(சங்கப் புலவர்கள் பொன்னுரை –16 தொடர்ச்சி)

உள் இலோர்க்கு வலியாகுவன்
கேள் இலோர்க்குக் கேளாகுவன்

               புறநானூறு 396 : 10-11

பாடியவர்: மாங்குடி கிழார்.
பாடப்பட்டோன்: வாட்டாற்று எழினியாதன்.
திணை: பாடாண்.
துறை: கடைநிலை.

மன்னன் எழினியின் மகன் ஆதன் எழினியாதன் எனப்படுகிறான்.

உள் = மனவெழுச்சி (ஊக்கம்). வலி = பற்றுக்கோடு (ஆதரவு), வலிமை. கேள் = உறவு.

வாட்டாறு என்னும் பெயருடைய ஓர் ஊர் சோழ நாட்டில் உள்ள பட்டுக்கோட்டை அருகே உள்ளது.

மற்றோர் ஊராகிய சேரநாட்டில் இருந்த வாட்டாற்றைச் சார்ந்தவன் எழினி ஆதன் என்று உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி(ப்பிள்ளை) புறநானூற்று உரையில் கூறுகிறார்.

வாட்டாற்று எழினியாதன், ஊக்கம் இல்லாதார்க்கு உரமாகித் துணை செய்வான்; சுற்றம் இல்லாதார்க்கு உற்ற உறவாகி மகிழ்ச்சி அளிப்பான்.

அஃதாவது, உள்ளத்தில் தெம்பு இல்லாதவர்களுக்கு இவன் வலிமைத் துணையாக விளங்குவான். உறவினர் இல்லாதவர்களுக்கு உறவினனாக இருந்து உதவுவான்.

ஊக்கம் ஒவ்வொருவருக்கும் தேவை என்று திருவள்ளுவர் ‘ஊக்கமுடைமை’ எனத் தனியதிகாரமே வைத்துள்ளார்.

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு. (திருக்குறள் ௬௱ – 600)

– என்கிறார் திருவள்ளுவர்.

ஒருவனுக்கு உள்ள செல்வம் என்பது ஊக்கமுடைமையே! ஊக்கம் ஆகிய செல்வம் இல்லாதவர், தோற்றத்தில் மக்கள்போல் காட்சியளித்தாலும் மரங்களைப் போன்றவரே! என்கிறார்.

இத்தகைய மன வலிமையில்லாதவர்க்கு ஊக்கமாகிய செல்வம் தரும் உரவனாகவும் பொருட் செல்வம் இல்லார்க்குப் பொருள் வழங்கி உறவனாகவும் எழினியாதன் திகழ்கிறார்.

உரவு என்றால் வலிமை. உரவில்லாதவர்க்கு வலிமை தருவதால் உரவன். உறவு என்றால் சுற்றம். உறவன் என்றால் சுற்றம் இல்லாதவர்க்குச் சுற்றமாக இருந்து உற்றுழி உதவுபவன்.

எழினியாதன் கொடையை மழையாகப் பொழிபவன். பெரிய சுற்றத்தார் உண்டதுபோக உணவு எஞ்சுமாறு, அவர்கள் மகிழுமாறு மிகுதியான உணவுப் பொருள்களை அளிப்பவன்.

ஆதலால் அவனை நாடி வருவோர் பெற்ற செல்வத்திற்கு அளவே இல்லை. அவர்கள் வானத்து மீன்கள் போலும் அவன் வெண்மையான முழுநிலாவைப் போலும் திகழ்ந்தனர்.

இப்படியே அவன் என்றென்றும் விளங்கவேண்டும். நாள்தோறும் அவர்களும் அவர்களைப் போன்றவர்களும் வாழ்த்திப் பாராட்டுமாறு களிற்று நிரைகளையும் நல்ல அணிகலன்களையும் வழங்கி அவன் மாசுபடாத புகழுடன் விளங்க வேண்டும்.

தானும் வாழ்த்த வேண்டும். பிறரும் வாழ்த்த வேண்டும். வாழ்த்தும்படி அவன் நல்ல செல்வ வளத்தை வழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்.

எனவே, பாடலை…

யாமும் பிறரும் வாழ்த்த, நாளும்
நிரைசால் நன் கலன் நல்கி,
உரை செலச் சிறக்க, அவன் பாடல்சால் வளனே!

என முடிக்கிறார்.

உரை என்றால் புகழ் என்றும் சால் நிரம்பிய என்றும் பொருள்கள்.

இவ்வாறு புலவர் பாடும் புகழுடைய அவன் பெருஞ்செல்வம் மேலும் பெருகுவதாக என வாழ்த்துகிறார்.

இவ்வாறு வாழ்த்துவதன் மூலம் எழினியாதனின் சிறப்பைக் கூறி நாமும் அவன் போல் வலிமையில்லாதவரைத் தாங்கும் வலிமையாளனாகவும் சுற்றம் இல்லாதவருக்குச் சுற்றமாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார்.

எனவே நாம் 

ஊக்கமில்லாதவர்க்கு ஊக்கமாகவும் 

சுற்றம் இல்லாதவர்க்குச் சுற்றமாகவும் தி

கழ்வோம்!