Thursday, March 31, 2011

andre' sonnaargal 43 - buildings 3 :அன்றே சொன்னார்கள்- கட்டடங்கள் 3

>>அன்றே சொன்னார்கள்43

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3

                                                                                                                

natpu

பழந்தமிழர்கள், மாடம் என்று பலமாடிக் கட்டடங்களையே குறித்துள்ளனர். மிகுதியாக மாடிகளைக் கொண்ட கட்டடங்கள் நெடுநிலை மாடங்கள் எனப்பட்டன. பொதுவாக 7 மாடிக்கட்டங்கள் இருந்துள்ளன.  இவற்றுள் தரைத்தளம் பொதுவாகவும் பிற பருவச் சூழல்களுக்கேற்ப வெம்மை தாங்குவன, தென்றல் வீசுவன, என்பன போன்றும் இருந்திருக்கின்றன.
 
 இளங்கோ அடிகள் அவர்கள் கோவலன், கண்ணகி ஆகிய இருவரும் நெடுநிலை மாடத்து இடைநிலத்து  இருந்துழி (இருந்த பொழுது) எவ்வாறு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர் எனக் குறிப்பிடுகிறார் (சிலப்பதிகாரம் : 1:2: 13). அஃதாவது 7 நிலைகளை உடைய மாளிகையின் இடைப்பகுதியான 4 ஆம் நிலையில் இருந்துள்ளதாக உரையாசிரியர்கள் விளக்கி உள்ளனர். இவற்றுள் மொட்டைமாடி என்று இப்பொழுது நம்மால் அழைக்கப்படும் மேலே உள்ள திறந்த வெளிப்பகுதிகள் முகில் கூட்டம் தவழும் வண்ணமும் நிலா ஒளியில் மகிழும் வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளன. நிரைநிலை மாடம் என்றும் அரமியமான சூழலைத் தருவதால் அரமியம் என்றும் பொது வழக்கில் நிலா முற்றம் என்றும் அழைத்துள்ளனர். நான்காம் மாடத்திலிருந்து நிரைநிலை மாடத்திற்கு அவ்விருவரும் சென்றதையும் இளங்கோ அடிகள்
விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும்
நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி   (சிலப்பதிகாரம் : 1:2: 26-27)
மகிழ்ந்ததாக விளக்குகிறார். (விரை மலர் - மணம் வீசும் மலர்; வாளி-அம்பு;  வேனில் வீற்றிருக்கும் - மலர்க்கணையை உடைய  அழகன் (மன்மதன்) இருக்கும் ; அரமியம் - காதல் உணர்விற்கு உரிய அழகிய சூழல் உடைய நிலா முற்றம்)

தாய், தன் மகளும் மருமகனும் வர இருப்பதால், தன் வீட்டின் அலங்கரிக்கும் சிறப்புடைய மாண்புற்ற புறச்சுவரில் செம்மண் பூசினாள்; இல்லத்தின் முன் பக்கத்தில் மணலைப் பரப்பச் செய்தாள்; மாலைகளை வீட்டில் தொங்க விடச் செய்தாள்; மகிழ்வுடன் எதிர்பார்த்திருந்தாள் எனக் கூறும் புலவர் கயமனார்,
புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி
மனைமணல் அடுத்து மாலை  நாற்றி
உவந்து இனிது அயரும்  (அகநானூறு: 195.4 )
என விளக்குகிறார்.

natpu

இப்புலவரைப் போல், வீட்டுச் சுவர்களுக்கு வண்ணம் பூசப்பட்டிருக்கும் என்பதைப் புலவர்  ஆலங்குடி வங்கனார்,  பூவல் படுவில் (புறநானூறு 319.1) என்றும் இளங்கோ அடிகள் பூவல்ஊட்டிய புனைமாண் (சிலப்பதிகாரம் : 16: 5) என்றும் சோழன் நல்லுருத்திரன் இல் பூவல்ஊட்டி (கலித்தொகை : 114) என்றும் கூறுகின்றனர்.

மனை பற்றிய குறிப்புகள் சிலவற்றை முன்பு கண்டோம்.  மேலும் பல புலவர்கள் மனைகள், மாளிகைகள், இல்லங்கள் முதலானவை குறித்துக் குறிப்பிட்டுள்ளனர்.

மனைகள் குறித்தும் மனையில் நடத்தப்பெறும் மணவினைகள், இல்லறம் குறித்தும் புலவர்கள் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (மண மனை கமழும் கானம்-அகநானூறு: 107.21), வேம்பற்றூர்க் குமரனார் (மனைஒழிந்திருத்தல் -அகநானூறு: 157.14), கயமனார் (மனைமருண்டு இருந்த -அகநானூறு: 189.12), மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் (மனை புறந்தருதி-அகநானூறு: 230.8; இம்மனைக் கிழமை மனையறம்- அகநானூறு 230.9), மதுரை மருதனிளநாகானர் (மனைவலித்து ஒழியும் மதுகையள்-அகநானூறு 245.3; அல்குமனை வரைப்பில் -அகநானூறு 245.9), பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் (மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து -அகநானூறு: 373.2), ஆசிரியர் புலவர் உருத்திரங்கண்ணனார் (மனை சேர்த்திய வல்லணங்கு - பட்டினப்பாலை: 87), ஆசிரியர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் (மகமுறை படுப்ப மனைதொறும் பெறுகுவிர் -மலைபடுகடாம்: 185), புலவர் இளங்கீரனார் (மனைமாண் சுடர் - நற்றிணை 3.9), புலவர் சாத்தந்தையார் (தாய்மனை - 26.4), புலவர்  பிரமசாரி (வெறிமனை-நற்றிணை 34.9), புலவர்  ஓரம்போகியார் (மனைமடி துயிலே - நற்றிணை 360.11)  ஆகியோரும் குறிப்பிட்டுள்ளனர். இவற்றின் மூலம் வீடுகள் வெவ்வேறு வகைகளில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள கட்டடச் சிறப்புகளையும் காவல் சிறப்பையும் பிற சிறப்புகளையும் அறிய முடிகிறது.
நுண்ணிய முள்வேலியைச் சிறப்பாக அமைத்து அருமையான காவலை உடைய மாளிகை குறித்துப் புலவர்  தும்பி சேர் கீரனார்
மனைஉறக் காக்கும் மாண்பெரும் கிடக்கை
நுண்முள்வேலி (நற்றிணை 277.5-6) எனக் குறிப்பிடுகின்றார்.

அருமன் என்பவனின் புகழ்மிகுந்த சிறுகுடி என்னும் ஊரில் தொன்மையான வீடுகள் பல இருந்தன எனப் புலவர் நக்கீரர்
மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி (நற்றிணை 367.6)
என்னும் வரியில் விளக்குகிறார்.

இவ்வாறு  வீட்டுக்கட்டடங்கள் அமைந்த சிறப்புகளைத் தொடர்ந்தும் காண்போம்.

 - இலக்குவனார் திருவள்ளுவன்


Wednesday, March 30, 2011

andre; sonnaargal 42: building types 2: அன்றே சொன்னார்கள் 42 : கட்டட வகைகள் -2

அன்றே   சொன்னார்கள் 42 : 

>>அன்றே சொன்னார்கள் 42


கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -2

                                                                                                                

natpu
பல்வேறு வகையான வீடுகள் இருந்தமையை முதலில் பார்த்தோம். சிறந்த நகர அமைப்பும் உயர்ந்த ஊரமைப்பும் கொண்டிருந்த நகரங்களிலும் ஊர்களிலும் அமைந்த வீடுகள் வளமை மிகுந்ததாகவும் நன்முறையிலும் இருந்தமை பல பாடல்கள் மூலம் தெரியவருகின்றன.

பொதுவாக மனை என்பது வீட்டையும் வீட்டின் முன்புறம் உள்ள முற்றம், பின்புறம் உள்ள கொல்லை, சுற்றி உள்ள தோட்டம் ஆகியவற்றையும் இவ்வீட்டுப் பகுதி அமைந்துள்ள பொழிலையும் சேர்ந்த நிலப்பகுதியையும் குறிக்கின்றது.

மனை என்பது புலவர்களால் பல இடங்களில் குறிக்கப்பட்டு உள்ளது. அவற்றில் சில, (ஆய்வாளர்களுக்கு உதவும் என்பதால்) இங்குத்தரப்படுகின்றன.

அம்மூவனார் : நம் மனை (குறுந்தொகை : 327.5)
அள்ளூர் நன்முல்லையார் : நம் மனை (அகநானூறு: 46.9)
ஆலங்குடி வங்கனார் : எம்மனை (நற்றிணை: 330.7)
ஆலம்பேரி சாத்தனார் : மனைவயின் (அகநானூறு : 47.9-12)  
உலோச்சனார் : மனை (அகநானூறு : 400.2; அகநானூறு : 300.8); மனையிருந்து   
      (நற்றிணை : 372.10)
ஐயூர் முடவனார் : மனை (குறுந்தொகை :  322.5)
ஒக்கூர் மாசாத்தியார் : மனை (அகநானூறு : 384.13)
ஔவையார்:  நம் மனை (நற்றிணை : 129.5 )
ஓதலாந்தையார் : நும் மனை (குறுந்தொகை 399.1)
ஓரம்போகியார் :  தன் மனை (ஐங்குறுநூறு : 3.5); துஞ்சுமனை நெடுநகர்
     (ஐங்குறுநூறு:60.3);நின் மனை (ஐங்குறுநூறு:77.4); நும்மனை(ஐங்குறுநூறு :  
      86.4)
ஓரம்போகியார் : மனை (அகநானூறு : 316.11)
கபிலர் : மனை (கலித்தொகை : 57.24; அகநானூறு : 203.18); பிறர் மனை
     (கலித்தொகை : 59.16 ); (அகநானூறு :128.1)
கயமனார் : எம் மனை (அகநானூறு : 195.18); தன்மனை (அகநானூறு : 195.19)
கருவூர்ப் பூதஞ் சேந்தனார் : மனை : (அகநானூறு : 50.11)
காவன் முல்லைப் பூதனார் : மனை (அகநானூறு 21.7); எம்மனை  (அகநானூறு  
   195.18)
கூடலூர்ப் பல்கண்ணனார் : பாடு மனை (நற்றிணை : 380.10)
தங்காற் பொற்கொல்லனார் : செழு மனை (அகநானூறு: 355.8)
நக்கீரனார் : மனை (அகநானூறு : 389.10); எம் மனை (அகநானூறு : 346.16); நும் மனை (அகநானூறு : 346.17)
நல்லாவூர் கிழார் : மனை (அகநானூறு : 86.4)
பாலை பாடிய பெருங்கடுங்கோ : மனை  (குறுந்தொகை: 124.4);
     (கலித்தொகை :11.20); தன் மனை (குறுந்தொகை : 262.3)
பாலைக் கௌதமனார் : மனை (பதிற்றுப்பத்து : 26.3)
புலவர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) : நம் மனை (குறுந்தொகை :  321.3 )
புலவர் குன்றம் பூதனார்: மனை (பரிபாடல்: 9.21)
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் : எம் மனை (அகநானூறு : 56.12);  
      இம் மனை அன்று; அஃது எம் மனை (அகநானூறு : 56.14)
மதுரை நக்கீரர் : தன் மனை (புறநானூறு : 395.29) 
மதுரை மருதனிளநாகனார் : மனை (நற்றிணை : 392.3; கலித்தொகை : 68.22); 
   நுந்தை மனை (நற்றிணை : 362.2); எம் மனை (கலித்தொகை : 75.18; 77.18; 89.2)
மாங்குடி மருதனார் : (புறநானூறு : 396.7) மனைக்கோசர்
மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்: மனை மனை (அகநானூறு:54.12)
செல்லூர்ககோசிகன் கண்ணனார் : இன்சீர் அவர் மனை (அகநானூறு : 66.22)
நொச்சி நியமங்கிழார் : பிறர் மனை (புறநானூறு : 293.5)
வெள்ளை மாறனார் : எல்லா மனை (பிறர்மனை : 296.3)
பேயனார் : தன் மனை (குறுந்தொகை : 480.3)
பேயனார் : மனை (குறுந்தொகை : 405.2) 

natpu
யாரும்  குடியிராத வீடுகளை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் :
      புல்லென் வறுமனை (நற்றிணை : 321.6)
என்றும் புலவர் பாலைக் கௌதமனார்
     பீர் இவர் வேலிப் பாழ்மனை (பதிற்றுப்பத்து : 26.10) என்றும் (பீர் இவர்
பீர்க்கங்கொடி படர்ந்த) குறிப்பிடுகின்றனர்.

குடில்கள் வைக்கோலால் வேயப்பட்டன. (வீட்டின் முன்புறம் உலக்கையால் அவல் இடிக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர்.) இதனைப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
வரம்பில் புது வை வேய்ந்தகவி குடில் முன்றில்
அவல் எறி உலக்கைப் பாடுவிறந்து (பெரும்பாணாற்றுப்படை 226-227)
எனக் குறிப்பிட்டுள்ளார்.
(வை- வைக்கோல்; கவி குடில்- கவிழ்ந்த தோற்றத்தில் உள்ள கூரைஉடைய குடில்)

வீடுகள் வெயில் தாக்காத அளவிற்குக் குளிர்ச்சியாகவும் செழிப்பாகவும் அமைக்கப்பட்டிருந்தன என்பதைப் புலவர் ஒருவர்,
செழுந்தண் மனை (நற்றிணை : 271.3) என்று குறிப்பதன் மூலம் தெரிவிக்கின்றார்.

இப்பொழுது வீடுகளைச் செயற்கை முறையில்தான் குளிர்ஊட்டி வைத்திருக்கின்றோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, கட்டடஅறிவியல் முறையிலேயே வெப்பம் தாக்காத படிச் சிறப்பாகக் கட்டடங்களை அமைத்துள்ளனர் என்பது அறிவியல் விந்தையன்றோ!

வீடுகள் அமைந்த முறை பற்றிய மேலும் சில தகவல்களைத் தொடர்ச்சியாக அடுத்துக் காண்போம்.
- இலக்குவனார் திருவள்ளுவன்



Saturday, March 19, 2011

Type of Buildings - andre' sonnaargal 41 : >>அன்றே சொன்னார்கள் 41 கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ - 1

>>அன்றே சொன்னார்கள் 41


கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ - 1

                                                                                                                

natpu  சிந்துவெளி, மொகஞ்சதாரோ மூலம் அறியக்கிடக்கும் தமிழர் நாகரிகச் சிறப்பு நம் முன்னைத் தமிழர்களின் கட்டுமான அறிவியலுக்கு மிகச் சிறந்த சான்றாகும். அவற்றின் தொடர்ச்சியாக இன்றைக்கும் காட்சியளிக்கும் கோபுரங்கள், சிதலமாகிப்போன சுரங்கப் பாதைகள் முதலியனவும் முந்தைச் சிறப்பை நமக்கு விளக்குவனவாக இருக்கின்றன. மலையே இல்லாத தஞ்சாவூர் மாநகரில் பெரிய கோயில் மட்டுமல்ல  எண்ணற்ற கோயில்கள் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளன. கரிகால(ன்) மன்னரால்  கட்டப்பெற்ற கல்லணை போன்றுதான் எகிப்து நைல் ஆற்று அணைக்கட்டும் உள்ளமையால் அணைக்கட்டுமானத்தின் முன்னோடியான தமிழர்களிடம் இருந்து அறிந்தே அவர்கள்  அணையைக் கட்டியிருக்க வேண்டும் என்பதில் எவ்வகை ஐயமும் இல்லை. அழகாகவும் ஒழுங்காகவும் அமைக்கப்பட்ட வீதிகளைப் பற்றியும் நகரங்களைப் பற்றியும் பல்வகைக் கட்டடங்கள் பற்றியும் கோட்டைகளைப் பற்றியும் அரண்களைப் பற்றியும் இலக்கியங்களில் மிகுதியாகக் குறிப்புகள் உள்ளன. இவை மூலம், அகன்ற தெருக்களும் உயர்ந்த மாடமனைகளும் மிக்கு உயர்ந்த கோபுரவாயில்களும் எங்கெங்கும் அமைக்கும் அளவிற்குக் கட்டட அறிவியலில் பழந்தமிழர்கள் மிகச் சிறந்து இருந்தனர் என்பது நன்கு தெளிவாகிறது. இவற்றுள், சிலவற்றையேனும் அறிவதன் மூலம் கட்டுமான அறிவியலிலும் கட்டுமானம் தொடர்பான இயந்திரவியல், பொறியியலிலும் பெற்றிருந்த தமிழகச் சிறப்பை நாம் உணரலாம். நாம் இதற்குமுன்பு வானுயர் கட்டடங்களால் புகழ் பெற்ற தமிழக நகரங்களின் சிறப்பை அறிந்தோம். இப்பொழுது இயல்பான வீடுகளிலும் பல்வகை எழுப்பிப் பாங்குடன் வாழ்ந்தமையைக் காணலாம்.

நிலையான உறைவிடம் வீடு; வீட்டு நிலம் மனை; (மனையில் எழுப்பப்படும் வீடும் பின்னர் மனை எனப்பட்டது;) தாழ்ந்த சிறு கூரை வீடு குடிசை; பெரு குடில் குடிலம்; நெற்கூட்டைப் போன்று வட்டமாக அமைந்து வீடு கூடு; சுவர் இல்லாத நீண்ட கூரை வீடு கொட்டகை; தொழுவமும் ஆயுதச் சாலையும் கொட்டில்; பெரிய கூடங்கள் அமைந்தது சாலை; (பள்ளிச்சாலை, கல்விச்சாலை என்பன போல்) ஒருவருக்குச் சொந்தமான பல வீடுகள் சேர்ந்த இடம் வளவு; வீடும் வீட்டைச் சுற்றிப் பெரும்பரப்பும் அமைந்த பகுதி வளைசல்; மடவளாகம் என்பதுபோல் ஆதீனம் அமைந்த இடம் வளாகம்; சிறப்பான பெரிய வீடு மாளிகை; மேல்நிலை வீடு மாடி; மாடி வீடு மெத்தை வீடு எனவும் மச்சு வீடு எனவும் அழைக்கப்பெறும்.
natpu

வீட்டில் மேல்நிலை திறந்த முகப்பு மாடம்; அரண் சூழ்ந்த மனை அரண்மனை; துறவியர் தங்குவதற்குரிய கட்டடம் மடம்; படுக்கும் இடம் பள்ளி; பின்னர்  சமணர் தங்குமிடம் பள்ளி என்றும் அடுத்துக் கற்பிக்கும் இடம் பள்ளி என்றும் மாறியுள்ளன; தங்குமிடம் உறையுள்; உள்வீடு அகம்; வளம் வாய்ந்த வீடு  இல்லம்; சிறிய மண்சுவர் கட்டைமண்; மண்ணாலோ கல்லாலோ கட்டப்படும் மதில் சுவர்; உயர்வாயும் அகலமாயும் உறுதியாயும் அரண்மனை, கோயில், நகர் முதலியவற்றைச் சுற்றி   எழுப்பப்படுவது மதில்; பகைவர்களை வெல்லும் வகையில் படைக்கருவிகளை மறைவாகப் பயன்படுத்த வாய்ப்பாகக் கட்டப்படும் மதில் எயில்; செம்பை உருக்கி வார்த்துக் கல்லால் கட்டிய பாதுகாப்பான மதில் இஞ்சி; வீட்டின் சிறு வாயில் குறும்புழை எனப்படும். இடைவெளியை மறைத்துக் கட்டப்படும் வீடு கூடு உயர்வான வாயில் மாடம் கோபுரம்.

இத்தகைய வகைப்பாடே கட்டடவியலில் பழந்தமிழர்கள் சிறந்திருந்தனர் என்பதற்குச் சான்றாகும். இவை பற்றிய குறிப்புகளைப் பார்ப்போம்.

நெடிய சுவர் அருகில்  மங்கிய புகை சூழ்ந்த கொட்டிலைப்பற்றிப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
      நெடுஞ் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில் (பெரும்பாணாற்றுப்படை : 189)
(பறைந்த - தேய்ந்த, மங்கிய)
என்கிறார். அவரே புதிய வைக்கோலாலே வேய்ந்த கவிந்த குடில் என்பதை
      புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் (பெரும்பாணாற்றுப்படை : 225)
என்கிறார். (வை-வைக்கோல்; கவி - வளைவாகக் கவிந்த தோற்றம்)

மேலும், தொடர்ச்சியாக அடுத்துக் காணலாம்.

- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments


Thursday, March 17, 2011

skyscrapers 3/3 - andre' sonnaargal 40 : அன்றே சொன்னார்கள்40 வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3

>>அன்றே சொன்னார்கள்40


வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3

                                                                                                                

natpu 2000 ஆண்டுகளுக்கு முன்பே அடுக்கடுக்கான பல மாடிவீடுகள் வரிசையாக அமைந்திருந்தமை குறித்து மேலும் சில விவரம் பார்ப்போம்.
மதுரை மாநகர் மாடிக்கட்டடங்களால் புகழ் பெற்றது என்பதைப் புலவர் மாங்குடி மருதனார் பல இடங்களில் விளக்குகிறார்.

மாடிக்கட்டடங்களால் சிறப்புமிகு புகழை உடைய நான்மாடக்கூடலாகிய மதுரை என,
      மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் (மதுரைக்காஞ்சி : 429)
என்றும், முகில் உலாவும் மலைபோல உயர்ந்த மாடிக்கட்டடங்களோடு உடைய மதுரை என
     மழையாடு மலையி னிவந்த மாடமொடு (மதுரைக்காஞ்சி : 355)
என்றும் மலையைப் போன்ற அகலமும் உயரமும் உடைய மாடிக்கட்டடங்கள்
என,
     மலைபுரை மாடத்து(மதுரைக்காஞ்சி : 406)
என்றும் மாடிக்கட்டடங்கள் வரிசையாக அமைந்திருந்தன என்பதை,
     நிரைநிலை மாடத்து அரமியந் தோறும் (மதுரைக்காஞ்சி : 451)
என்றும் கூறுகிறார். இந்த அடி மூலம் நாம் மொட்டை மாடி எனக் கூறும் மேல்மாடியில், நிலா முற்றம் இருந்தது என்பதையும் தெரிவிக்கின்றார்.

மலையைப் போன்றும் முகில் அமைந்துள்ளது போன்றும் உயரமான மாடிக்கட்டடங்கள் இருந்தன என்பதைப் புலவர் (இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப்) பெருங்கௌசிகனார்
     மலையென மழையென மாட மோங்கி (மலைபடுகடாம் : 484)
நகரங்கள் அமைந்துள்ளன எனத் தெரிவிக்கிறார்.

புலவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மாடிக்கட்டடங்களால் மாண்புற்ற நகர் என்னும் சிறப்பை,
     மாடமாண்நகர் (அகநானூறு : 124.6)
என்னும் தொடரில் தெரிவிக்கிறார். (அறுவை வாணிகன் - துணி வணிகர்)

புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், வானைத் தொடும்அளவிற்கு நீண்டு உயர்ந்த வீடுகள் இருந்தமையை,
     விண்பொரு நெடுநகர் (அகநானூறு : 167.4)
என்னும் தொடரில் குறிப்பிடுகிறார். (நெடுநகர்- உயரமான மாளிகைகள்)

உயர்ந்த மாளிகைகள் காவலுடன் இருந்தன என்றும் புவலர் மதுரை மருதன்இளம்நாகனார்,
     கடிமனை மாடம் (அகநானூறு : 255.16)
என்னும் தொடரில் குறிப்பிடுகிறார்.

மாடிக்கட்டடங்களை உடைய முதிய ஊராகிய மதுரை எனப் புலவர் மதுரைத் தத்தங்கண்ணனார்,
மாட மூதூர் (அகநானூறு :   335.11)
என்னும் தொடரில் விளக்குகிறார்.
புலவர் நக்கீரர், மாடிக்கட்டடங்கள் மிகுந்த தெருக்களை உடைய கூடல்மாநகர் என மதுரையை,
     மாடமலி மறுகின் கூடல் (அகநானூறு :   346.20)
என்னும் தொடரில் விளக்குகிறார்.

மாடங்கள் சுண்ணாம்புச் சாந்து பூசப்பட்டு வெண்மைகயாக இருந்தன; உச்சியில் நிலா முற்றங்கள் இருந்தன என்பதைப் புலவர் மருதன் இளநாகனார்,
     ஆய் சுதை மாடத்து, அணி நிலா முற்றத்துள்
  (கலித்தொகை : 96.19)
என்னும் அடியில் விளக்குகிறார்.

சங்கப்புலவர்கள் கூடி உலக மக்கள் நாவில் நடமாடும் தமிழை ஆயும் மதுரையைக் குறிப்பிடும் பொழுது நீண்ட மாடங்களை உடைய மாநகர் எனப் புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ,
      நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார்
(கலித்தொகை : 35.17)
என்கிறார். இவ்வரி மூலம் உலகோர் பேசும் மொழியாகத் தமிழ் இருந்துள்ளதையும் தொன்றுதொட்டே சங்கம் வைத்துத் தமிழ் ஆய்ந்த புகழுக்கு உரியது மதுரை என்பதும் தெளிவாகின்றது.

நீண்டு உயர்ந்த தூண்களை உடைய மாடங்கள் உடைய மாளிகைகளைப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்,
     நெடுங்கால் மாடத்து (பட்டினப்பாலை : 111)
என்னும் தொடரில் விளக்குகிறார். மழைமுகில்கள் மோதும்அளவிற்கு வளமனைகள் உயர்ந்து இருந்தன என்று அவரே,
     மழைதோயும் உயர்மாடத்து (பட்டினப்பாலை : 145)
என்னும் தொடரில் விளக்குகிறார்.

வளைந்து உருண்ட தூண்களையும்  உயராமான வாயில்களையும் உடைய வளமனைகள் எனக் குறிப்பதன் மூலம் உயரமான வளமனைகள் இருந்தமையை,
      கொடுங்கால் மாடத்து நெடுங்கடை (பட்டினப்பாலை :  261)
என்னும் தொடரில் விளக்குகிறார்.

பெரிய நிலைகளை உடைய மாடங்கள் நிறைந்த உறந்தை நகரை அவரே,
     பிறங்குநிலை மாடத் துறந்தை (பட்டினப்பாலை : 285)
என்னும் தொடரில் விளக்குகிறார்.

மலையின் மேலிருந்து வீழ்கின்ற அருவியைப்போல, வளமனைகளின் உச்சியில்  காற்றால் வீசும் கொடிகள் அசைகின்ற தெரு, எனக் குறிப்பதன் மூலம், மலைபோல் உயரமாக, முகில் செல்லும் அளவிற்கு உயர்ந்த மாடங்கள்
உள்ள வளமனைகள் இருந்தன எனப் புலவர் பரணர்,
     வரைமிசை இழிதரும் அருவியின் மாடத்து
     வளிமுனை அவிர்வரும் கொடிநுடங்கு தெருவில்
(பதிற்றுப்பத்து : 47.3)
என்னும் தொடரில்  விளக்குகிறார்.

உயர்ந்த மொழிக்கு உரிய நம் முன்னோர் உயர்ந்த கட்டடங்களைக் கட்டிக்காத்துள்ளனர். நாமோ அவற்றையும் இழந்து, உயர்ந்த இனத்தையும் கட்டிக் காக்கத் தவறி விட்டோமே!

- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments


Tuesday, March 15, 2011

skyscrapers 2/3 - andre' sonnaargal: அன்றே சொன்னார்கள்39 வானுயர் கட்டடங்கள் 2/3

அன்றே சொன்னார்கள்39

natpu வானைத் தொடும் அளவிற்கு உள்ளதாகக் கருதும் வகையில் உயர்ந்த மாடிக் கட்டடங்கள் இருந்தன என்பதற்காக வான் தோய் மாடம் என்றும் விண்ணை நெருங்கும் அளவிற்கான உயரம் எனக் கருதும் அளவிற்கு மாடிகள் அமைந்த கட்டடங்கள் இருந்தன என்பதற்கு அடையாளமாக விண்தோய் மாடம் என்றும் சங்க இலக்கியங்களில் குறிக்கப் பெற்றுள்ளன. நகரம் என்பதே பல மாடிகள் உடைய வீடுகள் நிறைந்தது என்பதே வழக்கம் என்னும் அளவிற்கு நகரங்கள் இருந்தன. முந்தைய கட்டுரையின் தொடர்ச்சியாகப் பழந்தமிழர் கட்டடச் சிறப்பை அறிய, மேலும்  சில சான்றுகளைக் காண்போம்.

தடாரிஇசை முழக்கம்,  மலைகள் அடுத்தடுத்து
உள்ளன போல் நெருக்கமாக அமைந்த மாடி வீடுகளில் எதிரொலித்ததாக
      மலைக்கணத்து அன்ன மாடம் சிலம்ப (புறநானூறு : 390.7)
என்னும் அடி மூலம் புலவர் ஔவையார் கூறுகிறார்; (சிலம்ப - எதிரொலிக்க). எனவே, மாடி வீடுகள் எனில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இராமல் தொடர்ச்சியாக அமைந்திருந்தன என்பதை உணரலாம். 
     நிரை மாடம் ஊர்குவோர் (பரிபாடல் 10.27)
என்று புலவர் கரும்பிள்ளைப் பூதனார் மதுரையைக் குறிக்கும் அடியும் மாடிக்கட்டடங்கள்  வரிசையாக அடுத்து அடுத்து அமைந்துள்ளன என்பதை உணர்த்துகின்றன.

புலவர் (மதுரைக் கணக்காயனார் மகனார்) நக்கீரனார்  மதுரையில் மாடிக்கட்டடங்கள் நிறைந்த தெருக்கள் இருந்தமையை
      மாடமலி மறுகின் கூடல் (திருமுருகாற்றுப்படை : 70)
என்னும் அடியில் விளக்குகின்றார். (மறுகு - தெரு; கூடல்- மதுரையின் மறு பெயர்; கணக்காயனார்-ஆசிரியர்)

பன்மாடிக் கட்டடங்கள் தொன்று தொட்டே இருந்துள்ளன என்பதைப் புலவர் (மதுரைக் கணக்காயனார் மகனார்) நக்கீரனார், மதுரை மாநகரைக் குறிப்பிடும்,
      மாடம் ஓங்கிய மல்லன் மூதூர் (நெடுநல்வாடை : 29)
என்னும் அடி மூலம் நமக்கு உணர்த்துகின்றார்.

மாடி வீடுகள் நிறைந்த மதுரை மாநகர் என்பதைப் புலவர் கோவூர்க்கிழார்
       மாட மதுரை (புறநானூறு : 32.5)
என்னும் அடியில் தெரிவிக்கின்றார்.

மாடங்கள் மிகவும் வெண்மையாக அமைந்திருக்கும் என்பதனைப் புலவர் ஊன்பொதி பசுங்குடையார்
      புதுப்பிறை அன்ன சுதைசெய் மாடத்து (புறநானூறு : 378.6)
என்னும் அடியில் விளக்குகிறார். (சுதை - சுண்ணாம்பு)

விளங்கில் என்னும் ஊரில், மாடிக்கட்டடங்களின் சுவர்களில் பதிக்கப்பெற்ற மாணிக்கங்கள் ஒளி வீசுவதைப் புலவர் பொருந்தில் இளங்கீரனார்
     கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து (புறநானூறு : 53.2)
என்னும் அடியில் விளக்குகிறார்.
தனக்குரிய இடம் எல்லாம் பொன்னாலும் மணியாலும் சிறப்புப் பெற்ற உயர்ந்த ஏழடுக்கு மாளிகைகள் இருந்தன என்பதைப் புலவர் (காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகனார்) நப்பூதனார்,
        இடஞ்சிறந்து உயரிய எழுநிலை மாடத்து (முல்லைப்பாட்டு : 86) என்னும் அடியில் விளக்குகிறார்.

இத்தகைய உயர்ந்த கட்டடங்களில் எரியும் விளக்குகளினால் கப்பல்களை நகரை நோக்கிச் செலுத்துவர் எனக் கலங்கரை விளக்கம்போல் உயர்வாக உள்ள கட்டடச் சிறப்பைப் புலவர் மருதன் இளநாகனார்,
      மாட ஒள்எரி மருங்கு அறிந்து ஒய்ய (அகநானூறு : 255.6)
என்னும் அடியில் தெரிவிக்கின்றார்.  (ஒய்ய-கப்பலைச் செலுத்த)
உறந்தை மாநகரில் உயர்ந்த மாடிக்கட்டங்கள் சிறந்து இருந்தமையைப் புலவர் பெருஞ்சித்திரனார்,
     உயர்நிலை மாடத்து (புறநானூறு : 67.9)
என்னும் குறிப்பால் உணர்த்துகிறார்.

கானப்பேரெயில் (இன்றைய காளையார்கோயில்) நகரில், மதில்கள் (சுவர்கள்) வானைத் தொடுவது போன்ற அளவிற்கு உயர்வாக இருந்தமையைப், புலவர் ஐயூர் மூலங்கிழார், 
     வான்தோய் வன்ன புரிசை விசும்பின் (புறநானூறு : 21.3)
என்னும் அடி மூலம் விளக்குகிறார்.

வானைத் தொடும் அளவிற்கு எனப் புலவர்கள் குறிப்பிடுவது கற்பனை கலந்த உயர்வு நவிற்சி அல்ல என்பதற்குச் சான்று, புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்,  இமயமலையைப் பற்றிக் குறிக்கும்பொழுது வானைத் தொடுவது போன்ற இமயமலை என்னும் பொருளில்,
      வடதிசை யதுவே வான்தோய் இமையம்(புறநானூறு :  132)
எனக் குறிப்பதில் இருந்து புரிந்து கொள்ளலாம். இயல்பிற்கு மீறிய உயரக் கட்டடங்களை மட்டுமே இவ்வாறு வானைத் தொடும் அளவிற்கு உள்ளதாகக் குறிப்பிட்டு அவற்றின் உயர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

நம் முன்னைத் தமிழர்களின் நயமிகு கட்டடச் சிறப்பைத் தொடர்ந்து அடுத்தும் காண்போம்!
                                 - இலக்குவனார் திருவள்ளுவன்



Comments


Monday, March 14, 2011

Skyscrapers - andre' sonnaargal 38 : அன்றே சொன்னார்கள்38-வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3

>>அன்றே சொன்னார்கள்38

 
வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3

                                                                                                                

natpu கட்டடக்கலையில் தமிழ் மக்கள் பிற துறைகளைப் போல் பிறரால் ஒப்பிட இயலா அளவிற்கு மிகவும் முன்னோடியாக உள்ளனர். விரிவான இப்பொருளில் வானளாவிய கட்டடங்கள் குறித்து முதலில் பார்ப்போம்.

19ஆம் நூற்றாண்டு வரை வானுயர் கட்டடங்கள் (skyscrapers) என்பது நினைக்க இயலாத ஒன்றாக இருந்தது. அதன் பின்னர்தான் இட நெருக்கடியாலும் மக்கள் பெருக்கத்தாலும் இது குறித்த சிந்தனை  பிற நாட்டார்க்கு வந்துள்ளது.

இயேசு போகர்தசு (James Bogardus: 1800–1874) என்பவர் 1848இல் இரும்பு வார்ப்புகளைப் பயன்படுத்திக் கட்டுமானப் பணியில் ஈடுபடும் முறையைக் கண்டுபிடித்தார். இதன் அடிப்படையில் 1856இல் என்றி பெசெமர் (Henry  Bessemer) என்பார் தேனிரும்பை எஃகாக மாற்றும் முறையைக் கண்டுபிடித்தார். இதனால், எஃகு பயன்பாடு எளிதாகி 1860இல் வணிகமுறைப் பயன்பாட்டிற்கு வந்தது. இவ்வளர்ச்சியால் பன்மாடிக் கட்டடங்கள் உருவாகத் தொடங்கின.

1873ஆம்  ஆண்டுதான் முதன்முதலில்  புதுயார்க்கு (நியூயார்க்கு) நகரில் 8 தளம் கொண்ட 142 அடி உயரக் கட்டடம் எழுப்பப்பட்டது. (இக்கட்டடம் 1912இல் தீக்கிரையாகியது.) ஆனால், பழந்தமிழ் நாட்டில் வானுயர் கட்டடங்கள் மிக இயல்பாகக் காணப்பட்டுள்ளன. இவை குறித்த இலக்கியக் குறிப்புகளைக் கற்பனை என்றோ உயர்வு நவிற்சி என்றோ ஒதுக்க முடியாது. இவை பொய்யான தகவல்களாக இருப்பின் நூல்களின் அரங்கேற்றத்தின் பொழுதே அவை அகற்றப்பட்டிருக்கும். இவை குறித்துப் புலவர்கள் பலரும் பாடி உள்ளதால் அனைவரும் பொய்யான புகழுரையைச் சொல்லி இருக்கத் தேவையில்லை. மேலும், பன்மாடக் கட்டடங்களுடன் இணைத்தே பெருநகரங்கள் பேசப்பட்டுள்ளன. எனவே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பழந்தமிழர்கள் வானளாவி அல்லது வான்தோய் அல்லது வானுயர் பன்மாடக் கட்டடங்கள் கட்டுவதில் சிறப்பான தேர்ச்சியும் நாகரிகமும் பெற்றிருந்தனர் எனலாம்.

இவை குறித்த இலக்கியச் சான்றுகளைக் காணலாம். முகில் கூட்டங்கள் திரளும் அளவிற்கு மாடங்கள் அமைந்து உயரமான வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன என்பதை,
மழைஎன மருளும் மகிழ் செய்மாடம் (பொருநராற்றுப்படை 84)
எனப் புலவர் முடத்தாமக் கண்ணியார் கூறுகிறார்.

ஆறுபோல் அகன்று இருந்த தெருக்களில் அமைந்த வீடுகள், காற்றுமோதும் அளவிற்கு வானுயர அமைந்திருந்தன என்பதை,
      வகைபெற எழுந்து வானம் மூழ்கி
     சில்காற்று இசைக்கும் பல்புழை நல்இல்
     யாறுகிடந்தன்ன அகல்நெடுந்தெரு (மதுரைக்காஞ்சி 357)
எனப் புலவர் மாங்குடி மருதனார் கூறுகிறார்.

நெருக்கமும் உயரமும் அமைந்த படிகளையும்  படிகள் திரும்பும் வகையில் வளைவான படியிடைத்தளங்களையும் (கொடுந்திண்ணை:கொடு-வளைவு) பல கட்டுகளையும் சிறியனவும் பெரியனவும் ஆகிய வாயில்களையும் பெரிய இடைகழி(நடை)களையும் உடைய முகில் தங்கும் உயர்ந்த மாடங்கள் எங்கும் அமைக்கப்பட்டிருந்தன என்பதைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார்
     குறுந்தொடை நெடும் படிக்கால்
     கொடுந்திண்ணை பல்தகைப்பின்
    புழைவாயில் போகு இடைகழி
    மழைதோயும்  உயர்மாடத்து (பட்டினப்பாலை 142-145)
என்னும் வரிகளில் விளக்குகிறார்.

natpu

இடைகழி என்பதே சில வகுப்பாரால் ரேழி எனப்படுகிறது. புழை என்பது சிறிய வாசலையும் வாயில் என்பது பெரிய வாசலையும் குறிக்கிறது.

விண்ணை முட்டும் அளவிற்குக் கோபுரங்கள் அமைந்திருந்தன; வாயில்கள் வையை ஆற்றைப்போல் அகலமாக அமைக்கப்பட்டன; மழைமுகில்கள் மோதும் அளவிற்கு உயரமாயும் அமைக்கப்பட்டன (நாள்தோறும் வாயில் கதவுகள் திறக்கப்பட்டமையால், உரிய கருவிகள் தேய்மானத் தவிர்ப்பிற்கும் ஒலி எழுப்பாமல் எளிதாகப் பயன்படுத்தவும் நாள்தோறும் நெய்ஊற்றி மெருகு ஏற்றப்பட்டன). இதனைப் புலவர் மாங்குடி மருதனார்
     விண்உற ஓங்கிய பல்படைப் புரிசை
    (தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
    நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்)
     மழைஆடும் மலையின் நிவந்த மாடமொடு
    வையை அன்ன வழக்குடை வாயில் (மதுரைக் காஞ்சி 352-356)
என விளக்குகிறார்.

கோபுர வாயில்கள் மலையை வெட்டி அமைக்கப்பட்டாற் போன்றும் யானைகளில் வெற்றிக் கொடியைத் தூக்கிப் பிடித்து வரும் வகையில்  மிக உயரமாகவும் அமைக்கப்பட்டிருந்தன. இதனைப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
    வானம்ஊன்றிய மதலைபோல
     ஏணிசாத்திய ஏற்றுஅருஞ் சென்னி
    விண்பொர நிவந்த வேயா மாடத்து
    இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
    உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்
    துறை  (பெரும்பாணாற்றுப்படை : 346-351)
என விளக்குகிறார்.

எஞ்சிய செய்திகளைத் தொடர்ச்சியில் காண்போம்.

- இலக்குவனார் திருவள்ளுவன்



Thursday, March 10, 2011

andre' sonnaargal 37- shoes:அன்றே சொன்னார்கள் 37 - காலணிகளைக் கவினுற அமைத்தனர்

>>அன்றே சொன்னார்கள்37


காலணிகளைக் கவினுற அமைத்தனர்

                                                                                                                

natpu 
கற்களிலும் முட்களிலும் நடக்க வேண்டிய தேவை ஏற்பட்ட பொழுது அதனால் ஏற்படும் துன்பத்தில் இருந்து விடுபட மனிதன் தொடக்கக் காலத்திலேயே கால்களில் எதையோ அணியும் பழக்கம் உருவாகியிருக்க வேண்டும். அதுவே மக்கள் கூட்டத்தின் நாகரிகத்திற்கேற்ப வெவ்வேறு காலணிகளாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அமெரிக்காவில் ஒரேகான்(Oregon) பகுதியில் உள்ள கற்கோட்டைக் குகையில் (Fort Rock Cave) 10,000 ஆண்டுக்காலத் தொன்மையான காலணிகள் 1938இல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 2009இல் ஆர்மேனியாவில் குகை ஒன்றில்  3500 ஆண்டுத் தொன்மையான காலணியைக் கண்டுபிடித்துள்ளனர். எகிப்தியர்கள் பண்டைக்காலத்தில் பனை ஓலைகளாலும் நாணற் புற்களாலும் ஆனக் காலணிகளை அணிந்துள்ளனர். எகிப்திய குருமார்களின் ஆடைத் தொகுப்பில் இக்காலணிகளும் இடம் பெற்றிருந்திருக்கின்றன. மெசபடோமியாவில் தோலினால் ஆனக் காலணிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். உரோம் நாட்டில் ஆடம்பரப் பொருளாக இருந்த காலணிகள் மாவீரர் அலெக்சாண்டருக்குப் பிந்தைய அகசுடசு எழுச்சி வரையிலான 300 ஆண்டுக் காலத்தில் (கி.மு.323-கி.மு.30) ஓரளவு பரவலான பயன்பாட்டிற்கு வந்தன. இருப்பினும் கி.பி.1760இல் முதல் காலணித் தொழிலகம்  அமைக்கப்பட்டது. எனினும் பிற நாடுகளில், 19ஆம் நூற்றாண்டில்தான் பொது மக்கள் காலணிகளைப் பரவலாகவும் பலவகைகளிலும் பயன்படுத்தத் தொடங்கினர்.

natpu கிரேக்கத்தில் கி.மு.முதல் நூற்றாண்டில் தொன்மைக்கதை ஒன்றில் முதன்முறையாகக் காலணி இடம் பெற்றுள்ளது. (இக்கதையைத் தழுவி 1634 இல் கியம்பட்டிசுட்டா பசிலி(Giambattista Basile) என்பவர் கதைகளின் கதை(Lo cunto de li cunti) என்னும் நூலில் காலணி அடிப்படையில் கதையைப் படைத்தார். 1697 இல் சார்லசு பெர்ரால்டு (Charles Perrault) கண்ணாடிக்காலணியாக மாற்றிச் சுவையுடன் சிந்தரெல்லா (Cinderella) கதையைப் படைத்தார். இப்பொழுது, மரத்திலும் தோலிலும் மட்டும் அல்லாமல் வெள்ளி, தங்கம் முதலான மாழைகளிலும் வைரக் கற்கள் பதித்தும் வெவ்வேறு நேரத் தேவைக்கேற்பவும் ஆட்டக்காலணி, தாளணி, காலரணம், வார்மிதி, குதியணி, மிதியணி,  எனப் பல்வகைக் காலணிகள் உருவாக்கம் பெருகி விட்டது.

தமிழ்நாட்டிலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே காலணிகள் பயன்படுத்தி இருக்க வேண்டும். முறையான அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டால் பழந்தமிழ்நாட்டில் காலணிகளின் பயன்பாடு குறித்த பல சான்றுகள் கிடைக்கும்.  தமிழில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களிலேயே மக்கள் பல்வகைக் காலணிகளைப் பயன்படுத்திய உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
காலணிகள் பற்றிய குறிப்பு காணப்படும் இலக்கியங்கள் அவற்றை வழக்கமான அணிகளில் ஒன்றாகத்தான் குறித்துள்ளன. அடையல், அரணம், கழல், குத்திச் செருப்பு, குறட்டுச் செருப்பு, தோற்பரம், நடையன், மிதியடி, பாதுகை, பாவல், அரண், தோற்பரம், பாதக்காப்பு, அடிபுனைதோல் முதலான பல்வேறு வகையிலான காலணி பற்றிய சொற்கள் வெவ்வேறு பகுதிகளில் நடைமுறையில் உள்ளமை அவை காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமையை விளக்குகின்றன. இவற்றுள் தொடுதோல், செருப்பு, அடிபுதை அரணம் ஆகியவை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.
natpu வேடவன் செருப்பு அணிந்து செல்வதைப்  புலவர் மருதன் இளநாகனார் 
        தொடுதோல் கானவன்   (அகநானூறு: 34.3; 368.1)
எனக் குறிப்பிடுகிறார்.

காலணி அணிந்து செல்பவர்களைத்
      தொடுதோல் அடியர்
என மதுரைக் காஞ்சியில்(636) புலவர் மாங்குடி மருதனாரும் பட்டினப்பாலையில் (265)புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் குறித்துள்ளனர்.

காலிற்கும் செருப்பிற்கும் இடையே புகுந்த கல் துன்பம் தருவதுபோல் பகைவர்க்குத் துன்பம் தருபவன் எனத் தலைவன் ஒருவனைப் பற்றிப் புலவர் ஒருவர்
      செருப்பு இடைச் சிறுபரல் அன்னன் (புறநானூறு: 257.1)
எனக்  கூறுகிறார்.
natpu புலவர் மாமூலனார்,
        அடிபுதை தொடுதோல் (அகநானூறு 101.9)
பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.  காலடி புதைந்து - மறைந்து- காணப்படும் அடிதோல் என்பதால் இது பாதங்களில் அணியும் மிதியடிபோல் இல்லாமல் காற்பகுதியை மறைக்கும் காலணி (சூ : shoe) ஆக விளங்கி உள்ளது எனலாம்.

காலடியை மறைக்கும் காலணியை அடிபுதை அரணம் எனக் குறிப்பிட்டுள்ளதைப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின்
                                                             நோன்தாள்
        அடிபுதை அரணம் எய்தி (பெரும்பாணாற்றுப்படை 69-70)
என்னும் வரிகள்  மூலம் அறிகிறோம். அடிபுதை அரணம் என்பது வீரர்களின் (பாதத்தையும் காலையும் மறைக்கும்) காலணியாக இருந்துள்ளது.

செருப்பை அணிந்த அடியவர்கள் தெளிந்த சுனை  நீரைப் பருகி,  அரிய சுரத்தைக் கடந்து சென்றனர் என்பதைக் குறிப்பிடும்
     செருப்புடைஅடியர், தெண்சுனை மண்டும்
     அருஞ்சுரம் (அகநானூறு: 129.13-14)
என்னும் வரிகள் மூலம் புலவர் குடவாயில் கீரத்தனார், மக்கள் காட்டுப்பாதையைச் செருப்பு அணிந்தே கடந்துள்ளனர் என்பதை விளக்குகிறார்.
 
natpu காலணிகளை ஆடம்பரத்திற்காக அல்லாமல் தொடர்ந்து தேவைக்காகப்பயன்படுத்தி உள்ளனர். எனவே, காலில் வடு ஏற்பட்டுள்ளது. இதனைப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்
      தொடுதோல் மரீஇய வடுவாழ் நோன்அடி (பெரும்பாணாற்றுப்படை : 169)
எனக் குறிப்பிட்டுள்ளார். (செருப்பினை விடாமல்(மரீஇய) அணிந்தமையால் காலில் வடு ஏற்பட்ட வலிமையான கால்(நோன் அடி))
natpu செருப்பு என்பது மலை ஒன்றிற்கும் பெயர். அதன் தலைவனான இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாடும்பொழுது  மிதிப்பதற்கு அல்லாத செருப்பின் தலைவன் என வேறுபடுத்தி,
      மிதிஅல் செருப்பின் பூழியர் கோவே (பதிற்றுப்பத்து : 21.23)
எனப் புலவர் பாலைக் கௌதமனார் பாடுகிறார்.

எனவே, காலணிகளைப் பிறநாட்டார் போல் ஆடம்பரமாகக் கருதாமல் அனைவரும் பயன்படுத்தி உள்ளனர் எனப் புரிந்து கொள்ளலாம்.

நடக்கும் பாதையில் ஏற்படும் இடர்களில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள காலணிகளைப் பயன்படுத்திய நாம் வாழ்க்கைப் பாதையில் ஏற்படும் இன அழிப்பு இன்னல்களில் இருந்து நம்மைக் காக்கத் தவறிவிடுகிறோமே!

- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments


Tuesday, March 8, 2011

Toppest level in Biology- elephant: andre' sonnargal 36:அன்றே சொன்னார்கள் 36 -உயிரறிவியல்: யனை (1)

>>அன்றே சொன்னார்கள்36


உயிரறிவியலில் உயர்ந்த நிலையில் இருந்தனர் - யானை (1)

                                                                                                                

natpu பயிரறிவியல் ஆக இருந்தாலும் விலங்கியல் ஆக இருந்தாலும் பழந்தமிழ் மக்கள் உயர்ந்த நிலையில் ஆட்சி செய்துள்ளனர். உயிரினங்களின் பெயர்கள், உறுப்புகளின் பெயர்கள், தன்மை, முதலானவை வெறும் சொற்கூட்டமாகவோ ஒரு பொருளுக்கான பல பெயராகவோ பார்க்கப்படுவது தவறு. இவற்றையே நாம் பிற மொழிகளில் படிக்கும் பொழுது மிகப்பெரிய அறிவியல் உண்மைகளாகப் பார்க்கின்றோம். தமிழில் இலக்கிய வரிகளாக எண்ணிப் புறந்தள்ளி விடுகின்றோம். உவமைகள் மூலம் அறிவியல் செய்திகளை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தெரிவித்து உள்ளார்கள் எனில், மக்களின் அறிவியல் உணர்வு மிகச் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் எண்ணிப் பார்க்கத் தவறி விடுகின்றோம். நாம் இத்தகைய அறிவியல் உண்மைகளை அவ்வப்பொழுது பார்ப்போம்.  முதலில்  யானை குறித்துப் பார்ப்போம்.

யானைக்கான எலிபண்ட் (Elephant) என்னும் சொல்லிற்கு இலத்தீன் மொழியில் பெரு வளைவு என்று பொருள். பெரிய விலங்காகவும் வளைந்த தோற்றத்துடனும் காணப்படுவதால் இப் பெயரை வழங்கி உள்ளனர். பொதுவாக யானையின் தோல், செவி, முதலான சில வெளி உறுப்புகள் அல்லது பகுதிகள் குறித்து மட்டுமே அயல்நாட்டு அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், தமிழில் உள்ள அதன் ஒவ்வொரு பகுதி அல்லது அதன் வேறு பெயர்கள்,  யானையியல் குறித்து மிகப் பரந்து பட்ட அறிவியலறிவு அன்றைக்கே தமிழர்களுக்கு இருந்ததை வியப்புடன் உணர்த்துகிறது.

யானைக்கு வேழம், களிறு(ஆண் யானை), பிடி(பெண் யானை), எறும்பி, கடிறு, கடவை, முதலான 170 பெயர்கள் உள்ளன.
(விக்சனசரி:http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88)  
இவற்றுள் சில பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் மறைந்து அயற் பெயர்களாக அமைந்துள்ளன. ஆராய்ந்து பார்த்தால் தமிழ்ப் பெயர் நமக்குப் புலப்படலாம். சான்றாக யானையைக் கசமுகன் என்கின்றனர். இதில் ச என்னும் எழுத்து கிரந்த ஒலிப்புடன் பயன்படுத்துவதால் வேற்று மொழிச் சொல்லாகக் கருதுகிறோம். உண்மையில் கயம் என்னும் தமிழ்ச் சொல் கசம் என மாற்றப்பட்டதால் அச் சொல்லின் சிறப்பை நாம் உணராமல் போய்விட்டோம்.
கயம் என்றால் மென்மை என்றும் பொருள். யானையின்  தலை மிகப் பெரியது; ஆனால், உள்ளே கடற்பஞ்சு போன்ற எலும்புகளும் ’ஒன்றுமில்லா அறைப்பகுதிகளும்’ உள்ளன. எனவே மென்மையானது. ஆதலின் மென்மையான தலை என்னும் பொருளில் ’கயந்தலை’ என்றனர். எனவே கயந்தலை என்பது அத் தலையையுடைய யானையையும் குறிப்பதாயிற்று.யானை பற்றிய அறிவியல் சிந்தனையின் விளைவே கயம் என்னும் சொல். ஆனால், கயம் என்பது கசம் ஆக மாறி ஒலிக்கப்பட்டுக் (கசம் + முகம் உடைய) கசமுகன் என மாற்றப்பட்டதால் நாம் உண்மையை உணரவில்லை.

யானையின் பிற பெயர்களும் அதன் தன்மைக்கேற்றனவே என்பதற்குச் சிலவற்றைப் பார்ப்போம்.
natpu
உயரம் கருதி உயரம் என்னும் பொருளில் உம்பல்; திரண்டு இருத்தலால் அப்பொருளில் உவா (60 ஆண்டிற்கு மேற்பட்ட யானை); உரல் போல் பாதம் இருந்தமையால் உரலைக் குறிக்கும் கறை என்னும் சொல்லைப் பயன்படுத்திக் கறைபோல் உள்ள அடி உடைய யானை கறையடி; பெரிய பாதத்தை உடைமையால் பொங்கடி; கருப்பு நிறம் உள்ள விலங்கு (மா) என்பதால் கரி அல்லது கருமா; இருள்போல் நிறம் கொண்டதால் இருள்; வேறு எந்த விலங்கிற்கும் இல்லாத வகையில் கை உள்ள - துதிக்கை உள்ள - விலங்கு (மா) என்பதால் கைம்மா;  இவ்வாறு பிற விலங்குகளில் இருந்து தனித்து வேறுபட்டுக் (கை உடன்) காணப்படுவதால்  அப்பொருளில் ஒருத்தல்; அக் கை துளையுடன் உள்ளதால் தும்பி; அக்கை தொங்கிக் கொண்டு இருத்தலால் தொங்குதல் என்னும் பொருளைக் குறிக்கும் நால் என்னும் சொல்லைப் பயன்படுத்தி நால் வாய்; முகத்தில் புள்ளி உள்ளமையால் புகர் முகம்; கை உடைய, மலைபோல் தோற்றம் கொண்ட விலங்கு என்பதால் கைம்மா; துளையை - புழையை - உடைய கை உள்ள விலங்கு என்பதால் புழைகை அல்லது பூட்கை அல்லது பூழ்க்கை; நீண்ட நெடிய கையை உடையதால் நெடுங்கை; பெருங்கையை உடைய விலங்கு என்பதால் பெருங்கை; அக் கை தொங்கிக் (தூங்கிக்) கொண்டு உள்ளதால் தூங்கல்; ஒற்றைக் கையை - ஒரே ஒரு கையை உடையதால்- ஓர்கை; பெரிய விலங்கு(மா) என்பதால் பெருமா; உருண்டு திரண்டது என்னும் பொருளில் வழுவை; புல்லை வாரிப் போடுவதால் வாரி; வாரணம் எனப்படும் சங்குபோன்ற தலை உடையதால் வாரணம்; நீர்ப்பறவைகளின் விரல்கள் இடையே உள்ள சவ்வுத் தோலாகிய துதி போல் யானையின் கைந் நுனியில் (தோலுடன் விரல் போன்ற உறுப்பு) அமைந்துள்ளதால் துதிக்கை; கம்பத்தில் கட்டப்படும் விலங்கு என்பதால் கம்பமா; கோடு (தந்தம்) உள்ள விலங்கு என்பதால் கோட்டு மா; கூட்டமாக இருக்கும் யானை தன் குழுவைப்பிரிந்து குழு அல்லாமல் தனித்தே திரிந்தால் அல்லியன்; வலிமையான விலங்கு என்பதால் வல்விலங்கு; பெரிய விலங்கு என்பதால் பெருமா; ஒற்றைக் கோடு (கொம்பு) உள்ள யானை ஒற்றைக் கொம்பன்; வளைந்த கோடு உடைய யானை ஏந்து கொம்பன்; பெரிய கொம்புகள்உடைய யானை கொம்பன் யானை; எனப் பலவகையாக யானையின் தன்மைகளை அறிந்து  பல பெயர்களைச் சூட்டி உள்ளனர். இவை தவிர போர் யானை (அதவை), பட்டத்து யானை (ஐராவணம்) முதலான வகைப்பாட்டிற்கு ஏற்பவும் யானைகளுக்குப் பெயர்கள் உள்ளன.

யானைகள் பற்றிய இலக்கியக் குறிப்புகளை அடுத்துப் பார்ப்போம்.

யானை பரவலாகப் பயன்படுத்தினாலன்றி இவ்வாறு பல பெயர்கள் தோன்றியிருக்கா; விலங்கினங்கள்  குறித்த  அறிவியல் அறிவு இருந்தாலன்றி யானைபற்றிய வேறுபாடுகளை உணர்ந்திருக்க மாட்டார்கள்.

சொல்வளமும் அறிவியல் வளமும் மிக்க தமிழ்தான் இன்றைக்குப் பாட மொழியில் புறக்கணிக்கப்படும் கொடுமைக்கு ஆளாகி உள்ளது!

 
- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments


Saturday, March 5, 2011

thamizh views about sun - andre' sonnaargal 35 :அன்றே சொன்னார்கள்- கதிரவன்

>>அன்றே சொன்னார்கள்35


கதிரவன் தன்மைகளைக் கணித்த கன்னித்தமிழர்

                                                                                                                

natpu 
சூரியன் அல்லது ஞாயிறு ஒரு விண்மீனே! சூரியனின் கிரேக்கப் பெயர் அப்பல்லோ என்பதாகும். கிரேக்கத் தொன்மக் கதையின்படி லெட்டோ (Leto)வின் உறவால் சீயசு (Zeus) தாய் ஆகிக் குழந்தையைப் பெற்றுக் கொள்ள இடம் தேடி அலைந்து இறுதியில் கிரேக்கத்தில் உள்ள தீவில் (தெலோசு : Delos) அப்பல்லோவைப் பெற்றெடுக்கிறாள். சப்பான், சிரியன் முதலான  சில நாடுகளில் சூரியன் பெண் கடவுளாகக் கருதப்படுகிறது. சூரியக் கடவுளின் பெயர் சப்பானில் அமத்தெரசு (Amaterasu) ;  சிரியாவில்  அரிண்ணா (Arinna) எனப்படும்.

ஞாயிறு என்பது, கதிரவன், பகலவன், செங்கதிரோன், பரிதி, வெங்கதிரோன் முதலிய பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. பூமியை விட இது பன்மடங்கு பெரியது. பூமியிலிருந்து ஏறத்தாழ 15 கோடி புதுக்கல் தொலைவு உள்ளது. இதைச் சுற்றி 9 கோள்கள் உள்ளன. ஞாயிற்றிற்குத் தமிழறிஞர்கள் சூட்டிய பெயர்கள் அதன் அறிவியல் தன்மைகளில் அமைந்தவையே!

‘சுரீர்’ என வெயில் அடிப்பதாகக் கூறுவோம். கடும்வெயில் அடிக்கும் பாதை, ‘சுரம்’ எனப்படும். இவை போல் ‘சுர்’ என்னும் வேர்ச்சொல்லின் அடிப்படையில், அனலாய்த் திகழும் விண்மீன் ‘சூரியன்’ எனத் தமிழில் கூறப்படுகிறது.
கதிரை உடையது கதிரவன்; வெம்மையான கதிரை உடையது வெங்கதிரோன்; செந்நிறக் கதிரை உடையது செங்கதிரோன்; வட்டமாக அமைந்து சுழல்வதால் பரிதி; பகற்பொழுதை உண்டாக்குவது பகலவன்; கனலாய்த் திகழ்வதால் ‘கனலி’ என்று பலவகைகளில் சூரியன் அழைக்கப் பெறும்.

‘எல்’ என்றால் ஒளி எனப்பொருள். ஒளிமிக்க இவ்விண்மீன் எல், எல்லி, எல்லவன், எல்லை என்று கூறுப்படும்.‘என்றூழ்’ என்பது சூரியனின் மறுபெயராகும். சூரியன் ஏற்படுத்தும் கடும் வெயில் ‘எறிப்பு’ எனப்படும்.  புவிப்பிழம்பு பிரிவதற்கு முன் ஆதியாய் இருந்தது என்னும் பொருளில் ஆதவன் எனச் சூரியனை அழைப்பது நம் தமிழ் முன்னோர்களின் அறிவியல் அறிவை நன்கு உணர்த்துகிறது.

     நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் மண்டிலம் (அகநானூறு 31: 1)
என்னும் வரிகளில் நெருப்பு என்று சொல்லுமாறு செந்நிறமாகக் காணப்படும் வெப்பம் விளங்கும் ஞாயிற்று மண்டிலம் புலவர் மாமூலனாரால் விளக்கப்பட்டுள்ளது.

பின்வருவன ஞாயிற்று மண்டிலத்தையும் ஞாயிற்றின் தன்மையையும் குறிப்பிடுன்றன.

      விரிந்த பரப்பு உடையது ஞாயிற்று மண்டிலம்:
           மலர் வாய் மண்டிலம் (புறநானூறு:175:9)
     மிகுதியான இயக்கப் பரப்பு உடையது ஞாயிற்று மண்டிலம்:
         வீங்கு செலல் மண்டிலம் (நெடுநல்வாடை:161:45)
    ஞாயிற்று மண்டிலம் தேய்தல் இல்லாதது:
         தேயா மண்டிலம் (பரிபாடல்:17:32)
   சுடர் உடையது ஞாயிற்று மண்டிலம்
        சுடர் மண்டிலம் (அகநானூறு: 367:1)
   சுடர் ஒளி உடையது ஞாயிற்று மண்டிலம்:
natpu  
           சுடர் கெழு மண்டிலம் (அகநானூறு: 378:14)
   அழகிய வட்டமான வடிவம் கொண்டது ஞாயிறு:
            பருதிஅம் செல்வன் (கலித்தொகை: 26:2; அகநானூறு: 360:2)
  மாசில்லாதது ஞாயிற்று மண்டிலம்
            மைஅறு மண்டிலம் (கலித்தொகை:141:12)
  ஞாயிறு தன்னுடைய பலவாகிய கதிர்களைப் பரப்பிப் பல்வேறு மாண்புகளுடைய பகற்பொழுதைத் தரும்:
        பல்மான் எல்லை தருநன் பல்கதிர்பரப்பி
                                     (பொருநராற்றுப்படை: 232-233)
  ஞாயிறு விரிந்து செல்லும் கதிர்களை உடையது:
      விரிகதிர் ஞாயிறு (புறநாநூறு:228:8)
  ஞாயிறு சுடுகின்ற கதிர்களை உடையது:
     காய்சினத்த கதிர்ச் செல்வன் (பட்டினப்பாலை:122)
    தெறுகதிர்க் கனலி (புறநானூறு: 43:2; 397:24)
வெம்மை தருகின்ற   கதிர்களை உடையது ஞாயிறு:
    வெங்கதிர்க்கனலி (புறநானூறு:41.6)
ஒளிவீசும் கதிர்களை உடையது:   
    அலங்குகதிர்க் கனலி (புறநானூறு: 35.6)
பசுமை நீங்கிக்  காயும் வகையில் நிலத்தைப் பிளக்கச் செய்யும் தீயைப் போன்ற கதிர்களை உடையது ஞாயிறு:
     நிலம் பக
    அழல்போல் வெங்கதிர் பைதுஅறத் தெறுதலின்          
                                                                      (அகநானூறு:1:9-10)
அச்சம் தரும் ஞாயிற்றின் ஒளிமிகுந்த கதிர் (கடல் நீரை மொண்டு சென்று) மழை பெய்விக்கும்:
     உருகெழு ஞாயிற்று ஒண்கதிர்
     . . . . . .  . . . .    .....  ....
     . . . .  . . . .  துளிசொரிந்தாங்கு                                  
                                      (புறநானூறு:160:1-3)
   எல்லாராலும் விரும்பப்படும் வெப்பத்தைத் தரும் ஞாயிறு
            வெவ்வெள் செல்வன் (பொருநராற்றுப்படை:136)
natpu
      வெப்பத்தால் அச்சுறுத்தும் கனலையுடையது ஞாயிறு
ஞாயிறு இருளை நீக்கும்:
         இருள் நீக்கும் சுடர்                                          (கலி:100:11)
   இருளை நீக்கிப் பகலை உண்டாக்குவதற்காக எழுவது ஞாயிறு:
       பாய்இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரு
      ஞாயிறு ..........                              .( மலைபடுகடாம் 84-85)
 ஞாயிற்று மண்டிலம் நகரும் அறிவியல் உண்மையையும் பழந்தமிழர் அறிந்திருந்தனர்.
விரிகதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு, வெண்மழை
  அரிதின் தோன்றும் அச்சிரக் காலையும்
என்பது சிலப்பதிகாரம். (14:104-105)
ஞாயிறு தென்திசை நோக்கி நகரும் காலங்கள்:
      கார்காலம், கூதிர் காலம், முன்பனிக்காலம் ஆகியவை.
ஞாயிறு வடதிசைச் செல்லும் காலங்கள்:        
           பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் எனக்  கண்டறிந்திருந்தனர்.
நாள்மீன்களும் கோள்மீன்களும் சூழ இருப்பது ஞாயிறு:
    ’வானிற விசும்பிற் கோள்மீன் சூழ்ந்த
     விளங்குகதிர் ஞாயிறு’ 
                     சிறுபாணாற்றுப்படை (242-247)
விண்பொருள்களாகக் கருதப்படுகின்ற வேறு இரு தெய்வங்களுக்குப் பிறந்தது ஞாயிறு என மூடத்தனமாக நம்பாமல் அறிவியல் தன்மையின் அடிப்படையில் கதிரவன் குறித்த கருத்துகளைத் தொடக்கக் காலத்திலேயே  தமிழர்கள் கொண்டிருந்தனர் என்பதற்கு இவை போல் பலச் சான்றுகள் உள்ளன.
தமிழர்களின் அறிவியல் வளத்தில் ஆரியக் கலப்பால் மாசு புகுந்துள்ளதைத் துடைக்க வேண்டிய கடமை இன்றைய தமிழர்களுக்கு உள்ளதல்லவா?



Thursday, March 3, 2011

Views about venus-andre' sonnaargal 34 :அன்றே சொன்னார்கள் 34-வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர்

>>அன்றே சொன்னார்கள்34


வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர்

                                                                                                                

natpu  கதிரவனிலிருந்து இரண்டாவதாக உள்ள கோள். எனினும் பூமியின் மிக அருகில் உள்ள கோள். வெள்ளிக்கோளின் ஆங்கிலப் பெயர் வீனசு (Venus) என்பதாகும். வீனசு உரோமப் பெண்கடவுள் ஆகும். இலத்தீன் மொழியில் வீனசு என்றால் காதல் என்றும் காமவிருப்பம் என்றும் பெயர். இதற்கு இணையான கிரேக்கப் பெண்கடவுள் பெயர் அபிரடைடி (Aphrodite). எனவே, வீனசு காதல் கடவுள் ஆகும். உரோமானியர்கள், கிரேக்கர்கள் முதலானோர்போல், பிறப்பு, உடன் பிறப்பு கதைகள் அடிப்படையில் இல்லாமல் அக்கோளின்  ஒளிவிடும் வெள்ளை நிற அடிப்படையில் தமிழர்கள் அதற்கு வெள்ளி எனப் பெயரிட்டனர்.
 பிற கோள்களையும் விண்மீன்களையும் விட வெள்ளி மிகுதியும் ஒளியுடையது என்பதை
வயங்குகதிர் விரிந்து வானகம் சுடர் வர (பதிற்றுப்பத்து :24 : 23)
என்னும் வரியில் புலவர் பாலைக் கௌதமனார் கூறுகிறார். (வயங்கு-விளங்குகின்ற)
முல்லைப் பூவின் நிறத்தை வெள்ளியின் ஒளியுடன் ஒப்பிட்டுப் புலவர் மாங்குடி மருதனார்
வெள்ளி அன்ன ஒள் வீ       (மதுரைக்காஞ்சி 280)
என்கிறார்.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் சுண்ணாம்பு வெள்ளியைப் போல் வெள்ளையாக இருக்கும் என்பதை
வெள்ளி அன்ன விளங்கும் சுதை  (நெடுநல்வாடை : 110)
என்கிறார்.

வெள்ளி போன்று விளங்கும் பூங்கொத்து
வெள்ளி அன்ன விளங்கு இணர் (நற்றிணை : 249: 3)
எனப் புலவர் உலோச்சனாரால் சொல்லப்படுகிறது. (இணர்-பூங்கொத்து)
மிகுந்த வெண்நிறமாகிய வெள்ளிக்கோள் ஏறு என்னும் ஓரையைச் (இடபராசி) சேருகிறது என்பதைப் புலவர் நல்லந்துவனார்  
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர (பரிபாடல் : 11: 4)
என்கிறார். இவை யெல்லாம் வெள்ளிக்கோளின் நிறம் பற்றிய விளக்கங்கள் ஆகும்.

இது மாலையில் இரவு அரும்பும் பொழுதும் காலையில் பொழுது விடியும் பொழுதும் தோன்றும். விடியற்காலையில் தோன்றுவதால் விடிவெள்ளி என்று கூறுவர். இதனையும் புலவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருள் செறிந்த விடியற்காலையில் விரிந்த கதிர்களுடன் வெள்ளி முளைப்பதைப் புலவர் முடத்தாமக்கண்ணியார்
விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்இருள் விடியல்  (பொருநராற்றுப்படை 70-71)என்கிறார்.

பறவைகள் குரல் எழுப்பிப் பறக்கும் விடியற்காலைப் பொழுதில் வெள்ளி தோன்றுவதைப் புலவர் கல்லாடனார்
natpu வெள்ளி தோன்ற புள்ளுக் குரல் இயம்ப,
புலரி விடியல்        (புறநானூறு : 385: 1-2)
எனக் குறிப்பிடுகிறார். 

விடியலில் வெள்ளி வானத்தில் எழுந்தது என்பதை
வெள்ளியும் இருவிசும்பு ஏர் தரும் (புறநானூறு 397 : 1)
எனப் புலவர் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் கூறுகிறார்.
வைகறையில் திங்களின் நிலவொளி மறைந்து வெள்ளி தோன்றியது எனப் புலவர் திருத்தாமனார்,
மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர (புறநானூறு 398 : 1)
என்னும் அடியில் கூறுகிறார்.

வைகுறு மீன் எனப் பெரும்பாணாற்றுப் படையும் (318:17)
அகநானூறும் (17:21)  வைகறையில் தோன்றும் கோள் என்பதைக்
கூறுகின்றன.

வைகறையில் எழுந்து விடிவெள்ளியின் தோற்றம் கண்டு காலத்தை உணர்ந்து குளித்தனர் என்பதை,
விளக்குறு வெள்ளி முளைத்து முன்தோன்ற
. . . .        . . . . .            . . . .
தெளித்தலைத் தண்ணீர் குளித்தனன் ஆடி
எனப் பின்னர் வந்த பெருங்கதை (1:53:81. .86) கூறுகிறது. இதுபோல் வெள்ளியை அடிப்படையாகக் கொண்டு பயணம் தொடங்குதல் முதலிய பல நிகழ்வுகள் நடந்தமையைத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
வெள்ளி கிழக்கே தோன்றும் என்பதைக்
குணக்குத்தோன்று வெள்ளியின் இருள்கெட விரியும் (நற்றிணை: 230: 4)
என்கிறார் புலவர் ஆலங்குடி வங்கனார்.
   குணக்குத்தோன்று வெள்ளி  (நற்றிணை 356 : 9)
எனப் புலவர் பரணரும் கூறுகிறார்.

வெள்ளி இடம் மாறித் தோன்றினாலும் வழக்கத்திற்கு மாறாகத் திசை மாறி நகர்ந்தாலும் தீமை விளையும் என்பது எல்லா நாட்டு மக்களின் நம்பிக்கை. அதுபோல், வெள்ளி தென்திசை தோன்றுமாயின் நாட்டில் கொடிய பஞ்சம், வறுமை முதலிய துன்பங்கள் வந்து எய்தும் என நம்பினர். ஆனால், குடி மக்கள் நலம் நாடும் செங்கோல் ஆட்சியில் இதனால் எத்தீமையும் விளையாது எனக் கோள் (கிரகங்கள்) ஆட்சியை விடக் கோல்ஆட்சியைப் பெரிதும் போற்றினர் தமிழ் மக்கள். அதற்கிணங்கப் புலவர்  வெள்ளைக்குடி நாகனார், வெள்ளி தெற்கே தோன்றி இன்னலை விளைவிப்பதாக இருந்தாலும் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சிச் சிறப்பாகவே இருக்கும் என்பதை
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் (புறநானூறு 35.7)
குறை வராமல் நிறைவளம் கொண்ட நாடு எனப் போற்றுகிறார்.

இளங்கோ அடிகளும்,
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் (சிலப்பதிகாரம் : 10 : 103)
வறட்சி இன்மையை விளக்குகிறார்.

புலவர் கபிலரும் பாரியின் ஆட்சிச் சிறப்பைப் பாடும் பொழுது
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்   (புறநானூறு 117.2)
பாரிமன்னனின் செங்கோல் ஆட்சியால் சிறப்பு மிக்கதாக உள்ளதாகக் கூறுகிறார்.

வெள்ளி தென்திசையில் தங்குதல் வறட்சியின் அடையாளம் என்பதைப் புலவர் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

வெள்ளி தென்புலத்து உறைய, விளைவயல்
பள்ளம் வாடிய பயன்இல் காலை  (புறநானூறு : 388 : 1-2)
என்கிறார்.

வெள்ளி மழைக்கோள் என அழைக்கப் பெறும். எனவே, தெற்கே அது தங்கும் காலம் மழைவளம் இன்றி வறட்சி ஏற்படும் எனக் கண்டறிந்து உள்ளனர்.
(பள்ளம் - நீர்நிலை; வாடிய - /விளையும் வயல்களும் நீர்நிலைகளும்/ வற்றிய; பயனில்காலை- பயனற்ற பஞ்சக்காலம்)
செவ்வாயும் வெள்ளியும் அருகே இருந்தால் மழை பெய்யாது.  அவ்வாறில்லாமல் மழை வேண்டும் வயல்களுக்கு வேண்டியவாறு மழைபெய்து வளம் மிகுந்த நாடு எனப் புலவர் குமட்டூர்க்கண்ணனார், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் நாட்டுச் சிறப்பைக் கூறும் பொழுது

அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப  (பதிற்றுப்பத்து 13 : 25-26)
என்கிறார்.
(அழல் - செவ்வாய்; மருங்கு - அருகே; புலம்-மழை தேவைப்படும் நிலப்பகுதிகள்)

 வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி(பதிற்றுப்பத்து :24.24) என்னும் புலவர்பாலை கௌதமனார், வெள்ளிக் கோளின் நிலையை விளக்குகிறார்.
(வறிது - சிறிது; இறைஞ்சிய - சாய்ந்த; மழைக்கோளாகிய வெள்ளி வடக்கே தாழ்ந்தால் மழை ஏற்படும்; தெற்கே எழுந்தால் மழையின்மை ஏற்படும்.)
மழைக்கோளாகிய வெள்ளி தென்திசையில் தெரிவது தீய நிகழ்வின் முன்னறிவிப்பு; மழையின்மையை உணர்த்தும். எனினும், அவ்வாறு,

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்  (பட்டினப்பாலை : 1-2)

சோழவேந்தன் திருமாவளவன் ஆட்சியில் காவிரி வற்றாது எனப்
புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறியுள்ளார்.
(வசைஇல்-குற்றம் இல்லாத; வயங்கு-விளங்குகின்ற)
இயற்கைச் சீற்றத்திலும் மக்கள் நலம்நாடும் செங்கோலாட்சி அப்பொழுது நடைபெற்றுள்ளது. இப்பொழுது .....?

Tuesday, March 1, 2011

Knowledge about Mercury: andre' sonnaargal 33அன்றே சொன்னார்கள் 33: pudhanaa? arivanaa?

>>அன்றே சொன்னார்கள்33


புதன் இயல்பைப் புரிந்து இருந்தனர்!

                                                                                                            

natpu
புதன் கோளுக்கு ஆங்கிலத்தில் மெர்க்குரி எனப் பெயர். மெர்க்குரீஇசு(Mercurius) என்னும்  இலத்தீன் சொல்லில் இருந்து இச் சொல் உருவானது. மெர்க்குரி எனப்படும் புதன் கோள் வணிகக்கடவுளாகவும் தூதுத் தேவதையும் மைய்யாவின் (Maia) மகனுமாகும். கிரேக்க, உரோமன் தொன்மக்கதைகள் போன்றுதான் ஆரியக்கதையும் இயற்கைக் கோள்களைத் தெய்வப் பிறப்பாக அல்லது தேவதைகளாகக் கற்பனைச் சிறகெடுத்துச் சொல்லப்படும். பின்னர் ஆரியத்தாக்கத்தால் கோள்களைப் பற்றிய மூடக் கதைகள் தமிழிலும் இடம் பெற்றிருந்தாலும் தொடக்கத்தில் அறிவியல் அடிப்படையில்தான் உண்மைகளை உணர்ந்து தெரிவித்துள்ளனர்.

புதனுக்குத் தூதன் எனத் தமிழில் பெயர் இருப்பதும் இதனைத் தூது தேவதையாக மேலைநாட்டினர் கருதுவதும் ஒப்பு நோக்கத்தக்கது. இரண்டிற்கும் அடிப்படைக் காரணமே புதனின் விரைவான இயக்கம்தான். தூதன் விரைவாகச் செல்ல வேண்டுமல்லவா?
புதன், கதிரவனுக்கு மிக அருகில் உள்ள கோள். எனவே கடு வெப்பமாகவும் இருக்கும். இதன் நிறம் சாம்பல். சூரியன் அருகில் உள்ளதால் தோன்றும் தோற்றத்தைக் கொண்டு செம்மஞ்சள் என்பாரும் உள்ளனர். ஆனால், புதனுக்குப் பச்சை என்றும் தமிழில் குறிப்பிட்டுள்ளனர். பச்சை என்பது நிறமாக இருப்பின், -சனியின் நிறம் கருப்பு, செவ்வாய் நிறம் சிவப்பு என அறிந்து இருந்தமையால் - ஆய்தற்குரியது. பச்சை என்றால் புதிய என்னும் பொருளும் உண்டு. எனவேதான் பிறந்த பருவத்தில் உள்ள  குழந்தையை நாம் பச்சைக் குழந்தை என்று சொல்கிறோம். அந்த வகையில் பெயர் அமைந்திருக்கலாம் என்பதை விளக்க விரும்புகிறேன். வெள்ளி  சூரியன் மறையும் பொழுதும் தோன்றும் பொழுதும் தெரியக் கூடியது. முதலில் வெள்ளியைக் கண்டுபிடித்துள்ளனர் தமிழர்கள். வெள்ளி போன்றே புதனையும் அந்தி அல்லது வைகறைக் காலத்தில் - சூரியன் மறைகின்ற அல்லது தோன்றுகின்ற காலத்தில் - பின்னர் அறிந்துள்ளனர். அஃதாவது, கீழ்வானில் சூரியன் தோன்றுவதற்குச் சற்று முன்பாகவும் மேற்குவானில் சூரியன் மறைவதற்குச் சற்றுப்பின்பாகவும் புதன் மங்கலாகத் தோற்றம் அளிக்கும். புதன் வேகமாகச் சுழல்வதாலும் சூரியன் அருகே உள்ளதாலும் முதலில் புலப்படாமல் பின்னரே புலப்பட்டிருக்கிறது. எனவே, வெள்ளி போன்றே குறிப்பிட்ட நேரங்களில் தெரியும் புதன் கோளைக் கண்டறிந்தவர்கள் புதிய விடிகோள் என்பதால் பச்சை எனப் பெயர் இட்டிருக்கலாம்.

இதனை அறிவன் என்றும் கூறுவர். கரிய கோளான சனியைக் கரியன் எனக் கூறியது போல் காண்பதற்கு அரியது ஆன இதனை அரியன் எனக் கூறி இச்சொல் அறியவனாக மாறி அறிவனாகச் சுருங்கி இருக்கலாம். புதனைப் புத்தியுடன் தொடர்பு படுத்தி அறிவுடையவன் என விளக்கம் கூறுவது தவறாகும். இத்தவறான புரிதலின் அடிப்படையில்தான் அறிஞன், மதிமகன், மேதை முதலான பெயர்களில் புதன் அழைக்கப்பட்டுள்ளது(பிங்கல நிகண்டு: பா 231). புதவு என்பது வாயிலைக் குறிக்கும். சூரியனைச் சுற்றி உள்ள மண்டிலத்தில் சூரியனுக்கு அடுத்ததாகச் சூரிய ஒளி பரவும் இடத்தின்  வாயில்போல் அமைந்துள்ளதால் புத் என்னும் வேர்ச்சொல்லின் அடிப்படையில் புதன் எனப் பெயர் வந்திருக்கலாம்.
natpu மரபு தொடருவதற்கு வாயிலாகப் பிறக்கும் மகன் அல்லது மகள், புதல்வன் அல்லது புதல்வி என அழைக்கப்படுகின்றனர் அல்லவா? இவை போன்று சூரிய மண்டிலத்தின் வாயில் போல் அமைந்துள்ளதை உணர்த்தும் புதன் என்னும் சொல் அறிவியல் உண்மையை உணர்த்தும் தமிழ்ச் சொல்லாகும்.

‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்ற பழமொழியும் அறிவியல் உண்மையை நமக்கு உணர்த்துகிறது. இங்கு பொன் என்பது வெள்ளியைக் குறிக்கும்.(வெள்ளியின் மற்றொரு பெயர் வெண்பொன் என்பதாகும்.) இதனைக் கதிரவன் ஒளியில் காண்பது அரிது. இவ்வாறான சூழலில் வெள்ளியைக் காண முடிந்தாலும் கதிரவனுக்கு மிக அருகில் உள்ளதால் புதனைக் காண இயலாது என்னும் உண்மையைக் கூறியுள்ளதால் நம் முன்னோரின் வான நூல் அறிவு வியக்கத் தக்கதாகும்.

எத்தனை எத்தனை அறிவியல் உண்மைகள் நம்மிடையே மூடநம்பிக்கைப் போர்வையில் மறைக்கப்பட்டு உள்ளனவோ!

Followers

Blog Archive