Friday, July 28, 2017

மத்தியப் பாடத்திட்டம் தமிழக நலனுக்கு எதிரானது! – இலக்குவனார் திருவள்ளுவன்



அகரமுதல 196,  ஆடி07, 2048 / சூலை 23, 2017


மத்தியப் பாடத்திட்டம் தமிழக நலனுக்கு எதிரானது!

  இந்திய அரசியல் யாப்பின் இணைப்புப்பட்டியல் 7 இன்படி மத்திய மாநில அரசின் அதிகாரங்கள் குறித்து அ.) ஒன்றியப்பட்டியல், ஆ.) மாநிலப்பட்டியல்,  இ.) பொதுப்பட்டியல் என 3 பட்டியல்கள் உள்ளன. தொடக்கத்தில் மாநிலப்பட்டியலில் இருந்த துறைகள் 66. அதில் இருந்து ஒவ்வொன்றாகப் பிடுங்கப்பட்டு வருகிறது. கல்வித்துறை மாநில அரசின் அதிகார வரம்பில் வரிசை எண் 11இல் இருந்தது. அதனைப் பொதுப்பட்டியலாக்கி மத்திய அரசின் அதிகார வரம்பிற்குக் கொண்டுவந்தபொழுதே பலரும் எதிர்த்தனர். இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மாநிலக் கல்விக்கொள்கையில் தலையீடு இருக்காது; மாநில அரசுகளுக்கு உதவுவதற்குத்தான் என்றும் மழுப்பினர். ஆனால், நாளைடைவில் மத்திய அரசின் அதிகார வரம்பு மிகுதியாகி விட்டது. சில ஆண்டுகளில் முழுமையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கல்வித்துறை வரும் என்பதில் ஐயமில்லை.
 பெயரளவிற்கு பொதுப்பட்டியல் எனப்பெறும் இரட்டை அதிகாரப்பட்டியலில் வைத்துக்கொண்டு மத்திய அரசே முழுமையும் பறித்துக் கொள்ளும். அவற்றின் அடையாளம்தான் தேசியத்தகுதி-நுழைவுத்தேர்வு(NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) எனப்பெறும் மருத்துவக்கல்லூரிப்பொது நுழைவுத்தேர்வு. அதன் மற்றொரு வடிவம் அதனைக் காரணம் காட்டி மாநிலக் கல்விப்பாடத்திட்டத்தைத் தரமுயர்த்துவதாகக் கூறி மத்திய அரசின் பாடமுறையைப் பின்பற்றுவது.
  மத்தியஅரசுக் கல்வித்திட்டத்தின்படி மாநிலக் கல்வித்திட்டத்தில் பயின்றவர்கள் எழுத இயலவில்லை என்கிறார்கள் அல்லவா? மாநிலக் கல்வித்திட்டத்தின்கீழ்த் தேர்வு நடத்தினால் மத்திய அரசுக் கல்வித்திட்டத்தின்படி பயின்றவர்களால் எழுத முடியாது.  உண்மை இதுதான். இதைக்கொண்டு மத்திய அரசின் பாடத்திட்டம் தகுதி கூடியதாகக் கூறுவது தவறு.
  மத்தியக்கல்வித்திட்ட வரலாற்றுப் பாடங்களில் தமிழக வரலாற்றுக்கே இடமில்லை. புவியியல் அல்லது சுற்றுப்புற அறிவியல் முதலான பாடங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை முதலான தமிழகத்தின் ஐந்திணை  குறித்து அறிய வாய்ப்பில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்திப்பாடத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் குடிபோதையில் கோவலனுக்கு மரணத் தண்டனை விதித்ததாகப் பாடம்  வந்தது. அம்பேத்கார், மொழிப்போர் போராட்டம்பற்றி யெல்லாம் தவறான தகவல்கள் மத்தியப்பாடத்தில் இடம் பெற்றதை நாமறிவோம். 
 தமிழ்த்தேசிய உணர்வு மலர்ந்து மொழிப்போர் வரலாறு பாடங்களில் இடம் பெற வேண்டும் என்ற உணர்வு வரத்தொடங்கியுள்ளது. ஆனால், மத்தியப்பாடத்திட்டத்தில் அதற்கான வாய்ப்பில்லை.
 தமிழகத் தலைவர்களைப்பற்றி யறியவும் வாய்ப்பில்லை. வரலாறு தெரியாதவர்கள் வரலாற்றைப் படைக்க முடியாது. வரலாறு தெரியாத் தலைமுறைகளை உருவாக்கும் பாடத்திட்டமாக மத்தியப்பாடத்திட்டம் அமையும். வரலாற்றை மறைத்தும் திரித்தும் பொய்யான வரலாற்றுச் செய்தியைப் புகுத்தியும் ஆள்வதே பா.ச.க.வின் பண்பாடு. அவ்வாறிருக்க மத்தியப்பாடத்திட்டம் எப்படி அமையும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
  இப்பொழுது மத்தியப்பாடத்திட்டத்தைத் தழுவி  மாநிலப்பாடத்திட்டத்தை அமைத்தால், பின்னர் நாடு முழுவதும் ஒரே பாடமுறைதானே எனத் தேர்வுத்திட்டத்தையும் மத்திய அரசு  கையில் எடுத்துக் கொள்ளும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு  ஒரே நாடுஒரே கல்வி  முறை, ஒரே பாடத்திட்டம் என்ற வலையில் தமிழக அரசு  சிக்கக்கூடாது.
 கல்வித்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் பள்ளிக்கல்வியமைச்சர் செங்கோட்டையன் உறுதியாக இருக்கிறார். பள்ளிக்கல்விச்செயலர் த.உதயசந்திரன் இ.ஆ-ப. கல்வி வளர்ச்சியில் ஈடுபாடு காட்டுவதுடன் தமிழார்வமும் மிக்கவர். இப்போதைய வல்லுநர் குழு என்ன முடிவெடுத்திருந்தாலும் தமிழ்நலன் சார்ந்த கல்வி  முறையை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டி அதற்கேற்பவும் குழு அமைத்துப் பாடத்திட்டத்தை வகுக்க வேண்டும். 
  முன்பே குறிப்பிட்டபடி, ஆங்கிலம் முதலான பிற மொழிப்பாடங்களிலும்  தமிழ் இலக்கியம், தமிழ்க்கலை, தமிழ்ப்பண்பாடு, தமிழ் வரலாறு முதலானவை இடம் பெற வேண்டும். பிற மொழிப்பாடங்கள் படிக்கிறார்கள் என்பதற்காகத் தமிழகம் பற்றி அறியாமல் தமிழகத்தின் இளந்தலைமுறையினர் வருவாக்கப்படுவது நாட்டு வளர்ச்சிக்குப் பெருங்கேடாகும்.
  அறிவியல் பாடங்களில் தொடர்புடைய தமிழ்இலக்கியச்செய்திகள் இடம் பெற வேண்டும்.  தவாரங்களுக்கு உயிர்உண்டு என்னும் பாடத்தில் தொல்காப்பியர் குறிப்பிடும் “ஒன்றறிவதுவே” எனத்தொடங்கும் நூற்பா இடம் பெற வேண்டும். தெர்மாசு குடுவைபற்றிய பாடத்தில் தமிழர்களின் சேமச்செப்பு இடம் பெற வேண்டும். மாற்றுச்சக்கரம்(stepney)  பற்றிய பாடத்தில் பழந்தமிழரின் சேமஅச்சு இடம் பெற வேண்டும். இவ்வாறு இன்றைய அறிவியல்பற்றிய பாடங்களில் தொடர்பான பழந்தமிழர் அறிவியல் கருத்துகளும் இடம்பெறும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும்.
  தமிழக மாணாக்கர்கள் தமிழ்வழியில்தான் பயில வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும். இருப்பினும் ஆங்கிலக்கல்விமுறை இருந்தது எனில், தமிழகம் சார்ந்தே பாடத்திட்டம் அமைய வேண்டும்.
  மாநிலத்தன்னாட்சி எனப் பேசும்  தமிழகக்கட்சிகள் மத்தியக்கட்சிகளிடம் அடிபணிந்து தஞ்சமடைவதில் காட்டும் விரைவைத் தமிழக உரிமைகளைக் காப்பதில் காட்டுவதில்லை. இவ்வாறு ஒவ்வொரு துறையாக மத்திய அரசின் தலையீடு இருப்பது நாளடையில் இந்தியா முழுமையும் ஒற்றையாட்சி நிலை வர வழிவகுக்கும்.  எனவே,  கல்வி நலனுக்காக மட்டும் என்றில்லாமல் ஒவ்வொரு துறையாக மாநில  உரிமைகள் பறிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும்  மத்திய அரசின் கல்வித்தலையீட்டை நிறுத்த வேண்டும். ஒன்றியப்பட்டியலில் 100 இனங்கள் என்றிருப்பதை மிகவும் குறைத்து மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவரச் செய்ய வேண்டும்.  பொதுப்பட்டியலில் உள்ள 52 இனங்களைப் பாதியாகவாவது குறைக்க வேண்டும். மாநில உரிமைகள் காக்கப்பட்டால்தான் கல்விஉரிமையும் காக்கப்படும் என்பதை அரசியலாளர்கள் உணரவேண்டும்.
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.  (திருவள்ளுவர், திருக்குறள் 671)
தமிழகக்கல்விநலன் காக்கவும் மாநில உரிமைகளைக்காக்கவும் ஆராய்ந்து முடிவெடுத்துத் துணிவுடன் நிறைவேற்றுக!
தமிழகம்சார்ந்தகல்விமுறையை உருவாக்குவோம்!
மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 196,  ஆடி07, 2048 / சூலை 23, 2017



Sunday, July 16, 2017

பா.ச.க.வை அசைத்துப்பார்க்கும் வாய்ப்பு அதிமுக மக்கள் சார்பாளர்களுக்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்



அகரமுதல 195, ஆனி 32, 2048 / சூலை 16, 2017

பா.ச.க.வை அசைத்துப்பார்க்கும் வாய்ப்பு

அதிமுக மக்கள் சார்பாளர்களுக்கு!

 

  ஆடி 01, 2048 /சூலை 17, 2017  அன்று இந்தியாவின் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டின்போக்கை மாற்றச் செய்வதற்குத் தன்மான உணர்வு உள்ள அதிமுக மக்கள்சார்பாளர்களுக்கு நல்ல வாய்ப்பு!
 இந்தியாவின் 14 ஆவது குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளர்களாகக் களத்தில் இரு்பபவர்கள், பா.ச.க. அணியின், இராம்நாத்து கோவிந்து(Ramnath Kovind) எதிர்க்கட்சிகள் அணியின்  மீரா குமார்(Meira Kumar) ஆகிய இருவர் மட்டுமே! கட்சி வாக்குகள் அடிப்படையில் பா.ச.க.வின் வெற்றி வாய்ப்பு என்பது எழுதப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டிலும்  பீகாரிலும் மனச்சான்றுக்கு வேலை கொடுத்தால், முடிவு மாறலாம்.
  மண்டியிட்டுத் தாள்பணிந்து அணித்தலைவர்கள் பா.ச.க.வின் காலில் வீழ்ந்து கிடப்பதை விரும்பாதச் சில நா.உ. அல்லது ச.உ. இருக்கலாம். வேறுவழியின்றி அவர்கள் பாசகவை ஆதரித்தாலும்  தன்மானத்தைப் பறிகொடுத்த ஆதரவு என்பதால் உள்ளத்தில் குமைந்து கிடப்போர் சிலர் உள்ளனர். இத்தேர்தலில் வாக்கு அளித்த விவரத்தைக் காண முடியாது என்பதாலும், கட்சிக் கொறடாக்களுக்கு வேலை இல்லை என்பதாலும், தத்தம் தலைவர் கருத்துகளுக்கு மாறாக மனச்சான்றுடன் செயல்பட நல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது.
  இதனால் முடிவு மாறினாலும் நன்று. அல்லது சில  வாக்குகளேனும் அணி மாறி வீழ்ந்திருந்தாலும் பாசகவின் இறுமாப்பிற்குச் சாவு மணி அடிக்கத் தொடங்குவதாய் அஃது அமையும்.
  மீராகுமாரின் வெற்றி என்பது பா.ச.க.வினருக்குக் கடிவாளம் இடுவதாக அமையும். வெற்றி வாய்ப்பு பெறாவிட்டாலும் கூடுதல் வாக்குகள் மீராகுமாருக்குக் கிடைப்பது, தலைவர்களை மண்டியிடச் செய்வதால் கட்சியைக் கைப்பற்ற இயலாது; குறுக்குவழியில் ஆட்சியில் அமர முடியாது என உணர்த்துவனவாகவும் அமையும்.
 தங்கள் உரிமைகள் மிதிக்கப்படுவதுடன் மட்டுமல்லாமல், மாநில உரிமைகள் பறிக்கப்படுவதையும் அதிமுகவினர் உணர்ந் திருப்பர். வாக்களிப்பைப் புறக்கணிப்பது என்பது வெளிப்படையாக உள்ளக்கிடக்கையைக்காட்டிக் கொடுக்கும் என்பதால் அச்சம் வரலாம். ஆனால், பா.ச.க.விற்கு எதிராக அளிக்கும் வாக்கு ஆணவ உச்சியில் இருந்துகொண்டு ஒரேநாடு, ஒரே மொழி, ஒரே வரி, ஒரே கல்வி என்பனபோல் நாட்டை இடுகாட்டிற்கு அழைத்துச் செல்லும் போக்கிற்குத் தமிழக மக்கள் முடிவோலை எழுதுவதாக அமையும் என்பதை உணர வேண்டுகிறோம்.
 மோசமானவர்களில் குறைந்த மோசமானவர் என்பதைத் தெரிவு செய்வதுதான் இந்தியத் தேர்தல். ஆளுங்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவதால்,  நாட்டை மேலும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதற்குத்தான் அது துணை புரியும். எனவே, அதிகாரம் கைகளில் உள்ளமையால்,  அசைக்கமுடியாது என இறுமாந்நு கொண்டுள்ள பா.ச.க.வை அசைக்கும் ஆற்றல் அதிமுகவின்  சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைத்துள்ளது. அதனைப் பயன்படுத்தி அழிவுப்பாதை நோக்கிச் செலுத்தப்படும் இந்தியாவைக் காப்பாற்ற அதிமுகவின் மக்கள் சார்பாளர்கள் முன்வருவார்களாக!
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.(திருவள்ளுவர்,திருக்குறள் 676)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை ;  அகரமுதல 195, ஆனி 32, 2048 / சூலை 16, 2017

Thursday, July 13, 2017

செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தனித்தன்மையைக் காத்திடுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 194, ஆனி 25, 2048 / சூலை 09, 2017

செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்

தனித்தன்மையைக் காத்திடுவோம்!

  நூறாண்டு போராட்டத்தின் வெற்றி, தமிழின் செம்மொழித்தன்மைக்கு அறிந்தேற்பு அளித்தது. அதன் தொடர்ச்சியாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைத்ததும் அதனைத் தமிழ்நாட்டில் இயங்கச் செய்ததும். கலைஞர் கருணாநிதியும் சோனியாகாந்தியும் மேற்கொண்ட முயற்சியால் கிடைத்த நன்மை பறிபோகின்றது, (நன்மை செய்த இவர்களே செம்மொழிக் காலத்தை மாற்றியதன் விளைவே இன்றைய தீமையும்!)
 இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவு இல்லாமல் இருக்கிறது. அதற்காக அதன் பணிகளைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. தலைவர் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து அறிஞர்களுடன் கலந்துபேசி உரியதிட்டங்கள் தீட்டிச் செயற்படுத்தினால் எதிர்பார்க்கும் இலக்கை எட்டும்.
  இணையவழி உ.வே.சா. செம்மொழித் தமிழ்த் தரவகம், இணையவழிச் செவ்வியல் தமிழ்த் தொடரடைவு, செம்பதிப்புத் திட்டம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன மின்னணு நூலகச் செவ்வியல் சுவடிகளின் அட்டவணை, செவ்வியல் சுவடிகளின் பட்டியல் எனப் பலவற்றை இந்நிறுவனம் வழங்கி வருகின்றது. இவை ஆய்வாளர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் பேருதவியாக அமைவன.
  தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு இலக்கியங்களைக் குறுவட்டுகளாக இந்நிறுவனம்  வெளியிட்டுள்ளது; இலக்கிய வளர்ச்சிக்கும் இசை வளர்ச்சிக்கும் உதவும் அருந்திட்டமாகும். இவற்றின் தொடர்ச்சியாக மேலும் பல இலக்கியங்கள் குறுவட்டுகளாகவும் முற்றோதலுக்கு உதவும் வகையிலும்  வெளி வர இருக்கின்றன.
  இலக்கியப்பாடல்களைக் காணொளிக் காட்சிகள் மூலம் விளக்கும் நற்பணியும் பாராட்டும் வகையில் நடைபெறுகிறது. (ஆனால், Classical Tamil Visual Episodes  என்னும் இதன் தலைப்பை நல்ல தமிழில் குறிக்க வேண்டும்.)
  இணைய வழிச் செம்மொழித்தமிழ் என்னும் திட்டத்தின் மூலம் உலக மக்கள் இருந்த இடத்திலிருந்தே தமிழ் கற்கவும் செம்மொழி நிறுவனம் வாய்ப்பளித்து வருகிறது.
 முனைவர் பட்டம், முனைவர்பட்ட மேலாய்வு ஆராய்ச்சியாளர்களுக்கு உதவித்தொகை அளிப்பதன் மூலம் தமிழ் ஆராய்ச்சியில் மாணாக்கர்களை ஈடுபடச் செய்து வருகிறது.
  அறிஞர்களுக்கும் இளம் ஆய்வாளர்களுக்கும் செம்மொழி நிறுவனம் மூலம்தான் விருதுகள் வழங்கப்படுகின்றன.
  250இற்கும் மேற்பட்ட கருத்தரங்கங்கள்  செம்மொழி நிறுவனம் மூலம் நாடெங்கும் நடைபெற்று வந்துள்ளன. சில கருத்தரங்கங்கள் தமிழுக்கு எதிரான கருத்தைக் கூறும் களங்களாக மாறிய அவலம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பொதுவாக, மாணவர்கள் தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களை அறியவும் ஆராயவும் இவை தூண்டுதலாக அமைகின்றன என்பதை மறுப்பதற்கியலாது.
  செம்மொழி நிறுவனம் தரும் உதவித்தொகையால் பல்வேறு ஆய்வேடுகள் உருவாகியுள்ளன. முழுமையாய் அவை அச்சிற்கு வரவேண்டிய பணி நிலுவையில் உள்ளது.
இவ்வாறு பல்வகையிலும் செம்மொழி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
  இப்பொழுது இதனைத் திருவாரூரிலுள்ள மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதன் நோக்கம் இதன் செயல்பாட்டு அடிப்படையில் அல்ல. அவ்வாறு சிலர் தவறாக எண்ணிக்கொண்டு சரியாகச் செயல்படாததை மாற்றினால் என்ன என்பதுபோல் பேசுகின்றனர். அதற்காகத்தான் செம்மொழி நிறுவனம் செயல்பட்டு வருவதைக் குறிப்பதற்காக இவற்றைத் தெரிவிக்க வேண்டியுள்ளது. பையன் சரியாகப் படிக்கவில்லை என்றால் பள்ளிக்கூடத்தை விட்டு நீக்குவதோ மாற்றுவதோ முறையாகாது. சரியாகப் படிக்க வைக்க வேண்டும். எனவே, செம்மொழி நிறுவனம்  சரியாகச் செயல்படவில்லை எனில் சரியாகச் செயல்படுதவற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  உண்மைக்காரணம் அதுவல்ல. செம்மொழித்தன்மை இல்லாமலே செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஒரியா, வங்காளம், முதலான பிற மொழியினரும் தமிழுக்கு உள்ளதுபோல் தத்தம் மொழிக்கும் தனி நிறுவனம் வேண்டும் என்கிறார்களாம். அதற்கு நிதி ஒதுக்க இயலவில்லையாம். எனவே, தமிழ் நிறுவனத்தை மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கிறார்களாம். (அவ்வாறு போட்டியிட்டவர்கள் சமற்கிருதத்திற்குப் பல்லாயிரம்கோடி ஒதுக்குவதுபோல் தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்று   போராடியிருந்தால், நாமும் இணைந்து போராடலாம்.)
  மத்தியப்பல்கலைக்கழகத்தில் இணைப்பதாக வைத்துக்கொள்வோம். அங்குள்ள ஒவ்வொரு துறையினரும் “தமிழ்த்துறைக்குமட்டும் கூடுதல்  தொகை ஒதுக்குகிறீர்களே! எங்களுக்கும் அதே அளவு ஒதுக்குங்கள்” என்று கேட்கமாட்டார்களா? அப்பொழுது என்ன செய்வார்கள்? ஆகவே, இதைக் காரணம் கூறி மத்தியப்பல்கலைக்கழகத்தில் இணைப்பது தமிழை வளரவிடாமல் செய்யும் முயற்சி என்றுதான் கருத வேண்டும்.
  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்பது நாடாளுமன்ற ஏற்பு, குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்று அரசமைப்புச்சட்டத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டது. இதனை அவர் கேட்கிறார், இவர் கேட்கிறார் என்றெல்லாம் கூறி மாற்றிட இயலாது. அதையும் மீறிச்செய்தால் தமிழகம் பொங்கிஎழும் என்பதை மத்திய அரசு உணரவேண்டும்.
  ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு சமயம்(மதம்) என்ற தவறான கொள்கையில் பற்றுக் கொண்ட பா.ச.க.வின் தமிழ் அழிப்பு முயற்சியாகவே உலக மக்கள் எண்ணுவர். ஆனால், உண்மையில் அவ்வாறில்லை என்றும் அதிகாரிகள் அளவிலும் துறையளவிலும் எடுக்கப்பட்ட முடிவு என்றுஅறிய வருகிறோம்.
  எவ்வாறிருந்தாலும், தொடர்புடைய நிறுவனத்தினருக்கும் அதன் தலைவர் என்ற முறையில் தமிழ்நாட்டு முதல்வருக்கும் தெரியப்படுத்தாமல்,  திருவாரூர் மத்தியப்பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட தீர்மானமாக இது உள்ளது என்பது அறங்கோடிய செயலாகும். முடிவு எடுத்தபின்னர் இதனைத் தெரிவிக்கலாம் என்பதும் சதிச்செயலுக்கு ஒப்பானதாகும். நிறுவனத்தினரும் தமிழக அ்ரசினரும் முடிவு தெரிவிக்கும் வரை  அமைதி காப்பதும் நன்றன்று.
  ஆட்டைப் பலியிடும்பொழுது் அதன் இசைவைக்கேட்பதில்லையல்லவா?  அதுபோன்றதுதான் இத்தகைய செயல். செ.த.ம.நிறுவனம் தொடர்பான நடவடிக்கை எனில் அதன் பொறுப்பாளர்களுடன் கலந்துபேசி முடி வெடுப்பதுதான் முறை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
  மனித வள மேம்பாட்டுத்துறை, மத்திய அரசிற்குக்களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டுத் தமிழழிப்பு முயற்சியில் ஈடுபடக்கூடாது. இதற்கு முன்பெல்லாம் அவர்களது நடைமுறைக்கு மாறான கருத்துகளைத் தெரிவித்த பொழுது ஏற்றுக்கொண்டு செயல்பட்டிருக்கிறார்கள்.
 முன்பே குறிப்பிட்டதுபோல் “தமிழ்விழாவில் தமிழுக்கு இடமில்லையா” எனக்  கேட்டதும் தவற்றினை ஒப்புக்கொண்டு தமிழிலும் அறிவிக்கச் செய்தார்கள். “செம்மொழி அறிஞர்களைத் தேர்ந்தெடுக்கச் சிறுகதை எழுத்தாளர்கள், தமிழ் அறியாவர்கள் எல்லாம் தகுதியற்றவர்கள்” எனச் சுட்டிக்காட்டியதும்  குழுவை மாற்றி யமைத்தார்கள். இவ்வாறு நாம் மனித வள மேம்பாட்டுத்துறையினரின் செயல்பாட்டுத் தவறுகளைச் சுட்டிக்காட்டியதும் ஏற்றுக்  கொண்டுள்ளார்கள். இப்பொழுது நாம் வேண்டுவதையும் கேட்பார்கள் என நம்புகிறோம்
  புகழையும் நன்மையையும் தராத செயல்களை எக்காலத்திலும் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும் என்கிறார் தெய்வப்புலவர்
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. (திருவள்ளுவர், திருக்குறள் 652)
 மத்திய அரசு என்பது தமிழருக்கும் தமிழுக்கும் உரியதுதான் என்ற வகையில் புகழையும் நன்மையையும் தராத செயல்களைக் கைவிட்டுத் தமிழ்காக்கும் பணிகளில் தன்னை இணைத்துக்  கொள்ள வேண்டுகின்றோம்..
செம்மொழித்தமிழாய்வுமத்திய நிறுவனத்தை
மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முயற்சியைக்கைவிடுக!
அதன்தனித்தன்மையைக் காத்திடுக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 194, ஆனி 25, 2048 / சூலை 09, 2017


Followers

Blog Archive