புறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க!

தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன், திருவள்ளுவர் கூறும் படைமாட்சி இலக்கணத்திற்கேற்ப செம்மாந்த படை அமைத்தவர்.
உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையு ளெல்லாந் தலை. (குறள் 761)
என்கிறார் திருவள்ளுவர்.
இதற்கு விளக்கம் தரும் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்,
“அரசுக்குரிய செல்வங்களுள் படையே முதன்மையானது. அப் படையும் காலத்திற்கேற்பப் பல்வகைப் பகுதிகளும் பொருந்தி இருத்தல் வேண்டும். போர் முகத்தில் உண்டாகும், உறுப்பிழத்தல், உயிர்போதல் துன்பங்கட்கு அஞ்சாது இருத்தல்வேண்டும். ‘வெல் அல்லது வீழ்’ என்ற குறிக்கோளையுடையதாய் இருத்தல் வேண்டும். அப் படையே வெல்லும் திறன் பெற்றிருக்கும்.”
என்கிறார். இந்த இலக்கணத்தின் படி அமைந்தது பிரபாகரனின் விடுதலைப்புலிகள் படையே!
“படைவீரர்களிடத்தில், ஒழுக்கக் குறைபாடான செயல்கள் இருத்தல் கூடாது” எனத் திருக்குறள் 769 இல் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். உலகிலேயே மதுவை நாடாத பெண்களின் கற்பிற்கு இழுக்கு சேர்க்காத ஒழுக்கமான படையாக இருப்பது பிரபாகரனின் விடுதலைப்புலிகள் படையே! ஒரு நாட்டிற்கு உதவச் செல்லும் அடுத்த நாட்டுப் படையாக இருந்தாலும் ஐ.நா.வின் பன்னாட்டுப்படையாக இருந்தாலும் எதிரிப்படை போல் பெண்கள் கற்பழிப்பில் ஈடுபடுவதை வரலாற்று நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அவ்வாறு இல்லாமல் ஒழுக்கமே உயிர்நாடி எனப் பிரபாகரன் அறநெறிப்படையை அமைத்திருந்தது பாராட்டிற்குரியதல்லவா?உலகம் உள்ளளவும் போற்றுதலுக்கு உரியது அல்லவா?
உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத்
தொல்படைக் கல்லா லரிது. (குறள் 762) என்கிறார் திருவள்ளுவர்.
பெரும் நெருக்கடி ஏற்பட்டாலும் அழிவினால் துன்பம் வந்தாலும் அஞ்சாமையுடைய சிறப்பு தொன்று தொட்டு வரும் பெருமை கொண்டுள்ள  வீர மரபு கொண்டுள்ள படைக்குத்தான் இருக்கும் என்கிறார்.
இத்தகைய வீர மரபு கொண்டவர்களே தமிழ்ஈழப்படைஞர்கள். குறைவான எண்ணிக்கையில் மிகுந்த எண்ணிக்கை உடைய வீரர்களுடன் போரிட்ட அஞ்சாமையும் உலகின் பிற நாடுகள் எதிரியுடன் இணைந்து அழிக்க முற்பட்ட பொழுதும் எதிர்த்துப் போரிட்ட துணிவும் பிரபாகரனின் தமிழ் ஈழப்படையான விடுதலைப்புலிகள் படைஞர்களிடம் இருக்கின்றன.
 பல்வேறு வசதிக் குறைபாடுகள் இருப்பினும் தாய் நாட்டு நலன் காக்கத் தயங்காமல் போரிடும்  வீரமரபினரின் படையைச் சிறப்பாக நடத்துநர் மேதகு பிரபாகரன்.
இனப்படுகொலையாளிகளுடன் போரிடுவது மட்டுமல்லாமல், போர்க்கருவிகள், போர் ஊர்திகள் உருவாக்கவும் அவற்றிற்கான உதிரிப்பாகங்கள் உருவாக்கவும் தொழிலறிவும் அறிவியலறிவும் பெற்றவர்க ளே தமிழ் ஈழப்படைஞர்கள்!. மண்ணிலும் விண்ணிலும் நீரிலும் போரிடும் திறமை பெற்றவர்கள். வானூர்திகள் இயக்கவும்   ஏவுகணைகள் செலுத்தவும் நாவாய்கள் ஓட்டவும் நன்கறிந்தவர்களே விடுதலைப்புலிப் படையினர்.
போர் என்றால் மரணம் வர வாய்ப்பு உள்ளது. வராமலும் போகலாம். ஆனால் தாமாகவே மரணத்தை எதிர்நோக்கும் தற்கொலைப் படைஞர்களான கரும்புலிகள் வீரம் போற்றுதற்கும் வணங்குதற்கும் உரியதல்லவா? இத்தகைய படையை உருவாக்கிய மேதகு பிரபாகரன் சிறப்பிற்குரியவரல்லவா?
 தாய் மக்கள் மானம் காக்கவும் தாய்நாட்டு உரிமை காக்கவும் ஆட்சி நடத்திய அதற்கான சிறப்பான இருபால் இளைஞர் படையை நடத்திய மேதகு பிரபாகரன் மீண்டும் வருவார்; தம் பணியைத் தொடருவார்;  வெற்றி கரமாக அதனை முடிப்பார்; தமிழ் ஈழக் கொடி பாரெங்கும் பறக்கும்; தமிழர்கள் உரிமையுடனும் சிற்பபுடனும் வாழ்வர் என்னும் நம்பிக்கை பெரும்பான்மையரிடம் உள்ளது. அந்த நம்பிக்கையாளர்கள் சார்பாக நாமும் மேதகு பிரபாகரன் நூறு ஆண்டுகள் கடந்தும் நலமாகவும் சிறப்பாகவும் வாழ வாழ்த்துகிறோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல