Tuesday, November 29, 2016

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙொ] – இலக்குவனார் திருவள்ளுவன்


முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

[ஙொ] 3. தமிழ்நலப் போராளி

  புலவர் பட்டம் பெற்ற பின்னர்த் திருவாரூர், குடவாசல், நன்னிலம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு (நகராண்மைக் கழக) உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகவும் அடுத்துத் திருவையாற்றில் தாம் படித்த அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். படிக்கும் பொழுதே பரப்புரைப் பணியில் ஈடுபட்ட பேராசிரியர் இவ்விடங்களிலும் அப்பணியைத் தொடர்ந்தார். கல்லூரிகளில் உள்ளவர்களே தொல்காப்பியரை அறியாக்காலத்தில் தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொல்காப்பியருக்கு விழா எடுத்துச்  சிறப்பித்தார்.தொல்காப்பியருக்கு மட்டும் அல்லாமல், திருவள்ளுவர், இளங்கோ அடிகள், ஔவையார், எனப் புலவர்கள் புகழ் போற்றும் விழாக்கள் நடத்துவதைத் தம் கடமையாகக் கொண்டு ஒழுகினார்.
 பேராசிரியர் இலக்குவனார் தாம் பணியாற்றிய கல்வி நிலையங்களில் புலவர் விழாக்களுடன் ஆண்டுதோறும் தமிழ் மறுமலர்ச்சி விழா என இயல், இசை, கூத்து என வகுத்து மூன்று நாட்கள் நடத்தினார். இது குறித்துப் பேராசிரியர்,
 தமிழ் மறுமலர்ச்சிக்குக் காரணமான புலவர்களைப் பற்றிச்  சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படும். இருபதாம் நூற்றாண்டுப் புலவர்கள் பற்றி இவ்விழாவில் உரைகள் நிகழும். இவ் விழாக்கள் மாணர்களிடையேயும் மற்றவர்களிடையேயும் தமிழ் மறுமலர்ச்சியை உருவாக்கப் பயன்பட்டன. தமிழ்ப் பற்றுடையோர் உள்ளங்கள் தழைத்தன
 எனக் குறிப்பிட்டுள்ளார்(என் வாழ்க்கைப் போர்). இவ்வாறு விழாக்கள் மூலம், தமிழ் இலக்கியச் சிறப்பையும் தமிழ் எழுச்சி உணர்வையும் ஊட்டினார். விழாக்களுக்குப் பெற்றோர்களையும் வரவழைத்துப் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்தார். அக்காலத்திலேயே பெற்றோர் ஆசிரியர் மாணவர் சந்திப்புகளை மிகுதியாக நிகழ்த்திய முன்னோடிக் கல்வியாளராகவும் திகழ்ந்தார்.
  “மக்களை வருத்தும் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதும் தமிழை மாய்க்கும் வேற்றுமொழிச் சோற்களின் நுழைவைத் தடுத்தலும் தமிழ் மறுமலர்ச்சியைத் தழைக்கச் செய்தலும் தமிழ் ஆசிரியர்களின் தவிர்க்கலாகாக் கடன்” (என் வாழ்க்கைப் போர்: கையெழுத்துப்படி) என முழங்கும் பேராசிரியர் தாம் அவ்வாறே முன் எடுத்துக்காட்டாகப் பணியாற்றி வந்தார். ஆதலின் தந்தை பெரியாரால் அனுப்பப்பட்ட தன்மதிப்பியக்கத் தொண்டராகப் பலர் கருதினர். இதனாலேயே சீர்திருத்தக் கருத்துகளையும் தனித்தமிழையும் விரும்பா மறு சாராருக்கு இவர் வேண்டாதவரானார். இது குறித்துப் பொருட்படுத்தாத பேராசிரியர், இலக்கியப் பரப்புரையுடன் “தமிழ்ச் சொற்களிருக்க வேற்றுச் சொற்களை விரும்புவதேன்?” எனக் கேட்டுத் “தமிழிலே உரையாடுக! தமிழிலே எழுதுக! தமிழிலே பெயர்களிடுக! தமிழ் தமிழ் என்று  முழங்குக!” என மக்களிடையே வலியுறுத்தித் தமிழராய் வாழ உணர்த்தினார்.
 தீங்கனியைச் செந்தமிழைத் தென்னாட்டின்
  பொன்னேட்டை உயிராய்க் கொள்வீர்.
  ஏங்கவைக்கும் வடமொழியை, இந்தியினை
  எதிர்த்திடுவீர் அஞ்ச வேண்டா.
  …            …         …                                
  கடல்போலும் எழுக!கடல் முழக்கம்போல்
  கழறிடுக தமிழ்வாழ் கென்று!
  கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம்
   தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!
 (பாவேந்தர் பாரதிதாசன்: தமிழியக்கம்)
 என அறிவுறுத்தி வந்தார்; தாமும் தமிழ் காக்கும் கேடயமாகத் திகழ்ந்தார்.
 நன்னிலத்தில் பணியாற்றும்போது, ‘தமிழ் கற்பிக்கும் முறை’ என இக்காலத்திற்கேற்றவாறு மரபார்ந்த தமிழைக் கற்கும் முறை குறித்துப் பேராசிரியர் நூல் எழுதினார். இது குறித்து அவரது கருத்து வருமாறு:
  “மாணவர்கள் சிறந்தோராக உருவாதல் ஆசிரியர்களையே சார்ந்துள்ளது. நல்ல தமிழ்ப்பற்றாளராக மாணவர்கள் வெளிவருதல் தமிழாசிரியர்களையே சார்ந்துள்ளது. தமிழாசிரியர்களில் பலர் மாணவர்கள் உள்ளங்களில் தமிழ்ப்பற்றை விதைக்க வேண்டும் என்ற கருத்தில்லாதவராகவே காலம் கழித்தனர். மாணவர்க்கும் தமிழார்வம் உண்டாகும் வகையில் தமிழைக் கற்பிக்கும் வழிமுறையை மேற்கொள்ளாது இருந்தனர். அப்பொழுது  தோன்றிய இந்தியெதிர்ப்பு இயக்கத்தால் மாணவர்களிடையே தமிழ்ப்பற்று கனல்போல் பரவத் தொடங்கியது. மாணவர்கள் தமிழாசிரியர்களை மதிக்கத் தலைப்பட்டனர்.
  தமிழ் மறுமலர்ச்சி கொள்ளத் தொடங்கியது. சூழ்நிலைக்கு ஏற்பத் தமிழாசிரியரும் நடந்து கொள்ள வேண்டும் என்று கருதி தமிழாசிரியரின் பொறுப்பினை வலியுறுத்திக் கூறும் நோக்குடன் ‘தமிழ் கற்பிக்கும் முறை’ என்ற நூலொன்றினை எழுதி வெளியிட்டேன். கற்பிக்கும் முறை பற்றிய ஆங்கில நூல்களைப் படித்து ஆங்கில நாட்டில் ஆங்கில மொழியின் நிலையை அறிந்து, தமிழ்நாட்டில் தமிழ் எவ்வாறு கற்பிக்கப்பட வேண்டும் என்று எழுதினேன். இந்நூலுக்கு அணிந்துரை தருமாறு தலைமையாசிரியர் சாமிநாத(ப்பிள்ளையைக்) கேட்டபோது, இதனைப் படித்து விட்டுத் தமிழாசிரியர்களில் பலர் உங்கள்மீது கல் வீசுவார்கள் என்று கூறி, அதன் புரட்சித்தன்மையை வெளியிட்டார். இந்நூலுக்கு ‘ இந்து’வில் நல்ல மதிப்புரை வெளிவந்திருந்தது. அதன் பின்னர் நாட்டில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பல கல்வி நிலையங்கள் அஞ்சல் வழியாகப் பெற்றன.”
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, November 26, 2016

புரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார் – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பு-காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார், இதழுரை,இலக்குவனார் திருவள்ளுவன் ; thalaippu_castro_munbe_maraindhuvittar_ilakkuvanarthiruvalluvan

புரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார்!


  விடுதலைப் போராளி,  உலகை ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவையே ஆட்டிப்படைத்த மாவீரன், 638 தடவை  அமெரிக்க எமனிடமிருந்து மீண்டவன், ஒடுக்கப்பட்டவர்களின் குரலோன், நாட்டில் கல்லாமையை ஒழித்த செயற்பாட்டாளன்,  பரப்பளவில் சிறியதான கியூபாக் குடியரசு அல்லது கூபாக்குடியரசு நாட்டைப் பெரிய நாடுகளுக்கு இணையாக மாற்றிய தலைவன், இவ்வாறான பல அடைமொழிகளுக்குச் சொந்தக்காரர் புரட்சித்திலகம் பிடல் காசுட்டிரோ (Fidel Alejandro Castro Ruz  :  ஆடி 28,  தி.பி. 1957 / ஆகத்து 13, 1926 – கார்த்திகை 10, 2047 / நவம்பர் 25, 2016) மறைந்தார்.
  அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், நாட்டினர், அன்பர்கள் அனைவருக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறோம்.  அதே நேரம், அவரது  பூத உடல் இப்பொழுதுதான் மறைந்தது; ஆனால்,  அவர்  கொள்கை உள்ளம் என்றோ மறைந்து விட்டது என்பதை எண்ணாமல் இருக்க முடியவில்லை.
  தன் தாய்நாட்டை நேசிக்கும் எந்த ஒருவனும்  தத்தம் தாய்நாட்டை நேசிக்கும் பிறரையும் நேசிக்க வேண்டும்.  தன்நாட்டிற்கு எதிரான ஒற்றை வல்லாண்மைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவனும்  பிற நாட்டிற்கு எதிரான ஒற்றை வல்லாண்மைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். தன் பகைநாடுகளின் வல்லாண்மையை எதிர்த்துக் கொண்டு தன் நட்பு நாடுகளின் வல்லாண்மையை ஆதரிப்பது அறிவின்மை மட்டுமல்ல! நாணயமின்மையுமன்றோ!
  பிடல் காசுட்டிரோவைப் புகழாதவர்கள் பழிக்கப்படவேண்டியவர்கள் என்பதுபோல் ஒவ்வொருவரும் அவரைப் புகழ்ந்து கொண்டிருக்கும் போது இப்படி எழுதலாமா எனச் சிலர் கேட்கலாம்.
  “பெரியோரை வியத்தலும் இலமே” (கணியன் பூங்குன்றனார், புறநானூறு 192.12) என்பதுதான் நம் நெறி.  புகழ்ச்சிக்குரிய செயல்களைப் பாராட்டும் நாம் இகழ்ச்சிக்குரிய செயல்களையும் கண்டிக்க வேண்டுமல்லவா? நற்செயல் புரிந்தவர் என்பதற்காக ஒருவரின் தீவினைகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது அறமாகுமோ?
   நாட்டின் முழக்கமாகப் பிடல் காசுட்டிரோ அமைத்தது “தாய்நாடு  அல்லது மரணம்” என்பதுதான். ஆனால், இதே முழக்கத்தைச் செயலில் காட்டி விடுதலைப்புலிகளும் ஈழத்தமிழர்களும் தாய் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பொழுது உதவிக்கரம் நீட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால், பயங்கரவாதிகள் என்றும் பிரிவினை வாதிகள் என்றும்  குற்றம் சுமத்தி எதிராளிகளுடன் நட்பு கொள்ளலாமா? உலகின் ஒடுக்கப்பட்ட இனங்களுக்காகக்  குரல் கொடுப்பவர் என்னும் பெயர் வாங்கிக்  கொண்டு ஒடுக்கி அழிப்போருடன் இணைந்து செயல்படலாமா?  தன் நட்பு நாடுகளையும் இணைத்துக்  கொண்டு தமிழினப் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்ததை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
 இந்தியாவின் நட்பு நாடு கியூபா. எனவே, மத்திய ஆளும் பொறுப்பிலிருந்த எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் நண்பனாக இருந்தவர் காசுட்டிரோ. மத்தியில் யார் இருந்தாலும் இந்தியஅரசு தமிழினத்தை ஒடுக்குவதில் குறியாகவே உள்ளது. அதனால்தான் ஈழத்தமிழர்களையும் பகையாகக் கருதியது. எனவே, இந்தியாவின் எதிரி கியூபாவிற்கும் எதிரியானது. எனவே, தமிழினத்தை அழிக்கும் முயற்சியில் தன் கொள்கைகளுக்கு மாறாக உடந்தையாக இருந்தது கியூபா.
தமிழுக்கும் தமிழர்க்கும் பகையெனில் நமக்கும்  பகையே என்பார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார். அப்படியாயின் தமிழர்க்கு – ஈழத்தமிழர்க்கு –  வெளிப்படையான பகையாக நடந்து கொண்ட பிடல் காசுட்டிரோவை நாம் பகையாகக் கருதுவதில் தவறில்லை.
  காசுட்டிரோவின் போராட்ட வரலாறு கண்டு போற்றுகிறோம்! புரட்சி முழக்கங்களை வரவேற்கிறோம்! அதே நேரம், கொள்கையில் தடுமாறி இன அழிப்பு நாடான சிங்களத்துடன் கை கோத்ததை நாம் எவ்வாறு ஏற்றுக் கொள்ள இயலும்?
   பிடல் காசுட்டிரோ 1959 இல் ஆட்சி பொறுப்பேற்றதும் இலங்கையை நட்பு நாடாக ஏற்றுக் கொண்டு இணைந்து செயல்பட்டது. ஆனால், நண்பன் தவறு செய்யும் பொழுது இடித்துரைத்து வழிகாட்டுபவன்தானே உண்மை நண்பனாக இருக்க முடியும்?  ஒடுக்கப்பட்டவர்களின் நண்பன் என்னும் முகமூடியை அணிந்து கொண்டு ஒடுக்குபவர்களின் கரங்களுடன் தம் கரங்களை இணைத்துக்  கொண்ட பொழுது,  காறி உமிழ்ந்திருக்க வேண்டாவா?
   எப்பொழுது இனப்படுகொலையாளி சிங்களத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டாரோ அப்பொழுதே பிடல் காசுட்டிரோ மறைந்து விட்டார் என்று சொல்வதில் என்ன தவறு உள்ளது?
  இந்தியா, அமெரிக்க வல்லாண்மைக்கு எதிராகச் சோவியத்து ஒன்றியத்தின் பக்கம் நின்ற நாடு; அணி சேரா நாடு எனத் தனி அணி கண்ட நாடு; விடுதலைக்குரல் எங்கெல்லாம் ஒலித்ததோ அங்கெல்லாம் தானும் குரல் கொடுத்து எதிரொலித்த நாடு; என்றபோதும் தமிழரைப் பகையாகக் கருதுவதால்தானே அதை எதிர்க்கிறோம். தமிழ் ஈழ மக்களைக் கொல்வதற்குத் துணை நின்றதால்தானே எதிர்க்கிறோம். இந்திய அமைப்பில் இருந்து கொண்டே அதன் அறமற்ற செயல்களுக்காக எதிர்க்கும் நாம் அயல்நாடான கியூபாவின் அறமற்ற செயல்களுக்காக அதை எதிர்க்கத்தானே வேண்டும்?
 முன்பு ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்திற்குத் துணை நின்றது பேராயக்கட்சி(காங்கிரசு). பின்பு அதுவே சிங்களத்துடன் இணைந்து கொண்டு அதன் சார்பில் இன அழிப்புப் போரை நடத்தியது. முந்தைய பணிக்காக அதைப் பாராட்டாமல் பிந்தைய கொடுமைக்காக அதனை வேரொடு கில்லி எறிய வேண்டும் என்று சொல்லவில்லையா?
 ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுதததாகத் தி.மு.க.வையும் அதன் தலைவர் கலைஞர் கருணாநிதியையும் தவிர வேறு கட்சியையோ தலைவரையோ சொல்ல இயலுமா? அற்றை நிலைப்பாட்டிற்கு மாறாகக் குடும்ப நலன் கருதி நாட்டு நலன் துறந்து பேராயக்கட்சியுடன் இணைந்து தமிழினப் படுகொலையில உடந்தையாக இருந்த பிற்றை நிலைப்பாட்டிற்காகத்தானே கலைஞர் கருணாநிதியை எதிர்க்கின்றோம்?
 கருணா முதலான வஞ்சகர்கள் / இரண்டகர்கள் / துரோகிகள் ஒரு காலத்தில்  தங்கள் உயிரையும் துச்சசெமனக்கருதித் தாய் நாட்டு விடுதலைக்காகப் போரிட்டவர்கள்தாமே! ஆனால், வஞ்சகர்களாக மாறியதும் அவர்களை எதிர்க்கவில்லையா?
 அப்படியானால் பிடல் காசுட்டிரோவிற்கும் இது பொருந்தும் அல்லவா?  பொதுவுடைமைவாதிகளுக்குத் தலைவர்களே பிறநாட்டினர்தாம். அவர்கள் போற்றுவார்கள். ஆனால், தமிழ் உணர்வு மிக்கவர்கள்  எப்படிப்போற்ற இயலும்?
  தமிழர்கள் என்ன காசுட்டிரோவிற்கு அல்லது கியூபாவிற்கு எதிரானவர்களா? தமிழ்நாட்டில் பொதுவுடைமைக் கருத்தைப் பரப்பியதில் திராவியட இயக்கங்களுக்கு முதன்மைப் பங்கு உண்டு. அதனால்தான் பொதுவுடைமைக் கடசிகள் தமிழ்நாட்டில் வளர முடியவில்லை. பிற நாட்டுத் தலைவர்களைவிடத் தமிழ் மக்கள் மிகுதியும் அறிந்தது பிடல் காசுட்டிரோவைத்தானே! அவரது படங்களை ஆடைகளில் அச்சிட்டும் பிள்ளைகளுக்குப் பெயரிட்டும் அவரது முழக்கங்களைப் பரப்பியும் தம் அன்பைக் காட்டுபவர்கள் ஆயிற்றே! ஈழத்தமிழர்கள் போற்றிய தலைவர்களுள் ஒருவரல்லவா, பிடரல் காசுட்டிரோ! தம் மீது அளவுகடந்த அன்பு கொண்ட தமிழர்களுக்கு எதிராகச்  செயல்பட எப்படி மனம் வந்தது என்றே தெரியவில்லையே! சிங்கள நாட்டை நட்பு நாடாகக் கருதுவதால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? இருவருக்கும் இணக்கம் ஏற்பட உதவியிருக்க வேண்டுமல்லவா? அவ்வாறில்லாமல் தன் கொள்கைகளுக்கு எதிரானவர்களுடன்,  அமெரிக்க  வல்லாண்மைக்கு எதிரி என்ற பொய்யான புரட்டுரைக்காக, இணைந்து நின்று இனப்படுகொலைகளுக்கு உடந்தையாகவும் பன்னாட்டு மன்றத்தில் கொலையாளிகள் தப்பிக்கக் கேடயமாகவும் திகழ்ந்தது கொள்கை  வீரனுக்கு இழுக்கல்லவா?
 “ நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே” என்ற நெறிவந்த நாம் இந்தியா முதலான நாடுகளின் குற்றத்தை எதிர்த்துக் கொண்டு கியூபாவின் குற்றத்தை ஏற்கலாமா?
  ஒடுக்கப்படுவோர்களுக்கு வழிகாட்டியாக மட்டும் அவர் வரலாறு நமக்குப் பாடமாக அமையவில்லை. நாம் கண்மூடித்தனமாக ஆதரிப்பதை நிறுத்தினால்தான் தலைவர்கள் திருந்துவார்கள் என்பதற்குப் பிடல் காசுட்டிரோவின் வாழ்க்கையும் நமக்குப்பாடமாக அமையட்டும்!
  ஒருபுறம் பிடல் காசுட்டிரோவின் மறைவிற்கு விழிநீர் திரண்டு அஞ்சலி செலுத்தினாலும் அவரது அழிசெயல்களை எண்ணாமல் இருக்க முடியவில்லை!
  உலகம் உள்ளளவும் பிடல் காசுட்டிரோவின் புகழ் இருக்கும்!  தமிழின விடுதலைக்கு எதிரான அவரது களங்கமும் கறையாக இருக்கும்!
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. (திருவள்ளுவர், திருக்குறள் 957)
கண்ணீருடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 162, கார்த்திகை 12, 2047 / நவம்பர் 27, 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo                                                           முழக்கம் - தமிழர்க்குப் பகை, சி.இலக்குவனார் ; muzhakkam_thamizhpakai_s-ilakkuvanar

கனவல்ல தமிழீழம்! – இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-கனவல்ல தமிழீழம், இலக்குவனார் திருவள்ளுவன், இதழுரை l thalaippu_kanavalla_thamizheezham_thiru_ithazhurai
கனவல்ல தமிழீழம்!  மெய்யாகும் நம்பிக்கை!
  தமிழீழம் என்பது கனவல்ல!  நேற்றைய வரலாற்று உண்மை. நாளை நிகழப்போகும் உண்மை வரலாறு! போராளிகளாக, விடுதலைப்புலிகளாக, வான்புலிகளாக, கடற்புலிகளாக, உயிர்க்கொடைஞர்களாக, எனப் பல்வகை ஈகையர் தங்கள் மனக்கண்ணில் கண்ட உண்மையே தமிழ் ஈழம்!
  அது வெறும் கனவல்ல! அருந்தமிழ் உணர்வும்  அறிவுச் செம்மையும் அறிவியல்  புலமையும்  போர்வினைத்திறமும்  மாந்த நேயமும் பண்பு நலனும் கடமை உணர்வும் கொண்ட  ஈழத்தமிழர்கள் போர்க்களங்களிலும் பிற வகைகளிலும்  தம் உயிரைக்  கொடுத்ததன் காரணம் வெறும் கனவல்ல! பழந்தமிழர்கள் தனியரசாய் ஆட்சி  செய்ததை நினைந்து, மீண்டும் தமிழராட்சியை அடைய முடியும் என்ற நம்பிக்கை யே!
   தங்களின் நம்பிக்கை நட்சத்திரமான மேதகு வே.பிரபாகரன் ஆட்சி செய்யும் பாங்கினைக் கண்டதால் தமிழீழ நம்பிக்கை எழுந்தது! அந்த நம்பிக்கையால் தத்தம் உயிர் கொடுக்கவும் போராளிகளும்  களப்பணியாளர்களும் முன்  வந்தனர். அந்த நம்பிக்கை கைகூடும் வேலை,  அடிமைப்பட்டுக் கிடக்கும்  தமிழகத் தமிழர்களின் கையாலாகாத் தனத்தாலும் இந்தியாவின் முன்னெடுப்பினாலும் உலக நாடுகள் பலவும்  மாந்த நேயம் துறந்து சிங்களக்காடையருக்கத் துணை நின்ற அவலம் நிகழ்ந்தது.
  நெஞ்சுறுதியும் விடுதலை வேட்கையும் கொண்ட புலிகளையும் மக்களையும் போரால் கொல்ல முடியாது என்பதால் இனப்படுகொலை நிகழ்த்தி நம்பிக்கை நிறைவேற்றத்தை ஒத்திப் போட்டுள்ளனர். ஆம், தமிழ் ஈழம் மலர்வது ஒத்திபோடப்பட்டுள்ளதே தவிர, வெற்றியைக் கொலையாளிகள் எட்டவுமில்லை!  ஈழத்தமிழர்கள்,   தோல்வியைத் தழுவவுமில்லை.  விடுதலைப்போர் முற்றுப்பெறாத பொழுது இடையிலே ஏற்பட்ட தடங்கலை எவ்வாறு தோல்வி எனச் சொல்ல முடியும்?
  நம்பிக்கை வித்து வரலாறாக மாறப்போவதற்கான உரம்தான்  போர் வேள்வியில் மாண்ட  மா வீரர்களையும் மக்களையும் போற்றி வணங்கும் நிகழ்வுகள்.
  போரினால் கொல்ல முடியாது என்பதை இருக்கின்றோர், மானமிகு உயிர்  ஈகையர் மனக்கண்ணில் கண்டவற்றை உலகம் காண உணர்வுடன் உள்ளனர்.
  “எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். சிறப்பிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு  இயல்பானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது
எனத் தமிழ்ஞாலத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் கூறியுள்ளவாறு சிறப்பான பங்களிப்பிற்குரியவரை நாம் சிறப்பிக்க வேண்டுமல்லவா?
வீர வணக்கங்களுடன், உலகில் இருந்து உள்ளத்திற்கு இடம்மாறிய  வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவுதல், அவர்களையும் வணங்கிப் போற்றுதல்  முதலான வழிகளிலே நாம் சிறப்பிக்க வேண்டும். அதுதான் நமக்காக இன்னுயிர் ஈந்தவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும்.
பகைவன் தீங்கிழைக்கும் பொழுது பட்டெனச்சினந்து ஆற்றலை இழந்திடார் அறிவுடையார். உள்ளத்தில் வெற்றிக்கான கனலை வளர்த்து உரிய காலத்தில்  வெளிப்படுத்தி வெற்றி காண்பர். இதனைத் திருவள்ளுவர்
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்(திருவள்ளுவர், குறள் 487)
என்கிறார்.
  ஈழத்தமிழர்கள் தாயகத்தில் இருந்தாலும் புலம் பெயர்ந்து இருந்தாலும் அவர்கள் உள்ளங்களில் நீறுபூத்த நெருப்பாக விடுதலைக் கனல் உள்ளது. அந்தக் கனலில் இனப்படுகொலையாளிகள் வீழ்வது உறுதி!  ஈழத்தமிழர்கள் வெல்வது உறுதி! தமிழ் ஈழம் மலர்வது உறுதி!
விரைவில் சந்திப்போம் தமிழ் ஈழத்தில் நாம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 161, கார்த்திகை 05, 2047 / நவம்பர் 20, 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo
eezham-with-prapakaran01

Followers

Blog Archive