Tuesday, April 8, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 946-950 : இலக்குவனார் திருவள்ளுவன்


(சட்டச் சொற்கள் விளக்கம் 941 – 945 -தொடர்ச்சி)

946 Astuteநுண்புலம் வாய்ந்த  

கூர்மதியுடைய;  

சூழ்ச்சித்திறமுடைய;   

தந்திர நுட்பமுடைய

வலக்காரம்

நுண்சூழ்ச்சித்திறம்    
  கரவடம் (தந்திரம்)

சட்டத் துறையில், “நுண்புலம் வாய்ந்து” இருப்பது என்பது சட்டக் கோட்பாடுகள், ஒழுங்குமுறைகள்,  அவற்றின் நடைமுறை தாக்கங்கள் பற்றிய கூர்மையான நுண்ணறிவையும் புரிதலையும் கொண்டிருப்ப தாகும்.  இது முன்கூட்டியே சிக்கல் தீர்க்கும், பயனுள்ள முடிவெடுப்பதை அனுமதிக்கிறது.  

சூழ்ச்சித் திறம் என்பது நல்லவகையிலான கலந்தாய்வையே குறிப்பிடடது. ஆனால் ஆரியக் கதைகளின் அடிப்படையில் பின்னர் வஞ்சகத் தந்திரத்தைக் குறித்தது. ஆரியக் கதையின் அடிப்படையில் சாணக்கியன் செயல் அடிப்படையில் சாணக்கியம் எனப்படுகிறது.   “அவன் சாணக்கியமெல்லாம் பலிக்கவில்லை” என்பது மக்கள் வழக்கில் உள்ள தொடர்.  

எமனுக்கே எமனாகத் தந்திரம் புரிபவன் என்ற பொருளில் அவன் எமகாதகன் என்று சொல்வதுமுண்டு.    

சட்டத் துறையில் நுண்மாண் நுழைபுலம் மிக்கவர் சட்டக் கருத்துகள், சட்டங்கள், வழக்குச் சட்டம்,  சட்ட நடைமுறைகள் ஆகியவற்றில் வலுவான புரிதலை வெளிப்படுத்துவார்.   

சாத்தியமான சட்ட இடர்கள் பொறுப்புகளை அடையாளம் காண்பதிலும், அவற்றைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே செயல்படுத்துவதிலும் அவர்கள் திறமையானவர்கள் ஆக இருப்பார்கள்.  

சிக்கலான சட்டச் சிக்கல்களை அவர்கள் பகுப்பாய்வு செய்யலாம், மூல காரணங்களை அடையாளம் காணலாம் பயனுள்ள தீர்வுகளை உருவாக்கலாம்.  

  சட்ட மற்றும் சட்டப்பூர்வமற்ற பார்வையாளர்களுக்குச் சட்டத் தகவல்களை அவர்கள் தெளிவாகவும் சுருக்கமாகவும் தெரிவிக்க முடியும்.  

சிக்கல்கள் எழும் வரை காத்திருக்காமல் சாத்தியமான சிக்கல்களைக் கண்டறிந்து அவை மோசமடைவதற்கு முன்பு அவற்றைத் தீர்க்க முன்னெச்சரிக்கை அணுகுமுறையை எடுப்பார்கள்.  
 947 Astutenessமதிநுட்பம்  

சூழ்ச்சித்திறன் ‌  


கூர்மதி  

நுழைபுலம்  

சூழ்ச்சித்திறம்   காண்க : Astute
948. Asyleeபுக்கிலி  

சரணன்  

புகல்நன்  

அகதி  

ஏதிலி  

புகலிடம்‌ கோருபவர்  

அகதி என்பது தமிழ்ச்சொல்லே. “கதி என்பதற்குப் புகலிடம் முதலான பல பொருள்கள் செ.சொ.பி. அகமுதலியில் தரப்பட்டுள்ளன. (பேரகரமுதலி: ‘க’ மடலம் பக்கம் 316) அப்படியானால் எதிர்மறை முன்னொட்டு  ‘அ’ சேர்ந்து புகலிடம் அற்றவன் என்னும் பொருள் தரும் அகதி என்பதும் தமிழ்ச்சொல்தானே! ஆனால் அயற்சொல் மடலத்தில் சமசுகிருதத்தில் இருந்து வந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. மயக்கத்திற்குக் காரணம்  வழக்கத்தில் (ங்)க என்னும் ஒலிப்பு உள்ளதே!  ஒலிப்பு மயக்கத்தால் தமிழ்ச்சொல்லை ஆரியச் சொல்லாகக் காட்டலாமா? (தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 22.09.2010)”  
புக்கிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR-United Nations High Commissioner for Refugees) என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பு புக்கிலி என்பதற்கான வரையறை அளித்துள்ளது. அது வருமாறு:

“புக்கிலி(அகதி)  என்பவர் துன்புறுத்தல், போர் அல்லது வன்முறை காரணமாகத் தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர். இனம், மதம், தேசியம், அரசியல் கருத்து அல்லது ஒரு குறிப்பிட்ட குமுகக் குழுவில் உறுப்பினர் ஆகிய காரணங்களுக்காக ஒரு புக்கிலி துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற நியாயமான அச்சத்தைக் கொண்டுள்ளவர். பெரும்பாலும், அவர்கள் வீடு திரும்ப முடியாது அல்லது அவ்வாறு செய்ய அஞ்சுவார்கள்.  போர், இன, பழங்குடி  மத வன்முறை ஆகியவை புக்கிலிகள் தங்கள் நாடுகளை விட்டு வெளியேறுவதற்கான முதன்மைக் காரணங்களாகும்.  

ஐ என்றால் நெருங்குதல், ஒத்தல் என்றும் பொருள்கள். பலர் நெருங்கி இணைந்து ஒத்துச் செயற்படுவதால் ஐக்கியம் எனப்பட்டது. இது தமிழ்ச் சொல்லே!  

அயல் நாடுகளிலிருந்து அரசியலிலும் அரசிலும் பொறுப்பில் உள்ளவர்கள், படைப்பாளிகள் அந்நாட்டின் தாக்குதல் குறித்த அச்சம் கொண்டு பிற நாட்டு அரசில், நாட்டில் தஞ்சம் புகுந்து அடைக்கலமாகிச் சரணடைகின்றனர். இவர்களைச் சரணர் எனலாம்.

  இந்தியாவில் புக்கிலிகளைப் பாதுகாப்பதற்கான உள்நாட்டுச் சட்டம் ஒன்றும் இல்லை, மேலும் இந்தியா 1951 ஐ.நா. புக்கிலிகள் மாநாட்டில் கையெழுத்திடவில்லை. புக்கிலிகள், இந்திய அரசியலமைப்பின் கீழ் அடிப்படை உரிமைகளைப் பெறத் தகுதியுடையவர்கள், குறிப்பாகச் சமத்துவத்திற்கான உரிமை (பிரிவு 14), குற்றங்களைத் தண்டிப்பதைப் பற்றிய பாதுகாப்பு (பிரிவு 20) மற்றும் வாழ்வுரிமை (பிரிவு 21).  

புக்கிலிகளாக வந்துள்ள திபேத்தியர்களுக்கும்  பிற நாடுகளில் இருந்து வந்துள்ள வட மாநிலங்களைச் சேர்ந்த புக்கிலிகளுக்கும் மிகுதியான முழு உரிமைகள் அளித்துள்ள இந்திய ஒன்றிய அரசு, பருமாவிலிருந்து வந்த தமிழர்களுக்கும் இலங்கை அல்லது ஈாத்திலிருந்து வந்து கொண்டுள்ள புக்கிலிகளுக்கும் உதவுவதுபோல் உதவி நான்காம்தர மக்களாக நடத்துவதாக மனித நேய ஆர்வலர்கள் கவலைப் படுகின்றனர்.

அண்டை நாடான இலங்கைியலிருந்து தமிழர்கள் வருவார்கள் என்ற எதிர்காலக் கணிப்பின் அடிப்படையிலேயே இந்தியா புக்கிலிகள் தொடர்பான பன்னாட்டுத் தீர்மானத்தில் கையொப்பமிடவில்லை என மனித நேயர்கள் வருந்துகின்றனர்.  
949. Asylumபுகலிடம்  

காப்பிடம்

காப்பகம்  

அடைக்கலம்  

தஞ்சம்    

பித்தர் காப்புமனை  

மனநோயர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கான மருத்துவ இல்லம் மன நல மனை என்றும் மனநோயர் காப்பு மனை என்றும் மனவளமனை என்றும் அழைக்கப்படுகின்றது.   பித்தர் காப்புமனை என்பதுபோல் பித்தர் என்ற சொல்லாட்சியைக் கைவிட வேண்டும்.  

பேரிடரில் இருப்பவர் அல்லது ஆதரவு அற்றவர் நாடும் (பாதுகாப்பான) இடம் அல்லது இல்லம் .

    அரசியல் குற்றவாளிகளைச் சிறை செய்தல், அவர்கள் மீது வழக்குத் தொடர்தல் ஆகியவற்றிலிருந்து காக்கும் பொருட்டு அளிக்கப்படும் மறைவிடம்.

 வெளிநாட்டவர்களுக்குச் சில நாடுகளே அடைக்கலம் தருகின்றன.

சட்டத் துறைச் சூழலில், “தஞ்சம் அல்லது அடைக்கலம்” என்பது துன்புறுத்தல், போர் அல்லது பிற கடுமையான அச்சுறுத்தல்கள் காரணமாகத் தங்கள் சொந்த நாடுகளை விட்டு வெளியேறிய வெளிநாட்டினருக்கு ஓர்  அரசு வழங்கும் சட்டப் பாதுகாப்பைக் குறிக்கிறது. இஃது அவர்களுக்குப்  பாதுகாப்பான புகலிடத்தையும் பிற நாடுகளில் புகலிடம் தேடித் துய்க்கும் உரிமையையும் வழங்குகிறது.

இந்தியாவும் பல அயல்நாட்டுத் தலைவர்களுக்கும் அறிஞர்களுக்கும் அடைக்கலம் அளித்துவருகிறது. ஆனால் மருத்துவத்திற்காக வந்த ஈழத் தமிழர்கள் பலருக்கும் ஈழத்தேசியத் தலைவர் பிரபாகரனின்தாய்க்கும் அடைக்கலம் தரவில்லை.

வங்கத் தேசப் பத்தாவது தலைமையராக(P.M.) இருந்த சேக்கு அசீனா வாசித்து (Sheikh Hasina Wazed) இப்போது இந்தியாவில் அடைக்கலமாகி உள்ளார்.
950. At all times of the yearஆண்டின்‌ எல்லாக் காலங்களிலும்‌  

பிணை வழங்குவதற்குரியவர் ஆண்டில் எல்லாக் காலங்களிலும் நிலையான இருப்பிடம் கொண்டவராக இருக்க வேண்டும்.  

ஆண்டின் எலலாக்காலங்ஙகளிலும் குற்றச் செயலில் ஈடுபடுபவராக இல்லாமல் இருந்தாலே பிணை வழங்கக் கருதிப் பார்க்கப்படும்.

(தொடரும்)

Monday, April 7, 2025

குறள் கடலில் சில துளிகள் 23. நல்லன செய்யாது செல்வத்தை அழிக்காதே! – இலக்குவனார் திருவள்ளுவன்



(குறள் கடலில் சில துளிகள் 22. உன்னைத் திருத்திய பின் ஊரைத் திருத்து! – தொடர்ச்சி)

செயற்பால செய்யா திவறியான் செல்வம்

உயற்பால தன்றிக் கெடும்.

(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், குறள் எண்:  ௪௱௩௰௭ – 437)

நல்ல செயல்களுக்குப் பயன்படுத்தாதவன் செல்வம் பயனின்றி அழியும் என்கிறார் திருவள்ளுவர்.

பதவுரை: செயல்பால-செய்யவேண்டியவை; செய்யாது-செய்யாமல்; இவறியான்-(மிகையான பொருட்) பற்றுக்கொண்டு அதைச் செலவழிக்காதவன், கருமி; செல்வம்-பொருள்; உயல்பாலது-மீட்கத்தக்கது, உய்யுந்தன்மை, தப்புதலுக்குரியது, உளதாகுதல், ஒழிக்கத் தக்கது, விலக்கத் தக்கது, நீக்கத் தக்கது, விடத்தக்கது; இன்றி-இல்லாமல்; கெடும்-அழியும்.

செல்வத்தைச் செலவழிக்காமல் வீணே வைத்திருப்பதைக் குற்றமாகப் பழந்தமிழர் கருதினர். எனவே, இக்குறளைக் ‘குற்றங்கடிதல்’ அதிகாரத்தில் வைத்துள்ளனர்.

செய்தக்க செய்யாமல் செல்வத்தை வீணாக்காதே!

செய்யவேண்டியவற்றைச் செய்யாமல் இறுகப் பற்றிக் கொண்டிருப்பான் செல்வம், பின் நிலைத்திருக்கும் தன்மையில்லாமல் வீணாகக் கெடும். எனக் குறள்நெறி அறிஞர் சி.இலக்குவனார் விளக்கம் தருகிறார்.

:நற்பணிக்குச் செலவழிக்காமல் செல்வத்தைப் பாழாக்காதே.!

நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும். என்று கலைஞர் மு.கருணாநிதி விளக்குகிறார்.

பின்வரும் சீவக சிந்தாமணிப் பாடலைக் கொண்டும் பரிமேலழகர் விளக்குகிறார்.

பொன்னின் ஆகும் பொருபடை; அப்படை

தன்னின் ஆகும் தரணி, தரணியிற்

பின்னை ஆகும் பெரும்பொருள்; அப்பொருள்

துன்னுங் காலைத்துன் னாதன வில்லையே

(திருத்தக்கத் தேவர், சீவக சிந்தாமணி, விமலையார் இலம்பகம் 34)

அஃதாவது செல்வத்தால் படையும் படையால் நாடும் நாட்டால் மேலும் பெரும் பொருளும் கிடைக்கும். பொருளால் ஆகாதன ஒன்றுமில்லை. அத்தகைய பொருளை எதற்கும் பயன்படுத்தாமல் பாழாக்கலாமா? இதனையே தேவநேயப் பாவாணர் தம் நடையில் விளக்கியுள்ளார்.

“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் “(கொன்றைவேந்தன், 4:) எனத் தேவைப்படுவோருக்குத் தரப்படாத செல்வத்தைத் தீயவர்கள் எடுத்துக் கொள்வர் என்கிறார் இடைக்கால ஒளவையார்.

ஒளைவயாரே “பாடுபட்டுத் தேடி” எனத் தொடங்கும் நல்வழிப் பாடலில்(22) இறந்த பின் யார் துய்ப்பார் என அறியாமல் அரும்பாடுபட்டுப் பணத்தைத் தேடி யாருக்கும் எதற்கும் செலவழிக்காமல்  புதைத்து வைப்பது குறித்துக் கேள்வி கேட்கிறார்.

“செயற்பால செய்யாது இவறியான் செல்வம்” என்னும் தொடருக்குப் பரிப்பெருமாள், “செய்யும் முறைமை செய்யாதே ஈட்டுதற்கு விரும்பியவனும் அவனது செல்வமும்” என்றும்

பரிதி,  “செய்யும் முறைமை அறிந்து செய்யாதான் செல்வம்” என்றும்

காலிங்கர், “தனக்கு எய்திய பொருள் கொண்டு அதனால் செய்தற்பாலனவாகிய நல்வழக்கம் செய்யாத உலோபியவனது செல்வமானது” என்றும்

பரிமேலழகர், “பொருளால் தனக்குச் செய்து கொள்ளப்படும் அவற்றைச் செய்து கொள்ளாது அதன்கண் பற்றுள்ளம் செய்தானது செல்வம்” என்றும் கூறியுள்ளனர்.

பொருள் விளக்கம் தருவோரில் ஒரு பகுதியினர், “பொருளினால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைச் செய்து கொள்ளாமல் அதன்மீது பற்றுள்ளம் கொண்டு செலவழிக்காமல்” இருப்பதைக் குறிப்பிடுகின்றனர். மறு பகுதியினர் தனக்கு என்றில்லாமல் அறச்செயலகளுக்குச் செலவழிக்காமல் இருப்பதைக் குறிப்பிடுகின்றனர்.

இஃது ஆட்சியாளருக்கும் பொருந்தும். வரி வருவாய் முதலியவற்றின் மூலம் திரட்டும் செல்வத்தை வீணே வைத்திருக்கக் கூடாது; மக்களுக்குப் பன்படும் வகையில் பணத்தைச் சுழற்சிக்கு உட்படுத்த வேண்டும் என்ற பொருளியல் கொள்கையை அரசு பின்பற்ற வேண்டும்;  என ஆட்சியாளருக்கும் அறிவுரை வழங்குவதாகக் கருத வேண்டும்.

உயற்பாலது இன்றிக் கெடும் என்பதற்குப் பரிதி, பகைவன் கெடுக்காமல் தானே கெடும் என்கிறார். எனவே செல்வத்தை நல்ல வழியில் செலவழிக்காத ஆட்சியாளர் புறப்பகை இன்றித் தானே அழிவான் என்பதாம்.

செல்வத்தைத் தனக்கோ, தன் குடும்பத்திற்கோ, தன் சுற்றத்திற்கோ, ஊருக்கோ நாட்டிற்கோ உலகிற்கோ செலவழிக்காமல் வீணே வைத்திருப்பின் அழிப்பார் இன்றி அழியும் எனத் திருவள்ளுவர் நம்மை எச்சரிக்கிறார். ஆதலின்

செல்வத்தைப் பயனுள்ள வகையில் செலவழித்துப்

பயன்பட வாழ்க!

Saturday, April 5, 2025

நாலடி நல்கும் நன்னெறி 5 – நிலை புகழ் தரும் செயல் ஆற்றுக : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(நாலடி நல்கும் நன்னெறி 4. – அறம் புரிந்து அருளாளர் ஆகுக! – தொடர்ச்சி)

செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத

புல்லறி வாளர் பெருஞ்செல்வம் – எல்லில்

கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி

மருங்கறக் கெட்டு விடும்

நாலடியார், செல்வம் நிலையாமை, 8

பொருள்:  நாம் செல்வமுடையவர்கள் என்று மகிழ்ந்து தாம் இனி இறப்பிற்குப் பின் போக உள்ள  மறுமையுலகத்தை நினைத்துப் பார்க்காத சிற்றறிவுடையோரின் மிகுந்த செல்வம், இரவில், கருமுகில் வாய் திறந்து தோன்றும் மின்னல்போல் சிறிது காலந்தோன்றி  இருந்த இடமும் தோன்றாமல் அழிந்து விடும்.

சொல் விளக்கம்: செல்வர்=செல்வமுள்ளவர்கள்; யாம் என்று=நாமென்று; தாம்=தாங்கள்; செல்வுழி=போகுமிடத்தை; எண்ணாத=நினைக்காத; புல்=அற்ப; அறிவாளர்=அறிவுடையாரது; பெரும்=பெரிய; செல்வம்=சொத்து; எல்லில்=இராக்காலத்தில்; கரும்=கரிய; கொண்மூ=முகிலானது; வாய்திறந்த=வாய்விடப்பட்ட; மின்னுப் போல்=மின்னலைப் போல்; தோன்றி=உண்டாகி; மருங்கு=வழி; அற=முற்றாக; கெட்டுவிடும்=கெட்டுப் போகும்.

எல் என்பது ஒளி, சூரியன், பகல், இரவு எனப் பலபொருள் தரும் ஒரு சொல். இப்பாடலில் இரவு என்னும் பொருளில் வருகிறது.

முகில் கடலில் ஆவியை முகந்து கொள்வதால் கொண்மூ எனப்படுகிறதுகார்முகில் மழை பெய்த பின்பு வெண்முகிலாய் வெறுமுகிலாய்ச் செல்வதும் கொண்மூ எனப்படுகிறது. முகிலின் நிறைநிலையாக மலை உச்சியில் குவிந்து பனியைக் கொண்டு இருப்பதும் கொண்மூ எனப்படுகின்றது. சிறப்புப் பெயராக  9000 பேரடி(மீட்டர்) உயரத்தில் உள்ள உயர்முகிலே கொண்மூ(Cirrus) எனலாம். இப்பாடலில் கருங்கொண்மூ எனக் குறிப்பிட்டுள்ளதால் இரவில் காணப்படும் கரு முகில் என்றே கொள்ளலாம். கொண்மூ வாய் திறந்ததுபோல் மின்னல் தோன்றுவதாகப் புலவர் அழகாகக் கூறுகின்றார். கணப்பொழுதில் தோன்றி மறையும் மின்னல்போல் செல்வமும் மறைந்து விடும் என அதன் நிலையாமையைப் புலவர் கூறுகிறார்.

மனிதன் நினைப்பதுண்டு’ படத்தில் அத் தலைப்பில் தொடங்கும் கண்ணதாசனின் பாடலில் பின்வரும் வரிகள் இடம் பெற்றிருக்கும்.

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

வாழ்வு நிலையென மனிதன் நினைக்கின்றான். இறைவன் மனிதனின் அறியாமை கண்டு இரக்கப்படுகிறான். எனினும் வேளை வரும்பொழுது அழைத்துக் கொள்கிறான். நிலையில்லா வாழ்வில் நிலையில்லாச் செல்வத்தை வீணே அழியவிட்டு என்ன பயன்?

ஆதலின் நிலையில்லாத் தன்மை கொண்ட செல்வததால் நிலையான புகழ் பெறும் நற்செயல்கள் ஆற்ற வேண்டும்.

Friday, April 4, 2025

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-10 : மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 1

 




(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-9 : பிராமணர்கள் ஆதரவும் சத்திய மூர்த்தியின் இரட்டை வேடமும் – -தொடர்ச்சி)

இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு காரணங்களுக்காகப் பற்பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்கள் பங்கேற்றமை போல் வேறு எந்த மாநிலத்திலும் எந்தப் போராட்டத்திலும் பெண்கள் ஈடுபாடு இருந்ததில்லை.

பெரியார் ஈ. வெ. இராமசாமியும்  எதிர்க்கட்சியான நீதிக்கட்சியும் இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்திய, முதற்கட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தில் பெண்கள் பங்களிப்பு அளப்பற்கரியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வகைகள் மாநாடுகள், அணிவகுப்புகள், மறியல் போராட்டங்கள், உண்ணா நோன்பு, பேரணிகள், கறுப்புக் கொடி காட்டுதல்  எனப் பலவகையாக இருந்தன. இவை அனைத்திலுமே பெண்களின்பங்களிப்பு முதன்மையாக இருந்தது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் இலக்காகவும் செயற்பாடுகளாகவும் பின்வருவன இருந்தன.

•         இந்தியை கட்டாயப் பாடமாக்குவதை ஒழிக்க வேண்டும்

•         இந்தியைத் திணிக்கும் ஆணையைப் பிறப்பித்ததை எதிர்த்தல்

•         மாணவர்களை இந்திப் பாடங்களைப் புறக்கணிக்கும் படி செய்தல்

•         இந்தியைப் பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு முன்னால் மறியல் போராட்டங்கள் நடத்துதல்

•         பேராயக்கட்சி(காங்கிரசு) அமைச்சர்களுக்கு எதிராக்க கறுப்புக் கொடி காட்டுதல்

•         முதலமைச்சர் வீட்டிற்கு முன்பு மறியல் நடத்துதல்

ஆண்களுக்குத் தாங்கள் எவ்வகையிலும் சளைததவ்கள் இல்லை என்று சொல்லும்படிப் பெண்களி்ன் பங்களிப்பு இவற்றில் தீவிரமாக இருந்தது.

தமிழ்நாட்டில் முதல் முறையாக் தியாகராய நகர் மாதர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அமைப்பின் பெயரில் உள்ள ‘முன்னேற்றக் கழகம்’ என்ற தொடரைத் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் மருத்துவர் தருமாம்பாள் அம்மையார். இத்தொடரே முன்னேற்றக் கழகம் என்று தமிழ்நாட்டில் தொடங்கப்படும் கட்சிகளின் பெயர்களில் இடம் பெற்றது. கழகம் என்று அரசியல் கட்சிகளின் பெயர்களில் இடம் பெறவும் இதுவே தொடக்கமாக அமைந்தது.

பெண்களின் போராட்ட உணர்வுகளுக்கு  தூண்டுகோலாகவும் வடிகாலாகவும் இவ்வமைப்பு செயற்பட்டது. இத்தகைய போராட்டப் ப்ங்களிப்புகளில் ஒன்றுதான் சென்னையில்  ஒற்றைவாடை அரங்கில் 13.11.1938 அன்று நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாடு.

மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையார் மாநாட்டுத் தலைமை தாங்கினார். மீனாம்பாள் சிவராசு தமிழ்க் கொடி ஏற்றினார்; பண்டிதை நாராயணி அம்மையார் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். தாமரைக் கண்ணி அம்மையார் வரவேற்புரை ஆற்றினார். நாகம்மையார் படத்தைத் தோழியர் பார்வதி அம்மையார் திறந்து வைத்தார் பெரியார் ஈ.வெ.இராமசாமி சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மரு, தருமாம்பாள், அலர்மேலுமங்கை தாயாரம்மாள், மஞ்சுளாபாய் சண்முகம், புவனேசுவரி என்.வி. நடராசன் முதலானோர் கலந்து கொண்டனர்.

இம் மாநாட்டில் மீனாம்பாள் சிவராசு பெண்களுக்கு இந்தி எதிர்ப்பில் ஈடுபட அழைப்பு விடுத்தார். தமிழ்மொழி,  தமிழ்ப்பண்பாட்டுக்காக மன உறுதியோடு போராட முன்வர வேண்டும் என்று பெண்களை வேண்டினார்

அம்மாநாட்டில்தான் ஈ.வெ.இராமசாமி அவர்களுக்குப் பெரியார் என்ற பட்டம் சூட்டப்பட்டது. “இந்தியாவில் இதுவரை தோன்றிய சீர்திருத்தத் தலைவர்களால் செய்ய இயலாமற் போன வேலைகளை நம் மாபெரும் தலைவர் ஈ.வெ.ரா. அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், ஒப்பாகவும் நினைப்பதற்கு வேறு ஒருவரும் இல்லாமையானும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போது பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்கவேண்டும்” என்று முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடுகள், பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதோடு மட்டுமன்றி ஆண்களைப் போலவே பெண்களும் சிறைபுகும் போராட்டம் நடத்த வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் முதன்மைக் குறிக்கோளாக இருந்தது. முதல் பெண்கள் மாநாட்டில் உரையாற்றிய பெரியாரும் அதையே வலியுறுத்தினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்கள் பங்கு பெறச் செய்யத் தூண்டினார் என்று குற்றம் சாற்றப்பட்டுப் பெரியார் ஈ.வெ.இரா.விற்குத் தண்டனை வழங்கப் பட்டது. தந்தை பெரியார் உரை கேட்டு மகளிர் போர்க் கோலம் பூண்டனர்.

இம்மாநாட்டின் மறுநாள் – 1938 நவம்பர் 14 – சென்னையில் பெத்து நாயக்கன் பேட்டை காசி விசுவநாதர் கோயில் அருகிலிருந்து மரு.தருமாம்பாள், இராமாமிர்தம் அம்மையார், மலர்முத்தம்மையார்,  (பாவலர் பாலசுந்தரம் அவர்களின் துணைவியார்)பட்டம்மாள், சீதம்மாள் ஆகியோர் இந்து இறையியல் பள்ளி நோக்கி மறியலுக்குப் புறப்பட்டனர்; தளையிடப்பட்டனர். வீரத்தாய்மார்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மறியலில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அங்கு நீதிபதி எவ்வளவோ கேட்டுக் கொண்டும் முன் வைத்த காலைப் பின் வைக்க மறுத்தனர். நீதிமன்றத்தையே பரப்புரை மேடையாக மாற்றி இறுதி வரை தாங்கள் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ளாமல், சிறை சென்றனர் பெண்கள். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மட்டும் 73 பெண்கள் மற்றும் அவர்களுடன் 32 குழந்தைகளும் சிறை சென்றுள்ளனர். இவர்களோடு 1164 ஆண்களும் சிறை சென்றுள்ளனர்.

தி.மு.க.தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் மகளிர்அணி தொடங்க வேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்தது. பேரறிஞர் அண்ணா முதலில் தயங்கினார். பின்னர் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்களின் பங்குகளை நினைவு கூர்ந்தார்.அதனால் மகளிர் அணியை 21.8.1956-இல் உருவாக்கினார். என்.வி.நடராசன் வீட்டில் நடந்த அமைப்புக் கூட்டத்தில்,

சத்தியவாணிமுத்து தலைவராகவும் செயலாளர்களாக:

இராணி அண்ணாதுரை,

அருண்மொழிவில்வம்,

வெற்றிச்செல்வி அன்பழகன்.

புவனேசுவரி நடராசன்

ஆகியோரும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தயாளு கருணாநிதி,

நாகரத்தினம் கோவிந்தசாமி,

சுலோச்சனா சிற்றரசு,

பரமேசுவரிஆசைத்தம்பி,

என்எசுகேயின்மனைவி  டிஏமதுரம் முதலானோர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிகழ்வை இங்கே குறிப்பிடுவதன் காரணம்  முதல் இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் பெ்ண்களின் தீவிர பங்களிப்பு இருந்தமையே பின்னர்க் கட்சிகளில் மகளிர் அணிகள் உருவாக அடித்தளமாக இருந்தது எனச் சுட்டிக்காட்டவே!

(தொடரும்)

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 7 : உதவியவர்க்கு உதவாதவன் தேய்வான்! – இலக்குவனார் திருவள்ளுவன்



(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 6 தொடர்ச்சி)

                      கலித்தொகை 149 : 6  7

 கலித்தொகை  நெய்தற் கலி
 பாடியவர்  நல்லந்துவனார்
 திணை  மருதம்
 கி.முகாலத்துப் பாடல்

ஒற்கம் என்றால் வறுமைதான் வறுமையுற்றபோது அத்துன்பம் நீக்க உதவியவருக்கு அவருக்குத் துன்பம் வரும்பொழுது அத்துன்பத்தைத் துடைக்க முன்வந்து உதவ வேண்டும்அவ்வாறு உதவாதவன் செல்வம் கெட்டுத் துன்பத்திற்கு ஆளாவான்.

அவன் மட்டுமல்ல அவனுக்கு எஞ்சி நிற்கும் வழிமுறையினருக்கும் கேடு வரும்.

அவன் மணமாகாதவனாகவோமணமாகியும் மகப்பேறு இல்லாதவனாகவோ இருந்தால் எப்படித் தீங்கு நேரும் என எண்ணலாம்.

அவன் மரணத்திற்குப் பின் எஞ்சி நிற்கும் நற்பெயர்புகழ் முதலானவற்றிற்கும் கேடு ஏற்படும்ஆதலின் உனக்கு உதவியவர்க்கு நீ உதவு என்கிறார் புலவர் நல்லந்துவனார்.

தெய்வப்புலவர் திருவள்ளுவர் செய்ந்நன்றியறிதல் எனத் தனி ஓர் அதிகாரமே வைத்துள்ளார்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (திருக்குறள்௱௰  110)

என்கிறார் திருவள்ளுவர்.

எத்தகைய அறக்கேடு புரிந்தாலும் தப்பிப் பிழைக்க வழியுண்டுஆனால்ஒருவர் செய்த உதவியை மறந்து தீங்கிழைத்தவனுக்கு அதனால் வரும் அழிவிலிருந்து தப்பிப் பிழைக்க வழியில்லை என்கிறார்.

இப்பாடலில் அடுக்கடுக்காகச் செல்வம் தேய்வதற்கான காரணங்களைப் புலவர் நல்லந்துவனார் கூறியிருப்பார்அதனைப் பின்னர்ப் பார்ப்போம்.

இப்பாடலடிகள் மூலம் புலவர் நல்லந்துவனார் நமக்கு உணர்த்துவது என்ன?

பிறருக்குக் கைம்மாறு கருதாமல் உதவவேண்டியது நம் கடமைஒருவேளை அதற்கான வாய்ப்பு இல்லாமல் போகலாம்.

ஆனால்நமக்குத் துன்பம் துடைத்தூன்றும் தூணாக இருந்தவருக்கு உதவி தேவைப்படும் பொழுது நாம் விரைந்து சென்று உதவ வேண்டும் என்கிறார்.

அத்தகைய நற்செயல் புரியாதவன் தீமைக்குள் ஆழ்ந்து அழிந்துபோவான் என எச்சரிக்கவே இப்பாடலை வழங்கியுள்ளார்.

தாய் மின்னிதழ் 04.04.2025

Followers

Blog Archive