உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிந்ததும் ‘மாநாடு முடிந்தது; கூட்டம் கலைந்தது’ என்றில்லாமல் ஆக்க முறையிலான தொடர் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என விரும்பிய முதல்வர் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மாநாட்டிற்கு வர வாய்ப்பில்லாதவர்களும் மாநாட்டு உரைகளை அறிய வேண்டும் என்பதற்காகவும் நிலையான பதிவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அனைத்து நிகழ்ச்சிகளையும் காட்சிப்பதிவுகளாக்கி (வீடியோவாக) இணையம் மூலம் பார்த்து அறிய வழி வகை செய்துள்ளார். முந்தைய மாநாட்டில் சொல்லப்பட்ட குறையை நீக்குவதற்காக மாநாட்டு ஆய்வுரைகள் விரைவில் நூலாக வெளிவரவேண்டும் என்றும் நடவடிக்கை எடுத்து வருகிறார். எனினும் முதல்வர் பணியிலிருந்து அடிப்படைப் பணியாளர் வேலை வரை எல்லாவற்றையும் அவரே செய்ய முடியாது அல்லவா? இதனைப் பயன்படுத்திக் கொண்டு செம்மொழி மாநாட்டுக் கருத்தரங்கக் குழுவில் உள்ள சிலர் அவரது எண்ணத்திற்கும் கட்டளைக்கும் மாறாக நடந்து கொண்டு தமிழ் நலத்திற்குக் கேடு விளைவிக்கின்றனர்.
அப்படி என்னதான் கேடு செய்கின்றனர் என்கின்றீர்களா? தமிழ் நலம் குறித்துப் பாராமுகமாக இருப்பதும் தமிழ்க்காப்புப் பணிகளைத் தடை செய்வதும் கேடுவிளைவிக்கும் செயல்கள்தாமே?அவற்றில் ஒன்றையே குறிப்பிட விரும்புகின்றேன். எழுத்து என்பது, உடல்; மொழி என்பது, உயிர். எழுத்தாகிய உடல் சிதையுமானால், மொழி என்கிற உயிர் அழிந்துபோகும் என்றார் செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார். அவ்வகையில் தமிழ் எழுத்து வடிவங்களைச் சிதைவில் இருந்து காப்பாற்றித் தமிழ் இலக்கியங்களையும் தமிழ் மொழியையும் இனத்தையும் காப்பாற்ற வேண்டும் என மாநாட்டில் நால்வர் கட்டுரை அளித்தோம்; தமிழ் எழுத்து வடிவங்களைச் சிதைப்பதால் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் ஏற்படும் கேடுகளை நன்கு விளக்கினோம்.
25.06.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அமர்வில் கோவூர்கிழார் அரங்கத்தில் எங்களின் ஆய்வுரைகள் நிகழ்ந்தன. இக் கருத்தரங்கத்திற்கு முந்தைய நிகழ்ச்சி வரையும் இதற்கு அடுத்த நிகழ்ச்சியில் இருந்தும் காணொளிக் காட்சிகளை இணையத்தில் காண முடிகிறது. தமிழ்மொழிக் காப்பிற்காக நாங்கள் வழங்கிய ஆய்வுரைகள் மட்டும் திட்டமிட்டுக் காட்டப்பட வில்லை.
அதுபோல், ஆய்வுரைகளைத் தொகுத்து விரைவில் நூலாக வெளியிட வேண்டும் என முதல்வர் கட்டளையிட்டார் அல்லவா? தமிழ்க்காப்பு தொடர்பான எங்களின் கட்டுரைகளை மட்டும் வெளியிடக் கூடாது என முடிவெடுத்து ஆய்வறிஞர்களிடம் கட்டுரைகள் அளிக்குமாறு கேட்கவில்லை. ஆய்வுக்கட்டுரைகள் அளித்த பிற பேராளர்களிடம் முழுக் கட்டுரையை அளிக்குமாறு மடல் அனுப்பப்பட்டுள்ளது; எங்களுக்கு மட்டும் அவ்வாறான மடல் வரவில்லை எனப் பன்முறை மின்னஞ்சல் வழியாகவும் பதிவஞ்சல் வழியாகவும் மடல்கள் அனுப்பியும் தொலைபேசி வழியாக வேண்டுகோள் விடுத்தும் அவை பார்க்கப்பட்டு மறைக்கப்பட்டு விட்டன. அப்படி என்ன எங்களின் கட்டுரைகளில் அஞ்சகத்தக்கன உள்ளன என்கிறீர்களா?
மாநாட்டின் பொழுது எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பான ஆணை அல்லது அறிவிப்பு வரும் எனச் சிலரால் பரப்பப்பட்டு வந்த செய்தி நினைவிருக்கும். உடனே உலகெங்கும் உள்ள அறிஞர்கள் நிகழ்ச்சிகள், இணையத்தளங்கள், ஊடகங்கள் வாயிலாக இதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். உடனே முதல்வர் அவர்களும் அத்தகைய எந்த எண்ணமும் அரசிற்கு இல்லை என அறிவிக்கச் செய்தார். அத்துடன் நில்லாமல் மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் தலைப்பில் இருந்த பொதுக்கலந்துரையரங்கத்தையும் நீக்கினார். எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பிலான கட்டுரைகளும் மொழியியல் தலைப்பில் வாசிக்கப்பட வேண்டும் என்றார். எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பானவற்றிற்கு எதிர்ப்பாடான நிலையை எடுத்துத் தமிழ் எழுத்து வடிவப் பாதுகாப்பில் தனக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார். வந்திருந்த அறிஞர்கள் எழுத்துச் சிதைப்பிற்கு எதிரான ஆய்வுக் கட்டுரைகளை மட்டுமே அளித்து உரையாற்றினர். தமிழ் எழுத்து முறையின் தனித்தன்மையும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் என்னும் தலைப்பில் பேராசிரியர் சி.ஆர்.செல்வகுமார் (கனடா) அவர்களும், தமிழ் எழுத்துத் திருத்தத்திற் பொதிந்துள்ள பெருங்கேடுகள் எனப் பொறிஞர் நா.இளங்கோவன் (துபாய்), தமிழ் எழுத்துத்திருத்தம் தேவையா? எனப் பேராசிரியர் மணியம் (சிங்கப்பூர்) அவர்களும், வரிவடிவச் சிதைவு வாழ்விற்கு அழிவு என்னும் தலைப்பில் நானும் உரையாற்றினோம். (இதே அமர்வில் முனைவர் வேல்முருகன் வீரமாமுனிவனின் எகர ஒகரக் குறியீடு குறித்துக் கட்டுரை அளித்தார்). வல்லுநர் குழுவின் தெரிவின் அடிப்படையில்தான் எங்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. பொதுவாகப் பிற அரங்கங்களில் போதிய அளவு நோக்கர்கள் வராதபொழுது இவ்வரங்கத்தில் உட்கார இடமின்றித் திரும்பச் சென்றவர்கள் மிகுதி.
நாற்காலி முன்பு உரையாற்றும் சில கருத்தரங்கங்கள் போல் அல்லாமல் அரங்கு நிறைந்து காணப்பட்டது. அந்த அளவிற்கு உலகலாவிய வரவேற்பைப் பெற்றன எங்களின் ஆய்வுக்கட்டுரைகள். பார்வையாளர் அனைவரும் எழுச்சியுடன் பங்கேற்றனர். இந்த அரங்கத்திற்கு வர வாய்ப்பில்லாதவர்களும் கேட்டு அறிந்து மகிழும் அளவிற்குப் பெரிதும் வரவேற்பைப் பெற்றது எழுத்துச் சிதைப்பாளர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது போலும். எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! என்னும் தலைப்பில் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சிறு நூலையும் வெளியிட்டோம். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, எழுத்துச் சிதைப்பாளர்கள் எழுத்துக் காவலர்களுக்கும் தமிழன்பர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைத் தரும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், உண்மையில் தமிழ்த்தாய்க்குத்தான் கேடு செய்கிறோம் எனப் புரிந்துதான் செயல்படுகின்றனரா எனத் தெரியவில்லை.
மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்பொழுதே தமிழ்ச்சிதைவிற்கான ஆணையோ அறிவிப்போ வெளியிடக்கூடாது என முதல்வரை வேண்டி முறையீடு அளிப்பதற்காகக் கையெழுத்து இயக்கமும் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தினரால் நடத்தப்பட்டது. ஆனால், தமிழறிஞர் ஒருவர் அத்தகைய அறிவிப்போ ஆணையோ எதுவும் வராது என உறுதியளித்து இதனைக் கைவிடுமாறு வேண்டியதற்கு இணங்க அம்முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டது.
மாநாட்டில் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு முதல்வரே முற்றுப்புள்ளி வைத்தமையால் அப்பொழுது சிதைப்பு முயற்சியாளர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆனால் மாநாடு முடிந்ததும் மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டனர். தொடக்கத்தில் ஆய்வுரைகளை இணையத்தளத்திலும் ஆய்வுத் தொகுப்பு நூலில் சேர்க்குமாறு வேண்டுகோள் விடுத்த மடல்களைப் பொறுப்பிலுள்ளோர் பார்க்கவில்லையோ என்ற ஐயமும் ஏற்பட்டது. ஆனால் இதே மடல்களில் மறுநாள் மற்றோர் அமர்வில் எழுத்துச் சீர்திருத்தமா? தமிழுக்கு அது பொருந்துமா? என்னும் தலைப்பில் பேராசிரியர் பெஞ்சமின் லெபொ (பிரான்சு) உரையாற்றியதும் விடுபட்டது குறிக்கப்பெற்றது. அவரது அமர்வில் துணைமுதல்வரின் மனைவி அவர்களும் முதல்வரின் குடும்பத்தினரும் ஈடுபாட்டுடன் கேட்டதும் குறிக்கப்பெற்றது. அவருக்கு மட்டும் கட்டுரையை அனுப்புமாறு மடல் அனுப்பப்பட்டுள்ளது. எழுத்துக் காப்பு அமர்வு மட்டும் கூண்டோடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் கணினி முறையில் சார்நிலையில் உள்ளவர்களே செய்வதே வழக்கம் என்பதால் பாகுபாடு காட்ட வேண்டும் என்னும் சிலர் திட்டமிட்டே தமிழ் எழுத்துச் சிதைவிற்கு எதிரான முயற்சிகள் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகத் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி இவ்வாறு நடக்கின்றனர் என்று எண்ணத் தோன்றுகிறது.
எனவே, தமிழ் எழுத்துக் காப்புப் போக்கிற்கு எதிரான செம்மொழி மாநாட்டுக் கருத்தரங்கக் குழுவின் போக்கைக் கண்டித்தும் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் கண்டனக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டனர். இதை அறிந்த இப்பேராளர்கள் அவற்றைத் தடுத்து நிறுத்தினர். இவர்களது கட்டுரைகள் இடம் பெறாமல் கருத்தரங்கக் கட்டுரைகள் தொகுப்பை வெளியிட உயர்நீதிமன்றம் மூலம் தடையாணை பெறவும் தமிழார்வலர்கள் நடவடிக்கை எடுத்தனர். இவ்வாறு வழக்குமன்றம் சென்று நீதி கேட்போம் என எழுதியும் செவி மடுக்காத முதல்வருக்கு எதிரான போக்கினை உடையவர்களுக்கு இதனால் ஒன்றும் ஏற்படாது; தமிழ் எழுத்து வடிவங்களைக் காக்க வேண்டும் என்னும் உணர்வுள்ள முதல்வருக்குத்தான் களங்கம் ஏற்படும் என அதையும் தடுத்து நிறுத்தியுள்ளனர் ஆய்வறிஞர்கள்.
அவ்வாறு தடையாணை பெறுவது மாநாட்டைச் சிறப்பாக நடத்தியதாகக் கூறும் தமிழக அரசிற்கு அவமானம் ஆகும் என்பதால் உடனே விழித்து இவர்களது உரைகள் இணையம் மூலம் ஒளிபரப்பப்படவும் ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு நூலில் சேர்க்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? முதல்வருக்கு எதிராகச் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்குமா?எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே
என்னும் பாவேந்தர் பாரதிதாசன் வழியில் ஆய்வறிஞர்கள் வழங்கிய தமிழ்க்காப்புக் கட்டுரைகளுக்கு இழைக்கப்படும் அநீதி தமிழ்த்தாய்க்கு இழைக்கப்படும் அநீதி என்பதை உரியவர்கள் புரிந்து கொள்வார்களா?
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்
என்னும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் பொய்யா மொழியைப் படித்தாவது தங்களைத் திருத்திக் கொள்வார்களா?
செம்மொழித்தமிழ் தொடர்பான குழுவில் இருந்துகொண்டு இவ்வாறு செய்வது சரிதானா? முறைதானா? அறம்தானா? எனத் தமிழ்த்தாய் கேட்கும் கேள்வி அவர்கள் செவிகளில் விழுமா? அல்லது செவிடன் காதில் ஊதிய சங்குதானா?
மக்கள் மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம்! நல்ல தீர்ப்பு கூறுங்கள்!
தன்மானமும் தன்மதிப்பும் மிக்க வீரப் பரம்பரை என நாம் நம்மைச் சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும். மொழி காக்கவும் இனம் காக்கவும் உயிர் நீத்த வீர வணக்கத்திற்குரியோர் பிறந்த குலத்தில்தான் நாமும் பிறந்துள்ளோம் என்பதைத் தவிர நமக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை முதலான பண்புகள் இல்லை என்பதே உண்மை. ஈழத்தில் இனப்படுகொலை புரிந்தவர்களை அரியணையில் ஏற்றியதில் நமக்கும் பங்கு உள்ளது என்பதே நம் இழிந்த நிலையை உலகிற்கு உணர்த்துகிறது. நம் உரிமையைக் கேட்பதற்குக் கூட நாம் தயங்குவதில் இருந்தே நம் வெட்கங் கெட்ட நிலை அனைவர்க்கும் புலனாகின்றது.
செம்மொழிச் செயற்பாட்டுத் திட்டங்களில் ஒன்று செம்மொழி அறிஞர்களை விருதுகள் வழங்கிச் சிறப்பித்தல். ஆனால், தமிழில் புலமையுடையோர் இல்லை எனத் தமிழறிஞர்களை இழிவுபடுத்தும் விதமாக மத்திய அரசு நடந்து கொள்கிறது. நாமும் அமைதி காப்பதன் மூலம் அதனை ஒப்புக் கொள்கின்றோம்.
இவை தவிர சமற்கிருத அறிஞர் ஒருவருக்குப் பன்னாட்டு நிலையில் ஆண்டுதோறும் வாணாள் முழுவதும் உரூபாய் 50,000 வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அயல்நாட்டைச் சேர்ந்த செம்மொழியாம் தமிழறிஞர் ஒருவருக்குக் குறள்பீடம் விருது என உரூபாய் 5,00,000 வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அப்படியானால் சமற்கிருதத்தைவிடத் தமிழ் உயர்ந்ததாக ஒத்துக் கொண்டதாகுமே! விடலாமா? எனவே, எவ்வகை முறையீடும் போராட்டமும் இன்றிச் சமற்கிருத அறிஞருக்கான இப்பரிசுத் தொகை உரூபாய் 5 இலட்சத்திற்கு ஒருமுறை விருதாக உயர்த்தப்பட்டது.
அறிவித்துள்ள விருதுகளையாவது காலமுறையில் வழங்கியுள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. 2004ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 12 ஆம் நாள் தமிழுக்குரிய செம்மொழி ஏற்பாணை வெளியிடப்பட்டது. ஆனால், அந்த ஆண்டிற்கான விருதாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை. அஃதாவது 2004-2005ஆம் ஆண்டிற்குரிய தொல்காப்பியர் விருதோ, குறள் பீடம் விருதுகளோ இளம் அறிஞர் விருதுகளோ யாருக்கும் வழங்கப்படவில்லை. (மூத்த அறிஞர் விருது பற்றித்தான் வாயே திறக்கவில்லையே!) தமிழறிஞர்கள் யாருமில்லை என மத்திய அரசு கருதுகிறதா? சமற்கிருதத்திற்குக் கீழான நிலையில்தான் தமிழாக இருந்தாலும் இருக்க வேண்டும் என்ற பரந்த(?) மனப்பான்மையா எனத் தமிழ் டிரிபுயூன் (Tamil Tribune) கேட்டது. இருப்பினும் வழங்கப்படவில்லை.
அச்சமும் பேடிமையும்
விருதுத் தொகைகள் வழங்காததன் காரணம் என்ன தெரியுமா? ஆரிய மேலாதிக்க மனப்பான்மையில் ஊறிப்போன மத்திய அரசு தமிழ் டிரிபுயூனில் குறிப்பிட்டாற்போன்று சமற்கிருதத்திற்கு இணையாக எந்த மொழியையும் ஏற்க விரும்பவில்லை. உண்மையிலேயே சமற்கிருதத்தைவிடப் பன்மடங்கு மேம்பட்டதாக உயர் தமிழ் இருப்பினும் ஒப்பிற்குச் சமற்கிருதத்திற்கு அடுத்தநிலை தமிழ் எனக் கூறி வந்தாலும் அதற்கு மிகவும் கீழான நிலையே கொடுக்க விரும்புகிறது. சமற்கிருதத்திற்கு அடுத்துள்ள நிலையில் பல மொழிகளைக் கூறிவிட்டு அதில் தமிழையும் சேர்த்து விட்டால் தமிழின் உயர்தனிச் செம்மொழிச் சிறப்பை மறைத்து விடலாம் அல்லவா? எனவே, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் செம்மொழி ஏற்பு நடைமுறைக்கு வருவதற்குக் காத்திருக்கிறார்கள்.
செம்மொழிக்காலம் என்பதற்குக் கி.மு. (கிறித்து பிறப்பிற்கு முன்புள்ள காலம்) எனப் பொதுவாகக் குறித்திருக்க வேண்டும். அல்லது 2000 ஆண்டு முன் வரலாறு என்று இருந்ததையாவது மாற்றாமல் இருந்திருக்க வேண்டும். அதைத்தான் 1000 ஆண்டு என அறிவித்துப் பிற மொழிகளைப் பட்டியலில் சேர்க்க ஆட்சியாளர்கள் ஒத்துக் கொண்டார்களே! பிறகு போராட்டத்திற்குப் பின்தானே 1500 ஆண்டுப் பழமை என மாற்றினார்கள். எனவே தமிழால் பிழைப்பவர்களுக்குப் பிறருக்கான விருதுகள் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது? அவர்கள், பிற மொழிஅறிஞர்களுக்கான விருதுகள் வழங்கும் வரை பொறுத்துக் கொள்வார்கள் அல்லவா? அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. இதுவரை தமிழக அரசு மத்திய அரசைக் கண்டிக்க வேண்டா - வற்புறுத்தி விருதுகள் வழங்கும் விழாவை நடத்தியிருக்கலாமே! ஏன் நடத்தவில்லை? முதல்வர் தில்லிக்குச் சென்ற பொழுதுகூட விருதளிப்பை வைத்திருக்கலாமே! செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ன செய்கிறது என்கிறீர்களா? முதல்வர் தமிழர் நலனுக்கு அனுப்பும் மடல்களே குப்பைத் தொட்டிக்குப் போகும்பொழுது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அதிகாரிகள் கடமை உணர்வுடன் அனுப்பும் மடல்களுக்கா மதிப்பிருக்கப் போகிறது! அனைவரும் சமம் எனப் பேசும் மத்திய அரசு, அயல்நாட்டு மொழியாம் ஆரியத்தை உயர்த்துகிறது; மண்ணின் மொழியான உயர்தனிச் செம்மொழித் தமிழைத் தாழ்த்துகிறது. இதனைக் கடமையாக எண்ணும் மத்திய அரசினருக்கு வெட்கம் எங்கே வரப் போகிறது?