Showing posts with label தொல்காப்பியமும் பாணினியமும். Show all posts
Showing posts with label தொல்காப்பியமும் பாணினியமும். Show all posts

Thursday, December 25, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 15 : உரையாசிரியர்கள் நால்வருண விளக்கங்கள் தொல்காப்பியர் கொள்கைக்கு முரண்பட்டன



(தொல்காப்பியமும் பாணினியமும் – 14 : இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்-தொடர்ச்சி)

 தொல்காப்பியர் காலத்தில்தான் ஆரியம் தமிழ் நாட்டில் பரவத் தொடங்கி இருக்க வேண்டும்.  தமிழகத்தில் முதன் முதலாகக் குடியேறிய வேற்று நாட்டார் வட ஆரியரே.  அவருள்ளும் மொழி நூற் புலமையும்ஒழுக்க மேம்பாடும் பிறர்க்கென வாழும் பெற்றிமையும் கொண்ட ஆரியரே தமிழகச் சான்றோருடனும் அரசர்களுடனும் தொடர்பு கொண்டனர்.  ஆரிய மொழிப் புலவரும் தமிழ் மொழிப்புலவரும் நட்புடன் அளவளாவி உறவாடினர். “கற்றாரைக் கற்றாரே காமுறுவர்அன்றோ?” எவரையும் வரவேற்று இன்ப வாழ்வு நல்கும் பண்டைத் தமிழர் வட ஆரியப் புலவரை வரவேற்று வாழ்வளித்ததில் வியப்பின்று.  தமிழரை யடிமையாக்கித் தமிழ் மொழியை ஒழிக்கும் உள்ளத்துடன் அன்று வடவாரியர் இங்கு வந்திலர்.  ஆதலின் புகலிடம் தேடி வந்த ஆரிய மொழிச் சான்றோரிடம் பொல்லாங்கு காட்டாது முகமன் கூறி வரவேற்று அகமகிழ ஆகும் உதவிகளைச் செய்தனர்.  அதனால் இருசாராரும் நெருங்கிப் பழகி ஒருவர் மொழியை ஒருவர் பயின்றனர்.  ஓரினத்தார் மற்றோரினத்தாருடன் கலந்து உறவாடுங்கால் இரு சாராரின் மொழிகளும் பண்பாடுகளும் கலைகளும் ஒன்றினுள் ஓன்று கலப்புறுவது இயற்கையேதடுக்க முடியாததும் ஆகும்.  ஆதலின் ஆரியர்கள் தமிழர்களின் மொழிபண்பாடுகலை முதலியவற்றைத் தமதாக்கிக் கொண்டது போலவேதமிழர்களும் ஆரியர்களின் மொழி பண்பாடு கலை முதலியவற்றைத் தமதாக்கிக் கொண்டனர்.  ஒருவரை ஒருவர் அடிமை கொள்ளல் வேண்டும் என்ற எண்ணம் இல்லாததால் பிற மொழி வெறுப்பும்பகைமை யுணர்ச்சியும் தோன்றவில்லைஆரியர்கள் தமிழகத்தில் செல்வாக்குத் தேட வேண்டிய நிலையில் இருந்ததால்தம் ஆரியநூல்களைத் தமிழர்கள் கற்கலாகாது என்று தடுக்கும் கொள்கையை அஞ்ஞான்று மேற் கொண்டிலர்.  தமது மொழியில் புலமை பெற்ற தமிழர்களும் வேற்றுப் புது மொழியாம்ஆரியத்தை விரைந்து கற்றனர்.  புதிய மொழியில் புலமை பெறுதலைப் பெருமையாகக் கருதுதல் என்றும் உள்ள இயல்பு.  ஆதலின் தொல்காப்பியரைச் சிறப்பித்துக் கூறப் புகுந்த பனம்பாரனார் தொல்காப்பியரின் வடமொழிப் புலமையை எடுத்துக்காட்டிச் சிறப்பித்துள்ளார். (பேராசிரியர் சி.இலக்குவனார்தொல்காப்பிய ஆராய்ச்சி :  பக்கம்: 26-27)

“ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” என்றார் தொல்காப்பியர்.  ஆனால் உரையாசிரியர்களில் சிலர் உயர்ந்தோர் என்பதற்கு முதல் இரு வருணத்தார் (அந்தணர், அரசர்) என்றும், மூன்று வருணத்தார் (அந்தணர், அரசர், வணிகர்) என்றும் பொருள் கூறியுள்ளனர். “உயர்ந்தோ ரெனக் கூறலின் வேளாளரை ஒழிந்தோர் என்றுணர்க’  என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.  முற்றிலும் பொருந்தா உரை கூறித் தொல்காப்பியத்தை இழி நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர் உரையாசிரியர்கள்.  உரையாசிரியர் காலத்தில் ஆரிய முறையாம் நால்வகை வருண நெறி நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம்.  தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் இடம் பெற்றிலது.  அன்றியும் தொல்காப்பியர் தமிழக மக்கள் வாழ்வினைக் கூற வந்தனரேயன்றி, தமிழர்க்குத் தொடர்பிலாப் பிற நாட்டினர் வாழ்க்கை கூற நூல் செய்திலர்.  தொல்காப்பியர்க்குப் பிற்பட்டுத் தோன்றிய திருவள்ளுவர் உழவரை உயர்ந்தோரெனச் சிறப்பித்திருக்கவும், அவர்க்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியர், உழவரை வேளாளரைஉயர்ந்தோரல்லர் என ஒதுக்கியிருத்தல் எங்ஙனம் சாலும்? ஆதலின் உரையாசிரியர்கள் நால்வகை வருணம் பற்றிக் கூறுவன வெல்லாம் தொல்காப்பியர் கொள்கைக்கும் காலத்துக்கும் முரண்பட்டன; பொருந்தாதன என்று அறிதல் வேண்டும். (பேராசிரியர் சி. இலக்குவனார்,தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 144-145 )

செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் குன்னூரில் ஒரு நூலகம் ஆவணி 25, 1942 / செப்.10, 1911 அன்று அமைத்தவர். அங்கே தொல்காப்பியருக்குச் சிலை நிறுவியவர். இத்தகைய அறிஞர் பெருமக்களாலும் ஆன்றோர்களாலும்தான் தொல்காப்பியர் புகழ் காலந்தோறும் நிலைத்து நிற்கிறது. நாம் அவர் புகழை மேலும் உலகெங்கும் பரப்புவோமாக!

  • தொல்காப்பிய ஆராய்ச்சி, பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார்
  • தொல்காப்பியர் வரலாறு, பேராசிரியர் க.வெள்ளைவாரணனார்
  • Tholkappiyar: Tholkappiyam, MS. NISHA KUTTY
  • இலக்கண வரலாறு, சோம.இளவரசு
  • ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியக் கட்டுரைகள், ஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்ப்புலவர் கழக வெளியீடு, நவம்ப் 2004
  • பழந்தமிழ், பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார்
  • INDIAN LITERARY CRITICISM AND THEORY, 7. Panini, Math Wiki
  • உலகத்தொல்காப்பிய மன்றம். இணையத் தளம்
  • வலைத்தளங்கள்
  • விக்கிபீடியா
  • உரையாசிரியர்கள், மு. வை. அரவிந்தன்
  • Tholkappiyam in English with critical studies, Dr.S.Ilakkuvanar 
  • வடமொழி ஒரு செம்மொழியா?, முனைவர் ப.மருதநாயகம்
  • ஆய்வுலக வழிகாட்டி பேராசிரியர் ப.மருதநாயகம், இலக்குவனார் திருவள்ளுவன்
  • தமிழ்ச்சிமிழ், தொல்காப்பியம், இலக்குவனார் திருவள்ளுவன்
  • தொல்காப்பியம் ஓர் அறிமுகம், உரை, பேராசிரியர் தெ. முருகசாமி
  • தொல்காப்பிய விழா மலர், தொல்காப்பிய மன்றம், கனடா, 2023
  • தொல்காப்பியப் பொருளதிகாரமும் சங்க இலக்கியங்களும் காட்டும் பெண்களின சமூக நிலை, முனைவர ்செல்வநாயகி சிரீதாசு
  • முனைவர் இராசமாணிக்கனார்
  • https://tamilandvedas.com/
  • சான்லாக்குசு பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் (https://www.shanlaxjournals.in/)
  • Aindra School of Grammar 
  • ஆய்வுச்சுடர்: பன்னாட்டு பன்முகத்தமிழ் மி்ன்-ஆய்விதழ்
  • இணையத்தில் இடம் பெற்ற இன்னும் சில நூல்களும் பல கட்டுரைகளும்.

000

(தொடரும்)

Thursday, December 18, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 14 : இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்-இலக்குவனார் திருவள்ளுவன்



(தொல்காப்பியமும் பாணினியமும் – 13 : இடைச்செருகல்கள் – தொடர்ச்சி)

இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்

தொல்காப்பிய இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள் குறித்துப் பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்  பின்வருமாறு தெரிவிக்கிறார்:- ”தொல்காப்பியர் இலக்கண முறைமைகளைத் தொடுத்துக் கூறும் அல்லது அடுக்கி வைக்கும் பாங்கு தொன்மைமிக்க  தமிழின் இலக்கணச் சீர்மையை மட்டுமின்றி, நம் முன்னோரின் சிந்தனைப்போக்கின் முதிர்ச்சியையும் ஏரணவியலின் தொன்மையையும், அறிவியல் முறைமைப்படத் தரவுகளைத் தொகுத்து வழங்கும் ஆய்வுநெறிமுறைப் பயிற்சியையும் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.  தமிழைக் கணிணிமொழி என்று பெருமிதத்துடன் கொண்டாடிக் கொள்ளத் தூண்டுவது எழுத்துப் படலம், சொற்படலம் ஆகிய இருபடலங்களின் அமைப்புமுறையேயாகும்.  இந்தச் சங்கிலித்தொடர்ச் செய்தித்தொகுப்பின் கட்டுக்கோப்பால்தான் இடைச்செருகல் விளையாட்டுகளை இவ்விரு படலங்களிலும் தொல்காப்பியத்தின் பின்வந்தோர் நிகழ்த்தமுடியவில்லை.(நன்றி : செம்மொழிச்சுடர் இணையத்தளம்)

நூல்களில் பிராமணியத்தைத் திணித்து ஆரியத் தழுவல்களாகக் காட்டுவதை விட, நூலாசிரியர்களைப் பிராமணர்களாகக் காட்டினால் பணி எளிதாகும் எனக் கருதிய ஆரியர்கள் தமிழ்ப்புலவர்களுக்குச் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டினர். திரணதூமாக்கினிதான் தொல்காப்பியர் என்றும் (சிரீவல்லபர்தான் திருவள்ளுவர் என்றும்) ஆரியர்கள் கதை கட்டுகின்றனர். இது குறித்து ஏ.சி.பருனால், மெனாண்டர்(Menander) என்ற பெயரை மிலிண்டா என்றும் தெமீட்டுரியசு(Demeterius) என்பதைத் தத்தமித்திரா(Dattamitra) என்றும் மாற்றுவதுபோல் கிரேக்கப்பெயர்களைச் சமற்கிருதப் பெயர்களாக மாற்றும் மன்னிக்க முடியாத ஏமாற்றுவேலைகளில் சமற்கிருதவாணர்கள் ஈடுபட்டதைக் குறிப்பிடுகிறார். (Arthur Coke Burnell 11 சூலை 1840 – 12 அட்டோபர் 1882  தஞ்சாவூர் மாவட்ட நீதிபதியாக இருந்த பொழுது 01.11.1875 அன்று இந்நூலை வெளியிட்டார்.) இருப்பினும் அன்று முதல் இன்று வரை இடைச்செருகல்கள் ஒரு புறமும் சாதியக் கட்டுக்கதைத் திணிப்புகள் மறுபுறமுமாக நடந்துகொண்டுதான் உள்ளன.

தொல்காப்பியம் – ஒரு கவிதை இலக்கண நூல்

தொல்காப்பியம் எழுத்து, சொல் எனத் தமிழ்மொழி இலக்கணம் மட்டுமல்லாமல் கவிதைக்குரிய இலக்கணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது வேறு எந்தமொழியிலும் காணக்கிடைக்காத ஒரு நிலையாகும். (முனைவர் ச. அகத்தியலிங்கம் : மொழியியல் நோக்கில் தமிழ்ச் செம்மொழி, உங்கள் குரல் தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலர்: பக்.29)

தொல்காப்பியர் திருவள்ளுவருககுக் காலத்தால் முற்பட்டவர்

  தமிழக ஆராய்ச்சியாளருட் சிலர் திருவள்ளுவரைத் தொல்காப்பியர்க்கு முற்பட்டவர் என்று கூறுகின்றனர்.  அங்ஙனம் கூறுவது  உலகப் பெரும் புலவர் வள்ளுவர்பாற் கொண்டுள்ள பற்றுதலால்தான் என்று கருதவேண்டியுளது.  உயர் அறங்களை உலகுக்கு அறிவிப்பதில் முதற்பாவலராய் இருப்பவர் காலத்தானும் முற்பட்டவராகத்தான் இருத்தல் வேண்டும் என்று எண்ணி விட்டனர்போலும்.  காலத்தால் முற்பட்டவர் என்பதால் பெருமையும் பிற்பட்டவர் என்பதால் சிறுமையும் உண்டு என்று கருதுவது மிக மிகத் தவறேயாகும்.  இருபெரும் புலவர்களும் இருவேறு துறைகளில் இணையற்றவர்கள் என்பதில் எட்டுணையும் ஐயமின்று.  முற்பட்ட காலத்தின் துணைகொண்டு முற்பட்டவராக விளங்க வேண்டிய நிலையில் இருவரும் இலர். ஆதலின் காய்தல் உவதல் இன்றி இருவருள்  எவர் காலத்தால் முற்பட்டவர் என்று ஆராய்தல் நமது கடனாகும்.

 தொல்காப்பியர், திருவள்ளுவருக்குக் காலத்தால் முற்பட்டவர் என்பதனை இருவர் நூல்களுமே எடுத்துக் காட்டுகின்றன. (பேராசிரியர் சி.இலக்குவனார்: தொல்காப்பிய ஆராய்ச்சி : பக்கம்:11)

தொல்காப்பியர் வரலாறு சரியாக அறியப்படாமையால் அவரது காலமும் சரியாக உணரப்படவில்லை. அறிஞர்களே மாறுபட்ட கருத்துகளைக் கூறுகின்றனர். தமிழின் சிறப்புகளைக் குறைத்துக் கூறுவதையே தொழிலாகக் கொண்டோரும் தொல்காப்பியம் குறித்துத் தவறான கருத்துகளைத் திணித்து அவையே உண்மை என்பதுபோல் பரப்பி வருகின்றனர்.

தொல்காப்பியத்தின் காலம் பற்றி அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. கி.பிக்கு முந்தையது என்று பல அறிஞர்களும் பிந்தையது என்று சிலரும் குறிப்பிடுகின்றார்கள். காலக் கணக்கில் வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும் தோராயமாகத் தொல்காப்பியம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்க வேண்டும் என்பதைப் பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள்.

தமிழுக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் எனப் போற்றப்படும் தொல்காப்பியம் காலந்தோறும் போற்றிப் பாதுகாக்கப்பட்டுள்ளது. வாய்மொழி மரபாகவும் சுவடிகள் வழியாகவும் பாதுகாக்கப்பட்டிருக் கின்றது. உரைகள் தோன்றிய பிறகு தொல்காப்பியத்தின் பெருமை மேலும் பரவலாக்கப்பட்டுள்ளது. அச்சுக்கலை வளர்ந்தபிறகு தமிழறிஞர்கள் உரையோடு கூடிய தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் பிற இலக்கிய, இலக்கணங்களையும் ஆர்வத்தோடு பதிப் பித்துள்ளனர். இவ்வகையான ஆன்றோர்களின் அரும் பணியாலேயே தமிழ் இன்று உலகோர் அறிந்து போற்றப்படும் நிலையைப் பெற்றுள்ளது.

