Monday, December 4, 2017

புதிய பாடத்திட்டம்: இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 215, கார்த்திகை 17- கார்த்திகை 23,  2048 /   திசம்பர் 03  – திசம்பர் 09,  2017

புதிய பாடத்திட்டம்  : இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா!

 தமிழக அரசு புதிய பாடத்திட்ட வரைவை வெளியிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முடிய உள்ள நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கான வரைவாக அறிமுகப்படுத்துவது ஏன்? மத்திய அரசின் பொதுத்தேர்விற்காக இவ்வாண்டுத் திட்டமாகக் குறித்துள்ளனர் எனில், கல்வியாண்டு முடிந்த சூழலில்  எவ்வாறு புகுத்துவர் என்று தெரியவில்லை.
 பாடத்திட்ட வரைவை 22.05.2017 அன்று வெளியிட்டிருந்தாலும் இணையத்தளத்தில் தொடக்கத்தில் முகப்புப்பக்கம் மட்டும் வந்து உரிய எதைச் சொடுக்கினாலும் முகப்புப் பக்கமே மீண்டும் வந்த நிலைதான் இருந்தது. பள்ளித் தலைமையாசிரியர்கள் சிலரிடம் வினவியபொழுது அவர்களும் இதே நிலைதான் என்றனர். சில பள்ளிகளில், “தளத்தில் காணமுடியும் என்ற பொழுது இணையம் வேலை செய்யவில்லை எனவே இதுகுறித்து ஒன்றும் தெரியவில்லை” என்றனர்.  ’’ஆகா, ஓகோ என்று அவர்களே பாராட்டிக்கொண்டு சிறிய மாற்றம் மட்டும் செய்துவிட்டுக் கல்விப்புரட்சி என்பர்’’ என்றனர் ஆசிரியர்கள் சிலர்.
  இப்பொழுது சில நேரங்களில் இணையத்தளத்தில் பாடத்திட்ட வரைவு காணப்படுவதால், வரைவைப் பார்க்க முடிந்தது. தனித்தனிப் பாடமாகச் சொல்வதெனில் விரிவாகப் போகும். எனவே, சுருக்கமாகச் சிலவற்றைக் பார்ப்போம். அதற்கு முன்பு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி-
பயிற்சி நிறுவனத்திற்கு ஒரு வேண்டுகோள். உங்களது அறிவிப்புகளும் வரைவுக் குறிப்புகளும் பிழைகளுடன் உள்ளன. இயக்குநர் என்பதுகூட இயக்குனர் என்றுதான் உள்ளது. முதலில் உங்கள் அறிவிப்பையும் குறிப்புகளையும் பிழையின்றி வெளியிடுங்கள் என வேண்டுகிறோம்.
  ”தமிழ் நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லாமும் தமிழ்  மொழியில் நடத்த வேண்டும் என்பது பொருள்” எனப் பாரதியார் விளக்குகிறார். மேலும், அவர் ’’நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும்’’ என்கிறார். எனவே, முதலில் அனைத்து நிலைகளிலும் தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தும் தமிழ்வழிக்கல்வியை அறிமுகப்படுத்துவதே உண்மையான கல்வி மேம்பாட்டிற்கும் அறிவு  வளர்ச்சிக்கும் துணைநிற்கும். ஆங்கிலவழிக்கல்வியை  நடைமுறைப்படுத்திக் கொண்டு பாடத்திட்ட முறையைமட்டும் மாற்றி என்ன பயன்? இருப்பினும் இருக்கின்ற பாடத்திட்டத்திற்கேற்ற கருத்துகளைப் பார்ப்போம்.
  1. தமிழ்
  தமிழ்ப்பாடத்திட்டத்தில் முதலில் மெய்யெழுத்தும் பிறகு உயிரெழுத்தும் இடம் பெறுவதாகப் பாடநூலைப்பார்த்த ஒருவர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார். (1,6,9,12 ஆம் வகுப்பு மாதிரி நூல்கள் வெளியிட்டுள்ளதாகவும் பள்ளிகளுக்கு இன்னும்வரவில்லை என்றும் பள்ளிகளில் கூறுவதால் அதனைப் பார்க்க இயலவில்லை.) உயிரெழுத்து, ஆயுத எழுத்து, மெய்யெழுத்து என்ற வரிசையில்தான் சொல்லித்தரவேண்டும். கிரந்த எழுத்துகள் தமிழ்  நெடுங்கணக்கில் சொல்லித்தரப்படக் கூடா. செவ்வியல் இலக்கியங்களுக்கு முதன்மை அளிக்கும் வகையில் பாடத்திட்டங்கள் இருத்தல் வேண்டும்.
 அயலகத்தமிழ்ப்படைப்புகள் ஒரு பாடமேனும் இருக்க வேண்டும். 
  1. ஆங்கிலம்
 ஆங்கிலம் முதலான பிற மொழிப்பாடங்கள் அனைத்திலும் தமிழ்மொழிச்சிறப்பு, தமிழ் இலக்கியச் சிறப்பு, தமிழ்நாகரிகச் சிறப்பு, தமிழ்ப்பண்பாட்டுச்சிறப்பு, தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்கள்குறித்த பாடங்கள் இடம் பெற வேண்டும். இவை தொடர்பான உரையாடல்  பயிற்சிகளும் இடம் பெற வேண்டும். தமிழ்ப்பாடல் வரிகளையும் மேற்கோள்வரிகளையும் மொழி பெயர்க்கப் பயிற்சி அளித்தல் வேண்டும்.

  1. கணக்கு
  கீழ்வாயிலக்கம், மேல்வாய்இலக்கம் முதலான தமிழ் எண்ணலளவைகள், நிறுத்தலளவை, முகத்தலளவை,  பெய்தல் அளவை,  நீட்டலளவை , வழியளவை, நிலவளவை,  தெறிப்பு அளவை(கால வாய்ப்பாடு) எனத் தமிழ் அளவைகள் கற்பிக்கப்பட வேண்டும்.
  காக்கைப்பாடினியார் எழுதிய கணக்குநூல் முதலான மறைந்து போன தமிழ் நூல்கள், பிற கணக்கு நூல்கள் பற்றிய விவரங்கள் பாடங்களில் இடம்பெற வேண்டும்.
கணக்கதிகாரத்திலிருந்தும் கணக்குகள் இடம் பெற வேண்டும்.
  1. அறிவியல் துறைகள்
  பயிரியலில் வீட்டுத் தோட்டத்தில் விளையும் காய்கனிகள், கீரைவகைகள் இடம் பெற வேண்டும். இவைபோல், அறிவியல் துறைகள் தொடர்பான அனைத்துப்பாடங்களிலும் பயிர்களுக்கு உயிர் உண்டு என்பதுபோன்ற தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் அறிவியல் உண்மைகள் இடம்  பெற வேண்டும். காய், கனி, பூ, தண்டு, வேர் முதலானவற்றைப்பற்றிய பாடங்களில் தமிழ்கூறும் அவற்றின் மருத்துவப் பயன்களையும் குறிக்க வேண்டும். மாணாக்கர்கள் ஊட்டமாக வளரவும் நலமாக வாழவும் இத்தகைய கல்வி உதவியாய் அமையும்.
 கிரேக்கர், ஆரியர், முதலான பிறநாட்டார்போல் கோள்களை உயிருள்ள பிறப்பாகக் கருதாமல் அவற்றின் தோற்றம், விரைவு, தன்மை  முதலானவற்றின் அடிப்படையில் பெயர்சூட்டியுள்ள வானறிவு, காற்றில்லாப்பகுதி உள்ளதை அறிந்த வான் மண்டில அறிவு, வானூர்தி, ஆளில்லா வானூர்தி, வானக்குடை(பாராச்சூட்டு), இயந்திர யானை (ரோபோ), தாழிமரம்(போன்சாய்), அணுவியலறிவு, புவியின் வடிவம், சுழற்சி, ஐந்திணைப் பாகுபாடு முதலான புவியியல், கவரிமா, அன்னப்பறவை, அசுணமா, இருதலைப்புள், புலம்பெயர் பறவைகள், [வலசைப் பறவைகள் -migration birds, வம்பப்புள்- immigration bird, வதிபறவை -non-transit bird],   எனப் பலவாறான பறவையியல், உயிரினங்களுக்கு அறிவியல் உண்மை அடிப்படையில் பெயர் சூட்டியுள்ளமை, காந்தத்திறன், புவிஈர்ப்புத்திறன், மழையியல், முகிலியல், உளவியல்,  மகப்பேற்றறிவு முதலான மருத்துவ அறிவு என எண்ணிறந்த அறிவியல் உண்மைகளைப் பழந்தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். உரைநடையில் இல்லாமல்  செய்யுளில் உள்ளமையால்  இவற்றைக் கற்பனை என்ற ஒதுக்கக்கூடா. இவை தமிழ்ப்பாடங்களில் இல்லாமல் அறிவியல் பாடங்களில் இடம்பெற வேண்டும். அப்பொழுதுதான் அறிவியல் அறிவு மாணாக்கர்களிடம் மேலோங்கும்.
  1. வரலாறு
  “மன்பதை முதலில் தோன்றிய இடமே குமரி நாடாகும்.” எனவே, இந்திய வரலாறு என்பது தெற்கேஇருந்து தொடங்கப்பெற வேண்டும் என்பது ஆய்வறிஞர்கள் கருத்து. இதற்கிணங்கப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் இந்திய வரலாறு குமரிநாட்டிலிருந்தே தொடங்கப் பெறுதல் வேண்டும் என்கிறார்.  ஆனால், தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தமிழக வரலாறு  புறக்கணிக்கப்டுகிறது. தொடக்க இந்தியா என்னும் பாடத்தில் பிற்பட்ட ஆரிய வரலாறு முதன்மையாகக் கற்பிக்கப்படுகிறது. வேதகாலப் பண்பாடு என்பது முறையற்ற உறவுகளிடையே முறையற்ற வழியில் பிறந்தவர்களைப்பற்றியனவே! அவ்வாறிருக்க அறநெறி சார்ந்த தமிழக வரலாறு பின்தள்ளப்டுவது சரியல்ல.
  பிற்காலச் சோழர்கள்பற்றி மட்டும் பாடம் இடம் பெறுகிறது. ’இந்தியப்பண்பாட்டில் பேரரசுகளின் கொடை’ என்னும் பாடத்தில் அயலவர்களான வடநாட்டு ஆட்சியர்கள்பற்றித்தான் குறிப்பு உள்ளது. அங்கும் தமிழக மூவேந்தர்கள், கடையெழுவள்ளல்கள் முதலானவர்கள்பற்றி ஒன்றும் இல்லை.
 உலகப்போர் பற்றியெல்லாம் படிக்கின்றோம். தமிழ்நாட்டில் 7 போர்கள் நிகழ்ந்துள்ளன. இவையும் பாடத்தில் இடம் பெற வேண்டும்.
  1. விளையாட்டு
 இணைக்கல்வித்திட்டத்தில் உடற்பயிற்சி, இசை, ஓவியம், தையல் ஆகியன உள்ளன.
  உடற்பயிற்சியில் 3ஆம்வகுப்பில் கண்ணாமூச்சி ஆட்டம் உள்ளது. ஒற்றையா இரட்டையா, நொண்டியாட்டம், பாண்டியாட்டம், குலைகுலையாய் முந்திரிக்காய், ஒரு குடம் தண்ணீர் ஊற்றி, காற்றாடி, பந்தாட்டம், வழுக்குமரம் ஏறுதல், நீச்சல், தட்டாமாலை, தட்டாங்கல், சடுகுடு, ஊஞ்சல், சிலம்பாட்டம், தற்காப்புக்கலை முதலான பல மரபு விளையாட்டுகளும்  தொடக்கவகுப்பிலிருந்தே இடம் பெற வேண்டும். மாணாக்கர்கள் எம்மொழி வழி பயின்றாலும் கட்டளைகளும் சொல்லப்படும் எண்களும் தமிழிலேயே இருத்தல் வேண்டும்.
  பாடத்திட்டத்தல் ஓகம்(யோகம்) இடம் பெற்றுள்ளது. ஆனால் இருக்கைகள் பெயர்கள் தமிழில் குறிக்கப் பெறவில்லை. இவையும் தமிழில்தான் குறிக்கப் பெற  வேண்டும்.
  1. இசை
  இசைக்கான பாடம் 6 ஆம் வகுப்பில் இருந்துதான் உள்ளது. பாடுவதற்கும் ஆடுவதற்கும் வரைவதற்கும் மழலைப்பருவம் ஏற்றதுதான். அதற்கேற்ப எளிய பாடல்கள் முதல் வகுப்பிலிருந்தே வாய்வழிச் சொல்லித்தரவேண்டும். அஃதாவது எழுத்துப்பயிற்சி தேவையில்லை. தமிழ் வாழ்த்துகள், திருக்குறள், அறநெறிப்பாடல்கள் சொல்லித்தரப்பட வேண்டும்.
  6 ஆம் வகுப்பில் இருந்து இசைப்பாடம்  இணைப்பாடமாக உள்ளது. மாலை வாரம் இரு முறையேனும் அனைவரும் கற்கும் வண்ணம் இசை வகுப்புகள் இருத்தல் வேண்டும்.
  சீர்காழி மூவரில் முத்துத்தாண்டவர்பற்றி மட்டுமே பாடம் உள்ளது. அருணாசலக் கவிராயர், மாரிமுத்தா(ப்பிள்ளை)  ஆகிய மற்றுமிருவர்பற்றியும் பாடம் இடம் பெற வேண்டும். இவர்களைப்பற்றிக் குறிப்பிடுகையில் ’ஆதி மும்மூர்த்திகள்’ என்ற வராற்றுப்பிழையுடன் குறிக்கக்கூடாது. தியாகராசர் முதலான கருநாடக மும்மூர்த்திகளை விட மூத்தவர்கள் என்பதற்காக இவ்வாறு கூறுவது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இருக்கும் தமிழிசை வரலாற்றை மறைப்பதாக அமையும்.
  தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களில் உள்ள இசைப்பாடல்களும் பாடங்களில் இடம்பெற வேண்டும்.
  கலைச்சொற்கள் அனைத்தும்  ஏறுநிரை, இறங்கு நிரை என்பன போன்று தமிழில் குறிக்கப் பெறாமல், ஆரோகணம், அவரோகணம் என(க் கிரந்த எழுத்துகளைப்பயன்படுத்தி)ப் பிற மொழிச்சொற்களாக இடம் பெற்றுள்ளன. பாடம் தமிழிசைபற்றித்தான் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். தக்கத் தமிழிசைவாணரைக் கொண்டுபாடம் வகுக்காவிட்டால் இப்படித்தான் நிகழும்.
 தமிழிசைக்கருவிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றையும் அறியும் வகையில் பாடத்திட்டம் இருத்தல் வேண்டும்.
 தமிழ்நாட்டில் இசை என்றால் தமிழிசைதான் என்பதை மனத்தில் கொண்டால் தமிழிசை அறிமுகம், வளர்ச்சி, தமிழ்ப்பாடல்கள் பாடமாகும்.

  1. ஓவியம்
 தமிழ்நாட்டு விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடிகள், பூக்கள் என வீட்டுச்சூழலிலும் நாட்டுச் சூழலிலும் அமைவனவற்றை வரைய பயிற்சி அளிக்க  வேண்டும்.
 7 ஆம் வகுப்பில் வாழ்த்து அட்டை உருவாக்கமும் 10 ஆம் வகுப்பில் விளம்பர அட்டை உருவாக்கமும் இடம் பெற்றுள்ளன. தொடக்கப்பள்ளி மாணாக்கர்கள் அவர்களின் கைவண்ணங்களுக்கேற்ப வாழ்த்து அட்டைகள், விளம்பர அட்டைகள் உருவாக்கப் பயிற்சி அளிக்க வேண்டும்.
 கோவில்களுக்கு அழைத்துச் சென்று இசைத்தூண்கள், கலைச்சிற்பங்கள் ஆகியவற்றை வரையவும் பழக்க வேண்டும். தமிழ்க்கலைகள் ஓவியமாக அமைவதற்கான பயிற்சி அளித்தல் வேண்டும்.

  1. தையல்
 பூத்தையலில், ஓவியத்தில் குறிக்கப்பெற்ற ஓவியங்கள் இடம்பெறும் வகையில் தையல் பயிற்சி அளிக்க வேண்டும்.
  கலைப்பொருள்கள் உருவாக்குவது தொடர்பான பாடங்களும் வேறு சிலவும் தமிழில் குறிக்கப் பெறவில்லை. எல்லா இடங்களிலும்தமிழ்தான் இடம் பெறவேண்டும்.
  1. சிறப்புத்தமிழ்
  மேனிலை வகுப்பிற்கான சிறப்புத்தமிழில் தொழில்நுட்பத்தமிழ் இடம் பெற்றுள்ளது பாராட்டிற்குரியது. தமிழ் விசைப்பலகை அறிமுகம், பாடமாக உள்ளது. கணிணி உலகில்,  தொடக்கத்திலேயே அறியும் வாய்ப்புள்ள கணிணியியலை- அதற்கான விசைப்பலகையைமேனிலை வகுப்பில்  கற்றுத்தருவது என்பது வேடிக்கையாக உள்ளது.
 பொதுநிலையிலேயே கணிணியின் தொடக்கப்பாடங்கள் இடம்பெற வேண்டும்.  மேனிலை வகுப்பில் கணிணி தொடர்பான கலைச்சொற்கள், கணிணிக்கல்விதான் இடம் பெற வேண்டும்.
 தொடக்கநிலையில் விசைப்பலகைபற்றிய பாடம் இடம் பெறும் பொழுதும் தட்டச்சு விசைப்பலகையும் இடம்பெற வேண்டும். அப்பொழுதுதான் அரசு தொடர்பான  பணி வாய்ப்பு கிட்டும்.
  1. அரசியலறிவியல்
 அலகு 6 இல் அரசியல் சிந்தனையில் பிளேட்டோ, அரிசுடாடில், சாணக்கியர், மாக்கியவல்லி முதலனவர்களுடன் திருவள்ளுவர் இடம் பெறுகிறார். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் செவியறிவுறூஉ  முதலான துறைகள் அரசியல் கருத்துகள் அடங்கியவையே! நீர்நிலைகளை உருவாக்கவும் வரிவிதிப்புமுறை பற்றியும்  அரசர்க்குப் புலவர்கள் கூறும் அறிவுரைகள், அரசியலிலும் பொருளியலிலும் இடம்பெற வேண்டியவை அல்லவா? அறநெறி இலக்கியங்களில் அரசு நெறிகளும் இடம் பெற்றுள்ளன.  எனவே, தமிழ் இலக்கியங்கள் கூறும் அரசியலறிவியல் கருத்துகள் அரசியலறிவியல் பாடங்களில் இடம்பெற வேண்டும்.

  1. தமிழகப்பண்பாடும் அறிவியலும்
 11 ஆம் வகுப்பில் ’தமிழகப்பண்பாடும் அறிவியலும்’  என்னும் பாடத்திட்டம் உள்ளது.  இதிலுள்ள பல கருத்துகள் வரலாற்றுப் பாடத்திட்டத்திலும்  சேர்க்கப்பட வேண்டும்.
 இப்பாடத்திட்டத்தில் தொல்காப்பியம் கூறும் அறநெறிகள், சங்க இலக்கியம் கூறும் அறநெறிகள்  சேர்க்கப்பட வேண்டும். சங்கக் கால விழுமியங்கள் என்னும் தலைப்பு இருந்தாலும் சங்க இலக்கிய அறநெறி தனித்தலைப்பில் கற்றுத்தரப்பட வேண்டும்.
  அலகு 10 இல்  காந்தியடிகள்  அறக்கோட்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகப்பண்பாட்டில் இவ்வாறு சேர்ப்பது தவறு. சாதி வேறுபாடற்ற, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நெறிதான் தமிழர் நெறி. காந்தியடிகள்  ’’சாதிப்பாகுபாடுதேவை, ஆனால்  வேறுபாடு காட்டக்கூடாது’’ என்றவர். அவர் தமிழ்நாட்டவருமல்லர். ஆதலின் அவரது கருத்துகள் தமிழகப்பண்பாட்டில் அமையா. (இந்தியப் பண்பாட்டில் சேர்க்கலாம்.)
  மாறாக, வாடிய பயிரைக்கண்ட பொழுதெல்லாம் வாடிய வள்ளலார் அற நெறி சேர்க்கப்பட வேண்டும்.
  மறுமலர்ச்சிப்பாடல்கள வழி உணர்த்தப்படும்  பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவுச் சிந்தனை முதலானவை சேர்க்கப்பட வேண்டும்.
  ’’தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தருமம்’’. என்னும் கொள்கையுடைய ஐயா வைகுண்டர் தீண்டாமைக்கு எதிராகப் போராடிய நாராயணகுரு,  தந்தை பெரியார், முதலானவர்களின் கொள்கைகளும் நீதிக்கட்சிகள், திராவிட இயக்கம் முதலானவற்றின் மறுமலர்ச்சிப்  போராட்டங்களும் இடம்பெற வேண்டும்.
 விருப்பப்பாடமாக அமையும் அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இவை இடம்  பெற்றிருந்தாலும் வரலாற்றுப் பாடத்திட்டத்திலும் இடம் பெறவேண்டும். அப்பொழுதுதான் அனைத்து மாணவர்களும் வரலாற்றினை அறிவர்.
. இந்தியநாகரிகமும் பண்பாடும் என்பனவற்றில் பெரும்பகுதி தமிழக நாகரிகமும் பண்பாடும்தான் என்கிறார் கவிஞர் இரவீந்திரநாத்து தாகூர். ஆனால், இப்பாடத்தில் தமிழக நாகரிகமும் பண்பாடும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
  மகாபாரதமும் இராமாயணமும் சங்கக்காலத்திற்கு முற்பட்டவை அல்ல.  (இதை விளக்கினால் பெரிய கட்டுரையாகிவிடும்.) “வியாசர், வேதங்களை நான்கு கூறாகப் பிரிக்கும் முன்னரே தொல்காப்பியம் இயற்றப்பட்டது’’ என்கிறார் உரையாசிரியர் நச்சினார்க்கினியர். தொல்காப்பியருக்குப்பிற்பட்டவர் புத்தர். புத்தர் காலத்திற்குப் பிற்பட்டது இராமாயணக் காலம். அதற்கும் பிற்பட்டது மகாபாரதக்காலம்.  இவ்வாறிருக்க, ஆரியர்களின் பொய்யுரைகளை நம்பி வேதங்களை முற்பட்டதாகக் காட்டி நம்நாட்டு மாணவ மன்பதையையும் தவறான வரலாற்றுப் புதைகுழியில் தள்ளுவது சரியல்ல.
  1. நெசவியல்
 நெசவும்  ஆடை வடிவமைப்பும் என இரு பாடத்திட்டங்கள் உள்ளன. நெசவுக்கலையில் தமிழர்கள் பண்டுதொட்டே சிறந்துள்ளனர். பஞ்சு, பட்டு, மயிர் முதலானவற்றில் ஆடை நெய்தல், கால நிலைக்கேற்ற உடை,   உள்ளங்கையில் அடக்கும்வண்ணம் மடிக்கத்தக்க சேலை, ஆவிபோல் மெல்லிய ஆடை, பூத்தையல் ஆடைகள் எனப் பல்வகைகளில் சிறந்துள்ளனர். எனவே, இவை பாடங்களில் இடம் பெற வேண்டும்.
  1. புத்தகத்துணையுடனான தேர்வு
  பொதுவாக எல்லா வகுப்பிலும்  புத்தகத்தைப் பார்த்து எழுதும் ஒரு தாள் இருக்க வேண்டும். அதில் தமிழின் எல்லா வகைச் சிறப்பும் இடம் பெற்றிருக்க வேண்டும. தங்கள் கருத்துநடையில் எழுதுவதற்காக இரு வினாக்கள் இடம் பெற வேண்டும். சுருக்கக்குறிப்பினை விரித்து எழுதும் வகையிலும் விரிவாக  உள்ளதைச் சுருக்கி எழுதும் வகையிலும் ஒவ்வோர் வினா இருக்க வேண்டும். பார்த்து எழுதுவதற்குத்தான் இவை என்றாலும் தத்தம் நடையில் எழுதுவதால் எழுத்தாற்றல் வளரும். பிற வினாக்கள் உள்ளது உள்ளவாறு அல்லது தத்தம் நடையில் எழுதும் வகையில் இடம் பெற வேண்டும்.
  1. ஊர்த்திருவிழா உலா
 பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் ஊர்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு  அழைத்துச் சென்று மரபு முறை, கலை, பண்பாடு முதலானவற்றை மாணவர்கள் அறியச் செய்ய வேண்டும். கட்டுரை,  பேச்சுப்பயிற்சி, ஓவியம் முதலானவற்றை இவ்வுலா அடிப்படையில் அமைக்க வேண்டும்.
 பெரும் முயற்சிகளின் அடிப்படையில்தான் பாடத்திட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழியச்சிந்தனை இல்லா ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கியமையாலும் இந்தியத் திட்டத்தை அடியொற்றி உருவாக்கப்பட்டுள்ளமையாலும் தவறுகள் நேர்ந்துள்ளன. 1947 இல் இந்தியா விடுதலை ஏற்பட்ட பொழுது இம்மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். அப்பொழுது தவற விட்ட நாம், 1967 இலிலாவது இவ்வாறு நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்.  அப்பொழுது தமிழியச் சிந்தனையாளர்கள் ஆட்சியில் அமர்ந்தாலும் ஆரியச் சிந்தனையாள அதிகாரிகளே தொடர்ந்தமையால் கல்விப்புரட்சி ஏற்படவில்லை. இப்பொழுது நல்வாய்ப்பு கிட்டியுள்ளது. எனவே, மண்மணம் கமழும் கல்வித்திட்டத்தை உருவாக்குமாறு துறைஅதிகாரிகளையும் அரசையும் வேண்டுகிறோம்.
 பணித்தேர்வுகளுக்கேற்ற வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்ட பின்னர், அரசு பணித்தேர்வுகளுக்கான  தேர்வுகளைத் தடை செய்ய வேண்டும். தமிழ்நாட்டுப்பாடத்திட்டத்தில் இடம் பெறும் பாடங்கள் இந்திய அளவிலான பிற பாடத்திட்டங்களில் இடம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 “தமிழ் நாட்டில் தேசியக் கல்வி யென்பதாக ஒன்று தொடங்கி அதில் தமிழ் மொழியை முதன்மையாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி  ஆங்கிலம் மூலமாகவும் தமிழ் ஒருவிதத் துணை மொழியாகவும் ஏற்படுத்தினால், அது ‘தேசியம்’ என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை.” என்றார் பாரதியார். அவர் மறைந்து 100 ஆண்டை எட்ட உள்ள இக்காலத்திலும் அக்கனவு நனவாக்கப்படாமல் எத்தகைய புதிய  கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தியும் பயனில்லை என்பதை அரசு உணர வேண்டும். இல்லையேல்  அவ்வாறு உணருவோர் அரசுக்கட்டிலில் அமர்வார்கள்!
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு 
மாடல்ல மற்றை யவை. (
திருவள்ளுவர், திருக்குறள் 400)
 தாய்மொழிவழி-தமிழ்மொழிவழிக்கல்வியே நமக்குக் கேடற்ற செல்வம் என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். அத்தகைய செல்வத்தை நாம் பெற அரசு துணை நிற்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை :அகரமுதல 215, கார்த்திகை 17- கார்த்திகை 23,  2048 /   திசம்பர் 03  – திசம்பர் 09,  2017

Friday, December 1, 2017

இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்


இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 3/3

ஆளுமை நெறி :
  தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழர்க்கும் தலைமை இல்லாச்  சூழலே நாம் அடையும் அனைத்து இன்னல்களுக்கும் காரணமாக அமைகின்றது. தமிழர்க்கு எதிரான  துயரங்களைக்  களைய முடிவெடுக்க வேண்டியவர்கள் பிற மொழியாளர்களாகவே உள்ளனர். தமிழ்ப்பகுதிகளைத் தமிழ் நிலத்துடன் சேர்ப்பது, சிங்களவர்கள் மீனவர்களுக்கு எதிரான படுகொலைகள், ஈழத்தில் உருவாக்கப்பட்ட பேரின அழிவு முதலானவற்றில்  தலைமைப் பொறுப்புகளில் உள்ள பிறர், அவரவர் மொழியினருக்கும் இனத்தினருக்கும் சார்பாகவும் நமக்கு எதிராகவும் நடப்பதே  நடைமுறை. எனவே, தமிழர் தலைமை பெற வேண்டும் என்றும்  அதற்குத் தமிழ் தலைமை பெற வேண்டும் என்றும் பேராசிரியர் இலக்குவனார்  வலியுறுத்துகிறார். சிலர் ஆங்கிலத் தலைமையை மாற்றி இந்தித் தலைமையைச் சுமத்த முயன்று வருகின்றனர். எந்தத் தலைமையும் நமக்கு வேண்டா. நமக்கு நாமே தலைவராக இருப்போம். தமிழ்நாட்டில் தமிழுக்கே தலைமை வேண்டும். தமிழ் தலைமை பெறும் வரை தமிழர் தலைமை பெறுதல் இல்லை. பழைய வடமொழிக்கடிபணியாது வாழ்ந்த தென்மொழி புதியதொரு இந்தியெனும வட மொழிக்குத் தலை குனிந்து வாழ்ந்திடுமோ? ஒரு நாளும் இல்லை  எனப் பேராசிரியர் இலக்குவனார் காட்டிய  ஆளுமை நெறியை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றினால் தமிழர் முழு  உரிமையுடன் என்றென்றும் வாழ இயலும்.
கட்சி நெறி :
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் இல்லாமல் இருப்பதே சிறந்த நாடு என்கின்றார்  தெய்வப்புலவர் திருவள்ளுவர்.  பேராசிரியரும் இங்கிலாந்துபோன்ற சில கட்சி ஆட்சிமுறைதான் நாட்டிற்குத் தேவை என்கின்றார். பல கட்சிகள் உள்ளமை மக்களாட்சிக்குத் துணை புரியாது என்பதே பேராசிரியர் இலக்குவனார் கூறும் தேர்தல் நெறியாகும். பல்குழுவும் என்பதில் சாதிகள் பெயரால் உருவாகும் கட்சிகளும் அடங்கும். சாதிகளின் பெயரால் கட்சிகளை உருவாக்கித் தேர்தல்களில் போட்டியிட முனைவது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகும் எனச் சாதிக்கட்சிகளைத் தடுத்திட வேண்டும் என்பதே அவரது கட்சி  நெறியாகும்.
பரப்பு நெறி:
தமிழ்க்காப்புக்கழகம் மூலம் தமிழ்க்காப்புப் பணிகளைச் சிறப்பாக ஆற்றியவர் பேராசிரியர் இலக்குவனார். தமிழ் பரப்புக்கழகம் நிறுவி உயர்தனிச்  செம்மொழியாம் தமிழ் மொழியின்சிறப்பை உலகெங்கும் பரப்ப வேண்டும் என்பது பேராசிரியர் இலக்குவனார்  திட்டமாக இருந்தது. ஆனால், இப்பணிகளைத் தொடங்கி முடிக்கும்முன்னரே அவரை நாம இழந்து விட்டோம். என்றாலும் அவர் அறிவுறுத்திய வழியில் தமிழ்பரப்புக்கழகம்நிறுவித் தமிழின் சிறப்பை உலக மக்களுக்கு உணர்த்த வேண்டும். தமிழ்க்காப்பு என்பது  கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. அனைத்துக் கட்சிகட்கும் உரியது என்று பேராசிரியர் இலக்குவனார் அறிவுறுத்தியதை அனைத்துக் கட்சியினரும் ஏற்று அன்னைத் தமிழைக் காப்பதை அவரவர் கடமையாகக் கொள்ள வேண்டும். இந்திய மொழிகளின் தாயே தமிழ்தான் என்றும் திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தியது என்றும் பேராசிரியர் இலக்குவனார் கூறியதை நினைவில் கொண்டு பரப்புரை மேற்கொண்டால், இந்தியம் என்றும் திராவிடம் என்றும் தமிழ்  அழுத்தப்படுவதைத் தடுத்துத் தமிழைக் காத்திடுவோம். தமிழ்மொழி இந்நாட்டின் முதல்மொழி; அடிப்படை அமைப்பைத் தந்துள்ள மொழி. ஆரியம் வருமுன் வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாது உருகெழு குமரியின் தெற்கும் உட்பட்ட நிலப்பரப்பில் வழங்கிய தொன்மொழி  என்று ஆய்ந்துரைத்தவர் பேராசிரியர் இலக்குவனார். உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே என்பதும், முதல் மாந்தரால் உரையாடப்பெற்ற மொழி தமிழே  என்றும் பேராசிரியர் இலக்குவனார்  அறிஞர்கள் உரைகள் கொண்டு மெய்ப்பித்ததை நாம்  பாரெங்கும் பரப்ப வேண்டும். அப்பொழுதுதான் தமிழின் சிறப்பைப் பிறர் மட்டுமல்ல, நம்மவரே உணர்வர்.
குமுகாய நெறி:
சாதிகளற்ற வாழ்வே சமஉரிமை தரும் நல வாழ்வு என்பது பேராசிரியர் இலக்குவனார் வலியுறுத்தும் குமுகாய நெறியாகும். சாதிகள் தமிழ்நாட்டுக்குப் புதியனவே. சாதி என்ற சொல்லே தமிழன்று. இதுவே, சாதி தமிழ் நாட்டில் தமிழரல்லாதவர்களால் புகுத்தப்பட்டது என்பதைத் தெற்றென்று அறிவிக்கும் என்றும் அவரவர் தம் பெயர்கட்குப் பின்னால் சாதிப் பட்டங்களைச் சேர்த்துக் கொள்ளுதலைத் தாமாகவே நீக்கிக் கொள்ளல் வேண்டும் என்றும் ஒரே சாதிக்குள் திருமணம் செய்யக்கூடாது என்று தடைச்சட்டம் கொண்டுவருதல் வேண்டும் என்றும் பிறப்பு(சாதி) வேறுபாடுகள் நிலைத்திருக்கும்வரை மக்களாட்சி வெற்றி பெறுதல் இயலாது என்றும் பேராசிரியர் இலக்குவனார் காட்டும் சாதிகளற்ற குமுகாய நெறியே பிறப்பு வேறுபாடுகளற்ற உண்மையான மக்களாட்சி நிலைக்க  வழிவகுக்கும்.

குறிக்கோள் நெறி :
நாம்ஒவ்வொருவரும் மேற்கொகாள்ள வேண்டிய குறிக்கோளுக்கான இலக்கினையும் பேராசிரியர் இலக்குவனார் வரையறுத்துள்ளார். தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை!  தமிழில்தான் எல்லாம்! என்ற நிலையை விரைவில் உண்டாக்கவும், தமிழர் பங்குபெற உரிமையுள்ள இடங்களில் எல்லாம் தமிழும் இடம் பெறவும், காலத்துக்கேற்ப, மரபு கெடாது, தமிழை எல்லா வகையாலும் வளப்படுத்தவும் ஒல்லும் வகையால் அயராது உழைப்பதே  நம் குறிக்கோள் எனக் கொண்டு நாம்  செயல்பட்டால் உரிமை வாழ்வினை வாழலாம்.
தமிழும்தமிழ்நாடும் ஏற்றம் பெற்று உலகில்  தமிழர் சிறந்து  திகழவும் வாழுமிடங்களில் எல்லாம் பிறருக்குச் சமமான உரிமையைப் பெற்று மகிழவும் இலக்குவ நெறியே சிறந்த வழிகாட்டு நெறியாகும். தமிழ்த்தேசியவாணர்களும் மக்களாட்சி ஆர்வலர்களும்  இலக்குவ நெறியைப் பின்பற்றிப் பிறரையும்  பின்பற்றச் செய்வார்களாக!
இலக்குவ நெறியைப்பின்பற்றி உரிமை வாழ்வை எய்துவோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின்  முப்பத்தொன்பதாம் நினைவு நாளில்  வெளியானது. நட்பு :  03/09/2012 )
(பேராசிரியர் இலக்குவனார் நடத்திய இதழ்களில் இருந்தும் படைத்த நூல்களில் இருந்தும் மேற்கோள்கள் எடுக்கப்பட்டுள்ளன.)

Tuesday, November 28, 2017

ஆர்வர்டு தமிழ்ப்பீடம் தேவைதானா? – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்! – இலக்குவனார் திருவள்ளுவன்



ஆர்வர்டு தமிழ்ப்பீடம் தேவைதானா? – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்! 
  ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைக்க உள்ள தமிழ்ப்பீடத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கி.பழனிச்சாமி, தமிழக அரசு சார்பில் பத்துகோடி உரூபாய் நன்கொடை அளித்துள்ளார். எனவே நாமும் அவரைப் பாராட்டி நன்றி கூறுகிறோம். மக்கள் அவரை எளிதில் சந்திக்க முடியும் வகையில்  காட்சிக்கு எளியராக அவர் உள்ளமையே நன்கொடை வேண்டுகோள் உடனே பயனித்துள்ளது எனலாம்.
  இசையமைப்பாளர் அ.இர.(ஏ.ஆர்.) இரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் பெற்ற நிதியில்  இருந்து கனடா நிறுவனம் ஒன்று 25000 அமெரிக்கத் தாலர் நன்கொடை அளித்துள்ளது.
    தமிழ்த் திரைப்பட  உருவாக்குநர் சங்கத் தலைவராகவும், நடிகர் சங்கப் பொதுச் செயலராகவும் உள்ள நடிகர் விசால் தன் சொந்தப்பணத்திலிருந்து உரூபாய் பத்து நூறாயிரம் நன்கொடை அளித்துள்ளார்.  தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளித் தமிழாசிரியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் உள்ள   ஆர்வமுள்ள தமிழர்களும் தமிழ் அமைப்பினரும் நன்கொடை யளித்து வருகின்றனர். இன்னும் நன்கொடைதருவோர் உள்ளனர். அனைவருக்கும் பாராட்டு.
  தமிழ்ப்பீடம் அமைப்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் உள்ளமையும்  மாண்புமிகு முதல்வர் கவனத்திற்கு வந்திருக்கலாம். எனினும் நாம்   அவற்றையும் சுட்டிக்காட்டிப் பாரெங்கும்  பைந்தமிழ் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
 தனக்கு ஒதுக்கப்பட்ட துறையில் கருத்துடன் செயல்பட்டுத் தமிழ்வளர்ச்சியில் நாளும் கருத்து செலுத்தி வரும் அமைச்சர் மாஃபா.பாண்டியராசனும் நன்கொடைக்குக் காரணமாவார். எனவே, இவரும் தமிழ்ப்பீடம் பற்றிய மாறுபட்ட கருத்துகளை அறிந்து அனைவரும் ஏற்கும் வண்ணம் ஆர்வர்டு தமிழ்ப்பீடம் செயல்பட வழி  வகுக்க வேண்டும்.
 சமற்கிருதத்திற்கு இப்படிப் பிச்சை எடுத்ததுத்தான்  மொழிப்பீடம் தொடங்கினார்களா என்பது சிலர் வினா. என்றி வேர்  வேல்சு(Henry Ware Wales)  என்பவர்  ஏப்பிரல் 24, 1849 இல்  எழுதிய  இறுதி முறியில்(உயில்) பேராசிரியப்பணியிடம்  அமைக்க நிதிக்கட்டளை ஒன்று  அமைக்கப்பட்டது. இதன்படி,  ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில்  சனவரி 26, 1903 இல்  சமக்கிருதப் பீடம் உருவாக்கப்பட்டது. அப்படியாரும் தமிழுக்குத் தனிக்  கொடையாளர்கள் அமையவில்லையே! எனவே, கூட்டுமுயற்சி தேவைப்படுகிறது.
  பயிற்றுவிப்பு மூலமும் படைப்புகள் மூலமும் தமிழ் பரப்பி வரும் கணிணித்தமிழின் முன்னோடிகளில் ஒருவரான அமெரிக்கா வாழ் பேரா.முனைவர் இராசம் அம்மையார், மணற்கேணி ஆசிரியரும் அரசியலாளருமான  து.இரவிக்குமார் முதலான பலர் தமிழ்ப்பீடத்திற்கு எதிரான வலுவான கருத்துகளைச் சொல்லி வருகின்றனர். பேரா.முனைவர் செ.இரா.செல்வகுமார் முதலானவர்கள் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பீடம் தேவை என்பதை வலியுறுத்தி வருகிறார்கள். அமைப்புப்பணியைத் தொடங்கிவிட்டார்கள். தமிழ்ப்பீடமும் தொடங்கட்டும் என்ற நிலையில் சிலர்  உள்ளனர்.
 சங்க இலக்கியங்களையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள அறிஞர் வைதேகி எர்பர்ட்டு தமிழ்ப்பீடத் தோற்றுவாய்க்கு முதன்மையாளர்களில் ஒருவராக உள்ளார். அவரெல்லாம் இதன் பொறுப்பிற்கு வந்தால் நல்லதுதான். ஆனால், அந்நாட்டவரைத்தான் பணியமர்த்துவார்கள் என்கின்றனர்.
 வெளிநாட்டில் அமைந்துள்ள  பல்கலைக்கழகங்களின் தமிழ்ப்பீடங்களில் தமிழர் பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஒரு வேளை கிடைத்தாலும் வெள்ளையருக்கு  ஊதியம் மிகுதி. தமிழர்க்கு மிகவும் குறைவு என்பதை இராசம் அம்மையார் அடிக்கடிக் கூறிவருகிறார்கள்.
  என்றாலும் ஆர்வர்டு தமிழிருக்கையினால் தமிழக மக்களுக்கு என்ன நன்மை அல்லது தமிழகத்து மக்களிடம் நன்கொடை பெறவேண்டும் என்றெல்லாம்  வினா தொடுத்தால்,  எந்த நாட்டிலும் தமிழ்க்கல்வி தொடங்க இயலாது. ஆனால், அதே  நேரம் தொடங்கப்பட்ட தமிழ்த்துறைகளை மூடிவிட்டுப் புதியதாகத் தொடங்குவதால் என்ன பயன்? இதுவும் சில ஆண்டுகளில் மூடப்படலாமே என அஞ்சவதில் உண்மை யில்லாம லில்லை.
  ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பீடம் அமைந்தால் உலகில் தமிழின்மதிப்பு கூடும்! உலகெங்கும் தமிழ் பரவும்! என்பது  போன்ற ஆரவார உரைகள்தாம் இதற்கு எதிரான உரைகளை முன்வைக்கத் தூண்டுகோலாக அமைகின்றன. ஏனெனில், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இப்பொழுதும் தொடக்கநிலைஇடைநிலை, உயர்நிலை என 3 நிலைகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. அதனால் என்ன மாற்றம் ஏற்பட்டது? அவ்வாறிருக்கப் புதியதாகத் தமிழைக் கற்பிக்க இருப்பதுபோல் மக்களை ஏமாற்றலாமா?
   தமிழ் மட்டுமல்ல! சமற்கிருதம்,  இந்தோனேசிய மொழி, வங்காள மொழி, பருமிய மொழி,  இந்தி-உருது மொழிகள்,  நேபாள மொழி,   தாய்லாந்து மொழி, திபேத்திய மொழி ஆகியனவும் கற்பிக்கப்படுகின்றன.
   ஆர்வர்டு பல்கலைக்கழகம் தமிழைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது 2000 ஆண்டு தொன்மை எனக் குறிக்கிறது. தமிழுக்குப் பிற்பட்ட சமற்கிருதத்தை  ஏறத்தாழ 3000 ஆண்டுத் தொன்மைவாய்ந்ததாகக் குறித்துள்ளது. அது மட்டுமல்ல. ஆரியர்கள் தங்களை உயர்த்திக் கொண்டு பிறரைத் தாழ்த்துவதற்காகத் தங்கள் மொழியைத்  தேவபாடை என்றனர்.  இதை ஆர்வர்டு பல்கலைக்கழகத்தளம், செழுமைவாய்ந்த  இந்தமொழியின் அழகிற்காகக் கடவுளர் மொழி என அழைக்கப்படுவதாகக் குறிக்கிறது.
 அதுமட்டுமல்ல, தெற்காசியாவின் நுண்மாண் நுழைபுலம் மிக்கவராக  இருக்க வேண்டுமென்றால், சமற்கிருதத்தில் புலமை மிக்கவராக இருக்க  வேண்டுமாம். மேலும், தெற்கு ஆசியாவின்  செழுமையையும் மேம்பட்ட நிலையையும் அறிய சமற்கிருதக் கல்வி முற்றிலும் வேண்டற்பாலதாம்.
 தமிழ்ப்பீடம் அமைக்கச் செயலாற்றுவோர் ஆர்வர்டு பல்கலைக்ககழகத் தளத்தில் தமிழின் சிறப்பைப் பதிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
  உலகில் ஏறத்தாழ 15 பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை தொடங்கப்பெற்று ஏறத்தாழ 3 பல்கலைக்கழகங்களில் மட்டுமே இப்பொழுது  செயல்பாடுகள் உள்ளன.
 தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா காலத்தில்  சென்னை, மதுரை, அண்ணாமலைப்பல்கலைக்கழகங்களில் திருக்குறள் பீடம்(இருக்கை) தொடங்கப்பெற்றன.  அண்ணாமலையில் எப்பொழுதோ மூடுவிழா நடத்தப்பட்டு விட்டது. இதனை உயிர்ப்பிக்காமல்  செம்மொழி நிறுவனம் உரூபாய் ஒருகோடி அளித்து மற்றொரு திருக்குறள் பீடத்தை(இருக்கையை) அமைத்துள்ளது. மதுரையில் போதிய   பொருளுதவி இன்றித் தள்ளாடுகிறது. பிற மாநிலத் தமிழ்த்துறைகளும் போதிய பொருளுதவி இன்றி எதிர்பார்த்த பயனளிக்காமல் உள்ளன.
  பேராசிரியர் பணியிடத்தை உருவாக்கும் தமிழ்ப்பீடத்திற்குச் செலவழிக்கும்  தொகையில் நடைமுறையில் உள்ள தமிழ்வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் கல்வியுதவித் தொகை அளிப்பது சிறப்பாக இருக்கும். மாணவர் எண்ணிக்கைக்கேற்ற பணியிட எண்ணிக்கையையும் உயர்த்துவது நன்று.
  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடக்க ஆண்டில் ஒதுக்கப்பெற்ற 85 கோடி உரூபாயைப் பயன்படுத்தாமல் போனதால் அத் தொகையைப் பெற இயலவில்லை என்கின்றனர். இதனால் தொடர் ஆண்டுகளிலும்  கோர இயலவில்லை. செம்மொழி நிறுவனம் மூலமாக உலக நாடுகளின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் வகுப்புகள் தொடங்கவும் இணைய வழிக்கல்விக்கழகம் மூலமாக இணைய வழித்தமிழ்க்கல்விகளை ஒருங்கிணைக்கவும் தமிழ்ப்பல்கலைக்கழகம் உரிய பாடத்திட்டங்களை வகுக்கவும் ஆவன செய்ய வேண்டியதே இன்றைய தேவையா’கும்.
  பிறநாட்டுத் தமிழ்க்கல்விகளில்  பேச்சுத்தமிழுக்கு முதன்மை தருவது நிறுத்தப்பட்டு  நற்றமிழை நலியச் செய்யும் போக்கிற்கும் முற்றுப்புள்ளி இட வேண்டும்!
  இப்போதைக்கு இருக்கின்ற தமிழ்த்துறைகளைச் செம்மைப்படுத்துவதும்  தமிழ் பரவலாகப் பலநாடுகளிலும் கற்பிக்கப்படவும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்திற்குத் திரட்டிய பொருளைச்  செலவழித்தால்  தமிழ்த்தாய் அகம் மிக மகிழ்வாள்!
 தமிழ்க்கல்வி : முதலில் காலூன்றுவோம்! பிறகு பறப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 211, ஐப்பசி 19-25, 2048 /  நவம்பர் 05  – நவம்பர் 11,  2017

Monday, November 27, 2017

மாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே! ஈழமலர்ச்சிக்காகவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 

மாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே!

ஈழமலர்ச்சிக்காகவே!

   தமிழீழத்தை மனக்கண்களில் கண்டவர்கள்! தங்கள்  நெஞ்சில் சுமந்தவர்கள்! மனக்கண்களில் கண்ட தமிழீழம் உருவாகும்; அங்கே ஈழத்தமிழ் மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் தன்னுரிமையுடனும் தன்மதிப்புடனும் வாழ்வார்கள்; அடிமைத்தளையறுந்து, பட்ட துயரங்கள் மறைந்து, இன்னல்கள் நீங்கி, இன்பவாழ்வு வாழ்வர்; தமிழும் தனக்குரிய இடத்தை நாட்டிலும் உலகத்திலும் பெறும்; என்னும் நம்பிக்கையில், தங்கள் இன்னுயிரை நீத்தவர்கள் மாவீரர்கள்! இவர்களை வணங்குவது நமக்காகத்தான்! ஆம்! நமக்காக மறைந்தவர்களை – புகழால் வாழ்பவர்களை – நாம் வணங்குவது அவர்கள் கனவுகளை நாம் சுமப்பதற்காகஅந்தக்கனவுகளை நிறைவேற்றுவதற்கான எழுச்சி பெறுவதற்காகஎழுச்சி கொண்டு வாகை சூடுவதற்காக!
  ஈழத்தமிழர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் உரிமை  பெற்ற விடுதலை நாட்டில் வாழ்வதுதானே அவர்களுக்கு நலம் பயக்கும்! அப்படி என்றால் மாவீர்ர்களை வணங்கி நாம் உந்துதிறன் பெறுவது நாம் நன்மையடையத்தானே!
  தமிழ்நாட்டுத் தமிழர்கள்இந்தியாவில் பிணைப்புண்டிருந்தாலும் இந்திய அரசுதன்நாட்டு மக்களாகக் கருதுவதில்லை. உலகின் மூத்த மொழியான தமிழ் தன் நாட்டில் உருவாகிப் பேசப்படுவதால் மகிழ்ந்து அதனைப் பரப்ப வேண்டிய கடமையும் தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும் இந்திய அரசிற்கு உள்ளதுஆனால் இவற்றிற்கு எதிராக நடப்பதுதான் இந்திய அரசின் அன்றாடப் பணியாகிறது.
 தமிழைத் தமிழ்நாட்டிலேயே தொலைத்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் தமிழைத் தலைமை யிடத்தில் கொண்டு செல்லத்  தமிழீழ அரசு உறுதுணையாக இருக்கும். பன்னாட்டு அவையில் தமிழ் முழங்கித் தமிழும் தமிழர்களும் தலைநிமிர்ந்து வாழ இயலும்! இந்திய அரசும் தமிழைப் போற்றும், தமிழைரைக் காக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படும்! எனவே, நம்நாட்டுத் தமிழர்களுக்கும் தமிழீழத்தால்தலைநிமிர்ந்து வாழ்வர்!
 வீரவணக்க நாளில் விளக்கேற்றுவதும் நம் உள்ளங்களில் இருக்கும்அடிமை இருளை அகற்றத்தான்உரிமை ஒளியைப் பாய்ச்சத்தான்!
 இனப்படுகொலை முடிந்ததாகக் கூறினாலும் நல்லிணக்கம் என்னும்நயவஞ்சகம் பேசுகின்றனர்; தமிழர் நிலத்தில் சிங்களர்களைக் குடியேறவைத்துத் தமிழ் நிலம் என்று ஒன்று இல்லை என ஆக்குகின்றனர்’ காணாமல்போக வைக்கப்பட்டவர்களும் அடைக்கலம் அடைந்தவர்களும் வஞ்சகமாகப்   பிடிக்கப்பட்டவர்களும் உள்ளரா? இல்லரா? என்று தெரியாமல் உற்றார் உறவினர் கதறிக் கொண்டுள்ளனர்’ கட்டாயக் கருத்தடை,கற்பழிப்பு போன்ற கயமைத்தனங்களால்தமிழினம் அழிக்கப்படுகின்றது. முன்பு எரிகுண்டுகளாலும் வேதியல் குண்டுகளாலும் கொல்லப்பட்ட தமிழர்கள் இப்பொழுது மருந்து என்ற  போர்வையில் நஞ்சூட்டிக் கொல்லப்படுகின்றனர். வெளிப்படையாகத்தெரியாவண்ணம் ஈழ மண்ணில் தமிழர் அழிப்புநடந்துகொண்டுதான் உள்ளது. தண்டிக்கப் பெறாமையால் இனப்படுகொலையாளிகள் உற்சாகமாகத் தங்கள் அழப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சொல்லொணாத் துயரங்களில் மடிந்து வரும் ஈழத்தமிழர்களுக்குப் பன்னாட்டு அமைப்புகள் உரிய முறைகளில் உதவுவதில்லை. மனித  நேயர் குரல்களும் புலம் பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டங்களும் தாய்மண்ணில் நிகழும் போராட்டங்களும்வாழ்வதற்கான விதைகளை விதைத்தாலும் வாழும்முறைஅமையாமல் நாளும் அல்லறுகின்றனர் ஈழத்தமிழர்கள்.
  இவற்றைத் தாங்கிக் கொள்வதற்கும் போக்குவதற்கும் உரிமையைக் காப்பதற்கும் விடுதலை காண மாவீர்ர்கள் பற்றிய  நினைவுகள், எண்ணங்கள், நிகழ்வுகள் உறுதுணையாய் நிற்கும்!
  இந்த வகையில் மாவீரர் வணக்க நாள் என்பது மாவீரர்களை வணங்கி நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்காகவே! நம்மை இலக்கு நோக்கி இட்டுச் செல்வதற்காகவே! மாவீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்காகவே!
 மாவீரர்கள், துயிலுமிடங்களில் மட்டும் உறையவில்லை. அவர்கள் உறைவிடங்களில் மட்டும் உறைந்திருக்கவில்லை! நம் உள்ளங்களிலும் உறைந்துள்ளனர்.
 இன நலனுக்காக, நாட்டு நலனுக்காகத் தத்தம் குடும்பப்பற்றினையும் வாழ்க்கைப்பற்றினையும் மட்டுமல்லாமல் உயிர்ப்பற்றையும் துறந்த மாவீரர்கள் பெருமையை,  இதுவரை பிறந்து இறந்தவர்களை எண்ணமுடியாததுபோல், அளவிட்டுச் சொல்லத்தான் இயலுமோ?
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
 (திருவள்ளுவர், திருக்குறள் 22)
 பெருமைக்குரிய மாவீரர்களை நாளும் வணங்கி அவர்கள் உயிர் நீத்ததற்குக் காரணமான கனவுகளை நனவாக்குவோம்!
  உரிமை பெற்ற உலக நாடுகள் வரிசையில் தமிழ் ஈழம் இடம் பெறச் செய்வோம்!
வாழ்க மாவீரர் புகழ்!
வெல்க மாவீரர் கனவுகள்!
மலர்க தமிழ் ஈழம்!
பறக்கட்டும் தமிழ்க்கொடி பாரெங்கும்!
  • அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை –  அகரமுதல 214, கார்த்திகை 10- கார்த்திகை 16,  2048 /  நவம்பர் 26  – திசம்பர் 02,  2017

போற்றுதலுக்குரிய ஞாலத்தலைவர் பிரபாகரன் என்றென்றும் வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

போற்றுதலுக்குரிய ஞாலத்தலைவர் பிரபாகரன்

என்றென்றும் வாழியவே!

  தமிழ்நாடான இலங்கை, ஒற்றை நாடாகவே மலர்ந்து தமிழினமும் இனஉரிமையும்  இணைஉரிமையும்  பெற்றுத் திகழும் என்னும் கனவு சிங்களர்களால் அழிக்கப்படத் தொடங்கிய நாளிலிருந்தே தமிழர்நாடு மலர  வேண்டிய தேவையை இலங்கைத்தமிழர்கள் உணர்ந்தனர். அடக்குமுறைகளும் ஒடுக்கு முறைகளும் அவற்றிற்கு எதிரான தொடர்  போராட்டங்களும் வாழ்க்கையாய் மாறின. விடுதலை விதைகள் பலரது உள்ளங்களிலும் ஊன்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே “தமிழீழம் தமிழர்களின் தாயகம்“ என்னும்  மந்திர உண்மை ஈழத்தமிழர்களை வழிநடத்தியது.
 மூத்ததலைவர்கள் வழியில் போராட்டக் களத்தில் ஈடுபட்டாலும் தேவை உணர்ந்து விடுதலைப்படை அமைத்து மக்களை வழிநடத்திச் சென்ற ஆசானும் தலைவனும் மேதகு பிரபாகரன் ஒருவரே!
 எல்லா நாட்டிலும் ஆட்சியாளர்கள் ஏற்கெனவே இருந்த படையைக்கொண்டு விரித்தும் பெருக்கியும்  போர்களைச் சந்தித்தனர் நாட்டைக் காத்தனர். ஆனால் தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் இன்மையிலிருந்து வன்மையை உருவாக்கியவர். இன மக்கள் நன்மைக்காக – நாட்டு விடுதலைக்காக – இடர்களைத் தாங்கிக்கொள்ளும் வலிமையும் எதனையும் எதிர்நோக்கும் துணிவும் உடைய புறநானூற்றுப் புலிகளைக் கொண்டு புதுப்படை அமைத்து நாடுகாக்கும் நற்பணியில் ஈடுபட்ட இனக்காவலர்.
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை. (திருவள்ளுவர், திருக்குறள் 765)
என்னும் இலக்கணத்தின்படி எமனே எதிர்த்துவந்தாலும் ஒன்று திரண்டு எதிர்க்கும் ஆற்றல் உடைய படையை உருவாக்கித் தலைமை தாங்கிய தகைமையாளர்.
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது. (திருவள்ளுவர், திருக்குறள் 762)
போரில் அழிவு வந்து வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமையைத் தொன்று தொட்டு உடைய  பெரும் படையை உருவாக்கி எதிரிகளை நடுங்க வைத்த நற்றமிழர் தளபதி.
  இதுபோல் ஒரு படை முன்னரும் இல்லை, பின்னரும் அமையாதுஎன்று சொல்லும் வகையில் மறம், மானம், அறிவு, திறமை, ஆற்றல், ஈகை உடைய இருபால் இளைஞர்களைக் கொண்டு விடுதலைப்புலிப் படையை, நிலம், நீர், வானம் என முப்பரப்பிலும் ஆட்சி செய்யும் தரைப்புலிகள், பெண்புலிகள், ஈருடகப்படையணி, கரும்புலிகள், சிறப்புப்படையணிகள், உளவுப்புலிகள்,  பொறியியல் அணி எனப் பலவகையாகப் பகுத்து அமைத்துத் திறம்பட ஆட்சி செய்த அடலேறு! எந்த நாட்டு விடுதலைப்போரிலும் இதுவரை இல்லாத அளவிற்கு முப்பெரும் படைகளைப் பல்வேறு பகுப்பாக அமைத்துக் களம்கண்டவர் இவர்போல் யாருமிலர் என்னும் பெருமைக்குரியவர்.
 ஆட்சித்துறை, வருவாய்த்துறை, நீதித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை,   எனப் பலவகையிலும் நாட்டாட்சியையும் திறம்பட நடத்திய மக்களாட்சித்தலைவரும் பிரபாகரன்தான்!
 இன மொழி நாட்டு விடுதலைக்கான பிரபாகரன் கனவு தோற்கவில்லை! இவர் கனவுமட்டுமல்ல! ஈழத்தமிழர்கள் கனவும்  தடங்கல்பட்டு நிற்கலாம்! இவர்கள்  கனவு நனவாகும் காலம் தள்ளிப் போயுள்ளது. அவ்வளவுதான்!
 பீடு மிக்க மேதகு பிரபாகரன்  பெருமங்கலத்தில் அவரை வாழ்த்துவதில் அகம் மகிழ்கிறோம்! தமிழ் ஈழத்தலைவராக மட்டுமல்லாமல் தமிழ்ஞாலத் தலைவராகவும் திகழும் மேதகு பிரபாகரன் நூறாண்டு கடந்தும் வாழ்க!
 அன்பு நீ!
ஆற்றல் நீ!
இனிமை நீ!
ஈகை நீ!
உழைப்பு நீ!
ஊக்கம் நீ!
எழுச்சி நீ!
ஏற்றம் நீ!
ஐயன் நீ!
என அனைவராலும் பாராட்டப்படும் மேதகு பிரபாகரன்  என்றென்றும் வாழியவே!
எல்லார் உள்ளங்களிலும் ஆட்சி செய்யும் மேதகு பிரபாகரன்
ஈழஆட்சித்தலைவராக மலரும் நாள் விரைவில் மலர்கவே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive