Monday, April 13, 2026

தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே!- இலக்குவனார் திருவள்ளுவன்



தாய், பங்குனி 30,2057/ஏப்பிரல் 13, 2026

‘கண்டவர் இல்’ என, உலகத்துள் உணராதார்,
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை.

நல்லந்துவனார், கலித்தொகை : 125 : 1-4

நெய்தற் கலி

இப்பாடல் 24 அடிகளையுடையது. முதல் 4 அடிகள் மட்டும் இங்கே தரப்பட்டுள்ளன.

பதவுரை:

கண்டவர் இல்=பார்த்தவர் இல்லை; உலகத்துள்=உலகத்தில் உள்ளவர்கள்; உணராதார்=அறியாவிட்டாலும்; தங்காது=தொடர்புடையவர்களிடம் மட்டும் தங்கியிராமல்;

தகைவு இன்றித்=தடையின்றி; தாம் செய்யும் = தாம் ஆற்றும்; வினைகளுள்=செயல்களுள்;

நெஞ்சு=மனம்; அறிந்த=அறியும்; கொடியவை=கொடிய செயல்களை; மறைப்பினும்=மறைத்தாலும்; அறிபவர்=அறிந்தவர் இல்லை என எண்ணாதே;

நெஞ்சத்துக் குறுகிய=மனம் மட்டும் அறிந்ததற்கு; கரி=சான்று; இல்லை = தேவையில்லை.

கருத்து:

தாம் செய்யும் தீவினைச் செயல்களை உலகத்தில் யாரும் அறியார் என எண்ணித் தீங்கு செய்யாதே. அவற்றை உன் மனமறியும். ஆகவே, மனச்சான்றின்படி தீவினை புரியாமல் வாழ்வாயாக!

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

           (திருக்குறள், ௨௱௯௰௩ – 293)

என்கிறார் திருவள்ளுவர்.

தன்னைத்தன் நெஞ்சங் கரியாகத் தானடங்கின்
பின்னைத்தான் எய்தா நலனில்லை.

என்கிறார் முனைப்பாடியார் (அறநெறிச்சாரம் 141.1-2)

தன் செயல்களுக்குத் தன் மனத்தினையே சான்றாக வைத்து ஒருவன் அடக்கமாக இருந்து வாழ்ந்து வருவானாயின், பின்னர் அவனால் அடைய முடியாத இன்பம் எவ்வுலகத்திலும் இல்லை என்று பொருள்.

இவ்வாறு பிறரும் நெஞ்சறிய தீவினை புரியாதே என்கின்றனர்.

தீய செயல்களைச் செய்தால் அதன் விளைவு யாருக்கு எதிராகத் தீவினை செய்தார்களோ அத்தகைய பாதிக்கப்பட்டவர்களுக்கும் தீயன உண்டாக்கும்.

அதே நேரம், தீ வினை புரிவோருக்கும் தீயனவே விளையும். தீயோர் தீயவற்றை எவ்வளவு கமுக்கமாகச் செய்தாலும் உலகத்தினரால் அறியப்படும்.

அதனால் உலக மக்களின் பழிக்கு ஆளாவர். ஒருவேளை யாரும் அவற்றை அறியாமல் இருக்கலாம்.

ஆனால், அந்தச் சூழலிலும் தீவினை புரிந்தோரின் உள்ளத்தை அது சுடும்.

சேக்சுபியரின் மேக்குபெத்து (மேக்குபெத்தின் துயரங்கள் / The Tragedy of Macbeth) நாடகத்தில் மேக்குபெத்து (Macbeth), தன் மனைவியின் தூண்டுதலால் அரசர் தன்கன் (King Duncan)-ஐக் கொன்று விடுகிறான்.

திருவாட்டி மேக்குபெத்து தன் கையில் உள்ள குருதிக் கறையைக் கொஞ்சம் தண்ணீரால் கழுவிடலாம் என்பார்.

ஆனால் பின்னர் குற்ற உணர்வால் கையில் குருதி வாடை இருப்பதாகக் கற்பனையாக எண்ணிக் கொண்டு அடிக்கடி கை கழுவுவார்.

