Saturday, October 28, 2017

ஆதரவு சசிகலா, தினகரனுக்கு அல்ல! உண்மைக்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆதரவு சசிகலா, தினகரனுக்கு அல்ல!  உண்மைக்கு!
  சசிகலா, தினகரன் தொடர்பான கட்டுரைகளப் படிக்கும்  நண்பர்களில் பெரும்பான்மையர், “உங்கள் கட்டுரைத் தலைப்புகளைப் பார்த்து நாங்கள், சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாக எழுதுகிறாரே! என எண்ணுவோம். ஆனால் படித்து முடித்ததும் வழக்கம் போல் நடுநிலையாகவும் துணிவாகவும் எழுதுவதைப்  புரிந்து கொள்வோம். மாறுபட்ட  கோணத்தில் அமையும்  உங்கள் கட்டுரைகள் தொடரட்டும்!” என்கின்றனர். சிலர் “அதிமுகவினரே சசிகலா குடும்பத்தைப்  புறக்கணிக்கும் பொழுது அவர்கள் சார்பாக எழுதுகிறீரகளே!” என்று  கேட்கின்றனர்.  மூவர் ஊழல்பேர்வழிகளை ஆதரித்துத் திருவள்ளுவர்  பெயருக்கே களங்கம் விளைவிப்பதாக முகநூலில் பதிந்துள்ளனர். மேலும் சிலரும் இதுபோன்ற எண்ணத்தில் இருக்கலாம்.
  என்னைப் புரிந்து கொண்டுள்ள பெரும்பான்மை  நண்பர்களுக்கு நன்றி.
 நம் விருப்பம் ஒன்றாகவும் நாட்டு நடப்பு வேறாகவும் இருக்கும்பொழுது நாட்டுநடப்பின் எதிரொலியாக எழுத  வேண்டியது கடமையாகும். எடுத்துக்காட்டிற்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். நடந்து முடிந்த பொதுத்தேர்தலுக்கு முன்னரான தொலைக்காட்சி உரையாடல்ஒன்றில், |சென்னை, கடலூர் வெள்ளப் பாதிப்புகளால் அதிமுக தோல்வியுறும் என அனைவரும் தெரிவிக்கும் பொழுது நீங்கள் அதிமுக வெற்றி பெறும் என்று எப்;படிக் கூறுகிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டது. “அதிமுக வரக்கூடாது என்பதுதான் என் விருப்பம். ஆனால், அதிமுக  வெற்றி பெறும் என்பது நாட்டு நிலை.  சென்னையும் கடலூரும் மட்டும் தமிழ்நாடு அல்ல!  இவற்றை மாற்றும் வல்லமை அதிமுகவிற்கு உண்டு. எனவே, இவையும் கடந்து போகும். அதிமுகதான் வெற்றி பெறும்” என்றேன். அவ்வாறுதான் நடந்தது. எனவே, நம் விருப்பத்தைத் தெரிவிப்பதுடன் நாட்டு மக்களின்  போக்கையும் தெரிவிப்பது நம் கடமையாகிறது.
 தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் தரக்கூடிய தமிழ்த்தேசியர்களே ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். ஆனால் தமிழ்த்தேசியர்களில் ஒரு பகுதியினர் தேர்தலைப் புறக்கணிக்கின்றனர். பெரும்பான்மையர் திராவிடத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு ஆரியத்திற்குப் பாய் விரிக்கின்றனர்.  எனவே, ஒப்பீட்டளவில் குறைந்த தீமையுடையவரையே தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.
 தமிழ்தமிழர் நலனை அடித்தளமாகக் கொண்டு திமுக எழுப்பப்பட்டிருந்தாலும் அண்மைய போக்கு அதற்கு மாறாகவே உள்ளது. ஈழத்தில்  பெருமளவிலான இனப்படுகொலை நடைபெற்றபொழுதும் அமைதி காத்து உடன்பட்டது,  இலங்கைத்தமிழரையும் ஈழத்தமிழரையும் சிங்களத் தமிழர் என்று சொல்லி  இன வரலாற்றை அழிப்பது முதலான தலைமையின்  போக்கை அடிமைத்தனத்தில் ஊறி  மனச்சான்றிற்கு எதிராகக் கட்சியினர் ஆதரிக்கின்றனர்.  ஓழிக்கப்படவேண்டிய  பேராயக்(காங்.) கட்சியைக் காப்பதற்குத் திமுக துணை நிற்கிறது. தோல்விகளைச் சந்தித்த பின்பும் மனத்தை மாற்றிக்கொள்ளாமல் வால்பிடிக்கும் திமுக  இன்றைக்கு ஆதரிக்கப்படவேண்டிய நிலையில்  இல்லை.
   அதிமுகவிற்குத் தரும் ஆதரவு திமுகவைத் திருத்த உதவும் என்பதன் அடிப்படையிலும் தொடர்ந்து திமுக காங். நிலைப்பாட்டில் இருப்பதைத் தடுக்கவும் அதிமுக பக்கம் தமிழ்உணர்வாளர்கள் சாயும் நிலை ஏற்பட்டது. ஆனால் இப்பொழுது மாற்றுஅணித் தலைமையைவீழத்துவதற்காகப் பாசக காலடியில் வீழ்வதையே  நோக்கமாகக் கொண்டு பதவியில் உள்ள தலைவர்கள்  செயல்படுகின்றனர்.
  தமிழ்ஈழ ஆதரவு தீர்மானத்திற்காக அதிமுகவை ஆதரித்தாலும் ஈழத்தமிழர் முகாம்கள் வதைக்கூடங்கள்  போல் உள்ளதாகக் கூறப்படுவதும் அவர்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்படுவதும்  இதனைப்  பாராட்டுவதற்குரிய தகுதியிழப்பாகவே உள்ளன.
  எனினும் இன்;றைய சூழலில் மதவெறியும் இனவெறியும் மொழி வெறியும் கொண்ட ஆட்சியின் தலைமையால்  இந்தியா இன்னல்களைச் சந்தித்துக்  கொண்டுள்ளது. வலிமையான அரசு  இருந்தால்தான் தமிழகம் காப்பாற்றப்படும். எதிர்க்கட்சியான திமுக  தேர்தலின்றி ஆளுங்கட்சியாக மாறும் சூழல் இல்லை.  எனினும் ஆட்சிக்கலைப்பு அச்சம் ஆள்வோரிடம் உள்ளது.
 நேற்றுவரை சசிகலா குடும்பத்தினரிடம் வீழ்ந்து கிடந்தவர்கள்  இன்று எழுந்து நிற்கிறார்கள் என்றால் சொந்தக்கால்களில் அல்ல! பாசக இல்லையேல் இன்றைய ஆட்சி இல்லை என்பதை அமைச்சர் பெருமக்களே பொதுக்கூட்டங்களிலேயே தெரிவிக்கின்றனர். எனவே பதவிகளில் இருந்து ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற எண்ணுவோரால் ஆட்சிக்கும் கட்சிக்கும் அழிவே தவிர நன்மை விளையாது. முதல்வர், துணை முதல்வர், பிற அமைச்சர்களுக்குப் பதவி  இல்லையேல்  செல்வாக்கு செல்லாக்காசாக மாறும்.
 சசிகலா சிறையில் இருக்கும் சூழலிலும் தினகரன் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் முதலான எப்பொறுப்பில் இல்லாத பொழுதும் கட்சித் தொண்டர்களைப் பிடிப்பில் வைத்துள்ளார். தமிழகக்கட்சிகள் யாவுமே மையத்தின் அடிமையாகத்தான் உள்ளன.  என்றாலும் சசிகலா அல்லது தினகரன், பாசக எண்ணும் அளவிலான அடிமைத்தனத்தில் இல்லை என்பது தெரிகிறது. பாசகவிற்கு ஆட்சியில் உள்ளோர் அடிமையாக இருப்பதன் மூலம்  கால்ஊன்ற முயல்கிறது. செல்வாக்கில்லாத  இருவரை நம்பி ஏமாந்ததுபோதும் என்று இவர்களை அடிமைப்படுத்தினால்  எண்ணம் எளிதில் அமையும். ஆனால் அவ்வாறு அடிமைப்படுத்துவது எளிதாக இல்லை என்பதை அரசியல் போக்கு காட்டுகிறது.
 செயலலிதாவின் மருத்துவமனைக் காலம்அவசரக்கதியில் அமைச்சரவை பங்கேற்றமை முதலான யாவுமே பாசகவின்றி ஓர் அணுவும் அசையவில்லை என்பதைக்  காட்டுகிறது. தமிழிசை முதலான பாசகவினர் முன்கூட்டி மணிஓசையை எழுப்பியதற் கிணங்கவே ஆட்சியிலும் கட்சியிலும் ஆட்டங்கள் நிகழ்கின்றன. எனவே, “எங்கள் அப்பன் குதிருக்குள்  இல்லை” எனச் சொல்லும்; பாசகவின் உண்மை முகம் உலகிற்குத் தெரிகிறது.
 இச்சூழலில் நடைமுறையில் இருகட்சி ஆட்சியில் உள்ள தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி வலிமைiயாக  இல்லாவிடில் நாட்டிற்கும்  கேடுதான். இந்திய அரசியல் கட்சிகளின் அடையாளமாக ஊழல் மாறிப்போயுள்ள காலக்கட்டத்தில் ஊழலை அடிப்படையாகக் கொண்டு யாரையும் அளவிட இயலாது. சசிகலா குடும்பத்தினர் பதவிப்பொறுப்புகளில்  இல்லாத பொழுது ஊழல் புரிந்தனர் என்றால் அதற்குத் துணை நின்ற பதவியாளர்கள்தாம் முதன்மைக் குற்றவாளிகள். அவர்களை உத்தமர்களாகக் கூறிக்கொண்டு இவர்களை மட்டும் குற்றம் சுமத்திப் பயனில்லை.
  சசிகலா குடும்பத்தினரை அகற்றுவதற்குப் பாசக என்ன சொல்கிறது?
  தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள குடும்பத்தினரிடம்  ஆட்சி அதிகாரம் இருப்பது நல்லதல்ல என்பதால்தான் சசிகலா குடும்பத்தினரை ஓரங்கட்டுவதாக, மிகமிகச் சிறுபான்மை வகுப்பினராக இருந்து  கொண்டு நாட்டை ஆட்டுவிக்கும் பாசக தலைவர் ஒருவர்  கூறியுள்ளார்.
 தமிழரல்லாதவர் ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் அல்லது தமிழரல்லாதவர்க்கு அடிமையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே பாசக நோக்கம்.
  தனி ஒரு செயலாகப் பார்க்கும் பொழுது சசிகலாமீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், பொதுவாகப் பார்க்கப்பட்டால் குற்றப்பட்டியலில் சேர்க்கப்படவேண்டியவர்கள் மிகுதி எனப் புரிந்து கொள்ளலாம்.
  சிறைஅறையிலிருந்து நேர்முக அறைக்குச் சசிகலா சென்று வருவதைச் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதுபோல் காட்டுதல்போன்ற பல செய்திகளும் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு,  இரட்டை இலை முடக்கம், அடக்குமுறை வழக்குகள் யாவும் அதிகார வலிமையால் அடக்குவதற்கான முயற்சிகளே! இவர்கள் அடிபணிந்தால்அடுத்த நொடியே காட்சிகள் மாறும். இவர்கள் உத்தமர்கள் ஆவார்கள்! கட்சியையும்ஆட்சியையும் காக்க வந்த தெய்வங்கள் ஆவார்கள்.எனவே, புனையப்படும் வழக்குகள்,  விரட்டியடிப்பதற்கான நடவடிக்கைகள் அடிப்படையில் நாம் எதையும் எடைபோடக்கூடாது.
 தேர்தல் வந்தால் தி.மு.க. வெற்றி அடையும் என்ற எண்ணத்தில்  ஆட்சிக்கலைப்பும் கூடாது; பாசகவை எதிர்க்கும் அதிமுக தலைவர்களும் ஆட்சிக்கு வரக்கூடாது என்னும் இலக்கில் பாசக செயல்படுவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
 செயலலிதா மருத்துவமனையிலிருந்த பொழுதே அவர் எதிர்த்த திட்டங்களுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதால், செயலலிதாவின் உடல்நிலை பற்றிய முழு விவரமும் மத்திய அரசிற்குத் தெரியாமல் இருக்காது. எனவே, சசிகலாவை மட்டும் குற்றவாளியாகக் கூறுவது பொருந்தாது.
  பொதுவாக,  தேசிய உணவுப்பாதுகாப்புச்சட்டம், உதய் மின்திட்டம், பொதுநுழைவுத்தேர்வு(NEET) திட்டம்,   பொருள்-சேவை வரித்திட்டம் (G.S.T.) என மேனாள் முதல்வர் செயலலிதாவால் ஏற்கப்பெறாத திட்டங்களை,  அவரைத் தொடர்ந்து அமைந்துள்ள அதிமுக அரசுகள் அவசரக்கதியில் ஏற்றுள்ளன.
 இவ்வாறு செயலலிதா தமிழக நலன் கருதி எதிர்த்த பல கொள்கைகள் தமிழர்நலனுக்கு ஊறுநேர்விக்கும் வகையில் கைவிடப் படுகின்றன.
 தமிழ்நாடு சமற்கிருத நாடாகவும் இந்தி வீடாகவும் மாற்றப்படுவதற்கான பாதையில் பாசக சென்று கொண்டுள்ளது.
 கதிராமங்கலம், நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டங்கள் முதலான பலவும், அரசிற்கு எதிராக முழங்குவோர் கதை செய்யப்படுவதும் பாசக ஆட்சியின் விருப்பத்திற்கேற்பவே நிகழ்கின்றன.
  ஆளுங்கட்சி வலிமையாக இருப்பதன் மூலமே இவற்றைத் தடுக்க முடியும்.
 தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு இல்லையேல் இராதாகிருட்டிணன்  தொகுதிச் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருக்கும். செல்வாக்கு உள்ளவர்களை ஒடுக்கப் பாசக முயன்றுவருவதால் அதற்கு எதிராக எழுத வேண்டியுள்ளது.  இதனால், சசிகலா, தினகரன் தரப்பு உண்மைகளையும் எழுத வேண்டியுள்ளது. இயல்பான போக்கில் விட்டிருந்தால் காணாமல் போயிருக்க வாய்ப்பு இருந்ததை அரசுகள், அதிகார வலிமையால் குறுக்குவழிகளில் செயல்பட்டு வளரவிட்டுள்ளன. அத்தகைய சூழல்களில் ஒன்றுதான்  பாசகவின் ஆளுங்கட்சியை ஒடுக்கும் திட்டத்தை எதிர்ப்பதற்காக நாமும் சசிகலா, தினகரன் வஞ்சிக்கப்படுவதையும் குறிப்பிடச் செய்கின்றது.
 ஊழல் பெருச்சாளிகள், சுண்டெலிகளை  விரட்ட முயலுவதுபோல் நடிப்பதால், நாம் முதலில் பெருச்சாளிகளை விரட்ட வேண்டும். பின்னர் சுண்டெலிகளை விரட்டலாம். இந்த நோக்கில் எழுதப்படுவன சசிசலா., தினகரன் ஆதரவு குரல்போல் மாறிவிடுகின்றன.
 தமிழ்நாட்டில் பாசக வேரூன்றி கிளை பரப்பக்கூடாது என்றால்  நேர்மையைமட்டும் அளவுகோலாகக் கொள்ளாமல் தமிழ்நாட்டின் நலன்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். ஆதலின் அதிமுகவும் திமுகவும் வலிமையாக இருக்க வேண்டும்.
 தமிழகக்கட்சிகள் யாவும், தமிழர் நலனையே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தமிழுக்கும் தமிழர்க்கும் முதன்மை அளிக்கும் கட்சிகளையே மக்கள் ஆதரிக்கும் சூழலும் உருவாக வேண்டும்.
இன அழிப்பு, மொழி அழிப்பு கட்சிகளை வளரவிடாமல் தடுப்போமாக!
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
     உவகையும் ஏதம் இறைக்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 432)
மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியன ஆட்சித்தலைமைக்குக் கேடு நல்குவன. அத்தகைய ஆட்சியை அகற்ற வேண்டியது மக்கள் கடமை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 209, ஐப்பசி 05-11,  2048 /  அட்டோபர் 22 – 28,  2017

Tuesday, October 17, 2017

அறியாமை இருள் அகன்று பகுத்தறிவு ஒளி பரவ வாழ்த்துகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அறியாமை இருள் அகன்று பகுத்தறிவு ஒளி பரவ வாழ்த்துகள்!

  மரபார்ந்த விழாக்களுக்கும் அறிவுக்குப் பொருந்தாதக் கதைகளைப் பரப்புவது ஆரியத்தின் வேலை. அறிவுக்கு வேலை கொடுக்காமல் அவற்றை நம்புவது தமிழர்களின் மூடநம்பிக்கை.  பிற இனத்தார், இயற்கைக் கோள்களுக்கும் மூடநம்பிக்கைகக் கதைகளை உருவாக்கிய காலத்தில், அறிவியல் கண்ணோட்டத்தில் உண்மையைக் கண்டறிந்த தமிழர்கள் அறியாமைக்கு அடிமையானது இரங்கத்தக்கதே! ஆனால், இன்றும் அறியாமை இருளில் மூழ்கிக்கிடப்பது அத்தகையோர் இருந்தென்ன, இறந்தனெ்ன என எண்ணத் தோன்றுகிறது.
  தமிழ்நாட்டில் கார்த்திகை  ஒளிவிழாவாகக் கொண்டாடப்பட்ட நாள்,  வடக்கிலிருந்து தீபவரிசை விழாவாக,  தீபாவளியாக மாறி இங்கே புகுந்தது.  விழாவில் விருப்பம் கொண்ட நம்மவர்கள் அதனையும் பிடித்துக் கொண்டனர். ஆனால், மூடநம்பிக்கையில் ஊறித் திளைப்பதுதான் வேதனையாக உள்ளது.
  மகாவீரர்  வருத்தமானன் விடுநிலை(நிர்வாணம்) அடைந்த நாளே தீபாவளி நாள் எனச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.  இது மெய்யோ பொய்யோ, ஆனால் இதனால் எத் தீமையும் இல்லை.
  கி.பி. 12 ஆம் நூற்றாண்டில்தான் தீபாவளி கொண்டாடும் பழக்கம்வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.   ஆனால் முன்னதான சமண நூலில்  விளக்கு வரிசை ஏற்றுவது பற்றிய குறிப்புகள் உள்ளன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கி.பி.1250 இல் எழுதப்பட்ட (இ)லீலாவதி என்னும் மராத்தி நூலில்  எண்ணெய் தேய்த்துக் குளிப்பது இடம் பெற்றுள்ளது.
  சீக்கியர்கள், 1577-இல் பொற்கோயில் கட்டுமானப் பணிகள்  தொடங்கிய நாளைத் தீபாவளி என்கின்றனர்.  அதற்கு முன்பே இவ்விழா இருந்துள்ளதால்,   இச்சமய நம்பிக்கையால் எத்தீங்கும் இல்லை.
 ஆரியக் கதைகள் பலவாறாக உள்ளன. இராமன் 14 ஆண்டு வனவாசம் முடிந்த பின்னர், அயோத்தி திரும்பிய நாளில் மக்கள்  விளக்குகள் ஏற்றி வரவேற்றுள்ளனர். இந்நாள்  தீபாவளி என்பது  ஒரு கதை. இதனால்கூடத் தீமையில்லை.
 கிருட்டிணன்  தன் மனைவியருள் ஒருத்தியான நிலமகளுக்குப் பிறந்த அசுரனை ‘வராக’(பன்றி)ப்பிறப்பு  எடுத்து நிலமகள் மூலம் அழித்த நாள்தான் தீபாவளி என்பதுதான் அறிவுக்குப் பொருந்தாக் கதை.
 நிலத்திற்கும் கிருட்டிணனுக்கும் பிறந்ததாகக் கூறுவது எவ்வளவு பெரிய மூடத்தனம்! கிருட்டிணன் நாரதருடன் உறவு கொண்டு 60 குழந்தைகள் பிறக்கும் பொழுது, நிலமகளுடன் உறவு கொண்டு ஓர் அசுரன் பிறப்பதில் என்ன வியப்பு என்கிறீர்களா?
  நரகாசுரன்பற்றிய  கதை ஆரியர்களின் அறிவின்மையை நன்கு வெளிப்படுத்துகிறது.
 சமயத்திற்கேற்ப -மதங்களுக்கேற்ற- கதைகள் இருக்கும் பொழுது சிவனிய நெறியினரும் ஒரு கதை சொல்லாமல் இருப்பார்களா? சிவன் மாதொரு பாகனாக – அருத்தநாரீசுவரராக உருவெடுத்த நாள்தான் தீபாவளியாம்.
  உடல் சூட்டைத்தணிக்கும்   போன்ற நல்ல காரணங்களைக் கூறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குச் சொல்லப்படும் கதையும் மிகவும் மட்டமானது. பாற்கடலில் அமுதம் கடைந்தபோது தோன்றியவள் இலக்குமியாம். அவள் கடலில்  ஆமையாக மறைந்து இருந்த திருமாலை மணம் முடிக்க எண்ணினாராம். ஆனால், அசுரர்கள் இலக்குமியை மணம் முடிக்க விரும்பி அவளைத் துரத்தினராம். அவள் உடனே எள் தோட்டத்தில் மறைந்தாளாம். அப்படி ஓடியதால் எள் செடிகளில் இருந்து வெளிப்பட்ட எண்ணெயுடன் அவள் கலந்து விட்டாளாம். (இதனால் அசுரர்களால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.) நாம் எணெ்ணெய் தேய்த்துக் குளித்தால் இலக்குமி நம்முடன் ஐக்கியமாகிவிடுவாளாம். இப்படி அடுக்கடுக்காக இழிவுகளைச்சுமக்கும் கதைகளைத்தான் பரப்பி வருகின்றனர்.
  மீண்டும் இந்த அவலங்களை நாம்   அரங்கேற்ற வேண்டா என்பதால் செய்திக்கு வருவோம்.
 தீபாவளியைக் கொண்டாடுபவர்கள் மூட நம்பிக்கைக் கதைகள் அடிப்படையிலா கொண்டாடுகிறார்கள் எனச் சிலர் கேட்கின்றனர்.  இவற்றை எழுதுபவர்கள், வெளியிடுபவர்கள், பரப்புபவர்கள், நம்பிக்கையில்லாமலா செய்கின்றனர்?  மக்கள் இக்கதைகளை நம்பவில்லை என்றால் இவற்றை அச்சில் இருந்தும்  இணையத்தளங்களில் இருந்தும் நீக்கலாமே! இக்கதைகளைப் பரப்புவோருக்குச் சாவுத்தண்டனை கொடுக்கலாமே! இக்கதைகள் மூலம் ஏதோ ஒருவகையில்  மக்களை அடிமைத்தனத்தில் மூழ்க  வைத்திருக்கும் கும்பல் ஒழிவதற்கு இதுதான் வழி.
 “தீபாவளியைக் கொண்டாட வேண்டா எனக் கூறுவதைவிட,  அதுதொடர்பான  மூடநம்பிக்கை கதைகளைப் பரப்புவதைத் தடை செய்ய வேண்டும்.  எளிமையாகவும் சிக்கனமாகவும் கொண்டாடுமாறு மக்களுக்கு அளிவுறுத்த வேண்டும்.” என்பார் பேரா.முனைவர் சி.இலக்குவனார். இறை நம்பிக்கையும் இறை மறுப்பு நம்பிக்கையும் அவரவரைப் பொறுத்தது. ஆனால், அவை  பகுத்தறிவிற்கு முரணாக இருக்கக் கூடாது.  இந்நாளில் ஏற்றப்படும் ஒளி அறியாமை இருளைப் போக்கும் பகுத்தறிவு ஒளியின் குறியீடாக இருக்க வேண்டும்.
  மூட நம்பிக்கை எவ்வடிவில் வந்தாலும் அதை விரட்டியடிக்கும் அறிவுடைமையுடன் வாழ வேண்டும்.
   எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
   மெய்ப்பொருள் காண்ப தறிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 423)
 அறியாமை இருளைப்போக்கிப் பகுத்தறிவு ஒளி பரவ வாழ்த்துகள்!
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 208,  புரட்டாசி 29 –ஐப்பசி 04,   2048 /  அட்டோபர் 15 – 21,  2017

Monday, October 9, 2017

சசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

     08 அக்தோபர் 2017      கருத்திற்காக..


சசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள்

 அஇஅதிமுகவின் பொதுச்செயலர் சசிகலா குற்றமற்றவரா அல்லது குற்றவாளியா என்பதுபற்றி இங்கே  ஆராயவில்லை. அவர் குற்றவாளியாக இருந்தால் பிற குற்றவாளிகளுக்கு வழங்கப்பெறும் உரிமைகளும் வாய்ப்பு நலன்களும் அவருக்கும் வழங்கப்பெற வேண்டும். அவர் குற்றமற்றவராக இருந்தால் பிற குற்றமற்றவர்களுக்கு வழங்கப்பெறும்   நயன்மைநிலை / நீதி  நிலைவாய்ப்பு அவருக்கும் வழங்கப்பெற வேண்டும் என்பதே நம் கருத்து.
  ஒருவர் செல்வாக்கு உள்ளவராக இருந்தாலும் அவர் அரசின்  ஆதரவாளர் என்றால் ஒரு வகையாகவும் இல்லை எனில் மற்றொரு வகையாகவும் சட்டம் கையாளப்படுவது நம் நாட்டு வழக்கமாகி விட்டது. அரசின் ஆதரவற்ற செல்வாக்கினரே படாதபாடு பட்டால் செல்வாக்கற்றவர் எந்நிலைக்கு ஆளாவார் என்பது நன்கு புரியும்.
 செயலலிதா மறைந்ததும் எதிர்பார்த்தபடி அதிமுக உடையாததால், அதனைக் கட்டுப்படுத்திய சசிகலாவை  ஓரங்கட்ட வைத்து அக்கட்சியைச் சிதைக்கும் முயற்சிகளை அதிகார எந்திரத்தை இயக்கும் பாசக மேற்கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். அவருடன் நெருக்கத்தில் இருந்தவர்களையும் படிப்படியாக எதிராகப்பேச வைத்ததிலும் செயல்பட வைத்ததிலும் பாசக வெற்றி கண்டு வருகிறது. ஆனால், இவ்வெற்றி நிலைக்காது என்பதுதான் அதற்குப் புரியவில்லை.
  சசிகலாவிற்கு எதிரான பரப்புரைகள் மூலம் அவர் பிம்பத்தை உடைக்கும் முயற்சியில்  ஈடுபடும் உடைப்புக்கட்சி, அவருக்கு வழங்கியுள்ள  காப்பு விடுப்பிலும் (பரோலிலும்) தன் கைவரிசையைக் காட்டத் தவறவில்லை.
  சசிகலாவிற்கு விதிமுறை மீறிக் காப்பு விடுப்பு வழங்கப்பட்டுள்ளதுபோல் பேசியும் எழுதியும், எதையும் அறிந்து கொள்ள ஆர்வமற்றவர்கள் தத்தம் அறியாமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
   காப்பு விடுப்பு 10 நாள் வழங்கலாம் என்பதால்தான் சிறை அதிகாரிகள் 10 நாள் விடுப்பிற்கு விண்ணப்பிக்கச் சொல்லியிருந்தனர். ஆனால், 5 நாள்தான் வழங்கியுள்ளனர். இவருக்கு வழங்கியுள்ளது அவரச விடுப்பு. அவசர விடுப்பு 15 நாள் வழங்கப் பெறலாம். ஆனால் அவ்வாறு வழங்காமல் விதிமுறை மீறல்போல் சித்திரித்துவிட்டுக் குறைவான நாள் வழங்கி அதிலும் முறைகேடு உள்ளதுபோல் தோற்றத்தைக் காட்ட முற்படுவது இன்னும் பாசகவிற்குச்  சசிகலா மீதான அச்சம் போகவில்லை என்பதையே காட்டுகிறது.
  இவ்வாறு, காப்பு விடுப்பினை முறைகேடாக வழங்கியதுபோல்  சித்திரிப்பதும் சிறைவாசிக்கு இழைக்கப்படும் அறக்கேடுதான்
 சசிகலா  சிறை வைக்கப்பட்டுள்ள பார்ப்பன அக்கிரகாரத்தில் உள்ள பெங்களூரு மையச்சிறையில் விடுப்பில் அனுப்பப்பட்டோர் விவரம் வருமாறு(கருநாடகச் சிறைத்துறையின் இணையத்தளம்):
ஆண்டு இயல்பு விடுப்பு அவசர விடுப்பு
2007 187 464
2008 221 509
2009 332 778
2010 249 505
2011 401 535
2012 387 397
 பொதுவாக இயல்பு விடுப்பை விட அவசர விடுப்பு மிகுதியாக உள்ள உண்மையை உணர வேண்டும். ஏனெனில்,  இயல்பு விடுப்பிற்கு உள்ள நிபந்தனைகள் அவசர விடுப்பிற்கு இல்லை. இதனாலேயே அவசர விடுப்பு மிகுதியாக அமைகின்றது. (காப்பு விடுப்பு/பரோல் போன்ற சிறப்பு விடுப்பான பருலா/furlough என்பது  நம் நாட்டில் மிகக் குறைவாகவே வழங்கப்படுகிறது. படைத்துறையில் இருப்போர் இத்தகைய விடுப்பைப் பெறுவர்.)
 சட்டம் குற்றவாளியைத் திருத்தவே என்னும் அடிப்படையிலும் உச்சமன்ற  நயனாளர்கள் / நீதிபதிகள் காப்பு விடுப்பில் கடுமையைக் குறைக்க வலியுறுத்தி வருவதாலும் இந்நிலை. முன்பு விடுப்பிற்கு இருவர் பிணை தரவேண்டு்ம். இப்பொழுது ஒருவர் தநதால் போதும். முன்பு  பிணைத்தொகை உரூபாய் 5,000 இப்பொழுது உரூபாய் 1000 மட்டுமே1
  சசிகலா வன்முறை புரிந்தவர் என்ற அடிப்படையிலோ தீவிரவாத உரையின் அடிப்படையிலோ சிறைவாசியாக இல்லை. அவர் செய்ததாகச் சொல்லப்படுவது பொருளாதாரக் குற்றம். அவ்வாறிருக்க, யாரையும் சந்திக்கக்கூடாது எனச் சந்திப்பு தொடர்பான விதிகளும் / நிபந்தனைகளும் அறமற்றவையே! ஒரு கட்சியின் பொதுச்செயலர் தன் கட்சி உறுப்பினர்களைச் சந்திப்பது அவரின்  கடமையாகும். கட்சியினர் அவரைச்சந்திக்க விரும்புவதும் அவர்களின் உரிமையாகும். ஆனால் கட்சியினரின் தனி மனித உரிமையில் தலையிட்டுத்தான் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
 தனி மனித உரிமைகளுக்கு எதிராகக் கருநாடகச்சிறைத்துறையினர் தாமாக  நடந்துகொள்ள வில்லை என்பது ஊடகச் செய்திகள் மூலம் புரிகிறது.  பின்னர் இவை பிற சிறைவாசிகளுக்கும் கெடுவிதிக்கும் தவறான முன்னோடியாக அமையும் இடர்ப்பாடு உள்ளது.
 சசிகலாவிற்கு  இழைக்கப்படும் நயக்கேடுகள் குறித்து நிறைய கூறலாம். எனினும் மேலும் ஒன்றை மட்டும் பார்ப்போம். சிறைத்துறைத்துணைத்தலைவர் உரூபா என்னும்அதிகாரி இவருக்கு விதிமுறை மீறிக்கட்டுப்பாடற்றுச்சிறைக்குள் இருக்க வாய்ப்புகள் ஏற்படுத்தித்தந்ததாகக் கூறிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையை அறிவோம். கண்டிப்பான அதிகாரி எனப் பெயர் பெற்ற அவர் உண்மையிலேயே எங்கும் நேர்மை நிலவ வேண்டும் எனக் கருதியிருந்தால், இவ்வாறு கட்டுப்பாடற்றுத்திரியும் அனைவரைப்பற்றியும் அறிக்கை தந்திருக்க வேண்டும். அந்த அறிக்கையும் துறையில்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஊடகத்தில் அல்ல! அல்லது 16 ஆண்டுகள் பணியாற்றியிருப்பினும் அவருக்கு நடைமுறை அறிவு குறைவு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 இத்தகைய நடைமுறை சிறைகளில் காலங்காலமாக இருந்து வருகிறது. அவ்வாறு இருப்பதாலேயே அவற்றைச் சரி என்று கூறவில்லை. ஆனால், பொதுவாகத் தொடர்புடைய அனைவர் மீதும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை ஒருவர் மீது மட்டும் சார்த்திக் கூறுவதும் முறையற்றதுதானே!
 கோவை  மையச்சிறையில் கிருட்டிணன் என்பான்   கள்ளப்பணம் அடித்ததை முந்தைய தலைமுறையினர் அறிவர். சிறையில் இருப்பதாகக் காட்டிக்கொண்டு வெளியே வந்து கொள்ளை, கொலைகளில் ஈடுபட்டவர்களும் உள்ளனர். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, அரசால், தேர்தல் காலங்களில் சிறைவாசிகள் (சிறையில் இருப்பதுபோல் கணக்கு காட்டி,) வெளியே விடப்பட்டு முறைகேடான செயல்களில் ஈடுபடவைத்துள்ளதாகப் பல செய்திகள் வந்துள்ளன.
 மதிப்பிற்குரிய நடிகவேள் செ.இரா.(எம்.ஆர்.)இராதாவிற்குச் சிறையில் மருத்துவமனையிலேயே தங்க வைப்பதுபோன்ற  வாய்ப்புகளைத் தந்ததால் சிறையில் திமுகவினர் கடும் வன்முறைகளால் தாக்கப்பட்டது தொடர்பான இசுமாயில் ஆணைய உசாவலில் / விசாரணையில் துன்புறுத்தியவர்களுக்குச் சார்பாகச் சான்றுரைத்தார் என்று அப்பொழுதே கூறப்பட்டுள்ளது.
 இவ்வாறு பரவலாக உள்ள  முறைகேட்டை ஒருவர் மீதுமட்டும் சுமத்திப்  பழியுரைப்பதும் அறமற்ற  செயல்தானே! அவ்வாறு அவருக்கு எத்தனி உரிமையும் / சலுகையும் வழங்கப்பெறவில்லை எனில், இத்தகைய பழிப்புரைகள் மிகவும் அறமுறையற்ற  கெடுசெயல் அல்லவா?
  இவ்வாறு கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை ஒதுக்க வைக்கும் முயற்சிகளில் இருந்து வஞ்சகத்தாலும் சூழ்ச்சியாலும் ஆட்சி அதிகாரத்தாலும் சசிகலாவிற்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் அவருக்கு இழைக்கப்படும் அறக்கேடுகளே! இயல்பாக விட்டிருந்தால் காணாமல் போயிருக்கக்கூடிய ஒருவரை இழுத்துவந்து வலிமையாக்கிய பாசக அதற்கான விலையைக் கொடுக்கத்தான் போகிறது.
 இதன் காரணமாகத் தமிழக அரசியல் நிலையற்ற தன்மைக்குச் சென்று நாட்டிற்கும் கேடு தருகின்றது.
  சசிகலா, கட்சி்யைக் கைப்பற்றுகிறாரோ, கட்சி அவரைக்  கை கழுவி விடுகிறதோ இவையாவும் அவருடைய அல்லது அவருடைய கட்சியுடைய கவலைகள். நமக்கு ஒன்றுமில்லை. ஆனால், தனி ஒருவருக்கு எதிரான செயல்பாடுகள் என்றில்லாமல், அதன் மூலம் பாசகவின் மறைமுக ஆட்சிக்கு இடம் தந்து கொண்டிருப்பதால் தமிழ்நாட்டின் நலன் விரும்புவோர் அனைவரும் இவை போன்ற அரசின் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் குரல் கொடுக்க வேண்டும்.
 கட்சியில் வளரும் உட்பகை, அனைத்துத் தரப்பாருக்கும் துன்பங்களையே விளைவிக்கும் என்பதை அதிமுகவினரும் உணர்ந்து ஒற்றுமையாகச் செயல்படு வதன் மூலம், தமிழ்நலனுக்கு எதிரான கட்சியின் வலையில் இருந்து விடுபட வேண்டும்.
   உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
   ஏதம் பலவும் தரும். (திருவள்ளுவர், திருக்குறள் 885)
குடியாட்சி முறை ஓங்குக!
தமிழ்த்தேசிய  நலன் நாடுவோர் ஆட்சி மலர்ந்திடுக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 207,  புரட்டாசி 22 – 28,   2048 /  அட்டோபர் 8 – 15,  2017

Thursday, October 5, 2017

நோய்வாய்ப்பட்ட செயலலிதா மரணத்தில் என்ன மருமம்? – இலக்குவனார் திருவள்ளுவன்

நோய்வாய்ப்பட்ட செயலலிதா மரணத்தில் என்ன மருமம்?

  செயலலிதா முதல்வராகச் செயலபட்ட பொழுதே அவர்  நோய்க்கு ஆளாகியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன.  பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்றும்  ஒரே நாளில் எடுக்கப்பட்ட படங்களை வெவ்வேறு நாளில் எடுக்கப்பட்டனபோல் காட்டி அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும் செய்திகள் வந்தன. இவை யாவும்  செயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னரே நோய்வாய்ப்பட்டு இருந்தார் என்பதை மெய்ப்பிக்கின்றன.
   நோய்வாய்ப்பட்டவர் மருத்துவத்தில் பயனின்றி மரணமுற்றதைக் கொலைபோல் கருதிக் கூறுவது ஏன் என்று தெரியவில்லை.
  செயலலிதாவைச் சாகடித்த பின்னரே மருத்துவமனையில் சேர்த்ததாகவும் ஊடகங்களில் தெரிவித்தனர். அவ்வாறு தெரிவித்தவர்களே, மருத்துவமனையில் எவ்வப்பொழுது எந்தெந்த மருந்துகள்  கொடுக்கப்பட்டன, என்ன வகையான மருத்துவம் பார்க்கப்பட்டது என்றெல்லாம் எழுதினர். அவர் உயிரற்ற உடலாகத்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால்இவையெல்லாம் தேவையில்லையே!
  மருத்துவமனையில் செயலலிதா இருந்த பொழுது அவருக்கு நெருக்கமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வதற்காகக் கருத்து கூறினவர்கள் எல்லாம் இன்றைக்கு (அவரிடமிருந்து அல்லது)  அவருடைய உற்ற தோழியான சசிகலாவிடமிருந்து ஒதுங்கியிருந்ததாகக் காட்டிக் கொள்வதற்காக மாறான கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
  பா.ச.க. மோடிவித்தையைக் காட்டாமல் இருந்திருந்தால், பன்னீர்தான் முதல்வராகத் தொடர்ந்திருப்பார். வெவ்வேறு அணிகள் உருவாகியிருக்காது. மோடி மரத்தடியில் ஞானம் பெற்ற புதிய புத்தர்களான பன்னீர், எடப்பாடி பழனிச்சாமி முதலான இன்றைய எதிர்ப்பாளர்கள் அனைவருமே சசிகலாவின் காலடியில்தான் வீழ்ந்திருப்பர்.
  செயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த பொழுது அவர்  இருந்த பகுதியே இரும்புக்கோட்டைபோல் விளங்கியது. அப்பொழுது கை கட்டிவாய் பொத்தி இருந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு வாள்வீச்சு வீரர்கள்போல் காட்டிக் கொள்கின்றனர்.
  செயலலிதாவிற்கு முன்பே ஏன் மருத்துவம் பார்க்கவில்லை என்று  கேள்வி வேறு. அவர் என்ன சிறு குழந்தையா? நாட்டை வழிநடத்திச் செல்லும் முதன்மைப் பொறுப்பில் இருப்பவர்  மருத்துவம் பார்த்துக் கொள்ளவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? அவர் பார்த்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார். வெளிநாட்டிற்குச் சென்று மருத்துவம் பார்க்கவில்லை என்பது உண்மைதான். நம் நாட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அல்லது அயல்நாடு சென்றால்  ஆட்சி கவிழ்க்கப்பட்டு விடும் என்ற அச்சம், அல்லது நாளும் குவியும் செல்வத்திற்கான கருவூல வாயில்கள் அடைபட்டு விடும் என்ற கவலைபோன்றவற்றால் வெளிநாடு செல்லாமல் இருந்திருக்கலாம். அதற்காக உடனிருந்தவரைக் குற்றம் சொல்லி என்ன பயன்?
  அவரை ஏன் காட்சிப்பொருளாகக் காட்டவில்லை என்று கேள்வி வேறு. அவர் அவ்வாறு நலிவுற்ற தோற்றத்தைக் காட்ட விரும்பவில்லை என்றால், முன்னர் மருத்துவமனையில் இருந்த பொழுது இரவு உடையுடன் படத்தை வெளியிட்டாரே என்கின்றனர். அப்பொழுது இருந்த தோற்றப்பொலிவு இ்ப்பொழுது இல்லாமல் போனதால் இந்த முடிவு எடுத்தது இயற்கைதானே!
  திரையுலகம் சாராதவர்களே ஒப்பனையுடன்தான் காட்சியளிக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அவர் அவ்வாறு எண்ணியிருப்பதில் வியப்பேதும் இல்லை. ஒரு முறை நடிகை மனோரமா,  தன்னிடம் செவ்வி/பேட்டி எடுத்தவர் தன்னைப் படம் பிடிக்க முற்பட்ட பொழுது அப்போதிருந்த இயல்பான தோற்றத்தில் பார்க்க நேயர்கள் விரும்பமாட்டார்கள் என மறுத்தார். அவர் மட்டுமல்ல, திரையுலகக் கலைஞர்கள் பலரும் அவ்வாறுதான் உள்ளனர். எனவே, அதனைக் குறைகூறிப் பயனில்லை.
 சசிகலா பண்டுவத்தை/சிகிச்சையைக் கமுக்கமாக வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்துபவர்கள் வாய்கள் அப்பொழுது தைக்கப்பட்டிருந்தனவா? “இல்லை, அஞ்சி அஞசிச் செத்தோம்” என்கிறார்களே! அப்படியானால் இப்பொழுதும் தில்லிக்கு அஞ்சி வாழ்கிறார்கள் என்பது உண்மையாகத்தானே இருக்கும். உண்மையைக் கூற அஞ்சுபவர்கள்,  நேர்மைக்கு இடம் தராதவர்கள்,  தலைமைப் பொறுப்பிற்கு எங்ஙனம் தகுதியானவர்களாக இருக்க முடியும்?
  சசிகலா, செயலலிதாவைக் கொலை செய்ததாகக் கூறுகிறார்களே, அவரைக் கொல்வதுதான் நோக்கம் என்றால், முன்னரே கதையை முடித்திருக்கலாமே! இருவருக்கு மிடையில் கருத்து மோதல் இருந்தது என்கிறார்கள். உறவினர்கள்  இடையேநண்பர்கள் இடையே இவ்வாறு மோதல்கள் வருவது இயற்கைதானே! கை நீட்டுவதும் பின்னர் வருந்தி அழுவதும் கூட நாளும் குடும்பங்களிடையே நடப்பதுதானே! அவ்வாறு  கொல்ல வேண்டுமென்றால், மருத்துவமனையில் சேர்ந்த உடனேயே உயிர்பிரிந்து விட்டதாக அறிவித்திருக்கலாமே!
  ஒட்டிக்கொண்டு ஊசலாடிக்கொண்டிருக்கும் உயிரை எப்பாடுபட்டாவது பிடித்து வைத்துக்கொள்ள முயன்றதை அதை வெளிப்படுத்தவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, வேறுவகையாகக்  கூறுவது தவறல்லவா?
  பல்வேறு நோய்களுக்கு ஆளாகி,  மருத்துவமுறைகளால், அவற்றை விரடட இயலாமல் போவது  நோயர்கள் நிலை என்பதை  மருத்துவமனைகள் நாளும் கூறுகுின்றனவே! அவ்வாறிருக்க, 75 நாள் மருத்துவம் பார்த்தபின்னர், ஏதோ முழு நலத்துடன் இருந்தவர் திடீரென்று இறந்ததுபோல், மருமக்கதைகள் எழுதுவது  ஏன் எனத் தெரியவில்லை.
  உசாவல்/விசாரணை  ஆணையம் என்பதே ஒன்றை ஆறப்போடவும் சிலருக்கு  ஊதியம் வழங்கவும் அமைக்கப்படுவதுதான். அவர் வீட்டை நாட்டுடைமைஆக்கி மக்கள் பணத்தைத் தண்டமாக்கும் பொழுது் இப்படியும் ஏன் கூடுதல் தண்டச்செலவு?
  உண்மைஅறிய வேண்டுமென்றால்,  நினைவில்லாத செயலலிதா எப்படி பன்னீர்செல்வத்திற்குத் தன் பொறுப்பை ஒப்படைக்கச் சொன்னார்?  இறப்பு அறிவிப்பிற்கு முன்னரே முதல்வர் பொறுப்பேற்க  எப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது- அவருடன் அதிகாரிகள் கலந்துரையாடியது எங்ஙனம் என முன்னுக்குப் பின் முரணாகக் கூறுபவர்களை மட்டும் தளையிட்டு உசாவினால் போதும். குற்றவழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் ஆணையம் அமைப்பது  மக்களின் பணத்தை வீணாக்கும் திட்டமேயன்றி வேறல்ல!
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். (திருவள்ளுவர், திருக்குறள் 293)
அன்புடன்  இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 206,  புரட்டாசி 15 – 21,   2048 /  அட்டோபர் 1 – 7,  2017

Followers

Blog Archive