Showing posts with label 1938 முதல் மொழிப்போரில் பெண்கள். Show all posts
Showing posts with label 1938 முதல் மொழிப்போரில் பெண்கள். Show all posts

Friday, May 22, 2026

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 5 : இலக்குவனார் திருவள்ளுவன்



(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 : தொடர்ச்சி)

21.02.1940 அன்று கட்டாய இந்தி நீக்கப்பட்ட செய்தி குறித்து 17 ஆவது கட்டுரை தெரிவிக்கிறது.

21.02.1940 அன்று கட்டாய இந்தி நீக்கப்பட்டது. அப்போதைய மாகாண ஆளுநர் சான் எருசுகின் பிரபு இதனை அறிவித்தார். இரண்டாம் உலகப்போர்ச் சூழலில் உள்ளூர்ச் சிக்கலில் மாட்டிக்காெள்ள வேண்டா என்ற எண்ணத்தில் இவ்வாணை பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் ஆசிரியர்.

அன்றே இது குறுஞ்செய்தியாக விடுதலை இதழில் வெளிவந்ததை எடுத்துரைத்துள்ளார். அத்துடன் மறுநாள் விடுதலையில் இது குறித்து வந்த செய்திக்கட்டுரையையும் அளித்துள்ளார். ஆச்சாரியார் அழைத்து வந்த ‘கட்டாய இந்தி கட்டி விட்டது மூட்டை’ என்னும் தலைப்பில் வந்திருந்தது. அதில், 

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

சத்தியாக்கிரக சூரர்கள் என்று சொல்லப்படும் காங்கிரசார் பலப்பல சத்தியாக்கிரகங்கள் செய்து தோல்விமேல் தோல்வியே கண்டனர்.

ஆனால், தமிழர் தொடுத்தபோராட்டம் வெற்றியைத் தந்தது.

ஏன்? தமிழரின் தனிச்சிறப்பு அதுதான்!தமிழர் எக்காரியத்திலும் துணிந்து இறங்கினால், கட்டுப்பாடாகக் கிளர்ச்சியை நடத்தினால், தலைவரின் ஆணையின்படி நடந்து தளராது உழைத்தால்,

வெற்றி கிடைப்பது நிச்சயம்! நிச்சயம்!

இவ்வாறு மேலும் வெற்றிப்பெருமிதமாக கட்டுரை அமைந்துள்ளது.

நாளிட்ட இதழில் வந்திருந்தது. அதனையும் வெளியிட்டுள்ளார். இவ்வறிக்கையில் தீவிரக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கும் பொருளுதவி தந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார். போராட்டங்களைக் குறைத்தும் திரித்தும் மறைத்தும் வஞ்சக(விசம)த்தனமாகவும் நடந்து கொண்ட கூலிகளையும் இதழ்களையும் வென்றெடுத்த தமிழ் உணர்வைப் பாராட்டியிருந்தார். ஆரம்பம் முதல் பெரியதொரு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படும்படி உதவி செய்து வந்ததாக மெயில் பத்திரிகையைப் பாராட்டியுமிருந்தார்.

மெயில் இதழ் பற்றிய குறிப்பையும் ஆசிரியர் தந்துள்ளார். அது வருமாறு:

மெயில்இதழ் சென்னையிலிருந்து வெளிவந்த மாலைப்பத்திரிகையாகும். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின்போது அதன் தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆல்பிரடு ஆர்தர் ஃகேயில்சு என்ற ஆங்கிலேயர். 1912 ஆம் ஆண்டு சென்னைக்குப் பிழைப்பு தேடி இங்கிலாந்திலிருந்து வந்த ஃகேயில்சு சென்னைவாசியாகி மாகாணத்தின் அரசியல் நன்கு தெரிந்தவராக இருந்துள்ளார். மெயிலில் வெளியான போராட்டப் புகைப்படங்கள் விடுதலையில் எடுத்தாளப்பட்டுள்ளன. நடந்து வந்த போராட்டங்களுக்கு உண்மைத் தன்மையையும் அதன் பயனாக மக்கள் நம்பிக்கையையும் இந்த புகைப்படங்கள் கட்டாயம் கொண்டு வந்தன எனலாம். 1978 ஆம் ஆண்டே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக முத்துசாமி ஐயர் நியமிக்கப்பட்டதை ஒரு திராவிடச் செய்தியாளர் என்ற பெயரில் விமரித்த மெயில் இதழ், “தன்னைக் கடவுளுக்கு ஒப்பாகக் கருதுபவனும் மற்றவர்களை மிலேச்சர்கள் எனவும் கருதும் பார்ப்பனன், மக்களைச் சரிசமமாக நடத்தி நீதியைப் பேணத் தகுதியற்றவன்” என எழுதியது.

1868ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை வெளிவந்த இச்செய்தித்தாள் குறித்து இன்றைய தலைமுறையினர் அறிய உதவும் செய்தியாகும் இது.

கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்ட வெற்றி குறித்த செய்தியையும் கட்டுரையையும் படிக்கும் பொழுது ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ், தமிழர் நலன்களுக்கு எதிரான செயல்களுக்கு எதிரான போராட்டங்களில் போலி வெற்றிக்கே நம் தமிழர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர். போலி வெற்றி என்பதும் தோல்விக்கு ஒப்பானதே என்பதை நாம் உணர்வது எப்பொழுதோ?

இந்தியைத் தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில் இருந்து அகற்றினால் மகிழலாம். ஆனால், விருப்பப்பாடம் என்ற போர்வையில் இன்று வரை இந்தி கட்டாயமாகத்தான் உள்ளது. இந்தியை நுழைய விடமாட்டோம் என அறைகூவும் இன்றைய தி.மு.க.வின் தலைவரும் இதுவரை ஆட்சியில் இருந்தவருமான மு.க.தாலின் மகள் பள்ளியிலேயே இந்தி உள்ளது. மாநிலத் தன்னாட்சியை வலியுறுத்தும் கட்சியினர் நடத்தும் பள்ளிகளிலேயே ஒன்றிய அரசு சார் இந்திக்கல்விக்கு இடம் தருவானேன்? இந்தி எதிர்ப்பில் வெற்றி காண்பதாகக் கூறும் அவலத்தை நாம் புரிந்து கொண்டால்தான் விருப்பப்பாடம் என்று கட்டாயமாக இந்தியை நுழைத்துக் கொண்டிருக்கும் ஒன்றிய , மாநில அரசுகளுக்கு எதிராக உண்மையாகப் போராடி வெற்றி காண்போம்.

Wednesday, April 29, 2026

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 : இலக்குவனார் திருவள்ளுவன்



(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 3 : தொடர்ச்சி)

ஈ.வெ.இரா.உரை, நிறைவேறிய மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்தது 11ஆம் கட்டுரை.

இநதி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல்முறையாகப் பெண்கள் கைது என்பது குறித்து 12 ஆம் கட்டுரை கூறுகிறது.

எண்மர் கைது குறித்தது 13 ஆம் கட்டுரை. நவம்பர் 14 அன்று ஐந்து பெண்கள் கைதானதற்குப் பிறகு நவம்பர் 21 அன்று எட்டுத்தாய்மார்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப் பட்டனர்.

பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை நிரப்பிக் கொண்டிருந்தனர். இதற்குக் காரணமான பெரியார் மீது நடவடிக்கை என்பது குறித்தது 14 ஆம் கட்டுரை.

பெண்கள் கைதைஒட்டிய பிற போராட்டங்கள் கைதான பெண்கள் சிறுகச் சிறுக விடுதலை என்பன குறித்துப் பதினைந்தாம் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

 புதுவை சிவம் கைதான பெண்களுக்குப் பாராட்டு வழங்கிய பாடலுடன் கட்டுரை தொடங்குகிறது. தமிழர்  நலங்காக்கத் தன்மதிப்பு காக்க சிறை சென்றதாகப் பாராட்டியுள்ளார். சென்றது சிறைச்சாலைக்கு அல்ல தீமையெல்லாம் வீழ்த்த அறச்சாலைதான் ஏகியதாகக் குறிப்பிடுகிறார் கவிஞர்.

தமிழ்நாட்டின் முதல் ஒடுக்கப்பட்ட இனப் பெண் போராளி மேரி செளந்தரியம்மாள் வேண்டுகோளை முதலில் தந்துள்ளார். பெண்கள் கைதுகளை எதிர்த்துத் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கண்டன ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் தகவல்களை நமக்கு அளித்துள்ளார். சிறைசென்ற தாய்மார்களின் படங்களையும் தந்துள்ளார். இந்தி எதிர்ப்பில் முதன்முதலில் கைதான பெண்கள் விடுதலையான செய்தியையும் தந்துள்ளார். திசம்பர் 23, ஞாயிற்றுக்கிழமையை இந்தி எதிர்ப்பு நாளாகக் கொண்டாட வேண்டிய அறிவிப்பு, அவ்வாறு தமிழ்நாடு முழுவதும் நிகழ்த்திய நிகழ்வுகளையும் அளித்துள்ளார்.

அடுத்த பதினாறாவது கட்டுரையில் வேலூர் பெண்கள் முதலாவது சென்னை மாநிலத் தமிழ்ப்பெண்கள் மாநாடு குறித்த விவரங்களை விளக்கியுள்ளார்.   பண்டிதை நாராயணி அம்மாள் தலைமையுரையில்   இந்தித் திணிப்பு, இந்தியால் ஒற்றுமை உண்டாகுமா?, இனி செய்ய வேண்டுவன, நமக்கு முதலில், இரண்டாவதாக, மூன்றாவதாக, நான்காவதாக, ஐந்தாவதாக, ஆறாவதாக இருக்க வேண்டியன குறித்துத் தெரிவித்தனவற்றை எடுத்துரைத்துள்ளார். தோழர் பச்சம்மாள் வரவேற்புரையையும்    சிறைசென்ற பெண்களுக்கு வழங்கிய பாராட்டையும் தெரிவித்துள்ளார். மாநாட்டு நடவடிக்கையையும் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய தாமரைக்கண்ணி அம்மையானர் உரையையும் தந்துள்ளார். இந்தி எதிர்ப்பு என்னும் பன்முறைப் போரின் ஒரு பகுதியான தாழ்த்தப்பட்டவர் மாநாடு குறித்தும் நமக்குத் தந்துள்ளார்.   

Wednesday, April 22, 2026

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் - நூலாய்வு 3 : இலக்குவனார் திருவள்ளுவன்

      23 April 2026      கரமுதல



(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 2 : தொடர்ச்சி)

இந்தி எதிர்ப்பு நிதிக்கு இசுலாமியப்பெண்களும் நிதி வழங்கியமை, மே்டையைச் சரிசமமாகப் பகிர்ந்த பெண்கள், பெண்கள் திரளாகப் பங்கேற்ற ‘தமிழ்நாடு தமிழருக்கே’ ஊர்வலம், எல்லா வடிவத்திலும் எல்லா இடத்திலும் பெண்களின் இந்தி எதிர்ப்பு, முதலியவைபற்றியும் இக்கட்டுரையில் விவரித்துள்ளார்.

இக்காலத்தில் பெண்கள் ஒதுக்கீட்டில் இடம் பெற்ற பெண்களின் பின்னால் ஒளிந்து கொண்டு ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால், அப்பொழுது பெண்களே இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளனர் என்பதை நாம் இக்கட்டுரை மூலம் அறிந்து கொள்ளலாம்.

நிகழ்ச்சிகள் தொடர்பான துண்டறிக்கைகள், செய்திகள், அறிவிப்புகள், பெண் தலைவர்கள் படங்கள், பெண் போராளிகள் படங்கள், தொடர்பான கருத்துப் படங்கள் எனப் பலவற்றையும் நூலாசிரியர் தொகுத்து அளித்துள்ளார்

தலைவர் நீலாம்பிகை அம்மையார் என்பது ஆறாவது கட்டுரை.

தம் தந்தையார் மறைமலையடிகளால் தனித்தமிழ்ப்பக்கம் ஈர்க்கப்பட்ட நீலாம்பிகை அம்மையார், வாணாள் முழுவதும் அதில் நிலையாக இருந்தார் எனவேதான் இந்தி எதிர்ப்புப்போராட்டங்களில் தனித்தமிழ் மணமும் கமழக் காணலாம். “முன்னமே நாம் பிற மொழிச்சேர்க்கைக்கு இடம் கொடுத்து விட்டோம்.இனிமேலாயினும் பிறமொழிச் சேர்க்கைக்கு இடம் கொடாமல் நம்மையும் நம் அருமைத் தமிழையும் பாதுகாத்துக் கொள்வோமாக” என மாநாட்டில் பேசிய நீலாம்பிகை அம்மையார் அதன் மூலம் தமிழ்ப்பெண்களுக்குத் தமிழுணர்வு ஊட்டினார் என்பதை விளக்குகிறார்.

ஏழாவது கட்டுரையில், பெரியாருக்குப் ‘பெரியார்’ பட்டம் சூட்டியது குறித்து விவரிக்கிறார். இந்தி எதிர்ப்பு என்பது பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, தனித்தமிழ் எழுச்சி முதலியவற்றையும் அடிப்படையாகக் கொண்டதே என்பதை இக்கட்டுரை மூலம் தெளிவுபடுத்துகிறார்.

மாநாட்டு நிகழ்ச்சிகளை எட்டாவது கட்டுரை விளக்குகிறது. மாநாடு தொடர்பான தலைவர்கள் குதிரை வண்டியில் வைத்து அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான பெண்கள் தமிழ்க்கொடிகளை ஏந்தி, தமிழ் வாழ்க, தமிழ்நாடு தமிழருக்கே இந்தி வீழ்க, தமிழ்ப்பெண்கள் வாழ்க, தமிழர் வாழ்க என முழக்கமிட்டு வந்துள்ளனர். தமிழ்ப்பெண்கள் தமிழ் வாழ்த்துப்பாடி வந்துள்ளனர் என விளக்குகிறார். மாநாட்டில் 5000 பேருக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். அன்றைக்குப் பெண்களிடம் இருந்த தமிழ் எழுச்சி எங்கே போய்விட்டது என்றுதான் தெரியவில்லை.

ஒன்பதாவது கட்டுரையில் அன்னை மீனாம்பாள், மரு.தருமாம்பாள், பண்டிதை நாராயணி, பார்தவி யம்மையார் உரைகள் ஆகியன தரப்பட்டுள்ளன. அத்தகைய தமிழுணர்வு மிக்க, தமிழ் எழுச்சி ஊட்டக்கூடிய பெண் தலைவர்களை இன்று காணவில்லை. 

வரவேற்புக்குழுத் தலைவர் வ.பா.தாமரைக்கண்ணியம்மையார் என்பது ஒன்பதாவது கட்டுரை. மிகச் சிறப்பான சொற்பொழிவாற்றியுள்ளார் தாமரைக் கண்ணி அம்மையார். இவ்வுரையில் கொச்சைப்பேச்சு நடையில் எழுத்தாளர்கள் எழுதுவது குறித்தும் பின்வருமாறு கண்டித்துள்ளார்:

‘’தமிழ்எழுத்தாளர் என்று தன்னை அழைத்துக் கொண்டு அரைகுறைத்தமிழில் எழுதுபவர்களைக் கடுமையாகத் தன் உரையில் தாமரைக்கண்ணி சாடுகிறார். குறிப்பாகப் பார்ப்பன மொழியைப் பயன்படுத்துபவர்களை விமரிசனம் செய்கிறார்.  என்ன சார்வாள், எங்கே போறையள், ரொம்ப, பஞ்சாமிர்தமாக, தொபுக்கடீரென்று, தூம்தடாகா, கப்சா, காதல் கச்சேரி, காலட்சேபம், லேடீச கிளப்,- போதுமா? இன்னும் வேண்டுமா? சிலர், சிவ சிவா போதும் போதும் என்கிறீர்கள். சரி. நிறுத்திவிட்டேன். இப்படித் தமிழன்னையைப் பையப் பையச் சாகடிக்கும் இந்த எழுத்தாளர்கள்தான் உயிருள்ள தமிழ்நடை எழுதுபவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இத்தமிழ்நடையைத் தமிழ்நாட்டில் மட்டும் நடத்தினால் போதாது என்று கருதி, உலகமெங்கும் பரப்புவதற்காக  இவர்களுக்கு அகில இந்திய வானொலியில் (ரேடியோவில்) பேசுவதற்கு அடிக்கடி இடம் கொடுக்கப்படுகிறது. இதற்கு மாறாக, வாழ்நாள் முழுவதும் தமிழ் பயின்று இலக்கண இலக்கிய வர்புகளுக்குட்பட்டுச் செந்தமிழ்நடை எழுதும் அறிஞர்கள் பத்தாம்பசலிக்காரர்கள் என்று பரிகசிக்கப்படுகிறார்கள். இவர்கள் தமிழ்க்கொலை செய்பவர்களாம். எப்படியிருக்கிறது சங்கதி? இதற்கு விமோசனம் இல்லையா? என்று நான் கேட்கிறேன். இந்த நிலைமையில் இந்த இந்திச் சனியன் வேறு வந்து புகுந்தது. …” என்று பேசியதை நமக்குத் தந்துள்ளார்.

Tuesday, February 17, 2026

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 2 : இலக்குவனார் திருவள்ளுவன்

      18 February 2026      கரமுதல



(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 1 : தொடர்ச்சி)

இந்தி எதிர்ப்பு, பெரியார், தன்னாட்சி வருமாயின் தன்மொழியும் வேண்டாவோ, தமிழ்நாடு தமிழருக்கே ஆகிய நான்கு அம்மானைப்பாடல்களுடன் நூலைத் தொடங்கியுள்ளார். முதல் கட்டுரையான அறிமுகத்தில் இவற்றைக் காணலாம்.

வீட்டுச் சிறையில் இருந்த பெண்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டக்களத்தில் இறங்கிச் சிறை புகுந்ததை இந்நூல் கூறுகிறது. உலகெங்கும் வாக்குரிமை,  அதிகாரம், சம ஊதியம் தொடர்பில் ஏற்பட்ட பெண்கள் எழுச்சியையும் தமிழ் நாட்டில் மொழி காக்க எழுந்த பெண்கள் எழுச்சியையும் விளக்குவதைக் குறிப்பிட்டுள்ளார்.

 பள்ளிகளில் கட்டாய இந்திப்பாடம் 21.04.1938 ஆம் நாளிட்ட அரசாணை மூலம் புகுத்தப்பட்டது. அதற்கு முன்பே 24.08.1937 இல் தஞ்சையில்  முதல் இந்தி எதிர்ப்புக் குரல் எழுந்ததைக் குறிப்பிடுகிறார்.

இக்கட்டுரை இந்நூலின் செய்திகளின் சுருக்கமாக இடம் பெற்றுள்ளது.

போராட்டக் களத்தில் பெண்கள் பங்கேற்பு குறித்து இரண்டாவது கட்டுரை  விளக்குகிறது.

முதன்முறையாகக் கைதாகிச் சிறை சென்றவர் பெரியார் ஈ.வெ.இராமசாமியின் தங்கை சா.இரா.கண்ணம்மாள் என்பதைக் குறிப்பிடுகிறார். 24.10.1937 இல் இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும் என்று தலையங்கம் எழுதியதால் பெரியாரும் பதிப்பாளர் என்ற முறையில் தங்கை கண்ணம்மாவும் தண்டிக்கப் பெற்றுள்ளனர். இவர், புரட்சி, குடியரசு ஆகிய இதழ்களின் பதிப்பாசிரியராக இருந்தார்.

பேராயம்பட்டுத் தோழர் டி.இரங்கம்மாள், 28.01.1938 ஆம் நாளிட்ட ‘புரட்சி’ இதழில், “திருவண்ணாமலை இரகசியம்- பார்ப்பனர்களின் கொண்டாட்டமும் பாமரர்களின் திண்டாட்டமும்” என்னும் கட்டுரையில் திருவண்ணாமலை தீபத்தின்பொழுது பெண்கள்படும் இன்னல்களைப் பட்டியலிட்டுத் தந்துள்ளார். பெண்கள் பொதுவெளிக்கு வருவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்தே பெரியார் இயக்கம் நடத்தும் கூட்டங்கள், மாநாடுகளில் பெண்களுக்கென்று தனியிடம் ஒதுக்கப்பட்டது. பல மாநாடுகளில் பெண்களின் தலைமையுரை, தொடக்கவுரை, மாநாட்டுத்திறப்புரை, எழுச்சியுரை முதலியவை  இடம் பெற்றமையை இக்கட்டுரையில் விளக்குகிறார். நீலாம்பிகை அம்மையார், காந்தி பெண்களின் நிலையை உணராமையைக் குறிப்பிட்டுச் சாடியுள்ளமையை எடுத்துரைக்கிறார்(புரட்சி 04.02.1938).

மூன்றாம் கட்டுரையில் நீலாவதி அம்மையார் காந்தியடிகளிடம் கேட்ட கேள்விகள் குறித்து எழுதியுள்ளார். காந்தியடிகளின் மதவாதப்போக்கிற்கு எதிராகக் கேள்விகள் கேட்ட அவர், அவரது அறிவுரையால் தேசத்தொண்டிலும் அடி எடுத்து வைத்தார். குமுக நீதிக்கும் தன்மதிப்பிற்கும் சான்றாக நீலாம்பிகை அம்மையார் விளங்கியதை இக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.

போராட்டத்துக்கு உரமிட்ட தலைவர்களை நான்காம் கட்டுரையில் விளக்குகிறார். தமிழர் கழகம் அமைப்பின் தொடக்க விழாவில்(04.09.1938) தலைமையுரையாற்றிய மீனாம்பாள் சிவராசு, பெரியாராலும் அண்ணாவாலும் பாராட்டப்பெற்ற ‘அன்னை’ இதழின் ஆசிரியர் சத்தியவாணிமுத்து, 01.09.1938 இல் நடைபெற்ற மாதர் சங்கப் பொதுக் கூட்டத்தில் பண்டிதை நாராயணி அம்மையார் அமிழ் பாதை ஊர்தி(டிராம்), பேருந்து முதலியவற்றில் ஆங்கிலத்தில் பெயர்ப்பலகைகள் இருப்பதைத் தமிழுக்கு மாற்ற வேண்டும் என்னும் தீர்மானம், 03.09.1938 அன்று தோழர் பார்வதி அம்மையார் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட இந்தி எதிர்ப்பு ஊர்வலம், 09.09.1938 அன்று சென்னை புதுவண்ணாரப் பேட்டையில் நடைபெற்ற தோழர் மீனாம்பாள் சிவராசு தலைமையிலான பெரும் இந்திஎதிர்ப்புப் போராட்டம் முதலிய பல போராட்டங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

1938 பெண்கள் மாநாடு முதல் அறிவிப்பு குறித்து ஐந்தாம் கட்டுரை விளக்குகிறது.

இவ்வறிவிப்பின் மூலம் இதுவரை சலசாட்சி, சரசுவதி, புட்பவதி ஆகிய பெண் தலைவர்களின் பெயர்கள், தாமரைக்கண்ணம்மையார், கலைமகளம்மையார், மலர் முகத்தம்மையார் எனத் தனித்தமிழ்ப் பெயர்களாக மாறியமையைச் சுட்டிக் காட்டுகிறார்.

பெண்கள் மாநாட்டுக்குத் திருவரங்க நீலாம்பிகை அம்மையாரைத் தலைவராக்கியது தமிழ் இயக்க மக்களை ஒரு குடையின் கீழ் ஒன்று திரட்ட உதவும் என வீரத்தமிழன்னை தருமாம்பாள் கணக்கிட்டது மிகச் சரியானது என்கிறார். எனவேதான் இந்தி எதிரப்பு என்பது வெறும் இந்தி எதிர்ப்பாக மட்டுமல்லாமல் தனித்தமிழ்க்காப்பாகவும் சிறந்து விளங்கியது.

தோழர் பார்வதியம்மாள் மூவேந்தர் கொடியின் தொன்மை, சிறப்பு ஆகியவற்றை விளக்கி, தமிழ் மக்கள் தமிழ்க்கொடியை ஏற்ற வேண்டிய இன்றையமையாமையையும் வலியுறுத்தி, தமிழ்க்கொடியை ஏற்றி வைத்தார். தமிழர் இயக்கம் வகுப்புவாதமற்றது என்பதை இராசகோபாலாச்சாரி புரிந்துகொள்ள வேண்டும் என்றவர், தமிழர்கட்கு, தமிழ்நாட்டிற்கு வெற்றி வெற்றி என்று வலுத்த கைதட்டுதலுக்கிடையே தமிழ்க்கொடியை ஏற்றியுள்ளார்.

சிலர் திரு.வி.க.விற்கு எதிராகக் குரல் எழுப்பியதையும் அதற்கு அவர் தக்கவிடையிறுத்ததையும் பதிந்துள்ளார்.  பெண்கள் மாநாட்டிற்காகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்தமையை விளக்கி இதன் சிறப்பான ஒழுங்கு முறையைப் பாராட்டியுள்ளார்.

Followers

Blog Archive