“குருதி வாடை இன்னும் இருக்கிறது.. அரபு நாடுகளில் உள்ள அத்தனை நறுமண நெய்களைக் கொண்டு கை கழுவினாலும் இந்தச் சிறிய கை மணக்காது” (Here’s the smell of the blood still. All the perfumes of Arabia will not sweeten this little hand.) என்பார்.

(இந்நாடகத்தின் மொழி ஆக்க நூல் ஒன்றில் முதலில் கழுவக் கொஞ்சம் தண்ணீர் போதும் என்றதால், அனைத்துக் கடல் நீரைக் கொண்டு கழுவினாலும் கறை போகாது என வரும்.)

செய்யும் தீவினைக்கு மனமே சான்றாய் அமைந்து துன்பம் தரும் என்பதற்கு இந்நாடகக் காட்சியே எடுத்துக் காட்டாகும்.

எனவே, மனச்சான்றுக்கு அஞ்சித் தீவினை புரியாமல் இருக்க வேண்டும்.


Sunday, April 12, 2026

இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 5: கல்வி முறையை மாற்றுக! : இலக்குவனார் திருவள்ளுவன்

     13 April 2026      அகரமுதல

 



(இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 4 : தமிழ்வழிப் பயில்வோருக்கு முதலுரிமை : தொடர்ச்சி)

தமிழ் வழியில் பயில்பவர்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பின் அவ்வாறு பயில்பவர்கள்தாம் மிகுதியாக இருப்பர் என்பதில் ஐயமில்லை. அறிவு வளர்ச்சிக்காகக் கல்வி என்றில்லாமல் வேலைக்காகப் படிப்பு என்று மாறி விட்ட சூழலில் வேலைவாய்ப்பு இருப்பின் மட்டுமே தமிழ் வழியில் பயில்வர் என்பதை உணர வேண்டும். எனவே இப்போதைய அரசாவது  தமிழில் படித்தவர்களுக்கும் தமிழைப் படித்தவர்களுக்கும் 80%வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்.வேலைப் பாதுகாப்பு இருப்பின் அனைவரும் தமிழ்வழிக்கல்வியையே நாடி வருவர்.

  அரசுப் பள்ளிகளை ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றுவதை நிறுத்தி  விட்டு ஆங்கில வழிப்பள்ளிகளைத் தமிழ் வழிப் பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தொழிற்கல்விகளில் பிற மாநிலத்தவர் மிகுதியாகப் படிக்கின்றனர்.  வெளிநாடுகளுக்குச் சென்று நாம் கற்க வேண்டியதாக இருப்பின்முதலில் அவர்கள் மொழியைக் கற்பித்துவிட்டுப் பின் அம் மொழிவாயிலாகத்தான் கற்பிக்கின்றனர். இத்தகைய நிலை தமிழ்நாட்டிலும் வரவேண்டும். அதற்கு முன்னதாகக் குறைந்தது இங்கே பயிலும் அனைவரும் தமிழ் மொழித் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். 

  மொழி, இனம் பற்றிய வரலாற்றைக் கற்பிப்பது மொழி, இனத் தொன்மை வரலாறு அறியாதவர்களால், பிற்போக்காகத் திரிக்கப்பட்டு அவை மறைக்கப்படுகின்றன. தமிழர்களின் தேசிய மொழி தமிழ் என்ற உண்மை மறைக்கப்படுகிறது. இந்தி எதிர்ப்புப் போரால் ஆட்சிக்கு வந்தவர்கள்கூட, வரலாற்றில் இவை இடம் பெறச் செய்யவில்லை. தமிழின் தொன்மைச்சிறப்பு, உயர்தனிச் செம்மொழிச் சிறப்பு சரியான முறையில் விளக்கப்படுவதில்லை. ஆரியம் போல் உலகவழக்கு அழிந்து ஒழியாச் சீரிளமைத் திறத்தை வியந்து மனோன்மணி சுந்தரனார் பாடிய பாடல் வரிகள் எடுக்கப்பட்டுத்தான் தமிழ்த்தாய் வாழ்த்து  என்று சொல்லப்படுகிறது. இவ்வாறில்லாமல், தமிழின் சிறப்புகள் தமிழ்ப்பாடங்களிலும் தமிழ்நாட்டில் கற்பிக்கப்படும் பிற மொழிப்பாடங்களிலும் இடம் பெற வேண்டும்.தமிழ் மக்களுக்குத் தங்களின் தேசிய மொழியும் தேசிய இனமும் தமிழே என்பதை உணர்த்தும் கல்வி முறையே தேவை. பாரதியார் கூறியதுபோல் தமிழ்நாடு சார்ந்த புவியியல், பயிரியல் முதலான அறிவு உணர்த்தும் பாடங்களே தேவை.

பிற நாடுகளில் மழலைக் கல்வி என்பதே விளையாட்டுடன்தான் தொடங்குகிறது.  ஆனால்நம் நாட்டில் மனப்பாட முறைக்கும் எழுத்து முறைக்கும் முதன்மை கொடுக்கிறோம். பள்ளிக்கூட வகுப்புகளில் விளையாட்டு வகுப்புகள் இருப்பினும்  அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்கும்  வகையிலும் ஆற்றல் உள்ளவர்களை  ஊக்கப்படுத்தும் முறையிலும் இல்லை. பலரின் திறமை வெளிக்கொணரப்படாமையால் அல்லது கவனத்திற்குக் கொண்டு வரப்படாமையால் எண்ணற்ற விளையாட்டு வீரர்களை நாம் விளையாட்டுத்துறையில் இழக்கின்றோம். எனவேநம் கல்விமுறை மாற்றப்பட வேண்டும்.

  இதுபோல் கவின்கலைபிற கலைகளிலும் தொடக்கத்திலிருந்தே  ஈடுபாடு காட்டச் செய்யும் வகையிலும் கல்விமுறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். இசை வளர்ப்பிற்கென தமிழ்நாட்டில் 17 மாவட்ட இசைப்பள்ளிகள் உள்ளன. ஆனால்படைப்பாற்றல் மிக்க இசைக்கலைஞர்களை உருவாக்குவதைவிட மேடைக் கலைஞர்களை உருவாக்கும் முறையில்தான் இவை இயங்குகின்றன. இவற்றில் சேருவதற்கான அடிப்படைக் கல்வித் தகுதி சில துறைகளுக்கு ஏழாம் வகுப்பு எனவும் சில  துறைகளுக்கு   எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்று   நடைமுறையில் உள்ளது. ஆசிரியர் கல்வித் தகுதிகளிலும் சில துறைகளுக்கு எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும் என்ற முறையில் உள்ளது.   இவர்களால் கலைத்திறமையை வெளிப்படுத்த இயலுமே தவிரஇசையியல்கலையியல் வல்லுநர்களாகவோ அதற்கான படைப்பாற்றல் உடையவர்களாகவோ உருவாக இயலாது. இவ்வாறு தனியே இயங்கும் இசைப்பள்ளிகளை உடனடியாக  மூட வேண்டும்.

  மாவட்டந்தோறும் உண்டுறைப்பள்ளிகளைத் தொடங்கி பொதுப் பாடத்திட்டத்துடன் இணைந்த கலைக்கல்விப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இப்பள்ளிகள் எல்லா வசதிகளும்உடையனவாக இருக்க வேண்டும். இதன் மூலம் கலைத்துறை ஒதுக்கப்படாமல் இயல்பான முறையில் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும். இப்பொழுது பாடுநர் இருக்கும் அளவிற்குப்  பாடல் இயற்றும் பாடுநர் இல்லை. கருவியிசைக் கலஞைர்கள் உள்ள அளவிற்கு அத்துறை சார்ந்த இயலறிஞர்கள் இல்லை என்ற குறை இப்போது உள்ளது.  பாட முறைகளை மாற்றி அமைப்பதன் மூலம் இக் குறையைப் போக்க இயலும்.

  கல்வியைப் பற்றிப்  பேசும் பொழுதேகல்வியகங்களுடன் தொடர்புடைய ஆசிரியர் – பெற்றோர் முதலானவர்கள் உறவு குறித்தும் தெரிவிப்பது பொருத்தமாக இருக்கும்.

  அவ்வப்பொழுது பருவத் தேர்வு முடிவுகளுக்கேற்ப ஆசிரியர்கள் பெற்றோரை அழைத்து அறிவுரை கூறும் பள்ளிகளில் ஓரளவு  நல்லுறவு உள்ளது. எனினும் பொதுவாகப் பெரும்பாலான கல்வியகங்களில்மதிப்பெண் எடுக்காவிட்டால் மீண்டும் அதே  வகுப்பில் படிக்க வேண்டும் அல்லது மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்பது போன்ற மிரட்டல்தான் உள்ளது. இவையெல்லாம் மாணாக்கர்களை வழி நடத்தப் பெற்றோர்க்கு உதவுவதற்கு மாற்றாகப்  பள்ளியின் மீது பெற்றோர்க்கு வெறுப்பை ஏற்படுத்துவனவாகவே அமைகின்றன. நிருவாகம் என்பது பணம் பிடுங்கும் இயந்திரமாக இருப்பதால்,  ஆட்சிக்குழுவினருக்கும் பெற்றோர்க்கும் எவ்வகை உறவும் இல்லை.  

Friday, April 10, 2026

சட்டச் சொற்கள் விளக்கம் 1041-1042: இலக்குவனார் திருவள்ளுவன்

      11 April 2026      கரமுதல



(சட்டச் சொற்கள் விளக்கம் 1036-1040 : தொடர்ச்சி)

1041. Awareness  விழிப்புணர்வு

சட்ட விழிப்புணர்வு தனி விழிப்புணர்வுகுமுக விழிப்புணர்வுபண்பாட்டு விழிப்புணர்வுஉணர்வு விழிப்புணர்வுஅமைப்பு விழிப்புணர்வுஉறவு விழிப்புணர்வுகுடிமை விழிப்புணர்வுதொழில்நுட்ப விழிப்புணர்வுநலவாழ்வு விழிப்புணர்வு, மனநல விழிப்புணர்வு மன்பதை விழிப்புணர்வுஊடக விழிப்புணர்வுசுற்றுப்புற விழிப்புணர்வுவரலாற்று விழிப்புணர்வுமுதலீட்டு விழிப்புணர்வுசேமிப்பு விழிப்புணர்வு, அரசியல் விழிப்புணர்வு முதலியவாறாகப் பலவகைப்படும்.

தொடர்பான சிக்கல்கள் வழக்குகளில் இடம் பெறும்பொழுது தொடர்புடைய சொற்கள் சட்டச் சொற்கள் ஆகின்றன.

சட்ட விழிப்புணர்வு (Legal awarness) என்பது பொது மக்களுக்கான சட்டக் கல்வி அல்லது சட்ட நூலறிவு என்றும் அழைக்கப்படுகிறதுசில நேரங்களில் குடிமக்களின் கல்வி எனவும் குறிக்கப் பெறுகிறது.

இது தனியர்களைச் சட்ட அமைப்பில் வலுப்படுத்தும் வகையில் சட்டங்கள்உரிமைகள்சட்ட செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதைக் குறிக்கிறது.

சட்டம்நீதிமன்ற அமைப்புகளுக்குத்  தொடர்புடைய பொதுப் பலன்களையும் திறன்களையும் மேம்படுத்துவதற்காக நோக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளை இது கொண்டுள்ளது. மேலும் அந்தச் செயல்பாடுகளுடன் தொடர்புடைய நடைமுறைபடிப்புத்துறைகளையும்சட்டம் பற்றிய அறிவை  மக்களுக்கு வழங்குவதில் குமுகாய- தொழில்முறை இயக்கத்தையும் குறிக்கிறது.

அமெரிக்கர்சட்ட உரைஞர் சங்கம்(American Bar Association) சட்ட விழிப்புணர்வுஎன்றால் . குறையாய்வுத் தீர்ப்புகள் குறித்த சட்டப் பொருண்மைகள், சட்ட வழிமுறை, வாய்ப்புள்ள சட்ட வளங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தவும் மேம்படுத்தவும் உள்ள வழிகளையும் உத்திகளையும் வெளிப்படுத்தவும் வழிகாட்டுவது என்கிறது.

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், (PHRA) 1993 பொது மக்களுக்கு மனித உரிமைகள் குறித்தும் தொடர்பான சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு தேவை என்பதற்காக இயற்றப்பட்டது.
1042. Axe to grindமறைமுக நோக்கம்   

கூறியதையே திரும்பத் திரும்பக்‌ கூறுதல் என்பது நேர் பொருள். சட்டத் துறையில் மறைநோக்கத்தை – அஃதாவது மறைமுக நோக்கத்தைக் குறிப்பது. மறை நோக்கம் என்றால் தவறாகப் பொருள் கொள்ளலாம் என்பதால் மறைமுக நோக்கம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. எனினும் நாளடைவில் மறை நோக்கம் என்றே பயன்படுத்தலாம்.

இத் தொடர் ஒருவர், தூய பொதுநலத்தின் அடிப்படையில் செயல்படாமல், மாறாக ஒரு குறிப்பிட்ட ஆதாயத்தைப் பெறுவதற்காக அல்லது பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார் என்பதை உணர்த்துகிறது.

தனியரின் நோக்கங்கள் வெளிப்படையானவை அல்ல என்றும், அவை தனிப்பட்ட மனக்குறைகள் அல்லது மறைமுக நலன்களால் உந்தப்பட்டிருக்கலாம் என்றும் இத்தொடர் சுட்டிக்காட்டுகிறது.

Thursday, April 9, 2026

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 10: தமிழ்மொழியைத் தாய்நிலத்தில் வாழ விடவில்லையே!: இலக்குவனார்திருவள்ளுவன்


(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 09: தொடர்ச்சி)

“தகவல் களஞ்சியம் என நம்பப்பெறும் ‘விக்கிபீடியா’வில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும்  ‘தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக’ என்னும் பட்டியலிலும், ‘தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் வாரியாக’ என்னும் பட்டியலிலும் பருமா/மியன்மா  அல்லது இரங்கூன்/யாங்கூன் இடம் பெறவில்லை. ‘தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் தலைப்பில் இலங்கையிலும் ஈழத்திலும் உள்ள கொழும்பு, யாழ்ப்பாணம் முதலான நகரங்களே குறிக்கப்பெறவில்லை.”

 “ ‘மியான்மர் மொழிகள்’ என்னும் தலைப்பிலும் பருமாவில் ஒரு பகுதியினர் – தமிழர்கள் – பேசும்மொழியாகத் தமிழ் உள்ளமை குறிக்கப் பெறவில்லை.  புள்ளிவரப்படி பார்த்தால் மியன்மா நாட்டில்  தமிழ்மொழி பேசுவோர் 4 ஆம் இடத்தில் உள்ளனர். ஆனால் பிற நாடுகளில், 1000 தமிழர்கள் இருப்பதைக் குறிக்கும் புள்ளிவிவரங்கள் பெருமளவு எண்ணிக்கையில் தமிழர் வாழ்வதையும் தமிழ் பேசப்படுவதையும் குறிக்கவில்லை.”  (அதிர்ச்சி அடையாதீர்கள்! – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்! – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழக அரசியல், 30.10.2016) நமது உண்மையான எண்ணிக்கையை நாம் அறிந்திருப்பதும் நமக்கு வலிமையல்லவா?  ஆனால், உலகில் தமிழர்கள்” என்று நாம் குறைக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டியே பெருமைப்பட்டுக் கொண்டுள்ளோம்.

வெற்று ஆரவாரக் கூச்சலில் தமிழை வளர்க்கலாம் என நம்பும் தமிழர்கள்

மொழியும் இனமும் நமதிரு விழியாம்!

தமிழ்நெறி ஒன்றே தமிழர்க்குத் துணையாம்!”

தமிழால் ஒன்றிணைவோம்! தமிழராய் உணர்வோம்!”

பாட்டன் தமிழை வீட்டில் பேசுவோம்

தமிழனாய்ப் பிறந்ததில் பெருமை கொள்வோம்!

தாய்மொழியைக் கற்பதில் கடமை உணர்வோம்!”

என வெளிநாடுகளில் முழங்கித் தமிழுணர்வைப் பெருக்கி வருகிறார்கள். இருப்பினும் தாயகத் தமிழர்கள் வெற்று ஆரவாரக் கூச்சலில் தமிழை வளர்க்கலாம் என நம்பி வருகின்றனர்.

தாய்நாட்டில் தமிழைக் காப்பது முதற்பணி!

அயலகங்களில் தமிழை நிலைக்கச் செய்வது இரண்டாம் பணி!

எனக் கொண்டு நற்றமிழை நாடுதோறும் வளர்க்கும் தலைவர்களும் அறிஞர்களும் இல்லாதபோது தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?

தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர்!

தமிழர் வாழ்ந்தால் தமிழ் வாழும்!

 என்னும் பேராசிரியர் இலக்குவனாரின் பொன்மொழியை உணர்ந்தால், தமிழ் அழியும் இடங்களில் தமிழர் அழிவும் தமிழர் அழியும் இடங்களில் தமிழ்அழிவும் நிகழ்வதை உணர்ந்து விழிப்படைவோரும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவோரும் இல்லையே!

தமிழ்மொழியைத் தாய்நிலத்தில் வாழ விடவில்லையே!

அயோத்தியில் ஆரியப்புராணமான இராமாயண அருங்காட்சியகம் அமைப்பதற்காக 150 கோடி உரூபாய்களை ஒதுக்கியுள்ளது இந்திய அரசு. ஆனால், வரலாற்று உண்மைகளைக் கூறும் தமிழரின் பெருமைகளை உணர்த்தும்  கீழடி அகழ்வாய்விற்கு முதலில் ஒரு நூறாயிரம் மட்டுமே ஒதுக்கியது.  இதுவரை ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகையும் சில நூறாயிரமே. தமிழ்நாட்டின் ஒதுக்கீடுதான் 12.20 கோடி.  தமிழ் உண்மைகளை வெளிவர ஒரு துரும்பையும் அசைக்காமல் இருப்பதும் தவிர்க்க இயலாமல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய சூழல் எழுந்தால் ஒரு சிறிய தொகையைக் கண் துடைப்பாக ஒதுக்குவதுமே ஒன்றிய அரசின் பணியாக இருக்கின்றது. இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். சமற்கிருத, இந்தி மொழிகளை இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் தமிழர் வாழும் இடங்களிலும்  திணித்துக்கொண்டும் செயற்படுவதையே ஒன்றிய அரசு இலக்காகக் கொண்டு உள்ளது. ஆனால், இந்தியத்துணைக்கண்டம் முழுவதும் ஒருகாலத்தில் பேசப்பட்ட தமிழ்மொழியைத் தன் தாய்நிலத்தில் வாழ வைப்பதற்கு ஒன்றிய அரசையும் தமிழ்நாட்டு அரசையும் வலியுறுத்தி வாகைசூடத் தவறும் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?

தமிழ்நாட்டிலேயே தமிழுக்கான பயன்பாட்டை இல்லாமல் ஆக்குகிறார்களே!

தமிழ்நாட்டிலேயே தமிழுக்கான பயன்பாட்டை இல்லாமல் ஆக்கி அதன் மதிப்பைக் குறைத்துக் கொண்டு வருகிறோம். அரசு பிறப்பிக்கும் மாறுதல் ஆணைகள்கூடத் தமிழில் இல்லை. அரசின் பெயர் சூட்டல்களில் ஆங்கிலம்தான்இடம் பெறுகிறது. அரசின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டலாம் என்றால் தமிழின் முழுப் பயன்பாடின்மைக்கும் காரணமாக அதன் செயற்பாடே இருப்பதால் அதனை மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழுக்குரிய பெருமையைத் தேடித்தராத நாம்!

இந்தியப் பண்பாட்டு அமைச்சகம் அறிவிப்பின்படி 2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் சமற்கிருதத்திற்கு மட்டும் உரூபாய் 643.84 கோடியும், பிற 5 செவ்வியல் மொழிகளுக்கும் சேர்த்து உரூ.29 கோடி மட்டும் ஒதுக்கியுள்ளதைத் தெரிவித்துள்ளது. அ1ஃதாவது பிற ஐந்து மொழிகளை விட 22 மடங்கு சமற்கிருதத்திற்கு மட்டும் ஒதுக்கியதாக ஒன்றியப்பண்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஒன்றியக் கல்வியமைச்சர் சுபாசு சருக்கார், 2021-2022இல் தமிழ் மொழிக்கு உரு.11.86 கோடி ஒதுக்கியதாகவும், மத்தியச் சமற்கிருதப் பல்கலைக்கழகத்திற்கு மட்டும் 198.83 கோடி ஒதுக்கியதகாவும் தெரிவிததார்.  இவ்வாறு புள்ளி விவரங்களைப் பார்த்தால் உயர் தனிச்செம்மொழியாம் தமிழுக்கு மிக மிக மிக மிகக் குறைவாக ஒதுக்கி ஆனால் பதினைந்தாயிரத்தைத்தாண்டாத அளவில் பேசக்கூடிய சமற்கிருதத்திற்கு இல்லாத உயர்வைக் கற்பித்து மிக மிக மிக மிகப் பன்மடங்கு தொகை ஒதுக்கப்படுவது ஆண்டுதோறும் ஒன்றிய அரசாலேயே தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இது குறித்துத் தன்மானமும் தமிழ் மான உணர்வும் இல்லாமல் நாம் அமைதி காத்து, உரிமைக் குரல் எழுப்பி வாகை சூடத் தயங்குகிறோம். தமிழுக்குரிய பெருமையைத் தேடித்தராத நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?

இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, March 6, 2026

குறட் கடலிற் சில துளிகள் 42 : இனத்தூய்மை கொள்வோம்- இலக்குவனார் திருவள்ளுவன்

      06 March 2026      அனரமுதல



(குறட் கடலிற் சில துளிகள் 41 : சூழலால் உருவாவதே அறிவு!- தொடர்ச்சி)

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்தூய்மை தூவா வரும்.  

(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௫ – 455)

மனம் தூய்மை யாதலும், செயல் தூய்மை யாதலும் தான் சேரும் இனத்தின் தூய்மையால் உருவாகும்.

பதவுரை:

 மனந்தூய்மை-மனநலன், உள்ளத் தூய்மை; செய்வினை தூய்மை-செயல் நயம்; இரண்டும்-இரண்டும்; இனம் – சேர்க்கை; தூய்மை-நன்றாதல்; தூ-பற்றுக்கோடு; ஆ-ஆகும்படி; வரும்-உண்டாம்.

மனத்தூய்மை என்பது மனத்தில் மாசு இன்றி இருத்தல். அஃதாவது தனக்குத் தீமை தரும் என்று கருதும் செயல்களைத் தான் பிறருக்குச் செய்யாதிருக்க வேண்டும். அதுபோல், தனக்கு நன்மை விளைவிக்கும் எனக் கருதும் செயல்களைப் பிறருக்குச்செய்தல் வேண்டும்.

ஒருவருக்கு அவர் சேர்க்கைக்கு அல்லது கூட்டத்திற்கு அல்லது நட்பிற்கு ஏற்பவே பழக்க வழக்கங்கள், ஒழுக்கங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் முதலியன உருவாகின்றன. கூடா நட்புடன் தொடர்பு ஏற்படும் பொழுது தீய எண்ணத்திற்கு ஆட்பட்டுத் தீய செயலில் ஈடுபட்டு விடுகின்றனர். அதனால் தீமையே விளைகிறது. சேர்க்கையால் நல்ல நண்பர்கள் அமையும் பொழுது மனத்தூய்மை கொண்டு நற்செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனால் நன்மையே விளைகிறது.

வஞ்சகர்களுடன் சேரும்பொழுது மனங்கெட்டு வஞ்சச் செயல்களில் ஈடுபட்டு விடுகின்றனர். அறவோர்களுடன் சேரும்பொழுது மனம் தூய்மை அடைந்து அறச் செயல்களில் நாட்டம் கொள்கின்றனர். மூட நம்பிக்கையருடன் சேருபவர்கள் மனந்திரிந்து மூடச் செயல்களில் ஈடுபடுகின்றனர். பகுத்தறிவாளர்களுடன் பழகினால் நன்மனம் கொண்டு பகுத்தறிவுச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

எனவே, தீய இனத்திலிருந்து விலகியும் நல்லினத்துடன் இணைந்தும் வாழ வேண்டும்.

எனவேதான் திருவள்ளுவர் மனத் தூய்மையையும் அதனால் நிகழும் செயல் தூய்மையையும் வலியுறுத்துகிறார்.

“இனந்தூய்மை தூவா வரும்” என்றால் என்ன பொருள்?  இதற்கு இன்றைய உரையாசிரியர்கள், ‘நல்ல கூட்டுறவால் வரும்’, ‘அவன் நெருங்கிப் பழகும் மனிதர்களுடைய இனம் தூய்மையாக இருந்தால்தான் முடியும்’, ‘ அவன் சேரும் இனத்தாரின் புனிதத்தைச் சார்ந்தே அமைவன ஆகும்’, ‘தாம் சேர்ந்துள்ள இனத்தின் காரணமாக உண்டாகும்’ என்று வெவ்வேறு பொருள் கூறுகின்றனர்.

தூவா வரும்“ என்றால் என்ன?

‘தூவா வரும்’ என்ற தொடர்க்குப் பற்றிவரும், காரணமாகவே வரும், பற்றுக் கோடாக உளவாம், பொறுத்தே ஏற்படும், பொறுத்தே உண்டாகும், வரும், தருவதால் வருவன, சார்ந்தே அமைவன ஆகும், காரணமாக உண்டாகும், பற்றுக்கோடாக நிலைத்து நிற்கும் என அறிஞர்களின் கருத்துகளைக் குறள் திறன் தொகுத்துத் தருகிறது.

குறள்நெறிக்காவலர் பேரா.முனைவர் சி.இலக்குவனார், இக் குறளை ஆட்சியாளருக்கு அறிவுரை கூறுவதாகப் பின்வருமாறு கூறுகிறார்.

ஆட்சிப் பொறுப்பினை ஏற்போர்க்கும் பிறர்க்கும் உள்ளத்தூய்மையும் வினைத் தூய்மையும் இன்றியமையாது வேண்டும். இவையிரண்டும் இல்லையேல், எவரும் நற்பணி ஆற்றி நல்வாழ்வு வாழ்தல் இயலாது. தூய்மையே வாழ்வின் உயிர் என்று கூறலாம். அத்தூய்மையும் இனத்தால்தான் உண்டாகின்றது. ஆதலின் சிற்றினம் தவிர்க்கப்படல் வேண்டும்” என்கிறார்.

ஆட்சிப்பொறுப்பினை ஏற்போர்க்கும் என்று நிறுத்தி விடாது, பிறர்க்கும் என விளக்கம் தருகிறார் இலக்குவனார்.

எனவே, இக்குறள் யாவருக்கும் பொருந்துவதே. எனவே, அனைவரும்  இக்குறளைப் பின்பற்றி, தூய்மையான மனத்துடன் செயலிலும் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். இவற்றுக்குத் தூய இனத்துடன் சேர வேண்டும்.

ஆதலின் நாம் தூய இனத்துடன் சேருவோம்! தூய மனம் கொள்வோம்! தூய செயல் ஆற்றுவோம்!

Followers

Blog Archive