலக்காகக் கடற்கரை என்பது இந்தியிலும கடற்கரை என்றே எழுதப்பெற்றுள்ளது போல் தமிழ்ப் பெயரே இந்தி எழுத்துகளில் எழுதப்பெற்றிருக்கும்.

    நாணயங்களில் அவற்றின் மதிப்பைத் தமிழில் குறிக்க வேண்டும் என்னும் தீர்மானம் இன்னும் கனவாகவே உள்ளது.

    மறுமணத்திற்கும் சாதிப்பாகுபாடுகளை ஒழித்துச் சாதியில்லா மன்பதை உருவாகக் கலப்புத் திருமணத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும் தீர்மானங்களும் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் இன்றைக்கும் கலப்புத் திருமணம் செய்வோர் சாதி வெறியர்களால் கொல்லப்படும் அநீதிதானே நாளும் அரங்கேறிக் கொண்டுள்ளது.

    தமிழ்க்காப்பிற்காகத்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களே நடத்தப் பெற்றன. எனவே, பெண்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றதுடன் தமிழ் நலன் சார்ந்த முழக்கங்களை எழுப்பினர்; தொடர்பான தீர்மானங்களையும் நிறைவேற்றினர்.

    மணவினைச் சடங்குகளையும் ஆடம்பரச் செலவுகளையும் விலக்கி வைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துத் தீர்மானம் இயற்றியுள்ளனர்.  ஆனால் நம்மை ஆதிக்கம் செய்ய முயலும் அயலவர் மொழியாகிய சமற்கிருதத்தில் மணவினைச் சடங்குகளையும் பிற சடங்குகளையும் செய்யும் போக்கே இன்றைக்கும் நிலவுகிறது. குடும்ப நிகழ்வுகளில் ஆடம்பரச் செலவுகளையும் மேற்கொண்டுதான் வருகின்றனர்.

    ஒரு தீர்மானத்தின் மூலம் தமிழ் மாகாணத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று வேண்டியுள்ளனர்.

    அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்ப்பாடம் என்பதை 2015-2016 ஆம் கல்வியாண்டிலிருந்துதான் அறிமுகப்படுத்தினர். அதுவும் ஒவ்வோர் ஆண்டாக ஒவ்வொரு வகுப்பாகத் தமிழ்மொழியை அறிமுகம் செய்தனர். அதுவரை தமிழ் இல்லாத இழிநிலை இருந்தது இதனால் துடைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் படைப்பள்ளி (சைனிக்குபள்ளி), இந்திய நிறுனச் செயலர்கள் பயிலகம்(icsi), மத்தியப்பள்ளிகள் (கேந்திரிய வித்தியாலயா) முதலியவற்றில் தமிழ் அண்மைக் காலங்களில் அறிமுகப்படுத்தாலும் அது ஏமாற்று வேலையே. சான்றாக மத்தியப் பள்ளிகளில் தமிழ் என்பது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு  வரை விருப்பப்பாடமாக இருக்கும். என்றாலும் 15 மாணாக்கர்கள் படிக்க முன்வந்தால்தான் தமிழ் மொழி ஒரு பாடமாக இருக்கும். தமிழாசிரியப் பணியிடங்கள் பகுதிநேரப் பணியிடங்களே. இவற்றின் மூலம் தமிழ் மொழி ஒரு பாடமாக உள்ளதாகக் கூறுவது ஏமாற்று வேலை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    உரிமைகளுக்காகவும் கொள்கைகளுக்காகவும் அடக்கு முறைக்கும் ஒடுக்கு முறைக்கும் எதிராகவும் மக்கள் போராடும் பொழுது அவற்றைக் கொச்சைப்படுத்தி இழிவாகச் சொல்வதே ஆள்வோர் வழக்கமாக உள்ளது. அதுபோல், பெண்கள் தமிழ்க்காப்பு உணர்வில் சிறை சென்ற பொழுது, முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியாரே “குழந்தைகளுக்குப் பால் வாங்கக் காசில்லாமல் இந்தப் பெண்கள் போராட்டம் நடத்திக் குழந்தைகளோடு சிறைக்கு வருகின்றனர்” எனக் குறைகூறினார்.

    பெண்களும் திரள் திரளாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘1938  முதல் மொழிப்போரில் பெண்கள்’ என்னும் நூலில் நூலாசிரியர் நிவேதிதா (உ)லூயிசு விவரித்திருப்பார்.

    இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டுக் களப்பலி யான,  சிறைத்தண்டனை பெற்ற வீரப் பெண்களுக்கு நம் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்.

    Followers

    Blog Archive