Saturday, April 30, 2011

Andre' sonnaargal 54- buildings 16: அன்றே சொன்னார்கள் 54 - கட்டடங்கள் 16

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 16

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 30, 2011

கட்டடச் சிறப்பிற்கு எடுத்துக் காட்டாக அரண்மனையைக் கட்டி எழுப்புவது குறித்து மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் நெடுநல்வாடை என்னும் இலக்கியத்தில் கூறி உள்ளதைப் பார்த்தோம். தொடர்ச்சியை இப்பொழுது காண்போம்.
வென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்
குன்றுகுயின்று அன்ன ஓங்குநிலை வாயில்
திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து (நெடுநல்வாடை : 87—90)
வெற்றிக்கொடியை யானைமீது அமர்ந்து பிடித்து உலா வருவது வழக்கம். அக் கொடி தாழவோ சாய்க்கவோ படக்கூடாது. எனவே யானை மீது அமர்ந்து வெற்றிக் கொடியைப் பிடித்தால் வரும் உயரத்திற்குக் கோபுர வாயில் அமைக்கப்பட்டது. மலையைக் குடைந்து திறந்தவெளி உருவாக்குவதுபோல் (குன்று குயின்று அன்ன) அமைக்கப்பட்ட அகலமும் உயரமும் உடையதாக வாயில் அமைந்தது. எல்லா வகைப் பொருளும் வந்து குவிக்கப்படும் வளமைக்கு எடுத்துக்காட்டான (திருநிலை பெற்ற) குற்றமற்ற சிறப்பினை உடைய  முன்றிலை அமைத்து அதில் மணலைக் கொண்டு வந்து பரப்பினர்.
வெற்றிக் கொடியை யானை மீது உயர்த்திப் பிடித்து உலா வரும் மரபைப் பிற புலவர்களும் கூறி உள்ளனர்.
கொடி நுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து
(புலவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் : பதிற்றுப்பத்து : 52.1)
மலைஉறழ் யானை வான்தோய் வெல்கொடி வரைமிசை
அருவியின் வயின் வயின் நுடங்க (ஆசிரியர் கபிலர் : பதிற்றுப்பத்து :69:1-2)
உரவுக் களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை
(ஆசிரியர் பெருங்குன்றூர் கிழார் : பதிற்றுப்பத்து : 88:17)
கோல்களிற்று மீமிசைக்கொடி விசும்பு நிழற்றும்
(புலவர் நெட்டிமையார் : புறநானூறு : 9:7)
மலையைக் குடைந்து முனிவர் இருப்பிடம் அமைக்கப்பட்டதை ஆசிரியர் மாங்குடி மருதனார்
குன்றுகுயின்றன்ன அந்தணர் பள்ளியும் (மதுரைக்காஞ்சி:470) எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இங்கு அவ்வாறு குறிப்பிட்டது கற்பனை யல்ல என்பதையும் மலையைக் குடைந்து திறந்த வெளி அமைப்பது போன்ற அகலமும் உயரமும் உடைய வாசல்கள் முன்பு அமைக்கப்பட்டன என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
உழைப்பாலும் இயற்கையாலும் வணிகத்தாலும் பெறும் செல்வங்களுடன் பகைவர் போர்க்களத்தில் விட்டுச் செல்லும் யானைகளும் பகை நாட்டில் இருந்து கொண்டு வரப்படும் குதிரைகள், பசுக்கள், செல்வங்கள்  முதலானவையும் தோழமை நாட்டினர் திறையாகச் செலுத்தும் செல்வங்களும் எனப் பல்வகைச் செல்வங்கள் வந்து குவியும் இடம் ஆதலின், செல்வமாகிய திருநிலை பெற்றது எனக் கூறியுள்ளார். ஆசிரியர் மாங்குடி மருதனாரும்
கங்கைஅம் பேரியாறு கடல்படர்ந் தாங்கு
அளந்து கடையறியா வளம்கெழு தாரம் (மதுரைக்காஞ்சி 696-697)
என்கிறார்.
எனவே, பல்வகை வளங்களும் குவிப்பதற்கு ஏற்ற வகையில் முகப்பு இடத்தையும் வாசலையும் அகலமாகவும் உயரமாகவும் அமைத்திருந்தனர் என்பது சரிதான்.
தனி வீடுகளில் விழா அல்லது சிறப்பு நாட்களில் வீட்டின் முன்புறம் மணல் பரப்பும் பழக்கமும் இப்பொழுதும் உள்ளது. அவ்வாறு மணலைக் கொண்டு வந்து (தருவித்து) முற்றத்தில் பரப்புவது என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் பழக்கமாக  இருந்துள்ளது. பிற இலக்கியங்களிலும் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆசிரியர் மாங்குடி மருதனார்,
தருமணல் முற்றத்து அரிஞிமிறு ஆர்ப்ப (மதுரைக்காஞ்சி 684)
(அரிஞிமிறு – வண்டுகளும் ஞிமிறுகளும்) என்கிறார்.
ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்,
விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்
பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் (மணிமேகலை : 1:50-51)
என்கிறார். எனவே, வீடுகளில் மட்டும் அல்லாமல் அகலமான வீதிகளிலும் மன்றங்களிலும் மணல் பரப்புவதும் அவ்வப்பொழுது பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனலாம்.
எனவே, வீடுகளின் முன்பக்க முற்றங்களில் மணலைக் கொண்டு வந்து பரப்பும் அளவிற்கு ஒவ்வொரு வீடும் மிகப் பெரியதாக அமைக்கப்பட்டு இருந்துள்ளன.
உயரமான, அகலமான வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதை மேலே உள்ள வரிகள் மூலம் அறிந்த நாம், பிற சிறப்புகளை அடுத்துக் காணலாம்.

Thursday, April 28, 2011

andre' sonnaargal 53 - buildings 15: அன்றே சொன்னார்கள் - கட்டடங்கள் 53


கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -15

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 28, 2011




 
வானளாவியும் அகன்றும் உருவாக்கிய பழந்தமிழர்  கட்டடப் பணிகளுக்கு எடுத்துக்காட்டாக நெடுநல்வாடை என்னும் இலக்கியச் சான்றை முன்னர்ப் பார்த்தோம். கட்டுமானப் பணி சார்ந்த தச்சுப்பணியைப் பற்றிய குறிப்பை இப்பொழுது காண்போம்.
கட்டடம் கட்டும்பொழுது முதலில் வாயில் நிலைகளை அமைத்தல் இப்போதைய வழக்கம். இப்பழக்கம் காலங்காலமாக நம்மிடம் இருந்து வந்துள்ளது. எனவே, முதலில் உயர்ந்த வாயிலுக்கான நெடுநிலை அமைப்பது குறித்து ஆசிரியர் நக்கீரனார் பின்வருமாறு கூறி உள்ளார்:-
பருஇரும்பு பிணித்துச், செவ்வரக்கு உரீஇத்
துணைமாண் கதவம் பொருத்திஇணைமாண்டு
நாளொடு பெயரிய கோள்அமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி கால்அமைத்து
தாழொடு குயின்ற போரமை புணர்ப்பில்
கைவல் கம்மியன் முடுக்கலில் புரைதீர்ந்து
ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை (நெடுநல்வாடை 80-86)
உயரமும் அகலமும் உடைய வாயில்களுக்கு – ஒற்றைக் கதவுகளாக இல்லாமல் இருபுறமும் மூடும் வகையில் – இரட்டைக் கதவுகளே அமைக்கப்பட்டன. மிக அகலமான வாசல்களுக்கு  மடக்கி மூடும் கதவுகள் அமைக்கப்பட்டன (துணைமாண்கதவம்). அவ்வாறு அமைக்கும் பொழுது அவற்றைப் பிணிப்பதற்கு ஆணி முதலான இரும்புப் பொருள்கள் பயன்படுத்தப் பெற்றன. மரக் கதவுகளுக்கு நிறம் ஊட்டுவதற்குச் செவ்வரக்கு (சாதிலிங்கம்) பூசப்பட்டது,



அழகிய வேலைப்பாடு, உறுதி, தோற்றப் பொலிவு முதலியவற்றால் சிறப்பு பெற்றனவாய் அவை அமைந்தன. பல இணைப்புகளாகக் கதவுகள் உருவாக்கப்பட்டாலும் இணைக்கப்பட்டதற்கான அடையாளம் தெரியாதவகையில் மாட்சிமை மிக்கதாக (இணைமாண்டு) அக் கதவுகள் அமைந்தன. உத்தரம் என்பது ஒரு விண்மீனின் பெயர். கதவு நிலையில் மேல் இடப்படும் பாவுகல்லின் பெயர் உத்தரக்கற்கவி என்பதாகும். எனவே, உத்தரம் என்னும் விண்மீன் பெயர் உடைய உத்தரத்தில்(நாளொடு பெயரிய கோளமை விழுமரத்து) குவளைப் பூ வடிவிலான புதுமையான பிடியைப் பொருத்தினர் (போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்து); கதவின் பகுதியாகவே தாழ்ப்பாளைப் பொருத்தினர்; கைத்திறன் மிகுந்த கம்மியர்கள் நன்கு முடுக்கினர்; இடைவெளி தெரியாத அளவில் (புரை தீர்ந்து) ஒற்றைக் கதவுபோல் உருவாக்கினர்; வெண்சிறுகடுகினை (ஐயவி)யும் நெய்யையும் அதில் பூசினர். இவ்வாறு வாயிலுக்குரிய நெடிய நிலையினை அமைத்தனர்.
இவ்வாறு கதவுகளில் வெண்சிறுகடுகையும் நெய்யையும் கலந்து கதவுகளில் பூசும் வழக்கத்தை ஆசிரியர் மாங்குடி மருதனார்
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மாடம் (மதுரைக்காஞ்சி : 253-255)
எனக் குறிப்பிட்டுள்ளார்.
புலவர் உறையூர் கதுவாய்ச் சாத்தனார்
நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள்காழ்
விளங்கு நகர் விளங்க (நற்றிணை : 370.3-4) என்கிறார்.
நெய் என்பதைப் பாலில் இருந்து பெறும் நெய்என்றே அனைவரும் பொருள் கொண்டுள்ளனர். அவ்வாறு பொருள் கொண்டதால் தெய்வ வணக்கத்திற்காக நெய் பூசியதாகத் தவறாகக் கருதி உள்ளனர். எள்ளில் இருந்து பெறப்படுவதை எள் நெய் என்பது போல் நெய் என்பது பொதுச்சொல். கதவுகளுக்கு மெருகேற்றப் பயன்படுத்திய நெய்யை – மெருகெண்ணெய்யை – நாம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம்.
கதவுகளை அமைக்கும் பொழுதே சீரும் சிறப்புமாகவும் உலுத்துப் போகாமலும் அரிக்கப்படாமலும் நிலைத்து நிற்கும் வகையில் சிறந்த மரத்தால் (விழுமரத்து) அமைத்ததுடன் மெருகுநெய்யும் பூசிப் பாதுகாத்து உள்ளனர் என்பதே சரியானதாகும்.
இவற்றின் தொடர்ச்சியான சிறப்பை அடுத்தும் காண்போம்.

Tuesday, April 26, 2011

andre' sonnaargal 52 - buildings 14 :அன்றே சொன்னார்கள் 52 - கட்டடங்கள் 14

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -14

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 26, 2011

பழந்தமிழ் நாட்டில் இன்றைய கட்டடங்களைப் போலவும் சில நேர்வுகளில் அவற்றை விடச் சிறப்பாகவும் கட்டடங்கள் கட்டப்பட்டமையைத் தொடர்ந்து பார்த்தோம். ஊர்களும் நகர்களும் நகரமைப்பு இலக்கணத்திற்கு இணங்க அமைக்கப்பட்டிருந்தமையும் கட்டட அமைப்பின் சிறப்புகளை உணர்த்துவதாகக் கருதலாம். இன்றைய மாதிரி நகர் அமைப்புபோல் அன்றைய ஊர்கள் அமைந்திருந்தன. பரிபாடல் இணைப்பு (8:1-6) நமக்கு ஊர் அமைப்பையும் அதன் மூலம் கட்டட அமைப்பையும் விளக்குகின்றது. புலவர் பின்வருமாறு அவற்றை விளக்குகிறார் : -
தாமரைப் பூவைப் போன்றது சீர் மிகுந்த ஊர்; தாமரைப் பூவின் இதழ்களைப் போல் தெருக்கள் அமைந்துள்ளன. பூவின் நடுவே உள்ள மொட்டைப் போன்றது அரண்மனை; அம் மொட்டில் உள்ள தாதுக்களைப் போன்றவர்கள் தமிழ்க்குடி மக்கள்; அத்தாதினை உண்ண வரும் பறவைகளைப் போன்றவர்கள்  பரிசுகள் பெற வருவோர்.
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீர்ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும்பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில்;
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்;
தாதுண் பறவை அனையர் பரிசில் வினைஞர்
எனவே, நகரம் தாமரைப்பூவின் இதழ்களின் அமைப்பைப் போன்று  சீரிய நிலையில் சிறப்பாக இருந்துள்ளமை நன்கு புலனாகும்.
பொறியியல் பட்டம் பெற்றவர்களும் மரபுக் கட்டடக்கலையில் பட்டம் பெற்றவர்களும் கட்டடக்கலையில் பட்டம் பெற்றவர்களும்  இன்றைக்குக் கட்டடப்பணிகளை மேற்கொள்கின்றனர். அதற்கான துறை நூல்களும் உள்ளன. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டடஅறிவியல், வானறிவியல் நூல்களைப் படித்தவர்கள்தாம் கட்டடப் பணிகளில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். அத்தகைய நூல்கள்  இயற்கையாலும் வஞ்சகத்தாலும் அழிந்தாலும் அவ்வாறான நூல்கள்  இருந்தமைக்கான குறிப்புகள் உள்ளன.
அரண்மனை அமைப்பு குறித்து ஆசிரியர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார், நெடுநல்வாடையில் தெரிவித்துள்ளமை இன்றைக்கும் என்றைக்கும் சிறப்பான கட்டட  அமைப்பிற்கு எடுத்துக்காட்டாகும்.
அரண்மனையை எழுப்ப வேண்டும் எனில் அதற்கு அடிக்கல் நாட்டுவதற்குரிய நாளைத் தேர்ந்தெடுத்தே அப்பணியைத் தொடங்குவர். நல்ல நாள் என்பது மூட நம்பிக்கையின்படி இல்லாமல், மழை போன்ற தொந்தரவு இல்லாக் காலத்தில் தொடங்க வேண்டும் என்பதற்காகச் சித்திரைத் திங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
கட்டட நூலில் நன்கு புலமை பெற்றவர்கள், சித்திரைத் திங்களில் 10 ஆம் நாளில் இருந்து 25 ஆம் நாள் வரை உள்ள ஏதேனும் ஒரு நாள் நண்பகல் பொழுதில் இருகோல்நட்டு அந்தக்கோலின் நிழல் வடக்கிலோ தெற்கிலோ சாயாமல் இருந்தால் அந்த நாளில் அரண்மனைக்குத் திருமுளைச் சாத்துச் செய்வர் (அடிக்கல் நாட்டுவர்). இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்த காரணம், அப்பொழுதுதான் சூரியன் பூமியின் நடுவாக இயங்கும்.
புலவர் நக்கீரனார் பின்வருமாறு இதனைத் தெரிவிக்கிறார் : -
மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு
ஒருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து
நூலறி புலவர் நுண்ணிதில் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து
ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பின் (நெடுநல்வாடை : 72-79)
மாதிரம் என்றால் திசை என்றும் வானம் என்றும் பொருளுண்டு. விரிகதிர் என்பது விரிந்து செல்லும் சூரியனின் கதிரைக் குறிக்கின்றது. வியல்வாய் மண்டிலம் என்பது அகன்ற பரப்பினை உடைய கதிரவனின் மண்டிலத்தைக் குறிக்கிறது. நிலத்தில் இரண்டு இடங்களில் கோலை நடுவதாலும் அவற்றால் நிழல்கள் விழுகின்றனவா என்பதன் அடிப்படையில் சூரியனின் இயக்கத்தைக் குறித்து அறிவதாலும் இருகோல் குறிநிலை என்கிறார். வழுக்காது என்பது கீழே சாயாத நிழலைக் குறிக்கின்றது. ஒரு திறம் சாரா என்பது வடக்கிலோ தெற்கிலோ நிழல் சாயாமல் இருப்பதைக் குறிக்கின்றது. அரைநாள் அமயம் என்பது பகலில் பாதியாகிய உச்சிப் பொழுதினைக் குறிக்கின்றது. புலவர் என்போர் இலக்கியப் புலவர் மட்டுமல்லர்; ஏதேனும் ஒரு துறையறிவில் புலமை உடையவர் யாவரும் புலவரே. அந்த வகையில் கட்டட அறிவியலில் புலமை பெற்றவர்களைக் குறிக்கின்றது. கட்டடம் கட்டுபவர்கள் கட்டுமானத்திலும் சிற்பத்திலும் வல்லவராக இருத்தல் வேண்டும். வானறிவியலும் அறிந்தால்தான்   கட்டுமானப்பணியைத் தொடங்குவதற்குரிய காலத்தைத் தேர்ந்தெடுக்க இயலும். இன்றைக்கும் கொத்தனார்கள் நூலிட்டுக் கட்டுமானப் பணியை ஆற்றுவதை நாம் காணலாம். அதுபோல் கணக்கிடுதலில் எவ்வகைத் தவறும் நேராமல் மனைக்கு நூலிட வேண்டி உள்ளதால், நுண்ணிதின் கயிறிட்டு எனக் குறித்துள்ளார். தேஎங்கொண்டு  தெய்வம் நோக்கி என்றால் எந்த எந்தத் திசைகளில் எவை எவை அமைய வேண்டும் எனக் குறித்துக்கொண்டு, தெய்வங்களை வணங்கி என்றும் அரண்மனையில் எந்தத் திசையில் தெய்வ உருவங்களை அமைக்கலாம் எனக் குறித்துக் கொண்டு என்றும் பொருள் கொள்வர். பெரும்பெயர் மன்னன் என்பது அரசர்க்கு அரசரான வேந்தரைக் குறிக்கிறது. (இந்த இடத்தில் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிக்கின்றது.) வேந்தருக்கேற்றவாறான அரண்மனையை வாழ்விடமனை, அந்தப்புரம், மன்றம், நாள்ஓலக்க மண்டபம், படை வீடு, கருவூலம், ஓவியக்கூடம், பூங்கா, வாயில்கள், கோபுரங்கள், அகழி, மதில், கோட்டை என்பன போல் பலவாறாக வகுத்துத் திட்டமிட்டு உரியவாறான வரைபடங்களை இட்டு, அதற்கிணங்கப் பணிகளைத் தொடங்குதலாகும். ஒருங்குடன் வளை, ஓங்குநிலை வரைப்பில் என்பது இவை யெல்லாம் ஒருங்கே அமைந்த உயர்வான மதிலை உடைய வளாகத்தைக் குறிக்கிறது.
இவ்வாறு அரண்மனை அமைப்பதன் தொடக்கப்பணி நக்கீரரால் குறிக்கப்படுகின்றது. எனவே, மிகச்சிறந்த கட்டட வல்லுநர்கள் அக்காலத்தில் இருந்துள்ளனர் என்பதை நாம் உணரலாம். இதற்கடுத்து அவர்கள் மேற்கொள்ளும் பணிகளைத் தொடர்ந்து  காணலாம்.

Monday, April 25, 2011

andre' sonnaargal 51 - buildings 13: அன்றே சொன்னார்கள் 5-கட்டடங்கள் 13

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 13http://natpu.in/?p=5999

பதிவு செய்த நாள் : April 25, 2011


முன்னரே குறிப்பிட்டவாறு உயிரியறிவியலும் பயிரறிவியலும் தனியே பார்க்கப்பட வேண்டியவையே! இருப்பினும்  இங்கே நாம், கட்டட அறிவியல் குறித்துப் பார்த்தாலும் கட்டட அமைப்பிற்குத் துணைநிற்கும் தோட்ட வளர்ப்பு குறித்தும் கால்நடை வளர்ப்பு குறித்தும், சிறிது அறிவதும் பொருத்தமானதே என்பதால் நாம் மனைத்தோட்டம் குறித்துப் பார்த்தோம். இனி மனைவளர்ப்பு உயிரினங்கள் சில குறித்துக் காண்போம்.
தோட்ட அமைப்பைச் சார்ந்தே வீடுகள் அமைக்கப்பட்டமை போல் உயிரினங்களின் வளர்ப்பிற்கும் ஏற்ற அளவில் அவை சிறப்பாக அமைக்கப்பட்டன.
வீடுகளில் பறவைகள் வளர்க்கப்பட்டன.; அதற்கேற்பவே வீடுகளும் அமைக்கப்பட்டன. வீடுகளில் புறாக்கள் வளர்க்கப்பட்டமையைப் புலவர் ஒருவர் மனையுறை புறவு (நற்றிணை:162.1) என்றும் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மனைஉறை புறவின் செங்காற்சேவல் (அகநானூறு : 254.5) என்றும் (செங்காற்சேவல் – கால்கள் சிவப்பு நிறமாக உள்ள ஆண்புறா) குறிப்பிடுகின்றனர்
கோழிகள் வளர்க்கப்பட்டமையைப் புலவர்  ஒக்கூர் மாசாத்தியார்,
      மனையுறை கோழிக் குறுங்கால் பேடை (குறுந்தொகை : 139.1) என்றும்,
புலவர் பரணர்,
      மனைச் செறிகோழி (அகநானூறு: 122.16) என்றும், புலவர் மாமூலனார்,                மனைஉறை கோழி (அகநானூறு: 187.14) என்றும், கருவூர் நன்மார்பனார்,    
    மனைஉறைக் கோழி (அகநானூறு : 277.15) என்றும், மதுரை நக்கீரர்,     
    மனைக்கோழி (புறநானூறு 395.9) என்றும் குறிப்பிடுகின்றனர்.
குருவிகள் மனைகளில் வளர்க்கப்படுவதைப் புலவர் மாமலாடனார் (குறுந்தொகை : 46.2)  பெருங்குன்றூர்க்கிழார் (புறநானூறு  : 318.4) ஆகியோர்   
    மனையுறை குரீஇ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
வீடுகளில் நாய் வளர்க்கப் பட்டதும் புலவர் மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் என்பவரால்
    மனைவாய் ஞமலி (நற்றிணை : 285.5) எனக் குறிக்கப்பட்டுள்ளது.


கறவை மாடுகள் வளர்க்கப்படுவதைச் சோழன் நல்லுருத்திரன் கலித்தொகை (111.2)யில் குறிப்பிட்டுள்ளார்.
கன்றை ஈன்ற பசுக்களின் கூட்டம் வீடுகளில் நன்றாகப் பசியார புல் மேய்ந்து இருக்கும் நிலையை விளக்கி வீடுகள் பசுக்கூட்டத்தை வளர்க்கும் வகையில் பெரிதாக இருந்தன என்பதையும் பசுக்கள் வளர்க்கப்பட்டதையும் புலவர் கபிலர் (புறநானூறு  :117.4-5)
     மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
    ஆமா நெடுநிரை நன்புல் ஆர
என்னும் வரிகளில் தெரிவிக்கிறார்.
இவ்வாறு தோட்டப்பயிருக்கும் கால்நடைகள், பறவைகள் வளர்ப்பிற்கும் ஏற்ற முறையில் வீடுகள்  அமைக்கப்பட்டுள்ளன.
இயற்கையோடு இயைந்த சூழலில் வீடுகளைக் கட்டி வாழ்ந்தனர் நம் முன்னோர் – அன்று! 
இயற்கையாலும் செயற்கையாலும் இடருற்று அழிகின்றனர் நம்மவர்கள் – இன்று!

Friday, April 22, 2011

andre' sonnaargal 50 - buildings 12 :அன்றே சொன்னாரகள் 50 - கட்டடங்கள் 12

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 12

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 22, 2011





மிகச் சிறந்த கட்டட அமைப்பிற்குச் சான்றாக நெடுநல்வாடை இலக்கியம் தெரிவிக்கும் கருத்துகளைப் பார்க்கும் முன்னர், வீடுகளோடு தொடர்புடைய செடி, கொடி, மரம், கால்நடைகள், பறவைகள் வளர்ப்பு குறித்துச் சிறிது பார்ப்போம்.
வீடுகள் கட்டட அறிவியலுக்கு எடுத்துக்காட்டானவை. எனினும் மரம், செடி, கொடிகளையும்    பறவையினங்களையும் விலங்கினங்களையும் வளர்க்கும் தோட்ட அறிவியல், பறவையியல், விலங்கியல் முதலான பிற அறிவியலுக்கும் ஏற்பவே வீடுகள் அமைக்கப்பட்டன. எனவே, அவை குறித்து  வீடுகளின் தொடர்ச்சியாகக் காண்பதும் பொருத்தமானதே.
நல்ல காற்றிற்காகவும் உணவுப் பொருள் தன்னிறைவிற்காகவும் வீடுகளில் தோட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை முற்றங்களில் பூச்செடிகளாகவும் கொடிகளாகவும் வீட்டைச் சுற்றிய பகுதிகளில் தோட்டமாகவும் தோப்பாகவும் அமைந்திருந்தன. வீடுகளில் வளர்க்கப்படும் மரத்தை  மனைமரம் எனப் புலவர் மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார் (அகநானூறு 58.13), புலவர் பாண்டரங் கண்ணனார் (புறநானூறு : 16.5) ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.


வீட்டின் நடுவே உள்ள முற்றத்தில் முல்லை வளர்க்கப்பட்டமையைப் புலவர் ஒருவர்
மனைநடு மௌவல் (நற்றிணை 115.6 ) என்கிறார்.
வீட்டில் நொச்சி வளர்க்கப்பட்டமையைப் புலவர் காவன் முல்லைப் பூதனார்
மனைஇள நொச்சி ( அகநானூறு : 21.1) என்றும் புலவர் காப்பியஞ்
சேந்தனார்
மனைமர நொச்சி (நற்றிணை : 246.3) என்றும் பரணர்
மனைவளர் நொச்சி (அகநானூறு : 367.4) என்றும் குறிப்பிடுகின்றனர்.
வயலை வளர்க்கப்பட்டமையைப் புலவர் மருதம்பாடிய இளங்கடுங்கோ
மனைநகு வயலை (அகநானூறு: 176.13) என்றும் புலவர்  ஓரம்போகியார்
மனை நடு வயலை (ஐங்குறுநூறு : 11.1) என்றும் குறிப்பிடுகின்றனர்.

புலவர் கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் வீட்டிற்கு முன்பக்கம் முற்றம் அமைக்கப்பட்டு அதில் பூஞ்செடிகள் வளர்க்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடுகிறார். அம் முன்முற்றம் குரவை ஆடும் வகையில் இடப்பரப்பு உடையதாகவும் இருந்துள்ளது. இவற்றை
மணி ஏர் அரும்பின் பொன்வீ தாஅய்
வியல்அறை வரிக்கும் முன்றில், குறவர்
மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும் (அகநானூறு: 232.8-10)
என்னும் வரிகள் தெரிவிக்கின்றன.
(வீட்டு முற்றத்தில் பொன்போன்ற பூக்கள், மணியைப் போன்று அரும்புகளாக மலர்ந்து உள்ளன. அவை கீழே விழுந்து பரவி அகலமான பாறைகளை அழகுபடுத்துகின்றன. அதில் குறவர்கள், அவ்வீட்டில்  உள்ள ஆடலில் வல்ல மகளிரோடு குரவை ஆடுவர். அறை – பாறை.)
வீட்டுத் தோட்டத்தில் மிளகுக் கொடி வளர்த்துள்ளனர்; குடிலின் இறவாணம் குறுகியதாக உள்ளது. இக்கருத்தை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
குறுகல் நண்ணிய கறிஇவர் படப்பைக்
குறிஇறைக் குரம்பை நம் மனை (அகநானூறு: 272.10-11)
எனக் குறிப்பிடுகிறார்.
(கறிஇவர்-மிளகுக் கொடி படர்ந்த; குறிஇறைக் குரம்பை-குறுகிய இறையை (இறவாணத்தை) உடைய குடில்)
புன்னை மரங்கள் வளர்க்கப்பட்டதைப் புலவர் மோசிக்கரையனார்
பொழில்மனைப் புன்னை (அகநானூறு  260.8) என்கிறார்.
சுவையான பழம்தரும் இரவமரத்தின் தழைகளுடன் வேப்ப மரத்தின் இலைகளையும் வீட்டின் இறவானத்தில் செருகி வைப்பதைப் புலவர் அரிசில் கிழார்,
தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ (புறநானூறு  : 281.1) எனக்
குறிப்பிட்டுள்ளார்.

பொதுமன்றத்தில் உள்ள விளாமரத்தின் பழம் வீட்டருகே வீழ்ந்ததைப் புலவர் கருந்தும்பியார்,
மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில் (புறநானூறு:181.1) எனக்
குறிப்பிட்டுள்ளார். (வெள்ளில் – விளாம்பழம்)
ஒவ்வொரு நாட்டிலும் காவல் மரம் என ஒன்றை வளர்த்து அதற்கு முதன்மை கொடுத்து வந்தனர். அரண்மனையில் வளர்க்கப்படும் காவல் மரம் என்பது அரசரின் வெற்றியின் அடையாளமாகக் கருதப்பட்டது. புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் (கடிமரம் தடிதல் ஓம்பு : புறநானூறு 57:10),  புலவர் கல்லாடனார் ( கடிமரந் துளங்கிய காவும் :  23: 9-10) ஆகியோர் பகைநாட்டின் காவல்மரம் குறித்துக் கூறியுள்ளனர். (வேந்தர் வளர்க்கும் காவல்மரம் போன்றே நம் முன்னோர்கள், ஒவ்வொரு கோயிலிலும் தல மரம் என ஒரு மரத்தை வளர்த்துச் சுற்றுப்புற அறிவியலில் கருத்து செலுத்தி உள்ளனர். இப்பழக்கம் இன்றுவரையும் கோயில்களின் உள்ளமையை நாம் காணலாம்.)
பயிரறிவியல் குறித்துத் தனியாக விரிவாக ஆராயும் அளவிற்குச் செய்திகள் உள்ளன. ஆனால், வீட்டில் மரங்கள் வளர்க்கும் அளவிற்கும் தோட்டங்கள் அமைக்கும் அளவிற்கும் கட்டடங்கள் அமைக்கப்பட்டன என்பதால் இங்கே அவை பார்க்கப்பட்டன. இப்பொழுதோ இட நெருக்கடி என்ற பெயரில் ஒவ்வொரு வீடும் ஒன்றை ஒன்று ஒட்டிக்கொண்டு மர வளர்ப்பிற்கு இடமில்லாமல் அமைக்கப்படுகின்றன!

Thursday, April 21, 2011

andre' sonnaargal 49 - buildings 11 :அன்றே சொன்னார்கள் 49 - கட்டங்கள்11

 அன்றே சொன்னார்கள்49

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -11

பதிவு செய்த நாள் : April 21, 2011


கட்டடங்கள் என்பன வீடுகள் அல்லது மாளிகைகள்  முதலானவற்றுடன் அறச்சாலை முதலானவற்றையும் குறிக்கும். ஆங்காங்கே வழி நடைப்பயணத்திற்கென மாந்தர்க்குச் சோறிடும் அறச்சாலைகள் கட்டப்பட்டுள்ளன. இவை போல் கால்நடைகளுக்கென வைக்கோல் இடும் சாலைகளும்  வைக்கோல் தின்று வயிறு நிறைந்த உடன் எருதுகள் நீர் குடிக்க வேண்டும் என்பதால் நன்னீர்க்குளங்களும் அமைத்து இருந்து உள்ளனர். துறவிகள் தங்கும் தவப்பள்ளிகளும் அமைத்திருந்தனர். குளிர்ந்த சிறிய குளங்களை உள்ளே அடக்கின முன்றிலை உடைய பெரிய எருத்திற்கு வைக்கோலிடும் பல சாலையினையும் தவம்செய்வோர் உறையும் இடங்களையும் உடைய தழைத்துத் தாழ்ந்தபொழில்கள் சூழ்ந்த தவப்பள்ளிகளை ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்,
தண்கேணித் தகைமுற்றத்துப்
பகட்டுஎருத்தின் பலசாலைத்
தவப்பள்ளித் தாழ்காவின் (பட்டினப்பாலை 51-52)
எனக் குறிப்பிடுகிறார்.
வகைபெற எழுந்து வானம் மூழ்கிச்
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்இல்‘ (357-8)
என்னும் ஆசிரியர் மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி அடிகட்கு,   ‘மண்டபம், கூடம், தாய்க்கட்டு, அடுக்களை என்றாற் போலும் பெயர்களைப் பெறுதலின், வகைபெற வெழுந்தென்றார்‘ என்று நச்சினார்க்கினியர் சிறப்புரை எழுதி உள்ளார். இதனை மொழி ஞாயிறு பாவாணர் அவர்கள் விளக்கமாக,
ஒவ்வொரு மாடமும் அல்லது மாளிகையும், சுற்றுச்சுவர், முகமண்டபம், தலைவாசல், இடைகழி(நடை), முன்கட்டு, உள் முற்றம், பின்கட்டு, கூடம், அடுக்களை (சமையலறை), புழைக்கடை (கொல்லைப்புறம்), மனைக்கிணறு, குளிப்பறை, சலக்கப்புரை (கழிவறை), சாலகம் அல்லது அங்கணம் என்னும் பகுதிகளையுடைய தாயிருந்தது; மேனிலையில் நிலாமுற்றமிருந்தது எனத் தெரிவிக்கிறார்.
இவற்றுடன், அக்கால மாளிகைகள், காற்றோட்டத்திற்காகக் காலதர், சாளரம், பலகணி என்னும் பல்வகை அமைப்புகளைப் பெற்றிருந்தன. இன்றைக்கு நாம் பலகணி வசதி உடன் தனியாக வெண்டிலேட்டர் (ventilator) என்னும் வசதியையும் வைத்துள்ளோம். அதனைக் குறிப்பதுதான் காலதர்  என்பது. ( கால் – காற்று ; அதர் -வழி; காற்று வரும் வழி). அறிவியல் சார்ந்த கட்டடச் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகக் காலதரைக் குறிப்பிடலாம்.
முரட்டுத்துணியால் அமைக்கப்பட்ட கூடாரம், படமாடம் என்றும் திரையால் அமைக்கப்பெற்ற மண்டபம், மண்டப எழினி என்றும் சொல்லப்பட்டமையால் கட்டட அழகிற்குத் துணியையும் இக்காலம்போல் அன்றே பயன்படுத்தி உள்ளனர் எனலாம்.

குற்றமற்ற சிறப்பை உடைய மாளிகை பற்றி ஆசிரியர் இளங்கோ அடிகள்,
சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்
முடியர சொடுங்கும் கடிமனை (சிலப்.14:146-7) எனக் கூறி உள்ளார்
இதற்கு விளக்கம் தரும்பொழுது அருஞ்சொல்உரைகாரர் ஓடு கொண்டு வேயப்படாமல் பொன்னால் வேயப்பட்ட மனை என்று விளக்கம் தருகிறார். ஆசிரியர் சாத்தனாரும் காஞ்சி நகரில் கூடுதற்குரிய பொது அம்பலமும் பொன்னால் வேயப்பட் டிருந்ததாகச்
சாலையுங் கூடமும் தமனியப் பொதியிலும்‘ (மணிமேகலை :  28: 66)
என்னும் அடியில் தெரிவிக்கிறார். எனவே, சுடாத மண், சுட்டமண், ஓடு என்பனவற்றைக் கொண்டுமட்டும் அல்லாமல் பொன்னையும் கொண்டு கூரைகள் வேயப்பட்டிருந்தமை செல்வச் செழிப்புடன் கட்டடக்கலைச் சிறப்பிற்கும் சான்றாகும்.
மன்றம், அம்பலம், பொதுவில், அரண், மதில் எனப் பலவாக அமைந்தனவும் கட்டடச் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகும். இவற்றைப் பிறிதொரு சமயம் பார்ப்போம். இதுவரை பார்த்த கட்டடச் சிறப்பிற்கு முத்தாய்ப்பாக நெடுநல்வாடை கூறும் கட்டட அமைப்பை அடுத்துப் பார்க்கலாம். அதற்கு முன்னர், கற்பனைக்காக அல்லது உயர்வு நவிற்சிக்காகக் கட்டடங்கள் பெரிய அளவில் இருந்தமையாகக் கூறியதாகக் கருத வாய்ப்பில்லை என்பதை நாம் தெளிய வேண்டும். ஏனெனில், சிறிய வீட்டினை அவ்வாறே குறிப்பிட்டுள்ளனர். (மனை என்பதை மனையில் நடத்தும் இல்லறத்தைக் குறிக்கவும் பயன்படுத்தினர். குடும்ப ஒளிவிளக்காகத் திகழும் தலைவனை (அல்லது குடும்ப விளக்காகிய தலைவியன் கணவனை)ப் புலவர் ஐயூர் முடவனார்
மனைக்கு விளக்கு ஆகிய வாள்நுதல் கணவன் (புறநானூறு  : 314.1)
என்று குறிப்பிடுகிறார்.) உள்ளது உள்ளவாறுதான் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்பதற்குச் சில சான்றுகள் பார்க்கலாம்.
இலைவேய்ந்த குடிசைகள், குற்றில்கள், சிற்றில்கள், மண்சுவர்க்கூரை வீடுகள், பச்சைச் செங்கல் சுவர்க் கூரை வீடுகள், சுட்ட செங்கல் சுவர்க்கூரை வீடுகள், எனப் பலவகையான உறையுள் (குடியிருக்கும் வீடுகள்) பற்றிக் குறிப்பிட்டு உள்ளனர்.
புலவர் முதுகண்ணன் கூவை இலைகளால் வேயப்பட்ட நான்கு கால்களை உடைய பந்தல் போல விளங்கும் சிறு குடிசையைக்
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்
சிறுமனை (புறநானூறு : 29.19-20)
எனக் குறிப்பிட்டுள்ளார். சிறிய குடிலைப்
பண்ணன்சிறுகுடி (புறநானூறு 15:13) என்கிறார் புலவர் கோவூர்க்கிழார்.
பெரிய கோலங்கள் மூலம் அழகு சேர்த்துள்ள சிறிய வீடுகளைப் புலவர் மதுரை மருதனிளநாகனார்
அகல்வரிச் சிறுமனை (நற்றிணை : 283.3) என்பதன் மூலம்
உணர்த்துகிறார்.
எலிகள் மடிந்து கிடக்கும் பழைய வீட்டைப் புலவர் பெருங்குன்றூர்க் கிழார்
இல்எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின் (புறநானூறு 211.19) எனக்
குறிப்பிட்டுள்ளார். இதைப்போன்ற பாழடைந்த வீடுகளை உள்ளவாறே பாழடைந்த நிலையில் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இயல்பான மனைகள் பற்றியும் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் (முல்லைமாலை நகர் புகல : அகநானூறு: 324.15), புலவர் ஓதலாந்தையார்(மனைகெழுபெண்டிர் : குறுந்தொகை: 382.5), புலவர் மருதனிளநாகனார்  (மணமனை : கலித்தொகை : 68.18; 70.10), மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் (இம்மனை அன்று; அஃது உம்மனை : அகநானூறு 56.14), எழூஉப்பன்றி நாகன் குமரனார் (முருகுமனை: அகநானூறு: 138.10), புறத்திணை நன்நாகனார் (மனை என்னாம்: புறநானூறு : 384.13), புலவர்கோமான் நெடுங்கோட்டனார் (கடிமனை : நற்றிணை 40.1), ஆசிரியர் புலவர் முடத்தாமக்கண்ணியார் (பொருநராற்றுப்படை : 185, 223) ஆசிரியர்புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பெரும்பாணாற்றுப்படை (256,299) ஆசிரியர் புலவர் மாங்குடி மருதனார் (மதுரைக்காஞ்சி : 268,423,423) ஆசிரியர் புலவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் (நெடுநல்வாடை : 45) ஆகியோர்  குறித்துள்ளனர்.

பொதுவாக எவ்வகை அடைமொழியும் இன்றி, இல்லம் என்றும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் (பசிப்பிணி மருத்துவன் இல்லம் : புறநானூறு :173), புலவர் கயமனார் (பெருஞ்சோற்று இல்லத்து : அகநானூறு : 275.9), புலவர் நல்லந்துவனார் (கலம்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்ற : கலித்தொகை : 142.64), புலவர் ஒக்கூர் மாசாத்தியார் (மெல்லிய அரிவை இல் : அகநானூறு: 384.7) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, சிறிய வீடுகளைச் சிறிய வீடுகளாகவே குறிப்பிட்டுள்ளதால், உள்ளது உள்ளபடி பன்மாடக் கட்டடங்களை அவ்வாறுதான் குறிப்பிட்டள்ளனரே தவிர, மிகையாகவோ புனைந்துரையாகவோ கூறவில்லை.
மேலும், குடி, நகர், மாளிகை என்னும் தமிழ்ச் சொற்கள் இந்திய நிலப்பரப்பு முழுமையும் சமசுகிருதம் முதலான பிற மொழிகளில் அவ்வாறே பயன்படுத்தப்பட்டு வருவதை நோக்குமிடத்து இன்றைய இந்திய நிலப்பரப்பு முழுமையும் அன்று பரவி இருந்த தமிழர்கள் எல்லா இடங்களிலும் சிறப்பான கட்டடங்களை எழுப்பி வசித்து வந்துள்ளனர் என உணரலாம்.

Wednesday, April 20, 2011

andre' sonnaargal 48 - buildings 10 :அன்றே சொன்னார்கள் 48 - கட்டடங்கள் 10

அன்றே சொன்னார்கள் 48

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -10

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 20, 2011


கட்டடங்கள், அகலமாகவும் உயரமாகவும் நன்முறையிலும் வளத்தை வெளிப்படுத்தும் வகையிலும் நாகரிகச் சிறப்பிற்கு எடுத்துக்  காட்டாகவும் பாதுகாப்பு ஏந்து(வசதி)களுடனும் அமைக்கப் பட்டன என முன்னரே கண்டோம். வீடுகள் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தன பற்றிய புலவர்கள்  சிலர் கருத்துகளைப் பார்ப்போம். புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ, கடிமனை ( கலித்தொகை : 24.9)  என்றும் புலவர் மதுரை மருதனிளநாகானர், கடிமனை மாடத்து (அகநானூறு: 255.18) என்றும் பாதுகாப்பு அமைந்த மாளிகைகளைக்  குறிப்பிடுகின்றனர்.
பெரிய காவலுள்ள வலிமையான வீடுகளையும் வீடுகளைச் சுற்றி அமைந்த புலால் மணம் மிக்க அம்புகள் ஏந்திய வீரர்களின் காவல் கட்டுகளையும் குறிப்பிட்டு இன்றைய வல்லம் என்னும் ஊர்க் காட்சியைப் புலவர் கருந்தும்பியார்,
பெரும்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்
புலாஅ அம்பின் போர்அருங் கடிமிளை
வலாஅ ரோனே
(புறநானூறு : 181. 4 -6) எனக் குறிப்பிட்டுள்ளார். (குறும்பு-அரண்; கடிமிளை-காவல்காடு; வலாஅரோனே – வல்லார் என்னும் ஊரைச் சேர்ந்தவனே)
ஓவியத்தில் தீட்டப்படும் அழகை விட மிகுந்த அழகுடன்  உள்ள  உயரிய மண்ணால்  எழுப்பப் பெற்ற மதிலால் சூழப்பட்ட பாதுகாப்பான நீண்ட பெரிய வீட்டைப் புலவர் கபிலர்,
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின்,
ஓவு உறழ் நெடுஞ் சுவர் (பதிற்றுப்பத்து : 68.16-17) என்கிறார்.
அகலமான பரப்பிலும் பல மாடிகளுடன் உயரமாகவும் வளமைக்கு எடுத்துக்காட்டாகவும் நகரத்தைப் போல் சிறப்பாக அமைந்த மாளிகைகளை நகர் என்றே பழந்தமிழர்கள் குறித்துள்ளனர் என்பதை நாம் கண்டோம். நகர் என்பது நகரத்தைக் குறிக்கும் இடங்களும் உண்டு. ஆசிரியர் புலவர் மாங்குடி மருதனார் வானம்போல் பரந்த செல்வம் மிகுந்த வளமையான நகரத்தை
வானத் தன்ன வளநகர் (மதுரைக்காஞ்சி : 741)  என்கிறார்.
புலவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், நிலா முற்றங்கள் உடைய  நீண்ட மதில்கள் சூழ்ந்த மாளிகைகள் வரிசையாய் நிறைந்த ஊரை
அரமிய வியலகத்து இயம்பும்
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே (அகநானூறு : 124.15-16)
என்கிறார்.
மிகுந்த செல்வம் நிலையாகப் பெற்றிருக்கும் சிறப்பு மிக்க நகரான உப்பங்கழிப் பக்கங்களை உடைய மருங்கூர்ப்பட்டினத்தைப் புலவர் நக்கீரர்
விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்
இருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து (அகநானூறு: 227.19-20)
என்கிறார்.
புலவர் கோவூர்கிழார், தைமாதத்தில் பொய்கை குளிர்ந்திருப்பதைப் போலவும் கொள்ளக் கொள்ளக் குறையாத உணவையுமுடைய அகன்ற நகரத்தைத்
தைஇத் திங்கள் தண் கயம் போல கொளக்
கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் (புறநானூறு : 70.7) என்கிறார்.
செல்வச்சிறப்பு மிக்க மாளிகைகள் நிறைந்தமையாலேயே இப்பட்டினம் திருநகர் என குறிக்கப்பெற்றுள்ளது. எனவே, நகரங்கள் சிறப்பார்ந்த கட்டடங்கள் மிகுந்து இருந்தன  என்பதை இவை நமக்கு உணர்த்துகின்றன.
அரணும் மதிலும் சிறப்பும் மிகுந்த அரண்மனையையும் நகர் என்றே குறித்துள்ளனர். சான்றுக்குச் சில பார்ப்போம்.
புதிதாய்த் தோன்றிய பிறைநிலா போன்று வெண்மையான சுதையால் செய்யப்பெற்ற மாடத்தையும் குளத்திலுள்ள பனிநீர் போன்று குளிர்ச்சியையும் உடைய அரண்மனையைப்
புலவர் ஊன்பொதி பசுங்குடையார்
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் (புறநானூறு : 378.7) என்கிறார். (சுதை-
சுண்ணாம்பு; பனிக்கயம் – குளிர்ந்த நீர்நிலை)
புலவர் உறையூர் ஏணிச்சேரி  முடமோசியார், முரசு பொருந்திய செல்வத்தினையுடைய அரசர் கோயிலாகிய அரண்மனையை
முரைசு கெழு செல்வர் நகர் (புறநானூறு : 127.10) என்கிறார்.
புலவர் ஆலந்தூர்க்கிழார், நீண்ட மதிலுடன் பாதுகாப்புடன் விளங்கும் அரண்மனையை,
நெடுமதில் வரைப்பின் கடுமனை (புறநானூறு : 36.10) என்கிறார்.
ஆசிரியர் மாங்குடி மருதனார், எல்லாக் காலத்திலும் அனைத்துப் பயன்பாட்டிற்கும் உரிய வளமான அரண்மனையை,
பயனற வறியா வளங்கெழு திருநகர் (மதுரைக்காஞ்சி : 216) என்கிறார்.
தம் முன்னோர்கள்போல் இமயமலையில் வில் கொடியைப் பொறித்த சேரலாதனின் மாந்தை என்னும் நகரில் உள்ள இலக்கணப்படிக் கட்டப்பெற்ற முற்றம் உடைய அரண்மனையைப் புலவர் மாமூலனார்
நல் நகர் மாந்தை முற்றத்து (அகநானூறு : 127.6) எனக் குறிப்பிடுகிறார்.
அரண்மனையை நகர் எனக் குறிப்பது போல் கோயிலையும் நகர் என்றே குறித்துள்ளனர்.
புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ தெய்வம் உள்ள கோயிலையும் நகர் என
அணங்குடை நகரின் (அகநானூறு :99.9) என்னும் தொடரில்
குறிப்பிடுகிறார்.
இதுபோல் முனிவராற் பரவப்படும் மூன்று திருநயனத்தையுடைய  செல்வரது  கோயிலை வலம் வருவதைக் குறிக்கும் வகையில் புலவர் காரிகிழார்
முனிவர்
முக்கட் செல்வம் நகர் வலம் செயற்கு (புறநானூறு : 6.18)
என்று சொல்லும் பொழுது கோயிலைக் குறிக்க நகர் என்னும் சொல்லைப் பயன்படுத்தி உள்ளார்.
புலவர் மருதன் இளநாகனார் கடவுள் குடிகொண்டுள்ள பாதுகாப்பான கோயில் என்னும் பொருளில்
கடவுள் கடி நகர் (கலித்தொகை 84.6) என்கிறார்.
ஆசிரியர் நல்லந்துவனார் கடம்பமர் செல்வனாகிய திருமுருகனின் திருக்கோயிலைக்
கடம்பமர் செல்வன் கடிநகர் (பரிபாடல் 8.126) என்கிறார்.
எனவே, சிறப்பான நகரங்களைப் போலவும் பெரிய அரண்மனைகளைப் போலவும் கோயில்களைப்போலவும், வீடுகளை உயர்ந்தோங்கிய மாளிகைகளாகக் கட்டி உள்ளனர் என்பது கட்டடவியலில் நம் முன்னோர் தலைசிறந்து விளங்கியமைக்குச் சான்றாகும்.

Tuesday, April 19, 2011

andre' sonnaargal 47 - buildings 9 : அன்றே சொன்னார்கள் 47 - கட்டட வகைள் 9

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 9

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 19, 2011


கட்டடவியலுக்கென்று இலக்கணம் வகுத்து அதற்கேற்ப பெரிதாகவும் அகலமாகவும் பல மாடிகள் உடையதாக உயர்ந்ததாகவும் பாதுகாப்பாகவும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் முன்னோர் வீடுகளைக் கட்டி இருந்தமையைப் பார்த்தோம். இவற்றின் தொடர்ச்சியாக மேலும் சிலக் குறிப்புகளைப் பார்ப்போம்.

நாம் இப்பொழுது வீட்டிற்குக்குளிர்ச்சி தேவை எனில், செயற்கையாகக் குளிர்கலன் வைத்துக் கொள்கிறோம். பண்டைக் காலத்தில் வீடு கட்டும் முறையிலேயே தேவையான குளிர்ச்சியான சூழலை உருவாக்கும் அறிவியல் வித்தையை நன்கு அறிந்திருந்தனர். இவ்வாறு, மரநிழலில் அமைந்துள்ள நீர்நிலை போன்று குளிர்ச்சியான மாடித்தளங்கள் உடைய மாளிகையைப் புலவர் தாயங்கண்ணனார்,
நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின் (அகநானூறு: 105.7) என்கிறார்.
இப்பாடலிலேயே மணிசெய்மண்டை (மணிகள் பதிக்கப்பெற்ற பொற்கலம் உள்ள மனை) எனக் குறிப்பிட்டுச் செல்வச் சிறப்பையும் அவர் விளக்கி உள்ளார்.
மாடிகள் நிறைந்து சிறப்புற்ற மாளிகையைப் புலவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்,
மாட மாண் நகர் (அகநானூறு : 124.6) என்கிறார்.
உழவர்களின் தனித்தனித் தோப்புகளில் தனி வீடுகள் அமைந்திருந்தன. உழவர்களுக்கான அத்தகைய தனி மனைகளைப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்
தண்டலை உழவர் தனிமனை (பெரும்பாணாற்றுப்படை 355)
எனக் கூறுகிறார்.
வீடுகளுக்கான வாசல்கள் அகலமாக அமைந்து கதவுகள் ஒற்றைப் பெருங்கதவுகளாக அமைக்கப்பட்டதுடன்  இரட்டைக் கதவுகளாகவும் அமைந்திருந்தன. இரு கதவுகளைச் சேர்த்து மூடும் வகையில் அகலமான வாசலும் கதவுகளும் அமைக்கப்பட்டமையைப்  புலவர் மருதனிளநாகனார், பெரும் செல்வம் நிலையாக உள்ள மிகுதியான உணவுப் பொருள்களை உடைய பெரிய இல்லத்தின் இரட்டையாய் வந்து கூடும் கதவு எனக் குறிப்பிடும் வகையில்,
பெருந்திரு நிலைஇய வீங்குசோற்று அகல்மனை
பொருந்து நோன் கதவு ( கலித்தொகை :83.1 ) என்கிறார்.

வீட்டிலுள்ள அறைகள் நெல்கள் குவித்துச் சேமித்து வைக்கும் வகையில் பேரளவாக அமைந்திருந்தன. இவ்வாறு, நெல் குவிந்து கிடக்கும் வீடுகள், பொன்கொழிக்கும் தெருக்கள் என்று உணவு வளம் நிறைந்த வீடுகளின் சிறப்புகளையும்  செல்வ வளம் மிகுந்த நகரின் சிறப்புகளையும் புலவர் குன்றூர்க்கிழார் மகனார் கண்ணத்தனார்
நெல்மலிந்த மனை பொன்மலிந்த மறுகின் (புறநானூறு : 338.2) என்னும்
அடியில் விளக்குகிறார்.

மேலும் பிறவற்றைச்சேர்த்து வைக்கும் வகையிலும், வீடு எது, ஓடம் எது என்று தெரியாத அளவிற்கு மீன்வகைகளும் பிற பொருள்களும் மிளகு மூட்டைகளும் குவிந்திருக்கும் அளவிற்குப் பெரிய அளவில் வீடுகள் அமைந்தமையைப் புலவர் பரணர்
மிசைஅம்பியின் மனைமறுக்குந்து
மனைக்குவைஇய கறிமூடையால் (புறநானூறு : 343.2) எனக்
குறித்துள்ளார்.
(மிசை அம்பி – உயர்வான படகு; குவை-குவியல்; கறிமிளகு)

வீடு நிறையப் பணி செய்யும் உழவர்கள் இருந்தனர் என்பதைப் புலவர் குன்றுகட் பாலியாதனார்
மனைக் களமர் (புறநானூறு 387.25) என்னும் தொடர் மூலம்
விளக்குகிறார். எனவே, உழவர்கள் நிறைந்திருக்கும் அளவிற்கு வீடுகளும் பெரிய அளவினதாகக் கட்டப்பட்டுள்ளன.

மலர்மாலை அணிந்து மணம் வீசும் வீடுகளில் விளையாடி மகிழ்ந்தமையை ஆசிரியர் புலவர் மாங்குடி மருதனார்,
மணங்கமழ் மனை தொறும் பொய்தல் அயர (மதுரைக்காஞ்சி : 589)
எனக்குறிப்பிட்டுள்ளார்.(பொய்தல்-விளையாட்டு).எனவே,விளையாடுவதற்கேற்ற வகையில் வீடுகள் பெரிதாக அமைந்திருந்தன எனலாம்.

பொய்கையால் சூழப்பெற்ற பூங்கா அமைந்த அழகான பெருமனைகள் இருந்தமையைப் புலவர் பரணர்,
பொய்கை சூழ்ந்த பொழில்மனை (அகநானூறு: 181.18) எனக்
குறிப்பிடுகிறார்.

இன்றைய நாகரிக உலகில் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இத்தகைய வீடுகளை நாம் அமைத்துள்ளோம். இன்றைய நாகரிகச் சிறப்பை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் பழந்தமிழ்முன்னோர் அடைந்துள்ளனர். நாம்அயல்மொழி வாயிலாக அறிவை இழந்து நாகரிகத்தைத் தொலைத்து நிற்கிறோம்!

Monday, April 18, 2011

no need of navodhaya shool! we want Thamizh shcools!

காங்கிரசைத் தோற்கடிக்க மேலும் ஒரு காரணம் இதோ!
நமக்குத் தேவை 
தாய்த்தமிழ்ப் பள்ளிகளே!
(meenakam. katturai)
++++++++++++++++++++++++++++++++ 

நமது தேவை நவோதயா பள்ளி அல்ல!

தாய்த்தமிழ்ப்பள்ளிகளே!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 11, 2011
கருத்துகள் (0) 167 views
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (24 votes, average: 5.00 out of 5)

இந்தியா என்பது இன அடிப்படையிலோ மொழி அடிப்படையிலோ இயற்கையாய் அமைந்த நாடன்று. அயலவர் ஆட்சி நலனுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை அரசமைப்பு. இந்த அமைப்பு அனைத்துத் தேசிய இனங்களின் கூட்டமைப்பாகச் செயல்பட்டால் வலிவும் பொலிவும் மிக்கதாக விளங்கும். மாறாக ஒரே மொழி ஒரே நாடு என்ற அடிப்படையில் இன அழிப்பு முயற்சியில் ஈடுபட்டால் சிதைவுண்டுப் போகும்.
ஆனால் இந்தியாவிற்கு அமைந்த நலக்கேடு என்னவெனில் மத்திய அரசு எப்பொழுதும் நாட்டு ஒற்றுமையைப் பேசிக் கொண்டே ஆரிய அரசாகச் செயல்படுவதுதான். அதன் இந்தித் திணிப்பு முயற்சிகளும் ஆரிய ஆட்சிக்குப் படிக்கட்டுகளாகத்தான் கருதி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியத் துணைக் கண்டத்தின் விடுதலைக்கும் ஒற்றுமைக்கும் தென்னாட்டவரும் குறிப்பாகத் தமிழ் நாட்டவரும் பெரிதும் உயிரும் உடைமையும் ஆட்சியும் மாட்சியும் இழந்து பாடுபட்டு உள்ளனர்; இருப்பினும் இந்திய வரலாறு என்றாலேயே வடவர் வரலாறு என்னும் போக்கிலும் இந்திய நிலப்பகுதி மொழி எனில் சமசுகிருத மேலாண்மைக்கு வழி விடுவதற்கான இந்தி என்றும் நடந்து கொள்வதுதான் காங்கிரசு எனப்படும் பேராயக் கட்சியின் மாறாக் கொள்கையாக உள்ளது. எனவேதான் விடுதலைக்கு முன்பிருந்தே சமசுகிருதத்தையும் இந்தியையும் திணித்து வந்தது; குடியரசாக நம் நாட்டு அரசியலமைப்பு அமைந்த பின்னும்   செயற்கையான ஒரு வாக்கு வேறுபாட்டில் இந்தியைத் திணித்தது. இந்தி ஒன்றுதான் நாட்டு மக்களின் தேசிய மொழி என்னும் தவறான பரப்புரையையும் எக்காலத்தும் மக்களின் பேச்சு மொழியாக இல்லாத சமசுகிருதத்திற்கு மிக மிகக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டையும் வழங்கி மக்களின் வரிப்பணத்தை வீணடித்து வருகிறது.
அவற்றின் ஒரு பகுதிதான் இந்தியைத் திணிக்க வில்லை எனக் கூறிக் கொண்டே இந்தியைத் திணித்து வருவது. இந்தித் திணிப்பால் 1967 இல் தமிழ் நாட்டில் ஆட்சியை இழந்த பின்னும் தன் தவறான பரப்புரையால்  தேசிய மொழி பற்றிய தவறான விதைகளை விதைத்துவிட்ட செருக்கில் நவதோயா பள்ளிகள் மூலம்  தமிழை அழிக்க மூக்கை நீட்டிப் பார்க்கிறது.
தமிழக அரசின் மொழிக் கொள்கை இரு மொழித் திட்டம் எனத் திட்டவட்டமாக அறிவித்து நவோதயா பள்ளிகளுக்குத் தமிழ் நாட்டில் இடம் இல்லாமல் செய்து விட்டதைக் காங்கிரசால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. மத்தியில் தற்போதைய ஆட்சி அமைந்தது முதல் நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் தொடங்க வலியுறுத்தி வருகிறது. மத்திய அமைச்சர் கபில் சிபல் வெளிப்படையாகவும் பன்முறை பேசி உள்ளார். இருந்தும் தமிழ்நாட்டின் அரசு அசையாமையால் தேர்தல் சூழலைப் பயன்படுத்தித் தன் முயற்சியில் வெற்றி பெறலாம் எனக் கருதிக் காங்கிரசுச் சட்ட மன்ற உறுப்பினர்கள் மூலம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறது.
நவோதயா பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கலாம்; இந்தித் திணிப்பு இல்லை; பள்ளி ஒன்றிற்கு இருபது கோடி உரூபாய் வீதம் மாவட்டத்திற்கு ஒரு நவோதயா பள்ளி நடத்துவதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் சிற்றூர்ப் பகுதியினரும் மிகுதியாய்ப் பயன் பெறுவர்; இவைதான் இந்திக்கு வால்பிடிப்போர் கூற்று. சட்டமன்றத்திலேயே பொய்யான தகவல்களைக் கூறும் இவர்களை என்னவென்று சொல்வது?
நவோதயா பள்ளி என்பது 6 ஆம் வகுப்பில் இருந்து உள்ள மேனிலைப்பள்ளியாகும். எடுத்த உடன் ஆங்கில வழியையும் இந்தி வழியையும் திணிக்க வேண்டாம் என்பதற்காக 6 ஆம் வகுப்பிலும் 7 ஆம் வகுப்பிலும் மாநில மொழிகளில் பாடம் கற்பிக்கப்படலாம். ஆனால் மெல்ல மெல்ல மாணவர்களை அயல்மொழிக் கல்விக்கு ஆயத்தப்படுத்தி 7 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்விற்குப் பின் ஆங்கில வழிக்கு  மாறும் வகையில்தான் கல்வித் திட்டம் உள்ளது. 9 ஆம் வகுப்பில் இருந்து அறிவியல் பாடமும் கணக்குப் பாடமும்  ஆங்கிலத்திலும் சமூக அறிவியல் பாடம் இந்தியிலும் இருக்கும்.
பின்னர் ஆங்கில வழியாகவும் இந்தி வழியாகவும் படிக்க இருப்பதால் முதலில் இருந்தே அந்த மொழிகளில் படிக்கத்தான் யாவரும் விரும்புவர். இருப்பினும் முதலில் கூறிய பின்பு தொடக்க ஆண்டுகளில் தாய்மொழி வாயிலாகவும் சொல்லித் தருகின்றனர். எனவே இதனைத் தாய்மொழி வாயிலான கல்வி என்றோ தமிழ்நாட்டில் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படும் என்றோ கூறுவது தவறாகும்.
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் தொடங்கினால் வடக்கே மும்மொழித் திட்டத்தின் கீழ்த் தமிழ் கற்பிக்கப்படும் வாய்ப்பு கிட்டும் என்றும் அடுத்த பொய் மூட்டை அவிழ்த்துவிடப்படுகிறது.
1985 இல் நவோதயா பள்ளி அறிமுகப்படுத்துவதற்கு முன்பிருந்தே மும்மொழித்திட்டம் உள்ளது. ஆனால் இது வரை எந்த ஓர் ஆண்டிலும் மும்மொழித்திட்டத்தின் கீழ் வட நாட்டில்  தமிழோ பிற தென்னிந்திய மொழிகளோ கற்பிக்கப்படவில்லை என்பதை நிதிநிலை அறிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன.  நவோதயா பள்ளியை இங்குத் தொடங்கினால் வடக்கே தமிழ் கற்பிக்கப்படும் எனக் கூறும் மேதையர் புதுச்சேரியில் நவோதயா பள்ளிகள் இருக்கின்றனவே! ஏன் அம்மாநில மக்கள் மொழியான தமிழ் வடக்கே கற்பிக்கப்படவில்லை என்பதை விளக்குவார்களா?
புதுச்சேரி நவோதயா (வித்யாலயா) பள்ளியின் பாடத்திட்டங்களைப் பார்த்தால் தமிழுக்கான பட நேரம் குறைவாகத்தான் உள்ளது. அது மட்டுமல்ல! இந்தி முதலான பிற துறைகளின் ஆசிரியர்கள் முழு நேர ஆசிரியர்களாக உள்ளனர். ஆனால் தமிழுக்கு அவ்வாறு இல்லை.
இந்தியா முழுவதும் 600 நவோதயா பள்ளிகள் உள்ளன. எவற்றிலுமே (இந்தி நீங்கலான) மாநிலத்தாய்மொழி முதன்மையாக  இல்லை. எனவே, பாட மொழி பற்றிய கருத்தையும் தவறாகவே பரப்பி வருகின்றனர்.
கல்வித்துறை என்பது மாநிலப் பட்டியலில் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் பொதுப்பட்டியலுக்கு மாற்றியதால்தான் இந்த அவலங்கள் தொடருகின்றன. நவோதயாவிற்கு வால் பிடிக்காமல் பேராயக் கட்சியினர் அதற்கான நிதி ஒதுக்கீட்டைத் தமிழ் நாட்டில் தமிழ் வழிப் பள்ளிகளுக்குப் பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்டத்திற்கு ஓர் அரசு புத்தியல் பள்ளி என மாவட்டந்தோறும் பள்ளிகள் தொடங்க மத்திய அரசின் பொருளுதவி கிடைத்தால் தமிழ்வழிக்கல்வி வளம் பெறும்; அறிவியல் அறிஞர்களும் பிற துறை அறிஞர்களும் தமிழ் நாட்டில் பெருகுவர்.
அரசு மருத்துவமனைக்குத் தங்கள் தலைவர் பெயர் வைத்ததாலேயே அரசு இதற்கும் உடன்படும் எனப் பேராயக் கட்சியினர் தப்புக் கணக்கு போடக் கூடாது. எனவே, நவோதயா வித்யாலயா நிதியுதவியைத் தமிழ்நாட்டின்  தமிழ்வழி அரசு பள்ளிகளுக்குப் பெற்றுத்தராமல் இந்திப்பள்ளியை இறக்குமதி செய்யச்சதி செய்தால் அடியோடு காணாமல் போக நேரிடும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
பேராயக்கட்சியானது தமிழர்கள் இளிச்சவாயர்கள், மானங்கெட்டவர்கள், கொத்தடிமைகள் என எண்ணிக்கொண்டு தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே நவோதயா பள்ளியைத் தமிழகத்தில் திறப்பதைக் கொள்கையாக அறிவித்துள்ளது. இந்த ஒரு காரணத்திற்காகவாவது நாம் அக்கட்சியை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். நவோதயா பள்ளிக்கான நிதி நல்கைகளைத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்க வகை செய்ய வேண்டும். மாவட்டத்திற்குக் குறைந்தது ஒரு தமிழ்வழிக் கல்வியான  கல்விக்கூடத்தையாவது அனைத்து வசதிகளுடனும் கட்டணமின்றியும் சிறப்பான முறையில் உருவாக்க வேண்டும்.
தமிழ்வழிக் கல்வி நமது பிறப்புரிமை!
பிற மொழித் திணிப்பு எதிர்ப்பு நமது காப்புரிமை!

andre' sonnaargal 46 - buildings 8 : அன்றே சொன்னார்கள் 46 - கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 8

 கட்டட வகைகளும் 

அறிவியல் அன்றோ – 8

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 18, 2011


அகலமாகவும் உயரமாகவும் செல்வச் செழிப்பைக் காட்டும் வகையிலும் வீடுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருந்தன எனப் பார்த்தோம். இவ்வாறு, கட்டடவியல் இலக்கணத்திற்கேற்ப நன்கு கட்டப்பட்ட வீடுகளை நன்மனை என்றனர். புலவர் ஓரம்போகியார்(ஐங்குறுநூறு: 292.4; 294.4) புலவர் பரணர்(நற்றிணை : 280.9), புலவர் கண்ணகனார்(நற்றிணை 79.2), புலவர் மதுரை மருதனிளநாகனார்(நற்றிணை : 392.7; அகநானூறு 193.11) ஆகியோர் நன்மனை (நல்மனை) என்று குறிப்பிடுகின்றனர்.
வேண்டியவர்க்கு வேண்டியவாறு வழங்கும் வகையில் உணவுப் பொருள்கள் நிறைந்த பெரிய நல்ல வீடுகளாய் அமைந்துள்ளன என்பதைப் புலவர் நக்கீரர்
கூழ்உடை நன்மனை (நற்றிணை : 367.5) என்பதன் மூலம் தெரிவிக்கிறார்.
புறத்திணை நன் நாகனார்    புதுமைவளம் நிறைந்த பெரிய வளமனையை
யாணர் நன்மனை (புறநானூறு :  376.6) என்று குறிப்பிட்டுள்ளார்.

புலவர் ஒருவர் நற்றிணையில் (132.5) நன்னகர் என்று நல்லமுறையில் அமைக்கப்பட்ட மாளிகையைக் குறிப்பிடுகிறார்.
புலவர் நக்கீரர்  உறந்தை நகரைப்போன்று செல்வம் மிக்க நல்ல மாளிகையை
உறந்தை அன்ன
நிதியுடை நல் நகர் (அகநானூறு: 369.15) என்கிறார்.

அழகிய தோற்றம் அளிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட நல்ல இல்லம் பற்றிப் புலவர் கல்லாடனார்
வினைபுனை நல்லில் (புறநானூறு : 23.10) எனக் குறிப்பிடுகிறார்.


இப்பொழுது நாகரிகச் சிறப்பு மிக்க மாடி வீடுகள் உள்ளமை போல் அப்பொழுதே வீடுகள் போதிய திறந்த வெளி, தோட்டம், மாடிப்பூங்கா ஆகியவற்றுடன் நன்கு அமைக்கப்பட்டிருந்தன. முன்றில், படப்பை, மனை, என மூன்றையும் ஒரே பாடலில் (நற்றிணை 44) புலவர் பெருங்கௌசிகனார் குறிப்பிடுவதன் மூலம் முற்றம், தோட்டம் முதலியன அமைந்த பெரிய வீடுகள் இருந்தமையை அறியலாம். ஆசிரியர் புலவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பொலிவும் செல்வமும் நிறைந்து விளங்கும் மாளிகையின் முற்றத்தைப்
பொலிந்து திருநகர் முற்றம் ( மலைபடுகடாம் : 548) என்கிறார்.

வீட்டிற்கு முன்புறம் பெரிதான முற்றம் இருக்கும் வகையிலேயே வீடுகளை அமைத்துள்ளனர். இனிய பெரிய மாளிகையின் அகன்ற முற்றத்தைப் புலவர் குண்டுகட் பாலியாதனார்
இன்நகர் அகன்கடைத்தலை (புறநானூறு : 387.17) என்கிறார். புலவர
நம்பி குட்டுவனார் பாடலிலும்  (நற்றிணை : 236.8-10) முன்றில் பற்றிய குறிப்பு உள்ளது.
புலவர் மாமூலனார், வெண்மையான மணல் நிரப்பப்பட்டு உயர்ந்த பொலிவு மிகுந்த வாயிலை உடைய நெடிதுயர்ந்த மாளிகையை
வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர் (அகநானூறு: 325.2)
என்கிறார். வீடுகளின் முன்னர் வெண்மணலைப் பரப்பும் வகையில் வீட்டு முன்பகுதி அகலமானதாகவும் பேரளவினதாகவும் இருந்துள்ளது இப்பாடல் மூலமும் தெரிய வருகிறது..
வழிவழியே வந்த தொன்மைச் சிறப்பு மிக்க மாளிகையைத் தொல்நகர் என அழைத்துள்ளனர்.
தொல் நகர் என ஆசிரியர் காப்பியாற்றுக் காப்பியனார் (பதிற்றுப்பத்து: 31.28), புலவர் பரணர் ஆகியோர்  (பதிற்றுப்பத்து : 47.8) குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பெற்ற சங்க இலக்கியக் காலத்திற்கு முன்பே சிறப்பான மாளிகைகளை நம் முன்னோர் அமைத்து இருந்தனர் எனலாம்.

Saturday, April 16, 2011

andre' sonnaargal 45 - type of buildings 7 : அன்றே சொன்னார்கள் 45 - கட்டட வகைகள் 7

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 16, 2011












பழந்தமிழ்நாட்டில், பெரிய அகன்ற மாடிகள் பலவற்றை உடைய நகரத்தைப் போன்ற சிறப்பான மாளிகைகள் கட்டப்பட்டிருந்தன என்பதைப் பார்த்தோம். அவை வெறும் கட்டடங்களாக மட்டும் அல்லாமல் செல்வச் செழிப்பிற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கியமையால் வளமனை என்றும் திருமனை என்றும் செல்வமனை என்றும் சிறப்பாகச் சொல்லப்பட்டன.
பண்பார்ந்த பழங்குடிகள் நிறைந்த அகன்ற இடத்தை உடைய தொன்மையான ஊரில் உள்ள செழுமையான வீடு குறித்துக் கல்லாடனார்
பண்பின் முதுகுடி
நனந்தலை மூதூர் . . …..
செழுநகர் (புறநானூறு : 319.9-17) என்கிறார்.
செழிப்பான மாளிகையைச் செழு நகர் என்று புலவர்  பாலைக் கௌதமனார் (பதிற்றுப்பத்து:21/12) கூறுகிறார். தோற்றத்தாலும் சிறப்பாலும் சிறந்து விளங்குகின்ற மாளிகையைப் புலவர் பெருங்குன்றூர் கிழார்  (குறுந்தொகை : 338.7) விளங்கு நகர் என்கிறார்.
செல்வச் செழிப்பைக் காட்டும் வண்ணம் அமைக்கப்பட்ட வீடுகள் திருமனை (கிளிமங்கலங் கிழார் : குறுந்தொகை :  181.6) என அழைக்கப்பட்டன.
புலவர் கருவூர்க் கண்ணம்புல்லனார் செல்வம் மிகுந்த அழகிய மாளிகையைத்
திரு நகர் வரைப்பகம் (அகநானூறு : 63.2) என்கிறார்.
புலவர் மாமூலனார், மணல் பரப்பப்பட்ட பொலிவு மிகுந்த செல்வச் செழிப்பு மிக்க மாளிகையைத்
தரு மணல் ஞெமிரிய திரு நகர் (அகநானூறு : 187.9) என்கிறார்.
புலவர் ஒருவர் செல்வம் மிகுந்த பழமையான வீட்டை
மூதூர்த் திருநகர் (அகநானூறு : 114.13) என்கிறார். இவரே வீடுகளின்
மதில்கள், அவை மீது ஏற்றப்படும் கொடிகள் வானைத் தொடும் அளவிற்கு உயரமாக இருக்கும் என்பதை
நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை (அகநானூறு 114.9) என்னும்
வரியில் விளக்குகிறார்.
மற்றொரு புலவர், தொழில் நலம் பொருந்திய செல்வம் மிகுந்த மாளிகையை,
ஏர் வினை
வளம் கெழு திரு நகர் (அகநானூறு : 117.3-4) என்கிறார்.

நலமும் வளமும் பொருந்திய அழகான மாளிகையைப் புலவர் தயங்கண்ணியார்
வளம் கெழு திருநகர் (புறநானூறு : 250.6) என்கிறார்.

இனிமையாய்த் தூங்குவதற்குரிய செழிப்பான வளமனையைப் புலவர் உலோச்சனார்
இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின் (புறநானூறு : 377.3) என்கிறார்.
புறத்திணை நன் நாகனார்    செல்வம் மிகுந்த சிறப்பான மாளிகையைத்
திருஉடைத் திருமனை (புறநானூறு : 379.16) என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வ வளத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டமையால் வளமனைகள் என்றும் அழைக்கப்பெற்றன. வளமனை என்பதற்கேற்ப வீடுகளில் செல்வவளத்திற்குரிய பொருள்கள் நிறைந்து காணப்பட்டு நாகரிகச் சிறப்பிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கின.
சிறப்பான பெரிய வளமனையைப் புலவர் வெறிபாடிய காமக்கண்ணியார் (அகநானூறு: 22.9),புலவர் கருவூர்க் கண்ணம்பாளனார் (அகநானூறு: 263.12)    ஆகியோர்  வள நகர் என்றே கூறுகின்றனர்.
பல வசதிகளும் உடைய வீட்டை வளமனை எனப் புலவர்கள் கயமனார் (அகநானூறு 275.4),மதுரைக் கண்ணத்தனார் (நற்றிணை 351.1), பரணர் (புறநானூறு 354.6; மதுரைக்காஞ்சி 603; குறிஞ்சிப்பாட்டு 223), ஓரம்போகியார் (ஐங்குறுநூறு : 66.4) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
பெரிய நகரத்தைப் போன்று தோற்றத்தாலும் அமைப்பாலும் உள்ளடக்கங்களாலும் சிறப்பாகவும் செழிப்பாகவும் உள்ள மாளிகைகளைச் செழுநகர் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
புலவர் நக்கீரர்
பெரும்பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன
செழு நகர் (அகநானூறு : 205.11-13) என்கிறார்.
தழை செறிந்த புன்னைகளை உடைய செழிப்பான மாடமாளிகையைப் புலவர் கல்லாடனார்
துதைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின் (புறநானூறு :391.17) என்கிறார்.
எனவே, இன்றைக்கு உள்ளவாறான செல்வ வளத்தை உணர்த்தும் வகையில் வீடுகள் சிறப்பாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அமைக்கப்பட்டுள்ளன என்பது தமிழர்களின் கட்டடக்கலைச்சிறப்பை உணர்த்துகின்றது அல்லவா?

Friday, April 15, 2011

andre' sonnargal 44 - type of buildings 6 :அன்றே சொன்னார்கள் 44 - கட்டட வகைகள் 6

அன்றே  சொன்னார்கள் 44 :

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 15, 2011


நகரங்கள் போல் பெரிதாக அமைந்த மாளிகைகளை நகர் என்றே பழந்தமிழர் குறிப்பிட்டள்ளதைக் கண்டோம். புலவர்கள், நகரங்களைப்பற்றிக் குறிப்பிடும் பொழுதே நகரங்களில் உள்ள கட்டடங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர். மாளிகைகள் பற்றிக் குறிப்பிடும் பொழுதே அவற்றின் உயரம், அகலம், காவல், வளமை முதலான சிறப்புகளை உணர்த்த அவர்கள் தவறவில்லை.
உயர்ந்த மேல்நிலைகளை உடைய பெரிய மனை நெடுநிலை வியல் நகர் எனச் சொல்லப்பட்டுள்ளது. புலவர் மதுரைச் சுள்ளம்போதனார்,
வியல் நகர் (நற்றிணை: 215.4) என அகன்ற மாளிகையைக்
குறிப்பிடுகிறார்.    எங்கள் தந்தையால்  பாதுகாக்கப்படும் காவலை உடைய அகன்ற மாளிகை எனத் தலைவி கூறுவதாகப் புலவர் உக்கிரப் பெருவழுதி
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர் (நற்றிணை : 98.8) எனக்
குறிப்பிடுகிறார்.

புலவர் மாமூலனார் (அகநானூறு: 15.11) புலவர் கண்ணங் கொற்றனார், புலவர் ஆலம்பேரி சாத்தனார் (நற்றிணை : 156.2; 255. 3), புலவர் கயமனார் (நற்றிணை : 305.3), புலவர் கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் (அகநானூறு: 232.13), புலவர் மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் (அகநானூறு: 298.16), புலவர் மோசி சாத்தனார் (புறநானூறு : 272.4), புலவர் மதுரைப் பேராலவாயர், (புறநானூறு : 247.8) ஆகியோர் காவலை உடைய அகன்ற மாளிகையைக்
கடியுடை வியல் நகர் எனக் குறிப்பிடுகின்றனர்.

புலவர் ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் (அகநானூறு: 224.17), புலவர் குடவாயில் கீரத்தனார்  (அகநானூறு 315.8),  மாறோக்கத்து நப்பசலையார் (புறநானூறு :363.6) ஆகியோர், அரிய காவலுள்ள அகன்ற பெரிய மாளிகையை
அருங் கடி வியல் நகர் என்கின்றனர்; புலவர் மாமூலனார்
(அகநானூறு : 311.2)
அருங் கடிக் காப்பின் அகல் நகர் என்கிறார்.
செல்வம் மிகுந்த பெரிய மாளிகையைத்,
திருவுடை வியல் நகர் என்கிறார் நக்கீரனார் (நற்றிணை: 258.4)

புலவர் சீத்தலைச் சாத்தனார் அழகு விளங்கும் பெரிய மாளிகையைச்
சீர்கெழு வியல் நகர் (நற்றிணை : 339.6) என்கிறார்.

புலவர் மதுரைப் பேராலவாயர் முன்புறம் மணல் பரப்பி உள்ள அகன்ற பெரிய மாளிகையை
மணல் மலி வியல் நகர் (நற்றிணை : 361.6 ) என்கிறார்.
புலவர் வண்ணப்புறக் கந்தரத்தனார்  உணவுப் பொருள்கள் மிகுதியாக உள்ள காவலுடைய பெரிய மாளிகையை
அல்குபதம் மிகுத்த கடிஉடை வியல் நகர் (அகநானூறு : 49.14)
என்கிறார்.

பெருஞ்செல்வமும் மிகுந்த உணவுப் பொருளும் நிறைந்த பெரிய மாளிகையைப் புலவர்  மருதனிளநாகனார்,
பெருந்திரு நலைஇய வீங்குசோற்று அகல்மனை (கலித்தொகை 83.1)
என்றும் அகல் நகர் (கலித்தொகை 83.11; 84.13) என்றும் கூறுகின்றார்.

திருமணம் நிகழ்த்தும் அளவிற்குப் பெரிதாகிய திருமண மாளிகையைப் புலவர் விற்றூற்று மூதெயினனார்
கடி நகர் புனைந்து (அகநானூறு : 136.6) என்கிறார்.  உணவுப் பொருள் நிறைந்த (அயினிய) திருமண இல்லத்தைப் புலவர் நக்கீரர்
புது மண மகடூஉ அயினிய கடி நகர் (அகநானூறு : 141.1) என்கிறார்.

புலவர் மதுரைப் பேராலவாயார், விடியும் வரை விளக்கெரியும் வானளாவிய அகன்ற பெரிய மாளிகையை
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர் (அகநானூறு : 87.13)
என்கிறார்.

புலவர் மதுரை மருதன் இளநாகனார் (அகநானூறு: 206.11) புலவர் கயமனார்  (அகநானூறு: 397.3) ஆகியோர்,  ஓய்வில்லாமல் முழவு ஒலி கேட்கும் வண்ணம் எப்பொழுதும் விழாக்கோலம் பூண்டுள்ள  பெரிய மாளிகையை
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர் என்கின்றனர்.

புலவர் கயமனார் சிறப்பு மிகுந்த பெரிய மாளிகையைச்
சீர் கெழு வியன் நகர் (அகநானூறு : 219.1) என்கிறார்.

உயர்ந்த மாடிகளை உடைய அகலமான பெரிய மனைகள் எழுப்பப்பட்டமையைப் புலவர்
காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
உறையுநர் போகிய ஓங்குநிலை வியல்மனை (அகநானூறு:103.8) என்கிறார்.
எனவே, அகலமாகவும் பெரியதாகவும் பல மாடிகளை உடையதாகவும் தமிழ்நாட்டு மாளிகைகள் அன்றே கட்டட இலக்கணத்திற்கு இணங்கக் கட்டப்பட்டு இருந்தன என்பது தெளிவாகிறது. இன்றைய கட்டடவியல் சிறப்பு மிக்க பெருமாளிகை நாகரிகத்தை அன்றே தமிழர்கள் கண்டறிந்திருந்தனர் என்பதில் சிறிதும் ஐயமில்லை

Monday, April 11, 2011

Arasiyal Aathisuudi : அரசியல் ஆத்திசூடி


அரசியல் ஆத்திசூடி
--இலக்குவனார் திருவள்ளுவன்


1. அறநெறி தவறுவோர்க்கு வாக்கு அளிக்காதீர்!
2. ஆருயிர்த் தமிழைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்!
3. இனப் பகைவருக்கு வாக்களிக்காதீர்.
4. ஈழத் தமிழர்களை அழித்தவர்க்கு வாக்களிக்காதீர்! 
5. உண்மை பேசாதவர்க்கு வாக்களிக்காதீர் 
6. ஊழலில் வாழ்பவர்க்கு வாக்களிக்காதீர்!  
7. எளிமையை மறந்தவர்க்கு வாக்களிக்காதீர்
8. ஏய்த்துப் பிழைப்பவர்க்கு வாக்களிக்காதீர்!
 9. ஐயததிற்கு இடம் ஆனவர்களுக்கு வாக்களிக்காதீர்!
10. ஒழுக்கக் கேடர்களுக்கு வாக்களிக்காதீர்!
11.ஓய்விலே சுவை காண்பவருக்கு வாக்களிக்காதீர்! 
12. ஔவியம் (அழுக்காறு) உடையவர்க்கு வாக்களிக்காதீர்!
13. அஃகம் (முறைமை ) தவறுபவர்க்கு வாக்களிக்காதீர்!
14. கயவருக்கு வாக்களிக்காதீர்!
15.  காலம் அறிந்து உதவாதவர்க்கு வாக்களிக்காதீர்!
16. கிடைத்ததை எல்லாம் சுருட்டுபவருக்கு வாக்களிக்காதீர்!
17. கீழான செயல் புரிவோருக்கு வாக்களிக்காதீர்!
18. குற்ற மனம் கொண்டவருக்கு வாக்களிக்காதீர்!
19.   கூட்டுக் கொள்ளையருக்கு வாக்களிக்காதீர்!
20. கெடுமதி படைத்தோருக்கு வாக்களிக்காதீர்!
21. கேடு கெட்டன செய்வோருக்கு வாக்களிக்காதீர் !
22. கைச் சின்னத்திற்கு வாக்களிக்காதீர் !
23. கொடுங்கோலருக்கு வாக்களிக்காதீர் !
24. கோழைக்கு வாக்களிக்காதீர் !
25. கௌவை (துன்பம்) தருபவருக்கு வாக்களிக்காதீர் !
26. ‘ போல் வளையாதவருக்கு வாக்களிக்காதீர் !
27. சட்டத்தை மதியாதவருக்கு வாக்களிக்காதீர் !
28. சாதி வெறியருக்கு வாக்களிக்காதீர் !
29. சிங்களக் கொடுமைக்குத் துணைபுரிபவருக்கு வாக்களிக்காதீர் !
30. சீறவேண்டிய பொழுது சீறாதவருக்கு வாக்களிக்காதீர் !
31. சுரண்டி வாழ்பவருக்கு வாக்களிக்காதீர்!
32. சூதருக்கு வாக்களிக்காதீர்!
33. செய்ய வேண்டுவன செய்யாதவருக்கு வாக்களிக்காதீர் !
34. சேர்ந்தாரைக் கொல்லுபவருக்கு வாக்களிக்காதீர்!
35. ‘சை என இகழ வேண்டியவருக்கு வாக்களிக்காதீர் !
36. சொல்தவறுவோர்க்கு வாக்களிக்காதீர்!
37. சோம்பேறிகளுக்கு வாக்களிக்காதீர் !
38. ஞமலி (நாய்) போல் தன்னினத்தையே எதிர்ப்பவருக்கு
வாக்களிக்காதீர்!
39.
ஞாட்பு (போர்க்களம் ) எனச் சொல்லிக் கொலைக் களம்
ஆக்கியவருக்கு வாக்களிக்காதீர்!
40.
ஞிமிறு (தேனீ) போல் சுறுசுறுப்பாக இயங்காதவருக்கு
வாக்களிக்காதீர்!
41. ஞெகிழும் (மனம் இளகும்) இயல்புஅற்றவர்க்கு
வாக்களிக்காதீர்!
42. ஞேயம் (அன்பு) இல்லாதவர்க்கு வாக்களிக்காதீர்!
43. ஞொள்ளும் (அஞ்சும்) இயல்பினருக்கு வாக்களிக்காதீர்!
 44. தமிழ்ப்பகைவருக்கு வாக்களிக்காதீர் !
45. தாய்த்தமிழைப் பழிப்பவருக்கு வாக்களிக்காதீர் !
46. திருக்குறள் நெறி போற்றாதவருக்கு வாக்களிக்காதீர் !
47. தீந்தமிழை உயர்த்தாதவருக்கு வாக்களிக்காதீர் !
48. துன்பம் போக்காதவருக்கு வாக்களிக்காதீர் !
49. தூய தமிழைப் பேணாதவருக்கு வாக்களிக்காதீர் !
50.தெளிவில்லாதவருக்கு வாக்களிக்காதீர் !
51. தேவையைப் பெருக்கிக் கொள்பவருக்கு வாக்களிக்காதீர் !
52. தையலுக்கு (பெண்களுக்கு) இணை உரிமை அளிக்காதவருக்கு
வாக்களிக்காதீர் !
53. தொன்மைத்தமிழைச் சிதைப்பவருக்கு வாக்களிக்காதீர் !
54. தோள்கொடுத்து உதவாதவருக்கு வாக்களிக்காதீர் !
55. தௌவையைப் (வறுமையை)ப் போக்காதவருக்கு
வாக்களிக்காதீர் !
56. நற்றமிழில் பேசாதவருக்கு வாக்களிக்காதீர் !
57. நாணயம் தவறுபவருக்கு வாக்களிக்காதீர் !
58. நிதியைச் சுருட்டுவோருக்கு  வாக்களிக்காதீர் !
59. நீதி தவறுவோருக்கு வாக்களிக்காதீர் !
60. நுகர் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த
அறியாதவருக்கு வாக்களிக்காதீர் !
61. நூக்கம் (ஊசலாட்டம்) உள்ளவர்க்கு வாக்களிக்காதீர்!
62. நெஞ்சாரம் (மனத்துணிவு) இல்லாதவர்க்கு வாக்களிக்காதீர்!
63. நேர்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
64. நைச்சியம் பண்ணுவோர்க்கு வாக்களிக்காதீர்!
65. நொய்ம்மையாளருக்கு (மனத்திடம் இல்லாதவர்க்கு) 
வாக்களிக்காதீர்!
66. நோகச் செய்வோருக்கு வாக்களிக்காதீர்!

67. பகுத்தறிவு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
68. பாடுபடாதவருக்கு வாக்களிக்காதீர்!
69. பிறன்மனை நோக்குபவர்க்கு வாக்களிக்காதீர்!
70. பீடு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
71. புலனெறி அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
72. பூச்சாளருக்கு (வெளிப்பகட்டாளருக்கு) வாக்களிக்காதீர்!
73. பெரியாரைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்!
74. பேராசையாளர்க்கு வாக்களிக்காதீர்!
75. பையச் செயல்படுநர்க்கு வாக்களிக்காதீர்!
76. பொதுமையை மறுப்பவர்க்கு வாக்களிக்காதீர்!
77. போக்கிலிகளுக்கு வாக்களிக்காதீர்!
78. மக்கள்நேயம் அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
79. மாண்பற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
80. மிண்டுநர்க்கு (மதத்தால் பிழைப்பவர்க்கு) வாக்களிக்காதீர்!
81. மீச்செலவு (அடங்காச் செலவு) செய்யுநர்க்கு வாக்களிக்காதீர்!
82. முரடர்க்கு வாக்களிக்காதீர்!
83. மூடர்க்கு வாக்களிக்காதீர்!
84. மென்சொல் அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
85. மேன்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
86. மையலில் திரிபவர்க்கு வாக்களிக்காதீர்!
87. மொழிக்கொலைஞர்க்கு வாக்களிக்காதீர்!
88. மோசடியாளர்க்கு வாக்களிக்காதீர்!
89. யாகம் செய்பவர்க்கு வாக்களிக்காதீர்!
90. வஞ்சகர்க்கு வாக்களிக்காதீர்!
91. வாய்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
92. விலைக்குக் கேட்பவர்க்கு வாக்களிக்காதீர்!
93. வீறு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
94. வெய்யனுக்கு(க் கொடியவனுக்கு) வாக்களிக்காதீர்!
95. வேடதாரிகளுக்கு வாக்களிக்காதீர்!
96. வையகம் சுரண்டுநர்க்கு வாக்களிக்காதீர்!
97.   அன்னைத் தமிழைப் போற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
98     ஆரா அருந்தமிழை வளர்ப்பவர்க்கு வாக்களிப்பீர்!
99.    இன்றமிழை  இயம்புநர்க்கு வாக்களிப்பீர்!
100.         ஈடில்லாத் தமிழை எழுதுநர்க்கு வாக்களிப்பீர்!
101.         உயர்வளத்தமிழை உரைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
102.         ஊடகத்தில் தமிழைக் காப்பவர்க்கு வாக்களிப்பீர்!
103.         என்றும் தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்!.
104.         ஏழிசைத் தமிழை ஏத்துவோர்க்கு வாக்களிப்பீர்!
105.         ஐந்திரத் தமிழை அணிசெய்வோர்க்கு வாக்களிப்பீர்!
106.         ஒண்டமிழை முன்னேற்றுவோர்க்கு வாக்களிப்பீர்!
107.         ஓங்கல் தமிழை ஓதுவோர்க்கு வாக்களிப்பீர்!
108.         ஔவைத் தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்!
109.         கன்னித்தமிழைப் படிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
110.         காவியத் தமிழைச் செழிப்பாக்குநர்க்கு வாக்களிப்பீர்!
111.         கிளைமிகு தமிழைக் கிளப்பவர்க்கு வாக்களிப்பீர்! (கிளப்பவர்
- எழுச்சியுடன் உரைப்பவர்)
112.         கீழ்க்கணக்குத் தமிழை வழங்குநர்க்கு வாக்களிப்பீர்!
113.         குன்றாத் தமிழைக் குயிற்றுநர்க்கு வாக்களிப்பீர்! (குயிற்றுநர்
- மனத்தில் பதியும்படிச் சொல்லுபவர்)
114.         கூத்துத் தமிழை அளிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
115.         கெடுதி அறியாத் தமிழை விளம்புநர்க்கு வாக்களிப்பீர்!
116.         கேடிலித் தமிழைப் பகறுவோர்க்கு வாக்களிப்பீர்!
117.         கைவளத் தமிழைக் கட்டுரைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
118.         கொற்றவர் தமிழைச் சொற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
119.         கோலோச்சும் தமிழை ஓயாதுரைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
120.         சங்கத் தமிழைச் செப்புநர்க்கு வாக்களிப்பீர்!
121.         சான்றோர் தமிழைச் சாற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
122.         சிறந்த தமிழைப் பேசுநர்க்கு வாக்களிப்பீர்!
123.         சீர்மிகுந்த தமிழைப் பரவுநர்க்கு வாக்களிப்பீர்! (பரவுநர்
துதிப்பவர்)
124.         சுடரொளித் தமிழை ஏத்துவோர்க்கு வாக்களிப்பீர்!
125.         சூரியத் தமிழைச் சூழவைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
126.         செந்தமிழைப் பரப்புநர்க்கு வாக்களிப்பீர்!
127.         சேமத் தமிழைச் செவியறிவுறுத்துநர்க்கு வாக்களிப்பீர்!
128.         சொல்லார் தமிழைச் சொல்லுநர்க்கு வாக்களிப்பீர்!
129.         சோர்வறு தமிழை நலமாக்குநர்க்கு வாக்களிப்பீர்!
130.         ஞாலத்தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்
131.         தண்டமிழைத் தழைக்கச்செய்யுநருக்கு வாக்களிப்பீர்!
132.         தாய்த்தமிழைத் தருநர்க்கு வாக்களிப்பீர்!
133.         திருநெறிய தமிழைத் திரட்டுநர்க்கு வாக்களிப்பீர்!
134.         தீந்தமிழைத் துதிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
135.         துய்ய தமிழைத் துளங்கச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்!
136.         தூய தமிழைத் துலங்கச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்!
137.         தெய்வத்தமிழைத் துதிப்போர்க்கு வாக்களிப்பீர்!
138.         தேனேரார் தமிழை   ஒளிரச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்!
139.         தொல்காப்பியத் தமிழை ஒல்காப்புகழ்ஆக்குநர்க்கு
வாக்களிப்பீர்!
140.         தோலா (ஈடழியா)த் தமிழை நிலைக்கச் செய்நர்க்கு
வாக்களிப்பீர்!
141.         நற்றமிழைப் பேசுநர்க்கு வாக்களிப்பீர்!
142.         நானிலத் தமிழை நாடுநர்க்கு வாக்களிப்பீர்!
143.         நிகரில்லன தமிழை முன்னேற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
144.         நீடுபுகழ்த் தமிழை முழங்குநர்க்கு வாக்களிப்பீர்!
145.         நுட்பத் தமிழை வளர்க்குநர்க்கு வாக்களிப்பீர்!
146.         நூல் நிறை தமிழை நுவலுநர்க்கு வாக்களிப்பீர்!
147.         நெறியாளர் தமிழைப் பாராட்டுநர்க்கு வாக்களிப்பீர்!
148.         நேயத் தமிழைத் துய்ப்போர்க்கு வாக்களிப்பீர்!
149.         பரவிய தமிழைப் பரப்புநர்க்கு வாக்களிப்பீர்!
150.         பாரினார் தமிழைப் பாதுகாப்பவர்க்கு வாக்களிப்பீர்!
151.         புகழ் நின்ற தமிழைப் புகழ்நர்க்கு வாக்களிப்பீர்!
152.         பூந்தமிழைப் புகலுநர்க்கு வாக்களிப்பீர்!
153.         பெருமிதத் தமிழை எய்வோருக்கு வாக்களிப்பீர்!
154.         பேரின்பத் தமிழைச் சேர்ந்திசைப்போர்க்கு வாக்களிப்பீர்!
155.         பைந்தமிழைப் பாடுநர்க்கு வாக்களிப்பீர்!
156.         பொய்யாத்தமிழைப் படிக்குநர்க்கு வாக்களிப்பீர்!
157.         போற்றித் தமிழைப் போற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
158.         மருவிய தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்!
159.         மாண்புறு தமிழை மலரச் செய்நர்க்கு வாக்களிப்பீர்!
160.         மிக்கிளமைத் தமிழை மிழற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
161.         மீக்கூர் (மேம்படும்)தமிழை மேம்படுத்துநர்க்கு வாக்களிப்பீர்!
162.         முத்தமிழை முழங்குநர்க்கு வாக்களிப்பீர்!
163.         மூவாத் தமிழைப் பயிற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
164.         மேற்கணக்குத் தமிழை ஆய்வோர்க்கு வாக்களிப்பீர்!
165.         வண்டமிழை வளர்க்குநர்க்கு வாக்களிப்பீர்!
166.         வாடாத் தமிழை வாசிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
167.         வினைநலத் தமிழை வியப்பவர்க்கு வாக்களிப்பீர்!
168.         வீறார் தமிழை விரும்புநர்க்கு வாக்களிப்பீர்!
169.         வெற்றித்தமிழைப் பூரிக்கச் செய்நர்க்கு வாக்களிப்பீர்!
170.         வேந்தர் தமிழை ஏந்துநர்க்கு வாக்களிப்பீர்!
171.         வையத் தமிழை வணங்குநர்க்கு வாக்களிப்பீர்!

Followers

Blog Archive