Wednesday, July 22, 2015

இறையாண்மை என்றால் இதுதான் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்


iraiyaanmai_endral_thalaippu

  இறையாண்மை என்னும் சொல்லிற்குக் காலந்தோறும் மாறுபட்ட பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் செலுத்தும் வகையில் அதிகாரம் முற்றிலும் உறைதல் (தங்குதல்) என்னும் அடிப்படைப் பொருளில் மாற்றம் மிகுதியாக இல்லை. இறையாண்மை என்பது அண்மையில் பெரிதும் பேசப்பட்டு வருவதால் நாம் இதனை அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது. தமிழர்க்கு இறையாண்மை மிக்க அமைப்பு தேவையா? அவ்வாறு பேசுவது சரியா? தவறா? தமிழக இறையாண்மை என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? என்பனவெல்லாம் நாம் அறிய வேண்டுவன ஆகும்.புவிப்பரப்பில் சட்டங்களையும் விதிகளையும்  ஆக்கவும் செலுத்தவும் அழிக்கவும் வல்ல மிகுஉயர் அதிகாரம் மிக்க அமைப்பை இறையாண்மை மிக்க அமைப்பு என்கின்றனர். தனியரிடம் அல்லது சிறு குழுவிடம் அல்லது கட்சியிடம் அல்லது பிற வகையில் இறையாண்மை உறைவதைப் பொறுத்து அதன் நிலைப்பாடும் மாறுபடுகிறது. ஆட்சி முறை மாறி வருவதாலும் பெரும்பாலும் இப்பொழுது மக்களாட்சி முறையே வற்புறுத்தப்படுவதாலும் இறையாண்மை பற்றிய விளக்கம் மாறுபடுகிறது.
 உரூசோ, பகுக்கப்படாத, முழுமையான, தவறெனச் சொல்ல  இயலாத, எப்பொழுதும் சரியான, பொதுநலன் சார்ந்த அதிகாரவைப்பை இறையாண்மை என்கிறார். இறையாண்மை இல்லாத சட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறுகிறார். எனினும் 1789இல் பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்ட பின்பு இறையாண்மை என்பது ஆளுவோரிடமிருந்து நாட்டு மக்களிடம் இட மாற்றம் பெற்றது. மாக்கியவல்லி, உலூதர், போடின், ஆபெசு (Machiavelli, Luther, Bodin, and Hobbes) முதலானோர் இறையாண்மை குறித்து அரசியல் சிந்தனைகளில் முதன்மை இடம் கொடுத்துள்ளனர்.அரசை உருவாக்கும் அதிகார ஆளுமை என்றும் வன்முறைக்கு அஞ்சா அரச ஆளுமை என்றும்கூட இறையாண்மை பற்றிய கருத்துகளை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
  இறையாண்மைக்கு உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரே பொருள் என்றும் இருந்ததில்லை எனப் பன்னாட்டுச் சட்டங்களில் வல்லுநரான இலாசா ஓபன்கெய்ம் (Lassa Oppenheim) கூறுகிறார்.சட்டப்படியும் நடைமுறைப்படியுமான (De jure and de facto) அதிகார உரிமையே இறையாண்மை என்றும் சொல்லப்படுகிறது. இதன்படி இறையாண்மை என்பது குடிமக்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைக் கொண்டுள்ளதா? நடைமுறையில் அவற்றிற்குக் குடி மக்கள் கட்டுப்படுகின்றனரா என்பவற்றைப் பொறுத்ததே. ஏட்டுச் சட்டத்தை விட நாட்டுச் செயல்பாட்டிற்கே இது முதன்மை அளிக்கிறது. நிலப்பரப்பு இருந்தால்தான் இறையாண்மை இருக்குமா என்றால் அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை என்பதே உலக வரலாறு உணர்த்தும் உண்மை. இத்தாலி  நாட்டின் வாடிகன் நகரில் அமைந்துள்ள திருத்தல ஆளுகை (Holy See) என்பது  நிலப்பரப்பற்ற இறையாண்மை மிக்கதாகும். இதே போன்ற நிலப்பரப்பற்ற மற்றொரு இறையாண்மை அமைப்பு  இத்தாலியில் உள்ள படைவீரத் துறவிகள் தொண்டகம் (Sovereign Military Order of Malta) ஆகும். பன்னாட்டு அவையிலும் இவற்றிற்குப் பார்வையாளர் தகுதி உண்டு.
  பழந்தமிழ்நாட்டில் இறையாண்மை பற்றி ஒன்றும் சொல்லவில்லையா என்று வினவலாம். அவர்கள் இறையாண்மை பற்றிக் கவலைப்படவில்லை. இறைமாட்சி குறித்துத்தான் கருத்து செலுத்தினர். அஃது என்ன இறைமாட்சி என்கிறீர்களா? இறையாண்மை மாட்சிமையுடன் – சிறப்புடன் – அமைவதைக் குறிப்பதே இறைமாட்சி. இறையாண்மை ஆளும் முறைக்கு ஏற்ப மாறுபடலாம். ஆனால் இறைமாட்சி என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்ற அறவுணர்வு தமிழர்களிடம் ஓங்கியதாலே இறைமாட்சி குறித்து வலியுறுத்தினர்.தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளின் இரண்டாம் இயலான பொருளியலில் முதல் அதிகாரமாக இறைமாட்சி குறித்துத்தான் விளக்குகிறார். குடிமக்கள் நலன் சார்ந்த இறையாண்மையே இறைமாட்சி மிக்கது என்பதை அவ்வதிகாரத்தின் முதல் குறளிலும் இறுதிக் குறளிலும் குடிமக்கள் பற்றிக் குறிப்பிட்டு வலியுறுத்துகிறார்.
  இவ்வதிகாரத்தின் முதல் குறள் (381)படைகுடி கூழ் அமைச்சு நட்புஅரண் ஆறும்      உடையான் அரசருள் ஏறு.  பொருளியல் முதல் குறள் மூலம் குடிமக்களை அரசின் உறுப்பாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் விளக்குகிறார்.இவ்வதிகாரத்தின் இறுதிக் குறள் (340)கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்             உடையானாம் வேந்தர்க்கு ஒளிஎன்பதாகும்.
  இதன் பொருள், நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும் மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும் என்கிறார் கலைஞர் .இறைமாட்சி என்றால், அரசனின் நற்குண நற்செய்கைகள். உலகபாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின், இறை என்றார். திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் என்று பெரியாரும் பணித்தார் என அரசனை இறைவனுக்கு ஒப்பாகக் கூறுகிறார் பரிமேலழகர். காலிங்கர் உலகத்து மக்கட்கெல்லாம் நலிவற்ற ஆட்சியை வழங்க மன்னவர் மாட்சிமை முற்பட வேண்டும் என்பதே இறைமாட்சி என்னும் பொருளில் விளக்குகிறார்.எனவே, இறையாண்மை யாரிடம் உள்ளது அல்லது எவ்வாறு உள்ளது என்பதை விட அது மாட்சிமைப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே தமிழர் நெறி எனப் புரிந்து கொள்ளலாம். இதுவே உலகோர் போற்ற வேண்டிய தலைசிறந்த நெறியுமாகும்.
  இவற்றின் அடிப்படையில் நாம்  இந்திய இறையாண்மை குறித்து நோக்கலாம்.புவிப்பரப்பில் இயல்பாய் அமைந்த நிலப்பரப்பில் கூடி வாழும் மக்களினம் தம் நலனுக்கெனத் தன்னளவில் கொண்டுள்ள அதிகாரமும் உரிமையுமே உண்மையில் இறையாண்மையாக உருப் பெருகிறது அல்லது அழைக்கப் பெறுகிறது எனலாம். இருப்பினும்  உலகின் பல பகுதிகள் குடியேற்றங்களாலும் ஆட்சிப் பரவலாலும் ஆளுகைப் பகுதிகளாக உருவாகிப் பின்னர் இறையாண்மை மிகுந்த நாடுகளாக விளங்குகின்றன. இதைப்போன்றே இந்தியா என்று இன்று அழைக்கப் பெறும் இந்நிலப் பரப்பும் இயல்பாய் உருவான இயற்கை நாடல்ல. அயலவர்  ஆட்சி வசதிக்காகச் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆளுமைப் பகுதியே.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்


No comments:

Post a Comment

Followers

Blog Archive