Tuesday, April 30, 2019

தனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

தனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக!

 வேலூரில் மட்டும்தான் வாக்கு வணிகம் நடைபெற்றதுபோல் தேர்தல் ஆணையம் அங்கே தேர்தலை நிறுத்தி விட்டது. வாக்கு வணிகம் நடைபெறாத தொகுதி என்று ஒன்றைச் சொல்ல முடியுமா? அல்லது வாக்கு வணிகர்கள் தேர்தலில் பஙகேற்கா வண்ணம் தேர்தல் ஆணையம்தான் எங்காவது நடவடிக்கை எடுத்துள்ளதா? ஒன்றும் இல்லை. அவ்வாறிருக்க, வேட்பாளர்களின் செல்வமும் உழைப்பும் மக்களின் வரிப்பணமும் நேரமும் வீணடிக்கப்படும் வகையில் தேர்தலை நிறுத்தியது ஏன்?
வேலூரில்  தேர்தலை நிறுத்தியதற்கு எல்லாக் கட்சியினரும் தமிழக அரசும் எதிர்ப்பு காடடியுள்ளனர். குற்றச்சாட்டிற்கு உள்ளானவரைத் தகுதி நீக்கம் செய்யாமல் ஒட்டு மொத்தத் தேர்தலை நிறுத்தியது தவறு என ஆளும் கட்சிக் கூட்டணியினர் சார்பாகவும் வேண்டுமென்றே திட்டமிட்டு வெற்றியைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் சூழ்ச்சி செய்வதாக எதிர்க்கூட்டணியினரும் தெரிவிக்கின்றனர். எனினும் தேர்தல் நடைபெறும். எப்பொழுது? பொதுத் தேர்தல் முடிவுகள் வந்த பின்பாகக் கூட இருக்கலாம்.
தேர்தலை விரைவில் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். ஆனால், இனிமேல் தனித்தனிக் கட்சி மேடைகளில் பரப்பவும் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்கவும் தடை விதிக்க வேண்டும். கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் வகையிலும் வாக்குகள் வாங்கப்படுகின்றன. வீடு வீடாகச் செல்வதன் மூலமும் வாக்குகள் வாங்கப்படுகின்றன. இவற்றை நிறுத்த வேண்டும் என்றால் இவ்விரண்டிற்கும் தடை விதிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையமே குறிப்பிட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து வேட்பாளர்களின் பரப்புரைகளுக்கு வாய்ப்பு தந்து, அவற்றைத் தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதனால் வேட்பாளர்கள் தத்தம் கருத்துகளைத் தெரிவிக்கவும் வாய்ப்பு தந்ததாக அமையும். வாக்கு வணிகத்திற்கான வாய்ப்புகளுக்குக் கதவு மூடப்பட்டதாகவும் அமையும்.
வேட்பாளர்களிடம் விண்ணப்பங்கள் பெறுதல்  என முதலில் இருந்து தேர்தல் நடைமுறைளைத் தொடங்கக் கூடாது. முன்னரே பதிந்து இறுதி வடிவம் எடுக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடத்தான் வாய்ப்பு தரவேண்டும். இதனால் வீண் செலவுகள் தவிர்க்கப்படும்.
அரசியல்வாதிகள் பேச்சில் வாய்மை இல்லை. எனவே, செய்யாததைச் செய்ததாகக் கூறுவர்.  செய்யமாட்டோம் என அறிந்தே செய்யப்போவதாகக் கூறுவர். அடுத்தவரை ஏசிப்பேசி இன்பம் காணும் அரசியல் சொற்பொழிவாளர்களும் உள்ளனர்.
இன்றைய அரசியல் சொற்பொழிவாளர்கள் எப்படி உள்ளனர்? பேதை நாக்கு குறித்து நாலடியார் விளக்குவதுபோல் இருக்கின்றனர்.
“பேதை நாக்கு  பிறரைத் திட்டுவதால் பயன் இல்லை என அறிந்தாலும் திட்டித் தின்னும்; திட்டுவதனால் ஏதோ பெற்றவன் போலத் திட்டும்; வஞ்சம் கொண்டு திட்டும்; காரணம் எதுவும் இல்லாமலே திட்டும்; எதிர்த்துப் பேச வாய்ப்பு இல்லாதவரையும் திட்டும்; சினம் பொங்கத் திட்டும்; இல்லாததும் பொல்லாததும் கோத்துக் கூறித் திட்டும்; நல்ல நாளிலும் திட்டும்; ஏதும் திட்டாவிட்டால் நாக்கு அவனையே தின்பது போன்று இருக்கும் எனத் திட்டும்” என்கிறது நாலடியார்.
பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் – கறுவினால்
கோத்தின்னா கூறி உரைக்காக்காக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல தினத்து. (நாலடியார்  335)
இவற்றை எல்லாம் தடுப்பதற்கு உதவுவது தனிப் பரப்புரைகளுக்கான தடையாகும். தனித்தனிப் பரப்புரைகளுக்குத் தடை விதிப்பதால் ஒலி மாசும் கட்டுப்படுத்தப்படும்;  மனமாசும் கட்டுப்படுத்தப்படும். எனவே, பரப்புரைகளுக்கான இடங்கள், நேரங்கள் ஆகியவற்றை வரையறுத்துக் கொண்டு அறிவித்த ஐந்து நாளில் தேர்தல் நடைபெறும் வண்ணம் தேர்தல் நாளை அறிவிக்க வேண்டும்.
நேர்மையான தேர்தல் என்பது வாக்காளர்களைப் பொறுத்தே அமையும். நன்மை கிடைத்தாலும் ஆதாயம் அடைந்தாலும் நடுவுநிலைமை தவறிப் பெறும் பணம் அல்லது பொருள் பெறும் நிலைக்கு வாக்காளர்கள் ஆளாகக் கூடாது. வாக்காளர்கள் நேர்மையாக இருந்தால் வேட்பாளர்களும் நேர்மையாக இருப்பர். கொடுப்பதால்தான் வாங்குகிறோம்” என்னும் நிலை மாறி “வாங்காததால் கொடுக்கவில்லை” என்னும் நிலை வர வேண்டும்.
எனவே, வாக்காளர்கள் நேர்மையாக நடந்து கொள்வதற்கான சூழலை உருவாக்கியும் வாக்கு வணிகத்தில் ஈடுபடும் விற்போர், வாங்குவோர் என இரு தரப்பாருக்கும் தண்டனை என்னும் நிலையை நிலைநாட்டியும் விரைவான நேர்மையான  தேர்தல் நடைபெறத் தேர்தல் ஆணையம் நடுவுநிலைமையுடன் செயல்பட வேண்டும். தொலைந்து போகக் கூடிய மத்திய  ஆளுங்கட்சியின் கைப்பாவையாக இருந்து அதற்கு முட்டுக் கொடுக்கும் வகையில் கட்சிக்கொரு நீதி என்ற தவறான செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எனவே, நடுவுநிலைமையுடன் செயல்பட்டு உடனடியாக வேலூர் தொகுதிக்கான நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்தை வேண்டுகிறோம்!
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.  (திருவள்ளுவர், திருக்குறள்)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Saturday, April 27, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 91-100 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்

(குறள்நெறி)

91. விண்ணகத்தாரின் விருந்தினன் ஆக, வந்த விருந்தினரை அனுப்பிப் புது விருந்தினரை எதிர்பார்!
92. அளவிடற்கரிய பெருமை அடைய, விருந்தோம்பு!
93. விருந்தினரைப் பேணாது ஈட்டிய பொருளை இழந்து வருந்தாதே!
94. விருந்தினரைப் பேணா மடமையால், செல்வமிருந்தும் வறுமை யாளனாகாதே!
95. மாறுபட்டுப் பார்த்து விருந்தினரை வாட விடாதே!
96. வஞ்சனையற்ற இன்சொல் கூறி அறவாணனாக விளங்கு!
97. மனமுவந்து கொடுப்பதைவிட மேலான முகமலர்ச்சியாய் இரு!
98. அனைவரிடமும் இன்சொல் கூறித் துன்பத்தைத் துரத்து!
99. பணிவையும் இன்சொல்லையும் அணிகளாகக் கொள்!
100. இனியன பேசி அல்லவை தேய்த்து, அறம் பெருக்கு!
(தொடரும்)
இலக்குவனார்திருவள்ளுவன்

Friday, April 26, 2019

இலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


இலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில்

வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்!

உயிர்ப்பு நாளன்று (21.04.2019) காலை 8.30 மணி முதல் 9.15மணிக்குள்ளாக, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்க் கொழும்பு தேவாலயம், சாங்குரிலா நட்சத்திர விடுதி, கிங்சுபரி நட்சத்திர விடுதி, சின்னமான் பெரு நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு தேவாலயம் ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
தொடர்ந்து  நண்பகல் இரண்டு மணியளவில், தெஃகிவலாவிலும், கொழும்பு  தெமடகொட பகுதியிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
3 நாளுக்குப் பின்னர் இலங்கை கம்பஃகாவில் நீதிமன்றம் அருகே மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. எனினும் ஆற்றல் குறைந்த வெடி குண்டு என்பதால் உயிரிழப்பு எதுவும் இல்லை.
தொடர் குண்டு வெடிப்புகளில் சிக்கி 359 பேர் பலியாகிவிட்டனர். எண்ணிக்கை உயரும் என்ற அச்சமும் உள்ளது. 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் பண்டுவம் பெற்று வருகிறார்கள். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா, நெதர்லாந்து, ஆத்திரேலியா, இசுபெயின், சுவிட்சர்லாந்து, துருக்கி நாட்டவர்களும் இருபத்தேழுபேர் வெடிகுண்டுகளால் பலியாகியுள்ளனர். வங்கதேசம், சீனா, சப்பான், போர் த்துக்கல் நாட்டவர்கள் காயமுற்றிருக்கலாம். பலியானவர்களில் பத்தில் ஒன்பதுபேர் இலங்கை, ஈழத்தைச் சேர்ந்தவர்களே! இவ்வாறு பி.ஒ.நி.(பி.பி.சி.) தெரிவித்துள்ளது.
இத் தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்கள் எச்சமயத்தவராக / எவ்வினத்தவராக / எம்மொழியினராக / எந்நாட்டவராக இருந்தாலும் அவர்களின்குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்  ஆறுதல்களைத் தெரிவிக்கிறோம். மருத்துவமனைகளில் இருப்போரும் விரைவில் முழு நலம் பெற்று அவரவர் இல்லம் திரும்புவார்களாக!
இந்தியாவில் இருந்து எச்சரிக்கை அனுப்பியும் இலங்கை அரசு தொடர் வெடிகுண்டுத் துயரத்தைத் தடுக்க முயலவில்லை. தமிழ்நிலங்களில்தானே குண்டு வெடிப்பு நிகழும் என அமைதி காத்ததா எனத் தெரியவில்லை. எனினும் இதன் பின்னர்த் திறமையாகச் செயல்படுகிறது. இறந்தவர்களில் பெரும்பான்மையர் தமிழ்மக்கள்தாம். சிங்களவர்கள் இறந்திருந்தால் விடுதலைப்புலிகள் அல்லது தமிழ்ப் பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டதாகக் கூறி உலக ஆதரவைப் பெற்றிருக்கும். இப்பொழுது அவ்வாறு சொல்ல முடியாது. நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்ற சிங்கள அரசிற்கு நூற்றக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்துப் பெருங்கவலை எதுவும் இருக்க வாய்ப்பில்லை. 
ஆனால் ஆட்சிக்கு அவப்பெயர் என்பதால் எச்சரிக்கையாகச் செயல்பட்டு இறந்தவர்கள் இனம் அல்லது நாடு குறித்த செய்தி வெளிவராமல் பார்த்துக் கொண்டது.
இசுலாமிய அரசு என்னும் அமைப்பு கொடுநிகழ்வுகளுக்குப் பொறுப்பு ஏற்றுள்ளது. தற்கொலைப்படைஞர் எழுவர் கொண்ட குழுப்படமும் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசும் காரணமானவர்களாகச் சிலரைக் கைது செய்துள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறித்துக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், அவர்களால் இசுலாமியர அனைவருக்குமே இடர்ப்பாடு நேரலாம். அப்பாவி மக்கள் கொல்லப்படுவது எங்கு எப்பொழுது நேர்ந்தாலும் கொடுமைதான்.ஆனால், தம் சமயம் சார் ஓர் இறை மீது நம்பிக்கை உள்ளவர்கள் பிற சமயத்தவர் தம் இறைவனை வணங்கும் இடத்தில் வணங்கும் பொழுது கொல்வது கொடுமையல்லவா?
ஆட்சி நிலைப்பிற்காகவும் நெருக்கடி நிலை கொண்டுவரவும் ஆள்வோரே இதற்குக் காரணமாக இருக்கலாம் அல்லது பக்சே காரணமாக இருக்கலாம் என்ற எண்ணம் பலரிடம் எழுந்தது. ஆனால், படைத்துறை உயர் அதிகாரிகளும் காவல்துறை உயர் அதிகாரிகளும்தான் காரணம் என அரசு கூறியுள்ளது. எனவே, பாதுகாப்புத் துறைச் செயலர் முதலான முதன்மை அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என அதிபர் சிறிசேனா அறிவித்தார். பாதுகாப்புத் துறைச் செயலர்  எமசிரி ஃபெர்னாண்டோ மட்டும் இதுவரை பதவி விலகியுள்ளார்.

தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வுகள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற நீதிபதி விசித்து மலால்கோடா தலைமையில் முன்னாள் காவல்துறைத் தலைவர் என்.கே.இலங்கக்கூன், சட்டம்-ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலர் பத்மசிறி  செயமன்னே ஆகியோரைக் கொண்ட சிறப்புக் குழுவை  அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார். இக் குழு விரிவான விசாரணை நடத்தி இரு வாரங்களுக்குள் அரசிடம் அறிக்கை  அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இசுலாமியர்களுக்கும் பிற சமயத் தமிழர்களுக்கும்  மோதல் நடப்பதுபோலோ இசுலாமியர்களுக்கும் பெளத்தர்களுக்கும் மோதல் நடப்பதுபோலோ, இசுலாமியர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் இடையே மோதல் நடைபெறுவது இல்லை. மேலும், நியூசிலாந்து பள்ளிவாசல் வெடிகுண்டு நிகழ்விற்குப் பழி தீர்ப்பதாக இருந்தால் ஏதேனும்  கிறித்துவ நாட்டில்தானே பழி வாங்கியிருக்க வேண்டும். பெளத்த நாட்டில் ஏன் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய வேண்டும்?  தமிழ்க்கிறித்துவர்கள் கூடும் இடமாக ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? வெவ்வேறு மாநிலங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்துகிறார்கள் என்றால் பெரும் சதி வலைப்பின்னலும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை /  படைத்துறை/ காவல் துறை/ உளவுத் துறை முதலானவற்றில் பணியாற்றுவோர் தொடர்பு இல்லாமலும் ஆட்சியில் உள்ள சிலரின் ஒத்துழைப்பு இல்லாமலும் செய்திருக்க முடியாது என மக்கள் எண்ணுகிறார்கள்.  மேலும், சிங்கள மக்களிடையேயும் பாதுகாப்பின்மை, அச்சம், அமைதியின்மை முதலான கவலைகளையும் பதற்றத்தையும் இக்கொடும் துயர நிகழ்வு ஏற்படுத்தி உள்ளது.
எனவே, தீவின் முழு நலன்கருதி இக் குழு நடுவு நிலைமையுடன் செயல்பட்டு அஞ்சாமல் உண்மையை  வெளிக் கொணர    வேண்டும் என்று வேண்டுகிறோம்.
புலன் உசாவலில் ஈடுபடும், அல்லது சிங்கள அரசிற்கு ஒத்துழைக்கும் பிற நாடுகளும் உண்மையை வெளிக் கொணருவதில் கருத்து செலுத்தித் தமிழ் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க ஆவன செய்ய வேண்டும்.
பலியானவர்களின் துயர் துடைப்புப்பணிகளிலும் உடனடியாகக் கூடுதல் கருத்து செலுத்த வேண்டும்!
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு 
கொள்ளாத கொள்ளாது உலகு. (திருவள்ளுவர், திருக்குறள் 470)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Wednesday, April 24, 2019

திருப்பரங்குன்றத்தில் தேர்தல் வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்


திருப்பரங்குன்றத்தில் தேர்தல் வேண்டா!

தமிழகத்தில் காலி யாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு  நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 19 அன்று  இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உரிய தேர்தல் பணிகளும் தொடங்கி விட்டன. இவற்றுள் திருப்பரங்குன்றம் தொகுதிக்குத் தேர்தல் தேவையில்லை. முந்தைய இடைத்தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற மரு.சரவணனையே வென்றவராக அறிவிக்க வேண்டும்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத்  தொகுதியில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எசு. எம். சீனிவேல் தேர்தல் பரப்புரையின் பொழுதே நலக்குறைவுடன்தான் மருத்துவமனையில் இருந்தார். இருப்பினும் அதிமுகவின் செல்வாக்கான தொகுதி என்பதால் எளிதில் வெற்றி பெற்றார். ஆனால் பதவி ஏற்கும் முன்பு மே 25 அன்று மரணம் அடைந்தார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் 2016 நவம்பர் 19 அன்று நடந்தது. இப்பொழுதும் அதிமுக வேட்பாளர் ஏ. கே. போசு நலக்குறைவுடன்தான் இருந்தார். இருப்பினும் 55.65% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
இரண்டாம் இடம் பெற்றிருந்த திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன், இரட்டை இலை சின்னத்திற்கான ஏற்பினை மருத்துவமனையில் நினைவின்றி இருந்த செயலலிதாவிடம் ‘அ’, ‘ஆ’, படிவங்களில் கை விரல் பதிவு பெற்று வாங்கி வந்ததாகக் கூறுவதால் செல்லாது என்று வழக்கு தொடுத்தார்.
 ஏ.கே.போசின் வெற்றி செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் மார்ச்சு 22 அன்று  தீர்ப்பளித்துள்ளது. அதே நேரம், ஏ.கே.போசு வெற்றி செல்லாது என்பதால் இரண்டாவதாக வந்த தன்னைச் சட்ட மன்ற உறுப்பினராக  அறிவிக்க வேண்டும் என்கிற சரவணனின் கோரிக்கையை மறுத்தார் நீதிபதி.
நாம் இதனை இரு கோணங்களில் பார்க்க வேண்டும்.
 தி.ப.கு. தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த அதிமுக கட்சியைச் சேர்ந்த ஒருவர் அல்லது பலர் இது குறித்துக் கட்சியில் முறையிடுவதே பொருத்தமாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வர இருந்த வாய்ப்பு மோசடியாகஏ.கே.போசிற்கு வழங்கப்பட்டு அவர்களின் உரிமை பறிக்கப்பட்டதாக அவர்கள் கோரலாம். ஆனால், அவ்வாறு யாரும் முறையிடவில்லை. தேர்தலைப் பொறுத்தவரை, மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளித்துள்ளனர். அச்சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ.கே. போசு வெற்றி பெற்றுள்ளார். கட்சியின் உரிய ஏற்பு மடல் ‘அ’, ‘ஆ’, படிவங்களில் அளிக்கப்பட்டு ஏற்கப் பெற்ற பின், வேட்பாளரின் சின்னம் இரட்டை  இலை என்பதில் மாற்றமில்லை. எனவே, வெற்றி குறித்து ஆராயத் தேவையில்லை.
அதே நேரம், இவ்வாறு முறைகேடாக இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதாக மடல் கொடுத்ததில் யார் யாருக்கெல்லாம் பங்கு உள்ளதோ அத்தனை பேர் மீதும் குற்ற வழக்கு தொடுத்து உசாவி தண்டிப்பதுதான் முறை.  ஆனால், இது குறித்து உயர்நீதி மன்றமும் தக்க கட்டளை பிறப்பித்ததாகத் தெரியவில்லை. காவல் துறையோ,தேர்தல் ஆணையமோ நடவடிக்கை எடுதததாகவும் தெரியவில்லை.
தீர்ப்பு வரும் முன்னரே வெற்றி பெற்ற ஏ.கே.போசு மரணமடைந்தது தனிச் செய்தி.
உணர்வற்றவரிடம் ஒப்பம் பெற்றதாகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் செல்லாது என உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது.பொதுவாகத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டவர்களின் தேர்வு முடிவு தவறு என்றால் அடுத்த நிலையில் உள்ளவர்தான் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.  இந்த நடைமுறைக்கு மாற்றாக அவ்வாறு தீர்ப்பு உரைப்பதை அல்லது அறிவிப்பதை உயர்நீதிமன்றம் ஏற்காதது தவறாகப் படுகிறது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது.
தி.மு.க. தரப்பில் உரிய மறு ஆய்வு முறையீட்டை அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காவிட்டாலும் தானாக முன்வந்து வழக்குக் கேட்பிற்கு எடுக்கும் உயர் நீதி மன்றம், தேர்தலில் வெற்றி பெற்றவராகத் தேர்தல்  ஆணையத்தால் அறிவிக்கப் பெற்ற ஏ.கே.போசின் தேர்வு செல்லாது என்பதால் அடுத்த இடத்தில் உள்ள தி.மு.க. வேட்பாளர் மரு.சரவணன் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.
மேலும், இதனைத் தி.மு.க.வின் சிக்கல் எனப் பார்க்கக் கூடாது. மக்களாட்சியில் நம்பிக்கை உள்ள அனைவருமே, வழக்கமான நடைமுறைகளை ஆள்வோர்க்கு ஏற்ப மாற்றும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி இரண்டாம் நிலை வாக்கு பெற்ற மரு.சரவணனை வெற்றி பெற்றதாக அறிவிக்க வலியுறுத்த வேண்டும்.
தீர்ப்பினை விருப்பம்போல் மாற்றி அமைக்கும் போக்கு இருப்பதாக மக்கள் கவலைப்படுவதைப் போக்க வேண்டும்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் வெற்றி பெற்றவரின் தேர்தல் செல்லாது என்னும் பொழுது அடுத்த நிலையில் உள்ளவரை வெற்றி பெற்றவராக அறிவிப்பதுமே நீதி உயிரோட்டத்துடன் இருப்பதற்கு அடையாளமாகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Followers

Blog Archive