13 April 2026 அகரமுதல
(இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 4 : தமிழ்வழிப் பயில்வோருக்கு முதலுரிமை : தொடர்ச்சி)
திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம்
தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள்
பொதுத்தலைப்பு:
இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் நிறைவுரை 5
கல்வி முறையை மாற்றுக!
தமிழ் வழியில் பயில்பவர்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பின் அவ்வாறு பயில்பவர்கள்தாம் மிகுதியாக இருப்பர் என்பதில் ஐயமில்லை. அறிவு வளர்ச்சிக்காகக் கல்வி என்றில்லாமல் வேலைக்காகப் படிப்பு என்று மாறி விட்ட சூழலில் வேலைவாய்ப்பு இருப்பின் மட்டுமே தமிழ் வழியில் பயில்வர் என்பதை உணர வேண்டும். எனவே இப்போதைய அரசாவது தமிழில் படித்தவர்களுக்கும் தமிழைப் படித்தவர்களுக்கும் 80%வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்.வேலைப் பாதுகாப்பு இருப்பின் அனைவரும் தமிழ்வழிக்கல்வியையே நாடி வருவர்.
அரசுப் பள்ளிகளை ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றுவதை நிறுத்தி விட்டு ஆங்கில வழிப்பள்ளிகளைத் தமிழ் வழிப் பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிற்கல்விகளில் பிற மாநிலத்தவர் மிகுதியாகப் படிக்கின்றனர். வெளிநாடுகளுக்குச் சென்று நாம் கற்க வேண்டியதாக இருப்பின், முதலில் அவர்கள் மொழியைக் கற்பித்துவிட்டுப் பின் அம் மொழிவாயிலாகத்தான் கற்பிக்கின்றனர். இத்தகைய நிலை தமிழ்நாட்டிலும் வரவேண்டும். அதற்கு முன்னதாகக் குறைந்தது இங்கே பயிலும் அனைவரும் தமிழ் மொழித் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசின் கல்வி நிறுவனங்களில் ஒற்றை எண்ணிக்கையில்தான் தமிழர்கள் சேர்க்கப்படுகின்றனர். பெரும்பான்மையர் தமிழராக இருக்கும் வகையில் சேர்க்கை அமைய வேண்டும். இங்கும் பிற மொழியினர் முதலில் தமிழ்மொழியில் தேர்ச்சி பெற வேண்டும். இவ்வாறு கல்விநிலையங்கள் தமிழறியவாதவர்களால் நிரப்பப்படும் நிலை போக்கப்பட வேண்டும்.
மொழி, இனம் பற்றிய வரலாற்றைக் கற்பிப்பது மொழி, இனத் தொன்மை வரலாறு அறியாதவர்களால், பிற்போக்காகத் திரிக்கப்பட்டு அவை மறைக்கப்படுகின்றன. தமிழர்களின் தேசிய மொழி தமிழ் என்ற உண்மை மறைக்கப்படுகிறது. இந்தி எதிர்ப்புப் போரால் ஆட்சிக்கு வந்தவர்கள்கூட, வரலாற்றில் இவை இடம் பெறச் செய்யவில்லை. தமிழின் தொன்மைச்சிறப்பு, உயர்தனிச் செம்மொழிச் சிறப்பு சரியான முறையில் விளக்கப்படுவதில்லை. ஆரியம் போல் உலகவழக்கு அழிந்து ஒழியாச் சீரிளமைத் திறத்தை வியந்து மனோன்மணி சுந்தரனார் பாடிய பாடல் வரிகள் எடுக்கப்பட்டுத்தான் தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொல்லப்படுகிறது. இவ்வாறில்லாமல், தமிழின் சிறப்புகள் தமிழ்ப்பாடங்களிலும் தமிழ்நாட்டில் கற்பிக்கப்படும் பிற மொழிப்பாடங்களிலும் இடம் பெற வேண்டும்.தமிழ் மக்களுக்குத் தங்களின் தேசிய மொழியும் தேசிய இனமும் தமிழே என்பதை உணர்த்தும் கல்வி முறையே தேவை. பாரதியார் கூறியதுபோல் தமிழ்நாடு சார்ந்த புவியியல், பயிரியல் முதலான அறிவு உணர்த்தும் பாடங்களே தேவை.
பிற நாடுகளில் மழலைக் கல்வி என்பதே விளையாட்டுடன்தான் தொடங்குகிறது. ஆனால், நம் நாட்டில் மனப்பாட முறைக்கும் எழுத்து முறைக்கும் முதன்மை கொடுக்கிறோம். பள்ளிக்கூட வகுப்புகளில் விளையாட்டு வகுப்புகள் இருப்பினும் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்கும் வகையிலும் ஆற்றல் உள்ளவர்களை ஊக்கப்படுத்தும் முறையிலும் இல்லை. பலரின் திறமை வெளிக்கொணரப்படாமையால் அல்லது கவனத்திற்குக் கொண்டு வரப்படாமையால் எண்ணற்ற விளையாட்டு வீரர்களை நாம் விளையாட்டுத்துறையில் இழக்கின்றோம். எனவே, நம் கல்விமுறை மாற்றப்பட வேண்டும்.
இதுபோல் கவின்கலை, பிற கலைகளிலும் தொடக்கத்திலிருந்தே ஈடுபாடு காட்டச் செய்யும் வகையிலும் கல்விமுறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். இசை வளர்ப்பிற்கென தமிழ்நாட்டில் 17 மாவட்ட இசைப்பள்ளிகள் உள்ளன. ஆனால், படைப்பாற்றல் மிக்க இசைக்கலைஞர்களை உருவாக்குவதைவிட மேடைக் கலைஞர்களை உருவாக்கும் முறையில்தான் இவை இயங்குகின்றன. இவற்றில் சேருவதற்கான அடிப்படைக் கல்வித் தகுதி சில துறைகளுக்கு ஏழாம் வகுப்பு எனவும் சில துறைகளுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்று நடைமுறையில் உள்ளது. ஆசிரியர் கல்வித் தகுதிகளிலும் சில துறைகளுக்கு எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும் என்ற முறையில் உள்ளது. இவர்களால் கலைத்திறமையை வெளிப்படுத்த இயலுமே தவிர, இசையியல், கலையியல் வல்லுநர்களாகவோ அதற்கான படைப்பாற்றல் உடையவர்களாகவோ உருவாக இயலாது. இவ்வாறு தனியே இயங்கும் இசைப்பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும்.
மாவட்டந்தோறும் உண்டுறைப்பள்ளிகளைத் தொடங்கி பொதுப் பாடத்திட்டத்துடன் இணைந்த கலைக்கல்விப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இப்பள்ளிகள் எல்லா வசதிகளும்உடையனவாக இருக்க வேண்டும். இதன் மூலம் கலைத்துறை ஒதுக்கப்படாமல் இயல்பான முறையில் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும். இப்பொழுது பாடுநர் இருக்கும் அளவிற்குப் பாடல் இயற்றும் பாடுநர் இல்லை. கருவியிசைக் கலஞைர்கள் உள்ள அளவிற்கு அத்துறை சார்ந்த இயலறிஞர்கள் இல்லை என்ற குறை இப்போது உள்ளது. பாட முறைகளை மாற்றி அமைப்பதன் மூலம் இக் குறையைப் போக்க இயலும்.
கல்வியைப் பற்றிப் பேசும் பொழுதே, கல்வியகங்களுடன் தொடர்புடைய ஆசிரியர் – பெற்றோர் முதலானவர்கள் உறவு குறித்தும் தெரிவிப்பது பொருத்தமாக இருக்கும்.
அவ்வப்பொழுது பருவத் தேர்வு முடிவுகளுக்கேற்ப ஆசிரியர்கள் பெற்றோரை அழைத்து அறிவுரை கூறும் பள்ளிகளில் ஓரளவு நல்லுறவு உள்ளது. எனினும் பொதுவாகப் பெரும்பாலான கல்வியகங்களில், மதிப்பெண் எடுக்காவிட்டால் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும் அல்லது மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்பது போன்ற மிரட்டல்தான் உள்ளது. இவையெல்லாம் மாணாக்கர்களை வழி நடத்தப் பெற்றோர்க்கு உதவுவதற்கு மாற்றாகப் பள்ளியின் மீது பெற்றோர்க்கு வெறுப்பை ஏற்படுத்துவனவாகவே அமைகின்றன. நிருவாகம் என்பது பணம் பிடுங்கும் இயந்திரமாக இருப்பதால், ஆட்சிக்குழுவினருக்கும் பெற்றோர்க்கும் எவ்வகை உறவும் இல்லை.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment