Saturday, December 20, 2025

குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 3.பெரியாரின் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பழிப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்

      21 December 2025     அகரமுஐதல



(குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 2. இந்து மதத்தை மட்டும்தான் பெரியார் எதிர்த்தாரா? – தொடர்ச்சி)

பெற்றோர் தம் குழந்தையிடம் “வெளியே போனால் காலை உடைத்து விடுவேன்” என்று சொன்னால் வெறுப்பில் சொல்லும் சொற்களா இவை. அவர்கள் தம் பிள்ளையிடம் முட்டாளே என்று சொன்னால் உண்மையிலேயே அவ்வாறு கருதுகிறீர்கள் என்ற பொருளா? உண்மையிலேயே முட்டாளாக இருந்தாலும் அறிவாளியாக எண்ணுவதுதானே பெற்றோர் இயல்பு. அதுபோல்தான் சில நேரங்களில் பெரியார் தமிழைப்பற்றியும் தமிழர்களைப்பற்றியும் சொன்னவையும். எனினும் சில நேரம் அவர் சொன்ன சுடுசாெற்களுக்கு அவர மீது பற்றுள்ள தமிழன்பர்கள் சப்பைக் கட்டு கட்டினாலும்  உண்மையிலேயே அவர் சொன்னவை தமிழுக்கு எதிரான பழிப்புச் சொற்களே. எனினும்  தமிழ்ப்பற்றுமிக்க அவர், தமிழ் மேலும் மேன்மையடைய வேண்டும் என்றும் தமிழர்கள் விடிவைக் காண வேண்டும் என்றும் பெருவிழைவு கொண்டவர். அவற்றிற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டவர். எனவே, அவரிடம் காணும் செயற்பாடுகளில் மிக்கன கொண்டு, தக்கன போற்றி, அல்லனவற்றைப் புறந்தள்ளி அவரைப் போற்ற வேண்டும்.

பெரியார் தம் வாழ்நாளில் பயணம் மேற்கொண்ட தெ்ாலைவு 13,12,00 புதுக்கல்.இது பூமியின் சுற்றளவை விட 33 மடங்கு மிகுதி; இப்பயணத்தில் அவர் ஏறத்தாழ 10,700 பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார்; திருமணங்களில், கல்விக்கூடங்களில் என அவர் ஆற்றிய அரங்கு உரைகளைச் சேர்த்தால் இது மிகுதியாக இருக்கும்; எண்ணாயிரத்திற்கு மேற்பட்ட நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்; 21,400 மணி நேரம் உரையாற்றியுள்ளார்; 39 முறை வெளிநாடுகளுக்குச்சென்று பரப்புரை ஆற்றியுள்ளார். இவை  யாவும்  மக்கள் நலனுக்காக அவர் வாழ்வை ஒப்படைத்ததை மெய்ப்பிப்பனவே.

ஆனால், சிலர் தமிழ்த்தேசியப் போர்வையில் திராவிடத்தை ஏசுவதாகக் கருதி, ஆரியத்திற்குத் துணை நின்று பெரியாரை ஏசுகிறார்கள். பெரியாரின் தவறான கொள்கைகளையோ அவற்றின் அடிப்படையிலான செயற்பாடுகளையோ சுட்டிக்காட்டினால் தவறல்ல. அவ்வாறு எச்செயல் எத்தன்மையத்தாயினும் அச்செயலையும் செயலின் விளைவுகளையும் ஆராய்ந்து நடுநிலையுடன் பேசுவதும் எழுதுவதும் தவறல்ல. பெரியார் பெரியார்தான் என்பதை உணர்ந்து அவரின் பெருமைகளையும் போற்ற வேண்டும்.

இவைபோன்ற கருத்துகளைப் பெரியார் தம் குடியரசு இதழிலும் பகுத்தறிவு இதழிலும் வெளியிட்டுத தமிழுக்கு நலம் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.

தமிழறிஞர்கள் தமிழ்த்தூய்மையை வலியுறுத்தினர். பெரியாரும் , தமிழ்ப் புத்தகங்கள் தூய தமிழில் எழுதப்பட வேண்டும் என்றும் சமற்கிருதச் சொற்கள் தமிழில் கலந்தால் தமிழுக்குப் பெருமை குறைந்து போகாது என்பது தவறு என்றும், அப்படிக் கலப்பதுதான் மொழியின் முன்னேற்றம் என்று கூறுவதும் தவறு என்றும்   வலியுறுத்தியுள்ளார். தமிழின்மீதுள்ள பெரியாரின் பற்றுக்கு இவைபோன்ற கருத்துகளே சான்றாகும்.

தமிழுக்கு என்ன செய்ய வேண்டும் எனப் பெரியார் வலியுறுத்துவன யாவும் அவரின் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துவனவே. தமிழுக்காக என்ன செய்ய வேண்டும் எனப் பிறர் கூறுனவற்றைத் தம் இதழில் வெளியிட்டு அவற்றை மக்களிடையே பரப்பினார். சான்றுக்குப் பின்வருவனவற்றைப் பார்ப்போம்.

1. தமிழர் தமிழ்ப் பெயர் இட வேண்டும்.

2. தமிழ்நாட்டுப் பிரிவு, ஊர், தெரு, வீடு பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்.

3. வீட்டிலும் கடைத்தெருவிலும், அலுவலகங்களிலும், வழிப் போக்கிலும் ஆங்கிலச் சொல்லும், சமஸ்கிருதமும் தமிழில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4. தமிழில் இல்லாதவற்றிற்கு ஆங்கிலச் சொல்லைக் கலக்கலாம்.

5. தமிழில் இல்லாதவற்றிற்குப் புதிய சொல் உருவாக்க வேண்டும். அறிஞர்கள் உருவாக்கும் புதுச் சொல்லைப் பொது மக்கள் பயன்படுத்த வேண்டும்.

6. கோயில்களிலும், விழாக்களிலும் தமிழே ஒலிக்க வேண்டும்.

7. தமிழைப் பிழைபட வழங்குபவரைத் திருத்த வேண்டும்.

ஆகிய, சென்னை தமிழறிஞர் கழகத்தின் கோரிக்கைகளை 04.12.1943 குடிஅரசு ஏட்டில் பெரியார் வெளியிட்டு அவற்றிற்கான தம் உடன்பாட்டைத் தெரிவித்தார்.

பெரியாரின் தமிழ்ப்பற்றிற்கான சான்றுகளைப் பார்த்த பின்னர் அவரது தமிழ் மீதான பழிப்புரைகளையும் பார்ப்போம்.

(தொடரும்)

Friday, December 19, 2025

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-11 : மொழிப்போரில் மகளிர் பங்களிப்பு – 2 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-10 : மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 1: தொடர்ச்சி)

இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில்  பெண்களின் அளப்பரிய பங்கில் ஒரு பகுதிதான் பதிவுகளில் உள்ளன. அவற்றில் நாமறிந்த ஒரு பகுதியைத்தான் ‘பெண்களின் முதன்மைப் பங்கு’ என்னும் தலைப்பில் முன் கட்டுரையில் பார்த்தோம். எனவே, இன்னும் சொல்வதற்கு மிகுதியாக உள்ளன. எனினும் மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் பெயர்களைப் பார்ப்போம்.

மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் நிரல்

17.1.1938இல்

ஈரோடு (இ)ரங்கம்மாள்

சென்னை இலலிதாம்பாள்(இரு குழந்தைகளுடன்)

14.11.1938 இல்

மருத்துவர் தருமாம்பாள்

புதின ஆசிரியர் மூவாலூர் இராமாமிர்தத்தம்மையார்

பட்டம்மாள் (திருவாரூர் பாவலர் பாலசுந்தரம் மனைவி)

மலர் முகத்தம்மையார்(மயிலைத் தமிழ்ப்புலவர் முத்துக்குமாரசாமியார் தமக்கை)

சீதம்மாள் (மரு.தருமாம்பாள் மருமகள், மூன்று அகவையுடைய குழந்தை மங்கையர்க்கரசி, ஓர் அகவைக்குழந்தை நச்சினார்க்கினியன் ஆகியோருடன்)

21.11.1938இல்

உண்ணாமலையம்மையார் (முன்னாள் திராவிடன் ஆசிரியர் புலவர் அருணகிரிநாதர் மனைவி, தமிழரசி என்னும் ஓர் அகவைக் குழந்தையுடன்)

புவனேசுவரி அம்மையார்(தோழர் என்.வி.நடராசன் மனைவி, சோமசுந்தரம் என்னும் 2 அகவைக் குழந்தையுடன்)

சிவசங்கரி(தோழர் டி.வி.முருகேசன் மனைவி, (உ)லோகநாயகி என்கிற2 அகவைக் குழந்தையுடன்)

சரோசனி அம்மையார்(தோழர் தேவசுந்தரம் மனைவி மார்த்தாண்டம் என்கிற 2 அகவைக் குழந்தையுடன்)

கலைமகளம்மையார்(மரு.சிற்சபையின் மனைவி மரு.தருமாம்பாள் மருமகள்)

ஞானசுந்தரி அம்மையார்(விமலா என்கிற 2 அகவைக் குழந்தையுடன்)

தனக்கோட்டிஅம்மையார், சதுரங்கப்பட்டினம்

28.11.0938இல்

இராசம்மாள்(பெல்லாரி திவான்பகதூர் கோபால்சாமி முதலியார் தமக்கை; பண்டிதை நாராயணி அம்மையார் தாயார்)

கமலம்மாள்(சேக்காடு தோழர் பாலசுப்பிரமணிய முதலியார் மனைவி)

கேக்காடு அங்கயற்கண்ணி அம்மையார்

வேலூர் துளசிபாய்(பிராமணர்)

5.12.1938இல்

செயலெட்சுமி அம்மையார்(இந்தி எதிர்ப்புப் போரில் 85 மாதக்கடுங்காவல் பெற்ற சிந்தாதிரிப்பேட்டை சாமிநாதனின் சிறிய தாயார்)

12.12.1938இல்

(உ)ரோசம்மாள் (சிவாசி என்கிற 2 அகவைக் குழந்தையுடன்)

16.12.1938இல்

அம்பலூர் அபரஞ்சிதம்மாள்(குழந்தை இளங்கோவுடன்)

அம்பலூர் கோவிந்தம்மாள்

கனகாம்பாள்

ஆர்.செல்லம்மாள்

9.1.1939இல்

சேலம் தேவகி அம்மாள் (இரு குழந்தைகளுடன்)

22.01.1939 இல்

எசு.குப்பம்மாள்

பிரகாசம்மாள்

சொக்கம்மாள்

பகவதியம்மாள்

துளசிபாய்

இராசேசுவரி அம்மாள்

குணபாக்கியம் அம்மாள்

கண்ணம்மாள்(இரண்டு அகவைக் குழந்தையுடன்)

விச்சி அம்மாள்

கமலம்மாள்(கசேந்திரன் என்கிற குழந்தையுடன்)

30.01.1939 இல்

சென்னை கல்யாணி அம்மாள்

6.02.1939இல்

மீனாட்சி அம்மாள்

முத்தம்மாள்(தன் குழந்தையுடன்)

அன்னம்மாள்

அமிர்தம்மாள்

பத்மாவதி அம்மாள்

17.02.1939இல்

சென்னை ஆர்.நாராயணி அம்மையார்(பெரியாரைப் பதினைந்து நாள்களுக்குள் விடுதலை செய்க. இல்லையேல் மறியல் என்று முன்கூட்டி எச்சரிக்கை விடுத்து  முதலமைச்சர் இல்லம் முன் மறியல் செய்து சிறை புகுந்தார்.)

20.02.1939இல்

பட்டம்மாள் (பாவலர் பாலசுந்தரம் மனைவி குழந்தை ஆலங்காட் டானுடன்)

ஞானம் அம்மையார்(புலவர் மறை திருநாவுக்கரசு மனைவி. அறிஞர் மறைமலையடிகளாரின் இளைய மருமகள், குழந்தை சிறையஞ்சானுடன்)

6.03.1939இல்

மலர்க்கொடி அம்மையார்

13.03.1939இல்

இராசம்மாள்(திருவாரூர் தோழர் டி.என்.இராமனின் தாயார்)

சரோசனி அம்மையார்(மறை-மாணிக்கவாசகத்தின் மனைவி, மறைமலை அடிகளாரின் மூத்த மருமகள், குழந்தை மறைக்காடனுடன்)

திருச்சி எபினேசம்மாள்

மாயவரம் இரசாமணி அம்மாள்

26.06.1939 இல்

நெய்வேலி தாயாராம்மாள்

நாகை விசாலாட்சி அம்மாள்

17.07.1939இல்

11ஆவது சருவாதிகாரி சுத்தம் ரோசம்மாள்

குருவம்மாள்(சிறையில் உயிர்த்த வீரன் தாளமுத்துவின் மனைவி)

காமாட்சியம்மாள்

மருதம்மாள்(மீனாட்சி சுந்தரம்,அம்சவேணி என்கிற இரு குழந்தைகளுடன்)

வடிவாம்பாள்(ஐந்து அகவைக்ம குழந்தையுடன்)

மலர்க்கொடி அம்மையார்(இரண்டாம் முறை சிறைவாசம்)

இலட்சுமி அம்மாள்

24.07.1939இல்

தாயாரம்மாள் (இரு குழந்தைகளுடன்)

21.08.1939இல்

12ஆவது சருவாதிகாரி மாரியம்மாள்

நெய்வேலி பொன்னம்மாள்(நெல்லைத் தமிழ்ப்புலவர் இராமநாதர் மனைவி)

தமிழ்அன்னை (8 அகவைக் குழந்தையுடன்)

4.09.1939இல்

நாச்சியம்மாள்(இந்திப்போரில் முதன் முதல் சிறைசென்ற பல்லடம் தோழர் பொன்னுசாமியின் மனைவி, நாகம்மாள் என்கிற 10 மாதக் குழந்தையுடன்)

பூவாளுர் செல்லம்மாள்

ஈரோடு மீனாட்சியம்மாள்(மூன்று அகவை இரத்தினம், 9 மாத நாகம்மாள் ஆகிய குழந்தைகளுடன்)

அங்கமுத்து அம்மாள்

காஞ்சி இராசாமணி அம்மாள்

இந்திப் போரில் சிறை சென்ற மங்கைமார் தொகை 73, அவர்களுடன் சிறை சென்ற குழந்தைகள் தொகை 32.)

இத்தகவல்கள் முனைவர் ம.நடராசன் தொகுப்பாசிரியராகவும் மணா பதிப்பாசிரியராகவும் கொண்டு வெளிவந்துள்ள உயிருக்கு நேர் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது என நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Thursday, December 18, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 14 : இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்-இலக்குவனார் திருவள்ளுவன்



(தொல்காப்பியமும் பாணினியமும் – 13 : இடைச்செருகல்கள் – தொடர்ச்சி)

இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்

தொல்காப்பிய இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள் குறித்துப் பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்  பின்வருமாறு தெரிவிக்கிறார்:- ”தொல்காப்பியர் இலக்கண முறைமைகளைத் தொடுத்துக் கூறும் அல்லது அடுக்கி வைக்கும் பாங்கு தொன்மைமிக்க  தமிழின் இலக்கணச் சீர்மையை மட்டுமின்றி, நம் முன்னோரின் சிந்தனைப்போக்கின் முதிர்ச்சியையும் ஏரணவியலின் தொன்மையையும், அறிவியல் முறைமைப்படத் தரவுகளைத் தொகுத்து வழங்கும் ஆய்வுநெறிமுறைப் பயிற்சியையும் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.  தமிழைக் கணிணிமொழி என்று பெருமிதத்துடன் கொண்டாடிக் கொள்ளத் தூண்டுவது எழுத்துப் படலம், சொற்படலம் ஆகிய இருபடலங்களின் அமைப்புமுறையேயாகும்.  இந்தச் சங்கிலித்தொடர்ச் செய்தித்தொகுப்பின் கட்டுக்கோப்பால்தான் இடைச்செருகல் விளையாட்டுகளை இவ்விரு படலங்களிலும் தொல்காப்பியத்தின் பின்வந்தோர் நிகழ்த்தமுடியவில்லை.(நன்றி : செம்மொழிச்சுடர் இணையத்தளம்)

நூல்களில் பிராமணியத்தைத் திணித்து ஆரியத் தழுவல்களாகக் காட்டுவதை விட, நூலாசிரியர்களைப் பிராமணர்களாகக் காட்டினால் பணி எளிதாகும் எனக் கருதிய ஆரியர்கள் தமிழ்ப்புலவர்களுக்குச் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டினர். திரணதூமாக்கினிதான் தொல்காப்பியர் என்றும் (சிரீவல்லபர்தான் திருவள்ளுவர் என்றும்) ஆரியர்கள் கதை கட்டுகின்றனர். இது குறித்து ஏ.சி.பருனால், மெனாண்டர்(Menander) என்ற பெயரை மிலிண்டா என்றும் தெமீட்டுரியசு(Demeterius) என்பதைத் தத்தமித்திரா(Dattamitra) என்றும் மாற்றுவதுபோல் கிரேக்கப்பெயர்களைச் சமற்கிருதப் பெயர்களாக மாற்றும் மன்னிக்க முடியாத ஏமாற்றுவேலைகளில் சமற்கிருதவாணர்கள் ஈடுபட்டதைக் குறிப்பிடுகிறார். (Arthur Coke Burnell 11 சூலை 1840 – 12 அட்டோபர் 1882  தஞ்சாவூர் மாவட்ட நீதிபதியாக இருந்த பொழுது 01.11.1875 அன்று இந்நூலை வெளியிட்டார்.) இருப்பினும் அன்று முதல் இன்று வரை இடைச்செருகல்கள் ஒரு புறமும் சாதியக் கட்டுக்கதைத் திணிப்புகள் மறுபுறமுமாக நடந்துகொண்டுதான் உள்ளன.

தொல்காப்பியம் – ஒரு கவிதை இலக்கண நூல்

தொல்காப்பியம் எழுத்து, சொல் எனத் தமிழ்மொழி இலக்கணம் மட்டுமல்லாமல் கவிதைக்குரிய இலக்கணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது வேறு எந்தமொழியிலும் காணக்கிடைக்காத ஒரு நிலையாகும். (முனைவர் ச. அகத்தியலிங்கம் : மொழியியல் நோக்கில் தமிழ்ச் செம்மொழி, உங்கள் குரல் தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலர்: பக்.29)

தொல்காப்பியர் திருவள்ளுவருககுக் காலத்தால் முற்பட்டவர்

  தமிழக ஆராய்ச்சியாளருட் சிலர் திருவள்ளுவரைத் தொல்காப்பியர்க்கு முற்பட்டவர் என்று கூறுகின்றனர்.  அங்ஙனம் கூறுவது  உலகப் பெரும் புலவர் வள்ளுவர்பாற் கொண்டுள்ள பற்றுதலால்தான் என்று கருதவேண்டியுளது.  உயர் அறங்களை உலகுக்கு அறிவிப்பதில் முதற்பாவலராய் இருப்பவர் காலத்தானும் முற்பட்டவராகத்தான் இருத்தல் வேண்டும் என்று எண்ணி விட்டனர்போலும்.  காலத்தால் முற்பட்டவர் என்பதால் பெருமையும் பிற்பட்டவர் என்பதால் சிறுமையும் உண்டு என்று கருதுவது மிக மிகத் தவறேயாகும்.  இருபெரும் புலவர்களும் இருவேறு துறைகளில் இணையற்றவர்கள் என்பதில் எட்டுணையும் ஐயமின்று.  முற்பட்ட காலத்தின் துணைகொண்டு முற்பட்டவராக விளங்க வேண்டிய நிலையில் இருவரும் இலர். ஆதலின் காய்தல் உவதல் இன்றி இருவருள்  எவர் காலத்தால் முற்பட்டவர் என்று ஆராய்தல் நமது கடனாகும்.

 தொல்காப்பியர், திருவள்ளுவருக்குக் காலத்தால் முற்பட்டவர் என்பதனை இருவர் நூல்களுமே எடுத்துக் காட்டுகின்றன. (பேராசிரியர் சி.இலக்குவனார்: தொல்காப்பிய ஆராய்ச்சி : பக்கம்:11)

தொல்காப்பியர் வரலாறு சரியாக அறியப்படாமையால் அவரது காலமும் சரியாக உணரப்படவில்லை. அறிஞர்களே மாறுபட்ட கருத்துகளைக் கூறுகின்றனர். தமிழின் சிறப்புகளைக் குறைத்துக் கூறுவதையே தொழிலாகக் கொண்டோரும் தொல்காப்பியம் குறித்துத் தவறான கருத்துகளைத் திணித்து அவையே உண்மை என்பதுபோல் பரப்பி வருகின்றனர்.

தொல்காப்பியத்தின் காலம் பற்றி அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. கி.பிக்கு முந்தையது என்று பல அறிஞர்களும் பிந்தையது என்று சிலரும் குறிப்பிடுகின்றார்கள். காலக் கணக்கில் வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும் தோராயமாகத் தொல்காப்பியம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்க வேண்டும் என்பதைப் பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள்.

தமிழுக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் எனப் போற்றப்படும் தொல்காப்பியம் காலந்தோறும் போற்றிப் பாதுகாக்கப்பட்டுள்ளது. வாய்மொழி மரபாகவும் சுவடிகள் வழியாகவும் பாதுகாக்கப்பட்டிருக் கின்றது. உரைகள் தோன்றிய பிறகு தொல்காப்பியத்தின் பெருமை மேலும் பரவலாக்கப்பட்டுள்ளது. அச்சுக்கலை வளர்ந்தபிறகு தமிழறிஞர்கள் உரையோடு கூடிய தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் பிற இலக்கிய, இலக்கணங்களையும் ஆர்வத்தோடு பதிப் பித்துள்ளனர். இவ்வகையான ஆன்றோர்களின் அரும் பணியாலேயே தமிழ் இன்று உலகோர் அறிந்து போற்றப்படும் நிலையைப் பெற்றுள்ளது.

தொல்காப்பியத்தின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளி இன்பம் காண்போர் உள்ளனர். ஆரியத்தைப்பற்றிய தவறான கற்பிதத்தை நம்புவோர் இருப்பினும் அதன் உண்மையை வெளிப்படுத்துவோரும் பெருகி வருகின்றனர்

தொல்காப்பியம் பற்றிய ஆய்வுகள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் மேன்மேலும் வளரும். இவ்வகையான ஆய்வு வளர்ச்சி ஏற்படுவதற்கு அடிப்படையான முந்தைய நிலையை ஆய்வாளர் இரா. வெங்கடேசன் அரிதின் முயன்று தொல்காப்பியம் தொடர்பான கருத்துகளைத் தொகுத்துத் ‘தமிழ்ப் புலமை மரபில் தொல்காப்பியம்’ என்னும் நூலைப் பதிப்பித்துள்ளார். இந்த அரிய நூலை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் (2014) வெளியிட்டுள்ளது. தொல்காப்பிய உரைகள், பதிப்புகள், ஆய்வாளர்களின் கருத்துகள் இந்நூலில் விரிவாகத் தொகுக்கப் பட்டுள்ளன. தொடர்ந்து தொல்காப்பியத்தை ஆய்வு செய்வோருக்கும் இளம் ஆய்வாளர்களுக்கும் இந்நூல் மேலும் உதவும் வகையில் உள்ளது என உறுதியாகக் கூறலாம்.

(தொடரும்)

Wednesday, December 17, 2025

விருதுகளுக்குத் தகுதியான இல.அம்பலவாணனின் புதினம்!

 

நூல் அறிமுகம்
  
ஆசைக்கோர் அளவில்லை

இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி என்பர்அவ்வகையில் குமுகாயத்தைப் படம் பிடித்துக் காட்டுவனவாகக் கதை இலக்கியங்கள் உள்ளன.

அந்த வகையில் குமுக அவலங்களை நமக்குக் கண்முன் நிறுத்துபவராக எழுத்தாளர் முனைவர் இல.அம்பலவாணன் திகழ்கிறார்அவரது ஐந்தாவது புதினம் ஆசைக்கோர் அளவில்லை என்பது.

புதின ஆசிரியரை அறிமுகப்படுத்துவதற்குக் காவியா சண்முகசுந்தரம் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ள பின்வரும் பகுதி சரியாக இருக்கும்:

அம்பலவாணன் நல்ல கதைசொல்லிஇயல்பாக  இனிதாக  இசைவாய்க் கதை சொல்பவர்.

பெயர்தல்பொட்டுவைத்த பொழுதில்தூய்மைதொடரும் நிழலாய் என நான்கு புதினங்களை எழுத அவற்றைக் காவியா வெளியிட்டுள்ளது.

புலம் பெயர்தல்பால் பெயர்தல்துப்புரவுப் பணிஎயிட்சு பிணி எனும் கதைக்களங்களைக் கண்டெடுத்துச் சொன்னவர் இப்போது சீட்டு நிறுவனங்கள் தில்லுமுல்லுகளை அம்பலமாக்கியுள்ளார்.

இவரை அம்பல வாணன் என அழைப்பது சாலப் பொருத்தம்தான்மேலும் மேலும் அம்பலங்கள் அரங்கேறட்டும்.

இவர் கூறியுள்ளதுபோல் மக்களின் அவலங்களைத் தன் புதினங்கள் மூலம் காட்சிப்படுத்துவதில் வல்லவராக இருக்கிறார்.

“ ‘ஆசைக்கோர் அளவில்லை அவர் நேரடியாகக் கண்ட காட்சியில்லைஅவர் பட்டறிவும் இல்லைஆனால்இப்படியான ஓர் பட்டறிவில் துயர் கொண்டவர்களை அம்பலவாணனுக்குத் தெரியும்.

குறைந்தபட்சம் அந்த அன்னத்தைத் தெரியும்ஏன் நமக்குத் தெரியும்கேட்ட செய்திதான்கண்ட காட்சிதான்ஏன்இது நம்முடைய பட்டறிவாகக் கூட இருந்திருக்கலாம்.

மிக விரிவாகஉணர்வுப்பூர்வமாக அதை அம்பலவாணன் விவரிக்கும் விதம்மனிதர்களைக் காட்டும் விதம்அவர்களின் கண்ணீரைஇரத்தக் கசிவை வார்த்தைகளாகநிகழ்வுகளாகஒருவருக்கொருவர் உரையாடும் தருணங்களில்திசை தெரியாது திகைக்கும் நேரங்களில் மிக யதார்த்தமாகக் கடத்தி விடுகிறார்

ஆம்மக்களின் துயரங்களைநம் முன் நிறுத்தி விழிப்புணர்வையும் ஏற்படுத்தி விடுகிறார்நம் புலவர்கள்அதிலும் சங்கக் காலப் புலவர்கள்தாம் காணும் காட்சிகளையெல்லாம் நம் கண்முன் காட்சிப்படுத்துவதில் வல்லவர்கள்.

அதுபோல் எழுத்தாளர் அம்பலவாணனும் தன் கண்களைப் படப்பொறிகளாகக் கொண்டு குமுகாயத்தில் அவலங்களைச் சந்திக்கும் மனிதர்களைப் படம்பிடித்துக் கதைமாந்தர்கள் மூலம் கொண்டு வருவதில் திறமையானவர்.

ஆனால்இப்புதினத்தில் மேலும் ஒரு படி முன்னேறிப் பிறர் மூலம் அறிந்த அவலங்களைகேட்ட துயரங்களைஊடகங்கள் வாயிலாக உணர்ந்த செய்திகளைகேள்விப் புலனிலிருந்து கட்புலனுக்கு மாற்றிஉயிரோட்டமுள்ள படைப்பை அளித்துள்ளார்.

இக்கதை உருவாக்கம் குறித்து எழுத்தாளர் அம்பலவாணனே பின்வருமாறு கூறியுள்ளார்:

“ ‘ஆசைக்கோர் அளவில்லை என்னும் இப்புதினம்இன்று காணப்படுகிற நிதி மோசடிகள் குறித்துப் பேசுகிறது.

இது வரையிலும் நான் எழுதிய புதினங்களில்எனது வேலையின் பொழுது சந்தித்த குமுகச் சிக்கல்கள் குறித்து எழுதினேன்இஃது அப்படியல்லநேரடியாக நான் அறிந்த செய்தியல்லஆனாலும்தொழில் முறையில் அறிமுகமான இருவர்ஒருவர் ஆண்மற்றொருவர் பெண்.

மோசடி நிதி நிறுவனம் ஒன்றினால்ஏமாற்றப்பட்டுத் துன்பம் தோய்ந்திருந்த வேளையில்இருவரும் பகிர்ந்து கொண்டிருந்த செய்திகள்தான்இந்தப் புதினத்தின் கருப்பொருள்.

அவர்கள் சொல்லியதைப் பார்த்தால்மன்பதையில் எல்லா நிலையிலும் இருக்கிறவர்களும் பரவலாய் நிதி நிறுவனத்தின் கவர்ச்சி விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டுஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரிய வந்தது.

இதைப் புதினமாக எழுதி மக்கள் மத்தியில் பதிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

பணத்தினை முதலீடு செய்பவர்கள்முகவர்களாகச் செயல்படுபவர்கள்அவர்களின் உறவுகள்உருவாகும் சிக்கல்கள் என்பவற்றின் அடிப்படையில்கதாபாத்திரங்களுக்குக் கற்பனையில்  உயிர் கொடுத்தேன்.”

குடும்பப் புதினம்குமுகாயப் புதினம்காதல் புதினம்உளவியல் புதினம்துப்பறியும் புதினம்திகில் புதினம் என்பன போன்று முப்பதுக்கும் மேற்பட்ட புதின வகைகள் உள்ளன.

இப்புதினம் குமுகாயப் புதின வகையாக இருந்தாலும் விழிப்புணர்வுப் புதினம் எனலாம்.

புதினங்களில் பல்வேறு உத்திகள் பின்பற்றப்படுகின்றனஇப்புதினம்  கதையின் கடந்த கால நிகழ்வுகளை நினைவூட்டும் பின்னோக்கு உத்தியை இடையிடையே கையாண்டுள்ளார்.

கதை மாந்தர்கள் மூலம் பின்னோக்கு நிகழ்வுகளைக் கூறுவது ஒரு வகைஎழுத்தாளரே பின்னோக்கு நிகழ்வுகளைக் கூறுவது ஒரு வகை.

இதில் கதையோட்டத்தின் இடையிடையே நனவோடை உத்தி போன்று எழுத்தாளரே பின்னோக்கு உத்தியைக் கையாண்டுள்ளார்ஆனால் எந்தச் சிக்கலும் இல்லாமல் தெளிவாகக் கதையைக் கொண்டு போகிறார்.

கதையோட்டத்திற்கு முன் நிகழ்வுகளும் உயிரோட்டமாக உள்ளனஅவற்றை எச்சிக்கலும் இன்றிஎடுத்துரைப்பதில் வல்லவராக எழுத்தாளர் இருக்கிறார்.

புதினத்தின் கதையோட்டத்திற்கு ஏற்ப வாசகர்களுக்குக் கதைப்பாத்திரங்கள் மூலம் நல்லறிவுரைகளையும் வழங்குகிறார்.

எடுத்துக்காட்டாக, அக்கா  மாணிக்கம் மூலம், “இருப்பதைவிட்டுவிட்டுப் பறப்பதற்கு ஆசைப்பட்டால் புத்தி கெட்டுதான் போகும். பேராசை எனும் இறக்கைகள் இது போன்றவர்களுக்குப் பறக்கும் எண்ணத்தையும் அசட்டுத் துணிவையும் தருகிறது.

பறந்து போகட்டும்ஓரளவுக்கு உயரப் பறந்த பிறகு இறக்கைகள் உண்மையில்லை என்பது தெரியும்.

எந்த உயரத்தில் இருந்து விழுகிறார்களோ அந்த அளவிற்குக் காயங்களும் அதிகமாக இருக்கும்அப்பொழுது நமக்கு உயிரும் இருந்து மனமும் இருந்தால் காயத்திற்கு மருந்துபோடலாம்”  எனப் பேராசையால் வரும் பேரிழப்பை உணர்த்துகிறார்.

நோயர் நாகராசு மூலம் அன்னத்தின் சிறப்பான செவிலியர் பணியை விளக்குவதுபோல் பிற பாத்திரங்கள் சிறப்புகளையும் சில நிகழ்வுகள் மூலம் விளக்குகிறார்.

புதினத்தில் ஆசிரியர் கூற்றில் பெரும்பாலும் அலைபேசி, தொலைபேசி, தொலைக்காட்சி, உள் இணைப்பு, மருத்துவமனை, நிறுத்தம் முதலான நல்ல தமிழ்ச் சொற்களையே பயன்படுதியுள்ளார்; உரையாடல் பகுதியில் பேச்சு வழக்கையே பயன்படுத்தியுள்ளார். இருப்பினும் அடுத்த பதிப்பில் அவற்றில் உள்ள வழுக்களை நீக்கி  வெளியிடலாம்.

மக்கள் மேம்பாட்டு வினையகம்’ என்னும் தன்னார்வ அமைப்பை நடத்தி வரும் இல.அம்பலவாணனின் பணிக்களங்களில் ஒன்று காரைக்கால். அந்நகரே இப்புதினத்தின் முன்னணிக் கதைக் களமுமாகும்.

தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் படைப்புகளில் புதுச்சேரி மாநிலம் சிலவாகவே இடம் பெறும்.

ஆனால்எழுத்தாளர் இல.அம்பலவாணன்இப்புதினத்தில் வாசகர்களுக்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் காரைக்காலின் பங்களிப்புகாரைக்காலில் சிறப்பாக நடைபெறும்  மாங்கனித் திருவிழா முதலியவைபற்றியும் அறியத் தருகிறார்.

ஒவ்வொருவருக்குமே வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்முன்னேற்ற ஆசையால் சில வழிமுறைகளில் ஈடுபடவும் விரும்புவர்.

ஆனால்குறுக்கு வழியிலும் தவறான நம்பிக்கையிலும் பேராசைப் பாதையில் பயணம் செய்வர்.

இதனால் துன்பத்தையும் துயரத்தையுமே சந்திக்கின்றனர்அத்தகைய பேராசைக்கனவில் மூழ்கித் துன்பக்கடலில் தத்தளிப்பரவர்களைப் பற்றியதுதான் இப்புதினம்.

திட்டமிட்டு ஏமாற்றும் பித்தலாட்டக்காரர்களையும் அறியாமலேயே அவர்களின் பணியாளர்களாகவும் முகவர்களாகவும் செயற்பட்டு, மக்களை ஏமாற்றத்திற்குத் தள்ளுவோர்களையும் ஆசைச்சொற்களால் ஈர்க்கப்பட்டுப் பேராசைக் கனவுகள் நிறைவேறும் என்ற தவறான நம்பிக்கை வலையில் விழுந்து இழப்புகளையும் இடர்களையும் துன்பங்களையும் சந்திக்கும் அப்பாவிகளையும் எழுத்தாளர் நமக்கு நன்கு அடையாளப்படுத்துகிறார்.

தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.”   (திருக்குறள், ௯௱௩௰௧ – 931) என இரைக்கு ஆசைப்பட்டுத் தூண்டிலில் சிக்கும் மீனை உவமையாகக் கூறித் திருவள்ளுவர், வெற்றியே கிடைத்தாலும் சூதாட்டத்தைத விரும்பக் கூடாது என்பார்.

நிதி நிறுவன முதலீடுகளும் சூதாட்டமாய்த் திகழ்கின்றன.

கோவையில் செயல்பட்டு வரும் திருமகள் தனியார் நிறுவனத்தை நடத்தி வருபவர் பரத்துகுமார். தன் மயக்குச் சொற்களால் மக்களை ஏமாற்றி நிதி திரட்டி மோசடியில் ஈடுபடுபவர்.

காரைக்காலில் உள்ள அருள்குமார் இதன் தலைமை முகவர். படியெடு (செராக்குசு) கடை நடத்துபவர் கனகா. மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர் அருள்குமாரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, இந்நிறுவனத்தின் முகவராகிறார்.

இவரது இளவயதுத் தோழி விண்ணரசி மருத்துவமனையின் செவிலியர் அன்னம். இவரே இப்புதினத்தின் முதன்மைப் பாத்திரம்.

இவரது கணவர் இளவரசன் தனியார் பாதுகாவலர் நிறுவனத்தில் கள மேற்பார்வையாளராகப் பணிபுரிபவர்.

அன்னம்கனகாவின் பேச்சால் இந்நிறுவனத்தில் பெருந்தொகை முதலீடு செய்கிறார்அத்துடன் நில்லாமல் உறவினர்கள்அறிந்தவர்கள் எனப் பிறரிடமும் தொகை பெற்று முதலீட்டிற்கு உதவுகிறார்.

ஆனால் நிதி நிறுவனம் கூறியவாறு வட்டி போன்ற எதையும் தராத பொழுதுதான் அதன் மோசடி புரியலாயிற்றுஅன்னத்தின் மூலம் முதலீடு செய்தவர்கள் அன்னத்திற்குத் தொல்லை தருகின்றனர்.

அன்னம் கனகாவிடமும் அருள்குமாரிடமும் முதலீட்டைத் திரும்பப் பெற மன்றாடுகிறார். ஆனால், அவர்களுமே நிதி நிறுவனரால் ஏமாற்றப்பட்டவர்கள்தாம். எனவே, இழந்த பணத்தை மீட்பதற்காக அனைவரும் போராடுகின்றனர். இப்போராட்ட வாழ்க்கை பற்றியதே இப்புதினம்.

அன்னத்தின் தந்தை பூவராகன் காரைக்கால் பகுதியில் தனியார் பத்திர எழுத்தராக இருந்தவர். புதுச்சேரி விடுதலைப் போராட்டக் காலத்தில் இருந்தே, காரைக்காலின் வளர்ச்சியில் அக்கறையும் ஈடுபாடும் கொண்டவர்.

இவர் முலமே புதுச்சேரி வரலாற்றை நமக்குத் தெரிவிக்கிறார்.

அன்னத்தின் அம்மா காமாட்சிஅக்கா  சரசுவதிஅண்ணன்  அரங்கசாமிமகள்  இளமதிமகன்  இளமுருகுஇளவரசனின்  அக்கா  சத்தியா,  கணவர் முருகவேல்கனகா  கணவர் பாலமுருகன்அக்கா  மாணிக்கம்,  மாமியார் கலாராணி முதலிய பாத்திரங்கள் மூலமும் காவல் ஆய்வாளர் முதலிய காவல்துறையினர் மூலமும் கதையைக் கொண்டு செல்கிறார்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் இருந்தாலும் குறிப்பாகப் பெண்கள் தங்கள் நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பெரு விருப்பம் கொள்கின்றனர்.

ஆசை பேராசையாக மாறுவதும் மயக்குச் சொற்களில் வீழ்வதையும் கணவருக்குத் தெரியாமலேயே பின்னர் இதனைச் சொல்லலாம் என்று முதலீடு செய்து ஏமாறுவதையும் நயம்பட எழுதியுள்ளார்.

இப்புதினத்தை எழுதத் தொடங்கிய பொழுது ‘ஒன்று இரண்டானால்’ எனத் தலைப்பிட்டதாகவும் தாயுமானவரின் ‘ஆசைக்கோர் அளவில்லை’ எனத் தொடங்கும் பாடலைப் படித்ததும்

இதுவே பொருத்தமான தலைப்பாக இருக்கும் என்று கருதிஅதனையே தலைப்பாகச் சூட்டியதாகவும் புதின ஆசிரியர் எழுத்தாளர் இல.அம்பலவாணன் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே இத்தலைப்பு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளதுஅளவில்லா ஆசை அளவற்ற துன்பங்களையே தரும் என்ற உண்மையையும் உணர்த்துகிறது.

சிறந்த புதினங்களுக்குப் பரிசு தரும் சாகித்திய அகாதமி போன்ற அமைப்புகள் இப்புதினத்திற்குப் பரிசு தருவது அவற்றிற்கே பெருமை சேர்ப்பதாக அமையும்.

இது  காவியா  வெளியீடு. 138 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை உரூ. 170/-
பேசி எண்கள் : 044-2372 6882 / 98404 80232

எழுத்தாளர் இல.அம்பலவாணன் எண் : 94431 41085

தாய் 17.12.2025

Followers

Blog Archive