Tuesday, October 28, 2025

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24: வருந்தி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

      28 October 2025      கரமுதல



(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23: சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! – தொடர்ச்சி)

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24

வருந்தி வருவோரிடம்

அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க!

“வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,

வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,

அருள வல்லை ஆகுமதி”

              புறநானூறு – 27 : 15 – 17

பாடியவர் :  உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.

பாடப்பட்டோன் :  சோழன் நலங்கிள்ளி.

திணை :   பொதுவியல்.

துறை :   முதுமொழிக் காஞ்சி.

வல்லவர் ஆயினும், வல்லவர் அல்லர் ஆயினும் வருந்தி வந்தோரின் நிலைமையைப் பார்த்து அருள் தருபவனாக விளங்குக!

முழுப்பாடல் வருமாறு:

சேற்றுவளர் தாமரை பயந்த வொண்கேழ்

நூற்றித ழலரி னிரைகண் டன்ன

வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து

வீற்றிருந் தோரை யெண்ணுங் காலை

உரையும் பாட்டு முடையோர் சிலரே

மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவ னேவா வான வூர்தி

எய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக்

கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி

 தேய்த லுண்மையும் பெருக லுண்மையும்

மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும்

அறியா தோரையு மறியக் காட்டித்

திங்கட் புத்தே டிரிதரு முலகத்து

வல்லா ராயினும் வல்லுந ராயினும்

வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி

அருள வல்லை யாகுமதி யருளிலர்

கொடாமை வல்ல ராகுக

கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே.

பதவுரை:

சேற்று வளர் தாமரை = சேற்றிலே வளரும் தாமரை; பயந்த = பெற்ற; ஒண்கேழ் – ஒளிமிகுந்த நிறம்; நூற்று இதழ் = நூற்றுக்கணக்கான இதழ்; அலரின் = பூக்களின்; நிரை = வரிசை; கண்டன்ன = காண்பதைப்போல; வேற்றுமை இல்லா = வேற்றுமை இல்லாத; விழுத் திணைப் பிறந்து = சிறந்த குலத்தில் பிறந்து; வீற்றிருந்தோரை = அரசணை (அரியணை)யில் இருந்தோரை; எண்ணும்காலை =எண்ணிப் பார்க்கும் பொழுது;

உரை = எல்லாரும் கூறும் புகழுரை; பாட்டு = புலவர்களால் பாடப்பெறும் மாண்பு; மரை யிலை = தாமரை இலை; மாய்ந்திசினோர் பலரே = பயனின்றி மாண்டுபோனோர் பலரே; புலவர் பாடும் புகழுடையோர் = புலவர்களால் பாடப்பெறும் புகழுக்குரியோர்;

வலவன் = விமான ஓட்டி; ஏவா வான ஊர்தி = விமான ஓட்டியால் இயக்கப்படாத வானூர்தி; எய்துப = பெறுவர்; செய்வினை முடித்தெனக் கேட்பல் = நல்வினை முடித்தவர்கள் இவ்வாறு பெறுவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கலாம்;

எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி! = என் தலைவ! சேட் சென்னி என்று அழைக்கப்படும் நலங்கிள்ளி!

தேய்தல் உண்மையும் = செல்வமும் செல்வாக்கும் உடையவர்கள் அவை தேய்ந்து இல்லாமல் போகும் நிலையையும்; பெருகல் உண்மையும் = இன்மை நிலை வளமாகப் பெருகும் நிலைமையையும்; மாய்தல் உண்மையும் = பிறந்தன இறக்கும் என்ற உண்மையையும்; பிறத்தல் உண்மையும் = புத்துயிர் பிறக்கும் என்ற உண்மையையும்; அறியா தோரையும் = அறியாதவர்களையும்; அறியக் காட்டித் = அறியச் செய்து;

திங்கட் புத்தேள் = இந்நிலைமைகளால் நாளும் புதியனவாய்த் திகழும் திங்கள்; திரிதரும் உலகத்து = வானில் உலா வரும் இவ்வுலகத்தில்; வல்லா ராயினும் = ஆற்றலற்றவர் ஆக இருந்தாலும்; வல்லுந ராயினும் = சிறப்பாற்றல் பெற்றவராயிருப்பினும்; வருந்தி வந்தோர் = வேண்டி வந்தோர்; (துன்புற்று வந்தோர் என்றும் பொருள் கொள்கின்றனர்) மருங்கு நோக்கி = சுற்றத்தாருடன் நோக்கி; (பசியால் வற்றிய வயிற்றைப் பார்த்து என்றே பிறர் பொருள் கொள்கின்றனர்); அருள வல்லை யாகுமதி = அருள் வல்லவனாக ஆகுக; யருளிலர் = அருளற்றவராகவும்; கொடாமை வல்ல ராகுக = கொடுக்கும் நிலையற்றவராகவும் ஆகுக; கெடாத துப்பினின் = அழியாத உன் வலிமையை; பகையெதிர்ந் தோரே = நினக்குப் பகையாகி எதிர்த்தோர்

பாடலின் சிறப்புகள்:

சேற்றில் பிறந்தாலும் தாமரை நூற்றுக்கணக்கான இதழ்களுடன் பொலிவாகத் திகழ்வதைக் குறிப்பிடுவதன் மூலம் பிறப்பின் அடிப்படையில் தாழ்வு கற்பிக்கும் ஆரியத்திற்கு எதிராக முழங்குகிறது.

உயர்வு தாழ்வு கற்பிக்கும் வேறுபாடில்லாத பிறப்பைக் குறிப்பிடுகிறது.

நிலவின் பல்வேறு தன்மைகளைக் கூறி. ஒப்பிட்டு நிலையாமையை விளக்குகிறது.

இயக்குபவர் இல்லாமல் இயங்கும் வானூர்தி குறித்த அறிவியல் உண்மையைக் கூறுகிறது.

‘உரை’ என்ற சொல் எல்லாராலும் புகழப்படும் புகழையும் ‘பாட்டு’ என்பது புலவர்களால் பாடப்படும் புகழையும் குறிக்கும் என்று உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி அவர்கள் வேறுபடுத்தி விளக்குவார்.

அஃதாவது பொது மக்களால் உரைக்கப்படும் புகழ் உரை; புலவர்களால் பாடப்பெறும் புகழ் பாட்டு; என்னும் வேறுபட்ட சிறப்பை நாம் உணர முடிகிறது.

“பகைவன் வறியவன் ஆகுக” என்று சொல்லாமல் “ஈகைக்கு வாய்ப்பில்லா நிலையுடையவன் ஆகுக” என்பதன் மூலம் ஈத்துவக்க வேண்டிய இன்பத்தைப் புலவர் எடுத்துரைக்கிறார்.

சங்கக்காலச் சோழ மன்னர்களில் ஒருவனாகிய சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி இப்பாடலில் குறிக்கப் பெறுகிறான்.

உதவி வேண்டி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை இப்பாடல் வலியுறுத்துகிறது. நாமும்

நம்மை நாடி வருவோரிடம்

அருளுள்ளத்துடன் நடந்து கொள்வோம்!

தாய், 28.10.2025

Monday, October 27, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 1016-1020 : இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச் சொற்கள் விளக்கம் 1011-1015 : தொடர்ச்சி)

1016. Autrefois acquitமுன்னரே விடுவிக்கப்பட்டடவர்.
முன்பே குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பெற்றவர்.

autrefois என்பது “முன்னர்” அல்லது “மற்றொரு நேரத்தில்” என்று பொருள்படும் ஒரு பிரெஞ்சுச் சொல்லாகும்.
autre = மற்றொரு +‎ fois = நேரம்

எதிர்வாதி முன்னரே விடுவிக்கப்பட்ட அதே குற்றத்திற்காக மீண்டும் உசாவப்படுவதிலிருந்தோ குற்றம் சாட்டப்படுவதிலிருந்தோ தடுப்பதற்கு உதவும் நிலை.

முன்விடுதலை (Pre release) என்றால் ஒரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பெற்று அத்  தண்டனைக் காலத்திற்கு முன்பே விடுதலை செய்யப்படுவது எனப் பொருளாகும். எனவே, Autrefois acquit என்பதை முன் விடுதலை என்று சொல்லக் கூடாது. அகராதியைப்பார்த்து நான் முன்னர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதும் தவறாகும்.  

இந்தியக் குற்றவழக்கு நடைமுறைச் சட்டத்தொகுப்பு(CrPC) பிரிவு 300, இரட்டை இடர்()கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதனை விளக்குவதே இத் தொடர்.
 1017. Autrefois acquit – plea of    முன்னரே விடுவிக்கப்பட்டவர் என்னும் வாதம் 

விடுவிக்கப்பட்ட குற்றச்சாட்டின் மீது மீண்டும் குற்றம் சாட்டக்கூடாது என்பதற்கான வாதுரை.

காண்க:  Autrefois acquit
 1018. Autrefois convict        முன்னரே தண்டிக்கப்பட்டவர்

எதிர்வாதி முன்னரே தண்டிக்கப்பட்ட அதே குற்றத்திற்காக மீண்டும் உசாவப்படுவதிலிருந்தோ குற்றம் சாட்டப் படுவதிலிருந்தோ தடுத்தல்.

ஒரு குற்றச் செயலுக்காகத் தண்டிக்கப்பட்டவர் அதே குற்றத்திற்காக மீண்டும் தண்டிக்கப்படக்கூடாது என்றும் இயற்கை நீதி.

காண்க:  Autrefois acquit
1019. Autrefois convict -plea ofமுன்னரே தண்டிக்கப்பட்டவர் என்னும்  வாதம்‌

முன்னரே தண்டிக்கப்பட்ட குற்றச் செயலுக்காக மீண்டும் தண்டிக்கக்கூடாது என்பதற்கான வாதுரை.

முந்தைய தண்டனை வாதம் என அகராதிகளில் குறிக்கப்பெற்றுள்ளது பொருந்தாது. முந்தைய தணடனை குறித்த வாதம் அல்ல. முந்தைய தண்டனைச் செயலுக்காக மீண்டும் தண்டிக்கப்படக் கூடாது என்னும் வாதம்.

காண்க: Autrefois convict
1020. Auxiliary    துணைமை

எனினும், துணைவர் துணைப்படைவீரர் துணைவினை(இலக்கணம்) துணையான
உடனுதவியான
உதவியாளரான
துணைக்கருவி
எனப் பல பொருள்களில் குறிக்கப்படுகிறது.

துணைமையர்(Auxiliary Person) என்பது தொடர்புடைய பணியாளர் அல்லது அதற்கு இணையானவருக்காக அல்லது துணை ஒப்பந்தக்காரர் அல்லது ஒப்பந்தரின் பணியாளர் அல்லது அதற்கு இணையானவருக்காக அல்லது அவரின் அதிகாரி, சார்பாளர், அறிவுரைஞரருக்காக நேரடியாகவோ மறைமுகமாகவோ பணியாற்றுநரைக் குறிக்கிறது.

Saturday, October 25, 2025

சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 3: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 2: தொடர்ச்சி)

மனுநூல் ,அருத்த சாத்திரம், சுக்கிர நீதி போன்ற நூல்கள் எல்லாம் மக்களைப் பாகுபாடுப்படுத்தக் கூடியவை. வருண வேறுபாடுகளைப் புகுத்துபவை ஆக உள்ள இந்த இலக்கியங்களுக்குப் பணம் கொடுக்கிறவன்தான் வருண வேறுபாட்டுக்கு உயிர் ஊட்டுகிறவன்.” பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருவள்ளுவத்தைப் போற்றுகிற நாம் இந்த இரண்டு இலக்கியங்களுக்கு – இலக்கியங்கள் என்று சொல்லக்கூடாது இழிகாம நூல்களுக்கு – அஃதாவது ஆபாச நூல்களுக்கு –  நாம் முதன்மைத்துவம் கொடுக்கலாமா? ஆனால் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம் நாம், இதன் காரணம் என்ன? நமக்கு உண்மையிலேயே இதைப் பற்றி நடைமுறை அறிவோ திட்டமோ இல்லை. படித்திருக்கலாம்; பெரிய பெரிய பட்டங்கள் பெற்றிருக்கலாம்; ஆனாலும் கூட சமற்கிருதத்தை எந்த அளவிலெல்லாம் திணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்குத் தெரியவில்லை.

நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இந்தியாவிலேயே மிகுதியான சமூக நலத்திட்டங்கள் தமிழ்நாட்டில்தான் நிறைவேற்றப்படுகின்றன. இவற்றை நிறைவேற்றியவர்களுள் முன்னோடியாக நாம் கலைஞர் அவர்களைத்தான் குறிப்பிட வேண்டும்.  திமுகவும் சரி அதிமுகவும் சரி, தமிழ் மொழிக்கும் சேர்த்து பல்வேறு நலத் திட்டங்களைத் செயற்படுத்திக் கொண்டு இருக்கின்றன. பாராட்டக்கூடியதுதான், ஆனாலும் கூட அவை முழுமையாக இல்லை. அடுத்தபடியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஓர் ஒப்பீடு கூடப் பார்ப்போம். சில திட்டங்களுக்குத் தமிழ்நாடு அரசு ஒதுக்கக்கூடிய நிதி மிகக் குறைவாகவும் ஒன்றிய அரசு அளிக்கக் கூடியது கூடுதலாகவும் உள்ளன. அதில் ஒன்றுதான் நலிவுற்ற கலைஞர்களுக்குத் திங்கள் தோறும் தமிழ்நாடு அரசு 3000 உரூபாயும் 100 உரூபாய் மருத்துவப் படியும் தருகிறது. ஒன்றிய அரசு திங்கள் தோறும் 6 ஆயிரம் உரூபாய் தருகிறார்கள்.இவ்வாறு பல திட்டங்கள் பார்க்கலாம்.

சமற்கிருதம் முன்பே தொடங்கப்பட்டது என்று சொன்னேன் அல்லவா? 1957 இலேயே சமற்கிருத ஆணையம் பரிந்துரைத்து, சமற்கிருத வாரியம் ஒன்றை ஒன்றிய அரசு அமைத்தது. இதற்கு இராசுட்டிரிய சமற்கிருத சன்சங்கு என்று பெயரிட்டார்கள். பின்பு 1960 ஆவது சட்டத்தில் தன்னாட்சி அமைப்பாக மாற்றி அட்டோபர் 15, 1970 இல் நிறுவினார்கள். இஃது இந்திய நாடாளுமன்றத்தின் நிறுவப்பட்ட சட்டத்தின் மூலம் ஏப்பிரல் 2020இல் மத்திய சமற்கிருதப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்ல நாளடைவில் சமற்கிருதக் கல்வி நிறுவனங்கள் எல்லாம் கருது நிலை பல்கலைக்கழகங்களாக (Deemed University)  மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் முதன்மையான தமிழ்க் கல்லூரிகள் இருக்கின்றன. மதுரையில் உள்ள செந்தமிழ்க் கல்லூரி, செம்மொழிக்காகத் தீர்மானம் இயற்றிய தஞ்சாவூர் கரந்தைக் கல்லூரி, காரைக்குடி இராமசாமி கல்லூரி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றலாமே, தமிழ்நாடு அரசு நிதி உதவி கொடுக்கலாம் ஒன்றிய அரசிடமும் கேட்கலாம்.

செம்மொழி நிறுவனத்தின் தலைவர் யார்? தமிழ்நாட்டின் முதல்வர் தான். அந்த முறையிலும் கூட பல்வேறு நிதி உதவிகளைக் கேட்கலாம் எந்த ஒரு திட்டமும் நாம் கொடுப்பது கிடையாது.ஏதோ கருத்தரங்குகள் நடத்துவதுதான். கருத்தரங்குகளும் பாதி சரியாக நடக்காது. ஏனென்றால் கருத்தரங்கிலே தமிழுக்கு எதிராகப் பேசுவார்கள். சங்க இலக்கியம் பற்றிய கருத்தரங்கிலே பேசுபவர் சங்க இலக்கியத்தைப் பிற்பட்டதாகப் பேசிக்கொண்டு இருப்பார். இதுதான் கொடுமை. ஆக இப்படிப்பட்ட மோசமான கருத்தரங்கு தான் நடந்து கொண்டு இருக்கிறது. அவ்வாறு இல்லாமல் உண்மையான ஆய்வுகளுக்குச் செலவழிக்கலாம் அல்லவா? பல திட்டங்கள் தீட்டித் தரலாம் அல்லவா? நாம் இத்தகைய திட்டங்களைத் தீட்டித் தந்துவிட்டு இத்தகைய திட்டங்களுக்கு ஒன்றிய அரசு பணம் தரவில்லை என்று கண்டித்தால் பொருளுண்டு. இவர்கள் ஒன்றிய அரசுக்கு மடல் எழுதினாலே கண்டு கொள்வதில்லை. எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. எத்தனையோ மீனவர் படுகொலைக்கு மடல் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் ஒன்றிய அரசிற்குக் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், கண்டனத்தைப்பற்றி ஒன்றிய அரசு கவலைப்படாது. ஏன்? இஃது ஒரு பொம்மலாட்டம் என்று வேடிக்கையாக விட்டு விட்டுச் சென்று விடுவார்கள். இதனாலெல்லாம் ஒன்றும் பயன் கிடையாது.

இவர்கள் சொல்வார்கள்; பிறகு மறந்து விடுவார்கள்; அதற்குள் அடுத்த சிக்கல் வந்துவிடும்; இவ்வாறு அடுத்தடுத்த சிக்கலுக்குத் தாவி விடுவார்கள்; இந்த நம்பிக்கையில் தமிழ்நாட்டு அரசின் கவலை குறித்து  ஒன்றிய அரசினர் கவலைப்பட மாட்டார்கள்.

(தொடரும்)

13.07.2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 8 : தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருதத்தில் இலக்கணநூல் உருவாகவே வாய்ப்பில்லை-இலக்குவனார் திருவள்ளுவன்



(தொல்காப்பியமும் பாணினியமும் – 7 : தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே-தொடர்ச்சி)

பழந்தமிழர் நாகரிகத்தைப்பற்றிப் பரக்கப் பேசும் நூல் தொல்காப்பியம். மக்கள் வையத்து வாழ வழிவகுத்துக் காட்டும் இலக்கிய நெறியினை எடுத்து இனிதியம்பும் ஒப்பற்ற தனிப் பெரும் நூல் இது. தமிழினத்தின் பரந்துபட்ட பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் தொல்பெரு நூலாகத் தொல்காப்பியத்தைச் கருதுவதில் யாதொரு தடையும் இல்லை. இந்நூலைத் தம் விழுமிய சொத்தாக எண்ணித் தமிழர்கள் பாதுகாக்க வேண்டும்.(புலவர் தி.வே. விசயலட்சுமி,தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள், அகரமுதல 24.07.2016)

தமிழுக்கே உரிய இடைச்சொல் உரிச்சொல்களை ஆராய்கின்ற முறைமை வடமொழி நூலாராம் யாசுகருடைய நிருத்தத்தில் காணப்படுகின்றதாம். ஆகவே யாசுகரைப் பின்பற்றித் தொல்காப்பியர் கூறியிருப்பர் என அறிஞர் சுப்பிரமணிய சாத்திரியார் கருதுகிறார். (History of grammatical theories in Tamil : pages 198, 301) யாசுகருடைய காலம் தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்டமையின், அவ்வாறு கருதுதல் பொருந்தாது. யாசுகர் தொல்காப்பியரைப் பின்பற்றி நூல் செய்திருத்தல் கூடும் என்று கூறினால் மிக மிகப் பொருந்துவதாகும். ஆனால் சாத்திரியார் அவர்கள் வடமொழிப் பற்றின் காரணமாக இவ்வுண்மையை உணர்ந்திலர் போலும். வடமொழியாளர் பிறரால் பின்பற்றப்பட வேண்டியவர்களே யன்றிப் பிறரைப் பின்பற்ற மாட்டார்கள் என்ற துணிபு பல நூல்களையும் கற்றறிந்த சாத்திரியாரையும் விட்டிலை போலும். சாத்திரியார் நினைப்பது போல் ஆசிரியர் தொல்காப்பியர் அவ்வாறு வட மொழிப் பிராதி சாக்கியங்களையும், யாசுகருடைய நிருத்தத்தையும் பாணினியினுடைய இலக்கணத்தையும் பின்பற்றித் தம் நூலை அமைத்திருப்பின் வெளிப்படையாகக் குறிப்பிட்டுக் கூறியிருப்பர். அவ்வாறு கூறாததனால் சாத்திரியார் கருத்து ஆய்வு முறைக்குப் பொருத்தமற்றது என அறிதலே ஏற்புடைத்து, இந்திய மொழிகளின் தாயாம் தமிழ், ஆரியத்திற்கும் தாயாம் என்ற உண்மை அறிபப்படும் காலம் சேய்மையில் இன்று.

            ” சதுர்மறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின்

            முதுமொழி நீ அனாதியென மொழிவதும் வியப்பாமே “

என்ற பேராசியர் சுந்தரனார் கூற்றை உன்னுக. – பேரா.சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆராய்ச்சி பக்கம் : 114

தொல்காப்பியர் காலத்திலோ அதற்கு முன்னோ சமற்கிருதத்தில் இலக்கண நூல் உருவாகவே வாய்ப்பில்லை. “ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. (எழுத்துகளை வகைப்படுத்தியவர்கள் தமிழர்களே.)” என்கிறார் மறைமலை அடிகள்(தமிழின் தனிச்சிறப்பு) அத்தகையவர்கள் தமிழர்களுக்கு முன்னோடியாக இலக்கண நூல் படைத்தனர் என்பது நம்பும்படியாகவா உள்ளது? தமிழ் முதலிய பிற மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களை மொழி பெயர்த்து வைத்துக் கொண்டு தங்கள் நூல்களே முதன்மையானவை என்று பொய் கூறும்  ஆரியத்தினர் இதிலும் அவ்வாறே பொய் கூறியுள்ளனர்.

 “ஆரியம்தான் தமிழை நோக்கித் தன் எழுத்தமைப்பை ஆக்கிக் கொண்டது” என்கிறார் பேரா.சி.இலக்குவனார்.  “பிராமணர்கள், தமிழ் நாட்டில் குடியேறுவதற்கு முன்னரே தமிழர்கள் எழுத்துக் கலையினை அறிந்திருந்தனர்.  பிராமணர்கள் அப்போது அங்கு வழக்கத்திலிருந்த தமிழ் வரி வடிவெழுத்துகளோடு சமசுகிருத ஒலிகளை வெளியிடக் கூடிய சில வடிவெழுத்துகளையும் சேர்த்துத் தமிழ் வரி வடி வெழுத்துகளைத் திருத்தி அமைத்தனர்” என்று திரு. எல்லிசு கூறுவதை எடுத்துக்காட்டாகத் தருகிறார்(தொல்காப்பிய ஆராய்ச்சி:  பக்கம்: 39).  மேலும், தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர்தான் ஆரியர்கள் எழுத்து வடிவைத் திருத்தி அமைத்துக் கொண்டனர் என்றும் விளக்குகிறார்(தொல்காப்பிய ஆராய்ச்சி:  பக்கம்: 44). எனவே, தொல்காப்பியக் காலத்திற்கு முன்னர் ஆரியர்க்கு எழுத்து வடிவே இல்லாத பொழுது ஐந்திரத்தைச் சமற்கிருத நூலாகச் சொல்வது முழுப்பொய் அன்றி வேறில்லை. அதுபோல் பாணினியத்தையோ வேறு நூலையோ தழுவித் தொல்காப்பியம ்எழுதப்பட்டதாகக் கூறுவதும் பொய்யிலும் புரட்டிலும் கை வந்தவர்கள் செயல்களாகும். (ஐந்திரம் தமிழ் நூலே! – இலக்குவனார் திருவள்ளுவன், தொல்காப்பிய விழா மலர், தொல்காப்பிய மன்றம், கனடா, 2023)

(தொடரும்)

Tuesday, October 21, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 16 : case, bail, receipt – தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்

      21 October 2025      No Comment



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 : insolvent, adolescent, juvenile, minor, post-mortem – தமிழில்: தொடர்ச்சி)


? case என்றால் என்ன பொருள்?


நீங்கள் எந்தத் துறை?

? மருத்துவத் துறை. case என்றால் வழக்கு என்கிறோமே. மருத்துவமனையில் case-history ஐ எவ்வாறு குறிப்பிடுவது?

‘case’ என்றால் பொதுவாக வழக்கு என்பதை நாமறிவோம். நிலை, நிலைமை, சூழ்நிலை, என்றும் பொருள்களுண்டு. எனவே, மருத்துவத்துறையில் நோய் நிலைமை, நோயர் நிலைமை என்பனவற்றைக் குறிக்கிறது. நிகழ்ச்சியையும் குறிக்கும். எனவே, நேர்வு, நேர்ச்சி, நிகழ்வுக்கூறு, நிகழ்வினம், நேர்வு வகை எனப் பல பொருள்களில் வருகிறது. வேற்றுமையையும் குறிக்கும். எனவே எட்டு வேற்றுமை உருபுகளிலும் வேற்றுமை என்ற பொருளில் வரும். பை, உறை, கூடு, பெட்டி என்ற பொருள்களிலும் வரும். செய்தி, காரியம், கேள்விக்குரிய பொருள், ஆராய்ச்சிக்குரிய பொருண்மை, தறுவாய், பண்பின் செயல்வடிவ நிகழ்வுக்கூறு, எடுத்துக்காட்டாகக் கொள்ளத்தக்க கூறு, தொழில்முறை தொகுதி, சுவர் முகப்புப் பொதிவு, புத்தக மேலட்டை, புத்தக மூட்டுப்பகுதி, அச்சகப் பொறுக்குத் தட்டு, சிதறு வெடியுறைக்குண்டு என மேலும் பல பொருள்கள் உள்ளன. வினைச்சொல்லாக வருகையில் பையில் போடு, உறையில் வை, பொதி, போர்த்து, தோலிட்டு மூடு என இடத்திற்கேற்ப பொருள் வரும்.

case-history நோய் நிலைக் குறிப்பு, நோய் வரலாறு என்னும் பொருளில் வரும். இதனை நோயாறு எனப் புதுச் சொல்லாகக் குறிக்கலாம். case-history என்பது குற்றவியலிலும் வரும். அதனால் சட்டத்துறை, காவல்துறை, நீதித்துறையில் இச்சொல் இடம் பெறும். இங்கெல்லாம் வழக்கு விவரம் என்னும் பொருளில் வருகிறது. சில இடங்களில் புலனாய்வு விவரம் என்றும் பொருள்படும். ஆளைச்சுட்டிக் கூறுவதாயின் வழக்கர் விவரம் எனலாம். இத்துறைகளில் நோயாறு என்பதுபோல் வழக்காறு என்று சொல்லக்கூடாது. சொன்னால் பொருள் பழக்கவொழுக்கம் என மாறிவிடும்.

மேலும், வழக்கத்தில் case என்னும் பொழுது அந்த case எவ்வாறு உள்ளது? இந்த case நிலையில் முன்னேற்றம் இல்லை என்பது போல் நோயின் தன்மையின் அடிப்படையில் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு இல்லாமல், இந்த நோயர் நிலையில் முன்னேற்றம் உள்ளது; அந்த நோயர் நிலை மோசமாகிக் கொண்டு வருகிறது; என நோயர் அடிப்படையில் குறிப்பது நன்றாக இருக்கும்.

? suit case என்று கூறுகிறோமே…
பெட்டி என்னும் பொருளில் உடைப்பெட்டி என்று சொல்லலாமே. இது போல் brief case சிறு பெட்டி அல்லது கைப்பெட்டி என்று சொல்லலாம்.
தட்டச்சுப் பொறியில் விசைப்பலகையில் மேல் வரிசையில் உள்ள எழுத்துருக்களை upper case என்றும் கீழ் வரிசையில் உள்ளவற்றை lower case என்றும் குறிப்பிடுவர். இவற்றை முறையே மேலுரு என்றும் கீழுரு என்றும் சொல்லலாம். மேலும்,
in any case – எவ்வாறாயினும்
in case – என்ற நிலை ஏற்படுமானால், ஒருவேளை, எனில்
in that case – அந்நோ்வில்
make out a good case – சிறந்த காரணங்கள் அளி
என இடத்திற்கேற்றவாறு பொருள் கொள்ள வேண்டும்.
சாமீனில்(‘ஜாமீனில்’) விடுவிக்கப்பட்டார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. Bail – பிணை என்பதை அறிவீர்கள் அல்லவா? பிணையில் விடுவிக்கப்பட்டார் என்றே குறிக்க வேண்டும். பிணையில் விடுவிக்கப்பட்டவர் bailor – பிணையர் என்றும் அவ்வாறு அவருக்குப் பிணை தருபவர் bailee – பிணைதருநர் என்றும் குறிக்கப் பெற வேண்டும். பிணை தருவது தொடர்பான பணிகளைப் பார்ப்பவர் bailiff – என்பவரையே அமீனா என்கிறார்கள். பிணைப்பணியாளர் அல்லது பிணை ஊழியர் என்று சொல்ல வேண்டும். சுருக்கமாகப் பிணைப்பணியர் > பிணையர் எனலாம். இவ்வாறு பிணையில் விடத்தக்கவாறு அமைந்த குற்றத்தை
Bailable offence பிணை விடு குற்றம் என்றும் பிணையில் விட இயலா நிலையிலான குற்றத்தை non-bailable offence – பிணைவிடாக் குற்றம் என்றும் கூற வேண்டும்.
Bailable Warrant – பிணைவிடு பிடியாணை
Warrant – பணிமுறை அதிகாரப் பத்திரம், (கைது) ஆணைப் பத்திரம் என்கின்றனர். பிணையுறுதி, பற்றாணை, பொறுப்புறுதி, சான்றாணை எனவும் கூறுகின்றனர். ஒரே சொல்லையே பயன்படுத்த வேண்டும். எனவே, பிடியாணை என்பதையே பயன்படுத்தலாம்.
பற்றுச் சீட்டு எனவும் பொருளுண்டு. பற்றுச்சீட்டு என்பது பணம் பெறுகைச் சீட்டு என்றும் பணம் கொடுப்புச் சீட்டு என்றும் பொருளாகும்.. முன்பு வரிக்கான ஒப்புகைக் சீட்டு எனில் அடைச்சீட்டு பிற பண ஒப்புகைக்கு ஒடுக்குச்சீட்டு என்றும் பயன்படுத்தியுள்ளனர். நாம் இவற்றை மீள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். இவற்றில் ஒடுக்கு என்பதற்கு மறைவிடம் என்றும் பொருள். எனவே, குளியலறை, கழிவறைகளுக்குத் தரும் பணச்சீட்டை ஒடுக்குச் சீட்டு எனலாம். ஆனால் அவ்வாறு பணச்சீட்டு எதுவும் தருவதில்லை. வில்லையை மட்டுமே தந்து திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர். எனினும் அவ்வாறு பணச்சீட்டுதரும் இடங்களில் ஒடுக்குச்சீட்டு என்பதைப் பயன்படுத்தலாம்.

Followers

Blog Archive