Monday, August 21, 2017

இன்றைய தேவை குறுஞ்சொற்களே! . இலக்குவனார் திருவள்ளுவன்




இன்றைய தேவை குறுஞ்சொற்களே!

  ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக்’ கலைச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு பான்மை கூட்டுச்சொற்களாக அமைகின்றன. சொலலாக்கம் கூடியவரை தனிச்சொற்களாக அமைக்கப்பட வேண்டும். இவையும் மூன்று அல்லது நான்கு எழுத்துகளுக்கு உட்பட்டக் குறுஞ்சொற்களாய் இருத்தல் வேண்டும்.  நெடுஞ்சொல் அஞ்சி அயல்மொழியிலுள்ள குறுஞ்சொல்லையே எடுத்தாளக் கூடாது என வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
எளிமையும் வழமையும்
  அயற்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை உருவாக்குகையில் பெரும்பாலானவை பொருள் விளக்கமாக அமைகின்றன. இதனால் வினைவடிவம், பெயர் வடிவம் போன்று வெவ்வேறு சொல்வடிவங்களில் இதுபோன்ற சொற்களைக் கையாளுகையில் இடர்ப்பாடு ஏற்படுகின்றது. இதுபொல் முன்னொட்டு அல்லது பின்னொட்டு சேர்க்க வேண்டிய நேர்வுகளிலும் கூட்டுச்சொற்கள் உருவாக்க வேண்டிய நேர்வுகளிலும் சொல் மறைந்து தொடரே ஆட்சி செய்கின்றது. ஏழெழுத்துகளுக்கு மேல்சொற்கள் இல்லாத தமிழ்மொழியில் ஈரெழுத்து மூவெழுத்துச்சொற்கள் அடிப்படைச் சொற்களாய் அமைந்துள்ள தமிழ்மொழியில் உருவாக்கப்படும் தொடர் சொற்கள் உரிய பயன்பாட்டை இழந்து விடுகின்றன. தமிழில் சுருக்கமாகக் கூறமுடியவில்லை. விளக்கமாகவே கூற வேண்டியுள்ளது. எனவே சுருக்கமான அயற்சொல்லே வழக்கத்தின் காரணமாக எளிதாக உள்ளது எனப் பலர் கூறுவதால் எளிமை, வழமை என்னும் போர்வைகளில் அயற்சொற்களே நிலைத்துவிடுகின்றன.
சொல்லாக்க நெறிமுறைகள்
  எந்த ஒரு சொல்லும் தான் பயன்படும் இடத்திற்கேற்ப உள்ள பொருளைச் சுமந்து செல்லும் ஊர்திதான். எனவே, (மூலச்)சொல்லுக்கு நேரான(பெயர்ப்புச்) சொல்லை அமைக்காமல் (மூலப்)பொருளுக்கு ஏற்ற(பெயர்ப்புச்)சொல்லையே ஆக்க வேண்டும். சொல் செறிவாயும் செவ்விதாயும் இருத்தல் வேண்டும். பண்பாட்டுப்பின்னணியைக் கருத்தில் கொண்டு ஆக்கப்பெற வேண்டும். ‘குன்றக்கூறல்’ முதலான நூல் குற்றங்கள் பத்தும் ‘சுருங்கச் சொல்லல்’ முதலான நூல் அழகுகள் பத்தும் சொல்லுக்கும் மிகப்  பொருந்தும்.
சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லும் தன்மை யறிந்து
எனும் திருக்குறளை நினைந்து தக்க சொல்லைத் தெரிவு செய்ய வேண்டும். அயற் சொல் கலப்பை அறவே நீக்க வேண்டும். உரிய சொல் கண்டறியும் இடை நேரத்தில் அயற் சொல்லைப் பயன்படுத்த வேண்டிய தவிர்க்க இயலா நேர்வுகளில்  பெயர்ப்பு மொழியின் வரிவடிவிலேயே எழுத வேண்டும். இவைபோன்ற நெறிமுறைகள் குறித்து ஈண்டு ஆராயாமல் தலைப்பு குறித்தே காணப்போகின்றோம்.
சொல்லின் பயன்பாடு
  பயன்பாடு இல்லாத சொல் இருந்து பயன் என்ன? நாம் கலைச்சொற்களை உருவாக்குவதன் நோக்கம் அவை அயற்சொற்களை யகற்றி அல்லது அயற்சொற்களுக்கு இடந்தராமல் நின்று நிலைத்துப் பொருள்  தர வேண்டும் என்பதுதான். அதைக் கருத்தில் கொண்டு எளிய பயன்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் சொல்லாக்கத்தில் ஈடுபடவேண்டும்.
  1938இல் சென்னைமாகாணத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ள கலைச்சொல் பட்டியில்கூட, வெடியம்(நைட்டிரசன்), நீறியம்(கால்சியம்), நிறமியம்(குரொமியம்), பசியம்(குளொரின்) முதலான தனிக்குறுஞ்சொற்கள் இருந்துள்ளன. ஆனால், நாம் இப்போது உருவாக்கும் சொற்கள் பல சுருங்கிய வடிவில் அமையாதது ஏன்? அயற்சொல் தமிழ் ஆக்கப்படும்பொழுது சொல்லுக்கு நேரான பொருளை உணர்த்தும் சொல்லைக் குறிப்பிடுவதில்லை. சொல்உணர்த்தும்பொருள் விளக்கத்தை அல்லது அதன் பயன்பாட்டுப் பொருளைக் கூட்டுச்சொற்களாகப் படைத்து விடுகின்றனர். எடுத்துக்காட்டு காண்போம்.
  • caliper – முடம் நீக்க உதவும் சாதனம்
இவ்வாறு சொற்சேர்க்கையைப்பயன்படுத்துவதை விட ஆங்கில ஒற்றைச்சொல்லே எளிமையாக உள்ளது என மக்கள் அதனைத்தான் பயன்படுத்துகின்றனர்.
 முடம் நீக்க உதவும்  கருவிகள் அல்லது பொருள்கள் பல உள்ளன. (காலிபர் என்பதற்கும் வெவ்வேறு பொருள்கள் உள்ளன. இருப்பினும்) இந்த இடத்தில் caliper(calliper) மட்டுமே இவ்வாறான பொருளாகக் குறிக்கப்படுவது பொருந்தாது. மேலும் சில நேர்வுகளில் குறுங்காலம் இதனைப் பயன்படுத்துவதன் மூலம் முடம் நீங்கலாம். பல நேர்வுகளில் அதன் துணை கொண்டு நடக்கவே இயலும்.  எனவே, பயன்பாட்டுப்பொருளும் முழுமையாய் அமையவில்லை. காலூன்றி நடக்க உதவும்கோலை ‘ஊன்றுகோல்’ என்பதுபோல் காலணியுடன் இணைத்துக் காலில் அணிந்து காலூன்றி நடக்கப் பயன்படும் இதனை ‘ஊன்றணி’ எனலாம்.
caliper ஊன்றணி
(தொடரும்)
. இலக்குவனார் திருவள்ளுவன்
எட்டாவது உலக தமிழ் மாநாடு , 1995,
 தஞ்சாவூர், தமிழ்நாடு

Sunday, August 20, 2017

தினகரன் நிழல் அமைச்சரவை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்




தினகரன் நிழல்  அமைச்சரவை அமைக்கட்டும்!


   ‘‘எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை’’ என அதிமுக தலைவர்கள் கூறினாலும் அதிமுகவைத் தடுமாற்றத்தில் தள்ளி இயக்கிக்கொண்டிருப்பது பாசக தலைவர்கள்தாம் என்பது அனைவரும் அறிந்ததே! ஆளுங்கட்சிக்கு இணையான வலிமை உடைய எதிர்க்கட்சித்தலைவரைக்கூடச் சந்திக்காத தலைமையர் நரேந்திரர்(மோடி), பத்துபேர் கூட இல்லாத  சிறு பிரிவின் தலைவரை அடிக்கடி சந்திப்பதன்  காரணமும் இதுதானே!  வேளாண்மை நாட்டின் தலைவக இருந்து கொண்டு  வாழ்வாதாரத்திற்காகப் போராடும் வேளாண்குடிப் பெருமக்களைச் சந்திக்க மறுத்துவிட்டுப் பதவிகளுக்காகப் போராடுபவர்களைச் சந்திப்பதன் காரணமும் என்ன? அதிமுகவில் பிளவை உணடாக்க மேற்கொண்ட முயற்சிகள் சலசலப்பை உருவாக்கினாலும் எதிர்பார்த்த பிளவு வராமையால் அதை எப்படியும் நிறைவேற்றித் தமிழ்நாட்டை இந்துவெறி, இந்தி நாடாக மாற்ற வேண்டும் என்பதுதானே!
  செயலலிதா மருத்துவமனையில் இருந்த பொழுதும் இறந்த பொழுதும் இல்லாத  சசிகலா குடும்ப எதிர்ப்பு உறுதி திடீரென்று முளைத்ததன் காரணம் என்ன? அதிகார வலிமையால், குறுக்கு வழிகளில் மிரட்டப்படுவதும் இணங்கினால் தரப்படுவதாகக் கூறப்படும் பதவி நலங்களும் பிற வளங்களும்தானே!
  அதிமுக இயல்பாகக் கரைந்தால் ஒன்றும் தீமையில்லை. ஏனெனில், அதில் தமிழ் உணர்வாளர்கள் இருந்தாலும் அக்கட்சி ஒன்றும் தமிழ்நலன் சார்ந்து இயங்கும் கட்சியில்லை. (முதன்மைக்கட்சிகள் யாவுமே இவ்வாறுதான்  உள்ளமையால், இதைமட்டும் குறைகூறிப் பயனில்லைதான்.) ஆனால், வஞ்சக வலையில் சிக்கிச் சீரழிவது அக்கட்சிக்கு மட்டுமல்ல நாட்டிற்கும் நல்லதல்ல. எனவேதான் நாம் இதனை எதிர்க்க  வேண்டியுள்ளது.
  அதிமுகவில் பெரும்பான்மையர் தன் பின்னால் உள்ளதாகப் பன்னீர்செல்வம் கூறினாலும் அஃது உண்மையில்லை என்பதை இப்பொழுது் உணர்ந்திருப்பார். அவர் தொகுதி மக்கள் நடத்திய  குடிநீர்க்கிணற்றுக் காப்புப் போராட்டமும் இதை உறுதிசெய்கின்றது. என்னதான் பாசக  பின்னணியால் வலிமையாக  இருப்பதாகக் காட்டினாலும் அது நிலைக்காது.
 அதே போல், எடப்பாடி பழனிச்சாமி பாசகவின் துணையுடன் தன்பக்கம் அமைச்சர்களை ஈர்த்து வைத்திருந்தாலும் அதுவும் நிலைக்காது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள நினைப்பவர்களும்  காற்று அடிக்கும் திசையில் மாறிச் செல்வர்.
  வேறு வழியின்றித் தங்களை  உயரத்தில் ஏற்றியவர்களையே எதிர்க்கும் இவர்கள், மனம்மாறி கட்சி நலன் குறித்து எண்ணப்போவதில்லை.
  இன்றைய நிலையில் தொண்டர்கள் தினகரன் பக்கம் இருக்கிறார்கள். மேலூரில் அவர் நடத்திய கூட்டமே அதற்குச் சான்று.  பணம் கொடுத்துத் திரட்டியதாகச் சிலர் கூறுகின்றனர். இதுதான் இன்றைய கூட்ட இலக்கணம் என்றான பின்னர் அவ்வாறு கூறிப் பயனில்லை. மேலும், அவ்வாறுதான் பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டத்தைத் திரட்டமுயன்று இயலாமல் போயுள்ளது.
 எனவே, தினகரன் தன் முயற்சியில் வெற்றி பெற்றுக் கட்சியைக் காப்பாற்ற வேண்டுமெனில்,  அரசைக் கலைப்பார் என்ற அச்சத்தில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை விடுவிக்க வேண்டும். எந்த அளவிற்கு அச்சம் வருகிறதோ அந்த அளவிற்கு அவர் பாசகவின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்.  தரையளவு வீழந்து பணிந்து வாழ்ந்தவர்களுக்கு அதற்கும் கீழேயும் வீழ்வது ஒன்றும் இயலாததல்ல. எனவே, கவிழ்ப்பு அச்சத்திலிருந்து விடுவிக்கும் வகைகளில் தினகரன் செயல்பாடு இருக்க வேண்டும்.
  அதேநேரம், கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற நிழல் அமைச்சரவை அமைக்க வேண்டும்.
  பொதுவாக நிழல் அமைச்சரவை எதிர்க்கட்சியினரால் அமைக்கப்படும். இப்பொழுது அவரை எதிரர் ஆக அரசு எண்ணுவதால்,  நிழல் அமைச்சரவை அமைக்கலாம்.
  நிழல் பேரவை என்ற பெயரில் இதனை அமைத்து அதன் ஒருங்கிணைப்பாளராக இருக்க வேண்டும். துறைவாரியான நிழல் அமைச்சர்களையும் மாவட்ட வாரியான நிழல் அமைச்சர்களையும்  அமர்த்தி நாட்டுப்பணியில் கருத்து செலுத்த வேண்டும். இதில் பங்கேற்க விரும்பும்  கட்சி சாராதவர்களையும் இதில் இணைக்கலாம்.
 நிழல் பேரவையினர்,  அதிகார மமதையில் செயல்படக்கூடாது என்றும் மக்கள் தொண்டர்களாகத்தான் செயல்பட வேண்டும்என்றும் அறிவுறுத்தி அவ்வாறு செயல்படவேண்டும்.
அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்க உதவ வேண்டும்.
கட்சி  சார்பான  ஏசல்களையும் அவதூறுகளையும் தவிர்க்க வேண்டும்.
தேர்தல் நேரத்தில் தங்கள் பணிகளைக் கூறிக்கொள்ளலாமே தவிர,நிழல் பேரவையில் செயல்படும் பொழுது் அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடக்கூடாது.
தமிழ்க்காப்பு, தமிழ்வழிக்கல்வி, தமிழ்வழி இறைவழிபாடு எனத் தமிழ்நலன்சார்ந்த பரப்புரைகளிலும் பேரவை ஈடுபட வேண்டும்.
  அவரோ கட்சிப் பொறுப்பாளர்களோ கட்சிப்பணிகளில் ஈடுபட இப்பணிகள் தடையாக இருக்கா.  அதே நேரம் மக்கள் பணியால் கட்சி மேலும் இவர் தலைமையில் வலிவு பெறும்.
  இதனால் அரசின் நலத்திட்டங்கள் விரைவில் மக்களுக்குப் பயனளிக்கும்; ஊழல்கள் தடுக்கப்படும்; அதிமுகவின் அரசிற்கு நல்ல பெயர் கிட்டும். இதற்குக் காரணமான தினகரன் போற்றப்பட்டுத் தன் கனவை விரைவில் நிறைவேற்ற இயலும்.
  அரசை ஆட்டுவிக்கும்  அதிகாரச் செல்வாக்கில் இருந்த பொழுது  செய்யத்தவறிய இலவச உயர் கல்வி, இலவச மருத்துவ உதவி, வேலைவாய்ப்புப் பெருக்கம் போன்றவற்றிலும் கருத்து செலுத்த வேண்டும்.
  அவரிடமும் கட்சியினரிடமும் இருக்கும் செல்வத்தில் இதனை ஆற்ற  இயலும். இவ்வாறு தொடர்ந்து ஈடுபட்டால் மக்களும் உதவுவர்.
  எனவே, அதிமுகவின் துணைப்பொதுச்செயலர் தினகரன் நிழல் பேரவையை உருவாக்கி மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
     கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
    தூக்கங் கடிந்து செயல். (திருவள்ளுவர், திருக்குறள் 668)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை :  அகரமுதல 200, ஆவணி 04, 2048  / ஆகத்து 20, 2017

 

ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் – இலக்குவனார் திருவள்ளுவன்




ஒரு சொல்-பல் பொருள்,

கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல்

1/3
  ஒரே பொருளைச் சுட்டும் பல்வேறு சொற்களும்  பல்வேறு பொருள்களை உணர்த்தும் ஒரே சொல்லும் உள்ள நிலைமை அனைத்து மொழிகளிலும் காணப்பெறும் இயல்புதான்.  இந்நிலைமையைத் தமிழிலும் மிகுதியாய்க்; காண்கிறோம். இடத்திற்குத் தகுந்தாற்போல் பொருளை உணரும் நிலை வெளிப்படையாய் இருப்பின் குறையொன்றும்  இல்லைதான். ஆனால், அதே நேரத்தில் பொருளை உணரும் இடர்ப்பாடு இருப்பின் சொற்களஞ்சியத்தை வளப்படுத்த வேண்டியது இன்றியமையாதது அல்லவா?
  ஒரு சொல்-பல்பொருள் என்ற நிலைமை கலைச்சொற்களைப் பொருத்தவரை தவிர்க்கப்பட்டாக  வேண்டும். கலைச்சொற்கள் குழப்பமின்றித் தாம் உணர்த்தும் பொருட்களை வெளிப்படுத்துவனவாக இருக்க வேண்டும்.
 ஒரு பொருளை ஒவ்வொருவர் ஒவ்வொரு சொல்லில் கையாளுவதும் ஒரே சொல்லைப் பல்வேறு பொருள்களில் வழங்கிவருவதும் இன்றைய தமிழ்உலகின் நிலைமையாய் உள்ளது. இதனால் ஏற்படும் இடர்ப்பாடுகளை உணர்ந்து தேக்க நிலையை நீக்க  வேண்டும்.
  சொல்லாக்க வல்லுநர்களும் மொழியியல், கலையியல், அறிவியல் அறிஞர்களும் ஒன்றுகூடிப் பல்வேறு சொல்லில் வழங்கும் ஒரே சொல்லுக்கு மாறாக வெவ்வேறு சொற்களைக் காணுதல் வேண்டும். இவற்றை  உலகறியச் செய்து மேலும் திருத்தமும் செம்மையும் அடைந்தபின் கலைச்சொல் பயன்பாட்டில் சீர்மை நிலையை உருவாக்க வேண்டும்.
  இது குறித்த இன்றைய நிலையையும் இருக்க வேண்டிய கலைச்சொல் வளமையையும் சில எடுத்துக்காட்டுகள் மூலம் நாம் காண்போம்.
Police, Security, Warden, Warder போன்ற பல சொற்களுக்கும் பொதுவாக நாம் காவலர் என்ற சொல்லையே கையாண்டு வருகிறோம். அதனால் குழப்பம் ஏற்படுவது கண்கூடு. மாறாக நாம் காவல் என்ற அடிப்படையில் வெவ்வேறு சொற்களை உருவாக்கினால் குழப்பம் நீங்குவது உறுதி.
Police காவலர்
Warder அரணாளர்
Warden பேணாளர்
Guard காப்பாளர்
Guardian ஓம்புநர்
Security பாதுகாக்குநர்
Gate-keeper வாயிற் காப்போர்
Watchman காவலாள், காவலாளி
இவ்வாறாக நாம் வகைப்படுத்திக் கொண்டால், காவலர், சிறைக்காவலர், விடுதிக்காவலர், ஊர்க்காவலர், பாதுகாவலர் என  இணைச்சொற்களைப் பயன்படுத்துவதைவிட எளிமையும் சொற்சிக்கனமும் இருக்கும் அல்லவா?
Police என்பது துறையைக் குறிக்கையில் காவல் என்கிறோம்.
Inspector General of Police என்றால் காவல் துறைத்தலைவர் என்கிறோம். ஆனால், Head of the Department என்பதற்குத் துறைத்தலைவர் என வழங்கிவருவதுதான் பொருத்தமாக உள்ளது.
I.G. என்பவர் துறைத்தலைவராக இருப்பினும் துறைத்தலைவர் என்பது பதவி நிலையைக்குறிப்பதாக அமையாது. எனவே,
Inspector General ஆய்வுத் தலைவர்
Inspector General of Police காவல் ஆய்வுத் தலைவர்
Inspector General of Prison சிறை ஆய்வுத் தலைவர்
Inspector General of Registration பதிவு ஆய்வுத் தலைவர
என்று வருவது பொருத்தமாக இருக்கும்.
இவை போல்
Director General of Police –  காவல்துறைத் தலைமை இயக்குநர் என்கிறோம்.
ஒன்றுக்கு மேற்பட்ட இயக்குநர் இருந்து ஒருவர் தலைமைப்பொறுப்பில் இருந்தால், அவரைத் தலைமை இயக்குநர் என்பது பொருததமாக இருக்கும். இங்கு அவ்வாறு இல்லை. எனவே,
Director General நெறித் தலைவர்
Director General of Police காவல் நெறித்தலைவர் (ஆய்வுத் தலைவரையும் நெறிப்படுத்துபவர்)
Director General of Prison சிறை நெறித் தலைவர
Director General of Registration பதிவு நெறித் தலைவர்
என்பனபோல் உருவாக்குவது சிறப்பாக இருக்கும் அல்லவா?
(தொடரும்)
. இலக்குவனார் திருவள்ளுவன்
ஆறாவது உலக தமிழ் மாநாட்டில் அளிக்கப் பெற்ற கட்டுரை, கோலாலம்பூர், மலேசியா

Followers

Blog Archive