Wednesday, December 28, 2016

ஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்






ஈழத்தமிழர் வாழ்வு குறித்து

இரட்டை நிலைப்பாடு வேண்டா!

   ஒருவர் தன் கொள்கையை அல்லது கருத்தை மாற்றிக் கொண்ட பின்னர் முன்னர்  அவர் சொன்னதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக்கூடாது. சான்றாகத் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி இறை மறுப்பாளர் என்ற முறையில்தான் உலகறியப்பட்டவர். ஆனால், தொடக்கத்தில் அவர் சாமியாராகத் திரிந்ததை வைத்துக்கொண்டு அவரை இறைஏற்பாளர் என்ற அளவில் மதிப்பிடலாமா? கூடாதல்லவா? அதுபோல்தான் மேனாள் முதல்வர் செயலலிதா தமிழ்ஈழம் குறித்தும் விடுதலைப்புலிகள் குறித்தும் தமிழ்க்கேடர்களின் கருத்தாக்கத்தால் முதலில் தவறான நிலைப்பாடு எடுத்திருந்தார்.  சட்ட மன்றத்திலும் மேதகு பிரபாகரனைக் கைது செய்ய வேண்டும் என்று தீர்மானம் இயற்றச் செய்துள்ளார்.  போரென்றால் சாவு நேர்வது இயற்கை என்றுகூட உளறிக் கொட்டியுள்ளார். ஆனால், அவர், தமிழ் ஈழத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துத் தமிழ் ஈழம் மலரச் செய்ய வேண்டும் என்பதையே கொள்கையாக அறிவித்தபின்னர் முந்தைய நிலைப்பாடுகளைக் கொண்டு அவரைக் குறை கூறுவது  பொருந்தாது.
   இரவிசங்கர் குழுவினர் அளித்த காணுரைகளைக்கண்ட பின்  உண்மை உணர்ந்ததாகத் திருந்தி கூறும் செயலலிதாவின் பேச்சுகளில் ஒரு பகுதி வருமாறு:
 வாழ்வதை விடச் சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களை இலங்கை அரசு மிகவும் கேவலமாகக், கொடூரமாக நடத்தி வருகிறது இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசால் சொல்லப்படுவது எல்லாம் பொய், பித்தலாட்டம், கபட நாடகம் என்பதை நான் தற்போது தெரிந்து கொண்டேன். ….. இவற்றை யெல்லாம் பார்க்கின்ற போதுசெருமனியில் நடந்த இட்லரின் கொடுங்கோல் ஆட்சி தான் தடுப்பு வதை முகாம்களை நடத்தி, ()யூதர்களைக் கொடுமைப்படுத்தி அழித்த –  இட்லர் ஆட்சிதான், நினைவிற்கு வருகிறது. …….  தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் எல்லாம், அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடங்களில் எல்லாம், சிங்கள மக்களை, இலங்கை அரசு தங்க வைக்கிறது; சிங்கள மக்களைக் குடும்பம் குடும்பமாகக் குடி அமர்த்துகிறது. இலங்கையில் உள்ள தமிழினத்தை அழிக்க, இலங்கை அரசால் தீட்டப்பட்டு இருக்கும் மிகக் கொடுமையான திட்டம் இது ….. உண்மை நிலை இப்படி இருக்க, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சனநாயக  முறையிலான தீர்வு காண்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, என்று பேசுவதெல்லாம் வீண் வேலை; அது வெறும் கண்துடைப்பு என்பது தெரிகிறது.  ……. இலங்கைத் தமிழர்களுக்குச் சிங்களர்களோடு சம உரிமை வழங்கும் எண்ணமே, இலங்கை அரசுக்குக் கிடையாது. ஒரே அடியாக, இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்துவிட வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் ஒரே செயல் திட்டமாக உள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள்  இயல்பு வாழ்வு வாழ வேண்டும். சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும்.
இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பதுதான்.
  இவ்வளவு ஆணித்தரமாக உண்மைகளை உணர்ந்து தமிழ் ஈழம்தான் தீர்வு எனக் கூறிய பின்பும் இதற்கு எதிரான கருத்துகளைக் கூறுபவர்கள் தங்களின் இரண்டகங்களை மறைப்பவர்களாகவே இருப்பார்கள்.
  இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழகச் சட்டமன்றத்தில் வைகாசி 25, 2042 /  2011  சூன்  8 ஆம் நாளன்று  முதலமைச்சராக இருந்த  செயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்;
 இலங்கையில் போர்குற்றங்கள் நடத்திய அனைவர் மீதும்   நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்துப் பன்னாட்டு உசாவல் நடத்த வேண்டும். என்றும் தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் பங்குனி 14, 2043 / 2012, மார்ச்சு 27 ஆம்  நாளன்று  தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்.
  இவற்றின் பின்னரும் தமிழ்ப்பகைவர்கள் கருத்திற்கு  இரையாகித் தவறாகப் பேசிய முந்தைய பேச்சுகளையே திரும்பத் திரும்பக் கூறுவது தமிழ்   ஈழத்திற்கும் பின்னடைவையே ஏற்படுத்தும்.
  தி.மு.க. உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், தலைவர்களின் பெரும்பான்மை உணர்விற்கு முரணாகக் கலைஞர் கருணாநிதி பேராயக்கட்சியாகிய காங்.உடன் கை கோத்து எடுத்த இரண்டக நிலைப்பாடு ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்குத் துணை நின்றது என்பது  மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதனை மறைப்பதற்காக, அவரின் முந்தைய ஈழ ஆதரவுநிலையைப் பாராட்டிக்கொண்டு செயலலிதாவின் முந்தைய தவறான கொள்கை அடிப்படையில் அவரைக் குறைகூறிக் கொண்டுள்ளனர். தாம் செய்த குற்றங்களை மறைப்பதற்காக, அடுத்தவர்மீது ஏற்படும் நல்லெண்ணத்தைச் சிதைக்கும் முயற்சியே இது.
 “உன் முதுகில் உள்ள உத்தரத்தை எடுத்து விட்டு அடுத்தவன் கண்ணில் உள்ள தூசியைப் பார்க்க வேண்டும்” என்பதை உணராதவர்கள் அவர்கள்.
 செயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றவதாகக் கூறும் அக்கட்சித் தலைவர்கள், அரசின் முதன்மைத் திட்டங்களில் ஒன்றாகத் தமிழ்ஈழமலர்ச்சிக்கான உறுதுணையைச் சேர்க்க வேண்டும்..
 தமிழ்நாட்டினருக்கும் தமிழகச் சட்டமன்றத்திற்கும் களங்கம் ஏற்படும் வகையில் 2002 இல் தமிழக சட்டமன்றத்தில் பிரபாகரனைக் கைது செய்து கொண்டு வர வேண்டும் என்று போட்ட தீர்மானத்தை நீக்கம் செய்து புதிய தீர்மானம்  நிறைவேற்ற வேண்டும்.
 தனி ஈழம் அமைந்திட, ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்குச் செயலலிதா எடுத்திருந்த மன உறுதி நிறைவேண்டும். எனவே,  தமிழ்ஈழ ஏற்புத் தூதுக் குழுக்களை அமைத்துப் பிற மாநிலச் சட்டமன்றங்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி.  அந்தந்த மாநிலச் சட்டமன்றங்களில் தீர்மானம் இயற்ற வழிவகை செய்ய வேண்டும். அயல்நாடுகளுக்கும் இக்குழுக்களை அனுப்பி ஈழ வாக்கெடுப்பு  அல்லது உரிமைத் தமிழ்ஈழ ஆதரவு பெற வேண்டும். இத்தூதுக்குழுக்களில்  கட்சி அடிப்படையில் அல்லாமல் ஈழஆதரவு நிலைப்பாட்டிலுள்ளவர்களை உறுப்பினராக அமர்த்த  வேண்டும்.
  தமிழ் ஈழத்திற்கு ஆதரவான நிலை என்றால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலை என்றுதான் பொருள். ஈழத்தமிழர்கள் என்றால் இப்பொழுது ஈழத்தில் வசிப்பவர்களை மட்டும் குறிக்காது. புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களையும் குறிக்கும். அப்படியாயின், தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழர்களையும் குறிக்கும் அல்லவா? ஆனால், ஈழத்திலுள்ள தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டு இங்குள்ள ஈழத்தமிழர்களை முகாம் என்ற பெயரிலான கூட்டுச் சி்றையில்  அடைத்துத் துன்புறுத்தலாமா? போதிய மருத்துவவசதி, கல்வி வசதி, வாழ்நிலை வசதி ஆகியன இல்லாமல் அவர்கள், துன்புற விடலாமா? தங்கள் குறைகள் நீங்க அறவழியில் உண்ணாநோன்பு இருப்பவர்கள் உடல்நலன் குறித்துச் சிறிதும் கவலைப்படாமல் சாகும் நிலைக்குக் கொண்டுவரலாமா? பிற நாட்டுப் புலம்பெயர்ந்தோர்கள் உரிமையுடன் வாழ வகைசெய்துவிட்டு ஈழத்தமிழர்களைமட்டும் கொத்தடிமையாக நடத்தச் சொல்லும் இந்திய அரசிற்கு எதிராகக் குரல் கொடுக்காமல் அமைதி காக்கலாமா? அதற்குத் தமிழக அரசுதுணைபுரிவது இரண்டக வேலையல்லவா?
  எனவே, திபேத்தியர் முதலான பிற ஏதிலிகள் வாழ அளிக்கும் உரிமைகளை ஈழத்தமிழர்களுக்கும் தமிழக அரசு அளிக்க வேண்டும்.
  அயகலத்தமிழர் நலனுக்கான தனித்துறை அமைத்தோ தனி வாரியம் அமைத்தோ உலகத்தமிழர் நலனுக்குப் பாடுபட்டுத் தமிழ்மொழியும் தமிழினமும் தழைத்தோங்கத் தவறாது பணியாற்ற வேண்டும்.
   எனவே, தமிழக அரசு ஈழத்தமிழர் நிலைப்பாட்டில் இரட்டை  நிலைப்பாட்டைக் கொள்ளாமல் தமிழ் ஈழத்தில் தமிழர்கள் உரிமை ஆட்சி மலர்ந்திடவும் தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழர்கள் உரிமையுடன் வாழவும் உண்மையாகவும் உறுதியாகவும் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டு வெற்றி காண வாழ்த்துகிறோம்.
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
. (திருவள்ளுவர், திருக்குறள் 612)
  • அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை,  அகரமுதல 166,  மார்கழி 10, 2047 /  திசம்பர் 25, 2016

Tuesday, December 27, 2016

ஆள்வினைச்செல்வி சசிகலா மீதான ஆரியத்தாக்குதல் – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆள்வினைச்செல்வி சசிகலா மீதான ஆரியத்தாக்குதல்


  ஊழலற்ற, நேர்மையான தமிழ்நல மக்களாட்சிதான் நமக்குத் தேவை. ஆனால், அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. எனவே, இருப்பனவற்றுள் ஏற்கத்தக்கதைத்தான் நாம தெரிவு செய்ய வேண்டியுள்ளது. “யார் நல்ல பையன்” என்று கேட்டால், “அதோ கூரை மீது கொள்ளி  வைத்துக்கொண்டுள்ளானே அவன்தான் நல்ல பையன்” என்று சொல்லும் நிலையில்தான், நாமும் நம்நாட்டுக் கட்சிகளும் உள்ளன. எனவே, நாம் நம் அளவுகோலை மாற்றி வைத்துக்கொண்டுதான் முடிவெடுக்க வேண்டியுள்ளோம்.
 அதுபோல்,  தமிழ் நாட்டில்  பல கட்சிகள் இருப்பினும்  இரு கட்சி ஆட்சிமுறைக்கே தமிழக மக்கள் முன்னுரிமை அளித்து வருகின்றனர். எனவேதான், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன.
  அதிமுகவில் இருந்து அதன் அச்சாணிபோல் செயல்பட்ட  செல்வாக்கான தலைவர்கள்,  கட்சியை விட்டு வெளியேறினர். அவர்கள் செல்லாக்காசாகினர். அல்லது மீண்டும் அதிமுகவிலேயே அடைக்கலமாயினர்.
  திமுகவிற்கும் பிற கட்சிகளுக்கும் இது பொருந்தும். வைகோவின் கருத்துகளுக்கு இன்றும்கூடத் தி.மு.க.வில் ஆதரவாளர்கள் உள்ளனர். “வைகோ சொல்வது சரிதான். தலைவர் ஏன், இப்படி ஈழத்தமிழர் படுகொலைகளுக்குத் துணை நிற்கின்றார்” என்று சொன்னவர், சொல்கிறவர் பலர். எனினும் தேர்தல் என்று வந்தால் கட்டுப்பாட்டுடன் தலைவர் பக்கம்தான்  நிற்கின்றனர். இதை நன்கு உணர்ந்ததால்தான் தி.மு.க.வின் மூத்த தலைவர்கள், தாலினுக்கு அளிக்கும் முதன்மையை விரும்பாவிட்டாலும் கட்சிக்கட்டுப்பாட்டுடன் இணங்கி நடக்கின்றனர்.
  எனவே, இன்றைக்கு நடுநிலைப்போர்வையிலும் செயலலிதாமீது பரிவுள்ளவர்கள்போல் காட்டிக்கொண்டும் ஆரியக் கருத்துத் திணிப்பு நடைபெற்றாலும் கட்சியில் சிறு சலசலப்பு வருமே தவிர, பெருமளவு சேதம் வராது.   கற்பனை அடிப்படையிலும் ஊகத்தின் அடிப்படையிலும் திரித்துச் சொல்வதில்  உள்ள விருப்பத்தாலும் ஆள்வினைச்செல்வி சசிகலாவிற்கு எதிரான கருத்துகளை  ஊடகங்கள் வாயிலாகவும்  இணையத் தளங்கள் வாயிலாகவும் பரப்பி வருகின்றனர்.
 சிலர், ஏவலாளி, காவலாளி எல்லாம் தலைவராக முடியுமா என்கின்றனர். அவர்கள் உலக வரலாறு அறியாதவர்கள். சிலர் “சண்முகநாதன் கலைஞர் கருணாநிதியுடன் கூடவே இருக்கிறார். அவர் தலைவர் பதவிக்கு வர முடியுமா” என ஒப்புமை பேசுகின்றனர். சண்முகநாதன், கலைஞர் கருணாநிதியுடன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உடனிருந்து அவரின் சொற்பொழிவுப் பதிவாளராகச் சிறப்பாகச் செயல்படுபவர். ஒருவருடன் மற்றொருவர் கூட இருப்பின்,  முதலாமவரின் சிந்தனைக்கேற்பவே இரண்டாமவரின் எண்ண ஓட்டமும் அமையும். இதனை மறுதலையாகவும் கொள்ளலாம். சண்முகநாதனுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் பொறுப்பு அளித்தால் சிறப்பாகச் செயல்படக்கூடியவரே!
  என்றாலும், சசிகலாவின் இருப்பு வேறானது. அவர், செயலலிதா சொல்லும் செயலைச் செய்யும் பணியாளராக இல்லை. எலலா நிலைகளிலும் அவருக்கு உதவியாகவும் ஆறுதலாகவும் ஆற்றப்படுத்துபவராகவும் இருந்தவர். செயலலிதா சார்பில் பெரும்பான்மையருடன் கருத்துகளையும் கட்டளைகளையும் தெரிவித்தவரும் அவரே.  இன்றைக்கு யார் அதிமுகவின் பொதுச்செயலராக வந்தாலும் ஆதரவும் எதிர்ப்பும் இருக்கத்தான் செய்யும். ஆனால்,  பிறர் எல்லாரையும் விட மிகுதியான ஆதரவும் குறைவான எதிர்ப்பும் உடையவரே சசிகலா.
  சசிகலா வந்தால் கட்சிக் கட்டுப்பாடு காக்கப்படும் என்பதால்  அதைச் சிதைக்கச் சிலர்  முயல்கின்றனர். அதிமுகவைப் பிடிக்காமல் தலைவி பிராமணவகுப்பு என்பதால் ஆதரித்தவர்களும் உள்ளனர். தன்னைப் பிராமணப்பெண்ணாகச் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தாலும் சாதிப்பாகுபாடு இல்லாதவராகவே செயலலிதா இருந்துள்ளார். எனவேதான், வேறு வகுப்பைச்சேர்ந்த சசிகலாவுடன் நெருக்கமாக இருக்க முடிந்தது. ஒழுக்கக்கேடனாக இருந்த செயேந்திரன் பிராமண வகுப்பைச் சேர்ந்தவனாக இருப்பினும் கைது செய்தார். அதை வேறு காரணமாகத் தி.மு.க. கூறி செயேந்திரனைப் பாதுகாத்தாலும் அவரைச் சேர்ந்தவர்கள் அதைப்  பயன்படுத்திக் கொண்டாலும் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது பிராமணர்கள் எதிராகவே நடந்து கொள்கின்றனர். பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண்மணி துணைவேந்தர் பதவி கேட்ட பொழுது மும்முறையும் தனியார் கல்லூரியைச் சேர்ந்த அவரை நியமிக்க வில்லை . ஆனால், அவர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் அப்பதவியை வாங்கிவிட்டார். இவ்வாறு பல செய்திகள் உள்ளன. இருப்பினும் சிலர் செயலலிதா இடத்தில் மற்றொரு பிராமணப்பெண்தான் வரவேண்டும் என்பதற்காக அவரது மருமகள்  தீபாவை முன்னிறுத்துகின்றனர்.
 சசிகலாவிற்குத் தகுதி இல்லை என்பவர்கள்தாம், இதுவரை கட்சிக்காகவோ மக்கள் நலனுக்காவோ துரும்பையும் எடுத்துப் போடாதவரை முன்னிறுத்துகின்றனர்.
  அவரை மரபுரிமையராகக் காட்டுவதும் தவறுதான். மரபுரிமையைமட்டும் பார்தத்துத் தமிழ் மக்கள் முதன்மை அளிப்பதில்லை. வேறுகாரணிகளையும் பார்க்கின்றனர்.   எனவேதான் வாழ்க்கை நாயகியைவிடப் படநாயகிக்கு முதன்மைஅளித்தனர். அவரும் திடீரென்று வரவில்லை. தங்கள் தலைவரால் படிப்படியாக  வெவ்வேறு நிலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டதால்தான் அவரையும் ஏற்றனர்.
  செயலலிதா இருந்த பொழுதே அவரால் மதிக்கப்படாத தீபா எப்படி  அதிமுகவில் அவரது மரபுரிமையர் ஆவார்?
 ஆரியப் பாசக தன் திணிப்பு வேலைகளுக்கு அவர் உதவியாக இருப்பார் என எண்ணி அவரை முன்னிறுத்த உதவுகிறது. என்றாலும் மக்கள் செவிமடுக்கப்போவதில்லை.
  வேறு பல கருத்துகள்  சசிகலாவிற்கு எதிராக இட்டுக்கட்டப்படுகின்றன. சசிகலாவைச் செயலலிதா விலக்கி  வைத்தார் என்றால், மக்கள்திலகம் எம்ஞ்சியாரால் ஒதுக்கப்பட்டவர்தானே செயலலிதா.
  கட்சியில் பலரும் எதிர்ப்பதுபோல் தவறாகவும் கூறி வருகின்றனர். யார், யார் எதிர்க்கிறார்கள் என்று திரித்துச் சொல்லப்பட்டார்களோ அவர்களே ஆதரவினை வெளிப்படையாகத் தெரிவித்தவுடன் அவர்களை வாங்கிவிட்டார் என்கின்றனர்.
 முரண்பாடான கருத்துகளையும் பரப்புகின்றனர். ஒருபுறம் செயலலிதாவைச் சசிகலா அடக்கித் தன்கட்டுப்பாட்டில்  வைத்திருந்தார் என்கின்றனர். மறுபுறம் மன்னார்குடி குடும்பத்தினருக்குச் செயலலிதா  பதவிகள் தர மறுத்துவிட்டார் என்கின்றனர். சசிகலாவின் கட்டுப்பாட்டில் செயலலிதா இருந்தது உண்மையெனில்,  அவர் உறவினர்களுக்குப் பதவிகள் தர மறுத்திருப்பாரா?
  சுருக்கமாகக் கூறுவதானால்,  பெரும்பான்மைக் கட்சியினரால் ஏற்கப்படும் சசிகலாதான் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு ஏற்றவர். எனவே, அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுச் சிறப்பாகச் செயல்பட்டுத் தமிழ்நாட்டை மேம்படுத்த உதவவேண்டும்.  அதே நேரம் உறவினர்களாலோ வேறு யாராலோ அதிகார மையங்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  எல்லாவற்றிற்கும் மேலாக அதிமுக கட்சி யல்லாதவர்கள்  சசிகலாவிற்கு முதன்மை கொடுப்பதன்   காரணம்,     இரா.சே.ச/ ஆர்.எசு.எசு. கும்பல் ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி அதனை நேரடியாகவோ மறைமுகமாகவோ கைப்பற்ற இடம் கொடுக்கக்கூடாது என்பதுதான். பா.ச.க. கும்பல், வெற்றிடம் எதுவும் இல்லாத பொழுதும் வெற்றிடத்தை நிரப்பப்போவதாகக்  கொக்கரிக்கின்றனர்.  அப்படி அவர்கள் வந்து தீமைகள் விளைந்தால் அவற்றை நாம் விரட்டியடித்தாலும் தீமைகளால் தமிழினமும் தமிழ்மொழியும் தமிழ்மக்களும் பல தலைமுறைகள் இன்னலுக்காளாவர்.
  எனவேதான், ஆட்சி சிதையாமல் இருக்க, ஆளுங்கட்சியும் சிதைவுறாமல் இருக்க வேண்டும். ஆளுங்கட்சி சிதைவுறாமல் இருக்க அதனைக்கட்டிக்காக்கும் வல்லமை உள்ளவர் பொறுப்பிற்கு வரவேண்டும். அவ்வாறு கட்சியினரால் கருதப்படுபவர் சசிகலா என்பதால் அவர் அதிமுகவின் பொதுச்செயலாளராக வேண்டும்!
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.(திருவள்ளுவர், திருக்குறள் 217)
அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பேற்றுக்
கட்சி்யைப்பொலிவுடன் நடத்த
சசிகலாவிற்கு
முன்னதான வாழ்த்துகள்!
இலக்குவனார் திருவள்ளுவன்

Monday, December 26, 2016

வணக்கம் யாருக்கு? – இலக்குவனார் திருவள்ளுவன்

வணக்கம் யாருக்கு?

    ஆள்வினைச்செல்வி சசிகலாவிற்கு அவரது கட்சித் தொண்டர்களும் பிறரும் வணக்கம் செலுத்துவதுபோலும் அவர் வெறுமனே நிற்பதுபோலும இதழ்களில் சில படங்கள் வருகின்றன. அதைப்பார்த்த நண்பர்கள், “வணக்கம் செலுத்தினால்  மறு வணக்கம் தெரிவிக்காமல் இருக்கிறாரே!  ‘சின்னம்மா’ என்று பணிவன்புடன் அழைப்பவர்களிடம்  மறு வணக்கம் தெரிவிப்பதுதானே முறை” என்றனர். அதற்கு நான், “இவர் வணக்கம் செலுத்தாமல் இருந்தால் தவறுதான்.  ஆனால், இவர் வணக்கம் தெரிவித்த படம் வெளி வந்திருக்காது.  ஏனெனில் வந்துள்ள படங்களில் சிலர் மட்டும் வணக்கம் செலுத்துவதுபோல் காட்சிகள் உள்ளன. அப்படியானால் அவர் வணக்கம் செலுத்தியபின்னரும் கட்சிகளுக்கே உள்ள கொத்தடிமைத் தனத்தில் இவர்கள் வணக்கம் போட்டுக்கொண்டே நின்றகின்றனர்” என்றேன். உண்மையிலேயே  அதற்கேற்றார்போல் இவர் வணக்கம் செலுத்திய படங்களும் வந்தன. எனவே, அவசரப்பட்டுத் தவறான முடிவிற்கு வந்ததை ஒத்துக்  கொண்டனர்.
  இப்பொழுது செய்தி இதுபற்றியல்ல! இந்தப் படம்பற்றிய செய்தி பள்ளி நினைவைக் கொணர்ந்தது. அதுபற்றிக் கூறவே விரும்புகின்றேன்.
  நான் மதுரையில் உள்ள (திருப்பரங்குன்றம்) திருநகரில் மு.மு.உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துக்  கொண்டிருந்தேன். அப்பொழுது எங்கள் வகுப்பு ஆசிரியர் திரு குழந்தைசாமி, (என்னையும் நண்பர்களையும் பார்த்து) “நீங்கள் உடற்பயிற்சி ஆசிரியருக்கு வணக்கம் செலுத்துவதில்லையாமே! எங்களைக் காணும்பொழுதெல்லாம்  வணக்கம் செலுத்துகிறீர்கள். முதல்முறை சந்திக்கும் பொழுதுமட்டும் வணக்கம் சொன்னால் போதும் என்றால் கேட்பதில்லை. அவருக்கு மட்டும் ஏன் வணக்கம் செலுத்துவதில்லை” என்றார்.
  அதற்கு நான், “நாங்கள் வணக்கம்  தெரிவித்தால் அவர் எங்களுக்கு மறு வணக்கம் தெரிவிக்க மாட்டேன் என்கிறார். எனவேதான், அவருக்கு வணக்கத்தை வீணாக்க விரும்பவில்லை” என்றேன்.
 “ஓகோ, நீங்கள் வணக்கம் சொன்னால் ஆசிரியரும் வணக்கம் சொன்னால்தான் அடுத்து வணக்கம் தெரிவிப்பீர்களா?  ஆசிரியரை மதிப்பதில்லையா?” என்றார்.
  “அப்படியில்லை  ஐயா! நீங்கள் எல்லாரும் நாங்கள் வணக்கம்  தெரிவிக்கும் பொழுது எல்லாம் வணக்கம்  தெரிவிக்கிறீர்கள். தலைமைஆசிரியரும் வணக்கம் தெரிவிக்கின்றார். சிலர், மீண்டும் மீண்டும் வணக்கம் சொல்லும் பொழுது    ‘வணக்கம்’ என்று சொல்லவாவது செய்வர். ஆனால், கையை அசைக்கவும் மாட்டார்; தலையையும் அசைக்கமாட்டார்; புன்னகை மூலம் வணக்கத்தை ஏற்றுக்கொண்டதுபோல்கூடக் காட்ட  மாட்டார். அவரே விரும்பாத பொழுது அவருக்கு ஏன் வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று வணக்கம் தெரிவிப்பதில்லை. ஆனால் அவரை அவமதிப்பு செய்வதுபோல் நடந்துகொள்வதில்லை. அவர்சொல்படிதான் நடக்கின்றோம்” என்றேன். உடனிருந்த நண்பர்களும் “ஆமாம், ஐயா, நாங்கள் வணக்கத்தை வீணாக்க விரும்பவில்லை” என்றனர்.
  அதற்கு  ஆசிரியர் குழந்தைசாமி, “நீங்கள் சொல்வதும் சரியாகத்தான் படுகின்றது. நீங்கள் வணக்கம் சொல்வதில்லை என்றவர், அதற்கான காரணம்பற்றி அறியாமல் இருக்கிறார். ஆனால், இப்படியே தொடருவது நல்லதல்ல. எனவே நான்   ஒரு மந்திர வித்தை சொல்லுகிறேன். அதன்படி நடந்துகொண்டால் அவரும் உங்களுக்கு வணக்கம் தெரிவிப்பார்” என்றார். “சொல்லுங்கள் ஐயா, செய்கின்றோம்” என்றேன்.
  பள்ளி எதிரில்தான் எங்களது இரவல் விளையாட்டுத் திடல் இருக்கும். அது மிகப்பெரியது. வகுப்பாசிரியர், “ அவர் விளையாட்டுத் திடலுக்கு வரும்பொழுது நீங்கள் பத்தடி இடை வெளியில் ஒவ்வொருவராக நின்று கொள்ளுங்கள்; ஒவ்வொருவராக வணக்கம் தெரிவியுங்கள்.  இவ்வாறு ஒவ்வொரு நாளும் நீங்கள்   உடற்பயிற்சிஆசிரியர்  விளையாட்டுத் திடலுக்கு வரும்பொழுது ஒன்றுபோல் வணக்கம் சொல்லாமல் தனித்தனியாகச் சொல்லுங்கள். அவர் வணக்கம் தெரிவிக்கும் வரை இவ்வாறு ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டால் அவர் புரிந்து கொண்டு இனிமேல் வணக்கம் சொல்வார்” என்றார்.
 நாங்களும் அதனைப் பின்பற்றினோம். அவர் ஆசிரியர் அறையில் இதுபற்றிப் பேசியிருப்பார்போலும். காரணத்தைப் புரிந்து கொண்டார். மூன்றாம் நாள், நாங்கள் சொல்வதற்கு முன்னரே ‘அனைவருக்கும் வணக்கம்’ என்று கைகூப்பிச்சொன்னார். வகுப்பாசிரியர் திரு குழந்தைசாமி  சொன்ன மந்திர வித்தை பயனளித்துவிட்டது என்பதை நாங்களும் புரிந்துகொண்டோம். அது முதல் நாங்கள் வணக்கம் சொல்லத் தவறுவதில்லை. அவரும் திருப்பி வணக்கம் சொல்ல மறந்ததில்லை.
  வகுப்பாசிரியர் திரு குழந்தைசாமியைச் சந்தித்து, “ ஐயா, உங்கள் மந்திர வித்தை பலித்து விட்டது” என்றோம் “ஆமாம், நானும் அறிந்தேன். ஆனால், அவர் இதை அறிந்ததுபோல் காட்டிக்கொள்ளமாட்டார்.  நீங்களும் அவரிடம் இதுபற்றி ஒன்றும் சொல்ல வேண்டா” என்றார் அவர். நாங்களும் அவ்வாறே நடந்துகொண்டோம்.
  அதன்பின்னர், இதற்கு முன்னர் அரைகுறையாகப் பெயருக்கு வணக்கம் சொன்ன ஆசிரியர்கள்கூட, நன்றாக வணக்கம் சொன்னார்கள்.   அடுத்த வகுப்பு மாணவர்கள், “உங்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் முந்திக்கொண்டுகூட வணக்கம் சொல்லுகிறார்களே! ஏன்?” என்றனர். “ஒன்றுமில்லை. நாங்கள் நல்ல பையன்கள். எனவேதான், இப்படி” என்றேன்.
  படிக்கும் பொழுதுமட்டுமல்ல. அதன்பின்னரும் யாராவது வணக்கம் சொல்லும் பொழுது அமைதியாக இருந்தால் அடுத்த சந்திப்பில் நேரடியாகப் பேச்சக்குச்சென்று விடுவேன்.  ஆனால் கட்சியினர் தன்மதிப்பைக் காப்பாற்ற விரும்புவார்கள் என எதிர்பார்க்க முடியாதல்லவா?
இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive