Sunday, April 24, 2022

மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவில் தமிழறிஞர்களுக்கு இடந் தருக! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவில்

 தமிழறிஞர்களுக்கு இடந் தருக!

கல்வித்துறை என்பது மாநில அரசுகளின் வரம்பிற்குட்பட்டது. அதனைப் பொதுப் பிரிவாக மாற்றிய ஒன்றிய அரசு நாளடைவில் ஒன்றிய அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டதாக மாற்றி வருகிறது. இதனால் தேசிய மொழிகள், தேசிய இனங்கள் பாதிப்புறும் வண்ணம் கல்விக்கொள்கையை வகுத்துக் கொண்டு புதிய கல்விக்கொள்கை என்ற பெயரிலும் வேறு பெயர்களிலும் மாநில மக்களின் கல்விகளில் அதிகாரம் செலுத்தி அல்லல் படுத்தி வருகிறது. எனவே, இச்சூழலில் தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கைக் குழு என ஒன்றை அமைத்திருப்பது பாராட்டிற்குரியது. இத்தகைய செயற்பாடு மாநிலத் தன்னாட்சிக்கு வலு சேர்ப்பதாகவும் அமைகின்றது.

அந்தவகையில், கடந்த 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள், வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்” என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக,  முதல்வர் மு.க.தாலின், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்ந்து கருத்துரைக்க, மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவை அமைத்து தலைவர் உறுப்பினர்கள் விவரங்களை அறிவித்துள்ளார்.

 தில்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதிமான் த.முருகேசன் தலைமையில் இக்குழு அமைந்துள்ளது. இக்குழுவின் வல்லுநர்கள் குறித்த எதிர்மறைக் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையை வகுக்கும் குழுவில் தமிழறிஞர்களுக்கு இடம்தர வேண்டுமல்லவா?

தமிழர்க்கு எல்லாம் தமிழாக இருக்கும் நாள்தான் தமிழர் முன்னேறும் நாளாகும்; முழு உரிமை பெற்ற நாளாகும் என்று தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் கூறுகிறார். அதற்குக் கல்விப்பொறுப்பு முழுவதும் மாநில அரசின் பொறுப்பில் – தமிழ்நாட்டரசின் பொறுப்பில் இருக்க வேண்டும். அதனை ஆற்றுப்படுத்துநர், தமிழ்நலம் நாடும் தமிழாய்ந்த தமிழறிஞர்களாக இருக்க வேண்டும். தமிழ்க்கல்வியையும் தமிழ்வழிக்கல்வியையும் செம்மையாகச் செயல்படுத்த வழி வகை காண்பவர்களாக இருக்க வேண்டும்.  எனவே, கல்விக்குழுவில் தமிழறிஞர்கள் இடம் பெற வேண்டும்.

பொதுவாக எந்தக்குழுவை அமைத்தாலும் அதில் தமிழாய்ந்த தமிழ்ப்பற்று மிக்க தமிழறிஞர்களுக்கு இடம் தர வேண்டும். அதுபோல் தமிழகத்தின் கல்விக்கொள்கையை வலியுறுத்தும் இக்குழுவில் தமிழறிஞர்கள் இருவரேனும் இடம் பெற வேண்டும். பள்ளிக்கல்வி வல்லுநராக ஒருவரும் உயர்கல்வி வல்லுநராக மற்றொருவரும் இருத்தல் சிறப்பாகும்.

தமிழ் படித்து விட்டுத் தமிழால் வயிறு வளர்த்துக் கொண்டு தமிழுக்கு எதிராகச் செயல்படும் பலர் தமிழறிஞர்கள் என்ற பெயரில் உலா வருகின்றனர். தமிழன்னைக்குக் கேடு விளைவிக்கும் இவர்களுக்கு விளம்பரப் புகழ் அடிப்படையில் முதன்மை கொடுக்கக் கூடாது. பேச்சுவழக்கையே பரப்பித் தமிழைச் சிதைக்கும் சிறுகதை எழுத்தாளர்களை அவர்கள் தமிழில் எழுதுகிறார்கள் என்பதற்காகவே தமிழறிஞர்களாகக் கருதுவதும் தவறு. வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் அவர்களைப் பாராட்டலாம். ஆனால் இவர்களைத் தமிழாய்ந்த தமிழ்ப்பற்று மிக்க தமிழறிஞர்கள் வரிசையில் சேர்ப்பது தவறு. தமிழறிஞர்களில்  தமிழுணர்வு மிக்க கதைப்படைப்பாளர்களும் உள்ளனர். அவர்களைக் குறை சொல்லவில்லை. சிதைவு வழக்கிற்கும் கொச்சை வழக்கிற்கும் உயிர் கொடுத்துத் தமிழை அழிப்பவர்களைத்தான் கூறுகிறோம்.  எனவேதான், தமிழ்ப்பற்று மிக்க தமிழறிஞர்கள் எனக் குறிப்பிட்டுள்ளோம்.  சிறப்பான தமிழ்வழிக் கல்விக்கும் தமிழ்ப் பாடத்திட்டத்திற்கும் பிற துறைத் தமிழ்வளர்ச்சிக்கும் இவர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.

நம் நாட்டில் வாய்ப்பும் வசதியும் கிடைப்பின் உலகப்போட்டிகளில் வாகைசூடும் இளைஞர்கள் உள்ளனர். எனவே, பள்ளிநிலையிலேயே அத்தகையவர்களை அடையாளங்கண்டு ஊக்கப்படுத்தும் வகையில் கல்விக்கொள்கை இருத்தல் வேண்டும். எனவே, உடற்கல்வி வல்லுநர் ஒருவரையும் குழுவில் சேர்க்க வேண்டும்.

பார்வையற்றோர் பள்ளி, காது கேளாதோர் பள்ளி முதலிய சிறப்புப்பள்ளிகளில் தமிழ் வழிக்கு இடம் தராத வகையில் கல்வி உள்ளது. இக்கல்விக்கொள்கைக் குழு, சிறப்புப்பள்ளிகளிலும் தமிழ் வழிக்கல்விக்கும் தமிழுக்கும் முதன்மை அளிக்கப் பரிந்துரை அளிக்க வேண்டும். சிறப்புப்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டங்கள், மேனிலைப் பட்டங்களும் தமிழ் வழி இருக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போது ஒன்றியப் பட்டியலில் 100, மாநிலப்பட்டியலில் 61,  பொதுப்பட்டியலில் 52 துறைகள் உள்ளன. இவை மாற்றப்பட வேண்டும். ஒன்றியப் பட்டியலில் பாதுகாப்பு, அஞ்சல் துறை முதலிய 10 துறைகள் இருந்தால் போதும். வெளியுறவு என்பது ஒன்றியப்பட்டியலில் இருப்பதால்தான் ஈழம் முதலிய நாடுகளில் தமிழர்கள் இன்னலுறும் பொழுது, நம் கருத்தைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. எனவே, அதனைப் பொதுப்பட்டியலில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதிகாரப் பட்டியல்கள் சீரமைக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறையில் (1975 – 1977) இருந்தபோது, கல்வித்துறை மாநிலப்பட்டியலில் இருந்து பிடுங்கப்பட்டுப் பொதுப்பட்டியலாக மாற்றப்பட்டது. இதனை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதைத் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே தத்தம் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தன. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எழிலன், தனது ‘அறம் செய்ய விரும்பு’ என்னும் தொண்டு நிறுவனம் மூலம் அரசியல் யாப்புப் பிரிவு 57 (42-ஆவது சட்டத் திருத்தம்) செல்லாது என்று அறிவித்து, மாநிலப்பட்டியலுக்குக் கல்வித்துறையை மாற்ற வேண்டும் என்று பொதுநல வழக்கும் கடந்த ஆண்டு தொடுத்துள்ளார்.

 தேசிய அளவில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் முதல்வர் மு.க.தாலின், அனைத்து மாநில அரசுகளும் இவ்வழக்கில் இணைய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வித்துறையை மாநிலப்பட்டியலுக்கே மாற்றச் செய்ய வேண்டும்.

மாநிலக்கல்விக் கொள்கைக் குழுவும் இது குறித்து உரிய பரிந்துரை அளிக்க வேண்டும். ஒன்றிய அரசின் பிடியில் அதிகாரத்தைக் கொடுத்து விட்டு இக்குழுவினர் என்னதான் பரிந்துரைத்தாலும் பயனில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மழலை நிலையிலிருந்தே தமிழ் அறமொழிகளைக் கற்பித்தல்

தமிழ் மரபு விளையாட்டுகளிலும் ஈடுபடச் செய்தல்

தமிழ் மரபுக் கலைகளில் பயிற்சி அளித்தல்

தமிழில் பிழையின்றி எழுதவும் பேசவும் பயிற்சி அளித்தல்

பிறமொழிக்கலப்பின்றித் தமிழில் பேசவும் எழுதவும் கற்பித்தல்

பிற மொழி பயிலுநர்க்கு அவரவர் மொழி வாயிலாகத் தமிழ், தமிழர், தமிழ்நாட்டுச் சிறப்பை அறியச் செய்தல்

உயர்நிலைகளில் பன்மொழி கற்பித்தல்

முதலியவற்றை நடைமுறைப்படுத்தும் வகையில் கல்வி அமைவதற்கான பரிந்துரைகளை அளிக்குமாறு இக்குழுவிற்கு அறிவுறுத்த வேண்டும். இல்லையேல் மாநிலக்கல்விக்கல்விக் கொள்கை அமைத்துப் பயனில்லை.

– இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல, சித்திரை 11, 2053 / 24.04.2022




Wednesday, April 6, 2022

மாதிரிப் பள்ளிகள் தமிழ்வழிப் பள்ளிகளாக அமையட்டும்!, இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




சிறப்புக் கட்டுரை: மாதிரிப் பள்ளிகள்

தமிழ்வழிப் பள்ளிகளாக அமையட்டும்!

மின்னம்பலம்

மாதிரிப் பள்ளிகள் அமைக்க இருப்பது குறித்து அண்மையில் தமிழக முதல்வர் மு.க.தாலின் புதுதில்லியில் பேசியுள்ளார். புது தில்லி அரசின் மாதிரிப் பள்ளிகளையும் தமிழக முதல்வர் பார்வையிட்டுள்ளார். மத்திய அரசின் பள்ளிகள்போலும் நவோதயா பள்ளிகள் போலும் மாவட்டந்தோறும் சிறப்பான முன்முறைப்பள்ளிகளை நன்முறையில் அமைக்க வேண்டும் என நாம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். எனவே, முதல்வரின் இப்பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டுக் கல்வியகங்களில் இப்போதைய முறையிலான அயல்மொழிக்கல்வி முறை நிறுத்தப்பட வேண்டும். 6 ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் கற்பிக்கப்பட்டால் போதுமானது. 3 ஆவது மொழி என்பது பிற மொழியினருக்கு மட்டுமே இருக்க வேண்டும். எனவே, கல்வி நிலையங்களில் எந்த வகையிலும் இந்திவடமொழி திணிப்பு இல்லாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும்

நவோதயா பள்ளிகளுக்குரிய முழுத் தொகையையும் தமிழக அரசே பெற்று முழுமையான தரமான தமிழ்வழிக்கல்வி நிலையங்களாகச் செயல்பட ஆவன செய்ய வேண்டும்” என்றும் நாம் முன்னர்க் கூறியதை நினைவில் கொள்ள வேண்டுகிறோம். கடந்த ஆட்சியில் கூறிய கருத்துகள்தாம் இவை. எனினும் எதையும் திட்டமிட்டு மக்கள் நலனில் கருத்து செலுத்தி ஆட்சி செய்யும் முதல்வர் மு..தாலின் தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்க மாதிரிப் பள்ளிகளை அடித்தளமாகக் கொண்டு கல்விப்பணியாற்ற வேண்டுகிறோம்.

மாதிரிப் பள்ளி என்பது கட்டமைப்பிலும் உயர்ந்து இருக்க வேண்டும்; கல்வி முறையிலும் சிறந்து இருக்க வேண்டும்.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் – ஆங்கிலேயர் வெளியேறும் வரை – தமிழ்நாட்டின் தொடக்கக்கல்வி எவ்வாறு இருந்தது என்பதற்கு இரண்டு சான்று.

செக்கிழுத்த செம்மல், தமிழறிஞர் ..சிதம்பரம் அவர்கள் தன் வாழ்க்கை வரலாற்றில்,

அறிவரிச் சுவடி ஆத்தி சூடி

செறிவுறக் கேட்டுச் சிந்தையுட் கொண்டேன் ;

எண்ணின் சுவடி எழுதும் சட்டம்

கண்ணுறக் கொண்டு கருத்தொடு பழகினேன்

உலக நீதி ஒழுக்க இயல்பு

பலமுறை கேட்டுப் பண்பொடு பயின்றேன்

கொன்றை வேந்தன்குழியின் பெருக்கம்,,

வென்றி வேற்கைவெண்பா மூதுரை

இயற்றிய ஆன்றோர் எண்ணிய பொருளுடன்

பயிற்றிய வண்ணம் பண்புறக் கேட்டேன்.

எனக் குறிப்பிடுகிறார்.

இவற்றுள், ‘குழியின் பெருக்கம்’ என்பது ‘குழிப்பெருக்கம்’ எனும் கணித நூல்; ‘வென்றிவேற்கை’ என்பது ‘வெற்றிவேற்கை; வெண்பா’ என்பது ‘நளவெண்பா’.

கல்வி என்பது விளையாட்டுக் கல்வியும் இணைந்ததே. தான் விளையாடிய விளையாட்டுகள் குறித்துப் பின்வருமாறு தமிழறிஞர் வ.உ.சிதம்பரம் (பிள்ளை) கூறுகிறார்.

சுவர்மேல் நடத்தல்தொன்மரம் ஏறுதல்,

கவண் கொடுங் கைகொடுங் கல்லெறி பழகுதல்,

கண்ணினைப் பொத்திக் காட்டில் விடுதல்,

எண்ணினைச் சுவாசம் இழக்காதி யம்பல்,

குதிவட் டாடுதல்கோலி தெறித்தல்,

குதிரைமீ தூர்தல்கோலேறி நடத்தல்,

காற்றிரி எறிதல்கான்மாறி யோடுதல்,

மேற்றிரி பந்தின் விளையாட்டுப்பற்பல.

சடுகுடுகிளியந் தட்டுபல்லி,

தெடுகடு மோட்டம்நீர்விளை யாட்டம்,

கம்பு சுற்றுதல்கத்தி வீசுதல்,

தம்மினை அடக்கித் தலைகீழ் நடத்தல்,

கசாத்துபசுக்கிகலப்புறு குசுத்தி,

நிசத்துச் சண்டையில் நீந்தும் முறைகள்,

தாயம்சோவிசதுரங்கம்சொக்கட்டான்,

காயிதச் சீட்டுக் கரந்திருந் தாடுதல்,

வெடிகொடு சுடுதல்வில்கொடு தெறித்தல்,

அடிபிடி சண்டை அளவில புரிந்தேன்.

என்கிறார். இவற்றுள் தம்மினை அடக்குதல் என்றால் மூச்சினை அடக்குதல். இவையெல்லாம் வலிமையான உடல் வளத்திற்கும் அதன் வழி மன நலத்திற்கும் கல்வி வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைவன.

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தம்முடைய ‘என் வாழ்க்கைப்போர்’ தன்வரலாற்று நூலில், தம் 7 ஆம் அகவைக்குள்ளாகவே ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நீதிசாரம், கிருட்டிணன் தூது, நிகண்டுகள், கீழ்வாய் இலக்கம், மேல்வாய் இலக்கம், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என அனைத்தும் கற்றதைக் குறிப்பிட்டுள்ளார். மாலையில் விளையாட்டு, இரவில் நாடகப்பயிற்சி, கலைநிகழ்ச்சிகள், வழிபாட்டுப் பாடல் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்பட்டமையால் தம் அகவைக்குரிய முழுமையான கல்வியைப் பெற்றதையும் தெரிவிக்கிறார்.

இப்பொழுதெல்லாம் முதுகலையில் கூட முழு நூல் எதையும் படிப்பதில்லை. எல்லாம் அரைகுறைப்படிப்புதான். சிறப்பான கல்வியை அரைகுறைப்படிப்பு எவ்வாறு தரும்?

மாதிரிப்பள்ளிகள் முழுமையான நூற்கல்வியையும், விளையாட்டு, கலைக்கல்வியையும் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

பத்து அகவை வரை எழுத்துக்கல்விக்கு முதன்மை அளிக்காமல் கேள்வியறிவு மூலம் வாய்மொழிக் கல்விக்கு முதன்மை அளிக்க வேண்டும் என்பது பேரா.இலக்குவனார் கருத்து. கல்வி உளவியலாளர்களும் இவ்வாறுதான் வலியுறுத்துகின்றனர். எனவே, மாதிரிப்பள்ளிகளில் நாமும் மனப்பயிற்சியை வளர்த்தெடுக்கும் கல்வி முறையால் அறக்கருத்துகளைப் பிள்ளைகளுக்கு ஊட்டுவதன் மூலம் நல்ல தலைமுறையினரை உருவாக்க இயலும். மனப்பயிற்சிக் கல்வி என்பது படைப்புத் திறனை வளர்க்கும் தற்சிந்தனைக் கல்வியாக மாறவேண்டும். அதற்கு மாதிரிப்பள்ளிகள் வாய்ப்பளிக்க வேண்டும்.

