Friday, March 7, 2025

குறள் கடலில் சில துளிகள் 21. வருமுன் காத்திடு!- இலக்குவனார் திருவள்ளுவன்

 

குறள் கடலில் சில துளிகள் 21. வருமுன் காத்திடு!- இலக்குவனார் திருவள்ளுவன்



(குறள் கடலில் சில துளிகள் 20. குற்றம் என்னும் பகை – தொடர்ச்சி)

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்குற்றங்கடிதல்குறள் எண்: 435)

குற்றம் வரும் முன்னர்க் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்பின் முன் உள்ள வைக்கோல் போல அழியும் என்கிறார் திருவள்ளுவர்.

ஆட்சியியல், வணிகவியல், இயந்திரவியல், மின்னியல், பயிரியல் முதலான பல துறை அறிஞர்களும் வரும் முன்னர்க் காத்திடுமாறு கூறுகின்றனர்.

வைத்தூறு=வைக்கோற்போர்; வைக்கோல் குவியல். வருமுன்னர் என்றால், துன்பம் வருவதன் முன் என மணக்குடவரும் பரிப்பெருமாளும் பரிதியும் கூறுகின்றனர். காலிங்கர் குற்றம் எய்துவதன் முன் என்கிறார். குற்றங் கடிதல் என்னும் அதிகாரத்தில் உள்ளதால்  குற்றம் வரும் முன் என்கிறார் பரிமேலழகர். குற்றத்தால் வரும் துன்பம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

வைக்கோல் எளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடியது. பொதுவாகப் பொதுவெளியிலேயே குவித்து வைக்கப்படுகிறது. சிறு தீ வைக்கோலில் பற்றிக் கொண்டாலும் விரைந்து பரவி வைக்கோல் குவியல் முழுவதும் அழியும். அது மட்டுமல்ல அதன் சுற்றுப்புறத்திலும் தீ பரவி மிகுந்த கேடு விளைவிக்கும். எனவே, வைக்கோல் பக்கம் தீப்பொருள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுபோல்தான் குற்றச் செயல் வராமல் காத்துக் கொள்ள வேண்டும். குற்றச் செயலில் ஈடுபட்டால் பொருளும் அழியும், புகழும் அழியும்.

குற்றச்செயலால் துன்பம் வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம்  என்றால் அதை உணரும் முன்னரே அழிவு வந்து விடும். எனவேதான் வரும் முன்னரே இக்குற்றச் செயலைச் செய்தால் இன்னவகைத் துன்பம் வரும் என்பதை அறிந்து குற்றச் செயலில் இறங்காமல் காத்துக் கொள்ள வேண்டும்.

குறள் கடலில் சில துளிகள் 20. குற்றம் என்னும் பகை- இலக்குவனார்திருவள்ளுவன்

 

குறள் கடலில் சில துளிகள் 20. குற்றம் என்னும் பகை- இலக்குவனார்திருவள்ளுவன்



(குறள் கடலில் சில துளிகள் 19. குற்றம் சிறிதாயினும் பெரிதாய் அஞ்சு! – தொடர்ச்சி)

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றம் தரூஉம் பகை

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்குற்றங்கடிதல்குறள் எண்: 434)

அழிவுதரும் உண்மையான பகை குற்றச் செயலே ஆகும். அதனால் குற்றமில்லா வாழ்க்கையை இலக்காகக் கொண்டு காத்திடுக என்கிறார் திருவள்ளுவர்.

குற்றத்தையே பகை எனக் கருதி நீக்கி வாழ்ந்தால் குற்றவாழ்வு இல்லாமல் போகும் எனத் தண்டனையியலாளர்கள் கூறுகின்றனர்.

அற்றம்=இறுதி, முடிவு. அற்றம் தருஉம் பகை=வாழ்க்கையை முடிவு கட்டும் பகை. ‘குற்றமே காக்க’ என்றால் ‘குற்றத்தையே பாதுகாக்க’ என்று பொருளல்ல.  ‘குற்றமே தன்னிடம் வாராமல் காத்துக்கொள்க’ என்று பொருளாகும். பரிமேலழகர் ‘தீமை காக்க’ என்பது ‘தீமை வாராமற் காக்க’ என்று எப்படிப் பொருள்படுமோ, அப்படிக் ‘குற்றமே காக்க’ என்பது ‘குற்றமே வாராமல் காக்க’ என்ற பொருள்தரும் என விளக்குகிறார்.

காலிங்கர், “குற்றம் நிகழாமல் கருதிப் பாதுகாத்துக் கொள்க” என்கிறார். பரிமேலழகர், “குற்றம் வாராமையே பயனாகக் கொண்டு காக்கவேண்டும்” என்கிறார். “குற்றம் உண்டாகாமல் இருக்கும நிலையைச் செல்வத்தைப் பாதுகாப்பதுபோல் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று இன்றைய ஆசிரியர்கள் விளக்குகின்றனர். நாட்டையும் வீட்டையும் காக்க வேண்டும் என்றால் பொறுப்பில் உள்ளவர்கள். தம்மிடம் குற்றம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும். சிறு பொறியும் பெரு நெருப்பாவதுபோல் சிறு குற்றமும் பெருங்கேடாய் மாறும். குற்றம் என்பது சட்டத்திற்கு மாறான செயல்கள் மட்டுமல்ல. அறத்திற்கு முரணான பண்பற்ற செயல்களுமாம். எனவே, நற்பண்பு கொண்டு நல்லொழுக்கத்துடன் திகழ்ந்தால் அழிவு தரும் பகை உருவாகாது.

நாம் பகைவர்களாகக் கருதுபவர்களை விடக் குற்றச் செயலே அழிவு தரும் பகை; நம்மை மட்டும் அல்லாமல் நம்மைச் சார்ந்துள்ளவர்களையும் அழிக்கும் பெரும்பகை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவேதான், குற்றச் செயலை விலக்கி வைப்பதற்காகக் குற்றங்கடிதல் எனத் தனி அதிகாரத்தையே திருவள்ளுவர்  அளித்துள்ளார்.

குறள் கடலில் சில துளிகள் 19. குற்றம் சிறிதாயினும் பெரிதாய் அஞ்சு! – இலக்குவனார்திருவள்ளுவன்

 

குறள் கடலில் சில துளிகள் 19. குற்றம் சிறிதாயினும் பெரிதாய் அஞ்சு! – இலக்குவனார்திருவள்ளுவன்



(குறள் கடலில் சில துளிகள் 18. இம்மூன்றும் குற்றங்களாம் – தொடர்ச்சி)

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார்

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்குற்றங்கடிதல்குறள் எண்: 433)

பழிக்கு அஞ்சுவோர், தம்மிடம் தினையளவு சிறு குற்றம் நேர்ந்தாலும் பனையளவாகக் கருதி வருந்துவர் என்கிறார் திருவள்ளுவர்.

சிறிய குற்றங்களையும் பெரிய குற்றங்களாகக் கருதி அஞ்சி வாழ்ந்தால் குற்றங்கள் குறையும் எனத் தண்டைனயியலறிஞர்கள் கூறுகின்றனர்.

தினை, பனை என்பன அக்கால அளவுப்பெயர்கள். தினை அரிசி மிகச் சிறியது. எனவே, சிறிய அளவைக் குறிக்கத் தினையளவு எனப்படுகிறது. பனை மரம் பேரளவினது. எனவே, பெரிய அளவைக் குறிக்கப் பனை அளவு எனப்படுகிறது. துணை என்னும் சொல் அளவைக் குறிக்கிறது. நாணுவார் = வெட்கப்படுவார்.

பண்பாளர்களால்தான் உலகம் நிலைத்து நிற்கிறது என்றுகூறும் கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி என்னும் பாண்டிய மன்னன், பண்பாளர்கள்,

பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” (புறநானூறு 182) என்கிறார். அஃதாவது, பழிவரும் என்றால் உலகம் முழுவதையும் ஒருங்கே தந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்கிறார்.

அத்தகையோர் ஒருவேளை தினையளவு குற்றம் ஏதும் தம் செயலில் நேர்ந்தாலும் பனை அளவாக எண்ணி வெட்கப்பட்டு வருந்துவர்.  தினைத்துணை உதவி செய்தாலும் பனைத்துணையாகக்  கொள்ள வேண்டும் என்ற திருவள்ளுவர் (குறள் 104) அதே அளவுமுறைகளையே குற்ற அளவிற்கும் குறிக்கிறார். இதன்மூலம் தினையளவு குற்றமும் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

ஒவ்வொருவருமே தம்மிடம் குற்றம் நேராமல், தவறியும் குற்றச் செயல் புரியாமல் காத்துக் கொள்ள வேண்டும். என்றாலும் ஆட்சியில் உள்ளவர்கள், நிறுவனங்கள், தொழிலகங்கள், கல்வியகங்கள் முதலானவற்றை நடத்துவோர் பெரிதும் கண்ணுங்கருத்துமாக இருந்து சிறு குற்றமும் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இவர்களது சிறு குற்றமும் இவர்களைச் சார்ந்துள்ள மக்களுக்குப் பேரளவு தீமை விளைவிக்கும். செய்த குற்றம் சரி செய்ய முடியாத பெருந்துன்பத்தையும் விளைவிக்கும். ஆனால் இன்றைய அரசியலாளர்கள்  இது குறித்துக் கவலைப்படுவதில்லை. குற்றங்களையும் தண்டனைகளையும் வெற்றி மாலையாகக் காட்டிக் கொள்கின்றனர். இந்த அவலம் ஒழியும்போதுதான் குற்றமில்லா மன்பதையைக் காண முடியும்.

முடியுமா, முடியாதா? உண்மையைச் சொல்!-இலக்குவனார் திருவள்ளுவன், தாய் மின்னிதழ்

 

முடியுமா, முடியாதா? உண்மையைச் சொல்!-இலக்குவனார் திருவள்ளுவன், தாய் மின்னிதழ்



(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 1, தொடர்ச்சி)

– புறநானூறு 196
– திணை : பாடாண் திணை
– துறை: பரிசில் கடா நிலை
– ஆவூர் மூலங்கிழார்

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், பரிசில் தராமல் காலந் தாழ்த்திய பொழுது ஆவூர் மூலங்கிழார் பாடியது. புறநானூற்றில் 196 ஆவதாக அமைந்த 15 வரிப்பாடலின் தொடக்க வரிகள் இவை.

இலவந்திகை என்பது பூஞ்சோலை நடுவில் அமைந்த நீர்நிலை. பெரும்பாலும் இதனை ஒட்டி ஒப்பனை அறை, துயிற் கூடம் முதலியவை இருக்கும்.

இலவந்திகை அடுத்துள்ள துயிலறையில் உறக்கத்தில் இறந்த பாண்டிய மன்னனை அதனைக் குறிப்பிடும் வகையில் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் எனக் குறிப்பிடுகின்றனர். இனி நாம் பாடலடிகளின் பொருளைப் பார்ப்போம்.

ஒன்றைத் தம்மால் கொடுக்க முடியும் என்றால் கொடுக்க முடியும் என்று சொல்லி அவ்வாறே கொடுத்தல் வேண்டும். அவ்வாறு ஒன்றைக் கொடுக்க முடியவில்லை என்றால், அதனைக் கொடுக்க இயலவில்லை என்னும் உண்மையைச் சொல்லி மறுத்தல் வேண்டும்.

அவ்வாறே தம்மாற் கொடுக்க முடியாத பொருளைக் கொடுப்பதாகத் தவறான நம்பிக்கையும் தரக்கூடாது.

அதே நேரம் தம்மால் கொடுக்க வாய்ப்புள்ள பொருளை இயலாது என்று பொய் சொல்லி மறுக்கவும் கூடாது. இதனால் இரப்போர் வாட்டமுறுவர்.

இவ்வாறே வேறு சில புலவர்களும் கூறியுள்ளனர்.

என்பது நாலடியார் (பாடல்-111)

அஃதாவது நம்மால் கொடுக்க முடியாததை இயலவில்லை என்று ஒத்துக்கொள்வது குற்றமல்ல; உலகத்து இயற்கை என்கிறார் புலவர். ஆகவே முடியாததை முடியவில்லை என்று சொல்வதுதான் சரி.

பிறகு தருகிறேன், நாளை தருகிறேன் என்று அலைக்கழிப்பதைவிட, இல்லை என்பது மேல் என்கிறார் ஒளவையாரும்.

எனப் பாடியுள்ளார் இடைக்கால ஒளவையார்.

இதற்குப் பின்வருமாறான பாடல் வரிகளும் உள்ளன.

எனினும் இப்பாடல் இங்கே தேவையில்லை.

கொடுப்பது என்றால் பொருளாகவோ வேறு பரிசாகவோ மட்டும் இருக்க வேண்டும் என்று இல்லை.

நண்பர்கள், உறவினர்கள், பதவியினர், ஆட்சியாளர் என எல்லா நிலைகளிலும் உள்ளவர்கள் தம்மால் இயலக் கூடிய உதவிகளை மறுக்கவோ இயலாத உதவிகளைச் செய்வதாகக் கூறவோ கூடாது.

பலர் தங்களால் முடியாது என்று தெரிந்தே முடித்துவிடுவதாகக் கூறி அதனை நம்புவோரிடம் கையூட்டு பெற்று ஊழலுக்கு வழி வகுக்கின்றனர்.

Followers

Blog Archive