Saturday, May 7, 2011

andre' sonnaargal 56-buildings 18 (ice-pot and hot-pot) : அன்றே சொன்னார்கள் 56 - கட்டடங்கள் 18

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 18

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : May 7, 2011


பழந்தமிழகத்தின் கட்டடக்கலை குறித்த பல்வகை இலக்கியக் குறிப்புகளையும் நெடுநல்வாடை என்னும் இலக்கியம் ஒன்றிலேயே மிகுதியான குறிப்புகள் உள்ளமையையும் கண்டோம். நெடுநல்வாடையிலேயே மேலும் பல குறிப்புகள் உள்ளன. மலைகளைப் போன்று அகலமும் உயரமும் உடைய கட்டடம் என்பதை
வரைகண்டன்ன தோன்றல் (நெடுநல்வாடை 108) என்கிறார் ஆசிரியர் நக்கீரர்.
வானளாவிய கட்டடங்களில் வானுலகைத் தீண்டும் வண்ணம் மிக உயர்வாக அமைந்த மேல்நிலை மாடம் குறித்து
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் (நெடுநல்வாடை : 60) என்கிறார் ஆசிரியர் நக்கீரர்.
மழைமானி முதலான பல அறிவியல் செய்திகளும் இவற்றில் இடையிடையே கலந்து காணப்படுவதையும் கண்டோம். ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஏற்றவகையில் கட்டடங்களை அமைத்த அறிவியல் செய்திகளும் உள்ளன. இளவேனில் காலத்தில் உறங்குவதற்கு ஏற்ற படுக்கையறையில் தென்றல் காற்று வீசுவதை
வேனில் பள்ளி தென் வளி தரூஉம்
நேர் வாய் கட்டளை திரியாது (நெடுநல்வாடை 61-2) என்கிறார் ஆசிரியர் நக்கீரனார்.
கட்டளை என்பது பலகணி அல்லது காற்றுமாடத்தைக் குறிக்கிறது.
குளிர்ந்த நீரைச் சேமித்து வைத்துக் குடிப்பதற்கான குளிர்கலனும் (ice-pot) குளிர்காலத்தில் பருத்த வாயை உடைய வெண்ணீர்க்கலனும் (hot-pot)பயன்படுத்தப்பட்டமையை
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார்
பகு வாய் தடவில் செந் நெருப்பு ஆர – (நெடுநல்வாடை 64 – 66)
என்னும் வரிகளில் தெரிவிக்கிறார்.

கல்லென்கின்ற ஓசையினையுடைய சிறுதுவலையை வாடைக்காற்று எங்கும் பரப்பு கையினாலே இளையோரும் முதியோரும் குவிந்தவாயையுடைய செம்பாகிய குளிர்க்கன்னலில்  தண்ணீரைக் குடிக்காமல் பகுத்தாற்போன்ற வாயையுடைய தூபக்கரண்டியாகிய இந்தளத்தில் இடும் சிவந்த நெருப்பின் வெம்மையைப் போன்ற வெந்நீரைப் பருகினர்  என்பதை இவ் வரிகள் உணர்த்துகின்றன.

படுக்கை முதலான மனைப்பொருள்கள், கட்டில் முதலான இல்லணிகள் (furnitures) ஆகியன குறித்தும் குறிப்புகள் உள்ளன. அரண் அமைப்பு மதிலமைப்பு முதலானவை குறித்தும் பல்வகைக் குறிப்புகள் உள்ளன. இவை குறித்துப் பின்னர்க் காணலாம்.
இலக்கியங்களிலேயே நம்மால் எண்ணற்ற குறிப்புகளைக் காணமுடியும் பொழுது உரிய துறைநூல்களில் மிகுதியான அறிவியல் உண்மைகள் தெரிவிக்கப்பட்டிருக்கும் அல்லவா? இத்தகைய உண்மைகளை மேனாட்டு அறிஞர்கள் மேற்கொள்ளும் பல்வகைப்பட்ட ஆய்வு முடிவுகளும் நமக்கு உணர்த்துகின்றன. 1950களில் சோவியத்து நாட்டினர் குமரிக்கடலில் ஆழ்கடல் ஆராய்ச்சி மேற்கொண்டு கடலுள் முழ்கிய தமிழர் நாகரிகம், பண்பாடு முதலியவற்றில் அடைந்திருந்த சிறப்புகளை வெளிப்படுத்த முன்வந்தனர். மத்திய அரசு மறுத்து விட்டது.  பண்டைத்தமிழர்களின் சிறப்புகளை வெளிப்படுத்திய ஆராய்ச்சி அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவரான,  எடின்பரோவைச் சேர்ந்த   கிரகாம் என்காக்கு (Graham Hancock) என்னும்  தொல்லியல் ஆராய்ச்சியாளர், தம் சொந்தச் செலவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இப்போதைய பூம்புகார் நகரின் அருகிலேயே கடலில் 18 கல் ஆழத்தில் பழைய பூம்புகார் நகரம் புதையுண்டு உள்ளமை அறிய வருவதாகவும் சிதையாத கட்டடங்கள் கடலின்அடியில் உள்ளன என்றும் கி.மு.17,000 ஆண்டிற்கு முற்பட்ட தொன்மைச் சிறப்பு உடையன என்றும் வெளியிட்டார். தமிழர்க்கு நலன் சேர்க்கும் எந்த வரலாற்று உண்மையையும் மறைக்க எண்ணும் மத்திய அரசு அவரது உதவியை உதறியதாலும்  மேற்கொண்டு ஆராய்ந்து உண்மைகளை உலகிற்கு உணர்த்த  விரும்பாமையாலும்  நாம் அடைந்திருந்த எண்ணற்ற அறிவியல் சிறப்புகள் மறைந்தே கிடக்கின்றன. தமிழ்நாட்டரசாவது தமிழர்நல அரசாக மாறி ஆழ்கடல் ஆராய்ச்சிகளையும் அகழ்வாராய்ச்சிகளையும் தொடர்ந்து உண்மைகளை வெளிக்கொணர முன்வரவேண்டும்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive