Monday, December 8, 2025

பிறருக்காக வாழும் பேரருள் நெஞ்சம்! – இலக்குவனார் திருவள்ளுவன், தாய் மின்னிதழ்




 ******

பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு

காமர் பொருட்பிணிப் போகிய

                           நற்றிணை 186 : 8-9

முழுப் பாடல்:

கல்லூற்று ஈண்டல கயன்அற வாங்கி
இரும்பிணர்த் தடக்கை நீட்டி நீர்நொண்டு
பெருங்கை யானை பிடியெதிர் ஓடும்
கானம் வெம்பிய வறம்கூர் கடத்திடை
வேனில்ஓதி நிறம்பெயர் முதுபோத்துப் 5
பாண்யாழ் கடைய வாங்கிப் பாங்கர்
நெடுநிலை யாஅம் ஏறும் தொழில்
பிறர்க்கென முயலும் பேரருள் செஞ்சமொடு
காமர் பொருட்பிணிப் போகிய
நாம்வெங் காதலர் சென்ற ஆறே! 10

நற்றிணை: 186

இயற்றிய புலவர் : பெயர் தெரியவில்லை

திணை : பாலை

துறை : பிரிவிடை மெலிந்த தோழிக்குத் தலைவி சொல்லியது

சொற்பொருள் :

கல் ஊற்று=கல்லின் இடையே உள்ள ஊற்று; ஈண்டல நீர்=அவ்வூற்றில் சேர்ந்து நிரம்பும் நீர்; கயன்=ஊற்றுநிலை; அற வாங்கி=அவ்விடத்து நீர் முற்றிலும் இல்லாது போகுமாறு; இரும்பிணர்த் தடக்கை=பெரிய மடிப்புப் பிடிப்புகள் கொண்ட வளைந்த கை;

நீட்டி=அந்நீண்ட துதிக்கையை நீட்டி; நொண்டு=மொண்டு; பெருங்கை யானை=பெரிய கையையுடைய யானை; பிடி எதிர் ஓடும் – தன் பெண்யானையினெதிரே ஓடும்; கானம்=காடு; வெம்பிய=வெப்பமடைந்த; வறம்=வறட்சி; கூர்=மிகுந்த; கடத்து இடை=காட்டிடையே;

வேனில்=வேனிற்காலம்; ஓதி=ஓந்தி; நிறம் பெயர்= மாறி மாறித் தன்னிறத்தை மாற்றிக் கொள்கிற; முது போத்து=முதிய போத்து; பாண்=பாணர்; யாழ் கடைய வாங்கி=யாழ் வாசிப்ப; பாங்கர்=பக்கத்தில்; நெடுநிலை=உயர்ந்து நிற்கும்; யாஅம்=யாமரத்தின் மீது;

ஏறும் தொழில்=ஏறுந்தொழிலையுடைய; பேர் அருள் நெஞ்சமொடு=பெரிய அருள் மிக்க நெஞ்சுடனே; காமர்=அழகிய; பொருட்பிணி போகிய=பொருளாசையைப் போக்கிய; நாம்வெங் காதலர்=நாம் விரும்பும் காதலன்; சென்ற ஆறே=சென்ற வழி.

பிணர் என்றால் சருச்சரை என்றே குறிப்பிடுகின்றனர். இது சரிதான் என்றாலும் இக்காலத்தில் இச்சொல் புரியா நிலையில் உள்ளதால், சொர சொரப்பான எனக் குறித்துள்ளேன்.

நிறம் மாற்றிக் கொள்ளும் ஓந்தி என்பதால் பச்சோந்தி எனப் புரிந்து கொள்ளலாம்.

எளிய சுனையில் நீர் எடுக்காமல் கல்லூற்றிலிருந்து நீர் எடுப்பதால், அந்த அளவிற்கு சுனையில் நீர் இல்லாமல் வறட்சி மிகுந்த காலம் எனப் புரிந்து கொள்ளலாம்.

