Sunday, August 30, 2026

தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே!

சட்டமன்றத்தில் மாண்பமை ச.ம.உறுப்பினர் சிந்து தனி(த் தொகுதி) என்னும் சொல் குறித்துப் பேசியுள்ளார்.

reservation என்னும் சொல்லிற்குத் தனி எனப் பொருள் இல்லை என்றும் பேசியுள்ளார்.

அச்சொல்லிற்குப் பொதுவாக ஒதுக்கீடு, பதிவு எனப் பொருள்கள் உள்ளன.

எனினும் தனி ஒதுக்கீடு என்று அகராதிகள் குறிப்பதைக் காணலாம்.

நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் பட்டியலின (SC), பழங்குடியின (ST) மக்கள் தங்களின் சார்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பிற இனப் போட்டியாளர்கள் இன்றித் தங்கள் இனத்தவரே போட்டியிட வேண்டும் என்பதற்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளே தனித் தொகுதிகள்.

தனித் தொகுதி என்று சொல்லாமல் சிறப்புத் தொகுதி, உரிமைத் தொகுதி எனச் சொல்ல வேண்டும் என்றும் அவ்வுறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தனி என்னும் சொல்லுக்குச் சிறப்பு என்றும் உரிமை என்றும் ஒப்பற்ற என்றும் பொருள்கள் உண்டு.

குறிப்பிட்ட இனத்தவருக்கு சார்பு உரிமையளிக்க வேண்டும் என்பதற்காகத் தனியாக ஒதுக்குவதால் தனித் தொகுதி எனப்படுகிறது.

அவ்வாறில்லாவிட்டால், பிற இனத்தவர் பெரும்பான்மை உள்ள தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழப்பர் எனக் கருதியே இந்த உரிமை தரப்பட்டுள்ளது.

இதனால், அவர்களுக்கு உரிமையான தொகுதி என்னும் பொருளும் தனித் தொகுதி என்பதற்கு உண்டு.

தனித்திறமை – ஒப்பற்ற திறமை, தனிப்பெருமை – ஒப்பற்ற பெருமை என்பதே வழக்கம்.

வள்ளலார் இராமலிங்க அடிகளார் திருவருட்பா நான்காம் திருமுறையில்


“தனி நடிப்பா தத்தா”

என ஒப்பற்ற கூத்தையுடைய பரதத்தையுடைய அத்தனே என்கிறார்.

சேக்கிழார், “ஒப்பற்ற தன்னுடைய பெருமையைப் பெற்ற புதல்வியாகிய புனிதவதிக்குச் செல்வம் மிகுதியாகப் பெற்று” எனக் குறிப்பிடும் வகையில்

“தனிப்
பெருமகட்குத் திருமலியும்”

என்கிறார் பெரிய புராணத்தில் காரைக்காலம்மையார் புராணப் பகுதியில்.

“தனிப் பெருமகட்குத் திருமலியும் செல்வன்”

என நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழி கூறுகிறது.

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதியில் அதிவீரராம பாண்டியர்

“மண்தனிஞா லத்தெளிய
மானுடரோ வழுத்துவார்!”


எனக் குறிப்பிடுகிறார்.

இதன் மூலம் மண்ணாலான ஒப்பில்லாத நிலவுலகத்துள்ள எளிய மக்கட் பிறப்பினர் அவன் திருவடிப் புகழைப் பேசுதற்கு உரியரோ என்கிறார்.

தனி என்றால் சிறப்பு என்னும் பொருளைக் குறிக்கும் பல சொற்கள் உள்ளன. சான்றுக்குச் சில சொற்களைப் பார்ப்போம்.

தனி அலுவலர்/
தனி அதிகாரி    – Special officer
தனி அமர்வு     – special session
தனி அறிக்கை  – special report
தனி ஆயம்      – special bench
தனி நடுவர் மன்றம்  – Special Magistrate Court
தனி நிதி        –  special fund
தனி நீதிபதி    –   Special judge
தனி நோக்கம்  –   special purpose
தனி வழக்கு    –   special case
தனி விதி       –  Special Rule
தனிக் குழு     –   special committee
தனிக் கூட்டம்  –  special meeting
தனிச் சூழல்கள் – special circumstances
தனிச் செயலர்  – Special Secretary
தனித் தீர்மானம் – special resolution
தனித் தேர்வு    – special test
தனிப் பெரும்பான்மை  – special majority

எனவே, சிறப்புத் தொகுதி என்றும் உரிமைத் தொகுதி என்றும் ஒப்பற்ற தொகுதி என்றும் பொருள் தரும் தனித்தொகுதி என்னும் பெயரை நீக்க வேண்டா;

இத்தகைய சிறப்பான பொருள்கள் உடைய தனி என்னும் சொல்லில் தாழ்த்தப்பட்ட உணர்வைப் புகுத்த வேண்டா.

ஆனால், தேர்தலின் பொழுது மட்டும் அவ்வாறு குறிப்பிட்டுவிட்டுப் பிற நேரங்களில் அவ்வாறு குறிப்பிடாமல் இருக்கலாம்.

தனித் தொகுதி என்று சொல்லப்படுவதை மாற்ற வேண்டும் எனப் பெரும்பான்மைத் தனித் தொகுதி உறுப்பினர்கள் கருதினால் மாண்புமிகு பேரவைத் தலைவர் அறிவித்ததுபோல் மாண்புமிகு முதல்வரைக் கலந்து பேசி முடிவெடுக்கட்டும்.

ஆனால், தனி என்னும் சொல்லுக்குத் தவறான பொருள் கொண்டு அதனை நீக்க வேண்டா.

கலைச்சொல் வல்லுநர் இலக்குவனார் திருவள்ளுவன்

  • தாய் மின்னிதழ் 31.08.2026

Sunday, June 21, 2026

திருக்குறள் பாதையில் முதல்வர் ச.சோ.விசய் – இலக்குவனார் திருவள்ளுவன்

      22 June 2026      



தமிழக முதல்வர் தமக்கு அறிமுகமானவர்களையே பொறுப்புகளில் அமர்த்துவதாகக் குறையாகக் கூறி வருகின்றனர். அண்மையில் முதல்வர், திரைப்படக் கல்லூரித் தலைவராக ஒளிப்பதிவாளர் மனோசு பரமஃகம்சா என்பவரை அமர்த்தியுள்ளார். இதற்குத் தம் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவரைத் தலைவராக அமர்த்தியுள்ளார்; நண்பரை அமர்த்தியுள்ளார் என்றெல்லாம் குறை கூறுகின்றனர். வேறு எதுவும் பழிச்சொல் கூற வழியில்லை என்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர் என நன்கு தெரிகிறது.

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும்.   (திருக்குறள், ௨௱௬௰௪ – 264)

என்கிறார் திருவள்ளுவர்.

உவந்தாரை ஆக்கல் என்பதற்கு.

தம்மை விரும்பும் அன்புடையவரை உயர்த்துதல்,

தமக்கு அன்புடைய நண்பர்களை வாழ வைத்து உயர்த்துதல்,

நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதல்,

நட்பினால் மகிழும் நண்பர்கு உதவுதல்

எனவாறு பொருள் தருகின்றனர் அறிஞர் பெருமக்கள். ஆக நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்பதே திருவள்ளுவர் அருள் வாக்கு. பாகுபாடு காட்டக் கூடாத தவ வலிமை உடையவர்களே நண்பரா இல்லையா எனப் பார்த்து நண்பருக்கு உதவ வேண்டும் என்றால் பிறர் இவ்வாறு செய்தல் இன்றியமையாதது அலலவா?

அவ்வாறாயின் திருக்குறள் வழியில் நண்பர்களுக்கு வாய்ப்பளிததல் சிறப்பல்லவா?

விழையார் விழையப் படுப பழையார்கண்

பண்பின் தலைப்பிரியா தார்.   (திருக்குறள், ௮௱௰ – 810)

என்றும் திருவள்ளுவர் கூறுகிறார்.

இக்குறள் மூலம், பழமையான நண்பர்களிடத்திலும், சற்றும் விலகாமல் நடந்து கொள்ளும் பண்புடன் இருக்க வலியுறுத்துகிறார். அஃதாவது தான் உயர்ந்த நிலைக்குச் செல்லும் பொழுது பழைய நண்பர்களை விலக்காமல் சேர்த்து அணைத்துச் செல்ல வேண்டும் என்கிறார்.

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.   (திருக்குறள், ௭௱௮௰௧ – 781)

என்றும் திருவள்ளுவர் வினவி விளக்குகிறார்.

நட்பைப் போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருஞ் செயல் எதுவுமே இல்லை; நட்பைப் போலச் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பும் எதுவுமில்லை என்கிறார். இவ்வாறு கூறி இத்தகைய காவலாய்த் திகழும் சிறப்பு மிக்க நட்பைப் போற்ற வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

பணியை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்குத் திருவள்ளுவர்,

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.   (திருக்குறள், ௫௱௰௭ – 517)

எனக் கட்டளையிடுகிறார்.

ஒரு செயலை, ஒருவன் இன்ன காரணத்தால் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அச் செயலை அவனிடமே ஒப்படைத்துச் செய்யச் சொல்ல வேண்டும் என இதன் வழிக் கூறுகிறார்.

அவ்வாறு ஆராயும் பொழுது தொழில் தெரிந்த நண்பர்களுடன் கலந்து செய்தால் முடியாதது என ஒன்றுமில்லை என்கிறார். அதற்கான குறள்

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்.   (திருக்குறள், ௪௱௬௰௨ – 462)

என்பதாகும்.

நமக்கு அறிமுகமில்லாதவரிடம் எப்படிச் செயலை ஒப்படைக்க முடியும்? நமக்குத் தெரிந்த நண்பர்கள் என்றால் எதையும் எளிதில் கலந்து பேசி முடிக்கலாம் அல்லவா?

எனவே, திரைத்துறையில் இருந்து முதல்வர் ச.சோ.விசய் தனக்கு நட்பாய் உள்ளதனால் நன்கு அறியப்பட்டவரிடம் ஒரு செயலை ஒப்படைப்பதுதானே முறையாகும். ஆகவே, திருக்குறட் பாதையில் நடைபோடும் முதல்வர் ச.சோ.விசய் பாராட்டப்பட வேண்டும் அல்லவா? அவ்வாறில்லாமல் பழிப்பானேன்?

திரைப்பட மாணாக்கர் சேர்க்கைக்கான தேர்வுக்குழுவில் பெண் உறுப்பினர் யாருமில்லை என்றும் ஓர் அங்கலாய்ப்பு. இவ்வாறு புலம்புவோரின் ஆட்சியிலும் இருந்திருக்கின்றது இதே நிலை. சட்டமன்றத்தில் 13 பெண் உறுப்பினர்களை இடம் பெறச்செய்தவர்; அமைச்சரவையில் பெண்கள் நால்வருக்கு வாய்ப்பளிததவர்; பெண்களைப் புறக்கணிப்பார் என்று எப்படி எண்ண முடியும்?

முதல்வர் நாளும் திரைப்படக்காரர்களையே சந்திக்கிறார் என்றும் நாளும் அழுகுரல் எழுப்பப்படுகிறது. ஒருவர் உயர் பொறுப்பிற்கு வந்தார் என்றால் அதுவரை அவர் பணியாற்றிய இடத்தில் உடன் இருந்தவர்கள் மகிழ்ந்து வாழ்த்துவது இயற்கைதானே! அவ்வாறு உயர்நிலைக்கு வந்தவர் மருத்துவராயின், மருத்துவர் முதலான மருத்துவத்துறையினர், வழக்குரைஞராயின், வழக்குரைஞர், நீதிபதி முதலிய சட்டத்துறையினர், அதிகாரியாயின், அதிகாரிகள், பணியாளர்கள் எனச் சந்திப்பது நடைமுறைதானே! அவ்வாறு சந்தித்து மகிழ்ச்சி தெரிவிக்க வருபவர்களைச் சந்திக்க மறுத்தால் அது பண்பாகுமா? முதல்வர் ச. சோ.விசய் திரைப்படத்துறையில் இருந்து வந்தவர். அவ்வாறாயின் நடிகர், நடிகைகள், திரை நுட்பக் கலைஞர்கள்,பட உருவாக்குநர், பட வெளியீட்டாளர், பிற திரைத் துறையினர் எனப் பணித்தோழர்கள்(colleagues) வருவது இயற்கைதானே! ஏதேனும் பழி சொல்ல வேண்டும் என்பதற்காகக் குற்றமாகக் கூறினால் என்னென்பது? இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தாலின், துணைமுதல்வரான பொழுது இப்படித்தானே சாரைசாரையாகத் திரைத்துறையினர் அவரை வந்து பார்த்தனர். நடைமுறை அறிவுமின்றி, தான் வந்த பாதையையும் மறந்து குறை கூறுவதை இனியேனும் உரியவர்கள் நிறுத்தவேண்டும்.

குறை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். தட்டியும் கேளுங்கள். நல்லன செய்தால் தட்டிக் கொடுங்கள். மனமில்லையேல் அமைதி காத்திடுங்கள். அல்லன களையவும் நல்லன தொடரவும் வழிகாட்டுங்கள்!

மக்கள் நட்சத்திரமாக இருந்து மக்கள் முதல்வராக உயர்ந்துள்ள

வினைத்திறன்மிகு ச.சோ.விசய்க்குப்

பிறந்த நாள் பெருமங்கல வாழ்த்துகள்!

நிலைத்த ஆட்சி நல்கி நிலைபுகழ் பெறுக!



Sunday, June 14, 2026

மொழிப்போர் வரலாறு அறிவோம்! -15 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 3 : இலக்குவனார் திருவள்ளுவன்

      14 June 2026      



(மொழிப்போர் வரலாறு அறிவோம்! -14 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 2 : தொடர்ச்சி)

மொழிப்போர் என்னும் பொழுது இந்தித்திணிப்பிற்கு எதிரான நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் மட்டும் பார்த்தால் போதாது. இதற்குக் காரணமான இந்தித் திணிப்புச் சூழல்களையும் நாம் பார்க்க வேண்டும். எனவே, முந்தைய கட்டுரை தொடர்பில் சில செய்திகளைப் பார்ப்போம். இவை முந்தைய கட்டுரையிலேயே இடம் பெற வேண்டியவைதாம். எனினும் இடம் இன்மை கருதி , அதன் தொடர்ச்சியாக இப்போது பார்ப்போம்.

இந்திய அரசமைப்பு அவையில், கட்சிக் கட்டுப்பாட்டினைக் கடந்து நின்ற ஒரு சிக்கல், ஆட்சி மொழிச் சிக்கலாகும்.  பேராயக் கட்சி சார்ந்த இந்தி வெறியர்களுக்கும் தென்னகத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையில், ஆட்சி மொழியைப் பற்றி தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தன.

இந்தித் தீவிரவாதிகளில் இரு பிரிவினர் இருந்தனர். பெரும்பான்மையர் இந்திதான் வேண்டுமென்றனர். சிறுபான்மையர் இந்துத்தானிதான் வேண்டுமென்றனர். இந்தியாவின் ஆட்சிமொழி இந்தியா? இந்துத்தானியா என்ற கருத்து மோதல்கள் இருந்தன.

அரசமைப்பு அவையில், தொடக்கத்திலிருந்து இறுதி வரை இந்தி பற்றி தருக்கம் வரும் போதெல்லாம் உறுப்பினர்கள் உணர்ச்சிப் பிழம்பாகிக் கொதித்து எழுந்தனர்.  எனவே, அரசியலமைப்பு அவை எவ்வகையில் நடைபெற வேண்டும் என்பது பற்றிய “அவை நடைமுறை விதிகளைத்”( Rules of Procedure) தொகுப்பதற்காக ஒரு தனிக் குழு நியமிக்கப்பட்டது.

இவ்வவையின் உறுப்பினர் இந்தி வெறியர் இர.வி.துலேகர்(இரகுநாத் விநாயக்கு துலேகர்-Raghunath Vinayak Dhulekar:1891-1980), “அந்தக் குழு, இந்துத்தானியாலேயே அவை விதிகளை எழுத வேண்டும்.’’ என்ற ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார். அரசியல் அமைப்பவைத் தலைவர், துலேகரை இந்தியில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுமாறு பணித்தார். அதற்குத் துலேகர் மறுமொழியாக,“இந்துத்தானியைத் தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள்; அவர்கள் அரசமைப்பு அவை உறுப்பினராக இருக்கவும் தகுதியற்றவர்கள்” என வாதாடினர்.

“திருத்தம் முறையற்றது” எனத் தீர்ப்பைக் கூறி, மேற்கொண்டு அதைப் பொறுத்த விவாதங்களை நடத்தக்கூடாது என்றும் தலைவர் ஆணை யிட்டார். பின்னர் அரசியலமைப்பவையில் “நடைமுறை விதிகளைப் பற்றிய அறிக்கை” விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. அப்போது மறுபடியும் இந்திச் சிக்கல்  தலை நீட்டியது.

“அரசமைப்பவையின் நடவடிக்கைகள் இந்துத்தானியிலோ ஆங்கிலத்திலோ இருக்கலாம்; அந்த இருமொழிகளும் தெரியாதவர்கள் அவர்தம் தாய்மொழியிலேயே பேசுவதற்குத் தலைவர் அனுமதிக்கலாம். அரசமைப்பு அவையின் அதிகாரப்பூர்வமான ஏடுகள், குறிப்புகள், ஆணைகள் முழுவதும் இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இருக்கலாம்.” என நடைமுறை விதிக்குழுவின் அறிக்கை பரிந்துரை செய்திருந்தது.

மற்றோர் இந்தி  வெறியரான சேத்து கோவிந்ததாசு, (Seth Govind Das:16.10.1896 –  18.06.1974) அரசமைப்பு அவையின் நடவடிக்கைகள் இந்துத்தானியில்தான் இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்திலோ உருது மொழியிலோ நடைபெறலாகாது எனவும், இந்தி தெரியாதவர்கள் மட்டும் ஆங்கிலத்திலேயோ தாய்மொழியிலேயோ பேசலாம் எனவும் கோரும் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

 அந்தத் திருத்தத்தை முன்மொழிந்து அவர் உரையாற்றும் போது, “காந்தியினுடைய 25 ஆண்டுகால முயற்சிக்குப் பின்னரும் கூடத் தென்னகத்தைச் சார்ந்தவர்கள் இந்துத்தானியைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தால், அஃது அவர்கள் குற்றம்தான் என்பதை நான் தென்னகத்தைச் சார்ந்தவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

சென்னையைச் சார்ந்த சிலருக்கு இந்துத்தானி தெரியாத காரணத்தினால், விடுதலை பெற்ற இந்தியாவிற்குரிய ஓர் அரசமைப்பை உருவாக்குவதற்குக் கூடியிருக்கும் இறைமை பொருந்திய அரசமைப்பு அவையில் ஆங்கிலம்தான் கோலாச்சுவது என்று சொன்னால், அது எங்கள் பொறுமையைச் சோதிக்கிறது.” எனக் குறிப்பிட்டு,  இந்தி பேசா மக்களைக் குற்றவாளிகள்போல் இடித்துரைத்தார். மேலும் அவர் இந்துத்தானி குறித்து உரையாற்றினாலும் தனி இந்திக்காகவே வாதுரைத்தார்.

வரைவு அரசமைப்புச் சட்டத்தின் (Draft Constitution) மீது பொது விவாதம் நடைபெறும் போது , இந்திச் சிக்கல் முழுத் தீவிரத்துடன் மீண்டும் தலையெடுத்தது. உணர்ச்சி கொப்பளிக்கும் பல விவாதங்கள் நடைபெற்றன. சேத்து கோவிந்த தாசும், அவர் குழுவைச் சார்ந்த சில இந்தி ஆதரவாளர்களும், “ தேவநாகிரி எழுத்தைக் கொண்ட இந்திதான், நாட்டினுடைய ஆட்சி மொழியாக அரசியல் அமைப்பில் இடம் பெற வேண்டும்; ஆனால் இடைக்கால ஏற்பாடாக ஆங்கிலமும் தொடரலாம்“ என்றார்கள்.

 இன்னொரு சாரார், “தேவநாகிரி, உருது எழுத்து வடிவத்தில் உள்ள இந்துத்தானியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்’’ என்றார்கள். அப்போது இந்திமொழி பேசாத பகுதியைச் சார்ந்தவர்கள், தாங்கள் இந்திக்கு எதிரிகள் அல்லர் என்றும், இந்திமொழி தெரியாத பல கோடி மக்களின் மேல் ஆட்சி மொழி என்ற பெயரால் ஒரே ஒரு மொழியைத் திணிப்பது நாட்டிற்குக் கேடு விளைவிக்கும் என்றும்  அடக்கத்தோடும் பணிவு முறையிலும் எடுத்தியம்பினர்.

தமிழகத்தைச் சேர்ந்த, சந்தானம் அவர்களும் தென்னகத்தின் பல உறுப்பினர்களுமாக 43 பேர்கள் எதிர்த் திருத்தத்தில் கையொப்பமிட்டு அரசமைப்பு அவையில் கொண்டு வந்தனர்.   இந்தி ஆட்சிமொழி என்பதை ஏற்றுக் கொண்டவர்களில் ஒரு சாரார், ஆட்சி மொழித் தகுதியுடன் ஆங்கிலம்  பயன்படுத்தப்பட வேண்டும் என்றனர். ஆங்கிலத்தை எத்தனைக் காலம் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் சிக்கல் எழுந்தது. முன்னாள் உள்துறையமைச்சர். கோவிந்த வல்லபபந்து (Govind Ballabh Pant)(30.08.1887-07.03.1961)  ஆங்கிலத்தை அகற்றுவதற்கு உண்டான கால அளவை வரையறுக்கும்  உரிமையை இந்தி மொழி பேசாத மக்களுக்கே விட்டுவிடலாம் எனக் கூறினார்.

Friday, June 12, 2026

குறட் கடலில் சில துளிகள் 48: ஆவது, அழிவது, விளைவதை ஆய்ந்து செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்



(குறட் கடலில் சில துளிகள் 47: நல்லினத்துடன் சேர்க! – தொடர்ச்சி)

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்.   (திருக்குறள், ௪௱௬௰௧ – 461)

ஒரு செயலைத் தொடங்கும் முன் அதனால் ஏற்படும் அழிவுகளையும் ஆகக் கூடியவற்றையும் மொத்தத்தில் ஏற்படும் ஆதாயத்தையும் ஆராய்ந்து முடிவெடுத்துச் செய்க.

