Sunday, January 31, 2016

இலக்கு தவறிய மொழிப்போர் 50 மாநாடு – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்கு தவறிய மொழிப்போர் 50 மாநாடு 

– இலக்குவனார் திருவள்ளுவன்

மொழிப்போர் 50 மாநாடு01 -mozhipoar50maanadu01

தடம் மாறிய தமிழ்த்தேசியப் பேரியக்கம்

   1938 மொழிப்போர் என்பது அறிஞர்கள், தலைவர்களின் பெரும்பங்கும் ஆங்காங்கே தொண்டர்களின் பங்கும் கொண்டதாக இருந்தது. ஆனால், 1965 மொழிப்போர் என்பது உள்நாட்டுப்போருக்கு இணையான மக்கள் போராக இருந்தது. கட்சி வேறுபாடின்றி நாடு முழுவதும் மாணாக்கர்கள் திரண்டு நடத்திய இப்போரால் காவல் துறையாலும் பேராயக்கட்சியாகிய காங்கிரசுக்கட்சியினராலும் தாக்குதலுக்கு உள்ளான மாணாக்கர்களின் பெற்றோர்களே களத்தில் இறங்கியதால் மக்கள் போரானது. இதனால் தமிழ்நாட்டிலிருந்து அடித்து விரட்டப்பட்ட பேராயக்கட்சி 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றுவரை ஆட்சிக்கட்டிலில் ஏற இயலவில்லை.
  ஆனால், இன்றைய தலைமுறையினருக்கு மொழிப்போர் வரலாறும் தெரியவில்லை. இந்தியைத் தேசிய மொழி என இத்தலைமுறையினரிடம் திணித்து வருகின்றனர். எனவே, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மொழிப்போர் 50 மாநாடு வரவேற்கத்தக்கதொன்று. ஆனால், மொழிப்போர் 50 மாநாடு என்றால் 1965 ஆம் ஆண்டு மொழிப்போர் குறித்துத்தானே மாநாட்டு நிகழ்ச்சி இருக்க வேண்டும். மாநாடு குறித்தறிந்த பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சி அழைப்பிதழைப் பார்த்ததுமே போய்விட்டது. நேரில் சென்று பங்கேற்ற பொழுது முதல் கோணல் முற்றம் கோணல் என்பது நன்றாகப் புரிந்தது.
   மொழிப்போர் ஈகியருக்கான சுடரை ஏற்றி வீர முழக்கங்களுடன் அவர்களுக்கு வணக்கம் செய்து மாநாட்டைத் தொடங்கியது பாராட்டிற்குரியது. தீர்மானங்களும் மகிழ்சியுடன் வரவேற்கும் வகையில் அமைந்துள்ளன. கலை நிகழ்ச்சிகள் களிப்பூட்டும் வகையில் அமைந்தன. ஆனால், உரைகள்? தமிழ் வளர்ச்சி மாநாடு அல்லது இலக்கிய மாநாடு போல் தலைப்பைத் தந்தால் எங்ஙனம் மொழிப்போர் தொடர்பான உரைகளை எதிர்பார்க்க முடியும்? விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா? 1965 ஆம் ஆண்டின் மொழிப்போர் சூழல், களப்பலி எல்லாம் விளக்கி, இன்று நாம் அதன் பயனை அடைந்திருக்கிறோமா? பிற மொழித்தாக்குதலின்றித் தமிழ் வாழ மீண்டும் மொழிப்போர் தேவையா? என வெல்லாம் விளக்க வேண்டிய மாநாட்டில் அவற்றைக் காணவில்லை!
 ‘1965ஆம் ஆண்டு மொழிப்போர்’ குறித்து எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் மட்டும் பேச அழைக்கப்பட்டிருந்தமையால் அவர்மட்டும் அது குறித்துப் பேசினார். என்றாலும் அவர் இன்னும் சிறப்பாக விளக்கியிருக்கலாம். அவருக்கு முன்னதாக முனைவர் த.செயராமன் ‘1938-மொழிப்போர்’ குறித்து உரையாற்றியமையும் மொழிப்போர் தொடர்பான அறிதலுக்ககு உதவும் என்பதால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பிற்பகல் பாராட்டரங்கத்திற்குத் தலைமை தாங்கிய இயக்குநர் வ.கௌதன் 1965 மொழிப்போர் குறித்தும் உரையாற்றினார்.
