Saturday, May 7, 2011

andre' sonnaargal 56-buildings 18 (ice-pot and hot-pot) : அன்றே சொன்னார்கள் 56 - கட்டடங்கள் 18

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 18

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : May 7, 2011


பழந்தமிழகத்தின் கட்டடக்கலை குறித்த பல்வகை இலக்கியக் குறிப்புகளையும் நெடுநல்வாடை என்னும் இலக்கியம் ஒன்றிலேயே மிகுதியான குறிப்புகள் உள்ளமையையும் கண்டோம். நெடுநல்வாடையிலேயே மேலும் பல குறிப்புகள் உள்ளன. மலைகளைப் போன்று அகலமும் உயரமும் உடைய கட்டடம் என்பதை
வரைகண்டன்ன தோன்றல் (நெடுநல்வாடை 108) என்கிறார் ஆசிரியர் நக்கீரர்.
வானளாவிய கட்டடங்களில் வானுலகைத் தீண்டும் வண்ணம் மிக உயர்வாக அமைந்த மேல்நிலை மாடம் குறித்து
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் (நெடுநல்வாடை : 60) என்கிறார் ஆசிரியர் நக்கீரர்.
மழைமானி முதலான பல அறிவியல் செய்திகளும் இவற்றில் இடையிடையே கலந்து காணப்படுவதையும் கண்டோம். ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஏற்றவகையில் கட்டடங்களை அமைத்த அறிவியல் செய்திகளும் உள்ளன. இளவேனில் காலத்தில் உறங்குவதற்கு ஏற்ற படுக்கையறையில் தென்றல் காற்று வீசுவதை
வேனில் பள்ளி தென் வளி தரூஉம்
நேர் வாய் கட்டளை திரியாது (நெடுநல்வாடை 61-2) என்கிறார் ஆசிரியர் நக்கீரனார்.
கட்டளை என்பது பலகணி அல்லது காற்றுமாடத்தைக் குறிக்கிறது.
குளிர்ந்த நீரைச் சேமித்து வைத்துக் குடிப்பதற்கான குளிர்கலனும் (ice-pot) குளிர்காலத்தில் பருத்த வாயை உடைய வெண்ணீர்க்கலனும் (hot-pot)பயன்படுத்தப்பட்டமையை
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார்
பகு வாய் தடவில் செந் நெருப்பு ஆர – (நெடுநல்வாடை 64 – 66)
என்னும் வரிகளில் தெரிவிக்கிறார்.

கல்லென்கின்ற ஓசையினையுடைய சிறுதுவலையை வாடைக்காற்று எங்கும் பரப்பு கையினாலே இளையோரும் முதியோரும் குவிந்தவாயையுடைய செம்பாகிய குளிர்க்கன்னலில்  தண்ணீரைக் குடிக்காமல் பகுத்தாற்போன்ற வாயையுடைய தூபக்கரண்டியாகிய இந்தளத்தில் இடும் சிவந்த நெருப்பின் வெம்மையைப் போன்ற வெந்நீரைப் பருகினர்  என்பதை இவ் வரிகள் உணர்த்துகின்றன.

படுக்கை முதலான மனைப்பொருள்கள், கட்டில் முதலான இல்லணிகள் (furnitures) ஆகியன குறித்தும் குறிப்புகள் உள்ளன. அரண் அமைப்பு மதிலமைப்பு முதலானவை குறித்தும் பல்வகைக் குறிப்புகள் உள்ளன. இவை குறித்துப் பின்னர்க் காணலாம்.
இலக்கியங்களிலேயே நம்மால் எண்ணற்ற குறிப்புகளைக் காணமுடியும் பொழுது உரிய துறைநூல்களில் மிகுதியான அறிவியல் உண்மைகள் தெரிவிக்கப்பட்டிருக்கும் அல்லவா? இத்தகைய உண்மைகளை மேனாட்டு அறிஞர்கள் மேற்கொள்ளும் பல்வகைப்பட்ட ஆய்வு முடிவுகளும் நமக்கு உணர்த்துகின்றன. 1950களில் சோவியத்து நாட்டினர் குமரிக்கடலில் ஆழ்கடல் ஆராய்ச்சி மேற்கொண்டு கடலுள் முழ்கிய தமிழர் நாகரிகம், பண்பாடு முதலியவற்றில் அடைந்திருந்த சிறப்புகளை வெளிப்படுத்த முன்வந்தனர். மத்திய அரசு மறுத்து விட்டது.  பண்டைத்தமிழர்களின் சிறப்புகளை வெளிப்படுத்திய ஆராய்ச்சி அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவரான,  எடின்பரோவைச் சேர்ந்த   கிரகாம் என்காக்கு (Graham Hancock) என்னும்  தொல்லியல் ஆராய்ச்சியாளர், தம் சொந்தச் செலவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இப்போதைய பூம்புகார் நகரின் அருகிலேயே கடலில் 18 கல் ஆழத்தில் பழைய பூம்புகார் நகரம் புதையுண்டு உள்ளமை அறிய வருவதாகவும் சிதையாத கட்டடங்கள் கடலின்அடியில் உள்ளன என்றும் கி.மு.17,000 ஆண்டிற்கு முற்பட்ட தொன்மைச் சிறப்பு உடையன என்றும் வெளியிட்டார். தமிழர்க்கு நலன் சேர்க்கும் எந்த வரலாற்று உண்மையையும் மறைக்க எண்ணும் மத்திய அரசு அவரது உதவியை உதறியதாலும்  மேற்கொண்டு ஆராய்ந்து உண்மைகளை உலகிற்கு உணர்த்த  விரும்பாமையாலும்  நாம் அடைந்திருந்த எண்ணற்ற அறிவியல் சிறப்புகள் மறைந்தே கிடக்கின்றன. தமிழ்நாட்டரசாவது தமிழர்நல அரசாக மாறி ஆழ்கடல் ஆராய்ச்சிகளையும் அகழ்வாராய்ச்சிகளையும் தொடர்ந்து உண்மைகளை வெளிக்கொணர முன்வரவேண்டும்.

Tuesday, May 3, 2011

andre' sonnaargal 55-buildings 17 (rain gauge) : அன்றே சொன்னார்கள் 55 - கட்டடங்கள் 17 (மழைமானி)

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ-17

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : May 3, 2011
.
கட்டடச் சிறப்பு குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். கட்டடக்கலையுடன் பிற அறிவியல் துறைகளின் சிறப்பும் இணைந்து விளங்குவதையும் காண்கிறோம். அத்தகைய அறிவியல் செய்தியில் ஒன்று, உயர்ந்த கட்டடங்களில் மழை அளவை அறிவதற்காக மழைமானியைப் பொருத்தி இருந்துள்ளனர் என்பதாகும்.
கிரேக்கத்தில் கி.மு.5 ஆம் நூற்றாண்டில் மழைஅளவைப் பதிந்து வைத்ததாகக் குறிப்புகள் கிடைத்துள்ளன.  அதற்குப் பின்னர் கி.பி.நூற்றாண்டுகளில், கொரியா அல்லது சீனாவில் மழையை அளப்பதற்கான அளவி ஒன்றை (rain gauge) உருவாக்கியதாகவும் கூறுவர். தொடர்ந்து 1662 இல் கிறிசுடோபர் ரென் (Christopher Wren) என்னும் அறிவியலறிஞர் முதலில் வாளியக மழைமானியைக் (tipping-bucket rain gauge) கண்டுபிடித்தார். மழை வளைமானி (udometer), என்பனபோல் பல்வகை மழைமானிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை எல்லாம் பேரளவினதாகவே இருந்தன. சைமன் (George James Symons) என்னும் அறிவியலறிஞர் 1863 இல் பிரிட்டன்  வானிலை ஆராய்ச்சிக் கழகத்திற்குத் (British meteorological society) தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து 1890 வரை மைக்கேல் பாசுடர் வார்டு (Colonel Michael Foster Ward) என்பார் துணையுடன் தரப்படுத்தப்பட்ட எளிய மழைமானியை உருவாக்குவதற்காகப் பல்வகை ஆய்வுகளை மேற்கொண்டார். இருப்பினும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இப்பொழுது பயன்படுத்தப்படும் தரப்படுத்தப்பட்ட எளிய மழைமானி உருவாக்கப்பட்டது. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே மழையை அளப்பதற்கான சிறிய கருவியை – மழைமானியைப் பழந்தமிழர் பயன்படுத்தி உள்ளனர்; அவற்றை உயரமான வீடுகளிலும் பொருத்தி இருந்துள்ளனர் என்பது சிறப்பான வானிலைஅறிவியல் செய்தி அல்லவா?
கட்டடங்கள் அமைக்கும் பொழுது நீண்ட முடியை உடைய கவரிமான் (நெடுமயிர் எகினம்), குறுங்கால்களை உடைய அன்னம் ஆகியவை தாவித்திரியும்  அகன்ற பரப்பு உடையதாக வாசலின் முகப்பில் முன்னிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை ஆசிரியர் நக்கீரனார்,
நெடுமயி ரெகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமோடு உகளும் முன்கடை(நெடுநல்வாடை : 91-92)
என்கிறார்.
கட்டடத்தின் மண்தள முகப்பைக் கூறும் ஆசிரியர் அதன் உயர் பரப்பான மேல்நிலை முற்றத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.

நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்துக்
கிம்புரிப் பகுவாய் அம்பணம் (நெடுநல்வாடை : 95-96)

இவ்வரிகள் மூலம், நெடிய மாடியின் உயர்தளமாக, வெண்ணிலவின் ஒளியில் மகிழும் வண்ணம் அமைக்கப்பட்ட நிலா முற்றத்தில் (மொட்டைமாடியில்) மீனின் வாய்போன்று பகுக்கப்பட்டு-பிளக்கப்பட்டு- அமைக்கப்பட்ட அம்பணம் என்னும் மழைமானி பொருத்தப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறார். (இதில் நிறைந்து வழிந்து கீழே விழும் மழைநீர் ஓசை அருவி ஓசைபோல் இனிமையாய் இருப்பதைக் கூறுவதற்காக இதனை இந்த இடத்தில் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர் நக்கீரனார்.)
ஆமைவடிவில் உள்ள முகத்தல் அளவைக் கருவிக்கு   அம்பணம் என்று பெயர். அந்த அளவில் சிறியதாக உள்ள மழைமானிக்கும் அம்பணம் என்று பெயரிட்டுள்ளனர். எனவே, பிற நாட்டார் தொட்டி, வாளி போன்ற அளவில் மழை நீர்  சேர்த்து மழை அளவை அறிந்திருந்த காலத்திற்கு முன்னரே நம் தமிழ் முன்னோர், சிறிய அளவிலான மழைமானியைப் பயன்படுத்தி உள்ளனர் என்பதும் அதனை  உயரமான வீடுகளில் பயன்படுத்தும் வண்ணம் பொதுமக்களும் அதன் பயன்பாட்டு முறையை அறிந்திருந்தனர் என்பதும் கட்டடக் கலையுடன் இணைந்த வானிலை ஆராய்ச்சி அறிவியல் கலையாகிறது. கணந்தோறும் மாறும் வானிலையையும் ஆராய்ந்தறிந்த வண்டமிழர்  வஞ்சகர் மனநிலையை அறியாமல் நம்பக்கூடாதவர்களை நம்பி அழிந்து கொண்டுள்ளனரே! என்னே அவலம்!

Followers

Blog Archive