Wednesday, September 29, 2010

எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
– திருவள்ளுவன் இலக்குவனார்

தமிழைப் பாதுகாப்பதாகவும் பரப்புவதாகவும் கூறிக் கொண்டு சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு எழுத்துச் சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையில் பிற அனைத்து மொழிகளுடனும் ஒப்பிடுகையில் மிகச் சிறந்ததாயும் அறிவியல் முறையில் அமைந்ததாயும் உள்ள ஒரே வடிவப் பாங்கு தமிழ் மொழிக்குரிய வரி வடிவ அமைப்பாகும். இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளாத சிலர் தாங்களும் குழம்பிப் பிறரையும் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகையோர் மிகச் சிலராய் இருப்பினும் இவர்கள் செல்வாக்கு உள்ள இடங்களில் உள்ளமையாலும் திரும்பத் திரும்பக் கூறியதையே கூறி உண்மையாக இருக்குமோ எனப் பிறரை ஐயப் படுகுழியில் தள்ளப் பார்ப்பதாலும் நாம் மறுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அந்த வகையில் தமிழ் வரிவடிவச் சீர்மையையும் சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளும் சிதைவு முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதன் தேவையையும் நாம் காணலாம்.

குறைபாடுள்ள ஒன்றைத் திருத்துவதே முறையானது. மாறாகச் சீராக உள்ளதைத் திருத்துவது என்பது சீரழிப்பே ஆகும். அந்த வகையில் சீராக உள்ள தமிழ் வரிவடிவங்களில் சிதைவு ஏற்படுத்த வலியுறுத்துபவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் எளிய கவிதைகள் மூலம் தமிழன்னையை அழகுபடுத்தும் அறிஞர் வா.செ.குழந்தைசாமி ஆவார். அவர் குறிப்பிடும் கருத்துகளில் முதன்மையானவை தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளதாலும் உயிர் மெய்க் குறியீடுகள் சீராக அமையாமையாலும் படிக்க முடியாமல் போகின்றது என்பதாகும். உண்மையில் தமிழ் எழுத்துகளில் உயிர் மெய்க் குறியீடுகள் என்பன அட்டவணை 1 இல் குறிப்பிட்டாற்போன்று கால், பிறை, விலங்கு, கீற்று, கொம்பு என ஐந்தாகும். இவற்றுள் கொம்பும் காலும் இணைந்த கொம்புக்கால் என்பது ஊகாரத்திலும் ஔகாரத்திலும் பயன்படுத்தப்படுகின்றது. இது ள என்னும் எழுத்து போன்று இருந்தாலும் (கொம்பும் காலும் இணைந்த) தனிக் குறியீடு என்பதால் அட்டவணை 1 இல் தனியாகக் காட்டப்பட்டுள்ளது.
natpu
ஐந்து உயிர் மெய்க் குறியீடுகளே அட்டவணை இரண்டில் குறிப்பிட்டாற்போன்று எழுத்துடன் இணைந்தும் முன்னால் அல்லது பின்னால் அல்லது முன்னும் பின்னுமாகச் சேர்ந்தும் பதினெட்டு வகையாகக் காட்சியளிக்கின்றன.
natpu
இவற்றுடன் மெய்யெழுத்தில் உள்ள புள்ளி நீக்கப்படுவதன் மூலம் உயிர்மெய் அகரம் உருவாகிறது. எனவே, உயிர்மெய் அமையும் வகை பத்தொன்பது என்று கொள்ளலாம். இவற்றை அட்டவணை 3 அ, அட்டவணை 3 ஆ, அட்டவணை 3 இ ஆகியவை விளக்குகின்றன.
natpu
natpu
natpu
இவற்றுள் ணா, றா, னா ஆகியவை மிக மிகத் தொடக்கக்காலத்தில் இவ்வாறேதான் எழுதப்பட்டு வந்துள்ளன. இவற்றைக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களும் குறிப்பிட்டுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கலைச்சொல் அகர முதலியிலும் ஆறாயிரம் எனத் துணைக்காலுடன் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது குறிக்கப் பெற்றுள்ளது. பின்னரே எழுதும்பொழுது ஏற்படும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகப் பிறை என்னும் வடிவமிட்டு எழுதியுள்ளனர். முன்பே இவ்வாறு மாற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளது போல் இப்போது ஏற்றுக் கொண்டால் என்ன என்று சிலர் வினவலாம். குறியீடுகளை அறிவியல் முறையில் அமைக்கும் பொழுதே எழுதும் முறைக்கு முதன்மை கொடுத்து இவ்வாறு அமைத்துள்ளனர். ஆனால் கல்வெட்டுகளில் பெரியார் எழுத்து என்று இப்பொழுது நாம் சொல்லும் இந்த முறையைப் பின்பற்றியுள்ளனர். இவைபோல்தான் ணை, லை, ளை, னை ஆகியன எழுதுகையில் ஏற்படும் எழுத்து மயக்கத்தை அல்லது குழப்பத்தைப் போக்குவதற்காக துதிக்கை எழுத்து என்று இப்போது அறியாமல் அழைக்கப்படுகின்ற முன்வளைத் தலைகீற்று பயன்படுத்தப்பட்டது. இதனால் சுழிகளாக இணைந்து வருகையில் ஏற்படும் ஐயப்பாடு நீங்கியது. டி, டீ ஆகிய எழுத்துகள் உள்ளவாறே மேல் விலங்கு இடப்பட்டால் பி, பீ என்ற எழுத்து போல் தோன்றும் என்பதால் சற்று உள்வாங்கிக் குறியீடுகள் போடப்பட்டுள்ளமை போல்தான் மேலே குறிப்பிட்ட சில ஆகார ஐகாரக் குறியீடுகள் அறிவியல் முறையில் எழுதப்படுவதற்கு வாகாக அமைந்துள்ளன. இவற்றை அறியாமல் நாம் 1978 ஆம் ஆண்டு கொண்டு வந்த எழுத்துச் சீர்திருத்தம் தேவையற்றதாகும். எனவே, மீண்டும் பழைய முறையை நடைமுறைப்படுத்துவதே சிறந்ததாகும்.

