Wednesday, July 27, 2016

தீர்ப்புரைஞரும் வழக்குரைஞரும் இணையாக இருந்தால்தான் நீதி பிறக்கும் – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பு-தீர்ப்புரைஞரும் வழக்குரைஞரும் - திரு :thalaippu_theerpurignarum_vazhkkuraignarum_thiru

தீர்ப்புரைஞரும் வழக்குரைஞரும்

இணையாக இருந்தால்தான் நீதி பிறக்கும்

 ‘நயன்’ என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்துதான் [நயன் > நயதி > நியதி >] நீதி  என்னும் சொல் பிறந்துள்ளது. எனவே, நீதி என்பதைத் தமிழ்ச்சொல் என உணர்ந்து கையாள்வோம். ‘பதி’ என்பது தங்குமிடத்தையும் தலைவனையும்  வேறு சில பொருள்களையும் குறிக்கும். நீதி தங்கியிருக்க வேண்டிய இடம் என்னும் பொருளிலும் நீதி வழங்கும் மன்றத்தின் தலைவன்  என்ற முறையிலும்  முறைமன்றத்தின் தலைவர் நீதிபதி  எனப்படுகிறார். எனவே, நீதிபதியும் தமிழ்ச்சொல்லே!
  நீதிபதியைத் தமிழ்ச்சொல்லல்ல எனக் கருதியும் ‘justice’  என்னும் சொல்லை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மட்டும் பயன்படுத்துவதாலும் மிக உயர்வாகத் தவறாக எண்ணி ‘நீதியரசர்’ எனத் தமிழில் குறித்துவிட்டனர். பழந்தமிழரசர்கள், தாங்கள் தவறு செய்யாதபொழுதும் தவறான செயல்நிகழ்ந்தது எனில் தம்மையே தண்டித்துக் கொண்டவர். நீதிமுறைமைக்குத் தங்களையும் உட்படுத்திக் கொண்டு பொற்கைப்பாண்டியன், பாண்டியன் நெடுஞ்செழியன் எனப் பலர் எடுத்துக்காட்டாக நம் உள்ளங்களில் வாழ்கின்றனர். ஆனால், அரசர் என்பதை  அன்புநெறியால் அருளுள்ளத்தால் ஆள்பவர்கள் எனக் கருதாமல் அடக்கி ஆள்பவர் என நீதிபதிகள் கருதிவிட்டனர்போலும். எனவேதான்  புருவத்தை உயர்த்திப் பேசுவது, உரத்துப் பேசுவது முதலானவற்றையெல்லாம் குற்றங்களாகக் கருதுகின்றனர். மக்களாட்சி நாட்டில் அறவான்களாக விளங்க வேண்டியவர்கள்  எப்படி இப்படிக் கருதினர் எனத் தெரியவில்லை. பிற நாட்டு நீதிபதிகளுக்கு எடுத்துக்காட்டான தீர்ப்புகளைக் கூறி வருவோர்  நெஞ்சில் இத்தகைய எண்ணம் வந்ததற்குக் காரணமாக நீதியரசர் என அழைக்கப்படுவது மிருக்கலாம். எனவே, பிற நீதிபதிகளிடமிருந்து வேறுபடுத்த உயர்நீதிமன்ற முறைமையாளர்களை நயவர்கள் எனக் குறிக்கலாம். நயன்மை வழங்குநர் என்ற அடிப்படையில்  நீதிபதிகளை நயவர் எனக் குறிப்பதும் தமிழ் வழக்கே! நீதியரசர் என்பதைக்  குறிக்க விரும்பாமல் நீதிநாயகம் எனக் குறிப்போருக்கும் இஃது உடன்பாடாகத்தான் இருக்கும்.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (திருவள்ளுவர், திருக்குறள் 118)
எனத் திகழ வேண்டியவர்கள் நீதிபதிகள். அவ்வாறு நடுவுநிலைமையுடன் நடந்து கொள்வதற்குத்
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து  (திருவள்ளுவர், திருக்குறள் 561)
என்னும் தமிழ்நெறிக்கிணங்க தக்கவகையில் குற்றச் செயலை ஆராய்ந்து, மேற்கொண்டு அக்குற்றவழியில் செல்லாமல் இருக்கும் வகையில், தண்டனை வழங்குவதற்கான தீர்ப்புகளை வழங்க வேண்டியவர்கள் நீதிபதிகள்.
  ஆனால், காவல்துறையினர் அல்லது முறைப்பாடு தருவோர் குற்றச்சாட்டுகளைக் கொண்டுமட்டும் நீதிபதிகளால் இவ்வாறு தக்கவழியில் செயல்பட முடியாது. அவ்வாறு தக்க வழியில் செயல்பட உதவுபவர்கள்தாம் வழக்குரைஞர்கள்.
  “சட்டம் ஓர் இருட்டறை. அதில் வழக்குரைஞர்களின் வாதம் ஒளிவிளக்கு” என்றாரல்லவா பேரறிஞர் அண்ணா. அத்தகைய ஒளிவிளக்கின் வெளிச்சம் கிடைக்காவிட்டால் நீதிபதிகளுக்கு நீதிப்பார்வை கிட்டாது.  நீதிபதியே குற்றச் செயலைப் பாரத்திருந்தாலும் அதனடிப்படையில் தீர்ப்பு வழங்க இயலாது. நீதிபதி இருக்கையைத் துறந்து சான்றுரைப்பவராக வந்து வேண்டுமானால் சான்று கூறலாம். எனவே, நீதிபதிகளுக்குக் குற்றம் சார்ந்த விளக்கம் அளிப்பவர்கள் வாதுரைஞர்கள்தாம்.
  குற்றமற்றவர் தண்டிக்கக்கூடாது என அவர்கள் தரப்பு  வழக்குரைஞர்களும் குற்றவாளிகள் தப்பிக்கக்கூடாது எனக் குற்றச்சாட்டுத் தரப்பு வழக்குரைஞர்களும் விளக்குவனவற்றின் அடிப்படையில் சட்டவழிப்படியும் முந்தைய தீர்ப்புரைகள் அடிப்படையிலும் ஆராய்ந்து தீர்ப்புரைத்து முறைமை வழங்க இயலும்.
  கீழ்நீதிமன்றத்தி்ன் தீர்ப்பு அதற்கு மேற்பட்ட இடைநீதிமன்றத்தில் மாற்றப்படுவதும் அதற்கும் மேலாக உயர்நிலையில் இத்தீர்ப்பு மாற்றப்படுவதும் நடக்கத்தான் செய்கின்றன. எனவே, எடுத்து வைக்கப்படும் வாதுரைகளின் அடிப்படையில் சட்டத்தின் வழி ஆராய்கையில் தீர்ப்புகள் மாறுகின்றன என்பது இயல்பான ஒன்று. எனவே, தீர்ப்பு வழங்குவதற்குக் காரணமாக வழக்குரைஞர்கள் எடுத்துரைக்கும் வாதுரைகளும்  நீதி கிடைப்பதற்கு இன்றியமையாதவை என்பது அனைவரும் உணர்ந்த ஒன்று. இத்தகைய வழக்குரைஞர்களும் நீதபதிகளும் இணையாக இருந்தால்தான் இவர்கள் கருத்து உரிய வகையில் செவிமடுக்கப்படும். இல்லையேல் “ஏழை சொல் அம்பலம் ஏறாது” என்னும் பழமொழிக்கேற்பவழக்குரைஞர்கள் கருத்து எடுபடாது.
மெய்யுடை ஒருவன் சொல்ல மாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே
(அதிவீரஇராம பாண்டியன் : வெற்றி வேற்கை.74)
என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். ஏழை என்றால் செல்வமற்ற நிலை யிலுள்ளவன் என்று மட்டும் எண்ணக்கூடாது. செல்வாக்கற்ற நிலையில் உள்ளவனும் ஏழைதான். நீதிபதிகளைவிட வழக்குரைஞர்கள் தாழ்ந்தவர்கள் என்ற நிலைப்பாட்டை உருவா்ககினால் தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டு வழக்குரைஞர்கள் சொல்லமுடியாத நிலைக்குச் சென்று தங்கள் கடமையிலிருந்து தவறுவர். சரியான வாதங்களை எடுத்துரைப்பதை விட்டுவிட்டு நீதிபதிகள் முகம் கோணாக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு முகமனுரை கூறுவதிலும் ஆமாம்சாமி போடுவதிலும் வாதுரையை வீணடிப்பர்.  அத்தகைய சூழலில் நீதி எங்கே பிறக்கும்?
  வழக்குரைஞர்கள் கட்சிக்காரரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வாதங்களை எடுத்துரைத்தாலும் மறுதரப்பு வழக்குரைஞரின்  வாதுரைகளையும் கருத்தில் கொண்டு நடுநிலைமையுடன் ஆராய்ந்து நீதிபதிகள் நீதி வழங்குகின்றனர். எனவே, பண ஆதாயத்திற்காக வழக்குரைஞர்கள் தவறாக விளக்கலாம். அதுபோல், சில நேரங்களில் பரபரப்புபெற்ற செய்திகளின் அடிப்படையில் குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படுவதும் வழக்கிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் குற்றவாளிகள் விடுதலை ஆவதும் அங்குமிங்குமாக நடக்கத்தான் செய்கின்றன. எனவே, இத்தகைய வழக்குரைஞர்கள், நீதிபதிகள் செயல்கள் அடிப்படையில் பொதுவாக எண்ணக்கூடாது. எனவே, இருக்கையில் அமர்ந்து  வழக்குகளை ஆராயும் நீதிபதிகளுக்குக் கண்களாகவும் செவிகளாகவும்  வழக்குரைஞர்கள் விளங்குகின்றனர். இரு தரப்பாரிடையேயும் சமநிலை இருந்தால்தான் நீதி பிறக்கும்.  இல்லையேல்  பார்வை சரியின்றி அநீதிக்கு வழிவகுக்கும்.
  எனவே, உண்மையான நீதி பிறக்க நீதிபதிகளுக்கு இணையாக வழக்குரைஞர்களும்  கருதப்பட வேண்டும். முன்னாள் வழக்குரைஞர்களும் பின்னாள் வழக்குரைஞர்களுமான இந்நாள் நீதிபதிகள் இதனை  உணர வேண்டும். அதற்கு வழக்குரைஞர்கள் சட்டம் 1961 பிரிவு 34 (1) இல் சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தங்கள் தீங்கிழைக்கும். ஆதலின் இவற்றைக் கைவிட்டு, கணவன் மனைவி இருவரும்  இணைந்த இல்லறமே நல்லறம் என்பதுபோல், தீர்ப்புரைஞரும் வழக்குரைஞரும் இணைந்து செயல்பட்டால்தான் அறம் தழைக்கும் என்பதை உணர்ந்து செயல்படுக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 144, ஆடி 09, 2047 / சூலை 24, 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo

Monday, July 25, 2016

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 15 – இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02
பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 15

பெண்ணை உயர்த்து!
 தன்மதிப்பும், தெய்வ உணர்வும் ஆண்களுக்கு மட்டுமே எனச் சிலர் அறியாமையால் எண்ணலாம். ‘தையல் சொல் கேளேல்’ என ஔவை சொன்ன சூழலைப் புரிந்து கொள்ளாமல் பெண்களை இழிவு செய்யக்கூடாது என்பதே பாரதியாரின் எண்ணம். பெண்களை ஆணுக்கு இணையாய் நாடெங்கும் பரப்பியதே அவரது புரட்சிப் பாக்கள்.
        “தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ?
தாய் பெண்ணே யல்லளோ? தமக்கை, தங்கை
        வாய்க்கும் பெண் மகவெல்லாம்  பெண்ணேயன்றோ?
(பாரதியார் கவிதைகள் : பக்கம் 268 | சுயசரிதை)
எனப் பெண்களையும் தெய்வமாகப் போற்றுகிறார்.
“பெண் விடுதலை வேண்டும்” (பாரதியார் கவிதைகள் : பக்கம் 182 | உறுதி வேண்டும்)
        “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
                பேணி வளர்த்திடும் ஈசன்
        மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல
                மாத ரறிவைக் கெடுத்தார்
        கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்திக்
                காட்சி கெடுத்திட லாமோ?”
பெண்க ளறிவை வளர்த்தால் – வையம்
                பேதைமை யற்றிடுங் காணீர்” (பாரதியார் கவிதைகள் : பக்கம் 205 | முரசு)
“தையல் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு இங்கே” (பாரதியார் கவிதைகள் : பக்கம் 208 | புதுமைப் பெண்)
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
        அறிவிலோங்கியிவ் வையம் தழைக்குமாம்”
(பாரதியார் கவிதைகள்: பக்கம் 208 | புதுமைப் பெண்)
பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா
        பெண்மை வெல்கவென்று கூத்திடு வோமடா
… … … … … … … … …
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா
… … … … … … … … …
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!
(பாரதியார் கவிதைகள் :பக்கம் 210 | பெண்மை)
எட்டும் அறிவினில் ஆணுக் கிங்கே பெண்
        இளைப்பில்லை காணென்று கும்மியடி”
(பாரதியார் கவிதைகள் : பக்கம் 211 | பெண்கள் விடுதலைக் கும்மி)
பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லையென்றால்
        பின்னிந்த உலகினிலே வாழ்க்கை இல்லை”
 (பாரதியார் கவிதைகள் : பக்கம் 268 | சுயசரிதை)
எனப் பற்பல பாடல்களில் பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்துப் பெண்களை உயர்த்தும் பாரதியார், “தையலை உயர்வு செய்” (ஆ.சூ 50) எனக் கட்டளையிடுகிறார்.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, July 23, 2016

பதிவர்களுக்குப் பத்துக்கட்டளைகள் – இலக்குவனார் திருவள்ளுவன் 10 commandments to net writers

தலைப்பு-பதி்வர்களுக்குப் பத்துக் கட்டளைகள் :thalaippu_pathivarkaluuku_10kattalaikal_thiru

வலைத்தளப் பதிவர்களுக்கும் பகிர்வர்களுக்கும் வேண்டுகோள்!

  முகநூல்(Facebook), காணுரை(whats-app), சுட்டுரை(Twitter), வலைப்பூக்கள், கருத்தாடல் குழுக்கள் (மின்னஞ்சல்கள் வழியாகக் குழுக்களுடன் தொடர்பு கொள்ளல்) முதலியனவற்றில்  பதிவு  மேற்கொள்வோரும் பிறரது பதிவுகளைப் பகிர்வோரும் தமக்குத்தாமே கட்டுப்பாடு வகுத்துக்கொண்டு பதிவு அல்லது பகிர்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  1. உண்மையைத் தன்மையை ஆய்ந்து பதிவிடுக!
   பொதுவாகச் செய்திகளை முந்தித் தரவேண்டும் என்ற ஆர்வத்தில், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் பதிந்து விடுகின்றோம். சான்றாக யாருக்காவது உடனடியாகக் குருதித் தேவை எனச் செய்தி வரும். உடனே நாம் உதவும் நோக்கில் பிறருக்குப் பகிர்ந்து விடுகின்றோம். அந்தச் செய்தி, சில நாள் அல்லது வாரம் அல்லது  மாதம் அல்லது ஆண்டிற்கு முந்தையதாக இருக்கும். சில நேரங்களில் தேவை முடிந்த செய்தியாகவும் இருக்கலாம். சில நேரங்களில் தேவைக்குரியவர் மறைந்துமிருக்கலாம்.  முடிந்தால்  தகவலில் குறிப்பிட்டுள்ள உரியவருடன் தொடர்பு கொண்டு விவரம் அறிந்து அதற்கேற்ப நாம் முடிவெடுக்கலாம்.
  இலவச மருத்துவ உதவி, அறுவை மருத்துவ உதவி என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. தொலைபேசியில் தொடர்புகொண்டால்,  1. முடிந்து விட்டது. 2.  பதிவு வரிசைப்படி,  ஏழெட்டு ஆண்டுகள்  கடந்த பின்னரே உதவி கிடைக்கும். என்பன போன்று மறுமொழிகள் கிடைக்கின்றன. இன்னும் சில நேரங்களில் தரப்பட்ட தொலைபேசி எண்ணில் அழைக்கும் பொழுது மறுமுனையில் எடுப்பாரின்றி இருக்கும் அல்லது    பேசி அணைக்கப்பட்டிருக்கும் அல்லது எண் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் என்ற நிலையே உள்ளது. எனவே, முடிந்தால் தொடர்பு கொண்டு உண்மை எனில் பகிரலாம். இல்லையேல்  உசாவி அறிந்துகொள்க என்னும் குறிப்புரையுடன் பிறருக்கு அனுப்பலாம்.  ஆனால், முதலில் செய்தியைக்காண்பவர் இப்பணியை மேற்கொண்டால் பின்னர் முறைமுறையே பகிரப்போகின்றவர்களுக்குச் சிக்கல் இராது.
   வேலைவாய்ப்புச் செய்திகள் பலவற்றில் மூலத்தளத்தில் சென்று பார்த்தால் இறுதி நாள் அன்றைய நாளாக இருக்கும் அல்லது முடிந்து போய்இருக்கும். சில நேரங்களில் மூலத்தளத்தைத் திறந்து பார்க்க இயலாச் சூழலும் உள்ளது. நாளிதழ்களில் வரும் பல வேலைவாய்ப்புச் செய்திகள் இவற்றிற்கு விலக்கல்ல. எனவே, எதுவாயினும் உரிய தளத்தைப் பார்வையிட்டு விவரம்  சரிதானா? விண்ணப்பிக்கக் கால வாய்ப்புள்ளதா? எனப்பார்த்தபின் பதிவதே உண்மையான உதவியாய் அமையும் என்பதை எந்நாளும் கருத்தில் கொள்ள வேண்டும்.
  1. தேவை முடிந்ததும் தெரிவித்திடுக!
   ஆளையோ பொருளையோ காணவில்லை என அறிவித்து உதவி வேண்டுநர், உரிய பொருளையோ ஆளையோ கண்டறிந்தால் தெரிவிப்பதில்லை. முதலில் குறிப்பிட்டதுபோல்,  வலைத்தளங்களில் இச்செய்தி உலவிக் கொண்டிருக்கும். எனவே, பொருளுதவி, வேலையுதவி, மருத்துவ உதவி. அல்லது வேறு உதவி வேண்டும் எவ்வறிவிப்புச் செய்தியாயினும் முதலில்  அச்செய்தியைப் பதிந்தவர்,  தேவை முடிந்ததும் அல்லது இனி உதவி தேவையில்லை என்ற நிலை வந்ததும் அதனையும் தவறாமல் தெரிவிக்க வேண்டும். தொடர்பான முதல் பதிவை நீக்குவதும் சிறப்பு. இத்தகைய செய்தியைப் பொழுதுபோக்காகப் படித்து விட்டு அகன்றுவிடுவர் எனக் கருதினால் இது போன்ற செய்திகளையே வெளியிட வேண்டாவே! எனவே, உதவ முயலு்வதும் ஒருவகையில் தொல்லைக்கு ஆளாக்குவது என்பதை உணர்ந்து பதிவின் முடிவு நிலையைக் குறிப்பிட வேண்டும்.
  1. விருப்பம் தெரிவிக்குமாறு வலியுறுத்தும் குறிப்புகள் வேண்டா!
  “விருப்பத்தைக் கட்டாயமாகத் தெரிவியுங்கள்”, “கட்டாயமாகப் பகிருங்கள்” என்றெல்லாம் வேண்டுகோள் குறிப்புகள் எழுதுகின்றனர்.  விருப்பம் தெரிவிப்பதும் பகிர்வதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. கட்டாயப்படுத்தக் கூடாது. அத்துடன் குறிப்பு நின்றால் பரவாயில்லை. ‘இந்தியனாக இருந்தால் விருப்பம் தெரிவி’, ‘உண்மைத் தமிழர்கள் விருப்பம் தெரிவியுங்கள்’ என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். இக் குறிப்புகளைப் பார்த்ததும் விருப்பம் தெரிவிக்க அல்லது பகிர விரும்புபவர்களும் அமைதியாக இருந்து விடுகின்றனர். அடுத்தவர் இந்தியனா அல்லது தமிழனா எனக் காண்பது பதிவர்களின் வேலையில்லை. உண்மையில் ஒத்த உணர்வுகளிருப்பின் அவர்களாகவே பிறருக்குப் பகிர்வர் அல்லது விருப்பத்தைத் தெரிவிப்பர்.
 4.பகிர்ந்தால் பயன் கிடைக்கும் என்பதுபோன்றவற்றை அடியோடு புறக்கணிப்பீர்!
  முன்பெல்லாம் அஞ்சலில் ‘இதனை உடனே இத்தனை பேருக்குப் படி எடுத்தனுப்பினால் இந்த நன்மை கிடைக்கும்’,  ‘இத்தனை முறை எழுதினால் இன்ன நன்மை கிடைக்கும்’, ‘இத்தனை நாளுக்குள்   இதில்  சொல்லியவாறு செய்தால் இத்தனை நாளுக்குள் இன்னின்ன கிடைக்கும்’ என்றெல்லாம் பொய்த்தகவல்கள் வரும். இதை நம்பும் மூடத்தனம் பலரிடம் இன்னும் உள்ளதால் முகநூல் முதலான தளங்களில் இத்தகைய செய்திகள் வருகின்றன. இந்தப் படத்தைப் பகிர்ந்தால் உடனே நன்மை கிடைப்பதுபோல் மூடத்தனைத்ததை விதைக்கின்றனர். இன்னும் ஒரு படிமேலே போய் ‘இதனைப் பகிராவிட்டால் அல்லது  சொடுக்கிப் பார்க்காவிட்டால் இன்ன தீமை வரும்’ என்றெல்லாம் அனுப்புகின்றனர். அவ்வாறு பதிவோர் இத்தகைய மூடத்தனத்தை மூட்டைக்கட்டி வைக்க வேண்டும். அப்படியே சிலர் அனுப்பினாலும், நாம் அதனைப் பிறருக்குப் பகிரும்  அறியாமையுடன் திகழக்கூடாது. சிலர், “எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.  ஆனால்,  இவ்வாறு செய்வதால் நமக்கு  இழப்பு எதுவுமில்லையே! இவ்வாறு செய்து ஒருவேளை நன்மை கிடைத்தால் நல்லதுதானே” எனக் கூறுவர். இத்தகைய மனப்பான்மை உள்ளவர்களால்தான் இத்தகைய செய்திகள் வருகின்றன. எனவே, ஒரு செய்தியை அல்லது படத்தைப் பார்ப்பதாலோ பகிர்வதாலோ  பயன் கிடைக்கும் என்பன போன்ற மூடச் செய்திகளை ஊக்கப்படுத்த வேண்டா.
  1. பொழுதைக் குறிப்பிடும் / நேரத்திற்கேற்ற  வணக்கம்  தேவையில்லை!
  காலை வணக்கம், மாலை வணக்கம் என்றெல்லாம் மிகுதியான பதிவுகள் உள்ளன. ஆங்கில வழக்கத்தைத் தமிழ்ப்படுத்தி இவ்வாறு கூறுகின்றனர். தமிழ் மரபின்படி எல்லா நேரமும் வணக்கம், வணக்கம், வணக்கம்தான்.  இப்பொழுது ஞாயிற்றுக் கிழமை வணக்கம், திங்கள்கிழமை வணக்கம், செவ்வாய்க் கிழமை வணக்கம் என்பனபோல், கிழமையைக் குறிப்பிட்டும்  காலை 10.00 மணி வணக்கம் என்பதுபோல், அப்போதைய நேரத்தைக் குறிப்பிட்டும்  வணக்கத்தைத்   தெரிவிக்கின்றனர். அடுத்து 10.10  மணி வணக்கம் என்பது போன்றும் அதன்பின்னர் 10.10.05மணி வணக்கம் என்பது போன்றும் தெரிவிப்பார்கள் போலும்! நல்ல காலை(யாக அமையட்டும்),  நல்ல மாலை(யாகஅமையட்டும்)  என்னும் ஆங்கில முறை வாழ்த்துவது. பெரியோர் சிறியோருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். அடுத்தவரை வணங்கும் தமிழ் முறையே பண்பாடானது. எனவே, வணக்கம் மட்டும் தெரிவித்தால் போதுமானது.
  1. பண்பாடான சொல்லாடல்களையே பயன்படுத்துக!
  சிலர் நல்ல கருத்துகளைப் பதிந்து வி்ட்டு இடையிடையே நாக்கூசும் சொற்களை அல்லது தொடர்களைப் பயன்படுத்துகின்றனர். கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என விரும்பினால் நரகல் நடையைக் கைவிடவேண்டும். இதனால் பெருமை எதுவும் விளையப் போவதில்லை. மாறாக, இழிபெயர்தான் ஏற்படும். எனவே, பதிவில் பண்பாடு காக்க வேண்டும். சிலர் மாற்றுக்கட்சித்தலைவர்களைக் கண்டபடி சித்திரித்துப் படங்களும் போடுகின்றனர். இத்தகைய  படங்களால் அவ்வாறு பதியுநர் பண்பாடின்மைதான் வெளிப்படுமே தவிர, படத்திலுள்ளவர்க்கு ஒன்றும் இழுக்கு இல்லை என்பதை உணரவேண்டும். கருத்தை நல்ல கருத்தால்தான் வெல்ல  வேண்டும்.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (திருவள்ளுவர், திருக்குறள் 645)
என்பதை அறிந்து, பிறரை  வெல்ல பண்பாடான சொல்லாடல்களையே பயன்படுத்த வேண்டும். நரகலுக்கு எதிர் நரகல் நடை எனத் தடம் மாறக்கூடாது.
 7.படைப்புத் திருட்டு வேண்டவே வேண்டா!
   சிலர் அடுத்தவர் பதிவுகளைத் தம் பதிவுபோல் பதிகின்றனர். மூலப்பதிவர் பெயரைக்  குறிப்பிட்டுப் பதிவதுதான் நாணயமான  செயல். எனவே, பதிவுகளை மேலனுப்பாமல், தாமே எழுதியதுபோல் அனுப்பும் குற்றச்செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க  வேண்டும்.
பிறரது கட்டுரைகளைத் தம் பெயரில் வெளியிடுகின்றனர் சிலர். அதனைப் படிக்கும் பிறர் அவரது கட்டுரை என எண்ணி அவ்வாறே பகிர்கின்றனர். பின்னர் உண்மையான படைப்பாளர் இவரது கருத்தைத் திருடியதுபோல் ஆகி விடுகின்றது.  படைப்பின்  கீழே எழுதியவர் பெயர், வந்தத் தளத்தின் பெயர் ஆகியவற்றைக் குறித்தால் போதுமே!
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல் (திருவள்ளுவர், திருக்குறள் 282)
படைப்புத்திருட்டுக்கும் சேர்த்துத்தான்.
 எனவே பதியும் பொழுது, உரியவர் பெயரையும்  வந்த இதழ் அல்லது தளம் எனத் தரவு  மூலத்தையும் குறிப்பிட்டு இயலு மெனில் நம் கருத்தையும் பதிவதே முறையாகும் என்பதை அனைவரும் உள்ளத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 8.மேற்கோளைச் சரியாகக் குறிப்பிடுக!
    பாடல் வரிகளை அல்லது கட்டுரைக் கருத்துகளை மேற்கோளாகக் கூறுவோர் உரியவர் பெயரைக் குறிப்பிடாமல் தாம் யாருடைய பாடல் அல்லது கட்டுரை எனக் கருதுகிறார்களோ அவர்கள் பெயரையே குறிப்பிடுகின்றனர். சான்றாகத், “தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்று பாடியவர் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்(பிள்ளை). ஆனால் பாரதியார் படத்துடன் அவர் சொன்னதுபோல் இணையத் தளங்களிலே உலாவருகின்றது. அதுபோல் படங்களைத் தவறாக இடுகின்றனர். பாரதிதாசன் படத்திற்குப் பாரதியார் படத்தைப் போடுவதன் மூலம் பாரதியையும் அறிந்திருக்கவில்லை, பாரதிதாசனையும் அறிந்திருக்க வில்லை என்பதை உணர்த்துகிறார்கள். நாம் பதியும் செய்தியைத் தவறென எண்ணாமல் அப்படியே பிறர் பகிர்வதால் தவறான கருத்துகள் நிலைத்துவிடுகின்றன. அதன் பின்னர், சரியானவற்றைத் தவறென்றும்  தவறானவற்றைச் சரியென்றும் பயன்படுத்தும் பழக்கம் வந்துவிடுகின்றது. எனவே, மேற்கோள்களைக் குறிப்பிடுகையில் சரிபார்த்துக்கொண்டு குறிப்பதே  முறையாகும்.
  1. அறிமுகக் குறிப்பு தாருங்கள்!
  அருந்திறல் ஆற்றியவர் பற்றிய செய்தியைப் பகிரும்பொழுது யார், எவர் என்ற விவரம் இல்லாமல். இன்னசெய்த இவரைப் பாராட்டுங்கள் அல்லது இதில் இன்ன பரிசைப்பெற்ற இவரை வாழ்த்துங்கள் என்று பல செய்திகள் வருகின்றன. உண்மையிலேயே மனப்பூர்வமாகப் பாராட்டப்படவேண்டியவர்கள் பெயர், கல்வி நிறுவனம் அல்லது பிற  விவரம் இருந்தால்தானே உளமாரப் பாராட்ட இயலும். எனவே, பாராட்டுக்ககுரியவர்கள் விவரங்களை இணைத்துப் பதிவதே உண்மையான பாராட்டாகும் என்பதை உணர வேண்டும்.
  சிலர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கான வாழ்த்துச்செய்தி  அல்லது பாராட்டுச் செய்தியைப் பதிகின்றார்கள். அவர்களுக்குத் தெரிந்தவர்கள் பிறருக்குத் தெரிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், பெயர்களையே குறிப்பிடாமல் அடைமொழிகளாகக் குறிப்பிட்டு பாராட்டு  மழை பொழிகிறார்கள். அவர் யாரெனக்  குறிப்பிடப்பட்டால்தானே பிறரும் அவரைப்பற்றி அறிவர். தனிப்பட்ட முறையில் பாராட்டுவதாக இருப்பின் அவரது தளத்தில் சென்ற பதியலாமே! நீங்கள் இந்திரன், சந்தி்ரன் என்றெல்லாம் குறிப்பிடப்படுபவரைப் பிறரும் அறிய வாய்ப்புதாருங்களேன். எனவே, யாரைப்பற்றியும் குறிப்பிடுவதாக இருந்தால்,  – அவர் நன்கறியப்பட்ட எனக் கருதினாலும்- அறிமுகக் குறிப்பு தாருங்கள். அதுதான் பதிவின் நோக்கத்தை நிறைவேற்றும்.
  1. மொழித்தூய்மையைப்பேண வேண்டும்!
  பலர், பிற மொழிச்சொற்களைத் தங்குதடையின்றிக் கலந்து பயன்படுத்துகின்றனர். இத்தகைய தவறுகளால்தான் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் ஆட்சி செலுத்தவேண்டிய தமிழ், தன் அகண்ட நிலப்பரப்பையும் இழந்து, குறுகிய பரப்பினுள்ளும் ஆள முடியாமல் தவிக்கின்றது. நாம் மேலும் இத் தவறுகளைச் செய்து நம் மொழிப்பரப்பை மேலும் குறுக்கவேண்டுமா? இன்னும் சிலர் விருப்பத்தைத் தெரிவியுங்கள், பகிருங்கள் என வேண்டுகோள் விடுப்பதற்கு, ‘லைக் பண்ணுங்கள்’, ‘லைக்கிடுங்கள்’, என்பன போன்று குறிக்கின்றனர். கருத்தாடல் குழுக்களில் நன்கு தமிழ் கற்றவர்களே, கொச்சை வழக்கையும் கிரந்த வழக்கையும் பயன்படுத்துவதைப் பெருமையாகக் கருதித் தமிழப்பயன்பாட்டைச் சிதைக்கிறார்கள். கருத்துப் பரவல் மூலம் தொண்டாற்றக் கருதுவோர் மொழிக்கொலைஞர்கள் என்ற  இழிபெயர் வாங்க வேண்டுமா? “சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்” என்றார் பாரதியார். அத்தகைய உயர்ந்த சொற்களைப் பயன்படுத்த வேண்டிய நாம்இழிந்த நடையைப் பின்பற்றலாமா? “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” எனப் பாரதிதாசன் முழஙகிய வரியை நாம் கூறுகிறோமே தவிர, நாம் நம் நற்றமிழைத் தலையின் இழிந்த மயிராகத்தானே கருதுகிறோம். வெட்கத்திற்கும் வேதனைக்கும் உரிய செயலல்லா இது? நம் அன்னையை நாம்தானே போற்ற வேண்டும்! நம் அன்னை மொழியையும் நாம்தானே போற்ற வேண்டும்! மொழியை இழந்தால் வாழ்வை இழப்போம் எனத் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் வரலாற்று அடிப்படையில் கூறிய பொன்மொழியை நாம் என்றும் மறவாமல் வாழ வேண்டுமல்லவா? பதிவர்கள் பின்பற்ற வேண்டிய செயல்கள் மேலும் சில இருப்பினும் எல்லாவற்றிலும் தலையானதாக மொழித்தூய்மையைப்பேண வேண்டும்.
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
என்பதையே நம் இலக்காகக் கொள்ள வேண்டும்!
  மேற்குறித்தவற்றை நினைவில் கொண்டு பாரெங்கும்   பைந்தமிழ் பரவும் வகையில்  பதிவுகளை மேற்கோள்வோம்! பயனுறுவோம்!
தலைப்பு.10 கட்டளைகள்02 : thalaippu_10kattalaikal02_thiru
 – இலக்குவனார் திருவள்ளுவன்
thiruvalluvan

Followers

Blog Archive