பதவுரை

அழிவதூஉம்=அழிவதும், கெடுவதும்; ஆவதூஉம்=ஆகக்கூடியதும், உண்டாகுவதும்; ஆகி=உண்டாகி, ஆய்; வழிபயக்கும்=தரும், அதன் வழியாக உண்டாதல், பின்வரும்; ஊதியமும்=நன்மையும், ஆதாயமும், வருவாயும், பயனும்; சூழ்ந்து செயல்=ஆராய்ந்து செய்க.

வழிபயக்கும் ஊதியம்=எதிர்காலப் பயன்

வழிபயக்கும் என்ற தொடர் பின்வரும் என்ற பொருளையும். ஊதியம் என்ற சொல் ஆதாயம் அதாவது பயன் என்ற பொருளையும் குறிப்பன.

வழிபயக்கும் ஊதியம் என்பது எதிர்காலப் பயன் என்ற பொருள் தரும்.

உரையாசிரியர் பரிதி இத்தொடர்க்கு “தொன்றுதொட்டு மரபுவழி வரும் ஊதியம் அஃதாவது தலைமுறை தலைமுறையாக வரும் ஊதியம்” என உரைக்கிறார். உரையாசிரியர் பரிப்பெருமாள் “வழிபயக்கும் ஊதியமாவது முன்பு நன்றாகத் தோன்றிப் பின்பு தீது ஆகாத வினை” என்கிறார். “தீது ஆகாத வினை” என்கிறார் உரையாசிரியர் பரிமேலழகர். பொருள் அல்லது பயன் என்று சொல்லாமல் வினையாகவே கூறுகிறார். எனவே, வழிபயக்கும் ஊதியம் என்பது பொருளாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை; முயற்சியால் உண்டாகும் நற்பெயரும் வெற்றியும் ஊதியமாகக் கருதப்படும்.

ஒரு செயல் வெற்றிகரமாக முடிந்தது என்றால் அதன் பயன் நன்மையாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. தீமையும் வரலாம். எனவே, ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். வழிபயக்கும் ஊதியம் என்பதற்கு நீண்ட கால ஆதாயம் என்று சொல்வது சிறப்பாக இருக்கும் என்பர் திருக்குறள் விளக்குநர்.

‘அழிவதூஉம்’ ‘ஆவதூஉம்’ இன்னிசை யளபெடைகள்.

ஒரு செயலால் நிகழும் இழப்பு, ஆக்கம், ஆதாயம் ஆகியவற்றைச் செலவு, வரவு, ஆதாயம்(இலாபம்) ஆகியவைபோல் கருதிப் பார்க்கின்றனர். ‘ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது அல்லவா? எனவேதான் நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

ஆவதூஉம் ஆகி என்பதற்குத் தேவநேயப் பாவாணர், மு.வ. முதலான பலரும் அழிந்த பின் ஆவதையும் எனப் பொதுவில் கூறுகின்றனர். எனினும் படிப்போர்க்குத் தெளிவில்லாமல் உள்ளது. அழிந்தால்தான் அதனால் வரும் ஆவதைப் பார்க்க வேண்டுமா? வினையால் வரும் கேடு, நன்மை எனத் தனித்னியே ஆராய்ந்து பார்க்கலாம் அல்லவா? அழிவையும் ஆகிவருவதையும் தனித்தனியே நோக்குவதே எளிதாக உள்ளது.

குறள்நெறி அறிஞர் பேரா.முனைவர் சி.இலக்குவனார், ஆவதூஉம்=செய்து முடித்தால் உண்டாகக் கூடிய பயன் என்கிறார். இதுவே ஏற்கத்தக்கதாக உள்ளது. அழிந்த பின் ஆவது என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வருமாறும் விளக்கம் தருகிறார்.

“ஒரு வினையைச் செய்யத் தொடங்குங்கால், அழிவன பலவாக இருக்கலாம். அழிவிலிருந்துதான் ஆக்கம் தோன்றும். பொருளைச் செலவழித்துத்தான் ஆக்கம் தோன்றும். பொருளைச் செலவழித்துத்தான் பொருளைப் பெருக்குதல் வேண்டும். செலவு என்ன வரவு என்ன என்று ஆராய்ந்து பார்த்துச் செலவினும் வரவு மிகுதியாக இருந்தால்தான் ஒரு வினையைத் தொடங்குதல் வேண்டும். வரவும் மேன்மேலும் தொடர்ந்து பெருகக் கூடியதாய் இருத்தல் வேண்டும். அங்ஙனமின்றி வரவினும் செலவு மிக்கிருந்தாலும் வரவும் செலவும் ஒத்திருந்தாலும் ஒருவினையைத் தொடங்கி முடிப்பதால் பயனில்லை என்பதாம். (பேரா.சி.இலக்குவனார், வள்ளுவர் வகுத்த அரசியல், இலக்குவம், பக்கம் 775)

ஒரு செயலைத் தொடங்கும் முன்னர், அதற்கான முயற்சியில் இறங்கும் முன்னர், அச்செயலை நிறைவேற்றினால் ஏற்படக்கூடிய  அழிவுகளைக் கருதிப் பார்க்க வேண்டும். அடுத்து, அவ்வழிவிற்குப்பின் ஏற்படக் கூடிய வேறு விளைவுகளையும் பார்க்க வேண்டும். பின்னர், அச்செயல் நிறைவேறினால், ஏற்படக்கூடிய ஆதாயங்களைக் கணக்கிட வேண்டும்.  மேற்கொள்ளும் செயலால் கிடைக்கும் தொடர் பயனையும் ஆராய்ந்து காண வேண்டும். உடனடியாகக் கிடைக்கக்கூடிய பயனை விட அதன் பின் தொடர்ந்து வரும் பயன் மிகுதியாக இருக்கலாம். அல்லது குறைவாகவும் இருக்கலாம். எனினும் செயலால் கிடைக்கக்கூடிய மொத்த பயனையும் ஆராய வேண்டும். இவ்வாறு ஒரு செயலால் ஏற்படக் கூடிய தீய விளைவு, பயன், தொடர் பயன் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றுள் மிகை நாடி அதற்கேற்பச் செயலைத் தொடங்குவதா இல்லையா என்று முடிவெடுக்க வேண்டும்.

சூழ்ந்து என்றால் சூழ இருத்தல் என்று மட்டும் பொருளில்லை. ஆராய்தல் என்றும் பொருள். பிறருடன் கலந்து பேசி முடிவெடுத்தல் என்றும் பொருள்.

நின்னொடுசூழ்வறோழி” (கபிலர், கலித்தொகை 54.18)

நானாக முடிவெடுக்காமல் உன்னிடம் ஆராய்ந்து பேசி முடிவெடுப்பேன் தோழி என்கிறார் தலைவி.

என்னொடும்சூழாது (பெருஞ்சித்திரனார், புறநானூறு 163.5)

“என்னிடம் கலந்து பேசாமல் அஃதாவது என்னை எதுவும் கேட்காமல் எல்லார்க்கும் வழங்குவாயாக” என்கிறார் புலவர்.

சூழ்ந்து செயல் என்றால் ஆராய்ந்து செய்தல் என்றே பொருளாகும். இப்பொழுது சூழ்ச்சி என்றால் தீய செயலுக்குத் திட்டமிடல் என்று பொருளாகும்.

குறள் வழியில் செயலின் அல்லது தொழிலின் தீய விளைவு, நல்ல விளைவு ஆகியவற்றை ஆராய்ந்து நிறைவில் பயன்தரும்  செயலையே தொடங்குவோம்!


Wednesday, June 10, 2026

நாலடி நல்கும் நன்னெறி 31. இருக்கும்போதே கொடுத்திடு! – இலக்குவனார் திருவள்ளுவன்



(நாலடி நல்கும் நன்னெறி 30 : பண்பாளர் நட்பு இருப்போர் பிறப்பை வெறுப்பதில்லை- தொடர்ச்சி)

முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள
பின்னரும் பீடழிக்கும் நோயுள; – கொன்னே
பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்
கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.

நாலடியார், பாடல் 92, அறத்துப்பால், ஈகை

கருத்து:

நம் எதிரே இறப்பு, மூப்பு, பிணி ஆகிய மூன்றும் காத்திருக்கின்றன. எனவே, கையில் செல்வம் அல்லது பொருள் அல்லது உணவு உள்ளபோதே, அதை மறைத்து வைக்காமல் பிறருக்குக் கொடுத்து  வாழ வேண்டும்.  

பதவுரை

  • முன்னரே= முன்பாகவே ; சாம்நாள்= சாகும் நாள் > சாகும் நாளும்; முனிதக்க=வெறுக்கத் தக்க; மூப்புள= முதுமையும் வர உள்ளன; பின்னரும்= ; பீடழிக்கும்> பீடு அழிக்கும் = வலிமையையும் அழிக்கும்; நோயுள>நோய் உள= நோய்கள் உள்ளன; கொன்னே=வீணாக; பரவன்மின்= புகழாதீர்கள்; பற்றன்மின்=செல்வத்தை இறுகப் பற்றிக் கொள்ளாதீர்கள்; பாத்துண்மின்> பாத்து=பகுத்துக் கொடுத்து; உண்மின்= உண்ணுங்கள்; யாதும்=எதையும்; கரவன்மின்= மறைத்து வைத்துக் கொள்ளாதீர்கள்; கைத்துண்டாம்= நம் கையில் உணவு அல்லது செல்வம்; போழ்து= இருக்கும்போது

கவிஞர் மாயவநாதன்

“தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே”

எனத் தொடங்கும் பாடலை எழுதியிருப்பார். இப்படம் 1970-ஆம் ஆண்டு வெளியான ‘மகிழம்பூ‘ திரைப்படத்தில் இடம்பெற்றது. மேலும்,

வாரி வழங்குவதில் வறுமை இல்லை – இந்த

வையகம் முழுதும் உண்மை இதுவே!

கோடி கொடுத்தாலும் குறைவதுண்டோ – மனிதன்

கோவில் கட்டிடும் புகழ் நிலைக்காதோ!

என்றும் தொடர்ந்து

பசித்தவன் முகம் பார்த்துப் பிச்சை இடு – அது

பண்புள்ள மனிதனின் சின்னமடா!

வயிற்றில் அடித்து வாழ நினைத்தால் – என்றும்

வாழ்வினில் நிம்மதி கிடையாதடா!

என்றும் பாடல் வரிகள் வரும்.

அன்றைய நாலடியார் கருத்துகளையே இன்றைய போக்கில் கவிஞர் மாயவநாதன் எழுதியுள்ளார்.

பொருளை உனக்கென ஒதுக்கி வைத்துக் கொள்வதற்காக அதனைப் பற்றிக் கொண்டிராதே என்கிறார் புலவர். பசித்தவனைப் புசிக்கச் செய்யச் சொல்வதன் மூலம் பகுத்துண்டு பிற வயிற்றுப் பசியைப் போக்கச் சொல்கிறார்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.   (திருக்குறள், ௩௱௨௰௨ – 322)

என்கிறார் திருவள்ளுவர்.

அறநூலார் கூறுவனவற்றுள் தலையாய அறம் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே என்கிறார் திருவள்ளுவர்.

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள.   (திருக்குறள்,௫௱௨௰௭ – 527)

எனத் திருவள்ளுவர்

தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காகம் உண்ணுவதைக் குறிப்பதன் மூலம் பிறருக்குக் கொடுத்து உண்பதை வலியுறுத்துகிறார்.

இவற்றையே நாலடியார் “பாத்துண்மின்” என்கிறது.

“பாத்து உண்மின்” என்று பகுத்து உண்ணுக எனச் சொல்வதுபோல், இதன் வழி, ‘பாத்து’ என்பது சோற்றைக் குறிக்கலாயிற்று. இச்சொல் வடக்கே சென்று தமிழகத்திற்கு மீண்டும்   பகளாபாத்(Bagalabath-தயிர்ச்சோறு)என்பதுபோல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

நிலையாமை உடையது இவ்வுலகு.மூப்போ, பிணியோ, சாவோ எப்போது வேண்டுமானாலும் வரலாம். நம் கண்முன் வந்து அவை அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. இத்துன்பங்களை வென்று நாம் இன்பம் காண வேண்டும். அதற்கு நாம், நிலையான புகழ் வரும் செயலைச் செய்ய வேண்டும். அதற்காக நாம் நம்மிடம் இருக்கும் எதையும் மறைக்கக் கூடாது. இருப்பதைப் பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும். பிறருக்குக் கொடுத்து உவகை அடைந்து இன்பம் காண வேண்டும்.

நிலையாமையைக் குறிப்பிடுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. கொடுக்க நினைத்து விட்டுப் பிறகு கொடுக்கலாம் எனச் சிலர் முடிவெடுக்கலாம். ஆனால் அதற்குள் அவர் கொடுக்கும் நிலையிலிருந்து தாழலாம். செல்வ நிலையிலிருந்து வறுமை நிலைக்கு வீழலாம். பிறருக்குக் கொடுக்க இயலாத நிலை ஏற்படலாம். எனவே, பிறருக்கு எதையும் முழுமையாகவோ பகிர்ந்தோ கொடுக்க நினைத்தால் நினைத்தவுடன் கொடுத்து விடவேண்டும். ஆதலின்,

இருக்கும் பொழுதே கொடுப்போம்!

இருப்பதை மறைக்காமல் இல்லார்க்குக் கொடுப்போம்!

Followers

Blog Archive