Tuesday, December 25, 2018

அமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

அமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை

கட்சியினரைக் குழப்புவதற்காகவோ அப்படிப்பட்ட எண்ணத்தை விதைக்கவோ அமமுகவும் அதிமுகவும் இணைய இருப்பதாகச் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் அமமுக இணைந்தால் அதிலுள்ளவர்கள் கரைந்து காணாமல் போவார்கள். அமமுகவில் அதிமுக இணைவது என்பது தாய்க்கழகத்திற்கு இழுக்கு.
  இணைந்தாலும் விரும்பா மற்றோர் அணி உருவாகலாம். ஆனால் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்.
சசிகலாவையே பொதுச்செயலராக ஏற்பதாக இருந்தால் ஒரே கட்சி என்ற பெயர் கிட்டும்.
பாசகவின் அதிமுக அழிப்பு முயற்சிகள் தோல்வியுற்றதாலும் பொதுத்தேர்தல்களில் மண்ணைக் கெளவி வருவதாலும் தன் அதிகார வலிமையைக் கொண்டு அதிமுகவை இணைக்கும் நாடகத்தை அரங்கேற்ற நினைக்கிறது. அதிமுகவை அதன் போக்கிலேயே விடாமல் தன் கைப்பாவையாக ஆக்கியும் எண்ணம் ஈடேறாததால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிகரமான தோல்வியையாவது சந்திக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவின் ஈரணிகளையும் ஆட்டுவிக்க முயல்கிறது.
முந்தைய நொடி வரை எதிர்த்தவரை அடுத்த நொடியில் ஆதரிப்பதும் ஆதரித்தவரை எதிர்ப்பதும் அரசியலில் வெட்கங் கெட்ட நடைமுறை ஆகிவிட்டது. எனவே, இன்னின்னாரைத் தவிர பிறரைச் சேர்த்துக் கொள்வோம் என்பதுபோன்ற பேச்சுகள் இணைப்பின் பொழுது காணாமல் போய்விடும். ஆனால் அவ்வாறு இணைப்பது என்பது எதிர்பார்த்த பயன் தராது.
செயலலிதா மறைந்ததும் கட்சியில் இயல்பான பிளவு ஏற்படவில்லை. பாசகவின் பொம்மலாட்டத்தால்தான் பன்னீரின் ‘தருமயுத்தம்’ என்னும் கேலிக்கூத்து, சசிகலா பக்கம் இருந்த ஒவ்வொரு பதவியாளர்களும் எடப்பாடிக்கு ஆதரவாகக் கட்டாயமாகக் கொண்ட கட்டாயச் சூழல் ஏற்பட்டன. ஆனால், பாசகவின் நோக்கம் நிறைவேறாததால் தினகரன் பக்கம் மட்டும் சாய்ந்தால் தோல்வி வெளிப்படையாகத் தெரிந்து விடும் என்பதால் இணைப்பு நாடகம் நடத்த முயல்கிறது. தினகரன் திமுக உள்ள பேராயக்கட்சிக் /காங்.கட்சிக் கூட்டணியில் சேர முடியாது என்பதால் பாசக கூட்டணியில் சேர்த்து விடலாம் எனவும் பாசக எண்ணுகிறது.
தினகரன் பக்கம் அதிமுகவில் அவரது ஆதரவாளர்கள், இப்போதைய ஆளும் அமைப்பின்மேல் உள்ள மனக் குறைவர்கள், அதிமுகவை ஆட்டிவைக்கும் பாசகவை விரும்பாதவர்கள் உள்ளனர். பாசகவின் மேல் வெறுப்பு கொண்ட பொதுமக்களும் தினகரனை ஆதரிக்கின்றனர். 
கட்சி இணைந்த பின்னர் இதே ஆட்சி தொடர்ந்தது எனில், தினகரன் எதிர்த்த திட்டங்களைத் தொடருவார்களா? அப்படியாயின் இதனை எப்படி ஏற்க முடியும்? இல்லை எதிர்த்த திட்டங்கள் கைவிடப்படுமா? அப்படியானால் அத்தகைய திட்டங்களைச் செயல்படுத்திய அரசு எப்படி தொடரலாம்.
அதிமுக ஆட்சி மேல் மக்களில் ஒரு பகுதியினர் வெறுப்புடன் உள்ளது அனைவரும் அறிந்ததே. இத்தகையோர் தினகரன் பக்கம் உள்ளனர். ஆனால், கட்சிகள் இணைந்தால் அத்தகைய பொதுமக்களில்  பெரும் பகுதியினர் திமுக பக்கமே செல்வர்.
அதிமுகவும் அமமுகவும் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி குறித்து முடிவெடுப்பதாக அறிவித்துத் தனித்தனியே போட்டியிடுவதுதான் நல்லது. திமுக கூட்டணியில் சேராத பாசக நீங்கலான கட்சிகளை இவர்களுள் யார் தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு அதுவே வலிமை தரும்.
எச்சூழலிலும் பாசக பிடியில் இவ்விரு கட்சிகளும் சேராமல் இருப்பதே இவர்களுக்கும் நல்லது! தமிழ்நாட்டிற்கும் நல்லது!
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.(திருவள்ளுவர், திருக்குறள் 508)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல
(பின் குறிப்பு: சில திங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரை. இன்றைய சூழலில் பெரும் மாற்றம் இல்லை.)

Thursday, December 20, 2018

பேரிடர்க்கால மறுவாழ்வு: நிலையான அமைப்பு தேவை – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


பேரிடர்க்கால மறுவாழ்வு: நிலையான அமைப்பு தேவை

தமிழ் நாட்டின் கடேலார மாவட்டங்களில் கசா(கஜா) புயல் கடுமையாக வீசி மக்களின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்துவிட்டது. சரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, பாதிப்பைக் குறைத்துள்ளதாகவும் முழு வீச்சில் மறுவாழ்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரசு கூறி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஓரளவு பாராட்டினாலும், உரிய மறுவாழ்வுப் பணிகள் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.
பேரிடர்கள் என்பது இன்று நேற்று வருவன அல்ல. காலந்தோறும் ஏற்படும் இயற்கை நிகழ்வுகள்தான். இடர்கள் வரும்பொழுது எவ்வெவ்வாறு தடுக்க வேண்டும், அவற்றிலிருந்து எவ்வாறு மக்களைக் காக்க வேண்டும், இடர்கள் தரும் அழிவுகளிலிருந்து எவ்வாறு மீட்டு மறுவாழ்வு அளித்தல் வேண்டும் எனத் திட்டமிட்டு நிலையான நடவடிக்கைக் குறிப்புகளை வரையறுக்க வேண்டும். இதற்கெனப் பேரிடர்க் கால மறுவாழ்வு அமைப்பு என நிலையான ஓர் அமைப்பையும் அரசு உருவாக்க வேண்டும்.
புயல், வெள்ளம், நிலநடுக்கம், கடல்கோள்(சுனாமி)முதலான பேரழிவு நேர்ச்சிகளில், இயற்கையால் விளையும் கொடுமைகளில் இருந்து மீள இதுவரை என்னென்ன பயனுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? எத்தகைய நடவடிக்கைகள் இல்லாமல் வந்த இன்னல்கள் என்னென்ன? இனி அவற்றை எவ்வாறு தடுப்பது? எவ்வாறு அவற்றிலிருந்து மீள்வது? எனக் குறிப்புகளை உருவாக்க வேண்டும். உருவாக்கப்படும் அமைப்பு கட்சி சார்பற்ற முறையில் செயல்படும் வகையில் இருக்க வேண்டும்.
உணவு, உடை, பயன்பாட்டுப் பொருள்கள் முதலியவற்றின் சேமிப்புகள், சாலை போக்குவரத்து சரிசெய்தல், மின் இணைப்புகளைச் சரி செய்தல், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் முதலான பொது அலுவல் மனைகள், உதவகங்கள் ஆகியவற்றை இடிபாடுகள், அழிவுகளிலிருந்து மீட்டெடுத்தல், அழிவிற்குள்ளாகும் தேவைப் பொருள்களை வழங்குதல், பேரிடர்க் காலங்களில் ஏற்படும் நோய், நலக்குறைவு முதலியவற்றில் இருந்து மக்களைக் காப்பதற்கான மருத்துவ வசதிகள், மருந்துகள் முதலியவை குறித்த தெளிவான திட்டமிடல் வேண்டும்.
சாலைச் சீர்குலைவு, ஊர்மக்களுடன் தொடர்புகொள்ள இயலாமை போன்ற பல்வேறு காரணங்களால், மறுவாழ்வுப் பணிகளில் தேக்கம் ஏற்படுவது இயற்கை. இத்தகைய பேரிடர்களில் உதவும் பணிகளில் ஈடுபடுபவர்களும் தத்தம் குடும்பத்தினருக்கு இடர் ஏற்பட்டுத் துன்பத்தில் உழன்று கொண்டிருப்பர். இதனை உணராமல் நாம் பொதுவாகக் குறை கூறுவதும் தவறு.
23.12.2005 அன்று, இந்திய அரசு, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை இயற்றியது. 09.01.2006-இல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றது. இதன்அடிப்படையில், தலைமையமைச்சர் தலைமையில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority NDMA) அமைக்கப்பட்டது; அதன் கட்டுப்பாட்டில் தேசியப் பேரழிவு மீட்புப் படையும் உள்ளது. பேரிடர்க்கால மீட்புப் படை மாநிலந்தோறும் அமைக்கப்பட வேண்டும் என்று சட்டம் இருப்பினும் எந்த மாநிலமும் மீட்புப் படையை அமைக்கவில்லை. அவ்வாறிருந்தால் பேரிழப்பு காலங்களில் மக்கள் தொடர்பும் உதவி வழங்கலும் எளிமையாய் இருந்திருக்கும்.
இயற்கைப் பேரழிவுகள் மட்டுமல்லாமல், உயிரியல், வேதியல், அணுக்கதிரியக்கம் முதலான எல்லா வகைப் பேரழிவுகளின் பொழுதும், முன் நடவடிக்கைகள், விளைவுகளை எதிர்நோக்கும் வழிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு உருவாக்கபட்டதே தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம். (அணுக்கதிரியக்கம் போன்றவற்றால் ஏற்படும் அழிவுகளுக்கு மத்திய அரசே காரணமாக இருப்பதுதான் கொடுமை.)
தமிழ்நாட்டிலும் வருவாய்-பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளது. என்றாலும் மாநிலத்தில் ஏதும் பேரழிவு ஏற்பட்டால் உடனடியாக மத்திய அரசின் துயர் கணிப்புக் குழு வருவதில்லை.
வெள்ளம் வடிந்தபின் பார்வையிடல் போன்று பேரிடர் பாதிப்புகள் மறைந்த பின்னரே மத்தியக் குழு வரும். மாநில அரசு நிதி உதவி கேட்டாலும் முதலில் பத்தில் ஒரு பங்கு போல் குறைந்த அளவுதான் நிதியை விடுவிக்கும். இத்தகைய தவறான போக்கிற்கு முற்றுப்புள்ளி இட வேண்டும்.
மறுவாழ்வுப் பணிகள் என்பன உடனடியாகவும் துயரங்களைத் தணிப்பனவாகவும் இருத்தல் வேண்டும். காலங் கடந்து தரும் உதவிகளால் உரிய பயன் கிடைக்காது. ஆதலின், உடனுக்குடன் உதவிகள் வழங்கப் பெறும் வகையில் பேரிடர் மறுவாழ்வு அமைப்பு, நிதி அதிகாரம் மிக்க தன்னிறைவான அமைப்பாக இருக்க வேண்டும்.
மத்திய அரசின் சார்பாளர்களும், தொண்டுஅமைப்பினரும் பிற கட்சிகள், இயக்கத்தினரும் இவ்வமைப்பில் இருக்க வேண்டும். துயர் துடைப்பு உதவிகள் உடனே வழங்கப்படும் வகையில் அமைப்பின் அதிகாரமும் இருக்க வேண்டும்.
பேரிடர் ஆணையம் அதற்கான சட்டப்படி மாவட்ட ஆணையம் அமைத்தல் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்படவில்லை. ஆறு ஆண்டுகள் இவ்வாணையம் கூட்டப்படவேயில்லை. இந்த ஆண்டுதான்(18.10.2018) இதன்ஆறாவது கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்படியானால் இதன் செயல்பாடு எந்த அளவில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
மத்திய அரசின் உதவிகள் உரிய காலத்தில் மட்டுமல்ல, காலந்தாழ்ந்தும் முழுமையாகக் கிடைப்பதில்லை என்பதே நடைமுறை. அஃதாவது, மறுவாழ்வுப் பொருள்கள் தில்லியிலிருந்து வரவேண்டிய நடைமுறையால் காலத்தாழ்ச்சி ஏற்பட்டு உரிய காலத்தில் பயன் கிட்டாமல் போகிறது.
எனவேதான் மறுவாழ்விற்கெனத் தனியமைப்பு மாநில அளவிலும் அதன் சார்பில் மாவட்ட நிலைகளிலும் இருக்க வேண்டும். பேரிடர்க்கால மறுவாழ்விற்கெனத் தனி அமைப்பு இருப்பதன் மூலம் மட்டுமே உடனடி உதவிகளில் கருத்து செலுத்த முடியும்.
கசா(கஜா) புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் மக்கள் உயிரிழப்பு, உடைமைகள் அழிவு, வீடுகள் பிற கட்டட இடிபாடுகள், பயிர்கள் இழப்பு, கால்நடைகள் இழப்பு, உதவுநர் இருந்தாலும் உதவி கிடைப்பதற்குரிய போக்குவரத்து இன்மை போன்றவற்றால் பெரிதும் தரைமட்டமாகியுள்ளன; பிற மாவட்டங்களிலும் துன்பமே குடிகொண்டுள்ளது.
அரசு இயந்திரம் எப்படி முடுக்கிவிடப்பட்டாலும் மக்களுக்கு வேண்டிய இடர்தீர்வு உதவிகள் தேவையான அளவு, தேவையான நேரத்தில் முழுமையாகக் கிட்டவில்லை என்பதே உண்மை. இனியொரு நிலைமை இது போன்று ஏற்படாத வகையில் மறுவாழ்வுப் பணிகள் சீராகவும் சிறப்பாகவும் நடைபெற இப்பொழுதாவது பாடங்கற்று பேரிடர்க்கால மறுவாழ்வு அமைப்பை உருவாக்க அரசு முன் வரவேண்டும்.

. இலக்குவனார் திருவள்ளுவன்  
 நடுப்பக்கக் கட்டுரை ,
தினமணிதிசம்பர் 21, 2018

Saturday, December 1, 2018

வேலைநிறுத்தக் காலத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தொண்டாற்றுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

வேலைநிறுத்தக் காலத்தில்

புயல் பாதித்த பகுதிகளில் தொண்டாற்றுக!

ஆசிரிய அமைப்புகள்-அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில்  04.12.2018 முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அரசுடன் நடந்த பேச்சில் முடிவு எட்டாததால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் புயல் பாதித்த பகுதிகளிலும் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடுமையான புயல் சேதத்தால் பல மாவட்டங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமையால், எவ்வித வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடாமல், மக்கள்பணியைத் தொடர்ந்து ஆற்ற வேண்டும் என வேண்டியுள்ளார்.
நாம் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் சரியா, தவறா என்று எதுவும் கூறவில்லை. ஆனால், ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்’ என்பதுபோல் நடந்து கொள்வது சரியல்ல எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தங்கள் நலனுக்காக அவர்கள் போராட உரிமையுண்டு. ஆனால் இக்கட்டான சூழலில் அரசை வழிக்குக்கொண்டுவருவதாக எண்ணி மக்களுக்கு எதிராகச் செயல்பட்டால் மக்களின் ஆதரவு அவர்களுக்கு இல்லாமல் போகும். எனவே, வேலை நிறுத்தத்தை ஒத்தி வைத்து இயல்புநிலைக்குத் திரும்பிய பின்னர் போராடினால் மக்கள் ஆதரவும் கிட்டும்.
அலை எப்பொழுது ஓய்வது கடலில் எப்பொழுது குதிப்பது என எண்ணிப் போராட்டத்தில் உறுதியுடன் இருந்தால் மாற்று வழி ஒன்றைக் கூற விரும்புகிறோம்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடுங்கள். அதே நேரம் புயல் பாதிப்புப் பகுதிகளுக்குச் சென்று அக்காலத்தில் தொண்டாற்றுங்கள். புயல் பாதித்த பகுதிகளில் உள்ளவர்கள் மாற்றுப் பகுதிகளுக்குச் சென்று தொண்டாற்றுங்கள். வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடாமல் தத்தம் பகுதிகளிலும் பணியாற்றலாம். அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுபோலும் இருக்கும். மக்கள் நலன்களுக்கு எதிராகச் செயல்படாமல் உதவி புரிந்ததாகவும் இருக்கும்.
சப்பானில் வேலை நிறுத்தக்காலத்தில் உள்ளிருந்து உற்பத்தியைப் பெருக்கும் முறையில் ஈடுபடுவதாகச் செய்திகள் வந்துள்ளன. அதுபோல் தமிழ்நாட்டில்  ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தம் என்றால் இயல்பான பணியை நிறுத்திவிட்டு மாற்றுப்பணியில் ஈடுபட்டுத் தொண்டாற்றுவதன் மூலம் தங்கள் கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கலாம்.
இப்பொழுதே புயல் பாதிப்புப் பகுதிகளில் எல்லா இடங்களுக்கும் அதிகாரிகள் செல்ல இயலாமல் மக்கள் வருத்தத்தில் உள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அப்பகுதிகளுக்குச் செல்வதன் மூலம் மறுவாழ்வுப்பணிகளை விரைவில் ஆற்ற முடியும். மக்களின் துன்பத்தை விரைவில் தணிக்க இயலும்.
தமிழக அரசும் அரசிற்கு அடிப்படைத் தூண்களாக விளங்கும் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களை மதித்துக் குறைகளைக் கனிவுடன் கேட்டு விரைவில் நீக்க வேண்டும். அரசு முன்மாதிரியான முதலாளியாகத் திகழ வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப இவர்களின் குறைகளைப் போக்க வேண்டும்.
எனவே, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், முதல்வரின் வேண்டுகோளை ஏற்று வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும்.
அல்லது
வேலைநிறுத்தக்காலத்தில் புயல் பாதித்த இடங்களுக்குச்சென்று தொண்டாற்ற வேண்டும்
என அன்புடன் வேண்டுகிறோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Monday, November 26, 2018

தமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் சூசையப்பர் கல்லூரி-இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல

தமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் நோக்கில்

சூசையப்பர்  கல்லூரி

திருச்சிராப்பள்ளியில் உள்ள  தூய சூசையப்பர் கல்லூரி, வரும் திசம்பர் 6, 7 நாள்களில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்துவதாக அறிவித்திருந்தது.
கருத்தரங்கம் நடத்துவது இதழியல் துறை. தமிழ் முதல் இதழான சுதேசமித்திரன் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது 1882இல். இதழ்களில் இடம் பெறும் தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்தினால் தமிழின் இதழ்கள் அறிமுகத்திற்கு – 1882 இற்கு – முந்தைய இலக்கியங்கள் பொருண்மையில் அடங்கா.
 ‘பெண்கள் குறித்த நிறை குறைகள்’ எனப் பொதுவான தலைப்புகளாக இருப்பின் நடுநிலை ஆய்வாகக் கருதலாம். ஆனால், தலைப்புகள் யாவும் வலிந்து குறைகாணும் நோக்கிலேயே உள்ளன. எனவே, தமிழ் இலக்கியங்களையும் முந்தைத் தமிழர்களையும் பழிப்பதற்காக வேண்டுமென்றே கருத்தரங்கத் தலைப்புகள் தரப்பட்டுள்ளன எனப் பிறர் கருதுவதில் தவறில்லை.
கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுக்கு எடுத்துக்காட்டாக முதல் தலைப்பை எடுத்துக் கொள்ளலாம்.
‘தொல்காப்பியம் வரையறுக்கும் பெண்மீதான கட்டுப்பாடுகள்’ என்பதே அந்தத் தலைப்பு. தொல்காப்பியர் உணர்த்தும் பெண்மையின் சிறப்பு குறித்து ஆராய வேண்டியவர்களைத் தவறான பாதையில் திணிக்க விரும்புகின்றது இக்கல்லூரி.
இது முதலான 19 தலைப்புகள் வேண்டுமென்றே தமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் நோக்கில்தான் அமைந்துள்ளனஇதழியல் துறைக்கும் இந்த இலக்கியங்களுக்கும் என்ன தொடர்பு?
அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப.
என்று தொல்காப்பியர் களவியலில் கூறுவதைச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டு பெண்களுக்கு எதிரான கருத்தாகக் கூறுவர். சிலர் காதல் சுவைக்காக இவை தேவை எனக் கூறப்படுவதாகவும் சொல்லுவர்.
செறிவும் நிறைவும் செம்மையுஞ் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பா லான.
எனப்பெண்ணின் பெருமையைத் தொல்காப்பியர் கூறுகிறார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களைப் பெருமையாகக் கருதும் தமிழர் பண்புகளை ஆராயாமல்  எதிரான கருத்துகளைக் கற்பிப்பது தவறல்லவா?
செறிவு என்பது செறிந்த அறிவையும் நிறைவு என்பது நிறைவான பண்பையும் செம்மை என்பது செம்மையான ஒழுக்கத்தையும் குறிக்கும். செப்பு என்பதைச் சொல்லுதல் எனப் பிறர் குறிப்பிடப் பேரா.சி.இலக்குவனார் ‘கூறத் தகுவனவற்றைக் கூறல்’ என்று விளக்குகிறார். ஆகப் பெண்கள் தகாதவற்றைச் சொல்லார் எனப் பெருமையாகத்தான் தொல்காப்பியர் கூறுகிறார்.
பிற்காலத்தவர் பெண்களை அறிவற்றவர்களாகக் கருதியதும் உண்டு. பெண்கள் அறிவும் அரிதில் அமையும் -உயர்வு என்றும் பெருமை என்றும் சொல்லப்படும் – அருமை நலனும் உடையவர்கள் என்றும் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
இவ்வாறு பெண்களைச் சிறப்பிக்கும் தொல்காப்பியத்தை இழிவு படுத்தும் நோக்கில் கட்டுரை எழுதியவர்கள் ஆசிரியர்களாக இருப்பது தமிழுக்குத் தீதல்லவா?
‘சங்க அக இலக்கியங்கள் சித்திரிக்கும் குடும்ப வன்முறைகள்’ என்று ஒரு தலைப்பு. மிகச்சிறந்த இல்லறத்தை வாழ்வியலறத்தைச் சொல்லும் சங்க இலக்கியங்களைத் தவறான கண்ணோட்டத்தில் திரித்துக் கூறவே இத்தலைப்பு.
கதைச்சுவைக்காகக் கூறப்படும் பரத்தையர் பழக்கத்தைதச் ‘சங்க இலக்கியம் சித்திரிக்கும் பரத்தையர் ஒழுக்கம்’ எனக் காட்ட விரும்புகிறது இக்கல்லூரி. திரைப்படங்களில் தலைவன் எதிரியின் பெண்ணையே பெரும்பாலும் காதலிப்பான். இது கதைச்சுவைக்காகவும் பாத்திர எண்ணிக்கை குறைப்பிற்காகவும் கூறப்படுவது. அப்படி என்றால் எதிரியின் பெண்ணைத்தான் காதலிக்க வேண்டும் என்று மரபு இருப்பதாகக் கூற முடியுமா?
சிலப்பதிகாரத்தில் கோவலன் கலையார்வத்தாலும் சந்தர்ப்பச் சூழலாலும் மாதவியிடம் சென்றுள்ளான். எனினும் அதனை யாரும் பாராட்டவில்லை. கண்ணகி கோவலனிடம் “போற்றா ஒழுக்கம் புரிந்தீர்” என்கிறார். அப்படியானால் கணிகையிடம் அவன் சென்றதை மன்பதை ஏற்கவில்லை, போற்றவில்லை என்றுதானே பொருள்.
கோவலன், கண்ணகி பெற்றோர், பிறர் என யாரும் ஒருவருக்கு மேற்பட்ட துணையை நாடியதாக – கூடா ஒழுக்கத்தில் வாழ்க்கை இணையைத் தேடியதாகக் – குறிப்பு இல்லை. அவ்வாறிருக்க ஒரு செய்தியை ஒட்டு மொத்த பண்பாடாக இழித்துக் கூறுவது தவறலலவா?
‘சிலப்பதிகாரம் காட்டும் உரைசால் பத்தினி – மறு வாசிப்பு’ என்னும் தலைப்பே கண்ணகியை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கில் குறிக்கப்பட்டதாகத்தான் நன்கு தெரிகிறது.
எனவேதான் இக்கருத்தரங்கத்திற்குத் தமிழன்பர்களும் தமிழ்ப்பண்பாட்டை உணர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்த்தினசரி மின்னிதழ் < https://dhinasari.com/featured/62188-mass-campaign-against-trichy-saint-joseph-college-atrocitiies-degrading-tamil-literatures.html > ,  தமிழ் இலக்கியப் படுகொலை செய்யும் இக்கல்லூரி நிருவாகத்தினர் மீது ஆளுநர் நடவடிக்கை  தேவை எனக் குறிப்பிட்டுள்ளது.
பாசகவின் எச்சு.இராசா தன் சுட்டுரைப் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொய்யைத் திரித்து பரபரப்பு ஏற்படுத்த விரும்புபவர் எதிர்ப்பதால்தான் சிலர் சமய நோக்கில் தாக்குதல்  தொடுப்பதாகத் தவறாக எண்ணுகின்றனர். ஆனால், மதக்கலவரங்களை விரும்புவர்களுக்கு இக்கருத்தரங்கம் வாய்ப்பாக அமைகிறது என்பதே உண்மை. இந்து மக்கள் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சூசையப்பர் கல்லூரியின் நோக்கம் ஆராய்ச்சிதான் என்றால் இந்துமக்கள் கட்சி குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் ஆய்வரங்கம் நடத்த முன்வருவார்களா? மாட்டார்கள் அல்லவா?
சூசையப்பர் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரிடம் கருத்தரங்கு குறித்துக் கேட்டேன். இதுவரை 96 ஆய்வுக்கட்டுரைகள் வந்துள்ளன என்றும் தொல்காப்பியம் குறித்து ஒரு கட்டுரை வந்துள்ளதாகவும் அதுவும் சிற்பபைக் கூறுவதாகவும் பிற கட்டுரைகளும் தமிழின் சிறப்பை உணர்த்துவதாகவும் கூறினார். கட்டுரைகள அனுப்பி வைக்குமாறு வேண்டியதற்கு அவற்றைத் தொகுத்ததும் அனுப்பி வைப்பதாகக் கூறினார். ஆக கருத்தரங்கத்தாரின் தவறான முயற்சிக்கு ஆய்வாளர்கள் பலியாகவில்லை எனத் தெரிகிறது.
தமிழ் ஆட்சிமொழி-பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன்,“பெண்களை மகிமைப்படுத்தும் எண்ணற்ற இலக்கியப் படைப்புகள் தமிழில் நிறைந்து நிற்கையில் தமிழ்ப்பண்பாடு பெண்களைத் தாழ்த்தி வைத்தது என்ற நஞ்சுக்கருத்தினைப் பதிய விடக் கூடாது.” என்றும் “இத்தகைய இழிவான நிகழ்வுகள் நடைபெறுவதை அரசு அனுமதிக்காது” என்றும் தனது சுட்டுரைகளில் பதிவிட்டிருக்கிறார்.
பொதுவாகக் கருத்துரிமைக்கு மதிப்பளிப்பவர்கள்தாம் இப்பொழுது இக்கருத்தரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மார்க்சியத் திறனாய்வாளரான பேரா.மறைமலை இலக்குவனார், மிகவும் கேவலமான நிலைக்குப் பெண், தமிழிலக்கியங்களில் இழிவுபடுத்தப்பட்டுள்ளதைப் போல் சித்தரிக்கும் தூய சூசையப்பர் கல்லூரியின் “தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண்வன்கொடுமைகள்” என்னும் தலைப்பிலான கருத்தரங்கம் தமிழுக்குப் பொருந்தாதது; கல்விக்குப் பெருமையளிக்காது. இதனை அறிவுக்குறும்பர்களின் அற்பச்செயல் என வன்மையாகக் கண்டிக்கிறேன்” என முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இப்பதிவின் குறிப்புரைகளில் சிலரும் வெவ்வேறு தளங்களில் பலரும் எதிர்ப்பான கருத்துக்ள தெரிவித்துள்ளனர்.
இக்கருத்தரங்கம் தடை செய்யப்பட்டதாகவும் பதிவுகள் உள்ளன.
பேரா.செ.இரா.செல்வக்குமார் “மிகவும் மகிழ்ச்சி. பொதுவாக எந்தக் கருத்தரங்கத்தையும் தடுக்கும் நடவடிக்கையை நான் வரவேற்பவன் அல்லன். இதனையும் மிகுந்த தயக்கத்துடனேயே என் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றேன். கருத்தரங்க அமைப்பாளர்கள் அறிந்தே தீயவழியில் செல்ல முயன்றனர். இந்தத் தடையால் அவர்கள் அவர்களின் தீயசெயல்களை நிறுத்தப்போவதுமில்லை. இப்படியான தீய போக்குகள் தவறு என்று அவர்கள் உள்ளார உணர்ந்தால்தான் தீர்வு. துணிவான முடிவை எடுத்த அமைச்சர் பாண்டியராசன் அவர்களுக்கு நன்றி” எனக் கருத்தரங்கத்திற்கான அமைச்சரின் தடை முயற்சி குறித்துக் கூறியுள்ளார்.
உண்மையில் தடை விதிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. ஏனெனில் கல்லூரி கசா புயலால் ஒத்திவைக்கப்பட்டதாகத்தான் தெரிவித்துள்ளனர். நிறுத்தப்பட்டதாகவோ அரசால் தடை விதிக்கப்பட்டடதாகவோ தெரியவில்லை.
ஒளிவண்ணன் கோபாலகிருட்டிணன், “நாம் உடனடியாகச் செய்யவேண்டியது இக்கருத்தரங்கை நடத்தும் துறைத் தலைவருக்கும் கல்லூரி முதல்வருக்கும் உடனடியாக மின்னஞ்சல்கள் வாயிலாக நம்முடைய எதிர்ப்பினைப் பதிவு செய்ய வேண்டும்” என முகநூலில் பதிந்துள்ளார்.
முனைவர் முத்துவேலு, “இது போன்ற கருத்துகளை நடந்த முனைபவர்களின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை விளக்க வேண்டும்.தமிழ் இலக்கியங்களின் சிறப்பைக் குலைப்பதா அல்லது தமிழ்ப் பகைவர்களுக்குத் துணைபோவதா என்பதைத் துணிவுடன் எடுத்துக் கூறட்டும்”| என முகநூல் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தினர்,  “கருத்து உரிமையின் (சுதந்திரத்தின்) மீது, குறிப்பாக முற்போக்கான சமூக மாற்றங்களுக்கான கருத்து வெளிப்பாடுகளின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகத்தான், திருச்சியில் ஒரு கல்லூரியின் பன்னாட்டுக் கருத்தரங்கம் தள்ளிவைக்கப்பட்டதன் பின்னணியை ஐயப்பட வேண்டியுள்ளது” எனக் கூறியுள்ளனர்.
முற்போக்கு என்ற பெயரில் இன்றைய நிலைப்பாட்டு அடிப்படையில் அச்சூழலுக்குப் பொருந்தாத முந்தையக் கால வரலாற்றைத் திரித்துச் சொல்வதையும் எழுதுவதையுமே சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கருத்து உரிமை என்ற பெயரில் இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்வதும் இழிவு படுத்தும் நோக்கில் எழுதுவதும் கண்டிக்கத்தக்கனவே!
பல்கலைக்கழக நல்கை ஆணையம் ஆசிரியர்களின் தகுதியைத் தரப்படுத்துவதற்காகப் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. கல்வியியல், ஆராய்ச்சிப் புலங்களில் பின்வருமாறு மதிப்பெண்கள்வரையறுத்துள்ளது.
ஆய்வுத்தாள்கள் 30% மதிப்பெண்
ஆய்வு வெளியீடு 25% மதிப்பெண்
ஆய்வுத் திட்டம் 20% மதிப்பெண்
ஆய்வு வழிகாட்டி 10% மதிப்பெண்
பயிற்சிகள் கருத்தரங்கங்கள் 15% மதிப்பெண்
இவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் பெறவே பெரும்பான்மையர் கருத்தரங்கங்களில் பங்கேற்கவும் கருத்தரங்கங்கள் நடத்தவும் செய்கின்றனர்.  இவர்களுக்கு ஆய்வு நோக்கம் என்பது அறவே இல்லை. எனவே, பல ஆய்வுகள் தரமாக இருப்பதில்லை. இப்போது திட்டமிட்டுள்ள கருத்தரங்கமும் அப்படிப்பட்டதுதான். அத்துடன் தமிழை இழிவுபடுத்த வேண்டும் என்ற உட்கிடக்கையும் உள்ளது என்பது தலைப்புகளில் இருந்து தெரிகிறது. எனவே, கருத்தரங்கத்தைத் தடை செய்தால் மட்டும் போதாது. இதன் ஏற்பாட்டாளர்களுக்குப் பதவி யிறக்கம், பணிப்பறிப்பு முதலான  தண்டனைகளும் தர வேண்டும்.   
தமிழை இழிவு படுத்துவோரைக் கண்டிப்போம்! தண்டிப்போம்!
  • இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive