Showing posts with label கனவு. Show all posts
Showing posts with label கனவு. Show all posts

Sunday, April 5, 2015

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 7 : இலக்குவனார் திருவள்ளுவன்


kanavukal-aatchimozhi

[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்
2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல்
தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்
என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில்
வாசிக்கப் பெற்ற கட்டுரை.]

வாழும் மூத்த மொழித் தகுதி
            வாழ்விழந்த மொழிக்குத்தான் செம்மொழித் தகுதி தருவோம் எனக்கூறி உயர்தனிச் செம்மொழியான தமிழுக்கு அத்தகுதி மறுக்கப்படுவதால், ‘வாழும் மூத்தமொழி’ என்ற தகுதியைத் தமிழுக்குத் தந்து தமிழ்க்கண்டத்திலும் ஐ.நா. போன்ற உலக அமைப்புகளிலும் பன்னாட்டுத் தூதரகங்களிலும் தமிழுக்குத் தக்க இடம்தர வேண்டும். இச்சிறப்பிற்க்காக நடுவணரசும், பன்னாட்டு அமைப்புகளும் பொருளுதவி வழங்க வேண்டும்.
வரலாற்றிலும் இருட்டடிப்பிற்கு முற்றுப்புள்ளி
            தமிழ்மொழி வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுகிறது. அண்டைநாட்டு மலையாள இலக்கிய வரலாற்று நூலில் கூடச் சேரநாட்டுச் செந்தமிழ்ப் பெருமையெல்லாம் கேரளநாட்டிற்கே உரிய பெருமையாகக் காட்டப்படுகிறது. இத்தகியைப் போக்கையகற்ற எல்லா மொழியிலும் தமிழ்மொழி இலக்கிய வரலாற்றுச் சிறப்பை அறியும் வகையில் நூல்களின் துணை கொண்டு தேர்வு எழுதும் முறையைக் கொண்டுவரவேண்டும். தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்கள் தமிழ்வழி மட்டுமே அஞ்சல்கல்வி நடத்த வேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அஞ்சல்வழியில் குறிப்பிட்ட சில மொழிகள் வாயிலாகத் தமிழ் கற்பிக்க வகை செய்யவேண்டும். நடுவணரசின் திட்டங்கள் அனைத்திற்கும் தமிழ்ப்பெயர்களும் சூட்ட வேண்டும்.
தூதரகங்களில் தமிழ்
            எல்லா நாட்டுத் தூதரகங்களிலும் தமிழ் தெரிந்தோர் ஒருவராவது பணியாற்ற வேண்டும். அனைத்துத் துதரகப் பணியாளர்களும் தமிழ்மொழி, இலக்கியம், வரலாற்றுச் சிறப்புகளைத் தெரிந்திருக்க வகைச்செய்ய வெண்டும்.
ஈழ மலர்ச்சி
           கிழக்குப் பாகிசுதானில் இருந்து வந்தவர்களை வரவேற்ற நாம் ‘ஈழத்தில் இருந்து வருவோருக்கு அடைக்கலம் கொடுத்தாலே தவறு’ என்னும் நிலைமையும் ‘தமிழ்’ என்றாலேயே ‘வன்முறை, முனைப்பு வாதம்’ என்ற நோக்கில் பார்ப்பதும், இளைய தலைமுறையினரில் ஒரு சாரரைத் தமிழுக்கு எதிராகத் திருப்பி விடுகிறது; மற்றொரு சாரார் தமிழ்க்கண்ட ஒற்றுமைக்கு எதிராக எண்ணுகின்றனர். உலகின் முதல் மனிதன் பிறந்த ஈழத்தில் தமிழாட்சி இருந்தாலாவது தமிழ்மீது நம்பிக்கை வைக்கலாம். என்றுமே காலூன்றாத் தமிழைப் படிப்பதால் என்ன பயன் என்று பலர் எண்ணுகின்றனர். எனவே நாட்டு ஒற்றுமை கருதியும் தமிழர் ஒற்றுமை கருதியும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் பாதுகாப்புப் பொறுப்பை நடுவணரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல், தமிழர் எங்கும் விரட்டியடிக்கப்படும் நிலையை ஆட்சிமொழிச் செயலாக்க முனைப்பு கூர்மழுங்கவே செய்யும்.
தமிழ்த்தேவை மதிப்பை உயர்த்துதல்
            அறிவிற்காகக் கல்வி என்றில்லாமல் வேலைக்காகக் கல்வி என்று வந்ததால் பெரும்பாலும் எதுவும் படிக்க வாய்ப்பு இல்லாதவர்களே தமிழ் படிக்க வருகிறார்கள். வந்தபின் தமிழ் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வோரும் குறைவு. இவர்கள் ஆசிரியராக மாறும் பொழுது உருவாக்கப்படும் தமிழ் உணர்வும் குறைவு. எனவே தமிழுக்கான தேவை மதிப்பை உயர்த்த மேற்குறித்த செய்ற்பாடுகளுடன் தமிழ் நாட்டில் அமையக்கூடிய நடுவணரசு அலுவலகங்களுக்கும் வங்கிகளுக்கும் சார்பு அமைப்புக்ளுக்கும் ஆட்சித்துறைப் பணிகளுக்கும் தமிழில் உயர்பட்டம் பெறுவதைத் தகுதியாக அறிவிக்க வேண்டும்.
      தமிழ்க்கணியன்களை(சாப்ட்வேர்கள்) மிகுதியாக உருவாக்கிக் கணினி வழி தமிழ்ப் பயன்பாட்டைப் பெருக்குதல், எழுத்துச்சீர்த்திருத்தம் என்ற பெயரில் தமிழைச் சிதைக்க வரும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளியிடுதல், ‘தமிழ்நாடு’ என்று வேண்டுமென்றே கூறாமல் ‘தமிழ்மாநிலம்’ என்று பயன்படுத்துவதையும், ‘அர்த்தால்’, ‘பந்த்’ போன்ற அயல்மொழிச் சொற்களை வேண்டுமென்றே கலப்பதற்கும் தடைவிதித்தல், கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாமல் இலங்கையில் உள்ளதுபோல் வரிவடிவையே பயனபடுத்தச் செய்தல். கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடுகளைத் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்தவர்களுக்கு மட்டும் வழங்குதல் தமிழ வழிப்பயில்வோருக்கு மட்டுமே கல்வி உதவித்தொகைகள் அளித்தல் முதலான பல்வேறு நடவடிக்கைகளும் தமிழின் தேவை மதிப்பை உயர்த்தும்.
தமிழ்நாடு முழுமைக்குமான சட்டம்
            தம்ழ் ஆட்சிமொழிச் சட்டம் தமிழ்நாட்டின் அரசுப் பணியாளர்களுக்கும் அரசு சார் பணியாளர்களுக்கும் மட்டும் உள்ளதன்று; தமிழ்நாடு முழுமைக்கும் உரியது. எனவே தமிழ்நாட்டிலுள்ள நடுவணரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பிறமாநில அலுவலகங்கள், தன்னாட்சி அலுவலகங்கள் அனைத்திலுமே அலுவல் மொழி தமிழாகத்தான் இருக்கவேண்டும். வணிகவியல் படிக்கவே தமிழ் தேவையில்லை; இந்தி அல்லது சமசுகிருதம் கட்டாயம் படிக்கவேண்டும் என்று உள்ள கல்வித்திட்டம் மாற்றப்பட்டாக வேண்டும். தமிழில் எழுதப்படா வணிகக்கணக்குகள் கள்ளக் கணக்காக் கருதப்படும் என்று அறிவித்து வணிகர்களின் செயற்பாடுகள் தமிழில் இருக்க வகைச் செய்யவேண்டும்.
திசை திரும்பவில்லை
            கட்டுரைத்தலைப்பு திசை திரும்பிப் போனதாகக் கருதினால் தவறு.
அ. தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்படும் ஆணைகள், அறிவிப்புகள், அறிவிக்கைகள் ஆகியவை தமிழில் இருந்தால் மட்டுமே செல்லத்தக்கவை.
அ. தமிழில் உள்ள படியல்கள் மட்டுமே ஏற்கத்தக்கவை.
இ. தமிழில் ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் மட்டுமே ஏற்புடையன.
என்னும் நிலை தமிழ்நாட்டில் வருவது அரசாணைகளால் மட்டுமே நிகழக்கூடியது அல்ல என்பதைக் கடந்த காலம் உணர்த்தியுள்ளது.
          அரசுப்பணியென குறுகிய வட்டத்தில் இல்லாமல் தமிழ்நாடெங்கும் தமிழ் இருக்கவும் இந்தியாவின் பெயரைத் தமிழுக்குச் சிறப்பு செர்க்கும் வகையில் மாற்றித் தமிழுக்கு உரிய இடம் கிடைக்கவும், தமிழ் ‘வாழும் மூத்தமொழி’ என்ற தகுதி பெற்று உலகெங்கும் போற்றி வளர்க்கப்படும் நிலை உருவாகவும் ஆவன செய்து தமிழின் தேவை மதிப்பை உயர்த்தை, இறை வழிபாட்டு மொழி, கல்வி மொழி, வணிக மொழி, அலுவல் மொழி, தொடர்பு மொழி என அனைத்து நிலையிலும் தமிழ் இருக்க வகை செய்தால் தானாகவே தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் நிறைவேறும்.அதற்கான வாய்ப்புக்களங்களை உருவாக்க நாம் முனையாததால், விதிவிலக்குகள் பெயராலும், கணினி போன்ற அறிவியல் நலன்கள் பெயராலும், நடுவணரசு திட்டங்கள், உலக அமைப்புத் திட்டங்கள் பெயராலும், தமிழின் பயன்பாடு சுருங்கியதாகவே இருக்கும்.
            எனவே தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் என்பது ஓர் இனிய கனவேயன்றி வேறில்லை.
செய்தக்க அல்ல செயக் கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.        
[பி.கு.: கட்டுரை முடிந்தது. ஆனால், கனவு முடியவில்லை. இன்றைக்கும் நாம் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் நடைபெற்று வருவதாகக் கனவுகாண்கிறோம்.அவ்வப்பொழுது மாவட்ட ஆட்சியர் அல்லது செயலர் அல்லது அமைச்சர், தமிழில் கையொப்பம் இடாதவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பார்கள். அதிலேயே நாம் மனம் நிறைந்து அடுத்த   கனவிற்குப் போய்விடுவோம். தமிழ் ஆட்சி மொழி என்பது அரசு அலுவலகங்களுக்கு மட்டும் என்றில்லாமல், தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் அனைத்து இடங்களிலும் தமிழ் பயன்பாட்டில் இருக்கும் நிலை என்றடைந்தால்தான் உண்மையான செயலாக்கம் எனலாம். மத்திய அரசில் தமிழ் ஆட்சிமொழி யாக வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் அதை விட வேகமாக இங்கே உண்மையான தமிழாட்சியும் தமிழ்க்கல்வியும் இருக்கப் பாடுபட வேண்டும். தமிழரல்லாதவர் கைகளில் செல்வாக்கு இருக்கும் வரை இவை யாவும கனவே! இப்படியே போனால், அடுத்த தலைமுறையினருக்கு நம் கனவுகளைத்தான் நாம் ஆவணங்களாக விட்டுச் செல்வோம்! எனவே, தமிழில்லாச் சூழலை அகற்ற அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபடவேண்டும். – அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!]
ilakkuvanar_thiruvalluvan+10இலக்குவனார் திருவள்ளுவன்


Wednesday, March 11, 2015

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு :3 – இலக்குவனார் திருவள்ளுவன்

prize-cup
[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்
2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல்
“தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்”
என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில்
வாசிக்கப் பெற்ற கட்டுரை.]
படிவங்கள் , பதிவேடுகள்:-
            1973 ஆம் ஆண்டில் படிவங்கள், பதிவேடுகள் ஆகிய அனைத்தும் தமிழில்தான் அச்சிட்டு வழங்கப்பட வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் அச்சிடப்பட வேண்டிய சில இருப்பின் தமிழ் வளர்ச்சி இயக்குநரின் இசைவைப் பெற்று, இசைவு பெறப்பட்ட சான்றையும் இணைத்து அச்சிட வேண்டும் என்றும், எழுதுபொருள் துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்பாக 1981ஆம் ஆண்டும் ஒர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் ஆங்கிலத்தில் படிவங்களும் பதிவேடுகளும் அச்சிடப்படுவதற்கு முற்றுப் புள்ளி இல்லை. சிலவகைப் பதிவேடுகள், படிவங்கள் கூட்டுறவு அச்சகங்களில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு வருகின்றன. தமிழில் உள்ள காவல்துறை, நீதிமன்றத்துறை போன்றவற்றின் படிவங்கள் பல தமிழ் எழுத்திலான அயற்சொற்களைப் பயன்படுத்தியே அச்சிடப்படுகின்றன. படிவங்கள் தமிழில் இருந்தாலும், ஆங்கிலத்தில் எழுதக்கூடியவர்கள், படிவங்கள், பதிவேடுகள், ஆங்கிலத்தில் உள்ளமையால் ஆங்கிலத்தில் எழுதுவதைத் தொடருகின்றனர். இவற்றைத் தமிழில் வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு. எனினும் ஆங்கிலப்படிவங்களிலும் ஆங்கிலத் தலைப்புகள் உள்ள பதிவேடுகளிலும் தமிழில் எழுதும் உணர்வு இல்லாத பணியாளர்களின் செயற்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் நாம் கனவு காண்பது ஏன் என்று தெரியவில்லை.
நடுவணரசின் கணக்காய்வுத் துறையும், நமது அரசின் கருவூலத் துறையும்
            கருவூலப் பட்டியல்கள் முதலானவற்றில் ஆங்கிலம் பயன்படுத்த வேண்டும் எனக் கூறுவதற்குத் தெரிவிக்கப்படும் காரணம், இவை நடுவணரசின் கணக்காய்வுத் துறைத் தணிக்கைக்கு உட்படுவன என்பதே. பிற மாநிலங்களில் ‘மண்ணின் மைந்தர்கள்’ கொள்கை ‘வேரூன்றிய பின், தமிழ்நாட்டில் இத்துறையில் பணியாற்றுவோரில் பெரும்பாலோர் தமிழ்நாட்டு மக்களாகவே உள்ளனர். மேலும், இவர்களுக்கு அ.ஆ.ப.வ. 1084 பொது (த.வ.1.) துறை நாள் 25.5.1966 ஆணையின்படி வாரம் இருநாள் என்ற முறையில் 11 திங்கள் தமிழில் எழுதவும், படிக்கவும் பயிற்சி அளிக்கப்படுள்ளது. எம்மடலும் தமிழில் அளிக்கப்பட்டது எனக் கூறித் திருப்பி அனுப்பக் கூடாது என்றும், தேவையெனில் மேலும் பயிற்சி பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையெழுத்திலுள்ள பணிப் பதிவேடுகளையெல்லாம் இதே கணக்காய்வுத் துறையினர்தான் ஆய்வு செய்து ஓய்வூதிய ஆணை பிறப்பிக்கின்றனர். ஆதலின் கருவூலப் பட்டியல்கள், தொடர்பான மடல் போக்குவரத்துகள், அறிக்கைகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கே தேவையில்லை. இதற்காகக் குரல் கொடுப்போர்தான் யாருமில்லை. என்றபோதும் நடுவரசிலோ, நடுவரசின் சார்புத்துறைகளிலோ பணியாற்றினாலே தம்மை இங்கிலாந்து நாட்டவராக எண்ணிக்கொள்ளும் நம் நாட்டவர் இருக்கும்வரை விதிவிலக்கும் அகலப்போவதில்லை; தமிழும் வரப்போவதில்லை என்ற உண்மையை நாம் இன்னும் உணராமல் இருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.
பரிசும் தண்டனையும்:-
            தமிழ் ஆட்சி மொழிச் செயலாக்கத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் அலுவலகங்களுக்குப் பரிசுக் கேடயங்களும், நல்ல முறையில் தமிழில் குறிப்புகளும் வரைவுகளும் எழுதும் பணியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்குவதுபோல், செயற்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இத்திட்டத்தை முழுமையாக்க முடியாதா என்ற எண்ணத்திற்கும் இடமில்லை. ஏனெனில் அரசாணை நிலை எண்-24 கல்வித்துறை நாள் 06.01.82 இன்படி தமிழ்நாடு குடிமுறைப் பணியாளர் (வகைப்பாடு, கட்டுப்பாடு மேல்முறையீடு) விதிகளின் கீழ் தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தைச் சரிவர நிறைவேற்றாத அரசு அலுவலகள், பணியாளர்கள் நடவடிக்கை எடுக்கலாம். நடவடிக்கை எடுக்கவேண்டிய துறைத்தலைவர்களும், துறைச் செயலர்களுமே, இக்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும்பொழுது அவர்கள் அவர்கள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்?. எத்தனையோ பெயரளவு ஆணைகளில் ஒன்றாகத்தான் இதுவும் உள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்தும், தமிழுக்குத் தடையும்:-
            தனியார் பள்ளிகள் பலவற்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது கிடையாது. சில பள்ளிகளில் சமசுகிருதப் பாடல் பாடிய பின்தான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும். ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா’ என்னும் தொடரை நீக்கியதாலோ, வரிகளை மாற்றியமைத்தாலோ பாடுவதில்லை என எண்ண வேண்டா. தமிழில் பேசினாலே தண்டனை வழங்கிவிட்டு, எப்படி நாம் தமிழ்த்தாய்க்கு வாழ்த்துப்பாடுவது என்ற ‘நடுநிலை உணர்வுதான்’ காரணம். தமிழில் பேசினால் தண்டனை வழங்குவதாகக் கூறுவதை உரியவர்கள் மறுத்தாலும், ஏறத்தாழ 90% பள்ளிகளில் இந்நிலை உள்ளது என்பதே உண்மை. (மதுரையிலும் சென்னையிலும் ஒவ்வொரு பள்ளியிலும் பயில்வோரைக் கேட்ட பொழுது, தமிழ் நாட்டில் தமிழன்னைக்குத் தடைவிதித்துள்ளது தெரிய வந்துள்ளது. இது பிற மாவட்டங்களுக்கும் பொருந்தும்) திங்களும், வெள்ளியும் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்ற கல்வி இயக்கத்தின் சுற்றாணை, தமிழ் வழங்கிய பள்ளிகளையும், இத்திசைக்குத் திருப்பி விட்டது. இத்தகைய உணர்வாளர்கள் நிறைந்துள்ள தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி குறித்து எண்ணுவதற்கே இடமில்லையே.
திருவள்ளுவர் ஆண்டு:-
            அரசாணைக்கிணங்க, அரசு ஆணைகளிலும் மடல்களிலும் தீர்ப்புகள் முதலாணவற்றிலும் திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப் பேற வேண்டும் என நாம்அறிவோம். ஒரு பகுதி ஆணைகளிலும் ஒரு சில துறைகளிலும், சில துறைகளின் அழைப்பிதழ்களிலும் தவிர வேறெங்கும் இவ்வாறு குறிக்கப்படுவதில்லை என்பதையும் நாம் அறிவோம். அடிக்கல் விவரங்களிலும் திருவள்ளுவர் ஆண்டு பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. ஏன் வான்புகழ் வள்ளுவர் கோட்டத்தில் கூடத் திருவள்ளுவர் ஆண்டு பொறிக்கப் பெறவில்லை. செய்தியிதழ்களில் இடம் பெறுவதில்லை. இதழாசிரியர் திருவள்ளுவர் ஆண்டைக் குறிக்க விரும்பினாலும், ‘தமிழ் வளர்ச்சி பற்றிய படைப்புகள் விற்பனைப் பெருக்கத்திற்குப் பயன்பட்டால் போதும் உள்ள படியே உணர்வை வளர்க்கக் கூடாது எனக் கருதும் வெளியீட்டாளரால் திருவள்ளுவர் ஆண்டு குறிப்பது மறுக்கப்படுகிறது. சில இதழ்களில் வெளியீட்டாளர் விரும்பினாலும் ஆசிரியரின் உரிமை அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப் பெறுவதில்லை. தமிழ் நாட்டிலுள்ள தொலைக்காட்சி நிறுவத்தினர், திருவள்ளுவர் ஆண்டைக் குறிக்க விரும்பினாலும், தில்லியின் கொள்கை முடிவு தடையாக உள்ளது.
            திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்துவதில் உள்ள குறைபாட்டையும் இங்கே நாம் குறிப்பிட்டாக வேண்டும். தமிழ் ஆண்டுக் காலவட்டம் அறுபதிற்குமான பெயர்கள் தமிழில் இல்லை; இப்பெயர்களே தமிழை இழிவு படுத்துவனவாக உள்ளன. முன்பு இக்காலப்பகுப்பு முறை இருந்து இருக்கலாம். பின்னாளில் இடப்பட்ட பெயர்கள், நமக்கு இழிவு தருவனவாகவே உள்ளன. இவ்விழிவினைப் போக்கவும், தொடர் ஆண்டைக் குறிக்கவும் எழுந்த உணர்வின் வெளிப்பாடே திருவள்ளுவர் ஆண்டு. அவ்வாறிருக்க நாம் திருவள்ளுவர் ஆண்டுடன் சமகிருதத்தில் உள்ள ஆண்டு பெயர்களையும் குறிக்க வேண்டும் என்பது இழிவைத் துடைக்க முழுமனமின்றி ஒப்புக்குப் பிறப்பிக்கப்பட்டதாகவே உள்ளது. அதற்காக இப்பெயர்களை மொழி பெயர்த்து மேலும் இழிவு சேர்க்க வேண்டா. எனவே 60ஆண்டுப் பெயர்களைக் குறிக்க வேண்டா எனத் தெளிவாகவே ஆணை பிறப்பிக்க வேண்டும்.
            மேலும் மற்றொரு குறைபாடும் உள்ளது. ஆங்கில ஆண்டின் 28(29) 30, 31 நாட்கள் உள்ள திங்கள் யாவை என்பது உலகம் முழுவதும் ஒரே வகையாகத்தான் உள்ளது. ஆனால் தமிழில் 29,30,31,32 நாட்கள் உள்ள திங்கள் யாவை என்பதில் தமிழ்நாடு அரசு வெளியிடும் நாட்காட்டியிலும், தனியார் வெளியிடும் நாட்காட்டிகளிலும் வேறுபாடுகள் உள்ளன. இதில் குழப்பமன்றி ஒரே சீராக அனைவரும் கடைபிடிக்கும் வண்ணம் நாள்கணக்கைத் தெளிவாக வரையறுத்து அதனையே அனைவரும் பின்பற்றுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
            திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்த வேண்டும் என்னும் அரசாணை அரசுத் துரைகளில் மட்டும் பயன்படுத்தினால் போதும் என்ற போக்கும் அரசுத் துரைகளிலும் ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்தினால் போதும் என்ற வழக்காறும் உள்ளது போல்தான் ஆட்சிமொழிச் செயலாக்கம் குறித்த ஒவ்வோர் ஆணையின் நிலைப்பாடும் உள்ளது. எனவே ஆட்சிமொழிச் செயலாக்கம் குறித்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாலோ, இனி பிறப்பிக்கப்படுவதாலோ ஆட்சிமொழிச் செயலாக்கம் முழுமையைடையும் என நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
(இனியும் காண்போம்)
- இலக்குவனார் திருவள்ளுவன்


Followers

Blog Archive