dravidathai_vendriduvoam01


திராவிடத்தை வென்றிடுவோம் எனச் சொல்வது ஆரியக் குரலா என எண்ணத் தோன்றுகிறதா? ஆரிய மாயையில் இருந்து மட்டுமல்லாமல் திராவிட மாயையில் இருந்தும் விடுபட வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.
தமிழின் தொன்மையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அறிஞர் வேங்கடகிருட்டிணன், தமிழ் மொழி இயற்கையான மொழி என்பதால் நம் பூவுலகு போல வெளியுலகு இருப்பின் அங்கும் தமிழ் மொழியே இருக்க முடியும் என்று நாம் அழுத்தமாகக் கூறலாம். அறிவியல் இந்தக் கூற்றை வலியுறுத்தும் நாள் விரைவில் வரும்.(தமிழே முதன் மொழி. பக்.389) எனக் கூறுகிறார். மக்களினம் வாழும் எத்தனை உலகம் இருந்தாலும் அத்தனை உலகிலும் வழங்கும் தொன்மையான தமிழ் மொழிதான் அயலவர் நாவில் திராவிடமாக மாறியது. திராவிடமாக மாறியபின் தமிழ் தனக்குரிய இடத்தை இழக்கத் தொடங்கியது. அதனால் இல்லாத திராவிடத்தின் மகளாகத் தமிழைக் கூறுவோரும் உருவாகிப் பெருகினர். அதனினும் கொடுமையாக உலகின் மூத்த மொழியான தமிழை அதன் சேய் மொழிகளே தாயாக ஏற்றுக் கொள்ளதாததுடன் தத்தம் மொழிக்குத் தாயுரிமை கொண்டாடி வருகின்றனர். திராவிட இயக்கப் பரப்புரைகள்கூட தமிழ்நாட்டில் தமிழரல்லாதவரின் செல்வாக்கை வளர்க்க உதவியதே தவிர, தமிழ்க் குடும்ப மொழிகள் வழங்கும் நாடுகளில் தமிழின் தாய்மையை நிலைநிறுத்த உதவவில்லை. தமிழ்நாட்டளவில் சுருண்டுக்கிடக்கும் திராவிடத்தைத் தமிழகத் தலைவர்கள்தாம் தாங்கிப் பிடிக்கின்றனர். எனவே, திராவிடம் பற்றிய ஆன்றோர் கருத்துகளில் சிலவற்றையாவது நாம் அறிய வேண்டும்.
திராவிடமென்பது தமிழுக்குப் பிறிதொரு பெயராக விளங்குகின்றது. தமிழ் “ழகர’த்தை உச்சரிக்க அறியாத ஆசிரியர் தமிழர் என்னுஞ் சொல்லைத் திராவிடம் என வழங்கினர். “நகைச்சுவைக்குப் பொருளாவன ஆரியர் கூறுந்தமிழும்.. .போல்வன’ என்னும் பேராசிரியர் உரை. ஆரியர் திருத்த முத்தமிழ் பேச அறியார் எனப் புலப்படுத்துகின்றது எனக் கூறித் திராவிடம் என்பதும் தமிழையே குறிக்கும் என்கிறார் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை (தமிழகம்)
.
   திராவிடம் பிற்காலப் பெயர் என்பதை அறிஞர்கள் பலர் உணர்த்தியுள்ளனர். தமிழ் மொழிக்குத் “திராவிடம்’ என்ற பெயர் பிற்காலத்தில் வந்தது. இந்நாட்டுப் பிறமொழியாளர் தமிழை அங்ஙனம் கூறினார். இன்றைக்கு இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரோடட்டசு (ஏணிணூணிஞீச்tதண்) முதலிய பழைய கிரேக்க ஆசிரியர்கள், இந்நாட்டைப் பற்றிக் கூறியபோது “தமிழ்’ என்னுஞ் சொல்லையே வழங்கி இருக்கின்றனர் எனச் சங்கநூற் கட்டுரைகள் (பக்கம் 145) என்னும் நூலில் குறிக்கப்பெற்றுள்ளது.

திராவிடம் என்னும் பெயர்தான் தமிழாகத் திரிந்தது எனக் கூறி வருவோருக்கு விடையாகச் செந்தமிழ்ச்செல்வியில் (சிலம்பு 39) பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடம் என்று வடமொழியாளர்கள் நம் செந்தமிழ் மொழிக்கு இட்ட பேரே நாளடைவில் “தமிழ்’ என உருத்திரிந்ததெனக் கூறி மகிழ்வர் ஒரு சிலர். அஃது உண்மையற்ற வெற்றுரையென எவரும் எளிதில் அறிவர். செம்மொழியாம் ஒரு மொழி பேசும் நன்மக்கள் தங்கள் மொழிக்குத் தாம் வேறுபேரும் இடாது தங்கள் நாட்டிற் பின்வந்து குடியேறிக் கலந்தவரும், கலந்த அக்காலத்தும் தங்களால் நன்கு மதிக்கப்படாது அயலாராகக் கருதப்பட்டவரும் ஆகிய வடமொழியாளர்கள் தம் மொழிக்கு இட்ட பேர் கொண்டே தம்மொழியைச் சுட்டினார்கள் எனின் அஃது எங்ஙனம் பொருந்தும்? அன்றியும் அது பொருளாயின் தமிழ் நன்மக்கள் தம்மொழி சுட்டும் குறியீடு ஒன்றும் பண்டைக்காலத்துப் பெற்றிலர் என்றேனும் அல்லது குறியீடு ஒன்று பெற்றிருந்ததும் வடமொழியாளர் இட்டபேரே சாலும் எனக் கருதித் தம் குறியீட்டைக் கைவிட்டதனால் அது வழக்கு வீழ்ந்தது என்றேனும் கொள்ளல்வேண்டும். அங்ஙனம் கொள்ளல் சாலுமா? தமிழ் நன்மக்கள் தம் மொழிக்குத் தாமே பேரிட்டு வழங்கினர் என்றும் அப்பேரே இன்றும் வழக்கில் உள்ளதெனக் கோடலே சாலும். மேலும், அக்கோளர்தம்மைத் திராவிடம்’ தமிழ் என மாறியது யாங்ஙனம் என வினவுவார்க்கு, அவர் கூறும் விடை அவர்க்கே இனிமை பயக்குமல்லால் வேறெவர்க்கு உண்மையின் நழுவி வீழ்ந்ததாகக் காணப்படும். தமிழர்கள் தம் மொழிக்குப் பெயர் இடாமல் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்வந்த அயலவர்தான் பெயர்வைத்தனர் என்றால் அதுவரை அம் மொழியைப் பெயர்குறிக்காமலா அழைத்து வந்தனர் என்னும் வினாவை எழுப்புவதன் மூலம் நம் மொழிக்கு நம்மவர் இட்ட பெயர்தான் தமிழ் என்பது புரிகின்றது அல்லவா?

திராவிட மொழி என்று சொல்லாமல் தமிழைத் தமிழ் என்றும் தமிழில் இருந்து தோன்றிய மொழிகளைத் தமிழ்க் குடும்ப மொழிகள் என்றும் சொல்ல வேண்டும். திராவிட இனம் என்று சொல்லாமல் தமிழ் இனத்தைத் தமிழினம் என்றும் தமிழ் சார் இனங்களைத் தமிழ்க்குடும்ப இனங்கள் என்றும் குறிப்பிட வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் தமிழர் தம் மொழிக்குத் தமிழ் என்றுதான் பெயரிட்டனர் என்பதையும் தமிழ் என்னும் சொல்லே திராவிடம் எனத் திரிந்ததையும் உணராமல் திராவிடம் என்னும் சொல்லையே கையாளுவதால் தமிழ்மொழி வரலாறும் தமிழர் வரலாறும் தமிழக வரலாறும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இல்லாத திராவிடரில் இருந்து வந்தவர் தமிழர் என உலகத் தமிழறிஞர்கள் முன்னிலையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலேயே ஒருவர் பொய்யுரைத்துப் பொழிவுரை ஆற்ற முடிகின்றது என்றால் அதன் காரணம் நம் மொழியின் முதன்மையை நம்மவரும் அயலவரும் உணரும் வண்ணம் ஆசிரியர்களும் தலைவர்களும் எடுத்துச் சொல்லாமையும் தமிழ்ப்பகைவர்கள் தங்கள் திரிப்புப்பணியைத் தவறாமல் செய்துவருவதும்தான். புறத்திலும் அகத்திலும் இருக்கும் தமிழ்ப்பகையை முறியடிக்க வேண்டுமென்றால் திராவிடமாயையை வென்றாக வேண்டும்! தமிழியத்தை ஊன்றிட வேண்டும் என்பது சரிதானே!
பி.கு.: 1. தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துவதுதான் நம் நோக்கமே தவிர, திராவிடஇயக்க அறிஞர்களும் தலைவர்களும் தமிழுக்கு ஆற்றிய தொண்டினை என்றும் போற்றுவோம்! அதே நேரத்தில் தமிழரல்லாதவர் தமிழ்நாட்டில் எத்துறையிலும் தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடாது.
2. இக்கட்டுரை எந்த இதழில் வந்தது என நினைவுமில்லை, பதிவுமில்லை.
இலக்குவனார் திருவள்ளுவன்
photo_Ilakkuvanar_Thiruvalluvan