Tuesday, December 31, 2019

நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்து! – இலக்குவனார் திருவள்ளுவன்


 நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்து!

2020 ஆம் ஆண்டு பிறந்து விட்டது. தமிழ்ப்புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவிப்பவர்களை விட ஆங்கிலப் புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவிப்பவர்களே பெரும்பான்மையர். ஆனால், உண்மையில் இந்த ஆண்டு முறை ஆங்கிலப் புத்தாண்டு அல்ல. அப்படியானால் இந்த ஆண்டு கிறித்துவ ஆண்டு முறை என்கிறார்களே அது சரிதானா என்றால் அதுவும் தவறு. நடை முறைப் பயன்பாட்டில் உள்ள இந்த ஆண்டினை நாம் நடைமுறைப் புத்தாண்டு என்று சொல்வோம்.
கிறித்துப் பிறப்பின் பொழுதே நடைமுறையில் இருந்த ஆண்டைக் கிறித்துவ ஆண்டு என்று சொல்வது தவறாகும். எனினும் வரலாறு அறிந்தவர்களும் அவ்வாறுதான் கூறுகின்றனர். கிறித்து பிறந்த பொழுது ஐரோப்பிய நாடுகளில் ஆண்டிற்குப் பத்து மாதங்கள்தாம் இருந்தன. அப்பொழுது சூலையும் ஆகத்தும் கிடையாது.
கி.மு.45இல் உரோமானியப் பேரரசர் சூலியசு சீசரால் உருவாக்கப்பட்டு அவர் பெயரால் சூலியன் நாட்காட்டி (Julian calendar) என்று அழைக்கப் பெற்றதே முன்பு பயன்பாட்டில் இருந்தது.
அலோசியசு இலிலியசு [Aloysius Lilius (1510 – 1576)] என்னும் இத்தாலிய வானியல் அறிஞர், மெய்யியலாளர், காலக்கணிப்பர், மருத்துவர் எனப் பல்துறை வித்தகராய் விளங்கினார். இவர் உலுயிகி  இலிலியோ(Luigi Lilio) என்றும் உலுயிகி கிகிலியோ(Luigi Giglio) என்றும் அழைக்கப்படுவார். இவரால் மாற்றி யமைக்கப்பட்ட வடிவமே சில திருத்தங்களுடன் இப்பொழுது வழக்கில் உள்ளது.
தாம் வடிவமைத்த ஆண்டுமுறையை உலகம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அலோசியசு கனவு கண்டார். எனினும் அவர் வாழ்நாளில் இக்கனவு நனவாகவில்லை. அலோசியசு மறைந்து 6 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் கனவு நனவாகியது. தொடக்கத்தில் ஆண்டுமுறை மாற்றத்திற்கான கருத்துருவை அவர்தான் அளித்திருந்தார். எனினும் 1575 இல் அவரது தம்பி அந்தோனியோ இலிலியோ (Antonio Lilio) நாட்காட்டிச் சீர்திருத்த ஆணையத்திடம் அதனை அளித்தார். இந்த ஆணையம் நாட்காட்டி மீட்புப் புதுச் செறிவுத் திட்டம்(Compendium novae rationis restituendi kalendarium) என்ற பெயரில் 1577 இல் அச்சிட்டு 1578இல் உலகிலுள்ள உரோமன் கத்தோலிக்கு அமைப்புகளுக்குஅனுப்பியது.

அவற்றின் ஒப்புதலையும் சில திருத்தஙு்களையும் ஏற்று, இவ்வாண்டு முறையைத் திருத்தந்தை பதின்மூன்றாம்கிரகோரி [Pope Gregory XIII,  07.01.1502 – 10.04.1585] 24.02.1582 இல் நடைமுறைப் படுத்தினார். எனவே, இதனைக் கிரகோரியன் ஆண்டு அல்லது கிரிகோரியன் நாட்காட்டி என அவர் பெயரால் அழைக்கின்றனர்.
தொடக்கத்தில் 8 நாடுகள் மட்டுமே இந்த ஆண்டுமுறையைப் பின்பற்றின. இப்பொழுது பெரும்பாலான உலக நாடுகள் இம்முறையையே பயன்படுத்துகின்றன.
இயேசுநாதர் பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் குறிக்கப் பெற்றமையால் கிறித்துவ ஆண்டு அல்லது ஆண்டவரின் ஆண்டு அல்லது  பொதுமுறை ஆண்டு என்றும் இதனை அழைக்கின்றனர்.
பூமி சூரியனைச் சுற்றுவதற்காகும் காலம் என்பது 365 நாள் 5 மணி நேரம் 49 நிமையம் 12நொடி ஆகும். கணக்கிடுவதற்கு  எளிமையாக இருக்கும் பொருட்டு 365 நாள் என்பதையே ஆண்டுக் காலமாகக் கொள்கிறோம். ஏறத்தாழக் கால் நாள் குறைவதால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 366 நாள் எனக் கணக்கிடுகிறோம். இதுதான் மிகைநாள் ஆண்டு(leapyear). எனினும் 400 ஆல் வகுபடாத நூற்றாண்டுகளில் மிகை நாள் இருக்காது. அஃதாவது 1900, 2100, 2200, 2300 ஆகியன மிகைநாள் ஆண்டுகளன்று. ஆனால் 2000, 2400, 2800 முதலான ஆண்டுகள் மிகைநாள்ஆண்டுகள்.
இந்த ஆண்டுப் பகுப்பு அறிமுகமாகிய காலக்கட்டத்திலும் அதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் நாள், வாரம், மாதம், ஆண்டு என்ற காலப்பகுப்பும், கோள்களுக்கான அறிவியல் அடிப்படையிலான பெயர்களும் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்து இன்றளவில் தொடர்கின்றன. பொதுமுறை ஆண்டு  அல்லது நடைமுறை ஆண்டு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே இருந்த தமிழ் ஆண்டுப் பகுப்புச் சிறப்பை நாம் மறந்துவிட்டோம். கோயில்களில் வழிபாடு, ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தல், கணக்கு தொடக்கம், முதலான பலவற்றையும் ஆங்கில ஆண்டு எனச் சொல்லப்பட்டு வரும் நடைமுறை ஆண்டுத் தொடக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் செயல்படுத்துகிறோம்.
பழஞ்சிறப்பு வாய்ந்த .தமிழ் ஆண்டு முறையைத்தா்ன புறக்கணிக்கிறோமே! வாழ்த்துகளையாவது தமிழில் தெரிவிக்கின்றோமா என்றால் அதுவும் இல்லை. இனிமேலாவது, நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுதும் புத்தாண்டு முதலான சிறப்பு நாள்களின் பொழுதும் ஆங்கிலத்தில் வாழ்த்துவதைக் கைவிடுவோம். உதடுகள் உதிர்க்கும்  அவற்றை விட உள்ளத்தில் இருந்து தமிழில் வாழ்த்தினால் எண்ணங்கள் கைகூடி மகிழலாம். நம் சங்கப்புலவர்கள் வாழத்திய வாழ்த்து வரிகளை நாம் புத்தாண்டுகளில் தெரிவிக்கலாம். அவை இவைதாம்.
1.) நெல்பல பொலிக!
    பொன்பெரிது சிறக்க!
2.) பால் பல ஊறுக! பகடு பல சிறக்க!
3.) நன்றுபெரிது சிறக்க! தீதில் ஆகுக!
4.) அறம் நனி சிறக்க! அல்லது கெடுக!
5.) அரசு முறை செய்க! களவு இல்லாகுக!
6.) பசி இல்லாகுக! பிணி சேண் நீங்குக!
7.) மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!
8.) பசியும் பிணியும் பகையும் நீங்கி
   வசியும் வளனும் சுரக்க! ..
9.) மண் உயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் “
கிடைத்திடுக!
10.) நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புக!
11.) ஒன்றே செய்க; ஒன்றும் நன்றே செய்க;
 நன்றும் இன்றே செய்க; இன்றும் இன்னே செய்க!
12.) நல்லன இனியன சொல்லி அறம் பெருக்குக!
13.) வையை மணலினும் பல்லாண்டு வாழ்க!
இவையெல்லாம் உலக நலனுக்கான பொதுவான வாழ்த்துகளாகும். இதனால் நாடும் நலம் பெறும். நாமும் நலமுறுவோம்.
இந்த நடைமுறைப் புத்தாண்டில் இருந்தாவது, “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என எண்ணி நாம் ஒற்றுமை உணர்வுடன் வாழ்வோம்! தமிழ்நலன் மறவாது பொதுநலம் பேண உறுதி கொள்வோம்!
அவரவர் காணும் புத்தாண்டுக்கனவுகள் நனவாகட்டும்! நானிலம் சிறக்கட்டும்!
இலக்குவனார் திருவள்ளுவன்
தொடர்பிற்கு: thiru2050@gmail.com
தினச்செய்தி

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! -இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!


 திருவள்ளுவர்
திருக்குறள்
காமத்துப்பால்
முப்பால் எனப்பெறும் திருக்குறளின் மூன்றாவது பால் காமத்துப்பால். காமம் என்றால் நிறைந்த அன்பு என்று பொருள். எனவே, இஃது இன்பத்துப்பால் என்றும் அழைக்கப் பெறுகிறது.
திருக்குறளில் 109 ஆவது அதிகாரம் முதல் 133 ஆவது இறுதி அதிகாரம் முடிய 25 அதிகாரங்கள் – 250 பாக்கள் – இன்பத்துப்பாலில் உள்ளன. திருக்குறளை மொழிபெயர்க்க முயன்ற பொழுது அறிஞர் போப்பு, துறவியான தாம், இன்பத்துப்பாலைப் படித்து மொழி பெயர்ப்பதா எனப் பன்முறை தயங்கினாராம். பின்னர்த் துணிந்து படிக்கத் தொடங்கிய பொழுதுதான் இப்பிரிவும் ஒப்புயர்வற்ற இலக்கியச் சுவை உடையது என்பதை உணர்ந்தாராம். அதன் பின்னரே அவர் முழுமையும் மொழிபெயர்த்தார்.
குறள்நெறி அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார், “திருக்குறள் இன்பத்துப்பால் பால்(Sex) பற்றிய நூலாயினும் ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கூடியுள்ள அவையில் கூறுவதற்குக் கூசும் ஒரு சொல் கூட அதில் இடம் பெறவில்லை” எனச் சிறப்பித்துக் கூறுவார்.
தலைவன் தலைவி அல்லது கணவன் மனைவி இடையே உள்ள உள்ளன்பின் வெளிப்பாடாக இவை உள்ளனவே தவிர எதுவும் கொச்சையாக இல்லை.
திருக்குறளுக்கு 500 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த காமச்சூத்திரா என்னும் நூலைப் பார்த்துக் காமத்துப்பால் எழுதியதாக ஆரிய அன்பர் தவறாகக் கூறுவர். ஆனால், திருக்குறளின் காமத்துப்பால் போல் எந்த இலக்கியத்திலும் அன்பின் உறவு நயமாகக் கூறப்படவில்லை. எனவே, இவற்றை நாம்  இச் சிறு தொடரில், ஒவ்வொரு வரியில்  உணரலாம்.
 அதிகாரம் 109 தகை அணங்கு உறுத்தல்

  1. அணங்கோ? மயிலோ? பெண்ணோ? அறியாமல் நெஞ்சம் மயங்குகிறது. (குறள் 1081)
  2. படைகொண்டு தாக்குதல் போல் பார்க்கின்றாளே! (1082)
  3. முன்பு அறியா எமனைப் பெண்ணின் விழிகளால் அறிந்தேன். (1083)
  4. அழகாக இருந்தாலும் இவள் கண்கள் பார்த்தவர் உயிரை உண்ணுகிறதே!(1084)
  5. எமனோ? கண்ணோ? மானோ? பார்வை மூன்றையும் காட்டுகிறதே! (1085)
  6. புருவம் கண்ணை மறைத்திருந்தால், எனக்கேது நடுக்கம்?(1086)
  7. மார்புத் துகில் மதயானையின் முக மறைப்பு போன்றதே!(1087)
  8. பகைவர் அஞ்சும் என் வலிமை இவள் நெற்றி முன் தோற்றதே!(1088)
  9. மான்விழியும் நாணமும் உடைய இவ்வழகிக்கு அணிகலன் எதற்கு?(1089)
  10. உண்டால்தான் கள்ளால் மகிழ்ச்சி. காதலோ கண்டாலே மகிழ்ச்சி!(1090)

அதிகாரம் 110. குறிப்பு அறிதல்

  1. காதல் நோய் தரும் பார்வையே மருந்தைத் தருகிறதே! (1091)
  2. கடைக்கண்பார்வையோ சிறிது! தரும் காதலோ பெரிது! (1092)
  3. பார்த்ததும் தலை தாழ்த்தினாள் அதுவே காதல் பயிருக்கு நீராகும். (1093)
  4. பார்த்தால், நிலம் பார்க்கிறாள். பார்க்காவிட்டால் பார்த்துப் புன்னகைக்கிறாள்.(1094)
  5. பார்க்காததுபோல் பார்த்துத் தலைசாய்த்து நகுவாள்.(1095)
  6. உதடு சுடுமொழி பேசும். உள்ளம் காதலை உணர்த்தும்.(1096)
  7. கடுஞ்சொல்லும் பகைப்பார்வையும் அன்பை உணர்த்தும் குறிப்பே! (1097)
  8. பரிவுப் பார்வையுடன் நகுவது அவளுக்கு அழகு தரும்.(1098)
  9. அயலார் போன்ற பார்வை காதலரிடமே உள்ளன.(1099)
  10. கண்ணும் கண்ணும் பேசுகையில் வாய்ச்சொல் எதற்கு?(1100)

அதிகாரம் 111.புணர்ச்சி மகிழ்தல்


  1. காணுதல், தீண்டுதல் என்ற வகையில் ஐம்புல நுகர்வு இன்பங்களும் இவளிடம் உள்ளன. (1101)
  2. இவள் தரும் காம நோய்க்கு இவளே மருந்து.(1102)
  3. திருமால் உலகம் தலைவி தரும் இன்பத்தினும் இனியதோ? (1103)
  4. விலகினால் சுடும், அணுகினால் குளிரும் தீயை எங்கே பெற்றாள்? (1104)
  5. விரும்பும் பொழுது கிடைக்கும் இன்பத்தைத் தலைவியின் தோள்கள் தருகின்றனவே! (1105)
  6. சேரும்பொழுதெல்லாம் உயிர் தழைக்கச்செய்யும் இவள் தோள்கள் அமிழ்தத்தால் ஆயின. (1106)
  7. தலைவியைத் தழுவும் இன்பம் உழைத்துப் பகிர்ந்து உண்ணும் இன்பம் போன்றது. (1107)
  8. காற்றிடைப் புகாத் தழுவல் இருவர்க்கும் இனிதே! (1108)
  9. ஊடல், உணர்தல், புணர்தல் இல்வாழ்வின் பயன்களாம். (1109)
  10. அறிதோறும் புலப்படும் அறியாமைபோல் கூடுந்தோறும் இன்பம் புலப்படுகிறது. (1110)

அதிகாரம் 112 நலம் புனைந்து உரைத்தல்

  1. அனிச்ச மலரே! நின்னினும் மெல்லியள் என் தலைவி. (1111)
  2. தலைவியின் கண் பூவைப்போன்றதால் பூக்களைக் கண்டுமயங்குகிறாயே நெஞ்சே! (1112)
  3. மூங்கில் தோளினளுக்குத் தளிர் மேனி, முத்துப்பல், இயற்கை மணம், வேல் கண். (1113)
  4. குவளைப்பூக்கள் இவள் கண்களுக்கு இணையில்லை என முகம் தாழ்த்தி நிலம் பார்க்கும். (1114)
  5. காம்பினைக் கிள்ளாமல் அனிச்சப்பூவைச் சூடினால் இவள் இடை ஒடியும்.(1115)
  6. தலைவியின் முகமா? நிலவா? என அறியாமல் விண்மீன்கள் கலங்குகின்றன.(1116)
  7. நிலவின் களங்கம் தலைவியின் முகத்திற்கு இல்லையே! (1117)
  8. நிலவே! தலைவி முகம்போல் ஒளிவீசினால் நீயும் விரும்பப்படுவாய்! (1118)
  9. தலைவியின் முகம்போல் இருக்க விரும்பினால் நிலவே, பலரறியத் தோன்றாதே! (1119)
  10. அனிச்சப் பூவும் அன்னச்சிறகும் தலைவியின் மென்பாதத்தை வருத்தும். (1120)

அதிகாரம் 113. காதல் சிறப்பு உரைத்தல்

  1. தலைவியின் வாயமுதம், பாலும் தேனும் கலந்த சுவையானது.(1121)
  2. உடலும் உயிரும் போன்றது தலைவிக்கும் எனக்கும் உள்ள உறவு.(1122)
  3. கண்ணின்பாவையே விலகி விடு! அங்கே தலைவி வருகிறாள்! (1123)
  4. உயிர் சேர்தலும் நீங்கலும் போன்றன தலைவியின் கூடலும் பிரிதலும். (1114)
  5. தலைவியை நான் மறந்ததில்லை! எனவே நினைத்ததும் இல்லை! (1115)
  6. நுட்பமான காதலர் கண்ணிலிருந்து நீங்கார் இமைத்தால் வருந்தார். (1126)
  7. கண் மை தீட்டும் பொழுது தலைவர் மறைவார் என்பதால் கண்ணுக்கு மை இடேன். (1127)
  8. நெஞ்சில் காதலர் உள்ளதால் சுடுபொருள் உண்ண மாட்டேன். (1128)
  9. இமைத்தால் மறைவார் என விழித்திருக்கிறேன். தலைவரைப் பழிக்கின்றனரே! (1129)
  10. உள்ளத்துள் உள்ள தலைவரைப் பிரிந்துள்ளதாக ஊரார் இகழ்கின்றனரே! (1130)

-இலக்குவனார் திருவள்ளுவன்
(தொடரும்)

Tuesday, December 24, 2019

உயர்நீதிமன்றப் பெயர் மாற்ற முடிவில் தமிழ் நாட்டிற்கு அநீதி! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

உயர்நீதிமன்றப் பெயர் மாற்ற முடிவில்  தமிழ் நாட்டிற்கு அநீதி!


தமிழ்நாட்டிலுள்ள உயர்நீதி மன்றத்திற்குத் தமிழ் நாட்டின் பெயரைச் சூட்டவேண்டும் என்னும் தமிழக மக்களின் அடிப்படை உணர்விற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்காக அவர்கள் சொல்லும் காரணம்  எளிய மனிதனால்கூட ஏற்கப்பட முடியாதது. அவ்வாறிருக்க அரசியல் தெரிந்தவர்கள், சட்டம் தெரிந்தவர்கள், நீதியை உணர்ந்தவர்கள் எங்ஙனம் ஏற்கமுடியும்?
அனைத்து நீதிபதிகள் குழுக் கூட்டத்தில், “சென்னை உயா்நீதி மன்றத்தின் அதிகார எல்லைக்குள்தான் புதுச்சேரி மாநிலமும் உள்ளது. எனவே, தமிழ்நாடு உயா்நீதிமன்றம் எனப் பெயா் மாற்றம் செய்ய முடியாது” எனத் தெரிவித்துள்ளனர். ஒரு பாமரனும் இக்கருத்தைக் கேட்கும் பொழுது சிரிக்கத்தான் செய்வான். இப்பொழுது மதராசு என்று சொல்கிறார்களே, நாம் சென்னை என்று சொல்கிறோமே அதில் என்ன தமிழ்நாடு முழுமையுமா அடங்குகிறது?  தமிழ்நாட்டின் பெயரைத் தமிழ்நாடு என்னும் பழம் பெயருக்கு மாற்றிய பின்னர், சென்னை என்பது தமிழ்நாட்டில் உள்ள  ஒரு நகரம் அல்லது மாவட்டம்தான். வாதத்திற்காகச் சென்னை என்பது தமிழ்நாட்டைக் குறிப்பதாக எடுத்துக் கொள்வோம். இதில் எங்கே புதுச்சேரி வந்தது. மதராசு அல்லது சென்னையில் எப்படி புதுச்சேரி அடங்கும்?  எனவே, எந்தச் சிந்தனையும் செலுத்தாமல் ஏதோ அழுத்தத்தின் பெயரில் தெரிவிக்கப்பட்ட முடிவை அறிவிக்கிறார்களோ என்ற ஐயம்தானே அனைவருக்கும் ஏற்படும்?
சரி. இதற்கு முன்னர் வேறு எதுவும் இவ்வாறு இல்லையா? என்று பார்த்தால் நீதித்துறையினரின் அறியாமை வியப்பைத் தருகிறது. ஏனெனில், பஞ்சாபு அரியாணா ஆகிய இரு மாநிலங்களுக்குமான ஒற்றை உயர்நீதி மன்றம், பஞ்சாபு அரியாணா உயர்நீதி மன்றம் என்ற பெயரில் இயங்குகிறது.  அவ்வாறிருக்கத் தமிழ்நாடு-புதுவை உயர்நீதி மன்றம என்று பெயர் சூட்டத் தடை என்ன உள்ளது?
இது குறித்து, ‘மதராசு உயர்நீதிமன்றம்’ என்பதைத் ‘தமிழ்நாடு – புதுவை உயர்நீதி மன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். என ஏற்கெனவே தமிழ் அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன. தமிழ் ஆர்வலர்களும் பல்வேறு கட்டங்களில் தங்களது கோரிக்கையினை வைத்துள்ளனர்.  இவ்வாறான சிந்தனை கற்றறிந்த மாண்பமை நீதிபதிகளுக்கு இல்லாமல் இருக்காது. அப்படியானால் பொருந்தாக் கருத்தைக் கூற என்ன அழுத்தம் வந்தது  என்று தெரியவில்லை
புதுச்சேரி போன்று ஒன்றியப் பகுதியாக உள்ளவை அந்தமான்-நிக்கோபர் தீவுகள். இதற்கான உயர்நீதி மன்றம், கல்கத்தா உயர்நீதிமன்றம்தான். அப்பொழுது அந்தமான் நிக்கோபார் பெயர் இல்லையே! எவ்வாறு கல்கத்தா உயர்நீதிமன்றப் பணி வரம்பில் வரும் என்று யாரும் கேட்கவில்லையே!  இப்பொழுது மட்டும் ஏன் இந்தச் சிந்தனை?
பம்பாய் உயர்நீதிமன்ற வரம்பில்தான் மகாராட்டிரா மாநிலத்தடன், கோவா, தாத்திரா -நாகர் அவேலி, தமன்-தியூ ஒன்றியப்பகுதிகள் வருகின்றன.
 கெளகாத்தி உயர்நீதி மன்ற வரம்பில்தான் அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம் மாநிலங்கள் உள்ளன. இதனை முறையற்றது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருதவில்லை.     
கேரளா உயர்நீதி மன்ற வரம்பில்தான் இலட்சதீபம் ஒன்றியப்பகுதி வருகிறது. பஞ்சாபு அரியானா உயர்நீதி மன்றவரம்பில்தான் சண்டிகார் ஒன்றியப் பகுதி வருகிறது.
பிற ஒன்றியப்பகுதிகள் ஏதேனும் அருகிலுள்ள மாநில உயர்நீதி மன்றத்தின் வரம்பில் இருந்தாலும் வராத முறையின்மை, புதுச்சேரி ஒன்றியம் அருகிலுள்ள தமிழ்நாட்டில் சேரந்து இருப்பதால் தமிழ்நாடு என்ற பெயர் எப்படி முறையற்றதாக மாறும்?
‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனத் தமிழகச் சட்டப்பேரவையில் மத்திய அரசை வலியுறுத்தி 31.07.2016 இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு என்ன மதிப்பு? அப்போதைய முதல்வர் செயலலிதாதான் இதனை  நிறைவேற்றினார். அவரது ஆட்சியைத் தொடரும் இப்போதைய அதிமுக அரசு அமைதி காக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதராசு உயர்நீதிமன்றம் என்ற பெயரைச் சென்னை உயர்நீதிமன்றம் என்று மாற்ற   2016 ஆம் ஆண்டு சூலை மாதம் அமைச்சரவை  ஒப்புதல் வழங்கியது. இப்போதைய பா.ச.க. அரசுதான் அப்போதும் ஆட்சியில் இருந்தது. “இது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். இனி ஆங்கிலத்திலும் சென்னை என்றே அழைக்கப்படும்” என்று மத்திய அமைச்சர் சதானந்த (கவுடா) தெரிவித்துள்ளார். ஆனால், முழு மனத்துடன் ஒப்புதல்  வழங்கவில்லை போலும். ஏனெனில், திசம்பர் 2016,இல் சட்டத் துணை யமைச்சர் பி.பி.செளத்திரி, “சென்னை, மும்பை, கொல்கத்தா உயர்நீதி மன்றங்களுக்கான பெயர் மாற்றச்சட்டத் திருத்தம் குறித்து உரிய மாநில அரசுகள், உரிய உயர்நீதிமன்றங்கள் கருத்துகளைக் கேட்டு முடிவெடுக்கப்படும். ஆனால், இதற்கான காலக் கெடு எதுவும் விதிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.  இதிலேயே இது கிடப்பில் போடப்படும் எனச்சொல்லாமல் சொல்லியது மத்திய அரசு.
இருப்பினும் அதே ஆட்சியில், 2016 இல், சட்டம் – நீதிக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன்(காங்கிரசு), அறிக்கை அளித்திருந்தார். அதில் 85 ஆவது பரிந்துரையாக அவர், தமிழ்நாடு உயர் நீதிமன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யுமாறு  குறிப்பிட்டுள்ளார். பா.ச.க. அரசிற்கு இதில் உடன்பாடு இல்லை என்பதால், இப்பரிந்துரைக்கு எந்தப்பயனும் இல்லை.
2016இல் மத்திய அரசு உயர்நீதி மன்றத்தின் கருத்து கேட்கப்படும் எனத் தெரிவித்தது அல்லவா? அந்தக் கருத்தைத்தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில் இப்போது தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் சட்டமன்றத்தீர்மானம் இருக்கும் பொழுது மீண்டும் தமிழக அரசின் கருத்து தேவையில்லை.  எனினும் அவ்வாறு கேட்டிருந்தாலும் கேட்காவிட்டாலும், தமிழக அரசு முந்தைய தீர்மானத்தை வலியுறுத்தி உடனடியாக மதராசு உயர்நீதி மன்றத்தின் பெரைத் தமிழ்நாடு-புதுவை உயர்நீதி மன்றம் என மாற்ற வலியுறுத்திப் பெயர் மாற்ற ஆணையைப் பிறப்பிக்கச் செய்ய வேண்டும். புதுச்சேரி மாநிலத்திலிருந்தும் இவ்வாறு மடல் அனுப்பச் செய்ய வேண்டும்.
மிழக மக்கள் அல்லது தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களும்  சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கறிஞர்களும் பன்முறை வலியுறுத்தியுள்ளனர்.
உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றம், அது சார்ந்த மண்ணைப் போற்றும் வகையில் மாநிலத்தின் பெயரில் தமிழ்நாடு என்று அழைக்கப்படுவதுதானே பொருத்தமாக இருக்கும்.
அதற்கேற்ப உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீண்டும் கூடித் தமிழ்நாட்டின்பெயர் அதற்கான உயர்நீதி மன்றத்தில் இருப்பதே நீதியானது என்பதை உணர்த்தும் வகையில் இதனை ஏற்று அறிக்கை அளிக்க வேண்டும்.
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், சத்தீசுகர் உயர் நீதிமன்றம், குசராத்து உயர் நீதிமன்றம், சியார்க்கண்டு உயர் நீதிமன்றம், கருநாடகா உயர் நீதிமன்றம், கேரளா உயர் நீதிமன்றம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், ஒரிசா உயர் நீதிமன்றம், இராசசுதான் உயர் நீதிமன்றம், சிக்கிம் உயர் நீதிமன்றம், உத்தர்காண்டு உயர் நீதிமன்றம் எனப் பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலப் பெயர்களே உயர்நீதி மன்றப் பெயராக இருக்கும்பொழுது தமிழக மக்களும் இதே நீதியை எதிர் பார்ப்பது தவறா?
வாய்ப்புள்ள நேர்வுகளில் – தமிழ்நாடாக இருந்தாலும் வெளி நாடாக இருந்தாலும் தமிழின் பெருமையைத் தலைமை அமைச்சர்கள் முதலானவர்கள் கூறி வருகின்றனர். அவை உள்ளத்தில் இருந்துதான் வருகின்றன என அறியும் வகையில் இவ்வாண்டு முடிவதற்குள்ளாகவே மதராசு உயர்நீதி மன்றத்தின் பெயரை மாற்றியமைத்துத் தமிழ்நாடு-புதுவை உயர்நீதி மன்றம் என அறிவிக்க வேண்டும்.
ஒட்டு மொத்தத் தமிழர்களின் இந்த எதிர்பார்ப்பை அரசுகள் நிறைவேற்றித் தருமா?
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 25.12.2019

Tuesday, December 3, 2019

ஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்!- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

ஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே 

பெண்களின் ஒழுக்கம்!

மதுரையில் பேருந்து நிலையம்-தெப்பக்குளம் வழித்தடப் பேருந்தில், பயணி ஒருவர், எதிர்ப்புறம் அமர்ந்திருந்த பெண் பயணியிடம் அத்துமீறி நடந்து கொண்டார். இது 1970 இற்கு முன்பு நடந்த நிகழ்வு. இந்த வழக்கில்  அவரது முன்வரலாறு நன்றாகத்தான் தெரிவிக்கப்பட்டது. உடலுறுப்புகள் தெரிய பெண் அணிந்திருந்த உடை அவருக்கு ஒரு வகை வெறியை ஏற்படுத்திவிட்டதாகவும் இனி அவ்வாறு செய்ய வில்லை என்றும் அவர் தெரிவித்தார். நீதிபதி,  பொதுவிடங்களில் பெண்கள் கட்டுப்பாட்டுடன் ஆடை அணியவும் அறிவுரை வழங்கினார். இப்பொழுது அவ்வாறு கூறியிருந்தால் போலிப் பெண்ணியவாதிகள் பெண்கள் எப்படி ஆடை அணிந்தால் என்ன என்று கிளர்ந்தெழுந்திருப்பர்.
பாலுறவு ஒழுக்கம் தொடர்பான சில செய்திகள்: சில நேர்வுகளில் பெண்கள் முறை தவறிய உறவுகளில் ஈடுபட்டுக் கணவரைக் கொல்கின்றனர், மாமியார், மாமனார், கொழுந்தனார், நாத்தனார், பிற உறவினர்களை வன்முறையாகவே கொல்கின்றனர். இந்தப் போக்கு தவறானதுதான். எனினும் பெரும்பான்மைக் குற்றங்கள் ஆண்களால்தான் நேர்கின்றன. சிறு குழந்தையின் எந்த உடை அல்லது தோற்றம் ஆணைத் தூண்டியது என்று சொல்ல முடியும்? ஆந்திராவில் கால் நடை மருத்துவர் பிரியங்கா மீது என்ன தவறு சொல்ல முடியும்? திட்டமிட்டு ஊர்திச்சக்கரங்ளைப் பாழ்படுத்தி வண்டியை நிறுத்தச் செய்து வன்முறை உறவும் கொலையும் செய்த ஆண்கள்தானே குற்றவாளிகள். இப்படிப் பல நிகழ்வுகள் ஆண்களின் குற்ற மனப்பான்மையால்தான் நிகழ்கின்றன.
புள்ளிவிவரப்படி பெரும்பான்மையான வன் புணர்வு தெரிந்தவர்களாலேயே நிகழ்கின்றன. பெண்கள் பழகும் முறையும் அணியும் உடையும் பிற தோற்றமும் காரணமாகக் கூறப்படுகின்றன. பெண்கள் களங்கமின்றிப் பழகும் பொழுது தவறான பார்வையும் எண்ணமும் கொண்ட ஆண்கள்தானே குற்றவாளிகள். அவ்வாறிருக்கப் பெண்களைக் குற்றம் சொல்லலாமா?
பொள்ளாச்சியில் காதலனும் நண்பர்கள் ஐவரும் சேர்ந்து 16 அகவைப் பெண்ணைச் சீரழித்துள்ளனரே!
குர்கானில் மிதி யூர்தியில்(ஆட்டோவில்) வந்த தாயைக் கற்பழிதது உடனிருந்த குழந்தையை வெளியே வீசிக் கொன்றுள்ளனரே!
ஆத்தூரில் 9ஆம்வகுப்பு மாணவியைத் தாயின் முன்னிலையில் கற்பழித்துள்ளானே ஒரு காமுகன்! தேனியில் 57 அகவைப் பாட்டியைச் சிலர் கூட்டாக வல்லுறவிற்கு ஆளாக்கியுள்ளனரே!
குசராத்து மாநிலம் இராசகோட்டில் விளையாடிக்கொண்டிருந்த 4 அகவைச் சிறுமியைப் பேத்தியாக எண்ணாமல் ஒருவன் கற்பழித்துள்ளானே!
திருப்பூரில் 4 அகவைச் சிறமிக்குத் தொடர்ந்து பாலியல துன்புறுத்தல் கொடுத்து வந்தானே ஒருவன்!
சேலம் வாழப்பாடியில் கள்ளக்காதலுடன் இருந்த பெண்ணை அறுவர் கூட்டாகச் சிதைத்துள்ளனரே!
தேராடூனில் 11 அகவைச் சிறுவன் 3 அகவைச்சிறுமியைக் கற்பழித்துள்ளான்!
வேலியே பயிரை மேயும் நிகழ்வுகளும் பல உண்டு. வல்லுறவு வழக்குகளில் காவலரும் தங்கள் பங்கிற்குக் கைவரிசையைக் காட்டியுள்ளனர். காவலர் மட்டுமல்லர்.  நாட்டைக்காப்பதால் போற்றப்படும்   படைவீரர்களின் கற்பழிப்புச் செய்திகள் அவ்வப்பொழுது வந்துகொண்டுதான் உள்ளன. போரினால் பாதிப்புறும் நாடுகளில் படைவீரர்களால்தானே பெருமபான்மை வல்லுறவுகள் நிகழ்கின்றன.
தம்மிடம் பயிலும் மாணவிகளிடமும் தங்களின் கீழ்ப் பணியாற்றும் பெண்களிடமும் மிரட்டியும் ஆசை காட்டியும் ஏமாற்றும் ஆண்களும் மிகுதியாக உள்ளனர். தன் தாயிடம் பயிலும் மாணவிகளை ஏமாற்றிச் சிதைத்துச் சிறை வாழ்க்கை வாழ்ந்த நடிகரை முந்தைய தலைமுறையினர் அறிவர். இறையன்பை வஞ்சகமாகப் பயன்படுத்திப் பெண்களைச்சிதைக்கும் சாமியார்கள், பூசாரிகள் செயல்களும் அவ்வப்பொழுது வந்துகொண்டுதான் உள்ளன. இப்போதைய அறிவியலையும் தங்கள் குற்றங்களுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஒரு முறை வல்லுறவு மேற்கொண்டு, அதனைக் கைப்பேசியில் படம் எடுத்து அதைக் காட்டி மிரட்டியே மீண்டும் மீண்டும் வல்லுறவில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். ஏனெனில், 2017இல் மட்டும் இந்தியாவில் நிகழ்ந்த பாலியல் குற்றங்கள் 3,50,000 ஆகும். இந்த விவரம் தேசியக் குற்றப் பதிவு பணியகம் தெரிவித்தது. பதிவாகாத வழக்குகள் மேலும் பல நூறாயிரம் இருக்கும்.
இவற்றிற்கெல்லாம் காரணம் பெண்களின் கட்டுப்பாடின்மையா? ஆண்களின் கட்டுப்பாடின்மையா? ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒளவையார் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
சங்ககாலப் புலவர் ஒளவையார் பாடிய பாடல்கள் 59. இவை, எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில்  உள்ளன. இவற்றுள் புறநானூற்றில் இடம் பெறும் 187 ஆவது எளிய பாடலே நாம் பார்க்கப் போவது. இப்பாடல் பொதுவியல் திணையைச் சேர்ந்தது. எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது. துறை: பொருண்மொழிக் காஞ்சி. உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுவது. நாட்டினது இயல்பு அங்கு வாழும் மக்களின் இயல்பைப் பொறுத்தது; ஆடவரது ஒழுக்கமே உலக மேம்பாட்டிற்கு அடிப்படை  என இதன்மூலம் ஒளவையார் வலியுறுத்தி யுள்ளார்.
நாடா கொன்றோ, காடா கொன்றோ,
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை; வாழிய நிலனே! (புறநானூறு 187)
கொன்றோ – ஆக ஒன்றோ ; அவல் = பள்ளம்; மிசை = மேடு.
நாடு, காடு, அவல், மிசை என்பவை முறையே மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி நிலப்பகுதிகளைக் குறிக்கும்.
நாடானால் என்ன, காடானால் என்ன? மேடானால் என்ன, பள்ளமானால் என்ன? எங்கெல்லாம் ஆண்கள் நல்லவர்களாக விளங்குகின்றனரோ, அங்கெல்லாம் நிலமே, நீயும் நன்றாக விளங்குவாய்”  என்கிறார் ஒளவையார்.
உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி, “எவ்விடத்து நல்லர் ஆண்மக்கள் அவ்விடத்து நீயும் நல்லை யல்லது நினக்கென ஒரு நலமும் உடையை யல்லை வாழி” என விளக்குகிறார்.
ஆண்கள் தங்கள் உழைப்பால், நிலத்தைச் செப்பனிட்டு, வேளாண்மையைச் சிறக்கச் செய்து வளமான வாழ்விற்கு வழிகாட்டுவர். எனவே, ஒளவையார் ஆடவர் என ஆண்களைத்தான் குறிப்பதாகப் பலர் கூறுவர். இல்லை! பொதுவான மக்கள் உழைப்பால்தான் வளம் சிறக்கிறது. எனவே, ஆடவர் என்பது மக்களைக் குறிப்பதே; மக்களைப் பொறுத்ததே அப்பகுதியின் வாழ்வும் தாழ்வும்  என்றும் சிலர் கூறுவர்.
சிலர் ஆடவர் என்பது ஆட்சியாளரைக் குறிப்பது. ஆட்சியாளர் நல்லாட்சி தந்தால் மக்களும் நலமாகவும் வளமாகவும் வாழ்வர் என்கின்றனர். இவையும் பொருந்தி வரக்கூடியனவே. எனினும் பெண்களில் ஒழுக்கம் என்பது ஆண்களின் ஒழுக்கத்தைப் பொறுத்தது என்பதே மிகச் சரியாகும்.
பாலி மொழியிலான தம்மபதத்திலுள்ள பாடல் ஒன்றினுடனும் வடஇந்திய-ஆரியமொழிகளின் தாயாகக் கருதப்படும் அபபிரம்சா மொழிப்பாடல் ஒன்றிடனும் ஒப்பிட்டு அறிஞர் தெ.பொ.மீ., அறிஞர் செ.வை.சண்முகனார் கூறுகின்றனர். சரியான கால ஆராய்ச்சி நடை பெற்றது என்றால் ஒளவையார் பாடலே மூத்தது என மெய்ப்பிக்கப்படலாம். ஒவையார் நமக்கு உணர்த்துவதுதான் ஆடவர் நல்லவராக இருந்தால் உலகமும் நல்லதாக இருக்கும் என்பது!
இதற்குத் தொன்மைக் கதைகள் அடிப்படையில் விளக்கம் காணலாம். பதவி வெறி பிடித்த இந்திரன், தன்பதவி பறிபோகுமோ என்ற அச்சத்தில் விசுவாமித்திரர் தவத்தைக் கலைக்க மேனகையை அனுப்பினான். பொதுவாக வானுலக அரம்பரையர் அங்குள்ள கந்தர்வர்களின் மனைவியர். அப்படி என்றால் இவள் திருமணமானவள். இவள் தவத்தைக் கலைத்த பின்னர் விசுவாமித்திரர் இவளையே திருமணம் செய்து கொண்டார். (இருவருக்கும் பிறந்தவள்தான் சகுந்தலை.) எனினும் அவளுக்குச் சாவம் – சாபம் இட்டார்.
விசுவாமித்திரர் கட்டுப்பாட்டுடன் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. அல்லது இந்திரன் பதவி வெறிக்காகத் தரங்கெட்ட நிலைக்கு இறங்கி மேனகையை அனுப்பாமலிருந்தாலும் இந்த நிலை வந்திருக்காது. எனவே, ஆடவர் நல்லவராக இருந்தால் பெண்டிரும் நல்லவராக இருப்பர்.
கெளதம் முனிவரின் மனைவி அகலிகையிடம் கெளதம் முனிவர் வேடத்தில் உறவு கொண்டவன் இந்திரன். அவன் தன் கணவன் அல்ல என்று தெரிந்த பின்னரும் உறவைத் தொடர்ந்தவள் அகலிகை. கெளதம முனிவருக்கு இது தெரிந்த பின்னர் அவள் கல்லாக மாற்றப்பட்டாள். ஆடவனான இந்திரன் ஒழுக்கமாகவும் கட்டுப்பாடாகவும் இருந்திருந்தால் அகலிகை தவறுக்கு ஆளாக நேர்ந்திருக்காது; கல்லாகவும் மாறியிருக்க மாட்டாள். எனவே, உண்மை நிகழ்வுகளும் தொன்மக் கதைகளும் ஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்தே பெண்களின் ஒழுக்கம் உள்ளதை மெய்ப்பிக்கின்றன எனலாம். இருப்பினும், பெண்களுக்குத் தற்காத்துக் கொள்ளும் கடமை உணர்வும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய பொறுப்புணர்வும் உள்ளன.
ஆண்மை என்பது பெண்மையைத் தவறாகவோ வன்முறையிலோ துய்ப்பது அன்று. பெண்மையைக் காப்பதே ஆண்மை! பெண்மையைப் பேணலே ஆண்மை! பெண்மையைப் போற்றலே ஆண்மை! இக்கருத்து ஆண்கள் உள்ளங்களில் விதைக்கப்பட வேண்டும்.
பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை! என்பான்  பாரதி.
  • இலக்குவனார் திருவள்ளுவன், தொடர்புக்கு:thiru2050@gmail.com
தினச்செய்தி 04.12.2019

Followers

Blog Archive