Saturday, February 26, 2011

Affection about moon: andre' sonnaargal 32:அன்றே சொன்னார்கள்32- திங்கள் மீது தீராக் காதல்

>>அன்றே சொன்னார்கள்32


திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள்

                                                                                                                

natpu கடலலைகள் நிலவினால் உருவாவதாகக் கி.மு.2ஆம் நூற்றாண்டில் செலியூகசு (Seleucus) என்னும் அறிஞர் குறிப்பிட்டார். பின்னர் உரோமன் அறிஞர் செனெக்கா (Seneca) நிலவொளிக்கும் கடலலைகளுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிட்டார். கி.பி. 499 இல் ஆரியபட்டரும் இதைக் குறிப்பிட்டுள்ளார். கி.பி.1687 இல் அறிஞர் ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விதியைத் தெரிவித்த பின்பு இக் கருத்து மேலும் வலுப்பட்டது. ஆனால், சங்கக்  காலத்திலேயே நிலவொளிக்கும் கடல் அலைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதன் வழி வழித் தொடர்ச்சியாகத்தான் மக்களிடம், முழுநிலா, இருள் நிலாக் காலங்களில் கடலலைகளின் வேகம் மிகுதியாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனலாம். மேலும் திங்களின் பல்வேறு தோற்றங்களை இயல்பாகவும் உவமையாகவும் குறிப்பிட்டுள்ளமை திங்கள் மீதுள்ள தமிழ் மக்களின் தீராக்காதலை வெளிப்படுத்துகின்றது.
குளிர்ந்த ஒளியைத் தருவதால் திங்களுக்குத் தண்கதிர் என்று பெயர். கலையென்பது நிலவொளியின் ஒரு பகுதியைக் குறிக்கும். நாள்தோறும் ஒவ்வொரு கலையாக வளர்வதும் பின்  தேய்வதுமாய தோற்றம் திங்களுக்கே உரியது. எனவே கலையுடையவன் என்னும் பொருளில் நிலா, கலையோன் எனப்பட்டது. இரவுப் பொழுதில் விளங்குவதால் இரவோன் எனவும் பெயர்.
’அல்லும் பகலும்’ என்னும் தொடரால் ’அல்’ என்றால் இரவு எனப் புரிந்து கொள்ளலாம். எனவே, இரவிற்குரிய திங்கள் அலவன் என்றும் அல்லோன் என்று பெயர்களைப் பெற்றது. 15 நாள் வளர்ந்து 15 நாள் தேய்ந்து 30 நாள் கொண்ட ஒரு கால அளவை வரையறுக்கத் திங்கள் உதவுகிறது. வரையறுத்தலை மதித்தல் என்பர்; அளவிடுதலை மதிப்பிடுதல் என்பர்.  காலத்தை வரையறுத்து மதிப்பிட உதவுவதால் ’மதி’ என்றனர். (எனவேதான் திங்களால் மதிப்பிடப்படும் கால அளவிற்குத் திங்கள் என அறிவியல் பெயர் சூட்டினர்.) இடையிடையே கறையுடையது போல் தோற்றம் அளித்தலால் கறையாகிய களங்கம் உடையவன் என்னும் பொருளில் களங்கன் என்றனர்.  குரங்கு என்றால் வளைவு என்று பொருள் உண்டு. வளைந்த பிறைவடிவில் தோன்றுவதால் பிறை நிலவைக் ’குரங்கு’ என்றனர்.  நிலவினில் காணப்படும் கறை, சிறுவர் கண்களுக்கு முயல் வடிவாகத் தோற்றம் அளிப்பதால் முயல் தங்கியுள்ள கூடு என்னும் பொருளில் முயற்கூடு என்றனர்.
இனிமையான கள்போன்று நிலவொளி இருப்பதால் இனிமை என்னும் பொருளில், தீ+கள்=தீங்கள் என்பது குறுகித் திங்கள் என்றாயிற்று.
நிறைமதி, தேய்மதி, வெள்ளுவா (பௌர்ணமி), காருவா(அமாவாசை), வளர்மதி, பிறைமதி, எட்டாம் நாள் திங்கள், மறுக்கொண்ட மதி, அரவு வாய்மதி, வைகறை மதி, பக்கமதி, நிலவு, மீன்சூழ் மதி, குழவித் திங்கள், திங்கள் குழவி, மதி அரும்பு, என நிலவின் பல்வேறு தோற்றங்கள் குறிக்கப் பெறுகின்றன.
வளைந்த கரையைக் குறிப்பிடும் பொழுது எட்டாம் பக்கத்துப் பிறைபோலும் உள்ளதாக,
    எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரை (118.2)
எனப் புலவர் கபிலர் குறித்துள்ளார்.
அரைநிலாபோல் உள்ள பெண்களின் நெற்றியைக் குறிப்பிட,
   மாக்கடல் நடுவண் எண்நாள் பக்கத்துப்
   பசுவெண் திங்கள் தோன்றியாங்கு (குறுந்தொகை : 129: 3-4)
எனக் கோப்பெருஞ்சோழவேந்தன் குறித்துள்ளார்.
புலவர் முடத்தாமக் கண்ணியார், யாழின் வாயைக் குறிப்பிடுகையில் எட்டாம் நாள் திங்கள் போல் அரைவட்டமாக இருப்பதாக                                                         
எண்நாள் திங்கள் வடிவிற்று ஆகி (பொருநராற்றுப்படை: 11) எனக் குறிக்கிறார்.
   மாக விசும்பின் வெண் திங்கள்
   மூவைந்தான் முறை முறைக்
   கடல்நடுவண் கண்டன்ன     (கோவூர் கிழார்: புறநானூறு : 400 : 1-3)
என்னும் பாடல் வரிகள் மூலம், ஆகாயமாகிய நீல வானில் வெண்ணிலா பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தேய்ந்து வளர்ந்து கடல் நடுவே முழுமதியாய்த் தோன்றுவது போல் எனக் குறிப்பிட்டுத் திங்களின் வளர்ச்சி பற்றிய அறிவைப் புலப்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு திங்களின் பல்வேறு தோற்றங்களைப் பல இடங்களில் காணலாம்.
  ...........சிறுகோட்டுக்
குழவித் திங்கள் கோள்நேர்ந்தாங்கு  
எனப் பெரும்பாணாற்றுப்படையில் (383-384) கடியலூர் உருத்திரங்கண்ணனார் நிலவு மறைப்பு (கிரகணம்) குறித்துக் கூறுகிறார்.
    பாம்புசேர் மதி
(பாலை பாடிய பெருங்கடுங்கோ : கலித்தொகை : 15 : 17)
    அரவுநுங்கு மதி
(குறுந்தொகை : 395 : 4)
    திங்களைப் பாம்பு கொண்டற்று (திருவள்ளுவர் : திருக்குறள் 1146)
என்பனவும் நிலவுமறைப்புக் காட்சிகளே!
நிலா எல்லாத் திசைகளிலும் ஒளிவீசுவதைப் புலவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
    திங்கள் போலத் திசை விளக்கும்மே (திருமுருகாற்றுப்படை: 98)
எனக் கூறுகிறார்.
புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், இருண்ட வானத்தில் நிலா நன்கு ஒளிர்வதை
    மங்குல் வானத்துத் திங்கள் (பெரும்பாணாற்றுப்படை 480)
எனக் குறிப்பிடுகிறார்.
நிலவொளி கிளர்ச்சியையும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் அதற்கெனவே மேல்மாடியில் நிலா முற்றத்தை அமைத்துள்ளனர்.
    நிலவுப் பயன்கொள்ளும் நெடுவெண் முற்றத்து
( மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் : நெடுநல்வாடை : 95)
    வெண்ணிலவின் பயன் துய்த்தும்
(கடியலூர் உருத்திரங் கண்ணனார் : பட்டினப்பாலை : 114)
என வரும் பாடலடிகள் இதை உணர்த்துகின்றன.
    நிலவுப் பயன்கொள்ளும் நெடுநிலா முற்றத்து
என்றும்
    சுடர் வெண் நிலவின் தொழில் பயன் கொண்ட
   மிசை நீள் முற்றம்
natpu என்றும் பின்னரும் நாம் சிலப்பதிகாரத்திலும் பெருங்கதையிலும் காணலாம்.
நிலா முற்றத்தை அரமியம் என மதுரைக் காஞ்சியும் அகநானூறும் குறிக்கின்றன.
அரமியத்தில் காணும் எழில் காட்சி (அரமியம் என்பதில் இருந்து) இரமியம் என மாறிற்று. (இரமியத்தில் இருந்து உருவானதே இரம்யா)
   நிலவு அடைந்த இருள் போல
   வலை உணங்கும் மணல் முன்றில்
(கடியலூர் உருத்திரங் கண்ணனார்: பட்டினப்பாலை : 82-83) என வருவது போல், நிலவொளியுடன் வெண்மணலை ஒப்பிட்டு மிகுதியான சங்கப்பாடல்கள் உள்ளன.
நிலவொளிக் கதிர் குறித்தும் குறிப்பிட்டுள்ளனர்.
    நிலவே, நீள்நிற விசும்பின்  பல்கதிர் பரப்பிப்
    பான்மலி கடலில் பரந்து பட்டன்றே
(வெள்ளிவீதியார் : நற்றிணை : 348 : 1-2)
பொதுவாகத் திங்களின் ஒளியை நிலவு என்றும் அதன் வளர்ந்துவரும் தோற்றத்தைப் பிறை என்றும் தேய்ந்து வரும் பக்கத்தை மதி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பிறையை உலகெங்கும் தொழும் பழக்கம் உள்ளதால்
    தொழுதுகாண் பிறை (குறுந்தொகை : 178 : 5)
என்றும்
   பலர் தொழச்
   செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி
    இன்னம் பிறந்தன்று பிறையே (குறுந்தொகை : 307 : 1-3)
என்றும்
    ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்(அகநானூறு : 236)
என்றும்
    ஆநாள் நிறைமதி அலர்தரு பக்கம்போல்
(ஆசிரியன் நல்லந்துவனார் : பரிபாடல் : 11: 31)
என்றும் கூறியுள்ளனர்.
மேற்கில் தோன்றும் நிலவு நாள்தோறும் வளர்பிறையாய் வளர்வதுபோல் ஆக்கம் சிறக்கவும் கிழக்குத் திசையில் தோன்றும் நிலா நாள்தோறும் தேய்வதுபோல் எதிரிகளின் ஆக்கம் கெடவும் வாழ்த்தி,
    குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்
   வழிவழிச் சிறக்க நின் வலப்படு கொற்ற
   குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியின்
   தேய்வன கெடுக, நின் தெவ்வர் ஆக்கம் (மாங்குடி மருதனார் : மதுரைக்காஞ்சி : 193-196)
என்னும் பொழுது நிலா, கிழக்கில் தோன்றும் பொழுது தேய்வதையும் மேற்கே தோன்றும் பொழுது வளர்பிறைகளாக வளர்வதையும் குறிப்பிட்டுள்ளார். (வளர்பிறைக் காலத்தில் பகலிலேயே தோன்றும் நிலா சூரியனின் ஒளியில் மங்கித் தெரிந்தும் தெரியாமலும் இருக்கலாம்; இரவில், நிலா தெரியும் பொழுது மேற்குத் திசையில் இருக்கும்.) ஆக வளர்நிலா பிறையாகவும் தேய்நிலா மதியாகவும் சொலலப்படுகின்றது.
இதனைப் பின்னர் வந்த திருக்குறளில் (782)
    நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
   பின்னீர பேதையார் நட்பு
எனவும் நாலடியாரில் (125)
     பெரியவர் கேண்மை பிறை போல நாளும்
    வரிசை வரிசையாய் நந்தும் - வரிசையால்
    வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே
     தானே சிறியார் தொடர்பு
எனவும் நாம் காணலாம்.
கார்காலப் பிற்பகுதியில் வானில் பால்போலும் நிலவு கதிர்களைப் பரப்பும் முழுமதியைச் சுற்றிக் காணப்படும் வட்டம் குறிக்கப் பெறுகிறது.
திங்கள் பெண்களுடன் உவமிக்கப்படும் இயற்கைச்சூழலாகவும் பல இடங்களில் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது. இவ்வாறு இடம் பெற்றுள்ள செய்திகள் திங்களைப் பற்றிய ஆராய்ச்சி அறிவு பழந்தமிழகத்திலேயே இருந்ததை உணர்த்துகிறது. எஞ்சியவற்றைப் பிறிதொரு முறை காண்போம்.
         உலகெங்கும் உள்ள காய்கதிர் போன்ற கொடுங்கோலாட்சி மறைந்து   

          நிலவுபோல் தண்மையான ஆட்சி நிலவட்டும்!

- இலக்குவனார் திருவள்ளுவன்




Wednesday, February 23, 2011

pioneer in clocks maker: andre' sonnaargal 31: அன்றே சொன்னார்கள் மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர்

>>அன்றே சொன்னார்கள் 31

அன்றே சொன்னார்கள் 

 மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர்

                                                                                                                

natpu கடிகாரத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான கிளாக்கு (clock) மணி என்னும் பொருளைத் தரும் கிளோக்கா என்னும் செல்திக்கு (Celtic Language) சொல்லில் இருந்து உருவானது. மணி என்பது முதலில் ஒலிக்கும் மணியைக் குறித்தது. மணி அடித்து நேரத்தை அறிவித்ததன் அடிப்படையில் இச் சொல் பின்னர் மணியைக் குறிப்பதாக மாறியது.

பீட்டர் என்கின் என்னும் பூட்டுத் தொழிலாளி கி.பி.1510இல் நிலைக் கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். கி.பி.1656இல் இயூயன்சு என்னும் ஆலந்து நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஊசல் கடிகாரத்தை உருவாக்கினார். இவர் 60 நொடி ஒரு நிமையம், 60 நிமையம் 1 மணி, 24 மணி 1 நாள் என்ற கணக்கீட்டில் கடிகாரத்தை அமைத்தார். இத்தகைய கடிகாரங்கள் முதலில் மரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டன; அடுத்து மாழையாலும் (உலோகத்தாலும்) கண்ணாடியாலும் கடிகாரப் பகுதிகள் உருவாக்கப்பட்டன.
கனடா நாட்டைச் சேர்ந்த வாரன் மோரிசன் கி.பி.1927இல் கண்ணாடியால் ஆன கடிகாரத்தை உருவாக்கினார். மின்திறனும் தொடர்ச்சியாக மின்கலனும் பயன்பாட்டில் வந்த பின்,  மின் கலனைக் கொண்டு இயங்கும் கடிகாரத்தை அலெக்சாண்டர் பெயின் கி.பி.1840இல் கண்டு பிடித்தார். அதன்பின்னர் வெவ்வேறு மாற்றங்களைக் கடிகாரங்கள் அடைந்துள்ளன.

இருப்பினும் காலத்தைக் கண்டறிய பல்வேறு வழிமுறைகள் தொன்மைக் காலத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. காலத்தின் சிறப்பை அறிந்து உணர்த்திய தமிழ் ஆன்றோர்கள், காலத்தின்  உட்பிரிவாகிய பெரும் பொழுதுகளையும் பெரும் பொழுதுகளின் உட்பிரிவாகிய சிறு பொழுதுகளையும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே பகுத்துள்ளனர். முதலில் இவர்கள் பூவின் மலர்ச்சியைக் கண்டு காலத்தைக் கணக்கிட்டனர். மாலையில் மலரும் முல்லை; அந்தியில் பூப்பது அந்தி மந்தாரை என்னும் சொல் வழக்குகளும் அவற்றின் அடிப்படையிலே தோன்றியவையே.

பிறகு சூரியனின்  இயக்கம் அதனால்  உருவாகும் நிழல் இவற்றை அறிந்து அதற்கேற்ப நேரத்தைக் கணக்கிட்டனர். சூரிய இயக்கத்தின் அடிப்படையில் சுமேரியர்களும் நிழலின் அடிப்படையில் எகிப்தியர்களும் நேரத்தைக் கணக்கிடத் தொடங்கினர். அராபியர்களும் இவை போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு நேரத்தைக் கணக்கிட முயன்றனர். மேலே உள்ள கிண்ணத்தில் உள்ள நீர் அதனடியில் உள்ள மற்றோரு கிண்ணத்தில் சொட்டுச் சொட்டாக விழுவதைக் கொண்டும் விழுந்த நீரின் அளவைக் கொண்டும் கிரேக்கர்களும் உரோமானியர்களும் கி.மு.320 அளவில் நேரத்தைக் கணக்கிட்டனர்.

சூரியன் இல்லாத பொழுதும் நேரமறிய தமிழ் மக்கள் கண்டுபிடித்ததே குறுநீர்க்கன்னல் எனப்பெறும் நாழிகை வட்டிலாகும். அடுத்துச் சிறிய அளவிலான மணிகாட்டியைக் கண்டு பிடித்து அதனை மாலைபோல் கழுத்தில் அணிந்து கொண்டனர். எனவே, அதற்குக் < கடிகைஆரம் > கடிகாரம் எனப் பெயரிட்டனர். (ஆரம் - மாலை) (மணிக்கட்டில்-கையில் கட்டப்படும் கடிகாரம் கைக்கடிகாரம்)
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் என்னும் சங்கப் புலவர்

      பொழுதுஅளந்து அறியும்  பொய்யா மாக்கள்
     தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி
     எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின்
    குறுநீர்க் கன்னல் இனைத்தென்று இசைப்ப
                                                                                 (முல்லைப்பாட்டு: 55, 58)
என பொழுதினை அறிந்து அறிவிக்கும் வல்லோர் நேரத்தைக் குறுநீர்க்கன்னலின் மூலம் கண்டறிந்து தெரிவித்ததாய்க் கூறுகிறார். சிறிய அளவில் நீர் விழும் கிண்ணம் என்பதால் குறுநீர்க் கன்னல் எனப்பட்டது.
வெளியே செல்ல முடியாத நேரத்திலும் சூரியன் காட்சி அளிக்காத நேரத்திலும் மணியைக் கண்டறிய கண்டுபிடிக்கப்பட்டதே குறுநீர்க்கன்னல் என்னும் மணிப்பொறி.
மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் என்னும் மற்றுமொரு சங்கப்புலவர், கதிரவனின் கதிரைக் கொண்டு காலமறிய முடியாதபடி முகிழ் சூழ்ந்து அச்சம் தரும் வெள்ளம் பாய்ந்து ஓடும் மழைக்காலத்திலும் குறுநீர்க்கன்னல் மூலமாக நேரம் அறிய முடிவதைக் குறிப்பிடுகிறார்.  இப்பாடல் வருமாறு:

     குறுநீர்க் கன்னல் எண்ணுதல் அல்லது
     கதிர்மருங்கு அறியா அஞ்சுவரப் பாஅய்            (அகநானூறு: 43:6-7)

தமிழ்த்தேசியப் பெரும்புலவர் இளங்கோ அடிகள் நாழிகைக்கணக்கர் பற்றிக் குறிப்பிடுகிறார். (சிலப்பதிகாரம் 5: 49) (இதற்கான உரையில்

      பூமென் கணையும் பொருசிலையும் கைக்கொண்டு
     காமன் திரியும் கருவூரா - யாமங்கள்
     ஒன்றுபோய் ஒன்றுபோய் ஒன்றுபோய் நாழிகையும்
     ஒன்றுபோய் ஒன்றுபோய் ஒன்று

என்னும் நாழிகை பற்றிய பாடல் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.)
புலவர் சீத்தலைச் சாத்தனார்
குறுநீர்க் கன்னலின் யாமங் கொள்பவர் (மணிமேகலை : 7: 14-15)
இருந்ததைக் குறிப்பிடுகிறார்.
கந்தபுராணத்தில் குடிகை என்னும் நீர்க்கலம் மணிப்பொறியாக விளங்கியிருந்தமை
      அரும்புனல் குடிகை மீது
என்னும் தொடரில் குறிக்கப்பட்டுள்ளது.
காலச் சூழலுக்கேற்ப மணியை அறியும் பல்வகை மணிப்பொறிகளை நம் முன்னோர் உருவாக்கி உள்ளனர். நாமோ ஞாலச் சூழலுக்கேற்ப கொள்கைகளை மாற்றும் தலைவர்களை உருவாக்கி உள்ளோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்


நன்றி : நட்பூ  இணைய இதழ்  11.02.2041 *** 23.02.2011

Monday, February 21, 2011

Save letters: andre' sonnaargal 30: அன்றே சொன்னார்கள்30 எழுத்தைக் காப்போம்!

>>அன்றே சொன்னார்கள்30


எழுத்தைக் காப்போம்!

                                                                                                                

உலகம் பார்வைகள் இணைக்கப்பட்ட பட்டை. ஒவ்வொரு மொழியும் மறையும் பொழுது அதற்குரிய பார்வைப் பகுதியை இழந்து விடுகிறது என்கிறார் பிரான்கோயிசு (François Grosjean 1946, மேனாள் இயக்குநர், மொழி-பேச்சு ஆய்வகம், சுவிட்சர்லாந்து) மொழியைக் கண்ணாகக் கருதி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்த கருத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு              ( திருக்குறள் 392)
என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
இதனையே ஔவையார்  எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் (கொன்றை வேந்தன் 7) என்கிறார்.
natpu பொதுவாக இவற்றிற்கு விளக்கம் தரும் அறிஞர்கள் எண்ணை அறிவியலாகவும  எழுத்தைக் கலையியலாகவும் கருதி விளக்கம் தருகின்றனர். இவை இரண்டையே கண்களாகக் கூறுவதாக எழுதிவருகின்றனர்.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் என அடுத்த குறளிலேயே (திருக்குறள் 393) கூறும் தெய்வப்புலவர் அதற்கு முந்தைய குறளில் தனியாகக் கல்வியை அறிவியல் கல்வி என்றும் கலைக்கல்வி என்றும் பிரித்துக் கூறத் தேவையில்லை.
கல்விக்கு அடிப்படையாய் அமைவன எண்ணும் எழுத்துமாய குறியீடுகள் என்பதை உணர்த்தவே எண்ணையும் எழுத்தையும் கண்களாகக் கூறுகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
இதனை நன்குணர்ந்த நம் முன்னோர் எண் எழுத்து உருக்களைப் பேணி வந்துள்ளனர். கல்வெட்டுகளில் உள்ள மாற்றங்களுக்கும் தமிழ் மொழி எழுத்து வளர்சிக்கும் தொடர்பில்லை என்பதை உணர்ந்தால் தமிழ் எழுத்து மாறா வடிவுடன் நிலைத்து வருவதை உணரலாம். எனவேதான்
தொல்லை வடிவின எல்லா எழுத்தும்
என்கிறது நன்னூல் . அதனை அதற்கு 1000 ஆண்டுகளுக்குப் பின் வந்த இலக்கண விளக்கமும் வழி மொழிகின்றது. (நன்னூல்: எழுத்ததிகாரம்: 5.உருவம்: நூற்பா 98 - இலக்கண விளக்கம்: எழுத்தியல்: நூற்பா 23) அஃதாவது எல்லா எழுத்துமே மிகத் தொன்மையான காலத்தில் இருந்துமாறாமல் வருகின்றன என இலக்கண நூல்கள் கூறுகின்றன. 
காலந்தோறும் சிலர் எழுத்து வடிவங்களில் குறை கண்டு மாற்ற வேண்டும் என்று துடித்ததால்தான்
எண்ணெழுத்து இகழேல் (ஆத்திச்சூடி 7)
natpu என்று ஔவையார் தெளிவாகவே கூறிச் சென்றுள்ளார்.
எண், எழுத்து வடிவங்களில் சிதைவு உண்டானால் அவை வெளிப்படுத்தும் அறிவு வளத்திலும் சிதைவு ஏற்படும் என்பதை உணர்ந்தே இவற்றை நம் முன்னோர் போற்றி உள்ளனர். மொழி வழித் தேசிய இனம் அழியாமல் இருக்க மொழி அழியாமல் காக்கப்படவேண்டும்; மொழி காக்கப்பட அதன் இலக்கியங்கள் பேணப்பட வேண்டும்; இலக்கியங்கள் போற்றப்பட மொழியின் எண்ணும் எழுத்தும் காப்பாற்றப்பட வேண்டும். இஃது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்.
இந்திய அரசியல் யாப்பும் (Constitution of India: பிரிவு 29(1))   இதை உணர்ந்தே எழுத்து வடிவங்கள் காக்கப்பட வேண்டும் என விதி வகுத்துள்ளது. ஆனால், நடைமுறையில் தேவநாகரியையும் கிரந்தத்தையும் புகுத்திப் பிற தேசிய மொழிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
உலகத் தாய்மொழி நாளில்
எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே!
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே!
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே!
என்னும் பாவேந்தர் பாரதிதாசன் முழக்கங்களைக் கூறி 
நம் தமிழ் மொழியின் எண்ணையும் எழுத்தையும் காக்க உறுதி கொள்வோம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments

Sunday, February 20, 2011

andre' sonnaargal 29: earn wealth:அன்றே சொன்னார்கள் 29 :செய்க பொருளை

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள் செய்க பொருளை!

                                                                                                                

natpu

பொருளியலுக்கான இலக்கணத்தை வரையறுக்கும் பொழுது பொருளியல் அறிஞர் ஒருவர், பொருள் பகைவரை அழிக்கும் ஆயுதம் என்றார். சான்றோர் சிந்தனை, கால எல்லைகளைத் தாண்டியும் ஒன்றுபடும் என்பதற்குச் சான்றாக அல்லது பழமைக்கும் பழமையாகவும் புதுமைக்குப் புதுமையாகவும் திகழும் சங்க இலக்கியச் சான்றோர் மொழிகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ள  பெருமைக்குச் சான்றாக எடுத்துக் கொள்ள சில இலக்கிய வரிகளை நாம் காணலாம்.
பகைவரின் தருக்கை அழிக்கும் கூரிய படைக்கலம் பொருள்; ஆதலின் பொருளை உண்டாக்குக எனக் கட்டளையிடும் தெய்வப் புலவர் திருவள்ளுவர்,
    
       செய்க பொருளை செறுநர் செறுக்கருக்கும் எஃகு
       அதனில் கூரியது இல்                                  (திருக்குறள் 759 )
என்கிறார் மேலும்,

     பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
      எண்ணிய தேயத்துச் சென்று                     (திருக்குறள் 753)

என்னும் தமிழ்மறை மூலம், பொருள் ஆகிய அணையா விளக்கு அதனை உடையவர் அவர் நினைத்த நாட்டிற்குச் சென்று பகை ஆகிய இருளைப் போக்கச் செய்யும் என உணர்த்துகிறார். பகை இருளை அழிக்கும் விளக்கு என்றாலும் பகையைப் போக்குவது படைக்கருவிதானே!

பொருள் பகையை வெல்ல மட்டும் அல்ல; அருளாளர்க்கும் தேவை. ஏனெனில் பொருள் இல்லையேல் அவர்களின் அருள் உள்ளத்திற்கு வாய்ப்பு இல்லை. எனவேதான் புலவர் மதுரைத் தத்தங் கண்ணனார், அறிவை மயங்கச் செய்யும் வறுமையால் ஏற்படும் மன வருத்தத்தைப் போக்கும் அருள் நெஞ்சம் மிகுதியாக உடையவராக இருப்பினும் பொருள் இல்லையென்றால் யாருக்கும் கொடுக்க இயலாது  என்பதை உணர்த்த

     இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
    அருள்நன்கு உடையர் ஆயினும் ஈதல்
    பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது          (அகநானூறு 335: 1-3)
என்கிறார்.

முன்னரே பார்த்தவாறு பொருள் இருந்தால் அறமும் இன்பமும் கிடைக்கும் என்பதற்காகக் குறுக்கு வழிகளில் பொருளை உண்டாக்கக்கூடாது என்பதற்காக
    ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
    ஏனை இரண்டும் ஒருங்கு                               (திருக்குறள் 760)
என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

அஃதாவது, பொருள் மிகுதியாக (காழ்ப்ப) உடையவராய் இருப்பினும் அப்பொருள் நன்னெறியால் (ஒண்பொருள்) வந்தால்தான்  ஏனைய அறமும் இன்பமும் எளிதில் கிடைக்கும் என நேர்மையான வழியை வலியுறுத்துகிறார்.
ஆகவே, அருளுடைமையுடனும் அன்புடைமையுடனும் வராத பொருளால் வரும் ஆக்கத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தி

   அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்
    புல்லார் புரள விடல்                                        (திருக்குறள் 752)
என வேண்டுகிறார்.

இவையெல்லாம் பகையை வெல்லும் கருவியாகவே பொருளைக் கருதினாலும்  நெறிசார்ந்த இயலாகவே அதனைத் தமிழர் கொண்டு இருத்தலை நன்கு விளக்குகின்றன. எனவே, எதற்காகப் பொருளை உண்டாக்க வேண்டும் என்பதுடன், எவ்வாறு உண்டாக்க வேண்டும் என்பதிலும் பழந்தமிழர் கண்ணுங் கருத்துமாக இருந்துள்ளனர்.
தீய வழிகளில் அடையாத பொருளே பகையை வெல்லும் படைக்கருவி என உணர்த்தவே, அறச்செயலும் பகைவெல்லலும் இன்பம் அடைதலும் பொருளால் முடியும் என விளக்கும் புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ,
     அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்
    பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
    புரிவமர் காதலில் புணர்ச்சியும் தரும்            (கலித்தொகை 11:1-3)
என்கிறார்.
  புலவர்  மதுரை ஈழத்துப் பூதன்தேவனார், பகைவரின் செருக்கை (செருவோர் செம்மல்) ஒழித்தலும் தம்மைச் சேர்ந்தவர்க்கு ஒரு துன்பம் உண்டானபோது (உறும் இடத்து) உதவுதலுமான ஆண்மையும் இல்லத்தில் ஒன்றும் செய்யாமல் சோம்பி இருப்போர்க்கு இல்லை என்கிறார். அவரது பாடல் வரிகள் பின்வருமாறு :-

   செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு
   உறும்இடத்து உய்க்கும் உதவி ஆண்மையும்
   இல்இருந்து அமைவோர்க்கு இல்                     (அகநானூறு 231: 1-3)

ஈழத்துப் புலவர் உணர்த்தியதற்கு இணங்க ஈழப்பகைவரை ஒடுக்கலும் ஈழத்தமிழரின் துன்பம் போக்கலும் சோம்பேறிகளுக்கு இயலாது என்பதை உணர்ந்தால் விரைவில் துன்பம் போக்கிப் பகையை ஒடுக்கலாம் அல்லவா?
- இலக்குவனார் திருவள்ளுவன்

Thursday, February 17, 2011

the lazy - the poor: andre' sonnaargal 28: அன்றே சொன்னார்கள் - செயல்படாமல் இல்லத்தில் இருப்போரே இல்லாதோர்!

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள்

செயல்படாமல் இல்லத்தில் இருப்போரே இல்லாதோர்!

                                                                                                                

natpu பொருள் பெற உழைப்பும் பெற்றபின் பகிர்வும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது பொருளியல் அறிஞர்கள் கருத்து.
பொதுநலப் பகிர்விற்காகப் பொருளைத் திரட்டும் உழைப்பே தமிழரின் முதன்மை நோக்கமாகும். நம் முன்னோர் பேராசையினால் செல்வம் சேர்க்க எண்ணியதில்லை. பிறருக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே செல்வத்தைத் திரட்ட முயன்றனர். அதே நேரம் காதல் இன்பத்தினும் இல்லற இன்பத்தினும் செல்வம் உயர்ந்ததில்லை என்ற மனப்பான்மையும் இருந்துள்ளது. ஆனால், இந்த எண்ணத்தினால் எவ்வகை முயற்சியும் இன்றி, இல்லத்திலேயே தங்கி விடுதல் கூடாது என்றும் கருதினர். பொருள் தேடும் முயற்சியின்றி இல்லத்திலேயே தங்குபவரையே இல்லோர் எனக் குறித்துள்ளனர். எனவேதான் இல்லோர் என்பது பொருள் இல்லாதாரை மட்டுமே குறிப்பதாயிற்று.

புகழும் இன்பமும் கொடைச் செயலும் முயற்சியின்றி வீட்டில் இருப்போர்க்கு அருமையாகவும் வாய்க்காது என்பதைப் புலவர் கருவூர்க் கோசனார்

              இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
    அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் (நற்றிணை 214: 1-2)
எனக் கூறுகிறார். (ஈனும்(என்பது ஈன்ம் என்றாயிற்று) - தரும்)
 
பிறருக்குக் கொடுப்பதால் பெறும் அறப்பயனும் நாம் துய்த்தலால் அடையும் இன்பமும் பொருள் இல்லாதவர்க்கு இல்லை எனப் பொருள் செய்வதற்குரிய தொழிலை மேலும் மேலும் எண்ணுவாயாக என்று 
natpu ஈதலும் துய்த்தலும இல்லோர்க்கு இல்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி    (குறுந்தொகை 63)

என்னும் வரிகள் மூலம் புலவர் உகாய்க்குடி கிழார் விளக்குகிறார்.

பிறருக்குக் கொடுத்தது போக எஞ்சியதைத் துய்த்தலே இல்லறத்தார் கடமை என்பதால் ஈதலுக்கு அடுத்துத் துய்த்தலை வைத்துள்ளதாக உரையாசிரியர்கள் விளக்கம் தருவர்.

அறத்திற்கும் இன்பத்திற்கும் பொருள் அடிப்படையாய் இருப்பதால்தான் அறம், பொருள், இன்பம் என வரிசைப்படுத்தி நடுவில் பொருளை வைத்தனர். இதனை நாலடியார் (114)

         வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
         நடுவணது எய்த இருதலையும் எய்தும்

என நடுவில் உள்ள பொருளை அடைந்தால் பிற இரண்டையும் அடையலாம் எனக் கூறுகிறது.

      ஆராயில்தானே அறம் பொருள்இன்பம் என்று
      ஆர்ஆர் இவற்றிடை அதனை எய்துவார்
      சீரார் இருதலையும் எய்துவர்

எனத் திவ்வியபிரபந்தமும் (2695) கூறுகிறது. அறம் பொருள் இன்பம் இவற்றில் இடையில் உள்ளதை எய்தினால் மற்ற இரண்டையும் எய்தலாம் என இவ்வாறு பலர் கூறியுள்ளனர்.

எனவே, அறத்திற்கும் இன்பத்திற்கும் அடிப்படையாக உள்ள பொருளை - முன்னோர் செல்வம் இருக்கின்றது எனச் சோம்பலுடன் இல்லத்தில் தங்கி விடாமல் - வெளியே  சென்று சம்பாதித்து வரவேண்டும் என்பதே பழந்தமிழர் நெறி.

தமிழர் அனைவரும் உரிமை இன்பம் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதற்கு நாமும் பொருள் ஈட்டுவோம்! நானிலத்தில் உயர்வோம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்

Earn money to give! andre' sonnaargal 27 : அன்றே சொன்னார்கள் 27 ஈட்டுவோம் பொருளை ஈதலுக்கே!

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள்  

ஈட்டுவோம் பொருளை ஈதலுக்கே!

                                                                                                                

natpu
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை எனத் தெய்வப்புலவரின் தமிழ்மறை (குறள் 247) உணர்த்துகிறது. எனினும் பொருளைத் திரட்டுவதில் தகாத முறை எதுவும் பின்பற்றக் கூடாது என்பதுதான் தமிழர் நெறி. தனி மனிதனாயினும்  அரசாயினும் முறைவழியே பொருள் ஈட்டி நல்வகையில் செலவழிக்க வேண்டும் என்று இக்காலத்தில் வலியுறுத்துவதை அன்றே நம்மவர்கள் வலியுறுத்தியமையால் வேறு சில பாடல்களையும் இன்றும் நாளையும் பார்ப்போம்.
       கேள்கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்
      கேள்அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்
      ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து
      . . . . . .       . . . . . . .        . . . . . . . .
      செயல் அருஞ் செய்வினை முற்றினம்                   (அகநானூறு 93 : 1-7)

இப்பாடலில், உறவினர்களின் துன்பங்களைப் போக்கி அவர்களைத் தாங்கிடவும் சுற்றத்தார் குறைகளைத் தீர்த்திடவும் உறவினர்  அல்லாதவரும் உறவினர்போல் பழகிடவும் ஆள்வினைக்கு வேண்டிய முயற்சியுடன் சிறந்து பொருள் ஈட்டும் அருஞ் செயலை ஊக்கத்துடனும் விருப்பத்துடனும் முடித்தோம் எனத் தலைவன் தனக்குள் எண்ணுவதாகக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியுள்ளார். 

(கேள்-நெருங்கிய உறவினர்; கிளைஞர்-தொலைநிலை சுற்றத்தார்; கேள்அல் கேளிர்- உறவினரல்லாத ஆனால் உறவினர் போல் கருதப்பட வேண்டிய அயலார்; கெழீஇயினர் ஒழுக- நெருங்கிப் பழகுதல்;) 

இப்பாடல் வரிகளைப்படிக்கும் நாம் முழுப்பாடலில் உள்ள வேறு சிறப்புகளையும் அறிதல் நன்று.

இப்பாடலில் 1) (ஆத்திமாலை அணிந்த) சோழனின் அறம் பொருந்திய நல்ல அவையை உடைய உறையூரைப் போன்ற சிறந்த அணிகலன்களைப் பெற்றதாகப் பெருமிதம் கொள்கிறான்.
      ஆரங்கண்ணி அடுபோர்ச் சோழர்
     அறம்கெழு நல்அவை உறந்தை அன்ன
     பெறல் அரு நன் கலம் எய்தி                 (அகநானூறு 93 : 4-6)

2) தலைவியின் நெற்றியும் (வேம்பு மாலை அணிந்த பாண்டியனின்) மதுரையில் உள்ள நாளங்காடியைப் போன்ற நறுமணம் மிக்கது எனப் பாராட்டுகிறான்.
     வாடா வேம்பின் வழுதி கூடல்
     நாள் அங்காடி நாறும் நறுநுதல்
     நீள் இருங் கூந்தல்                       (அகநானூறு 93 : 9-11)

3) அச்சம் தரும் யானையையும் பெரிய தேரையும் உடைய சேரனின் செல்வம்  மிகுந்த அகன்ற தலைநகரான கருவூர் என மகிழ்கிறான்.
           கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை
          திரு மா வியல் நகர்க் கருவூர்
            (அகநானூறு 93 : 20-21)
அருமையான உவமைகள் மூலமாக மூவேந்தர் சிறப்புகளையும் நம்மால் ஒரே பாடலில் அறிய முடிகிறது.

(இப் பாடலில் வரும் வானளாவிய நகர் பற்றியும் நுரைப்படுக்கை பற்றியும்உள்ள செய்திகளைத் தொடர்புடைய தலைப்பில் பார்ப்போம்)
 
பாடலின் தொடக்கத்தில், கடமையை முடித்துத் திரும்பும் தலைவன் உழைப்பின் நோக்கத்தைக் கூறுவது மிக உயர்ந்ததல்லவா? இதன் வழியாகப்,  பொருள் ஈட்டுவது தனக்கு மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அறிந்திராத அயலாருக்கும் என்பதே ஒவ்வொரு தமிழனின் அற நெறியாக உள்ளது என்பது நன்கு தெளிவாகிறதல்லவா? 

இன்றும் நாம், உயர்ந்த நோக்கத்துடன் பொருள் ஈட்டினால் உலகம் நம் குரல்களுக்குச் செவிமடுக்கும்! அடிமை விலங்கினை  அறுத்தெறியும்! அக்காலம் விரைவில் வருவதாக!
- இலக்குவனார் திருவள்ளுவன்



Wednesday, February 16, 2011

Will go to accumulate wealth - andre' sonnaargal 26:அன்றே சொன்னார்கள் 26 - செல்வம் திரட்டச் செல்வோம்!

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள் 

செல்வம் திரட்டச் செல்வோம்!

                                                                                                                

நெறியுரைப் பொருளியல் என்பது பொருள் அல்லது செல்வத்தின் நோக்கம் ஒழுக்கம் சார்ந்ததாக, முறை சார்ந்ததாக, மதிப்பு சார்ந்ததாக இருக்க வேண்டும் எனப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொருளியல் அறிஞர்கள் வரையறுத்துள்ளனர். ஆனால், தமிழர்களின் தொடக்கக்கால நெறியே செல்வத்தின் பயன் என்பது மதிப்பார்ந்த நெறியாகவே உள்ளது.
செல்வத்தின் பயன் பிறருக்குக் கொடுத்தல் என மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
செல்வத்தின் பயனே ஈதல்             (புறநானூறு 189: 7 )                                           
என்னும் வரி மூலம் விளக்கி இக்கோட்பாட்டை உணர்த்துகிறார்.
அன்பும் அல்லன அறியாமையும் மென்மையும் நல்லொழுக்க இயல்பும் எலும்பையும நெகிழச் செய்யும் இனிய சொல்லும் பிற பண்புகளும் ஒத்து உள்ள தலைவனும் தலைவியும் இனிய வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

அன்பும் மடனும் சாயலும் இயல்பும்
என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்
ஒன்றுபடு கொள்கை                                    (அகநானூறு 225 : 1-3)                                              
என இவ்வாழ்க்கையை விளக்குவார் புலவர் எயினந்தை மகனார் இளங்கீரனார். (என்பு- எலும்பு; கிளவி - சொல்)  இத்தகைய வாழ்க்கையில் செல்வம் திரட்டச் சென்ற தலைவன் திரும்பி வரும் காலத்தை ஆவலுடன் எதிர்நோக்கும் தலைவி, தன் தலைவன் பொருள் ஈட்டச் சென்ற பொழுது  கூறியதை மனத் திரையில் பார்க்கின்றாள்.
natpu செல்வத்தைக் கொடுப்பது என்பது முன்னோர் திரட்டிய பெரும் பொருளை வாரி வழங்குவது அன்று; தன் உழைப்பில் பெற்ற பொருளைப் பிறருக்கு வழங்குவதே. எனவே, தான் செல்வம் திரட்டும் பொருட்டுப் பிரிந்துதான் ஆக வேண்டி உள்ளது என உணர்த்துவதற்காகத் தலைவன் செல்வத்தின் தேவையைக் கூறினான். இத்தகைய முயற்சி சார்ந்த பெரும் பண்பு பழந்தமிழர்க்கு உரியது. எனவேதான் ஒவ்வொருவரும் ‘திரைகடலோடியும் திரவியம் தேடுஎன்பதுபோல்  நாடுகடந்தேனும் செல்வம் திரட்டி வந்தனர். எனவே தலைவியும் தலைவனின்  முயற்சியின் பெருமை கருதியும் செல்வததின் அருமை கருதியும் பிரிவைப் பொறுத்துக் கொண்டாள்.
 
இதனைப் பாலைபாடிய பெருங்கடுங்கோ
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும்         (அகநானூறு 155 :1-3)                                          
என்னும் வரிகளில் தெரிவிக்கின்றார்.

அறன் கடைப்படுதல் என்றால் அறவழியில் இருந்து நீக்கப்பட்ட பாவச் செயல்கள்; இச்செயல்கள் இல்லா வாழ்க்கைக்கு உதவுவது செல்வம். நம்மை நாடி வருபவரிடம் இல்லை என்று சொல்லும் நிலைமை பாவச் செயல் என விளக்கம் தருகிறார் பரிமேலழகர். செல்வம் இருந்தால் இல்லாதவரிடம் இல்லை என்று சொல்லும் இழிநிலை வராது அல்லவா? அதுதான் அறன் கடைப்படாஅ வாழ்க்கை ஆகும். அப்படியாயின் செல்வத்தின் பயன் அடுத்தவர்க்கு உதவுவதுதானே!

பிறன்கடைச் செல்லுதல் என்றால் நாம் பிறரிடம சென்று வேண்டும் - இரக்கும் - நிலைமை.   உழைத்துப் பொருளை ஈட்டாமல் அடுத்தவரிடம் பொருள் உதவி நாடி இரக்கும் நிலைமையும் பாவச் செயலே என்பது தமிழரின் உழைப்பு நெறி. பிறரை நாடாமல் நல் வாழ்க்கை வாழ உதவுவதும் செல்வமே என்கிறார் புலவர்.

தலைவனும் தலைவியும் வாழும் இன்ப வாழ்வைக் கூற வந்த புலவர் செல்வத்தின் நோக்கத்தையும் சிறப்பாக விளக்கி உள்ளார். இதன் மூலம் தமிழர்களின் செல்வத்திற்கான இலக்கண வரையறை நெறியுரை சார்ந்ததே எனத தெளிவாக விளங்குகிறது அல்லவா?

நமக்குரிய தலைமையின்றி நாம் அடிமையாய்ப் பிழைத்து வாழும் நிலைமைக்குக் காரணம் செல்வத்தின் இலக்கணத்தைப் புரிந்து கொள்ளாமைதானோ?
-         இலக்குவனார் திருவள்ளுவன்



Monday, February 14, 2011

Pioneer in Normative science: andre' sonnaargal 25 : அன்றே சொன்னார்கள் 25 நெறியுரைப் பொருளியலை வகுத்தவர் நாமே!

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள் 25
நெறியுரைப் பொருளியலை வகுத்தவர் நாமே!

                                                                                                                

natpu  
நலம்சார் பொருளியல் குறித்து ஆடம் சுமித், ஆல்பிரட் மார்சல் முதலானவர் கருத்துகளை முன்னரே தமிழ் இலக்கியங்கள் தெளிவாக்கியுள்ளதை  நாம் பார்த்தோம். இவர்களுக்குப் பின்னர் வந்த அறிஞர்கள் பொருளியல் இயல்புரை அறிவியலா? நெறியுரை அறிவியலா? (Positive Science or Normative Sciene)எனக்கேள்வி கேட்டனர். பொருளியல் ஒரு புறம் உள்ளதை உள்ளவாறு ஒழுங்குபடுத்தப்பட்டு விளக்கும் அறிவியல் என்றனர். மறு புறம் , ஆசிமாகாபுளசு (Asimakopulos) என்னும் அறிஞர்   பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற நெறியுரைக் கோட்பாட்டை வகுக்கும் இயல் என்றார். முன்னது நிகழ்வனவற்றை விளக்கும் என்றால் பின்னது பொருளியலானது நீதி நெறி, ஒழுக்க நெறிக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என வலியுறுத்தும் அறம் சார் கருத்துகளை வலியுறுத்துவது.

செல்வம் என்பது அதன் அளவைப் பொறுத்து அமையாமல் எவ்வகையில் உற்பத்தி செய்யப்படுகிறது? எவ்வாறு பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அமையும் என்பதும் நலம்சார் பொருளியலின் அடிப்படைக் கருத்தாகும்.

தமிழர் நெறி என்பதும் அறவாழ்வு வாழ்வதற்காகப் பொருள் ஈட்ட வேண்டும் என்பதே. தன் முயற்சியில் நேர்மையாக உழைத்துப் பொருள் ஈட்டிப் பிறர் துன்பம் போக்க அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதே தமிழர் நெறி. இதனை விளக்கும் பல பாடல்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. தெய்வப்புலவர் திருவள்ளுவர் பொருள்செயல் வகை என்றும் நன்றியில் செல்வம் என்றும் இரண்டு அதிகாரங்களைத் திருக்குறளில் வைத்திருப்பதே நலம்சார் பொருளியல் என்று சொல்லலாம்.

வினைத்தூய்மையிலும்கூடத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறுக்கு வழியில் பொருள் ஈட்டக்கூடாது எனத் தனி மனிதனுக்கு அறிவுறுத்துகிறார். பச்சை மண் பாத்திரத்தில் நீரைப் பாதுகாத்தால் பாத்திரமும் அழிந்து அதில் சேமிக்கப்பட்ட நீரும் வீணாகும் என உணர்த்தும் வகையில் அவர்,  
               சலத்தால் பொருள்செய்துஏ மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்து இரீஇ யற்று                               (திருக்குறள் 660)
என்கிறார். (சலத்தால் - தீய வழிகளால்; ஏமார்த்தல் - பாதுகாத்தல் )

            நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
            நச்சு மரம்பழுத் தற்று                                                      (திருக்குறள் 1008)
எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறருக்குப்பயனின்றிப் பிறரால் விரும்பப்படாமல் போகும் செல்வம் ஊர் நடுவே நஞ்சுமரம் பழுத்ததுற்கு ஒப்பாகும் எனக் கூறிச் செல்வத்தின் பகிர்வு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். (நச்சப்படாதவன் - விரும்பப்படாதவன்; நச்சு மரம் - நஞ்சு மரம்; )

இதற்கு எதிரிடையாக உள்ளூரில் பழுக்கும் பயன்மரம் பிறருக்குப் பயன்படுவதுபோல் செல்வம் பிறருக்குப் பயன்படவேண்டும் என்பதை வலியுறுத்த
                  பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
                நயனுடை யான்கண் படின்                                          (திருக்குறள் 216)
எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

மேலும் அவர், ஊருணி ஊரார்க்குப்பயன்படுவதுபோல் செல்வம் உலகோர்க்குப் பயன்பட வேண்டும் என வலியுறுத்தி,
              ஊருணி நீர்நிறைந் தற்றே உலகுஅவாம்
              பேரறி வாளன் திரு (திருக்குறள் 215)
என்றும்
மருந்து மரம் எல்லா வகையிலும் பிறருக்குப் பயன்படுவதுபோல் பெருந்தகைமை உடையவர் செல்வம் பிறருக்குப் பயன்படும் என விளக்குதற்காக
                 மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
                 பெருந்தகை யான்கண் படின்                                        (திருக்குறள் 217)
என்றும் கூறிச் செல்வம் பிறர் பயன்பெற பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

அற வழியில் பொருள் ஈட்டி அனைவரும் பயன்பெற பகிர்ந்து வாழ வேண்டும் என்பதை அறக்கருத்தாக மட்டும் பார்க்காமல் மேனாட்டார் கூறும்  நெறியுரைப் பொருளியலை அன்றே வெளிப்படுத்தி உள்ள பாங்காகவும் பார்ப்பதுதானே முறை!
- இலக்குவனார் திருவள்ளுவன்

Expert in Economics: andre' sonnaargal 24: அன்றே சொன்னார்கள் 24: பொருள் அறிவியலிலும் சிறந்திருந்தனர்

 

>>அன்றே சொன்னார்கள்

பொருள் அறிவியலிலும் சிறந்திருந்தனர்

                                                                                                                

natpu பொருள் அல்லது செல்வம் என்றாலே அதனால் வரும் தீமைகளை மட்டும் எண்ணி அதனை ஒதுக்க வேண்டும் என்பது போன்றே உலகெங்கும் அறிஞர்களும் ஆன்றோர்களும் வலியுறுத்தி வந்துள்ளனர். புத்தர் முதலான சமய அறிஞர்களும் அவ்வாறே மக்களிடம் பொருளாசை துன்பம் தரும் எனக் கூறிப் பொருள் தேடலுக்கு எதிரான கருத்தையே பரப்பி வந்தனர். பொருள் அடிப்படையிலான இயல் பொருளறிவியல் அல்லது பொருளியல் (பொருளாதார இயல்) என உருவானதும் அதன் இன்றியமையாமை உணரப்பட்டதும் 18 ஆம் நூற்றாண்டில்தான் எனலாம். ஆதம் சுமித் (Adam Smith: 1723-1790) என்னும் பொருளியல் அறிஞர் முதலில் பொருளியல் இலக்கணத்தை வரையறுத்தவர் ஆவார்; 1776 ஆம் ஆண்டு நாடுகளின் செல்வமும் அதன் இயல்பும் காரணங்களும் (An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations) (அல்லது நாடுகளின் செல்வம் ) என்னும் நூலை வெளியிட்டுப் பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல் என அறிவித்தார்.

இதற்கு முன்னர் அறிஞர்கள் கார்லைல், இரசுகின் முதலானோர், பொருளியலை மகிழ்வற்ற அறிவியல் என்றும் இருண்டஅறிவியல் என்றும் கூறியதற்கு மாறாக அமைந்தது இவரது விளக்கம்.

அடுத்த நூற்றாண்டில் வந்த பொருளியல் அறிஞரான ஆல்பிரட் மார்சல் (Alfred Marshal: 1842-1924) பொருளியலை நல இலக்கண அடிப்படையில் (Welfare Economics) வரையறுத்தார். 1890 ஆம் ஆண்டு வெளியிட்ட பொருளியல் கோட்பாடுகள் என்னும நூலில் இதனை அவர் தெளிவுபடுத்தினார். பொருளியல் ஒரு புறம் செல்வததையும் மற்றொரு புறம்  அதனை விட முதன்மையாக மனிதனையும் ஆராயும் இயல் என விளக்கினார்.

அறிஞர் தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள், எனத் தொல்காப்பியத்தை வகுத்ததும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் எனத் திருக்குறளை அளித்ததும் பொருளை மக்களுக்கான பயன் அடிப்படையில் நோக்கியதே ஆகும். எனவே, இவர்களின் இலக்கியங்கள் வாழ்வியல் இலக்கியங்களாக ஒளிர்கின்றன.

தெய்வப்புலவர் திருவள்ளுவர் பொருளின் இன்றியமையாமையை விளக்குவதற்குப்,
பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள்அல்லது இல்லை பொருள்                                       (திருக்குறள் 751)
என்கிறார். மேலும்,
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள்                                                (திருக்குறள் 754)
எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர், பொருள் முறையாயும் தீயவழியில் அல்லாமலும்  வரவேண்டிய வழியை விளக்குகையிலே மேனாட்டாரின்  நலம்சார் பொருளிலக்கணத்தை அன்றே நம்மவர்கள் அறிந்து தெளிந்திருந்தனர் எனலாம்.

19 ஆம் நூற்றாண்டில் பொருளியல் பற்றிப் பிற நாட்டார் எண்ணி ஆராய்ந்திருக்கையில் பழந்தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதனைப் பற்றிச் சிந்தித்து உள்ளனர் என்பது மட்டுமல்ல, இன்றைய சிந்தனையின் வெளிப்பாடு அன்றே அவர்களிடம் இருந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.  இலக்கியங்களில் இவை இடம் பெற்றுள்ளமையாலேயே இவற்றை நாம் இலக்கியக் கற்பனைகள் என்று ஒதுக்குவது தவறு. மாறாக இலக்கிய நூல்களிலேயே அறிவியல் சிந்தனைகள் இடம் பெற்றுள்ளன எனில், துறை நூல்களில் மிகுதியான அறிவியல் செய்திகள் இடம் பெற்றிருக்க வேண்டுமே என எண்ண வேண்டும்.

இன்றைக்குப் பொருளுக்கு அல்லாடும் நாம் அன்றைக்குப் பொருள்  திரட்டலில் சிறந்திருந்ததன் காரணம் பொருள் பற்றிய தெளிவான எண்ணமும் முயற்சியும் இருந்தமைதான். எனவே, தொடர்ந்து வேறு சில பாடல்களையும் அடுத்தடுத்துக் காணலாம்.
-         இலக்குவனார் திருவள்ளுவன்



Comments


Saturday, February 12, 2011

migration of birds : andre' sonnaargal 23: அன்றே சொன்னார்கள் 23: புலம் பெயர் பறவைகள்

>>அன்றே சொன்னார்கள்

natpu

அன்றே சொன்னார்கள் புலம்பெயர் பறவைகள்

                                                                                                                

natpu பறவைகள் சில பருவங்களில் இடம் விட்டு இடம் மாறிச் செல்வதை - தம் புலத்தில் இருந்து பெயர்ந்து வேறு புலத்திற்குச் செல்வதைப் புலம் பெயர்தல் (migration) என்கின்றனர். இதற்கான தமிழ்க்கலைச் சொல் வலசை என்பதாகும். எசியாடு(Hesiod), ஓமர்(Homer), எரொடொதசு(Herodotus), அரிசுட்டாடில்(Aristotle) முதலான கிரேக்க அறிஞர்கள் பறவைகள் இடம் விட்டு இடம் மாறுவதைக் குறிப்பிட்டுள்ளார்கள். எனினும் பறவைகள் பிற பகுதிகளில் இருந்து வருவதையும் பிற பகுதிகளுக்குச் செல்வதையும் எங்கும் செல்லாமல் ஒரே பகுதியிலேயே தங்கி இருப்பதையும் (வதி பறவை) வேறுபடுத்தி வலசை அறிவியலைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர்.

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் போற்றிப்பாடும் பொழுது புலவர் குறுங்கோழியூர்க் கிழார் பறவைகள் புலம் பெயர்ந்து  வருவதையும் போவதையும்  - புதியதாக வேறு இடங்களில் இருந்து பறவைகள் இங்கு வருவதையும் இங்கேயே உள்ள பறவைகள் வேறு இடம் நாடிச் செல்வதையும் -
             புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்                             (புறநானூறு 20: 18)
என்னும் வரியில் குறிப்பிடுகிறார். (புள் - பறவை;)

வேந்தன் கோப்பெருஞ் சோழனை அவனைப் பார்க்காமலேயே நட்பு கொண்ட புலவர் பிசிராந்தையார் பாடும் பொழுது, தான் தூதாக அனுப்பும் அன்னப்பறவை தென்குமரியிலிருந்த வட இமயமலைக்குச் செல்வது என்பதைக்
                    குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி
                   வடதிசை பெயர்குவையாயின்                       (புறநானூறு  67: 6-7)
natpu என்று குறிப்பிடுகிறார்.

தான் தனித்திருக்கத் தன் உயிர் மட்டும் பிரிந்து தலைவனை நாடிச் சென்றதைக் குறிப்பிடும்  இடத்தில் உவமையாகப், பறவை, தான் தங்கியுள்ள (அசையும் அழகிய கிளையில் உள்ள) கூட்டினைப் பொலிவிழக்கச் செய்யும் வண்ணம் புலம் பெயர்ந்து செல்லும் நிலையைக் குறிப்பிட்டு

              அலங்கல் அம்சினைக் குடம்பைப்  புல்லென
             புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந்தாங்கு           (அகநானூறு 113 : 24-25)
என்கிறார் புலவர் கல்லாடனார்.

              நீயும் நின்பெடையும், தென்திசை குமரியாடி
              வட திசைக்கு ஏகுவீராயின்
எனச் சத்திமுற்றத்துப் புலவர், நாரை விடு தூதுப் பாடலில் நாரை இடம் பெயர்ந்து செல்வது பற்றிக் குறிப்பிடுகிறார்.

புலவர் நரிவெரூஉத் தலையார்  வேறு எங்கும் செல்லாமல் தங்கி உள்ள நாரையை வதிகுருகு எனக்குறிப்பிட்டு 
       வதிகுருகு  உறங்கும் இன்நிழல் புன்னை                              (குறுந்தொகை 5)
என்கிறார்.

இவ்வாறு, பறவைகளின் புலப் பெயர்ச்சி அறிவியலை அன்றைய புலவர்களே அறிந்திருந்தனர். ஆனால், உரிமையிழந்து புலம் பெயர்ந்து செல்லும் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு உரிமைவாழ்வு பெறுவதற்கான வழிவகைளைத் தமிழ்நாட்டு மக்கள் அறிந்து செயல்பட்டு வாகைசூடும்  நாள்  எந்நாளோ?

-         இலக்குவனார் திருவள்ளுவன்


Friday, February 11, 2011

Science of irrigation: andre' sonnaargal 22: அன்றே சொன்னார்கள்22- பாசன அறிவியல்


>>அன்றே சொன்னார்கள்

natpu

அன்றே சொன்னார்கள் பாசன அறிவியல்

                                                                                                                

natpu
மழை நீரைத் தேக்கிப் பாசனத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பல நாட்டவர்க்கும் இருந்துள்ளது. ஆனால், நீர்த்தேக்க வகையில் வேறுபாடுள்ளது. கி.மு.3000 ஆண்டைச் சேர்ந்த  சோர்டானில் உள்ள சாவா அணை (Jawa Dam in Jordan)  தொன்மையானது என்கின்றனர். ஆனால், பழந்தமிழர் நாகரிகக்கூறுகள் உள்ள மெசபடோமியாவில் தொடக்கக்காலங்களில் பல நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். மேலும், எகிப்து நாட்டவர் தமிழ் நாட்டு அணைக்கட்டு வல்லுநர்களை அழைத்து அணை கட்டும் வகையை அறிந்ததாக அந்நாட்டிலேயே குறிப்புகள் உள்ளன. எனவே, அணைக்கட்டு நுட்பவியல் தமிழ் நாட்டில் இருந்தே சோர்டானுக்கும் பரவியிருக்க வேண்டும் எனலாம். இல்லையேல் எகிப்தியர் சோர்டான் நாட்டவரை அழைத்து அணைநுட்பம் பற்றி அறிந்திருப்பர். அணைக்கட்டு அமைப்பில் தமிழர்கள் முன்னோடியாக இருந்துள்ளமையே  இதற்கான கராணமாகும்.
உலகிலேயே பழமையான - இன்றும் நிலைத்திருக்கக்கூடிய - ஒரே அணை திருச்சிராப்பள்ளியில் உள்ள கல்லணைதான். காவிரி நீரைப் பாசனத்திற்குப் பயன்படுத்துவதற்காகச் சோழ வேந்தன் கரிகால் பெருவளத்தானால் கட்டப்பட்டது இது. இவ்வேந்தன் பாசனத் திட்டங்களையும் செயல்படுத்தி வெற்றி கண்டமை புலவர் முடத்தாமக்கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையிலும் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப்பாலையிலும் குறிக்கப்பெற்றுள்ளது.

natpu கல்லணையின் நீளம் 1080 அடி; அகலம் 40 அடி முதல் 60 அடி வரை; ஆழம் 15 அடி முதல் 18 அடி என அமைந்துள்ளது. ஆனால் சாவா அணை, நீளம் 260 அடி, அகலம் 15 அடி, ஆழம் 15 அடி என மட்டுமே அமைந்திருந்ததாகும். எனவேதான் வயவர் ஆர்தர் தாமசு காட்டன் என்னும் ஆங்கிலேயப் பாசனப் பொறியாளர் (Sir Arthur Thomas Cotton:1803-1899) கல்லணையை மிகு நேர்த்தியான மாபெரும் அணை (grand anikut) என்கிறார். அணைக்கட்டு என்னும் சொல் ஆங்கிலத்தில் இடம் பெற்றதில் இருந்தே அணைக்கட்டு பிற நாடுகளில் இருந்ததில்லை என்பதை உணரலாம். கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்ட ஓர் அமைப்பு ஈராயிரம் ஆண்டுகளாக வெள்ளத்தைத் தடுக்கப் பயன்பட்டு வருவது விந்தையிலும் விந்தையல்லவா!
நீரைத்தேக்கி அணை கட்ட வேண்டியதன் இன்றியமையாமையைப் புலவர் குடபுலவியனார் தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வலியுறுத்திப் பாடியுள்ளார். மறுமை உலகிற்கான செல்வத்தை வேண்டினாலும், உலகையே ஒரு குடைக்கீழ்க் கொணர்ந்து நீ ஆள விரும்பினாலும் புகழுடன் இவ்வுலகில் வாழ விரும்பினாலும், நீ ஆற்ற வேண்டிய அரும்பணி ஒன்று உள்ளது. நீர் இன்றி வாழ முடியாத இவ்வுலகத்தில் பசி நீங்க உணவு அளிப்பவரே உயிர் அளித்தவராவர்! உணவு என்பது நில விளைச்சலுடன் சேர்ந்த நீருமாகும்! வான் மழையை எதிர்நோக்கி இருக்கும் வறண்ட பூமியால் எப்பயனும் இல்லை. எனவே, நான் கூறப்போவதை மறவாமல் உள்ளத்தில் கொள்க! பள்ளத்தாக்கிலே  நீரினைத் தேக்கி  நீர் நிலைகளை உண்டாக்குபவர்களே, மறுமை இன்பங்களையும் புகழையும் இவ்வுலகில் பெற்று மகிழ்வோர் ஆவர்.  அவ்வாறு நீரினைத் தேக்கி விளைச்சலுக்கு உதவாதவர்கள், இவ்வுலகில் தம் புகழை நிலை நிறுத்த இயலாதவர்கள்  ஆவார் எனக்கூறுகையில் பின்வருமாறு தெரிவிக்கின்றார்:

         நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
        தட்டோர் அம்ம இவண்தட் டோரே!
        தள்ளா தோர்இவண் தள்ளா தோரே!                               (புறநானூறு 18 : 28-30)
(தட்டு - நீர்நிலை)
நீரைத் தேக்கிப் பயன்படுத்தும் பாசனஅறிவியலையும் அவ்வாறு பயன்படுத்துவதற்கான நிலையான அணைக்கட்டைக் கட்டும் கட்டுமான அறிவியலையும் நம் முன்னோர் நன்கு அறிந்திருந்தனர். நாமோ தாய்மொழியாம் தமிழ்வழிக் கல்வி இன்மையால்  அறியாமையைத் தேக்கி அல்லல் உறுகிறோம்!
-         இலக்குவனார் திருவள்ளுவன்





Wednesday, February 9, 2011

Newton second law in Paranar Poem: andre' sonnaargal 21: அன்றே சொன்னார்கள் பரணர் பாடலில் நியூட்டன் விதி

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள் பரணர் பாடலில் நியூட்டன் விதி

                                                                                                                

natpu
நியூட்டன் விதிகள் என நம்மால் போற்றப்படுவன,  அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் (திசம்பர் 25,1642-மார்ச்சு 20,1727) கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத் தகுந்தனவாகும்.விசை, விரைவு பற்றிய இவ்விதிகளுள் நியூட்டனின் இரண்டாம் விதி பற்றி மட்டும் நாம் பார்க்கப் போகிறோம்.

திசைவேகம், பொருளின் தாக்கும் விசையைப் பொறுத்து அமையும் என்கிறார் அவர். இதன்படி, ஒரு நேர்க்கோட்டில் செல்லும் விசை, குறிப்பிட்ட ஒரு பொருளின் மீது தாக்கும்போது அந்த விசை வேகம் மாறுபட்டு அமையும் அல்லது குறையும். 18ஆம் நூற்றாண்டில் விசைவேக விதியைக் கண்டுபிடித்தார் அறிவியலாளர் நியூட்டன். இதே விதியைப் புலவர் பரணரும் எடுத்துக்காட்டு மூலம் நமக்கு விளக்குகிறார்.

கடையெழு வள்ளல்களில் ஒருவன் வல்வில் ஓரி என அழைக்கப்பெறும் ஆதன் ஓரி என்னும் சிறப்பு மிக்க மன்னன். இம்மன்னன் வில் வித்தையில் சிறந்தவன் என்பதை வல் வில் என்று குறிக்கப்படுவதில் இருந்தே நாம் புரிந்து கொள்ளலாம். வில்லுக்கு விசயன் என நம் நாட்டவர் அல்லாத மன்னனை அல்லது கற்பனையான கதைப் பாத்திரத்தைப்  போற்றும் நமக்கு வில்லுக்கு ஓரி என்று கற்றுக் கொடுத்திருந்தால் இம்மன்னனின் சிறப்பை அறிந்திருப்போம். நாமக்கல் பகுதியில் உள்ள கொல்லிமலைக்கு மன்னனாகச் சிறந்து விளங்கியவன் இவன்.

மன்னன் வல்வில் ஓரி ஒரு முறை காட்டிற்குச் சென்று வேட்டையாடுகையில் அவ்வழியே வந்த புலவர் பரணர் பார்த்துவிட்டு உடனே, அக்காட்சியைப் பாட்டிலே படம் பிடித்து நிலைக்கச் செய்துவிட்டார்.

வல்வில் ஓரி எய்த ஒரே ஓர் அம்பு நேர்க்கோட்டில் அமைந்த ஐந்து உயிர்களைப் பறித்து விட்டது. அவன் யானையின் மீது அம்பு தொடுத்தான். யானை மீது பாய்ந்த அம்பு அதனை வீழ்த்தியதுடன் தன் கடமை முடிந்து விட்டது என்று நின்று விடவில்லை. அந்த யானை மீது பாயலாம் எனப் பார்த்திருந்த புலியின் வாயில் ஊடுருவி, வெளியேறி அப்பக்கம் குறுக்கே வந்த மானையும் ஊடுருவிக் கொன்று, அடுத்து இருந்த பன்றியை வீழ்த்தி, உடும்பில் பாய்ந்து அதனையும் தைத்து மடியச் செய்து விசை வேகம் படிப்படியே குறைந்ததால் நின்று விட்டது.

வில்லில் இருந்து வேகமாக விடுபட்ட அம்பு போகப்போக வேகம் குறைந்து அதற்கேற்றவாறு சிறிய சிறிய உயிர்களை மடியச் செய்து இறுதியில் செயல் இழந்தது எனப் புலவர் விளக்கி உள்ளார். மன்னன் வல்வில் ஓரியின் வில்வித்தைச் சிறப்பைக் கூறும் அறிவியல் உண்மை அடங்கிய பாடல் வரிகள் பின்வருமாறு: 

       வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி   
      பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ,     
      புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக்
     கேழற் பன்றி வீழ, அயலது   
     ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்
    வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்               (புறநானூறு 152)
     
(வேழம்-யானை; பகழி-அம்பு; உழுவை-புலி; புகர்க்கலை - புள்ளி மான்; கேழல் பன்றி-ஆண் பன்றி; புற்றத்து உடும்பில் - புற்றில் உள்ள உடும்பின் மீது)

இப்பாடல் வரிகள் மூலம் வில்லில் இருந்து விடுபட்டு விரைவாக வெளியேறும் அம்பின் விசை போகப்போகக் குறையும் தன்மையை - விசைவேக இலக்கணத்தை - ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே புலவர் பரணர் விளக்கி உள்ளதை அறியலாம்.

இதனை வரலாற்று நிகழ்வைக் கூறும் இலக்கிய வரிகளாகக் கருதிய நாம் இதில் புதைந்துள்ள அறிவியல் உண்மையைப் புரிந்து கொள்ளாமல் போனது ஏனோ?
- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments

Monday, February 7, 2011

golden period of gold coins: andre' sonnaargal 20: அன்றே சொன்னார்கள் 20: பொற்காசுகளால் பொலிந்த தமிழகம்





++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள்
பொற்காசுகளால் பொலிந்த தமிழகம்

                                                                                                                

natpu
நாணயங்கள்  பயன்படுத்தும் காலம் வந்தபொழுது மாழைகளால் - உலோகங்களால் - காசுகள் உருவாக்கிப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டது. (இ)லிதியன் மக்கள்தாம் முதன் முதலில் தங்கத்திலும் வெள்ளியிலும் காசுகள் அடித்ததாக கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரொதத்தசு (Herodotus) என்னும் கிரேக்க  வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். எனினும் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் பொற்காசுகள் மிகுதியாகப் பயன்பாட்டில் இருந்துள்ளன. மக்களுக்கு உவமையாகக் கூறும் அளவிற்கு அனைத்து நிலைகளிலும் பயன்பாட்டில் இருந்துள்ளமை அக்கால மாழை (உலோக)ப் பயன்பாட்டையும் செல்வச் செழிப்பையும் நமக்கு உணர்த்துகின்றன.

உகாஅய்க் கனியைப் போன்று, நெல்லிக்கனியைப் போன்று, வேப்பங்கனியைப் போன்று, நடுவில் துளையுடன் வட்ட வடிவில் எனப் பலவகையில் பொற்காசுகள் பயன்பாட்டில் இருந்துள்ளன.
புலவர் நக்கீரர், பொற்காசுகள் பலவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட மேகலை குறித்து,
            பல்காசு நிரைத்த சில்கால்                         (திருமுருகாற்றுப்படை :16)
எனக் குறிப்பிடுகின்றார்.

காவன்முல்லைப் பூதனார் என்னும் புலவர், வேனிற் காலத்தில், உகாஅய் மரக்கிளையினின்றும் அதன் கனிகள் கீழே உதிர்ந்து விழுவன  பொற்காசுகள் போல இருப்பதாக
            மணிக்காசு அன்ன மால்நிற இருங்கனி
        உகாஅய் மென்சினை உதிர்வன கழியும்                   (அகநானூறு : 293 : 7:8)
எனக் குறிப்பிடுகின்றார்.

குடவாயில் கீரத்தனார்  என்னும் புலவர்,
மேற்கில் இருந்து வீசும் கோடைக்காற்றால், நெல்லிக்காய்கள் உதிர்ந்து கீழே விழுவன, நூல் அறுந்து கீழே விழுந்த துளையுடைய பளிங்கு காசுகள்போல் இருப்பதாகப்,
       புறவுக்குயின்று உண்ட புன்காய் நெல்லிக்
     கோடை உதிர்த்த குவிகண் பசுங்காய்
     அறுநூல் பளிங்கின் துளைக்காசு கடுப்ப
     வறுநிலத்து உதிரும் அத்தம்                        (அகநானூறு : 315 : 10-13)
என்னும் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

அள்ளூர் நன்முல்லை என்னும் புலவர், கிளியின் வளைந்தவாயில் உள்ள வேப்பம் பழம் பொற்கொல்லன்  கூரிய கைந்நகத்தில் உள்ள பொன்காசு போல் காட்சியளிப்பதாகக்
கிள்ளை                                     
      வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
     புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப்
     பொலங்கல ஒருகாசு ஏய்க்கும்                 (குறுந்தொகை : 67 : 1-4)
என்னும் பாடலில் தெரிவிக்கின்றார்.

கொன்றை அரும்புகள், செல்வச் சிறுவர்களின் காலில் கட்டப்பட்ட தவளைவாய் போன்ற பொற்காசுகள் போல் உள்ளன என்பதை   இளங்கீரந்தையார் என்னும் புலவர்,
செல்வச் சிறாஅர் சீறடிப்பொலிந்த
தவளை வாஅய பொலம்செய் கிண்கிணிக்
காசின் அன்ன போதுஈன் கொன்றை            (குறுந்தொகை : 148: 1-3)
எனத் தெரிவிக்கின்றார்.

மான் உராய்வதால் குமிழ் மரங்களில் உள்ள பழங்கள்  உதிர்ந்து கீழே பரவிக்கிடப்பது,
பெண் ஒருத்திப் பொற்காசுகளைக் கீழே பரப்பி வைத்துள்ளமை போல் உள்ளதாகக் காவன் முல்லைப் பூதனார் என்னும் புலவர்,
      உழைபடு மான்பிணை தீண்டலின் இழைமகள்
     பொன்செய் காசின் ஒண்பழம் தாஅம்
     குமிழ்தலை மயங்கிய குறும்பல் அத்தம்                       (நற்றிணை 274 : 3-5)
எனக்கூறுகிறார்.

மருதன் இளநாகனார் என்னும் புலவர் கைத்தொழிலால் பொலிவு பெற்ற பொற்காசுகள் இடைஇடையே வைத்துக் கோக்கப்பட்ட பொன்மணிகளை உடைய மேகலை பற்றி,
     கைவினைப் பொலிந்த காசமை பொலங்காழ் மேல்
     மையில் செந்துகிர்க் கோவை                                       (கலித்தொகை :85: 3-4)
எனக் குறிப்பிடுகிறார்.

உருத்திரன் என்னும் மற்றொரு புலவர்,
புறாவின் முதுகு போன்ற அடியுடைய கொன்றை மரத்தின் பழங்கள் பொற்காசுகள் போல் இருக்கும் என்பதைப்
     புறவுப்புறத் தன்ன புன்கால் உகாஅத்து
     காசினை அன்ன நளிகனி உதிர                             (குறுந்தொகை : 274 : 1-2)
எனக் குறிப்பிடுகின்றார்.

பொற்காசுகள் குவிந்து கிடந்த தமிழ்நாட்டவர் வெற்றுக் குவளைகளை கையில் ஏந்தும் நிலை வந்தது ஏன் எனச் சிந்தித்தால் விடிவு பிறக்கும் அல்லவா?

 
- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments

Saturday, February 5, 2011

swimming dress: andre' sonnaargal 19: அன்றே சொன்னார்கள் 19: நீச்சல் நாகரிகம் உணர்த்தும் உடையியல்

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள்
நீச்சல் நாகரிகம் உணர்த்தும் உடையியல்

                                                                                                                

natpu நாகரிக உலகிற்கேற்ற உடைகள் யாவும் 17ஆம் நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டன. நீச்சல் உடைகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டன. இன்றைக்கு வெவ்வேறு வகையான நீச்சல் உடைகள் இருப்பினும் ஈரணி உடைகள் (two piece dresses) என்பனவே அடிப்படையாகும்.
நாகரிக உலகில் தலசிறந்திருந்த தமிழ் மக்கள் நீச்சல் துறையிலும் உயர்ந்தோங்கி இருந்தனர். பிற வகை ஆடைகள் குறித்தும் குளிப்பதற்கேற்ற மணப் பொடி வகைகள் குறித்தும் பிறிதொரு நாள் பார்க்கலாம். இப்பொழுது நீச்சல் உடைகள் குறித்துப் பார்ப்போம்.
காவிரிப் பெருக்கின் பொழுது நீச்சல் ஆடையான ஈரணி அணிந்து பொலிவு பெற்ற பெண்களைப்பற்றி,

வதுவை ஈரணிப் பொலிந்த நம்மொடு
புதுவது வந்தகாவிரி                                                    (அகநானூறு : 166 : 13-14)
என்கிறார் புலவர் இடையன் நெடுங்கீரனார்.

ஏர்அணி அணியின் இளையரும் இனியரும்
ஈரணி அணியின் இகல் மிகநவின்று                                           (பரிபாடல் : 6: 27-28)
வையை ஆற்றில் நீராட மகளிரும் மைந்தரும் நீச்சல் உடையை அணிந்து சென்றதாக ஆசிரியன் நல்லந்துவனார் இப் பரிபாடலில் பாடியுள்ளார்.

நீச்சலுடையுடன்  நறுமணப் பூச்சுகளையும் பூத்தொழில் மிக்க ஆடைகளையும் எடுத்துக்கொண்டு வையை ஆற்றிற்கு நீராடச் சென்றதை,
ஈரணிக்கு ஏற்ற
நறவுஅணி பூந் துகில் நன்பல ஏந்தி                                           (பரிபாடல் : 22: 18-19)
எனப் புலவர் ஒருவர் தெரிவிக்கிறார்.

நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்
இளந்துணை மகளிரொடு ஈர்அணிக் கலைஇ,
நீர்பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக்கண்                      (அகநானூறு : 266 : 4-6)
என,  ஈரணி அணிந்து நீராடியதால் மிக அழகினையுடைய குளிர்ந்த கண்களும் நரந்தம் மணக்கின்ற திரண்ட கருங்கூந்தலும் உடைய இளம்பெண் குறித்துப் புலவர் பரணர் தெரிவிக்கிறார்.
நீரணி என்றும் (பரிபாடல் 11) புலவர்கள் கூறியுள்ளமையால் ஈரணி அல்லாத வேறு வகையான குளியல் உடைகளும் இருந்துள்ளன எனத் தெரிய வருகிறது.

கரும்பிள்ளைப் பூதனார் என்னும் புலவர்,
நீர்அணி காண்போர் நிரைமாடம் ஊர்குவோர்                             (பரிபாடல் : 10: 27)
என்று குறிப்பிட்டதற்கு, நிரல்பட்ட நீரணி மாடத்தில் ஏறி மெதுவாகச் சென்றதாக உரையாசிரியர்கள் விளக்கம் தருகின்றார்கள்.

எனவே, இதன் மூலம் ஏறிச் சென்று உயரத்தில் இருந்து குதிப்பதற்குரிய நீரணி மாடம் (Diving platform) இருந்தது தெரிய வருகிறது. நீச்சல் உடையை அணிந்து கொள்ளவும் பின் அங்கிருந்து நீரில் குதிக்கவுமான மாடம் ஆகும் இது.
நீச்சல் 19 ஆம் நூற்றாண்டில் விளையாட்டாக மாறி, நீச்சலுக்கான குதி பலகை (Spring board) 1891 ஆம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது; 1901 இல் ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்கப்பட்டது. பின் நீச்சல் மேடைகளும் (Diving platforms) எழுப்பப்பெற்றன. ஆனால், பழந்தமிழகத்தில் நீச்சல், மக்களின் உற்சாக விளையாட்டாக இருந்துள்ளது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீச்சலுக்கான நீந்துநர் மேடை இருந்துள்ளது அன்றைய நய நாகரிகத்திற்கும் எடுத்துக்காட்டு அல்லவா?
-  இலக்குவனார் திருவள்ளுவன்



Friday, February 4, 2011

Comet is not a star: andre' sonnaargal 18: அன்றே சொன்னார்கள் 18 வால்நட்சத்திரம் என்பது நட்சத்திரம் அல்ல!

அன்றே சொன்னார்கள்

கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்            (சிலப்பதிகாரம்: 10 : 102 : 3)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

 

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள் வால்நட்சத்திரம் என்பது நட்சத்திரம் அல்ல!

 

natpu 
இன்றைக்கு நாம் வால்நட்சத்திரம் என்று சொல்லப்படுவதன் கிரேக்கப் பெயர் கோமெட்(kometes) என்பதாகும். இதிலிருந்தே காமெட் (comet) என்னும் ஆங்கிலப் பெயர் தோன்றியது. நீண்ட முடி என்பது இதன் பொருள். கிரேக்க அறிவியலாளர் அரிசுடாடில் (Aristotle) தலைமுடி போல் தெரிவதாகக் கூறி இதனை அப்பொருளில் முதலில் குறிப்பிட்டார். வால் போல் நீண்டுள்ள விண்பொருள் என்னும் பொருளிலேயே  பலர் குறிப்பிடுகின்றனர். உலகில் பஞ்சம், கொள்ளை நோய், ஆட்சி வீழ்ச்சி, தலைவர் இறப்பு முதலான துயர நிகழ்வுகளைக் குறிக்க இது தோன்றுவதாக உலக நாடுகள் எல்லாவற்றிலும் நம்பிக்கை உள்ளது. இதனைப் பனியால் சூழப்பட்ட சிறுகோள் என்றே அயல்நாட்டார் தொடக்கத்தில் கருதி வந்துள்ளனர். அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னரே வால் போல் அல்லது முடி போல் தெரியும் பகுதி உண்மையில் வால் அல்ல என்பதை உணர்ந்தனர். இதன் முன்பக்கம் உள்ள காற்றும் பிற துகள்களும்  அழுத்தம் மிகுந்த சூரியக் கதிர்களால் எதிர்ப்புறம் தள்ளப்படுகின்றன. இவ்வாறு தள்ளப்பட்டுப் புகையாகச்  செல்லும் பகுதியே நமக்கு வால் போல் காட்சியளிக்கிறது. விண்ணில் இவை மிகுதியாகக் காணப்பட்டாலும் யார் யார் முதலில் இதனைக் கண்டு தெரிவிக்கிறாரோ அவர் பெயரே இதற்குச் சூட்டப்படுகின்றது.

ஆனால், பழந்தமிழர்கள்  வெறும் தோற்றத்தின் அடிப்படையில் பிறர் போல் வால் நட்சத்திரம் என்று சொல்லவில்லை. வால் நட்சத்திரம்  என்பது இக்காலத்தில் தவறாக வந்த சொல்லாட்சி.  மேலும் இது நட்சத்திர வகைப்பாட்டிற்குள்ளும் வராது. கழிவுப் பொருள்கள்  எரிந்து தள்ளப்படும் இயல்பை உணர்ந்து புகைக்கொடி என்றே அழைத்தனர். தூமம் என்றால் புகை எனப்பொருள். பின்னர் இதனைத் தூமகேது என்றும் குறிப்பிட்டனர்.

                கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
                 விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்        (சிலப்பதிகாரம்: 10 : 102 : 3)

என்று  இளங்கோ அடிகள் புகைக்கொடி எனக் குறிப்பிட்டுள்ளதைச் சிலப்பதிகாரத்தில் காணலாம்.

முன்பு (http://natpu.in/natpu/Pakudhikal/Kural/21.php)குறிப்பிட்டவாறு

                 மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்
                தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்            (புறநானூறு 117: 1-2)

எனப் புலவர் கபிலர் தூமம் என்று சொல்லியுள்ளார்.

மிகச் சிறந்த விண்ணியல் அறிவு இருந்தாலன்றி வெறும் தோற்றத்தின் அடிப்படையில் அல்லாமல் - விண்ணிலுள்ள ஒளிரும் இப் பொருள் நட்சத்திரம் அல்ல என்பதை உணர்ந்து - அதன் அறிவியல் தன்மையை அறிந்து புகைக்கொடி என்று நம் முன்னோர் பெயர் சூட்டி இருக்க மாட்டார்கள்.

வானறிவியலில் தலைசிறந்து இருந்த நாம் வான்புகழ் பெற,  இன்றைக்கும் வானறிவியலில் முன்னோடியாகத் திகழ வேண்டும் அல்லவா?
- இலக்குவனார் திருவள்ளுவன்

 

Thursday, February 3, 2011

Thamizh Science about Saturn: andre' sonnaargal 17: அன்றே சொன்னார்கள் சனியின் நிறம், தன்மை, இயல்பு அறிந்த விந்தை மனிதர்கள்!

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள் சனியின் நிறம், தன்மை, இயல்பு அறிந்த விந்தை மனிதர்கள்!

                                                                                                                

natpu
உரோம் நாட்டினர் சனிக்கோளை வேளாண் கடவுளாகக் (Saturnus) கருதினர். குரோனசு (Cronus) கடவுள் எனக் கிரேக்கர்கள் அழைத்தனர். ஆரியர்கள் சூரியக் கடவுளுக்கும் சாயா என்னும் பெண் கடவுளுக்கும் பிறந்ததாகக் கூறிச் சாயாபுத்திரன் என்கின்றனர். ஆரியக் கதையின்படி எமன் சனிக்கு மூத்தவன். இவ்வாறு ஒவ்வொரு நாட்டினரும் வெவ்வேறு பெயர்களில் அழைத்தனர். என்றாலும் அவையெல்லாம் தொன்மக் கதைகளின் அடிப்படையிலானவையே.
natpu
உரோம் நாட்டினரின் சனிக்கடவுள்
சனிக்குப் பிள்ளைகளால் ஆபத்து என்பதால் தனக்குப் பிறந்த பிள்ளைகளை எல்லாம் பிறந்த உடன் தின்றுவிட்டதாகவும் கதை உள்ளது.       
natpu
பிள்ளையை விழுங்கும் சனியின் படங்கள்
இவ்வாறு பிற நாட்டினர் பகுத்தறிவு அடிப்படையின்றி, அறிவியல் சிந்தனையின்றிச் சனிக்கோள் குறித்துக் கூறியுள்ள காலக்கட்டத்திற்கு முன்பே தமிழர்கள் சனிக் கோளை அதன் அறிவியல் தன்மைகளுக்கேற்பப் பெயரிட்டு அழைத்துள்ளனர். 

கதிர்மகன், நீலன், காரி, முதுமகன், மந்தன், முடவன் எனப் பலப் பெயர்கள் சனிக்கு இருப்பதைப் பிங்கல நிகண்டு (சூத்திரம் 234) தெரிவிக்கிறது. 

சனிக்கோளின் ஒவ்வொரு பெயரையும் ஆராய்ந்தால் இக்கோளின் அறிவியல் உண்மைகளை நன்குணர்ந்தே அப்பெயர்களைக் குறிப்பிட்டனர் எனப் புரிந்து கொள்ளலாம், எனினும் பிற்காலத்தில் ஆரியக் கதைகளால் வந்த பெயர்கள் எல்லாம் பகுத்தறிவிற்கு ஏற்றன அல்ல. 

கருப்பு நிறம் கொண்ட முகிலைக் கார்முகில் என்றும் கருப்பு நிறக் கூந்தலைக் கார்குழல் என்றும் சொல்வதை அறிவோம். கார் என்பது கருப்பு நிறத்தைக் குறிக்கும். கருப்பு நிறமாக உள்ள கோளுக்குக் காரி என்று பெயரிட்டனர். 

மை என்பதற்குக் கருமை எனப் பொருள் (பிங்கல நிகண்டு 3997).சனியும் ஒரு விண்மீனே! கரு நிறமான இவ்விண்மீனை மைம்மீன் என்றும் அழைத்தனர்.

பாரியின் ஆட்சிச் சிறப்பைக் கூறும்பொழுது புலவர் கபிலர்
                      மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்
                     தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்                      
(புறநானூறு 117: 1-2)
சிறப்பான ஆட்சி நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சனி கரிய நிறமுடையனாதலின் மைம்மீனென்றார்; அவனுக்குரிய, காரி, கரியவன் முதலிய காரணக்குறியாலும் உணர்க என அறிஞர் உ.வே.சாமிநாத(ஐய)ர் விளக்கியுள்ளார். 

         கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்,
       விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்                  (சிலப்பதிகாரம்: 10 : 102 : 3)
என்பதனுரையில் அடியார்க்குநல்லார் கரியவன் என்பது சனிக்கோள் என விளக்கியுள்ளார்.

மெதுவாக இயங்குபவனை மந்த புத்திக்காரன் என்று நாம் சொல்லுவோம். மெதுவாக வேலை செய்பவனிடம், ஏன் மந்தமாக இருக்கிறாய்? சுறுசுறுப்பாக வேலை செய் என்போம். மெதுவாகச் சுற்றும் கோள் என்பதால் சனிக்கோளுக்கு மந்தன் எனப் பெயர். 
குளுமையின் அடிப்படையில்  காரிக்கோளைச் சனி என்றும் அழைத்தனர். சனி நீராடு என்றால் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் எனத் தவறாகப் பொருள் கூறப்படுகிறது. குளிர்ச்சியான நீரில் குளிக்க வேண்டும் என உடல் நல அடிப்படையில் அவ்வாறு கூறப்படுகிறது.

அச்சத்திற்கு ஆட்பட்டு அறிவிற்குப் புறம்பாகப் பிற நாட்டினர் கோள்களைப் பற்றித் தவறாகப் பரப்பிய காலக்கட்டத்திற்கு முன்பே தமிழ்ப் புலவர்கள் சனிக்கோளைப் பற்றி நிறம், வேகம், தன்மை அடிப்படையில் பெயரிட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளனர். அங்ஙனமாயின் அக்காலத் தமிழ் வானறிவியலாளர்கள் அறிந்திருந்த செய்திகள் இன்னும் மிகவாக அல்லவோ இருந்திருக்கும்!

- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments



Tuesday, February 1, 2011

andre' sonnaargal: அன்றே சொன்னார்கள் - 2 பெண்மையைப் போற்றுவோம்!

>>அன்றே சொன்னார்கள்

natpu

அன்றே சொன்னார்கள் - 2 பெண்மையைப் போற்றுவோம்!

                                                                                                                

பெண்களைப் பழங்காலத்தில் இருந்தே அடிமையாக எண்ணியுள்ளதாகப் பலர் தவறாக எழுதியும் பேசியும் வருகின்றனர். ஆரிய எண்ணங்களால் சிலர் இடைக்காலங்களில் அத்தகைய போக்கிற்கு ஆளானாலும் பழந்தமிழர் நெறி என்பது பெண்ணையும் ஆணையும் இணையாக எண்ணிப் போற்றியதே. காலச்சூழலால் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்னும் வினாத் தோன்றிய அவலம் ஏற்பட்டுள்ளது. பெண்களைப் பற்றி உலக மொழியியல் அறிஞர் தொல்காப்பியர்,

செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்                
அறிவும் அருமையும் பெண்பாலான   

என்கிறார். பெண்களுக்கான பண்புகளில் அறிவையும் தொல்காப்பியர் கூறுகிறார் எனில் பெண்களுக்கும் கல்வி என்பது கட்டாயமான ஒன்றுதானே. இதனைப் புரிந்து கொள்ளாமல் பரிமேலழகர் ஆரிய வழியில் பெண்களுக்கு அறியும் ஆற்றல் கிடையாது என எழுதிச் சென்று விட்டார் (திருக்குறள் 69 உரை).
 எனவே, பழந்தமிழர் நெறியில் பெண்ணும் ஆணும் இணை என்பதை உணர்த்தினால்தான் பெண் குழந்தைகளைக் கருவிலும் பிறந்தவுடனும் அழிக்கும் கொடுமைகள் நிற்கும். இனியேனும் பெண்மையைப் போற்றுவோம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments

(Jan 14, 2011) Ilakkuvanar Thiruvalluvan said:
அன்புடையீர்
நன்றி. பக்க அளவு கருதி முதலில் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன். இருப்பினும் தங்கள் கருத்துரை விளக்கம் அந்தக் குறையைச் சரி செய்து விட்டது. நனி நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
(Jan 11, 2011) பெரியண்ணன் சந்திரசேகரன் said:
மிகச் சிறப்பான முயற்சி. இதை இப்படித் தொல்காப்பிய மேற்கோளோடு உணர்த்துவது நல்லது.
பாராட்டுகள். மக்களிடத்தில் பரவியிருக்கும் தவறான எண்ணத்தை நீக்கும்.
அந்தக் கட்டுரையில் அந்தப் பண்புகளுக்கான சொற்பொருளையும் விளக்கியிருந்தால் சிறக்கும்.

இளம்பூரணர் உரை:
========
செறிவு என்பது - அடக்கம்
நிறைவு என்பது - அமைதி
செம்மை என்பது - மனங்கோடாமை
செப்பு என்பது - சொல்லுதல்.


அறிவு என்பது - நன்மை பயப்பனவுந் தீமை பயப்பனவும் அறிதல்.

அருமை என்பது - உள்ளக் கருத்தறிதலருமை. இவை எல்லாம் பெண்பக்கத்தின என்றவாறு.

இதனாற் சொல்லியது மேற்சொல்லிய அறத்தொடுநிலைவகை. இனிக் கூறுகின்ற வரைவுகடாதற்குப் பகுதியும் உண்மை வகையானும் புனைந்துரைவகையானும் கூறுங்கால் இவை பேதையராகிய பெண்டிர்க்கு இயையுமோ என ஐயுற்றார்க்குக் கூறப்பட்டது.

rss

Followers

Blog Archive