Tuesday, October 14, 2025

சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 2: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 1 தொடர்ச்சி)

நாம் செய்ய வேண்டியது என்னவாக இருக்க வேண்டும்? தமிழுக்குத் திட்டங்கள் தர வேண்டும். தரவில்லையே! ஒன்றும் செய்யவே இல்லையே! நமக்கு ஒன்றும் வேண்டா, செம்மொழி அறிவிக்கப்பட்ட பிறகு செம்மொழி விருது கொடுத்தார்கள். யாருக்கு? இளைய அறிஞர்களுக்கு ஆண்டுக்கு ஐவருக்குக் கொடுத்தார்கள். (அதிலும் சில ஆண்டுகள் குறைவாகக் கொடுத்தார்கள்.)

ஒவ்வோர் ஆண்டும்  சமற்கிருத அறிஞர்கள் 15 பேர், அரபி அறிஞர்கள் 3 பேர், பெருசியன் அறிஞர்கள் 3 பேர், பாலி/பிராகிருத அறிஞர் ஒருவர் என 22 அறிஞர்களுக்குக் குடியரசுத் தலைவர் விருது இந்திய விடுதலை நாளின் பொழுது வழங்கப்படுகிறது. இவ் விருதானது விருது பெற்றவர்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் 50,000 உரூபாய் பரிசுத்தொகை வழங்கும் சிறப்பிற்குரியதாகும்.

இளையவர்களுக்குத் தருவது ஒரு முறை விருது( ஒன் டைம் அவார்டு). மூத்தவர்களுக்குத் தருவது வாழ்நாள் முழுமைக்குமான ஆண்டு தோறுமானது (யியர்லி அவார்டு).

 ஆண்டு தோறும் தரக்கூடிய வாணாள்  விருது தமிழில் இதுவரை தரப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழுக்குச் செம்மொழி அறிந்தேற்பு தந்த பிறகுதான் சமற்கிருதத்திற்கு அறிந்தேற்பு தந்தார்கள் பாலி, பிராகிருதத்திற்கும் 2004 இல் கொடுத்துவிட்டார்கள் எல்லாவற்றிற்கும் கொடுத்து விட்டார்கள் கோயிலிலே வருபவர்களுக்கெல்லாம் சுண்டல் தருவது போன்று “இந்தா நீ வாங்கிக்கோ! நீ வாங்கிக்கோ! ” என்று  செம்மொழி அறிந்தேற்பு கொடுத்துவிட்டார்கள். இது மிகவும் தவறானது எல்லாம் செம்மொழியாக இருக்கலாம். ஆனால் தமிழ் ஒன்றுதான் உலகத்திலேயே உயர்தனிச் செம்மொழி, வேறு எந்த மொழியும் உயர் தனிச் செம்மொழி அல்ல. ஆகவே உயர் தனிச் செம்மொழி என்ற தகுதியைத் தமிழுக்குக் கொடுத்து கூடுதல் நிதி ஒதுக்குமாறு கேட்டிருக்க வேண்டும் .ஆனால் கேட்கவில்லை நாம். அது மட்டும் அல்ல. சமற்கிருதம் ஒரு முழுமையான மொழி அல்ல பாலி பிராகிருதம் தமிழும் கலந்த சொற்கலவைதான். தவறுதலாகச் சமற்கிருதத்தில் இருந்து பிராகிருதம் வந்தது என்பார்கள். பிராகிருதம் என்பது இயல்பான பேச்சு மொழி. சமற்கிருதம் செய்யப்பட்ட மொழி. இயல்பான பேச்சிலிருந்து செய்யப்பட்டது தான் சமற்கிருதம் அப்படி இருக்கும் போது பிராகிருதம் மூத்ததாக இருக்குமா சமற்கிருதம் மூத்ததாக இருக்குமா?  

சமற்கிருதப் பேராசிரியர் சுகுமாரி(பாட்டார்சார்)எழுதிய சமற்கிருதச் செவ்விலக்கிய வரலாறு(History of Classical Sanskrit Literature. 1993)  நூலிலேயே சொல்கிறார் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? சமற்கிருத இலக்கியங்கள் பேரளவின என்று காட்டுவதற்காகப் பாலி மொழி நூல்களையும், பிராகிருத மொழி நூல்களையும் மொழி பெயர்த்துக் கொண்டு அல்லது அவற்றின் அப்பட்டமான தழுவல்களையும் எழுதி வைத்துக்கொண்டு, நூல்களாக இயற்றிவிட்டு அவையெல்லாம் சமற்கிருத நூல்கள் என்று பொய்யான வரலாற்றை உருவாக்கி வைக்கிறார்கள். தமிழ் அறிஞர்களின் தமிழ் இலக்கியங்களை அழித்துவிட்டு எவ்வாறு சமற்கிருதம் தனது நூல்களாகக் காட்டுகிறதோ அதேபோன்று வடக்கே செய்து இருக்கிறார்கள். ஆக இத்தகைய ஒரு பொய்யான சமற்கிருதத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவை என்ன?

நாம் என்ன சொல்ல வேண்டும். நமக்கு அஃதாவது இப்போது அரசு அறிவித்தார்களே பத்தாண்டு என்று, இப்போது குதிக்கிறார்கள் அல்லவா? எண்ணிப் பாருங்கள். பத்தாண்டு என்று சொல்லி இன்று கேள்வி கேட்பவர்கள் எங்கு சென்றார்கள். இன்று கூக்குரல் இடுபவர்கள் எங்கு? சென்றார்கள். ஆண்டுதோறும் அறிவித்துக் கொண்டு தானே இருந்தார்கள் ஏன் அப்பொழுது கேட்கவில்லை? ஒன்றிய அரசு ஆட்சிப் பொறுப்பில் தமிழர் கட்சிகள் இருந்தனவே, அப்போது என்ன செய்தார்கள்? அவர்கள் பேசுகையிலே அந்த நாடாளுமன்ற  அவையிலேயே அறிக்கை கொடுக்கிறார்கள் அல்லவா? எதெதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள் என்று பார்த்தால் தெரியுமே, அப்பொழுதெல்லாம்  ஏன் கேட்கத் தெரியவில்லை? இவ்வாறு பல்வேறு வாய்ப்புகளையும் விட்டுவிட்டு இப்பொழுது ஏதோ புதிதாகக் கொடுப்பது போல் கேட்கிறார்கள். அதுதான் கொடுமை. ஏதேனும் சமற்கிருதம் தொடர்பான அறிவிப்பு /இந்தி தொடர்பான அறிவிப்பு வந்த பிறகு அப்பொழுது தான் வந்து குதிகுதியென்று குதிப்பார்களே தவிர ஆண்டுதோறும் நடக்கும் இயல்பான ஒன்று என்பதை மறந்து விடுகிறார்களா அல்லது  மறைக்கிறார்களா எனத் தெரியவில்லை. ஆக ஆண்டுதோறும் விட்டு விட்டு பத்தாண்டுகள் போன பத்தாண்டுகள் அதற்கு முந்தைய 10 ஆண்டுகள் முந்தின ஆண்டு தொடர்ச்சியாகப் பத்தாண்டு இதெல்லாம் ஆங்கிலேயர்களிமிருந்து விடுதலைக்கு முன்பிருந்தே தொடர்ந்து நடந்து வந்த அநீதிகள் இவையெல்லாம், இந்தியா விடுதலை அடைந்து மிகுதியாக வந்துவிட்டது.

பேராய கட்சியான காங்கிரசில் தொடங்கி தொடர்ந்து கொண்டே இருக்கிறது .ஆக, சமற்கிருத நிதி ஒதுக்கீடு என்பது இங்கே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அப்பொழுதெல்லாம் இந்தக் கட்சிகள் எங்கே தூங்கிக் கொண்டு இருந்தன? ஒன்று இவர்கள் தெரிந்தே செய்கிறார்கள் என்றால் இவர்களுக்கு எதையும் சொல்லத் தகுதி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பிறரது முதுகிலே உள்ள அழுக்கைச் சுட்டிக்காட்டுகிற நாம், சுட்டிக் காட்டிய கைகளில் மண்டிக் கிடக்கிற அழுக்கை நாம் பார்க்க வேண்டும். நாம் தமிழுக்காக என்ன செய்தோம் என்று பார்க்க வேண்டும் .அப்படிப் பார்க்கும் பொழுது இப்பொழுது நான் பல திட்டங்களைச் சொன்னேன் அல்லவா, அதை விடப் பல பெரிய திட்டங்கள் இருக்கின்றன. திட்டங்கள் மட்டுமல்ல. எதற்காகச் சொல்கிறேன் தெரியுமா? சமற்கிருதம் தொன்மையான மொழி என்பது பொய், பிற மொழிகளுக்குச் சமற்கிருதம் தாய் மொழி என்பதும் பொய், சமற்கிருதம் தேவ மொழி என்பதும் பொய். இவ்வாறு பொய்களைப் பரப்பிக்கொண்டு பொய்யான தகவல்களுக்காக – அத்தகவல்களின் அடிப்படையிலான திட்டங்களுக்காக –  நிதி ஒதுக்கீடு வழங்குகிறார்கள்.

13.07.2025

Sunday, October 12, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 1011-1015 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010 : தொடர்ச்சி)

1011. Automated teller machine          தானியங்கிப் பணப்‌ பொறி

teller – கூறுபவர் என்னும் பொருளில் குறி சொல்பவர், வருவதுரைப்போர், கதை சொல்பவர், கதைஞர், கதைகூறு கலைஞர், கதை கூறுவோர்,, கதை எழுத்தாளர், கதையளப்பவர் எனப் பல பொருள்கள் உள்ளன. குழந்தை வழக்கில் பொய்யர், புளுகர் எனவும் பொருள்கள் உள்ளன.
விரைவு காசாளர்(teller) என்பவர் பணப்பரிமாற்றங்களைக் கையாளும் வங்கி ஊழியர். காசாளர்(cashier) என்பவர் கடைகள், உணவகங்கள் போன்ற வணிக மனைகளில் இதுபோல் பணப்பரிமாற்றப் பணிகளைச் செய்பவர். இவ்விரு சொற்களையும் மாற்றியும் கையாளுவதுண்டு. மேலும் விரைவு காசாளர் என்னும் சொல் வட அமெரிக்காவில் கையாளும் சொல்லாகவும் காசாளர் என்பது பிரித்தானியாவில் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளன.

தானியங்கிப் பணப்பொறி என்பது பணம் எடுப்பதற்குரிய பொறி மட்டும் அல்ல.  வங்கிக் கணக்கு  விவரம், பணம் எடுத்த செலுத்திய விவரங்கள், இறுதி இருப்பு விவரம், கடைசியாகப் பணம் எடுத்த அல்லது செலுத்திய விவரம்,  பிற வங்கிக் கணக்கு விவரங்களையும் அறியச் செய்யும் பொறியாகவும் உள்ளது.
தானியங்கிப் பொறியில் அல்லது இப்பொறி இருக்கும் மையத்தில் தனியாகக் கணக்கேட்டில் பண விவரங்களைப் பதியும் வசதியும் உள்ளது.
1012. Automatically       தன்னியல்பாக

சட்டத்துறையில் ஏதேனும் ஒரு நிகழ்வால் தூண்டப்படுவதற்கு முன்பே இருக்கும்  செயல்பாட்டின் மூலம் நிகழ்வதை அல்லது உள்ளதைக் குறிக்கிறது.

தானாகவே – 1959 ஆம் ஆண்டு அரசு சேமிப்புச் சான்றிதழ்கள் சட்டத்தின் பிரிவு 6(4)(Section 6(4) of the Government Savings Certificates Act, 1959), பரிந்துரைக்கப்பட்ட முறையில் சேமிப்புச் சான்றிதழை மாற்றுவது, முந்தைய எந்த வொரு வழிமுறைப் பரிந்துரையையும் (nomination) தானாகவே நீக்கும் என்று கூறுகிறது.
1013. Autonomous  bodyதன்னாட்சி அமைப்பு

தன்னாட்சி அமைப்பு என்பது தற்சார்பு அரசு அமைப்பாகும். இது பெரும்பாலும் அரசாங்கத்தால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்படுவது. எனினும் அரசின் மேற்பார்வைக்கும் நிதியுதவிக்கும் உட்பட்டது.

தன்னாட்சி அமைப்புகள் இவை நிறுவப்படும் குறிப்பிட்ட சட்டம் அல்லது தனியுரிமை ஆவணத்தின் மூலம் வரையறுக்கப் படுகிறது.

தன்னாட்சி அமைப்பினை அரசு சார் அமைப்பு என்றும் கூறுவர்.
1014. Autonomy   தன்னாட்சி

தன்னதிகாரம்
தற்கட்டுப்பாடு
தன்னுரிமை
சுயாட்சி என்றும் சொல்வர். இது தமிழ்ச் சொல்லல்ல.
சிந்தனை, விருப்பம், செயல் அடிப்படையில் முழு உரிமையுடையது. வெளிப்புறக் குமுக அல்லது அரசியல் ஆற்றல்களிடமிருந்து சட்ட அமைப்பின் உள் தற்சார்புரிமையைக் குறிப்பது. தனியர் அல்லது குழுவின் தன்னாட்சி, தன்வரையறை உரிமையையும் குறிப்பது.
தன்னளவில் அதிகாரம் கொண்ட தன்னுரிமை யமைப்பையும் குறிப்பது.
          1015. Autopsyபிண ஆய்வு
பிணக் கூறாய்வு

சட்டத்தில், பிண ஆய்வு என்பது நோய்வாய்ப்பட்டோ கொல்லப்பட்டோ நேர்ச்சியி(விபத்தி)னாலோ இறந்தவரின் உடலை மருத்துவ-சட்ட அடிப்படையில் ஆய்வு செய்யப்படுவதாகும். இஃது ஒரு தடயவியல் நோயியல் வல்லுநரால் மரணத்திற்கான காரணம், விதம், நேரத்தைத் தீர்மானிக்க உதவுவது. செய்யப்படுகிறது. இது குற்றவியல் உசாசல்களில் ஒரு முதன்மைப் பகுதியாகும். குறிப்பாக   ஐயத்திற்கிடமான அல்லது இயற்கைக்கு மாறான மரணங்களில்,   இறந்தவரை அடையாளம் காணவும் காயங்களை ஆவணப்படுத்தவும் இறந்த முறையை உறுதி செய்யவும் நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்த உதவுவது.

(தொடரும்)

Saturday, October 11, 2025

 

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது,இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது : இலக்குவனார் திருவள்ளுவன்



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 12 : ‘என’, ‘இனி’ அடுத்து வல்லினம் மிகும் : தொடர்ச்சி)

“ஒரு ஊழியரேனும்’ எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இது தவறு

ஆங்கிலத்தில் உயிரெழுத்துக்களுக்கு முன் என்ன குறிப்பிட வேண்டும் என நன்கு அறிவோம்.

கேள்வி: ‘an’ என உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன்னால் சேர்ப்போம். இவ்வாறு தமிழிலும் உள்ளதா?

விடை: ஆம். அதைக் குறிப்பிடத்தான் இவ்வாறு ‘ஒரு’ என உயிர் எழுத்துகளின் முன் குறிப்பிடுவது தவறு என நினைவூட்டுகிறேன்.

ஆங்கிலத்தில் a, e, I ,o, u ஆகிய உயிர் எழுத்துகளுக்கு முன்பு மட்டுமின்றி, உயிரெழுத்து ஒலிப்புடன் தொடங்கும் சொற்களுக்கு முன்பும் an hour என்பதுபோல், ‘an’ பயன்படுத்துவோம். இல்லையேல் பெருங்குற்றமாகக் கருதுவோம். ஆனால் நாம், நம் தாய்மொழியில் தவறாகக் குறிப்பிடுவதையே பெருமையாகக் கருதுவதால், இவை பற்றியெல்லாம் கவலைப்படுவது இல்லை. இனியேனும் செம்மையாகப் பேசுவோம்! செம்மையாக எழுதுவோம்!

“ஒன்று’ என்பது உயிர் எழுத்துகளின் முன் ‘ஓர்’ எனவும், பிற இடங்களில் ஒரு எனவும் வரும் என்பதை நினைவில் கொள்வோம்.

ஓர் ஊழியரேனும் – ஓர் உலகம்

ஓர் ஆட்சியர் – ஓர் இதழ்

ஓர் ஆணை – ஓர் ஈகையாளர்

ஓர் இணையர் – ஓர் இயக்கம்

ஒரு பதிவேடு – ஒரு மருந்தகம்

ஒரு வங்கி – ஒரு திட்டம்

இவை போல் உயிரெழுத்துக்களின் முன் ஒவ்வொரு எனச் சொல்லாமல் ‘ஒவ்வோர்’ எனல் வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டு – ஒவ்வோர் அலுவலர்

ஒவ்வோர் இடம் –  ஒவ்வோர் இனம்

ஒவ்வோர் அலுவலகம்  – ஒவ்வோர் இல்லம்

ஒவ்வொரு முறை  – ஒவ்வொரு பகல்

ஒவ்வொரு திட்டம் – ஒவ்வொரு பள்ளி

ஒவ்வொரு கல்லூரி –  ஒவ்வொரு சுற்று

எனினும் உயிரெழுத்து இல்லாத இடத்திலும் “ஓர்’ எனப் பயன்படுத்தினால் தவறல்ல; மேலும் “ஒப்பற்ற’ என்று பொருள்படும் என்பர் சிலர். எனவே ஓர் கல்லூரி, ஓர் பள்ளி எனக் கூறினாலும் எக்காரணங்கொண்டும் உயிரெழுத்து முன் “ஒரு’ பயன்படுத்தக் கூடாது.

இவைபோல் “இரண்டு’ என்பதும் உயிரெழுத்துகளின் முன் ‘ஈர்’ எனவும் பிற இடங்களில் ‘இரு’ எனவும் மாறும்.

ஈர் அலுவலங்கள் –  இரு பதிவேடுகள்

ஈர் ஆண்டு / ஈராண்டு  இருவணிக மனை

ஈரைவர் – இரு மருந்தகம்

ஈரேழு  – இரு தவறு

இவைபோல் தற்பொழுது பெரும் வழக்கில் மறைந்து போயுள்ள மற்றொன்றையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

அது இது, எது என்பனவும் உயிரெழுத்துகளின் முன் முறையே அஃது இஃது எஃது என மாறும்.

அஃது அவருடையதா?

இஃது எங்கிருந்தது?

எஃது உன்னுடையது?

அஃது உலகளாவிய திட்டம்

என்றுதான் குறிக்க வேண்டும்.

அது, இது, எது, யாது ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.

அது பலகை – அது சரி

இது தட்டு – இது தவறு

எது தேவை? –  எது செவ்வைப்படி?

யாது செய்வேன்

அவை இவை, எவை ஆகியவற்றின் பின்னும் வல்லினம் மிகாது.

அவை பெரிய அணைகட்டுகள்

இவை சிறிய திட்டங்கள் –  எவை சிறப்பானவை?

* ஒவ்வொரு என்பது பற்றிப் பார்த்தோம் அல்லவா? ஒவ்வொரு என்பதன் பின் வல்லினம் மிகாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொருத் திட்டம், ஒவ்வொருத்தடவை, ஒவ்வொருப் பேரூராட்சி, ஒவ்வொருத் துறை என வல்லின எழுத்தைச் சேர்த்து எழுதுவதும் தவறு ஆகும்.

ஒவ்வொரு தொழிற்பேட்டை

ஒவ்வொரு பதிவேட்டிலும்

ஒவ்வொரு துறையிலும்

ஒவ்வொரு பிரிவிலும்

ஒவ்வொரு கடிதமும்

என வரும்.

* இக்கோப்பில் “ஒவ்வொரு பிரிவுகளிலும்” என உள்ளது. ஒவ்வொரு என்பது ஒருமையில்தான் முடிய வேண்டும். அனைத்துப் பிரிவுகள் அல்லது எல்லாப் பிரிவுகள் எனப் பன்மையில் சொல்லலாம். (ஒவ்வொரு பூக்களுமே’ என்பது தவறு. ஒவ்வொரு பூவும் அல்லது எல்லாப் பூக்களும் எனக் கூற வேண்டும்.)

* குற்றவாளிகள் அன்று என உள்ளது.

அஃறிணை ஒருமைக்குத்தான் ‘அன்று’ பயன்படுத்தப் பெற வேண்டும். சான்று:

முறையான கோப்பு அன்று

உரியமடல் அன்று

அஃறிணைப் பன்மையாயின் ‘அல்ல’  பயன்படுத்தப் பெற வேண்டும்.

தூய்மையான அலுவலகங்கள் அல்ல.

செவ்வைப்படிகள் அல்ல.

சரியானவை அல்ல.

* உயர்திணை ஒருமைக்கு அல்லன்/ அல்லள்

என்றும் உயர்திணைப்பன்மைக்கு ‘அல்லர்’ என்றும் பயன்படுத்த வேண்டும்.

குற்றவாளிகள் அல்லர்.

சுறுசுறுப்பாகப் பணியாற்றுபவன் அல்லன்

விரைவாகத் தட்டச்சிடுபவன் அல்லன்

நேர்மையான அலுவலர் அல்லர்

என்பன போல் வரவேண்டும். ஆனால் உயர்திணையில் அல்ல என்றே பலர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். இவை வினைமுற்று ஆகும். எனவே, இவ்வினைமுற்று ஒன்றன் பால் ஆயின் “அன்று’ என்றும் பலவின் பால் ஆயின் அல்ல என்றும் ஆண்பால் ஆயின் அல்லன் என்றும் பெண்பாவின் அல்லன் என்றும் பலர்பால் ஆயின் அல்லர் என்றும் வரும்.

கேள்வி: “அல்ல’ என்று சொல்லாமல் இல்லை என்று சொன்னால் என்ன?

விடை: கண்டிப்பாகக் கூறக் கூடாது. பொருளே மாறுபடும்.

இவை கோப்புகள் இல்லை.

என்று சொன்னால் இவை கோப்புகள் இல்லை, வேறு எவையோ எனப்பொருள்படும்.

இவை நிதிக் கோப்புகள் அல்ல என்றால் இவை நிதி தொடர்பான கோப்புகள் அல்ல; வேறு பொருள் தொடர்பான கோப்பு எனப் பொருள்படும்.

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-4(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

 




(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3(2010): தொடர்ச்சி)

11.ஆந்திரா, பீகார், தில்லி (2 இடங்கள்), கேரளா, மகாராட்டிரா, ஒரிசா, இராசசுதான், உ.பி., குசராத் ஆகிய மாநிலங்களில் சமசுகிருதப் பல்கலைக்கழகம் இயங்க மத்திய அரசின் முழு நல்கை வழங்கப்படுகிறது. வாழ்வு கொடுக்கப்பட்டு வரும்  மொழியான  சமசுகிருதத்திற்கு முழுநல்கை வழங்கப்படுவது போல், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்ப்  பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்படும்; தமிழ் மக்கள் 50,000 எண்ணிக்கைக்குக் குறையாமல் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழ்ப் பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கானல்நீராகப் போய்விட்டதே என்று கவலைப்படுவதைவிட நமக்கு வேறு வழியில்லை.

  1. 12. கேந்திரிய இந்தி சிக்(கு)சான் மண்டல் (ஆகுரா) என்பது மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, முழுமையும் இந்திய அரசின் நிதிஅளிப்பில் செயல்படும் தன்னாட்சி நிறுவனமாகும். இந்தி மொழியின் பயிற்சி, ஆராய்ச்சிக்கான சிறப்பு மையமாக 19.3.1960 இல் தொடங்கப்பெற்ற கேந்திரிய இந்தி சன்சுதான் என்னும் நிறுவனத்தின் தில்லி, மைசூர், ஐதராபாத்து. கௌகாத்தி, சில்லாங்கு, திமாப்புர் ஆகிய ஆறுஇடங்களில் உள்ள 6 மண்டலப் பயிலகங்கள் மூலம்  அயல்நாட்டில் இந்தியைப் பரப்புதல் என்னும் திட்டத்தின் கீழ், 71 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு இந்தி கற்பிக்கப்படுவது போல் அயல்நாட்டினருக்குத் தமிழைக் கற்பிக்கத் தனி அமைப்பை இந்திய அரசு ஏற்படுத்தும் என எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கான தகுதி நமக்கு இல்லை என்பதுபோல் இந்திய அரசு நடந்து கொள்கிறது.
  1. 13. இந்தியா முழுமையும் சமசுகிருதம் பேசுவோர் எண்ணிக்கை 50,000-இற்கும் குறைவே. ஆனால், 1974 இலிலிருந்து அனைத்து இந்திய வானொலிகளில் சமசுகிருதத்தில் குறுஞ்செய்தி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இதுபோல், பிற மாநிலங்களின் அனைத்து வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழ்ச் செய்தி ஒலி பரப்பவும் ஒளிபரப்பவும் செய்யப்படும் என்று எதிர்பார்த்தோம். பத்து கோடிக்கும் மேலாகத் தமிழ்பேசுவோர் இருப்பினும் தமிழ்ச் செய்தித் திட்ட நினைவுகளுக்கே புறக்கணிப்புதான் என்பது   வேதனையல்லவா? 
  1. 14. வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் சமசுகிருத வகுப்பு, கூட்டுப்பாடல் பயிற்சி சமசுகிருத நாடகம் அளிக்கப்படுவது போல், தமிழ் மொழிப் பயிற்சி அளிக்கப்படும்; சமசுகிருதத்தில் திரைப்படம் உருவாக்கவும் நாடகம் உருவாக்கவும்  முழு நிதியுதவி அளிக்கப் படுவது போல், தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ்க்கலை நாகரிகச் சிறப்பையும் இலக்கியச் சிறப்பையும் விளக்கும் நாடகங்களுக்கும் திரைப் படங்களுக்கும் குறும் படங்களுக்கும் ஆவணப் படங்களுக்கும் உலக அளவில் நிதியுதவி அளிக்கப்படும் என்றெல்லாம் எதிர்பார்த்தது நம் அறியாமையே என இந்திய அரசு நடந்துகொள்கிறது.
  1. 15. இந்திய அரசின் துறைகளும் கல்வி நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் தங்கள் குறிக்கோள் முழக்கங்களாகச் சமசுகிருத முழக்கங்களை வைக்க ஊக்கப்படுத்தப் படுகின்றன. இந்திய அரசின் முழக்கமாகச் சத்தியமேவ செயதே அறிவிக்கப்பட்டுள்ளது போல், ஆயுள்காப்பீட்டுக் கழகம் –  யோகசேமம் வகாமியாகம் (Yogakshemam Vahāmyaham), இந்தியக் கப்பற்படை – சன்னோ வருணா(Shanno Varuna), இந்திய வான்படை – நாப சுபர்சம் தீபிதம் (Nābha Sparsham Dīptam),    இந்தியக் காவல் துறை – சாத் ரக்கசனய் கலா நிக்ரனயா (sadd rakshanay khalah nighranayah), இந்தியக் கடலோரக் காவல் படை – வயம் ரக்சாமகா (Vayam Rakshāmaha), அ.இ.வானொலி  – பகுசன இதய பகுசன சுகய (Bahujanahitāya bahujanasukhāya), அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் பயிலகம் – சரீர்மத்தியம் கலூதர்ம சாதனம் (Shareermadhyam Khaludharmasādhanam), ஆந்திரப் பல்கலைக்கழகம் – தேசசுவி நாவதிட மசுது (Tejasvi Nāvadhitamastu), பனசுதாலி வித்யாபீடம் – ச வித்யா ய விமுக்தயெ (Sa Vidyā Ya Vimuktaye),  பிருலா தொழில்நுட்ப அறிவியல் பயிலகம், பிலானி – ஞானம் பரமம் பலம்  (Jnānam Paramam Balam) எனச் சிலவற்றை எடுத்துக்காட்டிற்குக் கூறலாம். இவைபோல் தமிழ் முழக்கங்களைப் பொது முழக்கங்களாக வைப்பர்; செய்மதி, ஏவுகணை, படைக்கலன்கள், வானூர்திகள், கப்பல்கள் முதலியவற்றிற்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவார்கள் என எதிர்பார்த்தது நமது அளவு கடந்த ஆசை என்பதுபோல் இந்திய அரசு நடந்து கொள்கிறது.
  1. 16. தமிழுக்குச் செம்மொழி ஏற்பு வழங்கிய பின்னும் தாய் நிலத்தில் தமிழ், தலைமை யிடத்தில் இல்லாவிடில் இழுக்கெனக் கருதியாவது ஆட்சித்துறையில், கல்வித் துறையில், நீதித்துறையில், சமயத்துறையில், பிற துறைகளில் என எங்கும் தமிழே ஆட்சி செய்யும் நிலை மலரும் என எதிர்பார்த்தோம். ஆனால், தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை என்னும் அவலநிலை தானே இன்னும் தொடருகிறது. உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டி வழக்குரைஞர்கள்  மடியும்வரை உண்ணா நோன்பிருப்பினும் இந்தியஅரசு படிய வில்லையே!
  1. 17. சமசுகிருத அகராதி வெளியீட்டிற்கெனப் பொருள் உதவி  வழங்கப்படுவதுபோல் தமிழ் மொழியில் பல்வேறு துறைகளில் அகராதிகள் வெளியிட இந்திய அரசு உதவும் என்ற எதிர்பார்ப்பு ஈடேறும் நிலை இல்லையே!
  1. 18. சமசுகிருதச் செய்தி இதழ்களும் இலக்கிய அறிவியல் இதழ்களும் வெளியிடப் பொருள் உதவி வழங்குவதுபோல் தமிழ் இதழ்களுக்கும் மலர்களுக்கும் பொருளுதவி கிடைக்கும்; ஒவ்வொரு துறைகளிலும் புதுப்புது இதழ்கள் பெருகும் என எதிர்பார்த்தோம். ஆனால், இவையெல்லாம் சமசுகிருதத்திற்கு மட்டும்தான் உனக்கில்லை என மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இந்திய அரசு நடந்து கொள்கிறதே! 
  2. 19. தேசியச் சிந்து மொழி மேம்பாட்டுக் குழு, தேசிய உருதுமொழி மேம்பாட்டுக் குழு முதலான அமைப்புகள் மூலம் சிந்து மொழியையும் உருது மொழியையும் வளர்க்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. பௌத்த படிப்பு மத்திய மையத்தின் மூலம் பாலி, திபேத்தியன், ஆங்கிலம், சமசுகிருதம், இந்தி மொழி பயில உதவி வழங்கப்பட்டு வருகிறது. பௌத்தக் கல்வித் திட்டத்தின் மூலம் சிங்களம் படிக்கவும் படிப்பிக்கவும்  இந்திய அரசு உதவி வருகிறது. இவைபோல்  செம்மொழி அறிந்தேற்பிற்குப் பின்னராவது  தமிழ் பயிலவும் பயிற்றுவிக்கவும்  இந்திய அரசு உதவும் என்ற எதிர்பார்ப்பு நீர்மேல்எழுத்தாகக் கூடாது எனக்கவலை வருகிறது.

    Thursday, October 9, 2025

    சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23: சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! – – இலக்குவனார் திருவள்ளுவன்

     




    (சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 : ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே! – தொடர்ச்சி)

    சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23

    “- – என்றும் சான்றோர்

    சான்றோர் பாலர் ஆப;
    சாலார் சாலார் பாலர் ஆகுபவே.”

    புறநானூறு 218 : 5 – 7

    பாடியவர்: கண்ணகனார், நத்தத்தனார் எனவும் சொல்வர்.
    திணை: பொதுவியல்.
    துறை: கையறு நிலை.
    குறிப்பு: பிசிராந்தையார் வடக்கிருந்ததனைக் கண்டு பாடியது.

    சான்றோர், சான்றோர் பக்கமே சேர்வர்; சால்பில்லாதார் பக்கமே சால்பில்லாதார் சேர்வர்.
    இவை பாடலின் இறுதி அடிகள்.

    இதன் முந்தைய அடிகள் வருமாறு:

    “பொன்னும், துகிரும், முத்தும்,
    மன்னிய மாமலை பயந்த காமரு மணியும்,
    இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து,
    அருவிலை நன்கலம் அமைக்கும் காலை,
    ஒருவழித் தோன்றியாங்கு”

    சொற்பொருள்: மன்னிய – நிலைபெற்ற; காமரு – விரும்பத்தக்க; இடைபட – ஒன்றற்கொன்று இடைநிலம்பட; சாலார் – அறிவொழுக்கமின்மையான் சால்பில்லாதவர். சாலார் பாலர் – சால்பில்லாதவர் பக்கத்தார்.

    பொன் நிலத்தடியில் கிடக்கும்; மணி நிலத்தின்மேல் கிடக்கும்; முத்து அதிக ஆழமில்லாத கடலில் கிடக்கும்.

    துகிர் என்னும் பவளம் அதிக ஆழமான கடலுக்கடியில் கிடக்கும். என்றாலும் மாலையாகக் கோக்கப்படும்போது ஒன்றாகக் காணப்படும்.

    இவ்வாறு ஒவ்வொன்றும் தொலைவிலுள்ள வேறுவேறு இடங்களிலே கிடைப்பன. ஆயினும் அவற்றை ஒன்றாகத் தொடுத்துக் கோவையாக்கும்போது ஓரிடத்திலே அணியாகிச் சிறப்படையும்.

    அதுபோலவே சான்றோர், சான்றோர் பக்கமே சேர்ந்து சிறப்பர்; சால்பில்லாதார் பக்கமே சால்பில்லாதார் சேர்வர். இதுவே உலகத்து இயல்பு.

    “இனம் இனத்தோடு சேரும்” என்பது பழமொழி. எனவேதான், நல்லினத்தார் நல்லினத்தவருடன் சேருகின்றனர். தீயினத்தவர் தீயினத்தவருடன் சேருகின்றனர்.

    நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்
    கற்றாரைக் கற்றாரே காமுறுவர்

    என்றார் இடைக்கால ஒளவையாரும் மூதுரையில்.

    இவைபோல்தான் ஒழுக்கமுள்ளவர்கள் ஒழுக்கமுள்ளவர்கள் பக்கம் சேருகின்றனர். ஒழுக்கமில்லாதவர்கள் ஒழுக்கமில்லாதவர் பக்கம் சேருகின்றனர்.

    நாமும் சான்றோராகத் திகழ்ந்து சான்றோர் பக்கம் சேருவோம்.

    Tuesday, October 7, 2025

    எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 12 : ‘என’, ‘இனி’ அடுத்து வல்லினம் மிகும் : இலக்குவனார் திருவள்ளுவன்



    (எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 11 : Conference  Call – பன்முகஅழைப்பு : தொடர்ச்சி)

    என்று உள்ளது

    “என’ என்னும் இடைச்சொல் அடுத்து வல்லின எழுத்து மிகுதியாய் வரவேண்டும். இவ்வாறு அடிக்கடி வருமிடங்களை நினைவில் கொண்டால் தவறின்றி எழுதலாம்.

    எனத் தெரிவிக்கிறேன்

    எனக் கூறினான்

    எனச் சொல்லேன்

    எனப் படிக்க வேண்டும்

    எனத் திட்டமிடு

    எனத் தெளிவாகக் கூறு

    எனத் தெரிவித்துக் கொள்கிறேன்

    எனப் பாராட்டினார்

    எனக் குறிப்பாணையில் குறிக்கப்பட்டுளளது

    எனச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனப் பெருந்தலைவர் தெரிவித்தார்

    எனக் கேட்டார்

    எனப் பார்த்தேன்

    எனச் சொன்னார் எனச் சொல்லப்பட்டது

    எனப் ‘பிரதமர்’

    எனத் தலைமையமைச்சர்

    எனப் பாதுகாப்பு அமைச்சர்

    எனத் துறைத் தலைவர்

    எனத் துறைத் தலைமைக் கண்காணிப்பாளர்

    எனத் திட்டவட்டமாக

    எனத் தகவல்

    எனப்பொதுப்பணித்துறை அமைச்சர்

    எனக் கல்வியமைச்சர்

    எனச்சொன்ன உயர்நீதிமன்றம்

    எனச் சிந்திக்க வேண்டும்.

    இவற்றின் அடிப்படையில் என்பதை என்னும் சொல்லிற்கு அடுத்து வல்லினம் மிகும்

    இச்சொல் அடிக்கடிச் செய்திகளில் இடம் பெறுவதால் நினைவில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    என்பதைத் தெரிவிக்கிறேன்

    என்பதைக் கேட்டுக் கொள்கிறேன்

    என்பதைப் பாராட்டினார்

    என்பதைச் சொன்னார்

    என்பதைப் பகர்ந்தனர்.

    இதைப்போல் “இனி’ என்னும் இடைச்சொல்லிற்குப் பின்னும் வல்லினம் மிகும்.

    இனிக் கடிந்து பேசாதே

    இனிச் சரியாகச் செய்

    இனித் திட்டமிட்டுச் செயலாற்று

    இனிப் பாடலாம்

    இனிப் பின்பற்ற வேண்டும்

    இம்முகவரியில்

    பெரியக்குளம்

    எனக் குறிக்கப்பட்டுள்ளது தவறாகும்.

    பெரியகுளம் என்பதே சரி

    சிறிய. பெரிய. சிறு என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

    சிறிய திட்டம்       சிறுசேமிப்பு

    சிறு பாசனம்        சிறு பேழை

    பெரிய பதவி       பெரிய குடிசை

    சிறு கடை    பெரிய துறை

    சிறு பெட்டிக்கடை       சிறு தெய்வ வணக்கம்

    பெரிய பண்ணை

    பெரிய தொல்லை

    என்பன போல் வரும்.

    இவைபோல் நல்ல. கெட்ட என்பவற்றின் பின்னும் வல்லினம் மிகாது

    நல்ல தலைமைநல்லதிட்டம்

    நல்ல புத்தகம் கெட்ட கனவு

    நல்ல பாம்பு  நல்ல பயிர்

    நல்ல துறை  கெட்ட குவளை

    காசாளரோ அல்லது கணக்கரோ பொறுப்பேற்க வேண்டும் என இவ்வலுவலக ஆணையில் உள்ளது.

    இங்கு “ஓ’ அல்லது என்னும் பொருளில் கையாளப்படுகிறது. எனவே அல்லது என்பதைச் சேர்க்க வேண்டா.

    காசாளரோ கணக்கரோ பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டால் போதும். இல்லையேல்இ “காசாளர் அல்லது கணக்கர் பொறுப்பேற்க வேண்டும்’

    எனல் வேண்டும்

    எனவே.

    செயலரோ துணைச் செயலரோ

    ஊதிய விடுப்போ ஊதியபின் விடுப்போ

    மாற்றுப் பணியிலோ பசுரப் பணியிலோ

    தட்டச்சரோ சுருக்கச்சரோ

    இசைவுடனோ இசைவின்றியோ

    ஆசிரியப் பணியாளரோ ஆசிரியரல்லாப் பணியாளரோ

    பிணையிலோ பிணையின்றியோ

    ஊதியத்துடனோ ஊதியமின்றியோ

    என “அல்லது’ என இடையில் சேர்க்காமல் குறிப்பிடுவது முறையாகும்.

    Followers

    Blog Archive