யா மரம் வறண்ட பாலை நிலங்களில் வளரும். எனவே, வறட்சியான பாலை நிலத்தில் தலைவன் செல்வதைப் புரிந்து கொள்ளலாம்.

பிடி என்றால் பெண் யானை. எனவே இதில் குறிப்பிடும் யானை ஆண் யானை. களிறு என்றால் ஆண்யானை.

ஆனால், ஆண் பன்றியையும் களிறு என்றே குறிப்பிடுகின்றனர். ஆதலின் வேறுபடுத்த களிற்று யானை என விளக்குகின்றனர்.

பொருளாசையும் நோய் போன்றதே. எனவேதான் பொருட் பிணி எனப் புலவர் குறித்துள்ளார்.

பாடற் பொருள்:

கல்லின் இடைய உள்ள ஊற்றில் நீர் சுரக்கிறது. ஊற்றில் நீர் நிரம்பாத வகையில் யானை தன் சொரசொரப்பான துதிக்கையை நீட்டி, நீரை முகந்து கொண்டு பெண் யானைக்குக் கொடுக்க ஓடும். அது வேனிற்காலம்.

ஆண் பச்சோந்தி தன் முதுகை யாழ்போல் வளைத்துக் கொண்டு உயர்ந்த யா மரத்தில் ஏறுகிறது.

அந்த வழியில்தான் காதலராகிய தலைவன் நீர் வறட்சியுடைய அத்தகைய காட்டில் தன் வாணாளும் ஈட்டும் பொருளும் பிற எல்லாமும் பிறருக்காகத்தான் என்ற முடிவுடன் முயற்சி மேற்கொண்டு சென்று கொண்டுள்ளார்.

புறநானூற்றுப் பாடல் ஒன்றில், கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி,

“உண்டால் அம்ம இவ்வுலகம்” எனத் தொடங்கும் பாடலில் அதற்கான காரணத்தைத்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே

என முடிக்கிறார்.

“தமக்காக வாழாமல், பிறருக்கென முயலும் பேருள்ளம் கொண்டவர்கள் உலகில் இருப்பதால்தான் இந்த உலகம் நிலைபெற்று இயங்குகிறது” என்கிறார் அவர்.

ஈதல் இசைபடவாழ்தல்” (திருக்குறள் ௨௱௩௰௧ – 231) எனத் திருவள்ளுவர் கூறுவதே பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பதற்காகவே.

தன்னலமின்றிப் பிறர் நலம் பேணி வாழ வேண்டுமெனெவே சான்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழர் நெறியும் நாம் உழைக்க வேண்டியது நமக்காக அல்ல. பிறருக்காக என்பதே. பல சங்கப் பாடல்களும் இதனை வலியுறுத்துகின்றன. அதையேதான் இப்பாடல் மூலம் நாம் உணரலாம்.

எனவே, நாம்,

            பிறர் நலத்திற்காக வாழ்வோம்!

Sunday, December 7, 2025

குறட் கடலிற் சில துளிகள் 37 : சிறுமைப்பண்புகளில் இருந்து விலகி இரு! – இலக்குவனார்திருவள்ளுவன்


 (குறட் கடலிற் சில துளிகள் 36 : நல்லார் தொடர்பைக் கைவிடாதே! – தொடர்ச்சி)

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௧ – 451)

பெருமைப்பண்பு சிற்றினத்தைக் கண்டு அஞ்சும்; சிறுமைப்பண்பு சிற்றினத்தையே சுற்றமாகக் கொள்ளும்.

பதவுரை: சிற்றினம்-சிறுமைக் குணத்தை ; அஞ்சும்-அஞ்சி ஒதுங்கும்;  பெருமை-பெருமைப் பண்பு;  சிறுமைதான்-சிறுமைப்பண்பு ; சுற்றமா-சிறுமைக் குணத்தையே உறவாக; சூழ்ந்துவிடும்-சூழவும் பிணைத்துக் கொள்ளும்.