தொல்காப்பியத்தின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளி இன்பம் காண்போர் உள்ளனர். ஆரியத்தைப்பற்றிய தவறான கற்பிதத்தை நம்புவோர் இருப்பினும் அதன் உண்மையை வெளிப்படுத்துவோரும் பெருகி வருகின்றனர்

தொல்காப்பியம் பற்றிய ஆய்வுகள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் மேன்மேலும் வளரும். இவ்வகையான ஆய்வு வளர்ச்சி ஏற்படுவதற்கு அடிப்படையான முந்தைய நிலையை ஆய்வாளர் இரா. வெங்கடேசன் அரிதின் முயன்று தொல்காப்பியம் தொடர்பான கருத்துகளைத் தொகுத்துத் ‘தமிழ்ப் புலமை மரபில் தொல்காப்பியம்’ என்னும் நூலைப் பதிப்பித்துள்ளார். இந்த அரிய நூலை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் (2014) வெளியிட்டுள்ளது. தொல்காப்பிய உரைகள், பதிப்புகள், ஆய்வாளர்களின் கருத்துகள் இந்நூலில் விரிவாகத் தொகுக்கப் பட்டுள்ளன. தொடர்ந்து தொல்காப்பியத்தை ஆய்வு செய்வோருக்கும் இளம் ஆய்வாளர்களுக்கும் இந்நூல் மேலும் உதவும் வகையில் உள்ளது என உறுதியாகக் கூறலாம்.

(தொடரும்)

Thursday, December 11, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 13 : இடைச்செருகல்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்



(தொல்காப்பியமும் பாணினியமும் – 12 : பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரும் மோசடி– தொடர்ச்சி)

இடைச்செருகல்கள் இருவகை

இடைச்செருகல்களை நாம் இருவகைகளாகக் குறிக்கலாம். ஆரிய நூல்கள் தம் நூல்களில் இல்லாச் சிறப்புகளை இருப்பதுபோல் காட்டுவதற்காகப் பிற நூல்களிலுள்ள நல்ல கருத்துகளை உட்புகுத்துவது. இதன் மூலம் ஆரிய நூல்களைச் சிறப்பானதாகவும் செம்மையானதாகவும் பிற நூல்களுக்கு முன்னோடியாகவும் காட்டுவது. மற்றொரு வகை தமிழ் நூல்களின் சிறப்புகளைக் குறைப்பதற்காகவும் காலத்தைப் பின்னுக்குத் தள்ளுவதற்காகவும்  சமற்கிருத நூல்களின் வழி நூலாக அல்லது சமற்கிருத நூல்களில் இருந்து கருத்துகளை எடுத்துக் கொண்டதாகத் தவறாகக் காட்டப்படுவத்றகாகத் திணிக்கப்படுபவை. இத்தகைய இடைச்செருகல்கள்தாம் தமிழுக்கு இழுக்குத் தேடி வருகின்றன.

எனவே, தமிழ் நூல்களிலான இடைச்செருகல்கள் அதன் அழகையும் மதிப்பையும் குறைக்கவும் ஆரியத்தைத் திணிக்கவும் உண்டாக்கப்பட்டவை;. சமற்கிருத நூல்களில் உள்ள இடைச்செருகல்கள் அவற்றுக்கு இல்லாச் சிறப்புகளை இருப்பதுபோல் காட்டுவதற்காகத் திணிக்கப்பட்டவை எனலாம். இடைச்செருகல்கள் மூலம் சமற்கிருத நூல்களில் இந்தியர்கள் செய்த துமோசடிகள் வெளிப்படையாகக் கண்டுகொள்ளக் கூடியவை என்கிறார் ஏ.சி.பருனல்(The Ainthira school of sanskrit grammarians , பக்.102)

 தொல்காப்பியத்தில் பிற்காலத்தோரால் சேர்க்கப்பட்ட இடைச்செருகல்கள் ஆங்காங்குள்ளன. தொல்காப்பியத்தைக் கற்போர் அவ் விடைச்செருகல்களை எளிதில் அறிந்துகொள்வர். அவ் விடைச்செருகல்கள் வடமொழித் தொடர்புடையோரால் சேர்க்கப்பட்டன. ஆதலின் வடமொழிச் சார்புடையனவாக இருத்தலில் வியப்பில்லை. 

சமற்கிருதச் சார்புடையார் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் இழைத்த அழிகேட்டுப் பணிகளில் ஒன்றுதான் தொல்காப்பிய இடைச்செருகல். 1871இலேயே சாருலசு கோவர் (Charles E.Gover) என்பார், ‘தென்னிந்தியாவின் நாட்டு்ப்புறப்பாடல்கள்’ என்னும் நூலின் முன்னுரையில் தமிழ் இலக்கியங்கள் திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்டமையை உள்ளக்குமுறலோடு கூறியுள்ளதையும் நமக்குத் தருகிறார். பிராமணர்கள், தமிழ் நூல்களை அழிப்பது, இயலாவிட்டால் சிதைப்பது (The Brahmins corrupted what they could not destroy.)என ஈடுபட்டதைக் கோவர் கூறுகிறார். இவர்போன்ற அறிஞர்கள் கூற்றுகளின் மூலம் தொல்காப்பியத்திலும் இடைச்செருகல்கள் ஏற்பட்டமையைப் பேராசிரியர் ப.மருதநாயகம் புரிய வைக்கிறார்

தொல்காப்பியத்தில்  இடைச்செருகல்கள் உள்ளமையை முதலில் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் வெளியிட்டார் தொல்காப்பிய அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் மாணவப்பருவத்திலேயே தொல்காப்பிய வகுப்பு நடத்திய முதல்வரின் இடைச்செருகல்கள் குறித்த தவறான கருத்துகளுக்கு எதிராக உண்மைகளை உரைத்து வாதிட்டவர். இதழ்களிலும் தொல்காப்பிய இடைச்செருகல்கள் குறித்து எழுதியவர். அவர் தம் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு-திறனாய்வு நூலில் தொல்காப்பியத்தில் சதிகாரர்களால் நேர்ந்த இடைச்செருகல்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். அதன்பின்னர் பிற தமிழ் அறிஞர்களும் இது குறித்து எழுதியுள்ளனர்.

மெய்ப்பாடுகுறித்த கருத்துகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தெளிவான விளக்கம் பெற்றிருந்தன என்பதை நூற்பாவே தெரிவிக்கிறது. ஆனால், இவை பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்திலிருந்து பெறப்பட்டவை என்று தமிழின் உட்பகைவரகளும் புறப்பகைவர்களும் பொய்கூறிக்காலந் தள்ளுகின்றனர். எனக் குறிப்பிட்டு அறிஞர் பி.வி.கனே போன்றோர் கருத்துகளையும் துணைகொண்டு தமிழ்கூறும் மெய்ப்பாட்டின் தொன்மையையும் சிறப்பையும் பேராசிரியர் ப.மருதநாயகம் எடுத்துரைக்கிறார்.

இடைச்செருகல்களையும் சேர்த்து வெளியிட்டுப் பின்னர் அவற்றை இடைச்செருகல்கள் என்பதை விட அவை இல்லாமல் தொல்காப்பியத்தை வெளியிடுவதே சிறப்பு. எனவே, அவ்வாறு இந்நூலில் இடைச்செருகல்களை நீக்கிய பதிப்பாக இதனை வெளியிட்டுள்ளார்.

தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’(2019)

தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் இடம் பெற்று அவற்றின் குறிப்பாக மட்டுமே இடைச்செருகல் விவரம் தெரிவிக்கப்பட்டது. தொல்காப்பியத்தில் தெரிந்தே இடைச்செருகல்களுக்கு இடம் கொடுக்க வேண்டுமா என அறிஞர் ப.மருதநாயகம் வருந்தினார். எனவே, இடைச்செருகல்களை நீக்கிய முழு நூலாகத் ’தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’ என இடைச்செருகல்கள் நீக்கப்பெற்ற செம்பதிப்பை வெளியிட்டார்.

இந்நூலின் முதல் இயலாக ‘ஒப்பில் தொல்காப்பியம்’ என்னும் கட்டுரையை அளித்துள்ளார். தொல்காப்பியத்தின் சிறப்பு, சமற்கிருத நூல்களில் இதன் தாக்கம் ஆகியவற்றுடன் இல்லாத கற்பனைச் சொற்களைச் சேர்த்துப் பாணினி எழுதியுள்ளதை மேனாட்டு அறிஞர்களின் ஆய்வுரை அடிப்படையில் பலவகைகளில் பேராசிரியர் ப.மருதநாயகம் சிறப்பாக விளக்கியுள்ளதை இக்கட்டுரை தெரிவிக்கிறது.

ஆரியத்தழுவலாகத் தொல்காப்பியத்தைக் காட்டுவதற்காகவும் தொல்காப்பியர் ஆரிய இலக்கணங்களை ஒப்பியல் நோக்கில் கையாண்டுள்ளார் எனப் போலியாகப் பாராட்டுவதுபோலவும் இடைச்செருகல்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான்

காமக்கூட்டம் காணும்காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே

என வரும் நூற்பா.  இந்நூற்பாவை இடைச்செருகல் எனப் பேராசிரியர் ப.மருதநாயகம் ஐயந்திரிபறக் கூறுகிறார்.

ஆரியர்களைப் பார்த்துத் தமிழர்கள் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டனர் எனத் தொல்காப்பியம் உணர்த்துவதுபோல் திரித்துக் கூறும் பழக்கம் ஆரியப் பிராமணர்களுக்கு இருக்கிறது. இந்த வகையில் பி.சா.சுப்பிரமணிய சாத்திரிகள் கற்பியல் குறித்து விளக்கும் பொழுது அறியாமையாலோ குறும்புத்தனத்தாலோ ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நெறி ஆரியரிடமிருந்து தமிழர் பெற்றது என எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டு அதனை வன்மையாகப் பேராசிரியர் ப.மருதநாயகம் மறுக்கிறார். வடமொழி இலக்கியங்களை வரலாற்றுக் காலத்தை நிறுவுவதற்குப் பயன்படுத்தல் பெருந்தீங்கை விளைவிக்கும் என்றும் அவை யெல்லாம் பலவாறாகப் பல காலங்களில் பலரால் சிதைக்கப்பட்டவை யென்றும் அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியை வைத்தும் எம்முடிவிற்கும் வர முடியாதென்றும் பண்டிதர்கள் தங்கள் மனம்போன போக்கில் மாற்றங்களைச் செய்துள்ளார்களென்றும்(ப.105) பருனால் கடுமையாகச் சாடுகிறார்.(ப.மருதநாயகம், வடமொழி ஒரு செம்மொழியா?, பக்.607)

(தொடரும்)

Thursday, December 4, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 12 : பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரும் மோசடி– இலக்குவனார் திருவள்ளுவன்



(தொல்காப்பியமும் பாணினியமும் – 11 : முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்– தொடர்ச்சி)

தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த நடுநிலையான பொருளுரையைப் பேரா.ப.மருதநாயகம் அளித்துள்ளார். பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி, ஏமாற்றுவேலை. ‘ஆதிபாஃசா’ நூலில் சட்டம்பி அடிகளார், தமிழிலிருந்து பிராகிருதமும் பிராகிருதத்திலிருந்து சமற்கிருதமும் தோன்றியது என்னும் வரலாற்று உண்மையை மெய்ப்பிக்கிறார். பேரா.சி.இலக்குவனார் அவர்களும் அவர் வழியில் அறிஞர்கள் பலரும் தொல்காப்பியத்தில் இடம் பெற்ற இடைச்செருகல்களை நீக்கினால் தொல்காப்பியம் முரண்பாடு இன்றிச் செம்மையாக இருக்கும் என நிறுவியுள்ளனர். இவை போன்ற அறிஞர்களின் கருத்துகளை எடுத்துக் கூறித் தொல்காப்பியம் சமற்கிருதத் தழுவலன்று எனத் தெரிவிக்கிறார்.(இலக்குவனார் திருவள்ளுவன், தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்)

ஒலியன்கள்

தமிழில் ஒலியன்கள் சரியாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் எழுத்துகளை உருவாக்கியவர்கள் ஒலியன்கள்பற்றி நன்கு அறிந்திருக்கின்றனர். அறிவியல் கருவிகள் இல்லாத காலத்திலேயே தமிழ்ப் பேச்சொலிகளைத் துல்லியமாக அடையாளம் காட்டியிருப்பது வியப்புக்குரியது என ஒலியனியல் வல்லுநர் தானியல் இயோன்சு(Daniel Jones) வியந்து பாராட்டுகிறார். சமற்கிருத இலக்கணம்-மொழியியல் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர்பணினி. இவர் அம்மொழியின் ஒலியனியல், உருபனியல் என்பவை தொடர்பில் அறிவிய் அடிப்படையிலான பகுப்பாய்வுகளைச் செய்துள்ளா் என்று விக்கிபீடியா கூறுகிறது.மேலும் சில தளங்களிலும் இக்கருத்துகளைக் காணலாம். இதற்கெல்லாம் காரணம் தொல்காப்பியம் இன்றைய ஒலியனியல் கருத்துகளை அன்றே அறிவியல் அடிப்படையில் கூறியுள்ளார் என அறிஞர்கள் கூறுவதால் பாணினியத்திலும் இருப்பதாகப் பொய்யுரைப்பதே ஆகும்.

அரித்தாட்டில் காலத்திற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே நடைமுறையில் இருந்த தமிழ்நெறி

மிக்குசிகன் மொழியியல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஏ.எல்.பெக்கர்(A.L.Becker), கீத்து தெயிலர்  (Keith Tailor) ஆகிய இருவரும் தொல்காப்பியர் அறிவுலகிற்குச் செய்த பணி பிளேட்டோவும் அரிட்டாட்டிலும் மேலை அறிவுலகிற்குச் செய்த பணியை ஒத்தது எனப் பாராட்டுகின்றனர். இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியர் பேரா.முனைவர் சி.இலக்குவனார், “… ஆதலின், கிரேக்க நாட்டு அரிட்டாட்டில் காலத்திற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே தமிழகத்தில் இலக்கிய நெறி முறைகள் வகுக்கப்படுப் பயிலப்பட்டுப் பாடப்பட்டு வந்தன என அறியலாம்.” (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 149-150) என்கிறார்.

மொழியியலின் மீவுயர் பேராசன்

புலப்பாட்டுநெறி, யாப்பிலக்கணம், கவிதையியல் ஆகியவைபற்றிய முழு இலக்கணம் தந்தவரென்றும் மொழியின் அடித்தளப் பேச்சு வழக்கிலிருந்து கவிதை மொழி வரையிலான மொழியின் எல்லாக் கூறுகளையும் மொழியியல் ஆய்விற்கு உரிய பொருளாக எடுத்துக் கொண்டவரென்றும் மொழியியலின் மீவுயர் பேராசன் என்று அழைக்கப்பட வேண்டியவரென்றும் தொல்காப்பியரின் உயர்வை ஏ.கே.இராமானுசன் சிறப்பிக்கிறார்.(முனைவர் மருதநாயகம், வடமொழி ஒரு செம்மொழியா?, பக்கம் 606)

இடைச்செருகல்கள்

தமிழ் நூல்களிலான இடைச்செருகல்கள் அதன் அழகையும் மதிப்பையும் குறைக்கவும் ஆரியததைத் திணிக்கவும் உண்டாக்கப்பட்டவை. என்று ஆய்வறிஞர்கள் நிலை நாட்டியுள்ளனர். சமற்கிருத நூல்களில் உள்ள இடைச்செருகல்கள் அவற்றுக்கு இல்லாச் சிறப்புகளை இருப்பதுபோல் காட்டுவதற்காகத் திணிக்கப்பட்டவைஏ.சி.பருனல்(The Ainthira school of sanskrit grammarians , பக்.102)

முனைவர் சி இலக்குவனார் தம் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொல்காப்பிய நூலில், மரபியல் பகுதியில் 24 நூற்பாக்களை உடுக்குறி(*)யால் இடைச்செருகல் எனப் பாகுபடுத்தியுள்ளார்.

மக்களில் பிறப்பால் வரும் நான்கு வருண உடைமைகளைக் கூறும் நூற்பாக்கள் 15 (71-85); செய்யுளியலில் கூறாமல் மரபியலின் இறுதியில் தொடர்பில்லாமல் சேர்க்கப்பட்டிருக்கும் 9 நூற்பாக்கள்; ஆக  24 நூற்பாக்கள். மேலும், அகத்திணையியலில் பிரிவைப் பற்றிச் சொல்லும்போது, 13 நூற்பாக்களில் (24 முதல் 36) குலப் பிரிவு சேர்க்கப்பட்டுக் குழப்பம் செய்யப்பட்டுள்ளது. இவையும் இடைச்செருகல்கள் என்பது தெளிவு.

இவை இடைச்செருகல்களே என்பதை உரையாசிரியர்களின் மேற்கோள்களால் அறியலாம். சங்கநூல் பாடல்களில் இவற்றிற்கான மேற்கோள் பாடல்கள் இல்லாமல் பண்டைய உரையாசிரியர்களே புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கல விருத்தி முதலான பிற்கால நூல் தரும் பாடல்களைத் தருகின்றனர்

இடைச்செருகல்கள் குறித்து அப்போது நிதியமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன், சென்னை புத்தகக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில்(2.01.2010) நடைபெற்ற நிகழ்ச்சியில், “தொல்காப்பியர் காலத்தில் இல்லாத மரபுகள், கலாசாரங்கள், மேல்சாதி – கீழ்சாதி முறைகள், 4 வகை சாதி அமைப்புகள், மனு வருணாசிரம முறைகள் குறித்த கருத்துகள் உரைகளில் இடைச்செருகல்களாகப் புகுந்துள்ளன.

இந்த இடைச்செருகல்கள் களையப்பட்ட உரையைத் தொல்காப்பியத்துக்கு எழுத ச.வே.சுப்பிரமணியன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் முன்வர வேண்டும்”. எனப் பேசியுள்ளார்.

இவ்வுரையை ஒருவர் மின்மடலாடல் குழு ஒன்றில் பகிர்ந்துள்ளார். தமிழே தெரியாமல் ஆனால்  தங்களைத் தமிழறிஞர்களாகக் காட்டிக்கொண்டு தமிழுக்கு எதிராக எழுதியும் பேசியும்  வரும் கும்பல் எப்பொழுதும் இயங்கிக் கொண்டுள்ளது. அத்தகைய கும்பல் அறிஞர்கள் எவற்றை ஏன் இடைச்செருகல்களாகக் குறிப்பிடுகிறார்கள் என்றெல்லாம் ஆராயாமல், அவற்றிற்கு எதிரான மறு கருத்து இருப்பின் அவற்றைத் தெரிவிக்காமல் பொதுவாக மறுத்து எழுதியுள்ளனர். “நமக்குப் பிடிக்கவில்லை என்றால் இடைச்செருகல் என்பதா? ஏன், பிற இடைச்செருகல்களாக இருக்கக் கூடாது? தொல்காப்பியர் காலத்திலேயே சாதிப்பாகுபாடு இருந்தது. தொல்காப்பியம் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தது” என்பனபோன்று  எழுதியுள்ளனர். இவை போன்ற கருத்துகளைத் தம் கட்டுரைகளிலும் நூல்களிலும் தமிழ்ப்பகைவர்கள் உண்மைக்கு மாறாக எழுதியுள்ளனர்; எழுதி வருகின்றனர். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் தொல்காப்பிய இடைச்செருகல்கள் குறித்த கருத்துகளே வலிமை வாய்ந்தனவாக உள்ளன (தமிழ்த்துளி வலைத்தளம்). 

(தொடரும்)

Thursday, November 27, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 11 : முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்– இலக்குவனார் திருவள்ளுவன்

 




(தொல்காப்பியமும் பாணினியமும் – 10 : தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும். – தொடர்ச்சி)

முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்

தொல்காப்பிய மொத்த நூற்பாக்கள் 1571 ஆகின்றன. இவற்றுள் எழுத்து அதிகாரத்தில் 57, சொல் அதிகாரத்தில் 72, பொருள் அதிகாரத்தில் 158, ஆக மொத்தம் 287 நூற்பாக்கள் தொல்காப்பியருக்கு முன் உள்ளவர்களின் கருத்தை மேற்கோளாகக் குறிப்பிடுவனவாகும்.” என்கிறார் பேராசிரியர் சி. இலக்குவனார்(தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வும்: பக்கம் 15). இதனையே வரலாற்று நூலாகவும் கருத வேண்டும் என அவர் வலியுறுத்தும் இடத்திலும் பின்வரும் வகையிலும் அவர் விளக்குகிறார்: 

தொல்காப்பியர் தம்முடைய சமசுகிருதப் புலமை தமிழின் அழகையும், தனித் தன்மையையும், சிதைப்பதற்கு இடம் தரவில்லை.  வடவேங்கடம் தென்குமரி இடையே உள்ள கிடைத்த தமிழ் நூல்களின் அடிப்படையிலேயே தொல்காப்பியர் தம்முடைய சிறந்த நூலை யாத்துள்ளார் எனப் பனம்பாரனார் மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் ‘என்மனார்’ ‘என்ப’ ‘என்றிசினோர்‘  எனத் தம் முன்னவர்களைப் பற்றி 287 இடங்களில் குறிப்பிடுகின்றார். இத்தகைய மேற்கோள்களால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு நிலவிய தமிழ்மொழி தமிழ் இலக்கிய நிலைமை குறித்து அறிதற்கு இயலுகிறது. எனவே தொல்காப்பியத்தை விளக்க உரை நூலாக மட்டும் கருதாமல் வரலாற்று நூலாகவும் கருத வேண்டும்.” பேராசிரியர் சி. இலக்குவனார் (தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்: பக்கம்-20)

தொல்காப்பியர் முன்னோரைச் சுட்டும் வகைகள்

தொல்காப்பியச் சூத்திரங்களுள் ஏறத்தாழ இருநூற்று அறுபது இடங்களில் தொல்காப்பியர், தமக்கு முன்பு இருந்தவரும் தம் காலத்தவருமான இலக்கண ஆசிரியர் பலரைப் பலபடியாகக் குறிப்பிட்டுள்ளார். (முனைவர் மா. இராசமாணிக்கனார், தமிழ் மொழி-இலக்கிய வரலாறு)

(1) ‘என்ப’- ‘மொழிப’ என்னும் முறைமை தொல்காப்பியத்தில் ஏறத்தாழ 147 இடங்களில் வந்துள்ளன.

(2) ‘என்மனார் புலவர்’ என்பது சுமார் 88 இடங்களில் வந்துள்ளது.

(3) ‘வரையார்’ என்பது 15 இடங்களில் வந்துள்ளது. 

(4) பிற சிறப்புடன் வந்துள்ள தொடர்கள் ஏறத்தாழ முப்பதாகும்.

(குறிப்பு; அப்படியானால் 250+30=280 ஆகிறது.)

 இத்தொடர்கள் தாம் சுவையுடையவை. ஆதலின், அவற்றை அதிகார முறைப்படி ஒன்றன்பின் ஒன்றாக இங்குக் காண்போம்:

  1. நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே-நூற்பா 7.
  2. ஒத்த தென்ப உணரு மோரே- நூற்பா 193. 
  3. செவ்வி தென்ப சிறந்திசி னோரே – நூற்பா 295. 
  4. புகரின்று என்மனார் புலமை யோரே – நூற்பா 369
  1. உளவென மொழிப உணர்ந்திசி னோரே- நூற்பா 116
  2. வழுக்கின் றென்ப வயங்கி யோரே – நூற்பா 119 
  3. விளியொடு கொள்ப தெளியு மோரே – நூற்பா 153
  4. ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே – நூற்பா 158. 
  1. இயல்பென மொழிய இயல்புணர்ந் தோரே – நூற்பா 4 
  2. புலனன்குணர்ந்த புலமை யோரே – நூற்பா 14 
  3. கொள்ளும் என்ப குறியறிந் தோரே – நூற்பா 50
  4. நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென
  5. வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே – நூற்பா 315 
  • இடையும் வரையார் தொடையுணர்ந் தோரே- நூற்பா 371 
  • வரைவின் றென்ப வாய்மொழிப் புலவர் – நூற்பா 383
  • யாப்பென மொழிப யாப்பறி புலவர் – நூற்பா 380
  • வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்

நாற்பேர் எல்லை அகத்தவர் வழங்கும்

யாப்பின் வழியது என்மனார் புலவர்  – நூற்பா 384 

  • பொழிப்பென மொழிதல் புலவர் ஆறே – நூற்பா 403 
  • ஒன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே – நூற்பா 406 
  • தெரிந்தனர் விரிப்பின் வரம்பில ஆகும் – நூற்பா 407
  • நூல்நவில் புலவர் நுவன்றறைந் தனரே – நூற்பா 457
  • ஒத்தென மொழிப உயர்மொழிப் புலவர் – நூற்பா 472 
  • தோன்றுமொழிப் புலவரது பிண்டம் என்ப – நூற்பா 474
  • ஆங்கென மொழிய அறிந்திசி னோரே – நூற்பா 514 
  • தோலென மொழிப தொன்னெறிப் புலவர் – நூற்பா 539 
  • புலனென மொழிய புலனுணர்ந் தோரே – நூற்பா 542 
  • நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே – நூற்பா 571 
  • நூலென மொழிய நுணங்குமொழிப் புலவர் – நூற்பா 644
  • சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர் – நூற்பா 646

சுவை பயக்கும் இத் தொடர்களை, அவையுள்ள இயல்களையும் நூற்பாக்களையும் கொண்டு ஆராய்ந்து முடிபு கூறல் அழகிதாகும். இத் தொடர்கள் பலதுறைப் புலவர்களைச் சுட்டுதல் தெற்றென விளங்குதல் காண்க; இவற்றை நோக்கும் அறிஞர் சிறப்பாகப் பொருளதிகாரத்தில் வரும்

4, 5, 7, 8, 9, 11, 12, 14, 15, 16, 20 ஆம் எண்கள் சுட்டும் தொடர்களைக் காண்கையில், மேற் கூறப்பெற்ற உண்மையை எளிதில் உணர்வர். (முனைவர் மா. இராசமாணிக்கனார், தமிழ் மொழி-இலக்கிய வரலாறு)

(தொடரும்)

Followers

Blog Archive