Thursday, December 31, 2015

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 04 – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02

04

வலிமையை வளர்த்திடுக!
  ஆண்மை என்பது ஆண் தன்மை எனக் கருதுவது தவறாகும். உடல் வலிமையுடன் உள்ளத்தின் வலிமையும் கொண்ட ஆளுமைத் திறனே ஆண்மையாகும். வலிமை என்பது பேடிகை வாள்போல் இருந்து பயனில்லை. வீரமும் துணிவும் இணைந்தே இருக்க வேண்டும். எனவே, பாரதியார் வலிமை, வீரம், துணிவு முதலியனவற்றைப் பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறார்.
மின் மெலியதைக்கொல்லும்
வலியதனிலே வலிமை சேர்க்கும்
அது நம் வலிமையயை வளர்த்திடுக
(பக்கம் 430 / வசனகவிதை)
வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்
கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம்
உடலை உறுதிகொள்ளப் பழகுவோம்
உயிரை வலிமையுற நிறுத்துவோம்
உள்ளத்தை உறுதி செய்வோம்
(பக்கம் 444 / வசன கவிதை)
என மின்னலையும் காற்றையும் குறிப்பிடும்பொழுது வலிமையை வேண்டுகிறார்.
வலிமை என்று பாடிடுவோம் (பக்கம் 228 / சொல்) என வலிமையை வாழ்த்துகிறார்.
“மதியின் வலிமையால் மானுடம் ஓங்குக” (பக்கம் 457 / வசன கவிதை)
என அறிவின் வலிமையைக் கூறுகிறார்.
வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ
. . . . .
ஒளிபடைதத கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
(பக்கங்கள் 38-39 / போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்)
என நலிவை விரட்டி வலிவை வரவேற்கிறார் பாரதியார்.
 வலிமைக்கு அடிப்படையானவற்றை ஆத்திசூடியில் பின்வருமாறு விளக்குகிறார் பாரதியார்.
ஒற்றுமை வலிமையாம் (ஆ.சூ.10)
மந்திரம் வலிமை (ஆ.சூ.75)
ஒற்றுமையைப் பற்றிபாரதியார்,
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வே
(பக்கம் 181 / வந்தே மாதரம்)
என்பதுபோல் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளதை நாம் அறிவோம். இதுபோல் இங்கு மந்திரம் என்பது மக்களை ஏமாற்றும்தந்திரத்தையன்று.
மந்திரத்தாலே யெங்கும் – கிளியே
மாங்கனி வீழ்வதுண்டோ (நடிப்பு சுதேசிகள்)
எனச்சாடியவரல்லவா பாரதியார். நிறைமொழி மாந்தரின் மறைமொழியான மந்திரத்தையே பாரதியார் குறிப்பிடுகிறார்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 05)

Monday, December 28, 2015

சிம்புவின் மறைப்போசைப் பாடலும் மகளிர் அமைப்புகளும்

சிலம்பரசன்02 : Simbu-Silambarasan02

சிறியன சிந்திக்கலாமா?

சிந்தனையைச் சிதற அடிக்கலாமா?

  திடீரென்று விழிப்படைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மகளிர் அமைப்புகள் குறித்துக் காண்பதற்கு முன் சிலம்பரசன் செயல்பாடு குறித்துக் காண்போம்.
  சிம்பு என்னும் சிலம்பரசனின் செயல் பண்பாடற்றது. மழலை நிலையிலிருந்தே திரைத்துறையில் இருப்பவர்; நடிகர், பாடகர், இசையமைப்பாளர் முதலான பல்வேறு துறைகளில் தந்தை வழியில் மலர்ந்து பல்துறை வித்தகராக வலம் வருபவர்; மேலும் பல முன்னேற்றங்களைக் காணும் திறமையும் வாய்ப்பும் உள்ளவர்; காதலில் தோல்விகளைச் சந்தித்த பொழுதும் தாடி வளர்த்து ஊக்கமிழந்து சோர்வடையாதவர்; தன்னம்பிக்கை மிக்கவர். இத்தகைய ஆற்றல் மிக்க இளைஞர் படைப்பாளி என்ற முறையிலும் கலைஞன் என்ற முறையிலும் மன்பதை நோக்கில் சிந்திக்காமல் செயல்படுவது வருத்தத்திற்குரியது. இருப்பினும் அவரது பண்பாடற்ற செயலை மன்பதைக்கு எதிரான குற்றமாகக் கருதத் தேவையில்லை. ஆனால், இவரது செயல் அவரது கண்ணோட்டத்தில் சட்டப்படியான குற்றமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரின் பெற்றோர்க்கும் குடும்பத்திற்கும் இழுக்கு ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருவாக்கிற்கிணங்க வளர்ந்து வாழ வேண்டியவர், சிறியன சிந்திக்கலாமா? சிலம்பரசன் என்னும் பெயருக்கேற்ப திரைக்காவியம்படைக்க வேண்டியவர் சிந்தனையைச் சிதற அடித்து வழி தவறலாமா? என்பதை எண்ணிப் பார்த்துக் குடும்பத்தினருக்குத் தலைக்குனிவு ஏற்படுத்தியமைக்காக அவர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். படம் வராவிட்டாலும் தன் மீது நம்பிக்கை கொண்டுள்ள தன் நேயர்களிடம் தான் திசைமாறிப் போனதை ஒத்துக் கொண்டு அவ்வழியை யாரும் பின்பற்ற வேண்டா என வேண்டி இனியேனும் பண்பரசனாக வாழ வேண்டும்.
  பொதுவாகத் திரைப்படங்களில்   பாடலில் அல்லது உரையாடலில் தணிக்கைக்குரிய சொல் அல்லது சொற்கள் வரும் பொழுது ஓசை மூலம் மறைப்பதே வழக்கம். அதற்கும் முன்பு நயம் கருதி மறைப்போசை வருவதுமுண்டு. அதில் குறிப்பிடத்தக்கதாக வாலி எழுதி விசுவநாதன் இராமமூர்த்தி இசையில் கோபாலகிருட்டிணன் இயக்கிய ‘கற்பகம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு’ என்னும் படப்பாடலைக் கூறலாம். இதில் புதுமணப்பெண்ணின் வெட்க உணர்விற்கேற்பப் பாடும் பொழுது ‘தூக்கம், தொட்டில், வெட்கம், முத்தம்’ ஆகிய சொற்கள் வரவேண்டிய இடங்களில் இசையுடன் இணைந்த வாயொலி மூலம் அவை மறைக்கப்பட்டிருக்கும். எனினும் இது நயம் கருதியதே தவிர தவறான சொல்லை மறைப்பதற்காக அல்ல. மறைப்போசை பாடல் மூலம் புகழ் பெற எண்ணினால் சிலம்பரசன் இவ்வாறு பாடியிருந்திருக்க வேண்டும்.