  இளந்தளிர் அரங்கில் பங்கேற்றவர்கள் நல்ல சொற்பொறிவாற்றும் திறன் பெற்றவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் மொழிப்போர் ஈகியர்பற்றிக் கூறச்செய்து, அதன்மூலம் சிலரைப்பற்றியாவதும் அவர்கள் சார்ந்த மாவட்ட இந்தி எதிர்ப்புப்போர்பற்றியாவதும் பேசச் செய்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்! அவர்களும் ஓரளவேனும் இந்தி எதிர்ப்புப்போர் பற்றி அறிந்திருப்பார்கள். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் ஆர்வமுடன் வந்திருந்த இளைஞர்களும் பயன் பெற்றிருப்பர்.
  அதுபோல் ‘இனத்தை செய்தது மொழிதான்’ என்ற தலைப்பிலான பாவரங்கத்திற்கு மாற்றாக. ‘மொழிப்போர் நாயகர்கள் என்ற தலைப்பில் பாவரங்கம் அமைத்திருந்தால் தழலூட்டியும் நஞ்சுண்டும் குண்டடிபட்டும் வதைபட்டும் தமிழ்க்காப்பில் உயிர் துறந்த -உயிர் நீத்த- செம்மல்களைப்பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்திருக்குமல்லவா?
 அடுத்தது “வளர்தமிழ்” அரங்காம்! ‘கலைச் சொல்லாக்கம்’, ‘கல்வித்தமிழ்’, ‘நாடகத்தமிழ்’, ‘இசைத்தமிழ்’, ‘இந்திய ஒன்றிய ஆட்சிமொழிகள்’, ‘தொடர்பியல் தமிழ்’ என்னும் தலைப்பில் உரைகள். முற்பகல் நிகழ்வில் பேசிக்கொண்டே இருந்த அவையினர் இவ்வரங்கை அமைதியாகக் கருத்தூன்றிக் கேட்டனர். ஆனாலும் என்ன? தலைப்புகள் வழி மாறிப்போனதால், மொழிப்போர் முழு வெற்றியைக்காணவில்லை என்பதையும் மீண்டும் தேவைப்படும் மொழிப்போர் குறித்தும் உணர்த்தி மக்களை ஆயத்தப்படுத்தும் பணியைத் தவறவிட்டுவிட்டார்களே!
  குறும்படப்போட்டி நடத்திப் பரிசுகள்வழங்கினர். 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப்போர் குறித்தும், மொழிப்போர் ஈகியர் குறித்தும் போட்டி நடத்தியிருக்க வேண்டுமல்லவா? அவ்வாறில்லையே!மொழியின் முகங்கள் என்னும் தலைப்பு மொழிப்போர் மாநாட்டிற்குத் தேவைதானா? மொழிப்போர் என்றாலும் இந்திஎதிர்ப்புப்போர்தானே! இதனை மையமாகக் கொண்ட குறும்படம் வருவது காட்சியூடகத்தில் உள்ளவர்களை இதுபற்றிச் சிந்திக்கச் செய்யும் அல்லவா? ஏன், அவ்வாறு நடத்தமனம் வரவில்லை?
  எல்லாவற்றிலும் கொடுமை ‘ஆன்மிகம் வளர்த்த தமிழ்’ என்னும் தலைப்பிலான இறுதி அமர்வு. சமயம் வளர்த்த தமிழ் குறித்தா மாநாடு நடத்துகிறார்கள்? பெரும் உழைப்பும் பணமும் செலவழித்து, மொழிப்போர் வரலாற்றை உணர்த்தாமல், ‘உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!’ என உயிர்க்கொடை வழங்கிய ஈகியர் உயிரிழப்பு வீணாகிக் கொண்டிருப்பதை உணர்த்தாமல், எல்லா நிலைகளிலும் எல்லாத் துறைகளிலும் அயல்மொழிகளை அகற்றவேண்டிய மொழிப்போர் தேவை என்பதை உணர்த்தாமல் தமிழ்த்தேசியப்பேரியக்கம் தடம் புரண்டு போனதேன்?
  படிக்கும்பொழுதே இந்தி எதிர்ப்புத் தந்தை பேரா.சி.இலக்குவனாரின் ‘குறள்நெறி’ முதலான இதழ்களைப் படித்துத் தமிழுணர்வு பெற்ற தோழர் பெ.மணியரசன், தோழர் கி.வெங்கடராமன், பிற அமைப்பினர் தமிழ்ப்பற்றை ஐயப்படவில்லை! பல மாநாடுகள் நடத்திப் பட்டறிவு பெற்றவர்கள்தாம் இவர்கள்! அப்படியிருந்தும் ஏன் இப்படி?
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள் 614)
என்பதற்கு எடுத்துக்காட்டாகிப் போனதேன்?
ஒருவேளை பின்வரும் அரசியல் காரணமாக இருக்கலாம் என எண்ணுகிறேன்.
  1965 மொழிப்போரின்பொழுது இல்லாக் கட்சிகள் இப்போது பலவாய்ப் பெருகிவிட்டன. இன்று தமிழ்த்தேசியம் பேசும் சில இயக்கத்தினர் அன்று மாற்று முகாமில் இருந்தனர். கட்சி சார்பில்லா மாணாக்கர்களும் தமிழ் அமைப்பினரும் பொதுமக்களும் நீங்கலாக, மொழிப்போரில் தீவிரமாக ஈடுபட்டக் கட்சி – இளைஞர்களிடையே   இந்தி எதிர்ப்பு உணர்வை விதைத்த கட்சி என்றால் தி.மு.க. மட்டும்தான்! போராட்டங்களில் ஈடுபட்டவர்களும் சிறை சென்றவர்களும் காவல்துறையினரின் கொடுமைகளுக்கு ஆளானவர்களும் தி.மு.க.வினர்தான். இன்றைக்குத் தி.மு.க. தமிழ்காப்புப் பணிகளில் ஈடுபடவில்லை என்பது உண்மைதான். அதற்காக அதன் கடந்த கால நற்பணிகளைப் புறந்தள்ளக்கூடாது. ஆனால், மொழிப்போர், 1965 என்பதுபற்றிப் பேசினால் தி்.மு.க.பற்றிப் பேசவேண்டிவருமே! வந்தேறிகள் எனச் சொல்லிக் கொண்டு எப்படி அவர்களது பெருமையைச் சொல்ல முடியும்? எனவே, மொழிப்போர் மாநாடு நடத்திய மாதிரியும் இருக்க வேண்டும்! மொழிப்போரில் தி.மு.க.வின் பங்கை மறைக்கவும் வேண்டும்! எனவேதான், மொழிப்போருக்குத் தொடர்பில்லாத் தலைப்புகள்!
 வரலாற்றை மறைப்பதும் வரலாற்றைத் திரிப்பதுதான். தமிழ்த்தேசியப்பேரியக்கம் நோக்கம் தவறி, இலக்கு தவறி, இன்றைய தலைமுறையினருக்கு வழிகாட்டத் தவறியது வருததத்திற்குரியதே! இனி, மாவட்டம்தோறும் மொழிப்போர் மாநாடு நடத்தப்போகிறார்களாம்! வேண்டா! இக்கொடுமையைத் தொடர வேண்டா! வேண்டுமென்றால் தமிழ்வளர்ச்சி மாநாட்டினை நடத்துங்கள்! அதற்கெனப் பல அமைப்புகள் இருக்கலாம்! ஆனால். தமிழ்த்தேசியம் காக்க மூண்ட இந்தி எதிர்ப்புப்போரை மறைக்கும் உங்களுக்கு இனி, மொழிப்போர் நடத்தத் தகுதியில்லை!
  நடராசன், தாலமுத்து, கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை இராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, ஐயம்பாளையம் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி முதலான இந்தி எதிர்ப்பிற்காகக் தமிழ்காக்க உயிர்க்கொடை அளித்தவர்கள், தேசியப் பாதுகாப்புச்சட்டத்திலும் பிற சட்டப்பிரிவுகளிலும் தளையிடப்பட்டு அல்லலுற்றவர்கள், காவல்துறையினரின் குண்டடிபட்டும் பிற வகையிலும் உயிர் நீத்தவர்கள், காவல்துறையினர் அடக்கமுறையால் கை,கால் முதலான உறுப்புகளை இழந்தவர்கள், காவலர் ஊர்திகளை எரித்த இயற்கையாய் எழுந்த சீற்றப்போர், முதலானவைபற்றி உரையரங்கம், கவியரங்கம், நாடகம், குறும்படம், கலை நிகழ்ச்சிகள் என அமைத்திருந்தாலல்லவா மொழிப்போர் மாநாட்டினை நடத்தியதாகப் பொருள். மற்றபடி, ஆண்டுதோறும் நடைபெறும் வீரவணக்கச் சடங்குபோல் இதுவும் ஒரு சடங்குதான்!
   ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
   போற்றினும் பொத்துப் படும்”
என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 468). தக்க வழியில் மேற்கொள்ளப்படாத முயற்சி எத்தனைபேர் துணையாய் இருந்தாலும் குறையாய் முடியும் என அவர் கூறுவது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மொழிப்போர் 50 மாநாட்டிற்கு மிகவும் பொருந்தும்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
AkaramuthalaHeader


Thursday, January 28, 2016

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 08 – இலக்குவனார் திருவள்ளுவன்

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 08

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 07 தொடர்ச்சி)
தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02

 

08

தொழிலில் மேம்படுக!

கல்வியுடன் தொழிலும் தேவையன்றோ?
உழவுக்கும்தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்
உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்வோம் (பக்கம் 57 / சுதந்திரப்பாட்டு)
ஆயுதம் செய்வோம்! நல்ல காகிதம் செய்வோம்!
ஆலைகள் வைப்போம்! கல்விச்சாலைகள் வைப்போம்!
(பக்கம் 22 / பாரத தேசம்)
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் (பக்கம் 206 / முரசு)
இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே!
இயந்திரங்கள் வகுத்திடு வீரே! (பக்கம் 213 / தொழில்)
கூடும் திரவியத்தின் இவைகள் – திறன்
கொள்ளும் கோடிவகைத் தொழில்கள்
– இவை
நாடும்படிக்கு வினை செய்து – இந்த
நாட்டோர் கீர்த்தி யெங்கும் ஓங்கக் – கலி
சாரும் திறனெனக்குத் தருவாய் (பக்கம் 132 / யோகசித்தி)
எனத் தொழிலை வலியுறுத்தியும் தொழிலாளரை உயர்த்தியும் பாரதியார் பல பாடல்களில் பாடியுள்ளார். எனவே,
கைத்தொழில் போற்று (82)
கூடித்தொழில் செய் (18)
மேழி போற்று (82)
விதையினத் தெரிந்திடு (105)
இலாகவம் பயிற்சி செய் (98)
எனக் கைத்தொழில், உழவு, இயந்திரத் தொழில், ஈடுபாட்டிற்காகக் கட்டளையிடுகிறார்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09)

Monday, January 18, 2016

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 07 – இலக்குவனார் திருவள்ளுவன்


பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 07 – இலக்குவனார் திருவள்ளுவன்


தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02

07

கல்வியைத் தேடு!


  உடல்நலத்துடன் கூடிய வலிமை எதற்குத் தேவை? அயலவரை அழிக்கவா? அல்ல அல்ல! நம்மைக் காத்துப் பயன்பாட்டுடன் திகழ! இதற்கு அடிப்படை கல்வி கற்றலும் கற்றபடி நிற்றலும். கல்வித்தேவையையும் கல்விக்கண்களை அனைவரும் பெறவேண்டும் என்பதையும் பாரதியார் பல பாடல்களில் வலியுறுத்தியுள்ளார்.
திறமை கொண்ட தீமையற்ற
தொழில்புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே
(பக்கம் 56 / விடுதலை)
தேடுகல்வியிலாத தொரூரைத்
தீயினுக்கிரை யாக மடுத்தல் (பக்கம் 158 / வெள்ளைத்தாமரை)
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்த றிவித்தல் (பக்கம் 159 / வெள்ளதை்தாமரை)
பயிற்றிப் பலகல்வி தந்து – இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும் (பக்கம் 207 / முரசு)
வானை அளப்போம்! கடல்மீனை அளப்போம்!
சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்! (பக்கம் 23 / பாரததேசம்)
எனப் பலவாறாகக் கல்வியை வலியுறுத்தியும் பாரதியார் அவற்றின் அடிப்படையில் தம் கட்டளைகளைப் புதிய ஆத்திசூடியில் வழங்கவும் தவறவில்லை.
 “கற்றபின்நிற்க அதற்குத் தக” எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறியவாறு கற்றதொழுகு (ஆ.சூ. 13) என்கிறார். நூலினைப் பகுத்துணர் (59) என எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணும் பகுத்தறிவுக் கல்வியை வலியுறுத்துகிறார்.
சரித்திரத் தேர்ச்சி கொள் (25)
நீதிநூல் பயில் (53)
இராசசம் பயில் (90)
உலோகநூல் கற்றுணர்எ(101)
இரத்திலே தேர்ச்சி கொள் (89)
வானநூல் பயிற்சி கொள் (104)
இரேகையில் கனிகொள்(94)
சைகையில்பொருளணர் (33)
என வரலாறு, இயற்பியல்,வேதியியல், வானியல்போன்ற அறிவியல், அரசியல், முதலான அனைத்துத்துறைகளையும் பயின்று கல்வியில் தேர்ச்சி மிக்கவராகத் திகழவேண்டும் என்கிறார்.
  வானியல் கல்வி என்ற பெயரில் சோதிடம் பக்கம் சார்ந்து மூடனாக இருக்கக்கூடாது என்பதற்காக அவர், சோதிடம் தனையிகழ் (35) எனச் சோதிடத்தை வெறுத்தொதுக்குமாறு எச்சரிக்கவும் தவறவில்லை.
  கல்வியில் வேதக்கல்விபற்றிய பாரதியார் கருத்து என்ன?
சாத்திரங்கள் வேண்டா சதுமறைகள் ஏதுமில்லை
தோத்திரங்கள் இல்லை உளந்தொட்டு நின்றால் போதுமடா (பக்கம் 187 / பரசிவ வெள்ளம்)
என்கிறார். எதிலும் புதுமை விரும்புவரல்லவா பாரதியார்! எனவே, பிணத்தினைப் போற்றேல் (67) எனப் பழைய மூடநம்பிக்கைகளபை் போற்ற வேண்டா என்கிறார்.
புதியன விரும்பு (69)
பெரிதினும் பெரிது கேள் (71)
சொல்வது தெளிந்து சொல் (34)
எனக் கல்விகேள்விகளில் புதுமையை விரும்புபவர் பாரதியார்.
வேதங்கள் என்று புவியோர் – சொல்லும்
வெறும்கதைத்திரளில் வேதமில்லை (பக்கம் 250 / கண்ணன் என் தந்தை)
என்னும்பாரதியார் புதிய ஆத்திசூடியில் வேதம் புதுமை செய் (108) என்கிறார்.
காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு (பக்கம் 202 / பாப்பா பாட்டு)
பாட்டுத் திறத்தாலேஇவ்வையத்தைப்பாலித்திட வேணும் (பக்கம் 112 / காணிநிலம்)
பண்டைச் சிறுமைகள் போக்கி என்நாவிற் பழுத்த சுவைத்
தண்டமிழ்ப்பாடல் ஒருகோடி மேவிடச் செய்குவையே! (பக்கம் 100 / விநாயகர் நான்மணிமாலை)

என்றெல்லாம் பாடலின்பால் கொண்டுள்ள பற்றை வெளிப்படுத்தியுள்ளவர் பாரதியார். எனவே, பாட்டினில் அன்பு செய்(66) என்கிறார்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 08)


Thursday, January 14, 2016

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 06 – இலக்குவனார் திருவள்ளுவன்

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 06 – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02

06

உடல்நலன் பேணுக!

வீரத்துடனும் வலிமையுடனும் திகழ அடிப்படைத் தேவை உடல்நலம் அல்லவா? எனவே, அதனையும் பாரதியார் வலியுறுத்துகிறார்.
பொலிவிலா முகத்தினாய் போ போ போ
பொறியிழந்த விழியினாய் போ போ போ
ஒலியிழந்த குரலினாய் போ போ போ
ஒளியிழந்த மேனியாய் போ போ போ
கிலி பிடித்த நெஞ்சினாய் போ போ போ
என நலமற்ற தன்மையை விரட்டியடித்து
நோய்களற்ற உடலினாய் வா வா வா
(பக்கங்கள் 38-39 / போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்)
எனக் குறைவற்ற செல்வமாம் நோயற்ற வாழ்வினை வலியுறுத்துகிறார்.
இறைவனிடமும்,
நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன் (பக்கம் 37 / விநாயகர் நான்மணிமாலை)
என வேண்டுகிறார். எனவே, உடல்நலம்பேணுவதற்காகப் பின்வரும்
கட்டளைகளைப் புதிய ஆத்திசூடியில் வழங்குகிறார்.

இளைத்தல் இகழ்ச்சி (3)
உடலினை உறுதிசெய் (5)
ஔடதம் குறை (12)
ஊண்மிக விரும்பு (6)
மூப்பினுக்கு இடம்கொடேல் (80)
(இ)யௌவனம் காத்தல் செய் (88)
(உ)ருசி பல வென்றுணர் (92)
(உ)ரூபம் செம்மை செய் (93)
எனவே, வாழும் முறைபற்றிய அறநெறிகளைமட்டும் கூறாமல், வாழ்வதற்குத் தேவையான உடல்நெறிகளையும் புதிய ஆத்திசூடியில் நமக்கு அளித்துள்ளார் பாரதியார் எனலாம்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 07)


Followers

Blog Archive