Wednesday, December 31, 2014

வருகின்ற ஆண்டுகள் இன்பம் தருகின்ற ஆண்டுகளாகட்டும்!

வருகின்ற ஆண்டுகள் இன்பம் தருகின்ற ஆண்டுகளாகட்டும்!

  வரும் தை முதல் நாள் திருவள்ளுவர் 2046 ஆம் ஆண்டுப்பிறப்பு வருகிறது. அதற்கு முன்னால் மார்கழி 17 அன்று 2015ஆம் ஆண்டு பிறக்கிறது.
  ஒவ்வோர் ஆண்டையும் நாம் நம்பிக்கையோடுதான் எதிர்பார்க்கி்றோம்! ஆனால், எண்ணிய யாவும் எய்துவதில்லை. இருப்பினும் வரும் ஆண்டு தமிழர் உரிமை எய்தும் ஆண்டாக அமையும் என எதிர்பார்ப்போம்! வெறும் எதிர்பார்ப்பு பயனைத் தராது அல்லவா? எனவே, தமிழர்களின் தேசிய மொழி தமிழே என்பதையும் தமிழர்களின் இனமும் தமிழே என்பதையும் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் உள்ள உரிமை ஆட்சியில்தான் நாம் மகிழ்வுறமுடியும் என்பதையும் அப்பொழுதுதான் உலகத் தமிழர்கள் விடியலைக் காண்பார்கள் என்பதையும் நாம் உலகிற்கு உணர்த்துவோம்!
  தமிழன்பர்கள் திருவள்ளுவர் ஆண்டிற்கு வாழத்து தெரிவிப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டது என எண்ணுகிறார்கள். இவ்வாண்டு முறையை நாம் எல்லா இடங்களிலும் பயன்படுத்தினால்தானே இது நிலைக்கும். அரசின் ஆணைகளில் சில துறைகளின் மடல்களில் திருவள்ளுவர் ஆண்டு இடம் பெறுகின்றது. ஆனால், அரசு நிகழ்வுகளிலும் தனிப்பட்ட நிகழ்வுகளிலும் அடிக்கல்நாட்டு விழா அல்லது தொடக்கவிழா முதலான கல்வெட்டுகளிலும் திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப்பெறுவதில்லை. தமிழ் ஆசிரியர்கள், தமிழ்த்துறையினர் குடும்ப நிகழ்வு அழைப்பிதழ்களில் திருவள்ளுவர் ஆண்டைக் காண இயலுவதில்லை. இலக்கிய இதழ்களில் திருவள்ளுவர் ஆண்டு இடம் பெறுகின்றது. இதழாசிரியர்கள் இதழ் நிகழ்வுகளிலும் குடும்ப நிகழ்வுகளிலும் திருவள்ளுவர் ஆண்டு புறக்கணிக்கப்படுகின்றது. தமிழ்ச்செம்மொழி மத்திய நிறுவனத்திலும் திருவள்ளுவர் ஆண்டு பின்பற்றப்படுவதில்லை. பெரும்பான்மைக் கிறித்துவ தமிழன்பர்கள், திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பிட்டால் கிறித்துவ ஆண்டை இழிவுபடுத்துவதாகத் தவறாக எண்ணுகிறார்கள். நாம் நடைமுறை கருதி இரண்டையும்தான் குறிக்குமாறு கூறுகிறோம். கிறித்துவராகத் திருவள்ளுவரைக் கொண்டாடுநருக்கும் திருவள்ளுவர் ஆண்டு என்பது தீண்டத்தகாததாகவே உள்ளது. இந்நிலை மாற வேண்டும்.
  தமிழராகப் பிறந்தவர்கள் எங்கிருந்தாலும் எவ்வலுவலில் இருந்தாலும் எந்நேர்வாக இருந்தாலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிக்க வேண்டியது தம் கடமை என எண்ணிச் செயல்பட வேண்டும்.
  தமிழ்வழிக்கல்விக்கு மூடுவிழா நடத்தினால் அவர்களுக்கு ஓடுவிழா நடத்த மக்கள் அணியமாக இருப்பர் என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டும்!
  தமிழ்ப் பெயரில்லா படங்களையும் தமிழைக் கொலை செய்யும் ஊடகங்களையும் தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிரான படைப்புகளையும் தமிழ்நாட்டிலிருந்து அகற்ற வேண்டும்!
  தமிழ் என எண்ணும் பொழுது தாம் சார்ந்துள்ள கட்சி, சமயம்,சாதி முதலான பாகுபாடுகளைத் தூக்கி எறிய வேண்டும்!

தமிழ் ஈழ மக்களின் படுகொலைக்குக் காரணமானவர்கள் யாராயிருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் தமிழ் ஈழம் உரிமை பெற்றுத் தனியரசாய்த் திகழ வேண்டும் என்பதையும் இதற்கு எதிரான அரசியல்வாதிகளையும் கலைஞர்களையும்இருக்கின்ற இடம் தெரியாமல் ஆக்க வேண்டும்!
எழுத்தையும் மொழியையும் காத்து இனத்தைக் காப்பதில் உறுதி கொள்ள வேண்டும்!
“தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு! ” என்பதைச் செயற்படுத்திக் காட்ட வேண்டும்.
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் குடி
(திருவள்ளுவர், திருக்குறள் 1022)
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழ் 59 feat-default
இதழுரை
மார்கழி 13, 2045 / திசம்பர் 28, 2014

[புத்தாண்டு வாழ்த்தும் வேண்டுகோள்களும், 2014 ]



கலைச்சொல் தெளிவோம் 19: காழ்நீர் –coffee

  தேயிலையிலிருந்து ஆக்கும் நீரைத் தேநீர் எனச் சுவையாகச் சொல்கிறோம். ஆனால் காப்பி(coffee) என்பதற்கான சரியான சொல் வழக்கில் வராமையால் காப்பி என்பதே நிலைக்கிறது. காப்பிக் கொட்டையில் இருந்து உருவாக்குவதால் கொட்டை வடிநீர் எனச் சொல்லப்பட்டது வேறு வகையாகத் தோன்றி மக்கள் நாவில் இடம்பெறவில்லை.
கன்றின் குளம்படி போன்று உள்ளதால் காப்பி எனப் பெயர் பெற்ற மூலச் சொல் அடிப்படையில் குளம்பி எனச் சொல்லப்பட்டதும் இதனால் குழம்பிப் போவதாகக் கூறிப் பயன்பாட்டுத் தன்மையை இழந்துள்ளது.
காழ் எனில் கொட்டை எனப் பொருள். காழ்(115)அரைக்கப்பட்டுப் பெறப்படும் தூளில் இருந்து உருவாக்கப்படும் சுவை நீரைக் காழ்நீர் என்று சொல்லலாம். தீஞ்சுவையுடைய நீர் தீம்நீர் > தீநீர் என்றும் சொல்லலாம்.   ஆனால், தவறான பொருள் கொள்ளாத வகையில் இப்பொருளைப் புரிந்து யாவரும் பயன்படுத்தினால் தேநீர், தீ நீர் என்னும் சொல்லிசை முறையால் இச்சொல்லே
காழ்நீர்/ தீநீர் –காப்பி(coffee)
- இலக்குவனார் திருவள்ளுவன்


பெண்ணுரிமைக் காவலர் பேராசிரியர் இலக்குவனார்

பேரா.சி.இலக்குவனார்+17

பெண்ணுரிமைக் காவலர்

பேராசிரியர் இலக்குவனார்

மகன் என்னும் சொல்லைத் தெய்வப்புலவர்திருவள்ளுவர் கையாளும் இடங்களில் மகளைப் புறக்கணித்து மகனைமட்டுமேஉயர்த்தும் வகையில் அவர் எழுதியுள்ளதாகப்  பலரும்தவறானவிளக்கங்கள்அளித்துள்ளனர். இவற்றை மறுத்து மகன் எனக் குறிப்பிடும் இடங்கள் மகளுக்கும்பொருந்துவதைப் பேராசிரியர் விளக்குகிறார்.
சான்றோன் எனக் கேட்ட தாய், தந்தைமகற்காற்றும் நன்றி,  மகன் தந்தைக்காற்றும் உதவி, கொழுநன் தொழுதெழுவாள்முதலான குறளடிகளுக்கு ஆணையும் பெண்ணையும் இணையாகக் கருதிய அக்காலச்சூழலையும் திருவள்ளுவர் கருத்தையும் நன்கு விளக்கி யுள்ளார். இவ்வாறுபெண்களும் ஆண்களும் இணை என்ற பழந்தமிழ்நெறிக்கு மாறான பிறரின்  விளக்கங்களுக்குப் பேராசிரியர் தந்துள்ள மறுப்புகள் அனைவரும் படித்தறிந்துபின்பற்ற வேண்டியன வாகும்.
பெற்றோர் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையாக,
தந்தை  மகற்குஆற்றுநன்றிஅவையத்து
முந்தி இருப்பச் செயல்’ (திருக்குறள் 67) 
என்கிறார் உலகப் புலவர்  திருவள்ளுவர்.பரிமேலழகர் வழியில் மொழிஞாயிறு பாவாணரும் மகனுக்குத் தந்தை செய்ய வேண்டியகடமையாகத்தான் கருதுகிறார். ஆண்மகவையும் பெண்மகவையும் இணையாக எண்ணாதது ஏன்என்று தெரியவில்லை. ஆனால், குறள்நெறி அறிஞர் பேராசிரியர் இலக்குவனார், வேறுபா டின்றிப் பின்வருமாறு விளக்கம் தருகிறார்:
‘மகற்கு’ என்று கூறினாலும் ‘மகளும்’ அடங்கு வர். தந்தை தம் குழந்தைகட்கு நற்கல்வியை அளித்து எங்குச் செல்லினும்எவருக்கும் முற்பட்ட நிலையில் இருக்குமாறு செய்தல் வேண்டும்; அவை கூடும்இடங்களில் அவையின் பின் இருக்கைகளில் அமராமல், முன் இருக்கைகளில் அமரும்தகுதியைக் குழந்தை கட்கு உண்டாக்க வேண்டும். இக்குறட்பா வாயிலாகப்பெற்றோரின் கடன் வலியுறுத் தப்பட்டுள்ளது.’தந்தை மகனுக்குச் செய்ய வேண்டியகடமையாகச் சொல்லாமல் தந்தை, தாய் ஆகிய பெற்றோர் மகன், மகளாகிய தம்மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையாகப் பேராசிரியர் விளக்கியுள்ளதுஎந்நாட்டவருக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது.
ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தாய் (திருக்குறள் 69) குறித்துப் பரிமேலழகர், பெண் இயல்பாய்அறியாமை மிகுந்தவள்எனத் தவறாக விளக்கியுள்ளார். பேராசிரியர், இதனை மறுத்து, ‘‘பட்டங்கள்பெறுவோம்; சட்டங்கள் செய்வோம்; பாரில் எமக்கு ஈடில்லை’ என்று கூறும்இக்காலத்துக்கு அவர் கூற்றுப் பொருந்தாது. எக்காலத்துக்கும் பொருந்தாது.திருவள்ளுவரும் அவ்வாறு கருதிக் கூறினாரிலர். பரிமேலழகர் பெண்ணறிவைப்போற்றாது தவறாக உரைகூறி விட்டார்’’என விளக்கி யுள்ளார்.
பெண்மைக்கு எதிராக எங்கு களைதோன்றி னாலும்அதனைக் களையும் காவலராகப் பேராசிரியர் திகழ்ந்துள்ளார். எனவேதான் கல்விஆண் பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார்.இதனை ‘அறிவறிந்த மக்கட்பேறு (குறள் 71) என்பதை விளக்கும்பொழுதும் பின்வருமாறுவெளிப் படுத்துகிறார்: ‘‘பரிமேலழகர் ‘அறிய வேண்டு வனவற்றை அறிதற்குரிய’ எனப் பொருள் உரைத்ததும், ‘அறிவறிந்த என்றதானால் மக்கள் என்னும் பெயர்பெண்ணொழித்து நின்றது’ என்றதும் பொருத்தமில்கூற்றேயாகும். மக்களாய்ப்பிறப்போர் அனைவரும் ‘அறிதற்குரியர்’தாம். அறிதற்குரியோருள்தான் சிலர்அறிவுடையோராகவும் சிலர் அறிவற்ற வராகவும் வளர்ந்து விடுகின்றனர். அறிவறிந்தவர்தாம் செல்வமாகக் கருதற்குரியர். மக்கள் ஆண் பெண் இருபாலார்க்கும்உரியசொல். பெண் ஒழித்து நிற்பதற்குக் காரணம் பெண்கள் அறிய மாட்டாதவர்கள்என்னும் தவறான கருத்தேயாகும்  பெண்களும்ஆண்களைப்போன்றுஅறியும்ஆற்றல்உடையவர்களே என்பது வரலாறு உணர்த்தும் உண்மையாகும்.’’
கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் (திருக்குறள் 54) என்பதை விளக்கும் பொழுது, ‘இருபாலாரிடத்தினும் கற்பு நிலைபெறுகின்ற போதுதான் பெண்ணின் பெருமை நன்கு வெளிப்படும்’எனக் கற்புநெறிஇருவருக்கும் பொதுவே என்னும் தமிழர் நெறியை விளக்குகிறார்.பெய்யெனப்பெய்யும் மழை (திருக்குறள் 55) என்பதை விளக்கும் பொழுது, ‘நஞ்சுண்டவன்சாவான்’ என்றால், ‘நஞ்சுண்ட வளும் சாவாள்’ என்பது வெள்ளிடைமாலை. ‘திருடிவயவன் ஒறுக்கப்படுவான்’ என்றால், ‘திருடியவளும் ஒறுக்கப்படுவாள்’ என்பது தானே போதரும். அவ்வாறே இவ்விடத்தும் கருதுதல் வேண்டும். “தெய்வம்தொழாஅன் மனை விதனைத் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை” என்பதும்கொள்ளப்படல் வேண்டும்’’ என இரு சாரார்க்கும் பொதுவான விளக்கம் நல்குகிறார்.
- தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 
ஆசிரியர் :இலக்குவனார் திருவள்ளுவன்
வெளியீடு:  கோவை ஞானியின் தமிழ்நேயம் 49
52puthiyaparvai_ilakkuvanar_chirappithazh01
தரவு : கேசவன்


Followers

Blog Archive