(நாலடி நல்கும் நன்னெறி 26: வறுமையிலும் உதவுக! – தொடர்ச்சி)

அறிமி னறநெறி யஞ்சுமின் கூற்றம்

பொறுமின் பிறர்கடுஞ்சொற் போற்றுமின் வஞ்சம்

வெறுமின் வினைதீயார் கேண்மையெஞ் ஞான்றும்

பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.

[அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம்

பொறுமின் பிறர் கடு சொல் போற்றுமின் வஞ்சம்

வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும்

பெறுமின் பெரியார் வாய் சொல்.]

நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 172

அறம் = அறத்தின்; நெறி = வழியை; அறிமின் = அறியுங்கள்; கூற்றம் = கூற்றுவனுக்கு/இயமனுக்கு/எமனுக்கு; அஞ்சுமின் = அஞ்சுங்கள் ;பிறர் = அயலாருடைய; கடு சொல் = கொடுமையான சொற்களை; பொறுமின்=பொறுத்துக் கொள்ளுங்கள்; வஞ்சம்=வஞ்சகத்தை; போற்றுமின்=வராமல் போற்றுங்கள்; வினை=தீவினை புரியும்; தீயார் =கொடியவர்;கேண்மை=நட்பை;வெறுமின்=வெறுத்துக் கைவிடுங்கள்; எஞ்ஞான்றும்=எந்நாளும்; பெரியார்=பெரியோர்கள்; வாய் சொல்=வாயினால் கூறும் சொற்களை, அறிவுரையை; பெறுமின்= பெறுங்கள்.

அறவழி அறியுங்கள்; இயமனுக்கு அஞ்சுங்கள்; கொடுஞ் சொற்களைப் பொறுங்கள்; வஞ்சனை வாராது காத்துக் கொள்ளுங்கள்; தீயவர் நட்பைக் கை விடுங்கள்; பெரியோர் அறிவுரையைப் பெறுங்கள்.

அறவழி அறியுங்கள் என்றால் அறவழியை அறிந்து அதன் வழியில் செல்லுங்கள் எனப் பொருள். அறநெறி வாழ்வை வலியுறுத்தி, ‘அறன் வலியுறுத்தல்’ என்னும் ஓர் அதிகாரத்தையே திருக்குறளில் திருவள்ளுவர் வைத்துள்ளார். நாலடியாரிலும் ‘அறன் வலியுறுத்தல்’ என்னும் ஓர் அதிகாரம் உள்ளது.

எமனுக்கு அஞ்சுங்கள் என்றால், எமன் எப்பொழுது வேண்டுமானாலும் அழைத்துக்கொள்வான். வாழ்வு நிலையற்றது. நிலையாமை என்று ஓர் அதிகாரத்தையே திருவள்ளுவர் வைத்துள்ளார். வாணாள் முடிவதற்குள் அறப்பணி ஆற்ற வேண்டும்.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.(திருக்குறள், ௩௰௮ – 38)

என்று அறம்தவறிய நாள் என்றுமில்லாதவாறு நாளும் அறமாற்றுமாறு கூறுகிறார் திருவள்ளுவர்.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.   (திருக்குறள், ௩௰௬ – 36)

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் உடனே அறமாற்றுவதுதான் நமக்குத் துணையாக இருக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்.   (திருக்குறள், ௩௱௩௰௫ – 335)

நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டு விக்கல் மேலெழுந்து வரும் முன்னர் நல்வினைகள் செய்யப்பட வேண்டும் என்றும் திருவள்ளுவர் கூறுகிறார். எனவே, எமனுக்கு அஞ்சி, அவன் வருவதற்குள் நாளும் ஆற்ற வேண்டிய அறச்செயல்கள் குறித்துத்தான் நாலடியாரும் கூறுகிறது.

கடுஞ்சொற்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டியதையும் பிற இலக்கியங்களும் கூறுகின்றன.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம். (திருக்குறள், ௩௰௫ – 35)

என்று கடுஞ்சொல் சொல்லாதிருப்பதை அறமாகத் திருவள்ளுவர் கூறுகிறார்.

வெருவந்த செய்யாமை அதிகாரத்தில் கடுஞ்சொற்களைப் பேசுபவரைக் கடிந்து உரைக்கிறார் திருவள்ளுவர். எனவேதான், அவர்

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொல் நோற்பாரின் பின்.   (திருக்குறள், ௱௬௰ – 160)

என்று திருவள்ளுவர் கடுஞ்சொல் சொல்லாமையைச் சிறந்த நோன்பாகக் கூறுகிறார்.

என்றும் கடுஞ்சொல் உரையார்“(ஆசாரக்கோவை 93)

என என்றும் கடுஞ்சொல் சொல்லக்கூடாது என்கிறார் புலவர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்.

வஞ்சகம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டியது குறித்து அடுத்துப் பார்ப்போம்.

வஞ்ச மனத்தவனின் பொய்நடத்தைக்கு எதிராகத் திருவள்ளுவர்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.   (திருக்குறள், ௨௱௭௰௧ – 271)

என்கிறார்.

“வஞ்சகம் பேசுபவன்] தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.” “அவனை நம்பாதே” (நீதிமொழிகள் 26:24, 25.) என விவிலியம் எச்சரிக்கிறது.

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டா (உலக நீதி) என்கிறார் உலகநாதர்

வஞ்சகத்தாருக்கு அழிவு உறுதி என்பதற்காக மாக்கவி பாரதியார்,

படித்தவன் சூதும் வாதும் செய்தால்

போவான், போவான்; ஐயோ என்று போவான்!

என்கிறார்.

வஞ்சம் என்னும் சொல் மோசடி, கபடம், போலி, கள்ளத்தனம், வஞ்சித்தல், பித்தலாட்டம்,  ஏமாற்றுதல், சதி, பொய்வேடம், வஞ்சனை எனப் பல பொருள்களில் பயன்பாட்டில் உள்ளது. எனவே, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் வஞ்சகம் ஆகும். வஞ்சகம் பேசுவோரிடம் நட்போ உறவோ கூடாது என்பதற்காக வள்ளலார் இராமலிங்க அடிகள்,

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

என்கிறார்.

தீவினையாளர் தொடர்பை அறுக்க வேண்டியது குறித்தும் பார்ப்போம்.

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு.   (திருக்குறள், ௨௱௧ – 201)

எனத் திருவள்ளுவர் தீவினை புரிய அஞ்ச வேண்டும் என்கிறார். தீவினை அச்சம் என ஓர் அதிகார்தையே தீவினைக்கு எதிராக வைத்துள்ளார் திருவள்ளுவர். தீவினைக்குஅஞ்ச வேண்டுமெனில் தீவினை புரிவோரோடு தொடர்பு கொள்ளக் கூடாது அல்லவா?

பெரியார் அறிவுரையைப் பின்பற்ற வேண்டியது குறித்தும் கூறுகிறார்.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.   (திருக்குறள், ௪௱௰௫ – 415)

எனத் திருவள்ளுவர், பெரியோரின் வாய்ச்சொல்லைத் துணையாகக் கொள்ள வேண்டும் என்கிறார்.

பெரியாரைத் துணைக்கோடல் என ஓர் அதிகாரம் மூலம் பெரியாரின் துணையை வலியுறுத்திக் கூறுகிறார்.

நாலடியார் இப்பாடலில் கூறும் ஆறு அறிவுரைகளையும் நாம் தவறாமல் பின்பற்ற வேண்டும்.