Wednesday, September 28, 2022

அகரமுதல முறைமன்றம்: ஆ.இராசா குற்றவாளியே!

 அகரமுதல




அகரமுதல முறைமன்றம்: ஆ.இராசா குற்றவாளியே!

– இலக்குவனார் திருவள்ளுவன்

தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினான முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா, இந்துக்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார் எனப் பிராமணியன் என்பார் முறையிட்டுள்ளார். அவர், ஆ.இராசா, சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், “இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன். இந்துவாக  இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்;  சூத்திரனாக இருக்கும் வரை நீ பரத்தையின்(விபச்சாரியின்) மகன்எத்தனை பேர் பரத்தையின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? . .  எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற  அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது” எனப் பேசியுள்ளதைக் காணுரையுடன் இணைத்துள்ளார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதற்கு மாற்றாக உயர்வு தாழ்வு கற்பிப்பதும் தீண்டத்தகாதவர்களாக மக்களில் ஒரு பிரிவினரை ஒதுக்குவதும் பெருங்குற்றம். எனினும் வழக்குரையின் உண்மைத்தன்மையை ஆராயவேண்டும். வாதுரைக்கு எதிருரையாகத் தன்மானன் என்பார்,

“ஆ.இராசா தன் சொந்தக் கருத்தாக எதையும் கூறவில்லை. ‘மனு சுமிருதி’ என்னும் நூலில் உள்ளதைத்தான் கூறியுள்ளார். முன்னரே பல அறிஞர்களும் தலைவர்களும் இதை எடுத்துரைத்துள்ளனர். மேலும் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தைத்தான் கூறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்

அப்பொழுது கூறியவை என நூல்களில் உள்ள இழிவுபடுத்தும் கருத்துகளை இப்பொழுது கூறுவது முறையல்ல என்கிறார் பிராமணியன். கி.மு.நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூலின் சிறப்புகளை ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

மனு அல்லது மநு என்பது கி.பி. நூற்றாண்டுகளைச் சேர்ந்தே. எல்லாச் சமற்கிருத நூல்களையும் தமிழ், பிராகிருதம், பாலி நூல்களுக்கும் முற்பட்டதாகத் திரித்துக் கூறும் வழக்கப்படி இதன்காலத்தையும் கி.மு. நூற்றாண்டுகளில் கூறுகின்றனர். இந்த உண்மையைத் தன்மானம் தெரிவித்ததும், “காலம் எதுவாக இருந்தால் என்ன? இப்போதைய காலத்திற்கு முற்பட்டதுதானே அதை ஏன் இப்பொழுது குறிக்க வேண்டும்” என்று பிராமணியன் தெரிவித்துள்ளார். மனுவை உயர்த்திக் கூறிக்கொண்டிருப்பது காலந்தோறும் தொடர்ந்து கொண்டிருப்பதால் அதன் உண்மைத் தன்மையை உலகறியச் செய்ய வேண்டும் என்கிறார் தன்மானன். இஃது ஏற்றுக்கொள்ளக்   கூடிய வாதமாக உள்ளது. காலப் பழமை என்தாலேயே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றனர் சிலர். அவர்களுக்காகவும் நூலில் இடம் பெற்றுள்ள அறமற்ற கருத்துகளுக்காகவும் அதன்  மக்கள் குலத்திற்கு எதிரான அறமற்ற தன்மையைப் பதிய வேண்டியது கட்டாயம். இதற்கு முன்னர், “ஏதோ சொல்லிவிட்டுக் போகிறார்கள். நாம் ஏற்றுக்கொண்டால்தானே” என எண்ணிப் புறக்கணித்ததால்தான் இன்றும் அதனைப் புகழ்வார் இருக்கின்றனர்.

எனவே, உண்மையை உலகத்தவருக்கு உணர்த்துவது தவறில்லை. ஈராண்டுகளுக்கு முன்னர் முனைவர் தொல்.திருமாவளவன் இதுபோன்ற கருத்தைக் கூறிய பொழுதும் சிறிய கூட்டம் ஒன்று எதிர்த்துப் பெரிதாகப் பரப்பியது. இப்பொழுது ஆ.இராசாவின் பேச்சை எடுத்துக் கொண்டனர். இந்தியாவை ஒற்றைச் சமய நாடாக – ஏக மத நாடாக – மாற்ற எண்ணுவதற்கு இடையூறாக இருக்கும் என்பதால் வலுத்த எதிர்ப்பைக் காட்டுகின்றனர். கட்சித் தலைமைக்குக் கொத்தடிமைகளாக வாழுவோர் உள்ளமையால் கட்சியினரும் தங்கள் மத அழிப்பிற்கான முயற்சி என்னும் பொய்யுரைகளை நம்புவோரும் இதனை எதிர்க்கின்றனர்.

தாசி என்றால் அக்காலத்தில் வேலைக்காரி எனப் பொருள். வேலைக்காரியின் மகன் எனக் கூறியதைத் தவறாகப் புரிந்து கொண்டு பரத்தையின் மகன் எனக் கூறுவதாகப் பிராமணியன் தன் வாதுரையில் தெரிவித்தார். இவ்வாறு தவறான மொழிபெயர்ப்பின் அடிப்படையில் மனுநூலைத் தவறாகக் கூறுகிறார்கள் என்னும் பிராமணியன் தெரிவிக்கிறார். மனுநூல் மட்டுமல்ல, எல்லாச் சமற்கிருத நூல்களுமே தவறன மொழிபெயர்ப்புகளுடன்தான் உள்ளன என்பதை ஒப்புக் கொள்ளும் தன்மானன் ஆனால், அவை மனு முதலிய சமற்கிருத நூல்களில் உள்ள உள்ள குறைகளை நிறைகளாகக் காட்டும் தவறான மொழிபெயர்ப்புகள் என்கிறார். பல இடைச்செருகல்களைப் புகுத்தி மக்கள் குலத்திற்கு எதிரான நூல்களை எல்லாம் உயர்ந்த அறநூல்களாகக்காட்டியுள்ளனர் எனச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.

ஒருவருக்குத் திருமண உறவில் இல்லாத வேலைக்காரியுடன் உறவு கொண்டு பிள்ளை பிறந்தால், அந்த வேலைக்காரியைப் பரத்தை என்றுதானே அழைப்பார்கள். வேலைக்காரி தன் முறையான கணவனுடன் குழந்தை பெற்றால்  அவள் பிறரைப்போன்ற ஒழுக்கமான பெண் எனலாம். ஆனால், தான் வேலை பார்க்கும் முதலாளியிடம் குழந்தை பெற்றால் அவளை என்னவென்று அழைப்பார்கள். எனவே, பணியாளாகக் குறிப்பிட்டிருந்தாலும் பரத்தையாகக் குறிப் பிட்டிருந்தாலும் முறையற்ற பிறப்பு என்பதை உணர்த்தும் பொருள் ஒன்றுதான். இவ்வாறு சொல்லப்படுவதை அதன் இழிதகைமையை அகற்றுவதற்காகக் குரல் கொடுத்ததற்குப் பாராட்ட வேண்டுமே யன்றி எதிராகத் தாக்குவதும் போராடுவதும் முறையல்ல. மேலும் ஆ.இராசா மனு நூலிலிருந்து மட்டும் அல்ல; உச்சநீதிமன்றத்தின் கருத்தைத்தான் மேற்கோளாகக் கூறியுள்ளார். எனவே, உச்சநீதிமன்றக் கருத்திற்கு எதிராகப் போராடினால் அரசுவேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து எதிர்ப்புரை தெரிவிப்பவர்கள் மீதும் எதிர் போராட்டம் நடத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“மனுநூல் பலரால் எழுதப்பட்டிருக்க வேண்டும்; வருணாசிரம தருமத்தைக் காப்பதே அதன் தலையாய நோக்கு; அதில் மூன்றில் ஒரு பங்கு அல்லது பாதி மகாபாரதத்தில் அப்படியே இரு்க்கிறது; அவற்றுள் எது மூலம், பின்னால் எழுதப்பெற்றது எது என்று கண்டுபிடிக்க இயலவில்லை; அது பிராமணரால் எழுதப்பட்டது; பிராமணருக்காக, பிராமணரின் நலன் கருதி எழுதப்பட்டது; அன்னார் தங்களைப் பண்டைய இந்தியாவின் மூளைகளாகவும் வாக்குகளாகவும் கருதி, அதனை உறுதிசெய்து கொள்ளப் பயன்படுத்திக் கொண்ட நூல்; பல அடிப்படைக் கொள்கைகள்பற்றி அதில் முரண்பட்ட கருத்துகள் சொல்லப்பட்டிருக்கின்றன; மனுநீதியின் பகுதிகள் வெவ்வேறு காலங்களில் பல நூற்றாண்டுகளாகச் சேர்க்கப்பட்டதனால் இது நிகழ்ந்தது; சட்டங்களைப்பற்றிய பகுதிகள் இறுதியாகச் சேர்க்கப்பட்டவை; அதுகூறும் சட்டங்கள் என்றும் நடைமுறைக்கேற்றவையாக இருந்திருக்க முடியாது.” இவ்வாறு சிகாகோ பல்கலைக்கழத்துப் பேராசிரியை வெண்டி தானிகர்(Wendy Doniger) தெளிவாக ஆராய்ந்து உரைத்துள்ளார். இக்கருத்துகளையும் மனுநூல் கூறும் நீதி எக்காலத்துக்கும் எவ்விடத்திற்கும் எம்மனிதர்க்கும் பொருந்தாது என ஏ.கே.இராமனுசன் கூறுவதையும் எதிர் வழக்காடி குறிப்பிடுகிறார்.

மனுநூலிலிருந்து உயர்ந்த கருத்துகள் எனச் சிலவற்றை வழக்காடி தெரிவித்துள்ளார். பெண்களைப்பற்றிப் பல இடங்களில் இழிவாகப்பேசும் மனுநீதி இரண்டொரு இடங்களில் அவர்களே குடும்பத்திற்கு அணிகலன் என்று உயர்வாகக் கூறுதலும் கொல்லாமையையும் ஊன் உண்ணாமையையும் ஆங்காங்கே சிறப்பித்தலும்  திசைதிருப்பிவிடப் பின்னால் வந்தவர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவு ஆகும் எனத் திறனாய்வு அறிஞர்கள் முன்னரே சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, இடைச்செருகல்களை வைத்துக்கொண்டு ஒரு நூலைச் சிறப்பித்து அதன் குறைகளைக் கூறக்கூடாது என வாதிடுவது ஏற்புடைத்தல்ல.

திருக்குறளுக்கு முன்னோடி மனுநூல் என்றும் அந்நூலை வழிகாட்டியாகக் கொண்டு திருவள்ளுவர் திருக்குறளை எழுதியுள்ளார் என்றும் எனவே, சிறப்பு மிக்க மனுநூலைப் பழிக்கக் கூடாது என்றும் பிராமணியன் தவறாகத் தெரிவிக்கிறார். திருக்குறளின் சிறப்பையும் மனுவின் கீழ்மையையும் ஒப்பிட்டும் அறிஞர்கள் கூறியுள்ளனர். “திருவள்ளுவர் உழவைப்போற்றுகிறார்; மனுநூல் உழவை இழிதொழிலாகக் கூறுகிறது; வேள்வி செய்வோன் பல மனைவியரோடு சேர்ந்து செய்யவேண்டும் என்பது மனு; மனைவியை வாழ்க்கைத் துணை என்று சொல்வதுடன் ஆடவர் கற்பையும் வலியுறுத்துவது குறள்; மனிதவினத்தில் பாதியான பெண்ணோடு இணைந்து மக்களைப் பெற்று வாழும் இல்லறச் சிறப்பைப் போற்றும் திருக்குறள்போன்ற அறநூலையோ சமயநூலையோ சமற்கிருதத்தில் காண இயலவில்லை” என்று முனைவர் பேரா.ப.மருதநாயகம் கூறுகிறார். மனித நேயத்திற்கும் அறத்திற்கும் எதிரான மனுநீதியைத் திருக்குறளுக்கு முன்னோடி வழிகாட்டி நூல் எனத் திரித்துக் கூறி அதனடிப்படையில் மனுநூலை ஏற்க வேண்டும் என்பதும் சரியல்ல.

மனுநூலை அறத்திற்கு எதிரான நூல்  என முழுநூலையும் ஆராய்ந்து முறை கூறுவதைத் தனியாக வைத்துக் கொள்ளலாம். கீதை பற்றியும் வழக்காளி பிராமணியன் தெரிவித்தார். கீதை முதலான பிற சமற்கிருத நூல்களின் சிறப்பின்மை பற்றியும் தனியே ஆராயலாம். இப்பொழுது முறையீட்டுரையில் தெரிவித்த இராசாவின் கருத்தான “இந்து என்றால் சூத்திரன், சூத்திரன் என்றால் பரத்தையின் மகன்” என்ற கருத்தை மட்டும் பார்ப்போம்.

முறையீட்டில் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்  ஆ.இராசாவின் பேச்சு அவரது சொந்தக்கருத்தல்ல. மேற்கோள் கருத்து. மனு நூலில் இருந்தும் அதனடிப்படையில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளில் இருந்தும் எடுத்து மேற்கோளாகக் கூறியுள்ளார். அவரின் கருத்து இந்து சமயத்தினரை இழிவுபடுத்துவதற்காகத் தெரிவிக்கப்பட்டதல்ல. இந்துக்களை இழிவுபடுத்தும் கருத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றை அகற்ற வேண்டும் என்ற மான உணர்வினால் தெரிவிக்கப்பட்டது. அவர் கூறிய கருத்துகள் முன்னரே சமற்கிருத அறிஞர்கள் உட்படப் பலரும் பல இடங்களில் பேசியும் எழுதியும் வந்துள்ளனர். தன்மானத் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள்,

… சாத்திரத்திலே தேவடியாள் மகன் என்கிறான், பார்ப்பானுக்கு பிறந்தவன் என்கிறான், சூத்திரனுக்கு பெண்டாட்டியே கிடையாது என்கிறான். சூத்திரச்சி பார்ப்பானுடைய வைப்பாட்டி என்று எழுதி இருக்கிறான்…(இதையெல்லாம்) யார் கவனித்தீர்கள்… ((பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொ.1:1:3234)”

“..ஆனதினாலே, நாம் முதலாவது இப்போது மானத்துக்காகப் போராடுகிறோம், வேறே எதற்காகவும் இல்லை. இழிவு – தேவடியாள் மகன், பார்ப்பானுடைய வைப்பாட்டி மகன், தாசிப் புத்திரன் என்று சட்டத்திலே இருக்கிறது.. (பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொ.1:1:3249) என்றல்லாம் பல காலம் எழுதியும் பேசியும் வந்துள்ளார். அவரது சிந்தனை வழியில் நடைபோடும் ஆ.இராசா அவரது கருததுகளால் ஈர்ககப்பட்டு இப்போதைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே பேசியுள்ளார். இவர் கூறியது தவறென்றால் நூற்றுக்கணக்கான நூல்களில், ஆயிரக்கணக்கான கூட்டங்களில் இக்கருத்து தெரிவிக்கப்பட்டுளதே! அதற்கு என் செய்வது? ஆ.இராசாவின் கருத்துக்கு ஒரு சாரார் பாய்கின்றனர் என்றால் அதற்குக் காரணம் அக்கருத்தின் இழிவால் அவமானமுற்றதுதானே! மனுநூலில் மக்களை இழிவு படுத்தும் கருத்துகள் இடம் பெற்றுள்ளன என்பதை ஒப்புக் கொள்ள மனமின்றி, அதற்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இழி கருத்துகளை எடுத்துச் சொல்பவர் மீது பாய்வது ஏன்?

சூத்திரனுக்கு ஒரு நீதி,

தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதி,

சாத்திரம் சொல்லுமாயின்

 அது சதியெனக் காண்போம்

என மாக்கவி பாரதியார் மனுமுதலான நூல்களில் உள்ள ஆளுக்கொரு நீதி கூறும் அறமற்ற கருத்துகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார். அவர் வழியில்  சாத்திரத்தின் சதிகளை முன்னோர் வழியில் அம்பலப்படுத்தும் ஆ.இராசா பாராட்டிற்குரியவரே!

இக்கருத்துகளை அலசி ஆராய்ந்து உண்மையை உரைக்கவைத்த முறையீட்டாளருக்கு நன்றி.

மேனாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா சிறந்த நாவன்மை மிக்கவர்.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல் (திருக்குறள் 643)

என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் உரைக்கும் இலக்கணத்திற்கேற்ப மக்களைக் கட்டிப்போடும் சொற்பொழிவாளர். மதம், மொழி முதலான அனைத்திலுமே  ஒற்றைத் தன்மையை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த எண்ணும் கட்சி ஒன்றியத்தில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் துணிந்து எதிர்க்குரல் கொடுத்து வருபவர். ஆனால், இதற்கு முன்னர் இக்கட்சியுடன் உறவு கொண்டு தம் கட்சி, ஆட்சி நலன்களைச் சுவைத்த பொழுது வாய் மூடி இருந்தவர். எனவே, தாம் உணர்ந்துள்ள கருத்தை எக்காலத்திலும் பரப்ப வேண்டு்ம் என்றில்லாமல் அவ்வப் பொழுது வாய் மூடி இருப்பது முறையல்ல. எனவே, மக்களிடம் ஆரிய நூல்களில் உள்ள இழிவுகளைச் சரியான முறையில் தொடர்ந்து சுட்டிக்காட்டாமையால் அவரைக் குற்றவாளியாகவே கருதுகிறோம்.

இதற்குத் தண்டனையாக அவர் மனுமுதலான சமற்கிருத நூல்களில் உள்ள மக்கள் குலத்திற்கு எதிரான அறமற்ற கருத்துகளை மக்களிடையே பரப்புவதில் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல இதழுரை

புரட்டாசி 12, 2053 / 29.09.2022

Saturday, September 24, 2022

தமிழ்ப்பரப்புரைக் கழகம் : இலக்குவனார் கனவை நனவாக்கும் முதல்வருக்குப் பாராட்டு



தமிழ்ப்பரப்புரைக் கழகம் : இலக்குவனார் கனவை நனவாக்கும் முதல்வருக்குப் பாராட்டு –  இலக்குவனார் திருவள்ளுவன்

கடந்த ஆண்டு சட்டமன்றத் தொடரில் 31.8.2021 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான நல்கைக் கோரிக்கையின்போது மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு “அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும்” என அறிவித்திருந்தார்.

06.01.22 அன்று தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்குவதற்குத் தொடர் செலவினமாக உரூ.1 கோடி நிதி ஒப்பளிப்பு அளித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது 

நேற்று (24.08.2022) மாண்புமிகு முதல்வரால் தமிழ்ப்பரப்பரைக்கழகம் தொடங்கிவைக்கப்பட்டது.

தமிழ்ப்பரப்புரைக் கழகம் தொடங்க வேண்டும் என்பது தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் அவர்களின் கனவு.

பரப்புரைப்பணியைப் பேராசிரியர் சி.இலக்குவனார் தம் மாணவப் பருவத்திலேயே தொடங்கி விட்டார். புலவர் பட்டத்திற்குப் பயிலும் பொழுதே விடுமுறை தோறும் நண்பர்கள் மூவரை இணைத்துக்  கொண்டு ஊர்கள்தோறும் சென்று  தமிழ்மொழியின் சிறப்புகளையும தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் முதலான இலக்கியங்களின் சிறப்புகளையும் மக்களிடையே பரப்பி வந்தார்.  தமிழ்ப்புலவர்களே தொல்காப்பியம் குறித்து மிகுதியும் படிக்காத காலத்தில் சங்கத்தமிழைத் தமிழ்ப்புலவர்கள் மக்களிடையே கொண்டு செல்லாக் காலத்தில், திருக்குறளை வாழ்வியல் நூலாக மக்களிடையே பரப்பாமல் இருந்த காலத்தில் தமிழ்ப்போராளி இலக்குவனார் அவற்றை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வந்தார்.

மாணவப்பருவத்தில் தொடங்கிய பரப்புரைப்பணிகளைத் தம் வாணாள்இறுதி வரை, தொல்காப்பியப் பரப்புரைப்பணி, சங்க இலக்கியப் பரப்புரைப்பணி, குறள்நெறிப் பரப்புரைப்பணி, தமிழ்மொழிச்சிறப்பு பரப்புரைப்பணி, தமிழ்க்காப்புப் பரப்புரைப் பணி தனித்தமிழ்ப் பரப்புரைப்பணி எனப் பரப்புரையில் ஈடுபட்டுப் பிறரையும் அவ்வாறு ஈடுபடச் செய்தார்.

தாம் பணியாற்றிய ஊர்கள் தோறும்தமிழ் அமைப்புகள் தொடங்கி இலக்கியப்பணிகளை ஆற்றி வந்த தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் மதுரையில் பணியாற்றும் பொழுது 1960 இல், 1965 இல் அரியணையில் ஏறி நம்மை நசுக்கத்திட்டமிட்டு இருந்த இந்தியை விரட்ட, தமிழ்க்காப்புக் கழகம் தோற்றுவித்தார்.இதனை மாண்புமிகு முதல்வர் அவர்கள் தம் தொடக்கவிழா உரையில் “ஒரு காலத்தில் பேராசிரியர் செந்தமிழ் அரிமா என்று போற்றப்பட்ட இலக்குவனார் அவர்கள் தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் தொடங்கினார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்க்காப்புக் கழகத்தின் அயராத பணியால், மக்களிடையே இந்தி எதிர்ப்பு உணர்வு கனன்று எரிந்தது. அதன் விளைவே நாடெங்கும் இந்தி எதிர்ப்புப் போர்; இந்தித் திணிப்பிற்குத் தடுப்பு; பேராயக்கட்சியான காங்கிரசு ஆட்சியலிருந்து விரட்டியடிப்பு;  தமிழ்நாட்டில் தி.மு.க.வெற்றிக் கொடி பறந்தது.

பேரா.சி.இலக்குவனார் தமிழ்ப் பரப்பு அயலகப் பயணம் மேற்கொண்ட பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பாக 10.9.71 இல் பாராட்டி வழியனுப்பும் விழா  நடைபெற்றது. அதில் நிறைவாகப்  பேராசிரியர் நன்றி உரையாற்றினார். அப்பொழுது அவர், தமிழ்ப் பரப்புக்கழகம் நிறுவி உயர்தனிச்  செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கும் பரப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். “தமிழ்க்காப்புப் பணியை இனித் திமுக அரசு மேற்கொள்ளும். நாம் தமிழ் பரப்புப்பணியை மேற்கொள்வோம்” என்றார். ஆனால், அவரது வாணாள் அதற்கு இடம் கொடுக்க வில்லை. இப்பணிகளைத் தொடங்கி முடிக்கும் முன்னரே அவரை நாம் இழந்து விட்டோம்.

எனினும் நாம் முன்னர்ப் பல நேர்வுகளில் தமிழ்ப்பரப்புரைக் கழகம் அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர் அறிவுறுத்திய வழியில் “தமிழ்பரப்புக்கழகம் நிறுவித் தமிழின் சிறப்பை உலக மக்களுக்கு உணர்த்த வேண்டும். தமிழ்க்காப்பு என்பது  கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. அனைத்துக் கட்சிகட்கும் உரியது என்று பேராசிரியர் இலக்குவனார் அறிவுறுத்தியதை அனைத்துக் கட்சியினரும் ஏற்று அன்னைத் தமிழைக் காப்பதை அவரவர் கடமையாகக் கொள்ள வேண்டும்.” (இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி, நட்பு :  03/09/2012)

“தமிழின் சிறப்புகளை அவரவர் பகுதிகளில் பரப்ப நற்றொண்டாற்ற வலியுறுத்தி வெற்றி காண வேண்டும்.” (மத்தியத் தலைவரானார் தாலின்! முன்மொழியுநராக மாறுக! – இலக்குவனார் திருவள்ளுவன்25.06.2017) என மு.க.தாலின் எதிர்க்கட்சித்தலைவராக இருக்கும் பொழுதே வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

“மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்!” என்னும் அகரமுதல இதழுரையிலும்(26.05.2019) தமிழின் சிறப்பை உணர்த்தும் பரப்புரையை மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

ஆட்சிக்கு வரும் முன்னரே தாம் ஆற்றவேண்டிய பணிகளைத் திட்டமிட்டு வகுத்துக்கொண்டு அவற்றைப் படிப்படியாகச் செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.தாலின். அந்த வகையில் தாம் திட்டமிட்டவாறு தமிழ் வளர்சசிக்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதில் உலக அளவிலான தமிழ் வளர்ச்சிக்கான திட்டமான தமிழ்ப்பரப்புக் கழகத்தைத் தோற்றுவித்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தமிழ் அமைப்பு என்றாலே தமிழ்ப்பகைவர்களுக்குத் தலைமையிடமும் முதன்மை யிடங்களும் கொடுப்பதே வழக்கம். அவ்வாறில்லாமல் உண்மையான தமிழ்ப்பற்றுள்ள தமிழறிஞர்களுக்கு மட்டுமே பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும்.

மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்ட தில் என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 1071).

இன்றைக்கு அன்பரே போல்வர் பகைவர் எனத் தமிழன்பர்களாக நடிக்கும் தமிழ்ப்பகைவர்களைக் குறிக்கலாம்.

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 274).

இதுபோல் நடுநிலைவேடத்தில் மறைந்து வஞ்சகராகச் செயல்பட்டுத் தமிழுக்குத் தீங்கு செய்வோர் உள்ளனர்.

எனவே, மாண்புமிகு முதல்வரும் மாண்புமிகு அமைச்சரும் தமிழக அரசும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தமிழ்ப்பரப்புரைக்கழகத்தைப் பயன்படுத்திக் கொண்டு யாரும் கொச்சை வழக்குளைப் பயன்படுத்தினாலோ தமிழ் இலக்கியக் காலங்களை வேண்டுமென்றே பின்னுக்குத் தள்ளிக் கற்பித்தாலோ அவர்களைப் பொறுப்புகளில் இருந்து நீக்குவதுடன் தண்டனையும் வழங்க வேண்டும். அவர்களின் கருத்துரிமை என்றால் அதைச் சொந்தச் செலவில் பரப்பிக் கொள்ளட்டும்.

செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்திடம் நிதியுதவி பெற்றுக்கருத்தரங்குகள் நடத்துவோர்களிலும் அவற்றில் பங்கேற்போர்களிலும் ஒரு பகுதியினர் செந்தமிழ் இலக்கியக் காலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி உரையாற்றியுள்ளனர். இதனை இந்நிறுவன அறிஞர்களே வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். எனவேதான் இப்பரப்புரைக் கழத்தில் இவை போன்ற தவறுகள் நிகழக்கூடாது என்பதற்காக இதனைக் கூறுகிறோம்.

கிரந்த எழுத்துகளைத் தமிழ் நெடுங்கணக்கில் சேர்த்துப் பயிற்றுவிக்கக்கூடாது. கிரந்தம் தவிர்த்தே பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.

வேறு எந்த மொழியிலும் பிற மொழி ஒலி எழுத்துகளைக் கலந்து எழுதுவதோ பேசுவதோ இல்லை. தமிழ் இலக்கணமும் அவ்வாறுதான் கூறுகிறது. ஆனால், கிரந்தம் கலப்பதையே உயிர் மூச்சாகக் கொண்டு தமிழைச் சிதைப்போர் பெருகி உள்ளனர். இதன் மூலமாகவாவது இதற்கு முற்றுப்புள்ளி இட வேண்டும்.

‘காலந்தோறும் வரிவடிவம்’ என அட்டவணையிட்டுத் தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இவ்வாறு எழுதினார், திருவள்ளுவர் திருக்குறளை இவ்வாறு எழுதினார்  என்றெல்லாம் கற்பனைச் சிறகை விரித்துப் பறக்கின்றனர் சிலர். இவையெல்லாம் அரசு நூல்களிலேயே உள்ளன. மிகச்சில மாற்றங்கள் தவிர, நம் தமிழ் மொழியின் வடிவங்களில் எவ்வகை மாற்றமுமில்லை. எனவேதான்  இலக்கண  நூலார், “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” (நன்னூல் : எழுத்ததிகாரம்: 5  உருவம்: நூற்பா 95 – இலக்கண விளக்கம் எழுத்தியல்: நூற்பா 23) என்றனர். அஃதாவது தமிழ் வரிவடிவங்கள் தொன்றுதொட்டு ஒரே வடிவமுறையில் இருக்கின்றன. ஓலைச்சுவடி எழுத்துகளில் மாற்றமில்லை.கல்லாறரால் எழுதப்பெற்ற கல்வெட்டுகளில்தான் மாற்றங்கள் நேர்ந்துள்ளன. எனவே, தமிழ்வரிவ வரலாறு என்ற பெயரில் பொய்தலைவிரித்தாட இடம் தரக்கூடாது.

இவை போன்ற தீங்குகள் தமிழ்ப்பரப்புரைக்கழகம் மூலம் பரவாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்ப்பரப்புரைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனாரின் கனவை நனவாக்கிய முதல்வர் மு.க.தாலினுக்கு தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம், இலக்குவனார் இலக்கியப் பேரவை, அகரமுதல ஆகியவற்றின் சார்பில் பாராட்டுகள். தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவக் கனவுகண்ட பாரதி இன்றிருந்தால் மனமுவந்த முதல்வரை வாழ்த்தியிருப்பார். நாமும் வாழ்த்துவோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல-இதழுரை

புரட்டாசி 08, 2053 / 25.09.2022



Saturday, September 3, 2022

இலக்குவனார் நெறியுரைக்கிணங்கத் தமிழ்நல அரசை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல

இலக்குவனார் நெறியுரைக்கிணங்கத் தமிழ்நல அரசை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்



கற்றறிந்த தமிழ்ப்புலவர்கள் வழி நடைபெறும் அரசு சிறப்புற்று ஓங்கும். தமிழ்ப்புலவர்கள் என்று கூறுவதன் காரணம், சங்கக்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வழி அரசுகள் நடைபெற்றதால் சங்கக்காலம் பொற்காலமாகத் திகழ்ந்தது.

இன்றைய தமிழ்ப்புலவர்கள், நடுநிலைமை உணர்வுடனும் துணிவுடனும் அரசிற்கு அறிவுரை கூறுவோர் அருகியே உள்ளனர்.

கட்சிச் சார்பற்று ஆன்றோர்கள் அறிவுரை கூறினாலும் கட்சிக் கண்ணோட்டத்துடன் கூறுவதாகக் கருதி அவற்றைப் புறக்கணிக்கும் போக்கே உள்ளது.

யார் அறிவுரை கூறினாலும் அரசிற்கு எதிரான கருத்துகள் என்று புறந்தள்ளாமல் நல்லாட்சிக்கான வழிகாட்டி என்று ஏற்பார்கள் எனக் கருதுகிறோம்.



எனவே, தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தம் காலத்தில் அரசுகளுக்குக் கூறிய அறிவுரைகள் சிலவற்றை அவரது நினைவு நாளில் தெரிவிக்க விரும்புகிறோம்.

பேராசிரியர் சி.இலக்குவநனாரின் தமிழ் உரிமைப் பெருநடைப் பயணத்தின் நோக்க இலக்குகளில் பின்வருவன இன்றியமையாதன.

1. பேச்சிலும் எழுத்திலும் செந்தமிழையே பயன்படுத்த வேண்டும்.

2. தமிழ்நாட்டின் எல்லாத் துறைகளிலும் தமிழுக்கே முதன்மையிடம் அளிக்க வேண்டும்.

3. எந்த இடத்திலும் தமிழின் சமநிலைக்குத் தாழ்வு வாராது பார்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழக அரசு மக்களை இவ்வழியில் செலுத்தித் தானும் தமிழ்ப்பணி ஆற்ற வேண்டும்.

மக்களுடன் போட்டி போட்டுக்கொண்டு மொழிக்கொலை புரிந்து விளம்பரங்கள் மேற்கொள்வதை அரசு உடனே நிறுத்த வேண்டும்.

“நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப்படாத காரணத்தினாலேயே பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளோம்” என வருந்திய பேராசிரியர் சி.இலக்குவனார்

“உயர்நிலைப் பள்ளிகளில் ஒரே காலத்தில் தமிழைப் பாடமொழியாக ஆக்கியதுபோல் கல்லூரிகளிலும் ஒரே சமயத்தில் எல்லா துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழைப் பாடமொழியாக்க வேண்டும்” என வேண்டி வந்தார்.

இப்பொழுது பள்ளிகளிலேயே தமிழ்வழிக்கல்வி காணாமல் போய்க்கொண்டு உள்ளது. தமிழ்வழிப் பள்ளிகளாக இருந்த ஏறத்தாழ 50 அரசுப் பள்ளிகள் முழுமையும் ஆங்கிலவழிப் பள்ளிகளாகச் செயல்படுகின்றன.

அரசின் தமிழ் வழிப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தனியாரைப் போன்று அரசும் தமிழன்னைக்கான வாயிலைப் பள்ளிகளில் அடைத்து வருகிறது.

இவ்வாறில்லாமல் தமிழ்நாட்டில் அரசு, தனியார், ஒன்றிய அரசு, உள்ளாட்சி என எவ்வகைப் பள்ளியாக இருந்தாலும் தமிழில் மட்டுமே இயங்க வேண்டும். பிறமொழிவழிக் கல்வி அடியோடு நிறுத்தப்படவேண்டும்.

“தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் நம் இரு கண்களாகப் போற்ற வேண்டும்” என்றார் தமிழ்ப்போராளி சி.இலக்குவனார்.

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், திருவள்ளுவரைப் போற்றும் வகையில் வள்ளுவர் கோட்டம் அமைத்தார்.


கலைஞரின் வழியில் நடைபெறும் அவர் திருக்குமரரான முதல்வர் மு.க.தாலின் தொல்காப்பியரைப் போற்றும் பணிகளை ஆற்ற வேண்டும்.

அதிமுக அரசின் கலைபண்பாட்டுத் துறை, கொள்கை விளக்கக்குறிப்பு 2001-2002 கோரிக்கை எண் 51இல் தொல்காப்பியப் புகழரங்கம் முதலான ஐந்து புகழரங்கங்கள் நிறுவுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கனவுத்திட்டமாக இது போயிற்று.

முதல்வர் இருபதாண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கும் அந்த அறிவிப்பிற்குப் புத்துயிர் அளித்துத் தொல்காப்பியர் புகழரங்கம் அமைத்தல் வேண்டும்.

சங்கத்தமிழை அறிஞர்களின் கருவூலமாக வைத்திராமல் மக்கள் இலக்கியமாக மாற்றியவர் சங்கத்தமிழ்ச் சான்றோர் சி.இலக்குவனார்.

சங்க இலக்கியங்களைப் பரப்ப ‘சங்க இலக்கியம்’ என்றும் ‘இலக்கியம்’ என்றும் இதழ்கள் நடத்தியவர்.

சங்க இலக்கியங்களைப் பாடத்திட்டத்தில் சேர்த்தவர். சங்க இலக்கியங்களை நிலைக்கச் செய்ய அவர் கண்ட கனவு நனவாகச் சங்க இலக்கிய மாடங்களை அமைத்தல் வேண்டும்.

கலைஞர் சங்கப்புலவர்களுக்கு நினைவுத் தூண்களை எழுப்பினார். சங்கப் புலவர்கள் பெயர்களைத் தனித்தனியேயும் சங்கப்பாடல்களையும் நினைவு கூரும் வகையிலும் சங்க இலக்கிய மாடங்களை அமைத்தல் வேண்டும்.

473 சங்கப்புலவர்களின் பாடல்களாக 2371 பாடல்கள் உள்ளன. பெயர் தெரியாத புலவர்களையும் சேர்த்து முதலில் ஒருவருக்கு ஒரு பாடல் என்ற முறையில் கல்வெட்டுகள் அமைத்தல் வேண்டும்.

பின்னர்ப் படிப்படியாக அனைத்துப் பாடல்களையும் கல்வெட்டுகளில் பொறித்தல் வேண்டும்.

ஆண்டுதோறும் பாடநூல்கள் மூலம் திருக்குறள் சிறப்பை மாணாக்கர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.

“ஆங்கிலத்தில் சேக்சுபியர் எனத் தனித்தாள் இருப்பதுபோல் தமிழில் திருக்குறள் எனத் தனித்தாள் இருக்க வேண்டும்” என்ற திருக்குறள் அறிஞர் பேரா.சி.இலக்குவனார் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.



திருவள்ளுவர் பிறந்தநாளைத் தேசியத் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும் என்ற அவர் கனவை நனவாக்க வேண்டும்.

சமயத் தலைவர்களுக்கு விடுமுறை அளிக்கும் ஒன்றிய அரசு திருவள்ளுவர் பிறந்தநாளுக்கு இந்திய அளவில் விடுமுறை அளிக்க வேண்டும்.

ஒன்றியக் கல்வித்துறை வழங்கும் கலை தொடர்பான நல்கைகள் உதவித்தொகைகளில் திருக்குறள் கலைநிகழ்ச்சிகள் நடத்த உதவி அளிக்க வேண்டும்.

கலையரங்க நிதியுதவித் திட்டத்தைத் திருவள்ளுவர் கலையரங்கம் எனப் பெயரிடுவதாக இருந்தால் மட்டுமே வழங்க வேண்டும்.

இந்திய மாநில மொழிகள் யாவற்றிலும் திருவள்ளுவர், திருக்குறள் சிறப்பை விளக்கும் படைப்புகளைப் பாட நூல்களில் சேர்க்க வேண்டும்.

அனைத்து மொழிகளிலும் குறள் விளக்கக் குறும்படங்கள், திரைப்படங்களுக்கு நிதியுதவி அளித்தல் வேண்டும். ஒன்றிய அரசு போல் பிற மாநில அரசுகளும் திருவள்ளுவரைப் போற்றத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லா நாட்டுத் தூதரகங்களிலும் திருவள்ளுவர் படமும் திருக்குறளும் இடம்பெற நம் அரசு வழிவகை காண வேண்டும்.

“தமிழின் உரிமையே தமிழர் உரிமையாகும். தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மையில்லை என்றால் தமிழர்க்கு முதன்மை இல்லை என்றுதான் பொருள்.

அயல்மொழிகளாம் ஆங்கிலத்துக்கும் இந்திக்கும் உள்ள முதன்மைகள் தமிழையும் தமிழரையும் தாழ்த்தும்.

ஆதலின் தமிழ் மொழிக்கு முதன்மையளிக்கும் பணியில் ஈடுபடுதல் தமிழர்களின் பிறவிக் கடனாகும்.” என்றார் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார்.

ஆனால், தமிழ் நாட்டில் மக்கள் பயன்பாட்டு இடங்கள் எங்கும் தமிழ் உரிய முதன்மையைப் பெறவில்லை.

பல இடங்களில் தமிழே இல்லை. எங்கும் தமிழ் என்பதை வாயால் முழங்கினாலும், செயலில் தமிழைக் காண இயலவில்லை. எனவே, அரசு தமிழ் மட்டுமே தமிழ்நாட்டின் பயன்பாட்டுமொழி என அறிவித்து அதை முழுமையாகச் செயற்படுத்த வேண்டும்.

தமிழ் அறிந்த தமிழர்மட்டுமே உயர் பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும். சில கழகங்களில் நடைமுறைப்படுத்தும் வேட்டி அணிய இடமில்லை என்ற களங்கங்களை அகற்ற வேண்டும்.




தமிழுக்கு முதன்மையும் தமிழர்க்குத் தலைமையும் இருக்கும் வகையில் ஆட்சி நடத்த வேண்டும்.

“தமிழ் மொழி தமிழ்நாட்டில் தனக்குரிய முதன்மை இடத்தில் அரியணையில் அமர வேண்டுமானால் பாரதக் கூட்டரசு மொழிகளுள் இந்திமட்டும்தான் கூட்டரசு மொழி, தேசிய மொழி எனும் கொள்கை அகற்றப்படல் வேண்டும்.

கூட்டரசு மொழி என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள ஒன்றுதான் தொடர்பு மொழியாகவும் பல்கலைக்கழகப் பயிற்சி மொழியாகவும் பாராளுமன்ற மொழியாகவும் சட்டமன்றங்களின் மொழியாகவும், நீதிமன்றங்களின் மொழியாகவும் நாளடைவில் நிலைநாட்டப்படும்.

கூட்டரசு மொழியே மாநிலங்கட்கிடையே தொடர்பு மொழியாக அமையும் என்பதில் ஐயமின்று. அங்ஙனமாயின் மாநில அமைச்சர்களும் அமைச்சுத்துறை அலுவலர்களும் இந்திமொழிப் புலமை பெற்றிருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும்.

இந்திமொழி தெரிந்தோரே அமைச்சர்களாக வர முடியும் என்றால் சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் இந்தி மொழி தெரிந்தவராகத்தான் இருத்தல் வேண்டும்.

அரசுக்கும் பதவிக்கும் பொருளீட்டுவதற்கும் மதிப்புப் பெறுவதற்கும் இந்திமொழிதான் வேண்டும் என்றால் தமிழை விரும்புவார் எவராக இருப்பர்?

பின்னர்த் தமிழாசிரியர்கூடத் தமிழை விரும்ப மாட்டார். “ எனத் தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் எச்சரித்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே நடைமுறை என்று செயல்படும் ஒன்றிய அரசு இந்நிலையை விரைவில் கொண்டுவந்துவிடுவோம். தமிழக ஆளும் கட்சியான தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும் மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன.

தமிழ்நாட்டிலேயே தமிழ் முழுமையான ஆட்சிமொழியாக இல்லாத பொழுது இந்த முழக்கம் வெற்றுக்குரல்தான் என்பதை ஒன்றிய அரசு உணர்ந்திருக்கும்.

எனவே, ஒரு புறம் தமிழ்நாட்டில் உடனே எல்லா நிலைகளிலும் தமிழை ஆட்சி மொழியாகவும் அலுவல் மொழியாகவும் தொடர்பு மொழியாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும்.




மறுபுறம் மத்தியில் உள்ள இந்தி முதன்மை அகற்ற வரி கொடா இயக்கம் போன்ற செயற்பாட்டின் மூலம் பாடுபட வேண்டும்.

அவ்வப்பொழுது எதிர்க்குரல் எழுப்புவதால்மட்டும் இந்தி அகலாது.

இந்தியை அகற்றுவது அவ்வளவு எளிதான செயலல்ல என்பதை உணர்ந்து எந்தெந்த வழிகளில் எல்லாம் இந்தியும் சமசுகிருதமும் திணிக்கப்படுகின்றன என்பதையும் இதனால், பிற தேசிய மொழிகள் நலிவுற்று வருவதையும் இந்தியத்துணைக்கண்டம் முழுமையும் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மத்தியில் தமிழ் இடம் பெறாதவரை நாம் அடிமை வாழ்வுதான் வாழ்கிறோம் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

மத்தியில் தமிழ் இடம் பெறாதவரை ஒன்றிய ஆட்சியாளர்கள் அலுவல் முறையில் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடக்கூடாது.

“தமிழர்களும் பலவகைகளிலும் சிறந்தால்தான் தமிழ் மொழி சிறப்படைய இயலும். தமிழர்கள் தாம் சிறப்படைய முயல்வதோடு தம் மொழிபற்றியும் அறிந்துகொள்ள முயலுதல் வேண்டும்.”

-எனக் குறிப்பிட்டுத் தமிழ் மதிப்புடையதாக எல்லா இடங்களிலும் திகழத் தமிழர்கள் எல்லா இடங்களிலும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்கிறார்.

“இல்லான் கருத்தை எவர்தான் ஏற்பர்? எனவே, தமிழர்கள் தம் நிலையை உலக அரங்கில் உயர்த்திக் கொண்டு தமிழுக்கு உயர்வு கிட்ட வழி வகுக்க வேண்டும்” என்கிறார்.




தமிழ்நாட்டரசு தொழிற்கொள்கை மூலம் தமிழர்கள் தொழிலில் மேம்படப் பாடுபட்டு வருகிறது.
அவ்வாறு மேம்படுபவர்கள் தமிழைத் துறக்கக் கூடாது. அரசும் தமிழ் உலகளவில் உயர்ந்து நிற்கப் பாடுபட வேண்டும்.
தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அறிவுறுத்தியவாறு தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழி, கல்வி மொழி, இறைமொழி, கலைமொழி, தொடர்புமொழி, உரிமை மொழி என்னும் நிலையை முழுமையாகச் செயற்படுத்த முதல்வர் மு.க.தாலினும் அமைச்சர் பெருமக்களும் முன் வர வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.
-இலக்குவனார் திருவள்ளுவன்
[03.09.1973 தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் மறைந்த நாள் ]

தாய் மின்னிதழ் நாள் 03.09.2022

Followers

Blog Archive