Wednesday, April 22, 2026

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் - நூலாய்வு 3 : இலக்குவனார் திருவள்ளுவன்

      23 April 2026      கரமுதல



(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 2 : தொடர்ச்சி)

இந்தி எதிர்ப்பு நிதிக்கு இசுலாமியப்பெண்களும் நிதி வழங்கியமை, மே்டையைச் சரிசமமாகப் பகிர்ந்த பெண்கள், பெண்கள் திரளாகப் பங்கேற்ற ‘தமிழ்நாடு தமிழருக்கே’ ஊர்வலம், எல்லா வடிவத்திலும் எல்லா இடத்திலும் பெண்களின் இந்தி எதிர்ப்பு, முதலியவைபற்றியும் இக்கட்டுரையில் விவரித்துள்ளார்.

இக்காலத்தில் பெண்கள் ஒதுக்கீட்டில் இடம் பெற்ற பெண்களின் பின்னால் ஒளிந்து கொண்டு ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால், அப்பொழுது பெண்களே இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளனர் என்பதை நாம் இக்கட்டுரை மூலம் அறிந்து கொள்ளலாம்.

நிகழ்ச்சிகள் தொடர்பான துண்டறிக்கைகள், செய்திகள், அறிவிப்புகள், பெண் தலைவர்கள் படங்கள், பெண் போராளிகள் படங்கள், தொடர்பான கருத்துப் படங்கள் எனப் பலவற்றையும் நூலாசிரியர் தொகுத்து அளித்துள்ளார்

தலைவர் நீலாம்பிகை அம்மையார் என்பது ஆறாவது கட்டுரை.

தம் தந்தையார் மறைமலையடிகளால் தனித்தமிழ்ப்பக்கம் ஈர்க்கப்பட்ட நீலாம்பிகை அம்மையார், வாணாள் முழுவதும் அதில் நிலையாக இருந்தார் எனவேதான் இந்தி எதிர்ப்புப்போராட்டங்களில் தனித்தமிழ் மணமும் கமழக் காணலாம். “முன்னமே நாம் பிற மொழிச்சேர்க்கைக்கு இடம் கொடுத்து விட்டோம்.இனிமேலாயினும் பிறமொழிச் சேர்க்கைக்கு இடம் கொடாமல் நம்மையும் நம் அருமைத் தமிழையும் பாதுகாத்துக் கொள்வோமாக” என மாநாட்டில் பேசிய நீலாம்பிகை அம்மையார் அதன் மூலம் தமிழ்ப்பெண்களுக்குத் தமிழுணர்வு ஊட்டினார் என்பதை விளக்குகிறார்.

ஏழாவது கட்டுரையில், பெரியாருக்குப் ‘பெரியார்’ பட்டம் சூட்டியது குறித்து விவரிக்கிறார். இந்தி எதிர்ப்பு என்பது பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, தனித்தமிழ் எழுச்சி முதலியவற்றையும் அடிப்படையாகக் கொண்டதே என்பதை இக்கட்டுரை மூலம் தெளிவுபடுத்துகிறார்.

மாநாட்டு நிகழ்ச்சிகளை எட்டாவது கட்டுரை விளக்குகிறது. மாநாடு தொடர்பான தலைவர்கள் குதிரை வண்டியில் வைத்து அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான பெண்கள் தமிழ்க்கொடிகளை ஏந்தி, தமிழ் வாழ்க, தமிழ்நாடு தமிழருக்கே இந்தி வீழ்க, தமிழ்ப்பெண்கள் வாழ்க, தமிழர் வாழ்க என முழக்கமிட்டு வந்துள்ளனர். தமிழ்ப்பெண்கள் தமிழ் வாழ்த்துப்பாடி வந்துள்ளனர் என விளக்குகிறார். மாநாட்டில் 5000 பேருக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். அன்றைக்குப் பெண்களிடம் இருந்த தமிழ் எழுச்சி எங்கே போய்விட்டது என்றுதான் தெரியவில்லை.

ஒன்பதாவது கட்டுரையில் அன்னை மீனாம்பாள், மரு.தருமாம்பாள், பண்டிதை நாராயணி, பார்தவி யம்மையார் உரைகள் ஆகியன தரப்பட்டுள்ளன. அத்தகைய தமிழுணர்வு மிக்க, தமிழ் எழுச்சி ஊட்டக்கூடிய பெண் தலைவர்களை இன்று காணவில்லை. 

வரவேற்புக்குழுத் தலைவர் வ.பா.தாமரைக்கண்ணியம்மையார் என்பது ஒன்பதாவது கட்டுரை. மிகச் சிறப்பான சொற்பொழிவாற்றியுள்ளார் தாமரைக் கண்ணி அம்மையார். இவ்வுரையில் கொச்சைப்பேச்சு நடையில் எழுத்தாளர்கள் எழுதுவது குறித்தும் பின்வருமாறு கண்டித்துள்ளார்:

‘’தமிழ்எழுத்தாளர் என்று தன்னை அழைத்துக் கொண்டு அரைகுறைத்தமிழில் எழுதுபவர்களைக் கடுமையாகத் தன் உரையில் தாமரைக்கண்ணி சாடுகிறார். குறிப்பாகப் பார்ப்பன மொழியைப் பயன்படுத்துபவர்களை விமரிசனம் செய்கிறார்.  என்ன சார்வாள், எங்கே போறையள், ரொம்ப, பஞ்சாமிர்தமாக, தொபுக்கடீரென்று, தூம்தடாகா, கப்சா, காதல் கச்சேரி, காலட்சேபம், லேடீச கிளப்,- போதுமா? இன்னும் வேண்டுமா? சிலர், சிவ சிவா போதும் போதும் என்கிறீர்கள். சரி. நிறுத்திவிட்டேன். இப்படித் தமிழன்னையைப் பையப் பையச் சாகடிக்கும் இந்த எழுத்தாளர்கள்தான் உயிருள்ள தமிழ்நடை எழுதுபவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இத்தமிழ்நடையைத் தமிழ்நாட்டில் மட்டும் நடத்தினால் போதாது என்று கருதி, உலகமெங்கும் பரப்புவதற்காக  இவர்களுக்கு அகில இந்திய வானொலியில் (ரேடியோவில்) பேசுவதற்கு அடிக்கடி இடம் கொடுக்கப்படுகிறது. இதற்கு மாறாக, வாழ்நாள் முழுவதும் தமிழ் பயின்று இலக்கண இலக்கிய வர்புகளுக்குட்பட்டுச் செந்தமிழ்நடை எழுதும் அறிஞர்கள் பத்தாம்பசலிக்காரர்கள் என்று பரிகசிக்கப்படுகிறார்கள். இவர்கள் தமிழ்க்கொலை செய்பவர்களாம். எப்படியிருக்கிறது சங்கதி? இதற்கு விமோசனம் இல்லையா? என்று நான் கேட்கிறேன். இந்த நிலைமையில் இந்த இந்திச் சனியன் வேறு வந்து புகுந்தது. …” என்று பேசியதை நமக்குத் தந்துள்ளார்.

மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!: சங்கப் புலவர்கள் பொன்னுரை – 32 – இலக்குவனார் திருவள்ளுவன்


(தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே! – தொடர்ச்சி)

 “சினனே காமம் கழிகண் ணோட்டம்

அச்சம் பொய்ச்சொல் வுடைமை

தெறல்கடு மையொடு பிறவும்இவ் வுலகத்(து)

அறம்தெரி திகிரிக்கு வழியடை யாகும்”  

பதிற்றுப்பத்து 22, அடிகள் 1- 4 (பாடலின் மொத்த அடிகள் 38)

பெயர் – கயிறுகுறு முகவை (14)

துறை – வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு

தூக்கு – செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்

வண்ணம் – ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்

சினன்=அளவு கடந்த சினம்; காமம்=அளவுகடந்த காமம்; கழிகண் ணோட்டம்=மிகுதியான கண்ணோட்டம்; அச்சம்=பேரச்சம்; பொய்ச்சொல்=பொய்ச் சொல்; அன்புமிகு=மிகுதியான அன்பு; உடைமை=உடைத்தாயிருத்தல்; தெறல் கடுமை=கடுமையாகத் தண்டித்தல்;

பிறவும்=இவையும் இவை போன்ற பிறவும்; இவ்வுலகத்(து)=இவ்வுலகத்தில்; அறம் தெரி=அறம் நிலைபெறுவதற்காகப் பிறப்பிக்கும்; திகிரி=அரசாணை; வழியடை யாகும்=தடைக் கல்லாகும்.

இவ்வுலகத்தில், அற வழி ஆட்சி புரிவதற்குரிய அரசரின் ஆணைகள் செயற்பாட்டிற்கு அளவு கடந்த சினமும், அளவுகடந்த காமமும், மிக்க கண்ணோட்டமும், பேரச்சமும், பொய் பேசுதலும், மிகுதியான அன்பு கொண்டிருத்தலும், குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டித்தலும், இவை போன்ற பிறவும் தடைக் கற்களாக நிற்பனவாகும்.

எனவே, இத் தீமைகளை நீக்கி ஆட்சி செய்க என்கிறார் புலவர்.

உலகியலில் உருள்வது அறநெறிச் சக்கரம். சினம், காமம், அளவுகடந்த இரக்கக் குணம், அச்சம், பொய் பேசுதல், அளவு கடந்த அன்பைக் கொட்டுதல், பிறர் வாழ்வை அழித்தல், பிறரிடம் கடுமையாக நடந்துகொள்ளுதல் முதலானவையும் இவற்றைப் போன்ற பிறவும் இயல்பாக உருளும் அறச் சக்கரத்தைத் தடுத்து நிறுத்தும் தடைக்கற்கள் ஆகும்.

அரசன் ஆட்சியை ஆணைச் சக்கரம் என்பதால் அறநெறியைச் சக்கரமாகக் குறிப்பிடுகின்றனர்.

சக்கரம் உருளத்தானே செய்யும். எனவே, அறச்சக்கரம் உருள்வதற்கு அளவு கடந்த செயற்பாடுகளையும் பண்புகளையும் தடைக்கற்களாகக் கூறுகின்றனர்.

எனவே, அறநெறிச்செயல்களின் இயக்கத்திற்கு இவை தடை எனப் புரிந்துகொள்ளவேண்டும்.

“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” என்பது பழமொழி. அமிழ்து என்பது நம்மைச் சாகாமல் இருக்கச் செய்வது என்பர். அதுவே அளவு கடக்கும் பொழுது சாகவைக்கும் நஞ்சாகும் என்றால் பிறவெல்லாம் எம்மாத்திரம்!

உணவு, செயற்பாடுகள், அன்பு காட்டுதல் முதலிய பண்புகள், இரக்கம் காட்டுதல் முதலிய கண்ணோட்டங்கள், தவறுகளுக்கும் குற்றங்களுக்குமான தண்டனைகள் என யாவுமே ஓர் அளவிற்குத்தான் இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் அவற்றை மேற்கொள்வோருக்கு எதிராக மாறும்.

மிகுதி என்னும் பொருளிலான கழி என்னும் சொல்லைக் கண்ணோட்டடத்திற்கு மட்டுமல்லாமல் சினம், காமம் முதலிய பண்புகளுக்கும் சேர்த்துப் பொருள் காண வேண்டும்.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்.

(திருக்குறள், ௩௱௫ – 305) என்கிறார் திருவள்ளுவர்.

“கழி சினம் காத்தல், கடன்”  என்கிறார் புலவர் காரியாசான் (சிறுபஞ்சமூலம்-பாடல் 75).

“ஆறுவது சினம்” என்கிறார் ஒளவையார் (ஆத்தி சூடி.2).

அஃதாவது தணிக்கப்பட வேண்டியது சினம். சினம் வருவது இயற்கைதான். ஆனால் அது அளவு கடக்கக் கூடாது.

காமம் என்பது நிறைவான அன்பைக் குறிப்பது.

“கமம் நிறைந்து இயலும்”  என்கிறார் தொல்காப்பியர் (தொல்காப்பியம் 2-8-58).

“கமஞ்சூல் மாமழை” என்கிறார் புலவர் நக்கீரர் (திருமுருகாற்றுப்படை அடி 7).

நிறைவைக் குறிக்கும் கமம் என்னும் சொல்லில் இருந்து நிறைவான அன்பைக் குறிக்கும் “காமம்” பிறந்தது.

பாலின்ப உணர்வுதான் தலைமுறைகள் தழைக்க அடிப்படையாக இருப்பது. ஆனால், அதுவே மிகுதியானால் உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடு. அளவு மிகுந்து வெறியானால் தீங்கும் விளைவிக்கும்.

கண்ணோட்டத்தால்தான் உலகம் இயங்குவதாகத் திருவள்ளுவர் கூறுகிறார். அவரே செயற்பாட்டிற்கு ஊறு நேராத வகையில் கண்ணோட்டம் இருக்க வேண்டும் என்கிறார்.

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்திவ் வுலகு.

(திருக்குறள், ௫௱௭௰௮ – 578) என்று சொல்கிறார் அவர்.

கண்ணோட்டம் மிகுந்தால் நீதி நடுநிலையாய் அமையாது. அதனால் அப்போது செய்வன யாவும் தீமைகளையே விளைவிக்கும்.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

(திருக்குறள், ௪௱௨௰௮ – 428) என்கிறார் திருவள்ளுவர்.

அச்சம் மிகும் பொழுது பலவித இடையூறுகள், தீங்குகள் ஏற்படும். வெருளிநோயும் (Phobia) வரும். எனவே, அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச வேண்டிய நாம் அளவுகடந்து அச்சம் கொள்ளக் கூடாது.

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்

(திருக்குறள், ௨௱௯௰௨ – 292) என்கிறார் திருவள்ளுவர்.

அப்பொய்மையும் அளவு மிகுந்தால் தீமையே விளைவிக்கும்.

உறவில் பொய் மிகுந்தால் பகை ஏற்படும்; நட்பில் பொய் மிகுந்தால் பிரிவு ஏற்படும்; தொழிலிலும் வணிகத்திலும் பொய் மிகுந்தால் பிளவு ஏற்படும்; இழப்பு ஏற்படும்.

இவ்வாறு எதுவாக இருந்தாலும் மிகுதியான பொய் என்பது தீமையே விளைவிக்கும். (இப்படிச் சொல்வதால் அளவான பொய் இருக்கலாமா என எண்ணக் கூடாது.)

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம். (௫௱௬௰௭ – 567)

என்று மிகுதியான தண்டனை வல்லமையைத் தேய்க்கும் அரம் என்கிறார் திருவள்ளுவர்.

மிகுந்த சினம், அளவுகடந்த காமம், மிகுதியான கண்ணோட்டம், அச்சம், பொய், மிகுதியான தண்டனை முதலிய யாவும் அரசருக்கு மட்டுமல்ல, அறநெறியில் வாழ விரும்பும் யாருக்கும் தடைக்கற்களாகும்.

எனவே, யாராயினும் எதிலும் வரம்பு மீறாமல் பேசவேண்டும், வரம்பு மீறாமல் செயற்படவேண்டும்.

மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்! என்பதை உணர்ந்து அதற்கேற்ப வாழ்வோம்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்! – Thaaii Magazine

Tuesday, April 21, 2026

சட்டச் சொற்கள் விளக்கம் 1047-1050: இலக்குவனார் திருவள்ளுவன்

      22 April 2026      



(சட்டச் சொற்கள் விளக்கம் 1043-1046 தொடர்ச்சி)

1047. Appreciationஆராய்தல்‌;
பாராட்டுதல்‌;
மதிப்பிடுதல்‌;
விளங்கிக்‌ கொள்ளுதல்

சட்டத்தில் மதிப்பீடு என்பது நீதிமன்றங்கள் முறையீட்டின் போது வழங்கப்பட்ட ஆதாரத்தை மதிப்பீடு செய்து ஆராய்ந்து பார்க்கும் செயல்முறையைக் குறிக்கும்.

இது நீதித்துறை எடுத்துரைப்பு, முழு நம்பகம், நிகழ்தகவு விதி, நீதித்துறை தவறாக செயல்படுவதைத் தடுத்தல் முதலியவற்றை உள்ளடக்கியது.
1048. Appreciation of evidenceசான்றின்‌ மதிப்பீடு

சட்டத்தில் சான்றின் அல்லது ஆதாரத்தின் மதிப்பீடு என்பது நீதிமன்றங்கள்.

சட்டநடவடிக்கைகளின் போது அளிக்கப்பட்ட ஆதாரத்தின் ஏற்கத்தக்க தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து மதிப்பீடு செய்யும் செயல்முறையைக் குறிக்கும்.
1049. Apprehend  அச்சத்தோடு எதிர்பார்
தளையிடு
கைது செய்
புரிந்துகொள்  

பெரும்பாலும் குற்ற வழக்குகளில், சட்ட அதிகாரத்தினால் ஒருவரைப் பிடித்தல் அல்லது தளையிடுதல் என்பதைக் குறிக்கிறது.  இது குற்றவாளியைக் கையோடு பிடிப்பதைக் குறிக்கும்.

இது பெரும்பாலும் காவல் அறிக்கைகளிலும், தளையாணைகளிலும் பதிவு செய்யப்படுகிறது.
1050. Apprentice  தொழில் பயிலுநர்

விற்பனை மேம்பாட்டு பணியாளர்கள் (சேவை நிபந்தனைகள்) விதிகள், 1976, பிரிவு 2.ஈ. [The Sales Promotion Employees (Conditions Of Service) Rules, 1976,Sec. 2(d)] பணியாளர்களுள் தொழில் பயிலுநர்களும் அடக்கம் எனக் குறிக்கிறது. (S. 2(d) SPE(CS)A, 1976)

Monday, April 20, 2026

குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுணையே- இலக்குவனார் திருவள்ளுவன்

      21 April 2026      



(குறட் கடலிற் சில துளிகள் 43: தூய மனத்தவர்க்கு அவர்க்குப் பின்பும் புகழ் நிலைத்து நிற்கும் – தொடர்ச்சி)

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௭ – 457)

மன்னுயிர்க்கு ஆக்கம் தருவது நல்ல மனநிலையே! எல்லா வகையான புகழையும் தருவது நல்லினத்தின் துணையே!

பதவுரை:

மனநலம்=மனத் தூய்மை, மனத்தது நன்மை; மன்னுயிர்க்கு= நிலைபெற்ற உயிர்க்கு; ஆக்கம்=பெருக்கம், செல்வம், சொத்து, உயர்வு, ஆற்றல்; இனம்=குலம், சுற்றம், துணையாகச் சேரும் கூட்டம், சேர்க்கை; நலம்=சிறப்பு; நன்மை; எல்லா-அனைத்து; புகழும்-புகழையும்; தரும்=கொடுக்கும்.

“நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும், இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்” என்கிறார் பரிமேலழகர்.

அறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர், “மாந்தருக்கு மனநன்மை ஒரு செல்வமாம்” என்கிறார்.

அறிஞர் கா சுப்பிரமணியம், “மக்கள் உள்ளத்தின் சிறப்பு அவர்களுக்கு மேன்மேல் உயர்ச்சியைத் தரும். அவர்கள் சேரும் இனத்தினுடைய சிறப்பு அவர்களுக்கு எல்லாப் புகழையுந் தரும்” என்கிறார்.

“மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாவதுபோல, இன நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும்” என்கிறார் உரையாசிரியர் மணக்குடவர்.

உள்ளத் தூய்மையைப் பேணிக்கொண்டால் அதுவே நிலைபெற்ற உயிர்க்கு உயர்வாம்; நல்லோர்களுடனான சேர்க்கையால் புகழ் எல்லாம் வந்தடையும்.

இனச்சிறப்பினால் நற்பெயர் கிடைக்கிறது. இதன்வழி எல்லா வகைப் புகழும் கிடைக்கும்.  சிறுமைக் குணம் உடையவர்கள் சேர்க்கையை நீக்கி நற்பண்புடையவர்களுடன் பழகினால் புகழ் தானே வந்தடையும்.

எல்லாப் புகழும் எனக் கூறுவதன் காரணம், எல்லா வகையான புகழும் கிடைக்கும் என்பதே. அஃதாவது நாம் ஆற்றும் நற்செயல்களால் கிடைக்கும் புகழ், நாம் வகிக்கும் பதவியால் வரும் புகழ், நமது அரசியல் நிலைப்பாட்டால் வரும் புகழ், நம் கல்வியால் வரும் புகழ், கொடையால் கிடைக்கும் புகழ்,ஈகையால் எய்தும் புகழ் எனப் பலவைகயிலும் நமக்கு வரக்கூடிய எல்லா வகைப் புகழையும் நாம் பெறலாம் என்பதை வலியுறுத்தவே

இனநலம் பேணும் போராளிகள் தங்கள் மக்களால் போற்றப்படுகிறார்கள். மனநலமும் இனநலமும் நம்மிடையே இல்லாத காரணத்தால்தான் நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் உயிரிழக்கவும் உறுப்புகளை இழக்கவும் குடும்பத்தினரை இழக்கவும் உடைமைகளை இழக்கவும் நிலத்தைப் பறிகொடுக்கவும் காரணமாக இருந்து விட்டோம்.

எனவே, நமக்கு நல்லன விளையவேண்டு மென்றால், ஆக்கம் கிடைக்க வேண்டுமென்றால், செல்வம் சேர வேண்டுமென்றால், நல்ல மனத்துடன் திகழ வேண்டும். நன்மனம் இல்லையேல் எதிரான விளைவுகள்தான் நம்மைச் சேரும். அஃதாவது, செல்வம் சேராது, ஆக்கம் ஒட்டாது, நல்லன நிகழா. மனத்தைத் தூய்மையாக வைத்திருப்பதற்கு நல்ல மனம் கொண்டவர்களுடன்தான் நட்பு வைத்திருக்க வேண்டும், உறவு கொள்ள வேண்டும், சேர்க்கை இருக்க வேண்டும். அவ்வாறு நற்சேர்க்கை இருந்தால்தான் நன்மை எய்தலாம், செல்வத்தில் செழிக்கலாம், உயர்வு அடையலாம், புகழுடன் வாழலாம்.

எனவே, ஆக்கத்தையும் புகழையும் எய்த

மனநலமும் இனநலமும் கொள்வோம்

Sunday, April 19, 2026

இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் நிறைவுரை 6 கல்வியகங்கள் தொண்டு நிறுவனங்களாகச் செயற்படுக!

      20 April 2026      



(இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 5: கல்வி முறையை மாற்றுக!: தொடர்ச்சி)

  கல்வியகங்கள் வணிக நிறுவனங்களாக இல்லாமல் தொண்டு நிறுவனங்களாகச் செயல்படும் பொழுதுதான் இவர்களிடையே நல்லுறவு அமையும்; கல்வியிலும் மாணாக்கர்கள் சிறப்பர். ஆசிரியர்கள் பருவத்தேர்வு முடிவுகளின் பொழுது மட்டும் பெற்றோரை அழைக்காமல், சுழற்சி முறையில் தொடக்கக் காலத்திலிருந்தே பெற்றோரை வரவழைத்து மாணாக்கர் கல்விநிலை குறித்துக் கலந்து பேசி அதற்கேற்ப இரு தரப்பாரும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மாணாக்கரின் வீட்டுச் சூழல் புரிந்தால்தான் அவர்களை எவ்வாறு வழி நடத்தலாம் என ஆசிரியர்களுக்குத் தெளிவு பிறக்கும்.  கல்வியகங்களில் தங்கள் பிள்ளைகளின் உண்மையான நிலை என்ன எனப்  பெற்றோர் அறிந்தால்தான் அவர்களை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்ற தெளிவு அவர்களுக்குப் பிறக்கும். மாணாக்கர்களின் திறமைக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற துறைகளிலும் விளையாட்டு, கலைகளிலும் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இதற்குப் பெற்றோர் – ஆசிரியர் – மாணாக்கர்  சந்திப்பு உதவும்.

  மாணவர்களின் படிப்பார்வம்கற்கும்திறன்புரிதல் உணர்வுதன்னம்பிக்கைஉயர்வு அல்லது தாழ்வு மனப்பான்மைவிளையாட்டில் உள்ள ஈடுபாடுகலையார்வம்மந்த நிலைதேர்வு குறித்த அச்சம்தற்கொலை மனப்பாங்கு முதலானவை  பற்றி ஆசிரியர்கள் தொடக்கத்திலேயே பெற்றோர்களிடம் பேசி மாணாக்கர்கள் சிறப்பாகத் திகழ உரிய தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மதிப்பெண் பெறும் இயந்திரமாக மட்டும் மாணாக்கர்களை உருவாக்கும் நோக்கத்தில் பெற்றோர்களிடம் பேசுவதில் பயனில்லை. கல்விக்கூடங்களில் மனவளப் பயிற்சி அளிக்கும் வகையில் பாடத்திட்டம் இருப்பின்மாணாக்கர் சிறப்பர்ஆசிரியர் – பெற்றோர்  –மாணாக்கர் உறவு சீராக அமையும். கற்றலின் இடையே நிற்கும் போக்கும் நின்றுவிடும்.

 கல்வியகங்கள் அழைக்கும் பொழுது பெற்றோர்கள் செல்வதற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அப்பொழுதுதான் தவறாமல் பெற்றோர் இத்தகைய கூட்டங்களுக்குச் செல்வர். அன்றாட வருவாயைமட்டுமே நம்பி உள்ள பெற்றோர் வருவாய் இழப்பு ஏற்படாத வகையில்பள்ளிக்கு வரக்கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும். இதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 ஆசிரியர்பெற்றோர்மாணாக்கர் உறவு குறித்துப் பார்க்கும் பொழுது ஆசிரியர்களுக்கும் மேல் அலுவலர்கள் அல்லது பள்ளி நடத்துநருக்கும் உள்ள உறவு முறை குறித்தும் காண வேண்டும்.

  மாணாக்கர்களை அடக்கி  ஒடுக்கும் ஆசிரியர்கள்கூட அவர்களின் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வரிடம் அடிமைபோல்தான் நடந்து கொள்வர். அஞ்சும் இயல்புடைய ஆசிரியர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டா. தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் தாளாளர் அல்லது கல்வியகத்தை நடத்துநர் அல்லது தாளாண் குழுவின் (நிருவாகத்தின்)அடிமையாக ஒத்துழைத்துப்  போகாவிட்டால் பணிப்பாதுகாப்பில்லை என்ற நிலை.  இதுதான் தனியார் கல்வியகங்களின் சூழல். அரசின் கல்வியகங்களிலும் ஏறத்தாழ இதே போன்ற நிலைதான். ஒத்துப் போகாத அடிமைத்தனத்துடன் வாழும் ஆசிரியர்கள் எவ்வாறு தன்மானமுள்ள தலைமுறையினரை உருவாக்குவர் என்று தெரியவில்லை.

  நல்ல மதிப்பெண்களில் கருத்து செலுத்தினாலும் வேறு வகைப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கே முதன்மை அளிக்கும் போக்கே நிலவுகிறது. இதனால்நல்ல ஆசிரியர்கள் புறந்தள்ளப்படுகின்றனர்.  எனவேஆசிரியர்களின் சமநிலையில் கருத்து செலுத்த வேண்டும். பள்ளிகளின் கடமைகல்வியறிவும் தன்னம்பிக்கையும் ஆற்றலும் மிக்க தலைமுறையினரை உருவாக்குவதுதான். ஆனால்மதிப்பெண் பெறும் மனப்பாட இயந்திரமாக இளந்தலைமுறையினரை உருவாக்குவதே பெருங்கடமை எனக் கல்வியகங்கள் செயல்படுகின்றன. பெற்றோர்களும் மனித இயந்திரங்களை உருவாக்கும் கல்வியகங்களையே சிறந்த  கல்வியகங்கள் என எண்ணுகின்றனர். இயல்பாகச் சிந்தித்து உணரும் வகையில் பாடத்திட்டங்களை அமைத்துஎழுச்சியும் தன்னார்வமும் மிக்க  தலைமுறையினரை உருவாக்கும் அறிவுக்கூடமாகக் கல்வியகங்கள் அமைய வேண்டும்.

  கல்வியுடன் தொடர்புடைய பயிற்றுமொழியை ஆட்சி மொழியுடன் இணைத்து அடுத்துப் பார்ப்போம். ஏனெனில் ஆட்சிமொழியாக இல்லாத மொழியைப் பயிற்று மொழியாக ஏற்க மக்கள் தயங்குவர்.

Followers

Blog Archive