அடிப்படையில் அனைவரும் தவறாக எண்ணிவரும் உகரக் குறியீடுகள் அனைத்தும் அறிவியல் முறையில் மிகச் செம்மையாக அமைந்துள்ளன என அட்டவணை நான்கைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். உகரக் குறியீட்டின் பொதுப்பெயர் கீற்று என்பதாகும். எழுத்து முடியும் இடத்திற்கேற்ப இதனைத் தொடர்ந்து குறிப்பிடும் வகையில் உகர உயிர்மெய் எழுத்துகள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டும் என்றால், க என்னும் எழுத்துடன் கீற்றைக் (க+|)குறிப்பிடுகையில் த என்ற குழப்பம் வரக் கூடாது என்பதற்காகக் கீழ் விலங்குக் கீற்றாக ( ) அமைத்துள்ளனர்; த என்னும் எழுத்தில் முடியும் இடத்தில் கீற்றைக் குறிப்பிடுகையில் த எழுத்தில் இருந்து வேறுபடுத்த முடியாது என்பதால் மடக்கேறு கீற்றாகப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வடிப்படையில்தான் ஊகாரக் குறியீடுகளும் நேர்த்தியாயும் எழுதுவதற்கு வாகாகச் சீரியதாயும் அமைந்துள்ளன.

natpu

பெரும்பான்மைத் தமிழறிஞர்கள் எழுத்துச் சிதைவிற்கு எதிரான கருத்தையே தெரிவித்து வருகின்றனர். ஆனால், இவ்வாறு எதிர்ப்பவர்கள் - தம் வாதத்தை எடுத்துரைக்கும் பொழுது தெரிவிக்கும் சில கருத்துகளைக் கொண்டு அவர்களும் - எழுத்துச் சிதைவை ஆதரிப்பதாக எழுத்துச் சிதைவாளர்கள் தவறாகக் கூறுகின்றனர். சான்றாக அறிஞர் வா.செ.கு. அவர்கள், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பன்மொழியறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் முதலிய சிலர் எழுத்துச் சிதைவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். எழுத்துச் சீரமைப்புக் குழுவில் இருந்தாலும் மீனாட்சி சுந்தரனார், எழுத்துச்சிதைவிற்கு எதிராகத், தமிழ் மிகப் பழைய மொழி என்பதனை மறக்க முடியாது. பழமையை அழிப்பதில் ஏன் இந்த விறுவிறுப்பு? தமிழ் எழுத்து கண்ணைக் குத்துகிறதா? கொலை செய்கிறதா? எனக் கடிந்து கூறியுள்ளார் (சித்த யோகி சாமி சுந்தரமகாலிங்கம் அவர்களின் உண்மை வெளிப்படுகின்றது என்னும் கட்டுரை: செந்தமிழ்ச் செல்வி சனவரி, 1952: தரவு-புலவர்மணி இரா.இளங்குமரனாரின் எழுத்துச் சீர்திருத்தமா? எழுத்துச் சீரழிப்பா? என்னும் நூல் பக்கம் 13). சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள், எழுத்துச் சீர்திருத்தவாதிகள் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை பேசுகின்றனர். .... எழுத்துச் சீர்திருத்தவாதிகளுக்கு நானும் ஒரு பட்டம் தரலாம். அது குழப்பவாதிகள் என்பதாகும். .... உண்மை என்னவென்றால், தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்லூரிகளில் பயிற்சிமொழியாகவும் வருவதை யாரெல்லாம் விரும்பவில்லையோ, யாரெல்லாம் ஆங்கிலமே தமிழர் வாழ்வில் தலைமை பெற்றுள்ள நிலை நீடிப்பதை விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் எழுத்துச் சீர்திருத்தம் பேசுகின்றனர் (எழுத்துச் சீர்திருத்தம் தேவையா? 1995) என எழுத்துச்சிதைவிற்கு எதிரான கருத்தைப் பதிவு செய்துள்ளார். கூறாததைக் கூறியதாகக் கூறும் வஞ்சனையை அன்றே சிலம்புச் செல்வர் உணர்த்தியுள்ளார். இவர்களைப் போல், கப்பலோட்டிய தமிழர் அறிஞர் வ.உ.சிதம்பரனார், செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், முனைவர் வ.சுப.மாணிக்கம், பாவலர் பெருஞ்சித்திரனார், முதுமுனைவர் இரா.இளங்குமரனார், பேராசிரியர் ம.இல.தங்கப்பா, அறிஞர் வெ.கோவலங்கண்ணன், அறிஞர் ஔவை நடராசன், கணிஞர் மு. மணிவண்ணன், பேராசிரியர் இ.மறைமலை, பேராசிரியர் பா.இறையரசன், பொறிஞர் இராமகிருட்டிணன், முனைவர் இளங்கோவன், அறிஞர் க.சி.அறிவுடைநம்பி, அறிஞர் சீனிநைனா மொகமது, பேராசிரியர் செல்வகுமார், அறிஞர் சுப.நற்குணன், அறிஞர் பெரியண்ணன் சந்திரசேகரன் முதலிய பலரும் வரிவடிவச் சிதைவு முயற்சிகளில் இருந்து தமிழைக் காப்பாற்ற குரல் கொடுத்துள்ளனர்; மேலும் பலர் குரல் கொடுத்தும் வருகின்றனர்.



மொழிக்கு அடிப்படை ஒலியே என்றும் வரிவடிவம் மாறுவதால் மொழி அழியாது என்றும் சிலர் கூறி வரிவடிவத்தைச் சிதைப்பதற்கு ஆதரவு திரட்டுகின்றனர். எழுத்தாகிய உடல் இல்லையேல் மொழியாகிய உயிர் அழியும் எனப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தெளிவுபடுத்தியுள்ளார். எழுத்தாகிய உடல் சிதைந்தமையால் மொழியாகிய உயிர் தங்குவதற்கு இடமின்றி அழிந்துள்ளதை வரலாறு காட்டுகின்றது. பரதகண்டம் முழுமையும் வழங்கிவந்த தமிழ் மொழி புதிய புதிய வரிவடிவங்களுக்கு இடம் அளித்ததால்தான் பிறமொழிச் சொற்களும் உள்ளே புகுந்து இக்கண்டம் முழுவதும் புதுப்புது மொழிகள் தோன்றின. எனவே, இப்பொழுது மேற்கொள்ளும் எழுத்துச் சிதைவு முயற்சி எஞ்சியுள்ள தமிழ் நிலத்தையும் இல்லாதாக்குவதற்கான முயற்சியே அன்றி வேறு இல்லை. ஒலியே மொழி என்றும் வரிவடிவம் மொழியன்று என்றும் கூறும் தவறான வாதத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஐ என்று மட்டும் ஒலித்தால் தமிழா ஆங்கிலமா வேறு மொழியா எனத் தெரியாது. ஆனால், ஐ எனத் தமிழில் எழுதும்பொழுது, உயிரெழுத்துகளில் ஒன்றாகவும், தலைவன் என்னும் பொருள் உடைய சொல் என்றும் புரிந்து கொள்ளலாம். இதனையே ஆங்கிலத்தில் ஐ என எழுதும்பொழுது தனி எழுத்தாயின் (I) உயிரெழுத்தையும் நான் என்னும் பொருளையும் குறிப்பதாகவும் எழுத்துச் சேர்க்கையாக அமையின் (Eye) கண் என்னும் பொருள் வருவதையும் புரிந்து கொள்ளலாம். ஆக ஒலிவடிவம் பல மொழிகளில் பொதுவாக இருப்பதையும் வரிவடிவமே மொழியை வேறுபடுத்துவதையும் புரிந்துகொள்ளலாம். எனவே, வரிவடிவத்தைச் சிதைப்பது மொழியைச் சிதைப்பதாகும் என உணர்ந்து அம் முயற்சியைக் கைவிடவேண்டும்.



ஐரோப்பிய மொழிகளில் உயிர் மெய்யெழுத்தில்லை எனக் கூறி அவ்வாறு உயிர் மெய் அமைப்பிருக்கும் தமிழின் சிறப்பைக் குறையாகக் கூறுகின்றனர். ஊனமுற்றவர்களைக் காட்டி, முழு நலத்துடன் இருக்கின்றவரைக் கைகால்களை உடைத்துக் கொள்ளச் சொல்லும் அறியாமைக்கு என்னென்பது? உயிர்மெய்எழுத்துகள் இருப்பதால் நாம் ஒவ்வோர் எழுத்தாக ஒலிக்க வேண்டிய தேவையில்லை. த+மி+ழ் என்றால் தமிழ் என்றாகிறது. மாறாக உயிர் மெய் எழுத்துகள் இல்லாமல் இருந்தால் அவர் குறிப்பிடும் ஆங்கிலம் முதலான பிற மொழிகள் போல் த்+அ+ம்+இ+ழ் என எழுத்தொலிகளைக் கூட்டிச் சொல்லை உச்சரிக்க வேண்டியிருந்திருக்கும். சொல்லின் அளவும் நீளமாகும். இதேபோல்தான் சிதைவு முறைப்படி எழுதும் பொழுதும் அளவு கூடும். சான்றாகப் புது என்பதை எழுதும் பொழுது ப+உகரக்குறியீடு+த+உகரக்குறியீடு எனச் சொல்லின் அளவு நீளும். உழைப்பு, தாள், மை, தேய்மானம் ஆகியவை கூடும்: செலவு பெருகும். குறைந்த முயற்சியும் குறைந்த உழைப்பும் நிறைந்த சிக்கனமும் எளிமையும் உடைய எழுத்தமைப்பைக் குறை கூறுவதில் இருந்தே ஆழமான சிந்தனை இன்றி மேலோட்டமாகப் பார்த்து முடிவெடுப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.



60க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் 26 என்ற குறைந்த எழுத்துடைய ஆங்கில மொழியினைக் கற்க முதன்மை கொடுப்பதாகவும் 247 என்னும் மிகுதியான எண்ணிக்கை உடைய தமிழைக் கற்க அஞ்சி ஓடிவிடுவதாகவும் அவ்வப்பொழுது தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. எழுத்துகளின் எண்ணிக்கையைப் பார்த்து யாரும் மொழியைக் கற்க முடிவெடுப்பதில்லை. தேவை கருதிப் பெரும்பான்மையரும் ஆர்வம் கருதி மிகச் சிறுபான்மையரும் மொழியைக் கற்கின்றனர். மேலும் ஆங்கிலத்தில் 26 எழுத்துகள்தான உள்ளன என்பதும் தவறாகும். ஆங்கில வரிவடிங்கள் தலைப்பெழுத்து, சிறிய எழுத்து, அச்சுப் பெரிய எழுத்து, அச்சுச் சிறிய எழுத்து என நால்வகையாக உள்ளன. சான்றாகப் பின்வரும் இரண்டு எழுத்துகளைப் பார்ப்போம் : F, f, g , f - G, g, g, g, என்பன வெவ்வேறு வகையாக உள்ளன அல்லவா? ஆங்கில வரிவடிவத்தில் மொத்தம் 524 வகை உள்ளதாக ஆங்கிலப் பேராசிரியர் ஐயாதுரை என்பார் கூறியுள்ளார். அவை அனைத்தையும் அறியா விட்டாலும் ஆங்கிலம் கற்க விரும்பும் ஒருவர் இந்நால்வகை வடிவமுறைகளையும் கற்றால்தான் அவரால் ஆங்கிலத்தைப் படிக்க முடியும். இல்லையேல் பயனில்லை. எதற்கெடுத்தாலும் ஆங்கிலத்தில் 26 எழுத்துகள்தான் உள்ளன என்று சொல்பவர்கள் உண்மையை மறைப்பது ஏன்?



ஆதலின், ஆங்கில வரிவடிவ எண்ணிக்கை 26 எனக் குறைவாக உள்ளதால்தான் ஆங்கிலத்தைக்கற்பதாகக் கூறுவது போன்ற கயமைத்தனம் வேறு கிடையாது. தமிழ் எழுத்துகள் என்பன உயிரெழுத்து 12 மெய்யெழுத்து 18 ஆய்த எழுத்து1 ஆகிய 31 எழுத்துகள்தாம். தமிழில் நெடிலெழுத்துகள் உள்ளமையால் எதையும் சரியாக ஒலிக்க முடிகின்றது; எழுத்தொலியைக் கூட்டினாலே சொல் பிறப்பதால் படிப்பதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. பெரும்பாலான மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை மிகக் குறைவே. ஆங்கிலத்தில் ஆர்,ஏ,எம்,ஏ (R,A,M,A) என்று ஒலித்தால் ரமா என்று சொன்னால் பெண்ணாகவும் ராமா என்று சொன்னால் ஆணாகவும் மாறும் குழப்பம் தமிழில் இல்லை. என், ஓ (NO) என்றால் நோ; என், ஓ, டபுள்யூ (NOW) என்றால் நௌ; கே, என்,ஓ,டபுள்யூ (KNOW) என்றாலும் நோ என்பன போன்ற குழப்பங்கள் தமிழில் இல்லை. 26 எழுத்துகளையும் நான்கு வகையாக - ஆக 104 - எழுத வேண்டியுள்ளது போன்று தமிழில் எழுத வேண்டிய தேவையில்லை. அறிவியல் ஒலிப்பு முறையில் அமைந்த தமிழின் சிறப்பை மறைத்துவிட்டுக் குறைபாடுடைய மொழிகளின் ஒலிப்பு முறைகளைப் பாராட்டுவது அறியாமையே. (எழுத்துச் சீர்திருத்தமா? சீரழிப்பா? : இலக்குவனார் திருவள்ளுவன்)

தாய்நிலமாகிய தமிழ்நிலத்திலேயே தமிழுக்கு மதிப்பில்லாச் சூழல் உள்ளது. கல்வியிலும் பணியிலும் வழிபாட்டிலும் ஆட்சியிலும் என எல்லா இடங்களிலும் தமிழுக்குத் தலைமையை நாம் தரவில்லை. உலகத்தமிழர்களிடையே இன்னல்கள் ஏற்படும் பொழுது குரல்கொடுத்து குறைகளைந்து உதவும் உணர்வு பெரும்பான்மையரிடம் இல்லை. இருந்திருந்தால் ஈழத்தில் இனப்படுகொலையும் நிலப்பறிப்பும் உறுப்புகள் உடைமைகள் இழப்பும் கற்பழிப்பும் வதைவெறியும் ஆகிய பேரவலம் நிகழ்ந்திருக்காதே! இங்கு நாம் தமிழே படிக்காமல் பணியாற்றவும் வணிகத்தில் சிறக்கவும் வாழ்வாங்கு வாழவும் இயலும். எனவே, தேவையில்லாத மொழியைக் கற்பதைச் சுமையாகப் பலர் கருதுகின்றனர். அவ்வாறில்லாமல் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் வழங்கினால் அனைவரும் தமிழுக்கு முதன்மை அளிப்பர். எனவே, தமிழைக் கற்பதற்கும் வரிவடிவ எண்ணிக்கைக்கும் தொடர்பில்லை. தமிழ் படிக்கத் தொடங்கிய யாரும் எழுத்துகளின் எண்ணிக்கை மிகுதியாக இருக்கிறது என்றும் குறியீடுகள் சீர்மையாக இல்லை என்றும் கூறித் தமிழ் மொழிக் கல்வியை நிறுத்தினாரில்லை. இன்னும் சொல்லப்போனால், அயலக அறிஞர்கள் இங்கு வந்த பொழுது தமிழின் சிறப்பை உணர்ந்து போற்றித் தமிழைப் படித்துப் புலமை பெற்றார்களே அன்றி, ஒருவர்கூட, தமிழைப்படிக்க முனைந்தோம்; எழுத்துச் சுமையால் கைவிட்டோம் எனக் கூறினாரல்லர்.



தட்டச்சுப் பொறி கண்டுபிடிக்கப்பட்ட பொழுது ஏறத்தாழ 42 விசைகளைக் கொண்டிருந்த விசைப் பல கைக்கேற்ப சப்பானியரும் சீனரும் நெடுங்கணக்கு எண்ணிக்கை மிகுதியாக உடைய பிற மொழியினரும் தத்தம் மொழியைச் சிதைக்கவில்லை. சான்றாகச் சப்பானியர் 3 அடுக்கு விசை இழுவைப் பலகையை அமைத்தனர். முதல் அடுக்கில் 1850 எழுத்துகள் + 351 குறியீடுகள் என 2201; இரண்டாம் அடுக்கில் 858 பட எழுத்து; மூன்றாம் அடுக்கில் 2297 பட எழுத்து என மொத்தம் 5356 எழுத்துகளுக்கான விசைகளை அமைத்தனர். இதனால் சப்பானிய எழுத்துகளைக் குறைத்ததாகப் பொருள் இல்லை. பயன்பாட்டு எண்ணிக்கைக்கேற்ப அடிக்கடி தேவைப்படுவன, அவ்வப்பொழுது தேவைப்படுவன, எப்போதாவது தேவைப்படுவன என்ற முறையில் பகுத்து வைத்துள்ளனர். பின்னர் அனைத்து சப்பானிய வரிவடிவங்களையும் பயன்படுத்தும் வகையில் கருவி அமைத்தனர். கணிணியையும் தம் வரிவடிவம் சிதைவின்றி அச்சிடப்படும் வகையில் அமைத்தனர்.

கஞ்சி எனப்படும் சீன அல்லது சப்பானிய பட எழுத்துகளை எழுதுவதாயின் ஒன்றிலிருந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட வளைவுகளும் மடக்குகளும் உள்ளன. சான்றுக்குச் சில:

இச்சிக்கலான வடிவமைப்பால் அவர்கள் எழுத்துகளைச் சிதைக்கவில்லை. நாம் ஆங்கில எழுத்தில் கணியச்சிட்டால் தமிழ் எழுத்து வரும் முறையையும் கொண்டிருப்பது போல் அவர்கள் மொழியில் அல்லது ஆங்கிலத்தில் எழுத்தொலிக்கான விசையைக் கணியச்சிட்டால் படவெழுத்து அச்சிடப்படும் வகையில் கணியச்சை வடிவமைத்துள்ளனர். அஃதாவது தொப்பியின் அளவிற்கேற்பத் தலையை வெட்டி உயிரிழக்கும் அறியாமையில் மூழ்காமல் தலைக்கேற்றவாறு தொப்பியை வடிவமைத்துக் கொண்டனர். இங்குள்ள சிலரோ இல்லாத குறைகளை இருப்பதாகக் கூறிக் கொண்டு தொப்பிக்கேற்றவாறு தலையைச் சிதைக்க வேண்டும் என்கின்றனர். எனவே, வரி வடிவ எண்ணிக்கைக்கும் தமிழ்க் கல்வி குறைந்துபோவதற்கும் தொடர்பு இல்லை. இந்தியாவில் மட்டுமல்ல,உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் கற்பதற்கான வாய்ப்பை உருவாக்கும் பொறுப்பும் கடமையும் தமிழக அரசிற்கும் இந்தியக் கூட்டரசிற்கும் உள்ளன. கடமையில் இருந்து தவறும் அரசுகளைக் கண்டிக்காமல் வரிவடிவ எண்ணிக்கையினால்தான் தமிழ் பயில்வோர் குறைவதாகக் கூறுவது ஏதோ தமிழ்ப் பற்றின் காரணமாக வரிவடிவச் சிதைவை வலியுறுத்துவதாக எண்ண வேண்டும் என்பதற்காகத்தானே தவிர வேறு அல்ல.(எழுத்துச் சீர்திருத்தமா? சீரழிப்பா? : இலக்குவனார் திருவள்ளுவன்)



திபேத்திய மொழி, சீன மொழி, சப்பானிய மொழி முதலான மொழிகளில் கருவிகளைத் தங்கள் மொழிவடிவேற்கேற்ப அமைத்த அறிவார்ந்த பாங்கை விளக்குவதற்காகப் படம் 1 முதல் படம் 4 வரை விசைப்பலகைப் படங்கள் இணைப்பில் தரப்பட்டுள்ளன.



இவையும் மொழிப்பயன்பாட்டிற்காகத்தான் கருவிகளே தவிர கருவிகள் பயன்பாட்டிறக்காக மொழியல்ல என்பதை நன்கு விளக்கும். எனவே, அடிப்படை எழுத்துகள் 31 மட்டுமே உள்ள தமிழ்மொழியின் வரிவடிவ எண்ணிக்கையைக்காட்டி வரிவடிவச் சிதைவுமுயற்சியில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்.

மாறுவது என்பது இயற்கை; எனவே, மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்; இதுவரை எத்தனையோ முறை மாறியுள்ள வரிவடிவத்தை இப்பொழுது மாற்றினால் என்ன? என்பது போன்ற வாதங்களைச் சிதைவாளர்கள் எடுத்து வைக்கின்றனர். காலந்தோறும் கல்வெட்டுகளில் வரிவடிவங்கள் மாறி வந்துள்ளன என்பது உண்மைதான். ஆனால், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு வந்த தமிழ் வரிவடிவம் மிகத் தொன்மையான காலத்தில் இருந்து மாறாமல் வந்துள்ளது. பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
natpu


முதலானோர் இக்காலச் சுருக்கெழுத்துபோன்ற கல்வெட்டு வடிவங்கள் வேறு என்றும் பெரிதும் இவை தமிழறியா அயலவர்களால் செதுக்கப்பட்டவை என்றும் கூறுவர். தமிழ் இலக்கண நூல்களும், தொல்லை வடிவின எல்லா எழுத்தும் எனக் கூறுகின்றன. (நன்னூல்: எழுத்ததிகாரம்: 5.உருவம்: நூற்பா 98 - இலக்கண விளக்கம்: எழுத்தியல்: நூற்பா 23) அஃதாவது எல்லா எழுத்துமே மிகத் தொன்மையான காலத்தில் இருந்துமாறாமல் வருகின்றன என இலக்கண நூல்கள் கூறுகின்றன. எனினும் முதன் முறையாக, வீரமாமுனிவர் காலத்தில், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தமது அறுவகை இலக்கணம் என்னும் நூலில் எகர ஒகர வடிவங்களில் புள்ளி நீக்கி எழுதப்படுவது குறித்துத் தெரிவித்துள்ளார். இகரத்தைச் சுழித்து ஈகாரம்ஆக்குதல் கூட்டெழுத்துகள் முதலான பிற பற்றியும் இந்நூலில் தெரிவித்திருந்தாலும் பரவலாக
natpu
ஏற்கப்படாமை குறித்தும் கூறியுள்ளார். எனவே, உள்ளபடியே பிற வரிவடிவங்கள் காலந்தோறும் மாறிவந்திருந்தன எனில் இலக்கண ஆசிரியர்கள் அவை குறித்துக் கூறாதிருந்திருக்க மாட்டார்கள். ஆதலின் வரிவடிவங்கள் காலந்தோறும் மாறி வந்துள்ளன எனச் சிதைப்பாளர்கள் கூறுவது அறியாமையின்பாற்பட்டதே.

natpu

ஓலைச்சவடிகளைக் காலந்தோறும் படியெடுத்து வந்துள்ளனர். சிதைப்பாளர்கள் கூறுவதுபோல் வரிவடிம் மாறியிருப்பின் வெவ்வேறுவகையான ஓலைச்சுவடிகள் நமக்குக்கிடைத்திருக்க வேண்டும். அறிஞர் சி.வை.தாமோதரனார், அறிஞர் உ.வே.சாமிநாதய்யர் முதலானோர் தாம் ஓலைச் சுவடிகளை அச்சுவடிவமாக்கப்பட்ட இன்னல்களைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது இவற்றையும் குறிப்பிட்டிருப்பர். ஆனால் பாட வேறுபாடுகள் இருப்பினும், எழுத்து முறையில் மாறுபட்ட ஓலைச்சுவடிகள் இல்லாமையே எழுத்து வடிவம் மாறாதிருந்துள்ளது என்பதற்குத் தக்க சான்றாகும்.

எழுத்துச் சிதைப்பாளர்கள் சிலர் பெரியார் முகமூடி அணிந்து கொண்டு எழுத்துச் சிதைப்பு முயற்சிகளுக்கு வரவேற்பு தேட முயல்கின்றனர். பெரியார் அன்பர்களும் பெரியாரின் பிற கொள்கைகளைப் பின்பற்றாத இத்தகையோரின் கூற்றுக்களை நம்பி வரிவடிவ மாற்றம் தேவை என நம்புகிறன்றனர். தந்தை பெரியார் அவர்கள் அச்சுப்பணியில், எழுத்துவடிவில் பற்றாக்குறை ஏற்பட்டபொழுது ஆகாரங்களுக்கு ஒன்றுபோல் துணைக்காலைப் பயன்படுத்தியும் ஐகாரங்களுக்கு ஒன்றுபோல் இரட்டைக் கொம்பினைப் பயன்படுத்தியும் வந்தார். ஆனால், அவர் எழுதும்பொழுது இம்முறையைப் பின்பற்றவில்லை என்பதைத் தமக்கு எழுதிய மடலைச் சான்றாகக் கொண்டு மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் விளக்கியுள்ளார்கள். பகுத்தறிவு, தன்மான உணர்வு, இன உணர்வு முதலானவற்றில் பெரியார் பாதையில் செல்லாதவர்கள்தாம், பெரியார் வாழ்ந்தபோதும் அவரது கொள்கைகளுக்காக அவர் பின்னர் அணிவகுக்காதவர்கள்தாம் இப்பொழுது பெரியார் வழியில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதாகக் கூறுகின்றனர். எழுத்துச் சிதைப்பைப் பெரியாரின் இலக்கு எனத் தவறாக எண்ணும் பெரியார் அன்பர்கள் சிலரும் ஏமாற்றப்பட்டு இப்பாதையில் பார்வை செலுத்துகின்றனர். ஆனால், தந்தை பெரியார் அவர்கள், எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு உடன்பாடானவர் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
தந்தை பெரியார் அவர்கள், எழுத்தைச் சிதைக்கவுமில்லை; புதிய குறியீடு எதையும் புகுத்தவுமில்லை. நடைமுறையில் உள்ள குறியீடுகளின் அடிப்படையில் ஒன்று போல் அமைக்கலாம் எனக் கருதி அவர் அதனை அச்சில் மட்டும் பயன்படுத்தி வந்துள்ளார். 1950ஆம் ஆண்டில் மெயில் என்னும் ஆங்கில நாளேடு தமிழ்ச்சிதைவு முயற்சியில் ஈடுபட்டபொழுது அதற்கு மறுப்பாகப் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய மறுப்பு மடலைத் தந்தை பெரியார் அவர்கள் விடுதலையில் வெளியிட்டுள்ளார் என்பதில் இருந்தே பேராசிரியரின் எழுத்துச் சிதைவிற்கு எதிரான கருத்துகள்தாம் தந்தை பெரியாருக்கு உடன்பாடானவை எனப் புரிந்துகொள்ளலாம்.
இதே போல் திராவிட இயக்கப் பாவலரான புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் 1.2.1950 அன்று எழுத்துச் சிதைப்பிற்கு எதிரான கருத்தைப் பாடல்களில் பின்வருமாறு பதிந்துள்ளார்.

தமிழகம் மீள வேண்டும் ஆரிய ஆட்சி ஒழிய வேண்டும்

எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே
இனத்தைக் கொல்வது எதற்கு எனில்
தமிழன் நிலத்தைச் சுரண்டித்
தமது நிலையினை உயர்த்த வடவரின் உள்ளம் இதுதான்

சீர்திருத்தம்

எழுத்துத் திருத்த்த்திலும் எண்ணத் திருத்தம் வேண்டும்
எழுத்துக்களைச் சீர்திருத்தும் ஆர்வலர்க்கு ஓர் விண்ணப்பம்
எதற்காக இந்த வேகம்?
பழுத்துக் கனிந்திட்ட மொழிக் கனிக்கு
பழம் அழுகச் செய்வதுவா உங்கள் திட்டம்
ஒழுக்கத்தில் ஓரழகு வேண்டுமாயின்
உயர்பெரியார் திருத்த்த்தை ஏற்க மேலும்
கழுத்தறுப்பு வேலைதனைச் செய்வதெல்லாம்
காளைகளைக் காயடிக்கும் செயலை ஒக்கும்
மொழிக்குரிய உயர்கருத்தும் உலகலாவும்
முன்னேறும் அறிவியலை வளர்க்கும் எண்ணம்
விழிக்கடையின் ஓரத்தும் வராத பேர்கள்
வெதும்புவதேன் எழுத்தினிலே சீர்திருத்தம்!
கொழித்த மொழி பிரஞ்சினிலே, ஆங்கிலத்தில்,
குறியீட்டைக் காட்டுகிற மொழி சீனத்தில்
தொழில்படுமா உங்களது சீர்திருத்தம்?
தோல்விழுங்கிச் சுளைகளை ஏன் எறிகின்றீர் நீர்?
மக்களெல்லாம் தாய் மொழியைக் கற்பதற்கு
மடத்தனமாய்க் கற்பிக்கும் முறையை மாற்றிச்
சிக்கலின்றித் தெளிவாக உணருவதற்கு
செம்மைநிலை காணாத ஆங்கிலத்தால்
தக்கஒரு தகுதியினைப் பெற்றார்போன்று
தமக்குள்தாம் பெரியார் என எண்ணிக்கொண்டு
தக்கைகளாய்த் தலைநிமிர்ந்து ஆடல் வேண்டா!
பெரியார் காலத்தில் அவர் பின்பற்றி வந்த வரிவடிவ மாற்றத்தை ஏற்றுக்கொண்ட பெரியார் அன்பரான முனைவர் பொற்கோ அவர்களும் இன்றைய கணினிஉலகச் சூழலில் உலக மொழிகளில் குறைந்த எழுத்துக்களைக் கொண்ட தமிழ் மொழியில் சீர்திருத்தம் என்ற பெயரிலான எழுத்துச் சிதைவு தேவையில்லை என்றும் தமிழ் மொழியின் வரிவடிவங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். (புதிய தலைமுறை (வார இதழ்), நாள்: மே 13, 2010). ஆதலின், தந்தை பெரியார் இன்றிருந்தால் இத்தகைய வரிவடிவச் சிதைவு முயற்சி இந்தியா முழுவதும் ஒரேமொழி – ஒரேவடிவம் என்பதற்கான பாதை எனப் புரிந்துகொண்டு கடுமையாக எதிர்த்திருப்பார்.
இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 29(1)இல் மொழியையும் எழுத்து வடிவத்தையும் பேணிக்காக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் எழுத்து வடிவம் அழிந்தால் மொழி அழியும், மொழி அழிந்தால் இனம் அழியும் என்னும் வரலாற்று உண்மையை அதனை உருவாக்கியவர்கள் உணர்ந்திருந்தார்கள். எனவேதான் சமற்கிருதத்தில் 500க்கு மேற்பட்ட வரிவடிவம் இருப்பினும் பிற இந்திய மொழிகளில் வரிவடிவ எண்ணிக்கை 500க்குச் சற்றுக் குறைவாக அல்லது சற்றுக் கூடுதலாக அமைந்திருப்பினும் சீர்திருத்தம் என்ற பெயரில் அவற்றைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. அறிவியல் முறையில் சீராகவும் செம்மையாகவும் அமைந்துள்ள தமிழ் மொழியிலும் வரிவடிவ நிலைப்பே தேவை. ஆதலின், அரசமைப்புச் சட்டத்திற்கு மாறாக வரிவடிவச் சிதைவினை வலியுறுத்துவோர்க்குத் தண்டனை வழங்கவும் இத்தகைய படைப்புகளைத் தடை செய்யவும் நம் அரசு முன்வரவேண்டும். அப்பொழுதுதான் தமிழ்மொழி காப்பாற்றப்பட்டு என்றென்றும் நிலைத்து நிற்கும்.

ஒலிவடிவமாகிய உயிரைக்காக்க
வரிவடிவமாகிய உடலைப் பேணுவோமாக!
தமிழ் மொழியைக் காக்க, மொழிவழி தமிழ் இனத்தைக் காக்க
நாம் நமது வரிவடிவத்தைக் காப்போமாக!


Comments

Thank you for commenting!
by HTML Comment Box
[login]
(within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:

அன்பிற்குரிய மணாவிற்கு எழுத்துக் காப்பில் இணைந்தமைக்குத் தனிப்பட்ட முறையிலும் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் தொண்டு தொடரவும் நட்பூ சிறக்கவும் வாழ்த்துகிறேன். நான் கடுங்காய்ச்சலால் மருத்துவமனையில் சேர்ந்திருந்தேன். நேற்று இரவுதான் இல்லம் திரும்பினேன். இப்பொழுதுதான் கட்டுரையைக் கண்ணுற்றேன். இரு சார்பு கருத்துகள் இடம் பெறுகையில் உலகம் தமிழ் எழுத்துப் பாதுகாப்புப் பக்கம் இருப்பதைப் புரிந்து கொள்ளும் . அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
+++++++++
(1 days ago) kumaran said:
எழுத்தைச் சிதைப்பது இனத்தைச் சிதைப்பதே , என்பதைச் சான்றுகளுடன் தெளிவாக்கியுள்ளது கட்டுரை.எதிர்வரும் தலைமுறை தடுமாறாமலும் தடம் மாறாமலும் இருக்க எழுத்தைக் காப்பாற்றித்தான் ஆக வேண்டும்.திருவள்ளுவனின் திருப் பணித் தமிழ்ப் பணியே,தொடரட்டும்.
(3 days ago) k.sundaram said:
udhaaranangaludan vilakki inathai kaappadharkaaga ezhuthai kaappaatra vendum ena vilaakiyull vidham arumai.
(Sept 30, 2010) Anonymous said: எல்லாமே மாற்றம் அடையும் பொழுது மாற்றம் வேண்டாம் என்று பழமைவாதிகள் கூறுவது ஏன் எனக் கட்டுரைப் பக்கத்தைப் பார்த்தேன். அட்டவணைகள் படிக்கத் தூண்டின. படித்து முடித்தும்தான் புரிந்தது தமிழ் எழுத்துகளில் ஏன் மாற்றம் கூடாது என்று. எழுத்தை மாற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் கூறுகின்ற பொய்யான காரணங்களுக்கெல்லாம் தவிடு பொடியான ஆதாரங்களை கூறியிருக்கிறார். எழுத்தை அழிப்பது நம் இனத்தை அழிக்கும் முயற்சி என்பதை நன்கு புரிய வைத்துள்ளார் இலக்குவனார் திருவள்ளுவன் இதற்குப் பிறகும் நாம் சும்மா இருக்கக் கூடாது. எழுத்தைக் காக்க நாமும் பாடுபட வேண்டும். நல்ல படைப்பை நட்பு வெளியிட்டுள்ளதற்குப் பாராட்டுகள்.
++++++++++++++++++

(2 days ago) Ilakkuvanar Thiruvalluvan said:
திரு கரிகாலன் அவர்களுக்கு நன்றி. எழுத்தைக் காக்க வேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்துவதற்காக நண்பர்கள் பிறரையும் படிக்கச் சொல்லுங்கள். நட்பூ இதழாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். முந்தைய பதிவுகளையும் நீக்காமல் தொடர்ந்து படிக்கச் செய்யுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
(2 days ago) karikalan said:
ஐயா! தமிழ்மொழியின் எழுத்தைச் சிதைப்பதற்கு முனைகின்ற சிலருக்கும், அவர்களை முட்டுக்கொடுத்துத் தாங்கி நிற்கும் தமிழ்நாட்டு ஆட்சியாளருக்கும் முகத்தில் அடித்தாற்போன்றது தங்களுடைய "எழுத்தைக்காப்போம்! இனத்தைக்காப்போம்!!" என்கிற விளக்கமான கட்டுரை.

தமிழகம் மீள வேண்டும் ஆரிய ஆட்சி ஒழிய வேண்டும்

"எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே
இனத்தைக் கொல்வது எதற்கு எனில்
தமிழன் நிலத்தைச் சுரண்டித் தமது நிலையினை உயர்த்த வடவரின் உள்ளம் இது தான்" என்று 01.02 .1950 அன்று எழுத்துச் சிதைப்பிற்கு எதிரான கருத்தைப் பதிந்துள்ள பாவேந்தர் அவர்களுடைய பாடலின் தலைப்பை மாற்றி "தமிழகம் மீள வேண்டும் திரிவடுகர் ஆட்சி ஒழிய வேண்டும்" எனவும், கடைசி வரிகளை ..."தமது நிலையினை உயர்த்தத் திரிவடுகரின் உள்ளம் இது தான்" என்று மாற்றி எழுதுவது தான் இப்போது பொருத்தமாக இருக்கும் என்பதனையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ௦

இது போன்ற ஆக்கங்களைத் தாங்கள் தொடர்ந்தும் வெளியிட வேண்டுகிறேன்.
வணக்கம்.

Thursday, September 23, 2010

செம்மொழி மாநாடும் எழுத்துப் பாதுகாப்புப் போரும்

>>இலக்கியம்
செம்மொழி மாநாடும் எழுத்துப் பாதுகாப்புப் போரும்

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் முன்பு மாநாடு நடத்தப்பட வேண்டுமா வேண்டாமா எனப் பட்டிமன்றம் நடந்தது போல் மற்றொரு கருத்துப் போரும் நடைபெற்றது. தமிழ் எழுத்தை மாற்றியமைத்தே தீர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிலர் மாநாட்டு முடிவில் எழுத்துச் சீர்திருத்த ஆணை வரும் என்று சொல்லியும் எழுதியும் வந்தனர்.

இது கண்டு பொங்கி எழுந்த தமிழறிஞர்கள் எழுத்துச்சிதைவு முயற்சிகளுக்கு எதிராக ஊடகங்கள் வாயிலாகவும் கருத்தரங்கங்கள் நடத்தியும் இணையம் வாயிலாகவும் தமிழ் நாட்டிலும் புதுச்சேரியிலும் சிங்கப்பூரிலும் பெரும் கருத்துப் போரினை நடத்தினர். உலகெங்கும் உள்ள தமிழறிஞர்கள் இது கண்டு பல்வகையிலும் இதனைத் தடுக்க முறையிட்டனர். இதனால் தமிழக முதல்வர் சார்பாக மாநாட்டுக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரான தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் அவ்வாறு எத்தகைய முயற்சியும் தமிழ் எழுத்துஅமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படவில்லை என அறிவித்தார். அத்துடன் நில்லாது முதல்வர் அவர்கள் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் நடத்துவதாக இருந்த கருத்தரங்கம் குழுவரங்கம் முதலியவற்றை நீக்கச் செய்தார். எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிராகக் கட்டுரைகள் வாசிக்க மொழியியல் பிரிவில்தான் ஆய்வரங்கம் ஒதுக்கினார்.

25.06.10 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணிக்குக் கோவூர் கிழார் அரங்கத்தில் இவ்வாய்வரங்கம் நடைபெற்றது. சிங்கப்பூரில் இருந்து பேராசிரியர் மணியம் (எழுத்துத் திருத்தம் தேவையா ? - இவர் அதே நேரம் வேறு ஆய்வரங்கத்தில் தலைமை தாங்கியமையால் இவர் சார்பில் பிரான்சில் இருந்து வந்த பேராசிரியர் லெ.பொ, பெஞ்சமின் கட்டுரையை வாசித்தார்.), துபாயில் இருந்து பொறியாளர் நாக.இளங்கோவன் (தமிழ் எழுத்துத் திருத்தத்தில் பொதிந்த பெருங்கேடுகள்), பேராசிரியர் செ.இரா.செல்வக்குமார் (தமிழ் எழுத்து முறையின் தனித்தன்மையும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும்) தமிழ்நாட்டில் இருந்து திரு இலக்குவனார் திருவள்ளுவன் (வரிவடிவச் சிதைவு வாழ்விற்கு அழிவு) ஆகியோர் ஆய்வுரை வழங்கினார்கள். (பேராசிரியர் லெ.பொ.பெஞ்சமின் 27.06.10 நண்பகல் 12.30 மணிக்குச் சாத்தனார் அரங்கத்தில் எழுத்துச் சீர்திருத்தமா? தமிழுக்கு அது பொருந்துமா? என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.)
பெரும்பாலான ஆய்வரங்கங்களில் சிலரே பார்வையாளராக இருந்த நிலைக்கு மாறாக இவ்வரங்கம் முழுவதும் பார்வையாளர்கள் நிரம்பி இருந்தனர். பலர் இடமில்லாமல் திரும்பிச் சென்றனர். சிங்கப்பூர், மலேசியா எனக் கடல்கடந்துவந்த பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பின்னர் இரு நாளும் மாநாட்டு அறிஞர்கள் இவ் வாய்வரங்கச் சிறப்பு குறித்தே பேசினர் எனில் இவ்வாய்வரங்கச் சிறப்பு குறித்தும் எழுத்தைச் சிதைக்கக் கூடாது என்பதில் உலகெங்கும் உறுதியான கருத்து இருந்தது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
அத்துடன் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாகத் திரு இலக்குவனார் திருவள்ளுவன் தம் கட்டுரையில் மேலும் சில கருத்துகளைச் சேர்த்து எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! எனச் சிறு கையேட்டையும் வெளியிட்டார். இக் கையேட்டிற்கும் மாநாட்டில் பெரும் வரவேற்பு இருந்தது. மாநாட்டுக் கட்டுரையின் தொடர்ச்சியாக அமைந்த இக்கட்டுரையை நட்பு வெளியிட்டு ஒரு விவாதக் களத்தைத் தொடங்கி வைக்கிறது. எனவே, உங்கள் கருத்துகளைச் சான்றுகளுடன் பதியுங்கள்.


(within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:

எழுத்துச்சிதைவு முயற்சிகள் தோற்கும். தமிழ் வெல்லும்! ஆனால், கட்டுரை எங்கே? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

+++++++++++++
(within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:
திரு கரிகாலன் அவர்களுக்கு நன்றி. எழுத்தைக் காக்க வேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்துவதற்காக நண்பர்கள் பிறரையும் படிக்கச் சொல்லுங்கள். நட்பூ இதழாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். முந்தைய பதிவுகளையும் நீக்காமல் தொடர்ந்து படிக்கச் செய்யுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
(8 hours ago) karikalan said:
ஐயா! தமிழ்மொழியின் எழுத்தைச் சிதைப்பதற்கு முனைகின்ற சிலருக்கும், அவர்களை முட்டுக்கொடுத்துத் தாங்கி நிற்கும் தமிழ்நாட்டு ஆட்சியாளருக்கும் முகத்தில் அடித்தாற்போன்றது தங்களுடைய "எழுத்தைக்காப்போம்! இனத்தைக்காப்போம்!!" என்கிற விளக்கமான கட்டுரை.

தமிழகம் மீள வேண்டும் ஆரிய ஆட்சி ஒழிய வேண்டும்

"எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே
இனத்தைக் கொல்வது எதற்கு எனில்
தமிழன் நிலத்தைச் சுரண்டித் தமது நிலையினை உயர்த்த வடவரின் உள்ளம் இது தான்" என்று 01.02 .1950 அன்று எழுத்துச் சிதைப்பிற்கு எதிரான கருத்தைப் பதிந்துள்ள பாவேந்தர் அவர்களுடைய பாடலின் தலைப்பை மாற்றி "தமிழகம் மீள வேண்டும் திரிவடுகர் ஆட்சி ஒழிய வேண்டும்" எனவும், கடைசி வரிகளை ..."தமது நிலையினை உயர்த்தத் திரிவடுகரின் உள்ளம் இது தான்" என்று மாற்றி எழுதுவது தான் இப்போது பொருத்தமாக இருக்கும் என்பதனையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ௦

இது போன்ற ஆக்கங்களைத் தாங்கள் தொடர்ந்தும் வெளியிட வேண்டுகிறேன்.
வணக்கம்.

Followers

Blog Archive