Showing posts with label மு.க.தாலின். Show all posts
Showing posts with label மு.க.தாலின். Show all posts

Wednesday, May 1, 2024

முதல்வர் மு.க.தாலின் மொழிக் கொள்கையிலும் இந்தியாவிற்கு வழி காட்ட வேண்டும்! – இலக்குவனார்திருவள்ளுவன்

 


முதல்வர் மு.க.தாலின் மொழிக் கொள்கையிலும்

இந்தியாவிற்கு வழி காட்ட வேண்டும்!

நரேந்திரர், அமித்து சா, ஒன்றிய அரசு வெளிப்படுத்தும் இந்தி, சமற்கிருதத் திணிப்பு தொடர்பான பேச்சு, தீர்மானம், நடவடிக்கை முதலியவற்றிற்கு மு.க.தாலின் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சமற்கிருதத் திணிப்பிற்கு வழிகோல



வே இந்தித்திணிப்பு நடைபெறுவதாகக் கூறி வருகிறார். இவற்றின் மூலம் ஒரே நாடு, ஒரே மொழி என்ற நிலைப்பாட்டைக் கொணர்ந்து மக்கள்நாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் நாட்டுத் தொண்டு சங்கம்/ இரா.சே.சங்கத்தின் செயற்திட்டத்தைப் பாசக நிறைவேற்றி வருவதாகவும் குற்றம் சாட்டி வருகிறார். அண்மையில் வானொலியில் ஆகாசுவாணியைத்  திணித்த பொழுதும் தொலைக்காட்சியின் முத்திரையில் திணித்தக் காவி நிறம் குறித்தும் கடுமையாய்க் கண்டித்திருக்கிறார்.

பாராட்டப்பட வேண்டிய செய்தி. தமிழ் மக்களை அழிவிலிருந்து காக்க இந்தி, சமற்கிருதத் திணிப்புகளை அடியோடு நிறுத்தல் வேண்டும். விருப்பம் என்ற போர்வையில் வேறு வாய்ப்பு இன்றித் திணிக்கப்படுகின்றன இம்மொழிகள்.

அதே நேரம் பிறர் முதுகின் அழுக்கைக் குறை கூறும் நாம் நம் கைகளில் உள்ள அழுக்குகளை முதலில் துடைக்க வேண்டுமல்லவா? தமிழ்நாட்டரசு வெவ்வேறு வகைகளில் இந்தித் திணிப்பிற்கு உடந்தையாக இருப்பது அனைவரும் அறிந்ததே! அரசிற்கு இது தெரியாதா என்ன?

அரசின் 31,336 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர் எண்ணிக்கை 25,50,997. தமிழ் நாட்டிலுள்ள 4,498 பதின்பள்ளிகளில் பயிலும் தொடக்க நிலை மாணாக்கர் எண்ணிக்கை 30,60,601. இந்தி திணிக்கப்படுவோர் எண்ணிக்கை மிகுதியாக உள்ளது. இங்கே இள மழலை(U.K.G.) வகுப்பிலிருந்தே இந்தி கற்றுத் தரப்படுகிறது. யாரும் விரும்பிச் சேருவதில்லை. பதின்நிலைப்பள்ளியில் பெற்றோர் விருப்பத்திற்காகச் சேர்க்கப் படுகிறார்கள். இந்தி மழலை நெஞ்சிலேயே பாய்ச்சப்படுகிறது. மாநிலக் கல்விமுறையிலேதான் பதின்நிலைப்பள்ளிகளும் வருகின்றன. தமிழ்நாடு அரசுதான் இசைவு தருகிறது. இவர்களுக்கு இந்தி திணிக்கப்படுவது ஏன்?

தமிழ்நாட்டிலுள்ள மத்தியக்கல்வி வாரியப் பள்ளிகளின் (CBSC Schools) எண்ணிக்கை 944. 2010 இல் இக்கல்வி முறையில் 250 பள்ளிகள்தாம் இருந்தன. எனவே, இப்பொழுது நான்கு மடங்கு தமிழைப் புறக்கணிக்கும் இந்திப்பள்ளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டன எனலாம். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்த மரு.தமிழிசை அனைத்து அரசு கல்வி முறையையும் மத்திய வாரியத்திற்கு மாற்றி விட்டதால் அங்கே  மக்களாட்சி குழிதோண்டி புதைக்கப்பட்டு, இந்தி திணிக்கப்பட்டு விட்டது. இவ்வாறாக இந்தி பயிலும் இன்றைய தலைமுறை மாணாக்கரின்  பிள்ளைகளின் தாய்மொழி இந்தியாக மாற்றப்படுகிறது. எனவே  அதற்கு அடுத்த தலைமுறையினர் இந்தி மக்கள் ஆகிவிடுவர். எனவே கல்வித் திட்டம் மூலம் இந்தி திணிக்கப்படுவதை முதல்வர் தாலின் உடனே நிறுத்த ஆவன செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டரசின் கல்வித்துறையிலேயே இந்தி கோலோச்சுவதை முன்பே சுட்டிக் காட்டியுள்ளோம். கல்வித்துறையில் இந்தி வடிவச் சமற்கிருதப் பெயர்களை Samagra Shiksha, Sarva Shiksha Abhiyan (SSA), Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA), என ஒலி பெயர்ப்பில் குறிப்பிடு கின்றனர்.  (தமிழ் எழுத்துகளில் குறிக்கக் காணோம்).  ‘நம்ம school’ / Namma School Foundation எனப் புதிய மணிப்பிரவாளத்திற்கு வழி வகுக்கின்றனர். இவ்வாறு ஆட்சித்துறையிலும் இந்தி திணிக்கப்படுவதும் ஆங்கிலம் அமர வைக்கப்படுவதும் தமிழ் அகற்றப்படுவதும் நாம் நம்பும் அரசே நம்மை அழிக்கும் அவல நிலைக்கு இட்டுச் செல்கிறது.

எனவே, நம் பக்கம் உள்ள குறைகளைக் களைந்து எறிந்து விட்டு,  நம் பள்ளிகளில் திணிக்கப்படும் இந்தியை அகற்றி விட்டு, இந்தி எதிர்ப்பிற்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

அடுத்தவன் சம்பாதிக்கிறானே நாமும் சம்பாதிப்போம் என்றுதான் கல்வி வணிகத்தில் பலரும் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபடுகிறார்கள். பணம் சம்பாதிக்கும் ஒரு வாயிலை ஒரு சாரார் மூடிவிட்டனர் என்றால் பிறரும் அவ்வழியினைப்  பின்பற்றத் தயங்க மாட்டார்கள். எனவே கட்சித்தலைவர் என்ற முறையில் மு.க.தாலின் தன் கட்சியினர் யாரும் எவ்வழியிலும் இந்தியைத் திணிப்பதற்குத் தாங்கள் நடத்தும் கல்விநிலையங்களைப் பயன்படுத்தக் கூடாது என எச்சரித்துக் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2010 இல் குசராத்து உயர் நீதி மன்றம் இந்தியைத் தேசியமெழி என அறிவிக்கவோ பரப்பவோ  தடை விதிக்கும் வகையில்இந்தி தேசிய மொழி அல்ல என்று தீர்ப்பு அளித்துள்ளது.  எனவே, இந்தியைத் தேசியமொழியாகக் குறிப்பிடுவோரும் கற்பிப்போரும் கற்பிக்கும் நிறுவனங்களும் நூல்களும் தடை செய்யப்பட வேண்டும்.

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரசு தலைவருமான  மமுதா (பானர்சி) இந்தித் திணிப்பிற்கு எதிராகக் கடுமையாகப் பேசி வருகிறார்.   2017இலிலேயே பெஙகளூரில் கேரளா, ஆந்திரா, ஒரிசா, மே.வங்காளம் முதலிய  இந்தி பேசா மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்று கூடி இந்தித்திணிப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர். மேனாள் துணைவேந்தர் பத்துமா சேகர் இந்தித் திணிப்பிற்கு எதிராகக் கன்னடர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனக் குரல் கொடுத்துள்ளார்

நாமோ போலியான இந்தி எதிர்ப்பை உரக்க முழஙகிவிட்டு அமைதியாக ஆங்கிலத்திணிப்பிற்குக் கதவு திறந்து வைத்துள்ளோம். இதற்கான ஒரு செய்தி காண்போம். “தலைமைச் செயலர்கள் நிரல் பலகை ஆங்கிலத்தில் இருந்ததைக் கண்டு வருத்தமுற்றேன்.” (தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க! – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 22 – இலக்குவனார் திருவள்ளுவன் 10.03.2023 ) என வேதனையை முன்னர்த் தெரிவித்து இருந்தோம். வருத்தத்தைப் போக்கும் கையில் தலைமைச்செயலர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. நடவடிக்கை எடுத்துள்ளார். அறை முகப்பில் உள்ள பதவியாளர் நிரல் பெயர்ப்பலகையைத் தமிழிலும் வைத்துள்ளார். இது குறித்து “இன்று(15.05.23)முதல் தமிழிலும் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது எனப் புதிய தலைமுறைச் செய்தி வெளியிட்ட படத்தையும் நமக்கு அனுப்பியுள்ளார். ஏன் தமிழில் மட்டும் வைக்கக்கூடாதா எனச் சிலர் எண்ணலாம். பிற மாநிலங்களிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் வருபவர்கள் அறிய ஆங்கிலத்திலும் பெயர்ப்பலகை தொடர்கிறது. (பதவியாளர் நிரல் பலகையைத் தமிழிலும் வைத்த த.செ.இறையன்பிற்குப் பாராட்டு! – இலக்குவனார் திருவள்ளுவன், 16.05.2023) 

ஆனால், கடந்த திங்கள் தலைமைச் செயலகம் சென்ற எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பதவி நிரல் பலகை ஆங்கிலத்தில் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் பெயர்ப்பலகை இருந்த பொழுது தமிழ்ப்பெயர்ப்பலகை அகற்றப்பட்ட அநீதி ஏன் நிகழ்ந்தது. அது புதிய பலகையே. எனவே, அப்பெயர்ப்பலகை அழிநிலையில் இருந்ததாகப் பொய்யாகக் கூற இயலாது. தலைமைச்செயலர் ஆங்கிலம் மட்டும் போதும் எனச் சொல்லியிருந்தால் வேலியே பயிரை மேயும் நிலையாகிறது. பிறர் செய்திருந்தாலும் கண்டிக்கத்தக்கது. இது குறித்து நடவடிக்கை எடுக்காத் தலைமைச்செயலரின் நிலைப்பாடும் வருத்தத்திற்குரியது. இன்றைய தலைமைச் செயலர் திரு சிவதாசு மீனா இ.ஆ.ப., 1998இல் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொழுது சீர்காழி மணிமண்டபம் அமைக்க வேண்டியதற்குப் பெரிதும் ஆர்வம் காட்டியவர். அத்தகைய ஆர்வம் மிக்கவர் தமிழுக்குப் பாராமுகமாகவும் ஆங்கிலத்திற்குக் காதல் முகமாகவும் ஆட்சி அமைவதற்குத் துணையாக இருப்பது வருத்தமாக உள்ளது.

“இந்தித் திணிப்பால் ஒரு கட்சி விரட்டப்பட்டது. ஆங்கிலத் திணிப்பால் வேறொரு கட்சி அகற்றப்பட்டது” என்னும் வரலாற்றுப் பதிவை ஆட்சியாளர்கள் உருவாக்கக் கூடாது.

எனவே, “தமிழ்நாட்டில் எங்கும் எதிலும் தமிழே!” என்பதைச் செயல் வடிவில் நிலைப்படுத்த வேண்டும்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் இரு கட்டங்களில் பாசக அகற்றப்படும் அதிர்ச்சிச் செய்தியைப் பாசக உணர்ந்து வருகிறது. எனவே அடுத்து ஆட்சியமைக்கும் இந்தியா கூட்டணியை ஆட்சி யமைப்பில் வழிகாட்ட முதல்வர் மு.க.தாலின் முன்வரவேண்டும். தனக்குப் பொறுப்பு அளிக்கப்பட்டாலும் அதை ஏற்க வேண்டும். பொதுவான கல்விக் கொள்கை நாடு முழுவதும் பின்பற்ற ஆவன செய்ய வேண்டும். “ஆங்கிலம் 5 ஆம் வகுப்பில் ஆடல், பாடல் மொழியாக மட்டும் கற்பிக்கப்பட வேண்டும்; ஆறாம் வகுப்பில் இருந்தே எழுதக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அந்தந்த மாநிலங்களில் உள்ள பிற மொழியினர் தத்தம் தாய்மொழிக்கான சான்றிதழ்களை அளித்தால் மட்டும் அவர்களின் தாய்மொழியைக் கற்பதற்கு வழி வகுக்க வேண்டும்.”

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியே ஆட்சி செய்ய வழி காட்ட வேண்டும். “உரிமைக்குத் தாய்மொழி!  உறவுக்கு ஆங்கில மொழி!” என்னும் நிலைப்பாட்டை மாநிலங்கள் செயற்படுத்த வழி காட்ட வேண்டும். இந்திய ஒன்றிய அரசு பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அறிவுறுத்தியவாறு மொழி வழித் தேசிய இனங்களின் கூட்டரசாக மலர வழி காட்ட வேண்டும். பேரறிஞர் அண்ணா, அரசியலறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர், குரல் கொடுத்த “மாநிலத்தில் தன்னாட்சி! மத்தியில் கூட்டாட்சி!” என்னும் முழக்கம் நடைமுறையாக்கப்பட வேண்டும்.

இந்திய மக்கள் மு.க.தாலினை வரவேற்கக் காத்துள்ளனர். மு.க.தாலின் மாநில மொழிகளை ஆட்சியில் அமர்த்தும் நற்பணிக்கு ஆயத்தமாக வேண்டும்.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

தீயெச்சம் போலத் தெறும். (திருவள்ளுவர், திருக்குறள் 674)

ஆதலின் தமிழுக்குப்பகையான பிற மொழித் திணிப்புகளை அடியோடு அகற்ற வேண்டும். முதல்வர் மு.க.தாலின் இதற்கேற்பத் தமிழ்நாட்டில் நல்வினையாற்றவும் இந்தியத்துணைக்கண்டத்திற்கு வழிகாட்டி ஆற்றப்படுத்தவும் வேண்டும்.

இதழுரை – அகரமுதல


சித்திரை 18, 2055 / மே 01.2024



Monday, August 9, 2021

கலைஞர் பெயரைக் கேடயமாகப் பயன்படுத்தி மொழிக்கொலை புரிய அரசைத் தூண்டுவதா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல





கலைஞர் பெயரைக் கேடயமாகப் பயன்படுத்தி மொழிக்கொலை புரிய அரசைத் தூண்டுவதா?

 பதவி ஆசை உள்ள ஓய்வு பெற்ற சிலரும் உயர்பதவியில் அதிகாரச் சுவையைச் சுவைக்க விரும்பும் சிலரும் தங்கள் பதவி அரிப்பைத் தணித்துக் கொள்ள புதிய பல்கலைக்கழகம் ஒன்றுக்குக் குரல் கொடுத்துள்ளார்கள். நேரடியாகத் தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியாதே! அதனால் அவர்கள் எடுத்துள்ள கருவியே விடுதலைச்சிறுத்தை.  எனவேதான், “கலைஞரின் பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வேண்டும்..” – என அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திருமாவளவன் மூலம் அறிக்கை ஒன்று வந்துள்ளது. அக்கட்சியில் உள்ள இதழாளர், சாதி எதிர்ப்பு இயக்கவாதி, தீவிர இயக்கவாதி மூலம் அவரிடம் இக்கருத்தைச் சேர்த்து வெளியிடச் செய்துள்ளார்கள்.

அவர்களின் நோக்கம் கலைஞரைச் சிறப்பிக்க வேண்டும் என்பதல்ல. முகநூல் நண்பர் ஒருவர் குறிப்பிட்டதுபோல் கலைஞர் நிகழ்த்துக்கலைப் பல்கலைக்கழகம் என ஒன்றை அமைப்பது பொருத்தமாக இருக்கும். திரைப்படங்களுக்கு வாய்ப்பு தேடுபவர்களுக்கும் திரைத்துறையில் தங்களை மெருகேற்றிக் கொள்தற்கும் உதவியாக இருப்பது முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் உரையாடல் வரிகள்தாம். கலைஞர் என்னும் பெயருக்குக்  காரணமே அவரின் திரைக்கலை ஈடுபாடுதானே. கலைஞர் திரையியல் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கலாமே. கவிதையில் புதுவகை உரைவீச்சை அறிமுகப்படுத்திப் பல்லாயிரக்கணக்கில் எழுதியவர் கலைஞர். கலைஞர் கவிதையியல் பல்கலைக்கழம் ஒன்றை அமைக்கலாமே. ஆனால், அப்படி யெல்லாம் அமைத்தால் பதவி ஆசையர்களின் நோக்கம் நிறைவேறாதே. எனவேதான் மொழியியல் பல்கலைக்கழகம் வேண்டுகின்றனர்.

 இது குறித்துப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் தமிழ்த்துறையினரும் குறிப்பாக மொழியியல் துறையினரும் எதிரான கருத்தைத்தான் கொண்டுள்ளனர். “மொழியியல் அறிஞர் கணித்தமிழ்ச்செயற்பாட்டாளர் முனைவர் தெய்வசுந்தரம் கூறுவது போன்று இருக்கின்ற மொழியியல் துறைகளைச் சரியாகச் செயல்பட வைக்காமல் மொழியியல் துறைகளையே தோற்றுவிக்காமல் மொழியியல் பல்கலைக்கழகம் எதற்கு” என்கின்றனர் மொழியியல் அறிஞர்கள்.

 மொழியியல் துறையின் தாயாகத் திகழும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலேயே மொழியியல் துறைச் செயல்பாடு சொல்லும்படி இல்லை. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திலும் இதுதான் நிலை. சென்னைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையே இல்லை. மொழியியல் துறை இருக்கின்ற 3 பல்கலைக்கழகங்களிலும் துறைத்தலைவர் நிலையிலான பதவியில் பதவி நிலைக் குறைந்தவர்களே உள்ளனர். வேறு சில பதவிகளும் நிரப்பப்படாமல் உள்ளன. இருக்கின்றவற்றைக் காப்பாற்றாமல் புதிய கூத்தை அரங்கேற்ற வேண்டுமா என்கின்றனர்.

 சிலர் முன்னாள் முதல்வர் செயலலிதா பெயரிலான பெயரளவு பல்கலைக்கழகம் மூடப்படும் நிலையில் முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகத்தை நிறுவுவது அவப்பெயர் ஏற்படுத்தும். எனவே, அரசு இக்கோரிக்கையை நிறைவேற்றாது என்கின்றனர். இருப்பினும் நம் செவிகளில் வந்து விழும் கருத்துகளைச் சொல்ல வேண்டியது நம் கடமையல்லவா?

தொல்காப்பியர் மிகச்சிறந்த மொழியியல் அறிஞர். தொல்காப்பியப் புலமையாளர்களும் போற்றுதலுக்குரிய மொழியியல் அறிஞர்களாக உள்ளனர். ஆனால், மொழியியல் அறிஞர்கள் சிலர் தமிழை அழிப்பதற்கு இதனை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர். வாழும் மொழி எனச் சொல்லிக் கொண்டு கொச்சை வழக்குகளைப் பரப்பி வருகின்றனர். உயர்தனிச் செம்மொழியின் இலக்கியங்களாக உயர்ந்த நடை இருக்கக்கூடாது எனக் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். கொச்சை நடையைப் பார்த்து இனி வருவோர் இஃது எங்ஙனம் செம்மொழியாகும் எனக் கேட்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். எனவே, மொழியியலுக்கு எனப் பல்கலைக்கழகம் அமைத்தால் அத்தகையோர்களின் ஆளுமைக்கு அகப்பட்டுத் தமிழ்மொழி சிக்கிச் சின்னா பின்னமாகும் என்கின்றனர். எனவே மொழியியல் என்னும் பெயரில் தனித்த பல்கலைக்கழகம் தேவையில்லை என அஞ்சுவோர்களின் கருத்துகளுக்கு தமிழ் நல அரசு மதிப்பு கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

 வேறு மாநில மொழியியல் பேராசிரியர் வேறு ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றார். தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் மொழியியல் துறையினரின் ஆதிக்கம் உள்ளது. தங்கள் துறையினரே பதவிகளில் அமர வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பர். எடுத்துக்காட்டாக ஒன்றையும் தெரிவிக்கின்றார். உயராய்வு நிறுவனம் ஒன்றில் இயக்குநர் பதவிக்குத் தகுதிவாய்ந்த இலக்கிய அறிஞர்கள் நால்வர் விண்ணப்பத்திருந்தனர். அவர்களுள் பட்டறிவு மிகுந்த ஒருவரை அப்பதவியில் அமர்த்த இருந்தனர். ஆனால், மொழியியல் துறையினரே இப்பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என்பதற்காக அந்நியமனம் மேற்கொள்ளப்படாமல் இருக்கத் தடையாக இருந்தனர். ஆனால் வேறு வகையிலான போராட்டமாகக் காட்டிக் கொண்டு அப்பதவியைக் காலியிடமாக ஆக்கினர். இதனால் அந்நிறுவனத்தின் வளர்ச்சி பல ஆண்டுகள் பாதிக்கப்பட்டன என்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் அப்பதவிக்கு மொழியியல் துறையைச் சேர்ந்த யாரும் விண்ணப்பிக்கவில்லையாம். இத்தகையோரின் செல்வாக்கால்தான் மொழியியல் பல்கலைக்கழகத்திற்கான குரல் வந்துள்ளது. இதனைச் சாதியக் குரலாக மாற்றவும் சதி நடப்பதாக அவர் கூறினார்.

நேர்மையான பேராசிரியர்களும் அதிகாரிகளும் மற்றொரு கருத்தையும் முன் வைக்கின்றனர். கடந்த ஆட்சியில் பல்கலைக்கழகங்களில் பணி நியமன முறைகேடுகளால் துணைவேந்தர், பதிவாளர்,  வேறு நிலை அதிகாரிகள் விசாரணை வளையங்களுள் சிக்கி உள்ளனர்.  இதுவரை இருந்த கட்சிச் செல்வாக்காமல் தண்டனையிலிருந்து தப்பி வந்தனர். புதிய ஆட்சியிலும் தப்பிக்க வேண்டுமே. எனவேதான் ஓய்வு பெற்றவர்களுக்கு ஆசை காட்டி இக்கோரிக்கையை வைக்கின்றனர். இதன் மூலம் தங்களை அரசின் ஆதரவாளர்களாகக் காட்டிக் கொண்டு விசாரணையிலிருந்து வெளியே வர முயல்கின்றனர். எனவேதான், இத்தகைய கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லாவிட்டால் இருக்கின்ற பல்கலைக்கழகங்களை உருப்படியாகச் செயல்படச் செய்யாமல், அவரவர் துறை சார்ந்து, சிறுகதை இலக்கியப் பல்கலைக்கழகம், புதின இலக்கியப்பல்கலைக்கழகம் போன்று பல்கலைக்கழகங்கள் அமைக்கக் குரல் கொடுப்பர் என்கின்றனர். பல்கலைக்கழகங்கள் பெருகுவது தவறில்லையே என்றால், இருப்பனவற்றைப் பேணாமல், இல்லாதனவற்றிற்குப் பறப்பானேன் என்கின்றனர். விசாரணை வளையத்திலுள்ள தண்டனை பெற வேண்டியவர்கள் தப்பிப்பதற்கு அரசே பாதுகாப்பு வளையத்தை அமைத்துக்கொடுப்பது முறையல்லவே என்கின்றனர்.

இவர்களின் நோக்கம் கலைஞரைச்சிறப்பிப்பதல்ல என்பதற்கு மற்றொன்றையும் நினைவு படுத்துகின்றனர். இத்தகையோர், கலைஞரின் ஒரு படைப்பையாவது ஆய்வு செய்ய மாணாக்கர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருப்பார்களா? ஆய்வு உலகில் மதிக்கப்படவேண்டிய கலைஞரை அங்கே மதிக்காமல் இப்போது வீண் முழக்கமிடுவானேன் என்கின்றனர். 

இத்தகையோர் கலைஞர் செம்மொழி விருதுகளை வழங்குவதற்குக் குரல் கொடுத்தார்களா? நாம் குரல் கொடுத்து வந்தோம்.”கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்குவதே கலைஞருக்கு உண்மையான அஞ்சலி!” என நக்கீரனிலும் கட்டுரை எழுதியிருந்தோம். புதிய அரசு அமைத்ததும் முதல்வருக்கு மடல் அனுப்பினோம். தமிழ்அமைப்புகள் சார்பிலான புதிய அரசிற்கான வாழ்த்தரங்கத்திலும் கோரிக்கை வைத்தோம். முதல்வர் மு.க.தாலினும் விருதாளர்களைத் தேர்ந்தெடுக்கப் புதிய தெரிவுக் குழுவை அமைத்துள்ளார். ஆனால், நேற்றுவரை அவரை நினைக்க அஞ்சியவர்களுக்கு இன்றைக்குத் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் மீது பாசம் பொங்கிக் கொண்டு வந்துவிட்டதாம். யாரேனும் இவர்கள் நடிப்பை நம்புவார்களா?

 மொழியியல் பல்கலைக்கழகத்தின் நோக்கம் என்னவாம்? உலகின் பல்வேறு மொழிகளைக் கற்பிக்கவும், இந்திய மொழிகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், மொழிபெயர்ப்புகளை ஊக்குவிக்கவும், உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்து ஆராய்ச்சிக் கல்வி பயிலுவோர் இந்தியாவுக்கு வந்து மொழியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும்தானாம். இப்பொழுது தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை என ஒன்று உள்ளது. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழியியல் புலமும் அயல்நாட்டுத் தமிழர் புலமும் உள்ளன. இவற்றைக் கொண்டே பன்மொழிக் கற்பிப்பை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலுமே பன்மொழிப் புலத்தை அமைக்கலாம். நாம் பிற மொழிகளை அறிவது சிறப்புதான். எனினும் நம் முதல் கடமை தமிழே அறியாத தமிழர்களையும் தமிழ்நாட்டில் உள்ள பிற மொழியினரையும் தமிழ் அறியச் செய்வதுதான்.

 இருக்கின்ற சமற்கிருத அமைப்புகளையெல்லாம் பல்கலைக்கழகத் தகுதி அளித்து உயர்த்தி வருகிறது மத்திய அரசு. தமிழ்நாட்டரசும் உலகத்தமிழராய்ச்சி நிறுவனம், தமிழ் இணையக்கல்விக்கழகம் முதலிய அரசு நிறுவனங்களையும் மதுரைத்தமிழ்ச்சங்கம், கரந்தைத்தமிழ்ச்சங்கம் முதலான தமிழ்ச்சங்கங்களையும் பல்கலைக்கழக நிலைக்கு மேம்படுத்தலாம். கட்டமைப்பு உள்ள கல்வி நிறுனங்களைத் தகுநிலைப்பல்கலைக்கழகங்களாக மாற்றாமல் புதிய பல்கலைக்கழகம் அமைத்துக் கட்டமைப்பை உருவாக்குவது வீண் வேலையன்றோ?

 “பெருக்கத்து வேண்டும் பணிதல்” என்னும் திருக்குறளடிக்கு(963) எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் முதல்வர் மு.க.தாலின். தனக்கொரு நீதி, பிறருக்கொரு நீதி என்றோ தன் கட்சியினருக்கு ஒரு நீதி, பிற கட்சியினருக்கு ஒரு நீதி என்றோ பாராமல் நடுநிலையுடன் செயல்படுபவர். இவரைத்தவிர வேறு யாரும் முதல்வர் பொறுப்பில் அமர்ந்திருந்தால் அவர் நின்றாலும் நடந்தாலும் ஊர் தோறும் சென்றாலும் ஆரவாரப் புகழ்ச்சி உரைகளே கேட்டிருக்கும். செல்லுமிடங்களிலெல்லாம் வரவேற்புப் பதாகைகளும் வெட்டுருக்களும் ஆடம்பரக் காட்சிகளுமே வீற்றிருக்கும். ஆனால், இவர் முன்னெடுத்துக்காட்டான தலைவராகத் திகழும் ஆன்றோராக் காட்சி அளிக்கிறார். எனவே, கலைஞரின் பெயரைப் பயன்படுத்திப் பல்கலைக்கழகம் கேட்குநரின் பேராசையை நிறைவேற்ற மாட்டார்; ஊழலில் திளைத்தோர் தப்பிப்பதற்கு இடம் தர மாட்டார்; மொழிக்கொலைஞர்கள் தங்கள் கொலைப்பணியைத் தொடர வாய்ப்பு தரமாட்டார் என நம்புகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல

ஆடி 25, 2052 / 10.08.2021

Sunday, May 2, 2021

முதல்வர் மு.க.தாலின், புதிய உறுப்பினர்கள், வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!- இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




முதல்வர் மு.க.தாலின், புதிய உறுப்பினர்கள், வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!

 

தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்

(திருவள்ளுவர், திருக்குறள் 462)

திருவள்ளுவர் திருவாய்மொழிக்கிணங்க தேர்தல் வழிமுறைகளை நன்கு தெரிந்த கூட்டத்தோடு ஆராய்ந்து, பலவகையாலும் தாமும் எண்ணி அருவினை ஆற்றி வெற்றியை அறுவடை செய்துள்ளார் தி.மு.க.தலைவர் மு.க.தாலின். தேர்தல் கணிப்புகள் பொய் எனக் கூறி தி.மு.க. வெல்லாது என்றவர்களுக்கு வலுத்த அடியைக் கொடுத்துள்ளது தேர்தல் முடிவுகள். 125 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுத்தனிப் பெருங்கட்சியாகத் திகழ்கிறது. கூட்டணிக்கட்சிகள் 34 இடங்களை வென்றுள்ளன.

தமிழக மக்கள் எப்பொழுதும் கூட்டணி ஆட்சியைத் தெரிவு செய்யாமல் தனித்த நிலையான ஆட்சிக்குத்தான் வாக்களிப்பர் என்னும் நிலைப்பாட்டில் வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி. தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்காமல் வெற்றி பெறப்போகும் கட்சிக்கு வாக்களிப்பதும் வாக்களார்கள் பழக்கம். இதன் காரணமாகத்தான் அ.ம.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வாக்கை வீணாக்காமல் நிலையான ஆட்சி வேண்டித் தி.மு.க.விற்கு வாக்களித்தனர்.

பா.ச.க. என்னும் பாம்பைக் காலில் சுற்றி வைத்துக் கொண்ட அ.தி.மு.க.வால் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை;. பொதுத்தேர்வு முதலான பல் வேறு சூழல்களில் பா.ச.க.வின் தாளத்திற்கு ஏற்ப ஆடியதால் ஆட்சியை இழந்து விட்டது. ஆட்சியை இழந்த எடப்பாடி பழனிச்சாமி கட்சியைக் காப்பாற்றிக் கொண்டார்; 92,868 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி அடைந்துள்ளார்; அ.இ.அ.தி.மு.க.வை 65 இடங்களில் வெற்றி பெறச் செய்துள்ளார்; கூட்டணிக் கட்சிகளை 9 இடங்களில் வெற்றி பெறச் செய்துள்ளார்; தான் உழைத்த கொங்கு மண்டலத்தில் மகிழ்ச்சியான வெற்றியைக் கட்சிக்கு வாங்கித் தந்துள்ளார். என்றாலும் அவர் கவனமாகச் செயல்படாவிட்டால் ஆட்சியை இழந்ததற்கு அவரின் பிடிவாதம்தான் காரணம் என அவருக்கு எதிராகக் கலகக் குரல்கள் எழுவதைத் தடுக்க இயலாது. இருப்பினும், தேர்தல் வரும் வரை ஆட்சியை நிலைக்கச் செய்து கட்சியிலும் பிடிப்பை ஏற்படுத்திக் கொண்ட அவருக்குப் பாராட்டுகள்!

கடம்பூர் இராசு எளிமையாக அனைவரிடமும் பழகும் பண்பினால் மக்களைக் கவர்ந்து வெற்றி பெற்றுள்ளார். ஆகவே, தினகரனின் சாதிக்கணக்கு வெற்றி பெறவில்லை. ஆனால், தினகரன் கட்சி இந்த அளவிற்குக் குறைவான வாக்குகள் பெறும் என எதிர்பார்க்கவில்லை. “தினகரன் தனிக் கட்சியில் இருப்பதைவிட, அதிமுகவில் இருந்தால் முதன்மைச் செல்வாக்கு பெறுவார்”  என முன்பு குறிப்பிட்டதுதான் உண்மை.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற

(திருவள்ளுவர், திருக்குறள் 495)

என்பதற்கு இலக்கணமானார்.

அ.தி.மு.க.வை மீட்க முயலும் தினகரனால் தன் கட்சியையே காக்க முடியவில்லை. இதற்குச் சசிகலாவும் ஒரு  காரணம். பா.ச.க.வின் மிரட்டலால் அரசியலிலிருந்து ஒதுங்கியவர் அ.தி.மு.க.ஆதரவுத் தொனியை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் அ.ம.மு.க. கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கும். ஆயிரத்திற்கும் குறைவாகவே வாக்குகளைப் பெற்றுள்ள இப்போதைய அவல நிலைக்கு வந்திருக்காது.

ஒரு தேர்தல் முடிந்ததுமே அடுத்த  தேர்தலுக்கான பணியைத் தொடங்குவது பா.ச.க.வின் திட்டமிடல் பழக்கம். எனினும் வாக்குகளிலேயே கருத்து செலுத்தும் அக்கட்சி வாக்காளர் நலன் குறித்துக் கருத்து செலுத்தாமைதான் தோல்விக்குக் காரணம். எம்.ஆர் காந்தி, நயினார் நாகேந்திரன், சி.கே.சரசுவதி ஆகியோர் முற்றிலும் தனிப்பட்ட செல்வாக்கினால்தான் வெற்றி பெற்றுள்ளனர். வானதி சீனிவாசனுக்குத் தன் தொகுதியில் உள்ள உள்ள பா.ச.க.வாக்கு வங்கியும் பிற மாநிலத்தவர்கள் வாக்குகளைப்பெற  அவர் மேற்கொண்ட தேர்தல் உத்திகளும் கை கொடுத்து வெற்றிக் கனியை அளித்துள்ளது. இனியேனும் பா.ச.க. தமிழக மக்கள் நலன்களுக்கு ஆதரவாகச்செயல்படட்டும்!

கலைஞர்களைப் போற்றும் தமிழக மக்கள் தேர்தல் களத்தில் திரை உலக மாயையில் வீழ்வதில்லை என்பதைக் கமல் புரிந்து கொண்டிருப்பார்.

நம் முதல் வாழ்த்து சீமானுக்குத்தான். ஏனெனில், தேர்தல் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து தேர்வு எழுதி எழுதித் தன் கட்சியை வளர்த்து வருகிறார். தமிழர் என்ற உணர்வு வெளிப்படுவதற்கு அவரின் நாம் தமிழர் கட்சி பாடுபடுகிறது. சம பங்கு பெண் வேட்பாளர்கள், வாக்குகளை விலைக்கு வாங்காமை போன்ற அவரின் பல செயல்கள், அவருக்கு வாக்காளிக்காதவர்களாலும் பாராட்டப்பட்டுள்ளன. சீமான், திராவிடம் என்னும் சொல்லாட்சியைப் புரிந்து கொள்ளாமலும் திராவிடக்கட்சிகள் செய்யத் தவறியவற்றைக் கண்டிப்பதற்காகச் செய்த பணிகளைப் புறக்கணிப்பதும் தவறு என உணர வேண்டும்.

தே.மு.தி.க அதன் தலைவர் விசயகாந்தின் தனிப்பட்ட செல்வாக்கு மீது மட்டும் பயணம் செய்வதால் அவர் நலிவுற்ற சூழலில் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லவில்லை.

தி.மு.க.கூட்டணியால்தான் பேராயக்கட்சி(காங்கிரசு) 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஈழத்தமிழர் படுகொலைதொடர்பாக அதன் மீதுள்ள சினம் நீறுபூத்த நெருப்பாகத்தான் உள்ளது. சமற்கிருத, இந்தித் திணிப்புகளுக்குக் கால்கோளிட்டு வளரச்செய்தது அக்கட்சிதான். பா.ச.க. இன்றைக்குச் சொல்லும் தட்சிணப்பிரதேசம் உட்பட கூட்டாட்சிக்கும் தேசிய மொழி இன உரிமைகளுக்கும் எதிான எல்லாச் செயல்பாடுகளுக்கும் வழி அமைத்தது பேராயக்கட்சிதான். இனியேனும்  தன் போக்கை அது மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஊடக விளம்பரத்தில் மயங்கி, மக்கள்மனத்தைப் புரிந்து கொள்ளாமல் சகாயம் (இ.ஆ.ப.) தேர்தலில் இறங்கியதைக் குறிப்பிட்டிருந்தோம். இந்தத் தேர்தல் முடிவுகள் அவருக்கு நாட்டு மக்கள் நிலையைப் புரிய வைத்திருக்கும். இந்தப் புரிதல் அடிப்படையில் அவர் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும்.

தேர்தலில் வாகை சூடிய அனைவருக்கும் வாழ்த்துகள்! கட்சிச் சார்பின்றிப்  பணியாற்றுவதன் மூலம் கட்சிக்குப் பெருமை சேர்க்கட்டும்! மக்கள் நலப்பணிகளில் கருத்து செலுத்தட்டும்! தமிழர், தமிழ் நலன்களுக்குக் குரல் கொடுக்கட்டும்! அமைச்சரவை முடிவானதும் அமைச்சர் பொறுப்பேற்க இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்! மக்கள் பகைப்போக்கிற்கு இடம் தராமல் நிலைத்த பணியாற்றுங்கள்!

ஆட்சியில் அமருவதற்கு முன்னரே ஆட்சிப்பொறுப்பேற்றதும் செய்ய வேண்டிய திட்டங்களை வகுத்து வைத்துள்ளார் மு.க.தாலின். அவற்றைத் திறம்படச் செய்து மக்கள் உள்ளங்களில் நிலைத்த இடம் பெறட்டும்!  இயன்றால் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆட்சியில் இடம் தரட்டும்! இல்லையேல் அமைச்சுப்பதவிக்கு இணையான பதவிகளை நல்கி ஆட்சியில் அவர்களையும் இணைத்துக் கொள்ளட்டும்!

பொறுப்பேற்க உள்ள புதிய பேரவையினருக்கும் அமைச்சரவையினருக்கும் வாழ்த்துகள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை -அகரமுதல

 



Followers

Blog Archive