Showing posts with label காவல்துறை. Show all posts
Showing posts with label காவல்துறை. Show all posts

Thursday, August 18, 2022

பாராட்டு பெறும் காவல்துறை தமிழுக்குக் காவலாக இல்லையே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல





தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்

8. காவல்துறை தமிழுக்குக் காவலாக இல்லையே!

பழந்தமிழ்நாட்டில் காவலுக்கு முதன்மை அளித்தனர். எனவே, நாடு காவலில் சிறந்து இருந்தது. நாட்டு மன்னனையே காவலன் என்று மக்களும் புலவர்களும் கூறினர். மன்னர்கள் தாங்களும் மாறுவேடமிட்டும் இரவுக் காவல் புரிந்தும் காவலில் பங்கேற்றனர்.

இல்லற வாழ்க்கையிலும் காவலுக்கு முதன்மை அளித்தனர். தலைவன் தலைவியைவிட்டுப் பிரிவதை ஆறுவகையாகக் கூறியுள்ளனர். அவற்றுள் ஒன்று காவலின் பொருட்டுப் பிரிவதாகும். எனவே, இதனைக் காவற் பிரிவு என்கின்றனர்.

பதிற்றுப்பத்து முதலான சங்க இலக்கியங்களிலிருந்து காலந்தோறும் இலக்கியங்கள் தமிழ்நாட்டுக் காவல் சிறப்பைக் கூறுகின்றன. தொல்காப்பியத்திற்கு விளக்கவுரையாக அமைந்த அகப்பொருள் விளக்கத்தில் நாற்கவிராச நம்பி,

அறப்புறம் காவல் நாடு காவல்எனச்

சிறப்புஉறு காவல் திறம்இரு வகைத்தே

எனக் காவலை இருவகை உள்ளமையைக் குறிப்பிடுகிறார். முதலாவது, அறமன்றங்கள் முதலான இடங்களைப் பாதுகாப்பதற்காகத் தலைவன் மேற்கொள்ளும் பிரிவு. இரண்டாவது பகைவர்களிடமிருந்து தன் நாட்டைக் காப்பதற்காக மேற்கொள்ளும் பிரிவு என்கின்றனர். இதனை நாம் உள்நாட்டுக்காவல் என்றும் எல்லைக்காவல் என்றும் கூறலாம்.

பழந்தமிழ்நாட்டு நிலை போல் இப்போதும் தமிழ்நாட்டுக் காவல்துறை சிறப்பான நிலையில் இருப்பதாகக் கூறுகின்றனர். உலக அளவில் தமிழ்நாட்டுக் காவல்துறை சுகாத்துலாந்து காவல்துறைக்கு இணையானது, அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். ஆனால், 2022 ஆம் ஆண்டின் உலகின் முதல் 10 சிறந்த காவல்துறைகளில் தமிழ்நாடு காவல்துறை இல்லை. இந்திய அளவிலும் தமிழ்நாட்டுக் காவல்துறை 2019 இல் முதலிடத்தில் இருந்தது, 2020இல் ஐந்தாம் இடத்திற்குச் சறுக்கியுள்ளது.

தேசியக் குற்ற ஆவணக் கழகத்தின்(NCRB) புள்ளிவிவரப்படி 2020 இல் 430 விழுக்காடு உயர்ந்துள்ளது என்கின்றனர். தமிழ்நாட்டில் குற்ற எண்ணிக்கை மிகுதியாக இருப்பதற்கான காரணம், தலைக்கவசம் அணியாமை வழக்குகள், மகுடை(கொரானா)தொற்று விதி மீறல் வழக்குகள் என விதி மீறல் வழக்குகள் தமிழ்நாட்டில் மிகுதியாக உள்ளதே காரணம் எனத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டு முதல்வர் தமிழ்நாட்டில்  குற்ற எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் இனியும் குறையும் என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

புள்ளிவிவரங்களை ஒதுக்கி வைத்துப் பார்த்தால் 2020இல் இந்தியாவில் காவல்துறை, பாதுகாப்பு படைகளின் பிரிவுகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய அறிந்தேற்பான ‘குடியரசுத் தலைவர் கொடி’ 2020 ஆம் ஆண்டிற்கானது தமிழ்நாடு காவல்துறைக்கு அண்மையில் வழங்கப்பட்டது. இதுவரை 10 ஆண்டுகள் வழங்கினாலும் தென்னிந்தியாவில் முதன்முறையாகத் தமிழ்நாடுதான் இக்கொடி ஏற்பைப் பெற்றுள்ளது. அதிலும் முன்னரே இந்திய அளவில் ஐந்தாவது வரிசையில் 2009 இல் தமிழ்நாடு பெற்றுள்ளது. (தமிழகக் காவல்துறையின் 150ஆம் ஆண்டை முன்னிட்டு இது வழங்கப்பட்டது.) அஃதாவது 13 ஆண்டுகளுக்குப் பிறகு இஃது இரண்டாம் முறையாகும்.

இத்தகைய சிறப்பைப் பெற்ற தமிழ்நாட்டரசின் காவல்துறை தமிழுக்குக் காவலாக இல்லை என்பதே பேரவலமாகும்.

காவல்துறையின் முத்திரையில் தமிழ் இல்லை; கொடியில் தமிழ் இல்லை; குடியரசுத்தலைவர் கொடியில் தமிழக அரசின் காவல்துறையின் கொடியும் இடம் பெறுவதால் ஆங்கிலத்தில் உள்ள அக்கொடியே இதிலும் இடம் பெற்றுள்ளது; ஊர்திகளில், காவல்துறை, உலா ஊர்தி, காவல் ஊர்தி  எனக் குறிப்பது எவற்றிலும் தமிழ் இல்லை. சாலை நடுவில் வைக்கும் தடுப்புப் பலகைகள், அறிவிப்புப் பலகைகள், சாலை வழிகாட்டிகள், காவல்துறை அறிவிப்புகள் முதலியவற்றில் தமிழை இல்லாமல் ஆக்குவது ஏன்?

மேலே உள்ள படங்கள் மூலம் தமிழ்நாட்டுக் காவல்துறை ஆங்கிலத்திற்கு அடிமையாக உள்ளதையும் பிற மாநிலங்களில் தத்தம் மொழியைப் பயன்படுத்துவதையும் அறியலாம். அவர்கள் வெட்கம், மானம், சூடு, சொரணை உள்ளவர்கள், உப்புபோட்டு உண்பவர்கள்.

காவலர்கள் தோளில் அணியும் பதவிக் குறியீட்டில் (இரு நிலை நீங்கலாகத்) தமிழ் இல்லை; காவலர்களின் வருகைப் பதிவின் பொழுதும் அணிவகுப்பின் பொழுதும் ஆங்கிலம் மூலமே ஏவுகின்றனர். அரசு விருதுகளில் தமிழ் இல்லை.

பதவி மாறுதல் ஆணைகளில் தமிழ் இல்லை. தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் ஆங்கிலேய அதிகாரிகள்(?) உள்ளனர் போலும்! அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு(?)த்தான் ஆணை பிறப்பிக்கின்றனர் போலும்! எனவே, அவர்களுக்காக – ஆங்கிலேயர்களால்(?) ஆங்கிலேயருக்கு(?) – ஆங்கிலத்தில்  ஆணை பிறப்பிக்கின்றார்கள் என்பது தெரியாமல், நாம்தான் தமிழில் ஆணைகள் இல்லை எனச் சொல்லி வருகிறோமோ? முன் ஏர் செல்லும் வழிதானே பின்னேரும் செல்லும். எனவே, துறைத் தலைமையினரும் ஆங்கிலேயர்களுக்காகப்(!) பணியாற்றுவதால், மாறுதல் ஆணை என்று இல்லை,  பொதுவான ஆணைகள் பலவற்றிலும் தமிழைத் தேட வேண்டி உள்ளது.

தமிழ்நாட்டுக் காவல்துறையில், கவிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், தமிழார்வலர்கள் உள்ளனர். தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தைச், சொல்லும் படிச் செயலாற்றுவதற்கு அதிகாரிகளும் ஊழியர்களும் உள்ளனர். இருப்பினும் தமிழகக் காவல்துறையில் தமிழுக்கு இடமில்லாதது ஏன்? என்றுதான் புரியவில்லை.

இப்பொழுது முன்நிகழ்வு ஒன்று நினைவிற்கு வருகிறது. மதுரையில் சித்திரைப் பொருட்காட்சி அரங்கங்கள் ஆங்கில மயமாகக் காட்சி யளித்தன. 1991 இல் நான் மதுரை தமிழ் வள்ச்சித் துறை உதவி இயக்குநராக இருந்த பொழுது இவற்றை மாற்றுவதற்காகத் தமிழில் எழுதும் துறைகளுக்கு நால்வகையில் மும்மூன்று பரிசகளாக 12 பரிசுகள் அறிவித்தேன். சிறப்பாக எழுத வழிகாட்டவும் செய்ததால் அரங்கங்கள் முழுமையும் தமிழாயின. அவ்வாறுதான் முழுமையும் ஆங்கிலமாக இருந்த காவல் துறை அறிவிப்பிற்குப் பின்னர், முழுமையும் தமிழாக மாறியது. காவல்துறைக்கு முதல் பரிசும் கிடைத்தது. நினைத்தால் அருவினை ஆற்றும் காவல்துறை, எண்ணினால் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில்  முதலிடம் பெறலாம் அல்லவா?

எங்கெங்குக் காணினும் ஆங்கிலமடா – தமிழா

ஆங்கிலம் ஒன்றே  எண்ணமடா – எங்கும்

தவறியும் தமிழைக் காணோமடா – அந்த

ஆங்கிலம்தான் அன்னை மொழியோடா!

என்று உள்ள நிலையை மாற்றி மாண்புமிகு முதல்வர் மு.க.தாலின் தனிக் கருத்து செலுத்தி தமிழ்நாடு எங்கும் தமிழ்மணம் கமழச் செய்வார் என எதிர்பார்க்கலாமா?

– இலக்குவனார் திருவள்ளுவன்

Monday, June 30, 2014

ஊடகர் மீது கை வைக்காதீர்! ஊடகங்கள் மீது கண் வையுங்கள்!

ஊடகர் மீது கை வைக்காதீர்! ஊடகங்கள் மீது கண் வையுங்கள்!


தினமலர் நாளிதழ்ச் செய்தியாளர்

அருள்செல்வனைத் தாக்கியது

அருளற்ற செயல்!

dinamalar_paambupuri_Eswararkoil
  கிளர்ச்சிகள் என்பன மக்கள் குறைகளைத் தெரிவிக்கும் வாயில்கள் எனவும் அரசு அவற்றை அடக்கித் துன்புறுத்தாமல் மென்மையாகக் கையாண்டு குறைகளைப் போக்க வேண்டும் என்றும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் குறிப்பிடுவார். ஆனால், கிளர்ச்சிகள் என்றாலே அரசை அழிக்கும் ஆயுதமாகவும் கிளர்ச்சியாளர்கள் என்றாலே நாட்டின் பகைவர்கள் என்றும் கருதும் போக்கு எல்லா நாட்டிலும் உள்ளது வருந்தத்தக்கதே! இதனால், மக்களின் உற்ற தோழனாக இருக்க வேண்டிய காவல்துறை ஆளும்கட்சியின் அடிவருடிபோல் நடந்துகொண்டு மக்களுக்குத் தீங்கிழைத்து, அரசிற்கும் ஆளுங்கட்சிக்கும் களங்கமே ஏற்படுத்துகிறது.
  வன்முறையைக் கையாளும் போக்கிற்கு, அடைக்கலம் நாடிவந்த ஈழத்தமிழர்களிடமும் தமிழ்ஈழம் தொடர்பான உணர்வாளர்களிடமும் தமிழ்வழிக்கல்வி முதலான தமிழ்த் தேசியப் போராட்டங்களில் ஈடுபடுவோர்களிடமும் விலைவாசி உயர்வு போன்றவற்றை எதிர்த்துப் போராடும் மக்கள் அமைப்புகளிடமும் தாங்கள் உயிர்த்திருப்பதற்கு அடையாளமாகப் போராடும் எதிர்க்கட்சிக்காரர்களிடமும் நடந்துகொள்ளும் முறைகளே நல்ல சான்றுகளாகும்.
  மக்களின் உணர்வுகளை அரசிடம் தெரிவிக்கும் பாலமாகக் காவல்துறை நடந்துகொள்ள வேண்டுமே தவிர, கைத்தடிகளை மக்கள் உடலில் நடமாட விடுவதும் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கும் இடங்களாக மக்கள் உடல்களை மாற்றி உயிரைப் பறிப்பதுமாக இருக்கக் கூடாது.
  அண்மையில்   திருவாரூர் மாவட்டத்தில் அரங்கேறிய காவல்துறையினரின் ஒடுக்குமுறைத் தாக்குதலை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
dinamalar_arulselvan03
திருவாரூர் மாவட்டம், பேரளம்பாக்கத்தில் உள்ள திருபாம்புரத்தில், பாம்புபுர ஈசுவரர் கோவில் உள்ளது. இதைத்தான் தமிழ்க்கொலைஞர்கள் ‘சேடபுரீசுவரர்’(சேஷபுரீஸ்வரர்) என மாற்றியுள்ளனர். இங்குள்ள இறைவியின் பெயர் வண்டார்குழலி. இப்பெயரைப் ‘பிரமராம்பிகை’ என மாற்றியும் நிலைக்கவில்லை. பாடுபுகழ் பெற்ற இக்கோயிலில் செய்தியாளர் ஒருவர் பாடாய்ப்படுத்தப்பட்டுள்ளார்.
dinamalar_arulselvan02இக்கோயிலில் ஆனி 9, 2045 / சூன் 23, 2014 அன்று நடைபெற்ற (இராகு, கேது பெயர்ச்சி)விழா ஒன்றில், நடைபெற்ற தாக்குதல்பற்றிக் கண்டனத்துடன் குறிப்பிட விரும்புகிறோம். இறைப்படிமத்தின் ஒப்பனை அழகைப் படம் பிடித்த ‘தினமலர்’ நாளிதழ்ச் செய்தியாளர் அருள்செல்வனை அங்குள்ள காவல்துறையினர் கடுமையாகத் தாக்கி உள்ளனர். ஒளிப்படங்களும் காட்சிப்படங்களும் எடுத்த ஊடகத்தினர் பிறரை விட்டு விட்டு, செய்தியாளர் அருள்செல்வனிடம் மட்டும் காவல்துறையினர் அருளின்றி நடந்துகொண்டது ஏன் எனத் தெரியவில்லை. அங்கிருந்து அப்புறப்படுத்தல் அல்லது படப்பொறியைப் பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கடுமையாகத் தாக்கி உள்ளமை காட்சிப்படத்தில் தெளிவாகத் தெரிகின்றது. மக்கள் முன்னிலையில் மக்களுக்காகத் தகவல் தொண்டாற்றும் செய்தியாளரைத் தாக்கும் துணிவு காவல்துறையினருக்கு எவ்வாறு வந்தது? அந்தdinamalar_arulselvan04 இடத்திற்குப் பிற இடங்களில் இருந்து வந்த காவல்துறையினரும் தாக்குதலைத் தடுக்காமல் தங்கள் பங்கிற்கு மேலும் கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதனால், விழாவில் பங்குகொண்ட அமைச்சர் காமராசிற்கோ, அரசிற்கோ, முதல்வருக்கோ, ஆளுங்கட்சிக்கோ என்ன நற்பெயர் வாங்கித் தந்துவிட்டதாக அவர்கள் எண்ணுகின்றார்கள் எனப் புரியவில்லை. யாருக்கேனும் அடிபட்டால் தங்கள் ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய காவல்துறையினர், வதைத்துத் துன்புறுத்தப்பட்டு நினைவிழந்த செய்தியாளர் அருள்செல்வனை அழைக்க வந்த அவசர மருத்துவ ஊர்தியையும் வரவிடாமல் செய்துள்ளனர்; அதனால் வாடகை ஊர்தி மூலமே அங்கு வந்திருந்த செய்தியாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
செய்தியாளர் அருள்செல்வனுக்கு வேண்டிய மருத்துவ உதவியையும் இழப்பீட்டையும் அரசு அளிக்க வேண்டும்.
 dinamalar_arulselvan01
இதுபோன்ற தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளியிட முதல்வர் முனைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊடகம் அரசின் நான்காம் தூணாக விளங்குகின்றது. மக்கள் குறைகளை அரசிற்குத் தெரிவித்தும் அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்கியும் சிறந்த பாலமாக விளங்குவது ஊடகத்துறையே! ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது, முறைகேடுகளைத் தடுக்க முனைவது, கலை இலக்கியங்களை வளர்ப்பது, கல்வி வளர்ச்சிக்கு உதவுவது, திறமையாளர்களை ஊக்குவிப்பது, அருவினை புரிந்தோரைப் பாராட்டுவது என எண்ணிலடங்காப்பணிகளை ஆற்றுவது ஊடகமே!
அதே நேரம், ‘ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருச்சாளியாக்கி, பெருச்சாளியைப் பெருமாளாக்குவதும்’ ஊடகமே! அரசியலாளர்கள், கலைஞர்கள் முதலானவர்களின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் ஊடகத்தின் செயல்பாடுகளே அடிப்படையாக அமைந்து விடுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
பண்பாட்டுடன் செய்திகளை வெளியிடவும் உண்மைச்செய்திகளை உள்ளபடியே தெரிவிக்கவும் தமிழ்மொழிக் கொலை புரிவதைத் தடுத்து நிறுத்தவும் மொழி, இனப்பற்றாளர்களை வன்முறையாளர்களாகத் திரிப்பதைக் கைவிடவும் வாய்மையையும் தூய்மையையும் கண்களாகக் கொண்டு செயல்படவும் ஊடகங்களை அரசு ஆற்றுப்படுத்த வேண்டும்.
  ஊடகர் மீது கை வைப்பதால் அரசிற்குப் பொல்லாப் பெயரே விளையும். ஊடகங்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் அரசிற்கு அழிவுதான் வரும். ஆனால், ஊடகங்கள் மீது மேற்குறித்த செயல்பாடுகளுக்காக அரசு கண்டிப்பாக நடந்துகொண்டால் மக்களுக்கு நன்மையே விளையும். இதனால் அரசிற்கு நிலைத்த நற்பெயரே பெருகும்.
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். (திருக்குறள் 562)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் மெய்யுரையைக் காவல்துறையினர் தம் நெறியாகக் கொண்டொழுகி மக்கள் நலம்பேண வேண்டுகிறோம்.
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். (திருக்குறள் 546)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் நெறியுரையை அரசு பின்பற்றி, அரசின் ஏவலனாக இல்லாமல் மக்கள் காவலனாக ஒவ்வொரு காவல்துறையினரும் நடந்து கொள்ள ஆவன செயய வேண்டும்.
அல்லல்படுத்தும் அழிவுமுறை ஒழிக!
இன்னல் நீக்கும் இனியமுறை ஓங்குக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை                                                                                       http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png

ஆனி 15, 2045 / சூன் 29, 2014
 

Followers

Blog Archive