Tuesday, October 21, 2025

தமிழரின் கார்த்திகை ஒளி விழாவே ஆரியத் தீபாவளியாக மாற்றப்பட்டது! – இலக்குவனார் திருவள்ளுவன்

      20 October 2025      கரமுதல



பெண்கள் மாலைக் காலத்திலே இரும்பாலான விளக்கை ஏற்றி வைப்பார்கள்; நெல்லையும் மலரையும் தூவி அவ்விளக்கொளியை வணங்குவார்கள் என்கிறார். இவ்வாறு அன்றாடம் விளக்கு வழிபாடு நடந்துள்ளது. இதுவே, பின்னர்க் கார்த்திகை நாளில் கார்த்திகை மீன் நாளன்று சிறப்பாக வழிபடும் விழாவாக மாறியது. கார்த்திகை விழாவைப் பெருவிழாவாக நாடெங்கும் கொண்டாடினர். அந்நாள் புது மணமக்களுக்குத் தலை கார்த்திகையாக விளங்கியது. இதுவே, கார்த்திகை தீபாவளியாக மாறிய பின்னர்த் தலை தீபாவளியாக மாறியது.


கார்த்திகைத் திருநாள் குறித்த மேலும் சில பாடல்களைப் பார்ப்போம்.


தனித்தனியாகக் கொண்டாடிய கார்த்திகைத் திருநாள் குமுகாய விழாவாக மாறிப் பல குடும்பங்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக மாறியுள்ளது.
வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு
இலையில மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அருஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி”

(அகநானூறு: 11: 1-5) என ஒளவையார் கூறுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
வானத்தில் ஒளிவட்டமான சூரியன் ஊர்ந்து செல்கிறது. அப்போது நெருப்பாகச் சிவந்து வெப்பத்தைக் கக்குகிறது. கடும் வெப்பத்தால் அழகிய காடு காய்ந்தது. அதனால் இலையே இல்லாமல் இலவமரத்தில் ஒரு மொட்டும் விடாமல் எல்லா மொட்டும் மலர்ந்திருந்தன. அதனைக் கண்டார் ஒளவையார்.அவருக்குப் பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து ஏற்றிய அழகிய விளக்குகளின் சுடர் கொடியாகப் படர்ந்து வரிசையாய் நீண்டு செல்வது போல் தோன்றியுள்ளது.
தீபாவளி என்றால் என்ன? தீபம்=விளக்கு; ஆவளி=வரிசை. விளக்கு வரிசையைத்தானே ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒளவையார் குறிப்பிடுகிறார்.
கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல்நாள் பரணி நட்சத்திரம். கார்த்திகையை வரவேற்க முதல்நாளே விளக்கேற்றி வைப்பார்கள். அதனையே புலவர் கண்ணங் கூத்தனார் தலைநாள்விளக்கு என்கிறார்.
“நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகையுடைய ஆகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி”

கார்நாற்பது: 26: 1 – 3
நலம்தரும் கார்த்திகைத் திருநாளின் தலைநாளில் நாட்டுமக்கள் ஏற்றி வைத்த விளக்கு வரிசையைப் போல் எல்லா இடங்களிலும் வரிசையாகத் தோன்றிப்பூக்கள் பூத்தனவாம். பொதுவாகப் புலவர்களுக்குச் செந்நிறப் பூக்கள் யாவும் கார்த்திகை விளக்கொளிபோலவே காட்சியளித்துள்ளன.
போர்க்களத்தில் குருதி ஓடுவதைப்பார்க்கும் புலவர் பொய்கையாருக்கு அது கார்த்திகை விளக்குகளின் செஞ்சுடரைத்தான் நினைவூட்டுகி்றது.
“ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி
தாக்கி எறிதர வீழ்தரும் ஒண்குருதி
கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவே
போர்க் கொடித் தானை பொருபுனல் நீர்நாடன்
ஆர்து அமர்அட்ட களத்து”

  • பொய்கையார் , களவழி நாற்பது: 17
    ஆர்ப்பு=ஆரவாரம்; ஞாட்பு=போர்க்களம்; சாறு= விழா. கார்த்திகைச் சாற்றில்= கார்த்திகை விழாவில்; கழி விளக்கு=பெரு எண்ணிக்கையிலான விளக்குகள். கார்த்திகைத் திருவிழாவில் எண்ணமுடியாத அளவிற்கு ஏற்றப்படும் கார்த்திகை விளக்கின் தீச்சுடர் அசைந்தாடி தொடர்ந்து செல்வது போலப் போர் வீரர்களின் உடல்களில் இருந்து குருதி ஓடியதாம்.
    அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்
    செல் சுடர் நெடுங் கொடி போல,
    பல் பூங் கோங்கம் அணிந்த காடே.
  • நற்றிணை 202, 8-10
    இப்பாடலில் தலைவின் தந்தையுடைய காட்டைப்பற்றிப் புலவர் கூறும்பொழுது கார்த்திகைத்திருநாளைக் குறிப்பிடுகிறார்.
    அறம் செய்து வாழ வேண்டும் என்பது தமிழர் நெறி. நன்னாள் வந்ததெனில் அறச்செயல்களில் தவறாமல் ஈடுபட வேண்டும். அவ்வாறு அறம் செய்வதற்குரிய கார்த்திகைத் திங்களில் வரிசையாக விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ள நெடுவரிசைபோல், கோங்கம் வரிசையாகப் பூத்துக் கிடக்கிறது என்கிறார் புலவரும் மன்னருமான பாலைபாடிய பெருங்கடுங்கோ.
    பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
    வேனில் அத்தத்து ஆங்கண் வான்உலந்து
    அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்,
    பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்
    இலைஇல மலர்ந்த இலவமொடு
    நிலையுயர் பிறங்கல் மலைஇறந்தோரே”
  • அகநானூறு: 185: 8 – 13
    மலை பசுமையே இல்லாது காய்ந்து கல்லாய் இருக்கிறது. அதன் உச்சியிலுள்ள வெம்மையான அந்த வழியிலே, வானம் வறண்டு மழை அற்றுப்போனதால் அருவிகள் வற்றிப்போன, இலவமரங்கள் இலையே இல்லாது பூக்களாகவே மலர்ந்திருப்பது, கார்த்திகைப் பெருவிழா விளக்குகள் இருப்பது போலத் தெரியும் அந்த உயர்ந்த மலைத்தொடர்களைக் கடந்து சென்றார். இப்படி காதலனைப் பிரிந்த காதலியின் வேதனையைச் சொல்லும் பொழுதும் கார்த்திகை விளக்கீட்டை மலை உச்சியில் பெருவிழாவாகக் கொண்டாடினர் என்ற வரலாற்றுச் செய்தியையும் பாலைபாடிய பெருங்கடுங்கோ குறிப்பிடுகிறார். அக்காலத்தில் ‘பெருவிழா’ என்றாலே கார்த்திகைத் தீபவிழாதான் என்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.
    அகநானூறு பாடல் 141 இல் புலவர் நக்கீரர் கார்த்திகை நாள் சிறப்பு குறித்துக் கூறுகிறார்.
    பொருள்தேட வெளியூர் சென்ற கணவன் ஊர் மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடும் கார்த்திகை விளக்கு பெருவிழாவின்போது வந்துவிடுவான் எனத் தலைவி மகிழ்ந்து தோழியிடத்துக் கூறுகிறாள்.
    மணமனையில்- திருமண வீட்டில்- புது மணமக்கள் உண்பதற்காக இனிப்புப்பொருள் செய்யும் வேலையில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர் என்கிறார்.
    அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்
    மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி
    பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
    விழவுடன் அயர வருகதில்! அம்ம,
    புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
    பல்கோட்டு அடுப்பில் பால்உலை இறீஇ
    கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்
    பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து
    பாசவல் இடிக்கும்.
    என்னும் பாடல்வரிகளில் இதை வெளிப்படுத்துகிறார்.
    கார்த்திகை குறித்துத் தொல்காப்பியத்திற்கும் முந்தைய இலக்கியமான மலைபடுகடாம் தெரிவிக்கிறது. எனவேதான், ‘தொல் கார்த்திகை நாள்’ என்கிறார் திருஞானசம்பந்தர். தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. அவர், திருமயிலைத் திருப்பதிகத்தில்,
    “வளைக்கை மடநல்லார் மாமயிலைவண் மருகில்
    துளக்கில் கபாலீச்சுரத்தான் தொல்கார்த்திகை நாள்
    தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
    விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்”
    என்று குறிப்பிடுகிறார்.
    (வளை-வளையல்; மறுகு-தெரு;வண்மை-தெருவினர் கொடை வளம்; துளக்கு-அசைவு; தளர்வு- வருத்தம்)
    “பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது சாந்தணிந்த இள நகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?” என்கிறார்.
    ”குமரி முதல் இமயம் வரை முழுமையும் தமிழ்நிலமாக இருந்த பொழுது கார்த்திகையில் கொண்டாடப்பட்ட ஒளிவிழா பின்னர் வடக்கே தீபாவளியாயிற்று. வடக்கே வேறு வகை மாத முறையைப் பின்பற்றியதால் வடக்கே நடைமுறையில் உள்ள கார்த்திகை மாதத்தில் – நமது ஐப்பசியில் – இவ்விழா கொண்டாடப்படுகிறது. இது தெற்கே புதிய மற்றொரு விழாவாக மாறி ஏற்கப்பட்டுள்ளது.”
    மதுரையை ஆண்ட நாயக்கர் காலத்தில் தீபாவளி இங்கே காலூன்றப்பட்டது. மராட்டியர் காலத்தில் முத்திரை பதித்து அமர்ந்து விட்டது. தலை கார்த்திகை மறந்துபோய் தலைதீபாவளி அனைவர் இல்லங்களிலும் புகுந்து விட்டது.
    தமிழ்நாட்டில் தீபாவளி மட்டும் புகவில்லை. அதைப்பற்றிய பல்வேறு பகுத்தறிவிற்குப் பொருந்தாத கதைகளும் மக்கள் உள்ளங்களிலும் குடிபுகுந்து விட்டன. அறிவிற் சிறந்த தமிழர்கள் இறைநம்பிக்கையை ஏற்கும் பொழுது மூடநம்பிக்கைகளையும் ஏற்கின்றனர்.

  • தமிழ்நாட்டில் இப்பொழுதும் கார்த்திகை கொண்டாடப்படுகிறது. ஆனால் அதன் சிறப்பு மங்கி, அதனினும் சிறப்பாக ஆரியமயமாகிய தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஒளி விழா ஏன் இரண்டு வேண்டும். வழி்வழியாகக் கார்த்திகையில் கொண்டாடப்படும் ஒளி விழா மீண்டும் ஐப்பசியில் தீபாவளியாக ஏன் கொண்டாடப்பட வேண்டும் என்பது குறித்துச் சிந்திப்பதில்லை.
    பூக்களின் வரிசையைப் பார்த்தாலே கார்த்திகை விளக்கு வரிசைதான் புலவர்களுக்கு நினைவிற்கு வருகிறது. தத்தம் பாடல்கள் மூலம் புலவர்கள் கார்த்திகை விளக்கீட்டின் சிறப்பை வெளிப்படுத்தி யுள்ளனர். வடநாட்டில் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்பட்ட விளக்கு வரிசை விழா, அதே காலக்கட்டத்தில் ஐப்பசி நிகழும் தமிழ்நாட்டில் மீண்டும் கொண்டாடப்பட்டு, தீபாவளியாக மாறிவிட்டது. மூட நம்பிக்கைகளைப் புகுத்த எண்ணிய ஆரிய தாசர்கள் ஆரியக் கதைகளுடன் தீபாவளியைப் பரப்பும் பணிகளில் ஈடுபட்டனர்; ஈடுபட்டு வருகின்றனர். நாம்,

  • நம் கார்த்திகை ஒளிவிழா உரிமை விழா
    தீபாவளி விழா அடிமை விழா
     என்பதை உணர்வோம்!

Saturday, October 18, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 : insolvent, adolescent, juvenile, minor, post-mortem – தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : தொடர்ச்சி)

திவாலானவர் என இக்கோப்பில் குறிக்கப் பெற்றுள்ளது. திவால் தமிழ்ச் சொல்லல்ல.

insolvency – என்பது கடனைத் திருப்பச் செலுத்த இயலாமல் நொடித்துப் போன நிலையைக் குறிப்பதுநொடிப்பு என்று சொல்லலாம்இந்த நிலைக்கு ஆளானவர்   insolvent – நொடித்தவர்  எனலாம். இதற்கு நொடித்துப்போன என்றும் பொருளுண்டு. எனினும் பொதுவாக நாம்  நொடித்துப் போனவர் > நொடித்தவர் என்றே சொல்வோம்.

இதில் மைனர்  எனத் தமிழிலேயே குறிக்கப்பட்டுள்ளதுஅகவைக்கு  வராதவர்களைக் குறிக்கும்  minor இளம்படியர்  எனவும் அகவை வந்தவரைக் குறிப்பிடும்  major  பெரும்படியர் எனவும் கூறப்படுவர்.

இளவர், அகவை வராத,வயது வராத, சிறிய,உரிமை வயது எய்தாதவர், உரிமை வயது அடையாதவர் என்று பொருள்கள். கணக்கில் சிறிய, சிறு பகுதி என்றும் புள்ளியியலில் சிற்றணி என்றும் பொருள்கள்.

வழக்குகளில் மைனர் என்று வந்தால் என்ன சொல்ல வேண்டும்?

வழக்குகளைப் பொருத்த வரை  இவை முறையே சிறு வழக்குபெரு வழக்கு எனப்படும்.

 மைனர் என்றால் adolescent, juvenile  என்று சொல்கிறார்களே?

adolescent என்பது வளரிளம்பருவத்தினரையும்  juvenile என்பது இளஞ்சிறாரையும் குறிக்கும்.

adolescent என்றால் வளர்நிலைச் சிறார்>வளர்சிறார் எனலாம். வளர்சிறார் என்றால் எல்லாருமே வளருபவர்தாமே என்று சொல்லக்கூடாது. சொற்களை வரையறைப்படுத்தி வகைப்டுத்திக் கொள்ள வேண்டும். Adolescent-விடலை என்றும் கூறுகின்றனர். விடலைப்பருவம் என்பது பதினாறு முதல் முப்பது ஆண்டுவரையுள்ள பருவத்தைக் குறிப்பது. எனவே, adolescent என்பதற்கு விடலை பொருந்தாது.

 இளஞ்சிறார் என்பதை ஏற்றுக் கொள்வார்களா?

          நான் இளஞ்சிறார் நடுவர் மன்றத்தில்(Juvenile Court) நன்னடத்தை அதிகாரியாகப் பணியேற்ற உடன் இளஞ்சிறார் என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். அப்பொழுது ஒரு சாரார்  சிறுவர் என்றே சொல்லலாம் என்றார்கள். சிறுவர் என்பது பொதுவான சொல்லாகும்: சிறுவர்  என்பதன் பன்மை வடிவம் சிறார். அவரிலும் சிறு பருவத்தினரைக் குறிக்கும் வகையில் இளஞ்சிறார் என்பது சரிதான் என்று கூறிப் பயன்படுத்தி வந்தேன். அதனையே நீதிமன்றத்திலும் பின்னர் காவல் நிலையங்களிலும் பிற அலுவலகங்களிலும் ஏற்று இன்று தொலைக்காட்சி முதலான தகவல் ஊடகங்களிலும் இளஞ்சிறார் என்றே குறிப்பிடுகின்றனர். எனவே பயன்படுத்தப் பயன்படுத்த எச் சொல்லும் எளிமையானதுதான்.

          ? juvenile என்று சொல்லின் பொருளை இச்சொல் குறிக்காது. அப்படியே பயன்படுத்தினால் என்ன?

          ? நாமாகவே இவ்வாறு கற்பனையில் ஏதோ ஒரு பொருளை நினைத்துக் கொண்டு இவ்வாறு கருதுகிறோம். உண்மையில் தமிழில் ஆடவருக்குக் குழந்தை, காளை, குமரன், ஆடவன், மூத்தோன், மூதாளன் என 6 பருவங்களும் பெண்டிருக்குப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என 7   பருவங்களும் குறிக்கப் படுகின்றன. இத்தகைய பருவ வரையறையும் சொல்லாட்சியும் வேறு எந்த மொழியிலும் இல்லை. இதனைப் புரிந்து கொள்ளாமையால், தமிழில்  உள்ள பருவங்களை நாம் மறந்து  இவ்வாறு பிறமொழிக்கேற்ப சொல்லாட்சியைப் பயன்படுத்துவதில் இடர்ப்படுகிறோம்.

          post-mortem  – பிரேத விசாரணை என வந்துள்ளது.பிரேதம் என்பது தமிழ்ச் சொல்லன்று. பிணம் என்றே சொல்லலாம். சடலம் என்பது உடலைக் குறிக்கும். உடற்கூறு ஆய்வு என்பதால் உயிரற்ற உடல் என்ற பொருளில் சடலம் என்றே குறிக்கலாம்.

post-mortem report – இறப்பு விசாரணை என்று சொல்லலாமா?

அப்படிச் சொன்னால், எவ்வாறு இறந்தார் என்பது குறித்த புற உசாவலாக அமையும்.

 inquest எனப்படுவது   எவ்வாறு மரணம் நேர்ந்தது என்பது பற்றிய , உசாவுதலைக் குறிக்கும். அதுதான் இறப்பு விசாரணை, இறப்பு உசா. இங்கு இறந்த உடலை ஆய்வு செய்வதால் உடல ஆய்வு, பிண ஆய்வு  என்று சொல்ல வேண்டும்.

இப்பதிவேடு தமிழில் இருந்தாலும் minute book என ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டுள்ளது. நமக்குத் தெரியாத பொழுது ஆட்சிச் சொல்லகராதியைப் பார்த்தாவது அடுத்தவரிடம் கேட்டாவது தமிழில் எழுத வேண்டும் என்ற முயற்சி உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும். நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் குறிப்பான  minute நிகழ்(வுப்) பதிவு எனப்படும். நிகழ் பதிவைக் குறிக்கும்  minute book-  நிகழ்ச்சிப்பதிவேடு – நிகழேடு என்று அழைக்கப்பட வேண்டும். நிகழ்ச்சி வரிசையைக் குறிக்கும் agenda  நிகழ் நிரல் ஆகும்.

minute என்றால் நிமிடம் என்றுதானே பொருள்?

நிமையம், நுட்பமான; நுண்ணிய,மீச்சிறு, நுட்பமான, மணித்துளி,

குறுங் கோணஅளவு எனப் பல பொருள்கள் உள்ளன. இவைபோல் நிகழ்ச்சிப் பதிவையும் குறிக்கிறது. ஒவ்வொரு      நிமைய நிகழ்வையும் விடாமல் குறிக்க வேண்டும் என்பதற்காக இங்ஙனம் கூறுகிறார்கள் எனக் கருதத் தோன்றும். ஆனால், காலத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை. சிறு குறிப்புகள் என்னும் பொருள் கொண்ட minuta scriptura என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து இச்சொல் உருவானது. கூட்டத்தின் குறிப்புகள் குறித்த ஆவணமே நிகழ் பதிவேடு.

நாலடி நல்கும் நன்னெறி 16: பிறர் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே!- இலக்குவனார் திருவள்ளுவன்

 




(நாலடி நல்கும் நன்னெறி 15: கேடு எண்ணாதே!  பொய் சொல்லாதே! –தொடர்ச்சி)

அணு என்பது மீச்சிறு அளவு. அத்தகைய அணு அளவும் சினம் கொள்ளக் கூடாது என்கிறார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அவர்,

அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்

என்கிறார்.

நம்மிடம் சினம் இல்லாமல் போனால் யாவும் கைகூடும். இதனை,  இடைக்காட்டுச் சித்தர்.

சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே! யாவும்

சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே” என முழங்கித் தெரிவிக்கிறார்.

சினம் என்பது அதனால் பாதிப்புறுவோருக்கும் தீங்கு விளைவிக்கும். அதனை வெளிப்படுத்துவோருக்கும் தீங்கினை விளைவிக்கும். எனவேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர்”சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி” என்கிறார்.

நாலடியாரும் சினமின்மை குறித்துப் பத்துப்பாடல்களில் கூறியுள்ளது. அவற்றில் ஒன்றைப் பார்ப்போம்.

மதித்திறப் பாரும் இறக்க மதியா

மிதித்திறப் பாரும் இறக்க – மிதித்தேறி

ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்

காயும் கதமின்மை நன்று

நாலடியார், பாடல் 61)

பதவுரை : மதித்து = பொருட்படுத்தி, மதிப்பளித்து; இறப்பாரும்=நடந்து கொள்வோரும்;  இறக்க=அவ்வாறு நடந்து கொள்ளட்டும்; மதியா= மதிக்காமல்; மிதித்து=கால் படும்படி;இழிவுபடுத்தி; இறப்பாரும்= நடந்து கொள்வோரும்; இறக்க – அங்ஙனம் தாழ்வு படுத்தி நடக்கட்டும்; மிதித்து ஏறி ஈயும்=ஈயும் மிதித்து ஏறி; தலைமேல் இருத்தலால் – தலைமேல் இருத்தலினால்; அஃது அறிவார் -அந் நிலையை அறிந்து சிந்திக்குஞ் சான்றோர்;காயும் = எரிந்து விழும்; கதம்=சினம்; இன்மை=கொள்ளாது இருத்தல்; நன்று=நல்லது.

இறப்பாரும் என்பது இங்கே ஒழுகுவாரை – நடந்து கொள்வாரைக் குறிக்கிறது. இறக்க என்பது தாழ்வுபடுத்தி / இழிவுபடுத்தி ஒழுகுதலை/நடந்து கொள்ளுதலைக்  குறிக்கிறது.

இறக்க என்பது தாழ்ச்சியையும் குறிக்கும். எனவேதான் பறவையின் தாழ்வான உறுப்பு இறக்கை எனப்பட்டது.

குறட் கடலிற் சில துளிகள் 33. இடிக்குந் துணை இருப்போரைக் கெடுப்போர் யாருமிலர்: இலக்குவனார்திருவள்ளுவன்

     17 October 2025      அகரமுதல



(குறட் கடலிற் சில துளிகள் 32. தக்கவர் இனத்தில் இணைந்தால் பகைவரால் யாது செய்ய இயலும்? –தொடர்ச்சி)

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே

கெடுக்குந் தகைமை யவர்.   

(திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல்,  எண்: ௪௱௪௰௭ – 447)

கடிந்துரைத்துக் கூறித் திருத்தும் தன்மையுடைய பெரியோரைத் துணையாகக் கொண்டவரை, எவர்தாம் கெடுக்கக்கூடிய வல்லமை உடையவர்?

பதவுரை

இடிக்கும் = கடிந்துரைத்து அறிவுரை கூறும்;  துணையாரை=துணையாக இருந்து உதவி; ஆள்வாரை = கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்து ஆட்கொள்வோரை; யாரே=யார்; கெடுக்கும் = தீங்கு செய்து கெடுக்கும்; தகைமை யவர்=தன்மை யாளர்; யாருமிலர்.

மணக்குடவர் ஆள்வார் என்றதற்குத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லார் எனப் பொருள் கொண்டார். இதைத் தழுவிப் பரிமேலழகர் ‘இவர் நமக்குச் சிறந்தார் என்று ஆளும் அரசர்’ எனப் பொருளுரைத்தார்.”

ஆட்சியாளராக இருப்பின் ஆட்சியில் தவறு செய்ய முற்படுகையில் கண்டித்து அறிவுரை கூறி நல்வழிப்படுத்தும் துணிவும் தகைமையும் உடையவர் துணை இருப்பின் அவருக்குத் தீங்கு செய்யும் வலிமையுடையவர் யாருமிலர்.

வேறு நிலையில் இருப்பவராக இருப்பின், தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பின், அதிலிருந்து திசைதிருப்பி நற்பாதை கட்டும் வல்லைமையுடைய பெரியவர் துணை இருப்பின் அவரைத் தடுத்தாட்கொள்ளும் தீங்கினர் யாருமிலர்.

ஒரு துறையில் ஈடுபடும்போது, தவறு செய்ய விடாமல் உரிய பாதையில் இயங்கச் செய்யும் அத் துறை வல்லுநராக உள்ள அறிவில் பெரியோரை உறுதுணையாகக் கொண்டால் யாரும் அவருக்குத் தீங்கு செய்ய இயலாது. எனவே, எத்தகையவராக இருப்பினும் தக்க பெரியவரைத் துணையாகக் கொண்டால் தீங்கு செய்யும் வல்லமையுடையவர் யாரும் இலர்.

அதிகாரத்தில் உள்ளவர் அல்லது உயர் நிலையில் உள்ளவர் அருகில் ஆதாயம் அடைவோர் இருப்பது இயல்பு. அவர்கள் அறிவுரை கூறும் துணிவு உடையவராக இருக்க மாட்டார். அறிவுரை கூறுவதால் சினத்திற்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சாமல் தீமையில் இருந்து காப்பாற்றுவதையே இலக்காகக் கொண்டு அறிவுரை கூறுவோரைத் துணையாகக் கொண்டால் எவ்வழியிலும் தீங்கு செய்வோர் நெருங்க இயலாது. இதையே திருவள்ளுவர் நமக்குத் தெரிவிக்கிறார். எனவே,

தீமை செய்யும் வல்லமையுடையவரிடம் இருந்து தீங்கு நேராமல் காத்துக் கொள்ள பெரியாரைத் துணையாகக் கொள்க.

Thursday, October 16, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : உம்மைத் தொடர்களில் ‘மற்றும்’ தேவையில்லை : இலக்குவனார் திருவள்ளுவன்

      16 October 2025      கரமுதல



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது,இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது : தொடர்ச்சி)

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை எனக் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மற்றும் எனச் சேர்ப்பது தவறாகும். மற்றும் என்பதை நீக்கிப் பின்வருமாறு குறிப்பிட வேண்டும்.

தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை

ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத் துறை

இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை

உணவு கூட்டுறவு அமைச்சர்

உள், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை

* கால்நடைப் பேணுகை மீன்வளத்துறை

கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை

கைத்தறி, கைத்திறன், சவுளி, கைந்நூல் துறை

சவுளி என்பது தமிழ்ச்சொல்லே. (ஞ்)சவுளி என்ற உச்சரிப்பு பெற்றதும் நாம் பிற சொல்லாகக்கருதும் நிலை ஏற்பட்டது. கைந்நூல் என்பதைக் காதி அல்லது கதர் என்றே பெரும்பாலும் கூறுகின்றனர்.
பரம்பரையாக ஒரு குழித்தறியில் கையால் நெய்யப்பட்டுக் கையால் நூற்கப்பட்டு காதி நெய்யப்படுகிறது. காதி என்பது குழி என்னும் பொருள் கொண்ட இந்திச்சொல் khad என்பதில் இருந்து பிறந்தது. இந்தியில் கதர்(Khaddar) என்றும் அழைக்கப்படுகிறது.

“காதியின் ஒரே அளவுகோல் அது கையால் நூற்கப்பட்டு கையால் நெய்யப்பட்டிருப்பதுதான்” எனக் காந்தி யடிகளே கூறியுள்ளார். (மகாத்மா காந்தியின் படைப்புகள் தொகுப்பு, தொகுதி 28, 1925) ஆனால் ஓர் இசுலாமிய அம்மையார் காந்தியடிகளுக்குக் கையால் நூற்ற துணியை அன்பளிப்பாகத் தந்த பொழுது அதனைப் பெற்றுக் கொண்டு மதிப்பு மிக்கது என்ற பொருளில் குறிப்பிட்டார். நெசவுத் தொழில் தமிழ்நாட்டின்மிகப்பழமையான சிறப்பான தொழில். எனவே, காதி என்றோ கதர் என்றோ குறிப்பிடாமல் கைந்நூல் என்றே சொல்லுவோம்.

* சமூக நலம் சத்துணவுத் திட்டத்துறை

சுற்றுப்புறம் வனத்துறை

சுற்றுலா, பண்பாடு சமய அறநிலையத் துறை

செய்தி சுற்றுலாத் துறை

தகவல் தொழில்நுட்பவியல் எண்மப் பணிகள் துறை

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல். (௲௨௱௬௰௧ – 1261)

என்னும் குறளில் திருவள்ளுவர் தலைவர் பிரிந்த நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்து போயின எனக் குறிப்பிடுகிறார். விரலே கணக்கிற்கு அடிப்படையாக உள்ளது.விரல், விரற்கடை என்பன கணக்கில் இடம் பெறும் அளவீடுகளாகவும் உள்ளன. என்பதும் விரலைத்தான் குறிப்பிடுகிறது. digital என்பதும் இலக்கம், இலக்கமுறை; சொடுக்கெண்;எண்மம்; எண்மமுறை; என்னும் பொருள்களில் பயன்படுகிறது. எனவே நாம் , Information Technology and Digital Services Department என்பதைத் தகவல் தொழில்நுட்பவியல் எண்மப் பணிகள் துறை எனச் சொல்ல வேண்டும்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு வணிகத் துறை

தொழிலாளர் வேலைவாய்ப்புத் துறை

நகராட்சி நிருவாகம் குடிநீர் வழங்கல் துறை

நிர்வாகம் என்பது தவறு என்பதால் நிருவாகம் எனக் குறிப்பிடுகிறேன்.

நெடுஞ்சாலைகள் சிறு துறைமுகங்கள் துறை

* பணியாளர் பணியாட்சிச் சீர்திருத்தத் துறை

இத்துறையின் பெயரை இப்போது மனிதவள மேலாண்மைத் துறை (Human resource management department) எனப் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையர் நலத்துறை

மக்கள் நல்வாழ்வு குடும்ப நலத்துறை

மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை

வணிகவரி பதிவுத்துறை

வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை

பொருளியல் புள்ளியல் இயக்கம்

பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

மதிப்பீடு செயல்முறை ஆராய்ச்சித்துறை

மருத்துவம் ஊரகநலப்பணிகள் துறை

மருத்துவ மனைகள் மருத்துவக் கல்லூரிகள்

மிகப்பிற்பட்டோர் சீர்மரபினர் நலத்துறை

கலை பண்பாட்டுத் துறை

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்று வாரியம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம்

தமிழ்நாடு தோட்டக்கலை மலைப்பயிர் துறை

கட்டுமான வடிவமைப்பு ஆராய்ச்சி

கட்டுமானம் பேணுகை

கட்டடப் பேணுகை கட்டுமான வட்டம்

என்பன போல்தான் குறிப்பிட வேண்டும்.

பராமரிப்பு எனக் குறிக்கப்படுவனவற்றைத்தான் நான் பேணுகை எனக் குறிப்பிடுகிறேன்.

மற்றும் எனக் குறிக்காமல் சுருக்கமாக (ம) என்றும் குறிக்கின்றனர். அதுவும் தவறு.

? “மற்றும்’ என்பது தமிழ்ச்சொல்தானே? பயன்படுத்தினால் என்ன தவறு?

விடை: “மற்றும்’ என்பது மேலும், மீண்டும் ஆகிய பொருள்களைத் தரும்

தமிழ்ச்சொல்.  இதனை “உம்’ (and) என்பற்கு மற்றாகப் பயன்படுத்தக் கூடாது. மேலும்.

மற்ற.  பிற.

மற்றது.  ஏனையது.

மற்றநாள்.  மறுநாள், நாளை, மறுநாள்

மற்றபடி.  வேறுவகையில்.

மற்றவர்.  பிறர், ஏனையோர்

மற்று.  மறுபடியும், ஓர் அசைநிலை

மற்றையது.  குறித்த பொருளுக்கு இனமான வேறு ஒன்று

மற்றொன்று.  பிறிதொன்று.

என்பன போல் பொருள் உள்ளனவே தவிர “உம்’ பொருள்பட எச்சொல்லும் இல்லை. மேலும் “உம்’ வரக்கூடிய இடங்களில் சான்றாக அலுவலரும் ஆசிரியரும் என்பது போல் குறிக்க வேண்டிய இடங்களில் ஆசிரியர் அலுவலர் என “உம்’ பயன்படுத்தாமல் குறிப்பதே மரபு. இது போன்ற இடங்களில் “உம்’ தொக்கி (வெளிப்படாது மறைந்து) நிற்பதால் உம்மைத் தொகை என்கிறோம். நாம் இரவு பகல், ஆடு மாடு, இயல் இசை  நாடகம், சேர சோழ பாண்டியர் என்று கூறுவோமே தவிர இரவு மற்றும் பகல் ஆடு மற்றும் மாடு, இயல் மற்றும் இசை மற்றும் நாடகம், சேரர் மற்றும் சோழர் மற்றும் பாண்டியன் எனக் கூறுவதில்லை.

அல்லது

இரவும் பகலும்

ஆடும் மாடும்

இயலும் இசையும் நாடகமும்

சேரரும் சோழரும் பாண்டியரும்

எனலாம்.

இவ்வாறு சேர சோழ பாண்டியர், இரவு பகல் என உம்மைத்தொகை வரும் பொழுது வல்லினம் மிகாது.

உம்மைத் தொகை தவிர, போன்ற, முதலிய ஆகிய என்னும் சொற்களையும் பலரும் சரியாகக் கையாள்வதில்லை.

கேள்வி: இவற்றில் என்ன வேறுபாடு உள்ளது? ஒன்று போல்தானே பயன்படுத்துகிறோம்?

விடை: பொருள் வேறுபாடின்றி அவ்வாறு பயன்படுத்துவது தவறு.

ஒன்றை அல்லது ஒருவரை மட்டும் எடுத்துக்காட்டாகக் கூறி அதனை அல்லது அவரைப் போல என விளக்கும் இடங்களில் “போன்ற’ எனக் குறிப்பிட வேண்டும்.

சான்றாக,

மதுரை போன்ற ஆற்றுப்பாசன ஊர்களில் எனக் குறிப்பிடின், ஆறுகள் பாய்ந்து நீர்ப்பாசனத்திற்கு உதவும் பல ஊர்களில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு, இதுபோன்ற பல ஊர்கள் உள்ளமையை உணர்த்துகிறோம்.

“முதலிய’ என்பது மேலும் தொடர்ச்சியாக வேறு உள்ளனவற்றையும் குறிப்பிடுகின்றது.

ஆதிதிராவிடர் நலத்துறை கலை பண்பாட்டுத்துறை முதலிய துறைகளில் தமிழ் ஆட்சி மொழிச் செயலாக்கம் சிறப்பாக உள்ளது என்றால் இவ்வாறு இருக்கக் கூடிய துறைகளில் இரண்டு துறைகளை மட்டும் சுட்டிக் காட்டியுள்ளதாகப் பொருள்.

அதே நேரம் “ஆகிய’ என்பது முற்றாக அமைந்து விடுகிறது.

மதுரை, சேலம், சென்னை ஆகிய நகரங்கள் என்றால் இம்மூன்று ஊர்களை மட்டும்தான் குறிக்கின்றோம். இவற்றைப் போன்று (இந் நேர்வில்) மேலும் ஊர்கள் உள்ளனவாகப் பொருள் இல்லை. தெளிவாக வரையறுத்துக் கூறுகின்றோம்.

அல்லது சேர, சோழர், பாண்டியர் ஆகியோர் எனக்குறிக்க வேண்டும்.

உயர்திணையாய் இருப்பின் பாவலர் முதலியோர் என்பது போல் முதலியோர் எனக் குறிக்க வேண்டும்.

எனவே “மற்றும்’ என்ற சொல்லைத் தவிர்த்து இடத்திற்கேற்ற போல்

உம்மைத் தொகை

உம்மை விரி

போன்ற, போன்றன, போன்றவை, போன்றோர்

முதலிய, முதலியன, முதலியவை, முதலியோர்

ஆகிய, ஆகியன, ஆகியவை, ஆகியோர்

என இடத்திற்கேற்ற இணைப்புச் சொற்களைக் கையாள வேண்டும். இவற்றிற்கு முரணாக “மதுரை ஆகிய மாவட்டங்களில்’ “இயல் இசை நாடகம் முதலிய 3 துறைகளில்’ “சேர, சோழ, பாண்டியர் போன்ற மூவேந்தர்கள்’ எனக் குறிப்பிடுவது தவறாகும்.

Followers

Blog Archive