“தமிழ்மொழிக்கல்விக்கும் தமிழ் வழிக் கல்விக்கும் முத்தமிழ்ப்போர்வாள் பேரா.சி.இலக்குவனார் முழக்கத்திற்கு முதல்வர் மு.க.தாலின் செவி மடுக்க வேண்டும். முந்தைய ஆட்சியாளர்கள் வழியில் செல்லாமல், சிறப்பாகப் பணியாற்றி வரும் அவர், தமிழ்நாட்டில் எல்லாருக்கும் தமிழ்க்கல்வியும் தமிழ் வழிக் கல்வியும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். தேவைக்கேற்ப அயல்மொழியினருக்கு மட்டும் அயல்மொழிக் கல்வியை அளித்தால் போதுமானது. அதுபோல் தமிழர்க்கு உயர்கல்வியில் அயல்மொழி கற்பதற்கான வாய்ப்பைத் தந்தால் போதுமானது ‘என்பதை நினைவூட்டித் தமிழ்வழிக்கல்வியைமட்டுமே மாதிரிப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழ்வழிக்கல்விக்காகப் பல போராட்டக்களங்களைக் கண்ட பேரா.சி.இலக்குவனார் சிறைவாழ்க்கையையும் மேற்கொண்டார். தமிழ் நாட்டில் உலகம் போற்றும் அறிவியல் அறிஞர்களோ பொருளியல் வல்லுநர்களோ தோன்றாமைக்குக் காரணம் என்ன என வினா தொடுக்கிறார்; அவர், நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப் படாத காரணத்தினாலேயே “பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளோம். ஆன்ற அறிவும் ஆள்வினையும் அற்றுள்ளோம். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடைய நாம், இரு நூறாண்டுகட்குக் குறைந்த வரலாற்றினுடைய நாடுகளின் நல்லன்பை நாடி உதவி பெற வேண்டிய நிலையில் உள்ளோம். ” [குறள்நெறி (மலர் 2 இதழ் 8): சித்திரை 19, 1996: 1.05.1965]. என்று, எல்லா நிலையிலும் தமிழ்வழிக்கல்வி வேண்டும் என வலியுறுத்துகிறார்.

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வலியுறுத்தும் பின்வரும் கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டரசு பின்பற்ற வேண்டும்.

  1. மழலை நிலையில் திருக்குறளையும் ஆத்திசூடி முதலான பிற அற நூல்களையும் கற்பிக்க வேண்டும்.
  2. மழலை நிலையிலேய தமிழர் விளையாட்டுகளிலும் தமிழ்க்கலைகளிலும் பயிற்சி அளிக்க வேண்டும்.
  3. தமிழ்நாட்டில் உயர்நிலைப்பள்ளி வரை தமிழ் மட்டுமே மொழிப்பாடமாக இருத்தல் வேண்டும்.
  4. கல்வியகங்களின் எல்லா நிலைகளிலும் ஒரே நேரத்தில் தமிழ்வழிக்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  5. தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் தமிழ்வழிப்படித்தவர்களையே அமர்த்தல் வேண்டும்.
  6. பட்ட வகுப்புகளில் திருக்குறளுக்கெனத் தனித்தாள் இருத்தல் வேண்டும்.
  7. தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறளை அனைவரும் அறியும் வகையில் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்.

இவற்றின் அடிப்படையில் மாதிரிப் பள்ளிகளைத் தமிழ்ப்பால் ஊட்டும் தாய்த் தமிழ்ப் பள்ளிகளாக அமைத்தல் வேண்டும். இப்போது நடந்துவரும் தாய்த் தமிழ்ப்பள்ளிகள் கட்டமைப்பில் சிறந்து விளங்க அரசு உதவி புரிதல் வேண்டும்.

– இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம், பங்குனி 23, 2053 / 06.04.2022

Friday, April 1, 2022

இந்தி கலந்து எழுதுவோரை இருட்சிறையில் தள்ளிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




இந்தி கலந்து எழுதுவோரை

இருட்சிறையில் தள்ளிடுக!

 “சமையல் குறிப்பாளர்களைத் தூக்கிலிடுக” என்று எழுத எண்ணினேன். அத்தகைய கடுஞ்சினத்திற்குக் காரணம் சமையல் குறிப்பு என்ற பெயரில் சமையல் பொருள்களை எல்லாம் இந்திச் சொற்களாலேயே குறிப்பிடுகின்றனர்.

. . . . . . . . . . . . . . . . . .

எடுத்துக் காட்டிற்குச் சில குறிப்புகளைப் பார்ப்போம்.

“சுகர் பேசண்ட்சு” 

“முளைத்த கிராம்சு, பச்சை மூங் பருப்பு” 

“முளைத்த மேத்தி முளைத்த கிராம்சு”, 

“முளைத்த மேத்தி ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்திருப்பதால், ஃப்ரீ ரேடிக்கல்சு உருவாவதைத் தடுத்து”

தொடர்ச்சியைக் காணத்

தளத்திற்குச் செல்க.

(என்ன வேண்டும் ?)

http://ennavendum.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d/indhi-kalanthu-ezhthvorai-irutchiraiyil-iduka/ 

 இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive