Tuesday, May 29, 2018

பள்ளிகளைக் காப்பாற்ற தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம் – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்


பள்ளிகளைக் காப்பாற்ற தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம்

தமிழ்நாட்டில் 1951  இல் 20.80 % மக்கள்  படிப்பறிவோராக இருந்தனர். ஆண்களில்  31.70 % மக்களும்  பெண்களில் 10.10 % மக்களும்தான்  படிப்பறிவு பெற்றவர்கள். இத்தொகை 1961 இல்  ஆண்களில் 51.59% ,  பெண்களில் 21.06%  ஆகவும் மொத்தத்தில்  36.39% ஆகவும் உயர்ந்தது. 1971 இல் படிப்பறிவு உடையோர் மேலும் உயரந்தனர். ஆண்கள் 59.54%    பெண்கள் 30.92%     மொத்தம் 45.40% என இருந்தது. 2011 இல் தமிழ்நாட்டில் படிப்பறிவோர் விகிதம்  ஆண்கள் 86.81%  பெண்கள் 73.86% ஆகும். எல்லாக் காலத்திலும் இந்தியாவின் சராசரி விகிதத்தை விடத் தமிழ்நாட்டில் உள்ள படிப்பறிவோர் விகிதம் கூடுதலாகவே உள்ளது.
  இவ்வாறு தமிழ்நாட்டில் படிப்பறிவோர் எண்ணிக்கை உயர்ந்ததற்குக் காரணம் யார்? அரசுப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஊராட்சிப்பள்ளிகள் முதலியவற்றின் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும்தான். இவர்களைக் கண்டாலே பிள்ளை பிடிக்க வருகிறார்கள் என்று ஓடிய காலம் அது. அதனையும் மீறி வீடு வீடாகச் சென்று பிள்ளைகளை அழைத்துவந்து பள்ளிகளில் சேர்த்தனர்.
  தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்த அரசுப்பள்ளிகள், உள்ளாட்சிப் பள்ளிகள் ஆகியவற்றின் இன்றைய நிலை என்ன? மூடுவிழாவிற்கு உள்ளாகும் நிலைதானே உள்ளது! திமுக ஆட்சியிலேயே மாநகராட்சிப்பள்ளிகள் சில  மூடப்பட்டன. தொடர்ந்து அதிமுக ஆட்சியிலும் பள்ளிகள் மூடப்படும் அவலம் தொடருகின்றது. பள்ளிகளே தேவையில்லை என்னும் பொழுது ஆசிரியர்க்கு என்ன தேவை? எனவே ஆசிரியர்பயிற்சி  நிறுவனங்களும் மூடப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 32 ஆசிரியர் பயிற்சிக் கல்வி நிறுவனங்களில் 20 நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
  அண்மையச் செய்தியாக தமிழ்நாட்டில் 33 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவர்கூடப் படிக்கவில்லை என்றும் இவற்றுடன் 10க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் பள்ளிகளையும் சேர்த்து 890 பள்ளிகளை அரசு மூட உள்ளதாகவும் வந்துள்ளது.
  பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இச்செய்தி தவறு எனக் கூறுகிறார். “பள்ளிகளை மூடும் முடிவில் அரசு தற்போது இல்லை;  எண்ணிக்கை உயர்த்த அரசு பள்ளிகள் தற்போதைய நிலைகளை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”  என்கிறார். ஆனால், அவரே இதற்குச் செப்டம்பர் மாதம் வரை கால வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார். அதற்குப் பின்னர் என்ன செய்யும் அரசு. மாணாக்கர் இல்லாப் பள்ளிக்கு ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஊதியம் செலவழிக்க இயலாதே. படிப்படியாக இவ்வாறு பள்ளிகளை மூடி வந்து கொண்டுள்ள அரசு அதனை அமைதியாக நிறைவேற்றத்தான் செய்யும். கல்வித்துறை அ்மைதியாக இருந்தாலும் நிதித்துறை இதனை இவ்வாறுதான் மூடச் செய்யும்.
  ஆங்கில வழிப்பள்ளிகளை மூட  வேண்டியது அரசின் கடமை. ஆனால், அரசின் தமிழ்வழிப்பள்ளிகளிலும் ஆங்கிவழிப் பிரிவுகளைத் தொடங்கி நடத்தி வருகிறது. மாணாக்கரகளைச் சேர்க்கிறோம் என்று சொல்லி அரசுப் பள்ளிகளையும் உள்ளாட்சிப் பள்ளிகளையும் ஆங்கில வழிப்பள்ளிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும். மக்களின் விருப்பம் என்ற போர்வையில் இவ்வாறு செயல்படுத்தத் தயங்காது. ஆனால் உண்மையிலேயே அரசிற்குத் தமிழ்  வழிப்பள்ளிகளிலும் அரசு, உள்ளாட்சிப்பள்ளிகள் மூடக்கூடாது என்பதிலும் நல்லெண்ணம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
   இப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் பெயரில் 10,000 உரூபாய் வைப்புத் தொகை செலுத்துவதாக அறிவிக்க வேண்டும். மீண்டும் 6 ஆம் வகுப்பில் அரசு அல்லது உள்ளாட்சிப்பள்ளிகளிலேயே கல்வியைத் தொடர்ந்தால் ஐயாயிரம் வைப்புத் தொகை செலுத்தி ஊக்கப்படுத்தலாம். அதே நேரம் ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்த வேண்டும். என்றாலும் அரைத்த மாவையே அரைக்கும் அரசு இயந்திரத்தால் பழைய நிலைதான் தொடரும். அப்படி என்றால் என்ன வழி என்கிறீர்களா?
 890 பள்ளிகளையும்  தொடக்கக்கல்வி இயக்குநர் கட்டுப்பாட்டில் இருந்து பிரிக்க வேண்டும். தாய்த்தமிழ்ப் பள்ளி வாரியம் என ஒன்றை அமைத்து  அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். ‘தாய்த்தமிழ்ப்பள்ளி’ எனத் தோழர் தியாகு 1993 இல் அம்பத்தூரில் தொடங்கினார். தொடர்ந்து 1994 இல் குன்றத்தூரில் வெற்றிச்செழியன் ‘பாவேந்தர் தாய்த்தமிழ்ப்ள்ளி’ தொடங்கினார். தொடர்ந்து அடுத்த ஆண்டுகளில் கரூரில் க.வெ.சத்தியமூர்த்தி என்பவர் சக்தி தமிழ்ப் பள்ளிக்கூடத்தையும் திருப்பூரில் தங்கராசு  என்பவர் தாய்த்தமிழ்ப்பள்ளியையும் தொடங்கினர். பின் தொடர்ச்சியாக ஆங்காங்கே தாய்த்தமிழ்ப்பள்ளிகள் தொடங்கினாலும் இன்றைய நிலையில் ஏறத்தாழ 30 தாய்த்தமிழ்ப்பள்ளிகள்செயல்பட்டு வருகின்றன. என்றாலும் நிதிப்பற்றாக்குறையால் தட்டுத்தடுமாறிததான் நடை போடுகின்றன.
  இத்தகைய தாய்த்தமிழ்ப்பள்ளிகளை ஒருங்கிணைத்துத் தாய்த்தமிழ்ப்பள்ளிகள் வாரியத்தில் இணைக்க வேண்டும். இவர்கள் பகுதிகளிலுள்ள மூடக் கருதியுள்ள பள்ளி வளாகத்தை உள்ளது உள்ளவாறு கட்டடத்துடன் இவர்களின் பயன்பாட்டிற்குத் தர வேண்டும். தாய்த்தமிழ்ப்பள்ளி ஆர்வலர்களைக் கொண்டு எஞ்சிய இடங்களிலும் அரசு தாய்த்தமிழ்ப்பள்ளிகள் தொடங்க வேண்டும். அரசால் இவ்வாறு செயல்பட முடியாவிட்டால தமிழ் அமைப்புகளிடம் பொறுப்பைத் தரலாம். சிறப்பாகச் செய்து முடிப்போம்!
  • நக்கீரன் தொகுதி31 இதழ் 14 மே 90-சூன் 01, 2018 பக்கம் 18-19

செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு! உறுதியாய் நிற்க வேண்டுகோள்!

செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு!

உறுதியாய் நிற்க வேண்டுகோள்!

 பதின்மூவருக்குக் குறையாத உயிர்ப்பலிக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் படுகாயங்களுக்கும் பிறகு தமிழ்நாடு முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகத்தை மூட ஆணை பிறப்பித்துள்ளார்.  சுற்றுச்சூழல் வனத்துறை அரசாணை (பல்வகை) எண் 72 நாள் வைகாசி 14, 2049 /  மே 28, 2048 இனபடி அரசு இதனை நிலையாக மூட ஆணை பிறப்பித்துள்ளது.
 துணை முதல்வர்  பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் செயக்குமார், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் இராசு, ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் இராசலட்சுமி,  தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஆகியோர் திங்களன்று (மே 28) தூத்துக்குடி  மருத்துவமனைக்குச் செனறனர்; தூத்துக்குடி போராட்டக் களத்தில் படுகாயமுற்று மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டவர்களையும் அவர்களின் உறவினர்களையும் உயிர் பறிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து வந்துள்ளனர். அதன் பின்னர் முதல்வர் பழனிச்சாமியிடம் விவரம் தெரிவித்து அதன் தொடர்ச்சியாக அமைச்சரவை கூடி இவ்வுருட்டாலைத் தொழிலகத்தை மூட முடிவெடுத்து ஆணையாகப் பிறப்பித்துள்ளனர்.
இதனால், தொழிலகம்   தொடங்கப்பட்டதில் இருந்து வந்த எதிர்ப்புப் போராட்டமும் விரிவாக்கப்பணியை எதிர்த்து  100  நாளைத் தாண்டி நடைபெறும் போராட்டமும் முடிவிற்கு வந்துள்ளது.
அரசு இதற்கு மேலும் காலந்தாழ்த்தாமல்  நிலையாக மூட ஆணை பிறப்பித்தமைக்குப் பாராட்டுகள்! இதற்கு முன்பே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நாம் வினா தொடுத்துக்கொண்டு இருப்பதை விடஎவ்வகையிலும் இத் தொழிலகம் திறக்கப்படாமல் இருக்க வழி வகை காண அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
  முதல்வருக்கும் பிற அமைச்சர்களுக்கும்  தெரிந்த செய்தி முன்னரும் மூன்று முறை மூடப்பட்டுத் திறக்கப்பட்ட தொழிலகம்தான் இஃது என்பது. மக்களும் இஃதை அறிவார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். தமிழ்நாட்டில் பாசகவின்  சார்பு ஆட்சியில்லாமல் வேறு ஆட்சி இருந்தது எனில் பாசக நிலைப்பாடே வேறு மாதிரி இருந்திருக்கும். இப்பொழுது அமைதி காக்கிறது அக்கட்சி. தலைமையமைச்சர் நரேந்திர(மோடி) இத்தொழிலகத்தை( ) நடத்தும் வேதாந்த வள வரையறு நிறுவனத்தின் (Vedanta Resources plc,) தலைவர் அனில் அம்பாடியின் நெருங்கிய நண்பர். எனவே இத்தொழிலகம் திறக்கப்பட என்ன வேண்டுமென்றாலும் செய்வார்.
இதற்கு முதலில் தடை விதிக்கப் பரிந்துரைத்த தேசியச் சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையமே( National Environmental Engineering Research Institute)  மறுமுறையீட்டின்பொழுது இரண்டுமாதத்தில் பாதிப்பு குறைந்து  விட்டதாகக் கூறி இயங்கப் பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் உயர்நீதிமன்றமும் தடையை நீக்கியது. இவ்வாறு தீர்ப்பைத் திருத்தி வாங்கும் செல்வாக்கு பெற்ற நிறுவனம் இப்பொழுதும் என்ன செய்தேனும் இதனை மீளவும் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளும். இதன் உரிமையாளர், நரேந்திர(மோடியின்) நண்பர், அனில் அகர்வாலும் எப்படியும் உரிய இசைவுபெற்று இது மீண்டும் இயங்கும் எனச் சொல்லியுள்ளார். எனவே அரசு மீளத்திறப்பதற்கான எல்லா வாயி்ல்களையும் அடைத்து   இனி என்றென்றும் இங்கோ தமிழ் நாட்டில்  வேறு எங்குமோ உருட்டாலைத் தொழிலகம் திறக்கப்படாமல் செய்ய  வேண்டும்.
  இதில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு மறு வேலைவாய்ப்புகளுக்கு ஏற்பாடு செய்யாவிடடால் அவர்களைக் கொண்டே கலவரம் உண்டாக்கவும் நிறுவனம் முயற்சி மேற்கொள்ளும். எனவே அவர்களின் நலத்திலும் அரசு கருத்து செலுத்த வேண்டும்.
உயிர் பறிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கும் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு முழுமையான உதவிகளை விரைவாகச் செய்ய வேண்டும்.
அண்மையில் எந்தத் துப்பாக்கிச் சூட்டிலும் முறைப்படி காவல்துறை நடந்துகொள்ளவில்லை. இத் துப்பாக்கிச் சூட்டில் எச்சரிக்கை முறையில  அல்லாமல் குறிபார்த்துக் கொல்லும் முறையில் காவல் துறை நடந்து கொண்டுள்ளது. எனவே தொடர்புடைய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து இதுபோன்ற அறமற்றநிகழ்வு இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  மாவட்ட ஆட்சியர் அல்லது  உரிய நீதிபதியின் ஆணைக்கிணங்கவே துப்பாக்கிச் சூடு நடைபெற வேண்டும். அப்பொழுதும் காவல கண்காணிப்பாளர நிலையிலான  காவல் அதிகாரிதான் அதனை நிறைவேற்ற ஆணையிடுவார். ஆனால் சில நாள சென்ற பின்னர் தனிததுணை வடடாட்சியர் இருவர் என்று முதலிலும் பின்னர் மேலும் ஒருவருமாக இளநிலை அதிகாரிகள் முறையீட்டின்படி துப்பாக்கிச் சூடுநடைபெற்றதாகக் கூறுவது பொருந்துவதாக இல்லை. முதல் தகவல் அறிக்கையைப் பார்க்கும் பொழுது உண்மைக்கு மாறாகத் துப்பாக்கிச் சூட்டினைச்  சரி எனச் சொல்லும் வகையில்  நம்பச்செய்வதற்காகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன போல் தெரிகின்றன. மாவட்டத்தலைநகரில் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆணையிட இவர்களுக்கு ஏது அதிகாரம்?  உயர் அதிகாரிகளைக்காப்பாற்றவும் உண்மையை மறைக்கவுமே இந்த நாடகம் என்று மக்கண் எண்ணுகின்றனர்.எனவே இது குறித்து அரசு முறையான உசாவல் மேற்கொண்டு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடங்குளம் முதலான மக்களுக்கு எதிரான அனைத்துத் திட்டங்களையும் அரசு ஆய்ந்து மூடவேண்டியவற்றை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்டச் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் இருந்தால் அவர்கள் உணர்வை மதித்து மறு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மக்களின் அச்சம் தவறானது எனில் அதனைப் போக்கிய பின்னரே எந்த ஒரு திட்டத்தையும் தொடங்க வேண்டும். மக்களின் கவலை சரியானது எனில், உடனடியாக அப்படிப்பட்ட திட்டத்தை நிறுத்த வேண்டும்.
தூத்துக்குடி  போராட்டத்தை மக்கள் போராட்டமாக மதித்து இதிலிருந்து அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இனி எக்காரணம் கொண்டும்  மக்களுக்கு எதிரான திட்டத்தைச் செயற்படுத்தவோ மக்கள் போராட்டங்களைக் கொச்சைப்படுத்திப் புறக்கணிக்கவோ கூடாது என்பதை ஆள்வோர்களும் ஆளத்துடிப்பவர்களும் உணர வேண்டும்.
உருட்டாலையை மூட ஆணை பிறப்பித்ததும் தங்கள் கடமை முடிந்து விட்டதாக ஆள்வோர் எண்ணக்கூடாது. தாங்கள் பிறப்பித்த ஆணையை நிலைக்கச் செய்வதே  உண்மையான பணி என்பதை உணர்ந்து ஆவன செய்ய வேண்டும்.
போராட்டக் களத்தில உயிர் இழந்தவர்களுக்கு  அஞ்சலி தெரிவிக்கிறோம்.
போராட்டத்திற்கு இடைக்கால முடிவு வரும்வகையில் இறந்தவர்கள் உடல்களைப் பெறமாட்டோம் என உறுதியாக நின்ற குடும்பத்தினருக்கும் நம் பாராட்டுகள்
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.(திருவள்ளுவர், திருக்குறள் 671)
ஆதலின் எச்சூழலிலும் துணிந்து முடிவெடுத்திடுக!
எடுத்த முடிவைக் காலத் தாழ்ச்சியின்றி நிறைவேற்றிடுக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை  அகரமுதல  வைகாசி 13-19, 2049 /மே 27-சூன்2,2018

Friday, May 25, 2018

மக்கள் நாயகம் கொல்லப்பட்டது! மக்களும் கொல்லப்பட்டனர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

மக்கள் நாயகம் கொல்லப்பட்டது! 

மக்களும் கொல்லப்பட்டனர்!

தொடங்கியது நரேந்திர(மோடி) அரசு!

முடித்தது எடப்பாடி பழனிச்சாமி அரசு!


  வேதாந்த வள வரையறு நிறுவனம் (Vedanta Resources plc,)என்பது உலக அளவில் சுரங்கத் தொழிலிலும் மாழை (உலோக)வணிகத்திலும் ஈடுபட்டு வரும் நிறுவனமாகும்.
  இதன் சார்பு அமைப்பாகத் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் ஊரில் சுடெருலைட்டு தொழிலகம் (Sterlite Industries)  என்னும் செம்பு உருட்டாலை அமைக்கப்பட்டது. இந்தியத் தேசியப்பேராயத்தின் நரசிம்ம(ராவு) ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்ட இத்தொழிலகத்திற்கு 1993 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கே செம்புக்கம்பி, கந்தக அமிலம், எரிம அமிலம்(phosphoric acid ) ஆகியன உற்பத்தி யாகின்றன.
  இத் தொழிலகத்தால் நிலத்தடி நீர், சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றிற்குப் பாதிப்பு ஏற்படுவதாலும் நச்சுக்காற்றுக் கசிவால் சுற்றுப்புற மக்களுக்குக் கேடு விளைவதாலும் மக்கள் இதனை எதிர்க்கின்றனர்.
  இத் தொழிலகத்தால் மண் கருமை கண்டது; நீர்  செந்நீரானது;  காற்று அனலாய் மாறியது; நிலம் மலடானது; நிலத்தடி நீர் நஞ்சானது; காற்றும் நஞ்சாய் மாறியது என்று மக்கள் நல அமைப்பினரும் எதிர்க்கின்றனர்.
அது மட்டுமல்ல!
  30.08.1997 இல் ஏற்பட்ட வெடிநேர்ச்சியால் பலர் கொல்லப்பட்டனர். மீண்டும் இவ்வாறு நேரிட்டால் இறப்போர் எண்ணிக்கை கூடலாம் என்ற அச்சம் மக்களிடையே வந்தது.
  5.7.1997 அன்று இத்தொழிலகத்தின்  நச்சுக் கசிவால் அண்மையில் உள்ள நிறுவனப் பெண் தொழிலாளர்கள் நூற்றுவருக்கு மேல் மயங்கி விழுந்தனர். அவர்களில் பலருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது. 2.3.1999 இல் ஏற்பட்ட நச்சுக் கசிவால் அருகிலுள்ள வானொலி நிலையப் பணியளார்கள் பதினொருவர் மயங்கி விழுந்தனர்.
 82 முறை நச்சுக்காற்று கசிந்ததாகக் கூறித் தமிழ்நாட்டு மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் 2013இல் இத்தொழிலகம் இயங்கத் தடை விதித்தது. இத்தொழிலகத்தின் தொடக்கத்திலிருந்தே இதனை எதிர்த்து வரும் மதிமுக தலைவர் வைகோ இதற்காக அப்போதைய முதல்வர் செயலலிதாவிற்கு நன்றியும் தெரிவித்தார். இத்தடையால் அதிமுக தன்மீதிருந்த பழியையும் துடைத்துக் கொண்டது. ஆனால் பேராயக்கட்சியான காங்கிரசு அவ்வாறு இல்லை. ஏனெனில். 23.03.2013 இல் நிறுத்தப்பட்ட இவ்வாலையின் இயக்கத்தினை நிறுத்துவது பொதுநலனுக்கு உகந்தது அல்ல எனக்கூறி உச்சநீதிமன்றம் தடையை நீக்கியது.
  தங்கள் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும்  சுடெருலைட்டு தொழிலகத்தை மூட வேண்டும் என்ற மக்களின் அறவழிப் போராட்டங்களுக்குச் செவி சாய்க்காமல் விரிவாக்கப்பணியில் இத்  தொழிலகம் ஈடுபட்டது.
  எனவே மக்கள் மேலும் முனைப்பாகப் போராடுகின்றனர். 05.02.2018 அன்று தூத்துக்குடி மக்கள், உயிர்வாழத் தகுதியற்ற நிலையை ஏற்படுத்தும் இத் தொழிலகத்தை மூடுமாறு வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு அளித்தனர். அதன்பின் விரிவாக்கத்திற்கு உள்ளாக்கப்படும் குமரெட்டியார்புரம் மக்கள் மரத்தடியில் அமர்ந்து 40 நாள் போராடினர்.  25.03.2018 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமையும்  கடையடைப்புப்  போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிலையம் அருகே 20,000-இற்கும் மிகுதியான மக்கள் திரண்டு போராடினர்.
  நரேந்திர(மோடி)யின் சொந்த மாநிலமான  பாசக ஆளும் குசராத்து, பாசக ஆளும் கோவா, பாசக ஆளும் மகாராட்டிரம் ஆகியன   ‘சுடெருலைட்டு’ அமையக்கூடாது எனப் போராடி வெற்றி கண்டவை. தங்கள் கட்சி ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் மக்கள் விருப்பங்களுக்கேற்ப முடிவெடுக்கும்  மத்திய பாசக அரசு தன் அடிமை அரசான தமிழக அரசை ஆட்டிவைத்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்குத் தீங்கு இழைத்து வருகிறது.
  போராட்டத்தின் நூறாவது நாளான மே 22 அன்று மக்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிடுவது என்பது கமுக்கச் செய்தி அல்ல. ஆனால் மீனவர்களும் இணைந்து பெருந்திரளாக வந்த மக்கள், காவல்துறையால் குண்டடி பட்டு மருத்துவமனையில் உள்ளனர். பதின்மூன்று பேருக்குக் குறையாதவர்கள் கொல்லப்பட்டு விட்டனர்; மேலும்பலர் மரண வாயிலில் உள்ளனர்.
 மக்களுக்காக நடைபெறுவதுதான் மக்களாட்சி. ஆனால், மக்களாட்சி முறையில் மாவட்டத்தலைவரைச் சந்திக்க மக்கள் திரண்டுவரும்பொழுது காவல்துறையின் தாக்குதல் ஏன்? முன்பே  தெரிந்த நிகழ்வைக் காவல் துறையால் கட்டுப்படுத்த இயலவில்லையா?
 கலகக்காரர்கள் ஊடுருவலால் ஊர்தி எரிப்புகள் போன்றவற்றால்  துப்பாக்கிச் சூடு நடந்ததென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். அவர் சொல்வது சரிதான். பெரும் துயரங்கள் வராமல் தடுக்க சூழலுக்கேற்ப காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் முறை.  ஆனால், தூத்துக்குடியில் திட்டமிடட சதியால் மக்கள் தாக்கப்பட்டனர்; கொல்லப்பட்டனர்;  என்கின்றனர் மக்கள். ஊடகங்களும் அவ்வாறுதான்  தெரிவிக்கின்றன.
மக்கள் எழுப்பும் வினாக்கள் வருமாறு:
  பெரும்பாலும் காவலர்கள் கையில் குறுந்தடியுடன்தான் மக்களை விரட்டி ஓடுகின்றனர். எப்படி துப்பாக்கிச்சூடு நடந்தது?
  ஊர்தியின் மேல் நின்று கொண்டும் படுத்துக் கொண்டும் சிலரைக் குறிவைத்துச் சுடும்படங்கள் வந்துள்ளன. யார் இவர்கள்? இந்திய-திபேத்து எல்லைப்படையினர் என்கின்றனர். யாராக இருந்தாலும்  அவர்கள் (தமிழர்கள்தான், ஆனால்) தமிழகக் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் அல்லர். அவர்களை வரவழைத்தது யார்?
  இவர்கள் முதல்நாள் மாவட்ட ஆட்சியருடன் பேசிய படங்கள் வந்துள்ளன.  அப்படியானால் திட்டமிட்டுத்தான் மக்கள் கொல்லப்பட்டனர் என்றுதானே கருத வேண்டும்?
  “ஒருத்தனாவது சாகணும்” என்னும் காவலர் குரல்  மக்களைக் கொல்வதன் மூலம் அவர்கள் எழுச்சியை ஒடுக்கிச் சுடெருலைட்டு ஆலையை இயக்க வேண்டும்  என்ற முடிவிற்காகத்தான் துப்பாக்கிச் சூடு நடந்தது என்பதுதானே உண்மை?
 படங்களின்படி முதலில் காவலர்கள்தான் மக்கள்மேல் கல்லெறிந்துள்ளனர்.
  மக்கள் தாங்கள் வரும் முன்னரே மாவட்ட ஆட்சியகத்தில் வண்டிகள் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்ததாகக் கூறுகின்றனர்.
 காவலர் வழக்கம்போல் நடத்தும் வன்முறைத் தொடக்கத்தை இங்கும்  தொடங்கியுள்ளார்கள் என்றுதானே பொருள்?
 மக்கள் எதிர்ப்பின் நூறாவது நாளுக்கு முன்னதாகச் சுடெருலைட்டு.  மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் ஒரு முறையீடு  அளித்துத்  தக்க ஆணை வேண்டியுள்ளது. அதில் போராட்டக்காரர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட உள்ளதாகவும் தொழிலகத்தைக் கொளுத்த இருப்பதாகவும் 144 தடை யாணை பிறப்பிக்க  வேண்டும் என்றும் கோரியிருந்தது.  நூறாவது நாளை நெருங்கியும் அமைதியாக மக்கள் எதிர்ப்பைத்  தெரிவித்து வருகையில் வன்முறை நிகழும் என்று எப்படிக் கூறினார்கள். மக்கள் எழுச்சியை வன்முறையாகக் காட்டுவதற்காகத் தீ எரிப்பு முதலான செயல்களுக்கு நிறுவனமே திட்டமிட்டிருக்க வேண்டும் என் மக்கள் கருதுவது சரிதானே!
 தொடக்கத்தில் மஞ்சள் ஆடையினரின் துப்பாக்கிச் சூடு தமிழக அரசிற்குத் தெரியாமல் நடந்துள்ளது. அதற்குப் பதினான்கு நிமையம் கழித்துத் தமிழகக் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது எனக் கூறித் தமிழக அரசைக் கலைப்பதற்காக மேற்கொண்ட சதியா?
பத்தாம் வகுப்பு மாணவி சுனோலின் முந்தைய போராட்டங்ளில் தீவிரமாக முழங்கியதாலும் ஒரு முறை காவல்துறையினருக்கு எதிராக நடந்து கொண்டதாலும்  தடுதல் வேட்டை என்று வீடு தேடிச் சென்று வாயில் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இவ்வாறு எல்லா உயிரிழப்பும் குறி வைத்துப் பறித்தமையாக உள்ளதால் திட்டமிட்ட கொலைகள் என மக்கள் எண்ணுவது சரிதானே!
  மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கவும் வாய்ப்பற்ற வகையில் மக்கள் நாயகம் கொல்லப்படுவதால் மக்களும் கொல்லப்படுகின்றனர். மக்களே கொல்லப்படும் பொழுது மக்கள் நாயகம் கொல்லப்படததானே  செய்யும் என்றும் சொல்லலாம்.
  மஞ்சள் ஆடை அணிந்து சுட்டவர் வைத்திருந்த துப்பாக்கி, தமிழ்நாட்டுக்காவல் துறையினர்  கையாள்வது இல்லை. எனவே திட்டமிட்டக் கொலை பின்னணியில் மத்திய பாசக இருப்பதாக மக்கள் கருதுவது சரிதானே!
 குண்டடிபட்ட உடல்களில் இருந்து எடுக்கப்படும் குண்டுகள் சுட்டவர் யார் கட்டுப்பாட்டிலுள்ள துறையினர் என்பதை வெளிப்படுத்திவிடும். எனவேதான் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இறந்தவர்கள் உடல்களைப் பாதுகாப்பாகப் பதப்படுத்தி  வைத்திருக்குமாறு கூறியுள்ளது. உயர்நீதிமன்றத்திற்குப் பாராட்டுகள்! அதே நேரம் இந்த உண்மையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்குமா? அல்லது  பாசகவிற்கு அஞ்சி அமைதி காக்குமா?
 எடப்பாடி பழனிச்சாமி என்றேனும் உண்மையைச் சொல்லத்தான் போகிறார். காலங்கடந்து சொல்வதால்  அவருக்குப் பயன் எதுவும் விளையாது. வழக்குகள் கண்டு அஞ்சியோ பதவி ஆசையிலோ அமைதி காப்பது அவருக்குத்தான் பெருந் தொல்லையாக முடியும்.  அவர் உண்மையைக் கூறின் அவருக்குத் துணையாக மக்களும் இருப்பர். எனவே பாசகவன் அரசரும் குருவும் இணைந்து செய்த சதியின் விளைவுதான் அப்பாவி மக்களின் உயிர் பறிப்புகளா? முதல்வருக்கே  தெரியாமல் திடடமிட்டு நிறைவேற்றியது யார் எனப் பின்னராவது   தெரிந்திருக்குமே அந்த உண்மை என்ன?
 கருநாடகாவில் குறுக்கு வழியிலேனும் ஆட்சியைப் பிடித்திருந்தால் தமிழக நாற்காலிக் கனவில் பாசக மிதந்திருக்கும். அதற்கான வாய்ப்பு இல்லாததால்  ஆட்சியைக் கலைத்துக் குடியரசுத்  தலைவர் ஆட்சி என்ற பெயரில் ஆட்சி நடத்தி  வரும் தேர்தலில் அறுவடை செய்யும் முயற்சியா? மத்திய அரசு உதவிப்படை அனுப்புவதாகக் கூறியது கூடத் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டதாகக் கூறி ஆட்சியைக் கலைக்கும்முயற்சிகளில் ஒன்றே என்றுதானே மக்கள் கருதுகின்றனர். எனவே பொறுத்தது போதும் என்று பாசக அரசின் எல்லைமீறல்களையும் மிரட்டல்களையும் எடப்பாடி பழனிச்சாமி  தெரிவிக்க வேண்டும்.
  மக்களின் படுகொலைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணமானவர்கள் யாராயினும் தண்டிக்கப்பட வேண்டும்
 பாராட்டிற்குரிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்து அமர்வு செம்பு உருட்டாலையின் விரிவாக்கத்திற்குத் தடை விதித்திருந்தாலும் “சுடெருலைட்டு தொழிலகம் தொடர்ந்து இயங்கும்” என உறுதியாக அதன் உரிமையாளர்  தெரிவிக்கின்றார். எனவே அரசு அத்  தொழிலகத்தை அரசுடைமையாக்கி வேறு பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இதற்கு முற்றுப்புள்ளி  இட்டதாக அமையும்.
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து. (திருவள்ளுவர், திருக்குறள் 551).
 அதுதான்  உயிர் பறிக்கப்பட்டவர்களுக்கான அஞ்சலியாகும்!
  அவர்களின் குடும்பத்தினருக்கு நாம் தெரிவிக்கும் ஆறுதலாக அமையும்!
துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை,  அகரமுதல வைகாசி 6 -12, 2049  /  மே 20-26, 2018

Saturday, May 19, 2018

கருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்! – இலக்குவனார் திருவள்ளுவன்


கருநாடகாவில் கருதியது நடந்தது:  எடியூரப்பா விலகல்!

   15 நாள் கால வாய்ப்பில் ச.ம.உ.களை வாங்கி ஆட்சியைச் சிக்கலின்றி அமைக்கலாம் எனப் பாசக திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் 24 மணி நேர வாய்ப்பே அளித்தமையால் பேர வணிகத்திற்கு வாய்ப்பில்லாமல் போனது. இச்சூழலை எதிர்பார்த்தே எடியூரப்பா விலக  வேண்டும் என நேற்று குறிப்பிட்டிருந்தோம்,( எடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும். )
  மோசமான தோல்வியை வெளிப்படுத்துவதை விட விலகுவதே மேல் எனக் குறுக்கு வழியில் கருநாடகாவின் முதல்வராகப் பொறுப்பேற்ற எடியூரப்பா பதவி விலகினார். விலகல் காரணம் என்னவாயினும் அவருக்கு வாழ்த்துகள்! இதனால் கொல்லைப்புற வழியில் ஆட்சியைப் பிடித்துத் தென்னகத்தின் மாபெரும் நுழைவு எனப் பரப்புரை மேற்கொள்ள நினத்த பாசகவின் கனவு பொய்த்தது.
  பாசக இப்பொழுது  பேராயக்(காங்.)கட்சி, ம.ச.த. கட்சியின் கூட்டை எதிர்த்துக் கூறிய தகவல் அக் கட்சிக்கும் பொருந்தும்தானே! ஆனால், ம.ச.த. உடன் கூட்டணி வைக்க முயன்றதே பாசக!  இரண்டு எதிர்க்கட்சிகளிலிருந்தும் ஆட்களை இழுக்க முயன்றதே!
 ஆனால், கடிபட்ட நரி மேலும் குழப்பத்தை உண்டு பண்ணும். பாசகவினர் பதவி விலகும் முடிவு எடுத்தால் பலர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அமைதியாக மத்திய ஏவல் துறைகளின் மூலமும் பேராசை காட்டியும் பலரை விலைக்கு வாங்கி ஆட்சியைக்  கவிழ்க்க முயலும். பிற கட்சியினரும் மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும்.
 மக்கள் நாயகம் நிலை நிற்க உதவிய உச்சமன்ற  நீதிபதிகளுக்கும் போராடிய வழக்குரைஞர்கள் அரசியல்வாதிகள், ஊடகத்தினர், கட்சியினர், வலை யன்பர்கள் ஆகியோருக்கும் பாராட்டுகள்.
நாம் முன்பே கூறியபடி இவ்வாறு தவறான செயல்பாட்டிற்கு வழி வகுத்த ஆளுநர் வாயூபாய் வாலா,  தூண்டுகோலாக இருந்த தலைமையர்   நரேந்திர (மோடி),  தொடர்புடையோர் மான உணர்வு இருப்பின் பதவி விலக வேண்டும்.
 நரேந்திர மோடி  கருநாடகாவில் 21  தொகுதிகளில் பேசினார். ஆனால்  இவற்றுள் பாசக 10 தொகுதிகளில் தோல்விதான் தழுவியுள்ளது. பாசகவிற்கு வெற்றி என அடையாளம் காட்டிக் கொண்ட 46  தொகுதிகளில் 41 தொகுதிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.
மோடி இல்லாத பொழுது பாசக வெற்றி பெற்ற தொகுதிகளை விட இப்பொழுது குறைவான தொகுதிகளிலேயே வெற்றி கண்டுள்ளது.
29  தொகுதிகளில் மிகக் குறைவான வாக்குகள் பெற்று பாசக காப்புத்  தொகையை இழந்துள்ளது.
இருப்பினும் மாபெரும் வெற்றி எனக் கூக்குரலிட்டு மக்களை மயக்க முயலும் அமீத்து  சா கட்சித்தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும்.மோசடிக்குத் துணை நின்ற அனைவருமே தத்தம் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும். ஆனால், இத்தகைய பண்பு நம் நாட்டில் இல்லை.
சாதி, சமய, மத, இன வெறி பிடித்தவர்களை ஓரங்கட்டியுள்ள கருநாடாகாவிற்குப்பாராட்டுகள்!
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.(திருவள்ளுவர், திருக்குறள் 541)
 என நடுநிலையுடன் தீர்ப்பு வழங்கிய உச்ச மன்ற நீதிபதிகள் ஏ.கே.சிருகிரி(AK Sikri),  சரத்து அரவிந்து  போபுதே (SA Bobde),  அசோக்கு பூசன்( Ashok Bhushan) ஆகியோருக்கு மீண்டும் பாராட்டுகள்!
  • இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive