Showing posts with label skyscrapers. Show all posts
Showing posts with label skyscrapers. Show all posts

Thursday, March 17, 2011

skyscrapers 3/3 - andre' sonnaargal 40 : அன்றே சொன்னார்கள்40 வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3

>>அன்றே சொன்னார்கள்40


வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3

                                                                                                                

natpu 2000 ஆண்டுகளுக்கு முன்பே அடுக்கடுக்கான பல மாடிவீடுகள் வரிசையாக அமைந்திருந்தமை குறித்து மேலும் சில விவரம் பார்ப்போம்.
மதுரை மாநகர் மாடிக்கட்டடங்களால் புகழ் பெற்றது என்பதைப் புலவர் மாங்குடி மருதனார் பல இடங்களில் விளக்குகிறார்.

மாடிக்கட்டடங்களால் சிறப்புமிகு புகழை உடைய நான்மாடக்கூடலாகிய மதுரை என,
      மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் (மதுரைக்காஞ்சி : 429)
என்றும், முகில் உலாவும் மலைபோல உயர்ந்த மாடிக்கட்டடங்களோடு உடைய மதுரை என
     மழையாடு மலையி னிவந்த மாடமொடு (மதுரைக்காஞ்சி : 355)
என்றும் மலையைப் போன்ற அகலமும் உயரமும் உடைய மாடிக்கட்டடங்கள்
என,
     மலைபுரை மாடத்து(மதுரைக்காஞ்சி : 406)
என்றும் மாடிக்கட்டடங்கள் வரிசையாக அமைந்திருந்தன என்பதை,
     நிரைநிலை மாடத்து அரமியந் தோறும் (மதுரைக்காஞ்சி : 451)
என்றும் கூறுகிறார். இந்த அடி மூலம் நாம் மொட்டை மாடி எனக் கூறும் மேல்மாடியில், நிலா முற்றம் இருந்தது என்பதையும் தெரிவிக்கின்றார்.

மலையைப் போன்றும் முகில் அமைந்துள்ளது போன்றும் உயரமான மாடிக்கட்டடங்கள் இருந்தன என்பதைப் புலவர் (இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப்) பெருங்கௌசிகனார்
     மலையென மழையென மாட மோங்கி (மலைபடுகடாம் : 484)
நகரங்கள் அமைந்துள்ளன எனத் தெரிவிக்கிறார்.

புலவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மாடிக்கட்டடங்களால் மாண்புற்ற நகர் என்னும் சிறப்பை,
     மாடமாண்நகர் (அகநானூறு : 124.6)
என்னும் தொடரில் தெரிவிக்கிறார். (அறுவை வாணிகன் - துணி வணிகர்)

புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், வானைத் தொடும்அளவிற்கு நீண்டு உயர்ந்த வீடுகள் இருந்தமையை,
     விண்பொரு நெடுநகர் (அகநானூறு : 167.4)
என்னும் தொடரில் குறிப்பிடுகிறார். (நெடுநகர்- உயரமான மாளிகைகள்)

உயர்ந்த மாளிகைகள் காவலுடன் இருந்தன என்றும் புவலர் மதுரை மருதன்இளம்நாகனார்,
     கடிமனை மாடம் (அகநானூறு : 255.16)
என்னும் தொடரில் குறிப்பிடுகிறார்.

மாடிக்கட்டடங்களை உடைய முதிய ஊராகிய மதுரை எனப் புலவர் மதுரைத் தத்தங்கண்ணனார்,
மாட மூதூர் (அகநானூறு :   335.11)
என்னும் தொடரில் விளக்குகிறார்.
புலவர் நக்கீரர், மாடிக்கட்டடங்கள் மிகுந்த தெருக்களை உடைய கூடல்மாநகர் என மதுரையை,
     மாடமலி மறுகின் கூடல் (அகநானூறு :   346.20)
என்னும் தொடரில் விளக்குகிறார்.

மாடங்கள் சுண்ணாம்புச் சாந்து பூசப்பட்டு வெண்மைகயாக இருந்தன; உச்சியில் நிலா முற்றங்கள் இருந்தன என்பதைப் புலவர் மருதன் இளநாகனார்,
     ஆய் சுதை மாடத்து, அணி நிலா முற்றத்துள்
  (கலித்தொகை : 96.19)
என்னும் அடியில் விளக்குகிறார்.

சங்கப்புலவர்கள் கூடி உலக மக்கள் நாவில் நடமாடும் தமிழை ஆயும் மதுரையைக் குறிப்பிடும் பொழுது நீண்ட மாடங்களை உடைய மாநகர் எனப் புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ,
      நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார்
(கலித்தொகை : 35.17)
என்கிறார். இவ்வரி மூலம் உலகோர் பேசும் மொழியாகத் தமிழ் இருந்துள்ளதையும் தொன்றுதொட்டே சங்கம் வைத்துத் தமிழ் ஆய்ந்த புகழுக்கு உரியது மதுரை என்பதும் தெளிவாகின்றது.

நீண்டு உயர்ந்த தூண்களை உடைய மாடங்கள் உடைய மாளிகைகளைப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்,
     நெடுங்கால் மாடத்து (பட்டினப்பாலை : 111)
என்னும் தொடரில் விளக்குகிறார். மழைமுகில்கள் மோதும்அளவிற்கு வளமனைகள் உயர்ந்து இருந்தன என்று அவரே,
     மழைதோயும் உயர்மாடத்து (பட்டினப்பாலை : 145)
என்னும் தொடரில் விளக்குகிறார்.

வளைந்து உருண்ட தூண்களையும்  உயராமான வாயில்களையும் உடைய வளமனைகள் எனக் குறிப்பதன் மூலம் உயரமான வளமனைகள் இருந்தமையை,
      கொடுங்கால் மாடத்து நெடுங்கடை (பட்டினப்பாலை :  261)
என்னும் தொடரில் விளக்குகிறார்.

பெரிய நிலைகளை உடைய மாடங்கள் நிறைந்த உறந்தை நகரை அவரே,
     பிறங்குநிலை மாடத் துறந்தை (பட்டினப்பாலை : 285)
என்னும் தொடரில் விளக்குகிறார்.

மலையின் மேலிருந்து வீழ்கின்ற அருவியைப்போல, வளமனைகளின் உச்சியில்  காற்றால் வீசும் கொடிகள் அசைகின்ற தெரு, எனக் குறிப்பதன் மூலம், மலைபோல் உயரமாக, முகில் செல்லும் அளவிற்கு உயர்ந்த மாடங்கள்
உள்ள வளமனைகள் இருந்தன எனப் புலவர் பரணர்,
     வரைமிசை இழிதரும் அருவியின் மாடத்து
     வளிமுனை அவிர்வரும் கொடிநுடங்கு தெருவில்
(பதிற்றுப்பத்து : 47.3)
என்னும் தொடரில்  விளக்குகிறார்.

உயர்ந்த மொழிக்கு உரிய நம் முன்னோர் உயர்ந்த கட்டடங்களைக் கட்டிக்காத்துள்ளனர். நாமோ அவற்றையும் இழந்து, உயர்ந்த இனத்தையும் கட்டிக் காக்கத் தவறி விட்டோமே!

- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments


Tuesday, March 15, 2011

skyscrapers 2/3 - andre' sonnaargal: அன்றே சொன்னார்கள்39 வானுயர் கட்டடங்கள் 2/3

அன்றே சொன்னார்கள்39

natpu வானைத் தொடும் அளவிற்கு உள்ளதாகக் கருதும் வகையில் உயர்ந்த மாடிக் கட்டடங்கள் இருந்தன என்பதற்காக வான் தோய் மாடம் என்றும் விண்ணை நெருங்கும் அளவிற்கான உயரம் எனக் கருதும் அளவிற்கு மாடிகள் அமைந்த கட்டடங்கள் இருந்தன என்பதற்கு அடையாளமாக விண்தோய் மாடம் என்றும் சங்க இலக்கியங்களில் குறிக்கப் பெற்றுள்ளன. நகரம் என்பதே பல மாடிகள் உடைய வீடுகள் நிறைந்தது என்பதே வழக்கம் என்னும் அளவிற்கு நகரங்கள் இருந்தன. முந்தைய கட்டுரையின் தொடர்ச்சியாகப் பழந்தமிழர் கட்டடச் சிறப்பை அறிய, மேலும்  சில சான்றுகளைக் காண்போம்.

தடாரிஇசை முழக்கம்,  மலைகள் அடுத்தடுத்து
உள்ளன போல் நெருக்கமாக அமைந்த மாடி வீடுகளில் எதிரொலித்ததாக
      மலைக்கணத்து அன்ன மாடம் சிலம்ப (புறநானூறு : 390.7)
என்னும் அடி மூலம் புலவர் ஔவையார் கூறுகிறார்; (சிலம்ப - எதிரொலிக்க). எனவே, மாடி வீடுகள் எனில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இராமல் தொடர்ச்சியாக அமைந்திருந்தன என்பதை உணரலாம். 
     நிரை மாடம் ஊர்குவோர் (பரிபாடல் 10.27)
என்று புலவர் கரும்பிள்ளைப் பூதனார் மதுரையைக் குறிக்கும் அடியும் மாடிக்கட்டடங்கள்  வரிசையாக அடுத்து அடுத்து அமைந்துள்ளன என்பதை உணர்த்துகின்றன.

புலவர் (மதுரைக் கணக்காயனார் மகனார்) நக்கீரனார்  மதுரையில் மாடிக்கட்டடங்கள் நிறைந்த தெருக்கள் இருந்தமையை
      மாடமலி மறுகின் கூடல் (திருமுருகாற்றுப்படை : 70)
என்னும் அடியில் விளக்குகின்றார். (மறுகு - தெரு; கூடல்- மதுரையின் மறு பெயர்; கணக்காயனார்-ஆசிரியர்)

பன்மாடிக் கட்டடங்கள் தொன்று தொட்டே இருந்துள்ளன என்பதைப் புலவர் (மதுரைக் கணக்காயனார் மகனார்) நக்கீரனார், மதுரை மாநகரைக் குறிப்பிடும்,
      மாடம் ஓங்கிய மல்லன் மூதூர் (நெடுநல்வாடை : 29)
என்னும் அடி மூலம் நமக்கு உணர்த்துகின்றார்.

மாடி வீடுகள் நிறைந்த மதுரை மாநகர் என்பதைப் புலவர் கோவூர்க்கிழார்
       மாட மதுரை (புறநானூறு : 32.5)
என்னும் அடியில் தெரிவிக்கின்றார்.

மாடங்கள் மிகவும் வெண்மையாக அமைந்திருக்கும் என்பதனைப் புலவர் ஊன்பொதி பசுங்குடையார்
      புதுப்பிறை அன்ன சுதைசெய் மாடத்து (புறநானூறு : 378.6)
என்னும் அடியில் விளக்குகிறார். (சுதை - சுண்ணாம்பு)

விளங்கில் என்னும் ஊரில், மாடிக்கட்டடங்களின் சுவர்களில் பதிக்கப்பெற்ற மாணிக்கங்கள் ஒளி வீசுவதைப் புலவர் பொருந்தில் இளங்கீரனார்
     கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து (புறநானூறு : 53.2)
என்னும் அடியில் விளக்குகிறார்.
தனக்குரிய இடம் எல்லாம் பொன்னாலும் மணியாலும் சிறப்புப் பெற்ற உயர்ந்த ஏழடுக்கு மாளிகைகள் இருந்தன என்பதைப் புலவர் (காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகனார்) நப்பூதனார்,
        இடஞ்சிறந்து உயரிய எழுநிலை மாடத்து (முல்லைப்பாட்டு : 86) என்னும் அடியில் விளக்குகிறார்.

இத்தகைய உயர்ந்த கட்டடங்களில் எரியும் விளக்குகளினால் கப்பல்களை நகரை நோக்கிச் செலுத்துவர் எனக் கலங்கரை விளக்கம்போல் உயர்வாக உள்ள கட்டடச் சிறப்பைப் புலவர் மருதன் இளநாகனார்,
      மாட ஒள்எரி மருங்கு அறிந்து ஒய்ய (அகநானூறு : 255.6)
என்னும் அடியில் தெரிவிக்கின்றார்.  (ஒய்ய-கப்பலைச் செலுத்த)
உறந்தை மாநகரில் உயர்ந்த மாடிக்கட்டங்கள் சிறந்து இருந்தமையைப் புலவர் பெருஞ்சித்திரனார்,
     உயர்நிலை மாடத்து (புறநானூறு : 67.9)
என்னும் குறிப்பால் உணர்த்துகிறார்.

கானப்பேரெயில் (இன்றைய காளையார்கோயில்) நகரில், மதில்கள் (சுவர்கள்) வானைத் தொடுவது போன்ற அளவிற்கு உயர்வாக இருந்தமையைப், புலவர் ஐயூர் மூலங்கிழார், 
     வான்தோய் வன்ன புரிசை விசும்பின் (புறநானூறு : 21.3)
என்னும் அடி மூலம் விளக்குகிறார்.

வானைத் தொடும் அளவிற்கு எனப் புலவர்கள் குறிப்பிடுவது கற்பனை கலந்த உயர்வு நவிற்சி அல்ல என்பதற்குச் சான்று, புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்,  இமயமலையைப் பற்றிக் குறிக்கும்பொழுது வானைத் தொடுவது போன்ற இமயமலை என்னும் பொருளில்,
      வடதிசை யதுவே வான்தோய் இமையம்(புறநானூறு :  132)
எனக் குறிப்பதில் இருந்து புரிந்து கொள்ளலாம். இயல்பிற்கு மீறிய உயரக் கட்டடங்களை மட்டுமே இவ்வாறு வானைத் தொடும் அளவிற்கு உள்ளதாகக் குறிப்பிட்டு அவற்றின் உயர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

நம் முன்னைத் தமிழர்களின் நயமிகு கட்டடச் சிறப்பைத் தொடர்ந்து அடுத்தும் காண்போம்!
                                 - இலக்குவனார் திருவள்ளுவன்



Comments


Followers

Blog Archive