Monday, January 31, 2011

Road boards: andre sonnaargal 15: அன்றே சொன்னார்கள்15: வழித்துணைப் பெயர்ப்பலகைகள்

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள்
வழித்துணைப் பெயர்ப்பலகைகள்

                                                                                                                

natpu சாலைகளில் பயணம் செய்வோருக்கு உதவுவதற்காக அமைக்கப்படுவனவே சாலைப் பெயர்ப்பலகைகள். 1870களில் இத்தகைய பெயர்ப்பலகைகள் முதலில் அமைக்கப்பட்டன; பின்னர் இவை காலமாற்றத்திற்கேற்ப செல்ல வேண்டிய வேகம், திரும்ப வேண்டிய இடம் முதலானவற்றைக் குறிப்பிடும் வகையில்  வெவ்வேறு வழிகாட்டிக் குறிப்புகளையும் குறிக்கும் வகையில் அமைந்தன.
பண்டைய உரோமன் ஆட்சியில் உரோமிற்கு வரும் வழியைக் குறிக்கும் பெயர்ப்பலகைகள் இருந்திருக்கின்றன; ஆனால், அவை பெரும்பாலும் மன்னராட்சியைக் குறிப்பிடும் கல் தூண்களாக இருந்தன. 
நகர அமைப்பிலும் சாலை அமைப்பிலும் சிறந்திருந்த பழந்தமிழ்நாட்டில் பயணிகளுக்கு உதவுவதற்கென்றே ஊர்ப்பெயர்களையும் தொலைவுகளையும் காட்டும் பெயர்ப்பலகைகள் இருந்தன.
இரணிய முட்டத்துப் பெருங்கன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்னும் புலவர் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன்சேய் நன்னனைப் பாடிய இலக்கியத்தின் பெயர் மலைபடுகடாம். இம்மன்னன் ஆட்சியில் இருந்த நகரத்தின் பெயர் செங்கண்மா. இந்நகரம் பண்டைக்கால முறையில் அகழி, கோட்டை, பெரிய வீதி, கடைத்தெரு, குறுக்குத்தெரு முதலியவை நிறைந்தது. மன்னனைக் காண இந்நகருக்குச் செல்லுமாறு கூத்துக் கலைஞர்களுக்கு அறிவுரை கூறுகிறார் புலவர்.
அவ்வாறு செல்லும் வழியில், சாலை அமையாத பகுதிகளில் முதலில் செல்வோர் பின்வருவோர்க்கு வழிகாட்டுவதற்கு அடையாளமாக ஊகம்புல்லை முடித்து வைத்து வழிகாட்டும் பழக்கம் இருந்துள்ளதை மலைபடுகடாம் கூறுகிறது.
பண்டுநற்கு அறியாப் புலம்பெயர் புதுவிர்
சந்து நீவிப் புல்முடிந்து இடுமின்                                           (மலைபடுகடாம் : 392-393)
(பண்டு)பண்டைக் காலத்தில் (நற்கு)நல்ல பாதையை (அறியா) அறியாமல் (புலம்பெயர் புதுவிர்) இடம் மாறி வரும் புதியவர்கள் தீய பாதையில் சென்று இடர்ப்பட்டுத் திரும்பி வந்தால் பிறர் அவ்வாறு துன்பம் அடையக் கூடாது என்பதற்காகத் (சந்து)தெருக்கள் சந்திக்கும் இடங்களில் போகக்கூடாத பாதையில் (நீவி) கையால் துடைத்து, (புல் முடிந்து) ஊகம்புல்லை முடித்து வைக்கும் பழக்கத்தை உடையவர்களாக இருந்துள்ளனர். தாம் அடைந்த துன்பத்தைப் பிறர் அடையக் கூடாது என்று கருதும் பெரும் பண்பினராக இருந்துள்ளனர் நம் முன்னோர்.
நன்கு அமைந்த சாலைப் பகுதிகளில் பெயர்ப்பலகைகள் இருந்துள்ளமையையும் பின்வருமாறு புலவர் தெரிவிக்கிறார்.
செல்லும் தேஎத்துப்  பெயர்மருங்கு அறிமார்
கல்லெறிந்து எழுதிய நல்வரை மராஅத்த                            (மலைபடுகடாம் 394-395)
என்னும் வரிகளில் கல்லை அகழ்ந்து எழுதிய ஊர்ப் பெயர்ப்பலகைகள் இருந்தமையைக் குறிப்பிடுகிறார்.
தேஎம் என்பது இடத்தையும் குறிக்கும்; திசையையும் குறிக்கும்.  செல்ல வேண்டிய இடத்தையும் திசையையும் குறிக்கும் சாலைப் பெயர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தமையை அறியலாம். இப்பொழுது சில ஊர்ப்பலகைகளில் இன்னார் பிறந்த ஊர் என்ற குறிப்பினை எழுதி வருவதைப் பார்க்கிறோம். அதுபோல் அப்பொழுது ஊர்ப்பலகைகளின் அருகேயே அவ்வூரில் வீரமரணம் உற்றவர்களின் (நடுகல்) குறிப்புகள் இருந்துள்ளன.
மலைபடுகடாம் என்னும் நூல் தொல்காப்பியத்திற்கும் முற்பட்டது என முனைவர் சி.இலக்குவனார் ஆராய்ந்து தெரிவித்துள்ளார். அவ்வாறெனில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பயணிகளுக்கு வழித்துணையாகச் சாலைகளில் பெயர்ப்பலகை வைக்கும் அளவிற்கு முன்னேறிய நிலையில்  தமிழ் மக்கள் இருந்துள்ளனர் என்பதை உணரலாம். இன்றைக்கோ தமிழகச் சாலைப் பெயர்களில் பிற மொழிப் பெயர்கள் திணிக்கப்படுகின்றன. தமிழ் ஈழ நாட்டின் பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழ் அழிக்கப்பட்டுச் சிங்களப் பெயர்கள்  எழுதப்பட்டு வருகின்றன. அறிவும் உணர்வும் வளராமல் மங்குவது ஏனோ?
- இலக்குவனார் திருவள்ளுவன்



Sunday, January 30, 2011

Bonsai in thamizhnaadu: andre' sonnaargal 14: அன்றே சொன்னார்கள் 14 : தாழிமரம் அறிவோமா?

>>அன்றே சொன்னார்கள்

natpu தொட்டிகளில் வளர்க்கும் குறுமர வகைகளை நாம் போன்சாய் என்கிறோம். போன்சாய் என்பது சப்பானியச் சொல். போன் என்பது சிறு பானையைக் குறிக்கும்; சாய் என்பது செடியைக் குறிக்கும். சீன மொழியில் பென்(ஞ்)சாய் எனப்படுகிறது. சிறு தொட்டிகளில் வளர்க்கும் செடி வகைகளைச் சீனர்கள் 6 ஆம் நூற்றாண்டில் வளர்த்து வந்திருக்கலாம் எனப் படங்கள் மூலம் அறிய வருகிறோம். எனினும் சப்பானில் 11 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே போன்சாய் அறிமுகமாகியுள்ளது.  19 ஆம் நூற்றாண்டில் இம்முறை உலகெங்கும் பரவியது. ஆங்கிலத்தில் சிறுவகை மரங்களை (miniature) இவ்வாறு வளர்ப்பதையும் போன்சாய் என்றே குறிப்பிடுகின்றனர். என்ற போதிலும் நாவலந்தீவு என்று அழைக்கப் பெற்ற இன்றைய இந்தியாவில்  இமயமலைப் பகுதியில் மருத்துவர்கள் மருந்துச் செடியைச் சிறு பானைகளில் வளர்த்து வந்த முறையே சீனாவிற்குப் பரவியது என்றும் சொல்லுவர்.
நம் நிலப்பகுதி முழுவதும் தமிழ்நாடாக இருந்த பொழுது இம்முறை தோன்றியிருக்கலாம்.

      தாழிமுதல் கலித்த கோழிலைப் பருத்தி
 
(அகநானூறு 129.7 ) எனத் தாழியில் வளர்ந்துள்ள கொழுவிய இலையையுடைய பருத்தியைப் பற்றிக் குடவாயில் கீரத்தனார் என்னும் புலவர் கூறுகிறார்.
natpu தலைவியைக் காணாமல் தாழியில் வளர்த்த குவளைச் செடியின் மலர் வாடியது குறித்துத்

      தாழிக்குவளை வாடுமலர் 

என அகநானூறு (165.11) கூறுகிறது.

கொடிவகைகளை உயரமான தாழியில் வளர்த்துள்ளனர் என்பது

      ஓங்கும்நிலைத் தாழி மல்கச் சார்த்தி
    குடைஅடை நீரின் மடையினள் எடுத்த
    பந்தர் வயலை பந்துஎறிந்து ஆடி
 
எனப் புலவர் கயமனார் கூறுவதில் இருந்து (அகநானூறு 275:1-3) அறியலாம்.
உயர்ந்த தாழியில் நிறைய வைத்துப் பனங்குடையால் நீரை மொண்டு ஊற்றி வளர்த்த வயலைக்கொடி படர்ந்த பந்தலின் கீழே பந்தை எறிந்து ஆடுவது குறித்து இதில் கூறப்பட்டுள்ளது.
 நீர்வளம் இல்லாத பாலை நிலைத்தில் இவ்வாறு தாழியில் மண் இட்டு நீர் வார்த்துச் செடியை வளர்த்துள்ளனர்.
 தோட்டவியலில் சிறந்திருந்த தமிழர் பானை அல்லது தாழியில் செடி வளர்க்கும் முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தினர் எனலாம்.
- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments

- இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, January 28, 2011

Sky without Air: andre' sonnaargal 13 :அன்றே சொன்னார்கள் 13 : காற்று இல்லா வானப்பகுதி


>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள்
காற்று வழங்காத விண்ணையும் அறிந்திருந்தனர்!

                                                                                                                

natpu புவியைச் சுற்றி வெவ்வேறு நிலைகளில்  காற்றுப் பரப்பு அமைந்துள்ளது. மேலே செல்லச்செல்ல காற்றின் அளவு குறைந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு பரப்பிற்கும் பின்வருமாறு பெயர்கள் இட்டுள்ளனர்.
  1. அடிவளி மண்டிலம் (troposphere)
  2. மீவளி மண்டிலம் (Stratosphere)
  3. இடைவளி மண்டிலம் (mesosphere)
  4. வெப்பவளி மண்டிலம் (thermosphere)
  5. மேல்வளி மண்டிலம் (exosphere)
அனைத்திற்கும் மேற்பட்ட பகுதியில் காற்று இன்மை மண்டிலமாக உள்ளதையும் கடந்த நூற்றாண்டில் அறிவியலாளர்கள் ஆராய்ந்து அறிந்துள்ளனர்.
அண்மைக்கால அறிவியலின் வளர்ச்சியாக இக்கண்டுபிடிப்பு குறித்து உலகம் மகிழ்கிறது. ஆனால், உண்மையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விண்வெளியில் காற்று  இல்லாதபகுதி உள்ளதை நம் தமிழ்முன்னோர் நன்கு அறிந்துள்ளனர்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்னும் வேந்தனிடம் வரி விதிப்பை நீக்குவதற்கு அறிவுரை கூறும் புலவர் வெள்ளைக்குடி நாகனார்

நளிஇரு முந்நீர் ஏணி யாக,
வளியிடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்தைக் தண்தமிழ்க் கிழவர்
எனக் கூறுகிறார். (புறநானூறு : 35: 1-3)
(நளி இரு - நீர் செறிந்த; முந்நீர் - கடல்; ஏணி- எல்லை)
பழந்தமிழ்நாட்டு எல்லையையும் மூவேந்தர் சிறப்பையும் குறிப்பிடும் வகையில், கடல்களால்  சூழப்பெற்று, காற்று வழங்காத வானத்தின் கீழ் உள்ள நிலத்தை ஆளும் மூவேந்தர் என்கிறார்.
 மார்க்கண்டேயனார் என்னும் மற்றொரு புலவர்,
 மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக
இயங்கிய இருசுடர் கண்எனப் பெயரிய
வளியிடைவழங்கா வழக்கரு நீத்தம்
எனக் கூறுகிறார். (புறநானூறு : 365: 1-3)
 விசும்பை முகமாகவும் விசும்பில் இயங்கும் ஞாயிறு, திங்கள் ஆகிய சுடர்கள் இரண்டையும் கண்காளாகக் கொண்ட இடம் விட்டு இடம் பெயரும் காற்று அவ்வாறு இயங்காத இடமாகிய விசும்பைக் கடந்து முன்னோர் சென்றதாகக் குறிப்பிடுகிறார்.
 நில மண்டிலமும் நீர் மண்டிலமும் தீ மண்டிலமும் வளி மண்டிலமும் கடந்து நிற்கும் விசும்பு நீத்தம் எனப்பட்டது. .... இதன்கண் வளி வழங்குதலின்மையின் வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம் எனப்படுவதாயிற்று என உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் விளக்குகிறார்.
 வளிமண்டிலம் சூழ இருப்பது ஞாலம் ஆதலின் அதனைக்கடந்து நிற்கும் விசும்பை நீத்தம் என்றார்   என நீத்தம் என்பதற்கான விளக்கத்தையும் அளிக்கிறார்.  எனவே, காற்று இல்லாத பகுதியை விசும்பு என அழைத்துள்ளனர் என்பதையும் காற்று நீங்கி இருததலால் நீத்தம் எனப் பெயர் பெற்றது என்பதையும் அறியலாம்.
 ஆகவே விண்வெளியை நன்கு அறிந்திருந்த விண்ணறிவியலில் சிறந்திருந்த தமிழ்மக்கள் மேலே செல்லச் செல்ல காற்றின் பயன்பாடு குறைந்து செல்வதை உணர்ந்துள்ளனர்.
எனவே, காற்றின் வகைகளை மட்டுமல்ல, அக்காற்று வழங்கா விண்வெளியையும் தமிழர்கள் அறிந்து காற்றறிவியலில் சிறந்து உள்ளனர் என்பதை உலகிற்கு உரத்துக் கூறுவோம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்


Thursday, January 27, 2011

andre' sonnaargal 12 :அன்றே சொன்னார்கள்! காற்றின் வகைமை தெரியும்!

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள்
காற்றின் வகைமை தெரியும்!

                                                                                                                

natpu


காற்று உலகெங்கும் பரவி இருந்தாலும் ஒரே தன்மையில் இல்லை. சில நேரங்களில் அல்லது சில இடங்களில் வலிமை குறைந்தும் வேறு சில நேரங்களில் அல்லது இடங்களில்  வலிமை மிகுந்தும் காணப்படுகின்றது.
கப்பல் தளபதி பிரான்சிசு பியூஃபோர்ட் (Sir Francis Beaufort : 1774 –1857) என்னும் ஐரீசு நாட்டு நீர்ஆராய்வாளர் 1806ஆம் ஆண்டில் காற்று வீசும் வலிமைக்கேற்ப அதனை வகைப்படுத்தினார். அவ்வாறு காற்று வீசும் விரைவிற்கேறப்ப  வீச்சு எண்களையும் பின்வருமாறு வரையறுத்தார்.


வீச்சு எண்
காற்று வகை
காற்று வீசு விரைவு
(ஒரு மணிக்கு.... புதுக்கல்/ கிலோ மீட்டர்)
0
அலைவற்ற காற்று (calm)               
0 -1
1
மென் காற்று (Light air)                      
1-5
2
மென் இளங்காற்று (Light breeze)
6-11
3
நல் இளங்காற்று (Gentle breeze)
12-19
4
மித இளங்காற்று (Moderate breeze)
20-29
5
கிளர் இளங்காற்று (Fresh breeze)
30-39
6
வல் இளங்காற்று (Strong breeze)
40-50
7
தொடக்கப் பெருங்காற்று (Near Gale)
51-61
8
பெருங்காற்று (Gale)
62-74
9
வன் பெருங்காற்று (Strong Gale)
75-87
10
புயல் (Storm)  
88-101
11
வன் புயல் (Violent storm)
102-117
12
சூறைப் புயல் (Hurricane)
118 +
ஆனால், இவ்வாறு காற்று வெவ்வேறு நிலைகளில் உலவுவதைப் பழந்தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர். காற்று வீசக்கூடிய விரைவின் (வேகத்தின்) அளவைப் பற்றிய கணக்கு நமக்குத் தெரியாவிட்டாலும் அதன் தன்மைகளைப் புரிந்து தெளிவாக வரையறை செய்துள்ளனர் என்பது இலக்கியங்கள் மூலம் நன்கு தெரிய வருகின்றது.
காற்றின் வகைகளாகப் பிங்கல நிகண்டு (23 & 24) , வங்கூழ், மருத்து, சலனன், வாடை, வளி, கோதை, வாதம், கூதை, வேற்றலம், கால், ஒலி, உயிர், காலிலி, விண்டு, நீளை, உலவை, கொண்டல், கோடை, நிழலி, உயிர்ப்பு எனப் பலச் சொற்களைக் குறிப்பிடுகின்றது.
உயிரினங்களுக்கு உயிர்ப்பு அளிப்பதால் உயிர் அல்லது உயிர்ப்பு என்றும் ஓரிடத்தில் நிற்காமல் உலவிக் கொண்டு இருப்பதால் உலவி என்றும் கால் இல்லாமல் அலைவதால் காலிலி என்றும்  பொருத்தமாகக் கூறியுள்ளனர். தமிழ் விண்டு என்பதுதான் ஆங்கிலத்தில் wind என மாறியதோ? மேலும், தெற்கில் இருந்து வீசுவதைத் தென்றல் வடக்கில் இருந்து வீசும் வாடைக்காற்றை வாடை,  மேற்கில் இருந்து வீசும் வெப்பக் காற்றைக்  கோடை, கிழக்கில் இருந்து வீசுவதைக் கொண்டல் என்றும் வரையறுத்துள்ளனர்.
குடக்காற்று என்பதும் மேற்கில் இருந்து வீசும் காற்றாகும். பனிக்காற்றானது கூதிர், ஊதை, குளிர் என மூவகைப்படும்.
குளிர்ந்த காற்றானது சாளரங்கள் வாயிலாக வீட்டிற்குள் நுழைவதைச்
சில்காற்று இசைக்கும் பல்புழை நல்லில் என மதுரைக் காஞ்சி (358) குறிப்பிடுகிறது.
கடுங்காற்றால் கப்பல் சிதைந்ததைக்
கடுங்காற்று எடுப்பக் கல்பொருது உரைஇ, என மதுரைக் காஞ்சி (378) கூறுகிறது.
பெருமலையைப் புரட்டுவது போன்ற பெருங்காற்று வீசியதைப்
பெருமலை மிளிர்ப்பன்ன காற்று எனக்  கலித்தொகை: (45: 4) கூறுகிறது.
கப்பலைக் கவிழ்க்கும் சுழல் காற்றினைக்

கால்ஏ முற்ற பைதரு காலை,
கடல்மரம் கவிழ்ந்தென

என்று நற்றிணை (30: 7-8) கூறுகிறது.
அகன்ற கடற் பரப்பைக் கலங்கடிக்கும் காற்று குறித்துத் 
துளங்குநீர் வியலகம் கலங்கக் கால்பொர என்று பதிற்றுப்பத்து (51) கூறுகிறது.
பெருமலையில் கடுங்காற்றுச் சுழன்றடிப்பதைக்
கடுங்காற்று எடுக்கும் நெடும்பெருங் குன்றத்து என  அகநானூறு (258 : 6) கூறுகிறது.
நிலப்பரப்பில் சுழன்றடிக்கும் கடுங்காற்று குறித்துக்
கடுங்கால் கொட்கும் நன்பெரும் பரப்பின் எனப் பதிற்றுப்பத்து ( 17 : 12) கூறுகிறது.
கடற்கரை மணலை அள்ளித் தூவும் குளிர்ந்த காற்றை
நெடுநீர் கூஉம் மணல்தண்கான் எனப்  புறநானூறு (396 : 5) கூறுகிறது.
மேலும் பலவகைக் காற்று குறித்து நாம் சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்.
19 ஆம் நூற்றாண்டில் கண்டறிந்த காற்றின் வகைகளை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழந்தமிழர்கள் உணர்ந்து வகைப்படுத்தியுள்ளனர் என்பது காற்றறிவியலில் சிறந்திருந்தனர் என்பதை உணர்த்துகின்றது அன்றோ?
-- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments


Sunday, January 23, 2011

andre' sonnaargal 11: அன்றே சொன்னார்கள் 11: முகிலறிவியலின் முன்னோடி நாமே

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள்
முகிலறிவியலின் முன்னோடி நாமே

                                                                                                                

natpu
 வான் மழை பெய்யும் முகில் கூட்டம் பல வகையாய் உள்ளது என 19 ஆம்  நூற்றாண்டில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். ஆவர்டு (Luke Howard: 1772-1864) என்னும் பிரித்தானிய அறிஞர் வெவ்வேறு வகை முகில் கூட்டம் உள்ளன என உணர்ந்து அவற்றிற்குப் பெயர்கள் இட்டார். என்ற போதிலும் முதல் முறையாக முகில்களின் வேறுபாடுகளை உணர்ந்து வகைப்பாடுகளை விளக்கியவர்  இலமார்க்கு (Jean-Baptiste Lamarck:1744-1829) என்னும் அறிவியலாளரே. ஆனாலும் இவ்வேறுபாடுகள் தோற்றத்தின் தன்மையில் கூறப்பட்டனவே தவிர தன்மையின் அடிப்படையில் விளக்கப்படவில்லை.
 யோவான் மேசன்  (Sir (Basil) John Mason), என்னும் அறிஞர்தான் முகில்களின் இயற்பியல்  (The Physics of Clouds)  என 1957 இல் நூலை வெளியிட்டு முகில்களின் வகைகளைச் சரியாக விளக்கினார்.  (1994 இல்தான் இதனை அட்டவணைப்படுத்தி விளக்கியுள்ளனர்.)
 மழையியல் பற்றி நன்கு அறிந்திருந்த பழந்தமிழர்கள் முகில் அறிவியல் குறித்தும் சிறப்பான அறிவுடையவராக விளங்கியுள்ளனர். முகில்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப அவர்கள் சூட்டிய பெயர்களை எல்லாம் அவற்றின் அறிவியல் சிறப்பை உணராமல் முகிலைக் குறிக்கும்  வெவ்வேறு பெயர்கள் என நாம் எண்ணி விட்டோம். எனினும் அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.

                                                                                      கடல்மட்டத்தில் இருந்து
   இன்றைய பெயர்கள்

உயரம் பேரடி (மீட்டர்)
1.
உயர்முகில் Cirrus
9000
2.
குவியடுக்கு Cirrostratus
8000
3.
சுருள் குவிவு Cirrocumulus
7000
4.
இடை அடுக்கு Altostratus
6000
5.
இடைக் குவிப்பு Altrocumulus
5000
6.
அடுக்குக் குவிப்பு Stratocumulus
4000
7.
குவி முகில் Cumulonimbus
3000
8.
திரள் முகில் Cumulus
2000
9.
பாவடி முகில் Stratus
1000
10.
தாழ் முகில் Nimbostratus
0
 என இன்றைய அறிவியல் அறிஞர்கள் வகைப்படுத்தி உள்ளனர். ஆனால், உயர அளவீடுகள் தெரியாவிடிலும் உயரத்திற்கும் முகிலின் தன்மைக்கும் ஏற்ப நம் முன்னோர் வகைப்படுத்தி உள்ளமை வியப்பாக உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து எழும் நிலையில் உள்ள முகிலை எழிலி என்றனர். ஐங்குறுநூறு, குறுந்தொகை முதலான பல சங்க இலக்கியங்களில் இச்சொல்லைக் காணலாம். தெய்வப்புலவர் திருவள்ளுவர்

     நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
     தான்நல்காது ஆகி விடின்  (குறள் 17)
 
என்கிறார்.கடலில் இருந்து எழும் நிலையில் உருவாகும் முகிலை எழிலி எனச் சுருக்கமாகவும் அறிவியல் தன்மைக்கேற்பவும் அன்றே கூறியுள்ள சிறப்பு வேறு எங்கும் இல்லையே!
அறிவியல் தன்மைக்கேற்ப முகில் வகைகளுக்குப் பழந்தமிழர்கள் சூட்டியுள்ள பெயர்களை மேலே உள்ள வரிசைக்கேற்பப் பொருத்திக் காண்க:  

கொண்மூ, கணம், செல், மை, கார், விண்டு, முதிரம், மஞ்சு, விசும்பு, எழிலி.

      அறிவியல் மழையில் நனைந்தனர் நம் முன்னோர்!
      அறியாமை இருளில் மூழ்கியுள்ளோம் நாம்!
 
- இலக்குவனார் திருவள்ளுவன்



Friday, January 21, 2011

andre' sonnaargal 10: அன்றே சொன்னார்கள் 10 :மழையியல் அறிந்த மாண்பமை தமிழர்கள்

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள் 10
மழையியல் அறிந்த மாண்பமை தமிழர்கள்

                                                                                                                

இன்றைய அறிவியல் அறிஞர்கள் செயற்கையாக மழை பொழியச் செய்கிறார்கள். மழை வேண்டாத பொழுது இயற்கையாகப் பெய்வதற்குரிய முகில் கூட்டத்தை - மேகக் கூட்டத்தை - இடம் பெயரச் செய்து அந்தப் பகுதியில் மழை பெய்ய விடாமல் செய்கிறார்கள்.  என்ற பொழுதும் பழங்காலத்தில் மழைபற்றிய  அறிவியல் உணர்வு பிற நாட்டாரிடம் இல்லை.
natpu உரோம் மக்களின் மழைக்கடவுள் பெயர்  பொசெய்டன் (Poseidon) இம் மழைக்கடவுள் மக்களைப் பழி வாங்கித் தண்டிப்பதற்காக மழையைப் பெய்விக்கிறது என நம்பினர். கிரேக்கர்கள் மழைக் கடவுளை நெப்டியூன் (Neptune)என்று அழைத்தனர். இம் மழைத் தெய்வம்தான் மக்களை அச்சுறுத்துவதற்காக மழையைப் பெய்யச் செய்வதாக நம்பினர். பிற நாட்டினர், மழை பெய்வதற்கான அறிவியல் காரணம் அறியாதவர்களாய் அதன் பயனையும் உணராதவர்களாய் அதனைக் கடவுள் வழங்கிய தண்டனையாகக் கருதிய காலக்கட்டத்திற்கு முன்னரே பழந்தமிழ் நாட்டினர் மழை எவ்வாறு பெய்கிறது என்பது பற்றிய அறிவியல் உண்மையை நன்கு உணர்ந்திருந்தனர்.
கடல் நீர் முகிலாக மாறி மழையாகப் பெய்யும் அறிவியல் உண்மையைச் சங்க  இலக்கியப் பாடல்கள் எடுத்து உரைக்கின்றன.
வானம்
நளிகடல் முகந்து செறிதக இருளிக்
கனைபெயல் பொழிந்து
என்னும் பாடல் வரிகள் (நற்றிணை 289: 3-6; மருங்கூர்ப்பட்டினத்துச் சேந்தன் குமரனார்) வானம் நெருக்கமான கடல்நீரை முகந்து செறிவு அடைந்து இருண்டு மிக்க மழையைப் பொழிகிறது என்று  மழை பற்றிய அறிவியல் உண்மையை வெளிப்படுத்துகின்றன.
கருவூர்க் கலிங்கத்தார் என்னும் புலவர் (அகநானூறு 183: 6-9) பெரிய கடலிலே இறங்கி நீரைப் பருகும் முகில் பற்றி
.....  பெருங்கடல் இறந்துநீர் பருகிக்
. . . . . .  . . . ..    . . . . . .
.. . . .  கொண்மூ
எனக் கூறுகிறார். (கொண்மூ - முகில் / மேகம்)
இடைக்காடனார் என்னும் மற்றொரு புலவர் (அகநானூறு 374: 1-6;)  மாக் கடல் முகந்து,  எனத் தொடங்கும் பாடலில் கடலில் இருந்து நீரை முகந்து இடி இடித்து மின்னி மழை பெய்வது குறித்து விரிவாகக் கூறுகிறார்.
natpu இவ்வாறு சான்றுகள் பல கூறலாம். மக்களுக்கு எடுத்துக் காட்டுகளாகக் கூறும் அளவிற்கு மழைஅறிவியல் மக்களிடையே சிறந்திருந்தது எனில், அதற்குரிய நூல்களில் மேலும் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டிருக்கும் அல்லவா?

- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments

Thank you for commenting!
(within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:
அன்புடையீர்
வணக்கம்.
உடனே படங்களை மாற்றியமைக்குப் பாராட்டுகள். நன்றியுடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
(within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:
அன்புடையீர்
வணக்கம். மழை தொடர்பான பொருத்தமான படங்களைப் போட வேண்டுகின்றேன்.நன்றி. அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்
rss



Thursday, January 20, 2011

andre' sonnaargal 9: earth araised from sun: சூரியனில் இருந்து பிரிந்தது புவி

அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள் 9
சூரியனில் இருந்து பிரிந்தது புவி

                                                                                                                

நாம் வாழும் உலகம் எவ்வாறு தோன்றியது என்பது குறித்த ஆராய்ச்சி நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது. எனினும், பந்துபோல் திரண்டிருந்த அணுக்கள் வெடித்ததால் அண்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிப்பிடும் பெருவெடிப்புக் கோட்பாடு (Big-Bang Theory) அல்லது அண்டவியல் கொள்கை 20ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது. சூரியன் என்னும் பெரிய தீப்பிழம்பில் இருந்து சிதறிய சிறிய தீப்பிழம்பே பூமி என்றும் இது படிப்படியாகக் குளிர்ந்து பல்வேறு அறிவியல் தாக்கங்களுக்கு உள்ளாகி உயிரினங்கள் தோன்றவும் வாழவும் கூடிய பகுதியாக மாறியது என்பதும் அறிவியல் அறிஞர்கள் அனைவர்க்கும் உரைத்தவை. ஆனால் இந்த அறிவியல் உண்மையை நன்கறிந்தவர்களாக நம் தமிழ் முன்னோர்கள் இருந்துள்ளனர்.
உலகிற்கே பொதுவான திருக்குறள் நூலை நமக்குத் தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர், உலகிற்கே பொதுவாக விளங்கும் கதிரவனைக் குறிப்பிட்டே தம் நூலைத் தொடங்குகிறார். அப்பொழுது தம் காலத்தில் மக்கள் நன்கறிந்த ஓர் அறிவியல் உண்மையையும் வெளிப்படுத்துகிறார்.

       அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
      பகவன் முதற்றே உலகு


என்னும் பொழுது எழுத்துகள் அகரத்தை முதலாகக் கொண்டு உருவானதுபோல் சூரியனை முதலாகக் கொண்டு அதிலிருந்து உலகம் உருவாகியுள்ளது என வெளிப்படுத்துகிறார்.
ஆதிபகவன் என்பது கடவுளைக் குறிப்பதாகக் கருதினால் அது பொருந்தாது. சங்கக்காலத்திலும் அதன் தொடர்ச்சியிலும் கடவுள் வாழ்த்தில் தொடங்கும் மரபு இல்லை. (திருக்குறள் அதிகாரங்களுக்குப் பெயரிட்டவர்தான் முதல் அதிகாரத்தைக் கடவுள் வாழ்த்து எனக் குறிப்பிட்டுள்ளார்.) தெய்வப்புலவருக்குப் பின் தோன்றிய இனமானப் புலவர் இளங்கோ அடிகள் ‘ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்’ எனக் கதிரவனைத் தொடக்கத்தில் போற்றியுள்ளதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆதி, பகவன் எனப் பிரித்து இவர்களைச் சாதி அடிப்படையில் குறிப்பிட்டுத் திருவள்ளுவரின் பெற்றோராகக் குறிப்பிடும் ஆரிய இழிகதையும் பொருந்தாது. உலகிற்கே பொதுவான நூலைத் தரும் தெய்வப்புலவர் தம் பெற்றோரைப் பற்றி ஏன் குறிப்பிட வேண்டும்.
காலத்தைப் பகுப்பதால் சூரியனுக்குப் பகவன் என்றும் பெயர் உண்டு. (பிங்கல நிகண்டு நூற்பா 210) இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள், பகலவன் என்னும் பெயரில் உள்ள ‘ல’ என்னும் எழுத்து குறைந்து பகவன் என்றானது என விளக்குவார். பகவன் என்றாலே சூரியன் என்னும் நேர்ப் பொருள் இருப்பதால் அவ்வாறு பொருள் கொள்ளத் தேவையில்லை.
ஆதியில் தோன்றிய பகவனாகிய சூரியனில் இருந்து உலகம் தோன்றியது என்று மக்கள் நன்கறிந்திருந்த அறிவியல் உண்மையை உரைத்து இயற்கை வழிபாட்டு முறையில் தம் நூலைப் படைத்துள்ளார் தெய்வப்புலவர்.
புவி பிறந்த அறிவியல் வரலாற்று உண்மையை முதலில் அறிந்த நாம், இன்றைக்கு நாம் பிறந்த வரலாற்றுச் சிறப்பை உணராமல் தாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

- இலக்குவனார் திருவள்ளுவன்


Wednesday, January 19, 2011

andre' sonnaargal 8:அன்றே சொன்னார்கள் 8

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள் கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன   (புறநானூறு 102)

                                                                                                                

natpu அன்றே சொன்னார்கள்
மாற்றுச் சக்கரம்
ஆங்கிலத்தில் இஃச்டெப்னி (stepney) என்றால் வழக்கத்தில் கூடுதலாகச் சேர்த்துக் கொண்ட துணையைக் குறிப்பதாக மாறிவிட்டது. என்றாலும் ஊர்திகளில் மாற்றுச் சக்கரத்தைக் குறிப்பதே உண்மை.
வால்டர் தேவீசு (Walter Davies) என்பவர் தாம் (Tom) என்பவருடன் சேர்ந்து இங்கிலாந்திலுள்ள வேல்சு நகரின்  இலாநெல்லி (Llanelli) பகுதியில் இஃச்டெப்னி (stepney) தெருவில் 1895இல் இரும்புப் பொருள்கள்  கடை தொடங்கி 1902இல் வாடகை ஊர்திப் பிரிவையும் தொடங்கினர். 1904இல் நீதிபதி ஒருவர் வாடகைக்கு எடுத்த ஊர்தியின் (சக்கரத்தின்) புறவட்டில் (tyre) துளை ஏற்பட்டுக் காற்றுப் போனதால் மாற்றுச் சக்கரம்  பொருத்த அல்லல்பட்டார். அப்பொழுது அவர்களுக்கு நாம் ஏன் உதிரியாக ஒரு மாற்றுச் சக்கரத்தை முன்னரே ஊர்தியில் இணைத்து வைக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவே மாற்றுச்சக்கர முறை கண்டுபிடிப்பு. என்றாலும் மாற்றுச் சக்கரத்தின் பெயராக இந்நிறுவனம் இருந்த தெருவின் பெயர் நிலைத்து விட்டது. எனவே, இஃச்டெப்னி (stepney) என்பது தெருவின் பெயராக இருந்தாலும் மாற்றுச் சக்கரத்தைக் குறிப்பதாக அமைந்தது.
ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மக்கள் மாற்றுச் சக்கரத்தின் தேவையை உணர்ந்து கண்டுபிடித்துப் பயன்படுத்தி உள்ளனர். அதன் பெயர் சேம அச்சு அல்லது சேமச் சக்கரம் என்பதாகும்.
கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன   (புறநானூறு 102)
                                      
என்கிறார் ஔவைப் பிராட்டியார்
வணிகர்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு வண்டியை ஓட்டிச் செல்லும்பொழுது மேட்டிலும் பள்ளத்திலும் ஏறி இறங்கி வண்டிச் சக்கரம் உடைந்து விட்டால் மாற்றுப் பயன்பாட்டிற்காகப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படும் சேம அச்சு போன்றவரே என மன்னரைப் புகழும்பொழுது நமக்கு இந்த அறிவியல் சொல் கிடைத்து விட்டது.
இடர்ப்பாடு இல்லாத பயணத்தைப் பற்றிய சிந்தனை ஏற்பட்டு அவசரத் தேவையின் பாதுகாப்பை முன்னிட்டு மாற்றுச் சக்கரம் கண்டறிந்த தமிழர்கள்தாம் இன்றைக்கு வாழ்க்கைப் பயணத்தைத் தொலைத்து இனத்தைப் பாதுகாக்க வழியின்றி இருக்கின்றார்கள்!

- இலக்குவனார் திருவள்ளுவன்

Thursday, January 13, 2011

andre' sonnaargal: அன்றே சொன்னார்கள்7 : புவியின் சுழற்சியை முதலில் உணர்ந்த தமிழர்கள்

அன்றே சொன்னார்கள்7


புவியின் சுழற்சியை முதலில் உணர்ந்த தமிழர்கள்

                                                                                                                

natpu பழந்தமிழ் மக்கள் அறிவியல் நோக்கிலேயே எதனையும் சிந்தித்தனர். ஆனால், பிற நாடுகளில் அறிவியல் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டபொழுது    அறிவியலாளர்கள்  சமயவாதிகளால் தண்டிக்கப்பட்டனர்; உயிர்பறிக்கப்பட்டனர்.
1548 இல் பிறந்த இத்தாலிய அறிவியலாளர் கியார்டனோ புருனோ (Giordano Bruno) எனப்பெறும் பிலிப்போ புருனோ (Filippo Bruno) அண்டங்களைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தியவர். 1584இல், முடிவற்ற அண்டமும் உலகங்களும் (Infinite Universe and Worlds) முதலான இரு நூல்களை வெளியிட்டார். சமய நம்பிக்கைக்கு எதிரான செய்திகள் என 1592இல் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டு 17.2.1600இல் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
போலந்து அறிவியலாளர் நிக்கோலசு கோபர்னிகசு (Copernicus, Nicolaus;1473-1543)  செருமானிய அறிவியலாளர் யோன்னசு கெப்ளர் (Kepler,   Johannes; 1571-1630) உடன் இணைந்து பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். எனினும், சமயவாதிகளின் தொல்லைகளால் உண்மைகளை வெளியிட முடியாமல் நண்பர்களின் துணையால் அவர் மறைவிற்குப் பின்பே 6 நூல்கள் வந்தன. இவர்களின் வழியில் இத்தாலிய அறிவியலாளர் கலிலியோ (1564-1642),  கோபர்னிகசு கருத்தான பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்பதை மேலும் ஆராய்ச்சி செய்து  நிலைநாட்டிப் பரப்பி வந்தார். 1632இல் இவற்றை விளக்கி இருபெரும் உலக அமைப்புகள் பற்றிய சொற்போர் (Dialogue of The Two Chief World Systems) என்னும் நூலை வெளியிட்டார். இதனால் வீட்டுச் சிறை வைக்கப்பெற்றார்; 1637இல் கண்பார்வையை இழந்தார்; 1642இல் வீட்டுச்  சிறையிலேயே உயிரிழந்தார்.
ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமி சுற்றுவதை அறிந்து அதன் கால அளவை நாள் என்றும் பூமியைத் திங்கள் (நிலா) சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவைத் திங்கள் (மாதம்) என்றும் பூமி சூரியனைச் சுற்ற ஆகும் கால அளவை ஆண்டு என்றும் குறிப்பிட்டுப் பயன்படுத்தினர் நம் முன்னோர்.
சுற்றிக் கொண்டிருக்கும் உலகத்தில் உள்ள மக்கள் வாழ்வு, உழவர்களைச் சுற்றி உள்ளதாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர்,
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை                               (திருக்குறள் 1031)
என்கிறார். உலவும் பூமியை உலகம் என்று எவ்வளவு பொருத்தமாக அறிவியல் நோக்கில் பெயரிடுள்ளனர்!
அறிவியல் வளத்தில் சிறந்திருந்த முன்னோர் வழியில்  (தாய் மொழியாம் தமிழில் கற்று) அறிவியல் வளங்களைக் கண்டறிய இப் பொங்கல் நாளில் உறுதி கொள்வோம்! பொங்கல் சிறக்கட்டும்! அறிவியல் பெருகட்டும்!

andre' sonnaargal:அன்றே சொன்னார்கள் 6: சுற்றுப்புற அறிவியலின் முன்னோடி

சுற்றுப்புற அறிவியலின் முன்னோடி
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரிதும் வளர்ந்த துறை சுற்றுப்புற அறிவியல் அல்லது சூழமைவியல் எனலாம். இதன் அடிப்படையே மாசுக்கட்டுப்பாட்டினை ஏற்படுத்திச் சுற்றுப்புறத் தூய்மையை மேம்படுத்துவதுதான்.
பழந்தமிழர்கள் சுற்றுப்புறத் தூய்மையில் கருத்து செலுத்தி வந்துள்ளமைக்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். புறந்தூய்மை நீரான்அமையும் எனத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறுவதில் இருந்தே புறந்தூய்மை பற்றிய விழிப்புணர்வு அன்றே இருந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
சுற்றுப்புறத் தூய்மையில் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்படுவதற்கு விழாவே எடுத்துள்ளார்கள் என்பது வியப்பிற்குரிய செய்தியன்றோ? ஆம்! போகித் திருநாளைத்தான் கூறுகிறேன். போகி என்பது போக்கியில் இருந்து வந்தது என்பர். பழைய ஆண்டைப் போக்கிப் புது ஆண்டை வரவேற்க ஆயத்தம் ஆவதாகச சிலர் கூறுவர். பயனற்றவற்றைக் கழித்துப் போக்கிப் புதுப்பூச்சு வீட்டிற்கு ஏற்றி மிகுதியான பயன்பாடில்லாமல் இருந்தவற்றைத் தூய்மையாக்கி,  வீட்டை மெழுகிப் புதிய நலமான சூழலை உருவாக்குவதற்கென்றே விழா எடுத்துக் குடும்பம் குடும்பமாகக் கூட்டம் கூட்டமாக அனைவரும் கொண்டாடியுள்ளனர் என்னும்பொழுது சுற்றுப்புறத் தூய்மையை மரபு வழியில் வழியாக வழியாகப் போற்றியுள்ளனர் என்பதுதானே உண்மை.
அறுவடைத் திருநாளைப் பல நாடுகள் கொண்டாடுகின்றன. ஆனால், அவை யாவும் முந்தைய நாளை அல்லது ஆண்டின் இறுதியை முதன்மையாகக் கருதி போகி அல்லது போக்கி போல் விழாவாகக் கொண்டாடவில்லை என்னும் பொழுதே நம் திருநாள் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
சுற்றுப்புறத் தூய்மையைக் கடைப்பிடிக்க ஏற்பட்ட, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும், போகித் திருநாளில் இன்று அதன் அடிப்படை நோக்கத்திற்கு மாறாகத் தூய்மைக் கேட்டை ஏற்படுத்தும் பொருள்களை எரித்து வருவது முறையற்ற செயலன்றோ?
நம்மில் சிலரோ மாசுக் கட்டுப்பாட்டை மீறும் வகையில்தான் நச்சுப்புகை ஏற்படும் பொருள்களை எரியூட்டுகின்றனர். தண்டித்தேனும் இவர்களைத் திருத்த வேண்டும். ஆனால் ஈழத்திலோ நச்சுக்குண்டுகளால் நம் அருமைத் தமிழ் மக்களையல்லவா எரியூட்டிய கொடுமை நடந்துள்ளது. இவர்களுக்கு யார், எப்பொழுது  தண்டனை தரப்போகிறார்கள்? பழையன போக்கித் திருநாள் கொண்டாடும் பழைய இனத்தைப் போக்கியவர்கள் ஆட்சி உரிமையில் இருந்து போகப்போவது எந்நாளோ?
  • இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, January 12, 2011

andre' sonnaargal 5: thermos flask: அன்றே சொன்னார்கள் 5 சேமக்குடுவையின் முன்னோடி

அன்றே சொன்னார்கள் 5 சேமக்குடுவையின் முன்னோடி

                                                                                                                

சேமக்குடுவையின் முன்னோடி  
அறிவியல் ஆய்வகங்களில் ஒரு பொருளை அதன் வெப்பம் அல்லது குளிர்ச்சி மாறாமல் காப்பது என்பது பெரும்பாடாக இருந்தது. இதற்கு 1892இல் ஒரு தீர்வு கண்டார் அறிவியல் அறிஞர்  சேம்சு திவியார் (Sir James Dewar). அவர் கண்டுபிடித்த வெப்பக்குடுவை (Thermos Flask) வெப்பத்தைப் பாதுகாக்கவும் குளிர்ச்சியைப் பாதுகாக்கவும் உதவியது. அறிவியல் உலகில் இப்படி ஒரு தேவை உள்ளதை அக்கால நம் நாட்டவர் உணர்ந்திருந்தார்கள் எனில் நம் முன்னோரைப் பின்பற்றி எளிதில் சேமக்கலனை மீள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கலாம்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குளிர்ச்சியை அல்லது வெப்பத்தை உள்ளவாறே சேமிப்பதற்குச் சேமச்செப்பு என்னும் ஒன்றைப் பயன்படுத்தி உள்ளனர் பழந்தமிழர்கள்.

      அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்                             
      சேமச் செப்பல் பெறீஇயரோ                       (குறுந்தொகை 277).

என்கிறார் ஓரில் பிச்சையார் என்னும் புலவர் பெருந்தகை.
அற்சிரம்-பனிக்காலம்; வெய்ய-விரும்பத்தக்க; பெறீஇயரோ-பெறுவாயாக; பனிக் காலத்தில் விரும்பிக் குடிக்கும் வகையில் வெப்ப நீரைச் சேமித்து வைக்கும் சேமச்செப்பினைப் பெறுவாயாக எனக் குறிப்பிடுகிறார். புலவரின் பெயர் தெரியாததால் இப்பாடலில் இடம் பெறும் ஓரில் பிச்சை என்னும் தொடரின் பெயரால் ஓரில் பிச்சையார் என அழைக்கப்படுகிறார். எனவே குறுந்தொகை தொகுக்கப்பட்ட காலத்திற்கு முன்பே புலவரும் சேமச் செப்பும் இருந்திருக்க வேண்டும் எனலாம்.
சேமக்குடுவையின் அமைப்பு முறை வெவ்வேறாக இருந்தாலும் அதன் நோக்கமும் பயனும் ஒன்றுதானே! அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்களான நாமே அதை அறிந்து உணராதபொழுது அயலவர் எவ்வாறு உணர்வார்கள் என எதிர்பார்க்க முடியும்?
  • இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, January 11, 2011

andre' sonnaargal 4:அன்றே சொன்னார்கள் 4

அன்றே சொன்னார்கள் 4

உயிரறிவியலின் முன்னோடி

                                                                                                           

1902ஆம் ஆண்டு உலக மக்களை வியப்பில் ஆழ்த்தினார் அறிஞர் சகதீசு சந்திரபோசு. அவர் வெளியிட்ட உயிரினங்கள்-உயிற்றவற்றின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) என்னும் நூலில் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்றதால் குழப்பமும்  வியப்பும் ஏற்பட்டு இறுதியில் உலகம் அவரைப் போற்றியது. நம்மிடம் உள்ள அறிவியல் புதையலை அறியாத நாமும் அறியாமையால் இன்று வரையும் அவ்வாறுதான் படித்து வருகிறோம். பாடல் வடிவில் உள்ள தமிழ் இலக்கிய உண்மைகள் யாவும் கற்பனையே என்னும் மாயையில் உள்ளதால் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிஞர் தொல்காப்பியர் தமக்கும் முன்னரே தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை வெளிப்படுத்தியதை உரியவாறு உலக அறிவியல் அறிஞர்களின் பார்வைக்குக் கொண்டு செல்லத் தவறியுள்ளோம்.

தொல்காப்பியர்,
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.
(தொல்காப்பியம்: மரபியல் 27)

ஓரறிறவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்களை வகைப்படுத்தி நெறிப்படுத்தியுள்ளனர் அவருக்கும் முன்னோர். அத்துடன் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை.

புல்லும் மரமும் ஓரறிவினவே
பிறவும் உளவே அக்கிளை பிறப்பே
(தொல்காப்பியம்: மரபியல் 28)

என வரிசையாக ஓரறிவு- ஆறறிவு உயிர்களை விளக்குகிறார்.
தமிழ்வழிக் கல்வியை நாம் இழந்ததால் நம் அறிவியல் வளத்தையும் இழந்தோம்! உலகினர்க்குத் தமிழ் அறிவியல் சிறப்பை எடுத்துரைக்கவும் தவறி விட்டோம்! அறிவியல் மேதைகளாகும் வாய்ப்புகளையும் தவற விட்டோம்! அறிவியலில் இப்பொழுதும் சிறந்திருந்தால் உலக நாடுகள் நம்மை மதித்து நம் குரல்களுக்குச் செவிமடுத்து நம் இனமக்களைக் காப்பாற்ற முன் வந்திருப்பார்கள் அல்லவா?
  • இலக்குவனார் திருவள்ளுவன்


Monday, January 10, 2011

Andre' sonnaargal 3: அன்றே சொன்னார்கள் 3 ஒருவனுக்கு ஒருத்தி

 அன்றே சொன்னார்கள் 3 

ஒருவனுக்கு ஒருத்தி

                                                                                                                

கற்பு என்பது ஆண்களுக்கும் உண்டு என்று பாரதி வந்துதான்  கற்புநிலையை இருவருக்கும் பொதுவாக வைத்தார் என்று தவறாகக் கூறுபவர்கள் பலர் உள்ளனர். பிறன்மனை விழையாமையை நம் தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்தியுள்ளன என்றால் ஆடவர் தன் வாழ்க்கைத் துணையன்றி வேறு பெண்ணை விரும்பக் கூடாது என்று ஆடவர் கற்பை வலியுறுத்தியுள்ளார்கள் என்றுதானே பொருள். போர் இறப்புகளால் ஆண்கள் எண்ணிக்கை குறைந்தபொழுது சில வீரர்கள் இருமணம் புரிந்திருக்கலாம். ஆட்சிப் பரப்பைப் பெருக்குவதற்காகச் சில மன்னர்கள் அயல்நாட்டு அரசன் மகளை மணம் புரிந்திருக்கலாம். இலக்கிய மரபிலே பாடல் சுவை கருதி அவ்வாறு குறிக்கப்பட்டிருக்கலாம். எனினும் இவையெல்லாம் பொதுமக்கள் வழக்கமல்ல. ஆண்கள் கற்பை உணர்த்தும் பல பாடல்கள் நமக்கு இதைத்தான் உணர்த்துகின்றன. உலக மொழியியல் அறிஞர் தொல்காப்பியர்,

மறையின் வந்த மனையோள் செய்வினை
பெறையின்று பெருகிய பருவரல் கண்ணும்
மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர்
மிகைஎனக் குறித்த கொள்கைக் கண்ணும்                 (கற்பியல் 10)

எனச் சொல்லுமிடத்தில் இரு மனைவியர் மிகை எனத் தொல்காப்பியம் வழி உணர்த்துகிறார்.
ஒருவனுக்கு ஒருத்தி என்பதே பழந்தமிழர் பண்பாடு என்பதை நாம் உள்ளத்தில் நிறுத்துவோம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்

Thursday, January 6, 2011

andre sonnaargal1 : அன்றே சொன்னார்கள் - 1தென்புலத்தாரைக் காப்பாற்றுவோம்

அன்றே சொன்னார்கள் - 1

                          தென்புலத்தாரைக் காப்பாற்றுவோம்!

 தெய்வப்புலவர் திருவள்ளுவர் மொழி அல்லது இனம் அல்லது வேறு எப்பிரிவையும் அடையாளம் காட்டாமல் உலகிற்கே பொதுவாகத் திருக்குறளை நமக்குத் தந்துள்ளார். எனினும் உலக முதல் இனம் என்ற வகையில் தமிழினத்தைப் போற்ற வேண்டிய கடமையை நமக்கு அவர் அளித்துள்ளார். இல்லறத்தார் கடமை எனக் கூறும்பொழுது அவர்,

 தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல்தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
 என்கிறார்.

natpu இல்லறத்தார் கடமைகளில் முதலாவதாகத் தென்புலத்தாரைப் போற்ற வேண்டும் என்கிறார். உலகத்தையே ஒரு குடும்பமாகக் கருதி வாழ்ந்த தமிழர் தம் பகுதியினரைப் போற்றாது பிற பகுதியினரைப் போற்றியது கண்டு தெய்வப்புலவர் உள்ளம் நொந்து நாட்டுப்பற்றுதலை வலியுறுத்தி இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பார் செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார்.
 மற்றொரு காரணமும் உண்டு. பல்வேறு கடல்கோள்களால் (ஆழிப்பேரலை எனப்படும் சுனாமியால்) தென்மக்கள் அழிந்ததால் வருந்திய தெய்வப்புலவர்  மூத்த முதல் இனமான தமிழினத்தில் எஞ்சியவர்களையாவது போற்றிக் காக்க வேண்டும் என்று அவர் கருதியதே.
 இயற்கையால் தமிழினம் அழிந்தது போக நம் மொழிக் கொலையாலும் தமிழினம் அழிந்தது. அதுபோக பொல்லா அரசுகளின் பொறுப்பற்ற போக்கால் தென்திசையில் உள்ள ஈழத்தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துடன் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியிருப்போரையாவது நாம் காப்பாற்ற வேண்டாவா? தென்புலத்தில் வாழும் அவர்களை நலிவிலிருந்து காப்பாற்றி உரிமையுள்ள தங்களின் அரசில் அமைதியாகவும் நலமாகவும் வாழ வழி செய்ய வேண்டாமா?
 தெய்வப்புலவர் கட்டளைக்கிணங்கத் தென்புலத்தாரைக் காப்போற்றுவோம் என உறுதி  கொள்வோம்!
  • இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, January 1, 2011

this is sovereignty: இறையாண்மை இதுதான் : நட்பூ : இலக்குவனார் திருவள்ளுவன்

இறையாண்மை இதுதான்!


இலக்குவனார் திருவள்ளுவன்  
natpu இறையாண்மை என்னும் சொல்லிற்குக் காலந்தோறும் மாறுபட்ட பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் செலுத்தும் வகையில் அதிகாரம் முற்றிலும் உறைதல் (தங்குதல்) என்னும் அடிப்படைப் பொருளில் மாற்றம் மிகுதியாக இல்லை. இறையாண்மை என்பது அண்மையில் பெரிதும் பேசப்பட்டு வருவதால் நாம் இதனை அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது. தமிழர்க்கு இறையாண்மை மிக்க அமைப்பு தேவையா? அவ்வாறு பேசுவது சரியா? தவறா? தமிழக இறையாண்மை என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? என்பனவெல்லாம் நாம் அறிய வேண்டுவன ஆகும்.
புவிப்பரப்பில் சட்டங்களையும் விதிகளையும்  ஆக்கவும் செலுத்தவும் அழிக்கவும்வல்ல மிகுஉயர் அதிகாரம் மிக்க அமைப்பை இறையாண்மை மிக்க அமைப்பு என்கின்றனர். தனியாரிடம் அல்லது சிறு குழுவிடம் அல்லது கட்சியிடம் அல்லது பிற வகையில் இறையாண்மை உறைவதைப் பொறுத்து அதன் நிலைப்பாடும் மாறுபடுகிறது. ஆட்சி முறை மாறி வருவதாலும் பெரும்பாலும் இப்பொழுது மக்களாட்சி முறையே வற்புறுத்தப்படுவதாலும் இறையாண்மை பற்றிய விளக்கம் மாறுபடுகிறது.
உரூசோ, பகுக்கப்படாத, முழுமையான, தவறெனச் சொல்ல இயலாத, எப்பொழுதும் சரியான, பொதுநலன் சார்ந்த அதிகாரவைப்பை இறையாண்மை என்கிறார். இறையாண்மை இல்லாத சட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
எனினும் 1789இல் பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்ட பின்பு இறையாண்மை என்பது ஆளுவோரிடமிருந்து நாட்டு மக்களிடம் இட மாற்றம் பெற்றது.
மாக்கியவல்லி, உலூதர், போடின், ஆபெசு (Machiavelli, Luther, Bodin and Hobbes) முதலானோர் இறையாண்மை குறித்து அரசியல் சிந்தனைகளில் முதன்மை இடம் கொடுத்துள்ளனர்.
அரசை உருவாக்கும் அதிகார ஆளுமை என்றும் வன்முறைக்கு அஞ்சா அரச ஆளுமை என்றும்கூட இறையாண்மை பற்றிய கருத்துகளை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இறையாண்மைக்கு உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரே பொருள் என்றும் இருந்ததில்லை எனப் பன்னாட்டுச் சட்டங்களில் வல்லுநரான இலாசா ஓபன்கெய்ம் (Lassa Oppenheim) கூறுகிறார்.
சட்டப்படியும் நடைமுறைப்படியுமான (De jure and de facto) அதிகார உரிமையே இறையாண்மை என்றும் சொல்லப்படுகிறது. இதன்படி இறையாண்மை என்பது குடிமக்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைக் கொண்டுள்ளதா? நடைமுறையில் அவற்றிற்குக் குடி மக்கள் கட்டுப்படுகின்றனரா என்பவற்றைப் பொறுத்ததே. ஏட்டுச் சட்டத்தை விட நாட்டுச் செயல்பாட்டிற்கே இது முதன்மை அளிக்கிறது.
நிலப்பரப்பு இருந்தால்தான் இறையாண்மை இருக்குமா என்றால் அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை என்பதே உலக வரலாறு உணர்த்தும் உண்மை. இத்தாலி  நாட்டின் வாடிகன் நகரில் அமைந்துள்ள திருத்தல ஆளுகை (Holy See) என்பது  நிலப்பரப்பற்ற இறையாண்மை மிக்கதாகும். இதே போன்ற நிலப்பரப்பற்ற மற்றொரு இறையாண்மை அமைப்பு  இத்தாலியில் உள்ள படைவீரத் துறவிகள் தொண்டகம் (Sovereign Military Order of Malta) ஆகும். பன்னாட்டு அவையிலும் இவற்றிற்குப் பார்வையாளர் தகுதி உண்டு.
பழந்தமிழ்நாட்டில் இறையாண்மை பற்றி ஒன்றும் சொல்லவில்லையா என்று வினவலாம். அவர்கள் இறையாண்மை பற்றிக் கவலைப்படவில்லை. இறைமாட்சி குறித்துத்தான் கருத்து செலுத்தினர். அஃது என்ன இறைமாட்சி என்கிறீர்களா? இறையாண்மை மாட்சிமையுடன் - சிறப்புடன் - அமைவதைக் குறிப்பதே இறைமாட்சி. இறையாண்மை ஆளும் முறைக்கு ஏற்ப மாறுபடலாம். ஆனால் இறைமாட்சி என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்ற அறவுணர்வு தமிழர்களிடம் ஓங்கியதாலே இறைமாட்சி குறித்து வலியுறுத்தினர்.
natpu தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளின் இரண்டாம் இயலான பொருளியலில் முதல் அதிகாரமாக இறைமாட்சி குறித்துத்தான் விளக்குகிறார். குடிமக்கள் நலன் சார்ந்த இறையாண்மையே இறைமாட்சி மிக்கது என்பதை அவ்வதிகாரத்தின் முதல் குறளிலும் இறுதிக் குறளிலும் குடிமக்கள் பற்றிக் குறிப்பிட்டு வலியுறுத்துகிறார்.
இவ்வதிகாரத்தின் முதல் குறள் (381)
படைகுடி கூழ் அமைச்சு நட்புஅரண் ஆறும்                          உடையான் அரசருள் ஏறு.                                           
பொருளியல் முதல் குறள் மூலம் குடிமக்களை அரசின் உறுப்பாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் விளக்குகிறார்.
இவ்வதிகாரத்தின் இறுதிக் குறள் (340)
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்                   உடையானாம் வேந்தர்க்கு ஒளி.
என்பதாகும்.
இதன் பொருள், நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும் மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும் என்கிறார் கலைஞர் .
இறைமாட்சி என்றால், அரசனின் நற்குண நற்செய்கைகள். உலகபாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின்இறை என்றார். திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் என்று பெரியாரும் பணித்தார் என அரசனை இறைவனுக்கு ஒப்பாகக் கூறுகிறார் பரிமேலழகர். காலிங்கர் உலகத்து மக்கட்கெல்லாம் நலிவற்ற ஆட்சியை வழங்க மன்னவர் மாட்சிமை முற்பட வேண்டும் என்பதே இறைமாட்சி என்னும் பொருளில் விளக்குகிறார்.
natpu எனவே, இறையாண்மை யாரிடம் உள்ளது அல்லது எவ்வாறு உள்ளது என்பதைவிட அது மாட்சிமைப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே தமிழர் நெறி எனப் புரிந்து கொள்ளலாம். இதுவே உலகோர் போற்ற வேண்டிய தலைசிறந்த நெறியுமாகும்.
இவற்றின் அடிப்படையில் நாம்  இந்திய இறையாண்மை குறித்து நோக்கலாம்.
புவிப்பரப்பில் இயல்பாய் அமைந்த நிலப்பரப்பில் கூடி வாழும் மக்களினம் தம் நலனுக்கெனத் தன்னளவில் கொண்டுள்ள அதிகாரமும் உரிமையுமே உண்மையில் இறையாண்மையாக உருப்பெறுகிறது அல்லது அழைக்கப் பெறுகிறது எனலாம். இருப்பினும்  உலகின் பல பகுதிகள் குடியேற்றங்களாலும் ஆட்சிப் பரவலாலும் ஆளுகைப் பகுதிகளாக உருவாகிப் பின்னர் இறையாண்மை மிகுந்த நாடுகளாக விளங்குகின்றன. இதைப்போன்றே இந்தியா என்று இன்று அழைக்கப் பெறும் இந்நிலப் பரப்பும் இயல்பாய் உருவான இயற்கை நாடல்ல. அயலவர்  ஆட்சி வசதிக்காகச் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆளுமைப் பகுதியே.
இந்தியா என்பது பல தேசிய அரசுகளின் இணைப்பு. இதன் நிலப்பரப்பும் நிலையாக இல்லாமல், உருவான காலத்திலிருந்து மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. 19ஆம் நூற்றாண்டில்தான் இந்தியா என்னும் செயற்கை அமைப்பே உருவானது. 1858ஆம் ஆண்டில் இன்றைய இந்தியப் பரப்புடன் இலங்கை, ஆப்கானிசுதானம், பருமா, கிழக்கு வங்காளம், சிந்து, வடமேற்கு எல்லை மாநிலம் எனப்படும் பாக்கிசுத்தான் முதலியவை சேர்ந்த பரப்பே இந்தியா எனப்பட்டது. இப்பரப்பு எல்லைக்குள்ளேயே தனியரசுகள் சிலவும் ஆங்கிலேயர் அல்லாத பிறர் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளும் இன்றைக்கு இணைக்கப்பட்டவாறு இல்லாமல் தனித்தனியாக இருந்தன. பின்னர் ஒவ்வொன்றாகப் பிரியவும் சேரவும் புதிய புவிப்பரப்பு உருவாகியுள்ளது. இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே இலங்கையும் ஆப்கானிசுதானும் பிரிந்தன. 1935இல் பருமாவும் (மியான்மர்); 1947இல் பாகிசுத்தானும் பிரிந்தன. அதேபோல் மாகி-காரைக்கால்-புதுச்சேரிப் பகுதிகளும்(1954), கோவா(1961), சிக்கிம் (1975) டையூ-டாமன்(1987) ஆகியனவும்  இந்தியாவுடன் இணைந்தன. வெவ்வேறு காலங்களில் பெரு மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன. இவ்வாறு இந்தியா எனப்படும் பரப்பிலிருந்து சில நிலப்பரப்புகள் பிரிக்கப்பட்ட பொழுதும் வேறு சில நிலப்பரப்புகள் சேர்க்கப்பட்ட பொழுதும் சில நிலப்பரப்புகள் மாற்றியமைக்கப்பட்ட பொழுதும் இந்நிலப்பரப்பின் பெயர் மாற்றப்படவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
பரப்பளவு சுருங்கியும் விரிந்தும் இந்திய இறையாண்மை என்பது இவ்வாறு மாறுதலுக்குள்ளாகும்பொழுது அதனை நிலையானதாகக் கருதி, அது பற்றிப் பேசக் கூடாது என்பது நடைமுறைக்கேற்றதல்ல. ஆளும் அதிகாரம் நாம் வாழும் நிலைக்கு ஊறு விளைவிக்கும்பொழுது அது குறித்துப் பேசித்தான் ஆக வேண்டும் என்பது  உலக நடைமுறையே. மக்களாட்சி மக்களாட்சியாகவே விளங்குவதற்கு இறையாண்மை குறித்த கருத்துப் பரவல்கள் தேவை. எனவே, இந்திய இறையாண்மை கேள்விக்குறியாகும்பொழுது  கருத்தாய்வுகள் எழுவது இயற்கையே. இதனை வரவேற்று உரியவாறு செப்பம் செய்யும் பொழுதுதான் இந்திய இறையாண்மை செழுமை அடையும்.
நம் நாட்டமைப்பு எத்தகையது எனக் குறிப்பிடும் 26.11.1949இல் அறிவித்து 1950இல் வெளிவந்த இந்திய அரசியல் யாப்பு  பேரரசாண்மை வாய்ந்த மக்களாட்சிக் குடியரசு எனக் குறிப்பிட்டது. பின் 1976இல் நடைமுறைப்படுத்திய திருத்தத்தின்படி, பேரரசாண்மை வாய்ந்த சமநலமை நெறிசார்ந்த சமயச் சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு எனக் குறிப்பிடுகிறது. நாம் இறையாண்மை என்பதுதான் இந்திய அரசின் தமிழ்மொழி பெயர்ப்பில் பேரரசாண்மை எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் விதி முதல் உட்பிரிவில்
1.1.      இந்தியா, அதாவது பாரதம் மாநிலங்களின் ஓர் ஒன்றியமாக  இருத்தல் வேண்டும்.
எனக் குறிக்கப்பட்டுள்ளது. states என ஆங்கிலத்தில் குறிப்பதை மாநிலங்கள் என மொழி பெயர்த்துள்ளனர். எனினும்  United states of America என்னும் பொழுது அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்று சொல்வது போல் அரசுகளின் ஒன்றியம் என்று குறிப்பிடுவதே சிறந்தது. அவ்வாறு குறிக்கும்பொழுது ஒவ்வோர் அரசும் இறையாண்மை மிக்க அரசாக இருத்தலை உணர்த்துவதாகக் கொள்ளலாம்.
natpu இந்திய ஆட்சியால் ஏற்கப்பட்ட அரசியல் யாப்பின்படி  இந்தியாவை அல்லது பாரதத்தை நாடு என்று கூறுவதுகூடத் தவறுதான். பரத அரசுகளின் கூட்டமைப்பு என்று சொல்லலாம். இங்கே பரதம் என்பது பரதனின் பெயரால் வந்தது அல்ல. இந்நிலப்பகுதி பெரும்பாலும் கடலால் சூழப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் முற்றிலும் தமிழர்களால் ஆளப்பட்டு வந்த தமிழ் நிலமாக இருந்தது. கடல் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் பரதவர்கள் எனப்பட்டனர். பெரும்பான்மைப் பரதவர்களால் சூழ்ந்த நிலப்பகுதி பரதவ நாடு என்றும் பின்னர்ப் பரதநாடு என்றும் அழைக்கப் பெற்றது. இதுவே பரதனின் பெயரால் அமைந்த நாடு என்று தவறாகவும் எண்ணப்படுகிறது. இதுவே பின்னர் பாரதநாடாகவும் குறிக்கப் பெற்றது. இந்தியா என்ற பெயர்தான் வேண்டுமென்றால் தமிழ் இந்தியா என்று அழைக்கப்படலாம். இனி, எவ்வாறு அழைக்கப்படலாம் என்பது குறித்து ஆராயாமல், தற்போதைய சூழலில் இந்திய இறையாண்மை குறித்துப் பேசுவது தவறா எனப் பார்ப்போம்.
இந்திய அரசியல் யாப்பு விதி 19.1.இல் பின்வருமாறு கூறுகிறது.
19.1.அ. குடிமக்கள் அனைவரும்,
அ.பேச்சு உரிமைப் பேற்றுக்கு மற்றும் சிந்தனை வெளிப்பாட்டு உரிமைப் பேற்றுக்கு உரிமை உடையவர் ஆவர்.
இதற்கிணங்க இந்திய இறையாண்மை குறித்துப் பேசுவது  அல்லது சிந்தனையை வெளிப்படுத்துவது சட்டப்படித் தவறாகாது.
இந்திய அரசியல் யாப்பு விதி
29.1. தமக்கெனத் தனிவேறான மொழி, எழுத்துரு அல்லது பண்பாடு உடையவராயும் இந்திய ஆட்சிப் பரப்பில் அல்லது அதன் பகுதி எதிலும் குடியிருப்பவராயும் உள்ள குடிமக்களின் பிரிவினர் எவரும் அவற்றைச் சிதையாது காக்கும் உரிமை உடையவர் ஆவர்.
எனக் குறிக்கிறது. எனவே, நமது மொழிக்கோ எழுத்துருவிற்கோ பண்பாட்டிற்கோ சிதைவு நேரும்பொழுது அல்லது சிதைவு நேரும் வாய்ப்பு உள்ளது என அச்சம் வரும்பொழுது அது குறித்துப் பேச ஒவ்வொருவருக்கும் உரிமையை நமது அரசியல் யாப்பே தந்துள்ளது.
மேலும் இந்திய அரசியல் யாப்பு
344.3. இந்தியாவின் தொழில், பண்பாடு, அறிவியல் ஆகியவற்றின்  முன்னேற்றத்தையும் பொதுப்பணிகள் பற்றிய வகையில் இந்தி மொழி பேசாத பரப்பிடங்களைச் சேர்ந்தவர்களின் நேர்மையான கோருரிமைகளையும் நலப்பற்றுகளையும் உரியவாறு  நாட்டத்தில் மேற்கொள்ளுதல் வேண்டும்.
எனக் குறிப்பிடுகிறது. இந்த விதி இந்தியைப் பரப்புவதால் ஏற்படும் நலக்கேடுகளைக் குறித்தாலும் வேறுவகையிலும் இவ்வாறு நலப்பற்றுகளை நாட்டத்தில் மேற்கொள்ளாமல் அரசுகள் நடந்து கொள்ளும் பொழுது அது குறித்துத் தட்டிக் கேட்கும் உரிமை, நலப்பற்றுகளை இழந்தவர்களுக்கு உரித்தாகின்றது.
இருப்பினும் பின்னர்க் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி இந்தியாவின் பேரரசாண்மை, ஒருமைப்பாடு, ஏமக்காப்பு, அயல்நாட்டரசுகளுடன் நட்புறவு முதலானவற்றிற்கு எதிராக விதி 19.1.அ. பயன்படுத்தப்படக் கூடாது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
natpu இதற்கிணங்கவே அயல்நாட்டு நட்புணர்விற்கு எதிராகப் பேசுவதைக் குற்றமாக அரசு கருதும் நிலைப்பாடு வருகிறது. எனினும் நாம் ஒன்றைப்பற்றிச் சிந்திக்க  வேண்டும். இறையாண்மை என்பது அதிகாரம் உறைதலைக் குறிப்பதால் இந்த அதிகாரமானது நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக மாறும்பொழுது அதைத்தட்டிக் கேட்கும்  உரிமை மக்களுக்கு உண்டு. பலராலும் பலவகையாக விளக்கப்படும் இறையாண்மை   என்பதன் அடிப்படையில் குற்றம் சுமத்துவது நல்லரசிற்கு ஏற்றதல்ல.
இந்தியாவுடன் நட்பு பாராட்டும் சிங்கள அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசுவதைக் குற்றம் எனக் கருதினால் இறையாண்மை இலக்கணத்தின்படி, முப்படைகளும் பொருள்களும் அமைச்சும், நட்பும் அரணும் உடைய தமிழ்ஈழ இறையாண்மைக்கு எதிராக இந்திய அரசு நடந்து கொள்வதும் தவறாகிறது.
நிலப்புற அரசுகளும் (States on exile)இறையாண்மை உள்ளனவாகக் கருதப்படுகின்றன. சான்றாக இரண்டாம் உலகப் போரின்பொழுது நார்வே, நெதர்லாந்து, செக்கோசுலோவேகியா முதலான நாடுகள் அயலவர் ஆளுகைக்கு உட்பட்டிருப்பினும் இறையாண்மை மிக்கப் புற அரசுகளாக அல்லது புவிசாரா அரசுகளாகக் கருதப்பட்டன.  அயலாட்சி நீங்கியதும் புவிசார் இறையாண்மை மிக்க அரசுகளாகக் கருதப்பட்டன. 1990-91இல் ஈராக் போரின்பொழுது குவைத் அரசிற்குப் புவிசாரா இறையாண்மை உள்ளதாகக் கருதப்பட்டது. இவற்றின் அடிப்படையிலும் தமிழ் ஈழம் இறையாண்மை மிக்க அரசாகத் திகழ்ந்தது. இப்பொழுது நிலப்புறத் தமிழ்ஈழம் (Eezham on exile) அமைக்கப்பட்டுள்ளதும் இறையாண்மை மிக்கதாகக் கருதப்பட வேண்டியுள்ளது. இவற்றின் அடிப்படையில் சிங்கள இறையாண்மைக்கு எதிரான பேச்சுகளை ஆராய வேண்டும்.
ஒரு நாட்டின் இறையாண்மை அந்நாட்டு மக்களுக்கு எதிராகவோ நம் நாட்டிற்கு எதிராகவோ பிற நாடு அல்லது பிற நாடுகளுக்கு எதிராகவோ அமைந்தது எனில் அது குறித்து யாரும் பேசலாம் அல்லது எதிராகச் செயல்படலாம் என்னும்பொழுது அந்த இறையாண்மை மீறலால் துன்பங்களுக்கு உள்ளாவோர் அந்த அயல்நாட்டு இறையாண்மைக்கு எதிராகப் பேசுவது குற்றமே ஆகாது. மாறாகத் தன் நாட்டுமக்களின் உணர்விற்கு எதிராக அந்த நாட்டு அரசின் இறையாண்மையைக் காக்க முற்படும் அரசின் செயல்பாடுதான் குற்றமாகிறது.
தமிழர்க்கென இறையாண்மை மிக்க அரசு இருந்தது எனில், தமிழர் படுகொலைகள் நடைபெற்றிருக்காது. தமிழ் மீனவனைத் தாக்கினால் சிங்கள மாணவன் தாக்கப்படுவான் எனப் பேசுவதற்கே தேவையில்லாமல் அரசே உரிய நடவடிக்கை எடுத்திருக்கும். இறையாண்மை மிக்க அரசிற்கு எதிராகச் சிங்களம் வாலாட்டாது. இந்தியாவும் இறையாண்மை மிக்க நாடுதானே! அப்பொழுதும் சிங்களம் அஞ்சவில்லையே என எண்ணலாம். இந்திய அரசு என்பது தமிழக நலனுக்கு எதிராகவே செயல்படுகிறது என்பது உலகறிந்த உண்மை. எனவே, ஒருவருக்கொருவர் இணைந்து செயலாற்றும்பொழுது இந்திய இறையாண்மை குறித்துச் சிங்கள இறையாண்மைக்குக் கவலை இல்லை. செம்மொழிச் சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், இந்திய அரசு இலங்கையரசின் நட்புக்காகத் தமிழர்களைப் பலி கொடுத்து விடுவார்களோ என்று அஞ்ச வேண்டியுள்ளது என்று 40 ஆண்டுகளுக்கு முன்னரே அச்சத்தைத் தெரிவித்துள்ளார் எனில் இந்தியா எப்பொழுதும் தமிழர் நலனில் கருத்து செலுத்தாமல் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், நமக்கென இறையாண்மை மிக்க அரசு இருந்தது எனில், இத்தகைய அவலங்கள் ஏற்பட்டிருக்காது. போர்க்குற்றங்களும் படுகொலைகளும் நடைபெற்றிருக்காது, சிங்கள அரசின் கொடுங்குற்றச் செயல்களை இறையாண்மை மிக்க தமிழக அரசு, தானே உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு வரும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கும். அத்தகைய சூழலில் இந்திய இறையாண்மை சிங்கள இறையாண்மைக்கு வால்பிடித்து அலையும் நிலையும் ஏற்பட்டிருக்காது.
இத்தகைய குற்றச் செயல் நிகழ்வுகளுக்கு இந்திய இறையாண்மை உடன்படுவதன் காரணம் என்ன? இறையாண்மை மிக்க அரசுகளின் கூட்டிணைவாக ஒன்றிய அரசு அமையாமல் தனி வல்லரசாக நடைமுறையில் மாறியுள்ளதே  காரணம் என்பது எளிதில் யாவர்க்கும் புரியும். எனவே நம் நலன் காக்க நாம் இறையாண்மை மிக்க அரசாகத் தமிழக அரசு விளங்க வேண்டும் என வேண்டுவது முற்றிலும் அறவழிப்பட்டதே.
இந்தியா ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தபொழுதே செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் 1942இல் சங்க இலக்கியம் இதழ் மூலம் பின்வருமாறு வினாக்கணை தொடுத்தார்.
தமிழா சிந்தனை செய்!
வீரத்தமிழா வீறிட்டெழு!
முன்னை நிலையை உன்னிப் பார்!
நாடு - பரந்த தமிழகம் குறைந்ததேன்?
மொழி - உலகாண்ட உன் மொழியை ஒடுக்குவதேன்?
வீரம் - இமயம் கொண்ட ஏற்றம் எங்கே?
ஆட்சி - பாவலனைப் போற்றிய காவலனெங்கே?
வாணிகம் - கப்பலோட்டிய கண்ணியம் எங்கே?
                        கொடை - பெருந்சோறளித்த பெருமைதான் எங்கே?
தாய்மொழி உயரத் தாய்நாடு உயருமே!
இவ்வினாக்களுக்கெல்லாம் தீர்வு வேண்டுமெனில் தமிழகம் இறையாண்மை மிக்க அரசாகத் திகழ்தல் வேண்டும்.
natpu கோட்டையில் இந்தியத் தேசியக்கொடியேற்றும் உரிமையைத்தான் முதல்வரால் பெற முடிந்ததே தவிர, அவர் வேண்டியவாறு தமிழக அரசிற்குத் தனிக் கொடியைப் பெற இயலவில்லை. காவல் துறை போன்ற பல துறைகளுக்கெனத் தனித் தனிக் கொடிகள் இருப்பினும் மாநில அரசுகளுக்குத் தனிக் கொடி இருப்பதை இந்திய இறையாண்மை விரும்பவில்லை.
நாம், இந்திய இறையாண்மையில் சிக்கியுள்ளதால் இந்தி மொழித் திணிப்பிற்கும் சமசுகிருதமயமாக்கத்திற்கும் ஆளாகி அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்திய கட்சி ஆட்சிக்கட்டிலில் ஏறியும் கூட அதனைச் செயல்படுத்த முடியவில்லை. தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழர்களால் கட்டப்பெற்ற தமிழ்க்கடவுள்களுக்கான கோயில்களில் தங்கள் மொழியாகிய தமிழில் வழிபாடு நடத்த முடியவில்லை.
ஓர் அரசு ஒரு நாட்டின்மீது நடைமுறை ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துகிறது; ஆனால் அந்த நாட்டின் அரசுடன் இணைந்து செயல்படவில்லை எனில் அந்த அரசு அயலக இறையாண்மை உடையதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் அடிப்படையில் பார்த்தால் இந்திய இறையாண்மை என்பது தமிழகத்திற்கு(ம் பிற மாநிலங்களுக்கும்) அயலக இறையாண்மையாக விளங்குகிறது எனலாம்.
தேசிய ஒருமைப்பாடு எனும் காரணம் காட்டித் தமிழக உண்மை வரலாற்றைத் தமிழர்களே அறியாதவாறு செய்ய முற்படுகின்றனர் சிலர் . . .
natpu  இந்திய கூட்டரசின் உறுப்பு நாடான தமிழகத்தைப் பற்றி உலகுக்கு அறிவிப்பதற்கு இந்தியக் கூட்டரசு எள்ளத்தனையும் செய்திலது. வெளிநாடுகளில் இந்தியா, இந்தி என்றுதான் விளம்பரப்படுகின்றது என்றும்
இந்திய அரசினர்க்குத் தமிழகம் என ஒன்றுகூடாது; தமிழ் இனம் எனக் கூறல் சாலாது. தமிழர் பண்டைய வரலாற்றை, மறக்கச் செய்து மறைக்கத்தான் வழிகோலுவார்கள் போல உள்ளது. . .     நமக்கு உயர்வு தரும் நமது பழைய வரலாற்றை மறைத்து விட்டு, மறந்து விட்டு நாம் எதற்காக வாழ வேண்டுமோ? வரலாறு மறந்த வாழ்வு வரலாற்றில் இடம் பெறாது என்பது உலகம் அறிந்த உண்மை
என்றும் பேராசிரியர் சி.இலக்குவனார் அன்றே தெரிவித்த உண்மையும் கவலையும் எச்சரிக்கையும் இன்றும் மாறாமல் இருக்கும் காரணம் நமக்கென  இறையாண்மையுள்ள அரசு அமையாததுதான்.
பணக்குறியீட்டில் தேவநாகரி எழுத்து புகுந்துள்ளது. கணிணி வழி கிரந்தம் புகுந்து தமிழ் எழுத்துகளை அழிக்கப் பார்க்கின்றது.  இந்திய இறையாண்மையின் எழுத்தழிப்பு முயற்சிகள் குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
எல்லா மொழிகளுக்கும் ஒரே எழுத்து என்பது முற்றிலும் பொருந்தாது. இத்திட்டமும் இந்திமொழி ஒன்றையே நிலைக்கச் செய்யவும் ஏனைய மொழிகளை அழிக்கச் செய்யவும் உதவுவதற்கே கொண்டு வரப்படுகின்றது. . . .
ஒரு மொழிக்குரிய ஒலிகளை இன்னொரு மொழிக்குரிய எழுத்தால் எழுத முயல்வது உயிர் கூடுவிட்டுக் கூடு பாய்வதை ஒக்கும். . . . .
இந்திமொழி எழுத்தைத் தமிழுக்குரிய எழுத்தாக ஆக்குவதைத் தடுத்து நிறுத்தல் வேண்டும். மொழியின் உடல்போன்றது எழுத்து. எழுத்தாம் உடல் அழிந்த பின்னர், மொழியாம் உயிர் வாழ்வது எங்ஙனம்? . . . .
கூட்டரசு  என்று கூறிக்கொண்டு அரசு மொழிகள் அனைத்துக்கும் சம உரிமையும் நிலையும் அளியாது ஒரு மொழிக்கு மட்டும் உயர்வு அளித்து ஒருமொழித் தனிஅரசுபோல் செய்வது என்றும் பொருந்தா வல்லாண்மை நெறியாகும்.
தமிழக அரசிற்கு இறையாண்மை  இல்லாத வரை இவை மேலும் மோசமாக நம்மைஇட்டுச் செல்லுமே தவிர நமக்கு அறம் வழங்கப்பட மாட்டாது.
natpu இவ்வாறு தனி இறையாண்மை கோருவது என்பது பிரிவினை ஆகாதா எனச் சிலர் எண்ணலாம்.  தனித்தமிழ் நாடு என்னும் நிலைப்பாடு வேறு. தமிழர்களுக்கென்று இறையாண்மை உள்ள அரசு வேண்டும் என்பது வேறு. கூட்டாட்சி (federation govt.) முறையில் பரதக் கண்டம் தேசிய இன அரசுகளின் கூட்டிணைவாக இருத்தல் வேண்டும். அதன் அடிப்படையில் தேசிய அரசுகளுக்குத் தனித்தனி இறையாண்மை இருக்கும். கூட்டிணைவிற்குத் தனி இறையாண்மை இருக்கும், ஒவ்வொருவருக்கும் தேசிய அரசின் குடியுரிமை, கூட்டிணைவின் குடியுரிமை என இரட்டைக் குடியுரிமை இருக்கும். இதன்படி  நாம் முதலில் தமிழ்க் குடிமக்களாகவும் அடுத்து பரதக் கூட்டரசின் குடிமக்களாகவும் இருப்போம். இந்திய அரசியல் யாப்பு அதற்கு இடம் தருமா என்று ஐயம் வரலாம். நமக்கு எது தேவையோ அதற்கேற்பத்தான் இந்திய அரசியல் யாப்பு இருக்க வேண்டுமே தவிர இந்திய இறையாண்மைக்குள் நம் உரிமைகளைத் திணிக்கக் கூடாது. என்றாலும் தற்போதைய அரசியல் யாப்பின்  அடிப்படையிலேயே நமக்கு இவ்வுரிமை வழங்கப்பட முடியும்.
1957இல் சம்மு-காசுமீருக்கெனத் தனி அரசியல்யாப்பு இயற்றப்பட்டு இந்திய அரசால் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி அம்மாநில மக்கள் முதலில் சம்மு-காசுமீர்க் குடிமக்கள்; பின்னர்தான் இந்தியக் குடிமக்கள், எனவேதான் அவர்களது அரசியல் யாப்பு (அரசமைப்புச் சட்டம்) முகவுரை, சம்மு-காசுமீர் குடிமக்களாகிய நாங்கள் என்றே குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இந்திய இறையாண்மை, வல்லாண்மை மிக்கதாக உள்ளதால் தன்னாட்சி மிகுந்திருந்த சம்மு-காசுமீர் மாநிலத்தின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனவே, தமிழர்க்கு இறையாண்மை நிறைந்த அரசியல் யாப்பு இயற்றப்படும் பொழுது அதற்கேற்ப பரதக் கண்டக் கூட்டரசின்  இறையாண்மையும் மட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒட்டு மொத்தக் கூட்டரசுகளின் பாதுகாப்பு, நாணய வெளியீடு, கூட்டரசுகளின் இடையேயான வான்வழிப் போக்குவரத்து முதலான சில மட்டும் ஒன்றியத்தின் இறையாண்மைக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.
இவற்றால் நாட்டுத்தலைமையின் அதிகார வரம்பைத்தான் இறையாண்மை குறிக்கின்றதே தவிர, வேறு சிறப்பு இல்லை என்பதும் அந்த இறையாண்மை மாட்சிமை மிக்கதாக விளங்க வேண்டும் என்பதையும் செயற்கையாக இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்ட இந்திய நிலப் பரப்பு தேசிய இனங்களின் கூட்டரசாகத் திகழ வேண்டும் என்பதையும் உலகில் தோன்றிய முதல் இனமான தமிழ் இனம் தனியுரிமையுடன் தன்னாட்சி செலுத்தும் வகையில் இறையாண்மையும் இறைமாட்சியும் மிக்க அரசினைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதையும் தற்போது தமிழினத்திற்கு ஏற்பட்டு வரும் அழிவுகளுக்கெல்லாம் அதுவே அருமருந்தாய்த் திகழும் என்பதையும் நன்கு புரிந்து கொள்ளலாம்.
எனவே
தமிழ் நிலத்தில்
தமிழ் முதன்மை பெற
தமிழர் தலைமை பெற
தமிழர்க்கான இறையாண்மை அரசு அமையட்டும்!
•••

Followers

Blog Archive