பெருமை என்பதற்குப் பெருமைப்பண்பு உடைய பெரியோர் என்றும் சிறுமை என்பதற்குச் சிறுமைக் குணம் உடைய சிறியோர் என்றும் அனைவரும் விளக்குகின்றனர்.

தீயனைக் கண்டால் தூர விலகு” என்பர். எனவே, சிறுமைக் குணம் உடைய தீயவனைக் கண்டு ஒதுங்க வேண்டும் எனவே, பெருமைப் பண்புடையோர் கருதுவர். பெரியோர் என்று கருதாமல் பெருமைப் பண்பு உடைய யாரும் அவ்வாறுதான் நடந்து கொள்வர் எனக் கருத வேண்டும். எனவேதான் பெரியோர் என்று சொல்லாமல் பெருமைப்பண்பு எனக் கருத வேண்டும். அதைப்போல்தான் சிறியோர் என்று கருதாமல் சிறுமைப்பண்பு எனக் கருத வேண்டும்.  அதனாலதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெரியோர், சிறியோர் என்று கூறாமல் பண்பின் அடிப்படையில் பெருமை, சிறுமை எனக் கூறியுள்ளார்.

“இனத்தோடே இனம்சேரும்” என்கிறார் சொக்கநாதப் புலவர்

அல்லி பெற்ற பிள்ளை(1959) என்னும் திரைப்படத்தில் பாடலாசிரியர் அ. மருதகாசி

“எசமான் பெற்ற செல்வமே!” எனத் தொடங்கும் பாடலில்

தீயவரோடு நீ சேராதே நம்பி!

என எழுதியிருப்பார்.

“இனத்தை இனம் சேரும்”

“இனத்தை இனம் தழுவும்”

“இனம் இனத்தோடே”

“இனம் இனத்தோடு சேரும்”

என்பன பழமொழிகள்.

நாம், நல்லோரை அறிந்து நல்லோர் கூட்டத்தில் சேர வேண்டுமே தவிர, தீய இனத்தவருடன் சேரக் கூடாது. எனவேதான் உலகநாதரும் உலகநீதியில்,

“வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டா”

என்கிறார். சிறுமைப்பண்பினர்தானே வஞ்சனைகள் செய்வர்.

சிற்றினச் சேர்க்கையால் தீயனவே விளையும் என்பதால்தான், பெருமைப் பண்பினரும் பெரியோரும்  சிறியவரோடு பழக அஞ்சுவர்; கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள். ஆனால், சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்.

சிறுமைப் பண்புகளினால் நாம் ஈர்க்கப்படாமல் இருக்க வேண்டுமானால், நாம் பெருமைப் பண்புகளுடன் திகழ வேண்டும். அப்போதுதான் சிறியாரோடு சேராமல் இருக்க முடியும்.

எனவே, சிறுமைப் பண்புகளில் இருந்து விலகி இருப்போம்!

Saturday, December 6, 2025

சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 7: இலக்குவனார் திருவள்ளுவன்



(சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 6: தொடர்ச்சி)

செம்மொழி அரசு ஏற்பால் தமிழ் பெறும் பயன்கள் என்று பல்வேறு அறிஞர்கள் கட்டுரை அளித்தார்கள். நானும் கட்டுரை யளித்தேன். அது மலேசிய இதழ் ஒன்றிலே வந்திருந்தது, புதிய பாரதம் இதழிலும் ஒரு கட்டுரை அளித்தோம். ஆனால் அவை அனைத்தும் கற்பனை! கற்பனை! கற்பனைதான்! அவற்றில் கதை அளந்திருப்போம். எங்கெங்கெல்லாம் தமிழ் வளரும் என்று பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழ் வளரும், பல்கலைக்கழகங்கள், கல்விக்கூடங்கள், பன்னாட்டு அமைப்புகள், மொழி கலை பண்பாட்டு அமைப்புகள், இலக்கிய படைப்புகள், தகவல் ஊடகங்கள் எங்கு பார்த்தாலும் இங்கே தமிழ் வளரும் செழிக்கும் என்று எழுதினோம். ஆனால் ஒன்றும் நடைபெறவில்லை. ஏதோ இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடுவது போன்று காற்று வாக்கில் போவது போல் ஆகிவிட்டது. ஆனால் அவர்கள் தவறான கருத்தைத் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். மறுப்பு தெரிவித்தோம். தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்? உண்மையான தமிழ் ஆய்ந்த தமிழ் அறிஞர்களைக் கொண்டு, ஏன் உண்மையான என்றால் தமிழ் அமைப்பு என்றால் தமிழ் பயின்றவர்க்கு முதலிடம் தர மாட்டார்கள். தமிழர்கள் இடம் பெற மாட்டார்கள்எந்தக் கட்சி ஆட்சி நடத்தினாலும் தமிழ் பயின்றவர்க்கு முதலிடம் தர மாட்டார்கள். அது அப்படி யாரேனும் தமிழ் அறிந்தவர்கள் வந்திருந்தால் அவர்கள் தன் அறிவுத்திறனை வெளிப்படுத்தாமல் அரசிடம் ஆதாயம் பெறுவதற்காக ஏதும் ஒரு செல்வாக்கு, செல்வத்தை அடைய வந்தவர்களாக இருப்பார்கள். தமிழுக்குக் குரல் கொடுக்க மாட்டார்கள். அவ்வாறல்லாமல் தமிழாய்ந்த தமிழ் அறிஞர்களைக் கொண்டு ஒரு பெரிய குழுவை நியமிக்க வேண்டும். நியமித்து இந்த ஒன்றிய அரசின் மூலமாக என்னென்ன செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு என்னென்ன செய்ய வேண்டும். தமிழுக்கு எவ்வாறெல்லாம் நிதி ஒதுக்கீடு கேட்க வேண்டும் என்றும் அதன் அடிப்படையிலே நாம் ஒன்றிய அரசை நிதி கேட்க வேண்டும். நிதி கேட்காமல், நிதி கொடுத்தார்களா கொடுத்தார்களா என்று கேட்காதே, அதேபோல் மீண்டும் சொல்கிறேன் ஒன்றிய அரசு நிதி கொடுப்பது தவறு அல்ல. ஏன் தவறு அல்ல என்றால் சமற்கிருதத்திற்காக அத்தனைத் திட்டங்களைச் செயல் படுத்துகிறார்கள். அதற்குப் பணம் தேவைப்படுகிறது. அதே நேரம் என்ன தவறு என்றால் இத்தனைத் திட்டங்களும் தேவையற்ற திட்டங்கள், மக்களை ஏமாற்றும் திட்டங்கள், போலித் திட்டங்கள், சமற்கிருதத்தை உயர்வாகச் சொல்லக்கூடிய திட்டங்கள் . ஆக அந்த வகையிலே தேவை இல்லைதான், ஆனாலும் கூட நடைமுறையில் இருக்கும் வரை செய்யத்தானே செய்வார்கள். அந்த நடைமுறைத் திட்டங்களைத் தூக்கி எறிய வேண்டும். ஒரேடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாக சமற்கிருத நிறுவனங்களை எல்லாம் குறைக்க வேண்டும். எண்ணிக்கை குறைத்து அவ்வாறு குறைப்பதன் வாயிலாக அந்த இடங்களில் தமிழைக் கொண்டு வர வேண்டும் .இவ்வாறு திட்டங்கள் தீட்ட வேண்டும். ஆக அரசு அமைக்கிற ஆணையமோ அமைப்போ என்ன செய்ய வேண்டும். முதலில் குறிப்பிட்டது போன்று மாநிலங்கள் தோறும் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் எப்படி அமைப்பது- எப்படி தமிழ்க் கல்வி நிறுவனங்களை அமைப்பது எனச் சிந்தித்து ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள் நிறுவ வேண்டும்.

இந்த மேத் திங்கள் அமித்துசா அவர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில்தான் புதுதில்லி முதலமைச்சர் அவர்கள் தெய்வ மொழி சமற்கிருதம் என்று மீண்டும் பேசினார். அது என்ன நிகழ்ச்சி தெரியுமா? 2008 ஆவது சமற்கிருத உரையாடல் நிகழ்ச்சி. தில்லியில் உள்ள 2000 பேருக்கிடையேயான சமற்கிருத உரையாடல்- பேசுவது எப்படி?, பிற மொழிக் கலப்பின்றி சமற்கிருதத்தில் பேசுவது எப்படி? என்ற நிகழ்ச்சி. இது நாடெங்கிலும் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இருக்கிறது. சென்னையிலும் இருக்கிறது. அது மட்டுமல்ல அந்த பத்து நாள் உரையாடல் முகாம் முடிந்த பிறகு அவர்களை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்று அரசின் – சொந்த செலவில் அழைத்துச் சென்று – தங்க வைத்து அங்கு முழுக்க முழுக்க சமற்கிருதத்தில் பேச வேண்டும் என்று பயிற்சி கொடுக்கிறார்கள். இவ்வாறெல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இங்கு எங்கே தமிழைப் பேசுகிறார்கள். அலைபேசியில் தமிழ் இல்லை ,தொலைக்காட்சியில் தமிழ் இல்லை , தமிழைக் கொலை பண்ணால்தான் தொலைக்காட்சி வாய்ப்பு என்றாகி விட்டது. இப்பொழுதெல்லாம் ஊடகங்களில் தமிழே இல்லாமல் இருக்கிறது. இதற்கெல்லாம் அரசு பயிற்சி தருவது மட்டும் அல்ல பயிற்சிக்கான நிதி ஒதுக்கீடும் தரவேண்டும் . ஆகத் தமிழாய்ந்த தமிழ் அறிஞர்களைத் தலைவராகக் கொண்டு, தமிழாய்ந்த தமிழ் அறிஞர்களை உறுப்பினராகக் கொண்டு, தமிழுக்குச் செய்ய வேண்டியன என்ன என்ன என்று திட்டம் தர வேண்டும். அ’தாவது இதுவரை பலர் எழுதி இருக்கிறார்கள் அதில் இருந்து கருத்துகளை வாங்கிக் கொண்டு அல்லது எடுத்துக் கொண்டு திட்டத்தைக் கொடுக்க வேண்டும்.

(தொடரும்)

இணைய வழி உரையின் எழுத்தாக்கம்

13.07.2025

நாலடி நல்கும் நன்னெறி 20: – பிறன் மனைவியை விரும்பாதே: இலக்குவனார் திருவள்ளுவன்



(நாலடி நல்கும் நன்னெறி 19: – பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொள்க: தொடர்ச்சி)

புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்

துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்

எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ

உட்கான் பிறன்இல் புகல்.

(நாலடியார், ௮௰௩-83)

பொருளுரை:

பிறர் மனைவியை விரும்பி அவள் வீட்டிற்குள் புகும் பொழுது அச்சம்; அங்கிருந்து திரும்பி வெளியே வரும்பொழுதும்  அச்சம்; அவளுடன் சேர்ந்து இன்பம் துய்க்கும்போதும் அச்சம்; இக்கள்ள உறவைப் பிறர் யாரும் அறியாமல் காப்பதிலும் அச்சம்; இவ்வாறு பிறன் மனைவியை நயத்தலால் எப்போதும் நேருவது அச்சம்; இவற்றையெல்லாம் எண்ணிப் பாராது ஒருவன் பிறன் மனைவியை விரும்புவது எதை எதிர்பார்த்தோ?

பதவுரை

புக்க இடத்து= பிறன் மனைவி இருக்குமிடத்திற்குப் புகும் போதும்; அச்சம்= அச்சம்; துய்க்கும் இடத்து=அடையும் போதும்; அச்சம்= அச்சம்; தோன்றாமல்= இச்செய்தியைப் பிறர் அறியாத வகையில்; காப்பு=காத்தலும்; அச்சம்= அச்சம்;  எக்காலும்=எந்நாளும்; அச்சம்= அச்சம்; தருமால்= விளையும் ஆகையால்; உட்கான்=அஞ்சாதவனாய்; பிறன் இல்=பிறன் மனையாள் இல்லத்தில்; புகல்= புகுதல்; எவன் கொல்=என்ன பலன் குறித்தோ?

உட்குதல் என்றால் கருதுதல் என்றும் பொருள். எனவே, உட்கான்=கருதாதவனாய், அஃதாவது இவற்றையெல்லாம் கருதிப்பார்க்காதவனாய் என்றும் கூறலாம்.

அச்சம் என்னும் சொல் ‘அச்ச’ என்னும் சமற்கிருதத்தில் இருந்து வந்ததாகத் தவறாகச் செ.சொ.பி.பேரகரமுதலி காட்டுகிறது.

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப .

என மெய்ப்பாட்டில் ஒன்றாக அச்சம் என்பதைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். ‘மெய்ப்பாடு என்ப’  எனக் கூறுவதால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இச்சொல் இருப்பதை அறியலாம். இத்தகைய தொன்மையான தமிழ்ச்சொல்லைச் சமற்கிருத மூலத்திலிருந்து வந்ததாகக் கூறுவது பொருந்தாது.

கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

(பெண்கள் விடுதலைக்கும்மி, செய்யுள் : 5) என்று பாரதியார் பாடியுள்ளார். இவ்வரிகளை அறிந்தவர்கள் பாரதியார் வந்துதான் ஆண்கள் கற்பை வலியுறுத்தியதாகக் கூறுவர். இது மிகவும் தவறு. திருவள்ளுவர்(திருக்குறள்-பிறனில் விழையாமை), திருமூலர்(திருமந்திரம், 0.01.11 – முதல் தந்திரம் – பிறன்மனை நயவாமை), நாலடியார்(பிறன் மனை நயவாமை) முதலிய தமிழ்ப் புலவர்கள் பலரும் பிறன் மனை நயவாமையை வலியுறுத்துகின்றனர். இஃது ஆடவரின் கற்பை வலியுறுத்துவது அல்லாமல் வேறு என்ன?

அச்சத்துடன் தவறு செய்வதற்கு அஞ்சாமல் ஒழுக்கமாக வாழலாம் அல்லவா?

பிறன்மனை நயத்தல் என்றால் ஆடவர் பிறருக்குரிய பெண்டிரை விரும்புவதாகவே பொருள் கூறப்படுகின்றது. இன்றைக்குப் பிறருக்குரிய ஆடவரை விரும்பும் பெண்டிருக்கும் இது பொருந்தும்.

பிறன்மனை விழையாது நல்லொழுக்கத்துடன் வாழ்வோம்!

Thursday, December 4, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 12 : பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரும் மோசடி– இலக்குவனார் திருவள்ளுவன்



(தொல்காப்பியமும் பாணினியமும் – 11 : முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்– தொடர்ச்சி)

தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த நடுநிலையான பொருளுரையைப் பேரா.ப.மருதநாயகம் அளித்துள்ளார். பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி, ஏமாற்றுவேலை. ‘ஆதிபாஃசா’ நூலில் சட்டம்பி அடிகளார், தமிழிலிருந்து பிராகிருதமும் பிராகிருதத்திலிருந்து சமற்கிருதமும் தோன்றியது என்னும் வரலாற்று உண்மையை மெய்ப்பிக்கிறார். பேரா.சி.இலக்குவனார் அவர்களும் அவர் வழியில் அறிஞர்கள் பலரும் தொல்காப்பியத்தில் இடம் பெற்ற இடைச்செருகல்களை நீக்கினால் தொல்காப்பியம் முரண்பாடு இன்றிச் செம்மையாக இருக்கும் என நிறுவியுள்ளனர். இவை போன்ற அறிஞர்களின் கருத்துகளை எடுத்துக் கூறித் தொல்காப்பியம் சமற்கிருதத் தழுவலன்று எனத் தெரிவிக்கிறார்.(இலக்குவனார் திருவள்ளுவன், தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்)

ஒலியன்கள்

தமிழில் ஒலியன்கள் சரியாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் எழுத்துகளை உருவாக்கியவர்கள் ஒலியன்கள்பற்றி நன்கு அறிந்திருக்கின்றனர். அறிவியல் கருவிகள் இல்லாத காலத்திலேயே தமிழ்ப் பேச்சொலிகளைத் துல்லியமாக அடையாளம் காட்டியிருப்பது வியப்புக்குரியது என ஒலியனியல் வல்லுநர் தானியல் இயோன்சு(Daniel Jones) வியந்து பாராட்டுகிறார். சமற்கிருத இலக்கணம்-மொழியியல் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர்பணினி. இவர் அம்மொழியின் ஒலியனியல், உருபனியல் என்பவை தொடர்பில் அறிவிய் அடிப்படையிலான பகுப்பாய்வுகளைச் செய்துள்ளா் என்று விக்கிபீடியா கூறுகிறது.மேலும் சில தளங்களிலும் இக்கருத்துகளைக் காணலாம். இதற்கெல்லாம் காரணம் தொல்காப்பியம் இன்றைய ஒலியனியல் கருத்துகளை அன்றே அறிவியல் அடிப்படையில் கூறியுள்ளார் என அறிஞர்கள் கூறுவதால் பாணினியத்திலும் இருப்பதாகப் பொய்யுரைப்பதே ஆகும்.

அரித்தாட்டில் காலத்திற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே நடைமுறையில் இருந்த தமிழ்நெறி

மிக்குசிகன் மொழியியல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஏ.எல்.பெக்கர்(A.L.Becker), கீத்து தெயிலர்  (Keith Tailor) ஆகிய இருவரும் தொல்காப்பியர் அறிவுலகிற்குச் செய்த பணி பிளேட்டோவும் அரிட்டாட்டிலும் மேலை அறிவுலகிற்குச் செய்த பணியை ஒத்தது எனப் பாராட்டுகின்றனர். இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியர் பேரா.முனைவர் சி.இலக்குவனார், “… ஆதலின், கிரேக்க நாட்டு அரிட்டாட்டில் காலத்திற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே தமிழகத்தில் இலக்கிய நெறி முறைகள் வகுக்கப்படுப் பயிலப்பட்டுப் பாடப்பட்டு வந்தன என அறியலாம்.” (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 149-150) என்கிறார்.

மொழியியலின் மீவுயர் பேராசன்

புலப்பாட்டுநெறி, யாப்பிலக்கணம், கவிதையியல் ஆகியவைபற்றிய முழு இலக்கணம் தந்தவரென்றும் மொழியின் அடித்தளப் பேச்சு வழக்கிலிருந்து கவிதை மொழி வரையிலான மொழியின் எல்லாக் கூறுகளையும் மொழியியல் ஆய்விற்கு உரிய பொருளாக எடுத்துக் கொண்டவரென்றும் மொழியியலின் மீவுயர் பேராசன் என்று அழைக்கப்பட வேண்டியவரென்றும் தொல்காப்பியரின் உயர்வை ஏ.கே.இராமானுசன் சிறப்பிக்கிறார்.(முனைவர் மருதநாயகம், வடமொழி ஒரு செம்மொழியா?, பக்கம் 606)

இடைச்செருகல்கள்

தமிழ் நூல்களிலான இடைச்செருகல்கள் அதன் அழகையும் மதிப்பையும் குறைக்கவும் ஆரியததைத் திணிக்கவும் உண்டாக்கப்பட்டவை. என்று ஆய்வறிஞர்கள் நிலை நாட்டியுள்ளனர். சமற்கிருத நூல்களில் உள்ள இடைச்செருகல்கள் அவற்றுக்கு இல்லாச் சிறப்புகளை இருப்பதுபோல் காட்டுவதற்காகத் திணிக்கப்பட்டவைஏ.சி.பருனல்(The Ainthira school of sanskrit grammarians , பக்.102)

முனைவர் சி இலக்குவனார் தம் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொல்காப்பிய நூலில், மரபியல் பகுதியில் 24 நூற்பாக்களை உடுக்குறி(*)யால் இடைச்செருகல் எனப் பாகுபடுத்தியுள்ளார்.

மக்களில் பிறப்பால் வரும் நான்கு வருண உடைமைகளைக் கூறும் நூற்பாக்கள் 15 (71-85); செய்யுளியலில் கூறாமல் மரபியலின் இறுதியில் தொடர்பில்லாமல் சேர்க்கப்பட்டிருக்கும் 9 நூற்பாக்கள்; ஆக  24 நூற்பாக்கள். மேலும், அகத்திணையியலில் பிரிவைப் பற்றிச் சொல்லும்போது, 13 நூற்பாக்களில் (24 முதல் 36) குலப் பிரிவு சேர்க்கப்பட்டுக் குழப்பம் செய்யப்பட்டுள்ளது. இவையும் இடைச்செருகல்கள் என்பது தெளிவு.

இவை இடைச்செருகல்களே என்பதை உரையாசிரியர்களின் மேற்கோள்களால் அறியலாம். சங்கநூல் பாடல்களில் இவற்றிற்கான மேற்கோள் பாடல்கள் இல்லாமல் பண்டைய உரையாசிரியர்களே புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கல விருத்தி முதலான பிற்கால நூல் தரும் பாடல்களைத் தருகின்றனர்

இடைச்செருகல்கள் குறித்து அப்போது நிதியமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன், சென்னை புத்தகக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில்(2.01.2010) நடைபெற்ற நிகழ்ச்சியில், “தொல்காப்பியர் காலத்தில் இல்லாத மரபுகள், கலாசாரங்கள், மேல்சாதி – கீழ்சாதி முறைகள், 4 வகை சாதி அமைப்புகள், மனு வருணாசிரம முறைகள் குறித்த கருத்துகள் உரைகளில் இடைச்செருகல்களாகப் புகுந்துள்ளன.

இந்த இடைச்செருகல்கள் களையப்பட்ட உரையைத் தொல்காப்பியத்துக்கு எழுத ச.வே.சுப்பிரமணியன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் முன்வர வேண்டும்”. எனப் பேசியுள்ளார்.

இவ்வுரையை ஒருவர் மின்மடலாடல் குழு ஒன்றில் பகிர்ந்துள்ளார். தமிழே தெரியாமல் ஆனால்  தங்களைத் தமிழறிஞர்களாகக் காட்டிக்கொண்டு தமிழுக்கு எதிராக எழுதியும் பேசியும்  வரும் கும்பல் எப்பொழுதும் இயங்கிக் கொண்டுள்ளது. அத்தகைய கும்பல் அறிஞர்கள் எவற்றை ஏன் இடைச்செருகல்களாகக் குறிப்பிடுகிறார்கள் என்றெல்லாம் ஆராயாமல், அவற்றிற்கு எதிரான மறு கருத்து இருப்பின் அவற்றைத் தெரிவிக்காமல் பொதுவாக மறுத்து எழுதியுள்ளனர். “நமக்குப் பிடிக்கவில்லை என்றால் இடைச்செருகல் என்பதா? ஏன், பிற இடைச்செருகல்களாக இருக்கக் கூடாது? தொல்காப்பியர் காலத்திலேயே சாதிப்பாகுபாடு இருந்தது. தொல்காப்பியம் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தது” என்பனபோன்று  எழுதியுள்ளனர். இவை போன்ற கருத்துகளைத் தம் கட்டுரைகளிலும் நூல்களிலும் தமிழ்ப்பகைவர்கள் உண்மைக்கு மாறாக எழுதியுள்ளனர்; எழுதி வருகின்றனர். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் தொல்காப்பிய இடைச்செருகல்கள் குறித்த கருத்துகளே வலிமை வாய்ந்தனவாக உள்ளன (தமிழ்த்துளி வலைத்தளம்). 

(தொடரும்)

Followers

Blog Archive