Thursday, August 28, 2014

தமிழ்வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைக்கப் புதுச்சேரி முதல்வருக்கு வேண்டுகோள்!

தமிழ்வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைக்கப் புதுச்சேரி முதல்வருக்கு வேண்டுகோள்!

padam-puthuceri-muthirai03 thamizh valarppeer01
  புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி எளிமையானவர் என்ற பெயர் பெற்றுள்ளார். எனினும் தமிழ்நலப்பணிகளில் கருத்து செலுத்துவதில்லை என்றும் தமிழ்நலனுக்குக்கேடு தரும் வகையில் நடந்து கொள்கிறார் என்றும் தமிழன்பர்கள் கூறுகின்றனர். அவர், எக்கட்சியில் இருந்தால் என்ன தமிழ்ப்பகையான பேராயக்கட்சி(காங்.)-இல் ஊறியவர்தானே என்றும் விளக்குகின்றனர். தம்மீதுள்ள அவப்பெயரை நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஐப்பசி 11, 2032 (27 அக்டோபர் 2001) – வைகாசி 3, 2037(17 மே 2006) காலத்தில் முதல் முறையும், வைகாசி 4, 2037 (18 மே 2006)– ஆவணி 20 4, 2039 (செப்டம்பர் 2008) காலத்தில் இரண்டாம் முறையும் முதல்வராக ஆட்சி செய்தவர், வைகாசி 2, 2042 (16 மே 2011) முதல் மூன்றாம் முறையுமாக முதல்வராக உள்ளார். முதல்வராக இருந்து இதுவரை செய்யத் தவறியவற்றை, இப்போதைய முதல்வர் பதவி மூலம்ஆற்றித் தமிழ்ப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
புதுச்சேரியில் ஆட்சிமொழியாகத் தமிழை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் தமிழ்நலம் சார்ந்த பணிகளுக்காகவும் தமிழ் வளர்ச்சித்துறை ஒன்றை அமைக்கவேண்டும் என்பது புதுச்சரேி மக்களின் நீண்ட கால வேண்டுதலாகும். குறிப்பாகத் தனித்தமிழ் இயக்கத்தலைவர் முனைவர் க.தமிழமல்லன் 32 ஆண்டுகளுக்கும் மேலாகப், பிற தமிழ் அமைப்புகளையும் இணைத்து, இதற்காகப் போரிட்டு வருகிறார்.
1992இல் கல்வித்துறையில் இருந்து பிரித்துத் தனியாகக் கலைபண்பாட்டுத்துறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறை சார்பில் திருவள்ளுவர், ஔவையார், பாரதியார், பாரதிதாசன், புதுவை சிவம், சங்கரதாசு சாமிகள், முதலான தமிழ்ப்புலவர்களுக்கும் கலைஞர்களுக்கும் விழா எடுப்பதும் கலைவிழாக்கள் நடத்துவதும் கலைமாமணி விருதுகள் வழங்குவதும் அறிஞர்களுக்கு நிதியுதவி வழங்குவதும் பாராட்டிற்குரியது.
இத்துறை நூலகங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றின் துறையாகவும் செயல்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையான அலுவலக மொழி மேம்பாட்டிற்கான துறையும் இதுதான். எனினும் தமிழ் ஆட்சி மொழிக்கெனவும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கெனவும் 90% தமிழ்மக்கள் வாழும்மாநிலத்தில் தனித்துறை இல்லாதது பெருங்குறையே! இதற்கு முந்தைய ஆட்சியாளர்களும் இதற்குப் பொறுப்புதான். மத்திய அரசும் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கலாம். எனினும் மூன்றாம்முறை முதல்வராக இருக்கும் மாண்புமிகு ந.அரங்கசாமி உடனடியாக நடவடிக்கை எடுத்துத் தமிழ்வளர்ச்சித்துறையை உருவாக்க வேண்டும்.
அவ்வாறு உருவாக்கும் பொழுது தமிழ்நாட்டைப் பின்பற்ற வேண்டா. தமிழ்நாட்டில் 1971 இல் ‘தமிழ்வளர்ச்சி இயக்ககம்’ என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கும் பொழுது தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர்களை அமர்த்த வேண்டும் எனக் கலைஞர் திட்டமிட்டார். ஆனால்நாவலர், அவர்களுக்கு அலுவலகப் பட்டறிவு கிடையாது எனப் பணியில் உள்ளவர்களை அமர்த்த வேண்டும் என்று நடைமுறைப்படுத்திவிட்டார்.இதனால், இளங்கலை முதலான ஏதேனும் ஒரு பட்டத்தில் ஒரு பிரிவில் தமிழில் தேர்ச்சி பெற்றவர்கள், இத்துறை அலுவலர்பதவிகளுக்குத் தகுதியானவர்கள் என விதி வரையறுக்கப்பட்டது. இதனால் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்று எழுத்துப் பணி பார்த்தவர்கள், தாங்கள் பட்ட வகுப்பில் தேர்ச்சி பெறும் வரை உரிய அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்குத் தடையாக இருந்தனர். (முதலில் தனி அலுவலர் என்றும் பின்னர், உதவி இயக்குநர் என்றம் இப்பணியிடப் பெயர்கள் அழைக்கப்பெற்றன.) இது தமிழ் வளர்ச்சித்துறையில்பணித்தேக்கத்தை உண்டாக்கியது. 1990 இல் கலைஞர் முதலமைச்சராகவும் பேராசிரியர் கல்வி அமைச்சராகவும் இருந்த பொழுது தமிழில் முதுகலை பட்டம் பெற்றவர்களைச்சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்பாலும் முனைவர் பட்டங்கள் பெற்றவர்களைத் தமிழாய்வு அலுவலர்களாக அமர்த்தினார். (இவர்கள் பின்னர்த் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநா்களாக மாற்றப்பட்டனர்.) இதனால் தமிழ் படித்தவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. எனினும் இன்னும் எழுத்துப்பணியினர் பதவி உயர்வில் இப்பதவியில் அமருவதற்குப் பட்ட வகுப்பில் ஒரு பிரிவு தமிழில் தேர்ச்சி இருந்தால் போதும் என்றுதான் உள்ளது. அதே நேரம் மத்தியஅரசிலும், வங்கிகள், அரசு நிறுவனங்கள், பிற மாநிலங்களிலும் இந்தி அலுவலர் பதவிக்கான கல்வித் தகுதி என்பது இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்திவழியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என உள்ளது. எனவே, மத்திய அரசைப் பின்பற்றிக் கல்வித்தகுதிகளை வரையறுக்க வேண்டும்.தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு முதன்மை அளிக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு என்று பார்த்தாலும் கடைசியில் இருந்து முதலாவதாகத்தான் தமிழ்வளர்ச்சித்துறை இருக்கும். ஆனால், மத்திய அரசில் போதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்பெறுகிறது. எனவே, தமிழ்ப்புலமையாளர்களை மதிக்கும் வகையிலும் தேவையான அளவிற்கான முழு நிதியை வழங்கியும் திட்டங்கள் தீட்டி, விதிமுறைகள் வகுத்துப் புதிய தமிழ்வளர்ச்சித் துறையை அமைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி ஆய்வு என்பது உரிய அலுவலகம் தரும் புள்ளிவிவரத்தை, ஒரு கடைநிலை ஊழியர் பெற்றுவந்து குறிப்புரையைத் தட்டச்சிட்டு அளிக்கும் அளவிற்குத்தான் உள்ளது. அவ்வாறில்லாமல் செம்மையான நடைமுறைகளைப் பின்பற்றும் வகையில் பணித்திட்டம் இருக்க வேண்டும்.
நூல் வெளியீடுகளுக்கு நிதியுதவி என்பது ஆண்டுவருவாய் வரம்பு25,000 என இருந்து 2011-12 ஆம் ஆண்டு ரூ.50,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளதுஇந்தி நூல்கள் வெளியீட்டு உதவிக்குவருவாய் வரம்பு இல்லை. இங்கும் மத்திய அரசே பின்பற்றக்கூடியதாக உள்ளது. எனவே, மத்திய அரசின் இந்தி வளர்ச்சித் திட்டங்களைப் போன்றசிறப்பான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதே நேரம், தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் நல்ல திட்டங்களை அங்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.

 news-puthucheri-tha.va.thu.01

அரசு முத்திரையில் தமிழ் இடம் பெறச்செய்வீர்!

தமிழ் வளர்ச்சித்துறையை உருவாக்குவதுபோல் புதுச்சேரி மாநில முத்திரையில் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றை அகற்றி, ‘வாய்மையே வெல்லும்’ என்றும் ‘புதுச்சேரி அரசு’ என்றும் தமிழில் குறிக்க வேண்டும். ஒன்றியப் பகுதி என்பதால் இந்தியில் இருக்க வேண்டும் என்பது தவறு. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அரசு முத்திரையில் சத்தியமேவசெயதே என உள்ளதை வாய்மையே வெல்லும் எனத் தமிழில் மாற்ற வேண்டினார். மூதறிஞர் இராசாசி சத்தியம் வேறு, வாய்மை வேறு என அவ்வாறு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் வாய்மையே வெல்லும் என்பதையே பேரறிஞர் அண்ணா நடைமுறைக்குக் கொணர்ந்தார்.
மாநிலத்தகுதி கேட்கும் புதுச்சேரி மக்கள் முதலில் மாநில அரசு முத்திரையில் தமிழ் இடம்பெற அரசை வலியுறுத்தி வெற்றி பெற வேண்டும். மாநில மக்களின் நலனுக்காகத்தான் மத்திய அரசே தவிர, மத்திய அரசின் நலன்களுக்காக மாநில அரசு அல்ல என்பதை அவர்கள் உணரவேண்டும். எனவே, புதுச்சேரி முதல்வர் அரசு முத்திரையை உடனடியாகத் தமிழ் முத்திரையாக்க ஆவன செய்ய வேண்டும்.
எனவே, தமிழ் வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைத்தும் அரசு முத்திரையில் தமிழ்மட்டும் இடம்பெறச்செய்தும் புதுச்சேரி முதல்வர் வரலாற்றில் இடம் பெற வேண்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
ஆவணி 8, 2045 / ஆக.24, 2014  http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png



அகரமுதல41

Wednesday, August 20, 2014

வேண்டவே வேண்டா சமற்கிருதமும் இந்தியும்

வேண்டவே வேண்டா சமற்கிருதமும் இந்தியும்

sanskrit-and-hindi-vendaa01
  சமற்கிருதத்திணிப்பிற்கும் இந்தித்திணிப்பிற்கும் எதிராகக் கூறுபவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? இவ்விரு மொழிகளையும் எதிர்க்கவில்லை; இவ்விருமொழிகளின் திணிப்புகளைத்தான் எதிர்க்கின்றோம் என்கின்றனர். ஆனால், நாம் அவ்வாறு கூறப்போவது இல்லை. விருப்பம் என்ற போர்வையில் இவை திணிக்கப்படுகின்றன; தமிழ் நாட்டில் தமிழ் மக்களிடம் இருந்து அவர்களின் தாய்மொழியாம் தமிழை அப்புறப்படுத்துகின்றன; பெரும்பான்மை என்ற தவறான புள்ளிவிவர அடிப்படையிலும், பொய்யான சிறப்புகள் அடிப்படையிலும் உலக மொழிகளின் தாய் மொழியான தமிழை அதன் தோற்றுவாயான தமிழகத்திலிருந்து ஒவ்வொரு துறையிலும் அழித்து வருகின்றன. எனவே, விருப்ப மொழி என்ற போர்வையிலும் இவை தமிழ்நாட்டில் இருக்கக் கூடா.
  சமற்கிருதத்தையும் இந்தியையும் பரப்ப எண்ணினால், அவற்றைத் தாய்மொழியாக உள்ளவர்கள் பணத்திலிருந்து செய்யட்டும்! வேண்டா என்று சொல்லவில்லை! இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள பிற தேசிய மொழிகளுக்குச் செலவழிப்பதைவிடப் பன்மடங்கு இவை இரண்டிற்கும் செலவழிக்கும் அறமற்ற செயலுக்கு இனியேனும் முற்றுப்புள்ளி வைக்கட்டும்! இங்குள்ளோர் இந்தி மாநிலத்திற்குப் பணிசெல்ல நேரிடின் அவர்கள் அப்பொழுது கற்றுக் கொள்ளட்டும்! அதற்காக அனைத்து மக்களும் இந்தியைக் கற்க வேண்டிய தேவையில்லை. தமிழ்நாட்டில் கோவிலாக இருந்தாலும் அனைத்து நிலை அலுவலகங்களாக இருந்தாலும் பிற எதுவாக இருந்தாலும் தமிழ் மட்டுமே ஆட்சி செய்யும் நிலை வந்த பின்பு நாம் பிற மொழிகள் கல்வியில் கருத்து செலுத்தலாம்.
  காந்தியடிகளால் விதைக்கப்பட்ட நச்சு விதைகளுள் ஒன்றுதான் இந்தித்திணிப்பு. ஆள்வோருக்கு அடிபணிந்து குறுக்கு வழியில் பரப்பப்படுவதுதான் சமற்கிருதத் திணிப்பு. இது குறித்துத்தனியே பின்னர் ஆராயலாம். ஒன்றே ஒன்றை மட்டும் இங்கே காண வேண்டும். 1960 இல் மத்தியஅரசின் பணிகளுக்கு இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டது. 1974 இல் மத்திய அரசு அலுவலகங்கள் என்று இல்லாமல், மத்தியஅரசின் கட்டுப்பாட்டிலுள்ள தன்னாட்சி நிறுவனங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், பிற அமைப்புகள் அனைத்திலும் பணியில் சேர இந்திமொழிப்பயிற்சியும்இந்திமொழியில் தட்டச்சுப்பயிற்சியும் சுருக்கெ(ழுத்துப்பயிற்சியும் தேவை. இதன் மூலம் இந்தி மொழி அறிந்தவர்மட்டுமே மத்திய அரசின் வேலைகளில் சேர முடியும். இவ்வாறு நாம்(, பிற தேசிய இனத்தவர்) நாட்டை ஆள்வதில் தலைமைப் பங்கு வகிக்கும் மத்திய அரசின் முடிவெடுக்கும் இடங்களில் இல்லாமல் ஒழிக்கப்படுகின்றோம்.அங்கே உள்ள நமக்கு எதிரானவர்கள் நமது சிக்கல்களைத்தீர்ப்பதற்காக எவ்வாறு கருத்துடன்செயல்படுவார்கள்? அதனால்தானே சிங்களவர்களால் தமிழக மீனவர்கள் படுகொலையாகும் அவலம் தொடருகின்றது. ஈழத்தில் பன்னூறாயிரத் தமிழ் மக்கள் வஞ்சகமாகக்கொல்லப்பட்டும்கொலையாளிகளுக்கு இங்கே வரவேற்பு நல்கப்படுகின்றது. இவ்வாறு இவ்விருமொழிகள்திணிப்பால் நம் மொழி புறக்கணிக்கப்படும் பொழுது நம் இன நலனும் புறக்கணிக்கப்படுகின்றது என்பதை உணரவேண்டும்.
  அறியாமையும் பண்பாடுகளுக்கு ஒவ்வாச் செய்திகளும் நிறைந்ததே சமற்கிருதம். ஆனால்,அதனை அறிவியல்மொழி எனத்தவறாகத்திரித்துப் பரப்பி வருவதால், உண்மையான அறிவியல் மொழியான தமிழ் புறந்தள்ளப்படுகின்றது.
  1961 கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஐந்துமொழிக்குடும்பங்களைச்சேர்ந்த 1652 மொழிகள் உள்ளன.ஆனால், இரண்டே இரண்டு அயல்மொழிகள் வளர்ச்சிக்காக 1650 தாயகமொழிகள் புறக்கணிக்கப்பட்டுஅழிவுப்பாதைக்குத் திருப்ப விடப்படுவதை மத்திய அரசு தன் கடமையாகக் கொண்டுள்ளது. எனவேதான், நாம் கட்டாயத் திணிப்பு நிலை என்ற நிலையில் இல்லாமல்விருப்பப்போர்வையிலும் இவை புகுத்தப்படக்கூடாஎன்கிறோம். எனவே,
தாய்மொழியும் தாயினமும் காக்கப்பட
இந்தியும் சமற்கிதமும் வேண்டவே வேண்டா!
தாய்நாடு செழித்துத் தழைத்தோங்க
தாய்மொழியாம் தமிழ்மொழியே என்றும் வேண்டும்!
- இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
ஆவணி 1, 2045 / ஆக.17,2014
http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png

eakaindia01


Tuesday, August 19, 2014

மனிதநேயச் செம்மல் ப.மகாலிங்கம் வாழ்கவே!

மனிதநேயச் செம்மல் ப.மகாலிங்கம் வாழ்கவே!

vizhaa-magalingam03
இன்றைய தமிழ்ப்பேராசிரியர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர் முனைவர் ப.மகாலிங்கம். நாநலம் என்னும் நலனுடைமை நிறைவால் மாணாக்கர்களை அரவணைத்துச் செல்பவர்.
திருவாளர்கள் அர.பழனிசாமி – செல்வநாயகிஇணையரின் நன்மகனாய், திருப்பத்தூர் (வேலூர்) நகரில் பிறந்தவர்; திருவாளர்கள் கா.அ.ச.இரகுநாயகன் – சரசுவதி இணையர் வளர்ப்பில் சிறந்தவர்.
‘திருவிகவும் காந்தியக் கோட்பாடுகளும்’ என்னும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். ‘திருவிகநூல்களில் சமுதாய நோக்கு’ என்னும் தலைப்பில் ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். ‘திருவிக காலமும் கருத்தும்’, ‘திருவிகவும் காந்தியக் கோட்பாடுகளும்’ என்னும் தலைப்புகளில் நூல்கள் படைத்துள்ளார். தமிழ்த்தென்றல் திருவிகவை ஆய்ந்து தோய்ந்தமையால், அவரடி ஒற்றித் தனக்கெனத் தனி நடை வகுத்துக் கொண்டவர். திருவிகவின் சமுதாய நோக்கு, ஒலிக்கீற்று, மலையொளி, கம்பர் படைத்த காவிய மாந்தர் முதலான இவரின் பிற நூல்கள் இவரது நடைச்சிறப்பை உணர்த்துகின்றன.
 சென்னைப் பல்கலைக்கழகத்தின் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பினைத் திறம்படச் செயல்படுத்தியவர். இதனால், நாட்டுநலப்பணியில் மாணாக்கர்களை ஈடுபடுத்தி, பாவேந்தர் கூறுவதுபோல்,
நாட்டின்
முழு நலத்தில் பொறுப்புடனும்
முன்னேற்றக் கருத்துடனும்
 முனைப்புடன் உழைத்தமையால் இவர் ஆற்றிய அரும்பணிகள் பல.
திறனறிந்து சொல்லும் பாங்கும் நிரந்தினிது சொல்லும் வன்மையும் கொண்டு செயலாற்றியமையால், பிறர் இவர் சொற்கேட்பது எளிதாயிற்று.இவரது அரவணைப்பு உள்ளமும் பழகும் எளிமையும் கண்டு இவர் மீது ஈடுபாடு கொண்ட நாட்டுநலப்பணித்தொண்டர்கள் ‘மனிதநேயச் செம்மல்’என்னும் விருதினை இவருக்கு வழங்கி உள்ளனர்.
  சிறந்த நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் என மாநில அளவில் சிறந்த விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 vizhaa-magalingam01
பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை, முதுகலை மாணாக்கராக இருக்கும் பொழுதே மாணவர் தமிழ்ப்பேரவையின் தலைவர், செயலர் ஆகச் செயல்பட்டுத் தமிழுணர்வை வளர்த்தார். பின்னர், அரசு கலைக்கல்லூரி, திருவண்ணாமலை, அண்ணல் அம்பேத்கார் கலைக்கல்லூரி, மாநிலக்கல்லூரி முதலானவற்றில் பணியாற்றும் பொழுதும்இலக்கிய விழாக்களை ஆளுமையுடன் நடத்தி, மாணாக்கர்களை இலக்கிய ஈடுபாடு கொள்ளச் செய்த இனியவர். யாவர்க்கும் உதவும் நேயநெஞ்சாலும் பழகுதற்கினிய பண்பாலும் சுற்றம் சூழ வாழ்பவர்.30 ஆய்வியல் நிறைஞர்களும் 20 முனைவர்களும் இவரால் பட்டைத்தீட்டப்பெற்று ஒளிவிடுகின்றனர்.
 சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் என்ற முறையில் பிற தமிழ் அமைப்புகளுடன் இணைந்து, கணிணி மாநாடு, வரிவடிவக்காப்பு தொடர்பான கருத்தரங்கம் எனத் தமிழ் காக்கும் நிகழ்ச்சிகளைத் திறம்பட நடத்திய இவரது பெருமை என்றும் பாராட்டிற்குரியது.
 vizhaa-magalingam04
கா.அ.ச.இரகுநாதன் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர், செல்லம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர், காஞ்சி மணிமொழியார் தமிழ்ப்பேரவையின் செயலர், பன்னாட்டு அரிமா சங்கம், சென்னை அரிமா மாவட்ட (324 ஏ) நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பிற்கான மாவட்டத் தலைவர், பன்னாட்டு அலயன்சு சங்கத்தின் மாவட்டத் துணை ஆளுநர் முதலான பொறுப்புகள் இவரின் மக்கள் நலப்பணிகளை மன்பதைக்கு அளித்து வருகின்றன.
 கல்லூரிகளில் மட்டுமல்லாமல் பொதுநிலையிலும்தன்மேடைப்பொழிவுகளாலும் பட்டிமன்ற வாதுரைகளாலும் கவியரங்கப் பாக்களாலும் சென்னை வானொலி, தொலைக்காட்சி முதலான ஊடகங்களாலும் தமிழ் பரப்பி, பொதுமக்களால்அறியப்பெறும் ஆன்றோராய் உயர்ந்து நிற்கிறார்.
  vizhaa-magalingam05

மனிதம் அறுபது

சென்னையில், ஆடி 17, 2045 / ஆக.2,2014 சனி மாலை 4.00 மணியளவில், பேராசிரியர் ப.மகாலிங்ம் – பொறி.கலைச்செல்வி மணிவிழாவை மாநிலக்கல்லூரி மாணாக்கர்கள்,  தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக்கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மனிதம் 60 என விழாவாகக் கொண்டாடினர். அப்பொழுது தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தரும்  செம்மொழி நிறுவனத்துணைத்தலைவருமான அறிஞர்  ஔவை நடராசன், விழா மலரை வெளியிட்டார்.  தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற உறுப்புச் செயலர் பேரா.கரு.நாகராசன் விழா மலரைப் பெற்றுக் கொண்டார்.
vizhaa-makalingam-manitham60-01
முனைவர் சகாயராசா, மரு.ப.விசாகப்பெருமாள், மாநிலக்கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது இப்ராகிம், விழா நாயகர்கள் பொறி. கலைச்செல்வி – பேரா.ப.மகாலிங்கம், விழிப்பூட்டும் எழுத்தாளர் இலனோ தமிழ்வாணன், அரிமா இரத்தின நடராசன், பேரா.பெ.மாது,  ஆகியோர் இப்படத்தில் உள்ளனர்.
விழாவில்,  பேரா.ப.மகாலிங்கம் எழுதிய, திரு.வி.க.வியம், தமிழ்வெளி-அன்றும் இன்றும்,ஆளுமை அலைவரிசை ஆகிய மூன்று நூல்களும் குறுந்தகடும் ஆவணப்படமும் வெளியிடப்பட்டன.
விழாவில் திரளான மாணாக்கர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், பணி நிறைவுற்ற பேராசிரியர்கள், தமிழ்ப்படைப்பாளிகள், தமிழன்பர்கள் கலந்து கொண்டனர்.



Followers

Blog Archive