Saturday, October 31, 2015

திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும் – ஆய்வுரை 1. : இலக்குவனார் திருவள்ளுவன்

திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும் பின்அட்டை - திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும்

1


  உலகப் பொதுநூலாம் திருக்குறள் உலக மொழிகளில் மிகுதியாக மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய நூல். ஆதலால் உலக அறிஞர்களின் பாராட்டிற்குரிய நூலாகவும் திகழ்கிறது. திருக்குறளை அவரவர் நோக்கில் ஆராய்வதற்கு இடம் தரும் வகையில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளை யாத்துள்ளார். இதனால் சிலர் தாங்கள் சார்ந்துள்ள கருத்தியத்திற்கு ஏற்றாற்போல் திருக்குறளுக்குத் தவறான விளக்கம் அளித்துள்ள சில நேர்வுகளும் உள்ளன. எனினும் ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட திருக்குறள் இன்றைக்கும் புதுப்பொலிவுடன் விளங்குகிறது. எப்பாலோரும் பாராட்டும் முப்பாலாம் திருக்குறள் வாழ்வியல் நூலாக, அறநூலாக, தலைமைக்கு வழிகாட்டும் நூலாக, வழி தவற விழையார்க்கு ஊன்றுகோலாக, முயற்சியுடையார்க்குத் தூண்டுகோலாக, இலக்கியச் சுவையுடன் கூடிய இனிய நூலாக விளங்குகிறது.
  மக்கள் நூலாகத் திருக்குறள் விளங்குவதால்தான் காலந்தோறும் திருக்குறளுக்கு உரைநூல்களும் விளக்க நூல்களும் தோன்றுகின்றன. இதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர் தமிழ்ப்போராளி குறள்நெறி அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார். திருக்குறளைப் பகுதி, பகுதியாகப் பகுத்துத் தந்தால் மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் பயனுள்ளதாக இருக்கும் என அவர் கருதினார். எனவே, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்பதுபோன்று திருக்குறளை, அரசியல், இல்லறம் முதலான பல்வேறு பகுப்பு அடிப்படையில் நூல்களை எழுதி வெளியிட்டார். பேராசிரியர் சி.இலக்குவனார் வழியில், திருக்குறள் விளக்கக் கதைகள் என்பன போன்று பகுதி, பகுதியாக விளக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுள் குறிப்பிடத்தக்கப் படைப்பாளியாகப் பேராசிரியர் வெ.அரங்கராசன் திகழ்கிறார்.
  ஏழு சீர் திருக்குறளுக்கு ஆறு சொல்லில் உரை தரும் இவரின் ‘திருக்குறள்அறுசொல்உரை’ இவரின் உரை நயத்திற்கும் எழுத்து வன்மைக்கும் சான்றாகத் திகழ்கிறது. அதன்பின்னரும் பல்வேறு தலைப்புகளில் திருக்குறளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் நூல்களைப் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த அடிப்படையில் வெளியான குறள்பொருள் நகைச்சுவை’, குறட்சுவையும் நகைச்சுவையும் என்னும் இவரது இரு நூல்களும் இவரின் திருக்குறள் புலமையையும் நகைச்சுவைத் திறனையும் எடுத்துக் காட்டுவனவாகும்.
  இப்பொழுது திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும் என்று நமக்கு இலக்கிய விருந்து அளித்துள்ளார். ‘திருக்குறள் தேனீ’ என அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவராகக் குறள்மலர்களில் உள்ள தேனை எடுத்துப் பக்குவமாக நமக்கு அளிக்கிறார். அதே நேரம், பிறரிடமிருந்து வேறுபட்டு, நகைச்சுவையுடன் இணைத்துக் குறட்சுவையை நமக்கு ஊட்டுகிறார். நகைச்சுவைத் தேனில் அறிவுரை மருந்தைக் குழைத்துத் தருவதால் இவரது நூலினை எடுத்தவர்கள் படித்து முடிக்காமல் கீழே வைக்க மாட்டார்கள்.
  ‘திருக்குறள் தேனீ’, ‘குறளாய்வுக் குரிசில்’, ‘திருக்குறள் பரப்புநர்’, ‘நகைச்சுவை நாயகர் என இவருக்கு வழங்கப் பெற்ற விருதுகளே திருக்குறளில் இவருக்குள்ள ஈடுபாட்டையும் நகைச்சுவைத்திறனையும் எளிதில் விளக்கும். ‘உலகத்திருக்குறள் உயராய்வு மையம்’ முதலான திருக்குறள் அமைப்புகளில் பொறுப்பாளராக இருந்து திருக்குறள் தொண்டும் ஆற்றி வருகிறார். பொழிவுகள், கட்டுரைகள், நூல்கள் எனப் பல வழிகளிலும் திருக்குறளைப் பரப்பி வருகிறார்.
  நகைச்சுவையை விரும்பாதோர் நானிலத்தில் உள்ளரோ? இலரே! எனவே, நகைச்சுவையுடன் அளிக்கும் இவரின் திருக்குறள் படைப்புகள் படிப்போரின் விருப்பங்களாக மாறி விடுகின்றன. அயற்சொல் கலவாத நல்ல தமிழ்நடை, கவிதைத் தொடர் இழையோடும் சுவையான நடை, உள்ளத்தை ஈர்க்கும் சொல்லாட்சியுடன் கூடிய உயரிய நடை என இவரது படைப்புகள் நடைச்சிறப்புடன் திகழ்கின்றன. இவ்வகையில் இவரின் படைப்பான ‘திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும்’ என்பது மற்றுமோர் இலக்கிய விருந்தாகும்.
  இந்நூலில் நான்கு திருக்குறளை எடுத்துக்கொண்டு பல்சுவை நோக்கில் விளக்குகிறார். சுவைக்கவும் சிந்திக்கவும் இவர் தரும் தலைப்புகளும் திருக்குறள்களும் வருமாறு:
  1. முதலில் வீடு, அடுத்தது நாடு
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நலலாற்றின் நின்ற துணை.
2.இன்பச் சொல் சொல்! துன்பச்சொல்லைக் கொல்!
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந்தற்று
  1. வெல்லும்படிச் சொல்லைச் சொல்லும் வல்லமை
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம
யாநலத்து உள்ளதூம் நன்று.
  1. நல்வழிப் பொருளே நன்மைகள் நல்கும்.
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீ(து) இன்றி வந்த பொருள்.
  ஒவ்வொரு தலைப்பிலும் தொடக்கத்தில் திருக்குறள் பற்றிய ஆன்றோர் உரை, இயல்பான உரை, விரிவான உரை, பிறரின் மாறுபட்ட உரைவிளக்கங்கள், விளக்கவுரை, இவருடைய கவிதை, நகைச்சுவைக் கதை, நகைச்சுவைத்துணுக்குகள், திரைப்பாடல் எனப் பலவகையிலும் திருக்குறள் கருத்தை நம் உள்ளத்தில் பதிய வைக்கிறார்.
  திருக்குறளின் மையக்கருத்தை விளக்கப் பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகிறார். சான்றாக, ‘இயல்புடைய மூவர் யார்?’ என்பதற்கு 61 அறிஞர்களின் உரைகளைத் தொகுத்துத் தந்துள்ளார். இவற்றுள் சிலரின் கருத்துக்கேற்ப மூவர் என்பது பெற்றோர், மனைவி மக்களைக் குறிக்கும் என்கிறார். அதற்கு விளக்கமாக, “இயல்பாக – இயற்கையாக வந்து அமையும் உறவினர்களாகிய பெற்றுவளர்த்து ஆளாக்கிய பெற்றோர், பேணிக்காக்க வந்த மனைவி, பேறுகளுள் எல்லாம் பெரும்பேறாய் வந்தமைந்த பிள்ளைகள் ஆகிய மூவகையினர்” எனச் சிறப்பாக நமக்குத் தெரிவிக்கிறார். திருமணமாகாதவர்க்கு மனைவி, மக்கள் பொருந்தாது மணமாகியும் மகப்பேறு வாய்க்காதவர்க்கு மக்கள் என்பது பொருந்தாது எனவேதான் பேராசிரியர் சி.இலக்குவனார் மாணவர், தொண்டர், அறிவர் என்பார். எனினும் தம் கருத்தை அழகுற விளக்கியுள்ளார். “மனைவி என்பவள் குருதிவழி உறவினளாக இருப்பினும் இல்லாவிட்டாலும் இல்லாளாக வந்த பின்னர், அக்குடும்பத்தின் குருதி ஓட்டத்தில் கலந்து விடுகிறாள். அதனால் இல்லத்தரசியும் இயல்புடைய உறவள் எனும் நிலைக்கு மாறிவிடுகிறாள். தாய், தநதைக்கு எத்துணை உரிமையும் கடமையும் முதன்மைப்பாடும் உண்டோ அத்துணையும் அவளுக்கும் அமைந்து விடுகிறது. அதனால் செயற்கை உறவளாக இருந்திருந்தாலும் குடும்பத்துக்குள் வந்தபின் இயற்கை உறவளாக மாறிவிடுகின்றாள்”. என இவர் தரும் விளக்கம் பெண்களின் உயர்வை உணர்த்துவதாக உள்ளது. மாறுபடுவோர் ஏற்பதற்காகப் பிறர் விளக்கமும் அளித்துள்ள பாங்கும் பாராட்டிற்குரியது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
ஆசிரியர், அகரமுதல மின்னிதழ்,
Thiru. Tiruuvalluvan, ஒளிப்படம்-இலக்குவனார் திருவள்ளுவன்


Thursday, October 29, 2015

வலைமச் சொற்கள் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்


thalaippu_valaimachorkal

5

ஐ.) இலி /இன்மை(null)
நல்(null)  என்றால் வெறுமை அல்லது ஏதுமற்ற என்று பொருள்.  நல் என்னும் தமிழ்ச்சொல்லிற்கு நல்ல என்று பொருள்.  ஆனால், ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தினால் நல்ல என்னும்  பொருந்தாப் பொருள் அல்லவா தோன்றும்.
நல் என்று தமிழ்வரிவடிவிலேயே பயன்படுத்திவிட்டு நல் என்றால் நல்ல அல்ல என்று சொல்வதால் பயனில்லை. அந்த இடத்தில் வேண்டுமென்றால் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் கலைச் சொற்களைப் பயன்படுத்தும் இடங்களில் படிப்போர் தவறாகவே எண்ணுவர். எனவே, நல்மோடம் எனத் தமிழில் பெயர்த்து எழுதுவதைவிடத் தமிழ்க்கலைச்சொல்லையே பயன்படுத்த வேண்டும்.
மோடம் (Modem – Modulation/Demodulation) என்பதுதரவை மாற்றித் தரும் கருவி; அஃதாவது, கணிணியில் இருந்து தொலைபேசிக் கம்பிகள் வழியாக அனுப்புவதற்காக அல்லது தொலைபேசிக் கம்பியில் இருந்து கணிணிக்கு வந்துசேருவதற்காகத் தரவினை மாற்றித் தரும் கருவி; ‘தருவி’ யின்றி இரு கணிணிகளை வடம் (கேபிள்) வழி  இணைப்பதும் உண்டு. இவ்வடமே  தருவியிலி  (null modem)  எனப்படுகிறது.
இலி – null;
தருவியிலி – null modem
தருவிச்சொற்கள் சில :
மாறு நிலை தருவி(சமச்சீரற்ற என்பதைவிட மாறுபட்ட  வேகங்களை உடையதால் மாறுநிலை என்பது சரியாக அமையும்.)
Asymmetrical modem
தொலைவு வரம்பு தருவி Limited-distance modem
நேரிணை தருவி Direct connect modem
ஒருங்கிணை   தருவி Integral modem
தொலைபேசித் தருவி Telephone modem
குரல் தகைவு தருவி Voice-capable modem
குரல் உணர்    தருவி Voice recognition modem
அகநிலை தருவி Internal modem
அழை  நிலை தருவி Dial-up modem
வட நிலை தருவி Cable modem
தொடர்முறை தருவி Analog modem
ஒலிக்குறிப்பு தருவி Acoustic modem
ஒ.) விசைப்பி – switch
ஆளி, இணைப்பி, இணைப்புமாற்றி, சுற்றிணை, சொடுக்கி, தாவி, திறப்பான், திறப்பி, தூண்டுவிசை, தொடர் மாற்றி, தொடு சாவி, நிலைமாற்றம், நிலைமாற்றி, பாதைமாற்றி, மடை, மின் பொருத்தி, மின்விசை மாற்றுக்குமிழ், விசை இயக்கி, விசை,
என சுவிட்சு/switch என்பதற்கு ஒவ்வொரு துறையில் ஒவ்வொரு வகையாகக் கையாளுகின்றனர் .பயன்முறை அடிப்படையில் பெரும்பாலும் சரியாக இருந்தாலும் பொருள் மயக்கம் தரும் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு சொல்லும் சரியான பொருளை வெளிப்படுத்தவில்லை என ஒரு சாரார் கருதுவதாலேயே புதுப்புதுச் சொற்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்துகின்றன.
விசை என்னும் சொல், கீ/key என்னும் பொருளில் பரவலாகக்   கையாளப்படுவதால், இதற்குப் பொருந்தாது. எனினும் விசை அடிப்படையில், விசைப்பி எனலாம்.விசைப்பு என்பதை switching  எனலாம்.
விசைப்பி– switch
தன்னியக்க வலைம விசைப்பி– Automatic network switching
ஓ.) சீர்மம் (ideal)
இலக்கியலான, இலட்சியம், உயர் குறிக்கோள், உயர்வான, எடுத்துக்காட்டாக விளங்குவது, கற்பனைச் சார்பான, குறிக்கோள் நிலை, குறிக்கோள் வடிவான, கனனவியலான, குறிக்கோள், குறைவிலா நிறைசெப்பம், சால்பு சீர்மை, செயல்துறை சாராத, நிலையான, கருத்தியலான,  புனைவியலான, பொ௫த்தமான, முழுநிறைநலம், முன்மாதிரி,
என ஐடியல்/ ideal என்பதற்கு வெவ்வேறு சொற்கள் கையாளப்படுகின்றன.
சீர்மை அடிப்படையில் சீர்மம் எனக் குறித்து சீர்ம வலைமம் எனலாம்.
சீர்மம் –ideal
சீர்ம வலைமம் – ideal network
இவ்வாறு வலைமச் சொற்களைத் தமிழில் எண்ணித்தமிழிலேயே வெளிப்படுத்தலாம். முதலில் குறிப்பிட்டவாறு காலச்சுருக்கத்தால்  சில மட்டுமே பார்த்துள்ளோம். எனினும் அனைத்துக் கலைச் சொற்களையும் தமிழில் பயன்படுத்தலாம்.ஆனால், நடைமுறையில் கணிணிநூல்களிலும் கட்டுரைகளிலும் தமிழ்வரிவடிவில் ஆங்கிலமே பரவலாகப்பயன்படுத்தப்படுகின்றது.
  தமிழ்க்கலைச் சொற்களை உருவாக்குவதிலும் பயன்படுத்துவதிலும் ஆர்வம் மிக்கவர்களே, அவற்றைப் பயன்படுத்தாமை அல்லது  புதிய கலைச்சொற்களைத் தேடுவதில் நாட்டம் காட்டாமை போன்றவற்றால் இவ்வாறு, ஆங்கிலக் கலைச் சொற்களைத் தமிழ் எழுத்து வடிவில் பயன்படுத்தும் அவலத்தை அரங்கேற்றுகின்றனர்.  சான்றாகச்  சொல்ல வேண்டுமெனில் வலைமம் குறித்து 960 பக்கத்தில் ‘நெட்வொர்க் தொழில்நுட்பம்’ என்னும் நூலை எழுதி உள்ள நூலாசிரியர், பலரின் தமிழார்வத்திற்கு உந்துதலாக உள்ளவர்.
 ஆனால், இந்நூலைத்தமிழ் நூல் என்று கூறுவதற்கு இயலவில்லை. அருவினை ஆற்றும் ஆர்வத்தில் பெருமுயற்சி மேற்கொண்டு நூலை உருவாக்கி உள்ளார் ஆசிரியர். ஆனால்,   அருவினை அருந்தமிழ்க்கொலை புரிய அல்லவா  துணை நின்றுள்ளது.“மார்னிங் எய்ட் ஓ கிளாக் பிரேக்  ஃபாசுட் முடித்துவிட்டு நைன் ஏஎம் வண்டியில் ஆஃபீசுக்குப்  புறப்பட்டு டென் ஏஎம்  போய்ச்  சேர்ந்தேன்” என்று அன்றாடம் மொழிக் கொலை புரிவதற்கும் முழுக்க முழுக்க ஆங்கிலக் கலைச் சொற்களையே பயன்படுத்தி நூலை எழுதுவதற்கும் வேறுபாடு இல்லை. இவ்வாறு எழுதுவது மொழிக் கொலை மட்டுமல்ல அறிவுக் கொலையுமாகும்.ஆங்கிலத்தில் கணிணியியல் படித்தவர்கள் தமிழறிந்தவர்களாக இருப்பின் அவர்களுக்கு இந்நூல் எளிமையாக அமையலாம். ஆனால் முதலிலேயே தமிழில் படிப்பவர்களுக்கு ஆங்கிலக்கலைச்சொற்களை முழுக்க முழுக்கப்பயன்படுத்தி எழுதி உள்ளமையால், இந்நூல் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். உளவியல் அடிப்படையில் இது சரியானதல்ல. சொல்லை அறிமுகப்படுத்தும்பொழுதே தமிழில் அறிமுகப்படுத்தினால் எளிதில் புரியும். ஆதலின் தமிழ்க்கலைச் சொற்களைப் பயன்படுத்தி மறுபதிப்பு வெளியிடுவது ஆசிரியருக்கும்பெருமை சேர்க்கும்; படிப்போர்க்கும் பயன்பெருக்கும்; தமிழுக்கும் வளமை நல்கும்.
  இவ்வாறே அனைத்துப் படைப்பாளர்களும் நல்ல தமிழிலேயே எழுத வேண்டும். தெரியாச் சொல்லிற்கான உரிய சொல்லை அறிவதில் சோம்பல், முயற்சியின்மை, நாட்டமின்மை போன்றவற்றால் தமிழுக்குக் கேடு செய்வதைப் படைப்பாளிகள் உணர வேண்டும்.  இத்துறையாயினும் வேறு எத்துறையாயினும், பாடநூல்களும் தமிழ்க்கலைச் சொற்களைப் பயன்படுத்தியே உருவாக்கப்பட வேண்டும்.
 அறிவியல், தமிழ்வழி  இருப்பின் அறிவியலும்  வளர்ந்தோங்கும்! தமிழும் சிறந்தோங்கும்!
பார்வையில் பட்டவை :
  1. Computer Dictionaryகணிப்பொறி அகராதி (English – Tamil)  – இராம்குமார் ; திருநெல்வேலி தெ.சை.சி.நூ.கழகம்
  2. மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி – மணவை முசுதபா ; மணவை வெளியீடு
3.நெட்வொர்க் தொழில்நுட்பம் – மு.சிவலிங்கம் :பாரதி பகத் பதிப்பகம்
  1. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரகராதி
  2. தமிழ்இணையக்கல்விக்கழகத்தின் கலைச்சொற்கள் தொகுப்பு
  3. ஐரோப்பிய அகராதி (http://eudict.com/)
  4. தமிழ் கியூபு அகராதி (http://tamilcube.com/)
– இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar thiruvalluvan+


Followers

Blog Archive