 வெள்ளத்துயரில் சிக்கியதான், வெள்ளத்தால்  துயருற்றவர்களுக்கு உதவி வந்த நான், அந்த நேரம் இந்தப் பாடலை வெளியிட்டிருப்பேனா என்றெல்லாம் அவர் கேட்கிறார். அவர் பொதுவில் பாடவில்லை, வெளியிடவில்லை என்பதுபோல் கூறியிருப்பது அவ்வாறு பாடினால் தவறாகும் என்று புரிந்து கொண்டதாகத்தான் பொருள். அத்தகைய பாடலைத்திறமை வாய்ந்த அவர் பாடியிருக்க வேண்டிய தேவையில்லையே! எனவே, இதுபோன்ற எண்ணங்களுக்கு ஆட்பட்டிருப்பதே பண்பாட்டுச் சிதைவு என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். கவிஞர் அறிவுமதி, கவிஞர் தாமரை முதலான கவிஞர்கள் சிலர் வழியல் பிறமொழிக்கலப்பில்லாத நல்ல பாடல்களைப் பாடும் பண்பாளராக வருவதைப் பெருமையாக எண்ண வேண்டும். (அவர்களின் பாடல்களுக்கும் நாட்டிய இயக்குநர்கள் உடலசைவுகளின் மூலம் இழுக்கை உண்டாக்குவது தனிக்கதை.)
  பொதுவாக உடலுறுப்புகளின் பெயர்களைக் கூறுவது குற்றமல்ல. ஆனால், மருத்துவரிடம் குறைபாடு, நோய்முதலானவைபற்றித் தெரிவிக்க அல்லது மாணாக்கர்களிடம் பாடம் நடத்த தெரிவிக்க என்பன போன்ற காரணங்களில் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கும் பொழுதும் பிறப்புறுப்பு, கருவாய் மறைவுறுப்பு என்பன போன்று வழக்கிலுள்ள இடக்கரடக்கலாகப் பயன்படுத்த வேண்டும். (இதையே ஆங்கிலத்தில் கூறும் பொழுது தவறாகக் கருதுவதில்லை. ) தமிழிலும் முன்னர், பெண்களின் மார்புறுப்பை வெளிப்படையாகக் குறிப்பிட்டு இலக்கியங்கள் வந்துள்ளன. அக்காலத்தில் அவை தவறாக எண்ணப்படவில்லை. இக்காலம் மாறியுள்ளது. எனினும் சில பெண் கவிஞர்களே ஆண்கள் பாடக்கூடாத முறையிலெல்லாம் பாடுகிறார்கள் என்பதும் உண்மை. என்றாலும் எந்தச் சொல்லாக இருந்தாலும் சொல்வதன் நோக்கம், சொல்லும் முறையில்தான் பண்பாடு இருக்கிறது. “காதல் தோல்வி கண்ணடால், கவலைப்படவேண்டா, உனக்கென ஒருத்தி பிறந்திருப்பாள்” என்ற நல்ல கருத்தைக் கூற வந்த இடத்தில், தேவையற்ற சொல் எதற்கு? அற்ப இன்பமோ வீண்பெருமையோ எதுவாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் கூட அவ்வாறு பயன்படுத்தியது தவறு என்பதைச் சிலம்பரசன் உணர வேண்டும்.
  அதே நேரம் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஒன்றைப்புரிந்து கொள்ள வேண்டும். கீழ்மையான சொற்கள் தணிக்கையில் மறைக்கப்பட்ட பின்பு அதை எழுதிய அல்லது அதனுடன் தொடர்புடைய யாருக்கு எதிராகவும் யாரும் போராடியதில்லை. அவ்வாறிருக்க அவரது படங்களைப் புறக்கணிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் கீழ்மையின் தொடக்கமே அவர்தான் என்பதுபோல் போராடுவது ஏனென்றுதான் புரியவில்லை.   பொதுவாகவே திரைப்படங்களில் இப்படிப்பட்ட சொற்கள் முழுமையாக அல்லது முதலெழுத்துமட்டும் சொல்லி வெளிவருவது வழக்கமாகிவிட்டது.
 ‘வெ’ எழுத்தில் தொடங்கும் நான்கெழுத்துச் சொல்லைத்திட்டும்பொழுது பயன்படுத்தினால் கெட்ட சொல்லாகவே கருதப்படும். இப்பொழுது படங்களில் பலமுறை கூறுகின்றனர்.
  தலைவன், தலைவியிடம் “மெதுவா, மெதுவா, தொடலாமா” என்பது போய், தலைவனிடம் தலைவி “கட்டிப்பிடிடா கட்டிப்பிடிடா” எனச் சொல்லும் காலம் வந்து விட்டது. இலைமறை காயாக உடலைக்காட்டி வந்த நடிககைள் முழுமையாகக் காட்டும் அளவிற்கு நீலப்படம்போல் படங்கள் வருகின்றன. இருபொருள்படப் பேசிய காலம்போய் வெளிப்படையாகவே கூசும்வகையில் பேசும் அல்லது பாடும் காலம் வந்துவிட்டது. அப்பொழுதெல்லாம் பெண்கள்அமைப்பினர் உறங்கிக் கொண்டிருந்ததால் இது குறித்துக் கண்டிக்கவில்லை போலும்!
  சிலம்பரசனுக்கு எதிராகப் போராடியது விளம்பரத்திற்காகவோ வேறு எதற்காகவோ இல்லையெனில் இவற்றிற்கு எதிராகவும் போராட வேண்டும்.
  சரோசாதேவிக் கதைகள் என்பனவற்றைவிட மோசமான கதைகள் இணையத்தில் உலா வருகின்றன. கருவாய் அல்லது பிறப்பு உறுப்பை இப்பொழுது கண்டிப்பிற்கு உள்ளாகும் சொல்லைப் பயன்படுத்தி முகநூல் பதிவுப் பெயர்களாக வைத்திருப்போரும் உள்ளனர். மக்கள் சார்பாளரான கவிஞர் பெயருடன்சேர்த்தும் ஒருவர் முகநூல் கணக்கு வைத்துள்ளார். அரசியல் தலைவர்களைத் தாக்கும்போர்வையில் படிக்கஇயலாக் கீழ்மைச் சொற்களைப் பயன்படுத்துவோரும் உள்ளனர். எனவே, இவற்றிற்கெதிராகவும் சிலம்பரசனுக்கு எதிராகப் போரிடுவோர் இனிப் போராட வேண்டும். இதுவரை ஏன் போராடவில்லை எனக் கேட்கவில்லை. ஏனெனில் இப்பொழுதுதான அவர்கள் விழித்திருப்பார்கள். எனவே, இனியாவது போராட வேண்டும் என்கிறோம்.
 ஈழத்தில் தமிழ்ப்பெண்கள் மார்பில் சிங்கள முத்திரை குத்தியதுடன் “இங்கே தமிழச்சிகளின் மார்பு விற்கப்படும்” என்றெல்லாம்   சிங்களர்கள், பலகைகள் வைத்த பொழுது வராத சினம், பெண்களின் பிறப்பு உறுப்பில் மிளகாய்ப்பொடிகளைத்தூவியும் வெடி வைத்தும் வேறு வகையிலும் துன்புறுத்தியும் உயிரைப் பறித்த பின்பும், மறைவுறுப்புகளைச்  சிதைத்தும் இசையரசி போன்றவர்களைத் துன்புறுத்திய பொழுதும் வராத சினம், இனியாவது நம் நாட்டில் பெண்கள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராகவும் ஊடகங்களில் குறிப்பாகத் தொலைக்காட்சிகளில் இழிவாகக் காட்டப்படுவதற்கு எதிராகவும் வந்தால் மகிழ்ச்சி. ஈழப்பெண்கள் துன்புறுத்தப்பட்டபொழுது அவர்கள் வெளிநாட்டவர்கள்தானே என்ற எண்ணத்தில்கூட சினம்வராமல் அமைதியாக இருந்திருக்கலாம்.
  நம் நாட்டில் நடைபெறும் கேடுகளுக்கு எதிராக அவற்றைத் துடைத்தெறியும் வகையில் சினந்து போராடலாம் அல்லவா? சிறார் சிறுமிகளை அவர்கள் அறிந்தும் அறியாமலும் ஒழுக்கக்கேடான அசைவுகளை மேற்கொள்ளத் தூண்டுவதற்கு எதிராகவும் இயற்பியல் வேதியியல் முதலான அறிவியல் சொற்களை உடலிணைப்பு சார்ந்து பொருள்வரும் வகையிலும் கையாள்கிறார்கள் அல்லவா? அவற்றைத் தடுக்கும் வகையில் இக்காவலர்கள் போராடட்டும்! மறைந்து ஒழிந்து போயிருக்க வேண்டிய பாடலைப் பாரறியச் செய்யும் வகையில் பரப்புரை மேற்கொண்ட வகையில் இவர்களும் குற்றவாளிகள்தாம். எனவே, இக்குற்றச் செயல்களுக்காகவாவது இனி ஊடகங்களிலும் வலைத்தளங்களிலும் நிகழும் பெண்களுக்கு எதிரான கீழ்மைச் செயல்களை எதிர்த்துப் போராடட்டும்!
  ஊடகங்கள் வாயிலாக வரும் பண்பாட்டுச் சிதைவுகளுக்குத் தொடர்ந்து பெண்கள் அமைப்புகள் போராடட்டும்! வெல்லட்டும்!
simbu-aniruth
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரைAkaramuthalaHeader

அகரமுதல 111 – மார்கழி 04, 2046 /  திசம்பர் 20, 2015

Sunday, December 27, 2015

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 9 இலக்குவனார் திருவள்ளுவன்


(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8 தொடர்ச்சி)
தலைப்பு-தமிழன் என்பதில் பெருமை:thalaippu_thamizharenbathil_ennaperumai

09

  தமிழ்நாட்டின் தலைநகரின் பெயரைத் தமிழில் சென்னை என அழைக்க 1996இல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாணை பிறப்பிக்கவே 50 ஆண்டுகள் ஆகி விட்டன. எனினும் இன்னும் பலர் சென்னை என்றே அழைப்பதில்லை. பல்கலைக்கழகம், உயர்நீதிமன்றம், மருத்துவமனை முதலான அரசு நிறுவனங்களை அல்லது அரசின் துறைகளைக் கூட நம்மால் சென்னை எனக் குறிப்பிட இயலவில்லை.   பிற நாடுகள் அல்லது நகரங்கள் பெயர் மாற்றம் நடக்கும் பொழுது உடனே அவை நடைமுறைக்கு வந்துவிடுகின்றன. ஆனால், தமிழர்கள் பிற நாட்டின் பெயர்கள் மாறின எனில் அவ்வாறே புதிய பெயரில் அழைப்பர். பம்பாய் மும்பை என மாறியதும் மும்பை என்று அழைக்ககும் நம்மவர்களே சென்னையைச் சென்னை என்று அழைப்பதில்லை. மெட்ராசு என்று திரைப்படமும் வருகிறது. தமிழ்ப்பெயர் சூட்டிய படங்கள் இப்பொழுது வருகின்றன. பெரும்பாலும் அவை நல்ல படங்களாகவே இருக்கின்றன. தமிழ்ப் பெயர் சூட்டிய படங்கள், தமிழ்ப் பண்பாட்டை எதிரொலிக்கும் படங்கள் நன்றாக இல்லாவிட்டாலும்கூட நாம் பார்த்து ஊக்கப்படுத்த வேண்டும். அதே நேரம் தமிழில் இல்லாப் பெயர் தாங்கி வரும் படங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் பார்க்காமல் புயறக்கணிக்க வேண்டும். எனவே, மெட்ராசு படத்தை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் எனத் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் வேண்டுகின்றேன். பிற அமைப்புகளிடமும் இதனைத் தெரிவிக்க வேண்டுகின்றேன். அரசாணையையும் மீறி நம் தலைநகரின் பெயரைத் தமிழில் குறிப்பிடாமல் இருக்கும் துணிவு உள்ளவர்கள் இருக்கும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்கையில் தமிழர் எனப் பெருமைபட என்ன இருக்கிறது?
  மத்திய அரசில் தமிழ்நாடும் உள்ளது எனில் தமிழ்மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. நீதிமன்றங்களும் மண்ணின் மக்களான தமிழர்களின் உணர்வை மதித்துத்தான் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால், நடப்பதென்ன? உயர் நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க மத்திய அரசு தடை. தமிழர்கள் தமிழர்களுக்காகக் கட்டிய தமிழ்க்கடவுள்களின் கோயில்களில் தமிழ்வழிபாட்டிற்கு உள்ள தடையை நீக்க மத்திய அரசு முயல்வது இல்லை. 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனையில் அல்லல் பட்டு வரும் அப்பாவித் தமிழர்களை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் சொன்னாலும் மத்திய அரசு அதற்கு முட்டுக்கட்டை.
  தமிழக மீனவர்கள் சிங்களப் படைகளால் ஒழிக்கப்படுவதும் அவர்கள் படகுகள்அழிக்கப்படுவதும் தொடர்ந்தாலும் கொலைகாரனைத்தான் வரவேற்றுக் குலவுகிறார்களே ஒழிய, மத்திய அரசினர் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. கேரளச் செவிலியர்கள் தாக்கப்படும் முன்பே பேரிடர் வரும் என்று கடத்தல் நாடகம்போட்டு மீட்டு வரும் மத்திய அரசு, தமிழ் ஈழத்தில் கொத்துக் குண்டுகளாலும் ஏவுகணைகளாலும் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு உதவியாக இருந்ததுடன் கொலைகாரக் கூட்டாளிகளுடன் கைகோத்துக் கொண்டு தொடர்ந்து தமிழர்நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. இந்தியராக எண்ணினால் இணையுரிமை கொடு! இல்லையேல் தனியுரிமை கொடு! எனக் கேட்டு மத்திய அரசை வழிக்குக் கொணரும் திறமைகூட நம்மிடம் இல்லை.
  தொலைபேசி முதலான மத்திய அரசு தொலைபேசிகளில் வணக்கம் ஒலிக்காது; நமசுகாரம்தான் நச்சரிக்கும்.
  பண எடுப்பு மையங்களில் ஆங்கிலமும் இந்தியும் உள்ளன. ஆனால் பலவற்றில் தமிழைக் காணோம்!
  வங்கியின் படிவங்கள் தமிழைப் புறக்கணிக்கின்றன. நாம் அவ்வங்கிகளைப் புறக்கணிப்பதில்லை!
  அங்கன்வாடி முதலான பெயர்களைச் சூட்டிக் கொண்டு தமிழை நாமே வெளியேற்றிக் கொண்டுள்ளோம்.
  தமிழகக்காவல்துறை ஆங்கிலேயர்க்குச் செயல்படுவதுபோல் அறிவிப்புகள், வழிகாட்டும் குறிப்புகள் யாவற்றிலும் தமிழ் இல்லை. தமிழன்னைக்குக் காவல் தேவையில்லை என விட்டுவிட்டார்கள் போலும்!
  தொடர்வண்டி அறிவிப்புகளில் தமிழ் இல்லை. எச்சரிக்கை, அபாய அறிவிப்பு என்றெல்லாம் தமிழ்நாட்டில் இந்தியிலும் மலையாளத்திலும் காண முடியும். ஆனால், தமிழர்கள் எக்கேடு கெட்டால் என்ன? அவர்களுக்கு எதற்கு எச்சரிக்கை என்று தமிழில் தருவதில்லை!
  மின்னேணி முதலான அனைத்து அவசர உதவி அறிவிப்பு இருக்கும் இடங்களில் எல்லாம் தமிழைக் காணமுடியாது. தமிழர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்று விட்டுவிட்டார்ளா? இப்படியாவது தமிழர் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என எண்ணுகிறார்களா? எனத் தெரியவில்லை.
  உணவகங்களில் உணவுப் பெயர்கள் தமிழில் இல்லை! உணவு நிரலும் தமிழில் இல்லை! தமிழையா   சாப்பிடப்போகிறார்கள்! தருவதை வயிற்றில் திணித்துக் கொண்டு ஓடட்டும் என எண்ணுகிறார்களோ!
  தங்கும் விடுதிகளான உறைவகங்களில் அறைகளின் பெயர்கள் தமிழில் இல்லை. கட்டண விவரங்கள், வசதி வாய்ப்புகள் தமிழில் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்கள் பணத்தில் வாழ்ந்து கொண்டு தமிழர்களி்ன் மொழியான தமிழைப் புறக்கணிக்க இவர்களுக்கு எவ்வாறு துணிவு வந்தது? தமிழர்கள் வாய்ப்பேச்சு வீரர்கள். முரண்டுபிடிக்கும் பொழுது மெதுவாகத்தட்டினாலே வீழ்ந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை போலும்! நமக்குள்ள உரிமைகளைக்கூடக் கேட்க முடியாமல் வாய் மூடி இருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?
 உறைவகங்களில் தங்குவதற்கான பதிவில் தமிழ் இல்லை. உணவகங்களில் நாம்தான் பணம் கொடுக்கிறோம். ஆனால் திருமணம் முதலான விழா அல்லது நிகழ்வுக் குறிப்புகளை அவர்கள் தமிழில் எழுத மாட்டார்களாம்! என்ன கொடுமை இது!
  கடைகளில் தரும் விலைச்சீட்டுகளில் தமிழ் இல்லை.
 அரசாணைகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் மதிக்காத பொழுது மக்கள் எங்ஙனம் மதிப்பார்கள்? சான்றுக்கு ஒன்று! ஊர்திகளில் தமிழில் பதிவு எழுத்துகளைக் குறிக்கும் அரசாணையை அமைச்சர்களோ தலைமைச் செயலக அதிகாரிகளோ துறைத்தலைவர்களோ மதிக்காத பொழுது வேறு யார்தான் மதிப்பார்கள்! கணக்குக் காட்ட ஓர் அரசாணை அவ்வளவுதான்! இப்படித்தான் தமிழ்நாட்டில் தமிழ் முழுமையான ஆட்சி மொழியாக இல்லை.
  தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் படிக்கவும் பணியாற்றவும் வாய்ப்பு உள்ளபோது யாருக்கும் உதவாத தமிழ் என்று அனைவரும் புறக்கணிக்கத்தானே செய்வார்கள்! இப்படி எல்லாம் இயன்ற வரை தமிழை எல்லா இடங்களில் இருந்தும் துரத்தி விட்டு யாரோ சிலர் எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என முழங்கினால் போதுமா? தமிழ்நாட்டில் தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்படுவதில் என்ன இருக்கிறது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar_thiruvalluvan+10




Friday, December 25, 2015

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 03 – இலக்குவனார் திருவள்ளுவன்


தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02

03



ஆண்மை கைக் கொள்!

உலகில் இன்பம் பெற வழி அச்சத்தை விரட்டுவதுதான். அச்சத்தை விரட்ட ஆண்மையைக் கைக் கொள்ள வேண்டும்.

அச்சத்தை விட்டிடடா – நல்
ஆண்மையைக் கைக் கொள்ளடா
இச்சகத்தினிமேலே நீ – என்றும்
இன்பமே பெறுவையடா என்கிறார் பாரதியார்.

அச்சம் நீங்கினாயோ – அடிமை
ஆண்மைத் தாங்கினாயோ
(பக்கம் 63 / தொண்டு செய்யும் அடிமை)
என்று அச்சம் நீங்க ஆண்மையைத் தாங்க வலியுறுத்துகிறார். இதனையே ஆத்திசூடியில் (2) ஆண்மை தவறேல் எனக்கட்டளையாகத் தெரிவிக்கிறார். மேலும், ஆண்மை வெளிப்பாடாக, ஏறுபோல் நடையினாாய் வா! வா! வா! என ஏறுநடையை வரவேற்றவர் பாரதியார். எனவே,
ஏறுபோல் நட (ஆ.சூ.8)
குன்றென நிமிர்ந்து நில் (ஆ.சூ. 17)
என ஆண்மையின் வெளிப்பாட்டை வற்புறுத்திக் கட்டளையிட்டுள்ளார் பாரதியார்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 04)


அகரமுதல - மார்கழி 04, 2046 /  திசம்பர் 20, 2015 

Followers

Blog Archive